Friday 9 March 2018

தவக் கால 4-ஆம் ஞாயிறு



2 குறி 36:14-16, 19-23; எபே 2:4-10; யோவா 3:14-21



மூன்றாவது கை தேவை

மகிழ்ச்சியுட்டும் மறையுறைகள் குடந்தை ஆயர் F.அந்தோணிசாமி
 
சில மனிதர்களின் இதயங்கள்
ஈசல்களின் இறகுகள்!
கொஞ்ச நேரம்
படபடத்து விழுந்துவிடுகின்றன!
காரணம்? தனிமனித வாழ்க்கையிலும், சமூக வாழ்க்கையிலும் அவர்களுக்கு உண்டாகும் நெரிசல்கள், மனவடுக்கள், மோதல்கள். முரண்பாடுகள், நோய்கள், நொடிகள், ஏமாற்றங்கள், குழப்பங்கள்!

இதோ, வாடிவதங்கிக் கிடப்பவர்களுக்கு இன்று இயேசு வழிகாட்டுகின்றார். அவர் நம் ஒவ்வொருவரையும் பார்த்து : என்மீது நம்பிக்கைக் கொள். நீ அழியாத நிலைவாழ்வு பெறுவாய் என்கின்றார் (நற்செய்தி).
நம்பிக்கை என்றால் என்ன? காயப்படுத்தும் இறைவன் குணமாக்குவார் என்ற உண்மையை ஏற்றுக்கொள்வதற்குப் பெயர்தான் நம்பிக்கை. கல்தேயரின் மன்னன் வழியாக கோயிலை எரித்த கடவுள், பாரசீக மன்னன் சைரசு வழியாக அதைக் கட்டியெழுப்ப ஏற்பாடு செய்ததாக 2 குறி 36:14-23 கூறுகின்றது. காயப்படுத்தினாலும் கட்டுப் போடுபவர் அவரே; அடித்தாலும் ஆற்றுகின்ற கை அவரதே என்கின்றது யோபு நூல் (யோபு 5:18). புனித பவுலடிகளாரோடு இணைந்து கடவுள் மிகுந்த இரக்கம் உடையவர், அவர் நம்மீது மிகுந்த அன்பு கொண்டுள்ளார் (எபே 2:4) என்று அறிக்கையிடுவதற்குப் பெயர்தான் நம்பிக்கை.
நம்பிக்கை நம்மை நலமாக்கும் என்பதற்கு இதோ ஓர் உதாரணம்.

சில ஆண்டுகளுக்கு முன் மும்பையில் அருங்கொடை மாநாடு மூன்று நாள்கள் நடைபெற்றது. இறுதி நாளில் குணமளிக்கும் வழிபாட்டில் கலந்துகொள்ள அந்நகரைச் சேர்ந்த, முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட ஒரு பெண் வெகு ஆவலாய் இருந்தாள்.

இயேசு தன்னைக் குணப்படுத்துவார் என்று நம்பினாள். அவளை அவளது உறவினர் செபக்கூட்டம் நடக்கும் இடத்திற்குக் கொண்டு சென்றனர். போகும் வழியில் ஒரு கடையில் தன் கால்களுக்கு ஏற்ற ஒரு ஜோடி காலணிகளை அவள் வாங்கினாள். குணம் பெற்று திரும்பி நடந்து வரும்போது அவை வேண்டுமே என அவள் எண்ணினாள். அவளின் நம்பிக்கை வீண்போகவில்லை. குணமளிக்கும் வழிபாட்டில் அவள் பூரண சுகமடைந்து நடக்க ஆரம்பித்தாள். திரும்பிச் சென்றபோது காலணிகளை அணிந்துகொண்டு வீட்டுக்குச் சென்றாள்.

