Friday 26 August 2022

பொதுக் காலத்தின் 22-ஆம் ஞாயிறு மூன்றாம் ஆண்டு

 பொதுக் காலத்தின் 22-ஆம் ஞாயிறு  மூன்றாம் ஆண்டு

இன்றைய நற்செய்தி வாசகங்கள்.

சீராக்கின் ஞான நூல் 3: 17-18,20,28-29
எபிரேயர் 12: 18-19, 22-24
லூக்கா  14: 1,7-14

வழங்குபவர்கள் 

  1. ஞாயிறு  இறைவாக்கு - அருள்பணி முனைவர் அருள் பாளை
  2. மகிழ்ச்சியூட்டும் மறையுரைகள் - குடந்தை ஆயர் F.அந்தோனிசாமி
  3. தெய்வத்திரு அருள்பணி Y.இருதயராஜ்
  4. திருவுரைத் தேனடை-அருள்பணி இ.லூர்துராஜ் - பாளை
  5. மறையுரைச் சிந்தனைகள் -அருள்பணி மரிய அந்தோணி  பாளை
  6. ஞாயிறு சிந்தனை -அருள்பணி ஏசு கருணாநிதி மதுரை
  7. ஞாயிறு மறையுரை -அருள்பணி எல்.எக்ஸ்.ஜெரோம் சே.ச
  8. ஞாயிறு மறையுரை -அருள்பணி. குழந்தைஇயேசு பாபு சிவகங்கை
  9. .ஞாயிறு மறையுரை-அருள்பணி.அ.மாணிக்கம்-பாலக்குறிச்சி திருச்சி

ஐந்து ஆண்டுகளுக்கு முன் ஜெர்மனி சென்றபோது ஒரு சிறுவனின் புதுநன்மை விழாவிலும், அவனது தாத்தாவின் 50-ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவிலும் பங்கெடுக்க வாய்ப்புக் கிடைத்தது. ஏராளமான விருந்தினர்கள் இந்த விருந்திற்கு அழைக்கப்பட்டிருந்தார்கள். எல்லா (International food) நாட்டின் உணவையும் உள்ளடக்கிய சுவையான விருந்து தயாரிக்கப் பட்டிருந்தது. சுவையான பல நாட்டு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. நல்லதொரு நன்றி அறிதல் திருப்பலிக்குப் பின் விருந்து நடைபெற்றது.
ஆனால் எல்லாப் பிறந்த நாட்கள் கொண்டாட்டங்களைவிட இது வித்தியாசமான ஒன்று. அழைப்பிதழில் நன்கொடைகள். அன்பளிப்புகள் தவிர்க்கப்பட வேண்டும், வாங்கப்படாது என்று தெளிவாகப் பொறிக்கப்பட்டிருந்தது. மேலும் ஏழை நாடாகிய ஆப்பிரிக்கா, இந்தியாவில் உள்ள அனாதை இல்லங்களுக்கு நன்கொடை கொடுத்தால் அது ஆயர்கள் மூலமாக அனுப்பி வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதேபோல் வருகை தந்த அனைவரும் தாராள உள்ளத்துடன் தந்த அன்பளிப்புக்கள் 25 லட்சம் கிடைத்தது. அதை இந்திய நாட்டிற்கு அனுப்புவதாக அறிவித்தார்கள். இந்த விருந்தானது நம் ஆண்டவர் படம் பிடித்துக் காட்டும் விருந்துக்கு மிகப் பொருத்தம் ஆகும். நீ விருந்துக்கு அழைக்கப்படும்போது முதல் இடம் தேடாதே ஏனெனில் அழைப்பவன் தான் யாருக்கு எந்த இடம் எனக் குறிப்பிட உரிமை உண்டு. அது நீ அல்ல. இரண்டாவது நீ விருந்து கொடுக்கும்போது ஏழைகள், அனாதைகள், ஊனமுற்றோர் இவர்களை அழைத்து உதவி செய். இவர்கள் உடன் திருப்பித் தரமுடியாதவர்கள். ஆனால் கடவுள் உன்னை ஆசீர்வதிப்பார் என்று தெளிவாக்கப்படுகிறது.

  • ஆண்டவர் இரண்டு கருத்துகளை இன்று முன் நிறுத்த விரும்புகின்றார்.
  • நாம் நம்மையே தாழ்த்திக்கொள்ளவில்லை என்றால் பிறரால் தாழ்த்தப்படுவோம் என்ற எச்சரிக்கையைத் தருகிறார்.

தாழ்ச்சி உள்ளவர்கள் மற்றவர்மீது குறிப்பாக ஏழைகள்மீது அக்கறை காட்ட முடியும். வாழ்விலும் ஆன்மீகத்திலும் முதிர்ச்சி அடைந்தவர்கள் தங்களை உயர்த்திக்கொள்ள விரும்புவதில்லை. அறிவியல் கண்டுபிடிப்புக்களை மேற்கொண்ட நியூட்டன் தன் வாழ்வின் இறுதியில் நான் கடற்கரையில் விளையாடும் ஒரு சிறுவன். இங்கே ஒரு கூழாங்கல், அங்கு ஒரு சங்கு எனச் சிலவற்றைக் கண்டுபிடித்திருக்கிறேன் என்று தன்னைப் பற்றித் தாழ்ச்சியாகக் கூறியுள்ளார்.

அன்னை தெரெசாவும் தன் அன்பு மற்றும் அறப்பணிகளைப் பற்றிப் பேசும்போது, நாங்கள் செய்யும் எல்லாப் பணிகளையும் இவ்வுலகில் நடைபெறும் பணிகளோடு ஒப்பிடும்போது அவை கடலின் ஒரு துளிக்குச் சமம் என்றார்கள்.

தாழ்ச்சி உள்ளவர்கள் பெறக்கூடிய நன்மைகள் பற்றியும் இன்றைய வாசகங்கள் எடுத்துரைக்கின்றன.

  • தாழ்ச்சியோடு செயல்படுபவர்கள் கடவுளால் உயர்த்தப்படுவார்கள். எனவே யாக்கோபு தன் திருமடலில் ஆண்டவர் முன் உங்களைத் தாழ்த்துங்கள். அவர் உங்களை உயர்த்துவார். (யாக். 4:10) என்கிறார்.
  • நீதிமொழிகள் இறுமாப்பு ஒருவரை தாழ்த்தும். தாழ்ச்சி ஒருவரை உயர்த்தும் (நீதிமொழி 29:23) என்கின்றன. அன்னை தெரெசா இதற்குச் சான்று.
  • தாழ்ச்சி உள்ளவர்களுக்குக் கடவுளின் மறைபொருள் வெளிப்படுத்தப்படுகிறது. எளியோருக்குத்தான் நற்செய்தி என்கிறார் இயேசு. ஞானிகளுக்கும் விவேகிகளுக்கும் மறைத்துக் குழந்தைகளுக்கு. அதாவது குழந்தை உள்ளம் கொண்டவர்களுக்கு விண்ணரசின் மறைபொருளை கடவுள் வெளிப்படுத்துகிறார் (லூக். 10:21). எளியோருக்குத் தான் ஆண்டவர் தம் மறைபொருளை வெளிப்படுத்துகிறார் (சீராக்
  • 3:19).

தாழ்ச்சி உள்ளவர்கள் ஆண்டவரை மாட்சிமைப்படுத்தும் பேறுபெற்றவர்கள். சீராக் நூலில் கூறப்படுவதுபோல, தாழ்ந்தோரால் அவர் மாட்சிமை பெறுகிறார் (சீராக் 3:20).

இதற்கு உதாரணமாகத் திகழ்பவர் நம் ஆண்டவர் இயேசு (யோவா. 17:4). நம் தாய் மரியா.

தாழ்ச்சி உள்ளவர்கள் வாழ்வில் வீழ்வதில்லை. மாறாக ஆணவம் உள்ளவர்கள்தான் வீழ்த்தப்படுவார்கள். உள்ளத்தில் செருக்குடன் சிந்திப்போரை சிதறடித்து வருகிறார், வலியோரை அரியணையினின்று தூக்கி எறிந்துள்ளார். தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துகிறார் (லூக். 1:53). தாழ்ச்சி உள்ளவர்கள் விட்டுக் கொடுக்கும் மனம் உடையவர்கள். தாழ்ச்சி என்றால் வளைந்து கொடுப்பதாகும்.

மார்ட்டின் லூத்தர் கூறுகிறார். 'ஒரு ஆற்றின் குறுகியப் பாலத்தின் நடுவே இரண்டு மலைகள். ஆடுகள் எதிர் எதிராக நடந்து வந்தன. விலகிச் செல்வதற்கு வழியில்லை. மோதிக்கொண்டால் ஆற்றில் விழ வேண்டும். பின்னோக்கிச் செல்லவும் முடியாது. இந்த நிலையில் ஒரு ஆடு படுத்துக் கொள்ள மற்ற ஆடுகள் அதன்மீது கடந்து சென்றன. தாழ்ச்சி இருந்தால் வாழ்க்கைப் பாலத்தை எந்தப் பிரச்சனையும் இல்லாமல் கடப்போம் என்பது உறுதி.''

  • ஒருமுறை வின்சென்ட் தே பவுல் அவரது அலுவலகத்தில் அமர்ந்து இருந்தார். பெண்ணொருத்தி அவரை அணுகி, என் மகனுக்கு வேலை வேண்டும் என்று கேட்டார். ஆகட்டும். பார்க்கலாம் என்றார். அந்தப் பெண்ணுக்கு வந்தது கோபம். உடனே வேலை கொடுக்காமல் ஆகட்டும் பார்க்கலாம் என்று சொல்வதா எனச் சொல்லி மேசை மீதிருந்த பேப்பர் வெயிட்டைத் தூக்கிப் புனிதர்மீது எறிந்தாள். தலையில் காயம், குருதி கொட்டியது. குருதியைத் துடைத்துக் கொண்டே தன்னைச் சுற்றியுள்ளவர்களைப் பார்த்து, இந்தப் பெண் இவளது மகனை எவ்வளவு அன்பு செய்கிறாள் பாருங்கள் என்றார். இன்று இந்தப் புனிதர் வணக்கம் பெறுகிறார்.

அருகம்புல் தரையிலே படர்ந்து வளரும் தாவரம். தண்ணீர் உள்ள இடத்தில் தலைதூக்கி நிற்கும். வெயிலிலும், மழையிலும் அழிவுறாத ஒன்று. எல்லாக் காலங்களிலும் கால்நடைகளுக்கு
உணவாகிறது. மனிதருக்கு மருந்தாகிறது. ஆம் தாழ்ச்சியுள்ளவர்கள் அருகம்புல் போன்றவர்கள். தாழ்நிலை பொருளாதாரம் கொண்டவராக இருக்கலாம். ஆனால் இறைவனைப் பற்றிக் கொள்பவர்கள் சார்ந்து இருப்பவர்கள். தன் ஒவ்வொரு செயலையும் இறைவனில் ஊன்றிச் செய்பவர், எப்பொழுதும் ஒரே நிலைப்பாடு கொண்டவர், எல்லாருக்கும் பணிந்திருப்பவர், பணி செய்பவர், நம்பிக்கைக்குரிய மருந்தாக உள்ளவர். இதைத்தான் சீராக் நூல் போற்றுகிறது.

  • ஆனால் அகந்தை உள்ளவர்கள் திருத்தம் பெற இயலாதவர்கள். தன் எண்ணம், தன் மேம்பாடு, தன் செயல்களே மேலானவை என்று தம்மையே கடவுளாக்கிக் கொள்பவர்கள். இவர்களது வாழ்வு அழிவு சக்திகளாகத்தான் மாறும். சமூக அமைப்பில் வேறுபாட்டைப் புகுத்திச் சமூகம் துண்டாக்கப்படும். பழைய ஏற்பாட்டிலே குருக்கள், பரிசேயர், சதுசேயர், மூப்பர்கள் தங்களை மேலானவர்களாகக் கருதி பிறரை ஏற்காத அகந்தை நிலையில் வாழ்ந்தார்கள். இவர்களைத்தான் இயேசு கடினவார்த்தை கொண்டு சாடினார். (லூக். 18:9-14) ஆயக்காரன் - பரிசேயன் உவமை.
  • இயேசு முதல் இடம் பிடித்து விருந்துண்ண வந்தவர்களுக்குக் கூறுவதாவது, உங்களுள் முதல்வராக இருக்க விரும்புகிறவர் பணியாளராக இருக்கட்டும் (மத். 20:27). குழந்தைகளாக மாறாவிடில் விண்ணரசில் சேரமாட்டீர்கள் (மத். 18:3) என்றும் கூறுகிறார்.

இரண்டாவது விருந்து படைக்கிறவர்களுக்கு ஓர் அறிவுரை கூறுகிறார். உறவினர்களோடும், அடுத்திருப்போரிடமும், செல்வந்தர்களோடும் பகிர்ந்து கொள்வதைவிட தாழ்நிலை நிற்பவர்களோடு பகிர்தல் மேலானது என்றும் கூறுகின்றார். தாழ்ச்சி என்பது தன்னைத் தாழ்த்திக் கொள்வது, செயல்பாடாக மாறும்போது தன்னை ஏழைகளோடு ஒருவராக மாற்றிக் கொள்வது. கைமாறு எதிர்பாராமல் பணி செய்வது. இது கடினமான பண்பு. இதைச் சிறிது சிறிதாக வளர்த்துக்கொள்ள வேண்டும்.

நான் கனிவும் மனத்தாழ்ச்சியும் உள்ளவன். ஆகவே என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு என்னிடம் கற்றுக் கொள்ளுங்கள் (மத். 11:29) என்கிறார் இயேசு. தன்னையே வெறுமையாக்கி அடிமையின் தன்மை பூண்ட இயேசுவின்தாழ்ச்சியைவிட நாம் பின்பற்ற வேறு எதுவும் இல்லை. இதைப் பின்பற்றியவள்தான் நம் தாய் மரியா. இதோ உமது அடிமை. உம் வார்த்தையின்படி நடக்கட்டும் என்றாள் (லூக்.1:38).

இரு தத்துவங்கள்:

  • தண்ணீரில் நீந்துபவன் கையைக் கீழே அமுக்கினால்தான் மேல்நோக்கி வர முடியும்.
  • ஆகாயத்திலே பறக்கிற பறவையானது தன் இறக்கைகள் இரண்டையும் கீழே அமுக்குவதால் தான் மேல் நோக்கிப் பறக்க முடியும்.
 

எதையும் எதிர்பாராமல் தர்மம் செய்வோம் !

ஓ மனிதா!
ஆடிவரும் தென்றலும்
பாடிவரும் பறவையும்
ஓடிவரும் அருவியும்
உலகத்திடமிருந்து எதையுமே
எதிர்பார்ப்பதில்லை!
நீ இயற்கையின் சிகரமல்லவா?
வெளியே வா!
உன் சுயநலச் சிறையை விட்டு
வெளியே வா!
உடைத்தெறி - உடைத்து எரி -
கைம்மாறு கருதி தர்மம் செய்யும்
உன் மனத்தை உடைத்தெறி - உடைத்து எரி -
அப்போது உனக்கு
வானம் கூட வசப்படும்.
இதுதான் இன்றைய நற்செய்தி தரும் அருள்வாக்கு!

இன்றைய நற்செய்தியிலே நாம் யாருக்கு உலகத்திலே விருந்து வைக்க வேண்டும்? யாரை மகிழ்ச்சிப்படுத்த வேண்டும்? என்பதை இயேசு தெளிவாக்குகின்றார். நாம் பேறுபெற்றவர்களாய், அதாவது ஆண்டவரால் ஆசிர்வதிக்கப்பட்டவர்களாக, உயிர்த்தெழும்போது
அவரிடமிருந்து கைம்மாறு பெறுகின்றவர்களாக வாழ, நாம் இவ்வுலகில் என்ன செய்ய வேண்டும்? என்பதை நமக்கு நம் ஆண்டவர்
சுட்டிக்காட்டுகின்றார்!

இன்று இயேசு நம்மைப் பார்த்து, நீங்கள் செய்த உதவிக்குக் கைம்மாறாக யார் திரும்ப உதவி செய்ய முடியாதோ அவர்களுக்கு உதவி செய்யுங்கள் என்கின்றார். செல்வரும் இலாசரும் உவமையில் ஆபிரகாம் செல்வரைப் பார்த்து, மகனே, நீ உன் வாழ்நாளில் நலன்களையே பெற்றாய் ; அதே வேளையில் இலாசர் இன்னல்களையே அடைந்தார். அதை நினைத்துக்கொள். இப்பொழுது அவர் இங்கே ஆறுதல் பெறுகின்றார் ; நீயோ மிகுந்த வேதனைப்படுகின்றாய் (லூக் 16:25) என்று கூறுவதைப் பார்க்கின்றோம்.

நாம் விண்ணகத்தை அடையவோ. விண்ணக எருசலேமை அடையவோ. பல்லாயிரக்கணக்கான வானதூதர் நடுவில் வாழவோ, நேர்மையாளர்களின் கூட்டத்தில் சேரவோ, புதியதோர் உடன்படிக்கையின் இணைப்பாளராகிய இயேசுவின் முன்னிலையில் நிற்கவோ (எபி 12:22-24) விரும்பினால். கைம்மாறு கருதாது பிறருக்கு உதவி செய்ய முன்வர வேண்டும். கைம்மாறு கருதாது. அதாவது எதையும் எதிர்பார்க்காது, நயாகரா நீர்வீழ்ச்சியைப் போல் நம்மால் வாழ முடியுமா?

நமக்கு முன்னே வாழ்ந்தவர் கோடி உண்டு! இதோ விவிலியத்திலிருந்து இரு உதாரணங்கள்!

அரசர்கள் இரண்டாம் நூலில் ஐந்தாம் இயலில் நாமான் நலம் பெற்றதைப் பற்றி நாம் படிக்கும்போது, செய்த புதுமைக்குக் கைம்மாறாக எதையுமே ஏற்றுக்கொள்ள விரும்பாத எலிசா இறைவாக்கினரைச் சந்திக்கின்றோம்!

சிரியா மன்னனின் படைத்தலைவனான நாமான், எலிசா கூறியபடியே ஏழுமுறை யோர்தான் நதியில் மூழ்கி நலமடைகின்றார். நலமடைந்தவுடன் அவர் எலிசாவிடம் வந்து, இதோ, உம் அடியான்: என் அன்பளிப்பை ஏற்றுக்கொள்ளும் (2 அர 5:15) என்றார். அதற்கு எலிசா, நான் பணியும் வாழும் ஆண்டவர் மேல் ஆணை! நான் எதையும் ஏற்றுக்கொள்ளேன் என்றார். நாமான் எவ்வளவோ வற்புறுத்தியும் அவர் அன்பளிப்பை ஏற்றுக்கொள்ளவில்லை (2 அர 5:16).

எலிசாவின் பணியாளன் கேசகி, எலிசாவிற்குத் தெரியாமல் நாமானிடமிருந்து அன்பளிப்புப் பெற்றபோது அவனைத் தொழுநோய் பிடித்துக்கொண்ட நிகழ்ச்சியை அரசர்கள் இரண்டாம் நூலில் ஐந்தாவது இயலில் நாம் படிக்கின்றோம் (2 அர 5:20-27).

கைம்மாறு கருதாது பிறருக்கு உதவி செய்த எலிசாவைக் கடவுள் மாபெரும் இறைவாக்கினராக, மக்களால் வானளாவப் புகழப்படும் தீர்க்கதரிசியாக உயர்த்தினார். எலிசா நோயினால் பாதிக்கப்பட்டு, சாகக்கிடந்தபொழுது இஸ்ரயேலின் அரசன் யோவாசு எலிசாவைப் பார்த்து, "என் தந்தாய், என் தந்தாய்! இஸ்ரயேலின் தேரே! அந்தத் தேரின் பாகனே ” என்று சொல்லி! கதறி அழுதான்.
எலிசா இற பிறகு ரது எலும்புகள்கூட புதுமை செய்தன (2 அர 13:21ஆ) என்று அறிகின்றோம்.

புதிய ஏற்பாட்டிலே எதையுமே மக்களிடமிருந்து எதிர்பார்க்காது தன்னிடம் உள்ளதைப் பிறரோடு பகிர்ந்துகொண்ட கன்னி மரியாவைச்
சந்திக்கின்றோம். மங்கள வார்த்தைத் திருநாளன்று தன் வாழ்வை உலகுக்குக் கொடுத்தார் (லூக் 1:26-38). கானாவூர் திருமணத்தின்
போது தம் மகன் வழியாகத் திராட்சை இரசத்தை திருமண வீட்டாருக்குக் கொடுத்தார் (யோவா 2:1-11). கல்வாரியில் பாவிகள் மீட்புப்பெற
தம் மகனையே கொடுத்தார் (யோவா 19:25-27).

வாழ்க்கையில் ஒருமுறைகூட அன்னை மரியா தனக்கென்று எதையும் பிறரிடமிருந்து எதிர்பார்க்கவில்லை! இப்படிப்பட்ட வாழ்வுக்குப் பரிசாக மரியாவிற்கு எத்தகைய பரிசுகளைக் கடவுள் தந்திருக்கின்றார் என்பதை ஊரறியும், உலகறியும். இன்று அன்னையின் பெயர் சொன்னால் எங்கும் அருள் மணக்கும், எட்டுத்திக்கும் புகழ் மணக்கும்; விண்ணகமும், மண்ணகமும் அருள்நிறை மரியே வாழ்க! என வாழ்த்தும்.

எதையும் எதிர்பார்க்காது பிறருக்கு உதவி செய்கின்றவர்களுக்கு மட்டுமே மறு உலகம் கிடைக்கும்; இரண்டாம் வாசகம் சுட்டிக்காட்டும் விண்ணகத்தில் நமக்கு இடம் கிடைக்கும்.

