Thursday 1 March 2018

தவக் காலம் மூன்றாம் ஞாயிறு

தவக் காலம் மூன்றாம் ஞாயிறு
விப 20:1 -17 ; 1 கொரி 1:22-25 ; யோவா 2:13-25




பாவங்களின் இருப்பிடம் சுயநலம்

மகிழ்ச்சியுட்டும் மறையுறைகள் குடந்தை ஆயர் F.அந்தோணிசாமி

இயேசு - அவர் மிகவும் அன்பானவர்.
அவர் - அழுதால் அரும்புதிரும்
அண்ணாந்தால் பொன்னுதிரும்
சிரித்தால் முத்துதிரும்
வாய் திறந்தால் தேன் சிதறும்
அவர் இருக்கும் இடத்திலே
காலையிலே பூபாளம் ஒலிக்கும்
மதியத்திலே கல்யாணி ஒலிக்கும்
இரவினிலே நீலாம்பரி ஒலிக்கும்
அவர் கண்ணுக்குள் கங்கை உண்டு!
கைக்குள் காவிரி உண்டு!
இதயத்துக்குள் இமயம் உண்டு!

இப்படிப்பட்ட இயேசு இன்றைய நற்செய்தியிலே சாட்டை பின்னி. கோயிலில் வியாபாரம் செய்பவர்களை துரத்துவதைப் பார்க்கின்றோம்.
தன் சகோதரர் சகோதரிகளிடம் சினங்கொள்கின்றவர் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவார் (மத் 5:22) என்றவர் இங்கே சினங்கொள்வதை, கோபப்படுவதைப் பார்க்கின்றோம்.
பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன் (மத் 11:28) என்ற இயேசுவை, மக்களைத் துரத்தும் இயேசுவாக இன்று சந்திக்கின்றோம்.
சினத்திலே இரண்டு வகை : பாவமான சினம், பாவமில்லாத சினம். சுயநலத்திற்காகக் கோபப்பட்டால் அது பாவமான சினம்; பிறர்நலத்திற்காகக் கோபப்பட்டால் அது பாவமில்லாத சினம். அனைத்துப் பாவங்களின் இருப்பிடமாகத் திகழ்வது சுயநலம்; அனைத்துப் புண்ணியங்களுக்குத் தாயாக விளங்குவது பிறர் நலம்.
இதோ பாவமான கோபத்திற்கு விவிலியத்திலிருந்து இரு உதாரணங்கள்:
நல்ல சமாரியர் உவமையையும் (லூக் 10:25-37) காணாமற்போன மகன் உவமையையும் (லூக் 15:11-32) நமக்குத் தந்த கருணை முகில் இயேசு இடியாக மாறி வியாபாரிகள் மடிமீது விழுவதை இங்கே காண்கின்றோம்.
கோயிலில் வியாபாரம் செய்பவர் மீது கோபப்பட்டது போல நீதிக்கும், அமைதிக்கும், மகிழ்ச்சிக்கும் (உரோ 14:17) எதிராகச் செயல்பட்ட சில பரிசேயர், சதுசேயர், மறைநூல் அறிஞர், ஏரோதியர் மீது இயேசு சினங்கொண்ட நேரங்கள் உண்டு (மாற் 3:1-6).
இந்த இடத்திலே, இயேசுவைப் போல நாமும் சினம் கொள்ளலாமா? கோபப்படலாமா? என்ற கேள்வி நம்மில் பலரது மனத்திலே எழுந்து மறையலாம்.
இந்தக் கேள்விக்கு புனித பவுலடிகளார் பதில் கூறுகின்றார். சினமுற்றாலும் பாவம் செய்யாதிருங்கள்; பொழுது சாய்வதற்குள் உங்கள் சினம் தெளியட்டும். அலகைக்கு இடம் கொடாதீர்கள் (எபே 4:26-27) என்கின்றார்.
காயினையும், அவன் காணிக்கையையும் கடவுள் கனிவுடன் கண்ணோக்கவில்லை. ஆகவே காயின் கடும் சினமுற்றான். கடவுள் அவனைப் பார்த்து, நீ ஏன் சினமுற்றாய்? என்று கேட்டார் (தொநூ 4:5-7). காயினின் கோபம், அவனுடைய தம்பி ஆபேல்மீது கொண்டிருந்த பொறாமையிலிருந்து பிறந்த பாவமாகும்.
காணாமற்போன மகன் உவமையில், மூத்த மகன் சினமுற்று விருந்து நடந்துகொண்டிருந்த வீட்டிற்குள் புக விருப்பமின்றி நின்றான் (லூக் 15:28). அவனது சினம், கோபம் அவனது சகோதரன்மீது அவன் கொண்டிருந்த வெறுப்பிலிருந்து பிறந்தது.
இப்படி பொறாமையிலிருந்து, வெறுப்பிலிருந்து, பாவத்திலிருந்து, சுயநலத்திலிருந்து பிறக்கும் சினத்திற்கு, கோபத்திற்கு கிறிஸ்தவ மறையில் இடமே கிடையாது.
இயேசுவிடம் நின்று நிலவிய கோபம் சுயநலத்திலிருந்து பிறந்தது அல்ல; அது பிறர் நலத்திலிருந்து பிறந்தது; அவர் அவரது தந்தையின் மீது கொண்டிருந்த மாறாத அன்பிலிருந்து பிறந்தது (யோவா 2:16).

