Wednesday 29 August 2018

ஆண்டின் பொதுக்காலம் 22-ஆம் ஞாயிறு


ஆண்டின் பொதுக்காலம் 22-ஆம் ஞாயிறு


இணைச்சட்டம் 4:1-2, 6-8
யாக்கேபு 1:17-18, 21ஆ-22,27;
மாற்கு 7:1-8, 14-15, 21-23



அன்பே அடித்தளம்
தொடக்கம்


சில வாரங்களாகச் செய்தித் தாள்களிலும், தொலைக் காட்சியிலும் தொடர்ந்து வரும் செய்தி, பெப்சி, கொக்கோ கோலா போன்ற பானங்கள் பற்றியது. இதில் கான்சர் (புற்று நோயை) உண்டாக்கும் நச்சுத் தன்மையுள்ளது என்பதை சோதனையில் கண்டு பிடித்துவிட்டோம் என்பது.

கட்சி வேறுபாடு இன்றி, ஆளும் கட்சியும் சரி, எதிர்க்கட்சியும் சரி பாராளுமன்றத்தில் பெரிய அமளி ஏற்படுத்தியது. அதன் வளாகத்தில் அப்பானங்கள் கொண்டு வரத் தடைசெய்யப்பட்டன. தெருக்களில் ஆர்ப்பாட்டம், கூடி நின்று பெப்சி, கொக்க கோலா பாட்டில்களை உடைத்து தரையிலே கொட்டிய காட்சி . கடைகளிலே, அலுவலகங்களிலே, வீட்டிலே பேச்சு. நாடே விழித்துக் கொண்டது போல ஒரு காட்சி! இது பாராட்டத்தக்க செயல்தான்!
ஆனால் பெப்சி, கொக்கோ கோலாவை விட அதிக நச்சுத் தன்மை உள்ள காரியங்கள் அறுபத்து மூன்று ஆண்டுகளாகச் சுதந்திர இந்தியாவில் மலிந்து கிடக்கின்றனவே! அதைப்பற்றி யாருக்கும் கவலை உண்டா? அக்கறையுண்டா?

மருத்துவத் துறையிலே போலித்தனம், கல்வித் துறையிலே வியாபாரம், காவல் துறையிலே காம வெறியர்கள். லஞ்சம் என துறைக்குத் துறை நிறைந்து கொண்டிருக்கும் நாசகார நச்சுக் கிருமிகள் எத்தனை எத்தனை? ஏராளம்? ஏராளம்?
இது மட்டுமா? தூங்கிக் கிடக்கும் நல்ல சமுதாயத் திட்டங்கள், சாதி, மத, மொழிப் பிளவுகளால் மனித நேயத்தைப் பிளக்கும் தீயச் சக்திகள். சிறையுள்ளே இருக்க வேண்டியவர் செல்வாக்கோடு வெளியே உலவி வரும் தீயவர்கள், லஞ்சக் கடலிலே மூழ்கிக் கிடக்கும் அரசியல்வாதிகள், சமயவாதிகள், அரசு ஊழியர்கள் எனப் பல நச்சுத் தன்மையுடைய நாசக் கிருமிகள் இந்த நாட்டிலே நிறைந்து கிடக்கின்றனரே? இதுதான் வெளிவேடம்! பரிசேயத் தன்மை! கொக்கோ கோலா, பெப்சி தயாரிக்க அமெரிக்காவிலிருந்தா தண்ணீர் கொண்டு வந்தார்கள்? நம் ஊர் தண்ணீர்தானே! அது மாசுபட்டுள்ளதே! நஞ்சடைந்துள்ளதே ! சாக்கடையோடு கலந்து வருகிறதல்லவா! இதைப்பற்றி யாருக்காவது அக்கறை, கவலை உண்டா?

சமீபத்தில் இந்து பத்திரிக்கையில் ஒரு கார்ட்டூன் வரையப்பட்டு இருந்தது. பிரதமர் வாஜ்பாய்க்குப் பல முகங்கள் உண்டு என்று காட்டும் விதத்தில் கற்பனையோடு வரையப்பட்ட கார்ட்டூன் அது. ஆனால் சிந்தித்துப் பார்த்தால் இதே போன்று பல முகங்கள் கொண்டவர்களாகப் பரிசேயத் தன்மையோடு நாம் வாழ்கிறோம் என்பது அப்பட்டமான உண்மை!

பகுதி - II
இயேசுவின் வாழ்க்கையில் ஒரு நிகழ்ச்சி. அன்றைய மக்கள் தலைவர்கள் எனப்படும் பரிசேயர், மறைநூல் அறிஞர் இயேசுவிடம் வந்து முறையிடுகிறார்கள்.

உம் சீடர்கள் மூதாதையர் மரபுகளைப் பின்பற்றுவது இல்லையே. தீட்டான கைகளால் உணவு அருந்துகிறார்கள் (மாற்கு 7:5) என்றார்கள். இயேசு இதற்குத் தெளிவாகப் பதில் கொடுக்கிறார்.

எது அவசியமோ அதை விட்டு விட்டு உப்பு சப்பு இல்லாத மரபுகளைக் கடைப்பிடித்துக் கொள்கிறீர்கள்.
இந்த மக்களோ உதட்டினால் என்னைப் போற்றுகின்றனர். இவர்கள் உள்ளமோ என்னை விட்டு வெகு தொலையில் இருக்கிறது. ஏனெனில் கடவுளின் கட்டளைகளான நீதி, நேர்மை, நியாயம், உண்மை , நன்மை, அன்பு இவைகளைப் பின்பற்றாமல் போலித்தனமான மரபுகளுக்கு அல்லவா நீங்கள் அடிமையாகக் கிடக்கிறீர்கள் (மாற் 7:6-7) என்பதை அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறார்.

ஓர் ஆளைப்பற்றி இரண்டே வரிகளில் சுருக்கமாக எழுது என்றால் அவ்வளவு எளிதல்ல! ஆனால் விவிலியத்தை முழுதும் இரண்டே வரிகளில் எழுது என்றால் அது இயலுமா? ஆம் நிச்சயமாக இயலும். இதைத்தான் உன் கடவுளாகிய ஆண்டவரை முழு உள்ளத்தோடு அன்பு செய். உன்னைப்போல உன் அயலானையும் அன்பு செய் (இணை . சட். 6: மத். 2:37-39) என்று இயேசு சொன்னார். திருச்சட்டமும், இறைவாக்கும் இவ்விரு கட்டளை களுக்கு அடிப்படை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். பரிசேயர்கள், கைகளையும், கால்களையும் பாத்திரங்களையும் கழுவும் புறத்தூய்மையில் கண்ணும் கருத்துமாய் இருந்தனர். ஆனால் அகத் தூய்மையை மறந்தனர். எனவேதான் இன்று இயேசு பரிசேயர்களின் வெளி வேடத்தைக் கண்டிக்கிறார். எந்த அளவுக்கு என்றால் கொசுவை வடிகட்டி ஒட்டகத்தை விழுங்கும், வெள்ளை யடிக்கப்பட்ட கல்லறைகள் (மத். 23:24, 27) என்றும் சாடினார்.

கதை

தோட்டக்காரர் அழகான பூச்செடிகளின் விதைகளை 40 தொட்டிகளில் விதைத்து வேலைக்காரனைக் கூப்பிட்டுத் தண்ணீர் ஊற்றும்படி சொல்லி ஒரு மாதம் வெளியூர் சென்றார். திரும்பி வந்தபோது வெண்டைச் செடிகள் முளைத்திருந்தன. எங்கே பூச்செடி எனக் கேட்டபோது, தண்ணீர் ஊற்றினேன், முளைக்கவில்லை. எனவே வெண்டை விதைத்தேன். முளைத்தன விரைவில். அதன் பிறகுதான் வேறு விதைகள் முளைத்தன. அவைகளைக் களைகள் என்று நினைத்து பிடுங்கி எறிந்து விட்டேன் என்றான் கூலியாள்.

இதேபோலத்தான் பரிசேயர்கள் நிலை. கடவுள் கட்டளையைக் காற்றில் பறக்கவிட்டு, மனித மரபுகளைக் கட்டிக் காத்தார்கள். எனவே இயேசு சொன்னார், "நீங்கள் கடவுள் கட்டளையைக் கைவிட்டுவிட்டு மனித மரபுகளைப் பின்பற்றி வருகிறீர்கள்" (மாற் 7:8).

முடிவுரை
மதம் மக்களைப் பாவி, தூயவன், தீண்டதக்கவன், தீண்டத் தகாதவன் என்ற பிரிவினைக்கு ஆளாக்காமல், மனிதர்களை ஒருங்கிணைக்க வேண்டும். இறையனுபவத்திற்கு இட்டுச் செல்ல வேண்டும். மனிதனின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கும், சமூக மாற்றத்திற்கும் இட்டுச் செல்ல வேண்டும். இதற்கு நம் ஆண்டவர் இயேசு நமக்கு வழிகாட்டியாக உள்ளார். புனித பவுல் அடிகளார் பிலிப்பியருக்கு எழுதிய திருமடலில் கூறுவதுபோல நாமும் கிறிஸ்துவின் மனநிலையைக் கொண்டிருப்போம் (பிலி. 2:5).



உதவிக்கு ஆற்றல் உண்டு
 இறைவனுக்கு ஏற்புடையவர்கள் யார்? என்பதற்கு இன்றைய நற்செய்தி பதில் கூறுகின்றது. கடவுள் அகத்தில் அழகுள்ளவர்களையே அதிகம் அன்பு செய்கின்றார் என்பதை சுட்டிக்காட்ட இதோ மீட்பின் வரலாற்றில் நடந்த நிகழ்வு ஒன்று.

1 சாமு 16:1-13 முடிய உள்ள பகுதி!

கடவுள் தமக்குக் கீழ்ப்படியாத சவுல் அரசனுக்குப் பதிலாக, இஸ்ரயேல் நாட்டுக்கு வேறோர் அரசனைத் தேர்ந்தெடுக்க விரும்பினார். ஆகவே கடவுள் சாமுவேல் என்னும் இறைவாக்கினரை அழைத்து, பெத்லகேமைச் சார்ந்த ஈசாயிடம் உன்னை அனுப்புகின்றேன்; ஏனெனில் அவன் புதல்வருள் ஒருவனை அரசனாகத் தேர்ந்துள்ளேன் (1 சாமு 16:1) என்றார்.

ஈசாய் முதல் மகனை சாமுவேல் முன்னால் நிறுத்தினார். சாமுவேல் கடவுளைப் பார்த்து. இவனைத் திருப்பொழிவு செய்யலாமா? என்றார். கடவுளோ சாமுவேலிடம், அவன் தோற்றத்தையும், உயரத்தையும் பார்க்காதே;ஏனெனில் நான் அவனைப் புறக்கணித்துவிட்டேன். மனிதர் பார்ப்பதுபோல் நான் பார்ப்பதில்லை ; மனிதர் முகத்தைப் பார்க்கின்றனர்; ஆண்டவரோ அகத்தைப் பார்க்கின்றார் (1 சாமு 16:7) என்று கூறிவிட்டார்.

ஈசாய் ஏழு குழந்தைகளை சாமுவேல் முன் நிறுத்தினார். கடவுள் அந்த ஏழு குழந்தைகளையும் தேர்ந்தெடுக்கவில்லை! பிறகு சாமுவேல் ஈசாயிடம், உன் பிள்ளைகள் இத்தனை பேர்தானா? (1 சாமு 16:11) என்று கேட்க, ஈசாய் ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்த தாவீது என்னும் சிறுவனை அழைத்துவரச் சொல்கின்றார். தாவீதின் உள்ளம் தூய்மையாக இருந்ததால் அவனைத் திருப்பொழிவு செய்யுமாறு சாமுவேலுக்கு கடவுள் ஆணையிடுகின்றார். திருப்பொழிவு செய்யப்பட்ட நாளிலிருந்து ஆண்டவரின் ஆவி தாவீதின் மேல் நிறைவாக இருந்தது (1 சாமு 16:13).

கடவுள் தந்த கட்டளைகளை (முதல் வாசகம்) புறத்தில் பின்பற்றினால் போதும் என இஸ்ரயேலர் நினைத்தபோது, இயேசுவோ கடவுளின் கட்டளைகளைப் புறத்தில் கடைப்பிடித்தால் மட்டும் போதாது, அகத்திலும் அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்; உடல் தூய்மையாக இருந்தால் மட்டும் போதாது, உள்ளத்தையும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்பதை இன்றைய நற்செய்தியின் வழியாக அவர்களுக்குச் சுட்டிக் காட்டினார்.

நமது மனம் தூய்மையாக இருந்தால்தான் கடவுளின் ஆசி கிடைக்கும்! ஓர் ஊரிலே பெரிய பணக்காரன் இருந்தான். அவன் இல்லை என்று சொல்பவர்களுக்கு இல்லை என்று சொல்வதில்லை! ஒருநாள் ஏழை ஒருவர் அவரிடம் சென்று சாப்பாடு கேட்டார். பணக்காரர் கையில் சோறு இருந்தது! ஆனால் பிச்சைக் கேட்டவரின் பாத்திரத்தில் உணவைப் போட தயங்கினார். காரணம் பிச்சைக் கேட்டவர் பாத்திரத்தில் தூசிபடிந்து அது அசுத்தமாக இருந்தது. உன் பாத்திரத்தை சுத்தமாக்கு; சோறு போடுகின்றேன் என்றார் பணக்காரர். பிச்சைக் கேட்டவர் பாத்திரத்தை சுத்தம் செய்தார். அவருக்கு உணவு கிடைத்தது. இந்தக் கதையில் வந்த பணக்காரரைப் போன்றவர் கடவுள்.
இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் யாக்கோபு, நமது உள்ளத்தையும் மனத்தையும் தூய்மைப்படுத்தக்கூடிய ஆற்றல், துன்புறும் அனாதைகளுக்கும், கைம்பெண்களுக்கும் நாம் செய்யும் உதவிகளுக்கு உண்டு என்கின்றார்.

மேலும் அறிவோம் :
ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்ல(து)
ஊதியம் இல்லை உயிர்க்கு (குறள் : 231). 


பொருள் : வறியவராகிய ஏழைக்கு உணவு முதலானவற்றை வழங்குவதால் புகழ் பெருகும். அத்தகைய புகழாகிய பயன்தரும் ஆக்கத்தைத்தவிர, வாழும் மாந்தர்க்கு எழுச்சி தருவது வேறு எதுவும் இல்லை .




"இரண்டாவது குலோத்துங்க சோழனைப் பற்றி இரண்டே வரிகளில் எழுதுக" என்ற கேள்விக்கு, ஒரு மாணவன், "இரண்டாம் குலோத்துங்க சோழன் முதலாம் குலோத்துங்க சோழனுக்கு பின்னால் இருந்தவன்; மூன்றாம் குலோத்துங்க சோழனுக்கு முன்னால் இருந்தவன்' என்று எழுதியிருந்தான். அவனுடைய அபார மூளையை அருங்காட்சியத்தில் வைக்க வேண்டும்!

ஓர் ஆளைப்பற்றி அல்லது ஒரு பொருளைப் பற்றி இரண்டே வரிகளில் சுருக்கமாக எழுதுவது என்பது அவ்வளவு எளிதன்று. அப்படியிருக்க விவிலியத்தை முழுவதும் இரண்டே வரிகளில் எழுதுக என்றால், அது இயலுமா? இயலும் என்று இயேசு கிறிஸ்து கூறியுள்ளார், அந்த இரண்டு வரிகள்: "கடவுளை உன் முழு உள்ளத்தோடு அன்பு செய், உன்னைப்போலவே உன் அயலானையும் அன்பு செய்" (மத் 22:37-39), திருச்சட்டங்களுக்கும் இறைவாக்குகளுக்கும் இவ்விரு கட்டளைகளே அடிப்படை என்று இயேசு கிறிஸ்து சுட்டிக்காட்டியுள்ளார். இன்றைய முதல் வாசகத்தில் கடவுள் மோரே வழியாக இஸ்ரயேல் மக்களுக்குக் கூறுவது: “கடவுளுடைய கட்டளைகளைக் கூட்டாமல் குறைக்காமல் நீங்கள் கடைப்பிடித்தல், நீங்கள் கடவுளுக்கு நெருக்கமானவர்களும் பிரியமானவர்களுமா மிருப்பீர்கள்".


கடவுளுடைய கட்டளைகளை, குறிப்பாகப் பத்துக் கட்டளைகளைக் கடைப்பிடித்து. கடவுளுக்கும் மனிதருக்கும், மனிதருக்கும் மனிதருக்கும் இடையே உள்ள உறவைச் சீர்படுத்தி, செம்மைப்படுத்தி, புனிதப்படுத்தி கடவுளை மகிமைப்படுத்துவதற்குப் பதிலாக, பரிசேயர்கள் கைகளையும் கால்களையும், கிரகணங்களையும் தட்டுகளையும் கழுவித் தங்களைத் தூய்மைப்படுத்துவதில் கண்ணும் கருத்துமாயிருந்தினர். புறத்தூய்மைக்கு முக்கியத்துவம் கொடுத்து, அகத்தூய்மையில் கோட்டை விட்டனர். கொசுவை வடிகட்டி ஒட்டகத்தை விழுங்கினர். எனவே, இன்றைய நற்செய்தியில் கிறிஸ்து பரிசேயர்களின் வெளிவேடத்தைக் கண்டித்து அகத்தூய்மையை வலியுறுத்துகிறார், வெளியிலிருந்து உள்ளே செல்வது மனிதனை மாசுபடுத்துவதில்லை, மாறாக மனிதருடைய உள்ளத்திலிருந்து வெளியே வருபவை. அதாவது கொலை, களவு, பாத்தமை, காமவெறி ஆகியவை (பத்துக் கட்டளைகளுக்கு எதிரானவை) மனிதனை மாசுபடுத்துகின்றன என்கிறார் இயேசு.

அறன் என்பது அகத்தூய்மையே; மற்றனைத்தும் பகட்டுத் தன்மையைக் கொண்டுள்ளன என்கிறார் வள்ளுவர்.

