Monday 30 July 2018

ஆண்டின் பொதுக்காலம் 18-ஆம் ஞாயிறு

ஆண்டின் பொதுக்காலம் 18-ஆம் ஞாயிறு


வி.ப. 16:2-4, 12- 25
எபே. 4:17, 20-24
யோவான் . 6:22-35

ஞாயிறு இறைவாக்கு - அருள்பணி முனவர் ம.அருள்
நிலையான இன்பம்


அன்றொரு நாள் பள்ளி மாணவர்கள் உரையாடிக் கொண்டிருப்பதைக் காது கொடுத்துக் கேட்டேன். நான் தாமிரபரணி ஆற்றிலே மூழ்கிக் குளிப்பதில் தான் இன்பமும், சுகமும் காண்கின்றேன் என்றான் ஒரு மாணவன். இல்லை . மூழ்குவதால் நாமும் மூழ்கி உள்ளே சிக்கி மடிவோம். மாறாக குற்றால அருவியிலே தலை நீட்டி குளிப்பதில் தான் எனக்கு இன்பமும் சுகமும் உண்டு என்றான் இன்னொருவன். இதில் எனக்கு இன்பம் இல்லை. ஏனெனில் ஓடி வருகின்ற அருவியில் மின்சாரம் பாய்ந்து வருவதால் அது என் உடலைத் தாக்கும். எனவே என் வீட்டில் உள்ள குழாயில் பூப்போல் விழுகின்ற நீரிலே குளிப்பதில் தான் எனக்கு இன்பமும் சுகமும் உண்டு என்றான் மூன்றாம் மாணவன்.
இந்த வேறுபட்ட பதில்களைத் தருவது என்ன? நிலையற்ற உலகில் மனிதன் அடையும் இன்பமும் நிலையற்றவைதானே! மனிதன் பசியாக இருப்பதை நன்றாக உணருகின்றான். ஆனால் அந்த பசியும் தாகம் உண்டாக்கும் உண்மை நிலை என்ன என்பதை அறிய முடியாதவனாக வாழ்கின்றான். வயிராற உண்டால் பசி மாறிவிடும் என நினைக்கிறான் ஒருவன். போதை வர குடித்தால் போதும் என நினைக்கிறான் ஒருவன். சிற்றின்ப வாழ்விலே மூழ்கிவிட்டால் பேரின்பம் காண்பேன் எனக் கனவு காண்கின்றான் இன்னொருவன். ஏன் ! பணம் திரட்டி பொருள் சேர்ப்பதில் தான் இன்பம் காண்பேன் என நினைக்கிறான் இன்னும் ஒருவன். ஆனால் இவையனைத்தும் இன்று மனிதனுக்கு நிறைவு தருவதில்லையே! யோவான் நற்செய்தி 6:27 - இல் அழிந்துபோகும் உணவுக்காக உழைக்காதீர்கள். முடிவில்லா நிலையான வாழ்வு தரும் உணவிற்காக உழையுங்கள். அன்று வனாந்தரத்தில் இஸ்ரயேல் மக்கள் மன்னாவை உண்டார்கள். ஆனால் மடிந்தார்கள். நான் தரும்  உணவை உண்பவனோ என்றுமே வாழ்வான் என்றாரே இயேசு! எதைக் குறிப்பிட்டுச் சொன்னார்?

ஆயிரக்கணக்கான மின் விளக்குகள் அரங்கேற்றப்பட்ட இடம் அழகாகக் காட்சித் தரலாம். வெளிச்சம் மிகுதியாக இருக்கலாம். ஆனால் அவையனைத்தும், உதயமாகும் சூரியனுக்கு முன்னே எம்மாத்திரம்! இந்த இடத்தில் இயேசுவின் அமுத வார்த்தைகளை ஆணித்தரமாகக் கோடிட்டுக் காட்ட விரும்புகிறேன். நானே வாழ்வு  தரும் உணவு, என்னிடம் வருபவனுக்கு என்றுமே பசியிராது (யோவா. 6:35) என்பது இயேசு கூறிய உயிருள்ள வார்த்தைகள் என்பதை இன்று சிந்திக்க உங்களை அழைக்கிறேன். 


அன்றொரு நாள் ஆற்றங்கரை ஓரத்திலே தனிமையில் வாழ்ந்த முனிவர் விலையேறப்பெற்ற ஒரு வைரக்கல்லைக் கண்டெடுத்தார். இதைப் பார்த்த வழிபோக்கன், ஐயா முனிவரே இக்கல்லை எனக்குத் தாரும் என்று கேட்க முனிவரும் மனம் உவந்து உடன் கொடுத்தார். என்ன பைத்தியக்காரத்தனம் இந்த முனிவருக்கு. இதன் மதிப்பு தெரியாது தந்துவிட்டாரே என்று தனக்குள்ளே சொல்லிக் கொண்டான். சில வாரங்கள் சென்று அந்த முனிவர் மகிழ்ச்சியுடன் இருப்பதைப் பார்த்தான் இந்த வழிப்போக்கன். ஐயா! விலையேறப்பட்ட வைரக் கல்லைக் கொடுத்த நீங்கள் மகிழ்ச்சியுடன் இருக்கிறீர்களே! ஆனால் வைரக் கல்லைப் பெற்ற நான் மகிழ்ச்சி இழந்து நிற்கிறேனே என்றான் கண்ணீர் நிறைந்த கண்களோடு. மகனே! இந்த உயிரற்ற வைரக் கற்களெல்லாம் உன் உள்ளத்திற்கு நிறைவு தராது என்றார் அந்த முனிவர்.

இதுதான் இயேசு சபையைத் தோற்றுவித்த புனித இஞ்ஞாசியார் நமக்குக் கற்றுத் தரும் பாடம். நான் மாவீரனாக விளங்கினால் உலகில் புகழோடு வாழ்வேன் என்று கனவு கண்ட இஞ்ஞாசியார், வெறுமையைத்தான் கண்டார். எனவே மனம் திரும்பினார் - திருந்தினார். இயேசுவைத் தன் உள்ளத்தில் அரியணை ஏற்றினார். வாழ்வில் நிறைவும் கண்டார். இவரைப் போல நாமும் வாழ்வு தரும் இயேசுவை அண்டி வருவோமா?




மகிழ்ச்சியூட்டும் மறையுரைகள் - குடந்தை ஆயா F.அந்தோனிசாமி



புதிய மனிதர்களாவோம்.


கடவுளுக்கு எற்றவர்களாக நம்மால் வாழ முடியுமா? (நற்செய்தி)

முடியும். அதற்கு முதலாவதாக நாம் நமது தவறுகளை நியாயப்படுத்துவதை நிறுத்த வேண்டும்.

ஒல்லி உடம்புக்காரர் ஒருவர் தாடியுடன் பிச்சையெடுத்துக் கொண்டிருந்தார். புதிதாக மணமான ஒருவன் அவரிடம் கேட்டான்:

'நீ சிகரெட் பிடிப்பாயா?' -  'மாட்டேன்'
'குடிப்பாயா?' 'மாட்டேன்'
'சூதாடுவாயா?' 'மாட்டவே மாட்டேன்'
'சரி என் வீட்டுக்கு வா. நூறு ரூபாய் தருகின்றேன்.'

மணவாளன் அவனது மனைவிக்கு முன்னால் பிச்சைக்காரரை நிறுத்தி, "கண்ணே ! சிகரெட் பிடிக்காதே, குடிக்காதே, சூதாடாதேன்னு அடிக்கடி சண்டை போடுறியே! ... இதெல்லாம் இவரு செய்கிறதில்லை! இவரு நிலையைப் பார்..." என்றான்.

நாம் செய்யும் தவறுகளை நியாயப்படுத்துவதற்கு ஆயிரம் உதாரணங்களைச் சுட்டிக்காட்டலாம். ஆயினும் நாம் செய்யும் தவறுகளை சரி என்று நியாயப்படுத்த முயற்சி செய்வது தவறு!

இரண்டாவதாக நமது தவறான சிந்தனைகள், சொற்கள், செயல்கள் ஆகியவற்றை விட்டுவிட முன்வர வேண்டும். சாதாரணமாகத் தவறுகள் நம்மைப் பிடித்துவைத்திருப்பதில்லை, நாம்தான் அவற்றை பிடித்துவைத்திருக்கின்றோம்.

நாம் ஒவ்வொருவரும் இறைவனின் அன்பார்ந்த மகனாக, மகளாக வாழ முற்படும் போது, கடவுளின் கட்டளைகளைப் பின்பற்ற முன்வரும் போது (முதல் வாசகம்), நமது மனம் மாறும்; நமது உள்ளம் உள்ளொளி பெறும்; அகத்தின் அழகு முகத்தில் தெரியும் (இரண்டாம் வாசகம்). மேலும் அறிவோம் :

அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்
கடுத்தது காட்டும் முகம் (குறள் : 706).

பொருள் : தன்னை நெருங்கி வருபவரது வடிவத்தையும் வண்ணத்தையும் தெளிவாகக் காட்டுவது கண்ணாடி. அது போன்று ஒருவரது உள்ளத்தில் மிகுந்து தோன்றும் உணர்வை அவரது முகமே வெளிப்படையாகக் காட்டிவிடும்!

 
மறையுரை மொட்டுக்கள் -அருள்பணி Y. இருதயராஜ்
சர்க்கரை நோயாளி ஒருவர் டாக்டரிடம் செல்ல, டாக்டர் அவரிடம், "இரண்டு கப் சாதம் மட்டும் சாப்பிடுங்கள்' என்றார். அவர் டாக்டரிடம், இந்த இரண்டு கப் சாதத்தை எப்போது சாப்பிடுவது? சாப்பிடுவதற்கு முன்பா? அல்லது சாப்பிட்ட பிறகா?" என்று கேட்டாராம். அவருடைய பசியோ யானைப்பசி; இரண்டு கப் சாதம் அவருக்குச் சோளப்பொறி. யானைப் பசிக்கு சோளப்பொறி கட்டுப்படியாகுமா?
பல்வேறு பசிகள் மனிதரை வாட்டி வதைக்கின்றன; பசி வந்தாலே மானம், குலம், கல்வி, வன்மை , அறிவுடமை, தானம், தவம், முயற்சி, தாளாமை (வாக்கம்), காதல் ஆகிய பத்தும் பறந்துவிடும், இஸ்ரயேல் மக்களுக்குப் பாலை நிலத்தில் பசி வந்தவுடன் பத்தும் பறந்துவிட்டன. அதாவது பரமனுடைய பத்துக் கட்டளைகளும் பறந்து போய்விட்டன. எஞ்சி இருந்தது அவர்களுடைய வயிறும் வயிற்றுப் பசியுமே. பாலை லக்கில் பட்டினி கிடந்து சாவதைவிட, எகிப்து நாட்டில் வயிராற உண்டு அடிமைகளாக வாழ்வதையே விரும்பினர். எனவே, மோசேயிடம் செயயாட்டிற்காகக் கூப்பாடு போட்டனர். கடவுளும் அவர்களுக்கு 'மாயா' என்ற அற்புத உணவை, வானத்து உணவை அளித்தார்,

புதிய உடன்படிக்கையின் இணைப்பாளரும் புதிய மோசேயுமாகிய கிறிஸ்து ஐந்து அப்பங்களைக் கொண்டு ஐயாயிரம் பேருக்கு அற்புதமான முறையில் உணவளித்தார். யூதர்கள் தங்கள் முன்னோர்கள் உண்ட மன்னா என்ற உனவை நினைவு கூர்ந்தனர், இந்நிகழ்ச்சி மறு ஒலிபரப்பு என்று எண்ணினர், ஆனால் கிறிஸ்து நிகழ்ச்சி முற்றிலும் வேறுபட்டது. அழிந்துபோகும் உணவுக்காக அலையாமல் அழியாத உணவைத் தேடிட அவர்களுக்கு அழைப்பு விடுக்கிறார். அவர்தான் நிலைவாழ்வளிக்கும், உண்மையான உயிருள்ள உணவு என்பதைச் சுட்டிக் காட்டுகிறார் (நற்செய்தி).

இயேசு யூதர்களிடம், "என்னிடம் வருபவருக்குப் பசியே இராது: என்னிடம் நம்பிக்கை கொண்டிருப்பவருக்கு என்றுமே தாகம் இராது" (யோவா 6:35) என்கிறார், அவ்வாறே சமாரியப் பெண்களிடமும், நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கும் எவருக்கும் என்றுமே தாகம் எடுக்காது (யோவா 4:14) என்று கூறுகிறார். கூடாரப் பண்டிகையின் இறுதி நாளில் இயேசு எருசலேம் ஆலயத்தில் உரத்த குரலில், “யாரேனும் தாகமாய் இருந்தால் என்னிடம் வரட்டும். என்னிடம் நம்பிக்கை கொள்வோர் பருகட்டும்" (யோவா 7:37) என்று மக்களை அழைத்தார்.

நாம் நமது பசியையும் தாகத்தையும் தணிக்க நாயாக அலைகிறோம்; மாடாக உழைக்கிறோம்; இடாக இளைக்கிறோம், ஆனால் நம் பசி தீரவில்லை: தாகம் தணியவில்லை. மாறாக அவை பன்மடங்கு கொழுந்துவிட்டு எரிகின்றன. ஆகாய் இறைவாக்கினர் வழியாக இறைவன் கூறியது நமது வாழ்வில் உண்மையாகிறது, *நீங்கள் விதைத்தது மிகுதி: அறுத்ததோ குறைவு, நீங்கள் உண்கிறீர்கள், ஆனால் உங்கள் வயிறு நிரம்புவதில்லை ; நீங்கள் குடிக்கிறீர்கள், ஆலால் நீங்கள் நிறைவடைவதில்லை. ஆடை அணிகிறீர்கள், ஆனால் உங்களுள் எவருக்கும் குளிர் நீங்கவில்லை. வேலையாள் தன் கூலியாக வாங்கிய பணத்தைப் பொத்தலான பையில் போடுகிறான்” (ஆகாய் 1.6)

நாம் சாண் ஏறினால் முழம் வழுக்குகிறது! ஏன்? ஏனெனில் கடவுளை ஓரங்கட்டிவிட்டு, நாம் உயரப் பறக்கப் பார்க்கிறோம். மனசாட்சியை மழுங்கடித்துவிட்டு, குறுக்கு வழியில் சென்று குபேரர்களாக மாற விரும்புகிறோம். அங்காடியின் சிலை வழிபாட்டிற்கும் நுகர்வு வெறிக் கலாச்சாரத்திற்கும் அடிமைகளாக இருக்கிறோம். தேவைகளைக் குறைப்பதற்குப் பதிலாகத் தேவைகளைப் பெருக்குகின்றோம். மன அமைதியை இழந்து, மரண தேவதையைத் தழுவுகிறோம். சுருக்கமாக, உயிருள்ள தண்ணீர் சுரக்கும் கடவுளை கைவிட்டுவிட்டு, தண்ணீரைத் தேக்கி வைக்க முடியாத ஓட்டைத் தொட்டிகளைக் கட்டிக் கொள்கிறோம் (எரே 2:13)

நமது இதயத் தாகத்தைத் தணிக்க வல்லவர் இயேசு ஒருவரே. நிலை வாழ்வு பெற கடவுளுக்கு ஏற்புடைய செயலை நாம் செய்ய வேண்டும். கடவுளுக்கு ஏற்ற செயல் என்பது அவருடைய மகனில் நம்பிக்கை கொள்வது. நற்கருணை நம்பிக்கையின் மறைபொருள். நற்கருணையை நாம் இயேசுவின் உடல் என்று உட்கொண்டால் மட்டும் போதாது. நற்கருனையிலுள்ள இயேசுவை நம்பி, அவரிடம் சரணடைய வேண்டும், மனிதன் அதிகமாகத் துன்புறுவது மனக் கவலையாலும் மன அழுத்தத்தாலுமே. மற்ற எல்லா நோய்களுக்கும் மருந்து உண்டு. ஆனால் மனக் கவலையைப் போக்க வல்ல ஒரே மருந்து கடவுளிடம் சரணடைவதே.

தனக்கு உவமை இல்லாதாள்தாள் சேர்ந்தார்க்கு அல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது (குறள் 7)

இறைவா எம் நெஞ்சங்கள் உமக்காகவே படைக்கப் பட்டுள்ளன; உம்மில் இளைப்பாறும் வரை அவற்றிற்கு அமைதி இல்லை - புனித அகுஸ்தீன்

ஒரு விவசாயிடம் இருந்த ஐந்து ரூபாய் பெறாத ஒரு தாமரை மலரை, ஐம்பது முதல் ஐநூறு ரூபாய் வரையில் விலை கொடுத்து வாங்கப் பலர் முன் வந்தனர். ஏன் என்று கேட்டதற்கு, காட்டில் தவம் செய்து கொண்டிருந்த புத்தருக்கு அம்மலரைப் படைக்க வேண்டும் என்று அவர்கள் பதில் சொன்னார்கள், தானே நேரில் புத்தரிடம் அம்மலரைக் கொடுத்தால் இன்னும் அதிகமாகப் பணம் கிடைக்கும் என்ற பேராசையுடன் அவவிவசாயி காட்டிற்குச் சென்று புத்தர் காலடியில் அம்மலரைப் படைத்தார், புன்னகை பூத்த முகத்துடன் அம்மலருக்கு எவ்வளவு பணம் வேண்டுமென்று புத்தர் விவசாயியைக் கேட்க, அவர் "பணமே வேண்டாம்; உங்களைப் பார்த்ததே போதும்" வென்றார். புத்தர் அவவிவசாயியின் பேராசையை அடியோடு ஒழித்து, அவரையும் நிர்வாண நிலையை அடையச் செய்தார்,

நற்கருணைப் பேழை முன் அமர்ந்து, ஆண்டவரை உற்று நோக்கும்போது, ஆண்டவர் நம் ஆசைகளை மடை மாற்றம் செய்கிறார். சிற்றின்பத்திலிருந்து பேரின்பத்திற்கு அழைத்துச் செல்கிறார், இன்றை இரண்டாவது வாசகத்தில் பவுலடியார் கூறுவதுபோல், பாவ நாட்டங்களால் ஏமாந்து அழிவுறும் நமது பழைய இயல்பைக் களைந்துவிட்டு, உண்மையிலும், நீதியிலும் படைக்கப்பட்ட புதிய இயல்பை (எபே 4:22-24) கிறிஸ்து நமக்கு அளிக்கிறார்.

எனவே, கலைமான் நீரோடைகளுக்காக ஏங்கித் தவிப்பதுபோல், உயிருள்ள இறைவன்மீது தாகம் கொள்வோம் (திபா 42:1-2). ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பார்ப்போம் (திபா 34:8).




உங்கள் மனப்பாங்கு - அருள்பணி ஏசு கருணாநிதி


விவிலியத்தில் இயேசு கையாளும் ஓர் உருவகத்தோடு இன்றைய சிந்தனையைத் தொடங்குவோம். விண்ணரசு பற்றிய பல உவமைகளைத் தன் சீடர்களுக்கு எடுத்துச் சொல்லும், விளக்கும் இயேசு, இறுதியாக, 'இவற்றையெல்லாம் புரிந்துகொண்டீர்களா?' என்று கேட்க, அவர்களும், 'ஆம்,' என்கின்றனர். அந்நேரம் அவர், 'விண்ணரசு பற்றிக் கற்றுக்கொண்ட அனைவரும் தம் கருவூலத்திலிருந்து புதியவற்றையும் பழையவற்றையும் வெளிக்கொணரும் வீட்டு உரிமையாளர்போல இருக்கின்றனர்' என்கிறார். 'கருவூலத்திலிருந்து வெளிக்கொணரும் வீட்டு உரிமையாளர்' - இதுதான் நாம் இங்கே தேர்ந்துகொள்ளும் உருவகம். ஒரு பெரிய வீட்டைக் கற்பனை செய்துகொள்வோம். அந்த வீட்டில் என்னவெல்லாம் இருக்கும்? வெளியே தெருவிற்கு அருகில் சுற்றுச்சுவரோடு இணைந்த வாசல். அடுத்து கொஞ்சம் முற்றம். பின் வீட்டின் நுழைவாயில். நுழைந்தவுடன் வரவேற்பரை. வரவேற்பரையை ஒட்டிய அல்லது தாண்டிய செப அறை, சமையலறை, உணவறை. பின் படுக்கையறை. நம்மிடம் இருக்கின்ற மிக முக்கியமான ஆவணங்கள், பணம், நகை போன்றவற்றை நாம் எங்கே வைப்போம்? நாம் வாழ்கின்ற அறை அல்லது ஓய்வெடுக்கின்ற அறை அல்லது தனியாக ஒரு சேமிப்பு அறை என அங்கே அவற்றைப் பத்திரப்படுத்துகின்றோம். ஒவ்வொரு அறைக்குள்ளும் மனிதர்கள் வருவதற்கு ஒவ்வொரு வரையறை வைத்திருக்கின்றோம். பால்காரர் சுற்றுச்சுவர் வாசலோடு நிற்கிறார். வாகன ஓட்டுநர் முற்றத்தோடு நிற்கிறார். பணிப்பெண் வீட்டு வாசலோடு நிற்கிறார். வேலை அல்லது சந்திப்பு நிமித்தம் வருபவர்கள் வரவேற்பறையோடு நின்றுகொள்கின்றனர். விருந்தினர்கள் சாப்பாட்டு அறை மற்றும் விருந்தினர் அறையோடு நின்றுகொள்கின்றனர். ஆனால், வீட்டு உரிமையாளர் மட்டுமே வாழ்கின்ற அல்லது ஓய்வு அல்லது சேமிப்பு அறைக்குள் நுழைகின்றார். வெளியே வருகின்றார். தான் விரும்புபவற்றைச் செய்கிறார். மற்றவர்கள் அந்தச் செயலைச் செய்தால் அது அத்துமீறல் அல்லது திருட்டு எனக் கருதப்படுகின்றது. மேலும், ஒரு வீட்டில் விருந்தினராக இருப்பவர் தன் வீட்டில் உரிமையாளராக இருப்பார். அங்கே அவருக்கு முழு உரிமையும் கிடைக்கும். எல்லா அறைகளையும்விட மிக முக்கியமான அறை கருவூலம் என்று சொல்லப்படும் சேமிப்பு அறை. இந்த அறைதான் மற்ற எல்லா அறைகளையும் இயக்குகிறது. இந்த அறையில் பழையது, புதியது என எல்லா நல்ல மற்றும் முக்கியமாக (புதிய, பழைய) பொருள்களும் இருக்கும். கருவூலத்தை வளர்க்கிறவர் தன் வீட்டை வளர்க்கிறார்.

வீட்டு உரிமையாளர் என்பவர் நான் என்றால் என் உள்ளம்தான் கருவூலம். ஒரு வீட்டைபோலவே என்னிலும் பல அறைகள் இருக்கின்றன. நான் எந்த அறையிலிருந்து செயலாற்றுகிறேன் என்பது மிக முக்கியம். எல்லா அறைகளும் ஒன்றுபோல இருப்பதில்லை. எல்லா அறைகளுக்கும் நான் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. வெளிவாசலில் கரையான் அரித்தால் நான் கண்டுகொள்வதில்லை. ஆனால், கருவூலத்தில் கரையான் அரித்தால் நான் பதறிவிடுகிறேன்.