உடல் நலமற்றோர் சிலர்மேல் கைகளை வைத்துக் குணமாக்கியதைத் தவிர இயேசுவால் அவரது சொந்த ஊரில் வேறு வல்ல செயல் எதையும் செய்ய இயலவில்லை. அவர்களது நம்பிக்கையின்மையைக் கண்டு அவர் வியப்புற்றார் என்று நற்செய்தியில் படிக்கின்றோம் (மாற் 6:5-6அ).
நாம் நமது மன்றாட்டின் வழியாக நலம் பெற நமக்கு இரண்டு கைகள் இருந்தால் பற்றாது ; மூன்றாவது கை ஒன்று வேண்டும் - அதுதான் நம்பிக்கை. மேலும் அறிவோம் :
உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்
சேராது இயல்வது நாடு (குறள் : 734).
பொருள் : கொடிய பசி, நீங்காத நோய், அழிவு செய்யும் பகை ஆகிய தீமைகள் வராமல் அமைதியாக இயங்குவதே நல்ல நாடாகும்!




சிலுவையில் தொங்கும்  இயேசுவைப் பார்
குன்று நோக்கி... அருள்திரு இ.லூர்துராஜ்


சில ஆலயங்கள் வழிபாட்டுக்குரிய புனிதத் தலங்களாக மட்டுமல்ல கருத்தாழமிக்கக் கலைக் கூடங்களாகவும் காட்சி தருகின்றன.

பல ஆண்டுகளுக்கு முன்னே இங்கிலாந்து நாட்டில் ஆக்ஸ் ஃபோர்டு பல்கலைக் கழகச் சிற்றாலயம் ஒன்றில் அமைந்திருந்த கண்ணாடிச் சித்திரம் அதற்குச் சான்று. பீடத்துப் பின் சுவரில், நுழைந்ததும் கண்ணில் பட்டு ஈர்க்கும் வகையில் இருந்தது அந்த ஒவியம். கண்ணாடியின் வெளிப்புறம் பழைய ஏற்பாட்டு நிகழ்வும் 12.ள்புறம் அதற்கு இணையான புதிய ஏற்பாட்டு நிகழ்வும் ஓவியங்களாகத் தீட்டப்பட்டிருந்தன. வெளியிலிருந்து ஒளி கண்ணாடியை உடுருவுகிற போது இரண்டு காட்சிகளும் ஒருங்கிணைந்து ஒன்றுக் கொன்று நிறைவும் பொருள் விளக்கமும் தருவதாகத் தெரியும்.

ஆலயத்தில் உள்ளே இருந்து அந்தக் கண்ணாடியை உற்றுப் பார்த்தால், மோரியா மலையில் ஆபிரகாம் தன் மகன் ஈசாக்கைப் பலி கொடுக்க ஓங்கிய கையோடு இருப்பது மென்மையான ஒளியின் பின்னணியில் தெரியும். அதே நேரத்தில் கல்வாரிச் சிலுவையும் தெரியும். சிறிது அசைந்து வேறொரு கோணத்தில் கம்பத்தில் உயர்த்திய வெண்கலப் பாம்பையும் பார்க்கலாம்.

இயேசுவின் தியாக மரணம் பழைய ஏற்பாட்டில் நிழலாடும் நிகழ்வாகவும் புதிய ஏற்பாட்டில் நிறைவு காணும் நிகழ்வாகவும் இறைவனின் ஒட்டு மொத்த மீட்புத் திட்டத்தை எப்படித் தெளிவு படுத்துகின்றன!

திருவிவிலியம் முழுவதுமே மனித மீட்புக்காகத் தன்னுயிர் ஈந்த இயேசுவின் சிலுவையை நோக்கியது, மையமாகக் கொண்டது. கொள்ளி வாய்ப் பாம்புகளால் கடியுண்ட இசரயேல் மக்கள் சாவினின்று விடுதலை பெற கோவில் உயர்த்திய வெண்கலப் பாம்பை நோக்கியது போல, நிலைவாழ்வு காண சிலுவையில் தொங்கும் இயேசுவை நோக்கி மனத்தைத் திருப்பத் தவக்காலம் நம்மை அழைக்கிறது.

