Saturday 30 September 2017

பொதுக்காலம் 26-ஆம் ஞாயிறு

பொதுக்காலம் 26-ஆம் ஞாயிறு

            எசேக்கியல்18 25-26 பிலிப்பியர் 2 1-11 மத்தேயு 21 28-32

மறையுரை மொட்டுக்கள்-அருள்பணி Y இருதயராஜ்

ஒரு குட்டியானை அம்மா யானையிடம் தனக்கு ஒரு நீளமான கால்சட்டை வாங்கிக் கொடுக்கும்படி கேட்டது. அவ்வாறே அம்மா  அதற்கு ஒரு நீளக் கால்சட்டை வாங்கி கொடுத்தது. குட்டியானை அம்மா யானையிடம் "கால்சட்டையில் ஒரு பை இருந்தால், அலைபேசி (Cell Phone) வைக்க வசதியாக இருக்கும்" என்றதாம். இக்காலத்தில் யானைக்குக்கூட அலைபேசி தேவைப்படுகிறது.  ஒரு பிச்சைக்காரி ஒரு வீட்டில் "அம்மா பழைய செல்போன் இருந்தால் போடுங்கம்மா" என்றாராம். பார்க்கும் இடமெல்லாம் நீக்கமற நிறைந்து காணப்படுவது கடவுள் அல்ல. மாறாக அலைபேசி. ஆலயத்தில்கூட அலைபேசி ஒலிக்கிறது. ஒரு கோவிலின் முகப்பில் பின்வருமாறு எழுதப்பட்டுள்ளது. "அலைபேசி கொண்டுவராமல் இருப்பது உத்தமம்; அலைபேசி கொண்டுவந்து அதைப் பயன்படுத்தாமல் இருப்பது

மத்திமம். அலைபேசி கொண்டுவந்து அதைப் பயன்படுத்துவது அதர்மம்". அலைபேசி மூலம் பலருடன் தொடர்பு கொள்கிறோம். அது காலத்தின் கட்டாயம். ஆனால் கடவுளுடன் தொடர்புகொண்டு அவர் பேசுவதைக் கேட்கிறோமா? அவர் சொற்படி நடக்கிறோமா? என்பதுதான் சிந்தனைக்குரியது.

பழைய ஏற்பாட்டில் கடவுள் இஸ்ரயேல் மக்களுடன் பேசினார் அவர்களுடன் உடன்படிக்கை செய்தார்: அவர்களுக்குக் கட்டளைகள் கொடுத்தார். அம்மக்கள் "ஆண்டவர் கூறிய வார்த்தைகள் அனைத்தையும் நாங்கள் செயல்படுத்துவோம்"  விப 2437) என்று கூறினர்.

ஆனால் அவர்கள் கடவுளுடைய கட்டளை கடைப்பிடிக்கவில்லை. அதுமட்டுமல்ல கடவுளுடைய வழிகள் சரியல்ல என்றும் கூறினார்கள். எனவே, இன்றைய முதல் வாசகத்தில் கடவுள் இறைவாக்கினர் எசேக்கியேல் மூலம் கூறுகிறார்: "என் வழி சரியானது. உங்கள் வழிதான் சரியல்லை. தீய வழியில் செல்லாமல், என் வழியில் சென்றால், நீங்கள் சாகமாட்டீர்கள் வாழ்வீர்கள்" (எசே 18:25-28). இருப்பினும் இஸ்ரயேல் மக்கள் கடவுளுடைய பேச்சைக் கேட்டுக் கடவுள் வழியில் செல்லவில்லை. பாம்புகுட்டி குறும்பு பண்ணினால் அம்மா பாம்பு என்ன சொல்லும்? "ஒழுங்கா நட இல்லேன்ன தேலை உரிச்சுப்பிடுவேன்" என்று கூறுமாம். குறும்பு செய்த தன் மகனிடம் அம்மா கூறினார் "சொன்ன பேச்சை கேட்கவில்லை என்றால், தோலை உரிச்சி உப்பைத் தடவிப்பிடுவேன்!"


தமது பேச்சைக் கேட்காத இஸ்ரயேல் மக்களைக் கடவுள் அழிக்கவில்லை. மாறாக அவர்களிடம் மிகுந்த பொறுமையைக் காட்டினார். இன்றையப் பதிலுரைப் பாடல் கூறுகிறது "ஆண்டவரே உமது இரக்கத்தையும் பேரன்பையும் நினைந்தருளும். ஏனெனில் அவை தொடக்கமுதல் உள்ளவையே (திபா 25:8). தொடக்க முதல் கடவுள் தம்முடைய மக்களுக்குத் தமது இரக்கத்தையும் பேரன்பையும் காண்பித்தார். ஆனால் அம்மக்கள் தங்கள் போக்கை மாற்றிக் கொள்ளவில்லை. இருப்பினும் கடவுள் தமது வழியையும் மாற்றிக் கொள்ளாமல் அம்மக்களிடம் தம் ஒரே மகனை அனுப்பினார். "பலமுறை பல வகைகளில் முற்காலத்தில் இறைவாக்கினர் வழியாக நம் மூதாதையரிடம் பேசிய கடவுள், இவ்விறுதி நாட்களில் தம் மகன் வழியாக நம்மிடம் (எபி 1:1). கடவுளின் விருப்பம் நாம் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிய வேண்டும்; அவர் செல்வதைக் கேட்க வேண்டும். "என் அன்பார்ந்த மைந்தர் இவரே இவர் பொருட்டு நான் பூரிப்படைகிறேன். இவருக்குச் செவிசாயுங்கள்" (மத் 17:5). திருமுழுக்கு யோவானும் கிறிஸ்துவும் மக்களை மனமாற்றத்திற்கு அழைத்தபோது வரிதண்டுவேரும் விலைமகளிரும் அவர்களுக்குச் செவிசாய்த்தனர். மனம் மாறினர். ஆனால் மறைநூல் அறிஞரும் பரிசேயரும் மனம் மாறவில்லை. இந்தக் கசப்பான உண்மையைக் கிறிஸ்து இன்றைய நற்செய்தியில் இரு புதல்வர்கள் உவமை" மூலம் வெளிப்படுத்துகிறார் (மத் 21:28-32)மூத்த மகன் முதலில் அப்பாவுக்குக கீழ்ப்படியமாட்டேன் என்று சொன்னாலும், பிறகு மனம்மாறித் தோட்டத்திற்கு வேலைக்குச் சென்றான். ஆனால் இளைய மகன் முதலில் அப்பாவுக்குக் கீழ்ப்படிவதாகச் சொன்னாலும். கடைசியில் அப்பாவுக்குக் கீழ்ப்படியவில்லை.

தோட்டத்திற்கு வேலைசெய்யப் போகவில்லை. மூத்த மகன் பாவிகளின் பிரதிநிதி, இளைய மகன் பரிசேயரின் பிரதிநிதி விலைமாதர்கள் மனம் மாறினர் பரிசேயர் மனம் மாறவில்லை. ஆரம்பத்தில் தீய வாழ்க்கை வாழ்ந்தவர் மனம் மாறி நல்வழியில் சென்றால், அவர்கள் வாழ்வர். மாறாக ஆரம்பத்தில் நல்ல வாழ்க்கை வாழ்ந்தவர்கள் கடைசியாகப் பாவத்தில் வீழ்ந்தால் அவர்கள் சாவார்கள் என்று கடவுள் எச்சரிக்கிறார் (ота 18-21-24)
கிறிஸ்து கூறிய "இரு புதல்வர்கள் உவமையில்" அவர் குறிப்பிடாத மூன்றாவது மகனையும் நாம் நினைத்துப் பார்ப்பதில் தவறு இல்லை,
அம் மூன்றாம் மகன் அப்பாவிடம் நான் வேலைக்குப் போகிறேன்" என்று சொன்னதுமட்டுமல்ல வேலைக்குப் போகவும் செய்தார். அவர்தான் கிறிஸ்து. இன்றைய இரண்டாம் வாசகம் கூறுகிறது. "கிறிஸ்து சாவை ஏற்கும் அளவுக்கு அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்தார்" (பிலி 28) கிறிஸ்து ஒரே நேரத்தில் "ஆம்" என்றும் "இல்லை" என்றும் பேசுபவர் அல்ல (2 கொரி 119) அவர் எப்பொழுதும் கடவுளுடைய விருப்பத்திற்கு ஆம் என்று சொல்லி அதன்படி நடந்த அன்பு மகன். கடவுளுக்கு அவர் கீழ்ப்படிந்து சிலுவைச் சாவை ஏற்றதால் கடவுள் அவரை உயிர்த்தெழச் செய்து மகிமைப்படுத்தினர் எவரும் எளிதாக வாக்குறுதி கொடுத்துவிடலாம். ஆனால் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றுவது மிகவும் கடினம் என்கிறார்

வள்ளுவர்.
சொல்லுதல் யாவர்க்கும் எளிய அரியஆம்
சொல்லிய வண்ணம் செயல்  (குறள் 664)

திருப்பலியில் ஆமென் என்று சொல்லிக் கிறிஸ்துவின் உடலை உட்கொள்ளும் நாம், அன்றாட வாழ்வில் ஒவ்வொரு நிகழ்விலும் அவருக்கு ஆமென் என்று சொல்லுகிறோமா?


"என்னை நோக்கி ஆண்டவரே, ஆண்டவரே எனச் சொல்பவரெல்லாம் விண்ணரசுக்குள் செல்வதில்லை. மாறாக, விண்ணுலகிலுள்ள என்  தந்தையின் திருவுளத்தின்படி செயல்படுபவரே செல்வர்" (மத் 7:21)




எண்ணங்களை மாற்றி!

அருள்பணி எசு கருணாநிதி -மதுரை

ரிச்சர்ட் கார்ல்ஸன் அவர்கள் எழுதிய, 'நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கலாம் எந்த நிலையிலும்' (யூ கேன் பி ஹேப்பி நோ மேட்டர் வாட் யூ வான்ட்) என்ற நூலில் யூரிபிடஸ் என்ற மெய்யியலாளர் மற்றும் வரலாற்று அறிஞரின் வார்த்தை ஒன்றை மேற்கோள் காட்டியிருக்கின்றார்: 'இரண்டாம் எண்ணங்கள் எப்போதும் ஞானம் மிக்கவை' ('Second Thoughts are Ever Wiser'). நாங்கள் குருமாணவர்களாக ஆன்மீகப் பயிற்சி ஆண்டில் இருந்தபோது சொல்லிக்கொடுக்கப்பட்ட பல தியானப் பயிற்சிகளில் ஒன்று, 'எண்ணங்களைத் துரத்துவது.' அதாவது, நேராக அமர்ந்து கொள்ள வேண்டும். கண்களை மெதுவாக மூடிக்கொள்ள வேண்டும். நம் சிந்தனையை நம் சிந்தனைகளில் பதிவு செய்ய வேண்டும். அதாவது இந்த நொடியில் என்ன யோசிக்கிறேன் என்று யோசிக்க வேண்டும்.

தான் யோசிப்பதையே யோசிக்கக்கூடிய உயிரினம் மனித உயிரினம் மட்டும்தானே! (யாருக்குத் தெரியும்?!) அப்படி யோசித்துக் கொண்டிருக்கும் போது ஒரு நிமிடத்தில் அதாவது 60 நொடிகளில் நாம் 200 முதல் 300 விஷயங்கள் பற்றிச் சிந்திக்கிறோம். ஆச்சர்யமாக இருக்கிறது. இவற்றில் எந்த எண்ணம் உண்மை எந்த எண்ணம் பொய் என்பதெல்லாம் கிடையாது. எல்லாமே எண்ணங்கள்தாம். எல்லாமே நம் உள்ளத்தில் தோன்றி மறைபவைதாம். 'வெள்ளத்து அனைய மலர்நீட்டம் மாந்தர்தம் உள்ளது அனையது உயர்வு' என்கிறது திருக்குறள். எண்ணங்களின் ஊற்றும், உறைவிடமும் உள்ளமே. 'எண்ணம்போல் வாழ்வு' என்று பல தியான மையங்களில் சொல்லப்படுகிறது.

நம் எண்ணங்கள் இயல்பாகவே மாறக்கூடியவை என்பது ஒருபுறம்.நம் எண்ணங்களை நாமாக மாற்ற முடியும் என்பது மறுபுறம்.இன்றைய இறைவாக்கு வழிபாடு இந்த இரண்டாம் புறத்தைப்பற்றியதாக இருக்கிறது.

எண்ணங்களை நாமாக மாற்றுவது என்றால் எப்படி?இந்தியா முழுக்க ஜியோ சிம்மையும், ஃபோனையும் அறிமுகப்படுத்தி எல்லாரையும் தன் உள்ளங்கைக்குள் வைத்துக்கொள்ள நினைக்கிறது ரிலையன்ஸ் கம்பெனி. ரிலையன்ஸ் கம்பெனி சிம்மைப் பயன்படுத்திய ஒரு கசப்பான அனுபவத்தால் இன்றுவரை ரிலையன்ஸ் என்ற பெயரைக் கேட்டாலே கடுப்பாகிவிடுகிறது. என் நட்பு வட்டாரத்தில் பலர், 'நீயும் ஜியோ சிம் வாங்கிக்கொள்ளலாமே!

