Tuesday 26 March 2019

தவக்காலத்தின் 4-ஆம் ஞாயிறு

தவக்காலத்தின் 4-ஆம் ஞாயிறு


இன்றைய வாசகங்கள்:


யோசுவா. 5:9-10,12
2 கொரிந்தியர். 5:17-21
லூக்கா. 15:1-3, 11-32



ஜெர்மன் நாட்டு ஓவியர் ஒருவர் இயேசுவைப் போல சிறுவன் ஒரு படத்தை வரைவதற்கு மாதிரிக்காக ஒரு சிறுவனைப் பல இடங்களில் தேடினார். இறுதியில் ஒரு சிறுவனைக் கண்டுபிடித்து அவனை வரைந்தார். சில ஆண்டுகளுக்குப் பிறகு இயேசுவைக் காட்டிக் கொடுத்த யூதாசைப் போன்ற தோற்றத்தில் உள்ள ஒரு மனிதனை ஓவியமாக வரைய வேண்டும் என்று தேடி ஒருவனைக் கண்டுபிடித்தார். வரைந்து முடிக்கும்போது அவனைப் பார்த்து சில ஆண்டுகளுக்கு முன் இயேசுவைப் போன்று வரைந்த சிறுவனின் முகச்சாயல் உன்னிடம் சிறிது தெரிகிறது என்றார் அந்த ஓவியர். அதற்கு அந்த மனிதன், நான் சிறுவனாக இருக்கும்போது, அன்பும், இரக்கமும் உள்ள தந்தையும், சகோதர பாசம் கொண்ட சகோதரனும் எனக்கு இருந்தார்கள். ஆனால் காலப்போக்கில் வளர்ந்தபின் மனம் போன போக்கில் வாழ்ந்து இன்று இந்த நிலைக்குத் தள்ளப்பட்டேன் என்றான் அந்த மனிதன்.

பெற்றோர்களின் அன்புக்கு நன்றியுடன் நடந்து கொள்ளாத பிள்ளைகளே இன்று அதிகம். ஊதாரி மகன் அன்புள்ள தந்தையிடமிருந்து பிரிந்து சென்றான். இவனது அன்பு உறவுகளிலிருந்து பிரிந்து செல்கிறான். இப்படி தந்தையின் இல்லத்தை விட்டுப் பிரிந்து செல்லும் ஒவ்வொருவருக்கும் எச்சரிக்கை விடுப்பதே இன்றைய வழிபாட்டின் மையக் கருத்தாகும்.

பழைய ஏற்பாட்டிலே இஸ்ரயேல் மக்கள் எவ்வளவு குற்றம் புரிந்தாலும் கடவுள் தனது மாறாத அன்பினால் மன்னித்து தேனும், பாலும் பொழியும் புதிய நாட்டையே பரிசாக வழங்கினார்.

ஊதாரி மகன் தந்தையிடமிருந்து பிரிந்து சென்று பன்றியோடு சேர்ந்து பன்றியாக, இழிவான நிலைக்குத் தள்ளப்படுகிறான். இந்த நிலையில் சிந்திக்கிறான். அறிவுத் தெளிவு பெற்று தந்தையின் அன்பைத் திரும்பப் பெற விரும்புகிறான். இதற்கு மூன்று செயல்பாடுகள் உதவியாக அமைந்தன:

1) சுய ஆய்வு செய்தல் 2) எழுதல் 3) ஒப்புரவாகுதல்

புதிய வாழ்வு பெற முடியும் என்ற நம்பிக்கையோடு, பாவத்தையும், தீய எண்ணங்களையும் தீயிட்டுக் கொளுத்திவிட்டு தந்தையோடு ஒப்புரவாக திரும்புகிறான். தந்தையும் வாஞ்சையோடு வரவேற்கிறார். மூத்த மகனைத் தவிர குடும்பமே மகிழ்ச்சியில் உள்ளது.

மூத்த மகன் தான் நல்லவன் என்பதை பல சான்றுகளுடன் சுட்டிக்காட்டுகிறான். உம் கட்டளையை மீறியது இல்லை. அடிமை போன்று உமக்கு ஊழியம் செய்த எனக்கு ஒரு ஆட்டுக்குட்டி கூட கொடுத்ததில்லையே என்று குற்றம் சாட்டுகிறான். தந்தையின் இரக்கத்தையும், பெருந்தன்மையையும் அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மகிழ்ச்சியடைய முடியவில்லை. தம்பியை மன்னிக்கும் மனம் இல்லை. ஏற்றுக்கொள்ளும் இதயம் இல்லை.

இறைவன் பாவிகளை வெறுப்பதில்லை . மாறாக மனம் மாறி வரும் பாவிகளை குணமாக்கும் மருத்துவர் தான் இறைவன் என்பதை மறந்துவிடக் கூடாது.

ஊதாரி மகனின் தந்தையிடம் இருந்த அன்பையும், பாசத்தையும், மன்னிப்பையும் நம் இதய வரிகளாக்குவோம்.

இந்த தவக்காலம் நம்மில் கிடக்கும் சுயநலம், பாவம் போன்ற ஆன்ம அழுக்குகளை அப்புறப்படுத்த அருமையான வாய்ப்பாக அமைந்துள்ளது. நம்மில் மாற்றம் காணவும், பிறரை மன்னிக்கவும் முன் வருவோம்.





பாவத்தை விட்டுவிடுவோம் எப்போதும் நாம் மனத்தூய்மையுடையவர்களாய் வாழ என்ன செய்யவேண்டும்? என்பதைச் சுட்டிக்காட்ட இதோ ஒரு கதை!

அவன் ஒரு பாவி! அவனுக்கு ஒரு நாள் தான் ஒரு புனிதனாக வேண்டும், அக ஒளி பெற்றவனாக, தூய்மை நிறைந்த மனம் படைத்தவனாக மாற ஆசை வந்தது.

எல்லாருக்கும் நல்வழி காட்டும் புனிதர் ஒருவர் காட்டுக்குள் வாழ்வதாக அவன் அறிந்து, அந்தப் புனிதரைத் தேடி காட்டுக்குள் சென்றான்.

அவரிடம் போய் அந்தப் பாவி, சுவாமி, நான் ஒரு பெரிய பாவி ! மனம் திரும்பி நல்லவனாக வாழ ஆசைப்படுகின்றேன். எனக்கு நல்வழி காட்டுங்கள் என்றான். அந்தப் பாவியைப் பார்த்து அந்த முனிவர், நீ போய் ஒரு வெங்காயத்தாமரைச் செடியைக் கொண்டு வா என்றார். அவனும் கொண்டு வந்தான். அந்த முனிவர், இந்தச் செடியைக் கொண்டு போய் கடலில் எறிந்து விட்டு வா என்றார். அதை எடுத்துக்கொண்டு அவன் கடற்கரைக்குச் சென்றான். அவன் எத்தனை முறை அந்தச் செடியை கடலுக்குள் எறிந்தாலும் அத்தனை முறையும் அந்தச் செடியைக் கரைக்குக் கொண்டுவந்து சேர்த்தன அந்தக் கடலலைகள்.

பாவி திரும்பி வந்தான். நடந்ததை முனிவரிடம் சொன்னான். அதற்கு அந்த முனிவர், மகனே! அந்தக் கடலுக்கு நன்றாகத் தெரியும். ஒரு செடி கடலுக்குள் புகுந்தால் போதும் ! அது வளர்ந்து, படர்ந்து கடல் முழுவதையும் அடைத்துவிடும். அதனால்தான் அந்தச் செடி உள்ளே வராதபடி அந்தக் கடலலைகள் அதைத் தூக்கி எறிந்திருக்கின்றன.

உன் மனம் முழுவதையும் பாவத்தால் நிரப்ப ஒரு சிறு பாவம் போதும் ! ஆகவே ஒரு சிறு பாவம் கூட உனக்குள் நுழையாமல் பார்த்துக்கொள், பாவம் உன் பக்கத்தில் வரும்போது அதைத் தூக்கி எறிந்துவிடு என்றார்.

அவனும் அவ்வாறே செய்தான். புனிதனானான். கடவுளுக்கு ஏற்புடையவனானான்.

மேலும் அறிவோம்.
அறத்தான் வருவதே இன்பம்மற் றெல்லாம்
புறத்த புகழும் இல (குறள் :39)

பொருள்: அறச்செயல்களால் வருவது மட்டுமே உண்மையான இன்பம் ஆகும். புகழையும் தரும். அதற்கு மாறான வழியில் வருபவை இன்பம் போலத் தோன்றினாலும் துன்பம் ஆகும் ; புகழையும் கெடுக்கும்.



இதோ இன்னொரு பரிசேயன்

 வானகத்தில் ஒருநாள் கடவுள் உலா வந்தார். தன்னையே அவரால் நம்ப முடியவில்லை . அவருக்கே ஒரே ஆச்சரியம். இறந்தவர் அனைவரும் மோட்சத்தில்! எவருமே இல்லை நரகத்தில்!

இது எப்படி? இறைவன் சிந்தனையில் சிறிது குழப்பம். “அப்படி என்ன, உலகில் அத்தனை பேருமா யோக்கியர்களாகி விட்டனர்? இல்லை, ஒருவேளை நாம்தாம் நீதியின் தேவனாகச் செயல்பட வில்லையா? எது எப்படி இருந்தாலும் எவருமே செல்லவில்லை யென்றால் நரகம் தான் எதற்கு? நமது தீர்ப்பை மறுசிந்தனை செய்ய வேண்டும்''.

வானதூதர் கபிரியேலை அழைத்தார். "அனைவரையும் மீண்டும் நம் நீதி அரியணைக்கு முன் வரச்சொல், பத்துக் கட்டளைகளை எடுத்து ஒவ்வொன்றாகப் படி" :

கபிரியேல் வாசித்தார். முதல் கட்டளை - "நாமே உன் கடவுள். எம்மைத் தவிர வேறு தெய்வங்கள் கூடாது. இந்தக் கட்டளைக்கு எதிராக என்று இறைவன் தொடங்கியதும் எங்கோ மூலையில் ஒருவன் முணுமுணுத்தான்: “ஞாயிறுக்கு ஞாயிறு ஒரே சருவேசுரனை விசுவசிக்கிறேன் என்று சொல்வது உம் காதில் விழவில்லையா?” "என்ன சொன்னாய்?" அதட்டலோடு கேட்டார் ஆண்டவர் "ஆலயத்தில் தான் ஒரே சருவேசுரன். அன்றாட வாழ்வில் மணமுடிக்க முகூர்த்த நேரம், நோய் வந்தால் தாயத்து, பயணம் செய்தால் சகுணம்... இப்படி ஓராயிரம் சருவேசுரன்கள் என்பதை மறைத்து யாரிடம் கதை விடுகிறாய்?” எங்கும் ஒரே அமைதி. இந்த முதல் கட்டளையை மீறியவர்கள் நரகத்துக்குச் செல்லுங்கள் என்றதும் சிலர் எழுந்து சென்றனர்.

இப்படியே கட்டளை-2, கட்டளை-3, கட்டளை-4, கட்டளை-5 என்று இடையிடையே சிறிது விளக்கிச் சொன்னதும் உள்ளம் உறுத்தப் பலர் சென்றனர் நரகம் நோக்கி.

கட்டளை-6 என்று கபிரியேல் சொல்லத் தொடங்குமுன்னேயே அங்கிருந்த அத்தனைபேரும் தலைகுனிந்தபடி புறப்பட்டு விட்டனர் - ஒருவரை, கட்டையாய் கருப்பாய் வழுக்கையாய் மொழுக்கையாய் ஒரு சந்நியாசியைத் தவிர.
கடவுள் பார்த்தார். மோட்சமே காலியாகிவிட்டது தரும் சங்கடமாய் இருந்தது. அதனால் கபிரியேலிடம் சொன்னார் “மீண்டும் அனைவரையும் மோட்சத்திற்குள் வரச்சொல்". கேட்டதும் அந்த சந்நியாசி சத்தமாகக் கத்தினாராம் "என்ன நீதி இது? இப்படி நடக்கும் கான்று முன்கூட்டியே சொல்லியிருக்கக் கூடாதா?" முன்னதாகத் தெரிந்திருந்தால் தானும் கொஞ்சம் இந்த ஆறாம் கட்டளையை அசைபோட்டிருக்கலாமே என்ற ஏக்கமோ என்னவோ!

இதோ இங்கே இன்னொரு பரிசேயன், இன்னொரு மூத்த மகன். இதுதான் தங்களையே நீதிமான்களாக நினைத்துக் கொள்ளும் புண்ணியவான்களின் புனிதம்.

பாவிகளுக்காக அல்ல பரிசேயர்களுக்காகவே இயேசு சொன்ன கதை தானே ஊதாரி மைந்தன் உவமை (லூக்.15:2,3). பாவி மனந்திரும்பிய கதை மட்டுமல்ல, தன்னையே நேர்மையாளன் என்று நினைப்பவன் மனம் திரும்ப வேண்டிய கதை.

தந்தையின் அன்புத் தழுவுதலுக்காக அறிவு தெளிந்து வீடு திரும்பும் தம்பியாக மட்டுமல்ல மனந்திரும்பி வரும் பாவியை மகனாக அணைத்து ஆட்கொள்ளும் தந்தையாக, தம்பியாக ஏற்று மகிழும் அண்ணனாக மாற, வாழ மனமாற்றத்துக்கு நம்மை அழைக்கும் காலமே தவக்காலம்.

நம் கடவுள் மன்னிக்கும் தந்தை. “அவர் உன் குற்றங்களை யெல்லாம் மன்னிக்கிறார். உன் நோய்களையெல்லாம் குணமாக்குகிறார்” (தி.பா.103:3) என்று தெம்போடு பாடும் திருப்பாடல் ஆசிரியர் தொடர்கிறார் “அவர் நம் பாவங்களுக்கு ஏற்ப நம்மை நடத்துவதில்லை. நம் குற்றங்களுக்கு ஏற்ப நம்மைத் தண்டிப்பதில்லை (தி.பா.103:10) ஆறுதலும் புதுவாழ்வும் தரும் வார்த்தைகள்.

ஆனால் அடுத்து வரும் தி.பா.103:12 தான் நம் ஆழ்ந்த சிந்தனைக்குரியது. “மேற்கினின்று கிழக்கு எத்துணை தொலைவில் உள்ளதோ அத்துனை தொலைவிற்கு நம் குற்றங்களை நம்மிடமிருந்து அகற்றுகிறார்"

மேற்கு எங்கே இருக்கிறது, கிழக்கு எங்கே இருக்கிறது? இதுதான் மேற்கு இதுதான் கிழக்கு என்று நிருணயிப்பது எது? ஒருவன் தான் நிற்கும் நிலையை வைத்தே, மேற்கு, கிழக்கு, மேற்குக்கும் கிழக்குக்கும் உள்ள தொலைவு எல்லாமே தீர்மானிக்கப்படுகின்றன. நிலைப்பாட்டில் கொஞ்சம் அசைந்து நகர்ந்தால் மேற்கு கிழக்காகலாம், கிழக்கு மேற்காகலாம். ஆக, நாம் எடுக்கும் நிலைப்பாடே இறைவனின் இரக்கத்துக்கும் மன்னிப்புக்கும் நம்மை உரித்தாக்குகிறது.

“என் தந்தையிடம் செல்வேன்” - இளையமகன் எடுத்த நிலைப்பாடு தந்தையிடம் கொண்டு போய்ச் சேர்த்தது - அடிமையாக அல்ல, மகனாக. மூத்த மகன் எடுத்த நிலைப்பாடோ, தந்தை வருந்தி அழைத்தும் அடிமை போன்று வீட்டுக்கு வெளியே நிற்க வைத்தது.

“அப்பா, கடவுளுக்கும் உமக்கும் எதிராக நான் பாவம் செய்தேன்" - இளையமகனின் இந்த நிலைப்பாடு, அவனது உள்ளத்தில் பாவ உணர்வை கிளர்ந்தெழச் செய்தது. அந்தக் குற்ற உணர்வு வளர்ச்சிக்கானது (பேதுருவுடையது போன்றது) அழிவுக்கானது அன்று (யூதாசுடையது போன்றது) தன்னை நீதிமானாக நினைத்த மூத்த மகனுடைய வாழ்வோ மந்த வாழ்வு, கடமைக்காக வாழும் பரிசேய வாழ்வு, பாதுகாப்போடு வாழும் போலியான வாழ்வு.

பசியே ஊதாரி மகனைத் தன்னிலை உணர வைத்தது. ஆன்மீகப் பசியோடு தாகத்தோடு இத்தவக்காலத்தில் தந்தையை நாடுவோம். அந்த ஒப்புரவு அருட்சாதனம் பெறத் தேவையானவை மூன்று என்பார். ஒப்புரவுப் பணியையே குருத்துவப் பணியாகக் கொண்ட தூய வியான்னி: 1. குருவானவரில் பிரசன்னமாக இருக்கும் கடவுளைக் காண விசுவாசம். 2. கடவுள் மன்னிப்புக்கான அருளைக் கொடுப்பார் என்ற நம்பிக்கை. 3. பாவத்தால் கடவுளைப் புண்படுத்தியதற்காக வருந்தவும் அவரை நேசிக்கவும் அன்பு.



நவீன், பிரவீன் என்ற இரு மாணவர்கள் வகுப்பில் சண்டை போட்டனர். அவர்கள் ஏன் சண்டையிடுகின்றனர்.? என்று ஆசிரியர் கேட்டபோது, நவீன் என்ற மாணவன், "சார், பிரவீன் என்னை முட்டாள் என்று திட்டுகிறான்” என்றான். ஆனால், பிரவீன் அவன் சொன்னதை மறுத்து, "இல்லை சார்! நவீன் தான் முதலில் என்னை முட்டாள் என்று திட்டினான்” என்று கூறினான். அதற்கு ஆசிரியர். "ஏண்டா நான் இங்கே ஒருத்தன் இருக்கின்றேன் என்பதை மறந்து விட்டீர்களா?" என்று கேட்டார். ஆசிரியரும் ஒரு முட்டாள்?

ஒரு வகையில் நாமனைவருமே முட்டாள்கள். நாம் செய்யும் எத்தனையோ காரியங்கள் முட்டாள் தனமானவை. ஆனால், ஒரு முட்டாள் தான் ஒரு முட்டாள் என்பதை ஏற்றுக் கொள்ளும்போது அவன் அறிவாளியாகின்றான். ஒரு பாவி, தான் ஒரு பாவி என்பதை ஏற்றுக் கொள்ளும்போது அவன் ஒரு நீதிமானாகின்றான். இந்த உண்மையை இன்றைய நற்செய்தி கூறும் "காணமற்போன மகன்" உவமை நன்கு உணர்த்தி, நம்மை மனமாற்றத்திற்கு அழைக்கிறது. கடவுளுடைய நிபந்தனையற்ற அன்புக்கும் மனிதருடைய முழுமையான மனமாற்றத்திற்கும் இவ்வுவமை சிறந்ததோர் எடுத்துக்காட்டு.

பாவம் என்பது கடவுளையே வெறுக்கும் அளவுக்கு ஒருவர் தம்மீது அன்பு செலுத்துவதாகும். இளைய மகன் தன்னுடைய தந்தையை வெறுத்தான்; தந்தை இறந்து போனால் நன்று என்று எண்ணினான். ஏனெனில் தந்தை உயிருடன் இருக்கும் வரை அவனுக்குத் தந்தையின் சொத்தில் பங்கு கிடைக்காது. அவன் சுதந்திரப் பறவையாகப் பறக்க முடியாது. அவ்வாறே பாவியும் ஒரு வகையில் 'கடவுள் செத்துவிட்டால் நல்லது: கடவுள் இருப்பது எனக்கு ஓர் இடையூறு. எனது கட்டுப்பாடற்ற வாழ்வுக்கு அவர் ஒரு வேகத்தடை. எனது முன்னேற்றத்துக்கு அவர் ஒரு முட்டு கட்டை' என்று எண்ணி மனக் கசப்படைகின்றான்.

பாவம் என்பது தந்தையாகிய கடவுளிடமிருந்து வெகு தொலைவில் செல்வது. சிற்றின்பப் பன்றிகள் கூட்டத்தில் வாழ்வது; பாவத் தவிட்டால் வயிற்றை நிரப்புவது. சுருக்கமாக, மகன் என்ற 2. யரிய நிலையிலிருந்து அடிமை என்ற இழிநிலைக்குத் தள்ளப்படுவது "பாவம் செய்கிற எவரும் பாவத்துக்கு அடிமை... வீட்டில் அடிமைக்கு நிலையான இடமில்லை " (யோவா 3:34-35).

மனநிலை பாதிக்கப்பட்ட ஒருவர் மல்லாக்கப் படுத்து ஒரு பாட்டைப் பாடினார். திடீரென்ற குப்புறப்படுத்து மற்றோர் பாடலைப் பாடினார். ஏன் அவர் அவ்வாறு செய்தார்? என்று அவரைக் கேட்டபோது அவர், "இசைத் தட்டைத் திருப்பிப் போட்டேன்" என்றார்.

காணாமற்போன இளைய மகன் மனமாற்றம் அடைந்தான். தனது வாழ்வு என்னும் இசைத் தட்டைத் திருப்பிப் போட்டான், மனமாற்றம் என்பது பாவத்தின் மறுநிலை. பாவம் என்பது கடவுளை வெறுக்கும் அளவுக்குத் தன்னை அன்பு செய்வது என்றால், மனமாற்றம் என்பது தன்னையே வெறுக்கும் அளவுக்குக் கடவுளை அன்பு செய்வதாகும்.

ஒரு காலத்தில் தன் தந்தையை வெறுத்த இளைய மகன் தன் இழிவுநிலையை உணர்ந்து தன்னை வெறுக்கத் தொடங்கினான். தன் தந்தையின் அன்பு அவனை உந்தித் தள்ளியது; அறிவு தெளிந்தான்; எழுந்தான்; தந்தையின் இல்லத்தை நோக்கித் திரும்பி நடந்தான். தன் பாவத்தை அறிக்கையிட்டான், தந்தையின் அரவணைப்பில் மூழ்கி அகமகிழ்ந்தான். தன் சுயவினையால் தனக்குத் தானே அவன் தேடிக்கொண்ட திண்டாட்டம், தந்தையின் அன்பு வரவேற்பால் மாபெரும் கொண்டாட்டமாக மாறியது. அவன் புதிய படைப்பாக மாறிவிட்டான். 'ஒருவர் கிறிஸ்துவோடு இணைந்திருந்தால் அவர் புதிதாகப் படைக்கப்பட்டவராய் இருக்கிறார். பழையன கழிந்து புதியன புகுந்தன அன்றோ ! இவையாவும் கடவுளின் செயலே" (2 கொரி 5:17-18).

மனமாற்றம் அடைய நமது அறிவு தெளிந்து, நாம் பாவி என்று எற்றுக் கொள்ள வேண்டும். மன்னன் தாவீது, கொலை, விபசாரம் ஆகிய இருபெரும் பாதகச் செயல்களைச் செய்தார். அவரது கொடிய பாவச் செயல்களை உணர்த்த வந்த இறைவாக்கினர் நாத்தான் கூறிய கதையைக் கேட்டுச் சமூக நீதியை நிலைநாட்டக் கொதித்தெழுந்தார், தன் சுய அநீதியைப் பற்றி அணுவளவும் அலட்டிக் கொள்ளவில்லை , இறைவாக்கினர், "நீயே அம்மனிதன்" (2 சாமு 12:7) என்று அவரது பாவநிலையைச் சுட்டிக்காட்டிய போது, "நான் ஆண்டவருக்கு எதிராகப் பாவம் செய்துவிட்டேன்" (2 சாமு 12:13) என்றார். "கடவுளே! தூயதோர் உள்ளத்தை என்னுள்ளே படைத்தருளும். உறுதி தரும் ஆவியை, புதுப்பிக்கும் ஆவியை, என்னுள்ளே உருவாக்கியருளும்" (திபா 51:10) என்று கண்ணீர் சிந்தி மன்றாடினார்.