மற்றொரு உருவகத்தில் சொல்ல வேண்டுமானால், கடலில் மிதக்கும் பனிப்பாறை போல இருப்பவன் நான். பனிப்பாறை நகர்வது போல நான் நகர்கிறேன். நிற்கிறேன். வளர்கிறேன். தேய்கிறேன். பனிப்பாறை கடல்மட்டத்திற்கு மேல் நீட்டிக்கொண்டிருப்பது வெறும் 10 சதவிகதம்தான். மற்ற 90 சதவிகிதம் கடலில் மூழ்கி யாருக்கும் தெரியாமல் இருக்கிறது. மேலே தெரியும் 10 சதவிகிதம்தான் நான் மற்றவருக்கு வெளிப்படுத்தும் என் செயல்கள், திறன்கள், ஆற்றல்கள், அடையாளங்கள். ஆனால் இந்த 10 சதவிகிதத்தை இயக்குவது மறைந்திருக்கும், பெரிய 90 சதவிகிதம்தான். மறைந்திருந்து இயக்கும் அந்தப் பனிப்பாறையே என் கருவூலம்.

இன்றைய இறைவாக்கு வழிபாடு உள்ளம் என்ற இந்தக் கருவூலத்தை, 90 சதவிகிதம் மறைந்திருக்கும் இந்தப் பனிப்பாறையை நாம் புதுப்பித்துக்கொள்ள அழைப்புவிடுகிறது. உள்ளம் என்ற கருவூலத்திற்கு இன்றைய இரண்டாம் வாசகத்தில் தூய பவுல் 'உள்ளப்பாங்கு' என மிக அழகான வார்த்தையைப் பயன்படுத்துகின்றார். 'கிறிஸ்துவில் புதுவாழ்வு' என்ற தலைப்பில் எபேசு நகரத் திருச்சபைக்கு தன் அறிவுரையை வழங்கும் பவுல், 'உங்கள் மனப்பாங்கு புதுப்பிக்கப்பட வேண்டும்' என அறிவுறுத்துகின்றார். 'உடல்,' 'மூளை,' 'உள்ளம்' என நான் என்னையே பகுப்பாய்வு செய்தால், என்னிலே உயர்ந்து நிற்பது 'உள்ளம்.' நான் என் உடலை புதுப்பிக்க நன்றாக உண்கிறேன், உடற்பயிற்சி செய்கிறேன். மூளையைப் புதுப்பிக்க நிறைய வாசிக்கிறேன், பல அறிவுரைகள் கேட்கிறேன். ஆனால், உள்ளத்தை எப்படி புதுப்பிப்பது? உள்ளம் புதுப்பிக்கப்படாவிட்டால் என்ன நடக்கும்? என்ற கேள்விகளை நான் பல நேரங்களில் கேட்பது கிடையாது.

இன்றைய முதல் (காண். விப 16:2-4,12-15) மற்றும் நற்செய்தி (யோவா 6:24-35) வாசகங்களில் நாம் 'உடலுக்கும்,' 'மூளைக்கும்,' 'உள்ளத்திற்கும்' நடக்கும் போராட்டத்தையே பார்க்கிறோம்.

முதல் வாசகத்திலிருந்து தொடங்குவோம்.
எகிப்தில் 400 ஆண்டுகளாக பாரவோன் மன்னனுக்கு அடிமைகளாக இருக்கின்றனர் இஸ்ரயேல் மக்கள். இவர்கள் எழுப்பும் அவலக்குரலைக் கேட்டு, இவர்களை விடுவிக்க இறங்கி வருகின்ற கடவுள், மோசே மற்றும் ஆரோனை எகிப்திற்கு அனுப்புகின்றார். பாரவோனின் இதயம் கடினமாகிவிட இஸ்ரயேல் மக்களை அவன் விடுவிக்க மறுக்கின்றான். தொடர்ந்து ஆற்றில் இரத்தம் தொடங்கி தலைப்பேறு மரணம் என பத்துக் கொள்ளை நோய்கள் வழியாக எகிப்தியரைத் தண்டித்து, தானே அரசருக்கெல்லாம் அரசன் என எண்பித்து அவர்களை விடுதலை செய்கின்றார் இறைவன். அவர்களின் விடுதலைப் பயணத்தில் செங்கடல் தடையாக இருக்கிறது. அதையும் வியத்தகு முறையில் கடக்கச் செய்த இவர்களைப் பின்தொடர்ந்த பாரவோனின் படைகளையும் கடலில் மூழ்கடித்துக் காக்கின்றார் கடவுள். விடுதலை அடைந்த மக்கள், 'ஆண்டவரே, உம்மைப்போல உண்டா!' என்று பாட்டுப்பாடி (விப 15) கொண்டாடிவிட்டு, பாட்டுச் சத்தம் அடங்குவதற்குமுன் கடவுளை நோக்கி முணுமுணுக்கின்றனர்.

'இறைச்சிப் பாத்திரத்தின் அருகில் அமர்ந்து, அப்பம் உண்டு நிறைவடைந்து, எகிப்து நாட்டிலேயே ஆண்டவர் கையால் நாங்கள் இறந்திருந்தால் எத்துணை நலமாயிருந்திருக்கும்! ஆனால், இந்தச் சபையினர் அனைவரும் பசியால் மாண்டுபோகவோ இப்பாலைநிலத்திற்குள் நீங்கள் எங்களைக் கூட்டிக்கொண்டு வந்தீர்கள்' என்று மோசேயிடமும், ஆரோனிடமும் முணுமுணுக்கின்றனர் இஸ்ரயேல் மக்கள்.

இந்த முணுமுணுத்தலில் அவர்களின் 'உடல்,' 'மூளை,' 'உள்ளம்' என மூன்று அறைகளும் செயலாற்றுகின்றன.

உடல்: 'இறைச்சிப் பாத்திரத்தின் அருகில் அமர்ந்து, அப்பம் உண்டு நிறைவடைந்து'

- இந்த மக்களுக்கு பாரவோனிடமிருந்து விடுதலை கிடைத்தது பெரிதாகத் தெரியவில்லை. மாறாக, இறைச்சிப் பாத்திரமும், அப்பமும்தான் பெரிதாகத் தெரிந்தது. என்ன ஒரு சின்ன மனிதர்களாக இவர்கள் இருந்திருக்கிறார்கள்! அடிமைகளாக இருந்தாலும் வயிறு நிரம்பியதே என்ற ப்ராக்டிகல் மக்களாகவும் இருக்கிறார்கள். பசியால் இருக்கிறவனுக்கு விடுதலையினால் என்ன பயன்!

மூளை: 'இப்பாலைநிலத்தில் நாங்கள் மாண்டுபோகவா எங்களைக் கூட்டிக்கொண்டு வந்தீர்'

- நம்ம உடம்புல இருக்கிறதுல மிகவும் மோசமானது இந்த மூளை. அது 'பேனைப் பெருமாளிக்கிவிடும்' - சின்னதைப் பெரியதாகவும், பெரியதைச் சிறியதாகவும், இருப்பதை இல்லாததாகவம், இல்லாததை இருப்பதாகவும் ஆக்கி, 'இப்படியாக்கும்! அப்படியாக்கும்!' 'இப்படி ஆயிடும்! அப்படி ஆயிடும்!' என்று கூப்பாடு போடுவது இந்த மூளைதான். மூளையை ஒருபோதும் நாம் நம்பிவிடக்கூடாது. மூளை விரைவாக நம்மை ஏமாற்றிவிடும். கொஞ்சம்தான் இஸ்ரயேல் மக்களுக்குப் பசிக்கிறது. ஆனால், அதற்குள், 'நாங்க செத்துப்போயிடுவோம். எல்லாரும் இங்கேயே கல்லறை ஆகிடுவோம். இது பாலைவனம். இங்கே ஒண்ணும் கிடைக்காது' என கூப்பாடு போடுகிறது இவர்கள் மூளை.

உள்ளம்: 'ஆண்டவரின் கையால்'

- பசியால் உடலும், மூளையும் ஆளுக்கொருபக்கம் இழுத்தாலும், இவர்களின் உயர்ந்த நிலையான 'உள்ளம்' கொஞ்சம் வேலை செய்கிறது. பசி மற்றும் புலம்பல் நேரத்திலும்கூட இவர்கள் 'ஆண்டவரின் கையை' நினைக்கின்றனர்.

இன்றைய நற்செய்தி வாசகத்திலும் இதற்கு ஒப்புமையான ஒரு நிகழ்வையே வாசிக்கின்றோம். கடந்த வார நற்செய்தி வாசகத்தில் இயேசு ஐந்து அப்பங்களை ஐயாயிரம் பேருக்கு வழங்கி நிறைவளித்த நிகழ்வை வாசித்தோம். அதன் தொடர்ச்சிதான் இன்றைய நற்செய்தி வாசகம். இயேசு உணவு கொடுத்து எல்லாரையும் அனுப்பிவிடுகின்றார். அடுத்த நாள் இயேசுவையும் அவருடைய சீடர்களையும் தேடி ஒரு கூட்டம் வருகிறது. 'நேற்று நாம இங்கதான சாப்பிட்டோம். அங்கேயே போவோம்' என்று முதலில் அந்தக் கூட்டம் திபேரியக் கடற்கரைக்குச் செல்கிறது. அங்கே அப்பமும் இல்லை. இயேசுவும் இல்லை. சீ;டர்களும் இல்லை. 'எங்க போயிருப்பாங்க?' என்று கேட்டுக்கொண்டே தேடிய கூட்டம் இயேசுவையும், சீடர்களையும் கப்பர்நகூமில் கண்டுபிடிக்கிறது. தன்னைத் தேடி வந்திருப்பவர்களைப் பார்த்து மகிழ்ச்சி அடையாத இயேசு அவர்களைக் கடிந்துகொள்கின்றார். தன்னை இவ்வளவுபேர் தேடுகிறார்களே என்று மகிழாமல், இவர்களை அப்படியே ஓட்டு வங்கியாக மாற்றாமல், குறுக்குவழியால் அரசன் ஆகாமல் அவர்களைக் கடிந்துகொள்கின்றார் இயேசு. இயேசுவுக்கும், மக்களுக்கும் இடையே உள்ள உரையாடலில் அவர்களின் 'உடல்,' 'மூளை,' 'உள்ளம்' போராட்டம் மிக அழகாக பதிவுசெய்யப்படுகிறது.

உடல்: 'ரபி, எப்போது இங்கு வந்தீர்?' ... 'நீங்கள் அரும் அடையாளங்களைக் கண்டதால் அல்ல. மாறாக, அப்பங்களை வயிறார உண்டதால்தான் என்னைத் தேடுகிறீர்கள்'

- நேற்றைக்கு உண்டு இன்றைக்குச் செரித்துக் கழிவாகிவிடும் உணவிற்காக அவர்கள் உழைப்பதாகவும், அந்த உணவிற்காக அவரைத் தேடுவதாகவும் கடிந்துகொள்கிறார் இயேசு.

மூளை: 'எங்கள் செயல்கள் கடவுளுக்கு ஏற்றவையாக இருப்பதற்கு நாங்கள் என்ன செய்ய வேண்டும்?'

- இவர்களின் மூளை 'நாங்கள் என்ன செய்ய வேண்டும்?' எனக் கேட்கிறது. ஆனால், பல நேரங்களில் மூளை தான் கேட்கும் அனைத்தையும் அப்படியே செய்வதில்லை. எடுத்துக்காட்டாக, மதியம் 30 நிமிடம் இருக்கிறது. நூலகத்திற்குப் போகலாம் என நினைக்கிற மூளை, 'படிச்சு என்ன ஆகப்போகுது! தூங்கினால் நல்லது' என தூங்கச் சென்றுவிடுகிறது. ஆக, மூளை தான் நினைக்கிற அனைத்தையும் செய்துவிடுவதில்லை.

உள்ளம்: 'ஐயா, இவ்வுணவை எங்களுக்கு எப்போதும் தாரும்!'

- உடலும், மூளையும் கேள்விகள் கேட்க, 'எங்களுக்குத் தாரும்' என்ற விண்ணப்பதோடு சரணடைகிறது இவர்களின் உள்ளம். 'வாழ்வுதரும் உணவாகிய இயேசுவே எங்களோடு இரும்!' என விண்ணப்பித்துப் பணிகின்றனர் மக்கள்.

மேற்காணும் முதல் மற்றும் நற்செய்தி வாசகங்களில் 'உடல்,' 'மூளை,' 'உள்ளம்' என்ற மூன்று நிலைகளுக்கும் உள்ள போராட்டத்தை நாம் பார்க்கிறோம். 'உடல்' ஒரு பக்கம், 'மூளை' ஒரு பக்கம், 'உள்ளம்' ஒரு பக்கம் என்ற மூன்று குதிரைகள் ஒவ்வொரு மனிதரையும் இங்குமங்கும் அலைக்கழிக்கின்றன. இந்தப் போராட்டத்தில்தான் தீமைகள் உருவாகின்றன. விவிலியத்தில் எடுத்துக்கொள்வோமே. சிறந்த உதாரணம் நீதித்தலைவர் சிம்சோன் (நீத 14-16). தன் வாழ்க்கை முழுவதும் தன் 'உடல்' சார்ந்த நாட்டங்களோடும், 'மூளையின்' சிந்தனைகளோடும், தன் 'உள்ளத்தில்' உள்ளிருக்கும் இறைப்பிரசன்னத்தோடும் போராடுகிறார் சிம்சோன். 'உடல்' சொல்வதைக் கேட்கவா? 'மூளை' சொல்வதைக் கேட்கவா? 'உள்ளம்' சொல்வதைக் கேட்கவா? என்று அங்கலாய்க்கிறார்.

இந்தப் போராட்டத்திற்கான தீர்வை இன்றைய இரண்டாம் வாசகம் நமக்குத் தருகிறது:

'உங்கள் மனப்பாங்கு புதுப்பிக்கப்படவேண்டும்'

'புதுப்பிக்கப்படுதல்' என்றால் என்ன?

அமேசான் போன்ற இணையதளங்களில் 'ரிஃபர்பிஷ்ட்' பொருள்கள் விற்கப்படுகின்றன. அதாவது, பயன்பாட்டு நிலையை இழந்த ஒரு ஐஃபோனைச் சரிசெய்து, மேலே புதிய கவர் போட்டு, இப்படி, அப்படி பேக்கிங் செய்து விற்கப்படும் ஐபோன், 'ரிஃபர்பிஷ்ட்' ஃபோன் என அழைக்கப்படுகிறது. இது புதுப்பிக்கப்பட்ட ஃபோன்தான். ஆனால், கவர் மட்டும்தான் புதுசு.மற்றதெல்லாம் பழசு.

பவுல் சொல்லும் புதுப்பிக்கப்படுதல் இவ்வகை அல்ல.

மாறாக, இளையநிலைக்குத் திரும்புதல். கணிணியில் 'ரிஸ்டோர்' என்ற ஆப்ஷன் உண்டு. இன்று காலை என் கணிணியில் வைரஸ் வந்துவிட்டது என வைத்துக்கொள்வோம். நான் சொல்லும் வேலைக்குப் பதிலாக வேறு வேலையைச் செய்கிறது கணிணி. நான் அதைச் சரி செய்ய நினைக்கிறேன். நான் செய்ய வேண்டியதெல்லாம் என்ன? கடந்த மாதத்திற்கு, அல்லது கடந்த வாரத்திற்கு, அல்லது கணிணியை நான் வாங்கியபோது இருந்த வைரஸ் அற்ற நிலைக்கு என் கணிணியை 'ரிஸ்டோர்' செய்துகொள்ளலாம். அப்படிச் செய்யும்போது வைரஸ்கள் நீங்கி, மீண்டும் புதிய நிலைக்கு - ஆனால் இளைய நிலைக்கு - என் கணிணி ட்யூன் ஆகிவிடும்.

பவுல் முன்வைக்கும் புதுப்பிக்கப்படுதல் இத்தகைய நிலையே. 36 வயதிற்கு வளர்ந்துவிட்ட நான் என் வாழ்வை சரி செய்ய நினைக்க, நான் நல்ல நிலையில் இருந்த 20 அல்லது 15 வயதிற்கு என்னையே ரிஸ்டோர் செய்துகொள்வதுதான் இளையநிலை. அல்லது புதுப்பித்தல் நிலை.

நாம் எந்த நிலைக்கு ரிஸ்டோர் ஆக விரும்புகிறார் பவுல்?

'கடவுளின் சாயலாக படைக்கப்பட்ட புதிய மனிதருக்குரிய இயல்பு' - இந்த இயல்பிற்கு நாம் ரிஸ்டோர் ஆக வேண்டும் என அழைக்கின்றார் பவுல். இந்த இயல்பு பற்றி நாம் தொநூ 1:27ல் வாசிக்கின்றோம்: 'கடவுள் தம் உருவில் மானிடரைப் படைத்தார். கடவுளின் சாயலிலேயே அவர்களைப் படைத்தார். ஆணும் பெண்ணுமாக அவர்களைப் படைத்தார்.' 'ஆணும்,' 'பெண்ணும்' வேறு வேறு என்றாலும் இருவருக்குள்ளும் இங்கே ஒற்றுமை, ஒருமைப்பாடு, சமத்துவம் வரக்காரணம் என்ன? அவர்களில் இருந்த கடவுளின் சாயல். ஆக, கடவுளின் சாயலுக்கு ஒருவர் ரிஸ்டோர் செய்யப்பட்டால் அவரிடம் போராட்டம், பிளவு, வேற்றுமை என எதுவும் இருக்காது. அமைதியான, சாந்தமான ஓர் ஒழுங்கு இருக்கும்.

'பழைய மனிதருக்குரிய இயல்பை' களைந்துவிட்டு, 'புதிய மனிதருக்குரிய இயல்பை' - முதல் மனிதரின் இயல்பை அணிந்துகொள்ள அழைக்கின்றார் பவுல். ஆக, மனப்பாங்கு அல்லது உள்ளம் புதுப்பிக்கப்படுதல் என்பது வெறும் வெளிப்படையான சட்டை மாற்றம் அல்ல. மாறாக, அது வலிநிறைந்த ஒரு பயணம். கணிணி புதுப்பிக்கப்படுவதும் ஒரு வலி நிறைந்த பயணமே. அது ஒவ்வொரு அடுக்காக தன்னையே களைந்துகொண்டு வரவேண்டும்.

என்னிடம் மேலடுக்கு உடல், அடுத்த அடுக்கு மூளை, அடுத்த அடுக்கு உள்ளம் என இருக்கிறது. என் மாற்றம் வெறும் மேல் அல்லது அடுத்த அடுக்கில் நின்றுவிடாமல், உள்ளம் என்னும் மையம் நோக்கிச் செல்ல வேண்டும். அந்த மையம்தான் இறைமையம். அந்த மையம்தான் பிறர்மையம். அந்த மையத்திலிருந்து நான் இயங்கும்போது என் இயக்கத்தில் மகிழ்ச்சியும், நிறைவும் இருக்கும். அந்த மையத்திற்கு நான் பயணிப்பதே என் மனப்பாங்கை புதுப்பித்துக்கொள்வதாகும்.

என் மனப்பாங்கு புதுப்பிக்கப்பட்டுள்ளதா அல்லது நான் உள்ளம் என்னும் மையத்திலிருந்து செயலாற்றுகிறேனா என்பதற்கு இரண்டு அளவுகோல்களைத் தருகின்றார் பவுல்:

அ. நீதி

ஆ. தூய்மை

'நீதி' என்றால் 'ஒவ்வொன்றிற்கும் அதனதன் இடம், நேரம் கொடுப்பது.' 'தூய்மை' என்றால் 'என் இயல்பில் இருப்பது.' இந்த இரண்டும் உண்மை என்ற ஆணியில் மையம்கொண்டிருத்தல் வேண்டும். 'உண்மை' என்பது 'சித்.' இந்தச் 'சித்' என்பதுதான் நம் 'இயல்பு.' 'இது இல்லை,' 'அது இல்லை' என்ற நான் என்னையே ஒவ்வொரு அடுக்காக நீக்கிக்கொண்டே கடந்துபோகும்போது இறுதியில் வந்துநிற்கும் நிலைதான் இது.

ஆக, இன்று என் மனப்பாங்கு புதுப்பிக்கப்பட நான் முயற்சி செய்ய வேண்டும்.

இறுதியாக, நாம் அடிக்கடி டிவியில் பார்க்கும் ஒரு விளம்பரத்தோடு நிறைவுசெய்கிறேன். பாண்ட்'ஸ் நிறுவனத்தின் 'ஒயிட் ப்யூட்டி' க்ரீமுக்கான விளம்பரம் அது. ஃபேஷன் ஷோ ஒன்றில் நிறைய இளவல்கள் கேட்வாக் செய்வார்கள். நான்காவதாக வரும் இளவல் ஒன்றின் ஹைஹீல்ஸ் ஸ்லிப் ஆகி, அவர் அப்படியே சரிந்துவிடுவார். எல்லாரும் வேகமாக இருக்கையை விட்டு எழுவார்கள். முன்னால் நடந்தவர்கள் பதற்றமாக திரும்புவார்கள். இவரைப் பயிற்றுவித்தவர் தான் தோற்றதாகப் பதறுவார். ஆனால், அந்த இளவல் மெதுவாக கையை ஊன்றி எழுந்து, இலேசாகப் புன்முறுவல் செய்துவிட்டு, தொடர்ந்து நடப்பார். அரங்கம் கரவொலியால் நிறையும்: 'ஆட்டிட்யூட் மேட்டர்ஸ்' ('மனப்பாங்கே முக்கியம்') என நிறைவடையும் விளம்பரம்.

அவரின் மனப்பாங்கின் வெளிப்பாடே அந்த எளிய புன்னகை. தான் செய்யும் செயலையும், தனக்கு வெளியில் தெரியும் தன் உடல் அழகையும் தாண்டி அவரிடம் மேலோங்கி இருந்தது அவரின் மனப்பாங்கு.

ஆக, மனப்பாங்கு என்பது கருவூலம். இந்தக் கருவூலத்திலிருந்து பழையது, புதியது என மதிப்புமிக்க அனைத்தும் புறப்படுகின்றன. 90 சதவிகிதம் மறைந்திருக்கும் இந்த உள்ளத்தை நான் உருமாற்றும்போது என் 10 சதவிகித மேற்புற செயல்களும், திறன்களும், வெளிப்பாடுகளும் மாற்றம்பெறும்.

'ஆண்டவரின் கையே' அனைத்திலும் செயலாற்றுகிறது என்றும், 'ஆண்டவரிடமே என் தேடுதலின் நிறைவு உண்டு' என்றும், 'அவரின் சாயலே என் சாயல்' என்றும் உணர்வதே, வாழ்வதே புதுப்பிக்கப்பட்ட மனப்பாங்கு.