ஒரு நாளைக்கு ஒரு ஜிபி இலவசம்!' என்று ரெகமன்டேஷன் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். ஒரு நாளைக்கு ஒரு ஜிபி எனக் கொடுப்பதை உறுதி செய்யும் நம் இந்திய அரசால் ஒரு நாளைக்கு ஒரு கிலோ அரிசியை நமக்கு உறுதி செய்ய முடியவில்லை என்பதுதான் வெட்கக்கேடு. ஸ்மார்ட்ஃபோன் நம் பசியாற்றாது என்பதை நாம் எப்போது உணரப்போகிறோம்? நேற்றைய தினம்

ரிலையன்ஸ் டிஜிட்டல் கடைக்குச் சென்றபோது என்னை அறியாமல் ரிலையன்ஸ் ஜியோ மேல் ஒரு ஈர்ப்பு. இதை வாங்கி அலுவலகத்தில் வைத்தால் நிறைய ஃபோன் பில்லைக் குறைத்துவிடலாம் என மனம் எப்படி எப்படியோ கணக்குப் போட்டது. ஏறக்குறைய அதை விற்பனை செய்பவரின் அருகில் சென்றுவிட்டேன். 'ஜியோ சிம் எடுக்குறீங்களா சார்?' எனக்கேட்டார் விற்பனையாளர். 'இல்லை. சும்மா பார்க்க வந்தேன்' என்று சொல்லிவிட்டு இடம் பெயர்ந்தேன். ஒரு பொருளைக் குறித்த எண்ணம் சில நாள்களில் நமக்கு
மாறிவிடுகிறது.

அதே போலவே ஆள்களைப் பற்றிய எண்ணங்களும் மாறுகின்றன. 'அவனை நான் என்னவோ மோசமானவன்னு நினைச்சேன். ஆனா அவன் நல்லவன்' என்றும், 'அவனை எவ்வளவு நல்லவன்னு நினைச்சேன். ஆனா அவன் இவ்வளவு மோசமானவனா' என்றும் பிறரைப் பற்றிய நம் எண்ண ஓட்டங்கள் மாறியிருப்பதை நாமே உணர்ந்திருக்கிறோம். அல்லது கேள்விப்பட்டிருக்கிறோம்.ஆக, எண்ணங்கள் மாறக்கூடியவை என்பது ஏற்றுக்கொள்ள வேண்டிய ஒன்று.

இன்றைய நற்செய்தி வாசகத்திற்கு (காண். மத் 21:28-32) முந்தைய பகுதியில் இயேசுவின் அதிகாரம் கேள்விக்குட்படுத்தப்படுகிறது. இயேசு தன் அதிகாரம் மற்றும் ஆற்றலின் இரகசியத்தை பரிசேயர்கள், மறைநூல் அறிஞர்கள், மற்றும் கேள்வி கேட்டவர்களோடு பகிர்ந்து கொண்டாலும் அவர்கள் தங்கள் எண்ணங்களை மாற்றிக்கொள்வதாக இல்லை. இந்தப் பின்புலத்தில்தான்,இந்த நிகழ்ச்சியைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?' என்று 'இரு புதல்வர்கள் உவமையை' சொல்கிறார் இயேசு. இந்த உவமை விண்ணரசு பற்றியது அன்று. இதற்குப் பின் வரும் திராட்சைத் தோட்ட குத்தகைதாரர்கள் உவமை விண்ணரசு பற்றியது. மேலும் இந்த உவமை மத்தேயு நற்செய்தியில் மட்டுமே காணக்கிடக்கிறது. வழக்கமாக 'இரு புதல்வர்கள்' எடுத்துக்காட்டுக்களில் 'இளையவர் சிறப்பானவராகவும், மூத்தவர் கண்டிக்கத்தக்கவராகவும் சித்திரிக்கப்படுவார்' (எ.கா. ஊதாரி மைந்தன் உவமை). ஆனால் இங்கே சற்றே
வித்தியாசமாக, 'மூத்தவர் நல்லவராகவும் இளையவர் கண்டிக்கத்தக்கவராகவும்' சித்தரிக்கப்படுகின்றனர்.இந்த உவமையை இரண்டு உரையாடல்களாகப் பிரிக்கலாம்.

அ. தந்தை மற்றும் மூத்த மகன்

இங்கே தந்தை தன் மகனை, 'மகனே' என அழைக்கிறார். 'நீ இன்று திராட்சைத் தோட்டத்திற்குச் சென்று வேலை செய்' என்ற கட்டளையை மகனுக்குத் தருகின்றார் தந்தை. மகன், 'நான் போக விரும்பவில்லை' என்கிறான். இங்கே நன்றாகக் கவனிக்க வேண்டும். 'நான் போகவில்லை' என்று சொல்லவில்லை மகன். மாறாக, 'போவதற்கான விருப்பம்கூட இல்லை' என்கிறான் மகன். அதாவது, 'பொருள்காட்சி போகவில்லை' என்று சொல்வதைவிட, 'பொருள்காட்சி போக வேண்டும் என்ற விருப்பம்கூட இல்லை' என்கிறான் மகன்.

ஆ. தந்தை மற்றும் இளைய மகன்

இளைய மகனும், மூத்த மகனும் ஒரே வீட்டில் அல்லது ஒரே இடத்தில் இருந்தார்களா அல்லது அவர்களுக்கிடையே இட இடைவெளி இருந்ததா என்பது நமக்குத் தெரியவில்லை. மூத்தவனிடம் சென்ற தந்தை இளையவனிடமும் செல்கின்றார். இங்கே அவர் என்ன சொன்னார் என்பது பதிவு செய்யப்படவில்லை. 'அப்படியே சொன்னார்' என பதிவு செய்கிறார் மத்தேயு. 'மகனே' என்று சொன்னாரா என்பதும் தெரியவில்லை. ஆனால், இளைய மகனது பதில், 'நான் போகிறேன் ஐயா' என்று இருக்கிறது. மூத்த மகன் தன் தந்தையை 'ஐயா' 'ஆண்டவரே' என்று அழைக்கவில்லை. ஆனால் இரண்டாம் மகன் வாய்நிறைய அழைக்கிறான்.உரையாடல் முற்றுப்பெற்றுவிட்டது.இப்போ திராட்சைத் தோட்டத்திற்கு வேலைக்கு யார் சென்றார் என்பதையும் சொல்கின்றார் இயேசு. 

மூத்தவன் தன் மனத்தை மாற்றி;க்கொண்டு திராட்சைத் தோட்டத்துக்குச் செல்கிறான் இளையவனும் தன் மனத்தை மாற்றிக்கொண்டு வீட்டிலேயே இருந்துவிடுகிறான்.

மூத்தவனின் உள்ளத்து மாற்றம் அவனைத் தந்தைக்கும், திராட்சைத் தோட்டத்திற்கும் நெருக்கமாக்குகிறது.இளையவனின் உள்ளத்து மாற்றம் அவனைத் தந்தைக்கும், திராட்சைத் தோட்டத்திற்கும் அந்நியமாக்குகிறது. இந்தக் கதையை உடனே அடுத்த லெவலுக்கு எடுத்துச் செல்கின்றார் இயேசு. 'வரிதண்டுவோரும், மகளிரும்' 'மூத்தவன்' எனவும், 'யூதர்களும், மறைநூல் அறிஞர்களும்' 'இளையவன்' எனவும், இரண்டாமவர்கள் யோவானின் நீதிநெறிக்கும் செவிமடுக்கவில்லை, முன்னவர்களின் செயல்களைக் கண்டும் எண்ணத்தை மாற்றிக்கொள்ளவில்லை என்கிறார் இயேசு.

ஆக, எண்ணங்களை மாற்றிக்கொள்வது - நல்லதுக்காக என்றால் - அதில் தவறில்லை.'எண்ணங்களை மாற்றும்போது நம்பிக்கை பிறக்கிறது' என்பது இயேசு சொல்லும் பாடம்.

ஒருவேளை தந்தை மாலையில் வீட்டிற்கு வந்து இரண்டு மகன்களையும் சந்திக்கிறார் என வைத்துக்கொள்வோம். மூத்தமகன் அவரிடம் தான் செய்த வேலை பற்றியும், தோட்டத்து தொழிலாளர்கள் நிலை பற்றியும், தோட்டத்தின் நிலை பற்றியும் பகிர்ந்து கொள்வான். இளைய மகனோ தான் வர முடியாமல் போனதற்காக சாக்குப் போக்குகளை, காரணங்களைப் பட்டியலிடுவான்.

இன்று நாம் பல நேரங்களில் நம் வேலைகளைச் செய்து முடிப்பதற்குப் பதிலாக, அதைச் செய்யாமல் இருந்ததற்கான சாக்குப் போக்குகளைக் கண்டுபிடிக்கிறோம்.இப்படிப்பட்ட ஒரு நிலைதான் இன்றைய முதல் வாசகத்தில் (எசே 18:25-28) இருக்கிறது.

பாபிலோனியாவில் அடிமைப்பட்டுக்கிடக்கின்றனர் இஸ்ரயேல் மக்கள். இவர்கள் தங்களின் இந்த நிலைக்குக் காரணம் தங்களின் மூதாதையரின் பாவம் என்றும் தாங்கள் இயல்பிலேயே குற்றமற்றவர் என்று எண்ணிக்கொண்டு, 'கடவுள் நேர்மையற்றவர். அவர் நம் முன்னோர்களின் பாவங்களுக்காக நம்மைத் தண்டித்துவிட்டார். அவர்களின் குற்றப்பழியை நம்மேல் சுமத்திவிட்டார்' என்று கடவுளின்மேல் குற்றம் சுமத்துகின்றனர். இவர்களின் குற்றச்சாட்டுக்களுக்கு கடவுள் தரும் விடையே இன்றைய முதல்வாசகம்.

'இஸ்ரயேல் வீட்டாரே, கேளுங்கள். என் வழியா நேர்மையற்றது? உங்கள் வழிகளன்றோ நேர்மையற்றவை' என்று சாடிவிட்டு, 'அவர்கள் உண்மையைக் கண்டுணர்ந்து தாம் செய்த குற்றங்கள் அனைத்தினின்றும் விலகிவிட்டால் அவர்கள் வாழ்வர்' என்கிறார் ஆண்டவராகிய கடவுள். அதாவது, தங்களின் எண்ணத்தை மாற்றவேண்டும் இஸ்ரயேல் மக்கள். இந்த எண்ண மாற்றமே உண்மையைக் கண்டுணர்தல்.

இந்த மாற்றம் நிகழாதவரை என்ன நடக்கும்? இஸ்ரயேல் மக்கள் தங்கள் செயல்கள் சரி என்று நிரூபிக்கக் காரணங்கள் அல்லது சாக்கு போக்குகள் தேடிக்கொண்டிருப்பர்.

இன்றைய இரண்டாம் வாசகத்தில் (பிலி 2:1-11) பிலிப்பு நகர திருச்சபைக்கான மடலில் தன் அறிவுரையைத் தொடரும் பவுலடியார் அவர்களிடையே விளங்கிய 'கட்சி மனப்பான்மை' மற்றும் 'வீண்பெருமை' ஆகியவற்றைச் சுட்டிக்காட்டி, 'அவர்கள் தாழ்மையோடும், தன்னலமற்றவர்களாயும் இருக்க வேண்டும்' என அறிவுறுத்தும் பவுல், 'கிறிஸ்து இயேசு கொண்டிருந்த மனநிலையே உங்களிலும்  இருக்கட்டும்!' என அடிக்கோடிடுகின்றார். அதாவது, அவர்கள் கொண்டிருக்கிற எண்ணம் மாற்றம் பெற்று அது கிறிஸ்து இயேசு கொண்டிருந்த மனநிலையாக மாற வேண்டும். அந்த மனநிலை என்ன என்பது ஒரு கிறிஸ்தியல் பாடல் வழியாகத் தெளிவுபடுத்துகின்றார் பவுல்.

ஏற்கனவே தாங்கள் கொண்டிருக்கின்ற மேட்டிமை அல்லது உயர்வு மனப்பான்மை உணர்வை பிலிப்பு நகர திருச்சைபயினர் மாற்றிக்கொள்ள வேண்டும். அப்படி அவர்கள் மாற்றாதபோது தங்கள் உணர்வுகள் மற்றும் செயல்களை நியாயப்படுத்த அவர்கள் சாக்குப் போக்குகளைக் கண்டுபிடிப்பார்கள்.

இன்றைய இறைவாக்கு வழிபாடு நமக்குச் சொல்லும் வாழ்க்கைப் பாடங்கள் எவை?

1. கொஞ்சம் நீட்டிப் பார்ப்போம்

இன்றைய நற்செய்தியில் வரும் 'இரு புதல்வர் உவமையை' கொஞ்சம் முன்னும், பின்னும் நீட்டித்துக் கற்பனை செய்து பார்ப்போம். ஒரு அப்பாவிற்கு நான்கு மகன்கள் இருந்தனர்: எல்லாரையும் ஒன்றாக அழைத்து, 'நீங்கள் என் தோட்டத்திற்கு வேலைக்குப் போங்கள்!' என்கிறார். மகன் 1 'போகிறேன்' என்று சொல்லவுமில்லை. போகவுமில்லை. மகன் 2 'போகிறேன்' என்று சொல்கிறான். ஆனால் போகவில்லை. மகன் 3 'போகிறேன்' என்று சொல்லவில்லை. ஆனால் போகிறான். மகன் 4 'போகிறேன்' என்று சொல்கிறான். போகிறான்.