சமூகப் பாவங்களையும் நிறுவனங்களின் ஊழல்களையும் மட்டுமே சுட்டிக்காட்டி, நமது சொந்தப் பாவநிலையை உணராது மறந்துப்போகும் ஓர் ஆபத்தான நிலையிலிருந்து நம்மை விடுவித்துக் கொள்ள இத்தவக்காலத்தில் முயலுவோம்.

மனமாற்றமடைய நாம் கடவுளின் மாபெரும் இரக்கத்தை எண்ணிப் பார்க்க வேண்டும், "ஆண்டவர் இரக்கமும் அருளும் கொண்டவர். அவர் நம் பாவங்களுக்கு ஏற்ப நம்மை நடத்துவதில்லை. நம் குற்றங்களுக்கு ஏற்ப நம்மைத் தண்டிப்பதில்லை " (திபா 103:8-10). " உலகினரின் குற்றங்களைப் பொருட்படுத்தாமல் கடவுள்
கிறிஸ்துவின் வாயிலாக அவர்களைத் தம்மோடு ஒப்புரவாக்கினார்" (2ஆம் வாசகம், 2 கொரி 5:13).

இளைய மகன் எதிர் பார்த்தது வேலைக்காரனுக்குரிய இடம், அடிமையின் உணவு. ஆனால், அவன் தந்தை அவனுக்களித்ததோ மகனுக்குரிய நிலை (கைக்கு மோதிரம், காலுக்கு மிதியடி, முதல் தரமான ஆடை, அன்பின் முத்தம், மாபெரும் விருந்து). கடவுள் பாவியை மன்னித்து ஏற்று. அவரது இல்லமாகிய திருச்சபையில் இடமளித்து, சமாதான முத்தம் அளித்து, நற்கருணைத் திருவிருந்தில் பங்களிக்கிறார். "இனி நீங்கள் அடிமைகள் அல்ல; பிள்ளைகள் தாம்" (கலா 4:7).

ஒப்புரவு அருளடையாளம் நாம் எவ்வளவு பெரிய பாவிகள் என்பதை உணர்த்துவதில்லை. மாறாகக் கடவுள் எவ்வளவு இரக்கம் உள்ளவர் என்பதை உணர்த்துகிறது. "ஆழ்கடல் ஆழ்கடலை அழைக்கிறது" (திபா 42:7), ஆம், நமது பாவம் என்னும் ஆழ்கடல், கடவுளின் இரக்கம் என்னும் ஆழ்கடலை அழைக்கிறது.

| இறுதியாக, தந்தை மகனை ஏற்றுக்கொள்ளும்போது, அண்ணன் தம்பியை ஏற்க மறுக்கின்றார், பாவியாகிய தம்பி வீட்டுக்குள்ளே இருக்க, நீதிமானாகிய அண்ணன் வீட்டுக்கு வெளியே நிற்கிறார். பிறரின் மனம் மாற்றத்தைக் கண்டு நாம் மகிழவேண்டும்; பழிவாங்கும் எண்ணம் கூடாது. ஏனெனில், "மனமாறத் தேவையில்லாத் தொண்ணூற்றொன்பது நேர்மையாளர்களைக் குறித்து உண்டாகும் மகிழ்ச்சியைவிட, மனம் மாறிய ஒரு பாவியைக் குறித்து விண்ணுலகில் மிகுதியான மகிழ்ச்சி உண்டாகும்" (லூக் 15:7).



அளவற்ற அன்புகொண்ட ஆண்டவரோடு ஒப்புரவாகுவோம்.

  ஒரு கோடீஸ்வரத் தந்தை இருந்தார். அவருக்கு ஒரே ஒரு மகன். தன்னுடைய மகன் எது கேட்டாலும் அதை உடனுக்குடன் வாங்கித் தருவார், ஒருபோதும் எதையும் அவர் இல்லை என்று சொல்லியதில்லை. அந்தளவுக்கு தந்தை அவனுக்கு செல்லம் கொடுத்து வளர்த்தார்.

  ஒருநாள் அவர் தன்னுடைய மகனுக்குப் பாடம் சொல்லிக்கொடுக்கும் ஆசிரியரிடம் சென்று, “என்னுடைய மகன் எப்படிப் படிக்கிறான்?” என்று கேட்ட, ஆசிரியரோ, “உங்கள் மகன் குறைந்த மதிப்பெண்களே எடுக்கிறான்; பணம் இருக்கிற திமிரில் யாரையும் மதிப்பதில்லை. ஊதாரித்தனமாக இருக்கிறான்” என்று சொல்லி மிகவும் வருத்தப்பட்டார். இதைக்கேட்ட தந்தை மனம் ஒடிந்துபோனார். தன்னுடைய மகனை எப்படியாவது நல்வழிப்படுத்தவேண்டும் என்று நினைத்தார்.

  மகனுக்குப் பிறந்தநாள் வந்தது. அன்று அவன் தந்தையிடம் வந்து, விலை உயர்ந்த பைக் ஒன்றை பரிசாக தரவேண்டும் என்று கேட்டுவிட்டு தன் நண்பர்களோடு ஊர் சுற்றப் போய்விட்டான். இரவு நீண்டநேரம் கழித்துத்தான் அவன் வீட்டுக்கு வந்தான். அந்நேரம் வரைக்கும் தந்தை அவனுக்காகக் காத்திருந்தார். அவர் அவனிடம் பரிசுப் பொருளைக் கொடுத்துவிட்டு, “அன்பு மகனே! இதில் நீ கேட்ட பரிசுப் பொருளும், கூடவே ஒரு புத்தகமும் இருக்கிறது. இந்தப்  புத்தகம்தான் என் வாழ்வில் மிகப்பெரிய உந்து சந்தியாக இருந்தது. நீயும் ஊதாரித்தனமாக இல்லாமல் கடமை உணர்வோடு வேலை பார்க்க இது உனக்கு உதவியாக இருக்கும்” என்றார். இதைக்கேட்ட மகனால் தந்தையின் பேச்சை பொறுக்க முடியவில்லை. தந்தை தன்னைக் குத்திக்காட்டி பேசுகிறார் என்று நினைத்துக்கொண்டு, அவர் கொடுத்த பரிசுப்பொருளை தூர வீசி எறிந்துவிட்டு, வீட்டைவிட்டு வெளியேறினான்.

  வருடங்கள் பல உருண்டோடின. ஆனால் தந்தையோடு மட்டும் அவன் ஒரு வார்த்தைகூட பேசவில்லை. தன்னுடைய வைராக்கியத்தோடு கூடிய கடின உழைப்பால் அவன் மிகப்பெரிய தொழிலதிபராக மாறி, தன்னுடைய நிறுவனத்தில் பொறுப்புடன் வேலை பார்த்துக்கொண்டிருந்தான்.
 
ஒருநாள் அவனுக்கு தந்தை இறந்த செய்தி வந்தது. அவனும் இறுதியாக தன்னுடைய தந்தையைப் பார்க்கச் சென்றான். அங்கே தந்தையின் உடல் இருந்த இடத்திற்குப் பக்கத்தில் ஒரு பொட்டலம் இருந்தது. அது முன்பொருநாள் அவனுடைய தந்தை அவனுக்குப் பிறந்தநாள் பரிசாகக் கொடுத்தது. அந்தப் பொட்டலத்தை அவன் பிரித்துப் பார்த்தான். அதில் அவன் கேட்ட விலை உயர்ந்த பைக்கின் சாவி இருந்தது. அப்போதுதான் அவன் உணர்ந்தான். தந்தை தன்னை எந்தளவுக்கு அன்பு செய்திருக்கிறார் என்று. காலம் முழுவதும் இப்படித் தந்தையின் உண்மையான அன்பை உணராமல் இருந்துவிட்டோமே என்று மனம் வருந்தி அழுதான்.
 
தவக்காலத்தின் நான்காம் ஞாயிற்றுக்கிழமையில் இருக்கும் நமக்கு இன்றைய நாள்  வாசகங்கள் “அளவுகடந்த அன்புகொண்டிருக்கும் கடவுளோடு ஒப்புரவாகுங்கள்” என்ற சிந்தனையை வழங்குகிறது. இரக்கமும், அன்பும் கொண்ட ஆண்டவரோடு ஒப்புரவாகவேண்டும் என்பதுதான் இன்றைய நாள் வாசகங்களின் சாராம்சமாக இருக்கிறது.
 
நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசுவின் புகழ்பெற்ற உவமைகளில் ஒன்றான ஊதாரி மைந்தன் உவமையை வாசிக்கின்றோம். இவ்வுவமையை ‘ஊதாரிமைந்தன் உவமை’ என்று சொல்வதைவிடவும், ‘ஊதாரித்தந்தை உவமை’ என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும் என்று தோன்றுகிறது. ஏனென்றால் இவ்வுவமை தந்தையின் – தந்தை கடவுளின் – அளவு கடந்த இரக்கத்தையும், அன்பையும் சுட்டிக்காட்டுவதாக இருக்கிறது. இப்போது தந்தை தன் இளைய மகன் மீது அதாவது ஊதாரி மகன்மீது எந்தளவுக்கு இரக்கம் கொண்டிருந்தார் என்பதை சித்தித்துப் பார்ப்போம்.
 
முதலாவதாக இளையமகன் தந்தையிடம் வந்து, சொத்தில் தனக்குள்ள பங்கை பிரித்துத்தருமாறு கேட்கும்போது அவர் அவனுக்கு (அவர்களுக்கு) சொத்தை பகிந்தளிக்கிறார் என்று வாசிக்கின்றோம். பொதுவாக ஒரு யூதத் தந்தையானார் சொத்தை அப்படி பகிர்ந்தளிக்க முடியாது. ஏனென்றால் இணைச்சட்ட நூல் 21:17 ல் சொல்லப்படுகிறது ‘தலைச்சன் பிள்ளைக்கு சொத்தில் இரண்டு பங்குதரவேண்டும்’ என்று. அப்படியானால் உவமையில் வரும் தந்தையானார் சொத்தில் மூத்தவனுக்கு இரண்டு பங்கும், இளையமகனுக்கு ஒருபங்கும் தந்திருக்கவேண்டும். ஆனால் அவர் அப்படிச் செய்யாமல் சொத்தை அவர்களுக்குப் சமமாகப் பகிர்ந்தளித்தார் என்றால் இது தன்னைவிட்டுப் பிரிந்துபோகும் இளையமகன் நன்றாக இருக்கவேண்டும் என்ற எண்ணத்தில் அவர் இப்படிச் செய்கிறார். இது ஒருவிதத்தில் தந்தையின் இரக்கத்தையே காட்டுகிறது.
 
இரண்டாவதாக ஊதாரித்தனமாக வாழ்ந்த இளையமகன் தன்னுடைய தவறை உணர்ந்து தந்தையிடம் திரும்பிவரும்போது, அவன் தொலையில் வரும்போதே தந்தை பார்த்துவிட்டு ஓடோடிச்சென்று அவனைக் கட்டித்தழுவி முத்தமிடுகிறார். அப்படியானால் தந்தை தன்னுடைய மகன் எப்போது தன்னிடம் திரும்பி வருவான் என்று ஆவலோடு காத்துக்கொண்டிருந்ததைக் காட்டுகிறது.
 
இந்த இடத்தில் நாம் 17 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புகழ்பெற்ற ஓவியரான ரேம்பரன்ட் (Rembrandt) என்பவர் வரைந்த ‘ஊதாரி மைந்தன் ஓவியத்தை’ இணைத்துப் பார்த்து சிந்திப்பது இன்னும் பொருத்தமாக இருக்கும் என்று தோன்றுகிறது. ஏனென்றால் Oil Painting என்ற வகையில் உருவாகி இருக்கும் அந்த ஓவியத்தில் தவறான வாழ்வு வாழ்ந்து, மனந்திரும்பி வரும் இளைய மகன் தன்னுடைய தந்தையின் பாதத்தில் விழுந்து மன்னிப்புக் கேட்கின்றான். அப்போது தந்தையானார் அவனை இருகரத்தால் மார்ப்போடு அணைத்துகொள்கிறார். அந்த இருகைகளில் வலக்கையானது  தாயின் கைபோன்று இருக்கிறது. அதாவது மனம்மாறி வரும் பிள்ளையை கடவுள் ஒருதாயைப் போன்று தேற்றி அரவணைக்கிறார் என்பதைச் சுட்டிக்காட்டுவதாக இருக்கிறது.

 மூன்றாவதாக உவமையில் இளையமகன் தந்தையிடம் வந்து, தன்னுடைய தவறை அறிக்கையிட்ட உடன், தந்தையானவர் தன்னுடைய பணியாளர்களிடம், “முதல்தரமான ஆடையைக் கொண்டுவந்து இவனை உடுத்துங்கள்; இவனுடைய கைக்கு மோதிரமும், காலுக்கு மிதியடியும் அணிவியுங்கள்; கொழுத்த கன்றை அடியுங்கள். நாம் விருந்துண்டு மகிழ்வோம்” என்கிறார். இங்கே கையில் மோதிரம் அணிவது என்பது இளையமகனை தந்தையானவர் தன்னுடைய மகனாக ஏற்றுக்கொள்வதற்குச் சமமாக இருக்கிறது.
 
ஆக ஊதாரித்தனமாக வாழ்க்கை வாழ்ந்த இளையமகன் தன்னுடைய தவறை உணர்ந்து மன்னிப்புக் கேட்கும்போது, அவனை அவனுடைய தந்தை மனதார மன்னித்து ஏற்றுக்கொண்டதுபோல, தந்தைக் கடவுளும் நாம் செய்யும் தவறுகளை மனதார மன்னித்து ஏற்றுக்கொள்வார் என்பதை இது நமக்கு உணர்த்துகிறது.

 விவிலியம் முழுமைக்கும் இந்த உண்மையைத்தான் நாம் தொடர்ந்து வாசிக்கின்றோம், திருப்பாடல் 103: 8 ஆம் வசனம் சொல்கிறது, “ஆண்டவர் இரக்கமும், அருளும் கொண்டவர்; நீடிய பொறுமையும், பேரன்பும் உள்ளவர்” என்று. எனவே அத்தகைய இரக்கமுள்ள கடவுளிடம் நாம் நமது பாவ வாழ்விலிருந்து மனமாறி, அவரோடு ஒப்புரவாகுவோம்.
 
தூய பவுல் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய இரண்டாம் வாசகத்தில் கூறுவார், “கடவுளோடு ஒப்புரவாகுங்கள்” என்று. ஆம், இந்த தவக்காலத்தில் நாம் அனைவருமே கடவுளோடு ஒப்புரவாக வேண்டும் என்றும்தான் இறைவார்த்தையானது நமக்கு அழைப்புத் தருகிறது. ஏனென்றால் இன்றைக்கு மனிதர்கள் உலக செல்வத்திற்குப் பின்னால், உலக காரியத்திற்குப் பின்னால் அலைவதைப் பார்க்கமுடிகிறது. கடவுளை மறந்து, மனம்போன போக்கில் வாழும் மக்கள்தான் அதிகமாக இருக்கிறார்கள். இத்தகைய சூழலில் நாம் கடவுளோடு ஒப்புரவாகுவது சாலச்சிறந்த ஒன்றாகும்.
 
மக்கள்மீது உண்மையான அன்பும், பாசமும், ஈகைக்குணம் கொண்ட அரசன் ஒருவன் இருந்தான். அவன் தன்னுடைய நாட்டில் ஓர் அருங்காட்சியம் வைத்திருந்தான். அதில் ஏராளமான அரியவகைப் பொருட்கள் இருந்தன. அந்த அருங்காட்சியத்திலிருந்து மக்களுக்குத் தேவையான எந்தப் பொருளையும் எடுத்துக்கொள்ளலாம் என்று அறிவிப்பு வேறு செய்திருந்தான். இதனால் மக்கள்கூட்டம் அங்கே அலைமோதியது. எல்லாரும் அருங்காட்சியத்திலிருந்த அரியவகைப் பொருட்களை எடுப்பதிலே தீவிரம் கட்டினார்கள்.
 
அந்நேரத்தில் சிறுவன் ஒருவன் அங்கே வந்தான். வந்தவன் அங்கே இருந்த படைவீரர்களிடம் சென்று, “இவ்வளவு பொருட்களையும் மக்களுக்கு தாராளமாகத் தரும் நல்ல உள்ளம் படைத்த அரசரைப் பார்க்கவேண்டும்” என்றான். உடனே அந்த சிறுவன் அரண்மனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அரசர் முன்பாக நிறுத்தப்பட்டான்.
 
சிறுவனைப் பார்த்த அரசர், “தம்பி உனக்கு என்னவேண்டும்?” என்று கேட்டார். அதற்கு அந்தச் சிறுவன், “எனக்கு ஒன்றும் வேண்டாம், எல்லாப் பொருட்களையும் மக்களுக்குத் தாராளமாகத் தரும் நல்ல உள்ளம்கொண்ட உங்களைப் பார்த்ததே போதும்” என்றான். இதைக் கேட்ட அரசர் உள்ளம் மகிழ்ந்து அவனிடம், “பொருள் வேண்டும் என்று அலையும் மக்களுக்கு மத்தியில் அரசரைப் பார்த்தாலே போதும் என்று நினைத்த உன்னை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது” என்று சொல்லி அவனுக்கு அதிகமாக பொன்னும், பொருளும் கொடுத்து வழியனுப்பினார்.
 
பணம், பணம் என்று அலையும் மக்கள், அத்தகைய வாழ்க்கையை விடுத்து இறைவன் மட்டும்போதும் என்று அவரோடு நல்லுறவு கொண்டு, ஒப்புரவாக வாழ்ந்தார்கள் என்றால் கடவுள் எல்லா ஆசிரையும், அருளையும் தருவார் என்பதை இந்த கதையானது நமக்கு எடுத்துரைக்கிறது.
 
ஆகவே தவக்காலத்தில் இருக்கும் நாம் ஒவ்வொருவரும் கடவுளின் அளவுகடந்த அன்பை உணர்ந்து வாழ்வோம். அவர் நம்மீது இரக்கமும், அருளும் கொண்டவர் என்பதை நமது வாழ்வில் அனுபவித்து, அதனை பிற மக்களுக்கும் எடுத்துப்போம். அதோடு மட்டுமல்லாமல் இறைவனோடு நல்லுறவு கொள்வோம். அப்போது இன்றைய முதல் வாசகத்தில் கேட்பதுபோல இறைவன் நம்மீது இருக்கும் பழிச்சொல்லை நீக்கி, நமக்கு அமைதியையும், இறையருளையும் தருவார்.





அவர் இனியவர்

திருவருகைக்காலத்தின் மூன்றாம் ஞாயிற்றை நாம் 'கௌதேத்தே தொமெனிக்கே' ('மகிழ்ச்சி ஞாயிறு') என்றழைப்பது போல, தவக்காலத்தின் நான்காம் ஞாயிற்றையும் 'தொமேனிக்கா லெயத்தாரே' ('மகிழ்ச்சி அல்லது அக்களிப்பு ஞாயிறு') என்று அழைக்கின்றோம். இன்றைய நாள் திருப்பலியின் வருகைப் பல்லவி மிக அழகாக இதை முன்வைக்கிறது: 'எருசலேமின்மேல் அன்பு கொண்ட அனைவரும் அவளுடன் அகமகிழ்ந்து அவள் பொருட்டு அக்களியுங்கள். அவளுக்காக புலம்பி அழும் எல்லாரும் அவளுடன் சேர்ந்து மகிழ்ந்து கொண்டாடி ஆர்ப்பரியுங்கள் ... நீங்கள் நிறைவடைவீர்கள் ... நிறைவாக அருந்தி இன்பம் காண்பீர்கள்' (காண். எசா 66:10-11). எருசலேமை இயேசுவின் பாடுகள், இறப்பு, உயிர்ப்போடு நாம் உருவகப்படுத்தினோம் என்றால், அவரோடு அவருடைய பாடுகளுக்காக அழும் நாம், அவருடைய உயிர்ப்பில் அக்களிப்போம் என்பதே நிதர்சனமான உண்மை. ஆக, தவக்காலத்தின் இலக்கு துன்பம் அல்லது பாவம் அல்ல. மாறாக, மகிழ்ச்சி அல்லது வெற்றியே. ஆக, இந்த ஞாயிறு அந்த மகிழ்ச்சியின், வெற்றியின் முன்சுவையாக நமக்குத் தரப்படுகிறது.

ஆஸ்கர் ஒயில்ட் மிக அழகான ஒரு வரிக்குச் சொந்தக்காரர்: 'இறுதியில் இல்லாமே இனிமையாக இருக்கும். அது இனிமையாக இல்லை என்றால் அது இறுதி அல்ல.' ஆக, இயேசுவின் பாடுகளும், இறப்பும் இறுதி அல்ல. ஏனெனில், அவை இனிமை அல்ல. உயிர்ப்பே இறுதி. ஏனெனில், உயிர்ப்பே இனிமை. இன்றைய இறைவாக்கு வழிபாடு நமக்கு, 'அவர் (ஆண்டவர்) இனியவர்' என்பதைச் சுட்டிக்காட்டி, அவரின் இனிமையை நாமும் சுவைக்கவும், அதே இனிமையை நாமும் வாழவும் நமக்கு அழைப்புவிடுக்கிறது.

இன்றைய இறைவாக்கு வழிபாட்டின் மையம் இன்றைய பதிலுரைப்பாடலில் இருக்கின்றது: 'ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள்' (திபா 34:8). தாவீது அபிமெலக்கின்முன் பித்துப்பிடித்தவர் போலத் தம்மைக் காட்டியபோது அவன் அவரைத் துரத்திவிட, அவனிடமிருந்து தப்பி வெளியேறுகின்றார். இந்த நேரத்தில், தன் உயிர் காக்கப்பட்ட இந்த நேரத்தில், கடவுளின் கருணையைப் புகழந்து பாடுகின்றார் தாவீது (காண். 1 சாமு 21:13-15). நம் மனங்கள் சோர்வுறும் நேரத்தில் எல்லாம் இப்பாடலைப் படித்தால் மனம் புத்துயிர்பெறும் என்பது என் தனிப்பட்ட அனுபவம்.

'இனிமை' - இது ஒரு வித்தியாசமான சுவை. சுவை என்பது ஒருவகை நேரடி வேதியல் உணர்வு என வரையறுக்கிறது விக்கிபீடியா. மேற்கத்தியர் சுவை நான்கு என்பர்: இனிப்பு, கார்ப்பு, கசப்பு, புளிப்பு. தமிழர் முறைப்படி சுவை ஆறு: இனிப்பு ('கனி'), கார்ப்பு ('மிளகாய்'), கசப்பு ('பாகற்காய்'), புளிப்பு ('புளியங்காய்'), உவர்ப்பு ('உப்பு'), துவர்ப்பு ('பாக்கு'). இந்த அறுசுவைகளும் மனித உடலுக்குத் தேவை என்கிறது சித்த மருத்துவம். இந்த அறுசுவைகளில் இனிப்புக்கு மட்டும் ஒரு தனித்தன்மை உண்டு. அது என்னவென்றால், 'இனிப்பு' மட்டும்தான் நாம் ஒருமுறை சுவைத்தாலும், மீண்டும் சுவைக்கத் தூண்டும் சுவை. மற்ற ஐந்து சுவைகளும் பொதுவாக ஒருமுறை மட்டுமே சுவைக்கக்கூடியவை. மேலும், 'இனிப்பு' சுவைதான் நம் உள்ளத்திற்கு நேர்முகமான உணர்வுகளையும், நம் உடலின் புன்னகைத் தசைநார்களையும் உயிர்க்கவல்லது. ஆகையால்தான், வெற்றி, மகிழ்ச்சி, உடற்பயிற்சி சோர்வு போன்ற நேரங்களில் இனிப்பு சுவை தரப்படுகிறது. இந்தப் பின்புலத்தில்தான் - அதாவது, அடிக்கடி நாம் தேடுவதாலும், அது நமக்குப் புத்துயிர் அளிப்பதாலும் - தாவீது ஆண்டவரை, 'இனியவர்' ('இனிப்பானவர்') என்று அழைக்கின்றார். ஆக, ஆண்டவரின் இனிமையை ஒருமுறை சுவைத்தால் போதும். அவரிடமே நாம் திரும்பத் திரும்பச் செல்வோம். ஆண்டவர் தாவீதை அச்சத்தினின்று விடுவிக்கிறார், அவமானத்திலிருந்து விடுவிக்கிறார், மற்றும் நெருக்கடியினின்று விடுவிக்கிறார்.