ஆகவே பிறர் நலத்திற்காக, பிறரன்புக்காக, நீதிக்காக, அமைதிக்காக, மகிழ்ச்சிக்காக, இறையரசின் மதிப்பீடுகளுக்காக நாம் கோபப்பட வேண்டும். சினம் கொள்ள வேண்டிய நேரத்திலே நாம் சினம் கொள்ளவில்லை என்றால், நாம் கடமையில் தவறிய பாவத்தைப் புரிந்தவர்களாகிவிடுகின்றோம்.
பத்துக் கட்டளைகள் (முதல் வாசகம்) கேள்விக் குறிகளாகும் போது நாம் கோபப்படலாம்; குழந்தைக்கு வைத்திருக்கும் பாலை பூனை குடிக்க நினைத்தால் பூனையின் மீது கோபப்படலாம்; பாமரர்கள் ஏமாற்றப்பட்டால், ஏமாற்றுகிறவர்கள் மீது கோபப்படலாம்.
எப்போது சினம் கொள்ளலாம், எப்போது சினம் கொள்ளக்கூடாது என்பதை அறிந்துகொள்ள போதிய ஞானத்தை (இரண்டாம் வாசகம்) இறைவனிடம் கேட்டு மன்றாடுவோம்.
மேலும் அறிவோம்
இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத்
துறந்தார் துறந்தார் துணை (குறள் : 310).
பொருள் : வரம்பு கடந்த கோபம் கொள்பவர் உயிரோடு இருந்தாலும் இறந்தவராகவே கருதப்படுவார்! கோபத்தை முழுமையாக நீக்கியவர் பற்றற்ற துறவிக்கு ஒப்பாவார்!





தீமையா?... சீறி

குன்று நோக்கி... அருள்திரு இ.லூர்துராஜ்

தாவோசு என்பது தனி மாநிலம். மலைப் பகுதி, அங்கே உலகப் பொருளாதார மாநாடு (World economic forum) ஒவ்வொரு ஆண்டு தொடக்கத்திலும் நடைபெறும். World economic forum என்பது ஒரு மிகப் பெரிய கழகம். உலகின் தலைசிறந்த தலைவர்கள், தொழிலதிபர்கள், அறிவியல் அறிஞர்கள் இவர்களை ஒன்று கூட்டி உலக அளவில் சமூகப் பொருளாதார முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும், வழிகாட்டும் மாபெரும் மன்றம் அது. 819 உலகக் கம்பெனிகள் இதில் உறுப்பினர்கள். Everybody who is somebody இந்த ஆண்டுக் கூட்டத்துக்கு வருவார்கள். 1994 ஆம் ஆண்டில் இந்தியாவின் மீது வெளிச்சமிட்டு நம்நாட்டின் பொருளாதாரக் கொள்கை மாற்றங்களைக் கவனித்து அன்றைய இந்தியப் பிரதமர் நரசிம்மராவை இறுதிக் கூட்டத்தில் பேச அழைத்திருந்தார்கள்.
அப்பொழுது நோபல் பரிசு பெற்ற பேராசிரியர் வீசல்லின் பேச்சு அனைவரையும் கவர்ந்தது. அவர் சொன்னார்: ''உண்மைக்கு எதிரி பொய் அல்ல, நன்மைக்கு எதிரி தீமை அல்ல. முன்னேற்றத்துக்கு எதிரி பிற்போக்கு அல்ல. எல்லாவற்றுக்குமே ஒரு பொது எதிரி உண்டு. அதுதான் அலட்சியப் போக்கு (Indifference). அதுவே நமது மிகப் பெரிய எதிரி. பணக்காரர்கள் ஏழைகளை அலட்சியப்படுத்துவது, முன்னேற்ற நாடுகள் பின்தங்கிய நாடுகளை அலட்சியப்படுத்துவது... எந்தப் பாவத்திலும் பொது அம்சம் இந்த அலட்சியம்” அருமையான உன்னதமான பேச்சு! ஒருவன் அலட்சியமாக இருக்கவில்லை என்பதை அவனுடைய சினம் - சீற்றம் - சீறி எழும் ஆவேசம் வெளிப்படுத்தும்.
ஒரு சிற்றூரை ஒட்டிய முட்புதரில் ஒரு பாம்பு நடமாடியது. அந்த வழியாகப் போவோர் வருவோரையெல்லாம் கடித்துத் துன்புறுத்து - வதாகப் பரவலாக ஒரு பேச்சு. ஒருநாள் முனிவர் ஒருவர் அந்தப் பாம்மைப் பார்த்தார். ''ஏன் இப்படிக் கடித்து மக்களைத் துன்புறுத்துகிறாய்? உன் இயல்பைக் கொஞ்சம் மாற்றி எவருக்கும் தீங்கு செய்வதை விட்டுவிடு" என்று முனிவர் கேட்டுக் கொள்ள அந்தப் பாம்பும் பணிந்தது.