Thursday 26 July 2018

பொதுக்காலம் ஆண்டின் 17-ஆம் ஞாயிறு

பொதுக்காலம் ஆண்டின் 17-ஆம் ஞாயிறு

இன்றைய வாசகங்கள் 
2 அரசர். 4:42-44
எபே 4:1-6
யோவா. 6:1-15



தொடக்கம் -அருள்பணி -முனைவர் ம.அருள்

ஒரு வங்கியின் மேலாளர் புகை வண்டிக்காகக் காத்திருந்தார். புகை வண்டி வரத் தாமதமாகவே செய்தித்தாளைப் படித்துக் கொண்டே ஒரு பிஸ்கட் பாக்கெட்டைப் பிரித்துச் சாப்பிட ஆரம்பித்தார். தன் இருக்கைக்கு அருகில் இருந்த சிறுவனும் அந்த பிஸ்கட் பாக்கெட்டில் இருந்து பிஸ்கட்டை எடுத்துச் சாப்பிட ஆரம்பித்தான். இதைப் பார்த்த இந்த வங்கி மேலாளர், இப்படியா குழந்தையை வளர்ப்பார்கள் என்று தனக்குள்ளே சொல்லிக் கொண்டு எரிச்சலோடு கூடிய முகத்தோடு சிறுவனைப் பார்த்து முகம் சுளித்தார். மீண்டும் சிறுவன் பிஸ்கட்டை எடுத்துச் சாப்பிட்டான். இறுதியில் ஒரு பிஸ்கட் மட்டும் இருந்தது. இதையாவது விட்டு வைப்பானா இந்தப் பயல் என்று பார்த்தார் மேலாளர் . ஆனால் அந்த பிஸ்கட்டை இரண்டாக உடைத்துப் பாதியை மேலாளருக்கு கொடுத்தான். நாகரிகம் இல்லாத சிறுவன் என்று முகம் சுளித்தார். ஆனால் புகை வண்டி வந்தவுடன் அவர் ஏறிக்கொண்டார். பையனின் பெற்றோரோ எதிர்நோக்கிச் செல்லும் வண்டிக்காகக் காத்திருந்தனர். வண்டி ஏறியவுடன் பயணச்சீட்டுப் பரிசோதகர் வந்து, பயணச் சீட்டைக் கேட்டவுடன் பையைத் திறந்தார் வங்கி மேலாளர். அப்போதுதான் பார்த்தார், தான் வாங்கிய பிஸ்கட் பாக்கெட் பையில் இருப்பதையும், பையனுடைய பிஸ்கட்டைத்தான் தான் சாப்பிட்டிருக்கிறேன் என்பதையும் அறிந்து வெட்கப்பட்டார். ஒரு சிறுவன் தன் பிஸ்கட் பாக்கெட்டைத் தன்னைச் சாப்பிட அனுமதித்ததும், இறுதியாக இருந்த ஒரு பிஸ்கட்டையும் பாதி பிட்டுக் கொடுத்ததையும் நினைத்து வியந்து போனார். எனக்கோ எவ்வளவோ வாய்ப்பு இருந்தும், மற்றவரோடு பகிராமல் சுயநலமாக உள்ளேனே என்று தன்னைப் பற்றி ஆய்வு செய்ய ஆரம்பித்தார்.

இன்றைய நற்செய்தியைப் பாருங்கள். ஒரு சிறுவனிடம் இருந்த 5 வாற்கோதுமை அப்பமும், இரண்டு மீன்களும் 5000 பேருக்கு மேலாகப் பகிர்ந்தளிக்கப்பட்டு மீதியாக 12 கூடைகளில் எடுக்கப்பட்டதாக வாசிக்கிறோம்.

பழைய ஏற்பாட்டில் பசியாக இருந்த இஸ்ரயேல் மக்களுக்கு மன்னாவைக் கொடுத்து அவர்களின் பசியைப் போக்கினார் இறைவன். ஆனால் புதிய ஏற்பாட்டில் தன்னையே உணவாக கொடுக்கும் முன் 5 அப்பத்தை பலுக வைத்துப் புதுமை செய்து, பகிர்தலே சிறந்தது என்பதைச் செய்து காட்டுகிறார் இயேசு.
கொடுப்பவர்கள் இறைவனின் இதயத்தில் நிரந்தர இதயத்தைப் பிடிப்பவர் ஆவார்கள். புனித லூக்கா (லூக். 21: மாற். 12:41-44) நற்செய்தியிலே வாசிப்பது போல விதவைப் பெண்ணின் காணிக்கையை இயேசு வியந்து பாராட்டிய நிகழ்வே இதற்குச் சான்றாகும். பகிரா மனநிலைக்கு காரணம் என்ன?

சிலர் பகிராமல் இருப்பதற்குக் காரணம், மனித இதயத்தில் ஏற்படும் ஒரு விதமான விரக்தி மனநிலை. அதாவது உலகமே வறுமையால் வாடுகிறது. நான் மட்டும் பகிர்ந்தால் என்ன மாற்றம் நடைபெறப் போகிறது. எனவே பகிர்தலும், பகிராமல் இருப்பதும் ஒன்றுதான் என்ற எண்ணம் பலரை ஆட்டிப்படைக்கிறது. இப்படிப்பட்ட மனநிலையில்தான் அந்திரேயா (யோவா. 6:9) இயேசுவை நோக்கி இத்தகைய கூட்டத்திற்கு 5 அப்பமும், 2 மீன்களும் எந்த மூலைக்குப் பயன்படும் என்று கேட்கிறார்.
அன்பான சகோதரனே! சகோதரியே! உலகத்தின் பசியை நீக்க முடியாவிட்டாலும், ஒரு மனிதனுக்கு, ஒரு குடும்பத்திற்காவது நம்மால் இயன்ற உதவிகளைச் செய்வது மேலானது. இன்றைய உலகில் திருச்சபை என்ற சங்க ஏடு (இ. உல. தி .69) கூறுவது போல, பசியால் மடியும் மனிதனுக்கு உணவளிக்காவிட்டால் நீ அவனைக் கொன்றவனாவாய். எப்போதெல்லாம் நீ தேவைக்கு அதிகமாகச் சேர்த்து வைத்து பிறருக்குக் கொடுக்காமல் பதுக்கி வைக்கிறாயோ, அப்போதெல்லாம் நீ அவர்களை வஞ்சிக்கிறாய். தேவைக்கு உரியதை சேகரிப்பது சேமிப்பு. ஆனால் தேவைக்கு அதிகமாகச் சேகரிப்பது, பிறர் தேவைக்கு உரியதைச் சேமிப்பது என்பது திருட்டு என்கிறார் புனித பேசில்.

எனவேதான் எசாயா நூலில் கூறப்படுவதுபோல பசித்தோருக்கு உங்கள் உணவைப் பகிர்ந்து கொடுப்பதும், தங்க இடமில்லாத வறியோரை உங்கள் இல்லம் அழைத்து வருவதும், உடையற்றவர்களுக்கு உடுத்தக் கொடுப்பதும் அன்றோ நாம் விரும்பும் நோன்பு என்கிறார் ஆண்டவர். கொடுப்பதால், பகிர்வதால் மகிழ்ச்சி பிறக்கிறது. மக்களுக்கு கொடு, உண்ட பின் மீதி இருக்கும் என்பதற்கு இன்றைய விவிலிய நிகழ்ச்சி சான்று பகர்கின்றது.

இல்லாதவர்களோடு இருப்பவர் பகிர்ந்துகொண்டால், இருப்பவர், இல்லாதவர் என்ற நிலை மாறும். இதைத்தான் ஆதிக் கிறிஸ்தவர்கள் செய்து, இல்லாதவர் இருப்பவர் என்ற நிலையை மாற்றினார்கள் (தி.ப. 2:44).
சிந்தனைக்காக

பகிரும் மனநிலை இல்லாமல் போவது பற்றாக்குறையல்ல. ஏனெனில் இறைவன் தேவைக்கு ஏற்ப அனைத்தையும் படைத்துத் தந்துள்ளார். ஆனால் பிறரை நம் உடன்பிறப்பாக, சகோதரனாக, சகோதரியாக காண முடியாத மனநிலைதான்.

இரண்டாவது முன் கூறியதுபோல, வறுமை மிகுந்த இந்த நாட்டிலே எனது சிறிய பகிர்வால் என்ன செய்ய முடியும் என்று விரக்தியில் சுயதிருப்தி செய்து கொள்ளும் நிலை. ஆனால் இறைவன் கொடுத்த கால்கள் கரங்களை இயேசுவுக்குக் கொடுத்தாலே இயேசு மக்களுக்கு உதவி செய்யும் அளவுக்கு உயர்த்துவார்.

நமது உழைப்பையும், பகிரும் மனநிலையையும் கொடுத்தாலே நம் வழியாய் நற்செய்தியைப் பரப்பி ஏராளமான உள்ளங்களைச் சொந்தமாக்கிக் கொள்வார்.
எனவே பகிர்ந்து செயல்பட ஆரம்பிக்கும்போது இறைவனும் நம்மோடு இணைந்து செயல்படத் தொடங்குகிறார் என்பதை உணர்வோம்.




வாழ்வாங்கு வாழுங்கள்  -குடந்தை ஆயர் அந்தோனிசாமி

நடுத்தர வயதுள்ள ஒரு பெண்! அந்தப் பெண்ணைச் சுற்றி அழுகுரல்கள், அணைந்து கிடந்த விளக்குகள்!

அந்தப் பெண் தன்னிடமிருந்த பணத்தையெல்லாம் பயன்படுத்தி ஒரு பழைய கட்டடத்தை வாடகைக்கு எடுத்தார். அது ஏழைக் குழந்தைகளின் பள்ளிக்கூடமாகியது. அந்தக் கட்டடத்தில் அமர எந்த இருக்கையும் இல்லை, எந்த நாற்காலியும் இல்லை, எந்த மேசையும் இல்லை, எந்தக் கரும்பலகையும் இல்லை!

அழுக்குப் படிந்த தரை கரும்பலகையானது!

அந்தப் பெண் ஏழை எளியவர்களை அடிமைப்படுத்தியிருந்த வறுமையோடு போர் தொடுத்தார். என்னால் எது முடியுமோ அதை இந்த மக்களுக்குக் கொடுப்பேன் எனச்சொல்லி, நாளும் பொழுதும் மக்களின் நலனுக்காக உழைத்தார். அந்தப் பெண் வேறு யாருமல்ல! அன்னை தெரசாதான் அவர்!

இன்று எண்பதிற்கும் மேற்பட்ட பள்ளிக்கூடங்களையும் முந்நூற்றுக்கும் மேற்பட்ட நடமாடும் மருந்தகங்களையும் எழுபதுக்கும் மேற்பட்ட இறப்பவர்களைக் கண்காணிக்கும் இல்லங்களையும் முப்பதுக்கும் மேற்பட்ட குழந்தைகளைப் பராமரிக்கும் காப்பகங்களையும் நாற்பதாயிரத்துக்கும் மேற்பட்ட தன்னார்வத் தொண்டர்களையும் கொண்டதாக அன்னை தெரசாவால் நிறுவப்பட்ட துறவற சபை திகழ்கின்றது.

இன்றைய நற்செய்தியிலே வரும் சிறுவனைப் போல, எலிசாவிற்குக் கீழ்ப்படிந்த பணியாளனைப் போல தன்னிடம் இருந்ததை அன்னை தெரசா இயேசுவிடம் கொடுத்தார். இயேசுவோ அன்னை தெரசா கொடுத்ததை பலுகிப்பெருகச் செய்தார்.

1982-இல் திருத்தந்தை புனித இரண்டாம் ஜான்பால் ஸ்காட்லாந்து நாட்டுக்குச் சென்றபோது எடின்பர்க் என்ற நகரிலே இளைஞர்களைப் பார்த்து இவ்வாறு சொன்னார்: நற்செய்தியில் வந்த சிறுவன். அவனிடமிருந்த அனைத்தையும் இயேசுவிடம் கொடுக்க, இயேசு வியத்தகு முறையில் ஐயாயிரம் பேருக்கு உணவளித்தார்:

எல்லாரும் உண்ட பிறகு மீதியிருந்தது. நீங்கள் உங்கள் வாழ்க்கையை இயேசுவிடம் ஒப்படைத்துவிடுங்கள். அவர் உங்களை ஏற்றுக்கொள்வார்; ஆசியளிப்பார். நீங்கள் எதிர்பார்ப்பதைவிட அதிகமாக அவர் உங்கள் வாழ்க்கையைப் பயன்படுத்திக்கொள்வார் என்றார்.

இதோ நமது மனவானிலே வலம் வரும் சில ஆசை மேகங்கள்! 

வயிறார உண்பதற்கு நல்ல உணவு வேண்டும்! 
தெருவோர குழாய்களுக்குச் சுத்தமான தண்ணீர் வேண்டும்!
 எல்லாரும் குடியிருக்க விசாலமான வீடுகள் வேண்டும்! கட்டணமின்றி கற்கின்ற உயர்கல்வி வேண்டும்! 
எதிர்பார்க்காது பழகுகின்ற உயர்ந்த நண்பர்கள் வேண்டும்!
ஆத்திரப்படாத கணவர் வேண்டும்! 
அன்பு செய்யும் மனைவி வேண்டும்! 
நீ சொன்ன ஜோக்கை நினைச்சி சிரிச்சி சிரிச்சி பாதி உயிரு போயிட்டுது என்றார் மாமியார். மருமகளோ, அப்போ இன்னொரு ஜோக் சொல்லவா? என்றாள். இவ்வாறு கேட்காத மருமகள் வேண்டும்! 
என் மருமகள், என் மறு மகள் என்று சொல்லும் மாமியார் வேண்டும்!

இதோ இயேசு பேசுகின்றார் : என்னால் எல்லாம் முடியும் என நம்புங்கள். உங்களுக்குள் வாழும் இறை ஆவியாரை (இரண்டாம் வாசகம்) நோக்கிச் செபியுங்கள் (லூக் 11:9-13). அவர் தரும் நம்பிக்கை என்னும் வரத்தைப் பெற்று (1 கொரி 12:9) வாழ்வாங்கு வாழுங்கள்.

மேலும் அறிவோம்:
ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை 

வைத்திழக்கும் வன்க ணவர் (குறள் 228).

பொருள் : வறியவர்க்கு வேண்டியவற்றைக் கொடுத்து, அவர் மகிழ்வதைக் கண்டு அருளுடையவர் அடையும் இன்பம் பெரிதாகும். அத்தகைய இன்பத்தைப் பற்றித் தெரியாதவரே தாம் சேர்த்த பொருளை ஏழை எளியோருக்கு வழங்காது பிறர் கொண்டு போக இழக்கும் இரக்கம் அற்றவர் ஆவர்!



மறையுரைமொட்டுக்கள் -அருள்பணி  Y .இருதயராஜ்


சில ஆண்டுகளுக்கு முன்பு நான் ஒரு வீட்டிற்குச் சென்றபோது, அங்கிருந்த ஒரு சிறுவனிடம் இரண்டு 'சாக்லட்' கொடுத்து. அதில் ஒன்றை எனக்குத் திருப்பிக் கொடுக்கும்படி கேட்டேன். அவன் கொடுக்க மறுத்து விட்டான். அப்போது அவனுடைய அக்கா, "என் தம்பிக்கு மற்றவர்களிடமிருந்து வாங்கத்தான் தெரியும்; கொடுக்கத் தெரியாது" என்றாள்,
இன்றைய நற்செய்தியில் வருகின்ற சிறுவன் சற்று வித்தியாசமானவன். தன்னிடமிருந்த ஐந்து ஆப்பங்களை இயேசுவிடம் கொடுக்க முன் வருகிறான். அவனுடைய ஐந்து அப்பங்கள்தான் 5000 அப்பங்களாகப் பலுகுகின்றன அந்த ஐந்து அப்பங்கள் இல்லாமலேயே இவோ புதுமை செய்திருக்கலாம். இருப்பினும் நாம் நமக்குள்ளதைப் பிறருடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற அவசியத்தை உணர்த்தவே இயேசு அச்சிறுவனுடைய ஐந்து அப்பங்களைப் பெற்றுக்கொண்டு அவற்றைப் பழகச் செய்கிறார்.

நாம் நமக்குள்ளவற்றைப் பிறருடன் பகிரும்போது அவை குறையாமல் மிகுதியாகும், "கொடுங்கள் உங்களுக்குக் கொடுக்கப்படும் (லூக் 6:38). இன்றைய முதல் வாசகத்தில், இறைவாக்கினர் எலிசேயு 24) அப்பங்களைக் கொண்டு 100 பேருக்கு உணவளித்த பின்னும் நிறைய அப்பங்கள் மீதியிருந்தன, ஏழைக் கைம்பெண் இறைவாக்கினர் எலியாவுக்குப் பஞ்ச காலத்தில் அப்பம் சுட்டுக் கொடுக்கிறாள், பஞ்சம் முடியும்வரை பானையில் மாவும், கலயத்தில் எண்ணெயும் எடுக்க எடுக்க வளர்ந்து கொண்டே இருந்தன {1 அரச 17:10-16), மணிமேகலையின் அமுத சுரபியில் இருந்த உணவும் எடுக்க எடுக்கக் குறையவில்லை .

உலகில் பலர் பட்டினியால் சாவதைக் காணும்போது நமக்குக் கடவுள் மேல் கோபம் வருகிறது. இவ்வுலகில் ஒரு சிலர் பிச்சை எடுத்துத்தான் வாழ வேண்டுமென்று கடவுள் அவர்களைப் படைத்திருந்தால், அக்கடவுளே பிச்சை எடுத்து அழியட்டும் என்று கடவுளையே சபிக்கிறார் வள்ளுவர்,

"இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின்
பரந்துகெடுக உலகு இயற்றியான்"   (குறள் (362)

ஆனால் எல்லா உயிர்களும் உண்ணவேண்டும் என்பதுதான் கடவுளின் விருப்பமேயன்றி, எவரும் வெறும் வயிற்றுடன் படுக்கச் செல்ல வேண்டும் என்பதன்று. "எல்லா உயிரினங்களின் கண்களும் உம்மையே நோக்குகின்றன; தக்க வேளையில் நீரே அவற்றிற்கு உணவளிக்கின்றீர்” (பதிலுரைப்பாடல், திபா 145:15). எனவே, குறை கடவுளிடம் இல்லை ; மனிதரிடத்தில்தான் உள்ளது. பகிர் ந்து பொழவேண்டிய மனிதர் பதுக்கி வாழ்கின்றனர்.

இவ்வுலகச் செல்வங்கள் எல்லாம் எல்லாருக்கும் பொதுவானவை. வறுமையில் வாடுவோருக்கு வளமையில் இருப்பவர் அவசியமானவற்றைக் கொடுக்கக் கடமைப் பட்டுள்ளனர், அவ்வாறு அவர்கள் கொடுக்கவில்லை என்றால், வறுமையுற்றோர் தங்களுக்குத் தேவையானவற்றை மற்றவர்களிடமிருந்து எடுத்துக்கொள்ள உரிமை பெற்றுள்ளனர்; அவ்வாறு எடுப்பது திருடாகாது என்று இரண்டாம் வத்திக்கான சங்கம் கூறியுள்ளது.

"ஒருவர் மிகப்பெரும் இடர் நிலையில் உழன்றால், அவர் மற்றவர்களின் செல்வத்திலிருந்து தமக்குத் தேவையானதை எடுக்கும் இடரிமை பெற்றுள்ளான். பசியால் மடியும் மனிதருக்கு உணவளி; ஏனென்றால் அவர்களுக்கு உணவளிக்காவிட்டால் நீ அவர்களைக் கொண்றவளாவாய்" (இன்றைய உலகில் திருச்சபை, 69)

பிறர்க்கு நாம் உணவனிக்காமல் அவர்கள் இறந்தால், நாம் அவர்களைக் கொலை செய்தவர்கள்! பயங்கரமான கூற்று!

"தனி ஒருவனுககு, உணவு இல்லையெனில், செகத்தினை அழிந்திடுவோம்" பாரதியாரின் ஆவேசம்!

கண்ணகி மதுரையைத் தீயால் எரித்துச் சாம்பல் ஆக்கினாள். இருந்து என்ன தெரிகிறது?" என்று தமிழ் ஆசிரியர் மாணவர்களிடம் கேட்டபோது, அவர்கள், "அக்காலத்தில் தீயணைக்கும் படை  இல்லை என்பது தெரிகிறது என்றார்களாம், அவர்களுக்குக் கண்ணகியின் கற்பின் திறன் பற்றிக கடுகளவும் தெரியவில்லை ,

அவ்வாறே, "இயேசு ஐந்து அப்பங்களைக் கொண்டு ஐந்தாயிரம் பேருக்கு உணவு கொடுத்ததிலிருந்து என்ன தெரிகிறது?" என்று நம்மை யாராவது கேட்கும்போது, "நமக்குள்ளதை நாம் பிறருடன் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பது தெரிகிறது என்று நாம் பதில் சொன்னால், நாம் இப்புதுமையின் இறையியல் உண்மையை உணரத் தவறிவிடுகிறோம்,

இயேசு செய்து, பல்வேறு புதுமைகளில், ஏழே ஏழு புதுமைகளை மட்டும் யோவான் பொறுக்கி எடுத்துத் தனது நற்செய்தியில் எழுதியுள்ளார். மேலும், அவர் இயேசுவின் புதுமைகளை வெறும் புதுமைகளாகக் காணாமல், 'அரும் அடையாளங்களாகக்' காண்கின்றார், அரும் அடையாளம் என்றால், புதுமையைக் கடந்து சென்று, அதனுள் பொதிந்துள்ள ஆழமான இறையியல் உண்மையை உணர்த்தும் சாதனமாகும். அப்படியானால், அப்பம் பலுகுகிற புதுமையில் பொதிந்துள்ள ஆழமான இறையியல் உண்மை என்ன ?

பழைய உடன்படிக்கையில் இஸ்ரயேல் மக்கள் பாலை நிலத்தில் மோசே தலைமையில் 'மன்னா' என்ற அதிசய உணவை உண்டனர். புதிய உடன்படிக்கையில், இயேசு கிறிஸ்து பாலைநிலத்தில் அப்பங்களைப் பலுகச் செய்து மக்களுக்கு உணவளித்ததின் மூலம். அவரே புதிய மோசே, உலகிற்கு வரவிருந்த ஒப்புயர்வற்ற இறைவாக்கினர் என்ற ஆழமான இறையியல் உண்மையை வெளிப்படுத்துகிறார் யோவான்.

மோசே தமது இறுதி உரையில் இஸ்ரயேல் மக்களிடம், 'உன் கடவுளாகிய ஆண்டவர் உன் சகோதரர் நடுவினின்று என்னைப்போல் ஓர் இறைவாக்கினரை ஏற்படுத்துவார். நீ அவருக்குச் செவிகொடு (இச 18:15) என்று கூறினார். மோசேயால் முன்னறிவிக்கப்பட்ட அந்த இறைவாக்கினர்தான் இயேசு கிறிஸ்து இயேசுவின் புதுமையைக் கண்ட மக்களும், "உலகிற்கு வரவிருந்த இறைவாக்கினர் உண்மையில் இவரே" (யோவா 6:14) என்று கூறினார்கள்.