இம்மை போதும், மறுமையை யார் பார்த்தது? என்ற வெளிப்புலன்களுக்கு உட்பட்ட எண்ண அலைகளுக்குள் நாம் சிக்குண்டு வாழ்ந்தால், அந்தச் சிக்கலிலிருந்து விடுபட இன்றே நாம் தர்மம் செய்யப்புறப்படுவோம். தண்ணீர் நெருப்பை அணைப்பது போல, நம் உள்ளத்தில் பற்றி எரியும் சுயநலத்தை, பாவத்தைத் தர்மம் அணைக்கும் (சீஞா 3:30).

மேலும் அறிவோம்:

கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்(டு)
என்னாற்றும் கொல்லோ உலகு (குறள் : 211).

பொருள்: காலம் அறிந்து, உலக மக்கள் வாழ்வதற்காக வான்மழை பொழிகிறது. அதற்கு இவ்வுலகம் எத்தகைய மாற்று உதவியும் செய்வதில்லை. மழை பொழியும் மேகத்தைப் போன்றவர் உலக நலம் கருதும் ஒப்புரவாளர் ஆவர். அவர்கள் எதிருதவி எதையும் எதிர்பாராது
உதவுகின்றனர்.






ஒரு கணவர் ஓர் அறிஞரிடம் சென்று. "என் மனைவி நான் கிழிச்ச கோட்டைத் தாண்டக்கூடாது. அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்டதற்கு அறிஞர் கூறியது: "முதலில் கோட்டை எங்கே கிழிப்பது என்பதை உங்கள் மனைவியைக் கேட்டுக் கிழியுங்கள்."

இன்றைய உலகை அச்சுறுத்துவது ஆணவம் என்ற அரக்கன்; கலக்கப் போவது யார்? நீயா? நானா? என்ற அகம்பாவம். யார் பெரியவர்?: கணவரா? மனைவியா?: மாமியா? மருமகளா?; ஆளுங்கட்சியா ? எதிர்க்கட்சியா?: அருள்பணியாளர்களா? பொது நிலையினரா? இப்பின்னணியில் இன்றைய அருள்வாக்கு வழிபாடு தாழ்ச்சியின் அவசியத்தை எடுத்துரைக்கிறது. ஆணவத்தால் வீழ்ச்சியுற்ற உலகைத் தமது தாழ்ச்சியால் உயர்த்திய இயேசு கிறிஸ்து இன்றைய நற்செய்தியில் கூறுகிறார்: "தம்மை உயர்த்துபவர் யாவரும் தாழ்த்தப்பெறுவர்; தம்மைத் தாழ்த்துவோர் உயர்த்தப்பெறுவர்" (லூக் 14:11) கிறிஸ்துவே தாழ்ச்சிக்கு சிறந்ததோர் எடுத்துக்காட்டு. கிறிஸ்து தம்மையே வெறுமையாக்கி, சாவை. அதுவும் சிலுவைச் சாவை ஏற்றுக் கொள்ளும் அளவுக்குத் தம்மைத் தாழ்த்தினார்; எனவே கடவுள் அவரை எல்லார்க்கும் மேலாக உயர்த்தினார் (பிலி 2: 6 -11). அவரிடம் நாம் கற்றுக்கொள்ள வேண்டியது: "நான் கனிவும் மனத் தாழ்மையும் உடையவன் என்று என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள்" (மத் 11: 29).

தாழ்ச்சி என்பது ஒருவருடைய மனநிலையைப் பொறுத்தது. தாழ்ச்சியுடையவர் எப்போதும் கடவுளுக்குப் பணிந்திருப்பார்; ஏழை எளியவர்களுடன் தோழமை கொள்வார். கிறிஸ்து தமது விருப்பத்தை நிறைவேற்றாமல் தமது தந்தையின் விருப்பத்தையே நிறைவேற்றினார். வர் மேட்டுக்குடி மக்களோடு பழகாமல் ஏழை எளியவர்களுடன் பழகினார். விவிலியத்தில் 'அனாவிம்' என்ற வர்க்கத்தினர் இருந்தனர். அவர்களிடம் செல்வமோ செல்வாக்கோ இல்லை; அவர்கள் செல்வந்தர்களால் ஒடுக்கப்பட்டனர். இந்நிலையில் அவர்கள் முழுக்க. முழுக்கக் கடவுளையே சார்ந்திருந்தனர். இவர்கள் "கடவுளின் ஏழைகள்" என்று அழைக்கப்பட்டனர். இவர்களைப்பற்றி இன்றைய பதிலுரைப்பாடல் பின்வருமாறு கூறுகிறது: "கடவுளே நீர் நல்லவர்; எனவே ஒடுக்கப்பட்டோர்க்கு மறுவாழ்வு அளித்தீர்" (திபா 68: 10).

அனாவிம் வர்க்கத்தினர்தான் கிறிஸ்து தமது மலைப் பொழிவில் குறிப்பிடும் "ஏழையரின் உள்ளத்தோர்" (மத் 5:3) மற்றும் "கனிவுடையோர்" (மத் 5: 5). ஏழைகளும் சாந்தம் உள்ளவர்களும்தான் இறையாட்சியின் அருளடையாளங்கள்; விண்ணரசின் வாரிசுகள். இவர்களைப் பற்றித்தான் அன்னை மரியா பின்வருமாறு பாடியுள்ளார்; "கடவுள் தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துகிறார்; பசித்தோரை நலன்களால் நிரப்புகிறார்: செல்வரை வெறுங்கையராய் அனுப்பி விடுகிறார்" (லூக் 1:50-53). எனவே தாழ்ச்சியுள்ளவர்களாய் இருக்கவேண்டுமென்றால், அனாவிம் வர்க்கத்தினரின் மனநிலையைக் கொண்டிருக்க வேண்டும். இத்தகைய மனநிலை இல்லாதவர்கள் கடவுளுக்கு அன்னியமானவர்கள் என்பதை அறிக. இன்றைய முதல் வாசகத்தில் சீராக் கூறுகிறார்: "நீ பெரியவனாய் இருக்கும் அளவுக்குப் பணிந்து நட" (சீஞா 3:18). ஒருவர் எவ்வளவுக்கு உயர் பதவியில் இருக்கின்றாரோ அவ்வளவுக்குப் பணிவுள்ளவராக இருத்தல் வேண்டும்; அது செல்வர்களுக்கு மிகவும் தேவை; பணிவு என்பது செல்வர்களுக்குக் கூடுதலான செல்வம்; அது அழகுக்கு அழகு சேர்ப்பது போன்றதாகும் என்கிறார் திருவள்ளுவர்.

எல்லார்க்கும் நன்றுஆம் பணிதல்; அவருள்ளும்
செல்வர்க்கே செல்வம் தகைத்து (குறள் 125)

தாழ்ச்சி என்பது தாழ்வு மனப்பான்மை அல்ல. ஓர் அக்கா தன் தங்கையிடம் கூறியது: "நீ என் தங்கச்சி; நாமிருவரும் ஒரு கட்சி: நம்மால் ஒன்றும் செய்ய முடியாது: ஏனெனில் நாமிருவரும் பொட்டச்சி," இவ்வாறு சொல்வது பெண் குலத்தையே இழிவுபடுத்துவதாகும். மரியன்னையிடம் தாழ்ச்சி இருந்தது. எனவேதான் அவர் கூறினார்: "அவர் (கடவுள்) தம் அடிமையின் தாழ்நிலையைக் கண்ணோக்கினார்" (லூக் 1:48). ஆனால் மரியன்னையிடம் தாழ்வு மனப்பான்மை இல்லை. எனவேதான் அவர் தன்னைப் பற்றி இறைவாக்குரைத்தார்: "இது முதல் எல்லாத் தலைமுறையினரும் என்னைப் பேறுபெற்றவர் என்பர்" (லூக் 1:49).

தாழ்ச்சி என்பது உண்மை நிலை. உண்மை நிலை என்ன? " நான் நட்டேன்; அப்பொல்லோ நீர் பாய்ச்சினார்; கடவுளோ விளையச் செய்தார். நடுகிறவருக்கும் பெருமை இல்லை; நீர் பாய்ச்சுபவருக்கும் பெருமை இல்லை: விளையச் செய்யும் கடவுளுக்கே பெருமை" (1 கொரி 3:6-7). நாம் அடையும் வெற்றியைப்பற்றி இறுமாப்புக் கொள்ளாமல், அவ்வெற்றியை நமக்குக் கொடுத்த இறைவனுக்கு மகிமை அளிப்பதே உண்மையான தாழ்ச்சியாகும். அகநிலையில் தாழ்ச்சியுள்ளவர்களாக இருந்தால், புறநிலையில் ஏழை எளியவர்களுடன் பழகுவோம். இன்றைய நற்செய்தியில் கிறிஸ்து கூறும் அறிவுரை: "விருந்துக்குப் பணக்கார உறவினர்களையும் நண்பர்களையும் அழைக்காமல், ஏழை எளியவர்களையும் அழையுங்கள். அப்போது மறுமையில் கைம்மாறு கிடைக்கும்" (லூக் 14:12-14).ஒரு பணக்காரர் தனது திருமண வெள்ளிவிழாவை ஓர் அனாதை இல்லத்தில் கொண்டாடி, அனாதை சிறுவர், சிறுமிகளுக்கு விருந்தளித்தார். நாமும் அவ்வாறு செய்யலாமே! அதற்கு மனமாற்றம் தேவை. இன்றைய இரண்டாம் வாசகம் கூறுகிறது: "நாம் இருப்பது சீனாய் மலை அல்ல; மாறாக, சீயோன் மலை," முன்னது அடிமை வாழ்வையும், பின்னது உரிமை வாழ்வையும் குறிக்கின்றன. நாம் ஆணவம் என்னும் அடிமைத்தளையை உதறித் தள்ளிவிட்டு, பணிவு என்னும் உரிமை வாழ்வைக் கடைப்பிடிப்போம்.

"ஒருவர் கிறிஸ்துவோடு இணைந்திருக்கும்போது அவர் புதிதாகப் படைக்கப்பட்டவராய் இருக்கிறார்" ( 2 கொரி 5: 17).


தலையாயது தாழ்ச்சி  


நெப்போலியன் என்றாலே இன்றுகூட நிமிர்ந்து நிற்கும் வீர இள நெஞ்சங்கள். இப்படி ஓர் ஈர்ப்பு அவனுக்கு எப்பொழுதும் உண்டு. ஆனால் அவன் வாழ்க்கையோ...  

கண்கண்ட கிறிஸ்துவாக உலகில் திகழ்ந்த திருத்தந்தைக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டான். காலங்காலமாக பாப்பரசர் மணிமுடி சூடப் பெருமை கண்ட ஃபிரான்ஸ் நாட்டு மரபை மாற்றி தனக்குத்தானே முடி சூட்டிக் கொண்டு தனக்கு நிகர் யார் என்ற செருக்கில் இறுமாந்திருந்தான். கட்டிய மனைவியை ஒதுக்கிவிட்டு இன்னொருத்தியோடு குடும்பத்தின் புனிதத் தன்மைக்கே களங்கமாக இருந்தான். முறை கெட்ட அவன் வாழ்வால் பாப்பரசர் திருஅவையை விட்டே அவனைப் புறம்பாக்கினார். தள்ளுண்ட செய்தி கேட்டு அவர் வருந்தவில்லை. ஏளனமாகச் சிரித்தான். இறுமாப்போடு சிரித்தான். "இவர் என்னைப் புறம்பாக்கி விட்டால் என் கையிலோ என் வீரர்களின் கைகளிலோ உள்ள துப்பாக்கிகள் நழுவிக் கீழே விழுந்திடுமோ?” இந்த ஏளனச் சிரிப்பு தனக்குத்தானே விதித்துக் கொண்ட தீர்ப்பு என்பதை அவன் அப்போது உணரவில்லை. காலமும் வரலாறும் உணர்த்தின.  

வெற்றி மேல் வெற்றி பெற்று வீறுடன் ரஷ்ய-நாட்டை நோக்கிப் படையெடுத்தான். அப்போது ரஷ்யர்கள் எதிர்த்து நிற்கவில்லை. போரிடுவதில் புது முறையைக் கையாண்டனர். தங்கள் நாட்டின் எல்லைப்புறம் தொடங்கி தங்கள் ஊர்களை தகர்த்துக் கொண்டே பின்வாங்கி வந்தனர். அழிந்துபட்ட ஊர்களைக் கைப்பற்றியபோது நெப்போலியன் படைக்கான உணவு கிடைக்கவில்லை. தலைநகர் மாஸ்கோவை நெருங்கியபோது பனிக்காலம் வேறு தொடங்கியது. உலகிலேயே கடுமையானது ரஷ்யக் குளிர். உணவின்றிப் பசியால் அவதி ஒரு புறம். பனியின் குளிரால் நடுக்கம் ஒருபுறம். அவனை அறியாமலேயே அவனது வீரர்களை அறியாமலேயே அத்தனை பேருடைய கைகளிலிருந்தும் துப்பாக்கிகள் நழுவிக் கீழே விழுந்தனவாம். தனக்கு நிகர் யார் என்ற செருக்கின் விளைவு சீரழிவைத் தந்தது.  

இது நேற்று இன்று என்றல்ல, நெப்போலியன் காலத்தில் மட்டுமல்ல. படைப்பின் தொடக்கத்திலேயே எழுந்தது. எனக்கு நிகர் யார்? என்ற அறிவின் ஒளிதாங்கி லூசிபெரின் புரட்சிப் புலம்பலை எதிர்த்துப் பொங்கி எழுந்த மிக்கேல் அதிதூதரின் அறைகூவல்தானே "இறைவனுக்கு நிகர் யார்?” என்பது! “தங்கள் பார்வையில் ஞானிகள் என்றும், தங்கள் கணிப்பில் கூர்மதி வாய்ந்தவர்கள் என்றும் தங்களையே கருதுபவர்களுக்கு ஐயோ கேடு" (எசா. 5:21).  

சொல்லுவார்கள்: "கோபம் கொண்டவன் தன்னை இழக்கிறான். பொறாமை கொண்டவன் நண்பனை இழக்கிறான். கர்வம் கொண்டவன் கடவுளை இழக்கிறான்”. முற்றிலும் உண்மை.  ஆணவம் முன் செல்லும். அவமானம் பின்தொடரும். "முதலில் வருவது இறுமாப்பு. அதனை அடுத்து வருவது அழிவு. மேன்மையடையத் தாழ்மையே வழி " (நீ. மொ. 18:12, 11:2). இறையச்ச உணர்வோடு கூடிய தாழ்ச்சி அது. "தாழ்மை உள்ளவர்களுக்கும் ஆண்டவரிடம் அச்சமுள்ளவர்களுக்கும் கிடைக்கும் பயன் செல்வமும் மேன்மையும் நீடித்த ஆயுளுமாகும்” (நீ.மொ. 22:4)  

தலையாய பாவம் ஆணவம் என்றால் தலையாய புண்ணியம் தாழ்ச்சி. தரைக்குள் மறைந்திருக்கும் இந்த வேரிலிருந்துதான் தளிர்க்கின்றன விண்ணகப் பண்புகள் அனைத்தும்.  

தாழ்ச்சி என்பது உண்மை என்பார்கள். தன்னைப் பற்றிய நேர்மையான பார்வை (simply an honest look at myself). நான் இருப்பது போல என்னைப் பார்ப்பது. அது தாழ்வு மனப்பண்மை அல்ல. பிந்தியது தன்னைப் பற்றி நல்லெண்ணம் கொண்டிருப்பதில்லை. எனவே எதையும் விரக்தியுடன் நோக்கும் நமக்கோ பிறருக்கோ வளர்ச்சி தராது. தளர்ச்சியையே தரும்.  

தாழ்ச்சிக்கு இயேசுவே நமக்கு முன்னோடி - வழிகாட்டி. "கிறிஸ்து இயேசு கொண்டிருந்த மனநிலையே உங்களிலும் இருக்கட்டும்" (பிலிப். 2:5) என்பார் திருத்தூதர் பவுல். இயேசுவின் மனநிலை என்றாலே தாழ்ச்சிதான் - தாழ்ச்சி என்பதுதான் இயேசுவின் அடையாளம்.  

ஆணவத்தால்தான் அழிவுற்றான் மனிதன். அவனை மீட்க மாற்றாகத் தாழ்ச்சியைத்தானே இறைவன் தேர்ந்தெடுக்க முடியும்! மனிதத்தன்மையிலிருந்து இறைத்தன்மைக்கு உயர விழைந்தான் மனிதன் (விலக்கப்பட்ட கனியைத் திண்றதன் நோக்கம் அது). ஆனால் இறைவனோ இறைத்தன்மையிலிருந்து மனிதத் தன்மைக்குத் தன்னையே தாழ்த்தினார்.  

"கிறிஸ்து தம்மையே தாழ்த்தி ... சிலுவைச் சாவை ஏற்கும் அளவுக்கு கீழ்ப்படிந்தார். அதனால்தான் கடவுள் அவரை எல்லாருக்கும் மேலாக உயர்த்தி எப்பெயருக்கும் மேலான பெயரை அவருக்கு அருளினார்" (பிலிப். 2:6-11). தொடக்கக் காலத் திருஅவை திருவழிபாட்டில் பயன்படுத்திய எவ்வளவு பொருத்தமான புகழ்ப்பா இது!  இறைமகன் மனிதப் பிறப்பெடுத்த செயலில் மட்டுமல்ல. அவருடைய வாழ்வு முழுவதுமே தாழ்ச்சி என்பது ஒரு தொடர் நிகழ்வாயிற்று. அதனால் கிறிஸ்தவத் தாழ்ச்சி என்பது -  

  1. "நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன். ஆகவே என் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக்கொண்டு என்னிடம் கற்றுக் கொள்ளுங்கள்'' (மத். 11:29) என்று தன்னைக் குறித்துச் சொன்ன இயேசுவைப் போல் இருப்பது.
  2.  தன் சீடர்களின் காலடிகளைக் கழுவும் அளவுக்குத் தன்னைத் தாழ்த்தி, "தொண்டு ஏற்பதற்கல்ல, மாறாகத் தொண்டு ஆற்றுவதற்கு" (மார்க். 10:45) என்று பிறருக்காகவே வாழ்ந்த இயேசுவைப் போல் வாழ்வது.


பூமிதானம் என்ற புரட்சித் திட்டத்துக்கு வித்திட்டவர் வினோபா.1931ஆம் ஆண்டு அவருக்குக் காந்தி அண்ணலிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. அதைப் பிரித்துப் படிக்கும்போதே அவர் முகம் மாறியது. உடனே கடிதத்தைக் கிழித்து குப்பைத் தொட்டியில் போட்டார். அதைப் பார்த்த நண்பருக்கு ஆச்சரியம். அதிரிச்சியும்கூட. குப்பைக் கூடையில் கிடந்த கடிதத்துண்டுகளையெல்லாம் பொறுக்கி எடுத்து ஒன்றிணைத்துப் படித்துப் பார்த்தார். அதில் காந்தி அவர்கள் "தங்களைப் போன்ற மிகப் பெரிய மாமனிதரை நான் இதுவரை கண்டதில்லை” என்று எழுதியிருந்தார். “என்னங்க இது, பத்திரப்படுத்த    வேண்டிய ஒன்றை இப்படிக் கிழித்துப் போட்டீர்களே!" என்று கேட்க, அதற்கு வினோபா "பெரியவர் நம்மேல் வைத்திருக்கும் அன்பு காரணமாக சில தவறுகள் செய்யலாம். அதற்கு முக்கியத்துவம் தரக்கூடாது. பெருந்தன்மையோடு எழுதிய வார்த்தைகளை நான் பாதுகாக்க முனைந்தால் நாளடைவில் அவை என் மண்டைக்குள் புகுந்து என் மனதைப் பாழாக்கி விடாதா? அப்புறம் நான் அகந்தையால் ஒன்றுக்கும் உதவாதவன் ஆகிவிடுவேன்” என்றாராம். மாமனிதரே என்றாலும் மனிதர் தரும் பெருமை தேடாத மாண்பு என்னே! "நீ பெரியவனாய் இருக்கும் அளவுக்குப் பணிந்து நட... இறுமாப்புக் கொண்டோரின் நோய்க்கு மருந்து இல்லை. ஏனெனில் தீமை அவர்களுள் வேரூன்றி விட்டது" (முதல் வாசகம் சீராக். 3:18,28).

 'ஒருவர் மற்றவரோடு பழகும்போது எல்லாரும் மனத்தாழ்மையை ஆடையாக அணிந்திருங்கள். ஏனெனில் செருக்குற்றோரைக் கடவுள் இகழ்ச்சியுடன் நோக்குவார். தாழ்நிலையில் உள்ளவர்களுக்கோ கருணை காட்டுவார். ஆகையால் கடவுளுடைய வல்லமை மிக்க கரத்தின் கீழ் உங்களைத் தாழ்த்துங்கள் அப்பொழுது அவர் ஏற்ற காலத்தில் உங்களை உயர்த்துவார்" (1 பேதுரு 5:5,6).
 
 கிறிஸ்துவின் தாழ்ச்சியில் நாம் பங்கு பெற்றோமானால் கிறிஸ்துவின் மாட்சியிலும் பங்கு பெறுவோம். அடக்கம் அமரருள் உய்க்கும், அடங்காமை ஆரிருள் உய்த்துவிடும் என்பது வள்ளுவர் வாக்கு. நிறைகுடம் தழும்பாது என்பது பழமொழி. தாழ்ச்சி என்பது தாழ்நிலையன்று. உயர்ந்த குணம். தாழ்ச்சி நம்மை உயர்த்தும். தற்பெருமை நம்மை வீழ்த்தும். எனவேதான் “தம்மைத் தாமே உயர்த்துவோர் யாவரும் தாழ்த்தப் பெறுவர்; தம்மைத் தாமே தாழ்த்துவோர் உயர்த்தப் பெறுவர்” (லூக்.14:11) என்றார் இயேசு.

 ஓர் எச்சரிக்கை: தாழ்ச்சி என்பது கூட அகந்தையின் அடையாளமாகிவிடும் ஆபத்து உண்டு.