"பாம்புகளும் ஏணிகளும் என்ற விளையாட்டு தெரியுமா? வீடு நோக்கிய பயணம். பாதை முழுவதும் சிறிதும் பெரிதுமாக பாம்புகளும் ஏணிகளும், தாயத்தை உருட்டிப் போட அதில் வரும் எண்களுக்கேற்ப, காயை நகர்த்துகிறோம், யார் முதலில் வீட்டை அடைவது என்பதுதான் போட்டி. காய் ஏணியைத் தொட்டால் மேலே கிடுகிடுவென ஏறும். பாம்பின் வாயில் பட்டால் மடமடவெனக் கீழே இறங்கும், வீட்டை நெருங்கிய நேரத்தில் கூட பாம்பால் கடியுண்டு கீழே படுபள்ளத்தில் இறங்க நேரிடும்.

வாழ்க்கையும் அப்படித்தான். நமக்குப் பாம்பு எது, ஏணி எது?

பழைய உடன்படிக்கையில் பாலைவனத்தில் இறைவனுக்கும் மோசேக்கும் எதிராகக் கைகளை உயர்த்தியவர்களை, குரல் எழுப்பியவர்களைக் கொள்ள வாய்ப் பாம்புகள் கடிக்க, இறைவனின் ஆணைப்படி மோசே வெண்கலத்தால் பாம்பு ஒன்றைச் செய்து அதை உயர்த்திப் பிடித்தார். அதை உற்று நோக்கியவர்கள் உயிர் பிழைத்தனர் (எண்.24:4-9)

உலக மருத்துவத் துறை தனது சுகம் அளிக்கும் தொழிலின் அடையாளச் சின்னமாகக் கொண்டிருப்பது இந்தக் "கோலில் சுற்றிய பாம்பு”.

விவிலியத்தில் பாம்பு 1. பாவத்தின் சின்னமாகச் சித்திரிக்கப் படுகிறது. (ஏதேன் தோட்டத்தில் ஏவாளை வஞ்சித்த காரணத்தால்) 2. பாவத்தின் தண்டனையாகக் குறிக்கப்படுகிறது. (கொள்ளிவாய்ப் பாம்புகளைக் கொண்டு இசர யேலரைக் கடிக்க வைத்ததால்) 3.பாவத்தின் கழுவாயாக ஆக்கப்படுகிறது (வெண்கலப் பாம்பை பார்த்தவர்களை சாவினின்று விடுவித்ததால்). இந்த நிகழ்ச்சியுடன் தொடர்புபடுத்தி, மனித இனம் வாழ்வு பெற "பாலை நிலத்தில் மோசே யால் பாம்பு உயர்த்தப்பட்டது போல மானிட மகனும் உயர்த்தப்பட வேண்டும்" என்கிறார் இயேசு.

சிலை வழிபாட்டை வீரியத்துடன் எதிர்த்த இறைவன் வெண்கலப் பாம்பைச் செய்ய ஆணையிட்டது வியப்பைத் தருகிறது. இதனால் வெண்கலப் பாம்பைச் சிலுவையின் முன் அடையாளமாக இறைவன் மனத்திலிறுத்தி இந்த ஆணையைத் தந்திருக்க வேண்டும்,

நிழலின் அருமை வெயிலில் தெரியும். இறைவனின் அன்பு சிலுவையில் தெரியும். சிலுவை ஒருபக்கம் பாவத்தின் கொடுமையை வெட்ட வெளிச்சமாக்குகிறது. மறுபக்கம் எல்லையற்ற இறையன்பை வெளிப்படுத்துகிறது.

மீட்பு என்பது என்ன? இறையன்பின் அரவணைப்பிலிருந்து விலகிச் சென்ற நாம், மீண்டும் மனந்திரும்பி அந்த அன்பின் அரவணைப்புக்குள் வருவதுதான். அதற்குப் பாலைவனப் பாம்பாக இயேசு சிலுவையில் உயர்த்தப்படுகிறார். அவரைப் பார்த்து அவரோடு ஒன்றிக்கும்போது நாம் மீட்படைகிறோம்.