முதல் நிலை 'கண்டுகொள்ளாத நிலை'. இரண்டாம் நிலை 'ஏமாற்று நிலை'. மூன்றாம் நிலை 'பின்புத்தி மனநிலை'. நான்காம் நிலை 'உண்மை மனநிலை'. இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை மனிதர்கள் தாம் இன்றைய நற்செய்தியில் வரும் மூத்த மற்றும் இளைய மகன்கள். மூத்த மகனுக்கு முதலில் போக விருப்பமில்லை தான். ஆனால் தன் தந்தையின் பேரன்பையும், தாராள உள்ளத்தையும் எண்ணிப்பார்த்து 'சரி! அவருக்காகவாவது போவோம்!' என நினைத்திருக்கலாம். அல்லது 'இந்த வேலையைச் செய்யவில்லையென்றால் வேறு வேலை ஏதாவது கொடுத்து விடுவார். எப்படியோ தப்பித்து ஓடி செய்து விடுவோம்' என நினைத்திருக்கலாம். அல்லது 'இவர் பேச்சைக் கேட்கவில்லையென்றால் நாளைக்கு ஏதாவது தண்டனை கொடுப்பாரோ' என்று பயத்தில் சென்றிருக்கலாம். காரணம் உவமையில் இல்லை. வாசகர்தான் கற்பனை செய்து கொள்ள வேண்டும். இளைய மகன் 'ஏமாற்றினான்' என்று நாம் குற்றம் சாட்ட வேண்டாம். ஆனால் ஏதோ ஒரு வகையில் அவனால் தன் தந்தைக்குத் தந்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியவில்லை. இந்த இரண்டு மகன்களின் மனநிலைகள் இரண்டுமே 'பொய் மனநிலைகள்' தாம். உண்மையான மனநிலை 'நான்காவது மகன்' மனநிலை. அத்தகைய மனநிலையைத்தான் திருமுழுக்கு யோவான், அன்னை மரியாள், மற்றும் இயேசு ஆகியோர் கொண்டிருந்தனர். 'செய்கிறேன்' என்று சொன்னார்கள். அதையே செய்து முடித்தார்கள்.

இன்று இயேசுவின் நம் அன்றாட அழைப்பிற்கு நம் பதில் இந்த நான்கில் எப்படி இருக்கிறது? இயேசுவை விட்டுவிடுவோம்.வாழ்க்கை அல்லது உலகம் என்பது ஒரு திராட்சைத் தோட்டம். வாழ்வு என்னும் கொடையை தந்தையாகிய கடவுள் நமக்குக் கொடுத்து இங்கே அனுப்பியிருக்கிறார். அந்த வாழ்வு என்னும் அழைப்பிற்கு நாம் எப்படி பதில் சொல்கிறோம். மகன் 1 போல 'கண்டுகொள்ளாமல்' இருக்கிறோமா? மகன் 2 போல 'ஏமாற்று' மனநிலை கொள்கிறோமா? மகன் 3 போல 'பின்புத்தி மனநிலையில்' பயத்தால் வாழ்வை வாழ்கிறோமா? அல்லது மகன் 4 போல 'சொல்வதைச் செய்பவர்களாகவும், செய்வதைச் சொல்பவர்களாகவும்' இருக்கின்றோமா? மகன் 4க்குரிய மனநிலையை நாம் பெற வேண்டுமெனில் நல்ல முடிவெடுக்கும் திறனும், முடிவெடுத்தபின் மனதை மாற்றாத திடமும், எடுத்த முடிவை நிறைவேற்றுவதில் விடாமுயற்சியும் அவசியம். இந்த மூன்றில் ஒன்று குறைந்தால் கூட நாம் உண்மையிலிருந்து தவறி விடுவோம்.

2. எண்ணங்களை மாற்றும்போது நம்பிக்கை பிறக்கிறது


இயேசுவின் சமகாலத்து எதிரிகள் அவர்மேல் நம்பிக்கை கொள்ள முடியாமல் போனதற்கான காரணம் அவர்கள் தங்கள் எண்ணங்களை மாற்றிக் கொள்ளவில்லை என்பதுதான். இந்த எண்ணமாற்றம் ஒன்று தானாக நடக்க வேண்டும். அல்லது மற்றவர்களின் முன்மாதிரியைக் கண்டு நடக்க வேண்டும். இவர்களுக்கு இந்த இரண்டு மாற்றங்களுமே இல்லை.இன்று கடவுளை நம்புவதற்கு எனக்கு என்ன எண்ண மாற்றம் தேவையானதாக இருக்கிறது?அல்லது எனக்கும் மற்றவருக்கும் இருக்கும் உள்ள உறவில் அவரை நம்புவதற்குத் தேவையான என் எண்ண மாற்றம் என்ன?

3. 'வலிந்து பற்றிக்கொண்டிருக்க வேண்டியதொன்றாகக் கருதவில்லை'

'கடவுள் வடிவில் விளங்கிய அவர், கடவுளுக்கு இணையாயிருக்கும் நிலையை வலிந்து பற்றிக்கொண்டிருக்க வேண்டியதொன்றாகக் கருதவில்லை.' அதாவது, மற்றொன்றைப் பிடிக்க வேண்டுமென்றால் ஒருவர் தான் ஏற்கனவே பற்றிக்கொண்டிருக்கும் ஒன்றை விட வேண்டும். இயேசு அப்படித்தான் செய்கின்றார். தன் மனுவுரு ஏற்றல் என்பதைப் பற்றிக்கொள்வதற்காக தான் கொண்டிருக்கின்ற கடவுள் தன்மை என்ற பற்றை விடுகின்றார். இன்று நாம் சாக்குப் போக்குச் சொல்வதற்கும், எண்ண மாற்றம் அடைவதற்கும் தடையாக இருப்பது 'வலிந்து பற்றிக்கொள்வதுதான்.' சில நேரங்களில் தவறு என்று தெரிந்தாலும் நம் உயர்வு மனப்பான்மை அல்லது மேட்டிமை உணர்வுக்காக நாம் அவற்றை விட்டுவிடுவதில்லை.

4. வாக்கிங் தி எக்ஸ்டரா மைல்.

நம் வாழ்வின் வெற்றிக்கும், நமக்குக் கிடைக்கும் மகிழ்ச்சிக்கு அடிப்படைக் காரணம் இதுதான். நம்மிடம் எதிர்பார்ப்பதைவிட அதிகமாகச் செய்வது. நான் ஒரு ஆட்டோ ஓட்டுநர் என வைத்துக்கொள்வோம். என்னிடம் எதிர்பார்க்கப்படுவது என்ன? பயணி விரும்பும் இடத்தில் அதற்குரிய தொகையைப் பெற்றுக்கொண்டு அங்கே சென்று அவரை நான் இறக்கி விட வேண்டும். இதையும் விட அதிகமாகச் செய்வது என்றால் என்ன? 'அவரின் உடைமைகளை ஆட்டோவில் இருந்த இறக்க உதவுவது. 'பத்திரமாய்ப் போய்வாங்க!' என்று கனிவுமொழி சொல்வது. 'பயணம் சௌகரியமாக இருந்ததா?' எனக் கேட்பது. இப்படிச் செய்வதால் என்னிடம் ஒன்றும் குறையப்போவதில்லை. ஆனால் அது எனக்கும் என் பயனாளருக்கும் மகிழ்ச்சி தருகிறது. உவமையில் வரும் மூத்த மகன் சொல் அளவில் மட்டும் தாராள உள்ளம் காட்டுகிறான். ஆனால் அவனிடம் செயல் இல்லை. மற்றவன் செயல்படுகிறான். ஆனால் செயல்பாடு தயக்கத்தோடு தொடங்குகிறது. வாழ்வதிலும், நம் உறவு நிலைகளிலும் நம்மிடம் எதிர்பார்ப்பதையும் விட கொஞ்சம் அதிகமாகச் செய்து பார்க்கலாமே?

5. எதிர்பாராத அழைப்பு

இரண்டு மகன்களுக்குமே அழைப்பு எதிர்பாராத நேரத்தில் தான் வருகிறது. அவர்கள் தயாராக இல்லாததால் ஒருவேளை அழைப்பிற்கு பதில் தரமுடியாமல் போயிருந்திருக்கலாம். நான் பணி செய்த ரோம் நகர் பங்கில் ஒருவர் இருக்கிறார். எப்போது கூப்பிட்டாலும் வருவார். காலையில் வேளைக்குச் செல்வார். மதியம் மாணவர்களுக்கு கிட்டார் சொல்லிக் கொடுப்பார். மாலையில் வீட்டை விட்டு வெளியே வரமுடியாமல் தவிக்கும் முதியவர்களுக்கு பால் மற்றும் உணவுப்பொருட்கள் வாங்கிக் கொண்டு போய்க் கொடுப்பார். எங்க ஏரியாவிற்குள் ஆம்புலன்ஸ் நுழைந்தால் அவரும் உடனடியாக அங்கே வந்து விடுவார். பிக்னிக்குக்கு பஸ் ஏற்பாடு செய்வார். பீட்சா வாங்கி வருவார். பார்ட்டி முடிந்ததும் அவரே அனைத்தையும் சுத்தம் செய்வார். ஒருநாள் அவரிடம் உங்களால் எப்படி இதெல்லாம் முடிகிறது எனக் கேட்டேன். அதற்கு அவர் சொன்னார்: 'பைபளில் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று என்ன தெரியுமா? கழுதைக் குட்டி. 'ஆண்டவருக்குத் தேவை' என்று எருசலேம் தெரு ஒன்றில் காத்துக் கொண்டே இருக்கிறது. நானும் ஒரு கழுதைக் குட்டிதான். எந்த நேரத்தில் யாருக்கு என்ன தேவையோ நான் ஓடிவிடுவேன். 'அவர்கள் உன்னைப் பயன்படுத்துகிறார்கள்!' என்று உள்மனம் என்னை பின்னடையச் செய்யும். 'அப்படியாவது நான் பயன்படட்டுமே!' என்று எதையும் பொருட்படுத்தாமல் ஓடி உதவி செய்வேன';.

தயார்நிலையே வாழ்வின் வெற்றி நிலை.

இறுதியாக, 'முக்கியமில்லாத ஒன்றிற்கு நீ 'ஆம்' என்று சொல்லும் போதெல்லாம், முக்கியமான ஒன்றுக்கு நீ 'இல்லை' என்று சொல்கிறாய்' என்கிறது மேலாண்மையியல்.

முக்கியமில்லாதவற்றிலிருந்து முக்கியமானதிற்கு என் 'ஆம்' திரும்பினால், என் மாற்றமே எண்ண மாற்றமே!



 சொல்லும் செயலும் ஒன்றாகட்டும்!

அருள்பணி மரிய அந்தோணி பாளையங்கோட்டை மறைமாவட்டம்

பழங்காலத்தில் புகழ்பெற்ற துறவி ஒருவர் இருந்தார். அவரிடம் சீடராகச் சேரவேண்டும் என்பதற்காகவே நிறைய மாணவர்கள் போட்டிபோட்டார்கள். ஏனென்றால் அவரிடம் சீடராக இருந்து பயிற்சிபெற்றவர்கள் யாவருமே சமுதாயத்தில் பெரிய பெரிய நிலையில் இருந்தார்கள். அந்த துறவியிடத்தில் அருணி என்ற இளைஞன் சீடராகச் சேர்ந்தான். அருணி மிகவும் பின்தங்கிய குடும்பப் பின்னணியிலிருந்து வந்தாலும் எல்லாவற்றிலும் உண்மையுள்ளவனாய் இருந்தான். துறவிக்கு அருணி எப்படிப்பட்டவன் என்பதைச் சோதித்துப் பார்க்க ஆசை. அதனால் அவர் அதற்கான சரியான வாய்ப்பினையும் தேடிக்கொண்டிருந்தார்.

ஒருநாள் அவர் தன்னுடைய சீடர்களுக்குப் பாடம் நடத்திக்கொண்டிருந்தார். அப்போது வெளியே சரியான மழை பெய்துகொண்டிருந்தது. இதுதான் அருணியை சோதிப்பதற்கு சரியான தருணம் என்பதை உணர்ந்த துறவி அவனை அழைத்து, “அருணி! வெளியே அடைமழை பெய்துகொண்டிருக்கிறது. எப்போதெல்லாம் இங்கே அடைமழை பெய்கிறதோ அப்போதெல்லாம் நம்முடைய தோட்டத்தின் கரையில் ஆங்காங்கே உடைப்பு ஏற்பட்டு, மழைத்தண்ணீர் மண்ணையெல்லாம் வெளியே இழுத்துக்கொண்டு போய்விடும். ஆகையால், நீ போய் நம்முடைய தோட்டத்தில் ஏதாவது உடைப்பு ஏற்பட்டிருந்தால், அதை அடைத்துவிட்டு வா” என்றார். அதற்கு அருணி, “குருவே! இப்போதே நான் போகிறேன். நம்முடைய தோட்டத்தில் ஏதாவது உடைப்பு ஏற்பட்டிருந்தால் அதை அடைத்துவிட்டு திரும்பிவருகிறேன்” என்றான்.

அருணி வெளியே சென்ற நேரம் மழை ஓயாமல் பேய்ந்துகொண்டிருந்தது. அவன் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் தோட்டத்திற்குச் சென்றான். தோட்டத்தில் துறவி சொன்னதுபோன்று ஆங்காங்கே உடைப்புகள் ஏற்பட்டிருந்தன. அவன் தான் கொண்டுவந்திருந்த மண்வெட்டியைக் கொண்டு அவற்றை அடைத்தான். ஓரிடத்தில் மட்டும் உடைப்பு பெரிதாக இருந்தது. எனவே அவன் மண்வெட்டியைக் கொண்டு, மண்ணை அள்ளியள்ளிப் போட்டு உடைப்பை அடைத்துப் பார்த்தான். எவ்வளவோ போராடியும் அவனால் உடைப்பை அடைக்க முடியாவில்லை. அதனால் தானே அந்த உடைப்பின் நடுவே படுத்து, மண்சரிவைத் தடுத்தான்.