 உயர்வில் தாழ்ச்சி கொள்வோம்.
 தாழ்ச்சியால் உயர்வு காண்போம்.  

Thursday 7 October 2021

பொதுக் காலத்தின் 28-ஆம் ஞாயிறு - இரண்டாம் ஆண்டு

பொதுக் காலத்தின் 28-ஆம் ஞாயிறு - இரண்டாம் ஆண்டு



இன்றைய வாசகங்கள்:-

சாலமோனின் ஞானம் 7: 7-11 |எபிரேயர் 4: 12-13 | மாற்கு 10: 17-30




கப்பலில் பயணம் செய்து கொண்டிருந்த ஒருவனுக்கு திடீரென ஒரு அச்சம் தோன்றியது: கடலில் விழுந்து விட்டால் தான் எப்படி உயிர் பிழைப்பது என்ற எண்ணம் அவனை வாட்டியது. கப்பல் தலைவனிடம் சென்று தன் அச்சத்தை விளக்கினான். கவலைப்படாதே , உனக்குத்தான் நன்கு நீந்தத் தெரியுமே என்றான் கப்பல் தலைவன். உடனே அவன், இல்லை ! நேற்று கூட நன்கு நீந்தத் தெரிந்த ஒருவன் கடலில் விழுந்து மூழ்கி இறந்து போனானே என்றதற்கு கப்பல் தலைவன் அம்மனிதன் கடலில் வீழ்ந்தபோது தன்னுடைய பொருட்கள் அடங்கிய இரண்டு பெட்டிகளை தன் இரு கைகளிலும் பிடித்திருந்தான். அப்பெட்டிகளின் எடை அவனை நீருக்குள் இழுத்துச் சென்றுவிட்டது. எனவேதான் எங்களால் கூட அம்மனிதனைக் காப்பாற்ற இயலவில்லை என்று சொன்னான். இக்கதை தரும் பாடத்தை நமக்கு அளிப்பதே இன்றைய வாசகங்கள். மனிதன் படைக்கப்பட்ட போது கள்ளங்கபடம் இல்லாமல் (Innocence) இருந்தான். அவன் வளர வளர அவனுக்குள் பல மூட்டைகள் ஏறிக் கொண்டன. நல்லவைகள் பஞ்சு மூட்டையைப் போல இலேசாக இருந்தன. தீயவையே பாறாங்கற்களைப்போல கடினமாயின. இதுபோன்ற மூட்டைகள் அவனுக்குள் இருக்கும் வரை குழப்பம்தான்.


கட்டளைகளை யெல்லாம் கடைப்பிடித்த இளைஞன் ஒருவனுக்குத் தனக்கு நிலைவாழ்வு கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்தது. ஆண்டவர் இயேசுவிடம் சென்று வினவினான். பாதி கிணற்றைத் தாண்டும் சக்தி கொண்ட அவுனுக்கு மீதிப் பாதி கிணற்றைத் தாண்ட ஆண்டவர் வழிவகைச் சொன்னார். உமக்கு இன்னும் ஒன்று குறைபடுகிறது. நீர் போய் உமக்கு உள்ளவற்றை விற்று ஏழைகளுக்குக் கொடும். அப்போது விண்ணகத்தில் செல்வராய் இருப்பீர். பின்பு வந்து என்னைப் பின்பற்றும் (மாற்.10:21) என்றார். ஆண்டவர் காட்டிய வழி அவனுக்கு உகந்ததாக இல்லை. நீ கட்டளைகளையெல்லாம் கடைப்பிடிப்பதால் மீட்பு அடைந்துவிட்டாய் என்று இயேசு சொல்வார் என்று எண்ணி வந்த இளைஞனுக்கு, இன்னும் அதிகமாக, எல்லாவற்றிற்கும் மேலாக அனைத்தையும் இழக்கச் சொல்கிறாரே என்று முகம் வாடி வருத்தத்தோடு சென்றான்.

நாமும் மீட்படைய வேண்டும் என்று விரும்புகிறோம். நம்மை மீட்க வேண்டும் என்பது இறைத்தந்தையின் விருப்பம். அவ்விருப்பத்தை நிறைவேற்ற இயேசு தன்னுயிரைத் தந்தார். இன்னும் குறைவாக இருப்பது என்ன? நம் ஒத்துழையாமை. பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில் நாம் சேகரித்தவற்றை, நாம் அடைந்தவற்றைக் காப்பாற்றுவதற்காக நாம் நடத்துகின்ற போராட்டம் பெரிது. நாம் சேர்த்தவைகள்: பணம், பதவி, படிப்பு, பட்டம், பகைமை, சொத்து, சொந்தம்... போன்ற சுமைகளே நம்மை மூழ்கடிக்கும். இவற்றையெல்லாம் விடுத்துக் கள்ளம் கபடற்ற முதல் நிலைக்கு நாம் செல்ல வேண்டும். அறிவு நம்மை அனைத்தையும் துறக்க வைக்கும். வளர்ந்தாலும், பெரியவரானாலும் ஞானம் என்கிற கொடை நம்மைக் குழந்தைகளாக்கும். இது தனி மனித முயற்சியால் இயலாது. ஆனால் கடவுளுக்கு அப்படியல்ல, கடவுளால் எல்லாம் இயலும் (மாற் 10:27). பின்பு வந்து என்னைப் பின்பற்றும் (மாற் 10:21) என்று சொன்ன இயேசுவின் வார்த்தைகளுக்குச் செவிமடுத்து ஞானத்தைப் பெறுவோம். இலவசமாய் இறைவன் தரும் நிறை வாழ்வைப் பரிசாகப் பெற்றுக்கொள்வோம்.



எப்படி பணத்தைப் பயன்படுத்துவது?

அந்தப் பள்ளிக்கூடத்தில் அந்த வகுப்பில் அவன்தான் கணக்கில் முதல் மாணவன். அவன் 99 மதிப்பெண் பெற்று முன்னிலையிலிருந்தான். ஆனால் அவனுடைய கணித ஆசிரியர் அவனைக் கடுமையாகக் கண்டித்தார். கண்டிக்கப்பட்டவன் கண்டிப்புக்குக் காரணம் கேட்டான். ஆசிரியரோ ஒரு வெள்ளைத்தாளில் ஒரு கரும்புள்ளியை வைத்துவிட்டு, மாணவனைப் பார்த்து, நீ பெற்றிருக்கின்ற மதிப்பெண் இந்த வெள்ளைத் தாளிலுள்ள கருப்புப் புள்ளி போல் இருக்கின்றது. நீ முழுவதும் வெள்ளையாக இருப்பதையே நான் விரும்புகின்றேன் என்றார். இயேசு இன்றைய நற்செய்தியிலே அவரைச் சந்திக்க வந்த மனிதரிடம் ஒரு கறுப்புப் புள்ளி இருப்பதை, ஒரு குறை இருப்பதைக் கண்டார். நிலை வாழ்வை, இறைவனுடைய நிறை ஆசியை உரிமையாக்கிக்கொள்ள விரும்பிய அந்தச் செல்வர் மோசே கொடுத்திருந்த கட்டளைகளை அப்பழுக்கில்லாமல் பின்பற்றியவர். இருப்பினும் இயேசுவின் சீடத்துவத்துக்கு ஒவ்வாத ஒன்று அவரிடமிருந்தது. அது என்ன? அவருக்கு அடிமையாக இருக்க வேண்டிய சொத்து அவரை அடிமைப்படுத்தி வைத்திருந்தது.

ஞானம் நிறைந்த (முதல் வாசகம்), உயிருள்ள, ஆற்றல் மிக்க (இரண்டாம் வாசகம்) இயேசுவின் வார்த்தைகள் அந்தப் பணக்காரரின் மனத்துக்குள் புகாதவாறு அவருடைய பண ஆசை அவரைத் தடுத்து நிறுத்திவிட்டது. அவருக்குத் தெரிந்ததெல்லாம் பணம் ஒன்றுதான். இயேசுவின் அறிவுரை, விண்ணகம், விண்ணக வாழ்வு போன்ற மதிப்பீடுகளெல்லாம் அவருடைய அகராதிக்கு அப்பாற்பட்டவை. அவர் பணம் பந்தியிலே குணம் குப்பையிலே இதைப் பார்த்து அறிந்து நடக்காதவன் மனிதனில்லே என்று பாடித்திரிந்தவர். இயேசுவின் சீடர்களாக வாழ விரும்புகின்றவர்கள் நூற்றுக்கு நூறு அவருடைய வார்த்தைகளுக்கு முதலிடம் கொடுக்க வேண்டும்.

எவ்வளவுக்கு எவ்வளவு நாம் பற்றற்றவர்களாகத் திகழ்கின்றோமோ அந்த அளவுக்கு அம்மையும், அப்பனுமாகிய கடவுள் நம்மைத் தாங்கிப்பிடித்து வாழவைப்பார். பணத்தைச் சோற்றுக்கு ஊறுகாய் போலப் பயன்படுத்துவது நல்லது.

மேலும் அறிவோம் :

    யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
    அதனின் அதனின் இலன் (குறள் : 341).

பொருள் : ஒருவன் எத்தகைய பொருள்களில் இருந்து வேண்டாம் என்று விட்டு விலகுகிறானோ, அந்தப் பொருள்களால் அவனுக்குத் துன்பம் எதுவும் நேராது!



கிரேக்க நாட்டுத் தத்துவமேதை ஒருவர் தம் வீட்டிற்கு முன்புறம், "ஞானம் இங்கே விற்கப்படும்" என்று ஒரு விளம்பரப் பலகையில் எழுதி வைத்திருந்தார், இந்த நூதனமான விளம்பரத்தைப் படித்த ஒரு பணக்காரர் தமது வேலைக்காரரிடம் பணம் கொடுத்து, ஞானம் வாங்கி வரும்படி அவரை அம்மேதையிடம் அனுப்பினார். அம்மேதை அப்பணத்தை வாங்கிக் கொண்டு, ஒரு காகிதத் துண்டில், "நீ எதைச் செய்தாலும் தன் இறுதி முடிவை நினைத்துக்கொள்” என்று எழுதிக் கொடுத்தார், அப்பணக்காரர் அவவாக்கியத்தைப் பொன் எழுத்துக்களால் பொறித்து, சட்டம் கட்டி, தம் வீட்டின் மையப் பகுதியில் தொங்கவிட்டு, நாள்தோறும் படித்து, வாழ்வின் நிலையாமையை உணர்ந்து, தம் செல்வத்தின் பெரும் பகுதியை ஏழைகளுக்குக் கொடுத்து உதவி, உண்மையில் ஞானியாக வாழ்ந்து நல்ல மரணமடைந்தார்.

நாம் எதைச் செய்தாலும் நம் வாழ்வின் இறுதி முடிவை நம் கண்முன் நிறுத்த வேண்டும். “இருப்பது பொய், போவதுமெய்." இதுதான் வாழ்வு. "வீடு வரை உறவு, வீதி வரை மனைவி, காடு வரை பிள் ளை, கடைசிவரை யாரோ?" திலையற்ற வாழ்வை எண்ணிப்பார்த்ததால்தான் பலர் ஞாளிகளாக மாறினர். இன்றைய பதிலுரைப் பாடலும், "எங்கள் வாழ்நாள்களைக் கணிக்க எங்களுக்குக் கற்பியும்; அப்போது ஞானமிகு உள்ளத்தைப் பெற்றிடுவோம்" (திபா 30:12) எனக் கூறுகிறது.

இன்றைய முதல் வாசகம் ஞானத்தின் சிறப்பை எடுத்துரைக்கின்றது. ஞானத்திற்கு ஈடு இணையானது இவ்வுலகில் வேறெதுவுமில்லை. ஞானத்திற்கு முன் வெள்ளி வெறும் களிமண்; தங்கம் வெறும் தவிடு; செல்வம் வெறும் குப்பை: அழகு வெறும் மாயை; புகழ் வெறும் புகை.

அறிவு ஞானமாகக் கனிய வேண்டும். அறிவைப் புத்தகம் வாயிலாகவும் பல்கலைக் கழகங்கள் மூலமாகவும் பெற முடியும். நவீனக்கலையைக் கலைக்கணிப் பொறிவாயிலாகக் கற்றுக் கொள்ள முடியும், இவ்வுலகம் முழுவதையும் இணையதளம் மூலமாக இணைக்க முடியும். சின்னத் திரைகளும் பெரிய திரைகளும் நமக்குக் கேளிக்கைகளை வழங்க முடியும். ஆனால் ஞானமானது கடவுள் நமக்கு அளிக்கும் மேலான கொடை; தூய ஆவியார் நம் மீது பொழியும் ஒப்புயர்வற்ற வரம் சாலமோன் அரசர் கடவுளிடமிருந்து செல்வத்தையோ புகழையோ ஆயுளையோ கேட்காமல் ஞானத்தைக் கொடையாகக் கேட்டுப் பெற்றுக் கொண்டார். பகுத்தறிவு இறைஞானமாகக் கனிய வேண்டும். மெய்யறிவு சூன்யத்தில் அல்ல, பூரணத்தில் சங்கமிக்கும்: கடவுளிடம் சரண் அடையும். பழங்காலத்தில் அறுவது வயது நிறைவடைந்த கணவனும் மனைவியும் இல்லறம் துறந்து வனவாசம் மேற்கொள்ளக் காட்டுக்குச் சென்றனர். முன்னே சென்ற கணவர் தரையில் கிடந்த ஏதோ ஒரு பொருளைக் காலால் மணலைக் கொண்டு மறைத்தார். அதைக் கவனித்த மனைவி அவரிடம், "எதைக் காலால் மூடி மறைக்கிறீர்கள்?" என்று கேட்டதற்கு, கணவர், "தரையில் மாணிக்கக் கல் ஒன்று கிடக்கிறது. அதை உன் கண்களில் படாதபடி மூடி மறைத்தேன்" என்றார், அதற்கு மனைவி, “ என்னங்க, துறவறம் மேற்கொண்ட பிறகும், உங்களுக்கு மண்ணுக்கும் மாணிக்கத்திற்கும் வேறுபாடு தெரிகிறதா?" என்று கேட்டார். ஞானத்தில் தம் கணவரையே விஞ்சி விட்டார் அந்த மனைவி!

கடவுளை யார் தேடுவர் ? மண்ணையும் மாணிக்கத்தையும் சமமாகப் பார்ப்பவர்கள். ஒட்டையும் செல்வத்தையும் ஒன்றாகக் காண்பவர்கள் தான் கடவுளை நாடுவர் என்கிறார் தாயுமானவர்.

"ஓடும் இருநிதியம் ஒன்றாகக் கண்டவர்கள் நாடும் பொருளான நட்பே பராபரமே".

இன்றைய நற்செய்தியில், கடவுளுடைய ஞானம் எனப்படும் கிறிஸ்துவை (1கொரி 1:24) பணக்கார வாலிபர் ஒருவர் மேலோட்டமாகப் பின்பற்ற விரும்பினார். ஆனால் கிறிஸ்துவோ தம்மை வேரோட்டமாக, நெருக்கமாகப் பின்பற்ற அவருக்கு அழைப்பு விடுத்தார், அவருடைய உடமைகளை எல்லாம் விற்று, அவற்றை ஏழைகளுக்கு வாரி வழங்கிவிட்டு, வெறுங்கையுடன் தம்மைப் பின்பற்ற அழைத்தார், ஆனால் அப்பணக்கார வாலிபர் தமது உடமைகளைத் துறக்க மனமின்றி முகவாட்டத்துடன் போய் விட்டார், அவருக்கு மண்ணக அறிவு இருந்தது. ஆனால் விண்ணக ஞானமில்லை . கடவுளுக்கும் செல்வத்திற்கும் ஊழியம் புரிய அவர் விரும்பினார். ஆனால் கிறிஸ்துவோ, "எவரும் கடவுளுக்கும் செல்வத்துக்கும் ஊழியம் செய்ய முடியாது" (மத் 6:24) என்பதை அவருக்குத் திட்டவட்டமாக உணர்த்தினார்.

கிறிஸ்து இவ்வுலகச் செல்வத்தின் அவசியத்தை மறுக்க வில்லை. பொருட்பால் இல்லை என்றால், காமத்துப் பாலும் வாங்க முடியாது. ஏன், ஆவின்பால் கூட வாங்க முடியாது என்பது கிறிஸ்துவுக்கு நன்றாகவே தெரியும். ஆனால், கிறிஸ்துவோடு ஒப்பிடும் போது, இவ்வுலகச் செல்வங்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டு, இரண்டாம் நிலையை அடைகின்றன, கிறிஸ்து எல்லாவற்றையும் இரண்டாம் நிலைக்குத் தள்ளி விடுகிறார். இவ்வுண்மையைத் திருத்தூதர் பவுல் தன்குனர்ந்திருந்தார், எனவே தான் அவர், “கிறிஸ்துவை ஆதாயமாக்கிக் கொள்ள அனைத்தையும் குப்பையாகக் கருதுகிறேன்” (பிலி 3:8) என்றார். இவ்வுலக செல்வங்களுக்கு அடிமை ஆகிறவர்கள் கடவுளுக்கு அடிமை ஆகமுடியாது.

அரிது, அரிது, பணக்காரர் விண்ணரசில் நுழைவது அரிது என்று ஆணித்தரமாக அறிக்கையிடும் கிறிஸ்து, பணக்காரர்களும் இறையருளால் விண்ணகம் செல்ல முடியும் என்பதையும் எடுத்துக்கூறத் தயங்கவில்லை , பணக்கார சக்கேயு ஓர் ஊழல் பெருச்சாளி: இறையருளால், அதாவது கிறிஸ்துவின் பிரசன்னத்தால் மனமாற்றம் அடைந்தார். அதன் விளைவாகத் தாம் இழைத்த அநீதிகளுக்கு நான்கு மடங்கு ஈடு செய்யவும், தமது செல்வத்தில் பாதியை ஏழைகளுக்கு வழங்கவும் முன் வந்தார்; மீட்படைந்தார் (லூக் 19:8-10).

எவ்வகைப் பொருளாசையும் கொள்ளாது எச்சரிக்கையாக இருக்க வேண்டும், ஏனெனில் செல்வப் பெருக்கால் வாழ்வு வந்துவிடாது. (லூக் 12:15). நிலையற்ற செல்வத்தை ஏழைகளுக்குக் கொடுத்து அதன்மூலம் நிலை வாழ்வைப் பெற்றுக் கொள்ள வேண்டும் (லூக் 18:9), உலகச் செல்வத்தைப் பயன்படுத்தும் போது அவற்றில் மூழ்கி ஆன்மாவை இழக்காமல் இருக்கக் கற்றுக்கொள்வதுதான் வாழ்க்கைக் கலையாகும் (1 கொரி 7:31).

கணவர் ஒருவர் தம் மனைவிக்குக் குடைபிடித்துக் கொண்டு போனார், ஏன் அவர் அவ்வாறு செய்தார்? என்று அவரைக் கேட்டதற்கு அவர் தந்த பதில்: "போகும் வழியில் துணிக்கடை, நகைக்கடைகள் உள் ளன், அக்கடைகளை என் மனைவி பார்க்காதப்டி கு கடை யை இருபக்கங்களிலும் வளைத்துப்பிடித்து மிகவும் தந்திரமாக அவளை வீட்டிற்குத் தள்ளிக்கொண்டு போய் விடுவேன்."

இவ்வுலக மாயை நமது கண்களில் பட்டு நம்மைத் திசை திருப்பாமல் செய்ய நமக்கொரு குடை தேவைப்படுகிறது. அதுதான் கடவுளுடைய வார்த்தை : உயிருள்ள, ஆற்றல்மிக்க, இருபக்கமும் வெட்டக்கூடிய கூர்மையான வாளான, உள்ளத்தை சாடுருவுகிற கடவுளுடைய வார்த்தையால் மெய்யறிவும் ஞானமும் பெற்று ஞானிகளாக வாழக் கற்றுக் கொள்வோம். பல்வேறு வாழ்க்கைப் போராட்டங்களால் நாம் நசுக்கப்பட்டு, பிழியப்பட்டு பெறுகின்ற பட்டறிவினால் நாம் ஞானிகளாக மாறவேண்டும், வாழ்க்கை அனுபவம்தான் நமது சிறந்த ஆசான். கெட்ட பின்னாவது ஞானியாக வேண்டாமா?

தொட்டிலுக்கு அன்னை, கட்டிலுக்குக் கன்னி, பட்டினிக்குத் தீனி, சுட்டபின் நெருப்பு, கெட்டபின் ஞானி! "நீ எதைச் செய்தாலும் உன் இறுதி முடிவை நினைத்துக் கொள்"
 



”அது சரி, ஆனால்...” விளையாட்டு

இரண்டு சந்தர்ப்பங்களில்‌ இறைவன்‌ சிரிக்கிறாராம்‌!

மருத்துவர்‌ ஒரு நோயாளியிடம்‌ “கவலைப்படாதீர்கள்‌. கண்டிப்பாக உங்கள்‌ உயிரைக்‌ காப்பாற்றி விடுவேன்‌” என்று கூறித்‌ தேற்றும்போது இறைவன்‌ சிரிக்கிறார்‌. காரணம்‌? உயிரை எடுப்பதும்‌ கொடுப்பதும்‌ மருத்துவர்‌ கையிலோ இருக்கின்றது? அடுத்தது இரு சகோதரர்கள்‌ தங்கள்‌ நிலத்தைப்‌ பிரித்துக்‌ கொள்கின்றபோது இது என்னுடையது' என்கிறான்‌ ஒருவன்‌. “இல்லை தன்னுடையது” என்கிறான்‌ மற்றவன்‌. சிரித்துக்‌ கொண்டே கடவுள்‌ தனக்குள்‌ சொல்கிறார்‌: “இந்த உலகம்‌ அனைத்தும்‌ என்னுடையது. ஆனால்‌ இவர்களோ இது என்னது அது உன்னது எனச்‌ சொல்லிச்‌ சண்டையிட்டுக்‌ கொள்கின்றனர்‌.

