Friday 23 February 2018

தவக் கால 2-ஆம் ஞாயிறு

தவக் கால 2-ஆம் ஞாயிறு
தொநூ 22:1-2, 9-13, 15-18; உரோ 8:31ஆ-34; மாற் 9:2-10

கீழ்ப்படிதலே பெரிது !
குடந்தை ஆயர் அந்தோணிசாமி.

கடவுளின், பரமதந்தையின் அன்புக்குரியவர்களாக வாழ விரும்பினால் நாம் என்ன செய்யவேண்டும்? என்பதற்கு இன்றைய வாசகங்கள் பதில் தருகின்றன.

இன்றைய முதல் வாசகத்தில் ஆபிரகாம் எப்படி இறைவனின் அன்புக்கு உரியவரானார் என்பதைப் பற்றி நாம் படிக்கின்றோம். அவர் கடவுளின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்ததால், இறைவனுடைய விருப்பத்தின்படி அவர் நடக்க முன்வந்ததால் அவர் கடவுளுக்கு ஏற்புடையவரானார்.

இன்றைய நற்செய்தியிலே இறைத் தந்தை, இயேசுவைக்குறித்து, "என் அன்பார்ந்த மைந்தர் இவரே; இவருக்குச் செவிசாயுங்கள்" (மாற் 9:7) என்கின்றார். இதற்குக் காரணம் இயேசு சாவை ஏற்கும் அளவுக்கு, அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்து தம்மையே தாழ்த்திக்கொண்டார் (பிலி 2:8). இயேசு, என்னை அனுப்பியவரின் திருவுளத்தை நிறைவேற்றுவதும் அவர் கொடுத்த வேலையைச் செய்து முடிப்பது மே என் உணவு (யோவா 4:34) என்கின்றார். யோவா 5:30-இல் "என் விருப்பத்தை நாடாமல் என்னை அனுப்பியவரின் விருப்பத்தையே நாடுகின்றேன்” என்கின்றார் இயேசு.

கடவுளுக்கு மிகவும் பிரியமானது கீழ்ப்படிதலே (1 சாமு 15:22). பரம தந்தை விரும்பிய கீழ்ப்படிதலை அவருக்குக் கொடுத்த இயேசு, அவரின் அன்புக்குரியவரானார்.

கீழ்ப்படிதலின் தாயாக விளங்குவது எது? நம்பிக்கைதான் கீழ்ப்படிதலின் தாய். நம்பிக்கை என்றால் என்ன? இன்றைய இரண்டாம் வாசகத்தில் புனித பவுல் அடிகளார் கேட்பதுபோல, "கடவுள் நம் சார்பில் இருக்கும்போது, நமக்கு எதிராக இருப்பவர் யார்? தம் சொந்த மகனென்றும் பாராது அவரை நம் அனைவருக்காகவும் ஒப்புவித்த கடவுள், தம் மகனோடு அனைத்தையும் நமக்கு அருளாதிருப்பாரோ?" (உரோ 8:31-32) என்று கேட்பதற்குப் பெயர்தான் நம்பிக்கை. பால் குடிக்கும் தன் மகவைத் தாய் மறப்பாளோ? கருத்தாங்கியவள் தன் பிள்ளை மீது இரக்கம் காட்டாதிருப்பாளோ? இவர்கள் மறந்திடினும், நான் உன்னை மறக்கமாட்டேன் (எசா 49:15) என்ற இறைவார்த்தைகளை நமது வாழ்வின் மையமாக்கிக்கொள்வதற்குப் பெயர்தான் நம்பிக்கை.

கடவுள்மீது நம்பிக்கை வைப்பவர்களை எந்தச் சக்தியாலும் எதிர்க்க முடியாது !

ஓர் அடர்ந்த காட்டின் வழியே ஒரு வழிப்போக்கன் சென்றுகொண்டிருந்தான். திடீரென அவன் முன்னே வந்த ஒரு பெரிய பூதம் அந்த மனிதனைப் பார்த்து, "உன்னை நான் ஒரு கேள்வி கேட்பேன். அதற்குச் சரியான பதிலைச் சொன்னால் உன்னை விட்டுவிடுகின்றேன்” என்றது. அதற்கு அந்த மனிதன், "சரி, கேள்" என்றான். அந்தப் பூதம் அவனைப் பார்த்து, இந்த உலகத்திலேயே மிகவும் பலம் வாய்ந்த மனிதன் யார்?” என்றது.

"கடவுள் மீது முழுநம்பிக்கை வைத்திருப்பவனே, இந்த உலகத்திலேயே பலம் வாய்ந்த மனிதன்” என்று பதில் வந்தது. அதைக் கேட்டதும், அந்தப் பூதம், “இவன் மீது கைவைத்தால், என் மீது கடவுள் கைவைத்துவிடுவார்” எனச் சொல்லி அந்த இடத்தைவிட்டு மறைந்துவிட்டது.

நம்பிக்கை என்பது கடையில் கிடைக்கும் பொருள் அல்ல; மாறாக, அது ஒரு தெய்வீக வாழ்வு (1 கொரி 12:9): அது கேட்பவர்களுக்குக் கொடுக்கப்படும் (லூக் 11:9-13).
நமது மனத்திலே நம்பிக்கை விதை முளைக்குமானால், அது செடியாக வளருமானால், அச்செடியில் கீழ்ப்படிதல் என்னும் மலர் மலர்வது உறுதி !
கீழ்ப்படிதல் இருக்கும் இடத்திலே இறை அன்பு
பாரங்களுக்குப் பாதமாக வரும்!
தோல்விகளுக்குத் தோளாக வரும்!
பாமரர்க்குப் பாரியாக வரும்!
இறை அன்பு - அது
நிழலை நிஜமாக்கும்!
சோதனையைச் சாதனையாக்கும்!
துயரத்தை மகிழ்ச்சியாக்கும்!