இந்த வேளையில் துறவி, தோட்டத்திற்குச் சென்ற அருணி இன்னும் திரும்பவில்லையே, அவனுக்கு என்ன ஆயிற்றோ என்று பதறியடித்துக்கொண்டு தன்னுடைய மற்ற சீடர்களோடு தோட்டத்திற்கு வந்தார். அங்கே அருணி உடைப்பு ஏற்பட்டிருந்த பகுதியில் படுத்து, மயக்கமுற்ற நிலையில் இருந்தான். இதைப் பார்த்த துறவிக்கு ஒருகணம் என்ன செய்வதென்றே தெரியவில்லை. பின்னர் அருணியை வெளியே தூக்கி எடுத்து, உடைப்பு இருந்த பகுதியில் எல்லா சீடர்களின் உதவியோடு மண்ணைப் போட்டு நிரப்பினார். பிறகு அருணியை தன்னுடைய துறவு மடத்திற்குத் தூக்கிக்கொண்டு வந்து, அவனுக்கு பல்வேறு சிகிச்சைகள் அளித்து, அவன் மயக்கம் தெளிவுறச் செய்தார். அருணி மயக்கத்திலிருந்து எழுந்த பிறகு துறவி அவனைப் பார்த்துச் சொனார், “அருணி! நீ உண்மையிலே என்னுடைய சீடர்களில் தலை சிறந்தவன். ஏனென்றால், நீ நான் சொல்வதைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதற்காக உன்னுடைய உயிரையும் கொடுக்கத் துணிந்தாய். அதனால் நீயே ஒரு குருவாக மாறுவதற்கு எல்லாத் தகுதிகளும் உன்னிடத்தில் இருக்கின்றன. இன்றிலிருந்து நீதான் இந்த துறவுமடத்தின் குரு” என்று சொல்லி அவனை ஆசிர்வதித்தார்.

சொன்ன சொல்லைக் கடைப்பிடிக்கவேண்டும். அதுதான் ஓர் உண்மையான சீடனுக்கு அழகு என்பதை இந்த நிகழ்வானது நமக்கு எடுத்துக்கூறுகின்றது. பொதுக்காலத்தின் இருபத்தி ஆறாம் ஞாயிற்றுக்கிழமையான இன்று நாம் படிக்கக்கேட்ட வாசகங்கள் நமது சொல்லும் செயலும் ஒத்துப்போகவேண்டும் – ஒன்றாகவேண்டோம் என்ற சிந்தனையை வழங்குகின்றது. அது எப்படி என்று இப்போது சிந்தித்துப் பார்ப்போம்.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு சொல்லக்கூடிய உவமையில் முதலாவது மகனோ ‘தோட்டத்திற்குப் போகமாட்டேன்’ என்று சொல்லிவிட்டு, பின்னர் மனம்மாறி தோட்டத்திற்குச் சென்று, வேலைபார்க்கிறான். ஆனால் இரண்டாவது மகனோ, ‘தோட்டத்திற்குப் போகிறேன்’ என்று சொல்லிவிட்டு போகாமல் இருக்கிறான். இந்த இரு புதல்வர்களும் ஒருவிதத்தில் சொன்னது போன்று செய்யவில்லைதான். ஆனாலும் முதலாவது மகனோ போகவில்லை என்றுசொல்லிவிட்டு பின்னர் போகிறான். அந்த விதத்தில் அவனை தந்தையின் திருவுளத்தினை நிறைவேற்றியவன் என்று சொல்லலாம். இரண்டாவது மகனோ தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றாமல் தன்னுடைய மனம்போன போக்கில் போனான். அதனால் அவன் தந்தைக் கடவுளிடமிருந்து தண்டனையைப் பெறுவான் என்பது உறுதி.

கிறிஸ்தவர்களாகிய நாம் சொல்லில் மட்டுமல்ல, செயலிலும் வல்லவர்களாக இருக்கவேண்டும். அதுதான் இறைவன் நம்மிடமிருந்து எதிர்பார்க்கக்கூடிய ஒன்றாக இருக்கின்றது. மத்தேயு நற்செய்தி 7:21 ல் வாசிக்கின்றோம், “என்னை நோக்கி ஆண்டவரே, ஆண்டவரே எனச் சொல்பவரெல்லாம் விண்ணரசுக்குள் செல்வதில்லை. மாறாக, விண்ணகத்திலுள்ள என் தந்தையின் திருவுளத்தின்படி செயல்படுபவரே செல்வர்” என்று. ஆகவே, நாம் இறைவார்த்தையை கேட்பவர்களாக, இறைவனை பெயருக்குத் தொழுபவர்களாக மட்டும் இருந்து விடாமல், இறைவனின் வார்த்தையின் படி வாழ்ந்துகாட்டுபவர்களாகவும் இருக்கவேண்டும். அதுதான் உண்மையான கிறிஸ்தவனுக்கு அழகு.

தூய பவுல் பிலிப்பியவருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய இரண்டாம் வாசகத்தில், “சகோதர சகோதரிகளே, கிறிஸ்துவிடமிருந்து நீங்கள் ஊக்கம் பெறவில்லையா?” என்று (பிலி 2:1) கூறுவார். கிறிஸ்து இயேசு வாழ்வதைப் போதித்தார், போதித்ததை வாழ்ந்துகாட்டினார். ஆகவே, கிறிஸ்தவர்களாக நாம் வாசிப்பதை வாழ்வாக்க வேண்டும். ஆனால் பல நேரங்களில் நாம் சொல்வதற்கும், செய்வதற்கும் பாரதூர வித்தியாசம் இருக்கின்றது. இத்தகைய ஓர் இடைவெளியை நாம் நம்முடைய வாழ்விலிருந்து அகற்றவேண்டும்.

நம்முடைய முன்னாள் திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் ஒருமுறை இவ்வாறு குறிப்பிட்டார், “இன்றைய உலகில் மக்கள் போதனையாளர்களுக்கு யாரும் செவிமடுத்து வாழ்வதில்லை. ஒருவேளை மக்கள் போதனையாளர்களுக்கு செவிமடுத்து வாழ்கிறார்கள் என்றால், அவர்கள் வெறுமனே போதனையாளர்களாக மட்டும் நின்றுவிடுவதில்லை. அவர்கள் போதிப்பதை வாழ்வாக்குகிறார்கள்” என்று. ஆம், நமது வாழ்வு இறைவனுக்குப் பிரியமுள்ளதாக இருக்கவேண்டுமென்றால் நாம் இறைவார்த்தையைக் கேட்பதோடு நின்றுவிடாமல், அதை வாழ்ந்து காட்டவும் வேண்டும்.

இறைவார்த்தையை நாம் வாழ்ந்துகாட்டுவதற்கு நம்மிடத்தில் என்னென்ன தடைகள் இருக்கின்றன என்று சிந்தித்துப் பார்க்கும்போது நம்முடைய பாவங்கள், குற்றங்குறைகள்தான் தடையாக இருக்கின்றன என்று சொன்னால் அது மிகையாகாது. உடலில் அதிகமாக எடை வைத்திருக்கின்ற ஒருவர் மேலே ஏறிச்செல்வது எவ்வளவு கடினமோ, அதுபோன்றதான் தன்னகத்தில் குற்றங்குறைகள் உள்ள மனிதர் இறைவனைச் சேர்வதும் ஆகும்.. நாம் நம்மிடம் இருக்கும் குற்றங்குறைகளை அகற்றாவிட்டால் இறைவனை அடைவது மிகவும் கடினமாகும்.

இப்போது இறைவனை அடைவதற்கு என்ன செய்வது என ஆராந்து பார்ப்போம். இறைவாக்கினர் எசேக்கியேல் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில், “நேரியவர் தம் நேரிய நடத்தையினின்று விலகி, தவறிழைத்தால், அவர்கள் தாம் இழைத்த தவற்றின் பொருட்டுச்சாவர். பொல்லார் தாம் செய்த பொல்லாப்பினின்று விலகி, நீதியையும் நேர்மையையும் கடைபிடித்தால், தம் உயிரைக் காத்துக் கொள்வர்” என்று வாசிக்கின்றோம். ஆகவே, கடவுளை விட்டு வெகுதொலைவில் சென்ற ஒருவர் தன்னுடைய தவற்றை உணர்ந்து, இறைவனிடம் திரும்பி வரும்போது அவர் வாழ்வினைப் பெற்றுக்கொள்வார் உறுதி. நாம் நமது தீய வழியிலிருந்து விலகி, இறைவனுக்கு உகந்த வாழ்க்கை வாழ என்ன செய்யவேண்டும் என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். அதற்கு முதலும் முடிவுமாக நாம் செய்யவேண்டியது இறைவனின் குரலுக்கு செவிசாய்த்து அல்லது கீழ்படிந்து வாழ்வதாகும்.

திருப்பாடல் 81:13 ல் வாசிக்கின்றோம், “என் மக்கள் எனக்குச் செவி சாய்த்திருந்தால், இஸ்ரயேலர் நான் காட்டிய வழியில் நடந்திருந்தால், எவ்வளவோ நலமாயிருக்கும்” என்று. ஆகவே, நாம் இறைவனின் குரலுக்கு செவிசாய்த்து, நம்முடைய பாவ வாழ்க்கையை விட்டொழித்து தூய வாழ்க்கை வாழ முயற்சி எடுப்போம்.

ஓர் ஊரில் புகழ்பெற்ற பிரசங்கியார் ஒருவர் இருந்தார். அவருடைய போதனையை கேட்க மக்கள் பல்வேறு இடங்களிலிருந்தும் வந்து போனார்கள். அவருடைய போதனையைக் கேட்ட நிறைய மக்கள் மனம்மாறினார்கள்.

ஒருநாள் அவர் மக்களுக்கு வித்தியாசமான ஒரு போதனை நிகழ்த்தினார். அவர் மக்களிடத்தில், “நீங்கள் வைத்திருக்கும் இரண்டு சக்கர வாகனமோ அல்லது நான்கு சக்கர வாகனமோ பழுதடைந்துவிட்டால், அதை நீங்கள் என்ன செய்வீர்கள்?” என்று கேட்டார். அதற்கு மக்கள், “வாகனத்தை சரி செய்துவிட்டு மீண்டுமாக ஓட்டத் தொடங்குவோம்” என்றார்கள். “உங்கள் வீட்டில் இருக்கும் விலையுயர்ந்த தொலைக்காட்சி பழுதடைந்துவிட்டால், என்ன செய்வீர்கள்?” என்று கேட்டார். அதற்கும் அவர்கள், “தொலைக்காட்சியிலுள்ள பழுதை நீக்கிவிட்டு, பார்ப்போம்” என்றார்கள.

இறுதியாக அவர் அவர்களிடத்தில், “உங்களுடைய வாழ்க்கையே பாவத்தில் சிக்குண்டு, பலவீனமாகக் கிடக்கிறதென்றால் அதற்கு நீங்கள் என்ன செய்வீர்கள்?” என்று கேட்டார். மக்கள் யாருமே அதற்குப் பதில் சொல்லவில்லை. அங்கே பெரிய அமைதி நிலவியது. அப்போது அவர் மக்களைப் பார்த்துச் சொன்னார், “உங்கள் வாகனமோ அல்லது தொலைக்காட்சியோ பழுதடைந்துவிட்டால் அதனை உடனே சரிசெய்யும் நீங்கள், உங்களுடைய வாழ்க்கையே பாவத்தால் பழுதடைந்திருக்கும்போது, அதை ஏன் யாருமே சரிசெய்ய முன்வருவதில்லை” என்றார். இவ்வார்த்தைகளைக் கேட்ட மக்கள் அனைவரும், “நாங்கள் பாவத்தால் பலவீனமடைந்திருக்கும் எங்களுடைய வாழ்க்கையை மறுசீரமைப்போம். நல்வழியில் நடப்போம்” என்று உறுதியளித்தார்கள்.

ஆம், நாம் நம்முடைய வாழ்வில் இருக்கின்ற பாவக்கறைகளை அகற்றுக்கின்றபோதுதான் நாம் இறைவனுக்கு உகந்த வழியில் நடக்க முடியும்.

ஆகவே, இறைவார்த்தை சொல்வதைப் போன்று நம்முடைய வாழ்க்கையை அமைத்துக்கொள்வோம். அதற்கு நம்முடைய வாழ்வில் இருக்கும் பாவக்கறைகளை எல்லாம் அகற்றிடுவோம். இறைவனுக்கு மட்டும் கீழ்படிந்து வாழ்வோம். அதன்வழியாக் இறையருள் பெறுவோம்.