அன்று பேதுருவும்‌ யோவானும்‌ ஆலய முற்றத்தில்‌ முடவனைச்‌ சந்திக்கின்றனர்‌. பிச்சை கேட்ட அவனிடம்‌ பேதுரு “பொன்னும்‌ வெள்ளியும்‌ என்னிடம்‌ இல்லை. என்னிடம்‌ உள்ளதை நான்‌ தருகிறேன்‌. இயேசுவின்‌ பெயரால்‌ உனக்குச்‌ சொல்கிறேன்‌. எழுந்து நட” (தி.ப. 3:6) என்றார்‌. அவனும்‌ எழுந்து நடக்கிறான்‌.

திருத்தந்தை 13ம்‌ சிங்கராயர்‌ ஒரு மனிதரைப்‌ பேதுரு பேராலயத்துக்கும்‌ தனது மாளிகைக்கும்‌ அழைத்துச்‌ சென்றார்‌. அங்குள்ள ஆடம்பரப்‌ பொருள்களையெல்லாம்‌ காட்டி, '“பேதுருவோடு சேர்ந்து வெள்ளியும்‌ பொன்னும்‌ என்னிடமில்லை என்று இனி எங்களால்‌ கூற முடியாது” என்றாராம்‌. உடனே அந்த மனிதர்‌ திருத்தந்தையைப்‌ பார்த்து, “ஆகவேதான்‌ உங்களால்‌ எழுந்து நட என்றும்‌ சொல்ல இயலவில்லை” என்று பதில்‌ கூறினாராம்‌.

பணத்துக்கோ பணக்காரர்களுக்கோ எதிரானவரல்ல இயேசு. நிக்கதேம்‌, சக்கேயு போன்ற செல்வந்தர்களின்‌ நெருங்கிய 'நண்பர்‌ அன்றோ! பணத்தால்‌ வரும்‌ தீமைகள்‌, ஆபத்துக்கள்‌ குறித்து எச்சரிக்கிறார்‌.

பணம்‌ என்ற தேவதைக்குப்‌ பலியாகாதது எது? கற்பு பலியாக்கப்படுகிறது. அதுதான்‌ விபச்சாரம்‌. உண்மை பலியாக்கப்படுகிறது. அதுதான்‌ பொய்ச்சாட்சி, நீதி பலியாக்கப்படுகிறது. அதுதான்‌ அநீதத்‌ தீர்ப்பு. அன்பு பலியாக்கப்படுகிறது. அதுதான்‌ வஞ்சனை. நேர்மை பலியாக்கப்படுகிறது, அதுதான்‌ ஊழல்‌. நியாயம்‌ பலியாக்கப்படுகிறது, அதுதான்‌ சுரண்டல்‌. இப்படிப்‌ பணத்துக்காக பலியாக்கப்படுபவை பல. அவை ஒவ்வொன்றிலும்‌ கிறிஸ்துவின்‌ சீடன்‌ . என்ற நிலையும்‌ பலியாக்கப்படுகிறது. “எவரும்‌ இரு தலைவர்களுக்குப்‌ பணிவிடை செய்ய முடியாது” (மத்‌. 6:24).

பணத்தை மட்டும்‌ நம்பி இருப்பவர்கள்‌ கடவுளின்‌ அரசில்‌ நுழைவது எவ்வளவு அரிது! (மார்க்‌ 10:23). ஆலமரம்‌ எதை நம்பி வாழ வேண்டும்‌? வேரையா, விழுதையா? ஐயமில்லாமல்‌ வேரைத்தான்‌. அதற்காக விழுதுகளை விட்டுவிட வேண்டும்‌ என்றில்லை. ஆனால்‌ விழுதான செல்வத்தை மட்டுமே நம்பிக்கொண்டு ஆணி வேரான ஆண்டவனை மறக்கும்போது முன்னுரிமை கொடுப்பதில்‌ முறைகேடு அல்லவா ஏற்பட்டுவிடுகிறது! பணநிலை அல்ல, மனிதனின்‌ மனநிலையே நம்பிக்கையின்‌ உரைகல்‌.

ஒருவன்‌ யாரை நம்பி வாழ்கிறான்‌ என்று கண்டறிய இறைவன்‌ சோதனைகளை நடத்தி இருக்கிறான்‌. 2 எடுத்துக்காட்டுகள்‌.

1. ஆபிரகாமிடம்‌ மகனைப்‌ பலிகொடுக்கக்‌ கேட்டது. ஆபிரகாம்‌ நம்பி இருந்தது வேரான கடவுளையா, விழுதான மகனையா?சோதனையில்‌ வென்றார்‌. மனநிறைவோடு திரும்பினார்‌.

2. இயேசு சந்தித்த பணக்கார இளைஞனை அழைத்தது. அவன்‌ நம்ப வேண்டியது வேரான இறைவனையா, விழுதான சொத்து சுகத்தையா? சோதனையில்‌ தோற்றான்‌ மனம்‌ வாடித்‌ திரும்பினான்‌.

கிறிஸ்தவ வாழ்க்கை கட்டளைகளுக்கு அப்பால்‌. பத்துக்‌ கட்டளைகள்‌ மனிதன்‌ மனிதனாக வாழத்தானே தவிர மனிதன்‌ கிறிஸ்தவனாக வாழ அல்ல. திருஅவைக்‌ கட்டளைகள்‌ கடமை மறந்த கிறிஸ்தவனுக்கு ஒரு குறைந்த நிலை -வடிவமைப்பே தவிர இலட்சிய வாழ்க்கைக்கான வழியல்ல.

வானக வாழ்வு ஒரு மாளிகை என்றால்‌, அம்மாளிகையைக்‌ கட்டி எழுப்பக்‌ கடவுள்‌ அமைத்துத்‌ தந்த சாரம்தான்‌ இவ்வுலகம்‌. உலகம்‌ தரும்‌ செல்வம்‌. செல்வத்தால்‌ வரும்‌ இன்பம்‌. வீடு எதற்காகக்‌ கட்டுகிறோம்‌, இருக்கவும்‌, அமரவும்‌, படுக்கவும்‌ நடமாடவும்தானே, சாரத்திலும்‌ ஒரளவு அவற்றைச்‌ செய்யலாமே என்றெண்ணி வீட்டைக்‌ கட்டுவதை விடுத்து, சாரத்திலேயே குடியிருக்க நினைப்பவனை என்னவென்பது?

இன்று நாம்‌ யாரை நம்பி வாழ்கிறோம்‌ என்றறிய இறைவன்‌ நம்மைச்‌ சோதித்தால்‌ ... சோதனையில்‌ வெற்றி பெறத்‌ தேவையான ஞானத்தை நாடுவோம்‌. ஒழுங்காக ஒரு புள்ளிவிவரம்‌ எடுத்தால்‌, உலகத்தில்‌ அருள்‌ இல்லாமல்‌ அல்லது பொருள்‌ இல்லாமல்‌ துன்புறுபபர்களை விட அறிவில்லாமல்‌ ஞானமில்லாமல்‌ அல்லல்படுபவர்கள்‌ தாம்‌ அதிகம்‌ என்பது தெரியவரும்‌. ஞானத்தின்‌ ஆவியோடு ஒப்பிடும்போது செல்வம்‌ ஒன்றுமே இல்லை. (சா.ஞா. 7:7-11)

கருத்தரங்கு ஒன்றில்‌ பெண்‌ அடிமைத்தனம்‌, வரதட்சணை போன்ற சமூகத்‌ தீமைகள்‌ பற்றி அலசப்பட்டது. வரதட்சணை ஒழிக்கப்பட வேண்டும்‌ என்று தீர்க்கமாக முடிவு எடுக்கப்பட்டது. சில நாள்களுக்குப்‌ பின்‌ அதில்‌ கலந்து கொண்ட இளைஞனுக்கு திருமணம்‌, வரதட்சனை ஐந்து லட்சமாம்‌!

இன்று நம்மிடையே நல்ல கருத்துக்கள்‌, தீர்மானங்கள்‌ இல்லாமல்‌ இல்லை. ஆனால்‌ செயல்பாடுதான்‌ கேள்விக்குறி. இத்தகைய நடைமுறையை எரிக்‌ புரோம்‌ என்ற உளவியல்‌ நிபுணர்‌ “அது சரி, ஆனால்‌” (“yes, but” game) என்ற உளவியல்‌ விளையாட்டு என்கிறார்‌. நல்ல நல்ல கருத்துக்களை மகிழ்ச்சியுடன்‌ ஏற்றுக்‌ கொண்டு 'ஆம்‌' என்பது. தொடர்ந்து 'ஆனால்‌' என்று சொல்லி மறுத்துவிடுவது. இன்று சமுதாயத்திலும்‌ அரசியலிலும்‌, திருஅவையிலும்‌ உள்ள பெரிய நோய்‌ இதுதான்‌!

பணக்கார இளைஞன்‌ வருகிறான்‌. வருத்தத்தோடு. திரும்புகிறான்‌. நிகழ்ச்சியின்‌ தொடக்கத்தில்‌ நம்பிக்கையும்‌ உற்சாகமும்‌. இறுதியில்‌ வருத்தமும்‌ விரக்தியும்‌. நல்ல மனம்‌ மட்டும்‌ போதாது. அது வெறும்‌ கற்பனையே. உழைப்பும்‌ உற்சாகமான முயற்சியும்‌ எந்தத்‌ தடையையும்‌ மேற்கொள்ளும்‌ துணிவும்‌ தேவை.

இயேசுவா? செல்வமா? செல்வத்தை இழக்க மனமில்லாத இளைஞன்‌ இயேசுவை இழக்கத்‌ துணிந்துவிட்டான்‌. பணத்திற்கு முதலிடம்‌ தரும்‌ யாரும்‌ இறைவனை, இறையரசை உரிமையாக்கிக்‌ கொள்ள முடியாது. செல்வத்தை இழக்கத்‌ துணியும்‌ மனம்‌ மகிழ்ச்சியை இழப்பதில்லை. இயேசுவை இழக்கத்‌ துணியும்‌ மனம்‌ மகிழ்ச்சியை இழக்கிறது. காரணம்‌ செல்வம்‌ நிலையற்றது. இயேசு நிலையானவர்‌, நிரந்தரமானவர்‌.

வாழ்வதற்குப்‌ பொருள்‌ வேண்டும்‌.
வாழ்வதிலும்‌ பொருள்‌ வேண்டும்‌.
ஒர்‌ இளைஞன்‌ ஒரு துறவியிடம்‌ “நான்‌ இதுவரை பொய்‌ சொன்னதில்லை. திருடியதில்லை. யாருக்கும்‌ தீங்கு நினைத்ததில்லை. எனக்கு விண்ணகப்‌ பேறு கிடைக்குமா?'' என்று கேட்டான்‌. துறவியோ “மரமும்‌ மண்ணும்‌ மட்டையும்‌ முக்தி பெறுமாயின்‌ உனக்கும்‌ முக்தி உண்டு: என்றார்‌. அதாவது மரமும்‌ மண்ணும்‌ பொய்‌ சொல்வதில்லை. திருடுவதில்லை. எவருக்கும்‌ தீங்கு இழைப்பதில்லை. நீ மோட்சம்‌ செல்ல வேண்டுமானால்‌ அதை நிர்ணயிப்பது நீதான்‌ எனவே நீ நல்லவனாக, குறிப்பாக உன்னிடம்‌ உள்ளதைப்‌ பிறரோடு பகிர்ந்து கொள்பவனாக வாழும்‌ போது நிலை வாழ்வு என்பது நிச்சயம்‌.

ஒவ்வொரு மனிதனுக்கும்‌ இரண்டு இலக்குகள்‌ உண்டு.
1. இந்நேரத்து இலக்கு (Immediate goal)

2. இறுதி இலக்கு (ultimate goal)

 அனைவருக்கும்‌ இறுதி இலக்கு நிலை வாழ்வை உரிமையாக்கிக்‌ கொள்வதாகும்‌. இன்றைய இலக்கு அன்றாடம்‌ உண்மையிலும்‌ நீதியிலும்‌ தூய்மையிலும்‌ புனிதத்திலும்‌, பாசத்திலும்‌ பகிர்விலும்‌ வாழ்வதாகும்‌.

 

 
விண்ணரசின் மதிப்பை உணராமல் வாழும் மானிடர்கள்!

நிகழ்வு
ஜூலியன் என்றொரு பெருஞ்செல்வந்தர் ஒருவர் இருந்தார். இவருக்கு ஒரு பண்ணை வீடு இருந்தது. அந்தப் பண்ணை வீட்டில்தான் இவர் தன்னுடைய பெரும்பாலான நேரங்களைச் செலவழித்தார். இவருடைய பண்ணை வீட்டின் ஒருபுறம் அருமையானதொரு தோட்டம் இருந்தது. அதில் வண்ண வண்ண மலர்கள் பூத்துக்குலுங்கின. பண்ணை வீட்டின் இன்னொரு பக்கம், மீன்குளம் ஒன்று இருந்தது. அதில் அரியவகை மீன்களெல்லாம் இருந்தன.

இப்படிப்பட்ட ஓர் அருமையான பண்ணைவீட்டில் எப்பொழுதும் இருந்து பழகியதால், ஜூலியனுக்கு அந்தப் பண்ணைவீடு பிடிக்காமல் போனது. அதை எப்படியாவது விற்றுவிட்டு, வேறோர் இடத்தில் நிலம் வாங்கிப் பண்ணை டு கட்டி அதில் வாழலாம் என்று முடிவுசெய்தார் ஜூலியன். இதைத் தொடர்ந்து இவர், நிலங்களை வாங்கி விற்கும் ஓர் இடத் தரகரிடம் தன்னுடைய விருப்பத்தைத் தெரிவித்தார். அவரும் இவரிடம் “அப்படியே செய்துவிடுவோம்” என்று சொல்லிவிட்டுச் சென்றுவிட்டார்.

மறுநாள் செய்தித்தாளில் இப்படியொரு விளம்பரம் வந்திருந்தது: “பண்ணை வீடு ஒன்று விற்பனைக்கு வருகின்றது. அதன் ஒருபுறம் அருமையான தோட்டமும், இன்னொரு புறம் மீன் குளமும் உள்ளது. சொர்க்கத்தில் இருப்பது போன்ற உணர்வைத் தரும் இந்தப் பண்ணை வீட்டின் விலை மிகவும் குறைவுதான். இதை வாங்க விருப்பமுள்ளோர் கீழ்க்காணும் தொலைபேசி எண்ணை அழைக்கவும்.”

செய்தித்தாளில் வந்த இந்த விளம்பரத்தைப் பார்த்ததும், ஜூலியன் மிகவும் உற்சாகமடைந்து, ‘எப்படியாவது அந்தப் பண்ணை வீட்டை வாங்கிவிடவேண்டும்’ என்று நினைத்துக்கொண்டு, விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டிருந்த எண்ணைத் தொடர்புகொண்டு பேசினார். கடைசியில்தான் தெரிந்தது, அது தன்னுடைய பண்ணை வீடுதான் என்று. இப்படிப்பட்ட பண்ணை வீட்டையா நாம் விற்கத் துணிந்தோம் என்று நினைத்து, ஜூலியன் தன்னுடைய பண்ணை வீட்டை விற்கும் எண்ணத்தைக் கைவிட்டார்.

ஆம், இந்த நிகழ்வில் வருகின்ற ஜூலியன், எப்படித் தன்னுடைய பண்ணை வீட்டின் அருமையையும் மகத்துவத்தையும் உணராமல் இருந்தாரோ, அப்படித்தான் இன்றைக்குக் பல கிறிஸ்தவர்கள் விண்ணரசின் மகத்துவத்தை உணராமல் வாழ்த்துகொண்டிருக்கின்றார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில், பொதுக்காலத்தின் இருபத்து எட்டாம் ஞாயிறான இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை, எல்லாருக்கும் உரிய விண்ணரசின் மகத்துவத்தை நாம் உணரவும், அந்த விண்ணரசில் நாம் பங்குபெற என்ன செய்யவேண்டும் என்பதையும் எடுத்துக்கூறுகின்றது. அதைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

கொடுக்கப்பட்ட அழைப்பைப் புறக்கணிக்கும் மக்கள்
நற்செய்தியில் ஆண்டவர் இயேசு, விண்ணரசைப் பெரிய விருந்துக்கு ஒப்பிடுகின்றார். இந்த உவமையில் வருகின்ற மன்னர் தன்னுடைய மகனுக்கு நடத்திய திருமணத்திற்கு ஏற்பாடு செய்திருந்த விருந்தில் கலந்துகொள்வதற்கு, ஏற்கெனவே அழைப்புப் பெற்றிருந்தவர்களிடம். ‘விருந்து ஏற்பாடாகிவிட்டது’ என்ற செய்தியைச் சொல்ல தன் பணியாளர்களை அனுப்பி வைக்கின்றார். ஆனால், அழைப்புப் பெற்றவர்களோ மன்னர் அனுப்பி வைத்த பணியாளர்களிடம் ஒவ்வொரு காரணத்தைச் சொல்லி திருமண விருந்துக்குக் வராமல் போகின்றார்கள். இன்னும் ஒருசிலர் அனுப்பப்பட்டவர்களைப் பிடித்துக் கொலைசெய்கின்றார்கள்.

இங்கு மன்னர் ஏற்பாடு செய்திருந்த திருமண விருந்து என்பது விண்ணரசைக் குறிக்கின்றது; அழைப்புப் பெற்றவர்கள் யூதர்களைக் குறிக்கின்றார்கள். யூதர்கள் கடவுளால் சிறப்பாக அழைப்புப் பெற்றிருந்தார்கள். ஆனாலும் அவர்கள் கடவுளால் அனுப்பப்பட்ட இறைவாக்கினர்களைப் பிடித்துக் கொன்றொழிக்கின்றார்கள். இதனாலேயே அவர்களுக்கு கிபி. 70 ஆம் ஆண்டு மிகப்பெரிய அழிவு ஏற்பட்டது. அன்று யூதர்கள் கடவுளின் அழைப்பைப் புறக்கணித்ததுபோல், இன்று நாம் விண்ணரசில், ஆண்டவருடைய திருவிருந்தில் கலந்துகொள்ளாமல், ஏதோவொரு சாக்குப் போக்கைச் சொல்லிப் புறக்கணித்துக் கொண்டிருக்கின்றோம். இத்தகைய நிலையை நாம் மாற்றிக்கொள்வது மிகவும் நல்லது.

விண்ணரசில் எல்லாருக்கும் இடமுண்டு
திருமண விருந்துக்கு அழைப்புப் பெற்றவர்கள் அதாவது யூதர்கள் கடவுளின் அழைப்பு உதறித் தள்ளியதால், அந்த அழைப்பானது எல்லாருக்கும் கொடுக்கப்படுகின்றது. இதன்மூலம் விண்ணரசு என்பது ஒரு குறிப்பிட்ட மக்களுக்கு மட்டுமல்ல, அது எல்லா மக்களுக்கும் உரியது என்ற செய்தியானது சொல்லப்படுகின்றது. இந்த உண்மையை, இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகம் இன்னும் அழகாக, ஆழமாக எடுத்துக்கூறுகின்றது.

“படைகளின் ஆண்டவர் இந்த மலையில் மக்களினங்கள் அனைவருக்கும் சிறந்ததொரு விருந்தை ஏற்பாடு செய்வார்” என்று இன்றைய முதல் வாசகத்தில் வருகின்ற வரிகள், விண்ணரசு மக்கனினங்கள் அனைவருக்கும் உரியது என்ற செய்தியை மிகச் சிறப்பாக எடுத்துச் சொல்கின்றது. மேலும் இந்த விருந்தில் கலந்துகொள்வோருடைய முகத்தை மூடியுள்ள முக்காட்டையும், துன்ப துகிலையும் அகற்றி, கண்ணீரைத் துடைத்துவிடுவார் என்கின்றார் ஆண்டவர்.

இப்படி எல்லாருக்கும் உரிய... நம்முடைய துன்ப துயரங்கள் எல்லாம் நீங்கும்... திருவிருந்தில் அல்லது விண்ணரசில் பங்குபெறுவதற்கு நமக்கு ஒரு முக்கியமான தகுதி அல்லது நாம் ஒரு முக்கியமான செயலைச் செய்யவேண்டும். அது என்ன என்று தொடர்ந்து சிந்தித்துப் பார்ப்போம்.

விண்ணரசில் பங்குபெற தகுதியுள்ளவர்களாய் மாறவேண்டும்
மன்னர் கொடுத்த விருந்தை, அழைப்புப் பெற்றவர்கள் புறக்கணித்ததால், மன்னர் தன் பணியாளரிடம், “நீங்கள் சாலையோரங்களில் காணும் எல்லாரையும் அழைத்து வாருங்கள்” என்று சொல்ல, அவர்களும் அவ்வாறே செய்கிறார்கள். மன்னர் செய்த இத்தகையதொரு செயல், விண்ணரசு எல்லாருக்குமானது என்ற செய்தியை உணர்த்துகின்றது என்று மேலே பார்த்தோம். இவ்வாறு சாலையோரங்களில் இருந்து அழைக்கப்பட்டவர்களுள் ஒருவர், திருமண ஆடையின்றி இருப்பதைக் கண்டு, அவரை இருளில் தள்ளுமாறு தன்னுடைய பணியாளர்களுக்குக் கட்டளையிடுகின்றார் மன்னர்.

மன்னரின் இச்செய்தி, விண்ணரசு எல்லாருக்கும் உரியது என்றாலும், அதில் கலந்துகொள்வதற்கு தகுதி வேண்டும் என்ற செய்தியை நமக்குச் சுட்டிக்காட்டுகின்றது. இங்கு திருமண ஆடை அல்லது விண்ணரசுக்குள் நுழைவதற்கு ஒருவருக்கு இருக்கவேண்டிய தகுதி ‘நேர்மை’ என்று திருவிவிலிய அறிஞர்கள் குறிப்பிடுவார்கள். இதை இன்னும் தெளிவாகப் புரிந்துகொள்வதற்கு இறைவாக்கினர் எசாயா நூல் 61: 10 இல் வருகின்ற, “நேர்மை என்னும் ஆடையை எனக்கு அணிவித்தார்” என்ற வரிகளோடு இணைத்துப் பார்ப்பது நல்லது. திருமண விருந்தில் பங்கு பெறுவதற்குத் திருமண ஆடை எப்படித் தேவையானதாக இருக்கின்றதோ, அப்படி நாம் விண்ணரசுக்குள் நுழைய நேர்மை என்ற பண்பானது தேவையானதாக இருக்கின்றது.