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்து
அறன்: ஆகுல நீர பிற (குறள் 34 )

நெஞ்சத்தைக் கோவிலாக்கி, நினைவை மலராக்கி அன்பை மஞ்சன நீராக்கி, கடவுளுக்கு வழிபாடு செய்கிறார் தாயுமானவர்,

*நெஞ்சகமே கோவில் நினைவே சுகந்தம் அன்பே மஞ்சன நீர் பூசை கொள்ள வா ராய் பராபரமே",

ஒரு ஞாயிற்றுக்கிழமை, இரண்டு நண்பர்களில் ஒருவன் தன் அம்மாவுக்குப் பயந்து கொண்டு ஞாயிறு திருப்பலிக்குச் சென்றான். மற்றவன் புத்தம் புதிய திரைப்படத்திற்குச் சென்றான். மறுநாள் இருவருமே ஒரு விபத்தில் இறந்தனர். திரைப்படத்திற்குச் சென்றவனுக்கு விண்ணகமும் கோவிலுக்குச் சென்றவனுக்கு நரகமும் கிடைத்தது. ஏன்? திரைப்படத்திற்குச் சென்றவன் திரை அரங்கில் இருந்தாலும் அவனுடைய எண்ணம் ஆலயத்தில் இருந்தது. மாறாக, ஆலயத்திற்குச் சென்றவனுடைய எண்ணமெல்லாம் திரை அரங்கில் இருந்தது. நாம் எங்கே இருக்கிறோம் என்பதைவிட, நம் உள்ளம் எங்கே இருக்கிறது என்பதுதான் முக்கியம். 'நீ எங்கே என் நினைவுகள் அங்கே!'.
உதட்டளவில் கடவுளைப் புகழ்ந்து, உள்ளத்தளவில் கடவுளுக்கு அந்நியமாக வாழ்ந்த பரிசேயர்களை, இறைவாக்கினர் எசாயாவை மேற்கோள் காட்டி கடிந்துரைக்கிறார் இயேசு கிறிஸ்து. "இம்மக்கள் உதட்டினால் என்னைப் போற்றுகின்றனர். இவர்கள் உள்ளமோ என்னைவிட்டு வெகு தொலைவில் இருக்கிறது" (மாற் 7:6).

தோட்டக்கலையில் ஆர்வம் கொண்ட ஒருவர் நாற்பது தொட்டிகளில் அபூர்வரக விதைகளை நட்டு. தனது வேலைக்காரனைக் கூப்பிட்டு, தான் வெளியூர் சென்று பத்து நாள்கள் கழித்துத் திரும்புவதாகவும் அதுவரை பூத்தொட்டிகளில் தண்ணீர் ஊாற்றும்படியாகவும் கூறி வெளியூர் சென்றார். பத்து நாள்கள் கழித்து அவர் திரும்பி வந்தபோது பூத்தொட்டிகளில் வெண்டை விதைகள் முளைத்திருப்பதைக் கண்டு, அதிர்ச்சியுற்று வேலைக்காரனிடம் விளக்கம் கேட்டார். வேலைக்காரன் அவரிடம், "முதலாளி! ஐந்து நாள்கள் நான் பூத்தொட்டிகளில் தண்ணீர் மாற்றியும் ஒன்றும் முளைக்கவில்லை. எனவே வெண்டை விதைகளை ஊன்றி தண்ணீர் விட்டேன்; அவை விரைவாக முளைத்துவிட்டன. அதன் பிறகு வேறு விதைகள் முளைத்தன; அவைகளைக் களையென்று நினைத்து பிடுங்கி எறிந்து விட்டேன்" என்றான்.

அவ்வேலைக்காரன் முதலாளி நட்ட பூ விதைகளையெல்லாம் பிடுங்கி எறிந்துவிட்டு, தான் நட்ட வெண்டை விதைகளை வளர்த்தான். அவ்வாறே பரிசேயர்களும் கடவுளுடைய கட்டளைகளைக் காற்றில் பறக்க விட்டு, மனித மரபுகளைக் கட்டிக் காத்தார்கள், இதைத்தான் இன்றைய நற்செய்தியில் இயேசு அவர்களுக்குச் சுட்டிக் காட்டுகிறார், "நீங்கள் கடவுளின் கட்டளைகளைக் கைவிட்டு மனித மரபைப் பின்பற்றி வருபவர்கள் (மாற் 7:8).
இறையன்பு பிறரன்பில் வெளிப்பட வேண்டும், இன்றைய இரண்டாம் வாசகத்தில் உண்மையான சமயம் என்ன என்பதைப் புனித யாக்கோபு விளக்குகின்றார். தூய்மையான, மாசற்ற சமய வாழ்வு என்பது அனாதைகளையும் கைம்பெண்களையும் கவனிப்பதாகும் (யாக் 1:27). "ஏழை விதவைகளையும் அனாதைகளையும் ஆதரிக்காத எந்த மதத்தையும் நான் நம்பத் தயாராக இல்லை” என்கிறார் சுவாமி விவேகானந்தர். பரிசேயர்கள் கிண்ணத்தையும் தட்டையும் வெளிப்புறத்தில் தூய்மைப்படுத்தினர். அதற்குப் பதிலாக, கிண்ணத்திற்குள்ளே உள்ளதை. அதாவது உணவை ஏழைகளுக்குத் தர்மமாகக் கொடுத்தால் உள்ளும் புறமும் அனைத்துமே தூய்மையாகும் என்கிறார் இயேசு கிறிஸ்து (லூக் 11:41).

எனவே, இறையன்பையும் பிறரன்பையும் வளர்க்கவே சமயங்கள் உள்ளன. இவை இரண்டையும் வளர்க்காத சமயங்களின் கோட்பாடுகளும், வழிபாட்டு முறைகளும் சாரமற்ற சக்கைகள்! சமுதாயத்தின் சாபக்கேடுகள்! இறைவனைக் குழிதோண்டி புதைக்கும் சவக் குழிகள்!!!




கிறிஸ்தவ அடையாளம்

இன்று நாம் ஐக்கன்-சூழ் உலகில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்: 'G' என்றால் 'கூகுள்,' 'f' என்றால் 'ஃபேஸ்புக்,' 't' என்றால் 'டுவிட்டர்,' 'O' என்றால் 'ஓலா,' 'ஹார்ட்' என்றால் 'ஹெல்த்.' நம்முடைய செயலிகள் வெறும் எழுத்துக்களாகவும், நம்முடைய வார்த்தைகள் வெறும் ஸ்மைலிகளாகவும் மாறிக்கொண்டிருக்கின்றன. 2009ஆம் ஆண்டு - மேற்காணும் ஐக்கன்கள் பிரபலமாகாத நேரம் - உலகெங்கும் ஒரு சர்வே எடுக்கப்பட்டது. அதில், 'சிலுவை' (+), 'எம்' (M) என இரண்டு அடையாளங்கள் முன்னிறுத்தப்பட்டு, வாக்காளர்கள் ஓட்டுப் பதிவு செய்ய அழைக்கப்பட்டனர். அதாவது, இந்த இரண்டு அடையாளங்களில் தங்களுக்கு பரிச்சயமான அடையாளத்திற்கு அவர்கள் 'டிக்' செய்ய வேண்டும். 'சிலுவை' அடையாளத்தை விட உலகெங்கும் உள்ள பலர், 'மெக்டொனால்டை' குறிக்கும் 'எம்' அடையாளத்தையே 'டிக்' செய்திருந்தனர்.

இந்த அடையாளங்கள் வெறும் அடையாளங்கள் அல்ல. இவை ஒவ்வொன்றும் கலாச்சாரக் குறியீடுகள். எப்படி? மெக்டொனால்ட் உணவகத்திற்கு உணவருந்தச் சென்றிருக்கிறீர்களா? மெக்டொனால்ட் உணவகத்திற்கு உணவருந்தச் செல்பவர் நேரே 'ஆர்டர்' கவுண்டருக்குச் செல்ல வேண்டும். அங்கிருக்கும் 'டிஸ்ப்ளே' அல்லது 'மெனு கார்டில்' நமக்கு வேண்டியதை தேர்ந்தெடுக்க வேண்டும். பில்லுக்கு பணம் கட்ட வேண்டும். அதே நேரம் நம் முன்னால் சிகப்பு கலரில் செவ்வக டிரே ஒன்று வைக்கப்படும். நாம் ஆர்டர் செய்த அனைத்தும் ஒவ்வொன்றாக அதில் வைக்கப்படும். நம் ஆர்டர் நிறைவேறும் வரை அடுத்தவர் ஆர்டர் கொடுக்க முடியாது. எல்லாம் வைத்தவுடன் பில் போட்டவர் அந்த தட்டை நம் கையில் எடுத்துத் தருவார். அவருக்கு மூட் சரியில்லை என்றால் நம்மையே எடுத்துக்கொள்ளுமாறு சொல்வார். அப்படியே நாம் தட்டை எடுத்துக்கொண்டு நமக்குப் பின்னால் நிற்கும் கூட்டத்திற்கு நடுவே மேஜிக் செய்து யாரையும் தட்டிவிடாமல், யாரும் நம்மைத் தட்டிவிடாமல் கவனமாக வந்து, அமர்வதற்கு ஒரு இடம் கண்டுபிடிக்க வேண்டும். ஒரு ஆளுக்கு சுவரைப் பார்த்து இருக்கை, இரண்டு பேருக்கு சுவரோடு இருக்கை, நான்கு பேருக்கு மேல் நடுவில் இருக்கை என இருக்கைகள் இருக்கும். அமர்ந்து சாப்பிட்டுவிட்டு, நாமே தட்டை எடுத்து, குப்பைக்கூடையைத் தேடி, 'ப்ளீஸ் இன்செர்ட் தெ ப்ளேட்' என்று சொல்லும் உருளையின் முன் ப்ளேட்டை நீட்டி, குப்பையைக் கொட்டிவிட்டு, ப்ளேட்டை இன்னொரு உருளைக்குள் போட்டுவிட்டு, அப்படியே திரும்பி வெறிக்க எல்லாரையும் பார்த்துவிட்டு, நாமே கதவைத் திறந்து வெளியே வர வேண்டும். இதுதான் 'மெக்டொனால்ட் கலாச்சாரம்.' ஆக, இந்த உலகில் உள்ள எந்த மெக்டொனால்ட் உணவகம் சென்றாலும் இதே கலாச்சாரம்தான். இப்படியாக, 'கேஎஃப்சி,' 'மேரி பிரவுன்,' 'ஸ்டார் பக்ஸ்,' 'வால்மார்ட்' என ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு கலாச்சாரம் உருவாகிறது. இந்த கலாச்சாரத்தைப் பின்பற்றினால்தான் உள்ளே சென்று உணவருந்த முடியும்.

நம்ம ஊரு செட்டிநாடு ஹோட்டல் கலாச்சாரம் முற்றிலும் வேறானது. நமக்கு ஒருவர் ஓட்டல் கதவைத் திறந்து விடுவார். உள்ளே நுழைந்தவுடன் நம்மை ஒருவர் வரவேற்பார். ஒருவர் நமக்கு அமர இடம் கண்டுபிடிப்பார். ஒருவர் தண்ணீர் ஊற்றுவார். ஒருவர் இலை போடுவார். ஒருவர் ஆர்டர் எடுப்பார். ஒருவர் உணவு பரிமாறுவார். சாப்பிட்டு முடிக்க ஒருவர் இலை எடுப்பார். ஒருவர் டேபிள் துடைப்பார். ஒருவர் பில் போடுவார். ஒருவர் பணம் வாங்குவார். ஒருவர் மீண்டும் கதவு திறந்துவிடுவார். ஒருவர் நம் காரை எடுக்க காருக்குப் பின் நின்று விசில் அடிப்பார். இது செட்டிநாடு உணவக கலாச்சாரம்.

ஆக, ஒருவர் எந்த ஐக்கன் அல்லது அடையாளத்தைத் தேர்ந்தெடுக்கிறாரோ அந்த ஐக்கன் அல்லது அடையாளத்தை அப்படியே வாழ்வாக்க வேண்டும். இது நாம் உண்ணும் உணவுக்கு மட்டுமல்ல. நாம் பின்பற்றும் சமயவாழ்விற்கும் பொருந்தும். இந்து சமயம், கிறிஸ்தவம், இசுலாம், பௌத்தம், சமணம் என ஒவ்வொரு சமயவாழ்விற்கும் ஒரு அடையாளம் உண்டு. அந்த அடையாளம் முன்வைக்கும் கலாச்சாரம் உண்டு. ஒரு அடையாளத்தை ஏற்பவர் அத்தோடு சேர்ந்து அதன் கலாச்சாரத்தையும் எடுக்க வேண்டும். தான் எடுக்கும் கலாச்சாரம் அவருக்குக் கொடுக்கப்படுவது. அவர் அதைக் கூட்டவோ, குறைக்கவோ முடியாது. மேக்டொனால்டில் சாப்பிட்ட தட்டை எடுக்குமாறு நாம் யாரிடமும் கேட்க முடியாது. செட்டிநாடு உணவகத்தில் நாமே இலையை எடுத்துப் போடவும் முடியாது. அப்படிக் கூட்டினால், குறைத்தால் அங்கே கலாச்சார குறைவு அல்லது குளறுபடி வந்துவிடும்.

இன்றைய இறைவாக்கு வழிபாடு யூத சமய வாழ்வு என்ற அடையாளத்தையும், அத்தோடு வருகின்ற கலாச்சாரத்தையும் பற்றிப் பேசுகிறது.

எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கப்பட்டு, வாக்களிக்கப்பட்ட நாட்டிற்கு அருகில் மோவாபு சமவெளிப்பகுதியில் நின்றுகொண்டிருக்கும் இஸ்ராயேல் மக்களுக்கு இன்றைய முதல் வாசகத்தில் (காண்க. இணைச்சட்டம் 4:1-2, 6-8) இறைவனின் சட்டம் குறித்தும், இறைமக்களின் மேன்மை குறித்தும் அவர்களுக்கு அறிவுறுத்துகின்றார் மோசே. இங்கே இறைவனின் சட்டம் இஸ்ரயேல் மக்களின் 'அடையாளமாக' முன்வைக்கப்படுகிறது. மேலும், இந்தச் சட்டத்தின்படி இவர்கள் ஒழுகுவது இவர்களின் 'கலாச்சாரம்' என்று அறிவுறுத்தப்படுகிறது. 'இவை போன்ற நியமங்களையும் முறைமைகளையும் கொண்ட வேறு பேரினம் உண்டா?' என்ற கேள்வி இஸ்ரயேல் சமயத்தின் தனிப்பட்ட அடையாளமாக 'கடவுளின் கட்டளைகளை' முன்வைக்கிறது. இந்த அடையாளம் இன்னும் மிக முக்கியமானது. ஏனெனில் இது கடவுளின் கைகளால் கொடுக்கப்பட்டது. ஏனெனில் 'மக்களோடு மிக நெருங்கிய கடவுளைக் கொண்ட' இனமும் இஸ்ரயேல் இனமே. இவர்கள் இந்தக் கட்டளைகளை 'வாழ' வேண்டும். மேலும், 'எதையும் சேர்க்கவோ, அவற்றிலிருந்து எதையும் நீக்கவோ கூடாது.'

இப்படியாக, இறைவனே இவர்களின் அடையாளமாகவும், இறைவனின் கட்டளைகள் வழியாக அவரோடு இணைந்திருப்பதுமே இஸ்ரயேல் மக்களின் கலாச்சாரமுமாக இருக்கிறது.

இந்த அடையாளத்தையும், கலாச்சாரத்தையும் பின்பற்றுமாறு அறிவுறத்தப்பட்ட இஸ்ரயேல் மக்கள், காலப்போக்கில் மாற்றுகின்றனர். தங்கள் மூதாதையரின் மரபுகளை முன்னிறுத்துகின்றனர். இவர்கள் இப்படிச் சேர்க்க சேர்க்க, கடவுளின் கட்டளைகளின் நோக்கம் மறைந்துவிடுகிறது. இதைத்தான் இயேசு இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். மாற்கு 7:1-8, 14-15, 21-23) சாடுகின்றார்.

சீனாய் மலையருகில் கூடி நின்ற இஸ்ரயேல் மக்களிடம் ஆண்டவராகிய இறைவன், 'நான் எகிப்திற்குச் செய்ததையும், கழுகுகளின் இறக்கைகளின் மேல் உங்களை ஏந்தி என்னிடம் வந்து சேரச் செய்ததையும் நீங்களே கண்டீர்கள். நீங்கள் என் வார்த்தைக்குச் செவிசாய்த்து என் உடன்படிக்கையைக் கடைப்பிடித்தால், அனைத்துலகும் என் உடைமையேயெனினும், நீங்களே எல்லா மக்கள் இனங்களிலும் என் தனிச்சொத்தாவீர்கள். மேலும், எனக்கு நீங்கள் குருத்துவ அரசாகவும், தூய மக்களினமாகவும் இருப்பீர்கள்' (காண். விப 19:4-6) என்கிறார். ஆக, கடவுளின் கலாச்சாரத்தின் அடையாளமாக இருந்தது 'தூய்மை.' கடவுள் குறிப்பிடும் அகத்தூய்மையை மிக எளிதாக மறந்துவிட்டு, காலப்போக்கில் புறத்தூய்மைக்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பிக்கின்றர் இஸ்ரயேல் மக்கள்.

இப்படிப்பட்ட 'தூய்மை-தீட்டு' நிகழ்வையே நாம் நற்செய்தி வாசகத்தில் பார்க்கிறோம்.

இன்றைய நற்செய்தியின் சூழல் என்ன? சாப்பாட்டு அறை! சாப்பாடு உண்ணுமுன் சீடர்களைக் கூர்ந்து கவனிக்கின்ற பரிசேயர்கள், அவர்கள் கைகளைக் கழுவாமல் உண்பதைப் பார்த்து, 'தீட்டு! தீட்டு!' என்கின்றனர். இந்தச் சீடர்கள் உண்மையிலேயே கைகளைக் கழுவவில்லையா? அல்லது இவர்கள் கைகள் கழுவாமல் இருப்பது இயேசுவின் போதனைக்கு தேவைப்பட்டதா? எனத் தெரியவில்லை. சீடர்களின் காலத்தில் ஸ்பூன்-ஃபோர்க் பயன்படுத்தும் பழக்கமும் இருந்திருக்க வாய்ப்பில்லை. 'ஆம்! பரிசேயர்களே! உங்களுக்கு என்ன ஒரு அக்கறை! கைகழுவாமல் சாப்பிட்டால் கையில் உள்ள கிருமிகள் உணவின் வழியே உள்ளே புகுந்து அவை 18 வகையான சரும மற்றும் உடல் உபாதைகளை ஏற்படுத்திவிடலாம்! இனி நாங்கள் கைகழுவி சாப்பிடுகிறோம்! இனி என்ன, இப்போது கைகள் கழுவுகிறோம்! தண்ணி எங்கப்பா?' என்று கேட்டால் பிரச்சினை முடிந்திருக்கும். ஆனால் பிரச்சினை இங்கே சுகாதாரமோ, கிருமியோ அல்ல. பின் என்ன? வீட்டிற்கு உள்ளே யூதர்களாகிய நாம் மட்டும் இருக்கிறோம். ஆனால் வீட்டிற்கு வெளியே புறவினத்தார்களும் இருக்கிறார்கள். பொதுவிடங்களில் அவர்களும் நடக்கிறார்கள். நாம் தொட்ட கைப்பிடியை அவர்களும் தொடுகிறார்கள். அவர்கள் தொட்ட காய்கறிகளை நாமும் தொட நேரிடுகிறது. இதில் சிலர் பாசத்தோடு நம்முடன் கைகுலுக்கவும் செய்கின்றனர். ஆக, அவர்கள் தொட்ட இடத்தை நாம் தொடும்போதும், அல்லது அவர்களைக் தொடும்போதும் நம் கைகளும் தீட்டாகிவிடுகின்றன. ஆக, இங்கே பிரச்சினை யூதரா? அல்லது புறவினத்தாரா? தூய்மையா? அல்லது தீட்டா? என்பது. மேலும் கைகளைக் கழுவுவது மூதாதையரின் மரபு என்றும், அந்த மரபு ஒருபோதும் மீறப்படல் கூடாது என்பதிலும் உறுதியாக இருக்கின்றனர் பரிசேயர். 'பரிசேயர்' என்றாலே 'தனித்து வைக்கப்பட்டவர்' என்றுதான் அர்த்தம். ஆக, கடவுள் தங்களைத் தனித்து தூய்மையாக வைத்திருக்கிறார் என்ற முதல் ஏற்பாட்டு மேன்மையான எண்ணம் காலப்போக்கில் அடுத்தவர்களைத் தீட்டானவர்கள் என்று மாறிவிடுகிறது.