மேலும் அறிவோம் :
ஆற்றுவார் ஆற்றல் பணிதல் ; அதுசான்றோர்
மாற்றாரை மாற்றும் படை (குறள் : 985).
பொருள் : செயல் திறமை என்று போற்றப்படுவது எல்லாருக்கும் பணிந்து நடக்கும் பண்பாகும்! அந்தப் பணிவே சால்புடைய பெருமக்களின் பகைவரையும் நண்பராக மாற்றும் ஆற்றல் வாய்ந்த படைக் கருவியும் ஆகும்!




உருமாற்றத் திருக்காட்சி- 

அருள்பணி லூர்துராஜ் -பாளை மறைமாவட்டம்
என்றோ எங்கோ படித்த புதுக்கவிதை இது!
''இன்றுகூட எல்லாரும்
அரிச்சந்திரன்களாக இருக்க முடியும்.
இறுதியில் இறைவன் வந்து
அருள் புரிவதாய் இருந்தால்!”

ஆபிரகாமின் விசுவாசம் அப்படி ஒரு நம்பிக்கையையா அடிப்படையாகக் கொண்டது? இறுதியில் இறைவன் தன் மகனைப் பரிகொடுக்க விடமாட்டார் என்ற எதிர்பார்ப்பா ஒரேப் மலையை நோக்கி அரை நடக்க வைத்தது?

இருட்டிலே நடந்தார் - எது நேர்ந்தாலும் சரி, இறை விருப்பப்படி எல்லாம் நடக்கட்டும் என்ற மனத் தெளிவோடு! நீதிமானை வாழ பாவக்கும் விசுவாச உறுதியோடு!

அவர் கண்முன்னே நம்பிக்கை ஒளி!

விசுவாசத்தால் மலைகளை அசைக்கலாம், பெயர்க்கலாம், அகற்றலாம், மலைபோல துன்பங்களையும் சோதனைகளையும் கடுகளவு நம்பிக்கை காணாமல் செய்து விடும்.

ஆபிரகாமைப் பொருத்தவரை - கண்ணால் காண முடியாததை யெல்லாம் காண வைக்கும் கண் விசுவாசம், காதால் கேட்க முடியாததை யெல்லாம் கேட்கச் செய்யும் காது விசுவாசம். கரத்தால் தொட்டு உணர முடியாததையெல்லாம் தீண்ட வைக்கும் கரம் விசுவாசம். இயலாது, நடக்க முடியாது என்று எண்ணுவதையெல்லாம் சாத்தியமாக்கும் ஆற்றல் விசுவாசம்.

பறவைகளால் பறக்க முடிகிறது. நம்மால் முடிவதில்லை. ஏன் தெரியுமா? பறவைகளுக்கு நிறைய விசுவாசம் உண்டு. விசுவாசம் என்பது இறக்கையாகும். To have faith is to have wings. விசுவாசமுள்ள மனிதனுக்கு விடிவதெல்லாம் புதுப்பிக்கப்பட்ட நம்பிக்கைகளில்! அவன் விழித்து எழுவதெல்லாம் புத்துணர்வு கலந்த எதிர்பார்ப்புக்களில்!

வானத்து விண்மீன்கள் போல உன் இனம் பலுகும் பெருகும் என்பது வாக்குறுதி. ஆனால் இருக்கும் ஒரே மகனையும் எனக்குப் பலிகொடு என்பது எதார்த்தம். இது எப்படி?

கடவுள் என்ன நரபலி கேட்கும் பயங்கரப் பேர் வழியா? ஆபிரகாம் வாழ்ந்த காலத்தில் பல சமயங்களிலும் தங்கள் தெய்வங்களுக்கு நரபலி கொடுக்கும் வழக்கம் இருந்திருக்க வேண்டும். அதனால்தான் இறைவன் ஆபிரகாமின் நம்பிக்கையைச் சோதிக்க அவர் மகனைப் பலியிட வேண்டும் என்று கேட்ட போது அது அவருக்குப் பெரும் சோதனையாகத் தோன்றியதே தவிர பெரிய தவறாகத் தோன்றவில்லை.

முடிவில் கதையின் கருவும் நிறைவும் முற்றிலும் வேறுபட்டவை. அதன் உச்சம் ஈசாக் பலியாகவில்லை என்பது தானே! நெஞ்சுருக்கும் அந்த நிகழ்வின் நோக்கம் என்ன?

ஆபிரகாம் எவ்வளவு உண்மையும் நம்பிக்கையும் உள்ளவர், எவ்வளவு பிரமாணிக்கமானவர் என்பதை அறிந்து கொள்ள அல்ல; (முக்காலமும் உணரும் கடவுளுக்கு அது முன்கூட்டியே தெரியும்) மாறாகக் கடவுள் எவ்வளவு பிரமாணிக்கம் உள்ளவர், வார்த்தை தவறாதவர் என்பதை ஆபிரகாமுக்கு உணர்த்தவே இந்தச் சோதனை. ஒவ்வொரு சோதனையிலும் சோதிக்கப்படுவது மனிதன் மட்டுமல்ல, கடவுளும் தான்!