சில நாட்களுக்குப் பின் மீண்டும் முனிவர் அந்த வழியே வந்தார். அந்தப் பாம்மைப் பார்த்தார். பரிதாபமாக இருந்தது. அதன் உடம்பு முழுவதும் இரத்தக் காயங்கள். குற்றுயிராய் நகரக் கூட முடியாத படி கிடந்தது. "என்ன ஆச்சு?" என்று கேட்டதற்கு, அந்தப் பாம்பு முணங்கியது: ''நீங்கள் சொன்னபடி நடந்ததற்கு எனக்குக் கிடைத்த பரிசு இது. நான் கடிப்பதில்லை என்று கண்டதும் கண்டவன் எல்லாம் கல்லெறிந்து காயப்படுத்திவிட்டுச் செல்கிறான். அதைக் கேட்ட முனிவர் கோபத்தோடு சொன்னார்: "கொத்த வேண்டாம் என்றுதானே சொன்னேன் குமுறக் கூடாது என்றேனா? தீங்கு இழைக்காதே என்றுதான் சொன்னேன் . தீங்கு இழைப்பதைக் கண்டு நீ சீறி எழுந்திருக்க வேண்டாமா?
பொய்மை காணும் போது கோபம் வேண்டும். தீமை எதிர்ப்படும் போது கோபம் வேண்டும். அநீதி ஆட்சி செய்யும் போது கோபம் வேண்டும்.
எருசலேம் ஆலயம் கள்வர் குகையானபோது, வணிகக் கூடமான போது இயேசுவுக்குக் கோபம் வந்தது. கைக்குச் சாட்டை வந்தது. சிறுமை கண்டு பொங்கினார். சீறி எழுந்தார்.
ஆலயம் என்பது ஆண்டவனின் உறைவிடம். மனிதனும் இறைவனும் சந்தித்து உறவாடும் ஆன்மீக அனுபவத்தளம். உலகக் கடமைகள், பொறுப்புகள், தடைகள், சவால்கள் இவற்றிற்கிடையே சிக்கித் தவிக்கும் மனிதனுக்குத் தாயின் மடியில் தலை சாய்ப்பது போல ஒரு சுக அனுபவம் தரும் புனித தலம். சமத்துவம், சகோதரத்துவம் என்ற இறையாட்சி விழுமியங்கள் மணம் பரப்பும் மலர்த்தோட்டம்.
ஆலயம் இருப்பது இறைவழிபாட்டுக்காக, இறை நம்பிக்கையை வளர்ப்பதற்காக, வழிபாடுகள் நம்மை வாழ்வு மாற்றங்களுக்கு அழைத்துச் செல்வதற்காக. அந்த நோக்கம் நிறைவேறாத போது வாழ்வு வேறு வழிபாடு வேறு என்று ஒன்றுக்கு ஒன்று பொருந்தாத நிலையில் “உங்கள் திருவிழாக்களை நான் வெறுத்து அருவருக்கின்றேன். உங்கள் வழிபாட்டுக் கூட்டங்களில் எனக்கு விருப்பமே இல்லை" (ஆமோசு 5:21) என்று வெறுப்பை உமிழ்கின்றார் இறைவன்.
இயேசு வெகுண்டெழுந்தது தந்தையின் இல்லத்தைச் சந்தை யாக்குகிறார்களே என்பதற்காக மட்டுமா? கடவுளின் பெயரால் ஏழைகளின் வயிற்றில் அடித்து அநியாயமாக அவர்களைத் துன்புறுத்தியதற்காக "நீதி வெள்ளமெனப் பொங்கி வருக! நேர்மை வற்றாத ஆறாகப் பாய்ந்து வருக! (ஆமோசு 5:24) என்ற வேட்கையில் இயேசுவின் கோபம் தகுதியான முறையில் வெளிப்படுத்திய நியாயமான உணர்வு.
கோபப்படுவது யாருக்கும் எளிது. ஆனால் சரியான நபர் மீது சரியான அளவில், சரியான நேரத்தில், சரியான நோக்கத்துடன் சரியான வழியில் கோபப்படுவது அவ்வளவு எளிதல்ல.
மூன்று வகையான கோபம் பற்றி தந்தை மைக்கிள் ஜெயராஜ், சே.ச. குறிப்பிடுகிறார். ) அகச்சினம் (தன்னையே கடிந்து கொள்வது) 2. புறச்சினம் (பிறர்மீது கோபம் கொள்வது) 3. அறச்சினம் (ஒடுக்கப் பட்டோருக்கு ஆதரவாக அநீதி கண்டு சீறி எழுவது). அறச்சினம் பிறர் நலத்தில் பிறக்கும் அன்பின் வெளிப்பாடு. சமுதாய அக்கறையின் சின்னம். விடுதலை வாழ்வின் ஆணிவேர்.
கோபம் ஓர் உந்து சக்தி. கோபம் கொடிது என்று கூறினும் கோபம் கனலைப் போன்று பலனளிக்க வல்ல எரிசக்தி. எனினும் ''சினமுற்றாலும் பாவம் செய்யாதிருங்கள். பொழுது சாய்வதற்குள் உங்கள் சினம் தணியட்டும்” (எபே.4:26)
கோபம் உள்ள இடத்தில் குணமிருக்கும் என்பார்கள் - ஏதோ கோபமும் குணமும் மாறுபட்டதுபோல. கோபமே குணமாகலாம் என்பது இயேசுவின் வெளிப்பாடு - நிலைப்பாடு.