பலநேரங்களில் நாம் நம்முடைய அன்றாட வாழ்க்கையில் நேர்மை இல்லாமலும், உண்மை இல்லாமலும் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இந்நிலையை நாம் நம்மிடமிருந்து தவிர்த்து, நேர்மையோடு வாழ்ந்து கடவுள் தருகின்ற விண்ணரசை உரிதாக்கிக் கொள்ள முயற்சி செய்வோம்.

சிந்தனை
‘கடவுள் படைப்பில் நேர்மையான மனிதனே, தலைசிறந்தவன்’ என்பார் போப் என்ற அறிஞர். ஆகையால், நம்முடைய அன்றாட வாழ்க்கையில் நேர்மையோடு நடந்து, இறைவன் தருகின்ற விண்ணரசை உரித்தாக்கிக் கொள்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.





Tuesday 8 December 2020

திருவருகைக் காலம் முன்றாம் ஞாயிறு

திருவருகைக் காலம் முன்றாம் ஞாயிறு 


இன்றைய வாசகங்கள்:


எசாயா 61:1-2அ; 10-11
1 தெச 5:16-24
யோவான் 1:6-8,19-28 


திருப்பலி முன்னுரை:


இறைஇயேசுவின் நாமத்தில் இனிய வாழ்த்துக்கள்.

மனிதச் சமுதாயம் என்ற குடும்பத்தில் இறைவன் ஒரு குழந்தையாய் பிறக்கப் போவதை மகிழ்வுடன் நாம் எதிர்பார்க்க, இன்றைய ஞாயிறுத் திருவழிபாடு நம்மை அழைக்கிறது. திருவருகைக் காலத்தின் மூன்றாம் ஞாயிறு. இந்த ஞாயிறை, மகிழும் ஞாயிறு என்று கொண்டாடுகிறோம்.

இன்றைய வருகைப் பல்லவியாக ஒலிக்கின்ற இறை வார்த்தைகள் ஆண்டவரோடு இணைந்து என்றும் மகிழுங்கள்: மீண்டும் கூறுகிறேன், மகிழுங்கள்.... ஆண்டவர் அண்மையில் உள்ளார். மகிழுங்கள், மீண்டும் கூறுகிறேன் மகிழுங்கள் என்று பவுல் அடியார் ஆணித்தரமாக வலியுறுத்திக் கூறுவது நம்மைச் சிந்திக்கத் தூண்டுகிறது. மகிழ்வு என்றால் என்ன என்பதை நாம் சிந்திக்க ஒரு நல்ல தருணமிது .

குழந்தை வடிவில் இறைவன் வரும் இந்தக் கிறிஸ்மஸ் நேரத்திலும் அவரது பாதங்கள் நம் இல்லங்களிலும், உள்ளங்களிலும் பல அழகிய பாடங்களைப் பதி்த்துச்செல்ல வேண்டும். அந்தப் பாடங்களை நம் உள்ளங்களில் பதிக்க இந்த மகிழும் ஞாயிறுக்கு தரப்பட்டுள்ள வாசகங்கள் நமக்கு உதவியாக இருக்கும்.
இருள் சூழ்ந்த உலகில் தன் மீது ஒளியைத் திருப்பி இதோ நான் வருகிறேன் என்று இறைவன் சொன்னதே கிறிஸ்மஸ் பெருவிழா.

அந்த ஒளியை இறைவன் மீது திருப்பிய டார்ச் விளக்குத் திருமுழுக்கு யோவான். இந்தத் திருவருகைக் காலத்தில், மகிழுங்கள்.... ஆண்டவர் அண்மையில் உள்ளார். என்பதனை உணர்ந்து இறையருள் வேண்டி மகிழ்ச்சியுடன் இத்திருப்பலியில் மனமுறுக வேண்டுவோம்.

வாசக முன்னுரை:


முதல் வாசக முன்னுரை:


இன்றைய முதல் வாசகத்தில் கடவுளை மறந்து வாழ்ந்ததால் இஸ்ரயேல் மக்கள் பாபிலோனிய அடிமை வாழ்விலே துன்பப்பட்டுத் துவண்டனர். ஆண்டவர் அவர்களை அடிமைத்தனத்தில் இருந்து மீட்டு அவர்களுக்கு அருள் தரும் ஆண்டை அருளப் போவதாக இறைவாக்கினர் எசாயா ஆறுதல் கூறுகிறார். என் கடவுளால் என் உள்ளம் பூரிப்ப்பும் பெருமகிழ்ச்சியும் அடையும்  என்பதை எடுத்துரைக்கும் இவ்வாசகத்தைக் கவனத்துடன் செவிமெடுப்போம்.

பதிலுரைப்பாடல்

பல்லவி: என் கடவுளில் என் உள்ளம் பூரிப்படையும்.
(லூக் 1: 47-48. 49-50. 53-54)

ஆண்டவரை எனது உள்ளம் போற்றிப் பெருமைப்படுத்துகின்றது. என் மீட்பராம் கடவுளை நினைத்து எனது மனம் பேருவகை கொள்கின்றது. ஏனெனில் அவர் தம் அடிமையின் தாழ்நிலையைக் கண்ணோக்கினார். இதுமுதல் எல்லாத் தலைமுறையினரும் என்னைப் பேறுபெற்றவர் என்பர். பல்லவி

ஏனெனில் வல்லவராம் கடவுள் எனக்கு அரும்பெரும் செயல்கள் செய்துள்ளார். தூயவர் என்பதே அவரது பெயர். அவருக்கு அஞ்சி நடப்போருக்குத் தலைமுறை தலைமுறையாய் அவர் இரக்கம் காட்டி வருகிறார். பல்லவி

பசித்தோரை நலன்களால் நிரப்பியுள்ளார்; செல்வரை வெறுங்கையராய் அனுப்பிவிடுகிறார். மூதாதையருக்கு உரைத்தபடியே அவர் ஆபிரகாமையும் அவர்தம் வழி மரபினரையும் என்றென்றும் இரக்கத்தோடு நினைவில் கொண்டுள்ளார்; தம் ஊழியராகிய இஸ்ரயேலுக்குத் துணையாக இருந்து வருகிறார். பல்லவி


இரண்டாம் வாசக முன்னுரை:


இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல் எப்போதும் மகிழ்ந்திருத்தலும், செபித்தலும்,  இறைவனுக்கு நன்றி கூறுதலும், தீமையை விலக்குதலும் நமது பண்பாக விளங்கவேண்டுமென்று அழைக்கின்றார். இயேசு கிறிஸ்துவின் வருகையின் போது நமது உள்ளமும் ஆன்மாவும், உடலும் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள அவர் விடுக்கும் அழைப்பை ஏற்று மனமாற மகிழ்வுடன் இந்த வாசகத்தைக் கவனத்துடன் கேட்போம்.



பதிலுரைப்பாடல்



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவராகிய என் தலைவரின் ஆவி என்மேல் உளது; ஒடுக்கப்பட்டோருக்கு நற்செய்தியை அறிவிக்க என்னை அனுப்பியுள்ளார் அல்லேலூயா


நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்:


1.அன்பின் இறைவாத் திருவருகைக்காலத்தில் 3ஆம் ஞாயிறாகிய இன்று திருஅவையில் இருக்கும் மகிழ்ச்சித் திருஅவையில் மட்டுமல்லாமல், உலகில் இருக்கும் அனைத்து மாந்தருக்கும் கிறிஸ்துவின் மகிழ்ச்சியின் நிறைவில் என்றும் நிலைத்து நிற்க பிறக்கும் பாலன் இயேசு கிறிஸ்துவின் வழியாக இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
 

2 எங்களைக் காத்துப் பராமரித்து வரும் அன்பு தெய்வமே இறைவா! எங்கள் குடும்பங்களில் இறைவாக்கினர் எசாயா, திருமுழுக்கு யோவான், திருத்தூதர் பேதுரு போல ஆண்டவரின் வருகையை நினைத்து அகமகிழவும், அவரது உடன் இருப்பை எண்ணிக்களிகூறவும் அகமகிழ்ந்து, இத்திருவருகைக் காலத்தை நன்கு பயன்படுத்த அருள்பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
 

3. எம்மைத் தேடிவந்த அன்பே எம் இறைவா, மகிழ்ச்சியை உருவாக்கிக் கொள்வது என் உள்மன வேலைதான் என்பதை உணர்ந்து எம் இளைய சமுதாயம் அந்த மகிழ்ச்சியைப் பெற்றிடத் தங்கள் பொறமை, கோபம், வெறுப்புகள், பொய்மை, சுயநலம் ஆகியவற்றை விடுத்துப் புதிய உருவெடுக்கவும், அவர்களின் உள்மனம்காயங்கள் மறைந்திடவும் வேண்டியாருளைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
 

4. தோழமையின் நாயகனே எம் இறைவா! வரப்போகும் கிறிஸ்து பெருவிழாவை நாங்கள் வெறும் வெளி அடையாளங்களைத் தவிர்த்து, ஆடம்பரங்களைக் குறைத்து, ஆன்மீகத் தயாரிப்பில் எங்கள் கவனத்தைச் செலுத்திச் சாதி மதப் பேதமின்றி உமது பிறப்பின் செய்தியை நற்செய்தியாகச் சான்றப் பகிரவும்,தேவையில் உள்ளோரை அணுகி அன்புப் பாராட்டவும் நல்மனதைத் தந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
 

5.நலம் தந்து எம்மை மகிழ்விக்கும் எம் இறைவா! தொற்றுநோயின் வீரியம் குறைந்து மக்கள் விரைவாக நலம் பெற்று மகிழ்வுடன் கிறிஸ்து பிறப்புக் காலத்தை மகிழ்வுடன் கொண்டாடத் தேவையான எல்லா அருள்வளங்களைத் தந்து, இறைமக்கள் அனைவரும் உம் இல்லத்தில் தங்கி இறைஆசீர் நிறைவாய் பெற்றுச் செல்ல அருள்மழைப் பொழியத் தந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

Friday 5 April 2019

தவக்காலத்தின் ஐந்தாம் ஞாயிறு

தவக்காலத்தின் ஐந்தாம் ஞாயிறு


இன்றைய நற்செய்தி வாசகங்கள்.

எசாயா43: 16-21
பிலிப்பியர் 3: 8-14
யோவான் 8:1-11






''உங்களில் பாவமில்லாதவர் முதல் கல்லை எறியட்டும்" என்று இயேசு சொல்லி முடிந்தவுடன் வானத்தில் இருந்து ஒரு கல் விழுந்தது என்று வேடிக்கையாகச் சொல்வது உண்டு. ஏனெனில் கடவுள் ஒருவர்தான் நல்லவர், பரிசுத்தர். பிறரைத் தீர்ப்பிடுவதற்கு கடவுள் ஒருவர்தான் தகுதியானவர் என்ற செய்தி இன்றைய நற்செய்தியிலே வழங்கப்படுகிறது.

இன்றைய நற்செய்திக்கு வாருங்கள். இயேசுவின் முன்பாக விபச்சாரத்தில் பிடிபட்ட பெண் கூனிக் குறுகிப் போய் நிற்கும் காட்சி. தங்களை நீதிமான்களாக நல்லவர்களாகக் கருதிக் கொண்ட பரிசேயர் மறைநூல் அறிஞர் மறுபுறம் நிற்கின்றனர். நடுவே இயேசு தரையில் ஏதோ எழுதுவது போன்ற காட்சியில் அமர்ந்திருக்கிறார். இந்தக் காட்சியை இன்று நடப்பது போல கண்முன் கொண்டு வாருங்கள்.

பெண்ணின் விபச்சாரம் என்ற பாவமானது அனைவருக்கும் வெளிப்படையாகத் தெரிகிறது. ஆனால் பரிசேயர், மறைநூல் அறிஞர்களின் பாவங்களோ யாருக்கும் வெளிப்படையாகத் தெரியவில்லை. ஆனால் உள்ளங்களை ஆய்ந்தறிகின்ற கடவுளின் மகனாம் இயேசுவுக்கு இந்தப் பரிசேயர், மறைநூல் அறிஞர்களின் பாவங்கள் நன்றாகத் தெரியும். உங்களில் பாவமில்லாதவன் முதல் கல்லை எறியட்டும் என்று சொன்னதின் மூலம் சங்கப் பரிவாரங்களாகிய பரிசேயர்களும், மறைநூல் அறிஞர்களும் விபச்சாரத்தில் பிடிபட்டப் பெண்ணை விட பெரிய பாவிகள் என்பதை இயேசு தெளிவாகக் காட்டுகிறார்.

பரிசேயர், மறைநூல் அறிஞர்களின் பாவங்கள் யாவை?

முதல் குற்றம், பிறரின் குற்றங்களைப் பெரிதுபடுத்தி தங்களின் குற்றங்களை மூடி மறைக்க முயற்சி செய்தது. ஊதாரி மைந்தன் உவமையில் வரும் மூத்த மகன் (லூக். 15:25), ஆலயத்தில் செபித்த பரிசேயர் (லூக். 18:9-14) இவர்களைப்போல, பிறரது குறைகளையும், குற்றங்களையும் மட்டுமே பேசித் தங்களை நல்லவர்களாக நீதிமான்களாகக் காட்ட முனைந்தனர்.

ஒரு கணவனுக்குத் தன் மனைவியின் காது வர வர மந்தமாகிக் கொண்டு வருவது போல் தோன்றியது. ஒரு தடவை தன் மனைவி சமைத்துக் கொண்டிருந்தபோது அவளுக்குத் தெரியாத வகையில் பின்புறமாக 10 அடி தூரத்தில் நின்று நான் பேசுவது கேட்கிறதா என்று மெதுவாகக் கேட்டான். பதில் இல்லை. 5 அடி தூரத்தில் நின்று கேட்டான். பதில் இல்லை . இறுதியாக ஒரடி தூரத்தில் நின்று நான் பேசுவது கேட்கிறதா என்று கேட்டான். அதற்கு மனைவி, நீங்கள் ஏற்கனவே இரு முறை கேட்ட கேள்விக்குச் சொன்ன பதிலையே இப்போதும் சொல்கிறேன் - நன்றாகவே கேட்கிறது என்றாள். பார்த்தீர்களா? காது மந்தம் மனைவிக்கு அல்ல. கணவனுக்குத்தான். இந்தக் கணவனைப் போலத்தான் இந்தப் பரிசேயக் கூட்டம். இன்றைய உலகில் உள்ள பரிசேயர் கூட்டமும் பிறரின் குறைகளை மிகைப்படுத்திப் பேசித் தங்கள் குற்றங்களை மறைப்பதில் வல்லவர்களாக இருக்கிறார்கள். பிறர் பெயர் கெட்டாலும் பரவாயில்லை தாங்கள் நல்லவர்கள் என்று பிறர் நினைக்க வேண்டும் என்று செயல்படுகிறார்கள்.

இரண்டாவதாக பரிசேயர்களும், மறைநூல் அறிஞர்களும் திட்டமிட்டு சூழ்ச்சி செய்து பிறரைக் கெடுக்க, அழிக்க நினைப்பவர்கள். பரிசேயர் விபச்சாரப் பெண்ணை இயேசுவிடம் கொண்டு வந்தது பாவத்தின் மீது இருந்த வெறுப்பின் காரணமாகவோ, சட்டத்தின் மீது இருந்த பிடிப்பின் காரணமாகவோ அல்ல. இயேசுவிடம் ஏதாவது குற்றம் கண்டுபிடிக்கப் பரிசேயர் வகுத்த சூழ்ச்சி அது. மோசே சட்டப்படி வேசித்தனம் செய்தவர் கல்லால் எறியப்பட்டு கொல்லப்பட வேண்டும். ஆனால் யூதர்களோ உரோமையருக்கு அடிமையாக இருந்ததால், உரோமையரின் சட்டம் இதை அனுமதிக்கவில்லை. இத்தகைய மரணத் தண்டனையை உரோமைச் சட்டம் தடை செய்து இருந்தது. எனவே யூதச் சட்டத்தை ஆதரித்தார் என்றால் உரோமைக்கு எதிரியாக்கிவிடலாம். யூதச் சட்டத்திற்கு மதிப்புக் கொடுக்கவில்லையென்றால் யூதச் சட்டத்தை எதிர்ப்பவர் என்று இயேசுவைச் சிக்க வைக்க நினைத்த கூட்டம்தான் இந்தப் பரிசேயர் கூட்டம்.

அண்மையில் நமது பாரத நாட்டிலே அரியானா மாநிலத்திலே செத்த மாட்டின் தோலை உரித்ததற்காக, புனிதப் பசுவைப் பங்கப்படுத்தினார்கள் என்று கூறி மதவெறியர்கள் ஐந்து தலித் சகோதரர்களைக் கொலை செய்தார்களே, இதுதான் திட்டமிட்டு அடிக்கத் துடிக்கும் பரிசேயத்தனம்.

மூன்றாவதாக சட்டத்தைக் கையிலே எடுத்துக்கொண்டு பரிசேயர்கள் மக்களின் வாழ்வை வளப்படுத்துவதற்குப் பதிலாக மக்களை ஒடுக்கவும், குற்றம் கண்டு பிடிக்கவும் பயன் படுத்தினார்கள். ஓய்வுச் சட்டங்கள், தூய்மை முறைச் சட்டங்கள், ஒழுக்க நெறிச் சட்டங்கள் முதலியவற்றால் மக்களின் வாழ்வில் சுமையை ஏற்றினார்களேயொழிய அவர்களின் வாழ்வுக்கு வளமை கொண்டு வரவில்லை. எனவேதான் இயேசு சொன்னார்: சுமத்தற்கரிய பளுவான சுமைகளைக் கட்டி மக்களின் தோளில் வைக்கிறார்கள் (மத். 23:4) என்று. இதுதான் நம் நாட்டில் நடக்கும் தடாச் சட்டம், பொடாச் சட்டம், எஸ்மா சட்டம், கட்டாய மத மாற்றத் தடைச் சட்டம். இப்படிச் சட்டங்களை இயற்றி எளியவரை ஒடுக்கி, பதவிக்காரர், பணம் படைத்தோர், அரசியல்வாதிகள் இன்று சட்டத்தில் குளிர்காய்ந்து கொண்டிருக்கிறார்கள் என்றால் மிகையாகாது.

1) ஆனால் இயேசு இத்தகைய அநியாயச் சட்டங்களைத் தூக்கி எறிந்தவர்.

2) இயேசு பரிசேயர்களின் பாவங்களை நன்றாக அறிந்து தெரிந்து இருந்தாலும் அவர் தீர்ப்பிடவில்லை. விபச்சாரப் பெண்ணை மன்னித்ததுபோல் மன்னிக்கத் தயாராக இருந்தார். உங்களில் பாவமில்லாதவர் முதல் கல்லை எறியட்டும் என்று இயேசு குறிப்பிட்டதோ தாங்கள் மறைத்து வைத்திருக்கும் குற்றங்களை ஏற்று மனம் திரும்பி வர வேண்டும் என்பதற்காகவே. ஆனால் பரிசேயர்களோ அதைச் செய்யவில்லை. அடடா! இதுவரை மற்றவர்ளைத்தான் பாவி என்று பார்த்தோம். அந்தப் பட்டியலில் நம்மையும் அல்லவா சேர்த்துவிட்டார் என்று சொல்லி கையில் இருந்த கல்லைக் கீழே போட்டார்களே தவிர மனம் மாறி இயேசுவிடம் வராது ஓடிவிட்டார்கள்.

கூனிக் குறுகி நின்ற பெண்ணைப் பார்த்து, நிபந்தனையற்ற இரக்கத்தோடும் அன்போடும் சொல்கிறார் இயேசு: உன் பாவங்கள்
மன்னிக்கப்பட்டன. நான் உன்னைத் தீர்ப்பிடவில்லை, சமாதானமாகப் போ. இனி பாவம் செய்யாதே என்றார் (யோவா. 8:11).
இன்று இயேசு உன்னைப் பார்த்துச் சொல்கிறார்.
1) உன்னை யாரும் தீர்ப்பிடவில்லையா?
2) பாவம் இல்லாதவர் பிறர் மீது முதல் கல்லை எறியட்டும்.
3) இயேசு மனமாற்றத்திற்கு அழைக்கிறார். பாவிப் பெண் பெற்ற மன்னிப்பைப் பெற நீ தயாராக இருக்கிறாயா? ஒப்புரவு அருட்சாதனத்தைப் பெறு. இயேசுவை மன்னிக்கும் தேவனாகக் காண்பாய்.






 இயேசு நமது பாவங்களை மன்னித்துவிடுவார்
நமது ஆண்டவராம் இயேசு கிறிஸ்து பாவத்தை வெறுக்கின்றார். ஆனால் எந்தப் பாவியையும் அவர் வெறுப்பதில்லை.
அந்தப் பெற்றோருக்கு அவன் ஒரே மகன், அவன் ஒரே பிள்ளை . ஒரே மகன் என்பதால் அவனை கண்ணே மணியே என்று நாளும் போற்றி வளர்த்தார்கள். அவன் வளர்பிறை போல் வளர்ந்தான். வளர்ந்தவன் அவனது பெற்றோர் சம்பாதித்த செல்வத்தைத் தவறாகப் பயன்படுத்தினான்.

தவறான நண்பர்கள் சேர்ந்தார்கள். தவறான பழக்கவழக்கங்கள் அவனை ஒட்டிக்கொண்டன. கண் போன போக்கிலே அவன் மனம் போனது ; மனம் போன போக்கிலே அவன் கால் போனது.