இயேசுவின் போதனை இவர்களின் வெளிவேடத்தைத் தோலுரிக்கின்றது. 'உங்கள் அக்கறை சுகாதாரம் சார்ந்தது அன்று! மாறாக, யூதர்-புறவினத்தார் ஏற்றத்தாழ்வு சார்ந்தது!' என்கிறார் இயேசு. இறைவாக்கு தெரிந்த இந்த பரிசேயர்களுக்கு எசாயாவின் இறைவாக்கை மேற்கோள் காட்டுகின்றார்: 'இம்மக்கள் உதட்டினால் என்னைப் போற்றுகின்றனர். இவர்கள் உள்ளமோ என்னை விட்டு வெகு தொலைவில் இருக்கிறது. மனிதக் கட்டளைகளைக் கோட்பாடுகளாகக் கற்பிக்கின்றனர். இவர்கள் என்னை வழிபடுவது வீண்!' (எசாயா 29:13). எசாயாவின் காலத்தில் இருந்த எருசலேமின் மக்களுக்கு எதிராக அவர் சொல்லிய வார்த்தைகள் இவை.

மேலும் இயேசு மக்கள் கூட்டத்தைப் பார்த்து, 'வெளியேயிருந்து மனிதருக்குள்ளே சென்று அவர்களைத் தீட்டுப்படுத்தக் கூடியது ஒன்றுமில்லை என்றும், உள்ளத்திலிருந்தே தீயன வெளிவருகின்றன!' என்றும் சொல்கின்றார்.

ஆக, இயேசுவின் போதனை இறைவார்த்தையா? அல்லது மனித கோட்பாடா? என்று தொடங்கி, 'எது தீட்டு?' என்பதோடு முடிகிறது.

மோசேயின் காலத்தில் யூதர்களின் முக்கிய அடையாளமான, கலாச்சாரமாக இருந்த பத்துக்கட்டளைகள் இப்படி மனிதக் கோட்பாடுகளாக மாறியது வேதனைக்குரிய ஒன்று.

இஸ்ரயேல் இனம் தூய இனம் என்ற அடையாளத்தை இழந்து, இயேசுவின் காலத்தில் 'வெளிப்புறத்தூய்மையை வலியுறுத்தும் மரபுகளை' தூக்கிப்பிடிக்கும் இனம் என்ற அடையாளத்தைப் பெறுகிறது.

இயேசுவுக்குப் பின், கிறிஸ்தவம் மலர்கின்ற வேளையில் யூதர்களின் இந்த 'தூய்மை-தீட்டு' பிரச்சினை தங்களுடைய சமூகத்திற்குள்ளும் வந்துவிடுமோ என்ற அச்சம் திருத்தூதர்களுக்கு இருந்தது. கிறிஸ்தவர்களுக்கான அடையாளமாக எதை எடுப்பது? 'பத்துக்கட்டளைகளையா?' அல்லது 'மரபுகளையா?' என்ற பிரச்சினை வரும்போது, இரண்டையும் விடுத்து, 'இறைவார்த்தையை' - 'இயேசுவின் வார்த்தைகளை' தெரிவு செய்கின்றார் எருசலேம் திருச்சபையின் தலைவர் யாக்கோபு. இதைத்தான் இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண்க. யாக்கோபு 1:17-18, 21ஆ-22, 27) நாம் வாசிக்கின்றோம்: கடவுள் மாறிக்கொண்டிருக்கும் நிழல் அல்ல. மனிதர்களும் அவர்களின் போதனையும் நிழல்கள். ஆக, உங்களுள் ஊன்றியிருக்கும் இறைவார்த்தையை கேட்பவர்களாக மட்டும் இருந்து உங்களை ஏமாற்றிக்கொள்ள வேண்டாம்! மேலும்,  'கடவுளின் பார்வையில் தூய்மையானதும் மாசற்றதுமான சமய வாழ்வு எதுவெனில், துன்புறும் அநாதைகளையும், கைம்பெண்களையும் கவனித்தலும், உலகத்தால் கறைபடாதபடி தம்மைக் காத்துக்கொள்வதும் ஆகும்.'

ஆக, கிறிஸ்தவம் என்ற ஐக்கன் அல்லது அடையாளமாக இறைவார்த்தையையும், இறைவார்த்தையைப் பின்பற்றுதலோடு இணைத்து நலிவுற்றோர் பாதுகாப்பையும் கிறிஸ்தவ கலாச்சாரமாக முன்வைக்கிறார் திருத்தூதர் யாக்கோபு.

'கட்டளை - மரபு - இறைவார்த்தை' - இதுவே கிறிஸ்தவம் கடந்து வந்த பாதை. ஆக, இன்னும் நாம் 'கட்டளைகளையும்,' 'மரபுகளையும்' பிடித்துக்கொண்டு நின்றால் நாம் யூதர்களாக இருக்கிறோமே தவிர, கிறிஸ்தவர்களாக இன்னும் மாறவில்லை. அல்லது பெயரளவில்தான் மாறியவர்களாக இருக்கிறோம்.

கிறிஸ்தவர்களாகிய நாம் இன்று நம் அடையாளத்தையும், கலாச்சாரத்தையும், 'தூய்மையும் மாசற்றதுமான சமயவாழ்வையும்' மேற்கொள்ள இன்றைய இறைவாக்குவழிபாடு நமக்கு வைக்கும் பாடங்கள் எவை?

1. தேர்ந்தெடுக்கப்பட்ட நிலை

இன்றைய முதல்வாசகத்தில் இஸ்ரயேல் மக்களை பேறுபெற்றவர்கள் அல்லது தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்று மோசே சொல்வதற்குக் காரணம் இரண்டு: அ. அவர்களுக்கு சட்டம் உண்டு. ஆ. அவர்களின் இறைவன் அவர்களுக்குத் துணையிருக்கின்றார். இதே பின்புலத்தில் இயேசுவை முன்னிறுத்தி எழுதும் தூய பேதுரு, 'நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட வழிமரபினர், அரச குருக்களின் கூட்டத்தினர், தூய மக்களினத்தினர். அவரது உரிமைச் சொத்தான மக்கள்' (1 பேதுரு 2:9) என கிறிஸ்துவில் திருமுழுக்கு பெற்றவர்களையும் இந்த வட்டத்திற்குள் சேர்க்கின்றார். இவ்வாறாக, நாம் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலை நமக்குக் கடவுளின் கொடையாக வந்தாலும், கட்டளையைக் கடைப்பிடிக்கும் அனைவரும் இந்த நிலையை அடைகின்றனர். முதல் ஏற்பாட்டின் பத்துக் கட்டளைகளைச் சுருக்கி, 'இறையன்பு - பிறரன்பு' என ஒற்றை அன்புக் கட்டளையாகக் கொடுத்துவிடுகின்றார் இயேசு. யாரெல்லாம் இந்தக் கட்டளையின்படி நடக்கிறார்களோ அவர்கள் எல்லாருமே கடவுளின் மக்கள் என்ற நிலையைப் பெறுகின்றார்கள். இதைத்தான் இரண்டாம் வத்திக்கான் சங்க ஏடு 'லூமன் ஜென்ஷியம், எண் 6' பதிவு செய்கிறது. ஆக, நம் தேர்ந்தெடுக்கப்பட்டநிலை அடுத்தவர்களைப் பேயாக்கப் பயன்படுவதை விடுத்து, நாம் இன்னும் அதிக பொறுப்புணர்வோடு செயல்பட நம்மைத் தூண்ட வேண்டும்.

2. மரபின் தேவை

சமூகவியலில் மரபு என்பது மிக முக்கியமான கருத்தியல். மரபின் வழியாகவே ஒரு குழந்தை சமூகத்தின் உறுப்பினராக மாற்றப்படுகிறது. மரபு என்று சொல்லும்போது அதில் ஒரு தொடர்ச்சி இருக்கிறது. மரபு நம்மை நம் முன்னோர்களோடும், அவர்களின் வரலாற்றோடும் கட்டிப்போடுகின்றது. மரபு நமக்கு அடையாளம் தருகின்றது. நாம் வேறு வேறு நாடுகளில் இருந்தாலும் நாம் தை முதல் நாளன்று வைக்கும் பொங்கல் நாம் தமிழர்கள் என்ற அடையாளத்தையும், நம் மரபையும் உறுதி செய்துவிடுகிறதே! மரபில் பல நல்ல விஷயங்கள் இருக்கின்றன. நாம் சோர்ந்து விழும்போது நம்மைத் தூக்கிவிடுவதும் நம் மரபுதான். இப்படி மரபு எந்த அளவிற்கு நேர்முகமானதோ, அந்த அளவிற்கு எதிர்மறையாகவும் இருக்கிறது. மரபு நம் சிந்தனையை முடக்கிவிடுகிறது. பரந்து சிந்திக்கும் ஒருவரைக் குற்றவாளியாக்கிவிடுகிறது. மரபு நம்மில் அடிப்படைவாதத்தை விதைத்து, அடுத்த மரபு சார்ந்தவரை 'கீழானவர்!' அல்லது 'தாழ்வானவர்!' என்று நமக்குக் கற்பிக்கத் தொடங்குகின்றது. மரபு மனித வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருக்கிறது. நம் கத்தோலிக்க திருஅவை ஒரு கையில் இறைவார்த்தை, மறு கையில் மரபு என இரண்டையும் பற்றிக்கொண்டிருக்கின்றது. இந்த மரபு நமக்குத் தந்ததுதான் புனிதர்கள், வழிபாட்டு விதிமுறைகள், திருச்சபைச் சட்டங்கள், சுற்றுமடல்கள், திருச்சங்கங்கள். இறைவார்த்தை மரபிற்கு வலுசேர்க்கிறது என்றும், மரபு இறைவார்த்தையைப் பின்பற்றுகிறது என்றும் சொல்கிறது இரண்டாம் வத்திக்கான் சங்கம். இந்த மரபில் இருந்த கறையை வெறுத்த மார்ட்டின் லூத்தர், 'இறைவார்த்தை மட்டும் போதும்!' எனப் புறப்பட்டுவிட்டார். ஆனால், இன்று அவர்கள் பெயரளவில் 'இறைவார்த்தை மட்டும்!' என்று சொன்னாலும் அவர்களும் தங்களையறியாமல் ஒரு மரபைக் கொண்டவர்களாகத்தான் இருக்கின்றனர். ஆக, மரபு தவறு என்று நாம் ஒதுக்கி வைக்கத் தேவையில்லை. நம் மனித மூளை இறந்தகாலத்தையும், எதிர்காலத்தையும் பற்றிச் சிந்திக்கும் திறன் கொண்டிருக்கும் வரை இந்த மரபும், பாரம்பரியமும் நம்மிடம் இருக்கும். ஆனால், மரபையும் தாண்டி சிந்திக்கும் பக்கவம் வந்தால் அது போதும். மேலும், நம் திருஅவையில் இறைவார்த்தையைவிட சில நேரங்களில் திருச்சபைச் சட்டம் மற்றும் வழிபாட்டு விதிமுறைகள் அதிக முக்கியத்துவம் பெறுகின்றன. இறைவார்த்தையை மரபுகளைத் தாண்டி நாம் கொண்டு செல்ல வேண்டும்.

3. உதட்டு ஆன்மீகா? உள்ளத்து ஆன்மீகமா?

இறைவனின் வார்த்தை உள்ளம் சார்ந்தது. மனிதக் கோட்பாடு உதடுகள் சார்ந்தது. இறைவனுக்கு உள்ளம் தெரியும். ஆனால், மனிதர்களுக்கு உதடுகள் மட்டுமே தெரியும். உதடுகளில் தொடங்கி, உதடுகளில் முடிந்துவிடுகின்றன மனிதக் கோட்பாடுகள். இறைவனின் வார்த்தை நம் உள்ளத்தை தொடுகின்றது. ஆனால் மனித மரபு, அந்த மரபு சார்ந்தவர்களின் உதடுகளில் மட்டுமே இருக்கின்றது. ஆக, நாம் உதடுகளைக் கடந்த ஒரு ஆன்மீகம் பெற வேண்டும். இதைத்தான் இன்றைய இரண்டாம் வாசகத்தில் யாக்கோபு தன் திருச்சபைக்கு எழுதும்போது, இறைவார்த்தை வெறும் பகிரப்படும் வார்த்தையாக இல்லாமல், வாழப்படவும் வேண்டும் என்று சொல்கின்றார். இது இன்று நமக்கு வைக்கும் சவால் என்னவென்றால் 'உதட்டு ஆன்மீகம்'. இதைப் புரிந்துகொள்ள நம் அன்றாட வாழ்க்கை நிகழ்வுகளைப் பார்க்கலாம். விமானப் பணிப்பெண்கள், விடுதிகள் வரவேற்பறைப் பெண்கள், ஐந்து நட்சத்திர உணவகப் பணியாளர்கள் இவர்கள் பணிக்குப் பயிற்றுவிக்கப்படும்போது கற்றுக்கொடுக்கப்படும் முதல் பாடம் 'புன்முறுவல் - சிரிப்பு'. என்ன நடந்தாலும், யார் வந்தாலும், உங்களுக்கு தனிப்பட்ட பிரச்சினையிருந்தாலும், உங்கள் உள்ளத்தில் சோகம் இருந்தாலும், வாடிக்கையாளர் உங்களைத் திட்டினாலும் நீங்கள் உங்கள் உதடுகளில் கொண்டிருக்க வேண்டியது – சிரிப்பு. இவர்களின் சம்பளமும் இந்தச் சிரிப்பிற்கே.

4. உள்ளே-வெளியே!

'களவு செய்யாதே!' 'பொய்ச்சான்று சொல்லாதே!' 'கொலை செய்யாதே!' 'விபச்சாரம் செய்யாதே!'  'பிறர் மனைவியை அல்லது பொருளை விரும்பாதே!' என்ற கட்டளைகள் இறைவனால் நம் உள்ளத்தில் எழுதப்பட்டவை. இவை சரியாகக் கடைப்பிடிக்கப்பட்டால் நம் உள்ளத்தில் பரத்தைமை, களவு, கொலை, விபச்சாரம், பேராசை, தீச்செயல், வஞ்சகம், காமவெறி, பொறாமை, பழிப்புரை, செருக்கு, மதிகேடு என எதுவும் இருப்பதில்லை. ஆனால், நான் உள்ளத்தில் இறைவனின் கட்டளைகளை அனுபவிக்காததால்தான், வெளியில் உள்ள மரபு நோக்கி ஓடுகிறேன். ஆக, இறைவார்த்தையை நான் எவ்வித சமரசமும் இல்லாமல் கடைப்பிடித்தால் என் உள்ளமும் சுத்தமாகும். என் உள்ளிருந்து வெளியே வருவதும் சுத்தமாக வரும்.

5. அனிச்சை செயல்

நம்மை யாராவது முத்தமிட நெருங்கினால் நம்மையறியாமல் நம் கண்கள் மூடிக்கொள்கின்றன. அல்லது நம் கண்களை நோக்கி வரும் ஒளி, மரக்கட்டை, தூசி என அனைத்திலிமிருந்தும் நம் கண்களைக் காப்பாற்ற இமைகள் தானாகவே மூடிக்கொள்கின்றன. ஏன்? கண்ணைவிட பெரிய பொருள் கண்ணுக்கு அருகில் வந்தால் ஆபத்து! அந்த ஆபத்திலிருந்து நம் கண்களைக் காத்துக்கொள்ள இமைகள் போட்டுக்கொள்ளும் ஒரு பாதுகாப்பு வளையமே இந்த அனிச்சை செயல். நாம் சார்ந்திருக்கும் மனித மரபுகளும் பாதுகாப்பு வளையங்களே! அவைகள் ஆபத்திற்குத்தான் பயன்படவேண்டுமே தவிர, எப்போதும் நம்மை ஆக்கிரமித்துக்கொள்வதாய் இருத்தல் கூடாது. ஏனெனில், எந்நேரமும் நம் இமைகள் மூடினால் எல்லாமே இருட்டாகத்தானே இருக்கும்!

இறுதியாக,

நம் மொபைலில் உள்ள செயலி எந்த ஐக்கன் கொண்டிருக்கிறதோ, அந்த ஐக்கனுக்குரிய வேலையைச் செய்கிறது. அப்படிச் செய்தால்தான் அது சரியான செயலி. இல்லை என்றால் அது வைரஸ். அதுபோல, கிறிஸ்தவம் என்னும் ஐக்கன் என்னில் இருந்தால், அதற்கேற்ற ஆன்மீகமும், சமயவாழ்வும் கொண்டிருந்தால் தான் என் வாழ்வு நான் இருக்கும் உலகில் கனி தரும். இல்லையென்றால், என் இருப்பு தேவையற்றதாகவும், தீங்கானதாகவும் மாறிவிடும்.