 

மறையுறை மொட்டுகள் 

அருள்பணி Y.இருதயராஜ்
ஒரு வீட்டிற்கு நான் சென்றபோது, அவ்வீட்டில் டோனி என்ற ஒரு சிறுவன் தட்டிலிருந்த உளுந்தவடைகளைத் தின்றுகொண்டிருந்தான். நான் அவனிடம், 'இதுவரை எத்தனை வடைகள் தின்றாய்?' என்று கேட்டதற்கு அவன் ஏழு என்று பதில் சொன்னான். நான் அவனிடம், 'அருள் அடையாளங்களே ஏழுதான்; நிறுத்திக்கொள்' என்று சொன்னேன், அவன், 'என்ன பாதர் பத்துக்கட்டளைகளை மறந்துவிட்டீர்களே!' என்று கேட்டபோது வீட்டிலிருந்த அனைவரும் சிரித்தனர், அச் சிறுவன் வேடிக்கையாகச் சொன்னதில் ஓர் ஆழமான உண்மை பொதிந்துள்ளது. வழிபாட்டில் ஏழு அருள் அடையாளங்களைக் கொண்டாடிவிட்டு வாழ்க்கையில் பத்துக் கட்டளைகளை மறந்துவிடுகிறோம்.

இன்றைய உலகம் பத்துக்கட்டளைகளைக் கடைப்பிடிக்க மறந்துவிட்டதால்தான், காமம். குடிவெறி, களியாட்டம், கொலை, கொள்ளை, இலஞ்சம், ஊழல், பாலியல் பலாத்காரம், சிசுக்கொலை முதலிய பாதகங்கள் கட்டவிழ்த்துவிடப்பட்டுள் ளன. இன்றைய உலகை அழிவிலிருந்து பாதுகாக்கப் பத்துக்கட்டளைகள் தேவை. தனி மனிதருடைய நலனுக்காகவும் பொது நலனுக்காகவும் தான் கடவுள் பத்துக் கட்டளைகளைக் கொடுத்தார் (முதல் வாசகம்). பத்துக்கட்டளைகள் உறவை மையமாகக் கொண்டுள்ளன. முதல் மூன்று கட்டளைகள் கடவுளுக்கும் மனிதனுக்குமிடையே நிலவும் உறவைப் புனிதப்படுத்துகின்றன. எஞ்சியுள்ள ஏழு கட்டளைகளும் மனிதருக்கும் மனிதருக்குமிடையே நிலவும் உறவைப் புனிதப் படுத்துகின்றன, பத்துக்கட்டளைகள் வாழ்வு தரும் வார்த்தைகள், "ஆண்டவரே முடிவில்லா வாழ்வு தரும் வார்த்தைகள் உம்மிடம் தானே உள்ளன" (பதிலுரைப்பாடல், யோவா 6:68), முடிவில்லா வாழ்வடைய பத்துக்கட்டளைகளைக் கடைப்பிடிக்கும்படி இயேசு பணக்கார இளைஞனிடம் கூறினார் (மத் 19:16-19),

பத்துக்கட்டளைகள் உடன்படிக்கை என்னும் மோதிரத்தில் பதிக்கப்பட்ட வைரக்கற்கள், சீனாய் உடன்படிக்கையின் வெளிப்பாடே பத்துக்கட்டளைகளாகும். எனவே, பத்துக்கட்டளைகளை மீறுவது வெறும் பாவம் மட்டுமன்று; உடன்படிக்கையை மீறுவதாகும், கிறிஸ்து பத்துக் கட்டளைகளை அழிக்காமல் அதை நிறைவு செய்தார் (மத் 5:17) கொலை செய்யாமல் இருந்தால் மட்டும் போதாது, கொலையின் காரணமான கோபத்தையும் தவிர்க்க வேண்டும் (மத் 5:21-22). விபச்சாரம் செய்யாமல் இருந்தால் மட்டும் போதாது, விபச்சாரத்திற்குக் காரணமான காம இச்சையுடன் கூடிய பார்வையையும் தவிர்க்க வேண்டும் (மத் 5:27-28). ஒரு நோயைக் குணப்படுத்த வேண்டுமென்றால். அந்நோயின் மூலகாரணத்தைக் கண்டறிந்து சிகிச்சை அளிக்க வேண்டும்.
"நோய்நாடி, நோய் முதல் நாடி, அது தணிக்கும் வாய்நாடி, வாய்ப்பச் செயல்" (குறள் 948),

கட்டளைகளை வெறும் எழுத்து வடிவத்தில் கடைப்பிடிப்பது பரிசேயரின் ஒழுக்கம். ஆனால், கட்டளைகளை அவற்றின் உள் நோக்கம் அறிந்து கடைப்பிடிப்பது கிறிஸ்துவ ஒழுக்கமாகும். முந்தைய ஒழுக்கம் சாவையும், பிந்தைய ஒழுக்கம் வாழ்வையும் விளைவிக்கும். எழுதப்பட்ட சட்டத்தால் விளைவது சாவு: தூய ஆவியால் விளைவது வாழ்வு (2 கொரி 3:6). எனவே, பத்துக் கட்டளைகளை கிறிஸ்து தமது மலைப்பொழிவில் விளக்கியதற்கு ஏற்ப அவற்றைக் கடைப்பிடிப்பது நமது முதன்மையான கடமையாகும், பழைய உடன்படிக்கை கற்களில் எழுதப்பட்டது. ஆனால் புதிய உடன்படிக்கையோ மனித இதயத்தில் எழுதப்பட்டது (எரே 31:33). புதிய உடன்படிக்கையின் இணைப்பாளரான கிறிஸ்து கொண்டு வந்தது புதிய வாழ்வு, புதிய ஆலயம், புதிய வழிபாடு, புதிய கட்டளை. இன்றைய நற்செய்தியில் இயேசு எருசலேம் ஆலயத்தைத் தூய்மைப்படுத்தி, தாமே புதிய ஆலயம் என்பதைச் சுட்டிக்காட்டுகிறார்.

ஒரு சிலருக்கு ஆலயம் என்றாலே ஒருவகையான ஒவ்வாமை நோய் வந்துவிடுகிறது. ஒருவர் ஆலயத்திற்குச் செல்வதில்லை. காரணம் கேட்டதற்கு, அவர் சொன்ன பதில் : "என் மனைவியை முதன் முதல் ஆலயத்தில்தான் பார்த்தேன். இவ்வளவு மோசமான ஒரு பெண்ணை ஆலயத்தில் எனக்குக் காட்டிய அந்த ஆண்டவன் முகத்தில் ஆயுள் முழுவதும் முழிக்கமாட்டேன்! "பாவம் கசப்பான அனுபவம். இத்தகைய கசப்பான அனுபவங்களால் ஒருசிலர் ஆலயம் செல்வதில்லை. இது தவறான முடிவாகும். ஏனெனில், நெஞ்சுக்கு நிம்மதி ஆண்டவன் சன்னதி! கிறிஸ்து ஆலயத்தையோ ஆலய வழிபாட்டையோ எதிர்க்கவில்லை. அவருடைய பெற்றோர்கள் ஆண்டு தோறும் பாஸ்கா விழாவிற்கு எருசலேம் ஆலயத்திற்குச் சென்றனர். இயேசுவும் பன்னிரண்டு வயதில் எருசலேம் ஆலயத்திற்குச் சென்றார், ஆலயத்தை அவருடைய தந்தையின் இல்லமென்றார் (லூக் 2:41-42, 49). ஆனால் ஆலயத்தைத் தவறான காரியங்களுக்குப் பயன்படுத்துவதை அவர் எதிர்த்தார். செபவீடாகிய கடவுளின் இல்லத்தைச் சந்தையாகவும் (யோவா 2:16), கள்வர் குகையாகவும் (மாற் 11:17) மாற்றப்படுவதை அவர் வன்மையாகக் கண்டித்தார்.