பெற்றோர் இப்படித்தான் வாழவேண்டும் என்றார்கள். ஆனால் கல்மனம் படைத்த மகனுக்கு அவர்கள் கூறியது பிடிக்கவில்லை . சிற்பிகளான அவனது பெற்றோரை விட்டு அவன் ஒரு நாள் ஓடிப்போனான். ஓடிப்போகும் போது வீட்டில் இருந்த பணம் அனைத்தையும் எடுத்துச் சென்றுவிட்டான்.

அவன் வீட்டைவிட்டுச் சென்ற நாளிலிருந்து அவனுடைய பெற்றோர் சரியாக உண்ணவும் இல்லை, உறங்கவும் இல்லை. என்றாவது ஒரு நாள் மகன் திரும்பி வருவான் என்று கண்விழித்துக் காத்திருந்தார்கள். அவன் திரும்பி வரவேயில்லை.

ஒரு நாள் தகப்பன் தன் வயதான மனைவியை விட்டுவிட்டு ஒரு வயதான குதிரை மீது ஏறி மகனைத் தேடிச்சென்றார். ஓடிப்போன மகன் தீய வழியில் பணத்தை, சொத்தை செலவழித்துவிட்டு தனிமரமாக நின்றான். அவனை விட்டு அவன் நண்பர்கள் ஓடிவிட்டனர்.

அதன்பிறகு அவன் தீய ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ள பணம் தேவைப்பட்டதால் திருட்டுத் தொழிலில் இறங்கினான்; பெரும் வழிப்பறித் திருடனானான்.

தந்தை மகனைத் தேடுவதை நிறுத்தவில்லை. 10 ஆண்டுகள் தொடர்ந்து தேடினார். அன்று பெரிய காட்டின் வழியாகப் பயணம் செய்யவேண்டிய சூழ்நிலை.

நடுக்காடு! இரவு நேரம் எங்கிருந்தோ குரலொலி ஒன்று கேட்டது. டேய், உன் பயணத்தை நிறுத்து. அந்த தகப்பன் நின்றார். ஒரு முரட்டுத் திருடன் ஓடி வந்தான். அந்தத் திருடன் அந்த தகப்பனைப் பிடித்து, உன்னிடமிருக்கும் பணத்தை எடு என்றான். அந்த தகப்பனோ, என்னிடம் ஏது பணம்? நான் ஓர் ஏழை. சாப்பிடாமல் என் பயணத்தைத் தொடர்ந்து வருகின்றேன் என்றார். அந்தத் திருடனுக்கு கோபம் தலைக்கு ஏறியது. பணம் இல்லாத நீ பிணமாவதுதான் நல்லது என்று சொல்லிவிட்டு அந்தத் தகப்பனை வெட்டுவதற்கு அரிவாளை எடுத்து, தனது இடது கையை ஓங்கினான். அப்போது அந்தத் தகப்பனுக்கு ஒரு சந்தேகம்! என்ன சந்தேகம்? காணாமல் போன அவருடைய மகன் இடது கை பழக்கமுடையவன். ஆகவே அந்தத் திருடனைப் பார்த்து, தகப்பன், சற்றுப் பொறு , என் தலையை வெட்டுவதற்கு முன் நான் ஒன்றைக் கூறிக்கொள்ள விழைகின்றேன் என்றார். அதற்கு அந்தத் திருடன், என்ன சொல்ல விரும்புகின்றாய்? சீக்கிரம் சொல் என்றான். தகப்பன், நீ யார்? என்றார். அதற்கு அந்தத் திருடன், நான் யாராக இருந்தால் என்ன? முதலில் நீ யார்? என்று சொல் என்றான். அந்தத் தகப்பனோ, நான் காணாமல் போன மகனைத் தேடி அலையும் தகப்பன் என்றார். உடனே திருடன் அவன் முன்னே நிற்பது யார் என்பதை அறிந்து கொண்டான். தகப்பனின் காலில் விழுந்து, அப்பா நீங்கள் தேடும் அந்த மகன் நான் தான். நீங்கள் என்னை ஏற்றுக்கொள்ளமாட்டீர்களா? என்னைத்தான் நீங்கள் தேடிவந்திருக்கிறீர்கள் என்றான்.

பிரிந்தவர் கூடினர்! தந்தையும் மகனும் வீட்டிற்கு வந்தனர்!

இந்தக் கதையில் வந்த தகப்பனைப் போன்றவர்தான் நம் ஆண்டவராம் இயேசு.

பாவம் என்பதற்கு திருட்டு என்ற பொருளும் உண்டு.

இயேசு ஒரு திருடரைத் தேடி எரிகோ நகருக்குச் சென்றார். இன்னொரு திருடனைத் தேடி கல்வாரி மலைக்குச் சென்றார்.

முதல் திருடரை இயேசு ஒரு மரத்தின் மீது சந்தித்தார். லூக் 19:1-10 முடிய உள்ள பகுதி : சக்கேயு என்னும் குள்ள மனிதர் ஒருவர் எரிகோ என்னும் நகரிலே வாழ்ந்து வந்தார். அவர் குள்ளனாகவும் பாவியாகவும் இருந்ததால் ஒரு மரத்தின் மீது அமர்ந்து இயேசுவைப் பார்க்க நினைத்தார். தன்னைப் பார்க்க நினைத்தவரைப் பார்த்தார் இயேசு. அந்த மரத்திலிருந்த சக்கேயு அருகில் நின்று, இழந்து போனதை தேடி மீட்கவே நான் வந்தேன் என்று சொல்லி, அவரை மரத்தை விட்டு கீழே இறங்கச் சொன்னார். உன் பாவத்தை உடனே கைவிடு என்றார்.

அழகான பாவ அறிக்கையில் சக்கேயு சொன்னது என்ன? ஆண்டவரே என் உடைமையில் பாதியை ஏழைகளுக்குக் கொடுத்துவிடுகின்றேன் ; நான் யார் மீதாவது பொய்க் குற்றம் சுமத்தி எதையாவது கவர்ந்திருந்தால் நான்கு மடங்காகத் திருப்பிக் கொடுத்துவிடுகின்றேன் என்றார். சக்கேயு ஒரு பாவி; அவரை இயேசு மன்னிக்கின்றார்.

கல்வாரியிலே ஒரு திருடன். லூக் 23:38-43 முடிய உள்ள பகுதி. இரண்டு திருடர்களில் ஒருவன், நாம் துன்பப்படுவது முறையே என்று சொல்லிவிட்டு மனம் மாறி இயேசுவைப் பார்த்து, என்னை ஏற்றுக்கொள்ளும் என்றான். உடனே இயேசு அவன் பாவத்தை மன்னித்தார்.

இன்றைய நற்செய்தியிலே யோவா 8:1-8 - இல் ஒரு பாவியின் மனம் இயேசுவைத் தேடுகின்றது. அவர் ஒரு திருடி. தன் அழகை வைத்து எத்தனையோ பேரின் தூய மனத்தைத் திருடியவர்! ஆனால் இயேசு அவரை மன்னித்துவிடுகின்றார்.

இந்த உலகத்திலே சிலர் தங்களுடைய பாவங்களை மறைத்து மற்றவர்களுடைய குற்றங்களைக் கண்டுபிடிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றார்கள். சிலர் பதவியை, பட்டத்தை, பணத்தை, பரிசை பிறரிடமிருந்து கவர்ந்துகொள்கின்றார்கள்.

சிலர் நல்ல பெயரைக் கவர்ந்துகொள்கின்றார்கள்!
 சிலர் நீதியைக் கவர்ந்துகொள்கின்றார்கள்!
சிலர் நேர்மையைக் கவர்ந்துகொள்கின்றார்கள்!
சிலர் மகிழ்ச்சியைக் கவர்ந்துகொள்கின்றார்கள்!
சில சின்னப் பிள்ளைகள் முறுக்கைத் திருடி இருப்பார்கள்; கெட்டி உருண்டையைத் திருடி இருப்பார்கள் ; பென்சிலைத் திருடி இருப்பார்கள் ; பேனாவைத் திருடி இருப்பார்கள்.

ஓர் அப்பாகிட்ட வாத்தியார், உங்கள் பையன் தினமும் பென்சிலைத் திருடிகிட்டு வீட்டுக்கு வர்றான் அப்படின்னாரு. அதற்கு அந்த அப்பா, மகனைப் பார்த்து, நான் தினமும் ஆபீஸ்ஸிலிருந்து பேனாவைத் திருடிக்கிட்டு வர்றேனே! அது பத்தாதா? என்றார். நாம் எல்லாருமே பாவிகள்தான்.

நற்கருணை உருவிலே நம்மைத் தேடிவரும் இயேசுவின் பாதத்திலே விழுந்து, சுவாமி நான் பாவி என்போம்.

முதல் வாசகம் கூறுவது போல நடந்ததை மறந்துவிட்டு, இரண்டாம் வாசகம் கூறுவது போல கிறிஸ்துவை ஆதாயமாக்கிக் கொள்ள எல்லாவற்றையும் குப்பையாகக் கருதி வாழ்வில் தொடர்ந்து முன்னேறுவோம். இயேசு அப்போது நமது பாவங்களையெல்லாம் மன்னித்து தமது பிள்ளைகளாக நம்மை ஏற்றுக்கொள்வார்.

மேலும் அறிவோம் :
கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை ; கள்ளார்க்குத்
தள்ளாது புத்தேள் உலகு (குறள் : 290).

பொருள்: களவு செய்வோர்க்கு உயிரோடு வாழும் நிலையும் விரைவில் தவறிப்போகும்! கள்வை உள்ளத்தாலும் நினைத்துப் பாராதவர்க்குத் தேவருலகு ஆகிய வானகம் தவறாது கிடைக்கும்.




இயேசுவின் நிமிர்ந்த பார்வை

“அக்கினிப் பிரவேசம்” - இது ஜெயகாந்தன் எழுதிய சிறுகதை.
கல்லூரியில் படிக்கும் இளம்பெண் பேருந்துக்காகக் காத்து நிற்கிறாள். இருட்டிவிட்டது. இடியுடன் கூடிய மழைவேறு. ஒரு வழியாக பேருந்து வருகிறது; ஆனால் நிற்காமல் போய் விடுகிறது! தனியே தவிக்கிறாள்.

படகுக்கார் ஒன்று வந்து உரசுவதுபோல் பக்கத்தில் நிற்கிறது. ஓட்டி வந்த இளைஞன் கதவைத் திறந்து விடுகிறான். செய்வது இன்னதென்று அறியாமலேயே காருக்குள் நுழைகிறாள். ஒரு பங்களா முன் கார் நிற்கும்போதுதான் ஒருவாறு அவளுக்குப் புரிகிறது - புலியின் பிடியில் புள்ளி மானாகிவிட்ட அவளது கற்பு சூறையாடப்படுகிறது.

அழுகையோடும் இனமறியா மனஉளைச்சலோடும் நடந்தவை யெல்லாம் ஒன்றுவிடாமல் தன் தாயிடம் ஒப்பிக்கிறாள். அதிர்ச்சிதான்! ஆனால் யார் குற்றவாளி? நடந்தவையெல்லாம் கெட்ட கனவாக மறக்கச் சொல்லி வெந்நீரால் மக்களைக் குளிப்பாட்டுகிறாள். ''நீ சுத்தமாயிட்டே... உன் மனத்தை எவனும் கொடுக்கவில்லையே! உடல் தானே கெட்டது. கழுவி விட்டேன்” என்று தாய் தனக்குள் முணுமுணுத்துக் கொள்கிறாள்.

இதுதான் அக்கினிப் பிரவேசம்!

கற்பு என்பது மனத்தளவில் தான். "ஒரு பெண்ணை இச்சையோடு நோக்கும் எவரும் தம் உள்ளத்தால் ஏற்கனவே அப்பெண்ணோடு விபச்சாரம் செய்தாயிற்று” (மத். 5:28). மிக முக்கியம் மனநிலை.

விபச்சாரச் செயலுக்குப் பொறுப்பேற்கும் பல புறசக்திகள்வறுமை, அறியாமை, வன்முறை, பாலியல் ஆகியவை. ஆனால் விபச்சார எண்ணத்துக்கு அவரவரே பொறுப்பேற்க வேண்டும். உள்ளத்தின் நிறைவால் வாய் பேசும். மனத்தில் எதை அசைபோடுகிறோமோ, அதுவே நம்மையும் அறியாமல் வெளிப்படுகிறது. நம் மனம் அசைபோடும் அழுக்குகளை வைத்தே நாம் பிறரையும் எடை போடுகிறோம். பாலியல் தொடர்பாவை பற்றிச் சொல்லவே வேண்டாம். அவல் கிடைத்த மாதிரி.

தவறு செய்வதற்குச் சூழ்நிலையை உருவாக்கிவிட்டு தவறியவனைத் தண்டிப்பதற்குத் தயாராகும் சமூகம், சட்டத்திற்குள் தன்னை - தனது பொறுப்பற்ற தன்மையை மறைத்துப் பாதுகாத்துக் கொள்கிறது.

உலகிற்குத் தண்டனைத் தீர்ப்பளிக்க அல்ல, அதை மீட்க வந்தவர் இயேசு (யோ. 3:17). நம் கவனத்தை ஈர்ப்பது இயேசு அந்தப் பெண்ணைத் தீர்ப்பிடவில்லை என்பது மட்டுமல்ல. தீர்ப்பிட வந்தவர் எவரையும் தீர்ப்பிடவில்லை என்பதுதான். ''உங்களில் குற்றமில்லாதவன் முதற்கல்லை எறியட்டும். தீர்ப்பிட வேண்டும் என்று வந்தவர்களுக்குத் தீர்ப்பிட வாய்ப்பளிக்கிறார். ஆனால் தீர்ப்பிடத் தகுதியற்றவர்கள் என்று அவர்களை உணர வைத்ததுதான் இயேசு நிகழ்த்திய மாபெரும் அற்புதம்.

நாம் அனைவரும் பாவிகள். (1 யோ. 18). ''என் இதயத்தைத் தூய தாக்கிவிட்டேன். நான் பாவம் நீக்கப் பெற்றுத் தூய்மையாய் இருப்பவன் என்று யாரால் சொல்லக் கூடும்?" நீதிமொழிகள் 20:9 விடும் சவால் இது!

"நல்லவர்கள் எல்லோரும் வெள்ளையாகவும் தீயவர்கள் எல்லோரும் கருப்பாகவும் கடவுளின் படைப்பில் இருப்பார்கள் என்று வைத்துக் கொண்டால் நாம் எப்படி இருப்போம்?" என்று ஆசிரியர் கேட்க ஒரு மாணவன் சொன்னானாம்: 'வரிக்குதிரை போல இருப்போம் வரி வரியா கோடு கோடா கருப்பும் வெள்ளையுமாகக் கலந்து". அறிவார்ந்த பதில்! எந்த மனிதனும் முழுமையாக நல்லவனுமில்லை. முழுமையாகக் கெட்டவனுமில்லை.

தன்னிலை உணர்ந்தவர்களாய் நாமும் ''கடந்ததை மறந்துவிட்டு முன்னிருப்பதைக் கண்முன் கொண்டு பரிசு பெற வேண்டிய இலக்கை நோக்கித் தொடர்ந்து ஓடுவோம்" (பிலி 3:13-14)

"நானும் தீர்ப்பிடேன் - இனிப் பாவம் செய்யாதே". எவ்வளவு பொருத்தமான பதில்! இது அவளுக்குப் பாவம் செய்யக் கொடுக்கப்பட்ட அனுமதிச் சீட்டு அன்று, மறுவாழ்வு தந்த மாமருந்து!

பாவிகள் எல்லோரும் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் அல்ல. மன்னிக்கப்பட வேண்டியவர்கள் என்பது இயேசுவின் புதிய சட்டம்.

நேற்றையப் பொழுதை இறை இரக்கத்துக்கு விட்டுவிடு
இன்றையப் பொழுதை இறையன்பில் செலவிடு
நாளையப் பொழுதை இறை நம்பிக்கையில் விடியவிடு.

mm
ஒரு மாணவன் ஒழுங்காகப் படிப்பதில்லை . ஆசிரியர் அவன் ஏன் ஒழுங்காகப் படிப்பதில்லை ? என்று கேட்டதற்கு அவன், "சார்! என் அப்பாவும் அம்மாவும் இரவும் பகலும் சண்டை போடுகின்றனர். எனவே, என்னால் படிக்க முடியலை" என்றான், "யாருடா உன் அப்பா?" என்று ஆசிரியர் கேட்டதற்கு அவன், "அதைப் பற்றித் தான் சார் ஒவ்வொருநாளும் சண்டை நடக்கிறது” என்றான்.

சில தம்பதியருடைய தவறா னே நடத்தையால் அவர்களுடைய வாழ்க்கை மட்டுமல்ல, அவர்களுடைய பிள்ளைகளின் வாழ்வும் பாதிக்கப்படுகிறது. எனவே தான் விபசாரத்தைத் தடை செய்துள்ளார் கடவுள்,
"விபசாரம் செய்யாதே" {இச 5:18) என்றும், "பிறர் மனைவியைக் காமுறாதே" (இச 5:21) என்றும் கடவுள் கட்டளை கொடுத்தார். ஒருவர் உடல் ரீதியாக மட்டுமல்ல, மன ரீதியாகவும் விபசாரம் செய்யக்கூடாது. (ஒரு பெண்ணை இச்சையுடன் நோக்கும் எவரும் தம் உள்ளத்தில் ஏற்கெனவே பெண்ணோடு விபசாரம் செய்தாயிற்று" (மத் 5:27) என்று கிறிஸ்து தமது மலைப்பொழிவில் கூறியுள்ளார்.

பிறருடைய மனைவியை விரும்பி நோக்காதிருப்பதுவே ஓர் ஆணுக்கு ஆண்மை (வலிமை), அறம் மற்றும் நிறை ஒழுக்கமும் ஆகும் (குறள் 148). ஒருத்தனுக்கு ஒருத்தி என்பதுதான் இல்லற நெறி, ஒருத்தனின் உள்ளத்தில் ஒருத்தி மட்டும் இருக்க வேண்டும். அதை விடுத்து, "நினைவெல்லாம் நித்யா, மனமெல்லாம் மல்லிகா, உடலெல்லாம் உஷா. ஆயுளெல்லம் ஆஷா, பகலெல்லாம் பாமா, இரவெல்லாம் இரம்யா " என்று ஆறுபே கரை வைத்திருக்கக்கூடாது. அவ்வாறே ஒரு பெண்ணின் உள்ளத்திலும் ஓர் ஆண் மட்டுமே இருக்க வேண்டும்.

ஓர் ஆசிரியர் மாணவர்களிடம், "கண்ணகி மதுரையை தீயினால் சுட்டு எரித்தாள். இதிலிருந்து என்ன தெரிகிறது?" என்றார். மாணவர்கள், "சார்! கண்ணகி காலத்தில் தீயணைக்கும் படை இல்லை என்பது தெரிகிறது " என்றார்கள்! கணவனையே கண்கண்ட தெய்வமாகத் தொழும் பெண். "மழை பெய்யட்டும்" என்றால் மழை பெய்யும் (குறள் 55), கற்பு நெறி பெண்ணுக்கு அணிகலனும் அரணுமாகும்.

ஆனால், இன்றைய நற்செய்தியில் ஒரு பெண் வருகிறார். அவர் விபசார குற்றத்தில் கையும் மெய்யுமாகப் பிடிப்பட்டவர். மோசேயின் சட்டப்படி. விபசாரக் குற்றத்தில் ஈடுபட்ட ஆண்-பெண் ஆகிய இருவருமே கொலை செய்யப்பட வேண்டும் (லேவி 20:10). பரிசேயரும் மறைநூல் அறிஞரும் விபசாரம் செய்த ஆணை விட்டுவிட்டு, பெண்ணை மட்டும் இயேசுவிடம் கொண்டுவந்து அவரின் தீர்ப்பை எதிர்பார்த்து கையில் கற்களுடன் காத்திருக்கின்றனர். இயேசுவோ மோசேயின் சட்டம் சரியில்லை என்றோ அல்லது அப்பெண் விபசாரம் செய்யவில்லை என்றோ கூறவில்லை, மாறாக, மக்கள் கூட்டத்திடம், "உங்களுள் பாவம் இல்லாதவர் இப்பெணமேல் கல் எறியட்டும்” என்கிறார். எல்லாரும், பெரியவர் முதலாக சிறியவர் ஈறாக, கற்களைக் கீழே போட்டுவிட்டு தலையைக் கீழே போட்டுக்கொண்டு வீடு திரும்புகின்றனர். அத்தனை பேரும், தங்கள் கண்ணிலிருந்த மரக்கட்டயைப் பார்க்காமல், அப்பெண்ணின் கண்ணிலிருந்த துரும்பை எடுக்க முற்பட்ட வெளிவேடக்காரர்கள் (மத் 7:3). தமக்கு முன்பாகக் கூனிக்குறுகி நின்ற அப்பெண்ணைப் பார்த்து கிறிஸ்து. "இனி பாவம் செய்யாதீர்” (யோவா 8:10) என்கிறார். யூதர்கள் அப்பெண்ணுக்கு விதிக்கத் துடித்த மரண தண்டனையை, இயேசு ஆயுள் தண்டனையாக மாற்றி எழுதுகிறார்.

மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று கூறிய ஓர் அறிஞர் அதற்கான காரணத்தைப் பின்வருமாறு வெளிப்படுத்தியுள்ளார், "மரண தண்டனை விதிக்கப்பட்ட ஒரு குற்றவாளியின் வாழ்க்கைப் புத்தகத்தில் ஒரு சில பக்கங்கள் கிழித்து எறியப்படுகின்றன. அப்பக்கங்களைத் திருத்திப் புதிய பதிப்பை வெளியிடும் வாய்ப்பு அவருக்கு மறுக்கப்படுகிறது.” ஆழமான அழகான சிந்தனை முத்து!