இறைத்தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்கான மனமாற்றம் சாத்தியமே

மறையுரை வழங்குபவர் Fr. Freddy is a Redemptorist priest belonging to the Province of Bangalore. Currently he is attached to the Archdiocese of St. Louis, Missouri state, U.S.A.
முன்னுரை:
    1995 ஆம் ஆண்டு பிப்ரவரி 25 ஆம் நாளன்று அருள்சகோதரி ராணி மரியா அவர்களை சாமுந்தர் சிங் என்பவர் கத்தியால் குத்திக் கொன்றார். அந்த அருள்சகோதரி, 'பிரான்சிஸ்கன் க்ளாரிஸ்ட்' சபையைச் சேர்ந்த ஒரு துறவி. ஒரு பேருந்தில் பயணம் செய்துகொண்டிருந்த போது, அதிலிருந்த எல்லா பயணிகள் முன்னிலையில், அந்த அருள்சகோதரியை சாமுந்தர் சிங் 54 தடவை கத்தியால் குத்தினார். குற்றுயிராகக் கிடந்த ராணி மரியாவின் உடலை பேருந்திலிருந்து இழுத்து சாலையில் போட்டுவிட்டு, சாமுந்தர் சிங் அந்த இடத்தைவிட்டு அகன்றார். "அந்த அருள்சகோதரியைக் கொடுமையான முறையில் நான்தான் கொன்றேன். அதற்கான முழுப்பொறுப்பையும் நானே ஏற்றுக்கொள்ளுகிறேன். வேறு எவராலோ தூண்டப்பட்டதாக நான் சொல்லமாட்டேன். ஏனெனில், என்னுடைய இந்தக் கைகளாலேயே அவரை மீண்டும் மீண்டும் குத்தினேன். என்னுடைய அந்தச் செயலுக்காக இறக்கும் நாள் வரையிலும் நான் வருந்திக்கொண்டே இருப்பேன்" என்று பின்னாளில் சாமுந்தர் சிங் கூறினார். சாமுந்தர் சிங் பதினோரு ஆண்டுகாலம் சிறைத் தண்டனை அனுபவித்தார். அந்த சமயத்தில் கொலைசெய்யப்பட்ட துறவியின் உடன் பிறந்த சகோதரியான அருள்சகோதரி செல்மி பால், சிறைக்குச் சென்று சாமுந்தரை சந்தித்தார். சாமுந்தர் சிங்கை "சகோதரர்" என்றழைத்த அருள்சகோதரி செல்மி பால், அவரைத் தழுவிக்கொண்டார். அதுவே சாமுந்தருடைய மனமாற்றத்திற்கான தருணமாக அமைந்தது. சிறையிலிருந்து விடுதலையான பிறகு, அருள்சகோதரி ராணி மரியாவின் குடும்பத்தை தன்னுடையக் குடும்பமாகவே எண்ணி நடத்தினார், சாமுந்தர் சிங். "அவ்வப்போது அருள்சகோதரியின் கல்லறைக்கு நான் தவறாமல் சொல்லுகிறேன். அந்த இடம் எனக்கு சமாதானமும், மனவலிமையும் தருகின்ற ஒரு புகலிடமாக உள்ளது" என்று சாமுந்தர் சிங்.கூறினார். இன்று அவர் கிராமம் கிராமமாகச் சென்று, அங்குள்ள மக்களுக்கு கிறிஸ்துவை அறிவிக்கிறார். இதனால் தான் கொலை செய்யப்படலாம் என்று அவருக்குத் தெரியும் என்றாலும், அவர் தன் பணியை நிறுத்தவில்லை. "இந்தியாவுக்கான ஒரே நம்பிக்கை, கிறிஸ்துவர்களே" என்று அவர் வலியுறுத்துகிறார்.

மாற்றம் என்பது அந்த மனிதருக்கு சாத்தியமாயிற்று. கடின இதயம் கொண்ட மத அடிப்படைவாதியாக இருந்த அவர், இப்போது நற்செய்தியின் போதகராகவும், நண்பராகவும் இருக்கிறார். இறைத்தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்கான மனமாற்றத்தை அடைவது, அந்த மனிதருக்கு சாத்தியமாயிற்று.

இறைவார்த்தை:

இறைத்தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்கான மனமாற்றம் என்பது சாத்தியமே என்னும்  கருத்தை, இன்றைய நற்செய்தி வாசகம் முன்வைக்கிறது.  இரண்டு முக்கிய அம்சங்களை இன்றைய நற்செய்தியில் காண்கிறோம்.

1. தந்தையின் அழைப்பு:                                          
இன்றைய நற்செய்தியில், நான்கு வெவ்வேறு வகையான மனிதர்களுக்கு இறைத்தந்தை அழைப்பு விடுக்கிறார். தனது மூத்த மகனிடம், "மகனே, நீ இன்று திராட்சைத் தோட்டத்திற்குச் சென்று வேலை செய்" என்று அழைக்கிறார், தந்தை. தனது இரண்டாவது மகனையும் அவ்வாறே அழைக்கிறார். யூதத் தலைவர்களுக்கும், வரி தண்டுவோருக்கும், விலை மகளிருக்கும் அவர் விடுத்த அழைப்பு இதுவே. அழைப்பு என்பது எல்லோருக்கும் ஒன்றே.

2. மனமாற்றத்திற்கான சாத்தியக் கூறு:                      
"நான் போக விரும்பவில்லை" என்று சொல்லுகின்ற மூத்த மகனின் எதிர்மறையான மறுமொழி, முழுமையான நிராகரிப்பையும், தந்தையின் அதிகாரத்திற்கு எதிரான கிளர்ச்சி மனப்பாங்கையும் சுட்டிக் காட்டுகின்றது.

"தந்தையின் சொல்லுக்கு கீழ்படிவது மட்டுமே சரியான பண்பு" என்றிருந்த அக்கால நிலையில், மூத்த மகனின் இத்தகைய கூற்று ஏற்புடையதல்ல. ஆனால், அவன் தன் மனதை மாற்றிக் கொண்டான். இந்த மனமாற்றம், அவன் மனம் வருந்தி, திருந்தும் நிலையைக் குறிக்கிறது. தந்தையின் வேண்டுகோளுக்குப் பணிந்து, திராட்சைத் தோட்டத்திற்கு அவன் சென்றான். தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்கான மனமாற்றம் அங்கே நிகழ்ந்தது.

மனமாற்றத்திற்கான அழைப்பை திருமுழுக்கு யோவான் மக்களுக்கு விடுத்தபோது, வரி தண்டுவோரும், விலைமகளிரும் மனம் மாறி, திருமுழுக்குப் பெற்றனர். வரி தண்டுவோருக்கும், விலைமகளிருக்கும் அவர்களுடைய பாவங்களின் பரிமாணம், 'உள்ளங்கை நெல்லிக்கனி' போல அவர்களுக்கே தெளிவாகத் தெரிந்த காரணத்தால், அவர்களுடைய மனமாற்றம் எளிதாக நடந்தேறியது. தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்கான மனமாற்றம் அங்கே நிகழ்ந்தது.      

இரண்டாவது மகன், "நான் போகிறேன் ஐயா!" என்று சொல்லி, தோட்டத்திற்கு செல்ல சம்மதம் தெரிவித்தான். இத்தகைய சம்மதம், மறைநூலின் மரபினில், உடன்பாட்டிற்கான ஒரு முன்மொழிவு ஆகும். அவன் தன் தந்தையை "ஐயா" என்று விளித்தான். ஆனால், அவன் போகவில்லை. அவனுடைய இதயத்தின் கடினத்தன்மையே, அவன் மனமாற்றத்திற்கான சாத்தியத்தை தடுத்துவிட்டது. இயேசு, அந்த இரண்டாவது மகனோடு யூதத் தலைவர்களை ஒப்பிட்டு இங்கு குறிப்பிடுகிறார். அவர்கள் திருச்சட்டத்தை பெற்று அதனை அறிந்திருந்தாலும், அதற்கு கீழ்ப்படிந்து நடக்கவில்லை. திருமுழுக்கு யோவான் வந்து, மனமாற்றத்தின் அவசியம் குறித்து அறிவித்தபோதும், தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்கான மனமாற்றத்தை தங்கள் இதயங்களில் ஏற்படுத்திக்கொள்ள யூதத் தலைவர்கள் மறுத்துவிட்டார்கள்.

தேர்ந்தெடுக்கப்பட்ட இனமாக இருப்பதோ, மோசேயின் திருச்சட்டங்களை அல்லது திருச்சபையின் சட்டங்களை கடைபிடித்து ஒழுகுவதோ இறையரசில் நுழைவதற்கான அனுமதியை பெற்றுத் தராது. இறையரசில் நுழைவதற்கான அனுமதி என்பது, இறைத்தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்கான மனமாற்றத்தை சார்ந்ததாகவே இருக்கிறது.

பயன்பாடு:

ஒருவருடைய வாய்மொழியாக வருகின்ற வாக்குறுதிகளை விட, அவருடைய செயல்பாடே மேலானதாக இருக்கிறது. ஒருவருடைய நயமான பேச்சு, அவருடைய நற்செயல்களுக்கு ஈடாகாது. வாடிக்கையாளர் சேவை, உற்பத்திப் பொருளின் தரம், குடிமை ஒருமைப்பாட்டு உணர்வு, மக்களை முதன்மைப்படுத்துதல் - இவையே தங்களுடைய உயர்நோக்கங்கள் என்று பல நிறுவனங்கள் அறிவிக்கின்றன. ஆயினும், இத்தகைய நிறுவனங்கள் பலவற்றின் சேவையும், பொருள்களின் தரமும், ஒருமைப்பாட்டு உணர்வும், தொழிலாளர் உறவும் குறைபாடு மிகுந்ததாகவே இருப்பதைக் காண்கிறோம். நேர்மையான செயல்பாட்டை விட, வாய்ப்பேச்சு மட்டுமே இன்றைய
காலக்கட்டத்தின் ஒழுங்குமுறையாக காணப்படுகிறது.

குழந்தையின் திருமுழுக்கின்போது, பெற்றோரும், ஞானப் பெற்றோரும், "தங்கள் குழந்தைகளை விசுவாச நெறிகளில் வளர்ப்போம்" என்பதாக புனிதமான ஒரு வாக்குறுதியை அளிக்கிறார்கள். தங்கள் குழந்தைகளின் சார்பாக 'விசுவாச அறிக்கையை' சொல்லி மன்றாடுகிறார்கள். திருமுழுக்கு சமயத்தில் நாம் அளித்த இந்த புனிதமான வாக்குறுதி என்னவாயிற்று என்பது கேள்விக்குறியே.

இரண்டாவது மகனுடையக் கூற்றை போல, இதுவும் வெறும் வாய்ப்பேச்சாகவே இருக்கிறது. வாழ்க்கையில் உண்மையான செயல்பாடு இல்லாமல், வெறும் வாய்ப்பேச்சோடு நின்றுவிடுவது, "திராட்சைத் தோட்டத்திற்குச் சென்று வேலை செய்க" என்னும் இறைத்தந்தையின் அழைப்பை அவமதிப்பதாகும்.

இந்தக் கருத்தைத் தான், "என்னை நோக்கி, 'ஆண்டவரே, ஆண்டவரே' எனச் சொல்பவரெல்லாம் விண்ணரசுக்குள் செல்வதில்லை. மாறாக, விண்ணுலகிலுள்ள என் தந்தையின் திருவுளத்தின்படி செயல்படுபவரே செல்வர்" (மத்தேயு 7:21) என்று இயேசு கூறுகிறார்.

இன்றைய காலகட்டத்தில், வெவ்வேறு தோற்றங்களில் இந்த உண்மையான முதல் மகன் நம் முன்னே காட்சி தருகிறான். குடிப்பழக்கத்திற்கு அடிமையாக இருந்து திருந்தியவராக, போதைப்பொருள் பழக்கத்திலிருந்து மீண்டு வந்தவராக, வறுமையில் வாடுகின்ற தன்னுடைய மக்களுக்கு உதவிக்கரம் நீட்டுகின்ற திருச்சபையாக, தன்னுடைய பங்குமக்களை உண்மையான மனமாற்றத்திற்கு அழைக்கின்ற குருவாக, மற்றவர்களுக்கு உதவி செய்ய தயாராக இருக்கின்ற ஒரு கிறிஸ்தவராக, தனது திருமணம் வரை கற்பு நெறியை கடைபிடிக்கின்ற இளைஞர்-இளம்பெண்ணாக - இப்படி பலருடைய வடிவங்களில், இறைத்தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்கான மனமாற்றத்திற்கு சம்மதிப்பவர்கள் எல்லாருமே, இன்றைய நற்செய்தியில் கூறப்படுகின்ற முதல் மகனைப் போல இருக்கிறார்கள்.

பல வடிவங்களில் அந்த இரண்டாவது மகனையும் நம் கண்முன்னே காண்கிறோம். வாழ்க்கையில் மாற்றத்திற்கான தேவையை உணராமல், ஆலயத்தின் இருக்கைகளில் அமர்ந்து மன்றாட்டுகளை ஏறெடுக்கிறவர், 'வாழ்வில் நடப்பது எல்லாமே நன்றாகவே நடக்கிறது' என்று நினைத்துக் கொண்டு, மாற்றம் அவசியம் என்பதை அறியாமல் இருப்பவர், 'பெரிய அளவிலான எந்தவொரு பாவத்தையும் நான் வாழ்க்கையில் செய்ததில்லை' என்று நினைப்பவர், நீதி - இரக்கம் இவற்றை புறக்கணிக்கின்ற திருச்சபை - இவ்வாறு உள்ளத்தின் ஆழத்தில் உணராமல், வெளித்தோற்றத்தில் மட்டும் உண்மையானவராக காட்டிக் கொள்ளுகின்ற எல்லாருமே இந்த இரண்டாவது மகனை ஒத்திருக்கிறார்கள் என்பது நிஜம்.

ஒரு பாலியல் தொழிலாளியின் ஜெபத்தோடு இன்றைய சிந்தனையை நிறைவு செய்கிறேன். இந்த ஜெபத்தை தனது முகநூல் பக்கத்தில் அவர் பதிவு செய்திருந்தார். அவருடைய அனுமதியோடு அந்த ஜெபத்தை இங்கு சமர்ப்பிக்கிறேன். "அன்பான இறைவா, என்னுள் இருள் சூழ்ந்திருப்பவற்றில் ஒளியேற்றுக!.என்னுள் பலவீனமாக இருப்பவற்றிற்கு வலுவூட்டுக! என்னுள் நொறுங்கி இருப்பவற்றை சீர் செய்திடுக! என்னுள் காயம் அடைந்திருப்பவற்றிற்கு மருந்திடுக! என்னுள் நோயுற்றிருப்பவற்றை ஆற்றிடுக! இறுதியாக, சமாதானமும், அன்பும் மறைந்து, மரித்து போன என் உள்ளத்தை உயிரூட்டி புதுப்பித்திடுக!" இவர் ஒரு பாலியல் தொழிலாளியாக இருக்கலாம். ஆனாலும், தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்கான மனமாற்றத்தை நாடுகின்ற ஒரு நபராக இவர் விளங்குகிறார்.