நாத்திகர்கள் ஆத்திகர்களிடம், "கடவுளை மற, மனிதனை நினை' என்று சொல்லுமளவிற்கு இன்று ஆலயமும் ஆலய வழிபாடும் தரம் தாழ்ந்து, தறிகெட்டுச் சென்றுக்கொண்டிருக்கிறது. ஆலயங்கள் வாணிபக் கூடமாகக் காட்சியளிக்கின்றன. திருத்தலங்களில் பணம் மையப்படுத்தப்படுகிறது.

குழந்தை இயேசுவின் கையில் என்ன இருக்கின்றது? என்று சிறுவர்களை நான் கேட்டபோது அவர்கள் உண்டியல் பெட்டி என்றார்கள்.
குழந்தை இயேசுவின் திருத்தலப் பங்குத் தந்தையிடம் நான் சிரித்துக் கொண்டே குழந்தை இயேசுவை வயசுக்கு வர விடமாட்டார்களா? என்று கேட்டதற்கு அவரும் சிரித்துக்கொண்டே குந்த இயேசு வயசுக்கு வந்துவிட்டால் வருமானம் போய்விடும். என்றார். ஆலய வழிபாட்டில் பண ஆதிக்கம் செலுத்தாமல், பக்தி நெறி ஆதிக்கம் செலுத்த வேண்டும். நீங்கள் கடவுளுடைய கோவிலென்றும் கடவுளின் ஆவியார் உங்களில் குடியிருக்கிறார் என்றும் உங்களுக்குத் தெரியாதா? ஒருவர் கடவுளின் கோவிலை அழித்தால் கடவுள் அவரை அழித்துவிடுவார். ஏனெனில் கடவுளின் கோவில் தூயது; நீங்களே அக்கோவில்.





உயிருள்ள ஆலயங்களாவோம்!

அருட்பணி மரிய அந்தோணிராஜ்  பாளையங்கோட்டை


அது ஒரு கிறிஸ்தவக் குடும்பம். கூட்டுக்குடும்பமும் கூட. அந்தக் குடும்பத்தில் இருந்த வயதான பாட்டி மட்டும் வாரவாரம் தவறாமல் ஆலயத்திற்குச் சென்று, திருப்பலியில் கலந்துகொண்டு வருவார்.  இது அந்தக் குடும்பத்தில் இரண்டு சிறுவர்களுக்கு ஆச்சரியத்தை தந்தது. ஒருநாள் அந்தச் சிறுவர்களில் ஒருவனாகிய ஜான் பாட்டியிடம், “பாட்டி! நீங்கள் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ஆலயத்திற்குச் சென்று திருப்பலியில் கலந்துகொண்டு வருகின்றீர்கள். அது தொடர்பாக உங்களிடத்தில் நான் ஒருசில கேள்விகளைக் கேட்கவேண்டும்” என்றான். “சரி கேள்” என்றாள் அவள்.

“பாட்டி! கடந்த வாரம் பங்குத்தந்தை அவர்கள் என்ன மறையுரை ஆற்றினார்கள். அதைப் பற்றிச் சொல்லுங்கள்” என்றான் ஜான். “அதெல்லாம் எனக்கு மறந்துபோய்விட்டதுபா. ஆனால் அவர் ஆற்றிய மறையுரை மிகவும் அருமையாக இருந்தது” என்றாள். “பங்குத்தந்தை என்ன மறையுரை ஆற்றினார்கள் என்றுகூடச் சொல்லவேண்டாம், எதைப் பற்றி மறையுரை ஆற்றினார்கள். அதைப் பற்றியாவது சொல்லுங்கள்” என்றான் ஜான். அதற்குப் பாட்டி அவனிடம், “பங்குத்தந்தை எதைப் பற்றி மறையுரை ஆற்றினார்கள் என்பதெல்லாம் எனக்கு மறந்துபோய்விட்டதப்பா, ஆனால், அவர் ஆற்றிய மறையுரை என்னுடைய உள்ளத்தைத் தொடுவதாக இருந்தது” என்றாள்.

“பங்குத்தந்தை என்ன மறையுரை ஆற்றினார்கள் என்பதும் தெரியவில்லை, எதைப் பற்றி மறையுரை ஆற்றினார்கள் என்பதும் தெரியவில்லை. பிறகு எதற்கு ஒவ்வொரு வாரமும் ஆலயத்திற்குப் போகின்றீர்கள்?” என்று கேட்டான் ஜான். ஜான் இவ்வாறு பேசியதைத் தொடர்ந்து பாட்டி சிறுது நேரம் அமைதியாக இருந்தாள். பின்னர் அவள் அவனிடத்தில், “தம்பி! கடந்த ஆண்டு இதே நாளில் இந்தக் காலை வேளையில் என்ன உணவு சாப்பிட்டாய் என்று சொல்” என்றாள். “கடந்த ஆண்டு இதே நாளில், இதே நேரத்தில் என்ன உணவு சாப்பிட்டேன் என்று நான் எப்படிச் சொல்ல முடியும். அது எனக்கு மறந்து போய்விட்டது என்றான் அவன். “கடந்த ஆண்டு என்ன உணவு சாப்பிட்டாய் என்று கூடச் சொல்லவேண்டும். கடந்த மாதம் இதே தேதியில் என்ன உணவு சாப்பிட்டாய் என்பதை மட்டும் சொல்” என்றாள். அதுவும் என்னைக்குத் தெரியாது” என்றான் ஜான்.