யோவானின் இறையியல் பார்வையில் இயேசு சிலுவையில் அறையப் படவில்லை; உயர்த்தப்பட்டார். அதாவது மாட்சிமை அடைந்தார். சிலுவைச் சாவு இயேசுவுக்கு மகிமையின் வாயில், மரணமடையும் நேரத்தை மாட்சிமை பெறும் நேரம் என்றே சொல்வார் (யோ. 12:23) துன்புறும் இறைஊழியன் பற்றி கவிதையிலும் எசாயா அதே சிந்தனையைத் தருவார் (எசா.52:13)

கிறிஸ்து மூன்றுமுறை தன் பாடுகளை முன்னறிவிப்பதாக மத்தேயு எழுதுகிறார் (மத்.16:21, 17:33, 20:18). இயேசு மூன்று முறையும் உயர்த்தப்படுவதாகவே குறிப்பிடுகிறார். (யோ. 3:14, 8:28, 12:32)

சிலுவையில் உயர்த்தப்பட்டவரை உற்றுநோக்குங்கள் பாவ நஞ்சு நீங்கும், உயிர் பெற்று வாழ்வோம்.

பாவ இருளின் பிடியில் நாம் சிக்கி அழியா வண்ணம் “நாம் வாழ்வு பெறும் பொருட்டுக் கடவுள் தம் ஒரே மகனை உலகிற்கு அனுப்பினார். இதனால் கடவுள் நம்மீது வைத்த அன்பு வெளிப்பட்டது. தம் மகனை நம் பாவங்களுக்குக் கழுவாயாக அனுப்பினார் என்பதில் தான் அன்பின் தன்மை விளங்குகிறது” (1 யோ.4:9,10)

அன்பே கடவுள். நம்பிக்கையே வாழ்வு.



மறையுறை மொட்டுகள் 

அருள்பணி Y.இருதயராஜ்

சாமிநாதர் சபைக்குருவும், இயேசு சபைக்குருவும், கப்புச்சின் சபைக் குருவும் உணவறைக்குச் சென்றனர். அங்கு ஒரு பெரிய பொரித்த மீன் மட்டும் இருந்தது. ஒரு பாத்திரத்தில் குழம்பும் இருந்தது. பொருத்தமான விவிலிய வசனத்தை யார் சொல்லுகிறாரோ, அவர் மட்டும் அந்த மீனைச் சாப்பிடலாம் என்று மூவரும் ஒத்துக்கொண்டனர். சாமிநாதர் சபைக்குரு கத்தியை எடுத்து "முதலும் முடிவும் நானே" என்று சொல்லி, மீனின் தலையையும் வாலையும் வெட்டி எடுத்துக் கொண்டார். இயேசு சபைக்குரு, "நானோ உயர்த்தப்பட்டபின் அனைத்தையும் என்பால் ஈர்த்துக்கொள்வேன்" என்று சொல்லி மீதியிருந்த மீன் முழுவதையும் எடுத்துக் கொண்டார், கப்பூச்சின் சபைக்குரு வேறு வழியின்றி, தனது நீண்ட தாடியைக் குழம்பில் தோய்த்து, "ஆண்டவரே! ஈசோப் புல்லினால் என்மேல் தெளித்தருளும்" என்றார்.

இயேசு சபைக்குரு கூறிய விவிலிய வாக்கு இன்றைய நற்செய்தியில் முக்கிய இடம் பெறுகிறது. 'மானிட மகன் உயர்த்தப்பட வேண்டும்' பழைய உடன்படிக்கையில் பாலைவனத்தில் கடவுளுக்கும் மோசேக்கும் எதிராகப் பேசியவர்கள் கொள்ளிவாய்ப் பாம்புகளால் கடிபட்டு இறக்கும் நிலையில் இருந்தனர். கடவுள் கேட்டுக் கொண்டபடி, மோசே வெண்கலப் பாம்பு ஒன்றைச் செய்து, அதை ஒரு கோலில் உயர்த்திப் பிடித்தார், அப்பாம்பைப் பார்த்தவர்கள் உயிர் பிழைத்தனர் {எண் 21:4-9). கிறிஸ்து இந்நிகழ்ச்சியை நினைவிற் கொண்டு நிக்கதேமுவிடம் "மானிட மகனும் உயர்த்தப்பட வேண்டும்" என்கிறார்.