ஈசாக்கை எரிபலியாக்கும் நிகழ்வு தந்தையான கடவுளின் பேரன்புப் பிரதிபலிப்பு. இறைமகன் இயேசு சிலுவையில் பலியான மீட்பு வரலாற்று நிகழ்ச்சிக்கு ஒரு முன்னோட்டம். அதனால்தான் "தம் சொந்த மகனென்றும் பாராது அவரை நம் அனைவருக்காகவும் ஒப்புவித்த கடவுள்" (உரோமை 8:32) ஆபிரகாமின் பலியை மறுசிந்தனை செய்தார். மாற்றுப் பலிப்பொருளுக்கு ஏற்பாடு செய்தார். ஆனால் தன்மகன் இயேசு கல்வாரியில் பலியாக வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். அதற்கு மாற்றுப் பலிப்பொருள் பற்றி சிந்திக்க விரும்பவில்லை. சாவிலும் கூடத் தன் உடன்படிக்கையை முறிக்காத அன்பு இது. இப்படிப்பட்ட அன்பு எப்படி சாக முடியும்? அதனால்தான் அது உயிர்த்தெழுந்தது. அன்பே நிரந்தரம் என்பதற்குச் சாட்சியாக நம் நடுவே அது உயிர் வாழ்கிறது.

மீட்புப் பயணம் சிலுவை வழியே - இறைமகன் இயேசுவுக்கு மட்டுமல்ல, அவரது சீடர்களுக்கும் கூட.
சிலுவை இயேசுவுக்குச் சுமையாகக் கனத்தது;
சீடர்களுக்கு இடறலாக இருந்தது!
இயேசு தபோர் மலையேற... இரு நோக்கங்கள்:

தன் சிலுவையைச் சுமக்க இறையாற்றல் தேடி... தன் தந்தையைப் பார்த்துச் செபிப்பதற்காக. விண்ணரசுக்குக் குறுக்கு வழியில்லை. குறுகிய வழிதான் உண்டு. குறுக்கு வழி சிலுவையைத் தவிர்ப்பது; குறுகிய வழி சிலுவையைச் சந்திப்பது! சவாலாக ஏற்பது! துன்பத்தைக் குடித்துச் சமாளி - இது பாமரன் நிலை! துன்பத்தைச் சிரித்துச் சமாளி! (“இடுக்கண் வருங்கால் நகுக”) - இது வள்ளுவர் தத்துவம் (திருக்குறள் 621) துன்பத்தைச் செபித்துச் சமாளி - இது கிறிஸ்தவ வாழ்க்கை முறை.
சிலுவையின் இடறலை நீக்கித் தன் சீடர்களை நம்பிக்கை வாழ்வில் வலுப்படுத்த... அனுபவிக்கப் போகும் எதிர்கால மகிமையை அவர்களுக்கு உணர்த்தி அவர்களை உறுதிப்படுத்த. சிலுவை யூதர்களுக்கு இடறல். கிரேக்கர்களுக்கு மடமை. அழைக்கப்பட்ட நமக்கோ கடவுளின் ஞானமல்லவா! தெய்வ வல்லமையல்லவா! இறைவனின் பேரன்பு அல்லவா! (1 கொரி.1:2329). சிலுவையின்றி மகிமை ஏது? தியாகமின்றிச் செழுமை ஏது? "அவருடைய துன்பங்களில் நாம் பங்கு பெற வேண்டும். அப்போது தான் அவரோடு மாட்சியிலும் பங்கு பெறுவோம்". (ரோமை 8:17).






மறையுரைமொட்டுக்கள்
அருள்பணி இருதயராஜ்


சிறுவன் ஒருவன் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்போது, பெரியவர் ஒருவர் அவனிடம், 'பள்ளிக்குச் செல்ல உனக்குப் பிடிக்கிறதா?' என்று கேட்டதற்கு, அச்சிறுவன், "பள்ளிக்குச் செல்லவும், பள்ளியிலிருந்து வீட்டுக்குத் திரும்பவும் பிடித்திருக்கிறது. ஆனால், இந்த இரண்டிற்கும் இடையே நடப்பதுதான் {வகுப்புகள்) எனக்குப் பிடிக்கவில்லை" என்றான்.

நம்மில் பலருக்குக் கிறிஸ்துவின் பிறப்பும் உயிர்ப்பும் பிடித்திருக்கிறது, ஆனால், இந்த இரண்டிற்கும் இடையே நடந்த அவருடைய பாடுகளும் சிலுவை மரணமும் பிடிக்கவில்லை. கிறிஸ்து முதன் முறையாகத் தமது பாடுகளை முன்னறிவித்தபோது, அவருடைய சீடர்களுக்கு அது பிடிக்கவுமில்லை, விளங்கவுமில்லை. எனவேதான் பேதுரு கிறிஸ்துவைத் தனியாக அழைத்து அவரைக் கடித்து கொன்டார் (மாற் 8:32). மெசியாவின் சிலுவையும் சிலுவை மரணமும் சீடர்களுக்கு மாபெரும் இடறவாக இருந்தன.

எனவே, சிலுவையின் இடறலைச் சீடர்களுடைய மனதிலிருந்து அகற்ற, இயேசு பேதுரு, யாக்கோப்பு, யோவான் ஆகிய மூவருடன் ஒக் உயர்ந்த மலைக்குச் சென்று அவர்கள் முன்பாகத் தோற்றம் மாறி, தமது தெய்வீக மாட்சிமையை அவர்களுக்கு வெளிப்படுத்தினார். இந்த மூன்று சீடர்கள் தான் இயேசு கெத்சமனித்தோட்டத்தில் இரத்த வேர்வை வேர்க்கும்போதும் இயேசுவுடன் இருக்கப் போகின்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

உயர்ந்த மலையும் ஒளிரும் மேகமும் இறைப்பிரசன்னத்தின் வெளிப்பாடாகும். இயேசுவுடன் மோசேயும் எலியாவும் தோன்றுகின்றனர், பழைய உடன்படிக்கையில் சட்டமும் இறைவாக்குகளும் முக்கியத்துவம் பெறுகின்றன, சட்டத்தின் பிரதிநிதியாக மோசேவும் இறைவாக்கினார்களின் பிரதிநிதியாக எலியாவும் தோன்றுகின்றனர். இவ்வாறு சட்டமும் இறைவாக்கும் இயேசுதான் மெசியா என்று சான்று பகர்கின்றன. அத்துடன் தந்தையாகிய கடவுளும் இயேசு தம் அன்பார்ந்த மகன் எனச் சான்று பகர்கிறார். உயர்ந்த மலையில் நிகழ்ந்தது ஓர் இறைத் தோற்றம் அல்லது திருக்காட்சியாகும் (Theophathy).