அப்போது பாட்டி அவனிடத்தில், “கடந்த ஆண்டும் ஏன் கடந்த மாதமும் நீ என்ன உணவு சாப்பிட்டாய் என்பது உனக்குத் தெரியாமல் இருக்கலாம். ஆனால், நீ சாப்பிட்ட உணவு உனக்கு ஆரோக்கியத்தையும் வலுவினையும்  தந்திருக்கும். இதை நீ ஏற்றுக்கொள்கின்றாயா?” என்று கேட்டாள். அவன் ஆமாம் என்பது போல் தலையாட்டினான். தொடர்ந்து பாட்டி அவனிடத்தில் சொன்னாள், “குருவானவர் என்ன மறையுரை ஆற்றினார், எதைப் பற்றி மறையுரை ஆற்றினார் என்பதெல்லாம் எனக்குத் தெரியாமல் இருக்கலாம். ஆனால், நான் ஒவ்வொரு வாரமும் ஆலயத்திற்குச் சென்று திருப்பலியில் கலந்துகொண்டு வருகின்றபோது நான் இறைவனின் வல்லமையையும், அவர் தருகின்ற ஆறுதலையும் பெற்றுக்கொள்வதை உணர்கின்றேன்” என்றாள். பாட்டி ஜானுக்கு சரியான பதிலளித்ததைத் தொடர்ந்து அவன் பாட்டியிடம் எந்தவொரு கேள்வியையும் கேட்கத் துணியவில்லை.

‘ஆலயம் தொழுவது சாலமும் நன்று’ என்ற மூத்தோர் வாக்கினைப் போல், நாம் ஆலயம் செல்வதனால் எத்தகைய பலனைப் பெறுகின்றோம் என்று உண்மையை இந்த நிகழ்வு மிக அருமையாக எடுத்துக்கூறுகின்றது. தவக்காலத்தின் மூன்றாம் ஞாயிறான இன்று நாம் படிக்கக்கேட்ட வாசகங்கள் நம்மை ‘உயிருள்ள ஆலயங்களாக வாழ அழைக்கின்றது. நாம் அதைக் குறித்து சிறுது நேரம் சிந்தித்துப் பார்ப்போம்.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு எருசலேம் திருக்கோவிலுக்குச் செல்கின்றார். அங்கு ஆடு மாடு, புறா விற்போரையும், நாணயம் மாற்று வோரையும் கண்டு, கயிறுகளால் சாட்டை பின்னி அவர்களை விரட்டியடிக்கின்றார்.  சாந்தமே உருவான இயேசு, இவ்வளவு சினத்தோடு கோவிலில் வாணிபம் செய்தவர்களை விரட்டியடிக்கின்ற செயல் நமக்கு வியப்பினைத் தருவதாக இருக்கின்றது. இயேசுவின் இத்தகைய செயலுக்குப் பின்னால் இருக்கும் அர்த்தம் என்ன என்று நாம் சிந்தித்துப் பார்க்கக் கடமைப்பட்டிக்கின்றோம்.

“என் இல்லம் மக்களினங்கள் அனைத்திற்கும் உரிய ‘இறை மன்றாட்டின் வீடு’ என அழைக்கப்படும்” என்பார் இறைவாக்கினர் எசாயா (எசா 56:7). இறைவாக்கினர் எசாயா கூறிய வார்த்தைகளை இயேசு நன்கு அறிந்து அறிந்திருப்பார். அது மட்டுமல்லாமல், இயேசு எருசலேம் திருக்கோவிலைத் தன்னுடைய தந்தையின் இல்லமாகத்தான் பார்த்தார். அதனால்தான் அவர் கோவிலில் வழிபாடு நடைபெறாமல், வாணிபம் நடைபெறுவதைப் பார்த்து, சினம் கொண்டு அவர்களை விரட்டியடிக்கின்றார்.

எருசலேம் திருக்கோவிலில் நடந்த முறைகேடுகளை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அவற்றை விளக்கிச் சொன்னால், சொல்லிக்கொண்டே போகலாம். ஆண்டுதோறும் நடைபெறக்கூடிய பாஸ்கா விழாவிற்கு உலகெங்கிலும் உள்ள யூதர்கள் எருசலேம் ஆலயத்தை நோக்கி வருவார்கள். இருபது இலட்சத்திற்குள் மேல் வருவார்கள் என்பார் வில்லியம் பார்க்லே என்னும் இறையியலாளர். இப்படி பெரும் எண்ணிக்கையில் வரும் ஒவ்வொரு யூதரிடமிருந்தும் அரை செக்கேல் கோவில் வரியாக வசூலிக்கப்படும். இந்தக் கோவில் வரியினை அவர்கள் வேற்று நாட்டு நாணயங் களில் செலுத்தமுடியாது, யூதர்கள் பயன்படுத்திய நாணயத்தில்தான் செலுத்தவேண்டும். எனவே நாணயப் பரிமாற்றமானது நிகழ்ந்தது. நாணய மாற்றத்தின்போது, அத்தொழிலைச் செய்து வந்தோர் 1/6 என்ற விகிதத்தில் பணத்தைப் பெற்றனர். இதனால் நாணயம் மாற்றும் தொழிலில் கொழுத்த இலாபம் கிடைத்தது. இதற்கெல்லாம் பொறுப்பாக இருந்தவர்கள் தலைமைக்குருக்கள் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

எருசலேம் திருக்கோவில் நடந்த இரண்டாவது முறைகேடு ஆடு, மாடு, புறா விற்றல் ஆகும். யூதர்கள் ஆலயத்திற்கு வருகின்றபோது ஆடு, மாடுகள், புறாக்களை காணிக்கையாக செலுத்தினார்கள். இயேசுவின் பெற்றோர்களும் காணிக்கை செலுத்தினார்கள் என்று லூக்கா நற்செய்தி எடுத்துக்கூறுகின்றார் (2: 24). இப்படி காணிக்கை செலுத்துவதற்காக ஆடு மாடுகள் விற்பனை செய்யப்பட்டன. இதில் வேடிக்கை என்னவென்றால், மக்கள் ஆலயத்திற்கு வெளியே விற்கப்படும் ஆடு மாடுகளை, புறாக்களை வாங்கக்கூடாது, ஆலய வளாகத்திற்குள்ளே விற்பனை செய்யப்படும் ஆடு மாடுகளைதான் வாங்கவேண்டும். ஆலய வளாகத்திற்கு உள்ளே விற்பனை செய்யப்பட்ட ஆடு, மாடுகள், வெளியே விற்பனை செய்யப்பட்ட ஆடு மாடுகளைவிட பன்மடங்கு அதிகமாக இருந்தது. இதன் வழியாகும் ஆலய நிர்வாகம் செய்துவந்த தலைமைக் குருக்கள் பெரும் இலாபம் அடைந்தார்கள்.