இயேசு கிறிஸ்து பல்வேறு இறைவாக்கினரில் ஒருவரல்ல. மாறாக, உலகிற்கு வரவிருந்த ஒப்புயர்வற்ற இறைவாக்கினர் : இறைவனால் அருள்பொழிவு பெற்ற மெசியா; உலக மீட்பர். இயேசு கிறிஸ்துவே இறைமகனும் மெசியாவும் ஆவார் என்பதை நம்பி, அவர் பெயரால் வாழ்வு பெறவேண்டும் என்பதே யோவான் நற்செய்தியின் ஒரே குறிக்கோளாகும் (யோவா 20:30).

நாமும், இன்றைய நற்செய்தி வாயிலாக, நமக்குள்ளவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற நமது சமுதாயக் கடமையை உணர்வதோடு நிறுத்திக்கொள்ளாமல், இயேசுவே கடவுள் உலகிற்கு அனுப்பிய இறுதி இறைவாக்கினர், கடவுளின் மகன் (எபி 1:1). அவரை நம்பி அவர் பெயரால் முடிவில்லா வாழ்வு பெறவேண்டும் என்ற ஆழமான இறையியல் உண்மையையும் உணர்வோமாக.


எல்லார்க்குள்ளும், எல்லார் வழியாகவும் இறைவன்
அருள்பணி ஏசு கருணாநிதி


உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் நடந்து முடிந்து இப்போதுதான் சூடு ஆறியுள்ளது. போட்டிகள் நடந்து முடிந்த இரண்டு நாள்களில் தினமணி இணையதள வலைப்பூவில் கட்டுரை ஒன்று வந்தது. கட்டுரையின் தலைப்பு, 'வாய்ப்பு நம்மைத் தவறவிட்டால் அது துரதிர்ஷ்டம். வாய்ப்பை நாம் தவறவிட்டால் ... திமிர்.' கட்டுரை குரோஷிய அணியின் முன்னணி வீரர் நிக்கோலா காலிநிக் அவர்களைப் பற்றியது. இவர் குரோஷிய அணியின் மிகச் சிறந்த வீரர். குரோஷிய அணி தனது முதல் ஆட்டத்தில் நைஜீரிய அணியை சந்தித்தது. அந்த ஆட்டத்தில் நிக்கோலா காலிநிக் முதலில் களமிறக்கப்படவில்லை. ஆட்டம் முடிய ஐந்து நிமிடங்களே இருக்கும்போது, குரோஷிய பயிற்சியாளர் நிக்கோலா காலிநிக்கை மாற்று வீரராக களமிறங்கும்படி கேட்டுக்கொண்டார். முதலிலிலேயே தன்னை களமிறக்காமல்போனது தனக்கு நேர்ந்த அவமானமாக நினைத்தார் காலிநிக். அதனால் களமிறங்க மறுத்துவிட்டார். அது ஒழுங்கீனமான செயல். பிரச்சினை அத்தோடு முடியவில்லை. காலிநிக் செய்த இந்த தவறுக்காக அவர் பயிற்சியாளரிடம் 'மன்னிப்பு கேட்க வேண்டும்,' என வலியுறுத்தப்பட்டது. அதற்கும் காலிநிக் உடன்படவில்லை. தொடர்ந்து அவர்மேல ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. அவர் அணியிலிருந்து நீக்கப்பட்டார். அங்கிருந்து புறப்பட்ட காலிநிக் விடுமுறையை அனுபவிக்க சென்றுவிட்டார். குரோஷியாவைப் பொறுத்தவரையில் இந்த உலகக் கோப்பை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில் இந்த நாடு இறுதிப்போட்டிவரை முன்னேறியது. இரண்டாவது இடத்தைப் பிடித்து சாதனை பதித்தது. இதில் பங்கேற்ற வீரர்கள் அனைவரும் வரலாற்றில் தங்கள் பெயரைப் பதிவுசெய்துவிட்டனர். காலிநிக் அந்தப் பட்டியிலில் இல்லை. காலிநிக் இப்படி ஒரு முடிவை எடுக்க முக்கிய காரணமாக இருந்தது அவருடைய ஈகோ. அதனால் விளைந்த கோபம்.

நிற்க.

கால்பந்து விளையாட்டில் இரண்டாம் இடத்தைப் பிடித்;த குரோஷிய அணியின் பயிற்சியாளர் தங்கள் அணியின் வெற்றிக்குக் காரணம் என்று சொன்ன ஒற்றை வார்த்தை இதுதான்: 'சினர்ஜி.' அதாவது, விளையாடிய 11 பேரும் சேர்ந்து விளையாடியதால், அந்த 11 பேருக்கு பக்கபலமாக 5 மாற்று வீரர்களும், அவர்களுக்கு உறுதுணையாக உடன் பயிற்சியாளர்களும், அவர்களுக்கு உறுதுணையாக நாட்டின் தலைவர்களும் இருந்ததால் இந்த வெற்றி உறுதியானது என்கிறார். ஆக, விளையாடிய நபர்கள், மாற்று வீரர்கள், பயிற்சியாளர்கள், நாட்டுத்  தலைவர்கள் என தனித்தனியே பிரித்துப் பார்த்தால் யாருக்கும் ஆற்றல் இல்லை. ஆனால், இவர்கள் எல்லாரும் சேர்ந்து வரும்போது இவர்களின் ஆற்றல் பன்மடங்கு பெருகுகிறது. இதுதான் 'சினர்ஜி' ('ஒருங்கியக்கம்,' 'ஒழுங்கியக்கம்,' 'கூட்டாற்றல்') என்பதன் பொருள். இந்த 'சினர்ஜி' விளையாட்டின் வெற்றிக்கு மட்டுமல்ல. மாறாக, வாழ்வின் வெற்றிக்குமான ஒரு முக்கியமான ஃபார்முலா.

'சினர்ஜி' என்ற இந்த வார்த்தையை தூய பவுல் உரோமையருக்கு எழுதிய திருமடல் 8:28ல் நாம் வாசிக்கின்றோம்: 'மேலும், கடவுளிடம் அன்புகூர்பவர்களோடு, அதாவது அவரது திட்டத்திற்கேற்ப அழைக்கப்பட்டவர்களோடு, அவர்கள் நன்மைக்காகவே ஆவியார் அனைத்திலும் 'ஒருங்கியக்கம்' செய்கிறார் என்பது நமக்குத் தெரியும்.' அதாவது, ஒருவர் கடவுளிடம் அன்புகூர்ந்தால், அவர் கடவுளால் அழைக்கப்பட்டவராக இருந்தால் இந்த பிரபஞ்சமே அவர் நன்மைக்காக செயலாற்றுமாம். அதாவது, எல்லாமே அவருக்கு நன்மையாகவே மாறும். இப்படியாக எல்லாவற்றையும் அவருக்குச் சாதகமாக மாற்றுவது தூய ஆவியார் என்கிறார் பவுல்.

இன்றைய இறைவாக்கு வழிபாட்டின் மையக்கருத்தும், இன்றைய நம் மறையுரைப் பொருளும் இதுவே:

'இறைவனே எல்லார் மூலமாகவும், எல்லாருடைய நன்மைக்காகவும் ஒருங்கியக்கம் செய்கிறார்.'

இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். எபே 4:1-6) கிறிஸ்தவின் உடலில் உள்ள ஒற்றுமை என்ற மையக்கருத்தில் ஒற்றுமை பற்றி அறிவுறுத்தும் பவுல், 'எல்லாருக்கும் கடவுளும் தந்தையுமானவர் ஒருவரே' என்றும், 'அவர் எல்லாருக்கும் மேலானவர், எல்லார் மூலமாகவும் செயலாற்றுபவர், எல்லாருக்குள்ளும் இருப்பவர்' என்றும் சொல்கிறார்.

ஒரு சின்ன உருவகத்தை எடுத்துக்கொள்வோம். என் அலைபேசி அடிக்கிறது. ஒரு புதிய எண் திரையில் மின்னி மறைகிறது. நான் எடுத்து, 'ஹலோ' என்கிறேன். மறுபக்கம் இருப்பவர், 'என் பழைய காலத்து நண்பர்.' அவர் அவருடைய மொபைலில் எண்ணை அழுத்தி, அந்த எண்ணின் இணைப்பு அவருடைய நெட்வொர்க் சென்று, பின் அது என்னுடைய நெட்வொர்க்கில் சர்வர் வழியாக இணைப்பு பெற்று, என் சர்வர் என் சிம்மை தொடர்பு கொண்டு, என் சிம் தன் மொபைலால் சப்போர்ட் செய்யப்பட்டு, ஒலித்து, நான் அழைப்பை ஏற்றுப் பேசுகிறேன். இப்படி பேசும்போது அந்தப் பக்கத்திலிருக்கும் என் நண்பரையும், இந்தப் பக்கத்தில் இருக்கும் என்னையும் இணைப்பது கண்ணுக்கே புலப்படாத ஒரு சர்வர் அல்லது சர்வரின் மென்பொருள். இந்த மென்பொருள் போன்றவர்தான் இறைவன். நம் எல்லாருக்குள்ளும் இருக்கும் அவர், எல்லாரையும் இயக்கி, எல்லார் வழியாகவும் செயலாற்றுகிறார்.

இந்தச் செயல்பாட்டைத்தான் நாம் இன்றைய முதல் (காண். 2 அர 4:42-44) மற்றும் மூன்றாம் (காண். யோவா 6:1-5) வாசகங்களில் பார்க்கின்றோம்.

இன்றைய முதல் வாசகத்தில் எலிசாவின் அரும்செயல் ஒன்றைப் பற்றி வாசிக்கின்றோம். எலிசா வெறும் இருபது கோதுமை அப்பங்களையும், ஒரு கோணிப்பை தானியக் கதிர்களையும் கொண்டு ஏறக்குறைய 100 பேருக்கு உணவளிக்கும் நிகழ்வுதான் இது. நிகழ்வின் தொடக்கத்தில் பசி இருக்கிறது. நிகழ்வின் இறுதியில் நிறைவு இருக்கிறது. இது எப்படி சாத்தியமாயிற்று?

முதலில், பாகால் சாலிசாவைச் சார்ந்த ஒரு மனிதர் இருபது அப்பங்களையும், கோணிப்பை நிறைய தானியக் கதிர்களையும் கொண்டுவருகிறார். கோணிப்பையில் தானியக்கதிர்களை கொஞ்சம்தான் வைக்க முடியும். ஆக, மிகக் குறைவான உணவை அவர் கொண்டுவருகிறார். அவர் கொண்டுவந்தது ஒருவேளை இறைவாக்கினர் எலிசாவுக்கு மட்டுமாக இருக்கலாம். ஆனால் எலிசா அதைத் தனக்கென வைத்துக்கொள்ளாமல் எல்லாருக்கும் பகிர்ந்து கொடுக்கச் சொல்கின்றார். அப்பங்களைக் கொண்டு வந்த அந்த நல்ல மனிதரின் பணியாளுக்கு ஒரு சந்தேகம் வருகிறது: 'இந்த நூறு பேருக்கு இதை நான் எப்படி பரிமாறுவேன்?' என தயக்கத்தோடு எலிசாவைக் கேட்கின்றார். 'இவற்றை இம்மக்களுக்கு உண்ணக்கொடு. ஏனெனில் உண்டபின்னும் மீதி இருக்கும் என்று ஆண்டவர் கூறுகிறார்' என்கிறார். பணியாளரும் பரிமாறுகின்றார். ஆண்டவரது வாக்கின்படி மீதியும் இருந்தது என நிறைவுபெறுகிறது வாசகம்.

மேற்காணும் நிகழ்வில், பசியால் இருந்தவர்கள் நிறைவு பெற காரணமாக இருந்தது யார்?

- அப்பங்கள் கொண்டு வந்த மனிதரா? அல்லது

- அதை மக்களுக்குக் கொடுக்கச் சொன்ன எலிசாவா? அல்லது

- தயக்கம் காட்டிய பணியாளரா? அல்லது

- 'கொடு, இன்னும் மீதி வரும்' என்று சொன்ன ஆண்டவரா?

அல்லது

- இவர்கள் எல்லாருமா?

இவர்கள் எல்லாரும்தான். இந்த எல்லார் வழியாகவும் செயலாற்றியவர் இறைவன். ஆக, 'அப்பம் கொண்டுவந்தவர்,' 'எலிசா,' 'பணியாளர்' என்ற மூன்று நபர்கள் தனித்தனியாக இருந்தாலும், அவர்கள் இணைந்து வரும்போது அவர்களின் ஆற்றலை பன்மடங்கு பெருக்கியவர் ஆண்டவர். ஆக, 'எல்லாருக்கும் மேலான' ஆண்டவர் 'எல்லாருக்குள்ளும்' செயலாற்றி, 'எல்லார் வழியாகவும் செயலாற்றி' எல்லாருடைய பசியையும் நீக்கி, எல்லாருக்கும் நிறைவு தருகின்றார்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு ஐந்து அப்பங்களை ஐயாயிரம் பேருக்குப் பகிர்ந்து வழங்கும் நிகழ்வின் யோவான் நற்செய்தியாளரின் பதிவை வாசிக்கின்றோம். இனி தொடர்ந்து வரும் நான்கு ஞாயிறு நற்செய்திகளும் 'வாழ்வுதரும் உணவு நானே' என்ற இதன் நீட்சியாகவே இருக்கும்.

இந்த நிகழ்வு எப்படி நடந்தேறுகிறது? மக்கள் பெருந்திரளாய் இயேசுவிடம் வருகின்றனர். 'இவர்கள் உண்பதற்கு நாம் எங்கிருந்து உணவு வாங்கலாம்?' எனத் தம் திருத்தூதர் பிலிப்பிடம் கேட்கிறார் இயேசு. தான் செய்யப்போவதை அறிந்திருந்தும் இயேசு அவ்வாறு கேட்டார் என இடையில் கமெண்ட் செய்கிறார் நற்செய்தியாளர். பிலிப்பு பெரிய கணித வாத்தியராக இருக்கிறார். 'இருநூறு தெனாரியத்திற்கு (அதாவது, 200 நாள் சம்பளத்திற்கு) அப்பம் வாங்கினாலும் ஆளுக்கு ஒரு சிறு துண்டும் கிடைக்காதே' என தயக்கம் காட்டுகிறார். அந்நேரம் இயேசுவின் மற்ற சீடர் அந்திரேயா, 'இங்கே சிறுவன் ஒருவன் இருக்கிறான். அவனிடம் ஐந்து வாற்கோதுமை அப்பங்களும் இரண்டு மீன்களும் உள்ளன' என்று கொஞ்சம் இருப்பதை முன்வைத்துவிட்டு, 'இத்தனை பேருக்கு இவை எப்படிப் போதும்?' என பின்வாங்குகின்றார். ஆனால் இயேசு இதைக் கேட்டவுடன், 'மக்களை அமரச்செய்யுங்கள்' எனப் பணிக்கின்றார். தொடர்ந்து சிறுவன் கொண்டுவந்த அப்பங்களை எடுத்து, நன்றி செலுத்தி, அமர்ந்திருந்தோருக்குக் கொடுக்க, மீன்களையும் அவ்வாறே கொடுக்க, அங்க அப்பம் பலுகத் தொடங்குகிறது. இந்தப் புதுமை எப்படி நடந்திருக்கும் என்ற யூகிக்கின்ற இறையியலாளர் ஒருவர் இதை பின்வருமாறு எழுதுகின்றார்: 'இயேசுவின் போதனை கேட்க வந்தவர்களில் சிலர் 'உடையவர்கள்,' பலர் 'இல்லாதவர்கள்.' 'ஒன்றுமில்லாத பலரை' பார்க்கின்ற அந்த சில 'உள்ளவர்கள்' தங்கள் உணவைத் தங்கள் பைகளில் இருந்து எடுக்க மனமில்லாது இருந்தனர். 'நான் உணவை வெளியே எடுத்தால் அதை இல்லாத இவனிடம் பகிர வேண்டுமே. நானும் பசியாகவே இருந்தவிட்டுப் போகிறேன்' என்ற மௌனம் காக்கின்றனர். இந்த மௌனம் இயேசுவின் கொடுத்தலால் உடைபடுகின்றது. சிறுவன் தன் கையில் உள்ளதைக் கொடுக்க, அதை இயேசு மற்றவர்களுக்குக் கொடுக்க, அதைத் தங்களிடம் வாங்கியவர்கள் தங்களோடு உள்ளதையும் இணைத்து மற்றவர்களிடம் கொடுக்க அரங்கேறுகிறது அந்த அற்புதம். பசியால் இருந்தவர்கள் நிறைவு பெறுகின்றனர். ஒன்றும் இல்லா இடத்தில் 12 கூடைகள் அப்பங்களால் நிறைகின்றன.

மேற்காணும் நிகழ்வில், பசி மறைந்து நிறைவு வர காரணமாக இருந்தவர் யார்?

- '200 தெனாரியத்திற்கு வாங்கினாலும் முடியாது' என்று சொன்ன பிலிப்பா? அல்லது

- தன் பிள்ளை பசியாற வேண்டும் என்று 5 அப்பங்களையும், 2 மீன்களையும் கொடுத்தனுப்பிய சிறுவனின் அம்மாவா? அல்லது

- அந்த சிறுவனை அடையாளம் கண்டு இயேசுவிடம் கொணர்ந்த அந்திரேயவா? அல்லது

- தன் ஐந்து அப்பங்களையும், இரண்டு மீன்களையும் இயேசுவிடம் கொடுக்க முன்வந்த அந்தச் சிறுவனா? அல்லது

- அவற்றை வாங்கி கடவுளுக்கு நன்றி செலுத்தி பகிர்ந்து கொடுத்த இயேசுவா? அல்லது

- இயேசுவிடமிருந்து வாங்கி திருத்தூதர்கள், திருத்தூதர்களிடமிருந்து சீடர்கள், சீடர்களிடமிருந்து வாங்கிய மற்றவர்களா?

அல்லது

- இவர்கள் எல்லாருமா?

இவர்கள் எல்லாரும்தான். இந்த எல்லார் வழியாகவும் செயலாற்றியவர் இறைவன். 'பிலிப்பு,' 'சிறுவனின் அம்மா,' 'அந்திரேயா,' 'சிறுவன்,' 'இயேசு,' 'பரிமாறியவர்கள்' என்று நபர்கள் தனித்தனியாக இருந்தாலும், அவர்கள் இணைந்து வரும்போது அவர்களின் ஆற்றலை பன்மடங்கு பெருக்கியவர் ஆண்டவர். ஆக, 'எல்லாருக்கும் மேலான' ஆண்டவர் 'எல்லாருக்குள்ளும்' செயலாற்றி, 'எல்லார் வழியாகவும் செயலாற்றி' எல்லாருடைய பசியையும் நீக்கி, எல்லாருக்கும் நிறைவு தருகின்றார்.

இவ்வாறாக, முதல் வாசகத்திலும், நற்செய்தி வாசகத்திலும் ஆண்டவராம் இறைவனே தன் செயலாற்றுதலால் அனைவரையும் இணைக்கின்றார். இந்த ஒருங்கியக்கம் ஒருவர் மற்றவருக்கு உதவி செய்வதோடல்லாமல், ஒருவர் மற்றவரின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் காரணமாகிவிடுகிறது.

கடவுளின் இந்தச் செயல்பாடு திடீரென்று நடந்துவிடுமா? அல்லது இந்தச் செயல்பாட்டைத் தூண்ட நாம் முன்வர வேண்டுமா? கடவுளின் செயல்பாடு மாயாஜாலம் அல்ல. அவரின் ஒருங்கியக்கம் ஒரு மேஜிக் அல்ல. மாறாக, அது சின்னஞ்சிறியவர்களின், சின்னஞ்சிறு செயல்களின் தொகுப்பாக இருக்கிறது.

எப்படி?

அ. அனைவரும் தத்தம் அழைப்பிற்கேற்ப வாழ வேண்டும்.

ஆ. முழு மனத்தாழ்மையோடும், கனிவோடும், பொறுமையோடும் ஒருவரையொருவர் அன்புடன் தாங்க வேண்டும்.

இ. ஒருமைப்பாட்டைக் காத்துக்கொள்ள முயற்சி செய்ய வேண்டும்.

அ. அழைப்பிற்கேற்ப வாழ்தல்

தன் வாழ்க்கை நிலை தன்னிடம் எதை எதிர்பார்க்கிறதோ, அதை நிறைவு செய்வது. எ.கா. இப்போது என் வாழ்க்கை நிலையில் நான் ஒரு மாணவன் என்றால், அந்த மாணவனுக்குரிய நிலையை நான் சமரசம் செய்யாமல் முழுமையாக வாழ வேண்டும். ஆசிரியர், மருத்துவர், அருள்பணியாளர், துறவி, இல்லத்தரசி என எல்லாருமே. அழைப்பு என்பது நாம் செய்யும் வேலை மட்டுமல்ல. வேலை செய்ய முடியாத குழந்தைகள், வயது முதிர்ந்தவர்கள், உடல்நலமற்றவர்கள் என அனைவருமே தங்களின் இருப்பு நிலைகளில் தங்களின் முழு ஆளுமையை வெளிக்கொணர முடியும்.

ஆ. மனத்தாழ்மை, கனிவு, பொறுமை, அன்பு கொண்டிருத்தல்

கூட்டு வாழ்க்கைக்கு அல்லது கூட்டியக்கத்திற்குத் தேவையானவை இந்த நான்கு குணங்கள்தாம். குரோஷிய அணியின் வீரர் காலிநிக் விளையாட்டிற்குள் நுழைய முடியாமல் அல்லது மற்றவர்களின் கூட்டாற்றலோடு தன் ஆற்றலைச் சேர்க்க முடியாமல்போகக் காரணம் அவரிடம் மேற்காணும் பண்புகளில் ஏதாவது ஒன்று குறைவுபட்டதால்தான். தான் அணியின் எந்த நிலையில் விளையாட அனுமதிக்கப்பட்டாலும் தன் திறன் மேல் தனக்கு உள்ள நம்பிக்கையை மையமாக வைத்துத் தன் திறனை அவர் வெளிக்கொணர்ந்திருக்கலாம். எடுத்துக்காட்டாக, நம் நற்செய்தியில் வரும் பிலிப்பு. '200 தெனாரியத்திற்கு அப்பம் வாங்கினாலும் ஒரு சிறு துண்டு கூட கிடைக்காது' என்று இயேசுவிடம் தயக்கம் காட்டினாலும், தன் கருத்தைச் சொன்னாலும், அந்திரேயா மற்றதொரு கருத்தைச் சொல்லும்போது அதை மறுக்காமல் ஏற்றுக்கொள்கின்றார். தான் செய்ததுதான் சரி என்றும், தன் கருத்து மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படவேண்டும் எனவும் வாதாடவில்லை பிலிப்பு. இதற்குக் காரணம் அவரிடமிருந்த மனத்தாழ்மையும், கனிவும், பொறுமையும், அன்புமே.