மோசேயும் எலியாவும் இயேசுவுடன் அவர் எருசலேமில் படவேண்டிய அவருடைய பாடுகளைப் பற்றிச் பேசினர் என லூக்கா குறிப்பிடுகின்றார் (லூக் 9:31). மெசியா பாடுபட்டே மாட்சிமை அடைய வேண்டும் (லூக் 24:26) என்ற இறையியல் உண்மை அப்போது வெளிப்படுத்தப்படுகிறது,

தவக்காலத்தில் சிலுவையின் மறைபொருளை நன்குணரவேண்டும். இறைவனுடைய மீட்புத் திட்டம் இயேசுவின் சிலுவை வழியாகவே நிறைவேறுகின்றது. இயேசுவைப் பின்பற்ற விரும்புவோர் சிலுவை சுமந்தே அவரைப் பின்பற்ற வேண்டும். இயேசுவின் சீடர்களுக்குச் சிலுவை விருப்பப்பாடமில்லை, கட்டாயப்பாடமாகும். ஒருவர் தம்மை இழந்தால்தான் வாழ்வு பெறமுடியும், தம் வாழ்வைக் காப்பாற்றிக்கொள்ள விரும்புபவர் அதை இழந்துவிடுவார் (மத் 16:24-25).
இன்றைய முதல் வாசகத்தில் ஆபிரகாம் தமது ஒரே மகன் ஈசாக்கை இழக்க முன்வந்தார். எனவேதான் அவர் தம் மகனை மீண்டும் பெற்றுக்கொண்டார் இயற்கையில் எந்தவொரு பொருளும் தனது பழைய உருவத்தை இழந்த பின்னர்தான் புதிய உருவைப் பெற இயலும். கோதுமை மணி முளைப்பதற்குமுன் அது மண்ணில் விழுந்து மடிய வேண்டும். சந்தனக் கட்டை மணம் கொடுப்பதற்கு முன் அது அரைக்கப்படவேண்டும், கரும்பு வெல்லமாக மாறுவதற்கு முன், அது பிழியப்படவேண்டும். மெழுகுதிரி ஒளி தருவதற்கு முன் அது கரைந்து உருகவேண்டும், பால் சுவை தருவதற்குமுன் அது காய்ச்சப்பட வேண்டும், தங்கம் ஆபரணமாவதற்குமுன் அது நெருப்பில் சுடப்பட வேண்டும். பெண் பிள்ளைப்பேறு அடைவதற்குமுன் அவர் பேறுகால வேதனையுற வேண்டும். அவ்வாறே நாம் கிறிஸ்துவில் புதுப்படைப்பாக மாறுவதற்குமுன், நமது ஆனவமும் சுயநலமும் இறத்து புதைக்கப்பட வேண்டும்.

அரச பக்திமிக்க ஓர் இளைஞன் ஒவ்வொரு நாளும் தனது உடலிலிருந்து பல துளி இரத்தமெடுத்து, அதைக் கொண்டு அரசருடைய உருவப்படத்தை வரைந்து, அதை அரசருடைய பிறந்த நாளன்று பிறந்தநாள் பரிசாக அவருக்குக் கொடுத்தான். நாமும் அவ்வாறே இரத்தம் சிந்தி, அதாவது தியாகங்கள் செய்து தியாக இரத்தத்தைக் கொண்டு இயேசுவின் உருவத்தை வரைய வேண்டும், அதாவது இயேசுவின் சாவுக்கு ஒத்தவர்களாக உருமாற்றமடைய வேண்டும். " இப்போது நாம் அனைவரும் , ஆண்டவரின் மாட்சிமையைப் பிரதிபலிக்கிறோம். இவ்வாறு மேன்மேலும் மாட்சிமை பெற்று, அவர் சாயலாக மாற்றமடைகிறோம்." ( 2கொரி 3:18).

காக்கா என்றும் கறுப்பாக இருப்பதற்குக் காரணம் என்ன? அது இன்னும் உஜாலாவுக்கு மாறவில்லையாம்! உஜாலா சொட்டு நீலம் ஆடைகளை வெண்மையாக்குகிறது, இயேசு உருமாற்றமடைந்தபோது, அவருடைய ஆடைகள் இவ்வுலகில் எந்தச் சலவைக்காரரும் வெளுக்க முடியாத அளவுக்கு வெண்மையாக ஓளிவீசின (மாற் 8:4),