Monday 20 August 2018

ஆண்டின் பொதுக்காலம் 21-ஆம் ஞாயிறு


ஆண்டின் பொதுக்காலம் 21-ஆம் ஞாயிறு


இன்றைய வாசகங்கள்


யோசுவா 24:1-2, 15-18
எபேசியர். 5:21-32
யோவான். 6:60-69



நற்கருணை

அன்பார்ந்த சகோதரனே! சகோதரியே! ஆண்டவர் இயேசு படிப்படியாகத் தம் சீடர்களைத் தயாரித்து ஒரு மாபெரும் உண்மையை, உண்மை மசோதாவாக அறிவிக்கப் போகிறார். மக்களவையில் ஆளும் கட்சியினர் ஒரு மசோதாவைக் கொண்டு வரும்போது அதை எதிர்கட்சியினர் எதிர்த்து வெளிநடப்பு செய்வதை நாம் அன்றாடம் வாசிக்கிறோம், T.V-யில் பார்க்கிறோம். அதேபோல் மசோதாவை அறிவித்து, அறிமுகம் செய்தபோது யூத மக்கள் எதிர்த்தார்கள். இது மித மிஞ்சிய பேச்சு என்று முணுமுணுத்து வெளி நடப்புச் செய்தார்கள். இயேசுவை விட்டுப் பிரிந்த சீடர்கள் அவரிடம் மீண்டும் வரவில்லை (யோவா. 6:66)

அருமையான சகோதரனே! சகோதரியே! தீர்மானம் எடுப்பது என்பது வாழ்க்கையில் இன்றியமையாதது. வாழ்க்கைக்கு வடிவம் கொடுக்கிறது. வாழ்க்கையையே அமைத்துக் கொடுக்கிறது. ஆனால் சமூகத்தில் பலர் தீர்மானம், அல்லது முடிவு எடுக்கத் தடுமாறுகிறார்கள். தெளிவின்றி வாழ்வை இழந்து வாடுகிறார்கள். ஆனால் தீர்மானம் எடுக்கும்போது நிறைவான, மகிழ்வான, உயரிய , உண்மைக்கு இட்டுச் செல்வதில் தீர்மானம் எடுக்க வேண்டும்.

இயேசுவைப் பாருங்கள்!
தன் சீடருள் பலர் தம்மை விட்டுப் பிரிந்து செல்வதைக் கண்டு இயேசு சிறிதும் தயங்கவில்லை . தன் முடிவையும் மாற்றிக் கொள்ளவில்லை. மாறாகத் தன் பன்னிரு சீடர்களைப் பார்த்து நீங்களும் போய்விட நினைக்கிறீர்களா? (யோவா. 6:67) என்று கேட்கிறார் இயேசு. ஏனெனில் உண்மை ஒருபோதும் மறையாது. உண்மை உறங்குவதில்லை. இயேசு இந்த நற்கருணை மசோதாவைக் கொண்டு வந்தபோது பெரும்பான்மையோரின் வாக்கெடுப்புக்கு விடவில்லை. எதிர்ப்புக்கு மத்தியிலும் நிறைவேற்றினார்.

சீடர்கள் தீர்மானம் எடுப்பதில் முதலில் தயக்கம் காட்டினாலும், பேதுரு சீடர்கள் சார்பாக முடிவு எடுக்கிறார். ஆண்டவரே நாங்கள் யாரிடம் போவோம். வாழ்வு தரும் வார்த்தைகள் உம்மிடம் தானே உள்ளன (யோவா. 6:68) என்று நம்பிக்கையின் தீர்மானத்தை வெளிப்படுத்துகிறார்.
ஆனால் கூடியிருந்த கூட்டம் எடுத்த தீர்மானம் வாழ்வை இழக்கும் தீர்மானமாக, உண்மையை மறுக்கும் தீர்மானமாக, தவறான பாதைக்கு இட்டுச் செல்லும் தீர்மானமாக அமைகிறது.

இன்றைய முதல் வாசகமும் மூன்றாம் வாசகமும் நமது வாழ்வில் சரியான தீர்மானங்கள் எடுக்க அழைப்பு விடுக்கின்றன.
கடந்த 2000 ஆண்டுகளாக எத்தனையோ பேர் நற்கருணை மறைபொருளை எதிர்த்து வந்தாலும், அதைத் திரித்துக் கூறினாலும், இன்றும் நற்கருணை மறைபொருளானது மங்காது, மறையாது, குன்றாது, குறையாது திருச்சபையின் வாழ்வு முழுவதற்கும் ஊற்றாக, சிகரமாக உள்ளது. யூதாசு இயேசுவைக் காட்டிக் கொடுத்தான். இறுதி உணவின் போது அவனுக்குள் அலகை நுழைந்தது. நற்கருணையில் பங்கேற்காமல் அவனை இருளில் அழைத்துச் சென்றது அலகை.

யூதாஸ் நமக்கெல்லாம் எச்சரிக்கை!
இன்று கத்தோலிக்க கிறிஸ்தவர்களில் சிலர் நற்கருணையை விட்டு விலகி பிரிவினை சபைக்கு ஓடுகிறார்கள். ஒரு பெண்ணைப் பார்த்து நீங்கள் எங்கள் சபைக்கு வாருங்கள். உங்கள் தீரா நோயை எடுத்துவிடுவோம் என்று பிரிந்த சபையினர் அழைத்தனர். நற்கருணை ஆண்டவர் என்னைக் குணப்படுத்துவார். வேறு எந்தச் சபைக்கும் நான் போகத் தயாராக இல்லை என்று உறுதிபடக் கூறினார் அந்தப் பெண். சுண்டல் கொடுக்கின்ற கோவில்களுக்கெல்லாம் ஓடும் சிறுபிள்ளைபோல, புற்றீசல் போல் பெருகி வரும் பிரிவினைச் சபைக்கு ஓடும் நிலையை நாம் கைவிட வேண்டும். ஓடியவர்களை நாம் கொண்டு வர முயற்சிப்போம். அப்போது நாம் வாழ்வு பெறுவோம்.

மலைகள் நிலை பெயரலாம். குன்றுகள் அசையலாம். என் அன்போ என்றுமே மாறாது. உன் மீது முடிவில்லா அன்பு கொண்டுள்ளேன் (எசா. 54:10). உன்னோடு முடிவில்லா உடன்படிக்கை செய்வேன் (எசா. 55:3-4).








இறைவார்த்தை வழியில்

 ஒரு பங்குப் பணியாளர் ஞாயிறு மறையுரையின் போது, ஒரு மருந்து பாட்டிலெ மக்களுக்குக் காட்டி, இது என்ன? என்று கேட்டார். அதற்கு பங்கு மக்கள், மருந்துப் பாட்டில் என்றார்கள். இதன் மீது என்ன எழுதப்பட்டிருக்கின்றது என்பது தெரிகின்றதா? என்றார். மக்களோ, தெரியவில்லை, நீங்களே படித்துச் சொல்லுங்கள் என்றனர். பங்கு பணியாளர் படித்தார். காலையில் ஒரு ஸ்பூன், மதியம் ஒரு ஸ்பூன், இரவு ஒரு ஸ்பூன் சாப்பிடும்படி சொல்லப்பட்டிருக்கின்றது என்றார்.

இவ்வாறு சொல்லிவிட்டு மக்களைப் பார்த்து, இந்த மருந்துப் பாட்டிலை உங்கள் கையில் கொடுத்து, இதில் எழுதியுள்ளபடி குடியுங்கள் என்று சொன்னால், நீங்கள் என்ன செய்வீர்கள்? என்று கேட்டார். அதற்கு மக்கள், அதில் எழுதியுள்ளபடி செய்வோம் என்றார்கள்.

அப்போது பங்குப்பணியாளர் மக்களைப் பார்த்து, ஒரு டாக்டர் சொல்வதை நம்புகின்றீர்கள் ? கடவுள் சொல்வதை, இறைவார்த்தையை நம்ப ஏன் தயங்குகின்றீர்கள்? என்றார். அன்றிலிருந்து அந்தப் பங்கில் பெரும் ஆன்மிக மாற்றங்கள் துளிர்விடத் துவங்கின.

நமக்கு வாழ்வளிக்கும் ஆற்றல் இறைவார்த்தைக்கு உண்டு (நற்செய்தி). கடவுளின் வார்த்தை நேர்மையானது (திபா 33:4). கடவுளின் வார்த்தைக்குக் குணமளிக்கும் ஆற்றல் உள்ளது (திபா 107:20). கடவுளின் வார்த்தை நமது காலடிக்கு விளக்கு (திபா 119:105). கடவுளின் வார்த்தை வல்லமை மிக்கது (எசா 55:10-11). கடவுளின் வார்த்தை என்றும் அழியாதது (மத் 24:35). கடவுளின் வார்த்தை நம்மை தூய்மைப்படுத்துகின்றது (இரண்டாம் வாசகம்).

நம் வாழ்க்கைக்குத் தேவையான அனைத்தையும் இறைவனிடமிருந்து பெற்றுத் தரும் சக்தி இறைவார்த்தைக்கு உண்டு! இதை மனத்தில் கொண்டு, நான் ஆண்டவரின் அடிமை ; உம் சொற்படியே எனக்கு நிகழட்டும் (லூக் 1:38) என்ற அன்னை மரியாவின் முன்மாதிரியைப்
பின்பற்றி, இறைவார்த்தையை நம்பி அதை நம் வாழ்வின் மையமாக்கி வளமுடன் வாழ்வோம்.

மேலும் அறிவோம் :


கேட்டார்ப் பிணிக்கும் தகை அவாய்க் கேளாரும்
வேட்ப மொழிவதாம் சொல் (குறள் : 643)

.
பொருள் : சொல்லாற்றல் என்று சான்றோரால் பாராட்டப்படுவது கேட்ட வரைக் கவரத்தக்கதாகவும் கேளாதவரைக் கேட்க விரும்பச் செய்வதாகவும் விளங்குவதாகும்!




மக்களவையில் ஆளும் கட்சியினர் ஒரு மசோதாவைக் கொண்டுவரும்போது அதை எதிர்த்து எதிர்க்கட்சியினர் வெளி நடப்புச் செய்கின்றனர். அவ்வாறே கிறிஸ்து நற்கருணை மசோதாவை, நம்பிக்கைக் கோட்பாட்டை யூதர்களுக்கு அறிமுகம் செய்தபோது, அதை எதிர்த்து மக்கள், "இதை ஏற்றுக் கொள்வது மிகக் கடினம்; இப்பேச்சை இன்னும் கேட்டுக் கொண்டிருக்க முடியுமா?" (யோவா 6:60) என்று கூறிவிட்டு வெளிநடப்புச் செய்தனர். அவ்வாறு இயேசுவை விட்டுப் பிரிந்த சீடர்கள் அவரிடம் மீண்டும் திரும்பி வரவில்லை (யோவா 6:66).
தம் சீடருள் பலர் தம்மை விட்டுப் பிரிந்து செல்வதைக் கண்ட இயேசு சிறிதும் கலங்கவில்லை . மாறாக, தம்முடன் இருந்த பன்னிருவரிடம், "நீங்களும் போய்விட நினைக்கிறார்களா?* (யோவா 6:67) என்றுதான் கேட்டார்,

உண்மை ஒருபோதும் பின்வாங்காது; சுடச்சுட ஒளிரும் பொன்னைப் போன்று எதிர்க்க எதிர்க்க மிளிரும் தன்மை உடையதுதான் உண்மை, "அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே: இச்செகத் துள்ளோரெல்லாம் எதிர்த்து நின்ற போதிலும், அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே” என்று எத்தகையச் சவாலையும் எதிர்த்து நிமிர்ந்து நிற்பதுதான் உண்மை.

வழியும் வாழ்வும், உண்மையும் உயிருமான கிறிஸ்து நற்கருணை மசோதாவை பெரும்பான்மையோரின் வாக்கெடுப்பிற்கு விடவில்லை. மாறாக, பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் அதை நிறைவேற்றினார், கடந்த 2000 ஆண்டளவாக எத்தனையோ பேர் நற்கருணை மறைபொருளை எதிர்த்து வந்தாலும், அதைப்பற்றித் திரித்துக் கூறினாலும், இன்றும் நற்கருணை மறைபொருளானது மங்காது மறையாது. குன்றாது குறையாது, திருச்சபை வாழ்வு முழுவதற்கும் ஊற்றாகவும் சிகரமாகவும் உள்ளது.

நற்கருணை மறை உண்மையை ஏற்றுக்கொள்வதற்கு மனித அறிவு கை கொடுக்காது, அதற்குத் தேவையானது வானகத் தந்தையின் அருள், எனவேதான் இன்றைய நற்செய்தியில் இயேசு, "என் தந்தை அருன் கூர்ந்தால் அன்றி யாரும் என்னிடம் வர இயலாது"(யோவா 6:65) என்று கூறி, தமது நீண்ட உரைக்கு முத்திரை வைக்கிறார்.

இயேசு கிறிஸ்து 'ஆமென் என்ற பெயர் கொண்டவர்; நம்பிக்கைக்குரிய உண்மையான சாட்சியானவர் {திவெ 3:14}; ஒரே நேரத்தில் அவர் 'ஆம்' என்றும் 'இல்லை ' என்றும் பேசாமல், 'ஆம்' என்று உண்மையையே பேசுபவர் (2 கொரி 1:19). அவர் நேற்றும் இன்றும் என்றுமே மாறாதவர் (எபி 13:8). உண்மையும் நம்பிக்கையும் உடைய அவர் நம்மிடம் எதிர்பார்ப்பதும் உண்மையும் நம்பிக்கையும் பற்றுறுதியுமாகும்.

கடவுளிடம் நாம் எவ்வாறு பற்றுறுதியுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்பதற்கு இன்றைய முதல் வாசகத்தில் யோசுவாவும், நற்செய்தியில் பேதுருவும் சிறந்த எடுத்துக் காட்டுக்களாகத் திகழ்கின்றனர்.

இஸ்ரயேல் மக்கள் உண்மையான கடவுளுக்கு ஊழியம் புரிந்தாலும் பிற இனத்தெய்வங்களையும் வழிபட்டு, இருமனத்தோராய் திகழ்ந்தனர். இந்நிலையில் யோசுவா அம்மக்களிடம், "நானும் என் வீட்டாரும் ஆண்டவருக்கே ஊழியம் புரிவோம்" (யோசு 24:15) என்று திட்டவட்டமாகக் கூறினார். அவ்வாறே, எல்லாரும் இயேசுவை விட்டுச் சென்ற கட்டத்திலும் பேதுரு இயேசுவிடம், "ஆண்டவரே நாங்கள் யாரிடம் போவோம்? நிலை வாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம் தானே உள்ளன" (யோவா 6:67) என்று திண்ணமாக அறிக்கையிடுகிறார். ஒருவருக்குக் கேடுகாலம் வருவதும் ஒருவிதத்தில் நல்லது; ஏனெனில் அப்போதுதான் அவருடைய உண்மையான நண்பர்கள் யார் என்பதை இனம் காண முடியும் என்கிறார் வள்ளுவர்,
கேட்டினும் உண்டுஓர் உறுதி கிளைரை
நீட்டி அளப்பதோர் கோல் (குறள் 796)

குளத்தில் தண்ணீர் இருக்கும்போதுதான் அதில் கொக்கும் மீனும் இருக்கும். தண்ணீர் வற்றி வறண்டு விட்டால் பறவைகள் வேறிடத்திற்குப் பறந்து போய்விடும். மாறாக, அக்குளத்திலுள்ள செடிகொடிகன் அக்குளத்திலேயே இருந்து அதிலேயே மாண்டுவிடும். இன்பத்தில் நட்புரிமை கொண்டாடி துன்பத்தில் காலை வாரிவிடுபவர்கள் நண்பர்கள் அல்ல, நயவஞ்சகர்கன்.
ஓர் உண்மைக் காதலன் தன் காதலியிடம், 'நீ மாலையானால் நான் அதில் மலேராவேன். நீ பாலையானால் நான் அதில் மணலாவேன்" என்கிறான். இன்றைய இரண்டாம் வாசகத்தில், கணவனுக்கும் மனைவிக்கும் இடையேயுள்ள உறவு கிறிஸ்துவுக்கும் திருச்சபைக்கும் இடையேயுள்ள பிரிக்க முடியாத உறவு என்பதை விளக்குகிறார் புனித பவுல். இன்பத்திலும் துன்பத்திலும், உடல் நலத்திலும் நோயிலும் வெட்டிப் பிரித்தாலும் விட்டுப் பிரியாமல் இருப்பவர்களே உண்மையான தம்பதியர். அவ்வாறே இயேசுவுக்கும் அவருடைய அன்பின் அருள் அடையாளமாகிய நற்கருணைக்கும் நாம் என்றும் உண்மையுள்ளவர்களாக இருக்க வேண்டும்.

யூதாசு இயேசுவைக் காட்டிக் கொடுத்தான், அவனுக்கு இயேசுவின் மீதோ நற்கருணை மீதோ உண்மையான பற்றுறுதி இல்லை. நற்கருனை பற்றி இயேசு கொடுத்த விளக்கத்தின் இறுதியில் அவர் யூதாசை "அலகை" என்று அழைத்தார் (யோவா 6:70). இயேசுவின் இறுதி உணவின்போது அவனுக்குள் அலகை நுழைந்தது. நற்கருணையில் பங்கேற்காமல் அலகை அவனை இருளில் அழைத்துச் சென்றது (யோவா 13:27-30).

யூதாசு நமக்கெல்லாம் ஓர் எச்சரிக்கை இன்றும் கத்தோலிக்கக் கிறிஸ்துவர்களில் சிலர் நற்கருணையை விட்டு விலகிப் பிரிவினை சபைகளுக்குச் செல்கின்றனர், அவர்கள் மீண்டும் நற்கருணையிடம் திரும்பி வருவது அரிது.

ஒரு பெண்மணியிடம் பிரிவினை சபையினர், "நீங்கள் எங்கள் சபைக்கு வாருங்கள். உங்களின் தீராத நோயை எடுத்துவிடுகிறோம்" என்று அழைத்தனர். அப்பெண்மணியோ, "நற்கருணை ஆண்டவர் என்னைக் குணப்படுத்தாவிட்டால், வேறு எந்த சபைக்கும் போக நான் தயாராக இல்லை " என்று உறுதிபடக் கூறினார், சுண்டல் கொடுக்கிற கோவில்களுக்கெல்லாம் ஒடும் சிறு பிள்ளைகளைப்போல், இங்கும் அங்குமாகப் புற்றீசல்போல் பலுகிவரும் பிரிவினை சபைகளுக்கு ஓடும் இழிநிலையைக் கைவிட வேண்டும். அல்கையின் வஞ்சக வலையில் வீழ்ந்து நம் ஆன்மாவை இழக்கக் கூடாது.

எம்மாவுக்குச் சென்ற இரு சீடர்களுக்கு அப்பத்தைப் பிட்டுக் கொடுத்து, தம்மை அவர்களுக்கு அடையாளம் காட்டிய உயிர்த்த ஆண்டவர். அவர்கள் கண்கள் திறந்தவுடன் அவர்கள் பார்வையிலிருந்து மறைந்துவிட்டார், ஏன்? இனிமேல் இயேசுவின் இரண்டாம் வருகைவரை, அவரை நாம் அப்பம் பிடுவதில், அதாவது நற்கருணைக் கொண்டாட்டத்தில் காண வேண்டும் என்பதே இயேசுவின் விருப்பமாகும். இயேசுவின் விருப்பத்தை ஏற்காதவர்கள் இயேசுவின் சீடர்கள் அல்ல. அவர்கள் யாரோ? யான் அறியேன் பராபரமே!





இப்போது முடிவு செய்யுங்கள்!