இ. ஒருமைப்பாட்டைக் காத்தல்

நாம் கையில் அணிந்திருக்கும் கடிகாரத்தின் இயக்கத்தைக் கவனித்தால் இது நமக்குப் புரியும். சிறிய கைக்கடிகாரத்தைப் பிரித்துப் பார்த்தால் அதனுள் சின்னச் சின்னக் கம்பிகளும், சுருள்கம்பிகளும் இருக்கும். சின்னக் கம்பிதானே. அதில் ஒன்று அறுந்தால் என்ன? என நாம் நினைக்கலாம். ஆனால், சின்னஞ்சிறிய கம்பிகளின் ஒருமைப்பாடுதான் ஒட்டுமொத்த கடிகார இயக்கத்திற்குக் காரணமாக இருக்கிறது. கடிகாரத்தின் பெரிய பகுதிகள் மட்டும்தான் கவனிக்கப்படவேண்டும், சிறிய பகுதிகள் கவனிக்கப்படத் தேவையில்லை என நினைப்பது தவறு. அந்திரேயா கொண்டு வந்த சிறுவனால் என்ன பயன்? அவனிடம் இருக்கும் கொஞ்ச அப்பங்களால் என்ன பயன்? என்று இயேசு சிறுவனை அனுப்பிவிடவில்லை. அந்தச் சிறுவனையே கிரியா ஊக்கியாக்கி பெரிய அரும் அடையாளத்தை நடத்துகிறார் இயேசு. ஏனெனில், இயேசுவுக்குத் தெரியும் - கூட்டத்தின் ஒரு பகுதியான இந்தச் சிறுவனும் முக்கியமானவனே என்று.

இறுதியாக,

இன்று எல்லாருக்கும் மேலான, எல்லார் மூலமாகவும் செயலாற்றுகின்ற, எல்லாருக்குள்ளும் இறைவன், நம் ஒவ்வொருவர் வழியாகவும் செயலாற்றுகின்றார். நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கிறார் என்பதை மனத்தில் இருத்தி, நாம் செய்யும் செயல்கள் அனைத்தும் அவருடைய செயல்களே என எண்ணி, அடுத்தவரின் பசி தீர்க்கும், அடுத்தவருக்கு நிறைவுதரும் செயல்களைச் செய்ய நம் ஆற்றலைக் கூட்டாற்றல் ஆக்கலாமே!


Monday 16 July 2018

பொதுக்காலம் ஆண்டின் 16-ஆம் ஞாயிறு

பொதுக்காலம் ஆண்டின் 16-ஆம் ஞாயிறு


இன்றைய நற்செய்தி வாசகங்கள்:
எரேமியா. 23:1-6
எபேசியர் 2:13-18
மாற்கு 6:30-34



இயேசு என் மீட்பர் அருள்பணி முனைவர் ம. அருள்


நியூயார்க் நகரிலே எலினா என்ற கிராமப் பகுதியிலே ஒரு நீக்ரோ பெண்மணி தன் 4 வயது குழந்தையை வைத்துக் கொண்டு மணிக்கணக்காகக் காத்து நிற்கிறாள். சிறிய பையனுக்கோ ஒன்றுமே புரியவில்லை . ஓடியாடி விளையாடும் சிறுவன் அம்மாவின் முகத்தைப் பார்க்கிறான். தாயோ சோக நிலையில் ஆவலோடு எதையோ எதிர்நோக்கி காத்திருக்கிறாள். அம்மா ஏன் இங்கு நிற்கிறீர்கள்? வாங்கம்மா வீடு போவோம் எனக் கூப்பிடுகிறான். அதேநேரத்தில் அவள் எதிர்பார்த்த புகைவண்டி நிலையம் வந்து சேர்ந்தது. ஆவலோடு நெருங்குகிறாள். மகனே இங்கே பார்! இங்கே இறந்து கிடக்கும் ஆப்ரகாம் லிங்கன் இவர்தான் உன்னையும் என்னையும் உரிமையோடு இந்த நாட்டிலே வாழ வைக்க உயிர் கொடுத்த மகான். நமக்கு உரிமை பெற்றுத்தர தன் உயிரையே பலியாக்கத் துணிந்துவிட்டார் என்று கண்ணீர் மல்கத் தாய் தன் மகனிடம் கூறினாள். உடலைத் தொட்டு முத்தமிட்டு இடம் நகர்ந்தாள்.

இதேபோல் உலகிலே எத்தனையோ தலைவர்கள் உயிர் கொடுத்துள்ளார்கள். பாரத நாட்டின் உரிமைக்காக உயிர் கொடுத்தார் காந்திமகான் . மாந்தருள் மாணிக்கமாய்த் திகழ்ந்த ஜான் கென்னடி நீதிக்குச் சான்று பகரத் தன் உயிரையும் கொடுத்தார். தென் அமெரிக்காவில் எல் சால்வடோர் மறைமாவட்ட பேராயர் ஆஸ்கார் ரோமோரோ அந்த மறைமாவட்ட ஏழை மக்களுக்கு குரல் கொடுத்ததால் பலி பீடத்தில் நிற்கும்போதே சுட்டுக்கொல்லப் பட்டார். இவர்கள் எல்லாம் நாட்டின் அரசியல் விடுதலைக்காக, உரிமைக்காக உயிர் கொடுத்தவர்கள். ஆனால் சரித்திரத்தில் ஒரே ஒருவர் தான் உலகின் பாவங்களைப் போக்க உயிர் கொடுத்துள்ளார். இவர்தான் இயேசு என்ற நாமம் கொண்ட பெருமகான். 


இவரைப் பற்றி இன்றைய நற்செய்தியிலே புனித மாற்கு என்பவர் 6-ஆம் அதிகாரத்தில் 34- ஆம் வசனத்தில் குறிப்பிடுவதுபோல் ஆடுகளின் மேல் அக்கறையும் இரக்கமும் கொண்டவராக காட்சி தருகின்றார். நெடுநேரம் போதிக்கின்றார். பழைய ஏற்பாட்டிலே இஸ்ரயேல் மக்கள் ஆட்டின் தலையிலே கை நீட்டி தங்கள் பாவங்களை அதன் மேல் சுமத்தி காட்டுக்குள்ளே விரட்டி விடுவார்கள். அது அவர்களின் பாவங்களைச் சுமந்து போகும் பலி ஆடாகும். அதேபோல் அனைத்துப் பாவங்களையும் தன் மேல் சுமந்தவராய் யோர்தான் நதிக்கரையிலே நடந்து வர இவரே உலகின் பாவங்களைப் போக்க வந்த உன்னத செம்மறி என திருமுழுக்கு யோவானால் (யோவா. 1:29) சுட்டிக்காட்டப்படுகிறார். இவர் சென்ற இடமெல்லாம் நன்மையே செய்துகொண்டு சென்றார். எப்படி சந்தனக் கட்டையானது அரைக்கப்பட்டுத் தண்ணீரில் கலக்கப்பட்டால் தன் மணத்தைப் பரப்புகின்றதோ அதேபோல் நல்லாயன் இயேசு ஆடுகளின் மேல் அக்கறை கொண்டவராய் போதிக்கின்றார். ஆடுகளுக்காக உயிர் கொடுக்கும் ஆயனாக மாறிவிட்டார்.

பன்றியும் பசுவும் நடத்திய உரையாடலை கற்பனையாக இங்கு குறிப்பிட விரும்புகிறேன். கேட்க விரும்புகிறீர்களா? அன்றொரு நாள் பன்றியானது பசுவை நோக்கி பேசியது: ஓபசுவே! எத்தனையோ மக்கள் என்னை வெட்டி சமைத்து நாட்கணக்காக சாப்பிடுகிறார்கள், ஊறுகாய் உண்டாக்கி உலகம் முழுவதும் அனுப்புகிறார்கள். ஆனால் மக்களோ சீ பன்றி என்று கூறி என்னை வெறுக்கிறார்கள். ஆனால் உன்னை ஓ பசுவே என்று பெருமதிப்போடும் பெருமிதத்தோடும் அழைக்கிறார்கள். ஏன் இந்த பாரபட்சமான வித்தியாசம்! சிறிது நேரம் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்த பசு பேச ஆரம்பித்தது : ஓ பன்றி! நீயும் நானும் மிருகங்கள் தான். ஆனால் ஒன்று, நீ இறந்த பின் மக்களுக்கு பயன்படுகின்றாய். நானோ உயிரோடு இருக்கும்போதே பயன்படுத்தப்படுகின்றேன். எனவே என்னை மக்கள் மதிக்கிறார்கள், விரும்புகிறார்கள் என்று பதில் உரைத்தது. ஆம் அன்புக்குரிய வர்களே நல்லாயனாகிய இறைவன் நமக்குத் தரும் பாடம் உயிரோடு இருக்கும்போதே நல்ல ஆடுகளாக, ஆயனின் குரலுக்குச் செவிமடுக்கும் ஆடுகளாக, ஏன் பலி ஆடாக கூட மாற வேண்டும். அப்போது நாம் நிறை வாழ்வு பெறுவோம்.



 மகிழ்ச்சியூட்டும் மறையுரைகள்  - குடந்தை ஆயர் F.அந்தோனிசாமி


நற்செய்தியாளர்களாக மாறுவோம்.
 

எதற்காகத் தனிமையான இடத்திற்குச் சென்று திருத்தூதர்களை இயேசு ஓய்வெடுக்கச் சொன்னார்? இதற்கு எண்ணற்ற காரணங்கள் இருக்கலாம். அதில் ஒரு தலையாய காரணம் அவர்கள் இறைவனை அன்பு செய்ய வேண்டும் என்பதற்காக!

ஒவ்வொரு செயலுக்கும் நேரம் ஒதுக்குவதுபோல, இறைவனோடு தனித்திருக்கவும் நாம் நேரம் ஒதுக்க வேண்டும் என்ற உண்மையை இயேசு நமக்கு இன்று சுட்டிக்காட்டுகின்றார்.

ஞான முத்துக்கள் (Pearls of Wisdom) என்ற நூலிலிருந்து எடுக்கப்பட்ட உவமை இது.

எல் பெத்தேல் (EI Bethel) என்பவர் ஒரு மடாதிபதியைச் சந்தித்தார். அவருக்குத் துறவியாக ஆசை. அவர் துறவற மடத்திற்குள் நுழைவதற்கு முன்னால் ஒரு சந்தேகத்தை நிவர்த்தி செய்துகொள்ள விரும்பினார். எல் பெத்தேல் மடாதிபதியைப் பார்த்து, ஏன் துறவிகள் தனிமையில் வாழ வேண்டும்? கடவுள்தான் எல்லா இடங்களிலும் இருக்கின்றாரே! அவரை எங்கு வேண்டுமானாலும் அன்பு செய்யலாமே! என்றார்.

மடாதிபதி பதில் ஒன்றும் சொல்லவில்லை. ஒரு மெழுகுதிரியை ஏற்றி அதை எல் பெத்தேலிடம் கொடுத்து, குடிசைக்கு வெளியே நின்று இதை அணையாமல் பார்த்துக்கொள் என்றார்.

எத்தனை முறை ஏற்றினாலும் அத்தனை முறையும் மெழுகுதிரி காற்றில் அணைந்துவிட்டது. அப்போது எல் பெத்தேல், இது குடிசைக்குள் மட்டுமே அணையாது எரியும் என்றார். அதற்கு மடாதிபதி, நீ கேட்ட கேள்விக்கு நீயே பதில் சொல்லிவிட்டாய். இறை அன்பு என்பது இந்த மெழுகுதிரியைப் போன்றது. சத்தமும், சந்தடியும், பராக்குகளும், சோதனைகளும் நிறைந்த உலகத்திலே அதனால் எளிதாக எரிய முடியாது; அமைதியில்தான் அது எரிய முடியும் என்றார். எல் பெத்தேல் ஞானம் பெற்று துறவற மடத்தில் சேர்ந்தார்.

சீடர்கள் மனத்தில், இதயத்தில் இறை அன்பு சுடர்விட்டு எரிய வேண்டும். அந்த இறை அன்பில் அவர்கள் மனம், இதயம் வெதுவெதுப்பாகி இறை அன்பை உலகுக்கு அவர்கள் பிரதிபலிக்க வேண்டும் என இயேசு விரும்பினார். இதனால்தான் தனிமையான இடத்திற்குச் செல்லுமாறு அவர்களுக்கு அன்புடன் கட்டளையிட்டார். அவரே தனிமையை நாடி, அவரது சீடர்களுக்கு முன்மாதிரியாய் விளங்கினார் (மாற் 1:35).

தனிமையில் நமது மனமும், இதயமும் இறை அன்பால் பற்றி எரியும்போது நாம் உள்ளொளி பெற்று நீதி நிறைந்த ஆயர்களாக (முதல் வாசகம்), அமைதி நிறைந்த நற்செய்தியாளர்களாக (இரண்டாம் வாசகம்) மாறுவோம் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை !

மேலும் அறிவோம் :
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்(கு)
என்புதோல் போர்த்த உடம்பு (குறள் : 80).

பொருள் : அன்பு நிறைந்த உள்ளத்துடன் இயங்குவதே உயிருடன் கூடிய உடலாகும். அன்பு நெஞ்சம் இல்லாத உடல், உயிரற்ற எலும்புக்கூட்டைத் தோலால் போர்த்திய வெற்றுடல் ஆகும்.


மறையுரை மொட்டுக்கள் அருள்பணி Y. இருதயராஜ்


பங்குத் தந்தை ஞாயிறு திருப்பலியில் மறையுரை ஆற்றிக் கொண்டிருந்தபோது மக்கள் தங்குவதைக் கண்டு, "ஐயோ! தீ. தீ" என்று கத்த, மக்கள் கோவிலைவிட்டு ஓட ஆரம்பித்தனர், ஆனால், எங்குமே தீயைக் காணாத அவர்கள் பங்குத் தந்தையிடம், 'சாமி, தீ எங்கே?' என்று கேட்க, அவர், "நரகத்தில் " என்று அமைதியாகச் சொன்னார். மக்கள் கோபமும் ஆத்திரமும் அடைந்து அவரை மனதாரத் திட்டினார்கள். அப்போது பங்குத் தந்தை அவர்களிடம், “நான் பிரசங்கத்தில் உண்மையைச் சொல்லும்போது தூங்கி விழுகிறீர்கள்; பொய் சொன்னால் விழித்துக் கொள்கிறீர்கள்" என்றார்.

ஆம், இன்றைய உலகில் பொய்க்கு இருக்கிற வரவேற்பு உண்மைக்குக் கிடையாது. இன்றைய விளம்பர உலகில் பொய் மெய்யாகி விடுகிறது; மெய் பொ யயாகி விடுகிறது. பழங்காலத் தமிழ்ப்பாடல் பின்வருமாறு உள்ளது:
பொய்யுடை ஒருவன் சொல்வன்மையால்
மெய்போலும்மே மெய்போலும்மே
மெய்யுடை ஒருவன் சொல்லமாட்டாமையால்
பொய் போலும்மே பொய் போலும்மே

ஒருவர் பேசுவதெல்லாம் பச்சைப்பொய்; ஆனால் அவர் கவர்ச்சியாகப் பேசுகிறார். எனவே அவரது பொய்யையும் மக்கள் மெய்யென நம்புகின்றனர். மாறாக, மற்றொருவன் உண்மை பேசினாலும், அவருடைய பேச்சில் கவர்ச்சி இல்லாததால், அவருடைய மெய்யும் பொய்யாகிவிடுகிறது. வழியும் வாழ்வும் உண்மையும் உயிருமான இயேசு கிறிஸ்து (யோவா 14:6) உண்மையை எடுத்துரைக்கவே இவ்வுலகிற்கு வந்த இயேசு கிறிஸ்து (யோவா 3:37). உண்மையினால் தம் சீடர்களை இறைவனுக்கு அர்ப்பணமாக்கிய இயேசு கிறிஸ்து (யோவா 17:17-19), இன்றைய தற்செய்தியில், மக்கள், 'ஆயரில்லா ஆடுகளைப் போல் இருந்ததால் அவர்கள் மீது பரிவு கொண்டு, அவர்களுக்குப் பலவற்றைக் கற்பித்தார் (மாற் 6:34) என்று வாசிக்கிறோம்,

இன்றைய உலகம் பொய்யாலும் பொய்மையின் பிறப்பிடமான சாத்தான் பிடியிலும் (யோவா 8:44) சிக்கித் தவிக்கின்றது. எனவே, இன்றைய உலக மக்களுக்குத் தேவை உண்மை, முழுமையான உண்மை. திருமேய்ப்பர்கள் மக்களுக்கு உண்மையை எடுத்துரைக்க வேண்டும். இன்றைய முதல் வாசகத்தில். ஆடுகளை மேய்க்காமல், அவற்றைச் சிதறடிக்கும் போலி மேய்ப்பர்களைக் கடவுள் சபிக்கின்றார். ஆனால், அதே நேரத்தில் ஆடுகளின்மேல் உண்மையான அக்கறை கொண்டுள்ள நல்ல மேய்ப்பர்களை மக்களுக்குக் கொடுக்கப் போவதாகவும் வாக்களிக்கின்றார் (எரே 23:1-4).

நல்லாயர் தனது ஆடுகளைப் 'பசும்புல் வெளிக்கும். அமைதியான நீர் நிலைக்கும் அழைத்துச் செல்வார்; புத்துயிர் அளிப்பார்; நீதி வழி நடத்துவார், சுவையான விருந்தளிப்பான் (பதிலுரைப்பாடல், திபா 23:1-5).

நல்லாயர் கிறிஸ்துவைப் பின்பற்றி, திருமேய்ப்பர்கள் மக்களுக்குச் சுவையான விருந்தை நலமிக்கப்போதனையை வழங்க வேண்டும். இறைவார்த்தையில் வேரூன்றியிராத எவ்விதப் போதனையும் போலியானது; பொய்யானது: வஞ்சகமானது. அத்தகைய மறையுரை. மக்களைத் தவறான வழியில் இட்டுச் செல்லும்; மனமாற்றத்திற்கும் புதுவாழ்வுக்கும் வழிவகுக்காது. வாழ்வு தரும் வார்த்தையைத் தேடி வருகிற மக்களுக்கு வெறும் தவிட்டைக் கொடுத்து ஏமாற்றுவது அநீதியாகும்.

இரண்டாம் வத்திக்கான் சங்கம் கூறுகிறது : "இறைமக்களுக்கு இறைவார்த்தைப் பந்தியில் நிறைவான 2,ணவு வழங்கப்பட வேண்டும். விவிலியத்தின் கருவூலம் தாராளமாகத் திறந்து விடப்படவேண்டும். மறையுரை திருவழிபாட்டின் ஒரு பகுதி: இதில் நம்பிக்கையின் மறை பொருளும் வாழ்க்கை நெறிகளும் விளக்கப்பட வேண்டும்" (திருவழிபாடு. 51-52)

நள்ளிரவு 12 மணிக்கு ஒரு பெண் பங்குத் தந்தையை எழுப்பி, *சுவாமி, உடனடியாக எங்க வீட்டுக்கு வாங்க; என் மகள் நீங்கள் இல்லாமல் தூங்கமாட்டேன் என்று அடம்பிடிக்கிறாள்" என்றார், பங்குத் தந்தை அதிர்ச்சியுற்றவராய், "ஏன் அவ்வாறு சொல்லுகிறாள்?" என்று கேட்டதற்கு அப்பெண், "சாமி நாங்கள் அவளுக்கு எத்தனையோ தக்க மாத்திரைகள் கொடுத்தும் அவளுக்குத் தூக்கம் வரவில்லை. நீங்கள் வந்து ஐந்து நிமிடம் பிரசங்கம் வைத்தால், உடனடியாகத் தூக்கம் வந்துவிடும் என்கிறாள்" என்றார்,

பங்குத் தந்தையர்களின் மறையுரை மக்களைத் தூங்க வைக்கும் தூக்க மாத்திரையாக அமையாமல். சமுதாயத் தீமைகளுக்கு வேட்டு வைக்கும் வெடி மருந்தாகவும், பாவ நோய்ககுக் குணமளிக்கும் அருமருந்தாகவும் அமைய வேண்டும்.

இன்றைய உலகிற்குத் தேவை 'அமைதியின் நற்செய்தி. இயேசு கிறிஸ்துவே நமது அமைதி : அவர் யூத இனத்திற்கும் பிற இனத்திற்கும் இடையே இருந்த பகைமை என்ற தடைச் சுவரைத் தமது சிலுவையால் தகர்த்துவிட்டு, இரு இனத்திலுமிருந்து புதியதொரு மனித குலத்தைப் படைத்து, அமைதியை நற்செய்தியாக அறிவித்தார் (எபே 2:13-14) என்று இன்றைய இரண்டாம் வாசகத்தில் எடுத்துரைக்கிறார் புனித பவுல். திருப்பணியாளர்கள் திரும்பத் திரும்ப அமைதியின் நற்செய்தியைத் தங்களது மறையுரையில் விளக்க வேண்டும்,

கடவுள் மனிதரைக் கிறிஸ்து வழியாகத் தம்முடன் ஒப்புரவாக்கி, அந்த ஒப்புரவுச் செய்தியைத் திருச்சபையிடம் ஒப்படைத்துள்ளார் (2 கொரி 5:19-20), திருச்சபை ஒரே நேரத்தில் ஒப்புரவு அடைந்த சமூகமாகவும், ஒப்புரவை வழங்கும் சமூகமாகவும் திகழ்கிறது.

இன்று எங்கும் எதிலும் போர். கடமைக்கும் உரிமைக்கும் இடையே போர்: காமத்திற்கும் காதலுக்கும் இடையே போர்; கொள்கைக்கும் நடத்தைக்கும் இடையே போர், தனி மனிதனுக்கும் சமுதாயத்திற்கும் இடையே போர், இவ்வுலகே ஒரு போர்க்களம். இன்று மனிதன் சமுதாயம் என்ற நிலத்தில் பகைமை என்ற விதையை ஊன்றி, வெறுப்பு என்ற திரைப் பாய்ச்சிக் கொண்டிருக்கிறான். அதன் விளைவாக வேற்றுமை என்ற மரம் வளர்ந்து, பொறாமை என்ற பூ பூத்து. கலகம் என்ற காய் காய்த்து. வன்முறை என்ற பழம் பழுத்துக் கொண்டிருக்கிறது.

"மங்கை தீட்டுப்பட்டால் கங்கையில் நீராடலாம்; கங்கையே தீட்டுப்பட்டால் எங்கே நீராடுவது? ஆம், உலகம் பிளவுபட்டால் திருச்சபை அப்பிளவைச் சரி செய்யலாம். திருச்சபையே பிளவுபட்டு நின்றால், பிளவுபட்ட திருச்சபை அமைதியின் நற்செய்தியை எவ்வாறு உலகிற்கு அளிக்க முடியும்?

திருப்பணியாளர்களும் மக்களும் இனம், மொழி, நிறம், சாதி அடிப்படையில் மக்களை, அரசியல்வாதிகள் போல், பிளவுபடுத்தாமல் ஆடுகளைச் சிதறடிக்காமல் திருச்சபையை மாபெரும் அன்பியமாகக் கட்டி எழுப்பத் தங்கள் சொல்லாலும் செயலாலும் உழைக்க வேண்டும்.