ஆண்டவரின் இனிமையை அல்லது ஆண்டவரை இனியவராக இன்றைய மற்ற வாசகங்களும் நமக்கு முன்வைக்கின்றன.

இன்றைய முதல் வாசகம் (காண். யோசு 5:9,10-12) இஸ்ரயேல் மக்கள் யோசுவாவின் தலைமையில் யோர்தான் ஆற்றைக் கடந்து பாலும் தேனும் பொழியும் கானான் நாட்டிற்குள் நுழைந்த பின் நடந்த முதல் நிகழ்வுகளைச் சொல்கிறது. இரண்டு நிகழ்வுகள் நடக்கின்றன: முதலில், பாலைநிலத்தில் பிறந்த ஆண்களுக்கு விருத்தசேதனம் செய்யப்படுகிறது. இவர்கள் இந்தச் சடங்கால் ஆண்டவருக்கு அர்ப்பணமானவர்கள் ஆகின்றார்கள். இவர்களின் பெற்றோர் பாலைநிலத்தில் மோசேக்கும் கடவுளுக்கும் எதிராக முணுமுணுத்ததால் கடவுளால் கொல்லப்படுகின்றனர். இந்தச் சடங்கு முடிந்ததுதும், ஆண்டவர் யோசுவாவிடம், 'இன்று எகிப்தியரின் பழிச்சொல்லை உங்களிடமிருந்து நீக்கிவிட்டேன்' என்கிறார். அது என்ன பழிச்சொல்? இஸ்ரயேல் மக்கள் எகிப்திலிருந்து புறப்பட்டவுடன் அவர்களைப் பின்தொடர்ந்து வருகின்ற எகிப்தியர், 'இஸ்ரயேல் மக்கள் மூடர்கள். ஏனெனில், தாங்கள் அறியாத ஒரு கடவுளைப் பின்பற்றிச் சென்று பாலைவனத்தில் நாடோடிகளாகத் திரிகிறார்கள். அவர்கள் கடவுளும் பொய். அவர்களுடைய கடவுளின் வாக்குறுதியும் பொய்' என பழித்துரைக்கின்றனர். ஆனால், இன்று, யோர்தானைக் கடந்து கானானில் மக்கள் குடியேறியவுடன் அவர்களின் பழிச்சொல் பொய்யாகிறது. கடவுள் தன் வாக்குறுதியை நிறைவேற்றி தன்னை உண்மையான கடவுள் என்று இஸ்ரயேல் மக்களுக்கும் எகிப்தியருக்கும் உணர்த்துகின்றார். இரண்டாவதாக, கில்காலில் இஸ்ரயேல் மக்கள் தங்கள் முதல் பாஸ்காவைக் கொண்டாடுகின்றனர். வாக்களிக்கப்பட்ட நாட்டில் கொண்டாடப்படும் முதல் பாஸ்காவும் இதுவே. இங்கே இவர்கள் நிலத்தின் விளைச்சலை உண்ண ஆரம்பிக்கின்றனர். உண்ட மறுநாளிலிருந்து மன்னா பொழிவது நின்றுவிடுகிறது. இது அவர்களுடைய வாழ்வில் ஒரு புதிய தொடக்கம். இதுவரை யாவே இறைவனோடு இருந்த தொப்புள் கொடி அறுந்து, இன்று இவர்கள் தாங்களாகவே தங்களின் சொந்தக் கால்களில் நிற்கத் தொடங்குகின்றனர். இவ்வாறாக, இறைவன் இவர்களைக் 'குழந்தைகள்' நிலையிலிருந்து 'பெரியவர்கள்' என்ற நிலைக்கு உயர்த்துகின்றார்.

ஆக, இறைவனின் இனிமை இங்கே இரண்டு நிலைகளில் வெளிப்படுகிறது: ஒன்று, அவர் பழிச்சொல் நீக்குகின்றார். இரண்டு, அவர்களுக்கு புதிய தொடக்கத்தைத் தருகின்றார்.

இன்றைய இரண்டாம் வாசகம் (காண். 2 கொரி 5:17-21) பவுலடியார் தான் பெற்றிருக்கின்ற ஒப்புரவுத் திருப்பணி பற்றி கொரிந்து நகர மக்களுக்கு எடுத்தியம்புவதாக அமைந்துள்ளது. இவ்வாறாக, தன் திருத்தூதுப்பணியின் ஒரு முக்கிய அங்கமாக ஒப்புரவுப் பணியை முன்வைக்கின்றார். பாவம் இயல்பாகவே என்னைக் கடவுளிடமிருந்தும் ஒருவர் மற்றவரிடமிருந்தும் பிரித்துவிடுகிறது. கடவுளுக்கும் நமக்கும் பாவத்தால் எழுப்பப்பட்ட சுவரை உடைத்து, இருவரையும் இணைக்கும் பாலமாக கிறிஸ்து விளங்குகின்றார். ஆக, 'கிறிஸ்துவோடு ஒருவர் இணைந்திருக்கும்போது அவர் புதிதாகப் படைக்கப்பட்டவராய் இருக்கிறார். பழையன கழிந்து புதியன புகுந்தது அன்றோ! இவை யாவும் கடவுளின் செயலே' என்று சொல்லும் பவுலடியார், இந்த ஒப்புரவு முழுக்க முழுக்க கடவுளின் முன்னெடுப்பாக இருக்கிறது என்பதையும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறார். ஏனெனில், 'நாம் கிறிஸ்து வழியாகத் தமக்கு ஏற்புடையவராகுமாறு கடவுள் பாவம் அறியாத அவரைப் பாவநிலை ஏற்கச் செய்கிறார்.' அதாவது, கிறிஸ்து பாவநிலையை ஏற்றாரெனில், பாவத்தின் விளைவான இறப்பை ஏற்றார். ஆனால், அந்த இறப்பிலிருந்து அவர் உயிர்த்ததால் நம்மையும் அவரோடு இணைந்து புதுப்படைப்பாக்குகிறார்.

ஆக, இறைவனின் இனிமை இங்கேயும் இரண்டு நிலைகளில் வெளிப்படுகிறது: ஒன்று, கிறிஸ்து வழியாக இவ்வுலகைத் தம்மோடு ஒப்புரவாக்கி அதற்கு புத்துயிர் தருகின்றார். இரண்டு, இந்தப் பணி மற்றவர்களுக்கு அறிவிக்கப்படுமாறு திருத்தூதர்களிடம் இந்த ஒப்புரவுச் செய்தியை ஒப்படைக்கின்றார்.

இன்றைய நற்செய்தி வாசகம் (காண். லூக் 15:1-3,11-32) நமக்கு மிகவும் அறிமுகமான ஓர் உவமை. 'ஒரு தந்தையும் இரண்டு மகன்களும்' எனப்படும் இந்த எடுத்துக்காட்டை இயேசு, பரிசேயர் மற்றும் மறைநூல் அறிஞரின் முணுமுணுப்பிற்கு எதிர்சான்றாக வைக்கின்றார். ஆனால், பல நேரங்களில் இந்த எடுத்துக்காட்டை நாம் ஒப்புரவு வழிபாட்டிற்கு எடுத்து, இளைய மகனைப் போல மனம் திரும்ப வேண்டும் என்று சொல்லி இதன் பொருளை நீர்த்துப்போகச் செய்துவிடுகிறோம். இங்கே, கவனமையம் அல்லது கவனக்குவிப்பு இளைய மகனோ அல்லது மூத்த மகனோ அல்ல. மாறாக, தந்தையே. இக்கதையில் வரும் தந்தை தொடக்கமுதல் இறுதிவரை இனியவராக, கனிவுடையவராக, இரக்கம் உடையவராக இருக்கிறார். இயேசு தன் சமகாலத்தில் இரண்டு வகை மக்களோடு உறவாடுகிறார்: ஒன்று, வரிதண்டுபவர்கள், பாவிகள். இவர்கள் யூத சமூகத்தில் ஒதுக்கப்பட்டவர்களாகக் கருதப்பட்டனர். இரண்டு, யூதச் சட்டம் மற்றும் முறைமைகளுக்கு பிரமாணிக்கமாய் நடந்த பரிசேயர்களும் மறைநூல் அறிஞர்களும். இந்த இரண்டாம் குழுவினர், இயேசு முதல் குழுவினரோடு உறவாடுவதைக் கண்டு இடறல்பட்டனர். இந்த இரண்டு குழுக்களும் இரண்டு மகன்களையும் குறிக்க, உவமையில் வரும் தந்தை இயேசுவின் அல்லது கடவுளின் உருவகமாகிறார்.

இக்கதை நமக்குத் தெரியும். சுருக்கமாகச் சொன்னால், தூரத்திற்குச் செல்கின்ற இளைய மகன் இல்லம் திரும்புகிறான். வீட்டிற்குள்ளேயே இருக்கின்ற மூத்த மகன் இல்லம் திரும்ப மறுக்கிறான். இவ்விரண்டு கதைமாந்தர்களுக்காகவும் வீதிக்கு வருகின்றார் தந்தை: முதல் மகனை அரவணைத்துக் கொள்ளவும், இரண்டாம் மகனை அழைத்துச் செல்லவும். இக்கதையில் அப்பாதான் கதாநாயகன். ஏனெனில், இரண்டு மகன்கள் வீட்டிற்கு வரும் நேரத்தில் தந்தை அங்கு இருந்தார். இளையமகன் வீட்டைவிட்டுப் புறப்பட்ட நாளிலிருந்து தந்தை இவனுக்காக ஊருக்கு வெளியில் நிற்கின்றார். எல்லாவற்றையும் இழந்து அவன் வரும்போது ஊரார் கேலிபேசிவிடக்கூடாது என்ற அக்கறையில் அங்கேயே நிற்கிறார் தந்தை. இளையமகனைத் தந்தை எதிர்கொண்டது ஏதோ ஒரு விபத்தால் - சான்ஸ் - அல்ல. மாறாக, விருப்பத்தால் - சாய்ஸ். தானே, தெரிந்து, நின்று, தழுவி, அரவணைத்து, அள்ளிக்கொள்கின்றார் தந்தை. இதுதான் இந்தப் பெயரில்லாத் தந்தையின் இனிமை. இந்த இனிமை இரக்கத்தோடு காத்திருக்கிறது. தன் மகன் ஏற்படுத்தி பொருள்செலவைப் பெரிதாகப் பார்க்கவில்லை. தன் மகனைத் தீர்ப்பிடவில்லை. தன் பெயரைக் கெடுத்தாலும் அதை பொருட்படுத்தவில்லை. சேறு, சகதி, அழுக்கு என வந்த மகனிடம், 'நீ போய் முதலில் குளித்து வா!' என்று சொல்லவில்லை. அவன் தனக்குரியது என எல்லாவற்றையும் அள்ளிக்கொண்டு போனாலும், அவனுக்குரிய முதல்தர ஆடை, கைக்கு மோதிரம், காலுக்கு மிதியடியைத் தயாராக வைத்திருக்கிறது இந்த இனிமை. தன் மூத்த மகன் இல்லம் நுழைய மறுத்தாலும் அவனைக் கடிந்துகொள்ளாமல் அவனுக்கு விளக்கம் தருகிறது அவனுடைய பார்வையை அகலப்படுத்துகிறது இந்த இனிமை.

ஆக, இறைவனின் இனிமை இங்கேயும் இரண்டு நிலைகளில் வெளிப்படுகிறது: இளைய மகனுக்கு இரக்கமாக, கனிவாக, தழுவலாக, கரிசனையாக வெளிப்படுகிறது. மூத்த மகனுக்கு, விளக்கம் சொல்லிப் புரிய வைத்து, அவனுடைய கண்ணோட்டத்தை மாற்றுகிறது.

இவ்வாறாக, இன்றைய முதல், இரண்டு, மற்றும் மூன்றாம் வாசகங்கள், திருப்பாடலோடு இணைந்து 'இறைவனின் இனிமையை' அல்லது 'அவர் இனியவர்' என்பதை நமக்குக் காட்டுகின்றன. 'அவர் இனியவர்' என்றால் 'அந்த இனிமையை' நாம் அனுபவிக்கிறோம் என்றால், அவரைப் போல, 'நாம் இனியவர்' ஆவது எப்படி?

1. பழிச்சொல் நீக்கும் இனிமை

இஸ்ரயேல் மக்கள் வாக்களிக்கப்பட்ட நாட்டிற்குள் நுழையும்போது அவர்கள் வெளிப்புறத்தில் அவர்களுக்கு உணவு, பாதுகாப்பு, உடைகள், வீடு  என எல்லாம் இருந்தாலும் அவர்களின் உள்ளத்தில் ஒரு நெருடல் இருக்கிறது. அதுதான் எகிப்தியரின் பழிச்சொல். அந்தப் பழிச்சொல் அவர்கள் எந்த நன்மையையும் சுவைத்து அனுபவிக்க, அவர்களின் மகிழ்ச்சியை எதிர்கொள்ள அவர்களுக்குத் தடையாக இருக்கின்றது. இறைவன் இந்தப் பழிச்சொல்லைத் துடைக்கின்றார். 'நீங்கள் முட்டாள்கள், ஏமாளிகள், உங்கள் கடவுள் பொய்யர், நீங்கள் அழிந்துபோவீர்கள்!' என்ற பழிச்சொல்லைத் துடைக்கின்றார். இன்று நாம் அறிந்துகொள்ள வேண்டியதும் இதுதான். இறைவன் நம்மேல் உள்ள பழிச்சொல் அனைத்தையம் துடைக்க வல்லவர். 'இதோ என் அன்பார்ந்த மகன்-மகள்' என்று அவர் உங்களையும் என்னையும் அழைக்கும் அந்த நொடியே அனைத்துப் பழிச்சொல்லையும் துடைத்துவிடுகிறார். ஊரார் நம்மை 'விலைமாதுகளுடன் உறவு கொண்டவன்,' 'பன்றி மேய்த்தவன்,' 'பன்றியின் உணவை உண்டவன்,' 'தந்தை சொல் கேளாதவன்' என்று சொன்னாலும், சொந்த அண்ணனே, 'உம் மகன்' என்று மூன்றாம் நபராகப் பார்த்தாலும் இறைவன் பழிச்சொல்லை நீக்குகிறார். 'நான் உன் வீட்டு வேலைக்காரன்' என்று சொன்ன வாயெடுத்தவனை அதற்கு மேல் பேசவிடாமல் மகனுக்குரிய நிலையில் வைத்துக்கொள்கிறார். ஆக, இறைவன் என் பழிச்சொல்லை நீக்குகிறார் என்றால், நான் அவருடைய இனிமையை உணர்கிறேன் என்றால் என் நாவில் இத்தகைய சொற்கள் ஒருபோதும் வரக்கூடாது. இன்னா சொற்கள் விடுத்து இனிய சொற்கள் பேசும்போது நாமும் இனியவரே.

2. பழையன கழிக்கும் இனிமை

கிறிஸ்துவோடு உலகை ஒப்புரவாக்கும் இறைவன் பழையன அழித்தையும் அழிக்கின்றார். முதல் வாசகத்தில், இஸ்ரயேல் மக்களின் மன்னாவை நிறுத்துவதன் வழியாக மக்களின் பழைய சார்புநிலையை அழிக்கின்றார். நற்செய்தி வாசகத்தில், தந்தை இரண்டு மகன்களின் பழைய இயல்பையும் அழிக்கின்றார். இளைய மகன் கடந்த நாள்களில் என்ன செய்தான் என்றோ, எவ்வளவு கையிருப்பு கொண்டுவந்துள்ளான் என்றோ, அடுத்த என்ன ப்ளான் என்றோ கேட்கவில்லை. மூத்த மகன் வைத்திருந்த முற்சார்பு எண்ணத்தையும் அழிக்கிறார். ஆக, பழையது நமக்கு உற்சாகம் தந்தால் நலம். ஆனால், நம்மைக் கட்டிவைத்து நகர முடியாமல் செய்தால் அது கழிக்கப்பட வேண்டும். பழையதை மறந்து இன்றில் இப்பொழுதில் வாழும்போது இறைவனின் இனிமையை அனுபவிக்கவும் அதை மற்றவருக்கு வழங்கவும் முடியும். ஏனெனில், இறைவனுக்கு இன்று மட்டுமே உண்மை.

3. தழுவிக்கொள்ளும் இனிமை

இன்றைய நற்செய்தியில் வரும் தந்தையின் கணிதமும் லாஜிக்கும் வித்தியாசமாக இருக்கிறது. அவர் நிகழ்வுகள் ஒவ்வொன்றையும் பார்த்து வருத்தப்படாமல், நிகழ்வின் மொத்தத்தைப் பார்க்கிறார். 'நாம் மகிழ்ந்து கொண்டாடி இன்புற வேண்டும்' - இதுதான் இவருடைய மிஷன் ஸ்டேட்மண்டாக இருக்கிறது. அவன் போனான், அழித்தான், திரும்பினான். அதனால் என்ன? நடந்ததைப் பற்றி என்ன செய்ய முடியும்? அடுத்து என்ன செய்வது? 'மகிழ்நது கொண்டாடு' என்று இளைய மற்றும் மூத்த மகனை ஒருசேரத் தழுவிக்கொள்கிறார். இது யாரால் முடியும் என்றால், இறுதியை மனத்தில் வைத்துச் சிந்திப்பவரால் மட்டும்தான். 'ஒன்றின் தொடக்கமல்ல. அதன் முடிவே கவனிக்கத்தக்கது' என்கிறார் சபை உரையாளர். இறுதியில் எல்லாம் இனிமையாகும். ஆக, நிகழ்வுகளை இந்த இறுதியோடு இணைத்துப் பார்த்தால் இறைவனின் இனிமை நமக்குச் சொந்தமாகும்.

இறுதியாக, மகிழ்ச்சியின் ஞாயிற்றைக் கொண்டாடும் நாம், இறைவனின் இனிமையை அனுபவித்து மகிழ்வுறும் நாம், அதே இனிமையை மற்றவருக்கும் வழங்கும்போது மகிழ்ச்சி இரட்டிப்பாகும். காலையில் கூட்டைவிட்டுப் புறப்படும் பறவை மாலை கூட்டிற்குத் திரும்பலாம் என்ற நம்பிக்கையால்தான் சுற்றித் திரிகிறது. சுற்றித் திரிதல் தவறல்ல. கூடு திரும்பாமல் இருப்பதுதான் தவறு. இஸ்ரயேல் மக்கள் கானான் நாடு என்னும் கூடு திரும்பினர். கொரிந்து நகர மக்கள் ஒப்புரவு என்னும் கூடு திரும்பினர். இரு மகன்களும் தந்தையின் இல்லம் என்னும் கூடு திரும்பினர். இவர்கள் கூடு திரும்பக் காரணம் இவர்கள் அங்கே இனிமையைக் கண்டவர். இனிமையைக் காணும் இடம் நோக்கி நம் இதயம் சாயும் என்பது நம் மரபியல் ஊட்டம். அந்த இனிமை இறைவனிடம் என்றால் பயணம் இனிதாகும். ஏனெனில், அவர் இனியவர் - உங்களையும் என்னையும் போல!

Saturday 23 March 2019

தவக்காலத்தின் மூன்றாம் ஞாயிறு

தவக்காலத்தின் மூன்றாம் ஞாயிறு


இன்றைய நற்செய்தி வாசகங்கள்.


விடுதலைப் பயணம் 3:1-8, 13-15
1கொரிந்தியர். 10:1-6,10-12:17-4:1
லூக்கா 13:-1-9

பீட்டர் என்பவர் கடவுளைத் தேடும் மனிதர். ஒருவன் பீட்டரைப் பார்த்து நீ கடவுளைக் காண வேண்டும் என்றால் உயர்ந்த மலையின் உச்சிக்குச் செல்ல வேண்டும் என்றான். இதை நம்பி மலை ஏறத் தொடங்கினான் பீட்டர். இந்த ஆவலால் தூண்டப்பட்ட இவரை, பசியோ, தாகமோ, களைப்போ தடுக்க முடியவில்லை . இதே நேரம் கடவுள் என்ன செய்ய விரும்பினார் தெரியுமா?

மக்களோடு இருக்க விரும்பினார். மக்களின் துன்பம், துயரம், கண்ணீர் இவைகளால் தூண்டப்பட்டு இவர்களைத் தேற்ற வேறு வழியாக கீழே இறங்கி வந்தார். ஆனால் பீட்டர் தான் சென்ற வழியிலும், மலை உச்சியிலும் கடவுளைக் காண முடியவில்லை . இதை அறிந்த பீட்டர் கவலையோடும், மனக் கலக்கத்தோடு கடவுளே! நீர் எங்கே இருக்கிறீர் என்று உச்சக் குரலில் கேட்டார். ஒரு குரல் பதிலாக எதிரொலித்தது. அவர் இங்கே இல்லை . தன் மக்களோடு இருக்கிறார் என்ற பதில் வந்தது. இதை ஜாண் டோன் என்ற கவிஞர் தன் கவிதையில் இவ்வாறு விவரிக்கிறார். கடவுள் ஆகாயத்திலும், பாலைவனத்திலும், காட்டிலும், மேட்டிலும் இல்லை. கடவுள் நம்மோடு இருக்கிறார். இந்தப் பேருண்மையைத் தான் இன்றைய வாசகம் நமக்குத் தருகிறது.

இன்றைய மோசேயின் அழைப்பைப் பற்றிய விடுதலை பயண நூல் நமக்கு என்ன கூறுகிறது? மோசே ஒரு கொலைகாரன். பார்வோனின் அரண்மனையில் வளர்ந்தவன். எகிப்தியனை வெட்டி மண்ணிலே புதைத்தவன். இப்படிப்பட்ட கொலைகாரனைக் கடவுள் எரியும் புதரிலே எரியாது நின்று இஸ்ரயேல் மக்களுக்கு விடுதலை வீரராகத் திகழ அழைக்கின்றார். ஆம், பாவிகள் மனம் திரும்பினால் பரமனின் செயல்களில் சிறந்தவர்களாகத் திகழ்வார்கள் என்பதற்குத் தகுந்த சான்று.

புதிய ஏற்பாட்டிலே இயேசுவைச் சந்திக்கின்றோம். இயேசு எப்படிப்பட்டவர் என்பதற்கு ஓர் அழகான உவமையைத் தருகிறார். தோட்டத்திலே காய்க்காத அத்திமரத்தை ஏன் பூமிக்குப் பாரமாக உள்ளது, வெட்டி வீழ்த்தி விடு என்கிறார் தோட்டக்காரனை நோக்கி. ஐயா பொறும், இந்த ஆண்டு மட்டும் சுற்றிலும் கொத்தி எருப்போடுவேன். காய் தந்தால் சரி. இல்லையேல் வெட்டிவிடலாம் என்கிறான் தோட்டக்காரன். ஆம் தோட்டக்காரனைப் போன்றவர் தான் நம் ஆண்டவர் இயேசு. தந்தையிடம் பாவிகளுக்காகப் பரிந்து பேசுகிறார். எத்தகைய பெரிய வேசியாக இருந்தாலும் சரி பழைய பாவ வாழ்க்கையைக் களைந்துவிட்டு நற்செய்திக் கனி கொடுக்கும் வாழ்க்கைப் பிறப்பால் அவன் மீட்புப் பெறுவான். இதற்குச் சான்றுதான் இன்று வாசிக்கப்பட்ட மோசே வாழ்க்கை.