எருசலேம் திருக்கோவில் நடந்த மூன்றாவது குளறுபடி கோவிலில் வாணிபம் செய்துவந்தவர்கள் புறவினத்தாரின் வழிபாட்டுக்குரிய பகுதியை அபகரித்துக் கொண்டதாகும். ஆலயம் எல்லா மக்களுக்கும் உரியது என்று எசாயா இறைவாக்கினர் கூறியதை மேலே பார்த்தோம். அப்படியானால், எருசலேம் திருக்கோவில் யூதர்களுக்கு மட்டுமல்ல, புறவினத்தாரும் சொந்தம் என்பதுதான் உண்மை. எனவே, அவர்கள் வழிபடுகின்ற பகுதியை அவர்களுக்குக் கொடுப்பதுதான் தகுதியும் நீதியுமாகும். ஆனால், கோவிலில் வாணிபம் செய்துவந்தவர்களோ புறவினத்தாரின் வழிபாட்டுப்பகுதி யில் வாணிபம் செய்து, அவர்கள் வழிபாடு செய்வதற்கு மிகப்பெரிய தடையாய் இருந்தார்கள். அதனால்தான் இயேசு அங்கு வாணிபம் செய்து வந்தவர்களை கயிறுகளால் சாட்டை பின்னி அவர்களை விரட்டி அடிக்கின்றார்.

இயேசு செய்த இந்த தீரமிக்க செயலைப் பார்த்துவிட்டு யூதர்கள், “இவற்றையெல்லாம் செய்ய உமக்கு உரிமை உண்டு என்பதற்கு நீர் காட்டும் அடையாளம் என்ன” என்று கேட்கின்றார்கள். இயேசு மறுமொழியாக அவர்களிடம், “இக்கோவிலை இடித்து விடுங்கள். நான் மூன்று நாளில் இதைக் கட்டி எழுப்புவேன்” என்கின்றார். இயேசு சொன்னது யூதர்களுக்கு நிச்சயம் புரிந்திருக்காது. அவர் தன் உடல் என்னும் கோவிலைப் பற்றித் தான் பேசுகின்றார். நான் இறந்து மூன்றாம் நாள் உயிர்த்தெழும் இறைமகன்’ என்பதுதான் இயேசு யூதர்களுக்குக் கொடுக்கும் அடையாளமாக, பதிலாக இருக்கின்றது. வேறு வார்த்தைகளில் சொல்லவேண்டுமானால், இயேசு தன்னுடைய உயிர்தெழுதலை அவர்களுக்கு அடையாளமாகக் கொடுக்கின்றார்.

இயேசு தன்னுடைய உடலைக் கோவிலாக உருவகப்படுத்துவது நம்முடைய ஆழமான சிந்தனைக்குரியதாக இருக்கின்றது. இதோடு பவுலடியார் கூறுகின்ற வார்த்தைகளை நாம் ஒப்பிட்டுச் சிந்தித்துப் பார்த்தால் அது ஆழமான அர்த்தத்தைத் தரும் என்பதுதான் உண்மை. “உங்கள் உடல் நீங்கள் கடவுளிடமிருந்து பெற்றுக்கொண்ட தூய ஆவி தங்கும் கோவில் என்று உங்களுக்குத் தெரியாதா? நீங்கள் உங்களுக்கு உரியவரல்ல. கடவுள் உங்களை விலை கொடுத்து மீட்டுள்ளார். எனவே, உங்கள் உடலால் கடவுளுக்கு பெருமை சேருங்கள்” ( 1 கொரி 6: 19, 20) என்பார் தூய பவுல். ஆகையால், நமது உடல் தூய ஆவியார் வாழும் கோவில் என்பதை உணர்ந்து, நமக்காக வாழாமல் கடவுளுக்காக வாழ்வதுதான் மிகச் சிறப்பானதாகும்.

கடவுள் தந்த இந்த உடலை வைத்து எப்படிப்பட்ட வாழ்க்கையை வாழ்வது என்பதை இன்றைய முதல் வாசகம் நமக்கு எடுத்துக்கூறுகின்றது. முதல் வாசகத்தில் பத்துக்கட்டளைகளைக் குறித்து வாசிக்கின்றோம். பத்துக் கட்டளைகளை இறையன்பு, பிறரன்பு என்னும் இரண்டு கட்டளைகளில் அடக்குகின்றோம். எனவே, தூய ஆவியானவர் தங்கி இருக்கும் நம் உடல் என்னும் கோவிலை வைத்து கடவுளை முழுமையாய் அன்பு செய்ய வேண்டும், அதே நேரத்தில் மனிதர்களையும் அன்பு செய்யவேண்டும். அப்படி நாம் அன்பு செய்யும்போது உயிருள்ள ஆலயங்களாக இருப்போம் என்பதில் எந்தவொரு மாற்றுக்கருத்தும் கிடையாது.

எனவே, கடவுள் நமக்குக் கொடுத்திருக்கும் கட்டளைகளைக் கடைபிடித்து ஆலயங்களுக்கு மட்டுமல்ல, உயிருள்ள ஆலயங்களுக்கும் முக்கியத்துவம் தருவோம். அதன்வழியாய் இறையருள் நிறைவாய் பெறுவோம்.




அடிமை வீடா? தந்தையின் இல்லமா?