நாம் திருமுழுக்குப் பெற்றபோது நமது மேன்மையின் அடையாளமாகத் திருச்சபை நமக்கு ஒரு வெண்ணிற ஆடையைக் கொடுத்து அதை மாசு படாமல் விண்ணக வாழ்வுக்குக் கொண்டு, போகும்படி பணித்தது, மீட்படைந்தோர் விண்ணகத்தில் வெண்ணிறஆடை அணிந்திருப்பர். (திவெ 7:9), இவர்கள் தங்கள் ஆடைகளைச் செம்மறியின் இரத்தத்தில் தோய்ந்து வென்மையாக்கிக் கொண்டனர் (திவெ 7:14), இயேசுவின் இரத்தம் நம்மை எல்லாவிதப் பாவங்களிலிருந்தும் விடுவித்து நம்மைத் தூய்மையாக்க வல்லது. இத்திருப்பலியில் நாம் இயேசுவின் திருவுடலை உட்கொள்ளும் போதெல்லாம் திடமடைகிறோம், அவரது இரத்தத்தைப் பருகும்போதெல்லாம் கழுவப்படுகிறோம். இதன் விளைவாக நாம் இயேசுவின் சாயலுக்கு ஒத்தவர்களாய் உருமாறவேண்டும். ஒவ்வொரு நாளும், நமது வாழ்க்கைச் சூழலில், தன்னலம் மறந்து பிறருக்காக வாழ்ந்து நம்மையே நாம் இழக்கும்போது நாம் இயேசுவாக மாறுகிறோம். அந்நிலையில் வாழ்வது நாமல்ல, கிறிஸ்துவே நம்மில் வாழ்கிறார் (கலா 2:20).
நாம் சாவுக்குப் பயப்படத் தேவையில்லை, ஏனெனில், நாம் சாகமாட்டோம், வேற்றுருப் பெறுவோம், அழிவிற்குரிய நம் உடல் அழியாமையையும், சாவுக்குரிய நம் உடல் சாகாமையையும் அணிந்து கொள்ளும் (1 கொரி 15:51-54), இயேசுவின் இரண்டாம் வருகையின்போது, படைப்பனைத்தும் புத்துயிர் பெறும்போது, நாமும் அவரைப்போலவே இருப்போம்; ஏனெனில் அவர் இருப்பதுபோலவே அவரைக் காண்போம் (1 யோவா 3:2).










சுற்றுமுற்றும் பார்த்தார்கள்!
அருள்பண் ஏசு கருணாநிதி - மதுரை

இன்றைய முதல் வாசகத்தில் மோரியா நிலப் பகுதியின் மலையில் நடக்கும் ஆபிரகாம் ஈசாக்கைப் பலியிடும் நிகழ்வும், நற்செய்தி வாசகத்தில் எருசலேமிற்கு அருகில் உள்ள ஒரு மலையில் நெருங்கிய அன்புச் சீடர்கள் முன்னிலையில் நடக்கும் இயேசுவின் உருமாற்ற நிகழ்வும் நமக்கு வாசகப் பகுதிகளாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இன்றைய நம் சிந்தனைக்கு இரண்டு பேரை எடுத்துக்கொள்வோம்: (அ) ஆபிரகாம், (ஆ) சீடர்கள்: பேதுரு, யாக்கோபு, யோவான். முதலாம் நபர் தனிநபராகவும், இரண்டாம் நபர் ஒரு குழுவாகவும் இருக்கின்றார். இவர்களுக்கு குறிப்பிட்ட இந்த நாளில் நடந்தேறிய நிகழ்வின்போதும், நிகழ்விற்குப் பின்னும் உள்ள கடவுள் அனுபவம் நம் சிந்தனையின் மையப்பொருளாக இருக்கட்டும்.

'கடவுள் அனுபவம்'

'அந்த அனுபவம்தான் நான்' என்று கடவுள் சொல்வதாக வாழ்வின் அனைத்து அனுபவங்களிலும் கடவுள் இருப்பதாக பதிவு செய்கின்றார் கவிப்பேரரசு கண்ணதாசன்.

இத்தவக்காலத்தில் நாம் தொடங்கியுள்ள தவமுயற்சிகளின் இறுதி இலக்காக இருப்பது கடவுள் அனுபவமே. நாம் அனைவருமே ஏதோ ஒரு வகையில் கடவுள் அனுபவம் பெற ஏங்கிக்கொண்டிருக்கின்றோம். ஆலயத்திற்குச் செல்வதும், செபிப்பதும், நோன்பு இருப்பதும், பிறரன்புச் செயல்கள் செய்வதும், நம் வேலையை இன்னும் அதிக பொறுப்புடன் செய்வதும் என எண்ணற்ற நிலைகளில் கடவுள் அனுபவம் பெற்றுக்கொண்டிருக்கின்றோம். இவைகள்வழியாக கடவுள் அனுபவம் கிடைக்குமா? அல்லது இவைகள் வழியாக மட்டுமே கடவுள் அனுபவம் கிடைக்குமா? என்றும் ஏங்கிக்கொண்டிருக்கின்றோம்.

கடவுள் அனுபவம் என்பது கடவுளின் வெளிப்பாடு வழியாகவும் கிடைக்கலாம் என்பதை இன்றைய வாசகங்கள் நமக்குச் சொல்கின்றன. இந்த வெளிப்பாடு எங்கே நிகழ்கின்றன:

1. 'ஆபிரகாம் தம் கண்களை உயர்த்திப் பார்த்தார்'

'கடவுள் ஆபிரகாமை சோதித்தார்' என்று இன்றைய முதல் வாசகம் தொடங்குகின்றது. கடவுள் மனதரைச் சோதிக்கும் நிகழ்வுகள் எல்லாமே கடவுளின் வெளிப்பாட்டு நிகழ்வுகளாகவே அமைகின்றன. அப்படித்தான் இங்கும் நடக்கின்றது. 'உன் மகனை, நீ அன்புகூறும் ஒரே மகன் ஈசாக்கை அழைத்துக்கொண்டு நான் உனக்குக் காட்டும் மலைகளில் ஒன்றின்மேல் எரிபலியாக அவனை நீ பலியிட வேண்டும்!' என்று கடவுள் ஆபிரகாமிடம் சொல்கின்றார்.