நிகழ்ச்சி

புனித பெலார்ஜியா. இவள் மயக்கும் அழகியாக இருந்தாள். ஆலயம் செல்வாள். இறைவார்த்தையைக் கேட்க அல்ல, மாறாக மனிதர்களின் மனதை மயக்க. ஆலயத்தில் ஆயர், "இதுவரை மனம் திரும்பாத பாவிகளே! இன்றாவது மனம் திரும்புங்கள். ஏனெனில் யாராலும் கடைசித் தீர்ப்பில் தப்ப முடியாது" என்றார். கூட்டத்தில் பலர் கண்ணீர் வடித்தார்கள். பெலார்ஜியாவின் இதயத்தையும் ஆயரின் ஆணித்தரமான மறையுரை அம்பாக துளைத்தது. முகத்தைத் துணியால் மூடித் தேம்பித் தேம்பித் தன் பாவத்திற்காக அழுதாள். மனம் திரும்பி பாவ அறிக்கையிட்டு புதிய வாழ்வில் நுழைந்தாள். இன்று அவள் மாபெரும் புனிதை (பயங்கர முடிவு 1 கொரி. 10:10-12).

இறைவன் பாவிகள் மனம் திரும்புவதை விரும்புகிறார். அதற்காகக் காத்திருக்கிறார். ஆகவே இது இறைவனது இரக்கத்தின் காலம். இஸ்ரயேலுக்குக் கொடுக்கப்பட்ட அதே வாய்ப்பு இன்று நம் ஒவ்வொருவருக்கும் கொடுக்கப்படுகிறது. இந்த வாய்ப்பை நான் விட்டுவிடக் கூடாது. ஆண்டவரின் இரக்கத்தை உணர்ந்த வர்களாக அவர் கொடுக்கின்ற வாய்ப்புக்களைப் பயன்படுத்தி அவர் எதிர்பார்க்கிற பலனைத் தருபவர்களாக வாழ உறுதி எடுப்போம்.


கடவுள் பொறுமையே உருவானவர்

காய்க்காத, கனி கொடாத, அத்தி மரத்தை வெட்டிவிடச் சொல்லும் முதலாளியிடம், தொழிலாளர், இந்த மரத்தை இப்போது வெட்ட வேண்டாம்; இந்த மரத்தைச் சுற்றிலும் கொத்தி எருபோட்டுக் காத்திருப்போம் என்று சொல்வதை இன்றைய நற்செய்தி நமக்குச் சுட்டிக்காட்டுகின்றது.

தொழிலாளரின் கூற்று வழியாக இயேசு நமக்குச் சுட்டிக் காட்டும் உண்மை என்ன? இயேசு நம்மைப் பார்த்து, கடவுள் பொறுமையே உருவானவர்; ஒரு பாவி சாகவேண்டும் என்று அவர் விரும்புவதில்லை; அவன் எப்படியாவது வாழவேண்டும் என்றே விரும்புகின்றார் ; அவர் பாவிகள் ஒரு நாள் மனம் திரும்புவார்கள் என்ற நம்பிக்கையோடு காத்திருப்பவர் என்று கூறுகின்றார்.

கடவுள் அன்பே உருவானவர். அன்பு பொறுமையுள்ளது .... எரிச்சலுக்கு இடம் கொடுக்காது ...... அன்பு அனைத்தையும் பொறுத்துக்கொள்ளும் ; அனைத்தையும் நம்பும் ; அனைத்தையும் எதிர்நோக்கி இருக்கும்; ..... (1கொரி 13 : 4-7) என்கின்றார் புனித பவுலடிகளார். இதோ நமது கடவுள் எப்படிப்பட்டவர் என்பதைச் சுட்டிக்காட்ட கதையொன்று!

விண்ணிலிருக்கும் வானதூதர்களுக்கெல்லாம் பல மாதங்களாக, பல ஆண்டுகளாக ஒரு சந்தேகம்! நினிவே நகர் மக்களைப் பார்த்து யோனா வழியாகக் கடவுள், நினிவே அழிக்கப்படும் என்று கூறினார். ஆனால் கடவுள் அவர்களை அழிக்கவில்லை (யோனா 3:1-10). விண்ணகத் தந்தை இயேசு வழியாக மனம் மாறாவிட்டால் நீங்கள்  அனைவரும் அழிவீர்கள் (லூக் 13:3) என்கின்றார். ஆனால் யாரையும் அவர் அழிக்கவில்லை .

விண்ணகத் தந்தையிடம் எல்லா வானதூதர்களும் சென்றார்கள்! கடவுள், என்ன எல்லாரும் சேர்ந்து வந்திருக்கின்றீர்கள்? என்றார்.

எல்லா சம்மனசுக்களும், ஆண்டவரே, உலகத்திலுள்ள எத்தனையோ பேர் உமக்கு எதிராகப் பாவம் செய்திருக்கின்றார்கள். உமது பத்துக் கட்டளைகளையெல்லாம் ஒன்றுமில்லாமல் ஆக்கிவிடுகின்றார்கள். நீர் எத்தனையோ இறைவாக்கினர்களை அனுப்பிவைத்தீர். யாருக்கும் அவர்கள் செவி கொடுக்கவில்லை. இறுதியாக உமது ஒரே பேரான மகனை அனுப்பிவைத்தீர். அவரையும் ஈவு இரக்கமின்றி சிலுவையிலே தொங்கவிட்டு கொன்றுவிட்டார்கள்.
 
 இவ்வளவு பாவங்களை அவர்கள் செய்திருந்தாலும் அவர்களை ஏன் நீர் விட்டுவைத்திருக்கின்றீர்? உமக்குக் கோபமே வராதா? என்றார்கள்.

அதற்குக் கடவுள் அவர்களைப் பார்த்து, என் பெயர் அன்பு; அன்புக்குள் எப்படி கோபம் இருக்க முடியும்?

அன்புக்கு மறுபெயர் பொறுமை ; அன்புக்கு மறுபெயர் நம்பிக்கை; அன்புக்கு மறுபெயர் எதிர்நோக்கு என்றார்.

மனம் திருந்தி, திரும்பி வந்த மகனின் (லூக் 15 : 11-32) தந்தை அவரது மகனுக்காகக் காத்திருந்தது போல, பாவிகளாகிய நமது மனமாற்றத்திற்காகக் காத்திருப்பவர் விண்ணுலகிலிருக்கின்ற நமது தந்தை .

நம்மையே நாம் எப்போதும் தூய்மையாக வைத்துக்கொள்ளவேண்டும். ஏனென்றால் நாம் வாழுகின்ற பூமி புனிதமானது. தொடக்க நூல் 1: 31 கடவுள் தாம் உருவாக்கிய அனைத்தையும் நோக்கினார். அவை மிகவும் நன்றாய் இருந்தன என்கின்றது. கடவுளின் கைவேலைப்பாடுகள் எப்படி புனிதமில்லாமல் இருக்க முடியும்?

நாம் வாழும் வீடு, இந்த உலகம் புனிதமாக இருப்பதால், அந்த வீட்டுக்குள் வாழும் நாம் அனைவரும் புனிதர்களாக, புனிதைகளாக இருக்க வேண்டும்!
மோசே காலத்தில் வாழ்ந்த நமது முன்னோர்களில் பெரும்பான்மையோர் உண்மையான இறைவனை மறந்து, தீயனவற்றின் மீது ஆசை வைத்தார்கள் (1 கொரி 10 : 6). நாமோ கிறிஸ்து என்னும் பாறையின் மீது நமது வீட்டைக்கட்டி அவர் தரும் அருளைப் பருகி விண்ணகத் தந்தைக்கு ஏற்புடைய மக்களாக வாழ்வோம் . 

மேலும் அறிவோம்:
ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்
பொறுத்தாரைப் பொன்போல் பொதிந்து (குறள் : 155).
பொருள் : அயலார் செய்த தீமையைப் பொறுத்துக் கொள்ளாமல் அவரைத் தண்டிப்போரைச் சான்றோர் ஒரு பொருளாகக் கருதி மதிக்கமாட்டார்கள். ஆனால் அயலார் செய்திடும் தீமையைப் பொறுத்தாற்றிக் கொள்வோரை அறவோர் அருமையும் அழகும் மதிப்பும் மிக்க பொன்னைப் போன்று போற்றிப் பேணிக் கொள்வர்.


ஏமாறாதே... ஏமாற்றாதே...


"கங்கை எங்கே போகிறாள்?” - ஜெயகாந்தனின் நாவல்.

எங்கோ இமயத்தில் பிறந்து எப்படியெல்லாமோ வளைந்தும் நெளிந்தும் காடுமலையைக் கடந்தும் வங்கக் கடலில் சங்கமமாகும் கங்கை போன்றவள் பெண். - இதுதான் கதையின் கரு.

கதைத் தலைவி கங்கா. வாழ்வில் தான் சந்தித்த காதல் தோல்வி, அதனால் வந்த துயரம், ஏமாற்றம், இழப்பு அனைத்தையும் மறக்க நினைத்துக் குடிக்கிறாள். குடிபோதைக்கு அடிமையாகிறாள். அதைக் கண்ட தோழி அவளைக் கடிந்து கொள்கிறாள்: “பாவி, இப்படியா மதுவை விழுங்குவது அது நஞ்சடி .

"நான் மதுவையா விழுங்குகிறேன், இல்லை என் துன்பத்தை விழுங்குகிறேன், என் தோல்வியை விழுங்குகிறேன், என் இழப்பை விழுங்குகிறேன், என் ஏமாற்றத்தை விழுங்குகிறேன்...'' படபடக்கிறாள் கங்கா .

''நீ உன்னையே ஏமாற்றிக் கொள்கிறாய்" - இது தோழி.

"அப்படியே இருக்கட்டும். பிறர் என்னை ஏமாற்றி என் வாழ்வைக் குலைக்கலாம். நான் என்னையே ஏமாற்றிக் கொள்ளக் கூடாதோ?"

கங்காவுக்கு என்ன பதில் சொல்வது? அவளது உணர்வு விரக்தியின் வெளிப்பாடு.

பிறர் நம்மை ஏமாற்றலாம். அதனால் தாழ்ந்துவிடமாட்டோம், தரம் இழந்து விடமாட்டோம். பிறர் செய்யும் சூழ்ச்சி, சதி பெரும்பாலும் நம் அறிவைக் கடந்தது. ஆனால் நாம் நம்மையே ஏமாற்றிக் கொள்ளக் கூடாது.

யூதர்கள் அப்படித்தான் தங்களையே ஏமாற்றிக் கொண்டிருந்தார்கள். சிலோவாம் விபத்து, கலிலேயர் படுகொலை இவைபற்றிய அவர்களது தவறான சிந்தனைகளைச் சாடுகிறார் இயேசு.

பாவம் என்பதே தன்னை ஏமாற்றிக் கொள்வதுதான்.

எங்கோ படித்த ஆங்கில வரிகள் : “Sin is a futile attempt on the part of the human being to be happy at the expense of his brothers and sisters because of his lack of relationship with the Father in heaven”. வானகத் தந்தையோடு கொண்ட உறவுச் சீர்கேட்டினால், தனது உடன்பிறப்புக்களை இரையாக்கி இன்பம் காண மனிதன் மேற்கொள்ளும் பயனற்ற முயற்சியே பாவம்.

தன்னை ஏமாற்றிக் கொள்ளும் இந்த அவலத்திலிருந்து மீளுதலே மனந்திரும்புதல்.

சிலோவாம் விபத்தில் சிதைந்து இறந்தார்கள், பிலாத்துவின் கொலை வெறியால் மாண்டு மடிந்தார்கள் என்றால் நம்மை விட அவர்கள் பெரும் பாவிகள் என்பதாலா? இந்நாள் வரை நாம் விட்டு வைக்கப்பட்டிருக்கிறோம் என்றால் நாம் பாவமற்றவர்கள் என்பதால் அல்ல. கடவுளின் இரக்கம் நம்மைக் காத்து வருகிறது. அந்த இரக்கத்தில் நம்பிக்கை வைத்து நாம் விரைவில் மனந்திரும்பாவிடில் அவர்களைப் போல நாமும் அழிந்துபடுவோம்.

மனந்திரும்பாவிடில் அழிவீர்கள் என்று எச்சரிக்கும் இயேசு மனந்திரும்ப இறைவன் தரும் மறுவாய்ப்புப் பற்றியும் உணர்த்துகிறார். அதுதான் காய்க்காத அத்தி மரத்தின் கதை (லூக்.13:6-9)

மனமாற்றம் அடையக் கடவுளைப் பற்றிய சரியான பார்வை வேண்டும். இறைவன் யார்? என்ற கேள்விக்கு இருவிதமான பதில்களைப் பெறுகிறார் மோசே. "இருக்கின்றவராக இருக்கின்றவர் நானே" (வி.ப.3:14) கடவுள் இருத்தலையே இயல்பாகக் கொண்டவர். நாமோ இருத்தலை இரவலாகப் பெற்றவர்கள். அவர் என்றும் இருக்கின்றவராகவே இருக்கின்றவர். நாமோ ஒருநாள் இல்லாதவராக இருப்போம். இந்த மெய்யியல் பார்வை மனித மனத்திலே பதியுமோ என்னவோ என்று நினைத்த கடவுள். மீண்டும் மோசேயை நோக்கிக் கூறுவார்: "உங்கள் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவர் - ஆபிரகாமின் கடவுள், ஈசாக்கின் கடவுள், யாக்கோபின் கடவுள்... இதுவே என்றென்றும் என் பெயர் " (வி.ப.3:15). இவரே இறையியல் சுட்டிக் காட்டும் இறைவன். உடன்படிக்கையின் இறைவன். உறவாடும் இறைவன். இரக்கமும் அருளும் கொண்டவர். அவர் நம் பாவங்களுக்கு ஏற்ப நம்மை நடத்துவதில்லை (தி.பா.103:8-10) நிலையான அருளன்பு இருப்பதால் பாவியின் அழிவை அல்ல, அவன் திருந்தி வாழ்வதையே விரும்புகிறார். (எசேக்.18:23)

உள்ளார்ந்த நேர்மையான மனமாற்றம் கடவுளின் மனத்தையே மாற்றிச் செயல்பட வைக்கும் என்பதற்கு எத்தனை விவிலியச் சான்றுகள்!

- 40 நாட்களில் அழிக்கப்படும் என்ற இறைவாக்கினரின் எச்சரிக்கை
கேட்டு மனம் மாறிய நினிவே மக்களைக் கண்டு இறைவன் தன் மனத்தையே மாற்றிக் கொள்ளவில்லையா? (யோனா 3:4-10)
 
தம் தீய வழிகளை விட்டுத் திரும்பினால் யூதாவின் இனத்தாருக்கு அளிக்க விருந்த தண்டனை பற்றித் தன் மனத்தை மாற்றிக் கொள்வதாக இறைவன் எரேமியாவுக்கு வாக்களிக்க வில்லையா? (எரேமி 26:3, 13)

வணங்காகக் கழுத்தினராகச் சிலை வழிபாட்டில் இன்பம் கண்ட இஸ்ரயேல் மக்களுக்குத் தீங்கிழைக்கும் எண்ணத்தை மோசேயின் பரிந்துரை காரணமாக மாற்றிக் கொள்ளவில்லையா? (வி.ப.32:914)

கடவுளுக்கு இரு கரங்கள். ஒன்று நீதியின் கரம். மற்றது இரக்கத்தின் கரம். அன்புக் கரத்தின் தழுவலுக்கு இணங்கவில்லை என்றால், இரக்கத்தின் கரம் சுருங்கும். நீதியின் கரம் நீளும். நீதியின் கரத்தின் முன்னே மனிதன் நிலைகுலைந்து போவான். ''எனவே நிலையாய் நிற்பதாக நினைக்கின்றவனுக்கு எச்சரிக்கை. அவன் நிலைகுலைந்து போகலாம்” (1 கொரி.10:12)



ஒரு பங்குத் தந்தை ஞாயிறு மறையுரையின்போது, "இந்தப்| பங்கு மக்கள் அனைவரும் நரகத்துக்குத்தான் போவார்கள்" என்று கத்தினார். அதைக் கேட்ட ஓர் இளைஞர் சிரித்தார். ஏன் அவர் சிரித்தார் என்று பங்குத் தந்தை கேட்டபோது அவர், "நான் இந்தப் பங்கு இல்லை; வெளியூர்ப் பங்கு" என்றார்,
நம்மிலே பலர் மற்றவர்கள்தான் மனம் மாற வேண்டும்; நான் மனம் மாறத் தேவையில்லை. மற்றவர்கள்தான் நரகத்துக்குப் போவார்கள். நான் நரகத்துக்குப் போக மாட்டேன் என்று நினைக்கின்றனர். ஆனால் இன்றைய நற்செய்தியில், கிறிஸ்துவிடம் இரண்டு விபத்துக்களில் இறந்தவர்களைப் பற்றிக் கூறிய போது இரு முறையும் இயேசு கூறியது: "இவ்விருவிபத்துக்களில் இறந்தவர்கள்தான் பாவிகள், மற்றவர்கள் நீதிமான்கள் என்று நினைக்காதீர்கள். மனம் மாறாவிட்டால் அனைவரும் அழிவீர்கள்". ஒவ்வொரு சாவும் கூறும் செய்தி: மனம் மாறுங்கள்.

மனம் மாற்றம் என்றால் மனதைக் கட்டுப்படுத்தும் முயற்சியல்ல. ஓர் இளைஞன் காமவேட்கையால் வேதனையுற்று, காட்டுக்குச் சென்று ஒரு மரத்தடியில் அமர்ந்து கண்களை மூடித் தியானம் செய்ய | முற்பட்டான், காலை 10 மணிக்குக் கண்களைத் திறந்தபோது அவன் | முன் நின்றுகொண்டிருந்த ஓர் அழகிய பெண் அவன் தியானத்தைக் | கலைத்து விட்டாள். இரண்டாம் நாள் அவன் தன் கண்களை ஒரு துண்டால் இறுகக் கட்டிக் கொண்டு தியானம் தொடங்கினாள். காலை 10 மணிக்கு மறுபடியும் அவன் முன் நின்ற அந்த அழகியை அவன் கண்ணால் காணவில்லை என்றாலும், அவள் காலில் அணிந்திருந்த கொலுசின் சத்தம் அவன் தியானத்தைக் கலைத்துவிட்டது.

| மூன்றாம் நாள் அவன் தன் கண்களைத் துண்டால் மூடியதுடன் தன் இருகாதுகளிலும் பஞ்சை வைத்து அடைத்துத் தியானம் செய்தான். காலை 10 மணிக்கு அவள் வந்தபோது, அவளை அவன் கண்ணால் பார்க்கவில்லை, கொலுசு சத்தத்தைக் காதால் (கேட்கவில்லை , எனினும், அவள் கூந்தலின் மல்லிகைப்பூ அவன் மூக்கைத் துளைத்து அவன் தியானத்தைக் கலைத்துவிட்டது.

நான்காம் நாள் அவன் தன் கண், காது, மூக்கு அனைத்தையும் அடைத்துவிட்டுத் தியானம் தொடங்கினான். காலை 10 மணிக்கு அவள் வந்தபோது, அவன் அவளைக் கண்ணால் காணவில்லை; கொலுசு சத்தத்தைக் காதால் கேட்கவில்லை; மல்லிகைப் பூவை மூக்கால் நுகர வில்லை , இருப்பினும் அவன் மனம், "பத்து மணி ஆகிவிட்டது. இந்நேரம் அவள் வந்திருப்பாள்" என்று நினைவூட்டி அவனை வறுத்தெடுத்தது!

மனமாற்றம் என்பது தீய எண்ணங்களுடன் போராடுவது அல்ல, விவிலிய அடிப்படையில், மனம் மாற்றம் என்பது, நம்மையே நமது வாழ்வின் மையமாக வைக்காமல் கடவுளை நம் வாழ்வின் மையமாக வைப்பது. பாவம் என்பது கடவுளுக்கு முதுகையும் உலகிற்கு முகத்தையும் காட்டுவது. மனம் மாற்றம் என்பது கடவுளுக்கு முகத்தையும் உலகிற்கு முதுகையும் காட்டுவது. "எனக்கு முகத்தையல்ல முதுகையே காட்டுகின்றனர்” (எரே 2:27).

மனமாற்றம் அடையக் கடவுளைப் பற்றிய சரியான எண்ணம் தேவை, கடவுள் யார்? இன்றைய முதல் வாசகத்தில் கடவுள் மோசேவிடம் இருக்கின்றவராக இருக்கிறவர் நானே" (விப 3:14) என்று தம்மை வெளிப்படுத்துகிறார். மெய்யியல் அடிப்படையில் கடவுள் என்றும் இருக்கிறவர் ; முதலும் முடிவும் இல்லாதவர். அவரிடம் மாற்றமோ மாற்றத்தின் நிழலோ கிடையாது (யாக் 1:17). ஆனால் இறையியல் அடிப்படையில் கடவுள் அன்பே உருவானவர் (1 யோவா 4:16). இன்றைய பதிலுரைப் பாடல் கூறுவதுபோல, "ஆண்டவர் இரக்கமும் அருளும் கொண்டவர்; நீடிய பொறுமையுள்ளவர். நம் குற்றங்களை யெல்லாம் மன்னிக்கிறார். நம் நோய்களை யெல்லாம் குணமாக்குகிறார்" (திபா 103).
கடவுள் அன்பினால் மனிதனைப் படைத்தார். அவன் பாவம் செய்தபோது நீதியின்படி அவனைத் தண்டித்தார். ஆனால் இரக்கமிகுதியினால் அவனை மீட்டருளினார். கடவுளிடம் அன்பு உண்டு; நீதியும் உண்டு. ஆனால் அனைத்துக்கும் மேலாக அவரிடம் இரக்கம் உண்டு. எனவேதான் அவர் பாவியின் அழிவை விரும்பாமல், அவன் மனம் மாறி வாழ்வதையே விரும்புகிறார் (எசே 18:23).

கடவுள் நீடிய பொறுமையுள்ளவர். மூன்று ஆண்டுகளாகக் கனி கொடாத அத்தி மரத்தை வெட்டி வீழ்த்தாமல், அது கனி தரும் என்று எதிர்பார்த்து அதற்கு உரமிடுபவர் (லூக் 13:6-9). ஆனால் அதே நேரத்தில் கனி தராத அத்தி மரத்தைச் சபிக்கவும் செய்கிறார் (மத் 21:18-19).

கடவுள் நம்மிடம் என்ன எதிர்பார்க்கிறார் என்பதை அவரே கூறுவதைக் கேட்போம். "நேர்மையைக் கடைப்பிடித்தலையும், இரக்கம் கொள்வதில் நாட்டத்தையும், உன் கடவுளுக்கு முன்பாகத் தாழ்ச்சியோடு நடந்து கொள்வதையும் தவிர வேறு எதை ஆண்டவர் உன்னிடம் கேட்கிறார்" (மீக 6:8).

நீதி, நேர்மை, இரக்கம், தாழ்ச்சி ஆகிய நற்கனிகளைக் கடவுள் நம்மிடம் எதிர்பார்க்கிறார். பாவிகளாகிய நாம் நமது ஆணவத் திமிரைத் தளர்த்தவும், ஏழைகளுக்கு உணவளித்து அவரின் வள்ளல் தன்மையைக் கண்டுபாவிக்கவும் கடவுள் நமக்குச் சிறப்பாக இத்தவக்காலத்தைக் கொடுத்துள்ளார்,

மணமில்லாத மண்ணில் வளரும் மல்லிகைச் செடி மணமிக்க மலரைத் தருகிறது. மணமில்லா மண்ணில் வளரும் மாமரம் சுவையான
மாங்கனியைத் தருகிறது. சுவையில்லாத புல்லைத் தின்கின்ற பசு சுவையான பாலைக் கொடுக்கிறது, ஆனால், கடவுளுடைய சுவையான அருள்வாக்கைக் கேட்டும், ஆற்றல்மிக்க அருளடையாளங்களில் பங்கேற்றும் நாம் நற்கனி கொடாதது ஏன்?

நாம் நற்கனித்தராவிட்டால், இன்றைய இரண்டாம் வாசகத்தில் இஸ்ரயேல் மக்களுக்கு நேரிட்ட அதே அழிவு நமக்கும் நேரிடும். இஸ்ரயேல் மக்கள் ஒரே ஆன்மீக உணவை உண்டும், ஒரே ஆன்மீகப் பானத்தைப் பருகியும் அவர்களில் பெரும்பான்மை யினர் கடவுளுக்கு உகந்தவர்களாய் இருக்கவில்லை. அவர்களுக்கு நிகழ்ந்தது நமக்கு ஓர் எச்சரிக்கை என்கிறார் திருத்தூதர் பவுல் (1 கொரி 10:1-6).