பாவிகளின் அழிவை அல்ல, அவர்கள் மனம்மாறி வாழ்வதையே கடவுள் விரும்புகிறார் (எசே 18:23). "தவறு என்பது தவறிச் செய்வது; தப்பு என்பது தெரிந்து செய்வது; தவறு செய்தவன் வருந்தி ஆகணும்; தப்பு செய்தவன் திருந்தப் பார்க்கணும்" (திரைப்படப் பாடல்).

ஒருமுறை நாம் திருந்திய பின், மறுபடியும் நமது பழைய பாவ வாழ்வை நினைக்கக்கூடாது. கடவுள் நமது பாவங்களை எல்லாம் ஆழ்கடலில் எறிந்துவிட்டார். கடவுள் நம் பாவங்களை கணிப்பொறியில் ஏற்றுபவர் அல்லர். இன்றைய முதல் வாசகத்தில் கடவுள் கூறுவதென்ன? "முன்பு நடந்தவற்றை மாறந்துவிடுங்கள்; முற்கால முயற்சி பற்றிச் சிந்திக்காதீர்கள். இதோ புதுச்செயல் ஒன்றை நான் செய்கிறேன்" (எசா 43:18-19). இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல் கூறுகிறார், "கடந்ததை மறந்துவிட்டு, முன்னிருப்பதைக் கண்முன் கொண்டு, பரிசு பெறவேண்டிய இலக்கை நோக்கித் தொடர்ந்து ஓடுகிறேன்" (பிலி 3:13-14).

ஒரு புண் ஆறிவிட்டது: அதன் மேல் புறத்தோல் காய்ந்துவிட்டது. ஆனால் மறுமடியும் அப்புண்ணைக் கீறிவிட்டுக் காயத்தைப் புதுப்பிப்பது முட்டாள் தனமாகும். நமது பழைய பாவங்களை மீண்டும் மீண்டும் நமக்கு நினைவுபடுத்தி நம்மிடம் குற்றப்பழி உணர்வை என்றும் பசுமையாக வைத்திருக்கும்படி அலகை முயற்சி எடுக்கிறது. அலகையின் வேலை என்ன? அல்லும் பகலும் கடவுளின் மக்கள்மீது குற்றம் சுமத்துகிறது (திவெ 12:10). கிறிஸ்துவின் வேலை என்ன? அல்லும் பகலும் கடவுளிடம் நமக்காகப் பரிந்து பேசுகிறார் (எபி 7:25). நமது பாவக் கடன் பத்திரத்தைச் சிலுவையில் வைத்து ஆணியடித்து அறவே ஒழித்துவிட்டார் (கொலோ 2:14),

"நம் மனச்சான்று நாம் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளித்தாலும், கடவுள் திருமுன் நம் உள்ளத்தை அமைதிப்படுத்த முடியும். ஏனெனில் கடவுள் நம் மனச்சான்றைவிட மேலானவர்" (1 யோவா 3:20). எனவே, பழைய மனிதருக்குரிய இயல்பைக் களைந்துவிட்டு, புதிய மனிதருக்குரிய இயல்பை அணிந்து கொள்வோம் (எபே 4:22-33).
தவக்காலத்தின் இறுதிக் கட்டத்திலுள்ள நமக்குக் கிறிஸ்து கூறுவது: "உங்கள் பாவங்கள் மன்னிக்கப்பட்டன; இனி பாவம் செய்யாதீர்கள்."





தொடர்ந்து ஓடு!

'ஓடிக்கொண்டே அல்லது நடந்துகொண்டே இருக்கும் நாம் ஒரு கட்டத்தில் செல்ல முடியாதவாறு சாலை அடைக்கப்பட்டிருந்தால்' அந்த இடத்தை 'முட்டுச் சந்து' என்று அழைக்கிறோம். ஆங்கிலத்தில் 'டெட் என்ட்.' அதற்குப் பின் அங்கே பாதை இல்லை. இரண்டே வழிதான் இப்போது: ஒன்று, அங்கேயே நின்று விடுவது, அல்லது வந்த வழி திரும்புவது. அல்லது ஒருவேளை ரொம்பவும் ஆபத்தான நேரத்தில் நாம் முட்டுச் சந்தில் இருக்கிற மதிலை உடைத்து அல்லது தாண்டி அந்தப் பக்கம் தப்புவோம்.

இன்றைய இறைவாக்கு வழிபாட்டில் இப்படி 'டெட் என்டில்' (முட்டுச் சந்தில்) சிக்கிக்கொண்ட மூன்று பேரைப் பார்க்கிறோம்: முதல் வாசகத்தில் இஸ்ரயேல் மக்கள், இரண்டாம் வாசகத்தில் பவுலடியார், நற்செய்தி வாசகத்தில் விபச்சாரத்தில் பிடிபட்ட பெண். இஸ்ரயேல் மக்கள் பாபிலோனியாவின் அடிமைத்தனம் என்ற வழியற்ற பாதையில் இருக்கின்றனர். பவுல் தன்னுடைய யூத முதன்மைகள் என்னும் வழியற்ற பாதையில் இருக்கின்றார். விபச்சாரத்தில் பிடிபட்ட பெண் கல்லால் அடிபட்டு மரணம் என்ற வழியற்ற பாதையில் இருக்கின்றார். இவர்கள் மூவருக்கும் இரண்டு தீர்வுகள்: ஒன்று. இருக்குமிடத்திலேயே இருப்பது. இரண்டு, வந்த பாதை திரும்புவது. ஆனால், இந்த இரண்டு தீர்வுகளையும் தாண்டி மூன்றாவது ஒரு தீர்வைத் தருகின்றார் இறைவன்: அதுதான், 'தொடர்ந்து ஓடு!' என்பது. 'தொடர்ந்து ஓடு!' என்ற சொன்ன இறைவன், சொன்னதோடு அல்லாமல், புதிய பாதையை ஏற்படுத்திக் கொடுத்து இந்த மூவரும் தொடர்ந்து பயணிக்க வழிசெய்கின்றார். ஆக, இறைவனைப் பொறுத்தவரையில் 'என்ட்' என்பது ஒரு 'பென்ட்' மட்டுமே என்று நமக்கு ஒரே வரியில் அறிவுறுத்துகிறது இன்றைய இறைவாக்கு வழிபாடு.

முதல் வாசகத்தில் (காண். எசா 43:16-21) பாபிலோனியாவில் அடிமைப்பட்டுக்கிடந்த இஸ்ரயேல் மக்களுக்கு இறைவாக்கினர் எசாயா வழியாக ஆறுதலின் செய்தியைத் தருகின்றார் ஆண்டவராகிய கடவுள். கடவுள் இஸ்ரயேலருக்குத் தான் செய்த அரும்பெரும் செயல்களை முதலில் நினைவுறுத்துகின்றார்: 'கடலுக்குள் வழியை அமைத்தவரும், பொங்கியெழும் நீர் நடுவே பாதை அமைத்தவரும், தேர்களையும், குதிரைகளையும், படைவீரரையும், வலிமைமிக்கோரையும் ஒன்றாகக் கூட்டி வந்தவரும், அவர்கள் எழாதவாறு விழச் செய்து, திரிகளை அணைப்பதுபோல அணைத்தவருமான ஆண்டவர்' - இவ்வாறாக, அவர்களின் செங்கடலைக் கடத்தல் நிகழ்வில் அவர் செய்த அரும்பெரும் செயல்களைப் பட்டியலிடுகின்றார் இறைவன். விடுதலைப் பயண நூல் 14ல் நாம் இந்நிகழ்வை வாசிக்கின்றோம். முன்னால் கடல், பின்னால் எகிப்தியர், எந்தப் பக்கம் சென்றாலும் மரணம் என்று அவர்கள் பாதை மூடிக்கிடந்த வேளையில், கடலில் பாதையை உருவாக்குகின்றார் கடவுள். 'அஞ்சாதீர்கள்! நிலைகுலையாதீர்கள்! இன்று ஆண்டவர்தாமே உங்களுக்காக ஆற்றும் விடுதலைப் செயலைப் பாருங்கள். இன்று நீங்கள் காணும் எகிப்தியரை இனிமேல் என்றும் காணப்போவதில்லை. ஆண்டவரே உங்களுக்காகப் போரிடுவார். நீங்கள் சும்மா இருங்கள்!' (விப 14:13-14) என்கிறார் ஆண்டவராகிய கடவுள். இங்கே தண்ணீர் இஸ்ரயேல் மக்களுக்கு வாழ்வாகவும், எகிப்தியருக்கு அழிவாகவும் மாறுகின்றது. பழையதை நினைவுபடுத்தும் கடவுள், உடனே, 'முன்பு நடந்தவற்றை மறந்துவிடுங்கள். முற்கால நிகழ்ச்சி பற்றி சிந்திக்காதிருங்கள். இதோ! புதுச்செயல் ஒன்றைச் செய்கிறேன்' என்கிறார். முற்காலத்தை நினைவுபடுத்தும் கடவுள் ஏன் முற்காலத்தை மறக்கச் சொல்கின்றார். இங்கே முற்காலம் என்பது 'செங்கடல் நிகழ்வையும்' குறிக்கலாம். 'பாபிலோனிய அடிமைத்தன நிகழ்வையும்' குறிக்கலாம். இரண்டாவதைக் குறிப்பதாக நாம் எடுத்துக்கொள்வோம். அடிமைத்தனத்தில் இருந்த மக்கள் தாங்கள் அந்த நிலைக்கு அழைத்து வரப்பட்டதன் வடு மிகவும் ஆழமாகவே இருந்தது. அதை நினைத்துக்கொண்டிருந்த அவர்கள் தங்கள் வாழ்க்கை முடிந்துவிட்டதாகவும், கடவுளால்கூட ஒன்றும் செய்ய முடியாது என்றும் நினைத்துக்கொண்டிருந்தனர். இந்த நேரத்தில் கடவுள் 'புதுச்செயலை' வாக்களிக்கின்றார். அங்கே அழிவின் காரணியாக இருந்த தண்ணீர் இங்கே வாழ்வின் காரணியாக மாறுகிறது. தண்ணீர் என்ற உருவகத்தை வைத்து, 'பாலை நிலைத்தில் பாதையும் பாழ்வெளியில் நீரோடையும் உருவாகும்' என்றும், 'இம்மக்களுக்கு அந்நீரைக் குடிக்கக் கொடுப்பேன்' என்றும் சொல்கிறார் கடவுள்.

ஆக, பாபிலோனிய அடிமைத்தனத்தில் இருந்த மக்கள் தங்களுக்கென ஒரு இனிய கடந்த காலம் இருந்தாலும், நிகழ்காலத்தின் துன்பத்தால் எதிர்காலம் பற்றிய கலக்கத்தி;ல் இருக்கிறார்கள். இவர்களுக்கு, கடவுள் புதிய பாதையை உருவாக்கித் தருவதாக வாக்களித்து இவர்களின் பயணத்தில் இவர்கள் தொடர்ந்து ஓடுமாறு பணிக்கிறார்.

இன்றைய இரண்டாம் வாசகத்தில் (பிலி 3:8-14), பவுல் வாழ்வில் நடந்த மிகப் பெரிய மாற்றத்தை வாசிக்கின்றோம். பவுல் தன்னுடைய முந்தைய வாழ்வை (காண். 3:4-6) விடுத்து புதிய வாழ்வுக்குப் பயணமாகிறார். எட்டாம் நாளில் விருத்தசேதனம் பெற்றவன், இஸ்ரயேல் இனத்தவன், பென்யமின் குலத்தவன், எபிரேயன், பரிசேயன் என்று தன்னுடைய சமய மற்றும் சமூக அடையாளங்களைக் குறித்துப் பெருமை பாராட்டும் பவுல், தொடர்ந்து, 'கிறிஸ்துவின் பொருட்டு எல்லாவற்றையும் இழப்பாகக் கருதுகிறேன்' என்கிறார். மேலும், தன்னுடைய இலக்காக, 'கிறிஸ்துவையும் அவர்தம் உயிர்த்தெழுதலின் வல்லமையையும் அறியவும் அவருடைய துன்பங்களில் பங்கேற்று, சாவில் அவரை ஒத்திருக்கவும் விரும்புவதை' நிர்ணயித்துக்கொள்கின்றார். இந்நோக்கம் நிறைவேற, 'கடந்ததை மறந்துவிட்டு, முன்னிருப்பதைக் கண்முன் கொண்டு, பரிசு பெற வேண்டிய இலக்கை நோக்கித் தொடர்ந்து ஓடுகிறேன்' என்கிறார் பவுல். பவுல் கொரிந்தியருக்கு எழுதிய திருமடலில், 'பந்தயத்திடலில் ஓட வந்திருப்போர் பலர் ஓடினாலும் பரிவு பெறுபவர் ஒருவரே. எனவே, பரிசு பெறுவதற்காக நீங்களும் ஓடுங்கள்' (காண். 1 கொரி 9:24) என அறிவுறுத்துகிறார்.

ஆக, தான் எல்லா அடையாளங்களையும் இழந்துவிட்டதால் பாதை அடைக்கப்பட்ட பவுல், தொடர்ந்து ஓடுவதற்குக் காரணம் அவர் முன் இருந்து கிறிஸ்துவின் வல்லமை என்னும் இலக்கு. பழைய பாதையிலிருந்து விலகுகின்ற பவுல் பதிய பாதையாம் கிறிஸ்துவில் தொடர்ந்து ஓடுகின்றார். பாதை முடிந்தது என்ற நினைத்த அவருக்குப் புதிய பாதை கிறிஸ்துவில் விடிகின்றது.

இன்றைய நற்செய்தி வாசகம் (காண். யோவா 8:1-11) யோவான் நற்செய்தியில் மட்டுமே காணக்கிடக்கிறது. பல ஓவியர்களின் ஓவியங்களில், இயக்குநர்களின் திரைப்படங்களில் முதன்மையான இடம் பெற்றிருக்கும் 'விபசாரத்தில் பிடிபட்ட பெண்ணை இயேசுவிடம் கொண்டுவரும் காட்சி' (யோவா 7:53-8:11) பல விவிலியங்களில் அடைப்புக் குறிக்குள் கொடுக்கப்பட்டிருக்கும்.இந்த நற்செய்திப் பகுதி பல முக்கியமான பிரதிகளில் காணப்படவில்லை. அல்லது சில முக்கியமற்ற பிரதிகளில் மட்டுமே காணப்படுகின்றன. இந்த நிகழ்வை யோவான் நற்செய்தியின் ஒரு பகுதியாக எடுத்துக்கொள்வது சிரமமாக இருந்தாலும், 'வெளித்தோற்றத்தின்படி தீர்ப்பளியாதீர்கள். நீதியோடு தீர்ப்பளியுங்கள்' (யோவா 7:24) என்ற இயேசுவின் போதனையின் விளக்கவுரையாகவும், 'நீங்கள் உலகப்போக்கின்படி தீர்ப்பு அளிக்கிறீர்கள். நான் யாருக்கும் தீர்ப்பு அளிப்பதில்லை' (8:15) என்ற வார்த்தைகளின் சுருக்கமாகவும் உள்ளது இந்நிகழ்வு.

இந்நற்செய்திப் பகுதியை கதையாடல் ஆய்வு என்ற அடிப்படையில் ஐந்து உட்பிரிவுகளாகப் பிரிக்கலாம்: (அ) தொடக்கச் சூழல் (8:1), (ஆ) இறுக்கம் (8:2-6), (இ) திருப்பம் (8:7), (ஈ) தளர்வு (8:8-11அ), மற்றும் (உ) இறுதிச் சூழல் (8:11ஆ). ஒலிவ மலையில் இரவு முழுவதும் இருந்த இயேசு பொழுது விடிந்ததும் கோவிலுக்கு வருகின்றார். ஆக, இந்நிகழ்வு நடக்கும் நேரம் அதிகாலை. இடம் கோவில். அதிகாலையில் நிகழ்வு நடப்பதால், அதற்கு முந்தைய இரவில் இந்தப் பெண் விபச்சாரம் செய்து பிடிப்பட்டிருக்கலாம். விபச்சாரத்தில் பிடிபட்ட பெண்ணை இயேசுவிடம் கொண்டுவருகின்றனர் மறைநூல் அறிஞரும் பரிசேயரும். பெண் இங்கே இருக்கிறார்? கூட இருந்த ஆண் எங்கே? என்பதுதான் முதல் கேள்வி. அல்லது ஒருவேளை இந்தப் பெண் தனக்குத்தானே விபச்சாரம் செய்து கொண்டாரா? அப்படிச் செய்தால் அதன் பெயர் தன்னின்பம் தானே. அது எப்படி விபச்சாரம் ஆகும்? இரண்டாம் கேள்வி.இயேசு, 'போதகரே' என யோவான் நற்செய்தியில் இங்கு மட்டுமே அழைக்கப்படுகின்றார் (காண். மத் 8:19, மாற் 9:17, லூக் 3:12). இது இயேசுவை மரியாதையாக விளிக்கும் சொல் அல்ல இங்கு. அவரது போதனையைக் கிண்டல் செய்யும் விதமாக 'போதகரே' என அழைக்கின்றனர். 'இப்படிப்பட்டவர்களை கல்லால் எறிந்து கொல்ல வேண்டும் என்று மோசே சட்டம் சொல்கிறது.' மோசே சட்டம் சாட்சிகளோடுதான் ஒரு குற்றம் நிரூபிக்கப்பட வேண்டும் என்று சொல்கிறது (காண் இச 17:6, 19:15). ஆனால் இங்கே சாட்சிகள் இல்லை. குற்றச்சாட்டு மட்டுமே இருக்கிறது. மேலும், மோசேயின் சட்டத்திலும், இயேசுவின் காலத்தில் புழக்கத்தில் இருந்த மிஷ்னாவின் சட்டத்திலும், விபச்சாரம் செய்யும் ஆண்தான் தண்டிக்கப்படுகிறார் (காண். லேவி 20:10, இச 22:22). ஆக, இங்கே வந்திருப்பவர்களின் நோக்கம் சட்டத்திற்கு கீழ்ப்படிதலின் அடிப்படையில் அல்ல. 'இயேசுவின் மேல் குற்றம் சுமத்த' அந்தப் பெண்ணைப் பயன்படுத்துகிறார்கள் இவர்கள். 'கல்லால் எறிந்து கொல்லுங்கள்' என்று இயேசு சொன்னால், இயேசு உரோமைச் சட்டத்திற்கு எதிராக செயல்படுபவரகவும், அல்லது கருணையற்ற ரபியாகவும் மாறிவிடுவார். ஏனெனில், இயேசுவின் சமகாலத்தில் கொலை தண்டனை விதிப்பது என்பது உரோமை அரசுக்கும் மட்டும் உரியது என்று இருந்தது. 'எறிந்து கொல்ல வேண்டாம்' என்று சொன்னார் அவர் மோசேயின் சட்டத்தை மீறியவராகக் கருதப்படுவார்.' இயேசு இவர்களின் கேள்வியைத் தவிர்ப்பதற்காக குனிந்து தரையில் எழுதுகின்றார். அவர் தரையில் அவர்களுடைய பாவங்களை எழுதினார் என்று சிலர் சொல்வார்கள். அதனால்தான் என்னவோ, 'பதில் சொல்லும்!' என்று அவரை அவசரப்படுத்துகின்றனர். தீர்ப்பிடுமாறு கூட்டி வந்தவர்களை இப்போது இயேசு கூண்டில் ஏற்றுகின்றார்.'உங்களில் பாவம் இல்லாதவர் முதலில் இப்பெண்மேல் கல் எறியட்டும்!' என்று சொல்லிவிட்டு, மீண்டும் தரையில் எழுதத் தொடங்குகிறார். எல்லாரும் போகின்றனர்.இயேசுவும் அப்பெண்ணும் அங்கே நின்றுகொண்டிருக்கின்றனர். இப்போது இயேசுவே பேச்சைத் தொடங்குகின்றார். 'அம்மா, அவர்கள் எங்கே? உன்னை யாரும் தீர்ப்பிடவில்லையா?' 'இல்லை' என்கிறார் பெண். 'நானும் தீர்ப்பளிக்கவில்லை. நீர் போகலாம். இனி பாவம் செய்யாதீர்' என பெண்ணிடம் இயேசு சொல்வதுடன் நிறைவடைகிறது நிகழ்வு.

அவர்கள், 'இவள்' என்று சொன்னவரை, இயேசு, 'அம்மா' என மரியாதையுடன் அழைக்கிறார். இந்த ஒற்றைச் சொல்லிலேயே அவர் அவருக்குப் புதுவாழ்வு தந்துவிடுகின்றார். அத்தோடு நில்லாமல், 'இனி பாவம் செய்யாதீர்!' என அறிவுறுத்துகின்றார். ஆக, 'பாதை ஒரு முறை அடைக்கப்பட்டுவிட்டது. நான் உமக்கு புதிய பாதை ஒன்றைத் தொடங்குகிறேன். மீண்டும் பாவம் செய்து அதை அடைத்துவிடாதீர்!' என்று சொல்லி அனுப்புகிறார் இயேசு. தன் வாழ்வுப் பாதையில் அவர் தொடர்ந்து ஓடுமாறு பணிக்கிறார் இயேசு.

இவ்வாறாக, இன்றைய முதல் வாசகத்தில் இஸ்ரயேல் மக்களுக்குப் புதிய பாதையை அமைத்தும், இரண்டாம் வாசகத்தில் புதிய இலக்கை பவுலுக்குத் தந்தும், நற்செய்தி வாசகத்தில் பெண்ணுக்கு மன்னிப்பு அளித்தும், இவர்கள் தொடர்ந்து ஓடுமாறு செய்கின்றார் இறைவன்.

இன்று நம் வாழ்வில் நாம் எதிர்கொள்கின்ற பாதை முடிவுற்ற நிலைகள் எவை? அவற்றைக் கடந்து நாம் எப்படி ஓடுவது? மூன்று வழிகளைச் சொல்கிறது இன்றைய இறைவாக்கு வழிபாடு.