ஒத்தமைவு நற்செய்திகளில் கிறிஸ்து தம் பாடுகளை மூன்று முறை முன்னறிவிக்கின்றார் (எ.கா. மத் 16:21; 17:22; 20:18). ஆனால் யோவான் நற்செய்தியில் இயேசு மும்முறை மானிட மகன் உயர்த்தப்பட வேண்டும் என்று குறிப்பிடுகிறார்,
"மானிட மகனும் உயர்த்தப்பட வேண்டும்" (யோவா 3:14); "நீங்கள் மானிட மகளை உயர்த்திய பின்பு, இருக்கிறவர் நானே , , என்பதை அறிந்து கொள்வீர்கள்" (யோவா 8:28); "நான் மண்ணிலிருந்து உயர்த்தப்படும்போது அனைவரையும் என்பால் ஈர்த்துக் கொள்வேன்" (யோவா 12:32),
யோவானின் இறையியல் கண்ணோட்டத்தில் கிறிஸ்து சிலுவையில் அறையப்படவில்லை, மாறாக உயர்த்தப்பட்டார், அதாவது மாட்சிமையடைந்தார். சிலுவைச்சாவு மகிமையின் வாயில், கிறிஸ்து பாடுபடவேண்டிய நேரம் அண்மையில் வந்தபோது, "மானிட மகன் மாட்சிமை பெற வேண்டிய நேரம் வந்துவிட்டது” என்றார்

(யோவா 12:23), துன்புறும் இறை ஊழியனைப் பற்றிய கவிதையிலும் இறைவாக்கினர் எசாயா, "இதோ, என் ஊழியர் சிறப்படைவார்; அவர் மேன்மைப்படுத்தப்பட்டு, உயர்த்தப்பட்டு, பெரிதும் மாட்சியுறுவார்" என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது (எசா 52:13).
சிலுவையானது யூதருக்குத் தடைக்கல்; பிற இனத்தவருக்கு மடமை. ஆனால், உண்மையில் சிலுவை கடவுளின் வல்லமை, கடவுளின் ஞானம் (1 கொரி 1:23 24). கடவுள் தம் மக்களை ஒருபோதும் கைவிடுவதில்லை. கடவுளைக் கைவிட்ட இஸ்ரயேல் மக்கள் பாபிலோனில் அடிமைகளாக வாழ்ந்த இக்கட்டான காலத்திலும், கடவுள் பிற இன மன்னர் சைரசு  வழியாக அவர்களுக்கு விடுதலையை அளிக்கிறார். அவர்கள் திரும்பவும் தங்கள் தாயகமாகிய எருசலேம் செல்ல மன்னர் அனுமதிக்கிறார் (முதல் வாசகம்).

கடவுள் மிகுந்த இரக்கம் உடையவர்; அவர் நம்மீது மிகுந்த அன்பு கொண்டுள்ளார் (இரண்டாம் வாசகம் எபே 2:4). இத்தகைய அன்பும் இரக்கமும் கொண்ட கடவுள், எவரும் அழியாமல் நிலை வாழ்வு பெறத் தம் ஒரே மகனையே கையளிக்கும் அளவுக்கு உலகின்மேல் அன்பு கூர்ந்தார் (யோவா 3:16), ஆனால் அந்த அன்பு மகன் துன்புறும் ஊழியனாகச் சிலுவையின் வழியாகவே உலகை மீட்க வேண்டுமென்பதே, அவர் வகுத்த வழி, கிறிஸ்து கடவுளின் திட்டத்தை ஏற்று. சாவை ஏற்கும் அளவுக்கு. அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்தார். எனவேதான் கடவுள் அவரை உயிர்ப்பின் மூலம் உயர்த்தி மாட்சி பெறச் செய்தார் (பிலி 2:6-11), நாம் மீட்படைய கடவுளின் திட்டத்தை ஏற்கவேண்டும், சிலுலை வாயிலாகவே நமக்கு மீட்பு உண்டு. சிலுவையிலிருந்து விடுதலை அளிக்காமல், சிலுவையின் வாயிலாகவே விடுதலையளித்தார் கிறிஸ்து.