வேற்றுமை வேலிகளை வேரறுப்போம்;
பிரிவினைக் கவர்களைப் பிளந்தெரிவோம்;
ஒற்றுமையை உருவாக்குவோம்
புதியதோர் உலகம் செய்வோம் - கெட்ட
போர் புரியும் உலகை வேரோடு சாய்ப்போம்,
பொய்மையின் முகமூடியைக் கிழித்தெறிவோம்;
ஆவியிலும் உண்மையிலும் கடவுளைத் தொழுவோம்.


பரிவின் பரிமாணங்கள்- அருள்பணி ஏசு கருணாநிதி


'பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப் பரிந்து நீ, பாவியேனுடைய
ஊனினை உருக்கி, உள்ஒளி பெருக்கி, உலப்பிலா ஆனந்தம் ஆய
தேனினைச் சொரிந்து, புறம் புறம் திரிந்த செல்வமே, சிவபெருமானே
யான் உனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன், எங்கு எழுந்தருளுவது இனியே?'

இன்றைய இறைவாக்கு வழிபாட்டின் வாசகங்களைப் படிக்கும்போது மேற்காணும் மாணிக்கவாசகரின் திருவாசகப் பாடல்தான் (திருவாசகம், எட்டாம் திருமுறை, பாடல் எண் 9) நினைவிற்கு வருகிறது. இந்தப் பாடலின் பொருளறிந்து, பின் இதன் பொருத்தத்தை அறிவோம்.

குழந்தைக்குக் கொடுக்க வேண்டிய பாலை நினைவுகூர்ந்து ஊட்டும் தாயைவிட பரிந்து, இரக்கம் காட்டி, பாவி எனது உடலை உருக்கி, உள் ஒளியை பெருக்கி, அழிவில்லாத மகிழ்ச்சி என்னும் தேனைப் பொழிந்து, எனக்கு வெளியே நான் தேடிய என் செல்வமே உன்னைத் தொடர்ந்து வந்து இறுக்கமாகப் பிடித்துக்கொண்டேன் - என்னுள்ளே உன்னைக் கண்டேன். இனி நீ எங்கே எழுந்தருள்வாய்?

இங்கே இது சைவத்திருமுறையின் பாடல் அல்லது சிவனை நோக்கிய பாடல் என்ற குறுகிய பார்வையை நாம் விலக்கி, நம் தமிழ்மண்ணில் எழுந்த ஓர் ஆன்மீகப்பாடல் என்று நம் பார்வையை விரித்தால்தான் இதன் பொருளை நாம் முழுமையாக உள்வாங்கிக்கொள்ள முடியும்.

எப்படி?

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். மாற் 6:30-34) இயேசு பணிக்கு அனுப்பிய சீடர்கள் அவரிடம் திரும்பி வருகின்றனர். திரும்பி வந்து தாங்கள் சொன்னது, செய்தது அனைத்தையும் இயேசுவிடம் ஒப்புவித்தபோது, 'நீங்கள் பாலைநிலத்திலுள்ள ஓர் இடத்திற்குச் சென்று சற்று ஓய்வெடுங்கள்' என்கிறார். இது இயேசுகாட்டும் பரிவின் முதல் பகுதி. அதாவது, வேலை, மக்கள், பணி, ஓட்டம், பேய், நோய் என்று இருந்தவர்கள்மேல் பரிவுகாட்டும் இயேசு அவர்களை ஓய்விற்கு அழைக்கின்றார்.

இந்த ஓய்வு எதற்காக? 'இவ்வளவு நாள் உண்பதற்குக் கூட நேரமில்லை. இனி உண்ணுங்கள்' என்று சொல்வதற்காகவா? இல்லை. இயேசு ஓய்விற்கு அனுப்பும் இடம் பாலைவனம். அவர் அவர்களை பழமுதிர்ச்சோலைக்க அனுப்பினால் அவர்கள் உடல் பெருகும். ஊட்டம் கிடைக்கும். ஆனால் பாலைவனத்தில் ஒன்றும் கிடைக்காது. அங்கே ஊன் (உடல்) உருகும். உள்ஒளி பெருகும். ஆக, மாணிக்கவாசகரின் இறைவன் அவருடைய 'ஊனினை உருக்கி, உள் ஒளி பெருக்கி, அழிவில்லாத ஆனந்தம் அருள்வதாக' பாடுகிறார். பாலைநிலத்தில் திருத்தூதர்கள் இந்த மூன்றையும் தான் பெற்றுக்கொள்கிறார்கள்: (அ) அவர்களின் உடல் உருகும் - ஆக, உடலையும் கடந்த ஒன்று இருப்பதாக அவர்கள் கண்டுணர்வார்கள், (ஆ) உள் ஒளி பெருகும் - நம் உள்ளத்தில் இருக்கும் இயல்பாகவே அங்கே இருக்கிறது. அது எப்போது பெருகுகிறது என்றால், நாம் தனியாக அமர்ந்து நம்மையே ஆய்ந்து, 'நான் இது அல்ல. அது அல்ல' என்று ஒவ்வொரு அடையாளத்தைக் களையும்போது. (இ) அழிவில்லாத ஆனந்தம் - திருத்தூதர்கள் தங்கள் பணி அனுபவத்தில் கண்ட அல்லது பெற்ற அனுபவங்கள் எல்லாம் அழியக்கூடியவை. ஒரு இடத்தில் நேர்முக அனுபவம் கிடைத்து, வேறிடத்தில் எதிர்மறை அனுபவம் கிடைத்தால், அல்லது ஒரு இடத்தில் மக்கள் தங்களை ஏற்றுக்கொள்ள, மற்றோர் இடத்தில் வெறுத்து விலக்கினால் மகிழ்ச்சி சட்டென மறைந்துவிடுகிறது. ஆனால் பாலைநிலத்தில் தனிமையில் கிடைக்கும் மகிழ்ச்சி அழிவில்லாதது. அது இடத்தையும், நேரத்தையும், நபரையும் சாராதது. மேலும் சீடர்கள் இதுவரை தங்கள் இறையனுபவத்தைத் தங்களுக்கு வெளியே தேடினார்கள். ஆனால் அவர்கள் கண்டுகொண்டது பாலைவனத்தின் தனிமையில்தான். 'உணவு எப்படி உடலுக்கோ, அப்படியே தனிமை ஆன்மாவுக்கு' என்கிறார் அரிஸ்டாட்டில். இவ்வாறாக, தனிமையில்தான் ஆன்மா உண்மையான இறைமையைக் கண்டுகொள்கிறது.

பரிவின் இரண்டாம் பகுதியாக, தம்மையும் தம் திருத்தூதர்களையும் பின்பற்றி கால்நடையாகவே கூட்டமாக ஓடி தங்களுக்குமுன் அங்கு வந்து சேர்ந்த கூட்டத்தினரைப் பார்த்து அவர்கள் மேல் பரிவு கொண்டு அவர்களுக்குக் கற்பிக்கின்றார் இயேசு. இந்த நிகழ்வைக் கற்பனை செய்து பார்த்தாலே நமக்கு ஆச்சர்யம் மேலோங்குகிறது. பெரியவர்கள், சிறியவர்கள், பெண்கள், குழந்தைகள், கண்பார்வையற்றோர், உடல் ஊனமுற்றோர் என எத்தனைபேர் ஓடியிருப்பர் அந்தப் பாலைவனத்தில்? சிகப்பு கலர் சேலை, மஞ்சள் கலர் பிளவுஸ் அணிந்து ஒரு பெண், ஒழுங்காக தலையைக் கூட சீவாமல், தலைக்கு எண்ணெய் வார்க்காமல், கால்களில் செருப்புகள் அணியாமல், ஒரு வாரமாக சளி பிடித்து, காய்ச்சல் அடித்து, மூக்கொழுகும் மேல்சட்டை அணியாத தன் இரண்டு வயது மகனை இடுப்பில் வைத்துக்கொண்டு, அந்தக் கூட்டத்தின் வேகத்திற்கு ஈடு கொடுத்து இயேசுவைக் காண ஓடியிருப்பாள்? அன்றைக்கு அவள் வேலை செய்தால்தான் அவள் வீட்டில் அடுப்பெரியும். அந்த வேலையை விட்டுவிட்டு அவளால் எந்த நம்பிக்கையோடு ஓட முடிந்தது இயேசுவைத் தேடி? அவள்வரும் வரை அவள்வீட்டு நாய்க்குட்டிக்கு யார் சோறு வைப்பார்கள்? கோழிக்குஞ்சுளை யார் கூட்டில் அடைப்பார்கள்? அப்படி என்ன அவசரம் அவளுக்கு? எல்லாவற்றையும் அப்படியே போட்டுவிட்டு ஓட அவளால் எப்படி முடிந்தது? - இவள் ஒருத்திபோல் எண்ணற்றோர் இயேசுவைத்தேடி அந்த மாலை வேளையில் சென்றனர். ஓய்வுக்காகச் சென்ற இயேசு இவர்களைப் பார்த்தவுடன் எரிச்சல்படவில்லை. 'என் தனிமையைக் கெடுக்கிறீர்களே!' என்று எரிந்துவிழவில்லை. அவர்களைத் தொந்தரவாகப் பார்க்கவில்லை. மாறாக, அவர்கள்மேல் பரிவு கொள்கின்றார். அதாவது, அவர்களைப் பார்த்தவுடன் மேற்காணும் அனைத்தையும் தன் மனதில் நொடியில் ஓடவிடும் இயேசுவாக இருந்தால்தான் பரிவுகாட்ட முடியும். தான் தன் குழந்தையைத் தனக்குத் தொந்தரவாக நினைப்பதில்லை. குழந்தையின் இயலாமை தாய்க்கு எரிச்சல் மூட்டுவதில்லை. அவளின் உள்ளத்தில் பரிவை மட்டுமே அது எழுப்புகிறது. ஆகையால்தான், இயேசு தாயினும் சாலப் பரிந்தவராக இருக்கிறார்.

இவ்வாறாக, இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசுவின் பரிவு இரண்டு பரிமாணங்களில் வெளிப்படுகிறது:

அ. தன் சீடர்களுக்கு ஓய்வு
ஆ. தன்னைத் தேடிவந்த மக்களுக்கு போதனை

பரிவின் இன்னும் இரண்டு பரிமாணங்களை இன்றைய முதல் மற்றும் இரண்டாம் வாசகங்கள் சொல்கின்றன. இன்றைய முதல் வாசகத்தில் (காண். எரே 23:1-6) 'மேய்ப்பர்களுக்கு எதிராக' இறைவாக்குரைக்கின்றார் எரேமியா. இங்கே 'மேய்ப்பர்கள்' என்பவர்கள் இஸ்ரயேலின் 'இறைவாக்கினர்கள்' அல்லது 'அரசர்களை' குறிக்கிறது. இதுவரை இருந்த இஸ்ரயேலின் அரசர்கள்மேல் இறைவன் இரண்டு குற்றச்சாட்டுக்களை வைக்கின்றார்: (அ) அவர்கள் மந்தையைச் சிதறடித்தார்கள், (ஆ) அவர்கள் மந்தையின்மேல் அக்கறைகாட்டவில்லை. இவ்வாறாகச் சிதறடிக்கப்பட்ட மந்தை திகில் மற்றும் அச்சம் கொண்டு காணாமல் போயின. இதற்கு மாறாக, தாவீதின் தலைமுறையில் 'தளிர்' ஒன்றை உருவாக்குவேன் என்கிறார் ஆண்டவர். இந்தத் தளிர் உடனடியாக 'செதேக்கியா' ('யாவே நீதியானவர்') என்ற அரசனைக் குறித்தாலும், மெசியாவிற்கான முன்னறிவிப்பாக இந்த இறைவாக்கு திகழ்கிறது. இறுதியில், 'யாவே சித்கேணூ' ('ஆண்டவரே நம் நீதி') என்ற பெயரால் நகர் அழைக்கப்படும். இன்றைய முதல் வாசகம் சொல்லும் பரிவின் மூன்றாம் பரிமாணம் நீதி. அரசனுக்குரியதை மக்கள் அரசனுக்குக் கொடுக்கிறார்கள் என்றால், மக்களுக்குரியதை அரசன் கொடுக்க வேண்டும். தங்கள் ஊதியத்தை வரியாக அரசனுக்குக் கொடுக்கிறார்கள் என்றால், அந்த வரியை வைத்து அரசன் மக்களின் நல்வாழ்விற்கானதைச் செய்ய வேண்டும். அதைவிட்டு, அவர்களை அச்சுறுத்தவோ, அவர்களைச் சிதறடிக்கவோ அவன் செய்தால் அது நீதி அல்ல.

பரிவின் நான்காம் குணம் 'இணைப்பது.' பரிவு காட்டும் மனம் யாரையும் பிரித்துப் பார்ப்பதில்லை. இதைத்தான் இன்றைய இரண்டாம் வாசகம் (காண். எபே 2:13-18) நமக்குச் சொல்கிறது. யூதர்கள்-புறவினத்தார்கள், கடவுளுக்கு நெருக்கமானவர்கள்-கடவுளைவிட்டுத் தூரமானவர்கள் என இரண்டு இனமாக சிதறுண்டு கிடந்தவர்கள் கடவுளோடும் ஒருவர் மற்றவரோடும் இணைக்கப்பட்டுள்ளீர்கள் என்று கடவுளின் இரக்கத்தை அல்லது பரிவை 'இணைப்பாக' வெளிப்படுத்துகின்றார் பவுல்.

ஆக, இறைவனின் பரிவு

அ. திருத்தூதர்களுக்கு ஓய்வு
ஆ. மக்களுக்குப் போதனை
இ. சிதறடிக்கப்பட்ட மந்தைக்கு நீதி
ஈ. அந்நியப்படுத்தப்பட்ட புறவினத்தாருக்கு இணைப்பு
என்ற நான்கு பரிமாணங்களாக இன்றைய இறைவாக்கு வழிபாட்டில் வெளிப்படுகிறது. இந்த நான்கு பரிமாணங்களையும் நாம் நம் வாழ்க்கைக்கு எப்படி பொருத்திப் பார்ப்பது?

அ. ஓய்வு என்னும் பரிவு

ஓய்வு என்பது நான் எனக்குக் காட்டும் பரிவு. (அ) திருத்தூதர்கள் இயேசுவிடம் திரும்பி வருகின்றனர், (ஆ) பாலைவனத்திற்குச் செல்கின்றனர், (இ) தனிமையை அனுபவிக்கின்றனர். ஆக, மக்களோடும் மக்கள் சார்ந்தவற்றோடும் இருந்தவர்கள் இறைவனை நோக்கித் திரும்புகின்றனர். இது ஓய்வின் முதற்படி. இரண்டு, இவர்கள் பாலைவனம் செல்கின்றனர். பாலைவனம் என்பது வெறுமையின், இல்லாமையின் அடையாளம். அதாவது, 'எங்களால் எல்லாம் முடியும்!' 'எங்களால் தீய ஆவிகளை விரட்ட முடியும்,' 'எங்களால் நோய்களைக் குணமாக்க முடியும்' என்று தங்கள் வெற்றிகளால் நிரம்பி வழிந்தவர்களை வெறுமையாக்க அனுப்புகின்றார் இயேசு. பாலைவனத்தில் அவர்களால் எதுவும் 'முடியாது' என்ற நிலையில் அவர்கள் தங்கள் இயலாமையை, இல்லாமையை உணர்வார்கள். மேலும், அந்தத் தனிமையில் அவர்கள் தங்களோடு உறவாடுவார்கள். இன்று நம்மிடம குறைந்துவருவது ஓய்வு. ஆகையால்தான், நாம் இறைவனிடம் திரும்பிவருவதில்லை. பாலைநிலத்தை உணர்வதில்லை. நம் தனிமையைக் கொண்டாடுவதில்லை. இது எப்போது சாத்தியம்? ஓய்வு என்ற ஒன்று இருக்கும்போது. இன்று நேரத்தை மிச்சமாக்க நாம் நிறைய கண்டுபிடித்துவிட்டோம். இருந்தாலும் நமக்கு நேரம் போதவில்லை. இன்றைய ஊடகமும், தகவல் தொழில்நுட்பமும் நம்மை நிறைத்துக்கொண்டு, 'அடுத்து இது,' 'அடுத்து அது' என்று பரபரப்பாக ஓடவைத்துக்கொண்டே இருக்கின்றன. ஓய்வு என்பது வேலையற்ற நிலை அல்ல. மாறாக, அது வேலைகள் ஒருங்கிணைக்கப்பட்ட, இறைவனிடம் ஒப்புவிக்கப்பட்ட நிலை. தூங்கும்வரை ஃபோன், தூங்கும்போதும் ஃபோன், தூங்கி எழுந்ததும் ஃபோன் என்று நம் தனிமையை ஃபோனுக்கும் அதன் செயலிகளுக்கும் விற்றுவிடுவதைத் தவிப்பது ஓய்விற்கான ஒரு வழி. பிறருக்கு நாம் பரிவு காட்டுவதை விட எனக்கு நானே முதலில் ஓய்வு என்னும் பரிவைக் காட்ட வேண்டும். இப்படிக் காட்டியதால்தான் நல்ல சமாரியனால் கள்வர் கையில் அகப்பட்டவனுக்கு உதவி செய்ய முடிந்தது. 'என் வேலை, என் பணம், என் முதலீடு, என் இலாபம்' என அவன் ஓடினால் அவனால் மற்றவருக்குப் பரிவுகாட்ட முடியாது. இந்த ஓய்வில்தான் நான் என்னுடைய ரம்பத்தைக் கூர்மையாக்க முடியும்.

ஆ. கற்பித்தல் என்னும் பரிவு

தன்னைத் தேடி ஓடி வந்தவர்களுக்கு அப்படியே உணவு கொடுத்து, உபசரித்து, நோய் நீக்கி திருப்பி அனுப்பிவிடவில்லை இயேசு. மாறாக, அவர்களுக்குக் கற்பிக்கிறார். உணவு, நோய், உடல்நலம் ஆகியவற்றையும் கடந்து உள்ளத்திற்கு ஊட்டம் தருகின்றார். அன்றைய மக்களுக்கு உணவைவிட நல்ல போதனைதான் தேவைப்பட்டது. இன்று நான் மற்றவர்களுக்குக் கற்பிக்கின்றேனா? இன்று நாம் கற்றலைச் சுருக்கிவிட்டோம். 'எல்லாம் சரி. ஒவ்வொருவருக்கும் ஒரு அறநெறி' என்ற நிலைக்கு நாம் கடந்து போவதால் நாம் செய்யும் அனைத்திற்கும் காரணம் கண்டுபிடிக்கிறோம். இன்று ஒருவர் மற்றவருக்குக் கற்பிக்கத் தயங்குகிறோம். அல்லது தவறானவற்றைக் கற்பிக்கிறோம். இன்றைய சமூகம் 'பணம்' என்ற ஒற்றைச் சொல்லைத்தான் கற்பிக்கிறது. வசிக்க வீடு, பேச ஃபோன், போக கார், வங்கியில் சேமிப்பு, ஓட்டல், பெட்ரோல் என பணம் என்ற ஒன்றைச் சுற்றியே நம்மை ஓடவைக்கிறது. 'எப்படியாவது பணத்தைச் சேர்த்துக்கொள்' என்பதுதான் இன்றைய அரசும், ஆட்சியாளர்களும் நமக்குக் கற்பிக்கும் பாடமாக இருக்கிறது. தம்மைத் தேடிவந்த மக்களுக்கு இயேசு 'பலவற்றைக் கற்பித்தார்' எனப் பதிவுசெய்கிறார் மாற்கு. அவை எவை என்பது நமக்குத் தெரியவில்லை. ஆனால், தன்னிடம் எழுந்த பரிவு என்னும் உணர்வால் இயேசு உந்தப்பட்டதால், ஆயனில்லா அவர்கள் நிலையை அறிந்ததால் அழியா மகிழ்ச்சி பற்றியே அவர்களுக்குக் கற்றுக்கொடுத்திருப்பார். ஆக, இன்று நான் நல்லதைக் கற்க வேண்டும். கற்பிக்க வேண்டும்.

இ. நீதி என்னும் பரிவு

அவரவருக்கு உரியதை அவரவருக்குக் கொடுப்பது என்பது 'நீதி' என்னும் சொல்லாடலின் பொருள். இஸ்ரயேலின் மேய்ப்பர்கள் மந்தைக்கு உரியதை மந்தைக்குக் கொடுக்காமல் தங்களுக்கே கொடுத்துக்கொண்டனர். தங்களைப் பராமரித்துக்கொண்டு மந்தையைச் சிதறடித்தனர். தாங்கள் உண்டுகொழுத்து மந்தையைப் பட்டினிபோட்டனர். இவ்வாறாக, நீதிக்குப் பதிலாக அநீதியைத் தழுவிக்கொண்டார்கள். நீதி உள்ளம் கொண்டவரால்தான் பரிவு காட்ட முடியும். கள்வர் கையில் அகப்பட்டவன் குற்றுயிராய்க் கிடந்தபோது, அவனுக்கு உரிய பொருளும், உயிரும் மறுக்கப்பட்டபோது அதை அவனுக்கே வழங்க முற்படுகின்றான் நல்ல சமாரியன். அவனிடமிருந்தே நீதி என்னும் உணர்வு அவனைப் பரிவிற்கு அழைக்கிறது. தன் சொத்தை தன்னிடமிருந்து பிரித்து, வெளியூர் சென்று ஊதாரித்தனமாக செலவழித்து, தன் இல்லத்திற்கு வெறுமையாக வந்தாலும், மகனுக்கு உரியதை மகனுக்கே வழங்க முற்படுகின்றார் தந்தை. இந்தப் பரிவின் பின்புலத்தில் இருப்பது நீதி. ஆக, நம் வீடுகளில் பிள்ளைகளுக்கு உரியதை பிள்ளைகளுக்கும், பெற்றோருக்கு உரியதை பெற்றோருக்கும் அவரவருக்கு உரியதை அவரவருக்கும் கொடுக்கும்போது நீதியும், பரிவும் கரம்கோர்க்கின்றன.

ஈ. இணைப்பு என்னும் பரிவு

யூதர்கள் தேர்ந்துகொள்ளப்பட்ட இனம் என்றும், புறவினத்தார் ஒதுக்கப்பட்ட இனம் என்ற எண்ணத்தில் யூதர்களுக்கும் புறவினத்தாருக்கும், புறவினத்தாருக்கும், கடவுளுக்கும் இடையே இருந்த சுவற்றை உடைக்கின்றார் இயேசு. ஆக, பரிவில் இணைப்பு நிகழ்கிறது. நல்ல சமாரியன் நிகழ்விலும், ஊதாரி மகன் நிகழ்விலும், காயப்பட்டவரும், மகனும் முறையே தங்கள் சமூகத்தோடும், தங்கள் குடும்பத்தோடும் இணைக்கப்படுகின்றனர். பரிவு இல்லாத இடத்தில் பகைமையும், விரிசலும் இருக்கும். ஏனெனில் அங்கே ஒருவர் மற்றவருக்கான வேற்றுமை மட்டுமே பார்க்கப்படும், பாராட்டப்படும். ஆனால், பரிவில் ஒருவர் மற்றவர் தங்களுக்கிடையேயான ஒற்றுமைகளை மட்டுமே பார்ப்பர்.