'நீ அன்பு கூறும் ஒரே மகன்' என்ற சொல்லாடலில்தான் கடவுளின் சோதனை அடங்கியுள்ளது: 'உனக்கு எது பெரிது? நீ என்மேல் வைக்கும் அன்பா? அல்லது ஈசாக்கின்மேல் வைக்கும் அன்பா?' தான் கடவுள்மேல் வைத்துள்ள அன்பே என்று கடவுளைக் கட்டிக்கொள்கின்றார் ஆபிரகாம். அவர் எடுக்கும் அந்த முடிவே அவரின் தொடர் செயலாக மாறுகின்றது. குழந்தைகளை எரிபலியாகக் கொடுக்கும் சமய வழக்கம் கீழைத்தேய மற்றும் மெசபதோமிய நாடுகளில் நிலவியுள்ளது என்பதற்கு தொல்லியல் சான்றுகள் நிறைய உள்ளன. ஆக, இந்த நிகழ்வு நடந்திருக்க வாய்ப்பு இருக்கிறது. ஆபிரகாம் மலைக்கு தன் மகனை அழைத்துச் செல்கின்றார். தன் மகனையே விறகுகளைச் சுமக்க வைக்கின்றார். கட்டைகளின் மேல் கிடத்துகின்றார். வெட்டுவதற்கு கையை நீட்டி கத்தியை எடுக்கின்றார். 'எரிபலியாகத்தானே கேட்டார் கடவுள். அப்புறம் ஏன் ஆபிரகாம் வாளை எடுத்து வெட்டினார்?' என்ற கேள்வி உங்களுக்கும், எனக்கும் எழலாம். வெட்டியபின்தான் பலியை எரிப்பது என்பது எரிபலியின் ஒரு கூறு (காண். 1 அரசர்கள் 18:33, 38). கையை உயர்த்தும்போதுதான் அந்த அதிசயம் நடக்கிறது: 'பையன்மேல் கையை வைக்காதே. அவனுக்கு எதுவும் செய்யாதே. உன் ஒரே மகனையும் நீ பலியிட தயங்கவில்லை என்பதிலிருந்து கடவுளுக்கு நீ அஞ்சுபவன் என இப்போது நான் அறிந்துகொண்டேன்' என்று கடவுள் பலியைத் தடுக்கின்றார். அதிசயம் இதுவல்ல. இதற்குப் பின் வருவதுதான்: 'ஆபிரகாம் கண்களை உயர்த்திப் பார்த்தார். முட்செடியில் கொம்பு மாட்டிக்கொண்டு நின்ற ஓர் ஆட்டுக்கிடாயைக் காண்கின்றார். தன் மகனுக்குப் பதிலாக அதை பலியிடுகின்றார்.'

கொம்பு மாட்டிக்கொண்டு கிடந்த இந்த ஆடு - இதை ஆபிரகாம் கண்டுகொள்வதுதான் கடவுள் அனுபவம். 'கண்களை உயர்த்திப்பார்க்கும் ஆபிரகாம்' அதைக் கண்டுகொள்கின்றார். அப்படி என்றால் இவ்வளவு நேரம் இவர் அதைப் பார்க்கவில்லையா? இல்லை.

கொம்பு மாட்டிக்கொண்டு கிடக்கும் ஆடு கத்திக்கொண்டே இருக்கும். மலையின்மேல் ஆபிரகாம் மற்றும் ஈசாக்கைத் தவிர வேறு யாருமில்லை. அங்கு நிலவிய மௌனத்தில் கண்டிப்பாக ஆபிரகாமின் காதில் ஆட்டுக்குட்டியின் கதறல் குரல் விழுந்திருக்கும். ஆனால், அந்தக் குரல் அவருடைய சோகத்தை ஊடுருவ முடியவில்லை. நாமும் ரொம்ப சோகமாக அமர்ந்திருக்கும்போது அருகில் கிடக்கும் செல்ஃபோன் அழைப்பு சத்தம்கூட நம் காதுகளில் விழுவதில்லை. இல்லையா?

ஆபிரகாமின் சோகம் கடவுளின் வார்த்தையைக் கேட்டவுடன் மறைகிறது. நம் வாழ்வில் இயல்பாக எழும் ஓர் உணர்வு சோகம். இந்த சோகம் நாம் எதையாவது இழந்தால் அல்லது இழந்துவிடுவோமோ என்ற பயந்தால் வந்து நம்மைத் தொற்றிக்கொள்கிறது. தன் மகன் தன்னைவிட்டுப் பிரியப்போகிற சோகத்தில் குனிந்துகொண்டே நடந்த ஆபிரகாமின் கண்களுக்கு ஆடு தெரியவில்லை. சோகம் மறைந்தவுடன் மலையில் இருக்கும் அனைத்தும் தெரிகிறது. ஆக, ஆபிரகாம் மலையின் இந்தப் பக்கத்தில் தன் மகனை ஏற்றிக்கொண்டு வரும்போது, கடவுள் மலைக்கு அந்தப் பக்கத்தில் ஓர் ஆட்டை ஏற்றிக்கொண்டுவருகின்றார். இதுதான் வாழ்வின் ஆன்மீகம். வாழ்வின் ஒவ்வொரு நிகழ்விலும் பாருங்களேன். நாம் பாதியைத்தான் செய்கிறோம். மற்ற பாதியை கடவுள் செய்கிறார்.

நான் அரிசி வாங்க கடைக்குச் செல்கிறேன். கடவுள் யார் வழியாகவோ அந்த அரிசியை விளையச் செய்து அங்கே கொண்டுவந்திருக்கின்றார்.