இன்று கிறிஸ்து நமக்கு விடுக்கும் எச்சரிக்கை: "மனம் மாறாவிட்டால் நீங்கள் அனைவரும் அழிவீர்கள்” (லூக் 13:3).

பாலைநிலத்திலிருந்து திரும்ப

புனித இஞ்ஞாசியாரின் புகழ்பெற்ற 'ஆன்மீகப் பயிற்சிகள்' ('Spiritual Exercises') நூலில், 'தெரிதலும் தெரிவுசெய்தலும்' ('Discernment') பற்றிச் சொல்லும்போது, இருவகை உணர்வுகளைப் பற்றிக் குறிப்பிடுகின்றார்: 'ஆறுதல்' ('consolation'), 'வெறுமை' (desolation). நம் வாழ்வின் நிகழ்வுகள் நாம் எதிர்பார்ப்பது போலச் செல்லும்போது, அல்லது நமக்கு நடக்கும் எல்லாம் நேர்முகமாகவே நடக்கும்போது, நாம் மேற்கொள்ளும் முயற்சிகள் அனைத்திலும் நாம் வெற்றி பெறுகிறபோது, நம் உறவுநிலைகள் நமக்கு அமைதி தருவனவாக இருக்கும்போது, நம் உடல்நலம் நன்றாக இருக்கும்போது போன்ற சூழல்களில் நாம் 'ஆறுதல்' கொள்கிறோம். ஆனால், 'ஆறுதல்' மட்டுமே நம் வாழ்வியில் அனுபவமாக இருப்பதில்லை. சில நிகழ்வுகள் நம் எதிர்பார்ப்பிற்கு முரணாக நடந்தேறும். நமக்கு நடக்கும் எல்லாம் எதிர்மறையாகவே நடக்கும். நம் முயற்சிகள் அடுத்தடுத்து தோல்வியைத் தரும். நாம் மேற்கொள்ளும் எந்த முயற்சியும் வெற்றி தராது. நம் உறவுநிலைகளில் அமைதி குலையும். நம் உடல்நலம் குன்றும். இச்சூழல்களில் நாம் அடையும் உணர்வின் பெயர் 'வெறுமை.'

நம் உடல் பசியால், தாகத்தால் வாடுவதுபோல, நம் மூளை புதிய சிந்தனை இல்லாமல் வறண்டு போவதுபோல, நம் இதயம் புதிய உறவுகளைத் தேடுவதுபோல, நம் உள்ளம் அல்லது ஆன்மாவும் வெறுமையை அனுபவிக்கிறது. ஆன்மாவின் ஊற்று சுரப்பது நிற்கும்போது, ஆன்மா என்னும் கிணறு வற்றும்போது நாம் என்ன செய்ய வேண்டும் என்பதையே இன்றைய இறைவாக்கு வழிபாடு நமக்குச் சுட்டிக்காட்டுகிறது.

தவக்காலத்தின் முதல் வாரத்தில் இயேசுவோடு புறப்பாலைவனத்தில் இருந்து, அவரோடு இணைந்து நம் நம்பிக்கையை அறிக்கையிட்டோம். கடந்த வாரம் அவரோடு உருமாற்ற மலையில் இருந்து நம் வாழ்வின் உறுதியற்ற நிலையை எதிர்கொண்டோம். இன்று, நம் ஆன்மீகப் பாலைநிலத்திலிருந்து திரும்புவோம்.

இன்றைய முதல் வாசகம் (காண். விப 3:1-8,13-15) மோசேயின் அழைப்பு நிகழ்வை நமக்குப் படம்பிடித்துக்காட்டுகிறது. 'மோசே மிதியானின் அர்ச்சகராகிய தம் மாமனார் இத்திரோவின் ஆட்டு மந்தையை மேய்த்துவந்தார்' என்ற தொடக்க வசனமே மோசேயின் பாலை அனுபவத்தை நமக்கு எடுத்துச் சொல்கிறது. எகிப்தின் வளம் மிக்க நைல் நதியிலிருந்து 'வெளியே எடுக்கப்பட்டு,' 'எபிரேயத் தாயே தாதியாகப் பாலூட்ட,' 'பாரவோனின் மகளின் அரவணைப்பில்' வாழ்ந்த மோசே, இப்போது, தனக்குச் சொந்தமில்லாத இடத்தில், தனக்குச் சொந்தமில்லாத ஆடுகளை, தனக்குச் சொந்தமில்லாத நிலத்தில் மேய்த்துக்கொண்டிருக்கிறார். இப்படியாக தனக்குத்தானே அந்நியராக நிற்கின்றார் மோசே. இந்த நேரத்தில்தான், முட்புதர் ஒன்று எரிந்துகொண்டிருப்பதையும் அது தீய்ந்துபோகாமல் இருப்பதையும் காண்கின்றார். 'இந்த மாபெரும் காட்சியைக் காண்பதற்காக நான் அப்பக்கமாகத் திரும்புவேன்' என்று மோசே முட்புதர் நோக்கித் திரும்புகின்றார். அவர் அணுகி வருவதைக் கண்டு, 'இந்த இடம் தூய்மையானது. இங்கே அணுகி வராதே. உன் மிதியடிகளை அகற்று' என எச்சரிக்கிறார் கடவுள். கடவுள் தன்னையே, 'ஆபிரகாமின் கடவுள், ஈசாக்கின் கடவுள், யாக்கோபின் கடவுள்' என்று மோசேயின் மூதாதையரின் கடவுளாகத் தன்னை முன்வைக்கின்றார். எகிப்தில் தன் மக்கள் படும் துன்பங்களைக் கண்டு தான் இறங்கி வந்திருப்பதாகச் சொல்கின்றார் கடவுள்.

'அவர் பெயர் என்ன?' என்று கேட்டால் நான் என்ன சொல்வேன்? என முதல் தயக்கத்தை வெளிப்படுத்துகின்றார் மோசே. மோசே தன் கடவுள் பற்றியும், தன் மூதாதையர் பற்றியும் அறியாமல் இருக்கிறார். அல்லது அவருடைய இந்த இக்கட்டான நிலையில் கடவுள் தன்னிடம் இல்லை என்றுகூட அவர் நினைத்திருக்கலாம். 'இருக்கின்றவாக இருக்கின்றவர் நானே' என்று தன் பெயரை வெளிப்படுத்துகின்றார் கடவுள். 'யிஹ்யே' என்ற இந்த எபிரேயச் சொல்லை, 'இருக்கின்றவராக இருக்கின்றவர்,' 'இருக்கின்றவற்றை இருக்கச் செய்கிறவர்' போன்று பல பொருள்களில் மொழிபெயர்க்கலாம். கடவுளின் பெயர் ஒன்றை மட்டும் நமக்குச் சொல்கிறது. 'இல்லாததை இருக்கச் செய்பவரும்,' 'இருப்பதை இருக்கச் செய்கிறவரும்' இறைவனே. மோசேயின் வெறுமையை நிரப்புகிறவரும், மக்களின் துன்பங்கள் துடைக்கிறவரும் இறைவனே. ஆக, இஸ்ரயேல் மக்கள் அனுபவித்த அடிமைத்தனம் என்னும் பாலைநிலைத்திலிருந்து அவர்களை விடுவிக்க மோசே என்னும் வெறுமையின் பாலைநிலத்தைத் தேர்ந்துகொள்கிறார் கடவுள். எப்படி எரிகின்ற முட்புதர் தீய்ந்துபோகவில்லையோ, அப்படியே கடவுளின் இருப்பு இஸ்ரயேல் மக்களுக்கு தீர்ந்துபோகவில்லை. இந்த அனுபவத்தையே இன்றைய திருப்பாடலில் (காண். 103) ஆசிரியர், 'ஆண்டவர் இரக்கமும் அருளும் கொண்டவர்' என்று புகழ்கின்றார்.

ஆக, 'ஆடு மேய்த்துக்கொண்டிருந்த மோசே' பாலைநிலத்திலிருந்து எகிப்திற்குத் திரும்புமாறு கடவுளால் அழைக்கப்படுகின்றார். இப்படித் திரும்பும் அவர் தன் கடவுளைக் கண்டுகொள்கின்றார். கடவுளைக் கண்டுகொண்ட அவர் கடவுள் அவருக்குத் தந்த பணியைச் செய்யப் புறப்படுகின்றார்.

இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். 1 கொரி 10:1-6, 10-12), சிலைகளுக்குப் படைக்கப்பட்ட உணவை உண்ணலாமா, வேண்டாமா என்பது பற்றிய அறிவுரையை கொரிந்து நகரத் திருச்சபைக்கு வழங்குகின்றார் பவுலடியார். கொரிந்து நகரத் திருச்சபை ஓர் அறிவுசார் திருச்சபை. எனவே, ஒரு சாரார், 'வேறு எந்தக் கடவுளும் இல்லை' (காண். 1 கொரி 8:4-6) என்ற புரிதலில், எல்லா உணவையும் - அது எந்த ஆலயத்தில் படைக்கப்பட்டாலும் - உண்ணலாம் என்ற எண்ணம் கொண்டிருந்தனர். மற்றொரு குழுவினர், இச்செயலைச் சிலைவழிபாடு என்று கருதி, மற்றவர்களின் இச்செயல்பாடு குறித்து இடறல்பட்டனர். இது நம்பிக்கையாளர்கள் நடுவே குழப்பத்தையும் பிரிவினையையும் உண்டாக்கியது. சிலைகள் கடவுளர்கள் அல்ல என்பதால் அவற்றுக்குப் படைக்கப்பட்ட யாவற்றையும் உண்ணலாம் என்று சொல்கின்ற பவுலடியார், அதே வேளையில், மற்ற நம்பிக்கையாளர்கள் இதைக் குறித்து இடறல் பட்டாலோ அல்லது இச்செயல் பிரிவினையை உண்டாக்கினாலோ, இச்செயல் தவிர்க்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்துகிறார் (காண். 1 கொரி 8:7-12, 10:23-30).

இந்தப் பின்புலத்தில், தனது அறிவுரைக்கு வலுசேர்க்கும் வண்ணம், முதல் ஏற்பாட்டு நிகழ்வு ஒன்றை எடுத்தாளுகின்றார் பவுல். இஸ்ரயேல் மக்கள் எகிப்தில் கடவுள் ஆற்றிய அரும் பெரும் செயல்களை அறிந்திருந்தாலும், மேகத்தின்கீழ் வழிநடத்தப்பட்டு, கடலைக் கால் நனையாமல் கடந்து, ஒரே ஆன்மீக உணவை உண்டு, ஒரே பாறையின் தண்ணீரைக் குடித்தாலும் அவர்கள் கடவுளுக்கு எதிராக முணுமுணுக்கவும், சிலைவழிபாட்டில் ஈடுபடவும் செய்தனர். இதனால், அவர்கள் கடவுளின் கோபத்திற்கும் தண்டனைக்கும் ஆளானார்கள். இந்த நிகழ்வைச் சுட்டிக்காட்டும் பவுலடியார், 'இவை யாவும் நமக்கு முன்னடையாளமாய்த் திகழ்ந்தன' என்கிறார். மேலும், கொரிந்து நகர மக்களும் 'ஒரே திருமுழுக்கு பெற்றாலும்,' 'ஒரே ஆன்மீக உணவை' (நற்கருணை) உண்டாலும், சிலைவழிபாட்டிலிருந்து அவர்கள் விடுவிக்கப்படுவதற்கு எந்தவித உத்தரவாதமும் இல்லை. இஸ்ரயேல் மக்களைப் போல கொரிந்து நகர மக்களும் பவுலின் அறிவுரைகளுக்கு எதிராக முணுமுணுக்கவே செய்தனர்.

ஆக, நம்பிக்கை கொண்ட கொரிந்து நகர மக்கள், சிலைவழிபாடு என்னும் தங்களின் பழைய பாலைநிலத்திலிருந்து, 'தண்ணீர் தரும் ஒரே பாறையாகிய கிறிஸ்துவை' நோக்கித் திரும்ப அவர்களை அழைக்கின்றார் பவுலடியார்.

இன்றைய நற்செய்தி வாசகத்தின் (காண். லூக் 13:1-9) முதல் பகுதி இரண்டு கொடூரமான நிகழ்வுகளோடு தொடங்குகிறது: ஒன்று, பலி செலுத்திக் கொண்டிருந்த கலிலேயரைப் பிலாத்து கொன்றான். இரண்டு, சீலோவாமிலே கோபுரம் விழுந்து  அங்கே வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த பதினெட்டுப் பேர் இறக்கின்றனர். இப்படி இறந்தவர்கள் எல்லாருமே எதிர்பாராத விதத்தில், இறப்புக்கான எந்தவித முன்தயாரிப்புமின்றி இறக்கின்றனர். நற்செய்தி வாசகத்தின் இரண்டாம் பகுதி, கனி தராத அத்திமரம் ஒன்று தன் தலைவரால் தான் எதிர்கொள்ளவிருக்கின்ற அழிவைப் பதிவு செய்கிறது. இந்நிகழ்வில் இயேசுவின் உருவகமாக வரும் தோட்டக்காரர், தலைவரிடம் அத்திமரத்திற்காக பரிந்து பேசி, கடைசி வாய்ப்பு ஒன்றைக் கெஞ்சிக் கேட்கின்றார்.

மேற்காணும் இரண்டு நிகழ்வுகள் வழியாகவும், காய்க்காத அத்திமரம் உருவகம் வழியாகவும் இயேசு தன் சமகாலத்தவரைத் தங்களின் 'பாலைநிலத்திலிருந்து உடனடியாக திரும்ப' அழைப்பு விடுக்கின்றார். எதிர்பாராத இடத்தில், எதிர்பாராத நேரத்தில் இறந்தவர்களைப் பாவிகள் என்று அடையாளப்படுத்தும் போக்கை விடுத்து, தாங்கள் அந்நிலையிலிருந்து விடுபட வேண்டும் என்றும், இறப்பு எந்த இடத்திலும் எந்த நேரத்திலும் வரலாம் என்பதால் உடனடியாக மனம் மாறவும், அந்த மாற்றத்திற்கு உறுதுணையாக இயேசுவைப் பற்றிக்கொள்ளவும் வேண்டும்.

ஆக, கனிதராத வாழ்வு என்ற பாலைநிலத்திலிருந்து கனிதருதல் என்ற நிலைக்குத் திரும்ப தம் சமகாலத்தவரை அழைக்கிறார் இயேசு.

இன்று நம் ஒவ்வொருவரின் தனிநபர் வாழ்வுநிலையை உடல்சார், அறிவுசார், உறவுசார், ஆன்மீகம்சார் என்று நான்கு பகுதிகளாகப் பிரிக்கலாம். இவற்றில் ஒவ்வொரு நிலையிலும் நாம் பாலைநில அனுபவம் பெறுகின்றோம். பசி என்பது உடல்சார் பாலை, அறியாமை என்பது அறிவுசார் பாலை, தனிமை என்பது உறவுசார் பாலை, வெறுமை, உறுதியற்ற தன்மை, தவறான தெரிவுகள் போன்றவை ஆன்மீகம்சார் பாலை. முதல் மூன்றுநிலைப் பாலை அனுபவங்களை நாம் மிக எளிதாக வெற்றிகொள்ள முடியும். ஆனால், நான்காம் பாலை - ஆன்மீகம்சார் பாலைநிலைத்தை - வெற்றிகொள்வது அவ்வளவு எளிதல்ல. மோசேக்கு கடவுளின் பெயர் தேவைப்பட்டது. கொரிந்து நகர மக்களுக்கு பவுலின் நினைவூட்டல் தேவைப்பட்டது. இயேசுவின் சமகாலத்தவருக்கு எச்சரிக்கையும் வேகமும் தேவைப்பட்டது.
இன்று நாம் உணரும் ஆன்மீகம்சார் பாலைநில அனுபவம் என்ன? அதிலிருந்து நாம் எப்படி வெளியேறுவது? அல்லது பசுமை நோக்கித் திரும்புவது?

இன்றைய இறைவாக்கு வழிபாடு நமக்கு மூன்று வழிகளைக் கற்பிக்கிறது:

1. இறைவனை அறிதல் வேண்டும்

மோசே இறைவனால் அழைக்கப்படுவதற்கும் அனுப்பப்படுவதற்கும் முன் இறைவனை அவர் அறிந்துகொள்கின்றார். இறைவனின் அழைப்பும் அனுப்பப்படுதலும் மோசேக்கு அவர் எதிர்பாராத இடத்தில், அவர் எதிர்பாராத நேரத்தில், அவர் தன்னுடைய வேலையில் மும்முரமாய் இருந்தபோது அருளப்படுகின்றது. இறைவனின் அழைப்பை மோசே இரண்டு நிலைகளில் கண்டுகொள்கின்றார்: ஒன்று, தன் ஆடுகளின் பக்கம் இருந்த தன் முகத்தை எரியும் முட்புதர் பக்கம் திருப்புகின்றார். இரண்டு, இறைவனின் பெயரை அறிந்துகொள்கின்றார். ஆடுகளிலிருந்து கண்களைப் முட்புதர் பக்கம் திரும்புவது எளிதன்று. ஆடுகளை விட்டுவிடத் தயாராக இருக்க வேண்டும். தன் பாதுகாப்பு வளையத்திலிருந்து வெளியேற வேண்டும். மலை என்னும் பாதுகாப்பின்மையை நோக்கிச் செல்ல வேண்டும். தன் மிதியடிகளைக் கழற்ற வேண்டும். சில நேரங்களில் நம் மனம் பாலை அனுபவத்தில் இருக்கும்போது, விரக்தியை அனுபவிக்கும்போது, நாம் நம் ஆடுகளை விட்டுவிடத் தயாராக இருப்பதில்லை. நம் பாதுகாப்பின்மையை அல்லது வலுவின்மையை ஏற்றுக்கொள்ளத் தயராhக இருப்பதில்லை. அந்நேரங்களில், 'இது என்ன? வித்தியாசமாக இருக்கிறதே! எனக்குள் வெறுமையும் இருக்கிறது. அதே வேளையில் நான் உயிரோடும் இருக்கின்றேனே!' என்று நம்மைப் பற்றி நாமே ஆச்சர்யப்பட்டுக் கொண்டால் அங்கே இறைவனை அறிதல் சாத்தியமாகும். அங்கே, ஒன்றும் 'இல்லாமையில்,' 'இருக்கின்ற இறைவன்' எல்லாவற்றையும் இருக்கச் செய்வார். இழந்ததையும் திரும்ப அளிப்பார். நாம் விட்டுவிட்டு ஓடிவந்த எகிப்திற்கே நம்மை புதிய பணிக்காக அனுப்புவார்.

2. அதீத நம்பிக்கை அகற்ற வேண்டும்

பிரபலமான டைட்டானிக் கப்பல் தன் மீது கொண்டிருந்த அதீத நம்பிக்கையால் தனக்கு முன் சென்ற படகின் எச்சரிக்கையை எடுத்துக்கொள்ளவில்லை. 'இறைவன் தங்களோடு இருக்கிறார்' என்ற அதீத நம்பிக்கையே, இஸ்ரயேல் மக்களை, 'நாங்கள் என்ன செய்தாலும் ஆண்டவர் அன்பு செலுத்துவார்' என்று நினைக்கத் தூண்டியது. ஆகையால்தான், அவர்கள் சிலைவழிபாட்டில் ஈடுபடத் தொடங்கினர். 'சிலைவழிபாட்டு உணவை விட வேண்டும்' என்ற எச்சரிக்கையையும் கொரிந்து நகர மக்கள் ஏற்றுக்கொள்வதாகத் தெரியவில்லை. ஆக, ஆன்மீகப் பாலை அனுபவம் சில நேரங்களில் நம் அதீத நம்பிக்கையாலும், எச்சரிக்கைகளை உதாசீனப்படுத்துவதாலும் வரலாம்.

3. செயல் மாற்றம் வாழ்வு மாற்றம்

சில நேரங்களில் நாம் பயம் அல்லது விரக்தி உணர்வுகளால் அல்லது எதிர்மறை உணர்வுகளால் ஆட்கொள்ளப்படும்போது என்ன செய்வதென்று தெரியாமல் இருக்கிறோம். அந்த மாதிரியான நேரங்களில் இரண்டு விடயங்கள் செய்ய வேண்டும் என்று சொல்கிறது இன்றைய நற்செய்தி வாசகம்: (அ) இதுவரை செய்யாத ஒன்றைச் செய்வது - அத்திமரத்தை தலைவர் வெட்டப்போகிறார் என்று முடிவெடுத்தவுடன் தோட்டக்காரர் உடனடியாக மரத்திற்கு உரம் போட ஆரம்பிக்கிறார். இதுவரை செய்யாத ஒன்றை இவர் செய்ய ஆரம்பிக்கிறார். (ஆ) செயலை மாற்றுவதன் வழியாக உணர்வை மாற்றுவது - இது முந்தைய விடயத்தின் நீட்சியே. அதாவது, மனதை பிஸியாக வைத்துக்கொள்ளுமாறு ஏதாவது ஒன்றைச் செய்துகொண்டே இருப்பது. இம்மாதிரியான நேரங்களில் நம் மனம் ஒன்றும் செய்யாமல் இருந்துகொண்டு, 'எல்லாவற்றையும் தள்ளிப்போடச்' சொல்கிறது.

இவ்வாறாக,

தவக்காலத்தின் மூன்றாம் ஞாயிறு நம் ஆன்மீகப் பாலைவனத்திலிருந்து நம்மை வெளியே வர அழைக்கிறது. 'வாழ்வில் எல்லாம் முடிந்துவிட்டது. இனி இந்த அந்நிய மண்ணும், ஆடுகளும்தான் என் வாழ்வு' என்று எண்ணிய மோசேயைத் தடுத்தாட்கொள்ளும் கடவுள் எகிப்தின் வளமையை நோக்கிக் திரும்ப அனுப்புகிறார். நம்பிக்கையின்மை என்ற பாலைநிலத்திலிருந்து நம்பிக்கையை நோக்கிச் சென்ற கொரிந்து நகர மக்கள் ஒருவர் மற்றவருக்கு இடறலாக இல்லாத வண்ணம் பரந்த மனம் கொள்கின்றனர். மாற்றம், அதுவும் உடனே மாற்றம் என்று தன் சமகாலத்தவரை அவர்கள் இருந்த 'கண்டுகொள்ளாமை, தள்ளிப்போடுதல்' என்னும் பாலைநிலத்திலிருந்து வெளியே அழைக்கிறார் இயேசு. ஆறுதலும், வெறுமையும் மாறி மாறி வரும் வாழ்வியல் அலைகள். வெறுமையில் கொஞ்சம் அண்ணாந்து பார்த்தால், அங்கே 'இருக்கின்ற அவர் இருக்கின்றவராக இருப்பார்' - இன்றும் என்றும்!




மனம்மாறி இறைவனிடம் திரும்பி வருவோம்.

 

இங்கிலாந்து நாட்டின் டார்லிங்டன் நகரில் வாழ்ந்த ஒரு திருடன் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனைக்குப் பிறகு வீடு திரும்பினான். வீட்டுக்கு வந்த அவனை யாருமே ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் அவன் வாழ்க்கையை வெறுத்துப் போயிருந்தான். ஒருநாள் அவன் தெருவில் நடந்துசென்று கொண்டிருந்தபோது, எதிரிலே அந்நகரின் மேயர் ஜான் மோர்சல் வந்துகொண்டிருந்தார். அவருக்கு இவனை நன்றாகவே தெரியும். உடனே  அவன், அவரிடமிருந்து எப்படியாவது தன்னை மறைத்துக்கொள்ள வேண்டும் என்று  ஒளிந்து ஒளிந்து சென்றான். அப்போது திடிரெண்டு ஒரு கை அவன் தோள்மேல் பட்டது. திரும்பி பார்த்த அவன் அதிர்ந்துபோனான். ஏனென்றால் அவன் எதிரே ஜான் மோர்சல் நின்றுகொண்டிருந்தார். அவர் அவன் தோள்மேல் கைபோட்டு, “என்ன சகோதரா! நன்றாக இருக்கிறீர்களா? என்று நலம் விசாரித்தார். இது அவனுக்கு இன்னும் அதிர்ச்சியைத் தந்தது. சிறிது நேரம் அவர் அவனிடம் பேசிவிட்டு, அங்கிருந்து நகர்ந்து சென்றார்.