முடிவுரை:


இறைத்தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்கான மனமாற்றத்தை நாம் அடைந்திடவும், அதன் பயனாக இறையரசில் நாம் சேர்ந்திடவும், தூய ஆவியாம் இறைவன் நமக்கு வலிமை அளிப்பாராக. இறைஅன்னை மரியா நமக்காக பரிந்து பேசுவாராக.



Saturday 23 September 2017

பொதுக்காலம் 25-ஆம் ஞாயிறு



பொதுக்காலம் 25-ஆம் ஞாயிறு


எசாயா 55:6-9 பிலிப்பியர் 1:20இ-24,27அ; மத் 20:1-16

மறையுரை மொட்டுக்கள்-அருள்பணி Y இருதயராஜ்


கணக்குக்கும் காதலுக்கும் இடையே உள்ள வேறுபாடு என்ன? இருபத்து ஒன்றையும் பதினெட்டையும் கூட்டினால் அது கணககு இருபத்து ஒன்று பதினெட்டைக் கூட்டிக்கொண்டு ஓடினால் அது காதல். அதாவது 21 வயது ஆண் 18 வயது பெண்ணைக் கூட்டிக்கொண்டு ஓடினால் அது காதல், தன்னைப் பெற்று வளர்த்த பெற்றோரை உதறித் தள்ளிவிட்டு ஒரு பையனை நம்பி அவனோடு ஒரு பெண் ஓடுவது ஏன்? காதலுக்குக் கண்ணில்லை. மற்றவர்கள் கணிப்பில் காதலர்கள் மடையர்கள். காதலர்களைப் பொருத்தமட்டில் அவர்கள் செயல் ஒரு சாதனை.

அன்பே உருவான கடவுளின் காதலுக்கும் கண்ணும் இல்லை, கணக்கும் இல்லை. காதலர்கள் வழி தனிவழி. அவ்வாறே கடவுளின் வழியும் தனிவழி. அவரது வழியும் செயல்பாடுகளும் முற்றிலும் வேறுபட்டவை என்று கடவுளே இன்றைய முதல் வாசகத்தில் கூறுகிறார். "என் எண்ணங்கள் உங்கள் எண்ணங்கள் அல்ல. உங்கள் வழிமுறைகள் என் வழிமுறைகள் அல்ல" (எசாயா 55:3)

கடவுளின் வழிகளும் பண்புகளும் என்ன? என்பதை இன்றைய பதிலுரைப் பாடல் பட்டியலிட்டுக் காட்டுகிறது ஆண்டவர் இரக்கமும் கனிவும் உடையவர்; எளிதில் சினம் கொள்ளாதவர் பேரன்பு கொண்டவர் ஆண்டவர் எல்லாருக்கும் நன்மை செய்பவர் தான் உண்டாக்கிய அனைததின் மீதும் இரக்கம் காட்டுபவர்" (திப 158:9).
கடவுள் நீதியுள்ளவர். ஆனால் அவர் தமது நீதியை இரக்கத்தின் மூலம் காட்டுகிறார். இந்த அடிப்படையான இறையியல் உண்மையைக் கிறிஸ்து இன்றைய நற்செய்தியில் திராட்சைத் தோட்டத்திற்கு வேலையாள்களை அமர்த்திய நிலக்கிழார் உவமை வாயிலாக வெளிப்படுத்துகிறார் (மத் 20:1-6) காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை அதாவது 12 மணி நேரம் வேலை செய்தவர்களுக்கும் அதே கூலி மாலை 5 முணி முதல் 6 மணி வரை, அதாவது 1 மணி நேரம் வேலை செய்தவர்களுக்கும் அதே கூலி கனக்கு அடிப்படையில் அது அப்பட்டமான அநீதி ஆனால் காதல் அடிப்படையில் இது முற்றிலும் சரியானது.

"திராட்சைத் தோட்டத்திற்கு வேலையாள்களை அமர்த்திய நிலக்கிழார்" உவமையில் பொதிந்துள்ள இறையியல் உண்மையை மட்டும் புரிந்துகொள்ள வேண்டும். காலை 6 மணியிலிருந்து மாலை 6 மணி வரை. அதாவது 12 மணி நேரம் வேலை செய்தவர்கள் இஸ்ரயேல் மக்கள் கடவுள் அவர்களுக்கு மீட்பளிக்கிறார் மாலை 5 மணி முதல் 6 மணி வரை மட்டும் வேலை செய்தவர்கள் பிற இனத்தவர்கள் அவர்களுக்கும் கடவுள் மீட்பளிக்கிறார். இதில் அநீதி ஒன்றுமில்லை.

ஏனெனில் மீட்பு என்பது உழைப்புக்குக் கிடைக்கும் கூலியல்ல மாறாக, அது கடவுள் மனிதருக்கு வழங்கும் இலவசக் கொடை அதை எவரும் தமது சொந்த முயற்சியால் பெற இயலாது.அனைவர்க்கும் இலவசமாக மீட்பை வழங்குவதன் மூலம் கடவுள தமது நீதியை வெளிப்படுத்துகிறார். கடவுள் நீதிவேறு மனித நீதிவேறு. மனித நீதி சட்டத்தை அடிப்படையாகக் கொணடது. கடவுள் நீதி இரக்கத்தை அடிப்படையாகக் கொண்டது. சட்டத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்பட்ட பரிசேயரின் ஒழுக்கத்தைவிட அன்பை அடிப்படையாகக் கொண்டு செயல்பட வேண்டிய கிறிஸ்துவின் சீடர்கள் ஒழுக்கம் உயர்ந்திருக்க வேண்டும் இல்லையெனில் அவர்கள் விண்ணரசுக்குள் புகமுடியாது என்று கிறிஸ்து தெளிவுபடக் கூறியுள்ளார் என்பது நினைவுகூரத்தக்கது (மத் 5:20) கடவுளிடம் ஒருதலைச் சார்பு கிடையாது அவர் எல்லார்க்கும் தந்தை அனைவரும் மீட்படைய வேண்டுமென்று அவர் விரும்புகிறார் (திமொ 2:1). கடவுள் நல்லவர்களுக்கும் தீயவர்களுக்கும் தமது மழையையும் கதிரவனையும் கொடுக்கிறார் (மத் 5:45) கடவுள் ஆள்பார்த்துச் செயல்படுவதில்லை. எல்லா இனத்தவரிலும் கடவுளுக்கு அஞ்சி நடப்போர் மீட்படைவது உறுதி (திப 10:34). கடவுளின் இத்தகைய உலகளாவிய மீட்பின் திட்டத்தைக் கண்டு நாம் பொறாமைப்படக்கூடாது எல்லார்க்கும் சமமான கூலி கொடுத்த நிலக்கிழாரிடம் முணுமுணுத்த வேலையாள்களிடம் நிலக்கிழார்: "நான் நல்லவனாய் இருப்பதால் உமக்குப் பொறாமையா?" (மத் 20:15) என்று கேட்கிறார். ஒருவருடைய பெரிய பகைவன் பொறாமை, அவருக்கு வேறு பகைவர்கள் இல்லையென்றாலும் அவரை அழிப்பதற்கு பொறாமை ஒன்றே போதும் என்கிறார் வள்ளுவர்.

அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார்
வழுக்கியும் கேடு என்பது (குறள் 65)

நமக்குக் கிடைக்கும் நன்மை பிறருக்கும் கிடைப்பதைக் கண்டு நாம் மகிழ வேண்டும். "யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்பதே நமது நிலைப்பாடாக இருக்க வேண்டும் "வானகத் தந்தை இரக்கமுள்ளவராய் இருப்பதுபோல நாமும் இரக்கம் உள்ளவர்களாய் இருக்க வேண்டும்" (லூக் 8:36)

ஒரு வீட்டிலே மனைவி கிறிஸ்து பிறப்பு விழாவைக் கொண்டாடவில்லை. ஏனெனில் அவருடைய கணவர் அவருக்கும், அவரது மாமியாருக்கும் மற்றும் அவ்வீட்டு வேலைக்காரிக்கும் ஒரே விலையில் பட்டுப்புடவை வாங்கி விட்டார். ஆத்திரம் அடைந்த மனைவி கணவரிடம், "என்னையும் வேலைக்காரியையும் ஒரே மாதிரி நடத்தலாமா?" என்று கேட்டு கணவரைச் சரமாரியாகத் திட்டினார்.

தனக்குக் கிடைத்த புடவை வேலைக்காரிக்கும் கிடைத்ததை அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. ஒரு வீட்டில் ஒருநாள் வேலைக்காரி வேலைக்கு வரவில்லை. மனைவி கணவரிடம், "என்னங்க! வேலைக்காரி வரல எனக்குக் கையே ஒடிஞ்சுபோச்சு" என்றார். ஆனால் கணவர் மனைவியிடம், "உனக்காவது கை ஒடிஞ்சுபோச்சு எனக்கு மனசே ஒடிஞ்சுபோச்சு" என்றார். இதைக் கேட்ட மனைவி தன் தலையில் இடி விழுந்ததைப் போன்று அதிர்ந்து போனார். வேலைக்காரியுடன் தகாத உறவு வைத்துக்கொள்வது ஒரு முறைகேடான செயல்: கண்டனத்திற்கு உரியது. ஆனால் வேலைக்காரியையும் மரியாதையுடன் நடத்துவது பாராட்டுதற்குரியது. பிறப்பின் அடிப்படையிலும் மீட்பின் அடிப்படையிலும் அனைவரும் சமம்.

பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும்
அவ்வாறே மீட்பும் ஒக்கும் எல்லா மனிதர்க்கும். (குறள் 92 )

"இது எனது உடன்படிக்கையின் இரத்தம் பலருடைய பாவ மன்னிப்புக்காகச் சிந்தப்படும் இரத்தம்" (மத் 26:28).




அவரும், அவர்களும்!

அருள்பணி ஏசு கருணாநிதி -மதுரை

'அறிவோடு இருப்பதை விட அதிர்ஷ்டத்தோடு இருப்பது நன்று!' - இப்படி ஒரு குறுஞ்செய்தி நேற்று என் மொபைலுக்கு வந்தது. கொஞ்ச நாள்களாக நடக்கும் அனுபவங்களை வைத்துப் பார்க்கும்போது இந்த குறுஞ்செய்தி உண்மை எனவும் தோன்றுகிறது. இன்றைய இறைவாக்கு வழிபாட்டின் நற்செய்தி வாசகத்தின் (காண். மத் 20:1-16) பின்புலத்தில் பார்க்கும்போது இதைக் கொஞ்சம் மாற்றிப் புரிந்துகொள்ளலாம்: 'உழைப்போடு இருப்பதை விட அதிர்ஷ்டத்தோடு இருப்பது நன்று!'

நாளின் வௌ;வேறு நேரங்களில் திராட்சைத் தோட்டத்திற்கு வேலைக்கு வரும் தொழிலாளர்கள். முதலில் வந்தவர்கள் தங்களின் உழைப்பிற்கேற்ற ஒரு தெனாரியத்தைப் பெறுகின்றனர். கடைசியில் வந்தவர்கள் தங்களின் அதிர்ஷ்டத்திற்கேற்ற ஒரு தெனாரியத்தைப் பெறுகின்றனர்.

விண்ணரசு என்பதை காமன் மேன் வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் அதிர்ஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும். கொட்டாவி விட்டவன் வாயில் திருப்பதி லட்டு விழுந்தது மாதிரி மாலை 5 மணி வரை வேலையில்லாமல் வாளாவிருந்தவர்கள் ஒரு மணி நேரம் மட்டுமே வேலை செய்து 1 நாள் கூலியைப் பெறுகின்றனர்.

மத்தேயு 20:1-16. இது ஒரு உவமை. விண்ணரசு பற்றிய உவமை மத்தேயு நற்செய்தியில் மட்டுமே வரும் உவமை. இது ஒரு சிக்கலான உவமை. ஏனென்றால், மனித கணிதத்திற்கு எதிராகச் செல்லும் இதன் நிறைவு. 12 மணி நேரம் வேலை செய்தவர்களுக்கும், ஒரு மணி நேரம் வேலை செய்தவர்களுக்கும் ஒரே சம்பளம் வழங்கும் உவமை இது. வழக்கமாக இதை 'திராட்சைத் தோட்ட வேலையாட்கள் உவமை' என்று அழைக்கிறோம். ஆனால், நான் 'கணிதம் தெரியாத ஒரு ஆண்டவரின் கதை' என்று அழைக்கிறேன்.