அருள்பணி ஏசு கருணாநிதி -மதுரை


முதல் ஏற்பாட்டில் எங்கெல்லாம் எகிப்து பற்றிய வர்ணனை வருகிறதோ அங்கெல்லாம் பெரும்பாலும் விவிலிய ஆசிரியர் 'அடிமை வீடாகிய எகிப்து நாடு' என்று வர்ணனை செய்கின்றார். இவ்வாறாக, எகிப்து என்பது இஸ்ரயேல் மக்களின் அடிமைத்தனத்தின் அடையாளமாக இருக்கிறது. அடிமை வீடாகிய எகிப்தில் அவர்கள் பாரவோனுக்கு அடிமைகளாக இருந்தனர். வாக்களிக்கப்பட்ட நாட்டிற்குள் நுழைந்தவுடன் அவர்கள் யாவே இறைவனின் உரிமை மக்களாக மாறுகின்றனர். ஆக, அடிமை வீட்டிலிருந்து அவர்கள் தந்தையின் இல்லத்திற்குக் கடந்து செல்கின்றனர்.

ஆனால், ஒருவர் தந்தையின் இல்லத்திற்குள் நுழைய வேண்டுமென்றால் அவர் தந்தையின் கட்டளைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று பத்துக்கட்டளைகளைப் பட்டியலிடுகின்றது இன்றைய முதல் வாசகம். இந்த பத்துக் கட்டளைகள் சொல்வது ஒற்றைச் சொல்தான்: 'புனிதம்.'

'புனிதம்' என்ற வார்த்தையை மையமாக வைத்து பத்துக்கட்டளைகளை பின்வருமாறு வகைப்படுத்தலாம்:

கட்டளை 1: கடவுள் என்னும் புனிதம்
கட்டளை 2: வார்த்தை என்னும் புனிதம்
கட்டளை 3: நேரம் என்னும் புனிதம்
கட்டளை 4: அதிகாரம் என்னும் புனிதம்
கட்டளை 5: உயிர் என்னும் புனிதம்
கட்டளை 6: அன்பு என்னும் புனிதம்
கட்டளை 7: உரிமை என்னும் புனிதம்
கட்டளை 8: உண்மை என்னும் புனிதம்
கட்டளை 9: திருப்தி என்னும் புனிதம்
கட்டளை 10: நிறைவு என்னும் புனிதம்

இந்த 10 புனித வாயில்களில் நாம் நுழையும்போது தந்தையின் இல்லத்திற்குச் சென்றுவிடலாம்.

அடிமை வீடா? தந்தையின் இல்லமா? - எதைத் தேர்ந்து கொள்வது என்ற கேள்வி இன்றைய நற்செய்தி வாசகத்தில் தொடர்கிறது. இயேசு எருசலேம் ஆலயத்தை தூய்மைப்படுத்தும் நிகழ்வு நான்கு நற்செய்தி நூல்களிலும் நாம் காணும் ஒன்று. யோவான் இந்த நிகழ்வை நற்செய்தி நூலின் தொடக்கத்திலும், மற்றவர்கள் ஏறக்குறைய இறுதியிலும் பதிவு செய்கின்றனர்.

எருசலேம் ஆலயம் அடிமை வீடாக இருக்கிறது. எப்படி?

இயேசுவின் சமகாலத்தில் எருசலேம் ஆலயம் ஒரு வியாபார ஸ்தலமாக மாறிவிட்டது. கடவுளையும், கடவுள் சார்ந்தவற்றையும் காசாக்கும் வித்தைகள் கற்றிருந்தவர்களின் கருவூலமாக ஆலயம் இருந்தது. இவ்வாறாக, மக்களையும், கடவுளையும் இணைக்கவேண்டிய ஆலயம் இவ்விருவருக்கும் இடையே பெரிய பொருளாதார, சமூக, சமய, அரசியல் பிளவை ஏற்படுத்தியிருந்தது.

மேலும், இவ்வாறாக இவ்வாலயம் இருந்தததால் இவ்வாலயம் சுயநலம், குறுக்குவழி வணிகம், தாறுமாறான லாபம், ஏமாற்றுவேலை, இலஞ்சம், ஊழல் என்னும் காரணிகளுக்கு அடிமைகளாக இருந்தவர்களின் வீடாக மாறிவிட்டது. இயேசு இதைத் தூய்மைப்படுத்துகிறார்?

'நீர் யார் இதைச் செய்ய?' என்று யூதர்கள் கேட்டபோது, தன்னையே 'தந்தையின் இல்லம்' என்னும் கோவில் என்று அடையாளம் காட்டுகின்றார்.

ஆக, அடிமைத்தன வீட்டை அழிக்க தந்தையின் இல்லமாக வாழும் ஒருவரால் தான் முடியும்.

இன்று நான் என்னையே கேட்டுப்பார்க்கிறேன்:

எப்போதெல்லாம் என் உடல் என்னும் ஆலயம் அடிமைத்தன வீடாக இருந்தது? நான் எவற்றிற்கெல்லாம் அடிமையாக இருந்தேன்?

அல்லது என் உடல் தந்தையின் இல்லமாகவே இருந்திருக்கிறதா?

இல்லம் வலுவில்லாமல் இருந்தாலும் அது தந்தையின் இல்லமாக இருந்தால் அது வலுவுள்ளது என்பதை, 'மனித வலிமையைவிட அவரின் வலுவின்மை வலிமை மிக்கது' என்கிறார் தூய பவுல்.

இறுதியாக,

என் உடல் தந்தையின் இல்லம் என்பதை அறிவுறுத்துகின்ற இயேசு இந்த உடலில் உறையும் உணர்வுகளையும், உணர்ச்சிகளையும் தூய்மைப்படுத்துகின்றார். இவற்றின்மேல் நாம் உரிமை கொண்டிருக்க அழைக்கப்படுகிறோமே தவிர, இவற்றின் அடிமைகளாக, இவற்றிற்கு நம்மை விற்றுவிட அல்ல.

ஒவ்வொரு கட்டளை சொல்லும் புனிதம் இந்த இல்லத்தின் வாழ்வாக நான் என்ன செய்கிறேன்?

வலுவான ஒரு வீடாக என் உடல் இருந்து அது அடிமைத்தனத்தின் வீடாக இருப்பதைவிட, வலுவற்றதாயினும் அது தந்தையின் இல்லமாக இருந்தால் சால்பு.




No comments:

Post a Comment