வருடங்கள் பல சென்றன. ஒரு நாள், வேறொரு நகரில் அவன் ஜான் மோர்சலைப் பார்த்து,  மிகுந்த சந்தோசத்தோடு அவரிடம் சென்று, “ஐயா! என்னை ஞாபகம் இருக்கிறதா?” என்றான். ஒரு நிமிடம் அவனை அமைதியாகப் பார்த்துவிட்டு அவர் ஞாபகம் இருக்கிறது என்பதுபோல் தலையாட்டினார். அப்போது அவன் அவரிடம்இ “ஐயா! அன்றைக்கு மட்டும் நீங்கள் என் தோள்மேல் கைபோட்டு, அன்பாகப் பேசி இருக்காவிட்டால், இன்றைக்கு நான் எப்படியோ இருந்திருப்பேன்இ என் வாழ்க்கையே முற்றிலும் சீரழிந்து போயிருக்கும். நீங்கள்தான் எல்லாரும் வெறுத்து ஒதுக்கிய திருடனாகிய என்னிடம் அன்பொழுகப் பேசினீர்கள்; நீங்கள்தான் என் குற்றங்களையெல்லாம் எல்லாம் மன்னித்து ஏற்றுக்கொண்டீர்கள்” என்றான். அன்போடு நடந்துகொண்டால் எப்படிப்பட்ட குற்றவாளியும் மனந்திரும்புவான் என்பதை இக்கதையானது சுட்டிக்காட்டுகிறது.



தவக்காலத்தின் மூன்றாம் ஞாயிற்றுக் கிழமை வாசகங்கள் நமக்கு “மனந்திரும்பி வாழ அழைப்புத் தருகிறது. இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசுவிடம் சிலர், பிலாத்து பலிசெலுத்திக்கொண்டிருந்த கலிலேயரைக் கொன்றான் என்ற செய்தியைச் சொல்கின்றனர். அதற்கு இயேசு, மனம் மாறாவிடில் நீங்கள் ஒவ்வொருவருமே அழிவீர்கள்” என்கிறார். இயேசுவின் இவ்வார்த்தைகள் சற்றுக் கடினமாக இருந்தாலும், அவர் நாம் அனைவரும் மனந்திரும்பி வரவேண்டும் என்று அன்போடு காத்துக்கொண்டிருக்கிறார். இன்றைய இரண்டாம் வாசகத்தில் பவுலடியார், “நீங்கள் கடவுளைவிட்டு விலகி சென்ற இஸ்ரயேல் மக்கள் போன்று அல்லாமல், கடவுளை நோக்கி வரும் மக்களாக வாழவேண்டும்”       (1கொரி 10:6) என்றதொரு அழைப்பினைத் தருகிறார். ஆம், கடவுளை விட்டு விலகிச்செல்வதுதான் பெரிய பாவம், விலகிச் சென்றவர்கள் மீண்டுமாக இறைவனிடம் திரும்பி வருவதே உண்மையான மனமாற்றம். ஆதலால் நாம் இருகின்றவராக, இருக்கின்ற இறைவனிடம் திரும்பி வருவோம். இறையருள் நிறைவாய் பெறுவோம்.




Friday 15 March 2019

தவக்காலம் 2-ஆம் ஞாயிறு



தவக்காலம் 2-ஆம் ஞாயிறு

இன்றைய வாசகங்கள்


தொடக்க நூல். 15:5-12, 17-18
பிலிப்பியர்  3:14:1
லூக்கா 9:28-36




இயேசு தோற்றம் மாறுதல்

 

ஆசியா கண்டத்திலே மலைகளுக்குச் சிறப்பிடம் உண்டு. ஆழ்நிலை தியானத்தில் ஈடுபடுவோர் இறைவனைத் தேடி இமயமலையை நாடுகின்றனர். காரணம் காலம் காலமாக இறைவனைச் சந்திக்க ஏற்ற இடமாக மலைகள் கருதப்பட்டன. கடவுள் மேலே இருக்கிறார் என்ற எண்ணத்தில் மலைகளில் ஏறிச் செல்வதின் மூலமாகக் கடவுளிடம் நெருங்கிச் செல்வதாக மக்கள் கருதுகிறார்கள். இதனால்தான் இந்தியத் திருநாட்டிலே கோவில்கள் எல்லாம் மலை மேல் எழுப்பப்பட்டிருப்பதை நாம் பார்க்கிறோம்.

இரண்டாவது மலைகளில் காணப்படும் இயற்கை எழிலும், அமைதியும் இறைவனைத் தேடவும், இறைவனோடு ஒன்றிக்கவும் ஏற்ற சூழ்நிலையாக உள்ளன. சுருங்கக் கூற வேண்டுமானால் இறைவன் - மனித சந்திப்பிற்கு ஏற்ற இடமாக மலைகள் விளங்குகின்றன.

விவிலியத்தில் பார்த்தால் மலைகள் இறைவனின் பிரசன்னத்தைக் குறிக்கின்றது. மலைகள் இறைவனைச் சந்திக்கும் இடமாக அமைகின்றன.

அபிரகாம் தன் மகன் ஈசாக்கை மோரியா மலையிலே பலியிட முயன்றபோது இறைவனைச் சந்திக்கிறார் (தொடக்க நூல் 22:1-19)
இஸ்ரயேல் மக்களின் தலைவனாக இருந்து வழிநடத்திய மோசே இறைவனைச் சீனாய் மலையில் சந்தித்ததைப் பற்றி விடுதலைப் பயணத்தில் (வி.ப. 24:12-18) வாசிக்கிறோம்.

எலியாஸ் இறைவாக்கினர் கார்மேல் மலையில் இறைவனைச் சந்தித்ததாக (1 அரச.18:31-40) அரசராகமத்தில் வாசிக்கிறோம்.

- இத்தகைய பின்னணியில் புதிய ஏற்பாட்டிற்கு நாம் கடந்து வரும்போது இயேசு மலை மீது ஏறிப் போதித்தார் என்று வாசிக்கிறோம். இயேசுவின் உருமாற்ற நிகழ்ச்சியும் தபோர் மலையில் நடைபெறுகிறது. அதுமட்டுமல்ல தந்தையும் மகனும் கல்வாரி மலையில் சந்திக்கிறதை நாம் காண்கிறோம்.

இறைவன் மனிதர்களைச் சந்திக்கிறார் என்று சொல்லும் போது கண்ணுக்குத் தெரியும் வகையில் மனித உருவில் வந்து சந்திக்கிறார் என்று பொருள் அல்ல. தன் வார்த்தை வழியாகவோ இவரே என் அன்பார்ந்த மகன் (லூக் 9:35), இயற்கை அடையாளங்கள் வழியாகவோ, இயற்கையில் நடந்த மாற்றங்கள் (மத். 27:51, 52) வழியாகவோ, அல்லது நெருப்பு வடிவிலோ, மேகங்கள் வடிவிலோ இறைவன் மனிதர்களைச் சந்திக்கிறார். இத்தகையப் பின்னணியில் இன்றைய உருமாற்ற நிகழ்ச்சியை நாம் காண வேண்டும். செபிப்பதற்குத் தனிமையாக பேதுருவையும் யாக்கோபையும் யோவானையும் அழைத்துக் கொண்டு ஓர் உயர்ந்த மலைக்குச் சென்றார் இயேசு. அங்கே அவர்கள் முன் உருமாறினார். அவரது முகத்தோற்றம் மாறியது. ஆடையும் வெண்மையாய் மின்னியது. இறைவனோடு இயேசுவும் இருக்கிறார் என்றும், இறைவனின் சித்தப்படி தன் பணியை ஆற்றுகிறார் என்பதையும் எலியாசும், மோயீசனும் தோன்றி உரையாடுவதும், இறைதந்தையின் 'இவரே என் அன்புக்குரிய மைந்தர். நான் தேர்ந்தெடுத்துக் கொண்டவர் இவரே. இவருக்குச் செவிசாயுங்கள்' (லூக். 9:35) என்ற குரலும் வெளிப்படுத்துகிறது.
இந்த நிகழ்ச்சிகள் புகட்டும் பாடம் என்ன? நமக்குத் தரும் செய்தி என்ன ?

1. நாம் கல்வாரி பலிக்கு வரும்போது இயேசுவைப் போல் நாம் மலையில் ஏறுவதை உணர வேண்டும். இந்த பலிபீடம் தபோர், கல்வாரியை உணர்த்துகிறது. நமது பலவீனங்கள், குறைகள், வாழ்க்கைப் போராட்டங்கள் அனைத்தையும் பீடத்திற்கு கொண்டு வருகின்றோம். இறைவன் தன் நிறை வளத்தையும், ஆற்றலையும், அமைதியையும் கொண்டு வந்து நம்மோடு பகிர்ந்துகொள்ளப் போகிறார். இந்த மேலான திருப்பலியில் நாம் பங்கெடுக்கும் இந்த வேளையில் தந்தைக்கும் இயேசுவுக்கும் நடந்தது போல் நமது சந்திப்பு இங்கே நிகழ வேண்டும்.

2. இரண்டாவதாக, தபோர் மலையைப் போல் நம் உள்ளங்கள் விண்ணகத்தை நோக்கிய வண்ணமாக அமைய வேண்டும். மண்ணோடு மண்ணாக இருக்கிற குடிவெறி, பொறாமை, சாதிச்சண்டை, சச்சரவு போன்ற ஆசைகளை விட்டு விலகி உயர்ந்து நிற்க வேண்டும். 


 3.மூன்றாவதாக, இரவுக்குப் பின் பகல், அமாவாசைக்கு அடுத்து பௌர்ணமி, துன்பத்திற்குப் பின் இன்பம் என்பதைப்போல, பெரிய வெள்ளிக்குப் பின் உயிர்த்த ஞாயிறு வரும். இதேபோல் இயேசுவின் பாடுகள் அவரது மகிமைக்குத் தேவை. நமது மகிமையான வாழ்விற்குத் துன்பம் நாணயத்தின் ஒரு பக்கம் என்பதை மறக்கக் கூடாது என்பதை இன்று நமக்கு நினைவுபடுத்துகிறது.

4. நான்காவதாக இறையனுபவம் நமக்குக் கிடைத்தால் அதில் நாம் தரிசித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்ற ஆவல், ஆசை தானாகப் பிறக்கும். இதன் வெளிப்பாடாகத்தான் பேதுரு மூன்று கூடாரம் அமைப்பேன் என்கிறார். இது ஆன்மீக வெளிப்பாடு. இயேசுவின் உருமாற்ற நிகழ்ச்சியும் நமக்குத் தரும் ஆன்மீகம் இதுதான்.

ஆண்டவரின் இல்லத்தில் என் வாழ்நாள் எல்லாம் நான் குடி இருக்க வேண்டும் (திபா. 27:4).



இயேசுவுக்குச் செவிசாய்ப்போம்

 

இன்றைய நற்செய்தியில் விண்ணகத் தந்தை இயேசுவுக்கு செவிசாய்க்குமாறு கட்டளையிடுகின்றார். செவிசாய்த்தல் என்றால் இயேசு சொல்வதை முழு மனத்தோடும், முழு உள்ளத்தோடும் கேட்டல்.

இயேசு நமக்குச் சொல்லியுள்ளதையெல்லாம் கூட்டி, பெருக்கி, வகுத்து, கழித்துப் பார்த்தால், மிஞ்சுவது மூன்றெழுத்து. அந்த மூன்றெழுத்தின் பெயர் அன்பு.

அன்பு என்றால் என்ன? என்பதைச் சுட்டிக்காட்ட இதோ ஓர் உண்மை நிகழ்வு.
1852 - ஆம் வருடம் பிப்ரவரி மாதம் 27 - ஆம் தேதி நடந்த நிகழ்வு இது.

பிர்கெசன் ஹெட் என்ற கப்பல் கிழக்கு ஆப்பிரிக்காவின் பக்கத்திலுள்ள கடலில் பயணம் செய்துகொண்டிருந்தது. அந்தக் கப்பலில் 643 பிரயாணிகள் பயணம் செய்தார்கள். அந்தப் பயணிகளில் 21 பெண்கள், 31 குழந்தைகள் இருந்தார்கள்.
ஒரு நாள் காலைப் பொழுது! யாரும் எதிர்பாராத ஒன்று நடந்தது ! கப்பல் தடுமாறியது! கப்பலின் கீழ்ப்பகுதி எப்படியோ உடைந்து தண்ணீர் கப்பலுக்குள் புகத் தொடங்கியது.
கப்பல் பணியாளர்களும், அக்கப்பலில் பயணம் செய்த போர் வீரர்களும் கப்பலைக் காப்பாற்றப் போராடினர். அப்போது

கப்பலில் பயணம் செய்த ஆண்கள் சிறு பிள்ளைகளையும், பெண்களையும் உயிர் காக்கும் படகுகளில் ஏற்றினர். குழந்தைகளும் பெண்களும் ஏறிச்செல்லும் அளவுக்குத்தான் படகுகளில் இடமிருந்தது.

குழந்தைகளையும், பெண்களையும் ஏற்றிக்கொண்டு படகுகள் நகர்ந்தன! அப்போது கப்பலின் ஒரு பகுதி தண்ணீருக்குள் மூழ்கியது.
கப்பலில் இருந்த அத்தனை பேரும் திமிங்கலங்களுக்கு இரையாகப் போகின்றார்கள் என்பது நன்றாகத் தெரியும். இருந்தாலும் அவர்கள் முகத்திலே ஒரு தெய்வீகப் புன்னகை.

643 பேரில் 52 பேர் மட்டும் காப்பாற்றப்பட்டார்கள்! மற்ற அனைவரும் தண்ணீருக்குள் மூழ்கி இறந்தார்கள்.
தண்ணீருக்குள் மூழ்கி இறந்தவர்கள் கொண்டிருந்த மன நிலைக்குப் பெயர்தான் அன்பு!
அன்பு என்பது ஒரு மீட்புச் செயல்.

மற்றவர்களுக்காக நமது உயிரைக் கொடுக்கும் அளவுக்கு நமது அன்பு உயர்ந்து நிற்கவேண்டும்.

அன்பு செய்தால் என்ன கிடைக்கும்?

அன்பு செய்தால் நமது ஆசைகளைக் கடவுள் நிறைவேற்றி வைப்பார் (முதல் வாசகம்) ; அன்பு செய்தால் நமது தாய் நாடாகிய (இரண்டாம் வாசகம்) விண்ணகத்தில் நமக்கு இடம் கிடைக்கும் (மத் 25:31-40).

மேலும் அறிவோம் :
அன்பிலார் எல்லாம் தமக்குரியர்; அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு (குறள் : 72).

பொருள் : அன்பு இல்லாதவர் எல்லாப் பொருள்களையும் தமக்கே உரிமை பாராட்டுவர். அன்பு உள்ளம் கொண்டவர் தம் உடல் பொருள் ஆவி அனைத்தையும் பிறர்க்கு வழங்குவர்.




உருமாற்றத் திருக்காட்சி - 3


 பால் நிறைந்த சாடிக்குள் இரண்டு தவளைகள் விழுந்து விட்டன. ஒரு தவளை கொஞ்ச நேர முயற்சிக்குப் பின் 'இனி வாழ்வில்லை, வெளியேற வழியில்லை' என நம்பிக்கை இழந்தது. அப்படியே பாலில் மூழ்கிச் செத்தது!
இன்னொன்று நம்பிக்கை இழக்கவில்லை. எப்படியாவது கரையேறிவிடலாம், விடுதலை பெறலாம் என விடாமுயற்சியோடு பாலில் நீந்திக் கொண்டே இருந்தது. நேரம் ஆக ஆகக் காலில் ஏதோ தட்டுப்படவே அங்கே தயிர்க்கட்டி (வெண்ணெய்) ஒன்று மிதந்து கொண்டிருப்பதைக் கண்டது. நீண்ட நேரம் நீந்தியதால், பால் கடையப்பட்டு வெண்ணெயாகத் திரண்டது. இப்போது அதன்மேல் எறிக் காலை ஊன்றி எளிதாகத் துள்ளி வெளியேறியது தவளை!

நம்பிக்கை இழந்ததால் ஒரு தவளை மடிந்தது; நம்பிக்கையோடு இருந்ததால் ஒரு தவளை வாழ்வு கண்டது! உயிர்ப்பின் மகிமை பற்றிய நம்பிக்கை உலக வாழ்வின் சோர்வை அகற்றும்.

தவளைக்குக் கூட ஏதோ ஒரு நம்பிக்கை இருந்தது. ஆனால் வாழ்வு பற்றிய தெளிவான பார்வை இல்லை.

இயேசு மறுஉருவானார். அவர் இறந்து உயிர்த்தபின் பெறப் போகும் மகிமையின் முன் சுவை அந்தத் தோற்ற மாற்றம்!

இயேசு இன்று வாழ்ந்தால் அவரை நாம் மெசியாவாக இனம் கண்டு கொள்வோமா? மாட்டோம். அவ்வளவு சாதாரண வாழ்க்கை அவருடையது. இஸ்ரயேல் மக்களின் எதிர்பார்ப்புக்கு மாறாக ஏமாற்றம் தரும் சாமான்ய வாழ்க்கை அது. அந்த வாழ்க்கையில் இயேசு சந்தித்த சோதனைகளில் மிகப்பெரிய சோதனை எது தெரியுமா? கடவுளின் அரசை நிறுவ வந்த தனக்குச் சிலுவைச்சாவு தான் முடிவா? கடவுளின் அன்பைப் போதிக்க வந்த தனக்குக் கல்வாரி மரணம்தான் பரிசா?

கடவுளின் பராமரிப்பை உணர்த்தச் செயல்பட்ட தனக்குப் பாடுகளின் ITதைதான் இறுதியா? மனிதனின் பாவத்தையெல்லாம் தன்மேல் ஏற்று | மன்னிப்பும் விடுதலையும் வாழ்வும் அருளும் அளிக்க வந்த தனக்கு செம்மறி போலச் சிலுவை மரணத்தை ஏற்பதைத் தவிர வேறு வழி இல்லையா?

இதுதான் இயேசுவின் பிரச்சனை, போராட்டம்! இயேசு நாற்றுக்கு நூறு கடவுள். எனினும் நூற்றுக்கு நூறு மனிதன். எனவே சோதனையில் அவருக்கு ஒரு நம்பிக்கையும் ஊக்கமும் வேண்டும். தெளிவும் தெம்பும் வேண்டும். அதற்குத்தான் உருமாற்றம்.

"அவர் சீடருக்குத் தம் மரணத்தை முன்னறிவித்து புனித மலையில் தமது மாட்சிமையை வெளிப்படுத்தினார். சட்டமும் இறைவாக்கினரும் சான்று பகரப் பாடுகளின் வழியாகவே அவர் உயிர்ப்பின் மகிமையை அடைய வேண்டும் என்பதை விளங்கச் செய்தார்" உருமாறிய நிகழ்வின் உட்பொருள் உணர்த்தும் திருப்பலியின் தொடக்கவுரை இது.

மறைநூல் சுட்டிக்காட்டும் மெசியா துன்புறும் இறை ஊழியனே! மறைநூல் என்பது சட்டம், இறைவாக்குக்களின் தொகுப்பாகும் சட்டத்தின் பிரதிநிதி மோசே. இறைவாக்கினரின் பிரதிநிதி எலியா. அந்த இருவரில் சட்டமும் இறைவாக்கும் சான்று பகர "துன்புறும் மெசியாவே தன் அன்பு மகன்” என்று வானகத் தந்தையும் சான்று பகர்கிறார்.

நமக்குத் துன்பமே இறுதியல்ல. மரணமே முடிவல்ல. பாடுகளின் வழியாகவே உயிர்ப்பின் மகிமை. ஆனால் துன்பம் இல்லாத இன்பம், உழைப்பு இல்லாத ஊதியம், தியாகம் இல்லாத செழுமை, சிலுவை இல்லாத மகிமை... இதுவே மனித இன ஏக்கம்! இத்தகைய சிலுவைக்கு எதிரிகளாய் உள்ளவர்களை, புழுதியில் இறங்காமல் அறுவடை தேடுபவர்களை "அழிவே அவர்கள் முடிவு வயிறே அவர்கள் தெய்வம். மானக்கேடே அவர்கள் பெருமை" (பிலிப்.3:19) என்று சரமாரியாகச் சாடுகிறார் திருத்தூதர் பவுல். அவர்கள் எண்ணுவதெல்லாம் மண்ணுலகைச் சார்ந்தவை பற்றியே. ஆனால் துன்பங்களை ஏற்று, மீட்பரை எதிர்பார்த்து துணிவுடன் வாழ்ந்தால், அவர் தமது ஆற்றலால் தாழ்வுக்குரிய நம் உடலை மாட்சிக்குரிய தமது உடலின் சாயலாக உருமாற்ற வல்லவர்” (பிலிப்.3:21)  

கோதுமை மணி மண்ணில் விழுந்து மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும் (யோ. 12:24) அதுபோல் கிறிஸ்து எப்போது மகிமை பெறுகின்றார்? ''உயர்த்தப்படும் போது " (யோ. 12:32) இங்கே கிறிஸ்துவின் மரணமே அவரது மகிமையாய் மாறுகின்றது. உலகத்தின் கண்களுக்கு அது தோல்வி. ஆனால் இறைவனின் திட்டத்தில் அதுவே மகிமை. ''மாட்சிப்படுத்தினேன். மீண்டும் மாட்சிப்படுத்துவேன்" வானிலிருந்து வந்து இயேசுவை திடப்படுத்திய தந்தையின் குரல்.

இந்த நியதி கிறிஸ்துவுக்கு மட்டுமல்ல திருச்சபைக்கும் பொருந்தும். எங்கெல்லாம் அது துன்புற்றதோ அங்கெல்லாம் துடிப்போடு அது வளர்ந்தது. மறை சாட்சியரின் இரத்தம் நம்பிக்கையின் வித்து' என்பதே வரலாறு.

இதயமற்ற நீரோ மன்னன் இரக்கமற்றுக் கிறிஸ்தவர்களை வதைத்துக் கொண்டிருந்தான். விசுவாசத்தை வெளிப்படையாக மறுக்க மறுத்தவர்களை வெட்டிக் கொன்றான். இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில் கூட மனந்தளராது செபத்தில் நிலைத்து, வரவிருக்கும் வாழ்வின் பொருட்டு பெறப் போகும் மாட்சிமையை நினைத்து இயேசுவின் சாட்சிகளாகத் திகழ்ந்தனர். திருத்தொண்டர் லாரன்ஸ் கொதிக்கும் வாணலிலே வாட்டப்பட இருப்பதாக அச்சுறுத்தினார்கள். ஆனால் அவர் "நான் பெறப் போகும் அளவற்ற மகிமையைக் குறித்து இந்தத் துன்பச் சாவைப் பெருமையோடு ஏற்றுக் கொள்கிறேன்" என்று வீர முழக்கமிட்டாராம்.

"இக்காலத்தில் நாம் படும் துன்பங்கள் எதிர்காலத்தில் நமக்காக வெளிப்படப் போகிற மாட்சியோடு ஒப்பிடத் தகுதியற்றவை'' (ரோமை.8:18) என்ற திருத்தூர் பவுலின் எண்ணம் நம் உணர்வுகளாட்டும்!




ஒரு சிறுவன் தன் அம்மாவிடம், "அம்மா! நீ ரொம்ப அழகாய் இருக்கிற” என்றதற்கு அம்மா அவனிடம், “கோபுரம் பூசு மஞ்சள் தூளின் மகிமைதான் கண்ணா !" என்றார்.