நான் பேருந்தில் ஏறச் செல்கிறேன். கடவுள் யார் வழியாகவோ அந்தப் பேருந்தை இயக்கி அந்த இடத்திற்குக் கொண்டுவருகின்றார்.

நான் தேவை என்று தேடுகிறேன். 'இதுவா என்று பார்!' என்று கடவுள் யார் வழியாகவோ என் தேவையை நிறைவு செய்கின்றார்.

ஆனால், நான் அரிசி வாங்க வேண்டும், பேருந்தில் ஏற வேண்டும், தேவை நிறைய இருக்கிறது என்று மலையின் இந்தப் பக்கத்தைப் பற்றியே நினைத்துக்கொண்டிருக்கின்றேன். ஆனால், மலைக்கு அந்தப் பக்கம் நடக்கும் நிகழ்வுகளைக் கண்களை உயர்த்திப்பார்க்க மறந்துவிடுகின்றேன்.

ஆக, கடவுள் அனுபவம் என்பது கண்களை உயர்த்திப் பார்த்து கொம்பு மாட்டியிருக்கும் ஆட்டை அடையாளம் கண்டுகொள்வது.

கடவுள் அனுபவம் பெற்ற ஆபிரகாம் உடனடியாக அந்த ஆட்டைப் பலியிடுகின்றார்.

இதுதான் கடவுள் அனுபவத்தின் இரண்டாம் நிலை.

'மகனும் கிடைத்தான். வந்ததற்கு ஒரு ஆடும் கிடைத்தது' என்று ஆபிரகாம் ஆட்டையும், மகனையும் கூட்டிக்கொண்டு கீழே இறங்கவில்லை. வாழ்வின் அடுத்த முடிவை எடுக்கின்றார். 'ஆடா?' 'மகனா?' என்று கேட்டு, மேலானதைப் பெற கீழானதை இழக்க வேண்டும் என்று தான் கண்ட ஆட்டைப் பலியிடத் துணிகின்றார் ஆபிரகாம்.

இவ்வாறாக, முதல் வாசகத்தில் கடவுள் அனுபவம் என்பது 'கண்களை உயர்த்திப் பார்ப்பதிலும்,' 'தான் கண்ட முக்கியமில்லாத ஒன்றை, தான் கருதும் முக்கியமான ஒன்றிற்காக தியாகம் செய்வதும்' ஆகும்.

2. 'அவர்கள் சுற்றுமுற்றும் பார்த்தார்கள்'

உருமாற்ற நிகழ்வில் வரும் சீடர்கள் என்னுள் எப்போதும் ஒரு பாவ அல்லது பரிதாப உணர்வையே தூண்டுகின்றனர். திடீர்னு உங்களையும் எங்களையும் ஒருத்தரு மலைக்குக் கூட்டிப்போய் திடீரென அவர் ஒரு பெரிய அமெரிக்க அதிபர் போல மாறி, அவருக்கு அருகில் பழைய அமெரிக்க ஐக்கிய நாடுகளின் அதிபர்கள் நின்றிருந்தால் எப்படி இருக்கும்?

'யார்ரா இவரு?' 'இவரா அமெரிக்க அதிபர்?' 'அமெரிக்க அதிபரை நாம ஏன் பார்க்கணும்?' இப்படி நிறைய கேள்விகள் நம்முள் எழும்.

இயேசுவின் உருமாற்ற நிகழ்வை ஒத்தமைவு நற்செய்தியாளர்கள் பதிவு செய்ய, இதை நேரில் கண்ட யோவான் பதிவு செய்யாமல் விடுவது நமக்கு ஆச்சர்யமாக இருக்கிறது.

இயேசுவின் உருமாற்றம் மூன்று அடையாளங்களில் நடந்தேறுகிறது: (அ) யாரும் வெளுக்க முடியாத வெள்ளை வெளேரென ஒளி வீசும் ஆடைகள், (ஆ) எலியா மற்றும் மோசேயின் உரையாடல், (இ) மேகத்தினின்று குரல். இந்த மூன்றும் இயேசுவின் உருமாற்றத்தை அல்லது வெளிப்பாட்டை அடையாளப்படுத்துகின்றன. இந்த அடையாளங்களை சீடர்கள்தாம் விரைவில் புரிந்துகொள்ள வேண்டும். 'ஒளி வீசும் ஆடை' சீயோன் மலையை நிரப்பும் யாவே இறைவனின் பிரசன்னம் என்றும், எலியா மற்றும் மோசே அனைத்து இறைவாக்கு மற்றும் சட்டங்களின் திலகம் என்றும், அவற்றை நிறைவு செய்ய வந்திருப்பவர் இயேசு என்றும், தந்தையின் குரல் இயேசுவின் அப்பா அனுபவத்தின் முன்னோடி என்றும் அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். ஆனால், அவர்களின் புரிதல்கள் வேறு மாதிரியாக இருக்கின்றன: (அ) சீமோன் பேதுரு முந்திக்கொண்டு, 'நாம் இங்கேயே இருப்பது நல்லது' என்கிறார். (ஆ) 'இறந்து உயிர்த்தெழுதல்' என்றால் என்ன? என்று பேசிக்கொள்கின்றனர்.

என்னைப் பொறுத்தவரையில் சீடர்களின் கடவுள் அனுபவம் வெளிச்சத்திலும், புதிய நபர்களின் வருகையிலும், தந்தையின் குரலிலும் இல்லை. பின் எதில் இருக்கிறது?

'அவர்கள் சுற்றுமுற்றும் பார்த்தபோது தங்கள் அருகில் இயேசு ஒருவரைத் தவிர வேறு எவரையும் காணவில்லை'

இதுதான் அவர்களுக்குக் கிடைத்த கடவுளின் வெளிப்பாடு.