1. கடந்ததை மறந்துவிடுவது

மூன்று வாசகங்களிலும் இந்தச் சொல்லாடல் நேரிடையாகவும் மறைமுகமாகவும் வருகிறது. அடிமைத்தனம் என்னும் கசப்பான அனுபவத்தை மறக்கச் சொல்லி அழைக்கிறது முதல் வாசகம். சமய சமூக அடையாளங்களை மறக்கச் சொல்கிறது இரண்டாம் வாசகம். பாவ வாழ்வை மறக்கச் சொல்கிறது நற்செய்தி வாசகம். 'மறத்தல்' நம் வாழ்வில் மிக முக்கியமான ஒன்று. நம் குழந்தைப் பருவம் தொடங்கி இன்றுவரை நடந்தவை எல்லாம் நமக்கு நினைவில் இருந்தால் நாம் பைத்தியமாகிவிடுவோம். நம் மூளை எதை வைத்துக்கொள்ள வேண்டுமோ அதை வைத்துவிட்டு மற்றதை மறந்துவிடுகிறது. கடந்த காலத்தில் நம்முடைய மனத்தைக் கட்டியிருக்கும்போது நம்மால் முன்னேறிச் செல்ல முடியவில்லை. அதாவது, யானையைச் சிறிய சங்கிலியால் கட்டுவதுபோல. யானை மிகவும் பலம் வாய்ந்தது. ஆனால், அதை எப்படி பாகானால் சிறிய சங்கிலியைக் கொண்டு கட்ட முடிகிறது? குட்டியாக இருக்கும்போதே யானைக்குக் கட்டப்படும் சங்கிலி அதனால் உடைக்க முடியாததாக இருக்கிறது. ஆக, 'என்னால் உடைக்க முடியாது' என்ற கடந்த கால அனுபவம் யானைக்கு ஆழமாக மூளையில் பதிந்துவிடுவதால், இறுதிவரை அது சங்கிலியை உடைக்கும் முயற்சியில் ஈடுபடுவதே இல்லை. கடந்த காலத்தை மறக்கும்போது கடந்த காலம் நம்மில் விதைத்த எதிர்மறை எண்ணங்கள், உணர்வுகள், அனுபவங்கள் ஆகியவற்றை மறக்க வேண்டும்.

2. இலக்கு நிர்ணயம்

பழையதை மறந்துவிட்டால் மட்டும் போதுமா? புதியது நோக்கி நகர வேண்டும். இல்லை என்றால் நாம் அப்படியே தேங்கி விடுவோம். புதியது என்பது புதிய இலக்கு. பவுல் தன் பழையதை மறக்க புதியது ஒன்றோடு தன்னை இணைத்துக்கொள்கிறார். 100 மீட்டர் ஓட்டத்தில் அல்லது உயரம் தாண்டுதல் அல்லது நீளம் தாண்டுதலில் பங்கேற்பது போல. விளையாட்டு வீரர் தன் 'உந்தியக்கப் பலகையை' மறப்பதோடல்லாமல் இலக்கை மனத்தில் கொண்டால்தான் வெற்றி பெற முடியும். நம் வாழ்க்கை வழியற்ற பாதையை அடைந்துவிட்டால், அதையும் தாண்டி நம்முடைய இலக்கைப் பார்க்க நாம் கற்றுக்கொள்ள வேண்டும். ஆக, அடுத்தடுத்த என்று இலக்கு மாறிக்கொண்டே இருக்க வேண்டும். புதிய இலக்குகள் நமக்கு புதிய வேகத்தைத் தரும். திடீரென்று வேலை பறிபோய்விட்டதா. உடனடியாக, ஓய்வு நேரத்தை எப்படி பயன்படுத்துவது? என்ற இலக்கு வேண்டும். உடல்நலம் சரியில்லாமல் போய்விட்டதா. அதை ஓய்வுக்கான வாய்ப்பாக பயன்படுத்தி அடுத்துச் செய்ய வேண்டிய வேலைகளைத்திட்டமிட வேண்டும். ஆக, 'டெட் என்ட்' என்பது நமக்கு அன்றாடம் வரலாம். ஓடிக்கொண்டே இருக்கும் நமக்கு எதிரே சுவர் வந்துவிட்டதால் வருத்தப்பட வேண்டுமா? இல்லை. அந்தச் சுவரில் ஓவியம் வரையக் கற்கலாமே! அப்படிக் கற்றால், தடையே நமக்கு இலக்காக மாறிவிடும்.

3. வாழ்க்கையைப் பற்றிய பார்வையை அகலமாக்குவது

மற்றவர்கள் அந்தப் பெண்ணின் பழைய வாழ்வைப் பார்த்தார்கள். ஆனால், இயேசுவோ அவளின் புதிய வாழ்வைப் பார்க்கிறார். நாகேஷ் அவர்கள் ஒரு திரைப்படத்தில் சொல்வதுபோல. பிரச்சினை என்பது சிறிய கூழாங்கல் போன்றது. அதை நம் கண்ணுக்கு அருகில் வைத்துப் பார்த்தால், அது பெரியதாகத் தெரிவதோடு, நம்முடைய பார்வையை மறைத்துவிடும். கொஞ்சம் தள்ளி வைத்துப் பார்த்தால் சின்னதாகத் தெரியும். அப்படியே நம் முதுகிற்குப் பின் எறிந்துவிட்டால் அது மறைந்துவிடும். 'பாவம்' என்பதை, 'தவறுதல்' என்பதைச் சின்னக் கல்லாகப் பார்க்கும் இயேசு அதை பின்னால் எறிந்துவிடுகிறார். மற்றவர்களோ தங்கள் கண்களுக்கு மிக அருகில் வைத்துப் பார்க்கின்றனர். பார்வை அகலமாகும்போது பாதை இன்னும் விரிவாகும். நம்மால் தொடர்ந்து ஓட முடியும். இங்கே இயேசு, தீர்ப்பிட வந்தவர்களின் பார்வையையும் அகலமாக்குகின்றார். பெண்ணின் பார்வையையும் அகலமாக்குகிறார். வாழ்வில் அனைத்தையும் அனைவரையும் சிறு சிறு புள்ளிகளாக இணைத்துப் பார்க்கிற ஒருவரால்தான் வாழ்வு என்னும் முழு ஓவியத்தைப் பார்க்க முடியும். இயேசுவால் பார்க்க முடிகிறது அப்படி. இயேசுவின் பார்வை நமக்கு இருந்தால் நம்மாலும் அது முடியும்.

இறுதியாக,

இன்று 'டெட் என்ட்' - பாதை முடிவு - வந்தே தீரும். நம் தனிப்பட்ட வாழ்வில், உடல்நலத்தில், உறவுநிலைகளில், பணியில், படிப்பில். இப்படி பாதை அடைக்கப்பட்டது என்று எண்ணியவர்கள் எல்லாம் - அன்னை தெரசா, அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார், நம் அப்பா, அம்மா - நெடும் பயணம் கடந்து சென்றார்கள். முடிந்துவிட்ட பாதையில் அமர்ந்து கண்ணீர் வடிக்கவில்லை. ஏனெனில், அவர்களுக்குத் தெரியும் - அவரோடு கைகோர்க்கும்போது முடிவு என்பது விடிவு என்று.



தீர்ப்பிடாது வாழ்வோம்

  ஓர் ஊரில் ஞானி ஒருவர் இருந்தார். ஒருநாள் அவரிடத்தில் ஒருவன் வந்து, “குருவே என்னுடைய பாவங்களை எல்லாம் மன்னித்தருள்க” என்று கெஞ்சிக் கேட்டான். அதற்கு அவர், “முதலில் நீ என்ன பாவம் செய்தாய் என்று சொல், அதன்பிறகு அது மன்னிக்கக்கூடிய குற்றமா? இல்லையா? என்று சொல்கிறேன்” என்றார். அவன், ‘ஐயா! நான் இந்த ஊரில் இருக்கக்கூடிய எல்லா மனிதர்களைப் பற்றியும் தீர்ப்பிட்டுக் கொண்டும், அவதூறு பேசிக்கொண்டும் இருப்பேன். இதுதான் நான் செய்த மிகப்பெரிய பாவம்” என்றான்.

எல்லாவற்றையும் கவனமாகக் கேட்டுவிட்டு குரு அவனிடம், “முதலில் நீ போய் உன்னுடைய வீட்டில் இருக்கக்கூடிய தலையணையை எடுத்துக்கொண்டுவந்து, அதிலுள்ள பஞ்சை எல்லாம் தெருவில் வைத்து, காற்றில் பறக்கவிட வேண்டும். அதன் பின்னர் வந்து என்னைப் பார்” என்றார். அவனும் தன்னுடைய வீட்டிற்குச் சென்று தலையணை எடுத்துவந்து, அதிலுள்ள பஞ்சை எல்லாம் காற்றில் பறக்கவிட்டுவிட்டு, குருவிடம் திரும்பி வந்தான்.

  “குருவே! நீங்கள் சொன்னது போன்று நான் எல்லாவற்றையும் செய்துவிட்டேன், இப்போது என்னுடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிட்டதுதானே!” என்றான். அதற்கு அவர், “பஞ்சைக் காற்றில் பறக்கவிட்டால் உன்னுடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டது என்று யார் சொன்னது?. இப்போது மீண்டுமாக நீ போய், காற்றில் பரந்த பஞ்சை எல்லாம் சேகரித்துக்கொண்டு வா” என்றார். அவனும் போய் காற்றில் பரந்த பஞ்சை திரும்ப சேகரிக்கச் தொடங்கினான். அவனால் எல்லாற்றையும் சேகரிக்க முடியவில்லை. அது அவனுக்குக் கடினமாக இருந்தது. இதனால் அவன் வருத்தத்தோடு திரும்பிவந்து, குருவிடம் தன்னுடைய தோல்வியை ஒத்துக்கொண்டான்.
 
அப்போது ஞானி அவனிடம், “காற்றில் பரந்த பஞ்சை மீண்டுமாக சேகரிப்பது கஷ்டம்தானே, அதுபோன்றுதான் இதுவரைக்கும் நீ பரப்பிய அவதூறுகளை, தவறான தீர்ப்பிடல்களைத் திரும்பப் பெறவதும். ஆதலால் உன்னுடைய குற்றங்களை மன்னிக்கவே முடியாது” என்று சொல்லி அங்கிருந்து அவனை திரும்பிப் போகச் சொன்னார். ஒருவரைப் பற்றி நாம் பரப்பும் அவதூறு, தவறான தீர்ப்பிடல்கள் எல்லாம் எந்தளவுக்கு கொடியது என்பதால்தான், அப்படிப்பட்ட குற்றம் மன்னிக்க முடியாது என்றார் அவர்.
 
தவக்காலத்தின் ஐந்தாம் ஞாயிற்றுக்கிழமையில் இருக்கும் நமக்கு இன்றைய நாள் வாசகங்கள் “தீர்ப்பிடாது வாழவோம்” என்றதொரு அழைப்பைத் தருகிறது. இன்றைய நற்செய்தியில் ஆண்டவர் இயேசுவை எப்படியாவது சிக்கலில் மாட்டிவிட வேண்டும் என்பதற்காக பாவத்தில் பிடிப்பட்ட பெண் ஒருவரை மறைநூல் அறிஞர்கள் மற்றும் பரிசேயர்கள் அவரிடம் கொண்டுவருகிறார்கள். ஆனால் இயேசு அவர்களின் தீய எண்ணத்தை அறிந்துகொண்டு “உங்களில் பாவம் செய்யாதவர் இப்பெண்ணின் மீது முதலில் கல் எறியட்டும்” என்று சொல்கிறார். உடனே சிறுவர் தொடங்கி, பெரியவர் வரை யாவருமே அவ்விடத்திலிருந்து களைந்துபோய்விடுகின்றனர். அதன்பிறகு இயேசு அப்பெண்ணைப் பார்த்து, “நானும் உன்னைத் தீர்ப்பிடேன், இனிமேல் பாவம் செய்யாதீர்” என்று சொல்லி அனுப்புகிறார்.
 
இங்கே ஒருவரைப் பற்றித் தீர்ப்பிட, கடவுளைத் தவிர வேறு யாருக்கும் உரிமை இல்லை என்று ஆண்டவர் இயேசு மிகத்தெளிவாக எடுத்துரைக்கிறார். மனிதர்களாகிய நாம் ஒருவரைப் பற்றிய முழுமையாகத் தெரியாமலே தீர்ப்பிடுகிறோம். இன்னும் சில நேரங்களில் நம்முடைய தவறை மறைப்பதற்காக பிறரைத் தீர்ப்பிடுகிறோம். பிறருடைய தவறைப் பெரிதுபடுத்துகிறோம். அதனால் ஆண்டவர் இயேசு கூறுகிறார், “பிறர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்காதீர்கள், அப்போதுதான் நீங்களும் தீர்ப்புக்கு உள்ளாக மாட்டீர்கள்” என்று (மத் 7:1). இயேசு தொடர்ந்து சொல்வார், “உங்கள் கண்ணில் இருக்கும் மரக்கட்டையைப் பார்க்காமல் உங்கள் சகோதரர் அல்லது சகோதரியின் கண்ணில் இருக்கும் துரும்பை நீங்கள் கூர்ந்து கவனிப்பதேன்?” என்று.

  ஆதலால் பிறரைக் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கும் முன்னால் நாம் தீர்ப்பளிக்கத் தகுதியானவர்கள்தானா என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். விபசாரித்தில் பிடிபட்ட பெண்ணை ஆண்டவர் இயேசு தீர்ப்பிட்டிருக்கலாம். ஏனென்றால் அவர் பாவமற்றவர். ஆனால் அவர் அப்படிச் செய்யவில்லை. மாறாக அப்பெண்மணியை, அவளுடைய பாவங்களை மன்னித்து, இனிமேல் பாவம் செய்யாதே” என்று சொல்லி அனுப்பிக்கிறார்.

ஆம், தீயோர் அழிவுற வேண்டும், கெட்டு மடியவேண்டும் என்பதல்ல, மாறாக அவர்கள் மனம்மாற வேண்டும் என்பதுதான் கடவுளின் மேலான விரும்பாக இருக்கிறது. இதைதான் நாம் விவிலியத்தின் பல இடங்களில் குறிப்பாக எசேக்கியல் 33:11 ல் வாசிக்கின்றோம்.
 
நம் கடவுள் நமது அழிவில் மகிழ்கின்ற கடவுள் அல்ல, மாறாக நாம் அனைவரும் வாழவேண்டும் என்று விரும்புகின்ற கடவுள்.
 
நமது அண்டை மாநிலமான கேரளாவில் நாத்திக அலை பரவியிருந்த நேரம் அது. அப்போது ஓரிடத்தில் சமய பொதுக்கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்தது. சமய சொற்பொழிவு நன்றாகப் போய்க்கொண்டிருந்த நேரத்தில் திடிரென்று கூட்டத்திலிருந்து எழுந்த ஒருவன், “கடவுள் என்பது ஒரு கற்பனை, கடவுள் என்று ஒருவர் இந்த உலகத்தில் இல்லவே இல்லை. கடவுளை நம்புகிறவன் முட்டாள். ஒருவேளை கடவுள் இந்த உலகில் இருக்கிறார் என்று சொன்னால், அவர் என்னை மூன்று நிமிடத்திற்குள் அடித்துக் கொல்லட்டும்” என்று திரண்டிருந்த கூட்டத்தினர் முன்பாகச் சவால் விட்டான். இதைப் பார்த்து மக்கள் வியப்படைந்தனர்.
 
ஒரு நிமிடம் ஆனது, இரண்டு நிமிடம் ஆனது, மூன்று நிமிடமும் ஆனது. ஆனால் அவன் அப்படியே உயிரோடு இருந்தான். உடனே அவன் மக்கள் கூட்டத்தைப் பார்த்து, “பார்த்தீர்களா! கடவுள் இல்லை என்பது இப்போது நிரூபணம் ஆகிவிட்டது. கடவுள் ஒருவேளை இருந்திருந்தால் நான் இந்நேரம் இறந்திருப்பேனே!” என்று கூட்டத்தைப் பார்த்து ஏளனமாகப் சிரித்தான். மக்களும் அவனுடைய பேச்சை நம்ப ஆரம்பித்தார்கள். இதனால் கூட்டத்தில் மிகப்பெரிய குழப்பமே ஏற்பட்டது
 
அப்போது அங்கே இருந்த இட்டிவரா என்ற சாது மக்கள் கூட்டத்தைப் பார்த்து, “கடவுள் தந்தையும், தாயுமானார். இன்னும் சொல்லப்போனால் நம் தந்தை தாயைவிட நம்மீது மேலான அன்புகொண்டிருப்பவர், அப்படிப்பட்ட கடவுள் நாம் அழிவுறவேண்டும் என்று விரும்புவாரா?. ஒருபோதும் இல்லை. கடவுள் நம்மைக் காப்பாவரே அன்றி, அழிப்பவர் அல்ல” என்று முடித்தார்.
 
திரண்டிருந்த மக்கள்கூட்டம் இதைக் கேட்டு கடவுள் உண்மையிலே இருக்கிறார் என்று நம்பத் தொடங்கினார்கள்.
 
ஆம், நம் கடவுள் நாம் அழிவுறவேண்டும் என்று அல்ல, மாறாக வாழவேன்றும் என்று விரும்புகிறார். அதனால் இயேசு விபச்சாரத்தில் பிடிபட்ட பெண்ணை பாவி என்று தீர்ப்பிடாமல், அவளை மனதார மன்னித்து, அவள் புதிய ஒரு வாழ்க்கை வாழ வழிவகுக்கின்றார்.
 
இன்றைய நாள் வாசகங்கள் நமக்குத் தரும் அடுத்த சிந்தனை. நாம் நமது கடந்தகால வாழ்வை மறந்துவிட்டு, புதியதொரு வாழ்க்கை வாழவேண்டும் என்பதுதான். எசாயாப் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல்வாசகத்தில் கூறுகிறார், “முன்பு நடந்தவற்றை மறந்துவிடுங்கள்; முற்கால நிகழ்ச்சி பற்றிச் சிந்திக்காதீர்கள்; இதோ புதுச்செயல் செய்கிறேன்; இப்பொழுதே அது தோன்றிவிட்டது” என்று கூறுகிறார். இன்றைய இரண்டாம் வாசகத்திலும்கூட பவுல் பிலிப்பியருக்கு எழுதுகிறபோது கூறுகிறார், “கடந்ததை மறந்துவிட்டு, முன்னிருப்பதை கண்முன் கொண்டு, பரிசு பெறவேண்டிய இலக்கை நோக்கி தொடர்ந்து ஓடுகிறேன்” என்று.
 
ஆகையால் இந்த தவக்காலத்தில் நமது கடந்தகால - பாவமான வாழ்வை -முற்றிலுமாக மறந்துவிடுவோம்.  புதியதொரு வாழ்க்கை வாழ முயற்சி எடுப்போம். ஏனென்றால் கடவுள் நம் குற்றங்கள் அனைத்தையும் மன்னித்துவிட்டார், நம்மை தூய, மாசற்றவர்களாக மாற்றிவிட்டார்.
 
முதல் உலகப்போரின்போது இங்கிலாந்து நாட்டின் பிரதமராக இருந்தவர் லீயோட் ஜார்ஜ் என்பவர். ஒருநாள் அவர் தன்னுடைய நண்பரோடு வீட்டுக்குப் பின்பக்கம் இருக்கக்கூடிய கோல்ப் மைதானத்தில் கோல்ப் ஆடிவிட்டு, புல்வெளி மைதானத்தின் கதவைக் கடந்துவந்தார். அவருக்குப் பின்னால் வந்த நண்பர்  கதவை மூடாமலே விட்டுவிட்டார்.
 
அதைக் கவனித்த பிரதமர், திரும்பி வந்து கதவை அடைத்துவிட்டு, “கதவைக் கடந்து வந்துவிட்டால், அதை அடைத்துவிடுவது எனது பழக்கம்” என்று சொல்லிவிட்டுச் சொன்னார், “உங்களுக்கு  மனநிம்மதி வேண்டுமெனில் உங்களுக்குப் பின்னால் உள்ள கதவை மூடிவிடுங்கள்; உங்களது கவலைகளை அங்கேயே விட்டுவிடுங்கள்; கடந்ததைத் தொடாதீர்கள்; நடந்தது நடந்ததாகவே இருக்கட்டும்” என்று சொல்லி முடித்தார்.

ஆம், நாம் ஒவ்வொருவரும் நமது கடந்த கால வாழ்க்கையை மறந்துவிட்டு, புதியதொரு வாழ்க்கை வாழ முயற்சி எடுப்போம். அதுவே இந்தத் தவக்காலத்தில் இறைவன் தரும் அழைப்பு.


  “கடந்த காலம் என்பது கனவு; எதிகாலம் என்பது கற்பனை; இன்று நன்றாக வாழ்ந்தால் ஒவ்வொரு கடந்த நாளும் சந்தோசக் கனவாகும், நாளைய நம்பிக்கையை கற்பனையாக்கும். இன்றைய நாளை மட்டும் பாருங்கள், இன்று மட்டுமே வாழுங்கள்” என்பார் காளிதாசர் என்ற மகான். ஆண்டவர் இயேசுகூட நாளைக்காக கவலைப்படாதீர். ஏனெனில் நாளைய வழி பிறக்கும்” என்று இந்த நாளில் வாழச் சொல்வார் (மத் 6:34).

ஆகவே இந்த தவக்காலத்தில் நாம் நமது கடந்த கால வாழ்வை மறப்போம். புதியதொரு வாழ்க்கை வாழ முயற்சிப்போம். குறிப்பாக பிறரைக் குற்றவாளிகள் என்று தீர்ப்பிடும் மனநிலையிலிருந்து மனம் மாறுவோம். இறைவனின் அளவு கடந்த அன்பை உணர்ந்து, இறைவழியில் நடப்போம். இறையருளை நாமும் நிறைவாய் பெறுவோம்.

  எனவே தீர்ப்பிடாது வாழ்வோம். இறைவன் தரும் அருளை நிறைவாய் பெறுவோம்.