ஒரு கணவர் தமது மனைவியிடம், "உன் நகையெல்லாம் படு ஜோர்" என்றதற்கு அவர் கணவரிடம், “அத்தனையும் கல்யாணி கவரிங் நகை" என்றார்.

ஒரு வீட்டில் நான்கு பெண் பிள்ளைகளின் தாய் இறந்துவிட்டார். அவரின் மூன்று மகள்கள், "அம்மா! போயிட்டீயே" என்று அழுதனர். ஒரு மகள் மட்டும், "தாயே! போயிட்டீயே" என்று அழுதாள். ஏனெனில் அவள் சிறிது நேரத்திற்கு முன்பு தான் 'லிப்ஸ்டிக்" உதட்டில் பூசியிருந்தாள், அது இன்னும் காயவில்லை. அம்மா என்றால் உதடுகள் ஒட்டிக் கொள்கின்றன. எனவே 'தாயே' என்று அழுதாள்!


பெண்கள் ஒப்பனை மூலம் உருமாற்றம் அடைய விரும்புகின்றனர். நாடுகளோ, "உலகமயமாக்குதல்" மூலம் பொருளாதாரத்தில் உருமாற்றம் அடைய விரும்புகின்றன. ஆனால், இயேசு கிறிஸ்துவோ பாடுகளின் மூலம் உருமாற்றம் அடையவேண்டும் என்று இன்றைய நற்செய்தியில் கோடிட்டுக் காட்டுகிறார்.

கிறிஸ்து மலைமீது தோற்றம் மாறிய நிகழ்வின் உட்பொருளை இன்றைய திருப்பலியின் தொடக்கவுரை பின்வருமாறு கூறுகிறது: "கிறிஸ்து சீடருக்குத் தம் மரணத்தை முன்னறிவித்து, புனித மலையில் தமது மாட்சிமையை வெளிப்படுத்தினார். சட்டமும் இறைவாக்கினரும் சான்று பகர்ந்தவாறு, பாடுகளின் வழியாகவே தாம் உயிர்ப்பின் மகிமையை அடைய வேண்டும் என்பதை விளங்கச் செய்தார்",

கிறிஸ்து தமது பாடுகளை முதன் முறையாக முன் அறிவித்த போது (லூக் 9:22), சீடர்களுக்கு அதைப்புரிந்து கொள்ளவோ, ஏற்றுக்கொள்ளவோ தேவையான மனப்பக்குவம் இல்லை. எனவேதான் பேதுரு. “ஆண்டவரே, இது (சிலுவைச்சாவு) வேண்டாம். இப்படி உமக்கு நடக்கக்கூடாது" (மத் 16:22) என்று கூறித் தமது எதிர்ப்பைத் தெரிவித்தார்.

சிலுவையினால் சீடர்களின் மனதில் எழுந்த இடறலை நீக்க கிறிஸ்து உயர்ந்த மலையில் தமது மூன்று சீடர்கள் முன் தமது மாட்சிமையை வெளிப்படுத்தினார். இந்த மூன்று சீடர்கள் தான் (பேதுரு, யோவான், யாக்கோபு) கிறிஸ்து பூங்காவனத்தில் இரத்த வியர்வை வேர்க்கும் காட்சியைக் காண இருப்பவர்கள் (மத் 26:37).

பழைய ஏற்பாடு, சட்டம் மற்றும் இறைவாக்கு என்ற இரு பகுதிகளைக் கொண்டது. இயேசு தோற்ற மாற்றம் அடைந்தபோது, சட்டத்தின் பிரதிநிதியாக மோசேவும், இறைவாக்கினரின் பிரதிநிதியாக எலியாவும் இயேசுவுடன் தோன்றுகின்றனர். இவர்கள் இருவரும் கிறிஸ்து எருசலேமில் சந்திக்கவிருக்கிற அவருடைய சிலுவைச் vாவைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தனர் என்று லூக்கா குறிப்பிடுகிறார் (லூக் 9:31). மோசே, எலியா ஆகிய இருவர் மூலமாகச் சட்டமும் இறைவாக்கும் இயேசுவுக்குச் சான்று பகர்கின்றன. அத்துடன், "இவரே என் அன்பு மைந்தர். நான் தேர்ந்து கொண்டவர் இவரே" (லூக் 9:35) என்று விண்ணகத் தந்தையும் இயேசுவுக்குச் சான்று பகர்கிறார்.


சிலுவைச் சாவு வேண்டாம் என்று கூறிய பேதுரு கிறிஸ்துவின் மாட்சிமையைக் கண்டு, "ஆண்டவரே நாம் இங்கேயே இருப்பது நல்லது” (லூக் 9:33) என்றார். வேண்டாம் வேண்டாம், சிலுவை வேண்டாம். வேண்டும்; வேண்டும், மகிமை வேண்டும். இது தான் பேதுருவின் விருப்பம்: அதுவே நமது விருப்பமும் கூட, ஆனால் சிலுவை வாயிலாகவே நாம் மகிமையடைய வேண்டும் என்பது கடவுளின் விருப்பம், அவரது திட்டம்.

| சிலுவையான து. புதுமைகளை விரும்பும் யூதர்களுக்கு ஒரு தடைக்கல்; ஞானத்தைத் தேடும் கிரேக்கர்களுக்கு ஒரு மடமை, ஆனால் கடவுளால் அழைக்கப்பட்டவர்களுக்குச் சிலுவை கடவுளின் வல்லமை; கடவுளின் ஞானம் (1 கொரி 1:22-24).


பள்ளிக்குச் சென்ற ஒரு சிறுவனிடம், "உனக்குப் பள்ளிக்குச் செல்லுவது பிடிக்கிறதா?" என்று கேட்டதற்கு அவன், "பள்ளிக்குச் செல்லுவதும் பிடிக்கிறது: பள்ளியிலிருந்து வீடு திரும்புவதும் பிடிக்கிறது. ஆனால் இந்த இரண்டிற்கும் இடையே நடப்பவைதான் ( வகுப்புகள்) பிடிப்பதில்லை " என்றான். அவ்வாறே. நமக்குக் கிறிஸ்துவின் பிறப்பும் பிடிக்கிறது: அபேருடைய உயிர்ப்பும் பிடிக்கிறது. ஆனால் இவை இரண்டிற்கும் இடையே நிகழ்ந்த அவரின் சிலுவைச் சாவு பிடிக்கவில்லை .

கிறிஸ்துவின் பள்ளியிலே சிலுவைப் பாடம் விருப்பப்பாடமல்ல: மாறாக, அது கட்டாயப் பாடம். “என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து தம் சிலுவையைத் தூக்கிக் கொண்டு என்னைப் பின்பற்றட்டும்” (மத் 16:24). நாம் ஒன்றை இழந்தால்தான் மற்றொன்றைப் பெறமுடியும். இதுதான் இயற்கையின் நியதி. கோதுமைமணி மண்ணில் விழுந்து மடிந்தால்தான் அது பலன் தர முடியும் (யோவா 12:24), பெண் ஒருவர் பேறுகால வேதனை அடைந்தால் மட்டுமே குழந்தைப் பேற்றை அடைய முடியும் (யோவா 16:21). - 


இன்றைய முதல் வாசகத்தில், ஆபிரகாம் தமது ஊரையும் உடைமைகளையும், உற்றாரையும், உறவினரையும் இழந்தார். எனவே தான் அவர் புதிய நாட்டைப் பெற்றார். பல இனத்தவருக்குத் தந்தையானார். ஆபிரகாம் "தாம் எங்கே போக வேண்டும் என்று தெரியாதிருந்தும் அவர் புறப்பட்டுச் சென்றார் " (எபி 11:8). எனவேதான் அவர் விசுவாசத்தின் தந்தையாக உருமாற்றம் அடைந்தார், மரியன்னை தமது சுயவிருப்பத்தை இழந்து, கடவுளின் விருப்பத்துக்குத் தம்மைக் கையளித்த தால்தான் அவர் மீட்பரின் தாயாக உருமாற்றம் அடைந்தார்.

நாம் இறந்து மண்ணில் புதைக்கப்பட்டால்தான் வேற்றுருப் பெற்று உயிர்த்தெழ முடியும். இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல் கூறுகிறார்: கிறிஸ்துவின் இரண்டாம் வருகையின் போது. அவர் தமது ஆற்றலால் தாழ்வுக்குரிய நம் உடலை மாட்சிக்குரிய தமது உடலின் சாயலாக உருமாற்றுவார் (பிலி 3:20-21).

தவக்காலத்தில் சிலுவைப் பாதையைச் செய்கின்றவர்களாக மட்டும் இராது, அன்றாட வாழ்க்கைச் சிலுவையைச் சுமப்பவர்களாகவும் இருப்போம். காட்டு மரங்கள் மனிதர்களிடம் கூறுவது: "நாங்கள் சிலுவை மரங்களைக் கொடுக்கத் தயார். ஆனால் சிலுவை மரத்தில் அறையப்படுவதற்குத்தான் எந்த மனிதரும் முன் வருவதில்லை "

"கிறிஸ்து இயேசுவுக்கு உரியவர்கள் தங்கள் ஊனியல்பை அதன் இழிவுணர்ச்சிகளோடும் இச்சைகளோடும் சேர்த்துச் சிலுவையில் அறைந்துவிட்டார்கள்” (கலா 5:24).




உறுதியற்ற நிலையை எதிர்கொள்ளல்

'மாற்றம் ஒன்றே மாறாதது' என்பது எப்படி உண்மையோ, அதுபோலவே, மனித வாழ்வில் 'உறுதியற்ற நிலையே உறுதியானது' என்பதும் உண்மையே. ஒன்றும் ஒன்றும் இரண்டு என்பது போலவும், இரண்டு சதவிகித ஹைட்ரஜனும் ஒரு சதவிகித ஆக்ஸிஜனும் இணைந்தால் தண்ணீர் என்பது போலவும் உள்ள கணித மற்றும் வேதியியல் வாய்ப்பாடுகளின் உறுதித்தன்மையைப் போல வாழ்வியல் எதார்த்தங்கள் இருப்பதில்லை. 

நன்றாக உழைக்கிறோம். நேர்மையாக இருக்கிறோம். ஆனால், வாழ்வில் முன்னேற்றம் இல்லை. எடுத்த காரியம் நிறைவேறுவது இல்லை. தினமும் ஆலயம் செல்கிறோம். நற்செயல்கள் செய்யத் தயாராக இருக்கிறோம். ஆனால் எதிர்பாராத ஆபத்துக்கள் வந்தே தீருகின்றன. நம் குழந்தை நன்றாகப் படிக்கிறார். ஆனால், படிப்பிற்கேற்ற பலன் இல்லை. நம் மகன் நன்றாக வேலை செய்கிறார். ஆனால், வேலையில் அவருக்கு உயர்வே இல்லை. இம்மாதிரியான நேரங்களில், 'நாம் ஒன்று நினைக்கத் தெய்வம் ஒன்றும் நினைக்கும்' என்று சொல்லி நம்மையே தேற்றிக்கொண்டாலும், வாழ்வின் உறுதியற்ற தருணங்கள் நம் வாழ்வில் நமக்கு அச்சத்தையும், ஏக்கத்தையும் கொடுத்துக்கொண்டே இருக்கின்றன.நாம் எப்போதும் சறுக்கலான மணலில் நடப்பதுபோலுவே உணர்கிறோம். உறுதியற்ற நிலையில் நம்மை வருத்தும் இன்னொரு பிரச்சினை குழப்பம். குறிப்பாக, தெரிவு செய்வதில் குழப்பம். நன்மையைத் தெரிந்துகொள்வதா? தீமையைத் தெரிந்துகொள்வதா? என்ற குழப்பத்தைவிட, இரண்டு நன்மைகளுக்குள் ஒரு நன்மையைத் தெரிவு செய்வதுதான் பெரிய குழப்பமாக இருக்கிறது. நம் குழப்பத்திற்கும் உறுதியற்ற நிலைகளுக்கும் விவிலியத்தில் விடை தேடினால், சில நேரங்களில் குழப்பமும் உறுதியற்ற நிலைதான் இன்னும் அதிகமாகிறது. 'நீ நல்லது செய்தால் உயர்வடைவாய் அல்லவா?' (தொநூ 4:7) என்று நம்மை நல்லது செய்யத் தூண்டும் விவிலியம், 'நல்லவர்களுக்கும் கெட்டவர்களுக்கும் ஒன்றுபோலவே நேரிடும்' (சஉ 9:2) என்று சொல்லி, 'அப்படி என்றால் கெட்டவராய் இருந்தால் என்ன?' என்று நம்மை நம் மதிப்பீடுகளோடு சமரசம் செய்துகொள்ளவும் தூண்டும்போது, நம் உறுதியற்ற நிலையும் குழப்பமும் இன்னும் அதிகமாகிறது.

உறுதியற்ற நிலையை எதிர்கொள்ள முடியுமா? எதிர்கொள்ள வேண்டுமா? அதை எப்படி எதிர்கொள்வது?

தங்கள் வாழ்வில் தாங்கள் சந்தித்த உறதியற்ற நிலைகளை ஆபிரகாம், பிலிப்பு நகரத் திருச்சபையினர், மற்றும் திருத்தூதர்கள் எப்படி எதிர்கொண்டார்கள் என்பதைத்தான் இன்றைய இறைவாக்கு வழிபாடு நமக்குக் காட்டுகிறது.

இன்றைய முதல் வாசகத்தில் (காண். தொநூ 15:1-4), 'உன்னை பெரிய இனமாக மாற்றுவேன்' என்று ஆபிராமுக்கு ('ஆபிரகாம்' என்ற பெயர் மாற்றம் அடைவது 17:5ல்தான்) வாக்குறுதி கொடுக்கும் கடவுள் அவருக்குத் தோன்றுவதைப் பார்க்கிறோம். 'உன்னை நான் பெரிய இனமாக்குவேன். உனக்கு ஆசி வழங்குவேன். உன் பெயரை நான் சிறப்புறச் செய்வேன்' என்று (12:1) வாக்குறுதி கொடுத்துத் தன்னைத் தன் 'ஊரிலிருந்து' புறப்படச் செய்த இறைவன் இவ்வளவு நாள்கள் ஆகியும் ஒன்றும் செய்யாமல் இருக்கிறாரே என்று தன் உள்ளத்தில் குழப்பமும் ஐயமும் கொள்ள ஆரம்பிக்கின்றார் ஆபிராம். இந்த நேரத்தில் ஆண்டவர் ஆபிராமை வெளியே (அவரின் கூடாரத்திற்கு வெளியேயும், அவரின் மனத்திற்கு வெளியேயும்) அழைத்து, 'வானத்தை நிமிர்ந்து பார். முடியுமானால், விண்மீன்களை எண்ணிப்பார். இவற்றைப் போலவே உன் வழிமரபினரும் இருப்பர்' என்கிறார். 'ஆபிராம் ஆண்டவர்மீது நம்பிக்கை கொண்டார். அதை ஆண்டவர் அவருக்கு நீதியாகக் கருதினார்' என உடனே பதிவு செய்கிறார் ஆசிரியர். 'நீதி' என்பதற்கு 'மற்றவரோடு சரியான உறவில் இருப்பது' என்று பொருள். ஆக, ஆபிராம் கடவுளோடு கொள்ளும் சரியான உறவு நம்பிக்கையில் கட்டப்படுகிறது.

தொடர்ந்து, ஆண்டவர், 'இந்நாட்டை உனக்கு உரிமைச்சொத்தாக அழிக்க உன்னைக் கல்தேயரின் ஊர் என்ற நகரிலிருந்து இங்கு அழைத்து வந்த ஆண்டவர் நானே' என்கிறார். இது முந்தைய வாக்குறுதியைவிட இன்னும் அதிகம் உறுதியற்றது. நம்ம ஊர் பேருந்து நிலையத்திற்கு வெளியே சிறிய குடிசை போட்டு அமர்ந்து ஊசி பாசி பிண்ணிக் கொண்டிருக்கும் ஒரு நரிக்குறவரிடம் கடவுள், 'உனக்கு அமெரிக்க ஐக்கிய நாடுகளை உரிமைச் சொத்தாகத் தருவேன்' என்று சொன்னால் அவர் எப்படி அதிர்ச்சி அடைந்து புன்னகை பூப்பாரோ அப்படித்தான் நகைக்கின்றார் ஆபிராம். ஏனெனில், கல்தேயரின் ஊர் என்றழைக்கப்படும் கானான் அன்று ஒரு பெரிய கனவு நாடாக இருந்தது. அதன் வளமும், பலமும் பலரின் கண்களை அந்நாட்டை நோக்கித் திருப்பியது. தான் ஒரு சாதாரண நாடோடி என்பதை அறிந்திருந்த ஆபிராம், இந்த வாக்குறுதியின் உறுதித்தன்மையை அறிந்துகொள்ளும் பொருட்டு, 'என் தலைவராகிய ஆண்டவரே, இதை நான் உரிமையாக்கிக் கொள்வேன் என்பதை எப்படித் தெரிந்துகொள்வேன்?' எனக் கேட்கின்றார். உடனே ஆண்டவர் ஆபிராமுடன் உடன்படிக்கை செய்துகொள்ள முன்வருகின்றார். உடன்படிக்கை என்பது ஒரு எழுத்துப் பத்திரம் போன்ற ஆவணம். இதில் உடன்படிக்கை செய்துகொள்ளும் இரு நபர்களின் உரிமைகளும் கடமைகளும் எழுதப்பட்டிருக்கும். மேலும், இது எழுதப்பட்டவுடன் அதன் வெளி அடையாளமாக பலி ஒன்று ஒப்புக்கொடுக்கப்படும். எபிரேயத்தில், 'உடன்படிக்கை செய்தல்' என்பதை 'உடன்படிக்கையை வெட்டுதல்' என்று சொல்கின்றனர். அதாவது, உடன்படிக்கையின்போது பலிப் பொருள்கள் வெட்டப்படும். வெட்டப்பட்ட பலிப்பொருள்களுக்கு நடுவே உடன்படிக்கை செய்யும் இருவரும் நடந்து செல்ல வேண்டும். 'நான் உடன்படிக்கையை மீறினால் நானும் இப்படி வெட்டப்படுவேன்' என்று இருவரும் உணர்ந்துகொள்வதற்காகவே (காண். எரே 34:18) அவர்கள் இப்படி நடுவே நடப்பது வழக்கம். முதல் வாசகத்தில் கடவுளே உடன்படிக்கை செய்துகொள்ள முதலில் முன்வருகின்றார். மேலும், கடவுள் மட்டுமே தீச்சட்டி மற்றும் தீப்பந்தம் வடிவில் அந்தப் பலி கூறுகளுக்கிடையே நடக்கின்றார். இவ்வாறாக, கடவுள் தன்னை நிபந்தனையற்ற நிலையில் ஆபிராமோடு தன்னை இணைத்துக்கொள்கின்றார். மேலும், தான் கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேறும் என்ற உறுதியையும் கடவுள் ஆபிராமுக்குத் தருகின்றார். காணக்கூடிய அடையாளத்தின் வாயிலாக ஆபிராமின் உறதியற்ற நிலையையும் குழப்பத்தையும் நீக்குகின்றார் கடவுள்.

ஆக, கடவுள் தனக்கு மொழிந்த குழந்தைப் பேறு மற்றும் வாக்களிக்கபட்ட நாடு என்னும் வாக்குறுதிகள் பற்றி உறுதியற்ற நிலையில் இருந்த ஆபிராம், கடவுளின் உடன்படிக்கைச் செயல்பாட்டால் தன் உறுதியற்ற நிலையை எதிர்கொண்டு, தன் நம்பிக்கையால் வெற்றியும் காண்கிறார்.

இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். பிலி 3:17-4:1), பவுல், பிலிப்பு நகரத் திருஅவையில் விளங்கிய போலிப் போதனையை எதிர்கொள்கின்றார். பிலிப்பியில் பவுல் நற்செய்தி அறிவித்தபின், சில போலிப் போதர்கள் - யூதம் தழுவியோர் - எழுந்து மாற்று நற்செய்தி ஒன்றைப் போதிக்கின்றனர். மேலும், கிறிஸ்தவ நம்பிக்கையாளராக ஒருவர் மாறினாலும் யூதச் சட்டங்களையும், மரபுகளையும், முறைமைகளையும் பின்பற்ற வேண்டும் என்றும், அச்செயல்களாலேயே ஒருவர் கடவுளுக்கு ஏற்புடையவர் ஆகமுடியும் என்றும் போதிக்கின்றனர். இப்படியாக நம்பிக்கையாளர்கள் தங்களின் மீட்பு பற்றிய உறுதியற்ற நிலைக்கும் குழப்பத்திற்கும் தள்ளப்படுகின்றனர். இதைக் கேள்வியுறுகின்ற பவுல் போலிப் போதகர்கள்மேல் கோபம் கொண்டு வெகுண்டெழுகின்றார். அவர்களை, 'நாய்கள்' என்றும், 'கெட்ட ஊழியர்கள்' என்றும், 'உறுப்பு சிதைப்போர்' என்றும் சாடுகின்றார் (காண். பிலி 3:2). மேலும்,  இன்றைய வாசகத்தில் 'வயிறே அவர்கள் தெய்வம்' என்று சொல்லும் பவுல், அவர்கள் கொடுத்த உணவு சார்ந்த மரபு முறைமைகளைக் கடிந்துகொள்கின்றார். ஏனெனில், யூத மரபில் நிறைய உணவுசார்ந்த முறைமைகள் இருந்தன. மேலும், 'மானக்கேடே அவர்கள் பெருமை' என்று சொல்லும்போது, மற்றவர்கள் பார்வையில் அருவறுப்பாய் இருந்த விருத்தசேதனத்தை அவர்கள் தங்கள் பெருமையாகக் கருதியதைக் கடிந்துகொள்கின்றார். இறுதியாக, ஒட்டுமொத்தமாக, 'அவர்கள் எண்ணுவதெல்லாம் மண்ணுலகைச் சார்ந்தவை பற்றியே' என்கிறார். இவ்வாறாக, யூத போலிப் போதகர்கள் இவ்வுலக வாழ்விற்குத் தேவையான வாழ்வியல் முறைமைகளைப் பற்றிப் பேசுவதைச் சாடுகின்றார் பவுல். 

இந்தப் பின்புலத்தில் தன் போதனை பற்றிய சில தெளிவுகளை முன்வைக்கின்றார் பவுல். நற்செய்திக்கும் யூத முறைமைகளுக்கும் தொடர்பில்லை என்பதைச் சொல்கின்றார். ஏனெனில், கிறிஸ்தவ நம்பிக்கையாளர் பெறுகின்ற மீட்பு முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்ததே அன்றி செயல்கள் சார்ந்தது அல்ல என்கிறார். ஏனெனில், விருத்தசேதனம் போன்ற செயல்கள் வழியாகவும், உணவு மற்றும் உடலியல் முறைமைகளைப் பின்பற்றுவதால்தான் மீட்பு என்றால், இயேசுவின் சிலுவை மரணம் முழுமைற்றதாகப் போய்விடும். எனவே, போலிப் போதகர்களை, 'சிலுவைக்குப் பகைவர்களாய் நடப்போர்' என்றழைக்கும் பவுல், 'நீங்கள் அனைவரும் என்னைப் போல வாழுங்கள்' என்கிறார். அதாவது, 'சட்டம்தான் எல்லாம்' என்று நினைத்து சட்டத்திற்கு எதிராக இருந்த கிறிஸ்தவ நம்பிக்கையாளர்களைத் தண்டிக்கச் சென்ற நான், இப்போது மனமாற்றம் பெற்று இயேசுவை மட்டுமே பற்றிக்கொண்டிருக்கிறேன். ஆக, 'நீங்களும் என்னைப்போல இயேசுவை மட்டும் பற்றிக்கொள்ளுங்கள்' என்கிறார் பவுல். இந்த உலகு பற்றிக் கவலைப்பட்டுக் கொண்டிருந்தவர்களை விண்ணகம் நோக்கியும், இயேசுவின் மீட்புச் செயல் நோக்கியும் திருப்புகின்றார் இயேசு. 