மத்தேயு 20:1-16 உள்ள இறைவாக்கு பகுதியின் அமைப்பை முதலில் ஆராய்வோம். வழக்கமாக இந்த உவமையை இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கிறார்கள் ஆய்வாளர்கள்:

20:1-7 வேலையாட்கள் பணியமர்த்தப்படுதல்
20:8-16 வேலையாட்களுக்கு ஊதியம் தரப்படுதல்

இப்படிப் பிரிக்கத் தூண்டுவது 1 மற்றும் 8 வசனங்களில் இருக்கும் 'காலை' மற்றும் 'மாலை' என்ற நேரக்குறிப்புகள். இந்த நேரக்குறிப்புகள் மிக முக்கியமானவைதான். ஆனால், இந்த வகை பிரித்தலில் வேலையாட்கள்தான் முதன்மைப்படுத்தப்படுகிறார்கள். ஆனால், வேலையாட்கள் சும்மா வந்து போகக்கூடியவர்கள்தாம். ஆனால், இந்த உவமையின் கதாநாயகன் தோட்ட உரிமையாளர்தான். ஆக, அவரையும் நாம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

இந்த உவமையில் ஐந்து பிரிவுகள் உள்ளன:

20:1அ முன்னுரை
20:1ஆ-7 வெளியே
20:8 உள்ளே-வெளியே
20:9-15 உள்ளே

20:16 முடிவுரை20:1அ வில் இந்த நிகழ்ச்சி இறையாட்சிக்கு ஒப்பிடப்படுவதாகச் சொல்லப்படுவதுதான் முன்னுரை. இத்தோடு இணைந்து செல்வது 20:16ல் இருக்கும் முடிவுரை. இறையாட்சியில் முதன்மையானவர்கள் கடைசியாவார்கள், கடைசியானவர்கள் முதன்மையாவார்கள். 'வெளியே', 'உள்ளே' என்று சொல்வது தோட்டத்தைப் பொறுத்தது. உவமையின் முதல் பகுதியில் தோட்ட உரிமையாளரும், வேலையாட்களும் தோட்டத்திற்கு வெளியில் இருக்கிறார்கள். இரண்டாம் பகுதியில் இந்த இரண்டு பேரும் தோட்டத்திற்கு உள்ளே இருக்கிறார்கள். மேலும், தோட்டத்திற்கு வெளியே, வேலைக்காரர்கள் ஓரிடத்தில் நிற்கின்றார்கள். உரிமையாளர் முன்னும் பின்னும் செல்கின்றார். ஆனால், தோட்டத்திற்கு உள்ளே உரிமையாளர் ஓரிடத்தில் நிற்கின்றார். வேலைக்காரர்கள் முன்னும், பின்னும் செல்கின்றனர். 20:8ல் உரிமையாளர் தன் கணக்கரிடம் அல்லது மேற்பார்வையாளரிடம், 'வேலையாள்களை அழைத்து கடைசியில் வந்தவர் தொடங்கி முதலில் வந்தவர்வரை கூலி கொடும்!' என்கிறார். இதுதான் கதையின் மையம் அல்லது உச்சம். 'கடைசியிலிருந்து தொடங்கி முதலில் வந்தவர் வரை செல்ல வேண்டும்!' - இதே வார்த்தைகள்தாம் 'கடைசியானவர் முதலாவர்' என்று 20:16ல் தீர்வாக அல்லது முடிவுரையாக அமைகிறது.'உள்ளே-வெளியே' என்பது ஸ்டீபன் கோவே அவர்கள் தன் 'தெ செவன் ஹேபிட்ஸ் ஃபார் ஹைலி இஃபக்டிவ் பீப்பிள்' நூலில் உருவாக்கிய ஒரு சொல்லாடல். அதாவது, கான்செப்ட் சிம்பிள்தான். பேண்ட்ல உள்ள பாக்கெட்ல பென்-டிரைவ் போட்டு அது காணாம போயிடுச்சுனு வச்சிக்கிவோம். அதைத் தேடும் முயற்சியில் பேண்டின் பாக்கெட்டை அப்படியே வெளிப்புறமாக எடுத்து தேடுவோம். இதுதான் .... இதற்கு மேல் தேட ஒன்றுமில்லை. ஆக, ஒருவரின் உள்ளக்கிடக்கையை முழுவதுமாகத் தெரிவிப்பதுதான் 'உள்ளே-வெளியே'. 20:8ல்தான் உரிமையாளரின் உள்ளக்கிடக்கை அப்படியே வெளிப்படுகிறது. மேலும் இந்த ஐந்து வகை பிரிவில் நேரக்குறிப்புகள், வேலையாட்கள்-உரிமையாளர், காலை-மாலை, உள்ளே-வெளியே, என எல்லா இருமைநிலைகளும் எளிதில் துலங்குகின்றன.

இயேசு சொல்லும் உவமைகளில் பல கேள்விகளை எழுப்பும் உவமை இது. எட்டு மணி நேரம் வேலை பார்த்தவர்களும், ஒரு மணி நேரம் வேலை பார்த்தவர்களும் ஒரே கூலியைப் பெறுகின்றனர். எட்டு மணி நேரம் வேலை பார்த்தவர்களால் இதைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. 'இது அநீதி!' என்று கொடிபிடிக்கின்றனர். 'ஆனா தம்பி! நீ ஒத்துக்கிட்டதைத் தான் நான் கொடுத்துவிட்டேனே!' என்கிறார் தோட்ட உரிமையாளர்.

வாழ்க்கையின் அளவு கோல் எல்லாருக்கும் ஒரே மாதிரி இருப்பதில்லை. ஒரு சிலரை வாழ்க்கை கழுத்தை நெரிக்கிறது. ஒரு சிலரை மடியில் போட்டு வீசி விடுகிறது. ஏனென்று கேட்க முடிகிறதா நம்மால்?

இந்த உவமையைக் கொஞ்சம் கோணல், மாணலாக யோசித்துப் பார்த்தால் எப்படி இருக்கும்?

அ. நிதி நிர்வாகம்.
இந்த உவமையில் ஐந்து குழுக்கள் ஐந்து மணிப்பொழுதுகளில் வேலைக்கு வருகின்றனர். முதல் குழுவினர் விடியற்காலையில் வருகின்றனர். காலை 6 மணி என வைத்துக்கொள்வோம். ஏனெனில் இயேசுவின் காலத்தில் நிலவிய கால அளவைப்படி விடியற்காலை என்பது நம் 6 மணி. இரண்டாம் குழுவினர் 9 மணிக்கு வருகின்றனர். மூன்றாம் குழுவினர் மதியம் 12 மணிக்கும், நான்காம் குழுவினர் பிற்பகல் 3 மணிக்கும், ஐந்தாம் குழுவினர் மாலை 5 மணிக்கும் வருகின்றனர். மாலை 6 மணிக்கு வேலை நிறைவு பெறுகிறது. முதல் குழுவினர் 12 மணி நேரம் தலைவனின் திராட்சைத் தோட்டத்தில் இருந்திருக்கின்றனர். 12 மணி நேரமும் வேலை செய்திருக்க வாய்ப்பில்லை. இப்போதுள்ள எட்டு மணி நேர வேலை நிர்ணயமும் அப்போது கிடையாது. அவர்கள் தோட்டத்தில் இருந்த நேரத்தை அப்படியே எடுத்துக்கொள்வோம். இரண்டாம் குழுவினர் 9 மணி நேரமும், மூன்றாம் குழுவினர் 6 மணி நேரமும், நான்காம் குழுவினர் 3 மணி நேரமும், ஐந்தாம் குழுவினர் 1 மணி நேரமும் வேலை செய்கின்றனர். ஒவ்வொரு குழுவிலும் எத்தனை பேர் இருந்தார்கள் என்பதும், திராட்சைத் தோட்டத்தில் என்ன மாதிரியான வேலை என்பதும், திராட்சைத் தோட்டம் எவ்வளவு பெரியதும், எவ்வளவு வெயில் அடித்தது என்றும் உவமையில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. முதல் குழுவினரோடு பேசப்பட்ட சம்பளம் 'ஒரு தெனாரியம்'. ஒரு தெனாரியத்தின் மதிப்பு 120 ரூபாய் என வைத்துக்கொண்டால் முதல் குழுவினர் பெற வேண்டிய சம்பளம் 120. இரண்டாம் குழுவினர் 90, மூன்றாம் குழுவினர் 60, நான்காம் குழுவினர் 30 மற்றும் ஐந்தாம் குழுவினர் 10 ரூபாய் பெற வேண்டும். 10 ரூபாய்க்கான வேலையைத் தான் இறுதியாக வந்தவர் செய்கின்றார். ஆனால் அவரே முதலில் ஊதியம் பெறுகிறார். அவரே முழுமையாகவும் பெறுகிறார். இது ஒரு தவறான நிதி நிர்வாகம். இப்படிச் செய்வதால் அவருக்கு எவ்வளவு வருவாய் இழப்பு நேரிடும்?

ஆ. உறவு நிர்வாகம்.
நம் வாழ்க்கையில் உள்ள உறவுகளுக்கும் இது பொருந்தும் என நினைக்கிறேன். திராட்சைத் தோட்டம் என்பது நம் வாழ்க்கை. இதில் விடியற்காலையில் வேலைக்கு வருபவர்கள் நம் பெற்றோர். நம்மோடு நம் வாழ்வில் அதிக ஆண்டுகள் இருப்பவர்கள் இவர்கள் தாம். இரண்டாம் குழுவைப் போல 9 மணிக்கு வருபவர்கள் நம் உடன்பிறந்தவர்கள். நமக்கு அடுத்தடுத்து வந்தவர்கள் இவர்கள். மூன்றாம் குழுவைப் போல 12 மணிக்கு வந்தவர்கள் நம் மாமா, மச்சான், சித்தப்பா, சித்தி போன்ற உறவினர்கள். நான்காம் குழுவைப் போல 3 மணிக்கு வருபவர்கள் நம் நண்பர்கள். இவர்கள் நம்மோடு கொஞ்ச காலம் தான் இருப்பார்கள். மேலும் இந்தக் குழுவில் உள்ளவர்கள் மாறிக்கொண்டும் இருப்பார்கள் - பள்ளியில், கல்லூரியில், பணியிடத்தில், கிளப்பில், சர்ச்சில் என மாறி மாறி வருவார்கள். இறுதியாக ஐந்து மணிக்கு வருபவர்கள் போல வருபவர்கள் தாம் 'மனைவி' அல்லது 'கணவன்'. இவர்கள் இறுதியில் வந்தார்கள் என்பதற்காக இவர்களை ஒரு மணி நேரம் மட்டும், கூடவே இருக்கிறார்கள் என்பதற்காக பெற்றோர்களை 12 மணிநேரமும் அன்பு செய்ய முடியுமா? அது நீதியாகுமா? மேலும் சில குடும்பங்களில் மாமியார்-மருமகள் பிரச்சனை வருவதற்குக் காரணம்; இதுதான். மாப்பிள்ளையின் தாயார் தன் மகனைப் பார்த்து, 'நேற்று வந்த ஒருத்திக்காக கூடவே இருக்கும் என்னை உதாசீனப்படுத்துகிறாயா?' என்று கேட்கும் போது அங்கே அந்த மகன் என்ன சொல்ல வேண்டும் தெரியுமா? 'அம்மா! உமக்குரியதைப் பெற்றுக்கொண்டு போய்விடும். உமக்குக் கொடுத்தபடியே கடைசியில் வந்த இவருக்கும் கொடுப்பது என் விருப்பம். எனக்குரியதை நான் கொடுக்கக் கூடாதா? அல்லது நான் நல்லவனாய் இருப்பதால் உனக்குப் பொறாமையா?' நீங்க இப்படிச் சொல்லி உங்க அம்மாகிட்ட வாங்கிக் கட்டிக்கிட்டா அதற்கு கம்பெனி பொறுப்பாகாது! ஆனால் இதுவும் உண்மை!

இ. ஆன்மீக நிர்வாகம்
மோட்சம் இருக்கோ. இல்லையோ, ஆனா நம்ம எல்லாருக்குமே மோட்சத்துக்குப் போகனும்னு ஆசை இருக்கு! மோட்சத்துக்குப் போக எப்பவுமே நல்லவங்களா இருக்கனுமா அல்லது எப்பவாச்சும் நல்லவங்களா இருக்கனுமா? 12 மணி நேரம் நல்லவரா இருந்தாலும், 1 மணி நேரம் நல்லவரா இருந்தாலும் ஒன்னுதானேன்னு தோனுது இந்த உவமையைப் பார்த்தா. இதற்கு உதாரணம் இயேசுவோட வாழ்க்கையிலே இருக்கு தெரியுமா? இயேசு இறக்கும் தருவாயில் சிலுவையில் தொங்கிக் கொண்டிருந்தபோது, நல்ல கள்வன் சொன்னது நினைவிருக்கிறதா, 'நீர் அரசுரிமை பெற்று வரும் போது என்னை நினைவுகூறும்!' அதற்கு இயேசுவின் பதில் என்ன? 'நீர் இன்றே என்னோடு வான்வீட்டில் இருப்பீர்!' தன் வாழ்நாள் முழுவதும் தீமையே செய்துவிட்டு, கடைசி ஒரு நிமிடம் இயேசுவிடம் செபிக்கிறான். மோட்சத்துக்குச் சென்றுவிடுகிறான். இறைவனின் தோட்டத்தில் இவன் ஒரு நிமிடம் தானே வேலை செய்கிறான். இயேசு இப்படிச் சொல்லியிருக்கலாமே! 'அப்படியாப்பா! உன்னை நினைவுகூறனுமா? நீ நல்லவன் இல்லையே பா! இங்க கீழ பாரு! எங்கம்மா! என் அன்புச் சீடர்! எனக்குப் பணிவிடை செய்தவர்கள்! இவங்கள்லாம் முதலில் வான்வீட்டிற்கு வரட்டும்;. ஏன்னா அவங்க வாழ்க்கை பூரா நல்லவங்களாவே இருந்துட்டாங்க! நீ கொஞ்சம் வெயிட் பண்ணு!' ஆனால் இயேசுவின் சீனியாரிட்டி லிஸ்ட் வித்தியாசமா இருக்கிறது. ஆகையினால் நாம சாகும்போது நல்லவங்களா இருந்தாலே போதும்! நாம எப்போ இறப்போம்னு தெரியாது! ஆகையினால எப்பவுமே நல்லவங்களா இருப்போம்! சரியா?