காலையில் எழுந்து குளித்துவிட்டு துணி அலமாரியின் முன் நின்று கொண்டு, 'இன்று எந்த ஆடை அணிவது?' என்று நாம் தலையைச் சொறிகிறோம். எல்லா ஆடைகளையும் வேகமாக அலசிப் பார்த்துவிட்டு, நேற்று அணிந்து இரவு கழற்றி அழுக்குக்கூடையில் போட்ட சட்டையை நோக்கியும் கண்களும் போகும். 'ச்சே, நேற்று போட்ட டிரசை இன்று போட்டிருக்கலாமோ!' என்ற எண்ணமும் தோன்றி மறையும். ஒருவழியாக, ஏதாவது ஒன்றை எடுத்துப் போடலாம் என்றால், ஒன்றும் மேட்ச் ஆகாமல் இருக்கும். சில நேரங்களில் நம் சாக்ஸூம், கைக்குட்டையும்தான் மேட்ச் ஆகிற மாதிரி நிலையில் ஆடை அணிய வேண்டியதிருக்கும். ஆடை அணிவதற்குத் தெரிவு செய்யவே இவ்வளவு நேரம் ஆகிறது என்றால், புதிய ஆடையை வாங்க எவ்வளவு நேரம் ஆகும்? ஏன் நாம் இவ்வளவு நேரம் எடுக்கிறோம்? அல்லது ஏன் நாம் ஆடையைத் தெரிவு செய்கிறோம்? கைக்கு வருவதை எடுத்து அணிந்துகொண்டு போய்விடலாமே? 'இந்த ஆடைதான் இன்று' என்ற முடிவு அன்றைய நாளின் நம் தன்னம்பிக்கையையும், மகிழ்ச்சியையும், தன்மதிப்பையும் நிர்ணயிக்கிறது. ஆனால், என்னதான் அழகான ஆடை அணிந்து சென்றாலும், நாளின் இறுதியில், 'உவப்பன வெறுப்பாம், உடுத்தியது அழுக்காம்' என்று அந்த ஆடை அழுக்குக் கூடைக்குள்தான் போகும். ஒரு டிரஸ் அணிந்துவிட்டு, சாப்பிட்டுவிட்டு, பின் வீட்டை விட்டு வெளியே போகும்போது, 'இது நல்லா இல்ல. வேறு ஒன்று மாத்திக்குவோம்' என்று திரும்பவும் அலமாரியைத் திறந்த நாள்களும் நமக்கு இருந்திருக்கலாம். சில நேரங்களில், 'என்ன, இந்த டிரஸ்லயா வர்ற!' என்று யாராவது சொல்ல, அவர்களுக்காகவும் நாம் ஆடையை மாற்றியிருப்போம். இவ்வாறாக, 'நான் இன்று இந்த ஆடை அணியப் போகிறேன்' என்ற முடிவை எடுக்க, நான் நேரம் எடுக்கிறேன், மனம் குழம்புகிறேன், 'இதற்கு முன் இந்த ஆடை எப்போது அணிந்தேன், அன்று என்ன நடந்தது?' என ஆய்கிறேன், எடுக்கிறேன், அணிகிறேன், வெளியே வருகிறேன், சாப்பிடும்போதும் அது பற்றியே நினைக்கிறேன், மற்றவர்களின் கருத்தைக் கேட்கிறேன், மீண்டும் ஆடை மாற்றுகிறேன்.

நிற்க.

ஆடையைக் குறித்து நாம் எடுக்கும் முடிவு போல, நாம் அன்றாடம் முடிவுகளை எடுத்துக்கொண்டே இருக்கிறோம்: 'எந்த பேருந்தில் ஏறுவது?' 'அமர்வதா?' 'நிற்பதா?' 'எங்கு படிப்பது?' 'எந்த வேலை பார்ப்பது?' 'யாரை திருமணம் செய்வது?' 'குழந்தைகள் பெற்றுக்கொள்வதா, வேண்டாமா?' 'ஆம் என்றால், எத்தனை?' 'இல்லை என்றால், எப்போது?' 'அவர்களை எங்கே படிக்க வைப்பது?' 'எந்த மருத்துவரிடம் பல்லைக் காட்டுவது?' 'எந்த மெடிக்கலில் மருந்து வாங்குவது?' இப்படி நிறைய முடிவுகளை நாம் ஒருநாளில் எடுக்க வேண்டியிருக்கிறது. இந்த முடிவுகளை எடுக்க நம்மை உந்தித் தள்ளுவது நம் கட்டின்மை அல்லது சுதந்திரம். ஆனால், நாம் ஒரு முடிவை எடுக்கும்போது மற்ற முடிவுகளை நீக்கித்தான் ஆக வேண்டும். 'பேருந்தில் நிற்பதா? அமர்வதா?' என்று நான் எடுக்கும் முடிவில், 'அமர்வேன்' என்று முடிவு எடுத்தவுடன், 'நான் நிற்க முடியாது.' பாதி நிற்பதும், பாதி அமர்வதும் இயலாத நிலை. இவ்வாறாக, நான் எடுக்கும் ஒரு முடிவு மற்றதை என்னிடமிருந்து நீக்கிவிடுகிறது.

இம்மாதிரி சின்னச் சின்ன முடிவுகள் ஒருபக்கம். என் வாழ்வையே மாற்றிப்போடும் முடிவுகள் இன்னொரு பக்கம் இருக்கின்றன. 'திருமணம் செய்துகொள்வது,' 'வேலை பார்ப்பது,' 'சொத்து வாங்குவது' போன்ற முடிவுகள் நம் உறவு மற்றும் சமூக நிலையை மாற்றிப்போடவல்லவை. இவற்றை நாம் எடுத்தோம், கவிழ்த்தோம் என்று சொல்லிவிட முடியாது.

இப்படியாக, முடிவுகளின் விளைவு பெரிதாகப் பெரிதாக, அதை எடுப்பதற்கான வலியும், கலக்கமும் பெரிதாகிக்கொண்டே இருக்கின்றது. ஆகையால்தான் சில நேரங்களில் நாம் முடிவுகளைத் தள்ளிப் போடுகிறோம்.

இன்றைய இறைவாக்கு வழிபாடு நம்மை இருத்தியல் முடிவு எடுக்க அழைக்கிறது:

யோர்தான் நதிக்கரையில் நிற்கும் யோசுவா, அங்கே கூடியிருக்கும் மக்களைப் பார்த்து, 'நான் ஆண்டவர் பக்கம். நீங்கள் யார் பக்கம் என முடிவு செய்யுங்கள்' என அவர்களை அழைக்கிறார்.

திபேரியக் கடற்கரையில் நிற்கும் இயேசு, தன் சீடர்களில் பலர் தன்னைவிட்டுப் போய்விட, தன் திருத்தூதர்களிடம், 'நீங்களும் போய்விட நினைக்கிறீர்களா? முடிவு செய்யுங்கள்' என அவர்களை அழைக்கிறார்.
இஸ்ரயேல் மக்கள் எடுக்கும் முடிவு கடவுளின் இயல்பை மாற்றுவதில்லை. திருத்தூதர்களின் முடிவு இயேசுவின் இயல்பை மாற்றுவதில்லை. ஆனால், இவர்கள் எடுக்கும் முடிவைப் பொறுத்தே இவர்களின் - இஸ்ரயேல் மக்கள், திருத்தூதர் - வாழ்வு அல்லது இயல்பு இருக்கும். ஆக, இது ஒரு முக்கியமான தருணம். 'இப்போ சரினு சொல்லிட்டு, அப்புறம் மாத்திக்கலாம்' என்ற ஆடை முடிவு அல்ல இது. ஒருவரின் இருத்தலைப் புரட்டிப்போடுகின்ற முடிவு.

இந்த முடிவு வாசகர்களாகிய நம்மிடம் அப்படியே திரும்புகிறது?

எப்படி?

இன்றைய முதல் வாசகத்திலிருந்து (காண். யோசு 24:1-2,15-17,18) நம் சிந்தனையைத் தொடங்குவோம். யாவே இறைவன் இஸ்ரயேல் மக்களுக்கு வாக்களித்த பாலும், தேனும் பொழியும் கானான் நாடு கைக்கெட்டிய தூரத்திற்கு வந்துவிட்டது. இப்போது மக்கள் அதில் நுழைவதற்கு முன் அவர்களை செக்கேமில் ஒன்றுகூட்டும் யோசுவா, இறைவனுக்கும், அவர்களுக்கும் இடையேயான உடன்படிக்கையைப் புதுப்பிக்கின்றார். யாவே இறைவன் அவர்களுக்கு செய்த அரும் பெரும் செயல்களை நினைவூட்டுகின்றார். உடன்படிக்கை மக்களுக்கு முன்வைக்கும் ஒரே கட்டளை என்னவென்றால், அவர்கள் மற்ற தெய்வங்களை விடுத்து யாவே இறைவனை மட்டும் பற்றிக்கொள்ள வேண்டும். இந்த நேரத்தில் இவர்களின் பதில் 'ஆம்' என இருந்தாலும், இந்த வார்த்தையில் அவர்கள் நிலைத்திருக்க முடியாமல் இறைவனின் கோபத்திற்கு ஆளாகிறார்கள் என்பது பிந்தைய வரலாறு.

'நீங்கள் உங்களிடையே இருக்கும் வேற்று தெய்வ வழிபாட்டை விட்டுவிடத்தயாரா?' என்று கேட்கும் யோசுவா, 'நானும், என் வீட்டாரும் ஆண்டவருக்கே பணிபுரிவோம்!' என மக்கள்முன் அறிக்கையிடுகின்றார். இங்கே 'பணிபுரிதல்' அல்லது 'ஊழியம் புரிதல்' (நவாத்) என்ற வார்த்தைக்கு 'வழிபடுவோம்' என்ற பொருளும் உண்டு. 'வேலை' அல்லது 'பணி' என்ற வார்த்தை இங்கே பயன்படுத்தப்பட்டதன் முக்கியத்துவம் என்னவென்றால், எகிப்தில் பாரவோனுக்கு இஸ்ராயேல் மக்கள் 'பணி' புரிந்தனர். பாரவோனே அவர்களின் கடவுளாக இருந்;தான். இனி அப்படியிருக்கப் போவதில்லை. இனி இறைவன்தான் இவர்களின் தலைவன். ஆக, பணி என்ற வார்த்தையின் வழியாக இறைவன் தலைவராக முன்வைக்கப்படுகின்றார்.

யோசுவாவும், இஸ்ரயேல் மக்களும் - இரண்டு பேருமே - 'நாங்கள் ஆண்டவருக்குப் பணிபுரிவோம்!' என்று சொன்னாலும், இரண்டு பேரின் நம்பிக்கை அளவும் வேறுபடுகிறது. எந்தவொரு நிபந்தனையும் இல்லாமல் கடவுளைத் தன் தலைவராக ஏற்றுக்கொள்கிறார் யோசுவா. ஆனால், 'அவர் எங்களுக்கு விடுதலை தந்ததால், அவர் எங்கள் முன் அறிகுறிகள் நிகழ்த்தியதால், அவர் எங்களைப் பாதுகாத்ததால் நாங்கள் நம்புகிறோம்!' என்று நிபந்தனையோடு நம்புகின்றனர் மக்கள். ஆக, மக்களின் இந்த எதிர்பார்ப்பு பின் நாட்களில் நிகழாமல் போவதால் அவர்கள் எளிதாக வேறு அரசனையும், வேறு தெய்வங்களையும் பின்தொடரத் துணிகின்றனர்.

கொஞ்சம் கற்பனை செய்து பார்ப்போம். இஸ்ரயேல் மக்கள் இப்போது பாலைநிலத்தில் இருக்கின்றனர். கொஞ்ச சுமை வைத்துக்கொண்டால் மட்டும்தான் இனிதாக பயணம் செய்ய முடியும். அதில் ஆடை, அணிகலன்கள், தண்ணீர் என்றே சுமை இருக்கும். இந்தச் சுமையிலும் இந்த 'குட்டி தெய்வங்களுக்கு' அல்லது 'வேற்று கடவுளர்களுக்கு' எப்படி இவர்களின் பொதிகளில் இடம் இருந்தது? தொல்லியில் ஆராய்ச்சியில் 'ஃபிகுரின்' என்று சொல்லப்படும் விரல் அளவு தெய்வ உருவங்கள் நிறையக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவைகள்தாம் 'டிராவல் ஃபார்மட் கடவுளர்களாக' இருந்திருக்க வேண்டும். இவைகளைப் பார்க்கும்போதெல்லாம் இவர்களுக்கு கடவுளின் பிரசன்னம் தங்களோடு இருப்பதாக இவர்கள் உணர்ந்திருக்க வேண்டும். இன்று இவர்கள் இந்த எல்லா குட்டி தெய்வங்களையும் தூக்க எறிய வேண்டும். கடவுள் என்பது வெளிப்புற அடையாளம் அல்ல, அவர் நம் உள்புறம் இருந்து நம் அனுபவமாக இருக்கிறார் என்ற ஒரு மாற்று சிந்தனை பெற வேண்டும். தங்கள் கைகளுக்குள் இருக்கும் குட்டித் தெய்வங்களை அவர்கள் தூக்கி ஆற்றில் எறிய வேண்டும். இனி அவர்கள் தேடினாலும்  அவற்றைக் கண்டுகொள்ள முடியாது.

இஸ்ரயேல் மக்கள் இறுதியாக, 'நாங்களும் ஆண்டவருக்கு ஊழியம் புரிவோம். ஏனெனில் அவரே எங்கள் கடவுள்' என்று முடிவு எடுக்கின்றனர்.

தொடர்ந்து, இன்றைய நற்செய்தி வாசகத்தில், கடந்த ஐந்து வாரங்களாக நாம் கேட்டுக்கொண்டு வரும் இயேசுவின் 'வாழ்வுதரும் போதனை' இன்றோடு நிறைவுபெறுகிறது. இயேசுவின் போதனை அனைத்து மக்கள், கொஞ்சம் யூதர்கள் எனத் தொடர்ந்து இன்று மிகவும் சில சீடர்கள் எனச் சுருங்கிவிட்டது. இது ஒரு இலக்கிய உத்தி. பெரிய இடத்தில் தொடங்கி, சிறிய அளவில் முடிப்பது. இந்த இடத்தில் யோவான் நற்செய்தியாளரின் நோக்கம் என்னவென்றால், இதை வாசிக்கும் இயேசுவின் சீடர் ஒவ்வொருவரும் இந்த இடத்தில் தன்னைத் தானே ஒரு கேள்வி கேட்க வேண்டும்: 'இயேசுவை நான் வாழ்வுதரும் உணவாக ஏற்றுக்கொள்கின்றேனா?'

இயேசுவின் போதனை கடினமாக இருப்பதாக முணுமுணுக்கும் சில சீடர்கள் அவரை விட்டுப் பிரிகின்றனர். 'நீங்களும் போய்விட நினைக்கிறீர்களா?' என்று தம் பன்னிருவரிடம் கேட்கின்றார் இயேசு. அவர்கள் பிரதிநிதியாக பேதுரு, 'நாங்கள் யாரிடம் போவோம்?' என்று கேள்வியையே பதிலாக முன்வைக்கின்றார்.

இயேசுவின் போதனையைக் கேட்டு முடித்த சீடர்கள், 'இதை ஏற்றுக்கொள்வது மிகக் கடினம். இப்பேச்சை இன்னும் கேட்டுக்கொண்டிருக்க முடியுமா?' என்று கேட்கின்றனர்.'நீங்கள் நம்புவதற்கு இது தடையாக இருக்கிறதா?' என இயேசு கேள்வியைத் திருப்புகின்றார். எது தடையாக இருக்கிறதா? இயேசு சொன்னதா? அல்லது இயேசு சொன்ன விதமா? இயேசுவின் போதனையைக் கேட்ட சீடர்கள் முணுமுணுக்கக் காரணம் அது புதியதாக இருந்ததால்தான். 'எல்லாரும் மாதிரியே நீரும் சொல்லலாமே! ஏன் நீர் மட்டும் புதியதாகச் சொல்கிறீர்?' என்பதுதான் அவர்களின் மனதில் இருக்கும் கேள்வி. 'எல்லா தெய்வங்களையும் போல இவரும் இருக்கலாமே! ஏன் இவர் மட்டும் வேறு மாதிரி இருக்கிறார்' என்று முதல் வாசகத்தில் யாவே இறைவனை ஏற்றுக்கொள்ள மக்கள் தயங்குகின்றனர்.

'அன்றே பலர் அவரை விட்டு விலகினர்' என்று சோகமாகப் பதிவு செய்கிறார் யோவான். உடனே இயேசு தன் பன்னிருவரிடம், 'நீங்களும் போய்விட நினைக்கிறீர்களா?' எனக் கேட்கிறார். இயேசு கேட்கும் இந்தக் கேள்வியில் நிறைய வலியும், வேதனையும் ஒளிந்திருக்கிறது. இது அவரின் மனித உரு தந்த வலியால் வரும் கேள்வி. மனிதருக்கு மனிதரின் உடனிருப்பு தேவைப்படுகிறது. 'என்கூட இவர்கள் எல்லாம் இருப்பார்கள்' என நினைத்த இயேசு தன் பன்னிருவரும் தன்னைவிட்டுப் போய்விடுவார்களா என்று கேட்கின்றார். ஆனால், இந்த இடத்தில் யூதாசைப் பற்றிக் குறிப்பிடுவதால், இயேசுவின் இந்தக் கேள்வியில், 'நீங்களும் போய்விடுவீர்கள்' என்ற பதில் ஒளிந்திருக்கின்றது. ஒத்தமைவு நற்செய்திகளில் 'நீர் கடவுளின் மெசியா' என அறிக்கையிடும் பேதுரு, யோவான் நற்செய்தியில் 'நீர் கடவுளின் தூயவர்' அல்லது 'அர்ப்பணமானவர்' என அறிக்கையிடுகின்றார். இங்கே பேதுரு இயேசுவை 'வார்த்தையாக' ஏற்றுக்கொள்கின்றார். ஆக, இயேசுவின் மனுவுரு நிகழ்விலிருந்து, அவரின் ஏறிச்செல்லுதல் வரை தான் ஏற்றுக்கொள்வதாகவும், இயேசுவின் முன் சராணகதியாவதாகவும் சொல்கின்றார் பேதுரு.

இப்படியாக, பன்னிருவர் சார்பாக, பேதுரு முடிவெடுக்கின்றார்.

'கடவுளை' மட்டும் தேர்ந்துகொண்டால் நல்லதுதானே? அப்புறம் ஏன் நம் மனித மூளை 'கடவுளை' ஏற்றுக்கொள்ள அல்லது 'கடவுளே போதும்' என முடிவெடுக்க மறுக்கின்றது?

இந்தக் கேள்விக்கு தூய அகுஸ்தினாரின் 'ஒப்புகைகள்' மற்றும் இன்றைய வாசகங்களின் பின்புலத்தில் விடை காண்போம்.