ஆக, போலிப் போதகத்தால் உருக்குலைந்து உறுதியற்ற மற்றும் குழப்ப நிலையில் இருந்த பிலிப்பி நகர நம்பிக்கையாளர்களை, தன் போதனையாலும் முன்மாதிரியான வாழ்வாலும் உறுதியாக்குகின்ற பவுல், 'ஆண்டவரோடுள்ள உறவில் நிலைத்திருங்கள்' என அறிவுரை பகர்கின்றார்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். லூக் 9:28-36) இயேசுவின் உருமாற்ற நிகழ்வை வாசிக்கின்றோம். இயேசுவுக்கு மிக நெருக்கமான மூன்று திருத்தூதர்கள் - பேதுரு, யோவான், யாக்கோபு - இந்நிகழ்வில் இயேசுவுடன் உடனிருக்கின்றனர். மலையில் தோன்றிய மோசேயும், எலியாவும், உருமாறிய இயேசுவின் தோற்றமும் திருத்தூதர்களைக் குழப்பத்திற்குள் தள்ளுகின்றன. இந்தக் குழப்பத்தில்தான், 'ஆண்டவரே, நாம் இங்கேயே இருப்பது நல்லது. உமக்கு ஒன்றும் மோசேக்கு ஒன்றும் எலியாவுக்கு ஒன்றுமாக மூன்று கூடாரங்களை அமைப்போம்' என்கிறார் பேதுரு. இப்படிச் சொல்வதன் வழியாக, (அ) பேதுரு, இயேசுவை மோசேக்கும் எலியாவுக்கும் நிகராக்குகின்றார், (ஆ) பேதுரு 'ஆண்டவரே' என அழைத்து இயேசுவின் முக்கியத்துவத்தை அறிக்கையிடுகின்றார், மற்றும் (இ) மலையிலேயே நிரந்தரமான இடத்தைத் தெரிவு செய்ய நினைக்கின்றார். 

பேதுருவும் மற்ற இரு திருத்தூதர்களும் இயேசு யார் என்ற ஒரு குழப்பத்திலும் உறுதியற்ற நிலையிலும் இருக்கின்றனர். இந்நேரத்தில் அவர்களின் குழப்பத்தை நீக்கும் வண்ணம், மேகத்தினின்று, 'இவரே என் மைந்தர். நான் தேர்ந்துகொண்டவர் இவரே. இவருக்குச் செவிசாயுங்கள்' என்ற குரலொலி கேட்கின்றது. 'மைந்தர்' என்ற நிலையில் இயேசு, மோசே மற்றும் எலியாவைவிட மேன்மையானவராகின்றார். 'தேர்ந்தகொண்டவர்' என்ற நிலையில் அவர் மெசியாவாக இருக்கிறார். மேலும், இவருக்குச் செவிகொடுக்க திருத்தூதர்கள் அழைக்கப்படுகின்றனர். 

ஆக, கடவுளின் குரலும் அவரின் கட்டளையும் திருத்தூதர்களின் உள்ளத்திலிருந்த உறுதியற்ற நிலையையும், குழப்பத்தையும் அகற்றி உறுதி தருகின்றது. இயேசு யார்? என்பது பற்றிய உறுதியை திருத்தூதர்கள் பெற்றுக்கொள்கின்றனர். 

இவ்வாறாக, கடவுள் தேர்ந்துகொண்டவர்களும், கடவுளைத் தேர்ந்துகொண்டவர்களும் - ஆபிராம், பிலிப்பு நகர நம்பிக்கையாளர்கள், திருத்தூதர்கள் - உறதியற்ற நிலையையும், குழப்பத்தையும் எதிர்கொள்கின்றனர். எதிர்கொண்ட அவர்கள் கடவுளின் உடன்படிக்கையால், வாக்குறுதியால், போதனையால், கட்டளையால் உறுதியும் பெறுகின்றனர். இதையே இன்றைய திருப்பாடல் ஆசிரியரும் (காண். திபா 27), தன் உறுதியற்ற நிலையிலும், தன் குழப்பத்திலும், 'ஆண்டவரே என் ஒளி' என்று கண்டுகொள்கின்றார்.

கடந்த வாரம், நம் நம்பிக்கையை, நம் நம்பிக்கையால் அறிக்கை செய்தோம். நம் வாழ்வின் நம்பிக்கையில் உறுதியற்ற நிலை வரும்போது நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை இன்றைய இறைவாக்கு வழிபாட்டில் அறிகிறோம். இவ்வறிதல் நமக்குத் தரும் வாழ்வியல் சவால்கள் எவை?

1. நம்பிக்கை


'ஆபிராம் ஆண்டவர்மீது நம்பிக்கை கொண்டார்' என்ற சொல்கிறது இன்றைய முதல் வாசகம். 'நம்பிக்கை' என்பது ஐயமற்ற நிலை. உயரம் தாண்டும் விளையாட்டு வீரர் ஓடிக்கொண்டே இருக்கும்போது, தனக்கு முன் இருக்கும் அந்தக் குச்சியின் உயரத்தைத் தான் தாண்டிவிடுவேன் என்ற உறுதியில் ஐயமற்று இருக்க வேண்டும். 'தாண்டிவிடுவேனா?' என்ற ஐயம் சிறுதுளி வந்துவிட்டாலே அவரால் உயரே எழ முடியாமல் போய்விடலாம். தாமஸ் ஆல்வா எடிசன் அவர்களின் ஆய்வகம் ஒருமுறை தீப்பற்றி எரிந்துவிட, 'என் பிழைகள் எல்லாம் எரிந்துவிட்டன. என் நம்பிக்கை எரியவில்லை. மீண்டும் அனைத்தையும் எழுப்புவேன்' என்று சொல்லி அவர் மீண்டும் உருவாக்கிய ஆய்வகமே இன்று நாம் அனுபவிக்கும் பல கண்டுபிடிப்புக்களின் தளமாக மாறியது. 'அக்கா, ஒரு பென்சில் வாங்குங்க. அண்ணா, ஒரு பேனா வாங்குங்க!' என்று சொல்லி பேருந்தைச் சுற்றி சுற்றி வரும் சின்னக் குழந்தைகளின் கண்களில் இருந்து நம்பிக்கையை நாம் கற்றுக்கொள்ளலாம். 'இன்று மாலைக்குள் எல்லாப் பேனாக்களும், பென்சில்களும் விற்றுவிடும். நாம் மாலையில் நன்றாக உணவருந்தி உறங்கலாம்!' என்ற நம்பிக்கையே அவர்களை ஒவ்வொரு பேருந்திற்குள்ளும் ஏறி இறங்க அவர்களை உந்தித் தள்ளுகிறது. நம்பிக்கை என்ற அந்த நெருப்புத்துளி நம் உள்ளத்தில் இருக்கும்போது, ஒரு கதவு அடைக்கப்பட்டாலும், மறுகதவு நோக்கி நம் கால்கள் தாமாகவே நகர்ந்து செல்லும்.


2. உடனடி ரிசல்ட் வேண்டாம்


பிலிப்பி நகர மக்கள் தங்களின் மீட்புக்கு உடனே பரிசு கிடைக்க வேண்டும் என்று பொறுமையற்ற நிலையில் இருக்கின்றனர். பொறுமையற்ற நிலையில்தான் நாம் யார் சொன்னாலும் எதைச் சொன்னாலும் நம்ப ஆரம்பிப்போம். 'விண்ணகமே நம் தாய்நாடு', எனவே பொறுத்திருங்கள் என அறிவுரை பகர்கின்றார் பவுல். நம் வாழ்வில் உறுதியற்ற நிலையும் குழப்பமும் வரக் காரணம் நம்முடைய பொறுமையின்மையே. ஆக, அதைக் களைதல் அவசியம். 

3. சலனமற்ற மனம்


உருமாற்ற மலையில் சஞ்சலத்தோடு பேசிய திருத்தூதர்கள் மலைக்குக் கீழே வந்தவுடன் அமைதி காக்கின்றனர். சலனம் மறைந்து அமைதி பிறக்கும்போது வாழ்வில் பல தெளிவுகள் பிறக்கும். இந்த அமைதியில்தான் இயேசுவை யார் என்று அடையாளம் கண்டுகொள்கின்றனர். மீன் மார்க்கெட் மாதிரி சத்தம் போட்டுக் கொண்டே இருக்கும் நம் மனமும் நூலகம் போல அமைதியானால்தான் உறுதியற்ற நிலை மறையும். உறுதியற்ற நிலையிலும், குழப்பத்திலும் இருக்கும்போதும் கொஞ்சம் நம் பயணத்தை நிறுத்திவிட்டு அல்லது வேகம் குறைத்துவிட்டு, அமைதி காத்தல் நலம். மனத்தின் சலனம் அடங்கும் வரை காத்திருந்தால் நம் கண்களுக்குக் காட்சிகள் தெளிவாகும். நாம் என்ன பேசுகிறோம் என்பதும் நமக்குத் தெளிவாகும்.

இறுதியாக, நம் நம்பிக்கை வாழ்விலும், அன்றாட நல்வாழ்விலும் உறுதியற்ற நிலைகளும் குழப்பங்களும் தவிர்க்க முடியாதவை. ஆனால், நம்பிக்கை, பொறுமை, அமைதி நம் நம்பிக்கையையும், நல்வாழ்வையும் உறுதிப்படுத்தும் - இன்றும் என்றும்.


பாடுகளின் வழியாக பரலோகம்

உயிரியல் ஆசிரியர் ஒருவர் தன்னுடைய மாணவர்களுக்கு கம்பளிப்புழு எப்படி வண்ணத்துப்பூச்சியாக மாறுகிறது என்பது குறித்து செய்முறைப் பாடம் நடத்திக்கொண்டிருந்தார். அவர் தன்னுடைய மாணவர்களிடம் கம்பளிப்புழு கூட்டைச் சுட்டிக்காட்டி, “இன்னும் ஒருசில மணித்துளிகளில் இந்தக் கூட்டில் இருக்கக்கூடிய கம்பளிப்புழு வண்ணத்துப்பூச்சியாக மாறும், அது எப்படி மாறுகிறது என்பதை கவனித்துக் கொண்டிருங்கள்” என்று சொல்லிவிட்டு வெளியே சென்றுவிட்டார். மாணவர்கள் யாவரும் கம்பளிப்புழு கூட்டையே பொறுமையாக பார்த்துக்கொண்டிருந்தார்கள். அப்போது கூட்டில் இருந்த கம்பளிப்புழு கஷ்டப்பட்டு வெளியே வந்துகொண்டிருந்தது. அதைப் பார்த்து இரக்கப்பட்ட மாணவன் ஒருவன், கூட்டிலிருந்து அதனை  வெளியே எடுத்துவிட்டான். ஆனால் சிறுது நேரத்தில் வெளியே வந்த அந்த கம்பளிப்புழு இறந்துபோனது. மாணவன் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து நின்றான்.
 
இந்த நேரத்தில் வெளியே சென்ற ஆசிரியர் வகுப்புக்கு உள்ளே வந்தார். அவரிடத்தில் மாணவர்கள் அனைவரும் நடந்ததை எல்லாம் சொன்னார்கள். அதற்கு அவர், “அன்பு மாணவர்களே! கம்பளிப்புழு தன் கூட்டைவிட்டு வெளியேவரக் கஷ்டப்படுகிறது என்று நினைத்து நீங்கள் அதனை வெளியே எடுத்துவிட்டிருக்கிறீர்கள். ஆனால், உண்மையில் அந்த கம்பளிப்புழு கஷ்டப்பட்டு வெளியே வருகிறபோதுதான் அதனுடைய சிறகுகள் வலுபெறும். ஒரு முழு வண்ணத்துப்பூச்சியாக மாறும்” என்றார்.  தொடர்ந்து அவர் அவர்களிடம், “நமது வாழ்விலும் இப்படி கஷ்டங்களை, வலிகளை, துன்பங்களைத் தாங்கிக்கொண்டால்தான் உயர்ந்த லட்சியத்தை அடையமுடியும்” என்றார்.
 
நாம் சந்திக்கும் துன்பங்கள் நம்மைப் புடமிடுகின்றன; நமக்கு ஏற்படும் அவமானங்கள் நம்மைச் செதுக்குகின்றன. எப்படி உளியானது கல்லைச் செதுக்க அது சிற்பமாக மாறுகிறதோ அதுபோல” என்பார் எழுத்தாளர் வெ. இறையன்பு.
 
தவக்காலத்தின் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமையில் இருக்கும் நமக்கு இன்றைய நாள் வாசகங்கள் நமக்குத் தரும் சிந்தனை “பாடுகளின் வழியாகப் பரலோகம்” என்பதாகும்.  அதாவது சிலுவைச்சாவின் வழியேதான் நமக்கு மீட்பு உண்டு என்பதே இன்றைய வாசகங்களின் சாராம்சமாக இருக்கிறது. நற்செய்தி வாசகத்திலே ஆண்டவர் இயேசு உருமாற்றம் அடைகின்றார். அதில் மோசேயும், இறைவாக்கினர் எலியாவும் உடன் இருக்கிறார்கள். எருசலேமில் இயேசு மூப்பர்கள் மற்றும் மறைநூல் அறிஞர்கள் கையில் ஒப்புவிக்கப்பட்டு, கொலை செய்யப்படவும், மூன்றாம் நாளில் மாட்சியுடன் உயிர்த்தெழுவதன் முன் அடையாளமாக இந்த உருமாற்ற நிகழ்வு இருக்கிறது.
 
ஏற்கனவே சீடர்கள் இயேசு சிலுவைச்சாவைப் பற்றி மூன்றுமுறை முன்னறிவித்ததால் குழம்பிப்போய் இருந்தார்கள். இதனால் உருமாற்ற நிகழ்வு ஒருவிதத்தில் அவர்களையும் நம்பிக்கையில் உறுதிப்படுத்தியது என்றுகூடச் சொல்லலாம்.
 

இயேசுவின் சீடர்களைப் போன்றுதான் நாமும் பாடுகள், துன்பங்கள் இவையெல்லாம் எதற்கு என்று நினைக்கிறோம்; துன்பமில்லா இன்பமான வாழ்வு வாழ நினைக்கிறோம். ஆனால் ஆண்டவர் இயேசுவோ பாடுகளின் வழியேதான் நமக்கு மீட்பு என்பதை நற்செய்தியில் திரும்பத் திரும்ப வலியுறுத்துகிறார். யோவான் நற்செய்தி 12:24 ல் ஆண்டவர் இயேசு கூறுவார், “கோதுமை மணி மண்ணில் விழுந்து மடியாவிட்டால் அது அப்படியே இருக்கும். மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும்” என்று. ஆக கோதுமை மணியைப் போன்று நாமும் மடியவேண்டும், பாடுகளை அனுபவிக்கவேண்டும். அப்போதுதான் நாமும் இயேசுவின் மகிமையில் பங்குபெற முடியும்.
 

ஆனால் இன்றைக்கு நிலைமை முற்றிலும் வித்தியாசமாக இருக்கிறது. யாருக்கும் துன்பங்களை, சவால்களை எதிர்கொள்ள துணிவில்லை. எல்லாவற்றிலும் பாதுக்காப்பு தேடியே நமது வாழ்வானது ஓடிக்கொண்டிருக்கிறது. பாதுகாப்பான இடம், பாதுகாக்கப்பட்ட குடிநீர் என்று பழக்கப்பட்ட நமக்கு சாதாரண ஒரு பிரச்னையையும் எதிர்கொள்ள முடியவில்லை.

 
ஒருமுறை ஹங்கேரி நாட்டில் ஓர் ஆலயத்தில் பொது ஆராதனை நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது திடிரென்று துப்பாக்கி ஏந்திய தீவிரவாதிகள் சிலர் ஆலயத்திற்குள் நுழைந்தார்கள். இதைப் பார்த்த மக்கள் அனைவரும் (குருவானவர் உட்பட) எங்கே தங்களுடைய உயிருக்கு ஆபத்து வந்துவிடுமோ  என்று பதறியடித்துகொண்டு ஓடினார்கள். 
ஆனால் அந்த கூட்டத்தில் இருந்த ஒரே ஒரு தாத்தா, பாட்டி மட்டும் ஆலயத்தைவிட்டு நகராமல் அப்படியே இருந்தார்கள். “எல்லாரும் அலறியடித்துக் கொண்டு ஓடும்போது, நீங்கள் மட்டும் ஏன் இந்த ஆலயத்திலேயே இருக்கிறீர்கள்? உங்களுக்கு உயிர்மேல் பயமில்லையா? என்று அந்த முகமூடி அணிந்த தீவிரவாதிகள் அவர்களிடம் கேட்டார்கள். அதற்கு அவர்கள், “எங்கள் உயிரைப் பற்றி எங்களுக்குக் கவலையில்லை. நாங்கள் செத்தாலும் இந்த ஆலயத்திலே சாகிறோம்” என்றார்கள். இதைக்கேட்டு வியந்த அந்த தீவிரவாதிகள் அவர்களிடம், “நாங்கள் தீவிரவாதிகள் அல்ல, மாறாக யாராரெல்லாம் கிறிஸ்துவுக்காக எதையும் இழக்கத் துணிந்தவர்கள் என்பதைச் சோதித்துப் பார்க்க வந்த இயேசுவின் உண்மையான ஊழியர்கள்” என்றார்கள்.
  இயேசுவுக்காக எதையும், ஏன் தங்களுடைய உயிரையும் இழக்கத் துணியும் இயேசுவின் உண்மையான சீடர்கள்  குறைந்து போய்விட்டார்கள் என்பதை இந்த நிகழ்வானது நமக்கு எடுத்துக்காட்டுகிறது. 
இந்த பின்னணியில்தான் நாம் இயேசுவின் உருமாற்றத்தையும், அது உணர்த்தும் ‘பாடுகளின் வழியே மீட்பு உண்டு’ என்று உண்மையையும் புரிந்துகொள்ள வேண்டும். இயேசு சாவைத் துணிவுடன் ஏற்றுக்கொண்டார். தன்னைப் பின்தொடர்ந்து வரும் சீடர்களும் சிலுவையை தூக்கிக்கொண்டு வரவேண்டும் என்கிறார்.
 
பிலிப்பியருக்கு எழுத்தப்பட்ட திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய இரண்டாம் வாசகத்தில் பவுலடியார் கூறுவார், “கிறிஸ்துவின் சிலுவைக்குப் பகைவர்களாய் நடப்போர் பலர் உள்ளனர்” என்று. ஆம், துன்பமில்லா, இன்பமான வாழ்வு வாழ நினைக்கும் ஒவ்வொருவரும்; பிறர்நலத்தை நாடாமல், தன்னலச் சேற்றில் மூழ்கிக் கிடக்கும் ஒவ்வொருவரும்; இந்த மண்ணுலகு சார்ந்தவை பற்றியே எண்ணுபவர்கள் யாவருமே இயேசுவின் சிலுவைக்கு பகைவர்கள்தான். ஏனெனில் சிலுவை மண்ணுலகு சார்ந்தவற்றை அல்ல விண்ணுலகு சார்ந்த காரியங்களையே நமக்கு நினைவூட்டுகிறது.

 
ஆகவே இயேசுவின் சீடர்களாக இருக்கும் நாம் ஒவ்வொருவரும் சிலுவை, பாடுகள், துன்பம் இவையெல்லாவற்றையும் ஒதுக்கித்தள்ளாமல், அவற்றைத் துணிவுடன் ஏற்றுக்கொண்டு, இயேசுவின் வழியில் நடக்க முயலுவோம்.
 
அடுத்ததாக நாம் இயேசுவின் பாடுகளின் வழியில் நடப்பதோடு மட்டுமல்லாமல், அவரோடு நல்லுறவு ஏற்படுத்திக்கொள்ள முன்வரவேண்டும். இரண்டாம் வாசகத்தில் பவுலடியார் கூறுகிறார், “ஆண்டவரோடு உள்ள உறவில் நிலைத்திருக்கள்” என்று. இந்த தவக்காலத்திலே ஆண்டவருக்கும், நமக்கும் உள்ள உறவில் நிலைத்திருப்பது மிகவும் சாலச் சிறந்த ஒன்றாகும். ஏனென்றால் நமது வாழ்க்கை வேலை, படிப்பு, உழைப்பு என்று சுழன்றுகொண்டிருக்கிறது. இதனால் கடவுளோடு உள்ள உறவில் தொய்வு ஏற்பட்டு, நமது வாழ்வே எந்திரத்தனமானதாக மாறிப்போய்விடுகிறது. இந்த சூழ்நிலையில்தான் நாம் இறைவனோடு உள்ள உறவில் வளர்வது மிகவும் தேவையானதாக இருக்கிறது.
 
சில ஆண்டுகளுக்கு முன்பாக ஒருவன் பொதுத்தொலைபேசி நிலையத்திற்குச் சென்று, வெளியூரில் இருக்கும் தன்னுடைய நெருங்கிய உறவினருக்கு தொலைபேசி வழியாகப் பேசினான். ஆனால் மறுமுனையிலிருந்து சத்தம் கேட்காததால் கொஞ்சம் சத்தமாகப் பேசினான். அப்போதும் அவனுக்கு மறுமுனையில் இருப்பவர் பேசும் சத்தம் கேட்கவில்லை. இதனால் அவன் இன்னும் அதிக சத்தமாகப் பேசினான்.
 
அதற்குள் பொதுத் தொலைபேசி நிலையத்தைச் சுற்றி பெருங்கூட்டமே கூடிவிட்டது. அவன் எதற்கு இவ்வளவு மக்கள் கூடியிருக்கிறார்கள் என்று புரியாமல் விழித்தான். அதன் பின்னர்தான் உண்மையை உணர்ந்தான் தான் தொலைபேசியை மாற்றி வைத்துப் பேசிக்கொண்டிருக்கிறோம் என்று. 
மனிதர்களோடு உள்ள தொடர்பு சரியில்லாதபோதே மிகப்பெரிய குழப்பம் ஏற்படுகிறது என்று சொன்னால், கடவுளுக்கும், மனிதருக்கும் இடையே உள்ள உறவு சரியில்லாதபோது அது மிகப்பெரிய குழப்பத்திற்கும், ஆபத்துக்கும்தான் நம்மை இட்டுச் செல்லும். அதனால்தான் பவுலடியார், “ஆண்டவரோடு உள்ள உறவில் நிலைத்திருங்கள்” என்கிறார்.

 
இப்படி ஆண்டவரோடு உள்ள உறவில் நிலைத்திருந்ததற்கு நமக்கு மிகப்பெரிய உதாரணமாக இருப்பவர் முதல் வாசகத்தில் நாம் படிக்கக்கேட்கும் நமது முதுபெரும் தந்தை ஆபிரகாம். அவர் கடவுளின் வார்த்தைக்கு கீழ்படிந்து நடந்தார்; அவர்மீது ஆழமான நம்பிக்கை கொண்டு வாழ்ந்தார். அதனால்தான் கடவுள் ஆபிரகாமின் நம்பிக்கையைப் பார்த்து, “உன் மரபை வானத்து விண்மீன்களைப் போலவும், கடற்கரை மணலைப் போலவும் பெருகச் செய்வேன்” என்கிறார். 
எனவே இந்த தவக்காலத்தில் ஆபிரகாம் எப்படி ஆண்டவரோடு உள்ள உறவில் நிலைத்திருந்தாரோ அதுபோன்று நாமும் நமது நம்பிக்கையால், கீழ்படிதலுள்ள வாழ்வால் நல்லுறவில் நிலைத்திருப்போம். அத்தோடு இயேசுவைப் போன்று நமது வாழ்வில் வரும் துன்பங்களை, பாடுகளை துணிவுடன் ஏற்றுக்கொள்வோம். அதன் வழியாக இறையருளை நிறைவாய் பெறுவோம்.
 
“இதோ என் எதிரிலுள்ள கம்பத்தில் என்னைத் தூக்கிலிட்டாலும் சரி, துப்பாக்கியால் என்னைச் சுட்டாலும் சரி, நான் என் கொள்கைகளை எவருக்கும் விட்டுக்கொடுக்க மாட்டேன் - புரட்சியாளர் சேகுவேரா.