இறுதியாக,

'தாயினும் சாலப் பரியும்' இறைவனின் பரிவுள்ளம் ஓய்வு, கற்பித்தல், நீதி, மற்றும் இணைப்பு என தன்னையே விரித்துக்காட்டுகிறது. இன்றைய நம் ஓட்டத்தையும், போட்டியையும், போராட்டங்களையும் கொஞ்சம் ஓரங்கட்டிவிட்டு நான் என்னோடும், நான் ஒருவர் மற்றவரோடும் பரிவு காட்டப் பழகினால் நலம். வேகம் குறைத்தலும், வேகமாய் ஓடிவருவோரை ஆற்றுப்படுத்துவதும், வேகமாய் சிதறடிக்கப்படுவோரைக் கூட்டிச் சேர்ப்பதும் பரிவு.

 
 

Tuesday 10 July 2018

ஆண்டின் பொதுக்காலம் 15-ஆம் ஞாயிறு


ஆண்டின் பொதுக்காலம் 15-ஆம் ஞாயிறு

இன்றைய நற்செய்தி வாசகங்கள்
ஆமோஸ் 7:12-15
எபி. 1:3-14
மாற்கு 6:7-13

ஞாயிறு இறைவாக்கு- அருள்பணி முனைவர் ம.அருள்
குடும்பத்தைக் கட்டி எழுப்பு


நாம் வாழும் இன்றைய காலக் கட்டத்திலே திறமையும், சக்தியும் வாய்ந்த மனிதர்களைத் தேடிச் செல்கின்றது இன்றைய சமுதாயம். திறமை மிக்க ஆசிரியர்களைத் தேடுகிறார்கள் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்குக் கல்வி கற்பிக்க சக்தியும், திறமையும் வாய்ந்த மருத்துவரை நாடுகின்றான் ஒரு நோயாளி. திறமை வாய்ந்த சமையல் கலைஞனை தேடுகின்றான் ஓர் உணவக உரிமையாளன். திறமை வாய்ந்த ஓட்டுநரை நாடுகின்றான் ஒரு அதிகாரி தன் காரை ஓட்ட. இவ்வாறு ஒவ்வொரு துறையிலும் திறமையை நாடுகின்றோம். ஆனால் திறமையானது பிறப்பிலே வந்துவிடுவதும் இல்லை. புத்தக அறிவால் நிறைவு பெறுவதும் இல்லை. மாறாக மனிதனின் அன்றாட அனுபவத்தில் நிறைவு காண்பதுதான் திறமை. பழமொழி ஆகமம் 24- ஆம் அதிகாரம், 3-4 வசனங்கள் தருவது போல எந்த ஒரு செயலும் முதலில் ஞானத்தோடு திட்டமிடுவதால், அறிவோடு செயல்படுவதால், காலக்குறிகளுக்கு ஏற்றவாறு அமைப்பதால் திறமை மிக்க செயலாகும் என்று நிரூபிக்கப்படுகிறது.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஞானத்தின் இருப்பிடமாகத் திகழ்ந்த இயேசு என்ற திறமை மிக்க ஒப்பற்ற தலைவர் திறமை மிக்கவர்களைத் தேடவில்லை. ஆனால் சாதாரண, படிப்பறிவில்லா பாமரராக கடலிலே தொழில் நடத்திய மீனவர்களை அழைத்தார். தன் ஞானத்திலே பயிற்சி கொடுத்தார். ஆவியின் சக்தியிலே பலப்படுத்தினார். திறமை மிக்க சீடர்களாக உருவாக்கினார். தான் கொடுத்த நற்செய்தியை அறிவிக்க இருவர் இருவராக அனுப்பினார். நற்செய்தியை அறிவிக்க திறமை மிக்க பாத்திரங்களாக மாறினார்கள். சாட்சி பகரும் உண்மை வீரர்களாக மாறினார்கள். இவர்கள் ஆற்றிய அரும்பெரும் செயல்களை நற்செய்தி ஏட்டிலே நாம் காணலாம். வாசித்து மகிழலாம்.

இன்றைய நாட்களிலே இறைவன் உன்னையும் அழைக்கலாம். தனியாக அல்லது குடும்பமாக . எதற்காக? குடும்பங்களைக் கட்டி எழுப்ப உன்னை அழைக்கலாம். இன்று எத்தனையோ குடும்பங்கள் பிளவுபட்டுக் கிடக்கின்றன. கணவன் மனைவிக்குள்ளே பிரிவு. பெற்றோர் பிள்ளைகளுக்குள்ளே விரிசல். திருமணத்தில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் மீறப்படுகின்றன அல்லது மறைக்கப்படுகின்றன. கணவன் குடித்து குடும்பத்தின் பொறுப்பற்ற நிலையிலே வாழும் காட்சி. அதனால் மனைவி கண்ணீர் கடலிலே தவிக்கும் காட்சி. மனைவி கணவனை மதிக்காத நிலையிலே தான்தோன்றித் தனமாக மாறும் காட்சி. பணம், பதவி, இன்பம் இவைகளுக்கு இடம் கொடுத்து, உண்மை அன்புக்கு இடமின்றி வறண்ட பாலைவனமாக இன்று எத்தனையோ குடும்பங்கள் காட்சித் தருகின்றன. இத்தகைய குடும்பங்களைக் கட்டி எழுப்ப இறைவன் உன்னையும் உன் வாழ்க்கை துணைவர், துணைவியையும் அழைக்கலாம்.

சென்னை மாநகரத்திலே எனக்குத் தெரிந்த சாதாரண கூலி வேலை செய்யும் ஒரு குடும்பம் உண்டு. நல்லதோர் குடும்பம். கணவனும் மனைவியும் இன்பத்திலும், துன்பத்திலும் ஒன்றுபட்டு வாழும் தம்பதிகள். என்னைச் சந்தித்தபோது அவர்களின் பணி வாழ்வில் ஒன்றை என்னிடம் மகிழ்ச்சியோடு கூறினார்கள். வாரத்தில் இரண்டு நாட்கள் மாலையில் சில குடும்பங்களை நாங்கள் கணவன் மனைவியுமாக சந்திக்கின்றோம். இறைவன் அன்றாட வாழ்வில் எங்களுக்குச் செய்த இணையற்ற கொடைகளை எடுத்துச் சொல்லுகின்றோம். எப்படி எங்கள் வாழ்வில் துன்பங்களையும், சவால்களையும் சந்திக்கின்றோம் என்பதையும் பகிர்ந்து கொள்ளுகிறோம். நாங்கள் சந்திக்கும் குடும்பங்கள் எங்களிடம் பகிர்ந்து கொண்ட நிகழ்ச்சிகளைக் கவனத்தோடு நாங்கள் செவிமடுக்கின்றோம். இறுதியாக எங்களுக்குத் தெரிந்த சிறிய செபத்தால் குடும்பத்தோடு சேர்ந்து செபிக்கின்றோம். இது எங்களைப் பலப்படுத்துகிறது என்றும் குறிப்பிட்டார்கள்.

ஆம் நண்பா! நீயும் உன் மனைவியும் இதற்குச் சான்றாகத் திகழலாம் அல்லவா! சகோதரியே! நீயும் உன் கணவனும் இதற்குச் சான்று பகரலாமே! என்ன தகுதி எனக்கு உண்டு? என்ன திறமை எனக்கு உண்டு என்று திகையாதே! இறைவனுக்குத் தகுதியுள்ளவர்கள் தேவையல்ல. தகுதியற்ற உன்னை தகுதியுள்ளவராக்குவார். உறுதியூட்டும் இறைவனால் எனக்கு எதையும் செய்ய ஆற்றல் உண்டு என்று புனித பவுல் அடிகளார் பிலிப்பியருக்கு எழுதிய மடலிலே 4-ஆம் அதிகாரம் 13 - ஆம் வசனத்தில் குறிப்பிடுவது போல் தேவன் உன்னை ஆற்றல் மிக்க பாத்திரமாக மாற்றுவார். ஆனால் ஒன்று, நீ பிற குடும்பங்களுக்கு திருத்தூதராக மாறும்போது முதலில் நீ உன் குடும்பத்திற்கு திருத்தூதராக மாறுவாய். அது உன்னைப் பலப்படுத்தும். உன் குடும்பம் நிறைவும் மகிழ்ச்சியும் பெறும். பலப்படுத்தும் தேவன் உன்னை வழிநடத்துவாராக.




மகிழ்ச்சியூட்டும் மறையுரைகள் - குடந்தை ஆயர் F. குழந்தைசாமி
துறவு மனத்தவரின் தூயவாழ்வு எப்படி இருக்க வேண்டும்?


இயேசு அவருடைய சீடர்களுக்கு அளித்த அறிவுரை வழியாக மனத் துறவைப் பற்றிய விளக்கமொன்றை நமக்குத் தருகின்றார். அவர் தம் சீடர்களைப் பார்த்து, பயணத்திற்குக் கைத்தடி தவிர உணவு, பை, இடைக்கச்சையிலே செப்புக்காசு முதலிய வேறு எதையும் நீங்கள் எடுத்துக்கொண்டு போகவேண்டாம். ஆனால் மிதியடி போட்டுக் கொள்ளலாம். அணிந்திருக்கும் அங்கி ஒன்றே போதும் (மாற் 6:8-9) என்கின்றார்.

துறவின் மையம் வெறுமை போல தோன்றும்! ஆனால் துறவு உண்மையிலேயே நிறைவானது, வல்லமை மிக்கது, ஆற்றல் வாய்ந்தது.

இரு நண்பர்கள்! இருவரும் துறவிகள்! ஒருவர் முற்றிலும் துறந்தவர்! மற்றொருவர் சற்றே மாறுபட்டவர். இருவரும் ஓர் ஆற்றைக் கடக்க வேண்டிய சூழ்நிலை! மாலை நேரம்!

முற்றிலும் துறந்தவர், "ஓடக்காரருக்குக் கொடுக்க, என்னிடம் பணமில்லை ; இங்கேயே தங்குவோம். காலையில் யாராவது நமக்கு உதவிசெய்வார்கள்” என்றார். மற்றவரோ, "இது காடு. மிருகங்களால் நமக்கு ஆபத்து ஏற்படலாம். என்னிடம் பணமிருக்கின்றது. ஆற்றைக் கடந்து விடுவோம்" என்றார்.

இருவரும் அக்கரையை அடைந்தார்கள். அப்போது முற்றும் துறந்தவரைப் பார்த்து அவருடைய நண்பர், "உம்மைப்போல நானும் முற்றும் துறந்திருந்தால் ஆற்றைக் கடந்திருக்க முடியாதே" என்றார்.

அதற்கு முற்றும் துறந்தவர் சொன்னார் : "உன் துறவு மனப்பாங்குதான் நம்மை இக்கரை சேர்த்தது. நீ பொருளைப் படகோட்டிக்குக் கொடுக்காமல் இருந்திருந்தால் நாம் வந்து சேர்ந்திருக்க முடியாது. மேலும் என் பையில் பணமில்லாதபோது உன்னுடையது என்னுடையதாயிற்று. எனக்குத் தேவையானது எனக்கு எப்படியும் கிடைத்துவிடுகின்றது. பொருள் இல்லாததால் ஒருபொழுதும் நான் துன்புற்றதில்லை” என்றார்.

இதனால்தான் இயேசு பற்றற்ற வாழ்வுக்கு, துறவு வாழ்வுக்கு நம்மை அழைக்கின்றார். இல்லறத்தில், தனியறத்தில் வாழ்பவர்கள் கூட துறவை மேற்கொள்ளலாம். மனத் துறவு - இது எல்லாருக்கும் பொதுவானது. துறவு மனம் படைத்தோர் ஒருபோதும் ஏமாறுவதில்லை - ஏனென்றால் அவர்கள் எதையும் எதிர்பார்ப்பதில்லை!
துறவு மனம் படைத்தோர் எதையும் இழப்பதில்லை - ஏனென்றால் அவர்கள் எதையும் பற்றிக்கொள்வதில்லை! ( முதல் வாசகம் ).

மேலும் அறிவோம் :
பற்றுக பற்றற்றான் பற்றினை; அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு (குறள் : 350).

பொருள் : எவற்றின் மீதும் பற்று வைக்காமல் இருப்பவரிடம் பற்று வைக்கலாம். உலகச் செல்வங்கள் மீது பற்றுக்கொள்வோர் அவை நிலையற்றவை என்பதை உணர்ந்து, பற்றற்றான் ஆகிய இறைவன் மீது பற்று வைப்பர்.




மறையுரை மொட்டுக்கள் -அருள்பணி Y. இருதயராஜ்

பெந்தக்கோஸ்து சபையைச் சார்ந்த கிறிஸ்துவர்கள், "இயேசு வருகிறார் என்ற தலைப்பில் பல துண்டுப் பிரசுரங்களை அச்சடித்து அவற்றை ஒரு பேருந்து நிலையத்திலிருந்த பயணிகளுக்குக் கொடுத்தனர். மேலும், ஒரு பேருந்து நடத்துனரிடம் அதைக் கொடுக்க, அவர் அதைப் படித்துப் பார்த்துவிட்டு, "இயேசு வருகிறாரா? யார் வந்தாலும் வரட்டும்; ஆனால், மரியாதையாக 'டிக்கட்' வாங்கிக் கொண்டுதான் பேருந்தில் ஏறவேண்டும்" என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டார்.

இன்று இயேசுவே வந்தாலும், அவர் பயணச்சீட்டு வாங்கிக் கொண்டுதான் பேருந்தில் ஏறமுடியும்: பயணம் செய்ய முடியும், அப்படியிருக்க, இன்றைய நற்செய்தியில், இயேசு தம் சீடர்களை நற்செய்திப் பணிக்காக அனுப்பும்போது, அவர்கள் தங்களுடன் உணவோ, பையோ, காசோ எதுவுமே எடுத்துச் செல்லவேண்டாம் என்று கட்டளையிடுகிறாரே; இது நடைமுறைக்கு ஒத்துவருமா? என்று நாம் கேட்கலாம்,

இன்றைய நற்செய்தியில் இயேசு இரண்டு உண்மைகளை வலியுறுத்துகிறார். ஒன்று, நற்செய்தியை அறிவிப்பவர்கள் பணத்தை அல்ல, கடவுளையே நம்பித் தங்கள் தாதுரைப் பணியை மேற்கொள்ள வேண்டும். இரண்டு, நற்செய்தியைக் கேட்பவர்கள் அதை அறிவிப்பவர்களின் இன்றியமையாத் தேவைகளை நிறைவு செய்யக் கடமைப்பட்டுள்ளாளர்.

நற்செய்தியை அறிவிப்பவர்கள் கடவுளை மட்டுமே நம்பித் தங்கள் பணியை ஆற்றவேண்டும், செல்வமும் சொத்துக்களும் நற்செய்திப் பணிக்கு மாபெரும் இடையூறாகவும் வேகத் தடைகளாகவும் உள்ளன. நற்செய்திப் பணிக்காகச் சொத்துக்களைக் குவிப்பவர்களுக்கு. இறுதியில் அச்சொத்துக்களைக் கட்டிக் காப்பதற்குத்தான் நேரமிருக்கும்; நற்செய்திப் பணிக்கு நேரமிருக்காது.

நற்செய்தி அறிவிப்பவர்கள் ஊர் ஊராகச் செல்லவேண்டும். எவ்வளவுக்கு அதிகமாகப் பொருள்கள் அவர்களிடம் உள்ளதோ, அவ்வளவுக்கு அவர்கள் ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்குச் செல்லத் தயங்குவார்கள்.

தனது பங்கிலே 100 தென்னம்பிள்ளைகளை நட்டுவளர்த்த பங்குத்தந்தை. அம்மரங்கள் காய்க்கும்வரைத் தன்னை அப்பங்கிலிருந்து மாற்றக்கூடாது என்கிறார். கட்டடம் கட்டிக் கொண்டிருக்கும் பங்குத்தந்தை. அக்கட்டடம் கட்டி முடியும்வரை பணிமாற்றத்தை எதிர்க்கிறார், அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு, பல இலட்சங்களைத் தனியார் நிறுவனத்தில் கொடுத்து வைத்த துறவறச் சபைக் குரு. அந்நிறுவனம் திவ்லாகி, 'மஞ்சள் நோட்டீஸ் அனுப்பியவுடன் மாரடைப்பால் மரணமடைகிறார்!

"எவரும் இருதலைவர்களுக்குப் பணிவிடை செய்ய முடியாது. நீங்களும் கடவுளுக்கும் செல்வத்துக்கும் பணிவிடை செய்ய முடியாது” (மத் 8:24). ஆண்டவரின் இவ்வருள் வாக்கை மறந்தத் திருப்பணியாளர்கள் காலப்போக்கில் திருவாளர்களாக மாறிவிடுவதில் வியப்பொன்றுமில்லை, பொருளாளர்கள் அருளாளர்களாக இருப்பது ஒருபோதும் இயலாது. புனித சாமிநாதர் மூன்றாம் 'இன்னசென்ட்' என்ற திருத்தந்தையைச் சந்தித்தபோது, திருத்தந்தை அவரிடம், "பேதுரு தன்னிடம் பொன்னோ வென்ளியோ இல்லை என்றார். ஆனால் நான் அவ்வாறு கூற முடியாது. ஏனெனில் என்னிடம் ஏராளமாகப் பொன்னும் வெள்ளியும் உள்ளன என்றார். அதற்குச் சாமிநாதர் திருத்தந்தையிடம், "உங்களிடம் பொன்னோ வெள்ளியோ இல்லை என்று கூறமுடியாது. ஆனால் நீங்கள் முடவனைப் பார்த்து எழுந்து நட' என்றும் சொல்ல முடியாது" என்று பதிலடி கொடுத்தார். பேதுருவும் ஏனைய திருத்தத்தங்களும் புதுமை செய்தனர்; ஏனெனில் அவர்களிடம் பொன்னும் வெள்ளியுமில்லை. இக்காலத்தில் திருப்பணியாளர்களிடம் ஏராளமாகப் பொன்னும் வெள்ளியும் இருப்பதால் அவர்களால் புதுமை செய்ய இயலவில்லை .
திருப்பணியாளர்கள் தங்கள் அருள் பணிக்குப் பணம் வாங்கக் கூடாது. ஏனெனில் கொடையாக, அதாவது, இலவசமாகப் பெற்றுக் கொண்டதைக் கொடையாக, இலவசமாகவே வழங்க வேண்டும் (மத் 10:8) என்பதுதான் இயேசுவின் விருப்பம்

ஒரு பங்கிற்கு உறுதிப்பூசுதல் கொடுப்பதற்காக ஆயர் சென்ற போது, உறுதிப்பூசுதல் பெறும் சிறுவர்கள் ஓர் உறையுள் 10 ரூபாய் வைத்து ஆயருக்குக் காணிக்கையாகக் கொடுக்க வேண்டுமென்று பங்குத்தந்தைக் கேட்டிருந்தார், ஓர் உறையுள் 10 ரூபாய் இருந்தது: அத்துடன் ஒரு காகிதத்துண்டில், “பரிசுத்த ஆவியைப் பெறுவதற்குமா இலஞ்சம் கொடுக்க வேண்டும்?" என்று எழுதப்பட்டிருந்தது.

திருப்பலி நிறைவேற்றுவதற்கும் திருவருள் சாதனங்களை வழங்குவதற்கும் இறைமக்களிடமிருந்து பெறப்படுவது இலஞ்சமோ கட்டாயக் கட்டணமோ அல்ல; மாறாக, திருப்பணியாளர்களைப் பராமரிப்பதற்காக இறைமக்கள் கொடுக்கும் விருப்பக் காரிக்கையாகும், திருப்பணியாளர்கள் இழிவான ஊதியத்திற்காகப் பணி செய்யலாகாது (1பேது 5:2). ஆனால், பங்கு மக்கள் தங்களது பங்குப்பாரியாளரைப் பராமரிக்க வேண்டிய கடமையும் உரிமையும் கொண்டுள்ளனர். இக்கடமையை இயேசுவும் புனித பவுலும் வலியுறுத்துகின்றனர்.

'வேலையாள் தம் உணவுக்கு உரிமை உடையவரே' (மத் 10:10 இயேசு வின் சீடருக்கு ஒரு கிண்ணம் குளிர்ந்த நீர் கொடுப்பவரும் கைமாறு பெறுவார் (காண்க: மத் 10:42) "நற்செய்தியை அறிவிக்கிறவர்கள் அந்நற்செய்தியின் மூலமாகவே பிழைப்புக்கு உரியவற்றைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென்று நம் ஆண்டவர் பனரித்திருக்கிறார்" (1கொரி 9:14), “இறைவார்த்தையைக் கற்றுக் கொள்வோர் அதைக் கற்றுக் கொடுப்போருக்குத் தமக்குள்ள நலன்கள் அனைத்திலும் பங்கு அளிக்க வேண்டும்" (கலா 6:6).
ஞாயிறு திருப்பலி முடிந்து, தனது சிறிய மகனுடன் வீடு திரும்பிய ஒரு பெண்மணி, பங்குத் தந்தையின் பிரசங்கத்தைப் பற்றிக் கடுமையாக விமர்சனம் செய்து. கண்டபடி அவரைத் திட்டினார். அவருடைய சிறிய மகன் அவரிடம், "ஆமா, நீ போட்ட 10 பைசாவுக்கு இதைவிட நல்ல பிரசங்கம் வேணுமா? பேசாம வாங்கம்மா" என்றாள், 10 பைசா உண்டியலில் போட்டுவிட்டு, 10,000 கேள்விகள் கேட்பார் பலர் உண்டு ,

ஒவ்வொருவரும் தங்கள் மாதவருமானத்தில் 1/10 பகுதியை கொடுக்கவேண்டாம்: 1/100 பகுதியாவது கொடுத்தாலே போதும். பங்குத் தந்தையைக்கூடப் பராமரிக்காத பங்கு மக்கள் கடவுளிடமிருந்து கொடைகளை எதிர்பார்க்க முடியுமா?