வெளிச்சமும், புது நபர்களும், தந்தையும் மறைத்து இயேசு தனியாக நிற்பவராக வெளிப்படுத்தப்படுகின்றார். ஆபிரகாம் எப்படி கொம்பு மாட்டிக்கொண்டிருந்த ஆட்டைக் கண்டாரோ அப்படியே அவர்கள் இயேசுவையும் கண்டுகொள்கின்றனர். அவர்கள் கண்முன் இருந்தவை மறைந்துபோகின்றன. மற்றவைகள் மறைந்துபோன பின் தோன்றும் 'ப்ளைன்' இயேசுதான் அவர்களின் அனுபவம்.

இங்கே சீடர்களின் எண்ணம், ஏக்கம் அனைத்தும் ஒன்றாக இருக்கிறது: 'இயேசுவோடு நாம் தங்க வேண்டும். அல்லது இயேசு நம்மோடு தங்க வேண்டும்.' 'இங்கே கூடாரம் அமைப்போம்' என்று பேதுரு சொல்லும்போது தான் பெற்ற கடவுள் அனுபவத்தை அவர் அப்படியே உறைபனியாக்க நினைக்கின்றார். ஆனால், இயேசு அவரின் அறிவுரையை ஏற்றுக்கொள்ளவும் இல்லை. நிராகரிக்கவும் இல்லை.

'இங்கேயே இருப்பது நல்லது. மூன்று கூடாரங்கள் அமைப்போம்' என்று சொன்னவர்தான் மூன்றுமுறை இயேசுவை மறுதலிக்கின்றார். சில நேரங்களில் கடவுள் அனுபவத்தை நாம் அதிகமான வெளிச்சத்திலும், அந்த வெளிச்சம் நடத்தும் அற்புதங்களிலும் காண நினைக்கின்றோம். ஆனால் இது எல்லாவற்றையும் விட தனிமையில்தான் இறைவன் தெரிகின்றார். முதல் வாசகத்தில் சோகத்தில் தன் கடவுள் அனுபவத்தை இழந்த ஆபிரகாம் போல, நற்செய்தி வாசகத்தில் தனிமையில் இறைவனனின் அனுபவம் பெறுகின்றனர்.

இந்த இரண்டும் நமக்கு உந்துசக்தியும், ஊக்கமும் தருகின்றன. இதையே இன்றைய இரண்டாம் வாசகத்தில் தூய பவுல் அடிகளாரும், 'கடவுள் நம் சார்பில் இருக்கும்போது, நமக்கு எதிராக யார் வாதாட முடியும்?' என்று கேட்கின்றார்.

இவ்வாறாக, கடவுள் அனுபவம் நம்மை அவரோடு மட்டுமல்லாமல் ஒருவர் மற்றவரோடும் ஒன்றிணைக்கச் செய்கிறது.

இன்று நாம் நம் கடவுளை எப்படி தேடுவோம்?

அ. ஆபிரகாம் போல கண்கள் உயர்த்தி

ஆ. சீடர்கள்போல சுற்றுமுற்றும்

'மேலே உயர்த்துவதும்,' 'சுற்றுமுற்றும் பார்ப்பதும்' சிலுவையின் இரண்டு மரத்தண்டுகள் போல இருக்கின்றன. மேல் நோக்கி இருக்கும் மரத்துண்டு நாம் அவரை நோக்கி உயர்த்துவதையும் (இறையன்பு), சுற்றுமற்றும் பார்ப்பது ஒருவர் மற்றவரை நோக்கி கரம் நீட்டுவதையும் (பிறரன்பு) குறைக்கிறது.

மேலே பார்க்க நமக்குத் தடையாக இருப்பது சோகம்.

சுற்றுமுற்றும் பார்க்க நமக்குத் தடையாக இருப்பது அச்சம் மற்றும் அவசரத்தனம்.

இவ்விரண்டும் களைதலே தவக்காலத்தின் இரண்டாம் வாரத்தின் நம் செயல்களாக இருக்கட்டும்!

இயேசுவின் உருமாற்றம் நிகழ்ந்த அதே நிகழ்வில் சீடர்கள் உளமாற்றம் அடைகின்றனர். ஆபிரகாம் ஈசாக்கைப் பலியிடும் நிகழ்வில் அவர் தன்னையே கடவுளுக்கு உகந்த பலிப்பொருளாக மாற்றுகின்றார். ஆக, கடவுள் அனுபவம் நாம் பெறும் உளமாற்றத்திலும், நாம் பலிப்பொருளாக மாறுவதிலும் இன்னும் சிறப்படைகிறது.

இயேசுவின் ஆடை கறுப்பாக மாறினாலும், சிவப்பாக மாறினாலும், அல்லது மோசேக்குப் பதிலாக யோசுவாவும், எலியாவுக்குப் பதிலாக எலிசாவும் வந்தாலும், கடவுளின் குரல் ஆண்பிள்ளைக் குரலாகவோ, பெண்பிள்ளைக் குரலாகவோ மாறினாலும் இயேசுவின் உருமாற்றம் நிகழும்.

இயேசுவின் உருமாற்றம் இயேசுவுக்கு அல்ல. மாறாக, சீடர்களுக்கு.

ஆபிரகாமின் பலி கடவுளுக்கு அல்ல. மாறாக, ஆபிரகாமுக்கு.

நம் உருவத்தை மாற்றிக்கொள்வதில் காட்டும் அக்கறையை நம் உள்ளத்தை நோக்கி சற்றே திருப்புவோம். அங்கே ஓர் ஆடு கொம்பு மாட்டி நிற்கும். அங்கே ஒரு இயேசு தனியே நின்றுகொண்டிருப்பார்.










No comments:

Post a Comment