புனித வெரோனா பீட்டர் ஒரு காட்சி கண்டார். அக்காட்சியில் இயேசு ஒரு பாரமான சிலுவையைச் சுமந்துகொண்டு ஒரு பேராலயத்தின் வாயிலிலிருந்து பீடத்தை நோக்கி நடந்தார், பீடத்தை அடைந்தவுடன் அவருடைய சிலுவையே சிம்மாசனமாக மாற, அதில் அவர் அமர்ந்தார். அவரைப் பின்தொடர்ந்து அன்னை மரியாவும் இலட்சக்கணக்கான மக்களும் தங்களுடைய சிலுவையைச் சுமந்துகொண்டு பீடத்தை அடைந்தவுடன், அவர்களுடைய சிலுவைகளும் சிம்மாசனங்களாக மாற, அவர்களும் அவற்றில் அமர்ந்தனர். சிலுவையே மகிமையின் வழி என்பதை இக்காட்சி மூலம் அறிந்தார் வெரோனா பீட்டர். இவ்வுலகில் இருக்கும்வரை நம் வாழ்வில் சிலுவை, துன்பங்கள் ஏதாவது ஒரு வடிவத்தில் வந்தே தீரும். அச்சிலுவையை நாம் வாழ்வின் வைகறையாகப் பயன்படுத்த வேண்டும்.

பாபிலோனில் அடிமைகளாக வாழ்ந்த காலத்தில், இஸ்ரயேல் மக்களால் ஆண்டவருடைய பாடலை அன்னிய நாட்டில் பாட முடியவில்லை; அவர்களுடைய தாயகமாகிய எருசலேமை மறக்க இயலவில்லை (பதிலுரைப்பாடல், திபா 137:4-5).
விண்ணக எருசலேமை நோக்கிப் பயணிக்கும் நாமும் ஒருவகையில் இவ்வுலகிற்கு அன்னியர்களாக இருக்கின்றோம். "இவ்வுலகில் நீங்கள் அன்னியராய் வாழும் காலமெல்லாம் அவருக்கு அஞ்சி வாழுங்கள் " (1 பேது. 1:17), விசுவாசத்திற்காகத் தங்கள் வாழ்வையே பணயம் வைத்தவர்கள், "இவ்வுலகில் தாங்கள் அன்னியர்கள் என்பதையும் தற்காலிகக் குடிகள் என்பதையும் ஏற்றுக் கொண்டார்கள். அவர்கள் சிறப்பான ஒரு நாட்டை அதாவது விண்ணக நாட்டையே நாடுகிறார்கள்” (எபி 11:13,16).

விண்ணகமே நமது தாய்நாடு (பிலி 3:28), எனவே பயணம் செய்யும் திருச்சபையில் வழிப்போக்கர்களாய் உள்ள தாம், ஒருபோதும் சிலுவைக்குப் பகைவர்களாக வாழாமல் (பிலி 3:18), சிலுவையின் மறைபொருளை மேன்மேலும் ஆழமாக உணர்ந்து அதற்கேற்ப வாழ்வோம்,

பாலைவனத்தில் பாம்பால் கடிபட்டவர்கள் உயர்த்தப்பட்ட வெண்கலப் பாம்பைப் பார்த்துக் குணமடைந்தனர். அந்த வெண்கலப் பாம்பு சிலுவையின் முன்னடையாளம். சிலுவையில் உயர்த்தப்பட்டவரை, நம் பாவங்களுக்காக ஊடுருவக் குத்தப்பட்டவரை உற்று நோக்கி (யோவா 19:37), பாவக் காயங்களிலிருந்து விடுதலை பெற்று, திறை வாழ்வடைவோம் சிலுவையே மகிமையின் வாயில்,
'ஆண்டவரே, உலகின் மீட்பரே எங்களை மீட்டருளும்; உமது சிலுவையினாலும் உயிர்ப்பினாலும் எங்களை மீட்டவர் நீரே."

 









No comments:

Post a Comment