1. மூளையின் விதிமுறை

நம் மூளை ஒரே நேரத்தில் இரண்டு விதிமுறைகளால் இயங்க வல்லது: ஒன்று, 'நல்லதைத் தேர்ந்துகொள், தீயதை விட்டுவிடு.' இரண்டு, 'இன்பமானதைத் தேர்ந்துகொள், துன்பமானதை விட்டுவிடு.' உதாரணத்திற்கு, தேர்வில் நல்ல மதிப்பெண் எடுக்க வேண்டும் என மூளை நினைக்கும்போது அது நல்லதைத் தேர்ந்துகொள்கிறது. ஆனால், அதற்குப் படிக்க வேண்டுமே? என்ற கேள்வி வந்தவுடன், 'துன்பமமான படிப்பை விட்டுவிடு', 'இன்பமான காப்பி அடித்தல், அல்லது பணம் கொடுத்து பாஸ் ஆகுதல்' என்பதைப் பிடி! என்று சொல்லிவிடுகிறது. 'கடவுளைப் பின்பற்றுவது நல்லதுதான்'. ஆனால், அப்படிச் செய்யும் போது நமக்கு வலிக்குமே. கடவுள் விரும்பியதை நான் செய்ய வேண்டும் என்றால், எனக்கு விருப்பமானதை நான் செய்வதை விடுக்க வேண்டும். 'நல்லதைச் செய். நலமோடு வாழ்வாய்' என்பது கடவுளின் வார்த்தை. ஆனால், நல்லதைச் செய்வது கடினமாக இருக்கிறதே. என் மனத்தை நான் எப்படி அதற்கு ஆள்படுத்துவேன்? நான் நல்லதைச் செய்யாததால் துன்பம்தான் வருகிறது என எனக்குத் தெரிந்தும், என்னால் அதைச் செய்ய முடியவில்லையே? 'நட' என்று என் மூளை சொன்னவுடன் என் உடல் அதற்கு கீழ்ப்படிகிறது. ஆனால், 'செய்யாதே' என்று என் மனம் சொல்வதை என் மூளை கேட்க மறுக்கிறதே. ஏனெனில், மூளை இயல்பாகவே துன்பத்தை வெறுக்கிறது.

2. உடனடி ரிசல்ட்

எனக்குப் பணத் தேவை இருக்கிறது என வைத்துக்கொள்வோம். மூன்று வழிகள்: ஒன்று, அதற்காக உழைப்பது. இரண்டு, கடவுளிடம் வேண்டி ஏதாவது ஒரு வழி காட்ட வேண்டும் என்று சொல்வது. மூன்று, எனக்கு அடுத்திருப்பவரிடம் திருடுவது. நான் மூன்றாவது வழியைத் தெரிந்துகொண்டால், எனக்கு அடுத்த நொடி பணம் கிடைத்துவிடுகிறது. நான் எதிர்பார்த்த ரிசல்டை நான் பெற்றுவிடுகிறேன். ஆனால், நான் உழைத்தால் ஓரிரு நாளில் பணம் கைக்குவந்துவிடுகிறது. ஆனால், கடவுளைப் பற்றிக்கொண்டால் - எனக்கு ஒன்றும் நடப்பதில்லை. ஆக, உடனடி ரிசல்ட் தராத எதையும் மூளை ஏற்பதில்லை. அகுஸ்தினாரும் தன் மனமாற்றத்திற்கு முன் இப்படித்தான் புலம்புகின்றார்: 'நான் ஒரு பெண்ணை நுகர்ந்தால் அந்த இன்பம் உடனடியாக என் உடலில் தெரிந்து விடுகிறது. மூளையும் அந்த இன்பத்தைப் பதிவு செய்கிறது. ஆனால், நான் கற்பு கொண்டு உம்மில் வாழ நினைத்தால் என் உடலுக்கு என்ன இன்பம்? என் மூளைக்கு என்ன இன்பம்.' ஆக, உடனடி ரிசல்ட் தராத எதையும் மூளை ஏற்பதில்லை. ஆகையால்தான் இயேசுவின் சீடர்கள் அவரை ஏற்றுக்கொள்ளத் தயங்குகின்றனர். இயேசுவை ஏற்றுக்கொள்வதால் எந்த ஒரு உடனடி ரிசல்டும் கிடைப்பதில்லை. இஸ்ரயேல் மக்களுக்கு கண்களுக்குத் தெரியாத கடவுளைவிட, தங்களின் கையிடுக்கில் தெரிந்த குட்டிக்கடவுளர்கள் பாதுகாப்பைத் தந்தனர். அவர்களுக்கு கைகளில் ரிசல்ட் உடனே கிடைத்தது.

3. மறையுண்மை பெரிது

இன்றைய இரண்டாம் வாசகத்தில் (எபே 5:21-32) 'ஒளிபெற்றவர்களாய் வாழுங்கள்' என்று எபேசு நகரத் திருச்சபைக்கு அறிவுறுத்தும் தூய பவுல், தொடர்ந்து, கணவர்-மனைவியர் வாழ்க்கை நடத்தை பற்றி அறிவுறுத்துகின்றார். முதலில் மனைவியருக்கும் (5:22-24), பின் கணவருக்கும் (5:25-32) என இரண்டு படிகளாக அவரின் அறிவுரை இருக்கின்றது. கணவன்-மனைவி ஒன்றிப்பு பற்றிப் பேசும் பவுல், 'இருவரும் ஒரே உடலாயிருப்பர்' என்று முதல் ஏற்பாட்டு படைப்பு நிகழ்வை மேற்கோள் காட்டி, 'இந்த மறைபொருள் பெரிது!' என்கிறார். ஆக, இயேசுவும் திருச்சபையும் கணவன்-மனைவியாக இணைந்திருப்பது என்பது கண்களால் காண முடியாதது. காண்பது மட்டுமே உண்மை. காணாதவை பொய் அல்ல. கணவன் மனைவி உறவிலும் காணாத மறைபொருளே அவர்களை இணைக்கிறது. அதுபோல, ஒருவர் தான் எடுத்த முடிவினால் கடவுளைத் தேர்ந்துகொள்கிறார் என்றால் அது ஒரு மறைபொருள். அது கண்ணுக்குத் தெரியாது என்று சொல்வதால் அது பொய் என்று ஆகிவிடாது.

இவ்வாறாக, மேற்காணும் காரணிகள் நாம் கடவுளைத் தேர்ந்துகொள்ளும் முடிவிற்கு துணைநிற்கலாம், எதிர்க்கலாம், அல்லது முடிவிலிருந்து நம்மை வழிமாற்றலாம். ஆனால். முடிவைத் துணிந்து எடுக்க ஒருவர் ஊனியல்பிலிருந்து தூய ஆவிக்குக் கடந்து செல்ல வேண்டும்.

'வாழ்வு தருவது தூய ஆவியே. ஊனியல்பு ஒன்றுக்கும் உதவாது' என்கிறார். ஆக, நம்மில் உள்ள உடல், மூளை, இவற்றைக் கடந்து மனம் அல்லது ஆவி என்ற ஒன்று உண்டு. முன்னவை ஒன்றுக்கும் உதவாதவை. முன்னவை ஒன்றோடொன்று முரண்படுபவை. ஆனால், மனம் அல்லது ஆவி முரண்படாதது. உடல், மூளை, மனம் என ஒவ்வொரு நிலையாகக் கடந்துசெல்பவரே கடவுளைத் தெரிந்துகொள்ளும் முடிவை எடுக்க முடியும். இந்தக் கடந்துசெல்லதலுக்கும் கடவுளின் துணை தேவை. ஆகையால்தான், 'தந்தை அருள்கூர்ந்தால் அன்றி யாரும் என்னிடம் வர இயலாது' (யோவா 6:65) என்கிறார் இயேசு.


இறுதியாக,

நாம் காலையில் அணிந்து மாலையில் கழற்றி எறியும் ஆடை தொடங்கி, காலத்திற்கும் மாற்ற முடியாத கடவுளைப் பின்பற்றுதல்வரை நாம் முடிவுகள் எடுத்துக்கொண்டே இருக்கும் சுமையைத் தாங்கிக்கொண்டிருக்கிறோம். ஊனியல்பு மற்றும் அதன் இன்பத்தில் நாம் பிடிபட்டிருக்கும் வரை முடிவுகள் சுமையே. 'நான் இந்த முடிவை எடுத்து கஷ்டப்படுகிறேன். அவன் அந்த முடிவை எடுத்து நல்லா இருக்கிறானே' என்ற ஒப்பீடு நம் முடிவை மாற்றிவிட சோதனை தரும். முடிவிலிருந்து பின்வாங்க மூளை நிறையக் காரணங்களைத் தேடும். காரணங்கள் கிடைக்காதபோது நம் மனத்தோடு சண்டையிடும். அங்கே 'அவரின் அருள்கொடையை நாடுதல் நலம்.' ஏனெனில், அவராக அனுமதித்தாலன்றி நாம் எதையும் தெரிவுசெய்ய முடியுhது.

எனினும்,

இதில் அடங்கியுள்ள மறைபொருள் பெரிது!









Tuesday 14 August 2018

ஆண்டின் பொதுக்காலம் 20-ஆம் ஞாயிறு


ஆண்டின் பொதுக்காலம் 20-ஆம் ஞாயிறு

நீதி மொழிகள் 9:1-6
எபேசியர் 5:15 - 20
யோவான் 6:51-58


நிறைவாழ்வு
நிகழ்ச்சி
ஒரு ஞானி சாகாமைக்கு மருந்து கண்டுபிடித்தது. 
அருமையான சகோதரனே! சகோதரியே! சாகாமைக்கு மருந்து இல்லை. பிறப்பு ஒன்று இருந்தால் இறப்பு ஒன்று வந்தே தீரும். இது இயற்கையின் நியதி. காலத்தின் கட்டாயம்! ஆனால் இயேசு கிறிஸ்து சாகாமைக்கு மூன்று வகையான மருந்துகளை வழங்குகிறார். இந்த மூன்றையும் நமதாக்கிக் கொண்டால் நாம் நிலை வாழ்வு பெறுவோம். சாவு நம்மைப் பாதிக்காது. 

1. சாகாமைக்கு இயேசு வழங்கும் முதல் மருந்து
அவரில் நம்பிக்கை கொள்வதாகும். இன்றைய நற்செய்தியிலே என்னை நம்புவோர் நிலை வாழ்வைக் கொண்டுள்ளார் (யோவா. 6:47). மேலும் வாசரை உயிர்த்தெழச் செய்யும் முன் மார்த்தாவிடம் உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே. என்னிடம் நம்பிக்கை கொள்ளும் எவரும் என்றுமே சாகமாட்டார் (யோவா. 11:25-26).

2. சாகாமைக்கு இயேசு வழங்கும் இரண்டாவது மருந்து
அவருடைய வார்த்தையைக் கடைப்பிடித்தலாகும். 
என் வார்த்தையைக் கடைப்பிடிப்போர் என்றுமே சாக மாட்டார் (யோவா. 8:51). நான் கூறிய வார்த்தைகள் ஆவியும் உயிரும் ஆகும் (யோவா. 6:63) என்கிறார்.
நாங்கள் யாரிடம் செல்வோம்? வாழ்வு தரும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன (யோவா. 6:68).

3. சாகாமைக்கு இயேசு வழங்கும் மூன்றாவது மருந்து
அவருடைய திருவுடல் , திரு இரத்தமாகும். இன்றைய நற்செய்தியில் வாழ்வு தரும் உணவு நானே! இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார் (யோவா. 6:51).

நாம் பாவிகளாக இருந்தும், கிறிஸ்து நமக்காகச் சிலுவையில் கைகளை விரித்துப் பாடுபட்டுப் பலியானார். அந்த கல்வாரிப் பலியைக் காலமெல்லாம் நினைவுகூருவதுதான் திருப்பலியாகும். தன் உடலை உலகை மீட்பதற்காக இயேசு கையளிக்கிறார். கிறிஸ்துவே கொலைக்களத்திற்கு இட்டுச் செல்லப்பட்டார் (எசா. 53:7-12). தன் ஒரே பலியினால் கிறிஸ்து நம்மைத் தூயவராக்கி, நிறைவுள்ளவராக்கினார் (எபி. 10:14). அந்த ஒப்பில்லா பலியை, அவர் பணித்தவாரே திருச்சபை நிறைவேற்றுகிறது. 

கொடுப்பதில் நான்கு வகையுண்டு:

  • தன்னில் மிகுதியானதைக் கொடுப்பது (லூக். 21:1-4) 
  • உள்ளத்திலிருந்து கொடுப்பது. சக்கேயு (லூக். 19:8) 
  • உள்ளதை எல்லாம் கொடுப்பது (ஏழை கைம்பெண்) மாற். 12:41-44
  • தன்னையே கொடுப்பது - இயேசு தன்னையே கொடுத்தார். தன் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதைவிட சிறந்த அன்பு
  • யாரிடமும் இல்லை (யோவா. 15:13). 


நிகழ்ச்சி
ஐந்து பெண் குழந்தைகளுடன் வறுமைப் பிடியில் சிக்கித் தவித்த ஒரு ஏழைக் கைம்பெண், சாமி கர்த்தர்தான் எங்களைப் படைத்தார்! கண்ணீரைத்தான் எங்களுக்குக் கொடுத்தார். அந்தக் கண்ணீரையே அவருக்குக் காணிக்கையாக்குகிறோம் என்றாள். ஆம் கடவுளுக்கு ஏற்ற பலி நம் நொறுங்கிய நெஞ்சமே! (தி.பா 51:16-17)

பலாப்பழத்தில் பலாச் சுளையை எடுக்கக் கத்தி தேவைப்படுகிறது. வாழ்வைச் சுவைக்க புத்தியுடன் ஞானமும் தேவைப்படுகிறது. கிறிஸ்துவே கடவுளின் ஞானம்! (1 கொரி 1:24). அவர் அருள்வாக்கைக் கேட்டு அவரது திருவுடலை உண்டால் நமது அக இருள் அகற்றி ஞான ஒளி ஏற்றுவார்.
சில சமயம் முட்டாள்களாக நாம் வாழலாம். ஆனால் முட்டாள்களாக நாம் சாகக் கூடாது.




வாழ்வா? நிலை வாழ்வா?
வாழ்நாள் முழுவதும் நாம் அனைவரும் நிரந்தர மகிழ்ச்சியைத் தேடி அலைகின்றோம். வாழ நினைத்தால் வாழலாம்; வழியா இல்லை பூமியில்? ஆழக் கடலும் சோலையாகும், ஆசையிருந்தால் நீந்திவா; பார்க்கத் தெரிந்தால் பாதை தெரியும்; பார்த்து நடந்தால் பயணம் தொடரும்; கதவு திறந்தால் காட்சி கிடைக்கும்;
காட்சி கிடைத்தால் கவலை தீரும்;
கவலை தீர்ந்தால் வாழலாம்.
இவை கவிஞர் கண்ணதாசனின் கவிதை வரிகள். இந்த வரிகளை வாழ்க்கையாக்க எவ்வளவோ முயற்சி எடுக்கின்றோம். ஆனால் பல சமயங்களிலே நாம் சூழ்நிலையின் கைதிகளாகி துயரக் கடலில் வீழ்ந்து விடுகின்றோம்.
இதோ வாழ்வைத் தேடும், நிலை வாழ்வைத் தேடும் நமக்குத் தேவையான ஆரோக்கியம் நிறைந்த நல்ல வழியை நற்கருணை ஆண்டவர் நமக்குக் காட்டுகின்றார். அவர் நம்மைப் பார்த்து: என் மகளே! என் மகனே! நீ திருப்பலியின் போது என் உடலை உண்டால் நீ தேடும் நிலைவாழ்வைப் பெறுவாய் (முதல் வாசகம்); தூய ஆவியாரால் ஆட்கொள்ளப்பட்டு, ஆண்டவரின் திருவுளத்திற்கேற்ப நீ வாழ்வாய் (இரண்டாம் வாசகம்) என்கின்றார்.

இதோ வாழ்வுக்கும், நிலை வாழ்வுக்குமிடையே உள்ள வேறுபாடு.
           வாழ்வு                                                  நிலைவாழ்வு
1. முடிவுள்ளது                                             முடிவற்றது
2. மண்ணைச் சார்ந்தது                             விண்ணைச் சார்ந்தது
3. துன்பம் உண்டு                                          துன்பம் இல்லை
4. பாவமும், புண்ணியமும் கலந்தது   பாவமற்றது 
5. முடிவுள்ள இன்பத்தைத் தருவது     முடிவில்லா இன்பத்தைத் தருவது 
6. இன்பமும்,துன்பமும் மாறி வரும்   மாறாத இன்பத்தைத் தரும் 
7. பாசமும், பகையும் கலந்தது               பாசத்திற்கு மட்டுமே இடம் தருவது 
8. மரணத்திற்கு உட்பட்டது                     மரணத்திற்கு அப்பாற்பட்டது 
9. கடவுளைத் தேடும் காலம்                 கடவுளைக் கண்டடைந்த காலம் 
10. கடவுளை நம்பிக்கைக் கண்களால்  கடவுளை நேருக்கு நேர் பார்ப்பது

மேலும் அறிவோம் :

நெருநல் உளன்ஒருவன் இன்று இல்லை என்னும்
பெருமை உடைத்(து) இவ் வுலகு (குறள் : 336). 

பொருள் : நேற்று இருந்தவன் இன்று இறந்தான் என்று சொல்லும் இரங்கத்தக்க நிலையினைப் பெருமையாகக் கொண்டுள்ளது இவ்வுலகம்!





குஜராத் மாநிலத்தில் பெரும் வெள்ளம் வந்தபோது, ஒரு மனைவி கால் ஊனமுற்ற தன் கணவருடன் தன் வீட்டின் முன்னால் இருந்த மரத்தின் கிளை ஒன்றில் உட்கார்ந்தார், அக்கிளை இரண்டு பேரையும் தாங்க முடியாமல் முறிந்துபோகும் நிலையில் இருந்ததைக் கண்ட அம்மனைவி, ஊனமுற்ற தன் கணவரைக் காப்பாற்றும்படி அவர் வெள்ளத்தில் குதித்து, தன் உயிரையே தியாகம் செய்தார், நல்ல கணவருக்காக ஒரு மனைவி தன் உயிரைக் கொடுப்பது அரிது. ஆனால் ஊனமுற்ற கணவருக்காக அந்த மனைவி தன் உயிரைத் தியாகம் செய்தது நம்மை வியப்படையச் செய்கிறது.