*கொடுங்கள் உங்களுக்குக் கொடுக்கப்படும்" (லூக் 6:33) "மனவருத்தத்தோடோ கட்டாயத்தினாலேயோ கொடுக்க வேண்டாம். முகமலர்ச்சியோடு கொடுப்பவரே கடவுளின் அன்புக்குரியவர், கடவுள் உங்களை எல்லா நலன்களாலும் நிரப்பவல்லவர்" (2கொரி 9:7-8),




ஆண்டவரின் பேரன்ப - அருள்பணி  ஏசு கருணாநிதி.
ஒரு நிகழ்வைக் கற்பனை செய்வோம். தீபாவளி நேரம். பேருந்துகள் மற்றும் இரயில்களில் கூட்டம் அலைமோதுகிறது. மதுரையில் இருக்கும் எனக்கு அன்று காலையில் செய்தி வருகிறது. சென்னையில் இருக்கும் என் நண்பர் ஒருவர் ரொம்பவும் நோய்வாய்ப்பட்டிருக்கிறார். நான் அவரைக் காண விழைந்து புறப்படுகிறேன். பேருந்துகளில் நெரிசல் அதிகம் இருப்பதால் வைகை எக்ஸ்பிரஸ் எடுத்து செல்லலாம் என நினைத்து இரயில் சந்திப்பு வருகிறேன். கரன்ட் டிக்கெட் எடுக்கும் இடத்திலும் நீண்ட கூட்டம். கூட்டத்தில் ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து டிக்கெட்டும் வாங்கிவிடுகிறேன். பிளாட்ஃபார்முக்கு வேகமாக செல்கிறேன். எக்ஸ்பிரஸ் புறப்படும் நேரம் என அறிவிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. கூட்டம் அதிகமாக இருப்பதால் எல்லாரையும், எல்லா டிக்கெட்டுகளையும் பரிசோதிக்கிறார்கள். அப்படி பரிசோதிப்பவரிடம் என் டிக்கெட்டையும், அடையாள அட்டையையும் காட்டியவுடன், அவர் ஒரு நொடி யோசித்துவிட்டு, 'சார், நீங்க தான் அவரா! வாங்க சார். உங்களுக்காக ஒருத்தர் ஃபர்ஸ்ட் கிளாஸ் ஏசி புக் பண்ணியிருக்கார். லக்கேஜ் இவ்ளோதானா!' என்று தொடர்ந்தவர், 'தம்பி, வா, சாரோட லக்கேஜ் எடுத்துட்டுப் போ!' என்று போர்ட்டருக்குக் கட்டளையிடுகிறார். நான் ஒன்றும் புரியாமல் நிற்கிறேன். 'சார்! ரொம்ப ஆச்சர்யப்படாதீங்க! உங்க டிக்கெட், போர்ட்டர் கூலி, நீங்க சென்னையில் பயணம் செய்வதற்குக் கார் என அனைத்தையும் அவர் உங்களுக்காக புக்கிங் செய்துவிட்டார். பணமும் கொடுத்துவிட்டார்! நீங்க போய் உங்க சீட்ல உட்காருங்க!' என்கிறார்.

நான் என் இருக்கை நோக்கிச் செல்லும்போது என்னில் எழும் அந்த உணர்வைத்தான் இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். எபே 1:3-14) தருகின்றார் தூய பவுல். அதாவது, 'நாம் தூயோராகவும், மாசற்றோராகவும் தம் திருமுன் விளங்கும்படி உலகம் தோன்றுவதற்கு முன்பே கடவுள் நம்மைக் கிறிஸ்து வழியாக தேர்ந்தெடுத்தார் ... ... தமக்குச் சொந்தமான பிள்ளைகளாக்கிக் கொள்ள அன்பினால் முன்குறித்துவைத்தார்' என்கிறார் பவுல். நம் நிலை என்ன என்றே தெரியாதபோது, நம் நிலை இப்படித்தான் இருக்கும் என்று கடவுள் நம்மை மேன்மைப்படுத்தியிருப்பதாகச் சொல்கிறார் பவுல். இரயில் கண்டுபிடிப்பதற்கு முன்பாகவே இரயிலில் பயணம் முன்பதிவு செய்துள்ளார் இறைவன். இது இறைவனின் பேரன்பையே காட்டுகிறது.

'ஆண்டவரே, உமது பேரன்பை எங்களுக்குக் காட்டியருளும்' என்று இன்றைய பதிலுரைப்பாடலில் (திபா 85) திருப்பாடல் ஆசிரியர் வேண்டுகிறார். அதாவது, என்னை அன்பு செய்யும் ஒருவர் என் தேவை அறிந்து எனக்கு இரயிலில் முன்பதிவு செய்கிறார். இந்த செயல் அவரது அன்பின் வெளிப்பாடு என்றால், நான் இந்த உலகில் படைக்கப்பட்டதும், கடவுளால் வழிநடத்தப்படுவதும், அவரது மகனால் மீட்கப்படுவதும் கடவுளின் பேரன்பின் வெளிப்பாடு அன்றோ!

கடவுளின் பேரன்பு இன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்கினர் ஆமோஸின் வாழ்விலும், இன்றைய நற்செய்தி வாசகத்தில் திருத்தூதர்களின் வாழ்விலும் செயல்படுவதைப் பார்க்கிறோம். இந்த இரண்டு நிகழ்வுகளிலும் சாதாரண ஒரு நிலையிலிருந்து மனிதர்கள் அசாதாரண நிலைக்கு உயர்த்தப்பெறுகின்றனர்.

இன்றைய முதல் வாசகத்தில் (காண். ஆமோ 7:12-15) இறைவாக்கினர் ஆமோஸ் பெத்தேலின் குருவாக இருந்த அமட்சியாவின் எதிர்ப்பை சம்பாதிக்கின்றார். இறைவாக்கினர் பணி என்பது காசுக்கான அல்லது பதவிக்கான பணி என எண்ணிய அமட்சியாவுக்குப் பதிலடி கொடுக்கின்ற ஆமோஸ், 'நான் இறைவாக்கினனும் அல்ல. இறைவாக்கினனின் மகனும் அல்ல. ஓர் ஆடு மேய்ப்பவன். தோட்டக்காரன்' என்கிறார். அதாவது, தன் இறைவாக்குப் பணியால் தான் தன் ஆடுகளையும், தன் தோட்டத்தையுடம் இழந்தவன் என்றும், இறைவனின் அழைப்பினால்தான் தான் இறைவாக்குப் பணியை செய்வதாகவும் சொல்கின்றார். ஆக, என் அழைப்பும், என் அனுப்பப்படுதலும் என் சொந்த விருப்பு வெறுப்பினாலோ, என் மனத்தின் உள்ளாசைகளாலோ தோன்றியது அல்ல. மாறாக, என்னை அழைத்தவர் என்னைத் தேர்ந்தெடுத்து, ''என் மக்களாகிய இஸ்ரயேலிடம் சென்று இறைவாக்கு உரை' என அனுப்பினார்' எனச் சொல்கின்றார். சாதாரண ஆடு, மாடு மேய்க்கும், தோட்டக்கார வேலையிலிருந்து இறைவாக்கினர் நிலைக்கு ஆமோஸை உயர்த்துகிறது ஆண்டவரின் பேரன்பு.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். மாற் 6:7-13) இயேசு பன்னிருவரை தம்மிடம் வரவழைத்து, அவர்களை இருவர் இருவராக அனுப்புகின்றார். இயேசுவின் சமகாலத்து ரபிக்கள் தங்களுக்கென சீடர்களை வைத்திருந்தாலும் அவர்களைத் தனியாக பணிக்கு அனுப்புவதில்லை. தங்கள் பெயரே எல்லா இடத்திலும் வழங்கப்பட வேண்டும் என்பதற்காக அவர்கள் தாங்களே பணிக்குச் செல்வர். அப்படி தங்கள் சீடர்களை அழைத்துச் சென்றாலும், அவர்களை வெறும் ஏவல் வேலைகளுக்கு மட்டுமே பயன்படுத்துகிறார். ஆனால், இயேசு பன்னிருவரை தனியாக அனுப்புவதன் வழியாக அவர்களை தன் உடன்பணியாளர்கள் ஆக்குகிறார். மேலும், ரபிக்கள் தாங்கள் பணிக்குச் செல்லும்போது, தங்களுக்குத் தேவையான உணவு, துணி, பணம் அனைத்தையும் தங்களுடன் எடுத்துச் செல்வர். ஒரே வீட்டில் தங்க மாட்டார்கள். போய்க்கொண்டே இருப்பார்கள். இதற்கெல்லாம் ஒரு மாற்றுக் கலாச்சாரத்தைத் தன் சீடர்களுக்கு இயேசு கற்றுக்கொடுக்கின்றார்.

இன்றைய நற்செய்தியில் இயேசுவின் செயல்களை மூன்று வினைச்சொற்களில் பதிவு செய்கின்றார் மாற்கு:

அ. அனுப்பத் தொடங்கினார்
ஆ. அதிகாரம் அளித்தார்
இ. கட்டளையிட்டார்

அ. 'அனுப்புதல்'. நாணயத்தின் ஒரு பக்கம் 'அழைத்தல்' என்றால், அதன் மறுபக்கம் 'அனுப்புதல்.' இறையழைத்தலின் மறுபக்கம் இறைப்பணி. எனக்கு இறையழைத்தல் இருக்கிறது என்றால், அது வெறுமனே நான் அமர்ந்து அதில் இன்புறுவதற்காக அல்ல. மாறாக, அனுப்பப்படுதலில்தான் அழைத்தல் நிறைவுபெறுகிறது. 'தம்மோடு இருக்க பன்னிருவரை தேர்ந்தெடுத்த இயேசு' (காண். மாற் 3:14) இப்போது அவர்களை இருவர் இருவராக அனுப்புகின்றார். ஆக, இதுவரை பயிற்சி பெற்றவர்கள் இப்போது பணிக்குச் செல்கிறார்கள். கல்லூரிக்கல்வி முடிந்து வேலை அல்லது வாழ்க்கைப்பணி தொடங்குகிறது இவர்களுக்கு.

ஆ. 'அதிகாரம் அளித்தார்'.
'தீய ஆவிகளின்மேல் அதிகாரம் அளிக்கின்றார்' இயேசு. இது இயேசு தீய ஆவிகளின்மேல் கொண்டிருந்த அதிகாரத்தையும் குறிக்கிறது. அதிகாரம் வைத்திருப்பவர் தானே அதை மற்றவர்களுக்கு அளிக்க முடியும். ஆக, அதிகாரம் என்பதன் பொருளை மாற்றுகிறார் இயேசு. அனுப்பப்படுபவர் கொண்டிருக்க வேண்டிய அதிகாரம் மக்கள்மேலோ, பணத்தின் மேலோ, இடத்தின் மேலோ அல்ல. மாறாக, தீய ஆவிகளின்மேல். ஆக, என் அதிகாரத்தைக் கண்டு தீய ஆவிகள் பயப்படலாமே தவிர, நான் பணிசெய்ய செல்லுமிடத்தில் உள்ளவர்கள் பயப்படக்கூடாது.


இ. 'கட்டளையிட்டார்'. என்ன கட்டளை? 'உணவு,' 'பை,' 'செப்புக்காசு' எடுத்துச் செல்ல வேண்டாம் என்னும் கட்டளை. 'உணவு' என்பது இவர்களின் 'உடல் தேவைகளையும்,' 'பை' என்பது இவர்களின் 'அன்புத் தேவைகளையும்,' 'செப்புக்காசு' என்பது இவர்களின் 'பாதுகாப்புத் தேவைகளையும்' குறிக்கிறது. அதாவது, சாதாரணமாக நாம் தேடும் உடல், அன்பு, மற்றும் பாதுகாப்புத் தேவைகள் நம்மை ஒரு இடம் அல்லது நபரோடு கட்டிவைத்துவிடுகின்றன. நாம் எதற்காக நம் வீட்டில் இருக்கிறோம்? உணவுக்காக, உறவுக்காக, பாதுகாப்புக்காக. ஆக, வீடு உணவையும், உறவையும், பாதுகாப்பையும் தந்தாலும், அது அதே நேரத்தில் என்னைக் கட்டியும் வைத்துவிடுகிறது. என் வீட்டைவிட்டு என்னால் வெளியே செல்ல என்னால் முடிவதில்லை. ஆனால், இயேசுவின் கட்டளை திருத்தூதர்களைக் கட்டின்மைக்கு அழைத்துச் செல்கிறது. ரோட்டில் ஒரு நாயை அழைத்துச் செல்கிறோம் என வைத்துக்கொள்வோம். நாய்க்குட்டியின் கழுத்தில் பெல்ட் போட்டு, சங்கிலியின் மறுபக்கத்தை நாம் பிடித்திருந்தாலும், நாம் நாய்க்குட்டியைப் பிடித்திருப்பதுபோல, நாய்க்குட்டியும் நம்மைப் பிடித்துக்கொள்கிறது. நம்மை விட்டு அது எப்படி ஓட முடியாதோ, அதுபோலவே அதைவிட்டும் நான் ஓட முடியாது.

இந்த மூன்று சொல்லாடல்கள் - 'அனுப்புதல்,' 'அதிகாரம் அளித்தல்,' 'கட்டளையிடுதல்' - இயேசு தன் திருத்தூதர்களை சாதாரண நிலையிலிருந்து அசாதாரண நிலைக்கு உயர்த்துகிறார். இது இயேசுவின் பேரன்பிற்குச் சான்றாகத் திகழ்கிறது. இப்படி உயர்த்தப்பட்டவர்கள் தங்கள் வேலைகளைச் சரியாகச் செய்துமுடிக்கின்றனர் எனவும் மாற்கு பதிவு செய்கின்றார்.

இவ்வாறாக, ஆண்டவரின் பேரன்பு,

முதல் வாசகத்தில், ஆமோஸை 'ஆடுமேய்ப்பவர்' நிலையிலிருந்து 'இறைவாக்கினர்' நிலைக்கும்,
இரண்டாம் வாசத்தில், நம்பிக்கையாளரை 'ஒன்றுமில்லாதவர்' நிலையிலிருந்து 'கடவுளின் மகன்-மகள்' நிலைக்கும்,
மூன்றாம் வாசகத்தில், திருத்தூதர்களை 'உடல்-உறவு-பாதுகாப்பு தேவை கட்டுகள்' நிலையிலிருந்து 'கட்டின்மை' நிலைக்கும் அழைத்துச் செல்கிறது.

இந்த அழைப்பு அல்லது உயர்த்துதல் மற்றொன்றையும் நமக்குச் சொல்கிறது. முழுக்க, முழுக்க இது இறைவனின் அருள்செயலே அன்றி, இதில் மனித முயற்சிக்கும், மனித அறிவுக்கும், மனித ஆற்றலுக்கும் பங்கில்லை. இது ஒருபோதும் உயர்த்தப்படுபவரின் தெரிவு அன்று. மாறாக, உயர்த்தப்படுபவர்மேல் கடவுளே வலிந்து திணிக்கும் ஒரு நிலை.

கடவுளின் பேரன்பிற்கு நாம் தகுதியாக்கிக்கொள்ளத் தேவையில்லை. மாறாக, அவரே அதைக் கொடையாகக் கொடுக்கின்றார்.

அதே வேளையில் கடவுள் காட்டும் பேரன்பை நாம் நம் வாழ்வில் அனுபவிக்க அதற்கேற்ற சூழலை உருவாக்கவேண்டும். இச்சூழலை உருவாக்குவது எப்படி?

1. வேர்களும், விழுதுகளும்
ஆமோஸின் இறைவாக்குப் பணி என்னும் விழுது அமட்சியா என்ற பெத்தேல் அருள்தலக் குருவால் கேள்விக்குட்படுத்தப்படும்போது, ஆமோஸ் ஆடுமேய்க்கும் பணியாகிய தன் வேரை மனத்தில் கொள்கின்றார். விழுது பரப்புவதற்கு, இறைவாக்கு பணி செய்வதற்கு ஆண்டவர்தாம் அனுப்பினார் என்றாலும், இந்த அனுப்புதல் ஆமோசுக்குத் தெரியுமே தவிர, அமட்சியாவுக்குத் தெரியாது. இவ்வாறாக, நாம் அனுப்பப்படும் நிலையை மற்றவர்கள் தங்கள் அறியாமையால் உதறித் தள்ளும்போது நாம் நம் வேர்களைப் பற்றிக்கொள்ள வேண்டும். நம் வேர்களை நாம் நினைத்துப் பார்க்கும் போது நம் இயலாமை நமக்குப் புரியத் தொடங்குகிறது. அதே நேரத்தில் நம் வேர்கள் நம்மைப் பின் நோக்கி இழுக்காவண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டும். ஆமோஸ் அதைச் சரியாகச் செய்கிறார். 'நீ இறைவாக்குரைக்க வேண்டாம்' என்று அமட்சியா சொன்னவுடன், அவர் உடனடியாகத் தன் ஆடுமேய்க்கும் பணிக்குத் திரும்பிவிடவில்லை. கடவுளின் பேரன்பு தன்னை ஆட்கொண்டு தன்னை உயர்த்தியது. தான் கடந்து வந்த நிலை கண்முன் நின்றாலும், கடந்து வந்த பழைய நிலைக்கே திரும்பத் தேவையில்லை. தொடர்ந்து அவர் இறைவாக்குப்பணியைச் செய்கின்றார். ஆக, கடவுளின் பேரன்பை உணர்ந்த ஒருவர் தன் வேர்களை மறக்கவும், அதே வேளையில் தன் கடந்த காலம் நோக்கி பின்செல்லவும் கூடாது.

2. புள்ளிகளை இணைத்தல்

நாம் ஒரு புள்ளியில் பிறந்து மறு புள்ளியில் இறக்கின்றோம். ஒரு நாளில் பிறந்து இன்னொரு நாளில் இறக்கின்றோம். நாம் காலத்திற்கும், இடத்திற்கும் உட்பட்டு வாழ்கின்றோம். பிறக்கும்போது ஒரு ஊர், வளரும்போது இன்னொரு ஊர், பணி செய்ய இன்னொரு ஊர், இறக்கும்போது இன்னொரு ஊர் என நம் வாழ்க்கை மாறிக்கொண்டே இருக்கின்றது. ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு இடமும், ஒவ்வொரு மனிதரிடமும் நாம் நகரும்போது நாம் ஒவ்வொரு புள்ளியை விட்டுக்கொண்டே செல்கின்றோம். கொஞ்ச நேரம் உட்கார்ந்து யோசித்துப் பார்த்தால் அந்தப் புள்ளிகள் மிக அழகாக இணைவதை நம்மால் பார்க்க முடியும். நமக்கு நடந்தது எதுவும் விபத்தில்லை. எல்லாமே ஏதோ ஒரு திட்டத்தில்தான் நடந்திருக்கிறது என்றும் தோன்றும். இதுதான் நம் வாழ்க்கை நிலை. இந்த நிலையை அப்படியே இன்னும் கொஞ்சம் உயர்த்துகிறார் தூய பவுல். நம் பிறப்பை உலகின் தொடக்கம் என்ற புள்ளியோடு இணைக்கின்றார். ஆக, உலகின் தொடக்கத்திலேயே நம் வாழ்க்கைப் புள்ளியும் தொடங்கி தொடர்கிறது. படைப்பு என்ற தாயோடு உள்ள தொப்புள்கொடி நம்மில் நீண்டுகொண்டே இருக்கிறது. அந்த தொப்புள்கொடிதான் நம் வாழ்வின் இலக்கோடு நம்மை இணைக்கின்றது. நம் வாழ்வில் இறைவன் வைத்திருக்கும் நோக்கம் என்னவென்றால், 'நாம் தூயோராகவும், மாசற்றோராகவும் அவர் திருமுன் விளங்குவது, அவரின் பிள்ளைகளாக இருப்பது'. அழகாக வடிவமைக்கப்பட்ட ஒரு கடிகாரம் அதை வடிவமைத்தவரின் திறமையைக் காட்டுகிறது. அதுபோல, நாம் வாழ்கின்ற நல்ல வாழ்க்கை நம்மை உருவாக்கிய இறைவனுக்குப் புகழ்சேர்க்கிறது. ஆக, இத்தகைய புகழுக்குரிய வாழ்வை வாழ்வது நம் கடமையாக இருக்கிறது. இவ்வாறாக, கடவுளின் பேரன்பு நமக்குக் கொடையாக வந்தாலும், அதற்கேற்ற வாழ்வை வாழ்வது நம் கடமையாகவும், நம்மேல் சுமத்தப்பட்ட பொறுப்பாகவும் இருக்கிறது. கொடை என்ற புள்ளியை, நம் பொறுப்புணர்வு என்ற புள்ளியோடு இணைக்கும்போது நாம் இறைவனோடு இன்னும் நெருக்கமாகின்றோம்.

3. தங்குங்கள், உதறுங்கள்
'அழைக்கப்பட்ட' திருத்தூதர்கள் இயேசுவால் 'அனுப்பப்படுகின்றனர்,' 'அதிகாரம் கொடுக்கப்படுகின்றனர்,' மற்றும் 'உயர்ந்த நிலைக்குக் கொண்டுசெல்லப்படுகின்றனர்'. இவ்வாறாக, அவர்களின் இந்த முன்னேற்றம் அவர்கள் விருப்பத்தால் நிகழ்வது அல்ல. மாறாக, அது அவர்கள் மேல் திணிக்கப்படுகிறது. அவர்களின் விருப்பு வெறுப்பு இங்கே கருத்தில் கொள்ளப்படுவதில்லை. ஏனெனில் அவர்கள் இயேசுவின் அழைப்புக்கு 'ஆம்' சொன்ன அந்த நிமிடமே தங்கள் விருப்பங்களை இயேசுவிடம் ஒப்படைத்துவிடுகின்றனர். இயேசுவின் அன்பு தங்களை ஆட்கொள்ள விட்டுவிடுகின்றனர். இப்படி ஆட்கொள்ளப்பட்டவர்களுக்கு இயேசு இரண்டு வார்த்தைகளில் அறிவுறுத்துகின்றார்: 'ஏற்றுக்கொண்டால் தங்குங்கள்,' 'ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் உதறுங்கள்.' இந்த இரண்டையும் மாற்றிப் போட்டால் எப்படி இருக்கும்? நம்மை ஏற்றுக்கொள்கிறவரை நாம் உதறவும், நம்மை ஏற்றுக்கொள்ளாதவரிடம் நாம் தங்கவும் செய்தால் வாழ்க்கை ரொம்பவும் கலவரமாகிவிடும். மற்றவரோடு தங்குவதற்கு நிறைய பொறுமையும், தாராள உள்ளமும் தேவை. மற்றவரிடமிருந்து விலகிச் செல்வதற்கு நிறைய துணிச்சலும், மனத்திடமும் தேவை. இந்த இரண்டு செயல்களின் ஊற்றாக அல்லது அளவுகோலாக ஒருவர் வைத்துக்கொள்ள வேண்டியது இறைவனின் பேரன்பு.

இறுதியாக,

நம் வாழ்வை ஒரு நொடியில் புரட்டிப்போடும், பறக்க வைக்கும் இறைவனின் பேரன்பிற்கு நன்றிகூறும் இந்நாளில், அவர் விடுக்கும் அழைப்பு ஒவ்வொருவரையும் நோக்கி வருகிறது. அந்தப் பேரன்பே நம்மை ஆட்கொண்டுள்ளதால் அவர் அனுப்பும்போது அவரின் பேரன்பு நம் வழியாக யாவரையும் ஆட்கொண்டால், நாம் எல்லாரும் தூயோராய், மாசற்றோராய், அவரின் பிள்ளைகளாய் அவர்முன் இருப்போம்.

அவர் அன்பு நம்மை ஆட்கொண்டால் அன்றாடம் வளர்ச்சியே, வெற்றியே, மகிழ்ச்சியே!

'ஆண்டவரே, உமது பேரன்பை உங்களுக்குக் காட்டியருளும்!'