கிறிஸ்து நமக்காகத் தம் உயிரைக் கையளித்ததைப் பற்றிக் கூறும் பவுல், "நேர்மையாளருக்காக ஒருவர் தம் உயிரைக் கொடுத்தலே அரிது;... ஆனால் நாம் பாவிகளாய் இருந்தபோதே கிறிஸ்து நமக்காகத் தம் உயிரைக் கொடுத்தார். இவ்வாறு கடவுள் நம்மீது கொண்டுள்ள அன்பை எடுத்துக் காட்டியுள்ளார்" (உரோ 5:7-8) என்று வியந்து எழுதுகிறார்.

ஆம், நாம் பாவிகளாய் இருந்தும் கிறிஸ்து நமக்காகச் சிலுவையில் கைகளை விரித்துப் பாடுபட்டுப் பலியானார். அவரின் கல்வாரிப் பலியைக் காலமெல்லாம் நினைவு கூருவதுதான் நற்கருணைத் திருப்பலியாகும். நற்கருணை ஒரு திரு உணவு மட்டுமன்று; அது உண்மையிலேயே ஒரு திருப்பலியுமாகும். இன்றைய நற்செய்தியில், "என் சதையை உணவாகக் கொடுக்கிறேன். அதை உலகு வாழ்வதற்காகவே கொடுக்கிறேன்" (யோவா 8:51) என்கிறார் கிறிஸ்து. இவ்வா று நற்கருணை உணவும் பலியுமா கும் என்பதை அவர் உணர்த்துகிறார். தமது உடலை உலக மீட்பிற்காகக் கையளிக்கிறார். 

இறுதி இரவு உணவின்போது அவர் அப்பத்தை எடுத்து, "இது உங்களுக்காகக் கொடுக்கப்படும் என் உடல்" (லூக் 22:19) என்றும், அவ்வாறே திராட்சை இரசம் நிறைந்த கிண்ணத்தை எடுத்து, "இந்தக் கிண்ணம் உங்களுக்காகச் சிந்தப்படுகிற எனது இரத்தத்தால் நிலைப்படுத்தப்படும் உடன்படிக்கை (லூக் 22:20) என்றும் கிறிஸ்து கூறினார். “கொடுத்தல்", " சிந்துதல்" என்ற சொற்கள் கிறிஸ்து தம்மையே பலியாகக் கொடுத்தார். தமது இரத்தத்தைச் சிந்தினார் என்பதை உணர்த்துகின்றன.

கிறிஸ்துவே கொலைக்களத்திற்கு இட்டுச் செல்லப்பட்ட (எசா 53:7-12). உலகின் பாவங்களைப் போக்கும் உண்மையான செம்மறி (யோவா 1:29). பாஸ்காச் செம்மறியின் எலும்புகள் முறிக்கப்படவில்லை (விப 12:48); அவ்வாறே கிறிஸ்துவின் எலும்பும் முறிக்கப்படவில்லை ) (யோவா 19:36). நமது பாஸ்காப் பலி நிறைவேறிவிட்டது. கிறிஸ்துவே அப்பாஸ்கா (1 கொரி 5:7). தமது ஒரே பலியினால் கிறிஸ்து நம்மைத் தூயவராக்கி, நிறைவுள்ளவராக்கினார் (எபி 10:14). அவரின் ஒப்புயர்வற்ற பலியை, அவர் பணித்தவாறே திருச்சபை நிறைவேற்றுகிறது,

பங்குத் தந்தை ஓர் இளைஞனிடம், "ஏம்பா, நீ பூசைக்கு வருவதில்லை ?" என்று கேட்டதற்கு அவன், "அது உங்கவேலை; உங்க வேலையை நான் ஏன் வந்து பார்க்கனும்? என் வேலையை நீங்க வந்து பார்க்கிறீர்களா?" என்று திருப்பிக் கேட்டான்.

திருப்பலி குருவின் பலி மட்டுமன்று; நம் அனைவரின் பலி: முழுத் திருச்சபையின் பலி. அதில் ஒவ்வொருவரும் முழுமையாக, ஈடுபாட்டுடன் பங்கேற்று. குருவுடன் இணைந்து தம்மையே காணிக்கையாக்க வேண்டும். கொடுப்பதிலே மூவகை உண்டு; உள்ளதிலிருந்து கொடுப்பது முதல்வகை. சக்கேயு தன்னிடமிருந்ததிலிருந்து பாதியைக் கொடுத்தார் (லூக் 13:8). உள்ளதையெல்லாம் கொடுப்பது இரண்டாம் வகை, ஏழைக் கைம்பெண் தன்னிடம் இருந்த அனைத்தையுமே உண்டியலில் போட்டுவிட்டார் (மாற் 12:41-44). தன்னையே கொடுப்பது மூன்றாம் வகை. இயேசு கிறிஸ்து தம்மையே நமக்காகக் கையளித்தார். 'தம் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதைவிட சிறந்த அன்பு யாரிடமும் இல்லை (யோவா 15:13) என்று அன்பிற்கு இலக்கணம் வகுத்துக் கொடுத்த கிறிஸ்து உலக மீட்பிற்காகத் தன் இன்னுயிரையே தாரை வார்த்துக் கொடுத்தார்.

அன்பிலார் எல்லாம் தமக்குரியர்; அன்புடையார் 
என்பும் உரியர் பிறர்க்கு(குறள் 72) 

எங்கும், எல்லாருக்கும், எல்லா வகையிலும் நாம் நம்மைப் பயனுள் ளவர்களாகச் செய்ய முடியும், இரத்தமின்றி உயிர் இழப்பவர்களுக்கு இரத்த தானம் செய்வது சிறந்தது. "இரத்தத்தைத் தானம் செய்வதால் நாம் சாக மாட்டோம். ஆனால் ஒருநாள் இரத்தமின்றி நாம் சாவோம்" என்பதை நெஞ்சில் நிறுத்துவோம். பிறருக்காக நாம் பயன்படாத நாள்கள் நாம் வாழாத நாள்கள்!

தன்னுடைய ஐந்து பெண்பிள்ளைகளுடன் வறுமையின் பிடியில் சிக்கித் தவித்த ஓர் ஏழைக் கைம்பெண் என்னிடம், "சாமி! கர்த்தர்தான் எங்களைப் படைத்தார்; கண்ணீரைத்தான் எங்களுக்குக் கொடுத்தார், அக்கண்ணீரையே அக்கர்த்தருக்குக் காலனிககையாக்குகிறோம்" என்றார், அவருடைய கடவுள் நம்பிக்கை நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றது!

கடவுளுக்குக் கொடுக்க நம்மிடம் வேறு காணிக்கை இல்லை என்றாலும் நமது கண்ணீரையாவது அவருக்குக் காணிக்கை ஆக்கலாமே? "கடவுளுக்கு ஏற்ற பலி நொறுங்கிய நெஞ்சமே" (திபா 51:16-17). நம் வாழ்வில் நாம் பல விதங்களில் வெந்துபோய், நொந்துபோய் வேதளைத் தீயில் புழுவாகத் துடிக்கிறோம், வறுமை, நோய் நோக்காடு, உறவின் முறிவுகள், விரிசல்கள். பிசகுகள், வலிப்புகள், மனஇறுக்கங்கள், பாவங்கள், பலவீனங்கள் ஆகியவற்றைக் கடவுளுக்குக் காணிக்கையாக்குவோம்.

“எங்கள் இறைவனாகிய ஆண்டவரே! தாழ்மையான மனத்தோடும் நொறுங்கிய உள்ளத்தோடும் வாடுகின்ற எங்களை ஏற்றருளும்" (திருப்பலி செபம்), கண்ணீரிலும் கடவுளைக் காண 'கம்யூட்டர் 'அறிவு போதாது: அதற்குக் கடவுளின் ஞானம் தேவை. அந்த இறை ஞானத்தைச் சுவைத்து மகிழ, பேதமை நீங்கிப் பேரின்ப வாழ்வு வாழ நம்மை அழைக்கிறது முதல் வாசகம். இரண்டாம் வாசகத்திலும், ஞானமற்றவர்களாய் வாழாமல் ஞானத்துடன் வாழ நம்மை அழைக்கிறார் புனித பவுல்.

பலாப்பழத்தில் பலாச் சுளையை எடுக்கக் கத்தி தேவைப்படுகிறது. வாழ்வைச் சுவைத்து வாழ புத்தியுடன் ஞானமும் தேவைப்படுகிறது. கிறிஸ்துவே கடவுளின் ஞானம் (1 கொரி 1:24). அவரைப் பின் சென்று, அவர் அருள்வாக்கைக் கேட்டு, அவருடைய திருவுடலை உண்டால் அவர் நமது அக இருளை அகற்றி ஞான ஒளி ஏற்றுவார்.

முட்டாள்களாக நாம் வாழலாம். ஆனால் முட்டாள்களாக நாம் சாகக்கூடாது. ஒரு முட்டாள், தான் முட்டாள் என்பதை உணரும்போது அவன் ஞானியாகிறான். ஒரு பாவி தான் பாவி என்பதை உணரும்போது அவன் நீதிமானாகிறான்!


வாங்கிவிட்டீர்களா?


இந்த ஆண்டு மே 15 முதல் ஆகஸ்ட் 15 வரை அமேசான் இந்தியா இணையதளத்தின் பேனர்களை நினைவுகூர்ந்தோம் என்றால், 'ஸ்கூல் இயர் ஸேல்,' 'ரம்ஸான் ஸேல்,' 'ப்ரன்ஷிப் டே ஸேல்,' 'இன்டிபென்டஸ் டே ஸே;' என நான்கு பேனர்களுக்குள் அதன் விற்பனையை அடக்கிவிடலாம். இதற்கிடையில், 'அமேஸான் ப்ரைம் ஸேல்' என்று ஒருநாள். இது அமேசான் இணையதளத்திற்கு மட்டுமல்ல. நாம் திறக்கின்ற செய்தித்தாள்கள், பார்க்கின்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கும் பொருந்தும். எப்ப பார்த்தாலும் நம்மைச் சுற்றிக் கேட்டுக்கொண்டே இருக்கின்ற ஒரு குரல், 'வாங்கிவிட்டீர்களா?' என்பதுதான். 'மொபைல் வாங்கிவிட்டீர்களா?' 'டிவி,' 'வாஷிங் மெஷின்,' தொடங்கி, 'டூத் பேஸ்ட்,' 'சோப்பு' வரை 'வாங்கிவிட்டீர்களா?' எனக் கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள். இந்த சப்தத்தோடு இணைந்து அவர்கள் அள்ளி எறியும் வாக்குறுதிகளும் நம் காதுகளில் வந்து விழும். 'அதிகமான பேட்டரி லைஃப்,' 'தெளிவான வண்ணத்திரை,' 'ஆறு நாள்களில் சிகப்பழகு,' 'மஞ்சள் கறைகள் நீங்கும்,' 'அதிகமான இணையதள வேகம்' என நிறைய வாக்குறுதிகள் வந்துவிழுகின்றன. நாம் வாங்கும் பொருள்கள் அவைகள் கொண்டுவரும் வாக்குறுதிகளை பெரும்பாலும் நிறைவேற்றுவதில்லை என்பது நமக்குத் தெரியும். பின் ஏன் நாம் வாங்குகிறோம்? பின் ஏன் நாம் புதிய பொருள்களை வாங்குகிறோம்? 'பொருள்கள் வாங்கும்போது நம்மை அறியாமலேயே ஒரு நிறைவு உணர்வு வருகின்றன' - இதுதான் மார்க்கெட்டிங் உளவியல். பஸ்ல போகும்போது பாருங்களேன். போத்தீஸ், சென்னை சில்க்ஸ் போன்ற துணிக்கடைகள் முன் பேருந்து நிற்கும்போதெல்லாம், அந்த நிறுத்தத்தில் கைப்பைகள், கட்டப்பைகள் என ஏறும் பயணிகளின் முகத்தைக் கவனியுங்கள். அவர்களின் முகத்தில் இனம்புரியாத ஒரு பெருமிதம் அல்லது நிறைவு உணர்வு இருக்கும். இந்தக் குறுகிய பெருமித உணர்வே நாம் பொருள்களை வாங்க வைக்கின்றன.

இன்றைய இறைவாக்கு வழிபாட்டிலும் இரண்டு விளம்பரங்களைப் பார்க்கின்றோம். இன்றைய முதல் வாசகத்தில் (காண். நீமொ 9:1-6), 'அறியாப் பிள்ளைகளே, இங்கே வாருங்கள் ... உணர்வை அடையும் வழியில் செல்லுங்கள்' என விளம்பரம் செய்கின்றது. இன்றைய நற்செய்தி வாசகத்தில், 'என்னை உண்போர் என்னால் வாழ்வர் ... இது மன்னா போல அல்ல ... வாருங்கள் ... உண்ணுங்கள் ... பருகுங்கள்' என விளம்பரம் செய்கின்றார் இயேசு. முதல் வாசகம் ஞானம் தயாரித்த உணவிற்கான விளம்பரம். நற்செய்தி வாசகம் இயேசுவே தன்னை உண்பதற்கு விடுக்கும் விளம்பரம். இரண்டு விளம்பரங்களுமே உணவிற்கானவைதாம். இரண்டு விளம்பரங்களையும் இணைத்தோம் என்றால், 'கடவுளின் ஞானமாய் விளங்கும் இயேசுவை நற்கருணை வடிவில், இறைவார்த்தை வடிவில் நாம் உட்கொள்கிறோம் என்றால் அவரோடு நாம் இணைந்திருக்கிறோம், வாழ்வு பெறுகிறோம். இந்த இரண்டும் நம் நல்ல நடத்தையில் (காண். இரண்டாம் வாசகம், எபே 5:15-20) வெளிப்படவேண்டும்!' ஆக, விளம்பரங்களும், விளம்பரங்களின் வாக்குறுதிகளும் இணைந்து செல்கின்றன இங்கே.

எப்படி?

இன்றைய முதல் வாசகத்திலிருந்து நம் சிந்தனையைத் தொடங்குவோம். இரண்டு பெண்களைப் பற்றியதுதான் இன்றைய முதல் வாசகம். ஒரு பெண் நேரிடையாகச் சித்தரிக்கப்படுகிறாள். மற்றொரு பெண் மறைவாக அமர்ந்திருக்கிறாள். யார் இந்தப் பெண்கள்? ஒரு பெண்ணின் பெயர் ஞானம். மற்றொரு பெண்ணின் பெயர் மதிகேடு. ஆண்கள் மற்றும் ஆணாதிக்கம் மேலோங்கி இருந்த காலத்தில் ஞானத்தை பெண் (1:20-33, 3:13-20, 7:4, 8:1-36) என வருணித்தது எப்படி? எபிரேய மற்றும் கிரேக்க மொழிகளில் ஒவ்வொரு பெயர்ச்சொல் மற்றும் பெயரெச்சத்திற்கும் பாலினம் உண்டு. ஞானத்தைக் குறிக்கம் ஹோக்மா என்ற எபிரேயச் சொல்லும், சோஃபியா என்ற கிரேக்கச் சொல்லும் பெண்பால். ஆகையால், ஞானம் பெண் என உருவகிக்கப்படுகின்றது. மேலும், மென்மையான மதிப்பீடுகளும் (அழகு, கொஞ்சல்), மென்மையான இயற்கை சூழல்களும் (நிலா, அந்திமாலை, இரவு) பெண்பாலிலேயே வருணிக்கப்பட்டன. ஆகையால், ஞானமும் பெண் என வருணிக்கப்படுகிறது. ஞானம் மற்றும் மதிகேடு என்ற இந்த இரண்டு பெண்கள் ஒருவருக்கொருவர் முரண்பட்டிருப்பதாக நீதிமொழிகள் நூல் சொல்கிறது (காண்க. 2:16-19. 5:3-14, 19, 20. 6:24-35. 7:1-27).

இன்றைய முதல் வாசகத்தைப் புரிந்து கொள்ளவேண்டுமென்றால் அதை இதற்கு முந்தைய மற்றும் பிந்தைய பகுதியோடு சேர்த்துப் பார்த்தல் வேண்டும். நீமொ 8 முழுவதும் ஞானத்திற்குப் புகழுரை பாடுகின்றார் ஆசிரியர். பாடிவிட்டு ஞானம் எப்படி மனிதர்களைத் தன்னிடம் அழைக்கிறது என்றும் (9:1-6), மதிகேடு எப்படி அழைக்கிறது என்றும் (9:13-18) எழுதுகின்றார்.

ஞானம் என்றால் என்ன? 'ஆண்டவரிடம் கொள்ளும் அச்சமே ஞானத்தின் தொடக்கம்' (9:10அ) என்றும், 'மெய்யுணர்வே ஞானம்' என்றும் (9:10ஆ) சொல்கிறது நீதிமொழிகள். எபிரேய விவிலியத்தில் ஞானம் என்பது கைவேலையில் சிறந்து விளங்குவது என்று சொல்லப்படுகிறது. அதாவது, ஒருவர் நல்ல சிந்தனையாளராக இருந்தால் அவரை அறிவாளி என்கிறோம். இதையே ஒருவர் மர வேலை, சிற்பவேலை போன்றவற்றில் சிறந்தவராக இருந்தால் அவரை ஞானி என்கிறது முதல் ஏற்பாடு. ஏனெனில் அறிவாளியில் மூளை மட்டுமே வேலை செய்கிறது. ஆனால் ஞானியிடத்தில் மூளையும், உடலும் இணைந்து வேலை செய்கிறது. இணைச்சட்ட நூல் 4ஆம் பிரிவு ஆண்டவரின் திருச்சட்டத்தைக் கடைப்பிடித்தலே ஞானம் என்று சொல்கிறது. மேலும், ஞானம் கடவுளின் ஆற்றல் அல்லது சக்தி என்றும், படைப்பின் தொடக்கத்திலேயே அது இருந்தது என்றும் நீமொ நூல் (காண்க. நீமொ 8) சொல்கின்றது.

இன்றைய முதல் வாசகத்தை இரண்டு உட்பிரிவுகளாகப் பிரிக்கலாம்: (அ) ஞானமும் அதன் செயல்களும், (ஆ) ஞானம் விடுக்கும் அழைப்பு

(அ) ஞானத்தின் செயல்கள் மூன்று: வீடு கட்டுகிறது, உணவு சமைக்கிறது, உணவை உண்பதற்கு எல்லாரையும் அழைக்கிறது. வழக்கமாக வீடு கட்டும் வேலை ஆண்களுக்குரியது. ஆனால் இங்கே ஒரு பெண் வீடு கட்டுகிறாள். எப்படி? ஏழு தூண்களைக் கொண்டு. ஏழு என்பது ஒரு செயலின் நிறைவை (தொநூ 2:2-3. லேவி 25:2-7) குறிப்பது. மேலும் சாலமோன் கட்டிய எருசலேம் ஆலயத்தில் ஏழு தூண்கள் இருந்தன (1 அர 7:17). ஆக, ஞானம் கட்டும் வீடு கடவுளின் கோவிலையும் குறிக்கலாம். மேலும் தூண்கள் ஒரு வீட்டின் பலத்தையும் சுட்டிக்காட்டுகின்றன. ஆக, ஞானம் கட்டும் வீடு பாதுகாப்பானது, பலமானது. இந்த வீடு கட்டும் வேலை முடிந்தவுடன் உணவு தயாரிக்கிறது ஞானம் - இறைச்சியும், தேனும் கலந்த உணவு. உணவு தயாரனவுடன் தன் தோழிகளை அனுப்பி மாந்தரை விருந்துக்கு அழைக்கின்றது. ஆனால் மதிகேடு வீட்டில் வாசற்படி மட்டுமே இருக்கிறது (9:13). மேலும் அதன் திருடிய தண்ணீரும், வஞ்சித்துப் பெற்ற உணவுமே. அது தன் வேலையாய்ச் செல்வேரின் கவனத்தை திசைதிருப்புகிறது.

(ஆ) ஞானத்தின் அழைப்பும் மூன்று: வாருங்கள், உண்டு பருகுங்கள், பேதைமையை விட்டுவிடுங்கள். இந்த அழைப்பை ஏற்பவர்கள் பெறவது வாழ்வு (9:6).

இன்றைய முதல் வாசகத்திற்கும், நற்செய்திக்கும் என்ன தொடர்பு?

அ. ஞானமும் இயேசுவும். தொடக்கத் திருச்சபையில் இயேசுவுக்கு வழங்கப்பட்ட ஒரு பெயர் 'கடவுளின் ஞானம்' என்பது: '...கிறிஸ்து கடவுளின் வல்லமையும் ஞானமுமாய் இருக்கிறார்' (1 கொரி 1:24), 'கிறிஸ்துவே கடவுளிடமிருந்து நமக்கு வரும் ஞானம்' (1 கொரி 1:30). மேலும் யோவான் தன் நற்செய்தியின் தொடக்கத்தில் பயன்படுத்தும் 'தொடக்கத்தில் வாக்கு இருந்தது' (யோவா 1:1) என்ற பகுதியில் 'வாக்கு' என்பது 'ஞானம்' என்றும், 'ஞானம்' என்பது இயேசு என்றும் பொருள்கொள்ளப்படுகிறது. ஆக, இன்றைய முதல் வாசகத்தில் ஞானம் விருந்துண்ண மக்களை அழைப்பது போல, இயேசுவும் நற்செய்தியில் தன் உடலை உணவாக உண்பதற்கும், தன் இரத்தத்தை பானமாக அருந்துவதற்கும் அழைக்கிறார். தன் விருந்தை உண்டால் மனிதர்கள் வாழ்வு பெறுவார்கள் என்றும், தன்னை உண்பவர் வாழ்வும், நிலைவாழ்வும் பெறுவர் என்கிறார் இயேசு. ஆக, ஞானத்தையும், இயேசுவையும் தேடுபவர்கள் வாழ்வைத் தேடுகிறார்கள்.

ஆ. மன்னாவும், மதிகேடும். இயேசு யோவான் 6ல் அடிக்கடி 'மன்னா உண்டவர்கள் மடிந்து போயினர்' என்கிறார். ஆக, கடவுள் தரும் உணவை முதல் ஏற்பாட்டில் மக்கள் உண்டாலும், அவர்கள் இறந்து போயினர். ஆக, அந்த உணவில் ஏதோ ஒரு குறை இருக்கிறது. அல்லது அதை உண்ட மக்களிடத்தில் ஏதோ ஒரு குறை இருக்கிறது. 'மதிகேடு' என்பதும் இப்படித்தான். 'கடவுளை நம்பாததே மதிகேடு' என்கிறது திபா 14:1. ஆக, கடவுள் தன் அருகில் இருக்கிறார் என்பதை மறுப்பதும், அவரின் பராமரிப்பை ஏற்றுக்கொள்ளாததும் கூட மதிகேடுதான். இந்த மதிகேடு வாழ்வைத் தருவதற்குப் பதிலாக நமக்கு இறப்பைத் தருகிறது.

ஞானம் தரும் விருந்து மற்றும் இயேசு தரும் உணவை உண்பவர்கள் எப்படி இருக்க வேண்டும் என்ற ப்ராக்டிக்கலான விளக்கத்தை இன்றைய இரண்டாம் வாசகம் தருகின்றது. 'ஒளி பெற்றவர்களாய் வாழுங்கள்' என்று தன் எபேசுநகர் திருச்சபைக்கு அறிவுறுத்தும் பவுலடியார் இறைமக்களின் நடத்தை எப்படி இருக்க வேண்டும் என அறிவுறுத்துகின்றார். 'உன் நடத்தை சரியில்லை' என்று நாம் மற்றவரிடம் சொல்லும்போதும், அல்லது மற்றவர்கள் என்னிடம் சொல்லும்போது அது குறிப்பது நம் அறநெறி வாழ்வையே. ஆனால், நடத்தை என்பது வெறும் அறநெறி சார்ந்தது மட்டுமன்று. அது, தன்மையம், பிறர்மையம், இறைமையம் என்ற மூன்று நிலைகளில் வெளிப்படுகிறது:

அ. தன்மையம். என் தனிப்பட்ட வாழ்வில் நடத்தை என்பது ஞானத்தோடு வாழ்வது. 'ஞானமற்றவர்களாய் வாழாமல், ஞானத்தோடு வாழுங்கள்' (5:15) என்று சொல்லும் பவுலடியார் தொடர்ந்து, 'அறிவிலிகளாய் இராமல், ஆண்டவருடைய திருவுளம் யாது எனப் புரிந்து கொள்ளுங்கள்' (5:17) என்கிறார். இந்த இரண்டு வாக்கியங்களையும் அருகருகே வைத்துப் பார்த்தால், 'ஆண்டவருடைய திருவுளம்' என்பதுதான் 'ஞானம்' என்று புரிந்து கொள்ளலாம். இதில் சிக்கல் என்னவென்றால் பல நேரங்களில் நாம் என்ன செய்ய நினைக்கிறோம் என்பதே நமக்குத் தெரிவதில்லை. இதில் 'கடவுளின் திருவுளத்தை' எங்கே போய் அறிந்து கொள்வது? சில நேரங்களில் கடவுளின் திருவுளத்திற்கு ஏற்ப நாம் நடப்பது போலவே இருக்கும். ஆனால் வாழ்க்கை நிகழ்வுகள் நமக்கு மகிழ்ச்சி தராமல் இருக்கும். இந்தப் போராட்டத்தை எப்படி வெல்வது?

ஆ. பிறர்மையம். 'ரொம்ப குடிக்காதீங்க! ஏன்னா, அது தாறுமாறான வாழ்க்கைக்கு வழிவகுக்கும்' (5:18) என்கிறார் பவுல். இதுதான் அறநெறி சார்ந்த நடத்தை. அதாவது, நான் செய்யும் ஒரு செயல் எனக்கு அருகிலிருப்பவரை அல்லது என்னைச் சார்ந்திருப்பவரை பாதிக்கிறது. 'எனக்கு இன்பம் வேண்டும்' என்பதற்காக நான் இதையெல்லாம் செய்வேன் என்று 'இன்பத்தை உடனடியாக நிறைவேற்றிக்கொள்ள' நான் நினைக்கும்போதெல்லாம் என் நடத்தை சரியில்லாமலேயே இருக்கிறது. 'குடிவெறி' என்பது எபேசுநகரத்தில் இருந்த ஒரு பிரச்சினை. ஏன் நாம் தட்டிக்கொண்டிருக்கும் தொடுதிரைகள்கூட சில நேரங்களில் நம் 'குடிவெறி' என மாறிவிடலாம்.

இ. இறைமையம். 'உங்கள் உரையாடல்களில் திருப்பாடல்கள் இருக்கட்டும்!' - அதாவது, உங்கள் வாழ்வு முழுவதும் இறைப்பிரசன்னம் மட்டுமே நிறைந்திருக்கட்டும். 'காலத்தை நன்கு பயன்படுத்துங்கள்' (5:16) என்ற பவுல் சொல்லும்போது 'நேர மேலாண்மை' பற்றி எழுதவில்லை. மாறாக, மீட்பின் காலம் என்று சொல்லப்பட்ட உயிர்ப்புக்கும், இரண்டாம் வருகைக்கும் இடைப்பட்ட காலத்தை இறைவனை மையமாக வைத்து வாழுங்கள் என்கிறார். இதை நாம் இன்று நேர மேலாண்மை எனவும் எடுத்துக்கொள்ளலாம். இன்று என் நேரத்தைத் திருடும் காரணிகள் எவை? அல்லது நானாக வீணடிக்கும் தருணங்கள் எவை? மேலும், நான் செய்யும் வேலைகளில் இறைவனின் பிரசன்னம் என் வர்த்தைகள் வழியாக வெளிப்படுகிறதா? இறுதியாக, 'எல்லாவற்றிற்கும் எப்போதும் கடவுளுக்கு நன்றி செலுத்துங்கள்' (5:20).

இதை இன்றைய நற்செய்தியோடு ஒப்பிட்டுப் பார்ப்போம்.

இன்றைய நற்செய்தியில் இயேசு 'வாழ்வு' என்று ஒன்பது முறை குறிப்பிடுகிறார். 'வாழ்வு' என்பதை கொஞ்சம் ப்ராக்டிகலா 'நடத்தை' என்று எடுத்துக்கொண்டு, 'இயேசுவை நான் உண்டால் என் நடத்தை தூய பவுலடியார் சொல்வது போல இருக்கிறதா' என்று சுயஆய்வு செய்து பார்க்க இன்றைய இரண்டாம் வாசகம் உதவுகிறது.

யோவான் நற்செய்தியின் 6ஆம் அதிகாரம் முழுவதும் 'வாழ்வுதரும் உணவு' என்பதை மையமாக வைத்துதான் இருந்தாலும், ஒவ்வொரு உட்பிரிவிலும் முன்வைக்கப்படும் கருத்துக்கள் இன்னும் ஆழமானவையாக இருக்கின்றன. கடந்த வாரம் இயேசுவின் உரையாடல் யூதர்களோடு இருந்தது. யூதர்கள் இயேசுவின் மனிதப் பிறப்பை மேற்கோள் காட்டி அவரை ஏற்றுக்கொள்ள தயங்குகின்றனர்.

இன்றைய நற்செய்திப்பகுதி கடந்த வாரங்களில் வாசித்த இறைவாக்குப் பகுதிகளைவிட மாறுபட்டு இருக்கின்றன:

அ. உரையாடல் யூதர்களுக்கும், இயேசுவுக்கும் என்று இருந்தது இன்று 'மக்களுக்கும், இயேசுவுக்கும்' என மாறுகின்றது.

ஆ. இதுவரை 'உணவு' என்றே சொல்லிவந்த இயேசு, இன்று 'என் சதை உணவு' என்றும் 'என் இரத்தம் பானம்' என்றும் சொல்ல 'பானம்' என்ற புதிய காரணியை கொண்டு வருகின்றார்.

இ. மேலும், இதுவரை 'உண்ணுங்கள்!' என்று கட்டளை வினைச்சொல்லாக சொல்லிவந்த இயேசு, இன்றைய நற்செய்தியில் தன்னை உண்பவர் பெறும் பலன்களை வாக்குறுதிகளாக முன்வைக்கின்றார். இயேசு முன்வைக்கும் வாக்குறுதிகள் இரண்டு: அவர்கள் 'இணைந்திருப்பர்', 'வாழ்வு பெறுவர்'.

இயேசுவின் உணவு என்றால் என்ன?

அ. கடந்த வார நற்செய்தியை நாம் சிந்தித்தபோது அதில் நற்கருணையை இணைத்துப் பார்த்தோம். ஆனால், கடந்தவார நற்செய்தியைவிட இந்த வாரம்தான் நற்கருணைக்கான கூறுகள் அதிகம் காணப்படுகின்றன. இன்றைய நற்செய்தியில்தான் 'பானம் அல்லது இரத்தம்' இடம்பெறுகிறது. மேலும், இந்த உணவும், இரத்தமும் மக்கள் வாழ்வு பெறுவதற்காக இயேசுவால் கையளிக்கப்படுகிறது. ஆக, என்னை உண்ணுங்கள் என்று சொல்லும்போது, அது நற்கருணையைக் குறிக்கிறது என எடுத்துக்கொள்ளலாம்.

ஆ. வார்த்தையும் உணவே. 'மனிதர் அப்பத்தினால் மட்டுமன்று, கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றினாலும் உயிர்வாழ்கிறார்' என்று இயேசுவின் சோதனையின்போது மற்ற நற்செய்தியாளர்கள் வெளிப்படையாக எழுதுவது யோவானின் நற்செய்தியில் மறைந்து கிடக்கிறது. ஆக, இயேசுவின் வார்த்தையும் உணவுதான்.

உணவு என்பது இறைவாக்கையும், நற்கருணைiயும் குறிக்கிறது என்று சொல்லி இந்த நற்செய்தியை ரொம்ப எளிதாக்கிவிடுவும் எனக்குப் பயமாக இருக்கிறது. இந்த இரண்டும் இல்லாமல் வேறொன்றைக்கூட இயேசு சொல்லியிருக்கலாம். இன்னும் தேடுவோம்!

இப்போதைக்கு இறைவார்த்தையும், நற்கருணையும் இயேசு தரும் உணவு என்ற எடுத்துக்கொள்வோம்.

இந்த இரண்டும் அதை உண்பவருக்குத் தரும் வாக்குறுதிகளும் இரண்டு:

அ. அவர்கள் என்னோடு இணைந்திருப்பர் (6:56)
ஆ. அவர்கள் வாழ்வு பெறுவர் (6:57)


வாட்ஸ் ஆப், ஃபேஸ்புக் சாட்களில் இருக்கும் பச்சைப் புள்ளி நமக்குச் சொல்லும் கருத்து என்ன? நாமும், நம் நண்பர் ஒருவரும் இணைந்திருக்கிறோம் என்பதுதான். நாம் சாலையில் நடந்து செல்லும்போது எரியும் பாதசாரிகளின் பச்சைவிளக்கு சொல்வதும் இதுதான்: 'இப்போது சாலையின் இந்தப் பக்கமும், அந்தப் பக்கமும் இணைக்கப்படுகிறது. நீ பாதுகாப்பாக நடந்து செல்லலாம்!'

இன்று நாம் நம்மையறிந்தோ, அறியாமலோ மற்றவரோடு இணைந்தே இருக்கிறோம்: இரத்த உறவு வழியாக, திருமண உறவு வழியாக, அருள்நிலை வாக்குறுதி வழியாக, மருத்துவமனையில், திரையரங்கில், பேருந்தில், சிற்றுண்டி சாலைகளில், உணவகங்களில், வழிபாடுகளில், பொதுக்கூட்டங்களில். இந்த இணைந்திருத்தல்கள் ஒரே வகையும் அல்ல. 'இணைந்திருத்தல்' என்னும் சொல்லாடலை யோவான் திராட்சைக்கொடி உருவகத்திலும் கையாளுகின்றார் (காண்க. 15:1-17). 'இணைந்திருத்தல்' என்பது தமிழ்ப்பதமாக இருந்தாலும், கிரேக்கத்தில் இது 'நிலைத்திருத்தல்' அல்லது 'குடியிருத்தல்' (மெனோ) என்றே இருக்கிறது. நாம் இணைந்திருத்தல் என்ற பதத்திலேயே சிந்திப்போம்.

இணைந்திருத்தல் என்று சொல்லும்போது நாம் இரண்டு கேள்விகளைக் கேட்க வேண்டும்: ஒன்று, யாரோடு? இரண்டு, எதற்காக? இந்த இரண்டிற்கும் பதில் சரியானதாக இருந்தால்தான் இணைந்திருத்தல் நிறைவு பெறும். உதாரணத்திற்கு, ஒரு மாணவன் ஆசிரியரோடு இணைந்திருக்கிறான். இந்த இணைந்திருத்தலில் கற்றல் என்ற நோக்கம் இருக்கிறது.

'அவரிடம் வாழ்வு இருந்தது. அவ்வாழ்வு மனிதருக்கு ஒளியாய் இருந்தது!' (யோவான் 1:4) என நமக்கு வாழ்வாக வரும் இயேசு தன்னையே வாழ்வுதரும் வார்த்தையாக, தண்ணீராக, ஒளியாக, உணவாக வாக்களித்துக்கொண்டே இருக்கின்றார்.  எது குறைவாக இருக்கிறதோ அதுவே அதிகம் தேவையாக இருக்கிறது. ஆக, இயேசுவின் காலத்தில் இறப்பின் அல்லது இழப்பின் காரணிகள் மேலோங்கியிருந்திருக்க வேண்டும். ஆகையால்தான், அதற்கு மாற்றாக வாழ்வை முன்வைக்கிறார். இன்றைய நற்செய்தியின் எட்டு வசனங்களில் ஒன்பது முறை 'வாழ்வு' என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. இயேசுவில் முரண்பாடுகள் இருப்பதில்லை. அவர் வாழ்ந்த காலத்திலேயே அவரை உண்பதற்கு, அவரை உணர்வதற்கு அவரை அணுகிச்சென்றவர்கள் எல்லாரும் நலம் பெறுகின்றனர். அவர் யாரை அணுகிச்சென்றாலும் அங்கே நலமும், மீட்பும், வாழ்வும் பிறக்கின்றது.

இறுதியாக, 'ஞானமா, மதிகேடா?' 'இயேசுவா, மன்னாவா?' - எதைத் தேர்ந்துகொள்வது?இந்தத் தெரிவு நம் ஒவ்வொருவரின் விருப்பத்தைப் பொறுத்ததே. ஞானத்தை அடைவது ஒரு வாழ்க்கைப் பயணம். அது கட்டியிருக்கும் வீடு மலைமேல் இருக்கிறது. அதற்குப் படிகள் கிடையாது. நாமாக முயற்சித்து மேலே ஏற வேண்டும். யாரும் செல்லாத வழி அது. நாமாகத்தான் பாதையைக் கண்டுபிடிக்க வேண்டும். மன்னா கிடைக்கும் பாலைநிலத்திற்கான வழி அகலமானது. பல வழிகளில் பாலைநிலம் செல்லலாம். ஆனால், இயேசுவை அடையும் ஒரே வழி இடுக்கமான வழி. இன்று அகல விரித்து விளம்பரங்களைக் காணும் நாம் அவற்றிற்குக் கீழே சின்ன எழுத்துக்களில் வரும் நிபந்தனைகளையும், விதிமுறைகளையும் கண்டுகொள்வதில்லை. நிபந்தனைகள் இல்லாத அழைப்பு ஞானத்தின்-இயேசுவின் அழைப்பு. இவற்றை வாங்கும்போது ஏற்படும் நிறைவு நீடித்தது.

ஞானமும், இயேசுவும், 'என்னை வாங்கிவிட்டீர்களா?' எனக் கேட்கின்றனர். நம் பதில்?