ஈ. உளவியல் நிர்வாகம்
இன்றைய நற்செய்தியில் மனிதர்களின் உள் மன உணர்வுகள் மிகத் தெளிவாக சித்தரிக்கப்பட்டுள்ளது. சோர்வு, திருப்தி, கோபம், பொறாமை, முணுமுணுப்பு இவையெல்லாம் இங்கே சொல்லப்பட்டுள்ள உணர்வுகள். ஒரு தெனாரியத்திற்கு ஒத்துக் கொண்டாலும் இன்னும் அதிகம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு உணர்வும் இருந்தது. எதிர்பார்ப்பு இருக்கும் இடத்தில் ஏமாற்றமும் பாய் விரித்துப்படுத்துக்கொள்கிறது. தாங்கள் பேசிய கூலியை வாங்குவதில் ஏன் முதல் குழுவினருக்கு மகிழ்ச்சி இல்லை. தங்கள் கையிலிருப்பதை மட்டும் பார்த்திருந்தால் அவர்களின் மகிழ்ச்சி பறிபோயிருக்காது. ஆனால் அடுத்தவரின் கையையும் பார்க்கின்றனர். நமக்கு வெளியே மகிழ்ச்சியின் அளவுகோலைத் தேடினால் நாம் ஒருபோதும் மகிழ்ச்சியாக இருக்கவே போவதில்லை. வெளியே பார்க்கும் போது ஒப்பீடும், கோபமும், பொறாமையுமே வருகின்றது.

உ. சமூக நிர்வாகம்
ஒருவேளை வேலை பார்த்த ஐந்து குழுவினரும் பக்கத்து வீட்டுக்காரர்கள் அல்லது ஒரே குடும்பத்தைச் சார்ந்தவர்கள் என வைத்துக் கொள்வோம். சாயங்காலம் வீடு திரும்பியவுடன் சண்டைதான் வரும். சண்டைக்குக் காரணம் பொறாமை. ஒருவர் மற்றவரை முதலில் கேலி பேசுவார்கள்! 'அம்மா! இவன் காலையில இருந்து வேலை பார்த்தான்! ஆனா நான் ஒரு மணி நேரம் தான் வேலை பார்த்தேன். ஆனா எனக்கும் ஒரு தெனாரியம்! அவனுக்கும் ஒரு தெனாரியம்!' என்பான் கடைசியில் வந்தவன். முதலில் வந்தவன் கோபப்படுவான். வலிமையுள்ளவனாயிருந்தால் மற்றவனை அடிப்பான். ஒரு தலைவனின் தாராள குணத்தால் ஒரு குடும்பம் சின்னாபின்னமாகிறது. என்னைப் பொறுத்தவரையில் காயின்கள் உருவாகக் கடவுள்தான் காரணம். தன் பலிபொருள் ஏற்றுக்கொள்ளப்படாததால் காயினுக்கு பொறாமை வருகின்றது. காயின் பதரைக் கொடுத்தான் என்றும் ஆபேல் கொழுத்த ஆட்டைக் கொடுத்தான் என்றும் சொல்லாதீர்கள். பைபிளில் அப்படி ஒன்றும் இல்லை. அப்படிச் சொல்லி நம்மை ஏமாற்றியிருக்கிறார்கள்?

மேலும் இந்த ஒரு நாள் நடந்தது போலவே எல்லா நாளும் நடக்குது என வைத்துக் கொள்வோம். அங்கே ஒட்டு மொத்த சமூகத்திலும் சிக்கல் உருவாகும். காலையில் ஒருவன் வேலைக்குப் புறப்பட்டால் பக்கத்து வீட்டுக்காரன் என்ன சொல்வான்? 'டேய்! எங்கடா கிளம்பிட்ட! நீ காலையில வேலை பார்த்தாலும் ஒரே சம்பளம் தான்! சாயங்காலம் வேலை பார்த்தாலும் அதே சம்பளம் தான்! நம்ம சாயங்காலமே போவோம்!' இதனால் நன்றாக வேலை பார்ப்பவர்களின் 'மோட்டிவேஷனும்' கெடுகிறது அல்லவா?

இன்றைய இறைவாக்கு வழிபாடு நமக்கு கற்பிப்பது என்ன?

1. இன்றைய முதல் வாசகத்தில் தன்னுடைய வழிகள் மனிதர்களின் வழிகளை விட மிக உயர்ந்து நிற்பதாகச் சொல்கிறார் ஆண்டவராகிய கடவுள். பறக்கின்ற விமானத்திலிருந்து பார்த்தால் வானவில் முழுமையான வட்டமாகத் தெரியும் என்கிறார்கள். கீழிருந்து பார்ப்பவர்களுக்கு வானவில் பாதியாக அல்லது கால்வாசியாகத்தான் தெரிகின்றது. ஆக, மேலிருந்து பார்க்கும் போது பார்வை முழுமை அடைகிறது. திராட்சை தோட்ட உரிமையாளரைப் புரிந்து கொள்ள வேண்டுமென்றால் அவரின் தோட்டத்திற்குள் சென்று, அவரின் காலணிகளுக்குள் நம் கால்களை நுழைத்துக்கொள்ள வேண்டும். தொழிலாளர்கள் தங்களின் உழைப்பையும், நேரத்தையும் கணக்கிட்டனர். ஆனால் உரிமையாளரோ ஒவ்வொருவர் வீட்டில் எரிய வேண்டிய அடுப்பைக் கணக்கிட்டார். அனைவருக்கும் வயிறு ஒன்றுதான் என்றும், அந்த வயிற்றை நிரப்ப என்ன தேவையோ அதை அனைவருக்கும் கொடுக்க முற்படுகின்றார் உரிமையாளர். ஆக, இறைவனைப் போல பார்க்க முடியாத அனைவரும் அவரைப் பார்த்து முணுமுணுக்கவே செய்கின்றோம்.

2. இன்றைய இரண்டாம் வாசகத்தில் இழுபறி நிலை பற்றிப் பேசுகின்றார் பவுல். ஒரு பக்கம் தான் இறந்து கிறிஸ்துவோடு இருக்க வேண்டும் எனவும், மறுபக்கம் தான் இவ்வுலகில் இருந்து பணி செய்ய வெண்டும் எனவும் விரும்புகின்றார் பவுல். அதாவது, வாழ்வில் நாம் சில நேரங்களில் இரண்டு நல்லவைகளுக்கு நடுவில் தேர்ந்தெடுக்க வேண்டியிருக்கிறது. இதுதான் மிகவும் கடினமான ஒன்று. இறுதியில், கிறிஸ்துவே உங்களை ஆளட்டும் என நிறைவு செய்கின்றார் பவுல். இதுதான் அனைத்தையும் கிறிஸ்துவில் காண்பது. வாழ்வையும், இறப்பையும் அவரில் கண்டுகொண்டால் நமக்கு இரண்டும் ஒன்றே. ஏனெனில் இரண்டும் அவரில்தான் உள்ளன.

3. வாழ்க்கை என்ற திராட்சைத் தோட்டத்தில் நாம் இன்று எத்தனை மணிநேரத்தில் உள்ளே வந்திருக்கிறோம் என எண்ணிப் பார்ப்போம். அடுத்தவரின் உழைப்பையும், இருப்பையும் கணக்கிட்டுக்கொண்டே இருக்கும் நாம் பல நேரங்களில் நம் உழைப்பையும், இருப்பையும் கணக்கிட மறந்துவிடுகின்றோம்.

அவர் தான் விரும்பியதைச் செய்கிறார். ஏனெனில் அவர் கடவுள்.
அவரின் விருப்பத்தின் முன் அறிவும், அதிர்ஷ்டமும் ஒன்றே.
அவரின் பார்வை அவர்களின் பார்வையாக இருந்தது என்றால் அவர்களை அவர் கண்டித்திருக்க மாட்டார்.
நம் பார்வை இன்று அவரின் பார்வையா?

    


கடவுளின் திருவருளும், அருள்நலமும் தான் இறையரசில் நமக்குரிய வெகுமதியை தீர்மானிக்கின்றன.

மறையுரை வழங்குபவர் Fr. Freddy is a Redemptorist priest belonging to the Province of Bangalore. Currently he is attached to the Archdiocese of St. Louis, Missouri state, U.S.A.
 
முன்னுரை:

ஒரு பாடசாலையில் ஆசிரியராகப் பணியாற்றிய ஒருவர், இறந்த பின்னர் விண்ணுலகிற்கு வந்தார். விண்வீட்டின் வாயில் வழியாக உள்ளே நுழைந்துகொண்டிருந்த அவரை வழிமறித்து நிறுத்திய பேதுரு, "அய்யா, அங்கேயே நில்லும். எங்கே போகிறீர்?" என்று வினவினார். அதற்கு அந்த ஆசிரியர், "நான் உள்ளே செல்லவேண்டும்" என்று சொன்னார். இப்போது பேதுரு, "அது அவ்வளவு சுலபமல்ல. உங்கள் பள்ளியில் கல்விமுறையில் தேர்ச்சி பெற நீங்கள் பல நிலைகளை வைத்திருப்பது போல, விண்ணகத்தில் நுழைவதற்கான தகுதியை முடிவு செய்வதற்கு சில அளவுகோல்கள் உள்ளன" என்றார். "ஆஹா, இது எனக்குத் தெரியாதே?" என்று பதிலுரைத்த ஆசிரியர், "சரி, அந்த அளவுகோல்கள் என்ன? உள்ளே செல்வதற்கு நான் எத்தனை மதிப்பெண்கள் பெறவேண்டும்?" என்று கேட்டார். "விண்ணுலகில் நுழைவதற்கு ஒருவர் ஆயிரம் மதிப்பெண்கள் பெறவேண்டும் என வரையறுத்திருக்கின்றோம்" என்று கூறிய பேதுரு, "இப்போது உங்களைப் பற்றி சொல்லுங்கள். வான்வீட்டினுள் நுழைந்திட உங்களிடம் உள்ள தகுதிகள் என்ன?" என்று கேட்டார். தான் ஒரு முக்கியமான கட்டத்தில் இருப்பதை உணர்ந்த ஆசிரியர், பெருமூச்செறிந்தபடி யோசித்தார். பின்னர், "கடந்த நாற்பது ஆண்டுகளாக நாள்தோறும் காலையில் தவறாது திருப்பலியில் பங்கெடுத்துள்ளேன்" என்று சொன்னார். "சரி... அதற்கு ஒரு மதிப்பெண்" என்றார் பேதுரு. அதைக் கேட்டு அதிர்ச்சியில் உறைந்து போன ஆசிரியரை நோக்கி, "மேலும் சொல்லுங்கள்.. உங்கள் வாழ்க்கைப் பயணத்தில் வேறு என்ன செய்திருக்கிறீர்கள்?" என்று பேதுரு கேட்டபோது, அந்த ஆசிரியர் வாயடைத்துப் போனார்.

"வின்சென்ட் தெ பவுல் சபையில் உறுப்பினராகி, பல அறச்செயல்கள் செய்வதில் ஈடுபட்டிருந்தேன். அறச்செயல்களுக்காக நிதி திரட்டுவதில் நிறைய பணம் சேகரித்துக் கொடுத்துள்ளேன்" என்றவரிடம், "எவ்வளவு பணம் சேகரித்தீர்கள்?" என்று பேதுரு கேட்டார். "சுமார் இரண்டரை லட்சம் ரூபாய் அளவுக்கு நான் பணம் வசூல்செய்து கொடுத்திருக்கிறேன்" என்றார் ஆசிரியர். இதைக் கேட்ட பேதுரு, "நன்று, நீங்கள் மேலும் ஒரு மதிப்பெண் பெறுகிறீர்கள்" என்று சொன்னார். இதை கேட்டு முற்றிலும் தளர்ந்து போன ஆசிரியர், "இந்த நிலையில் போனால், என்னால் வான்வீட்டின் கதவின் அருகே கூட செல்லமுடியாதே? கடவுள் அருள் இருந்தால் மட்டுமே நான் உள்ளே போகமுடியும் என்பது திண்ணம்" என்று மெதுவாக தனக்குள் முணுமுணுத்தார்.  இதனை செவிமடுத்த பேதுரு புன்முறுவலோடு, ஆசிரியரை நேராகப் பார்த்து, "நீங்கள் நினைத்தது மிகவும் சரியானதே. இறைவனின் அருளும், அவருடைய ஆவியின் துணையும் இருந்தால் மட்டுமே நீங்கள் விண்ணக வீட்டினுள் நுழைந்திட இயலும். கடவுளின் திருவருள் மீது நாட்டம் கொண்ட நீர் ஆயிரம் மதிப்பெண்கள் பெற்றுவிட்டீர். ஆகவே, அன்பரே, இப்போது நீங்கள் உள்ளே செல்லலாம்" என்றுரைத்தார்.

 ஆம் விண்ணுலகில் நுழைவதற்கான அனுமதியை நமக்குப் பெற்றுத் தருவது, நாம் செய்கின்ற செயல்கள் அல்ல; இறைவனின் திருவருளே நம்மை விண்ணகத்திற்குள் அனுமதிக்கிறது. அவருடைய அருள்நலமே உன்னத இறையரசிற்கு நம்மை அழைத்துச் செல்லுகிறது.

இறைவார்த்தை:

இயேசுவைப் பின்பற்றுவதற்கு கிடைக்கின்ற வெகுமதியைப் பற்றிய பிரச்சினையை இன்றைய நற்செய்தி வாசகம் விளக்குகிறது. மத்தேயு நற்செய்தி 19:27-ல், "நாங்கள் எல்லாவற்றையும் விட்டு விட்டு உம்மைப் பின்பற்றியவர்களாயிற்றே; எங்களுக்கு என்ன கிடைக்கும்?" என்ற ஒரு முக்கியமான கேள்வியை பேதுரு முன்வைக்கிறார். இன்றைய நற்செய்தியில் சொல்லப்படுகின்ற உவமை, பேதுருவின் இந்தக் கேள்விக்கு இயேசுவின் ஒரு மறுமொழியாக அமைகின்றது.

1. திராட்சைத் தோட்டத்திலுள்ள அவசர நிலைமை: வேலையாட்களை வேலைக்கு அமர்த்துவதற்காக காலை 6 மணிக்கும், காலை 9 மணிக்கும், மதியம் 12 மணிக்கும், மீண்டும் பிற்பகல் 3 மணிக்கும் வெளியே சென்ற நிலக்கிழார், "நேர்மையான கூலியை உங்களுக்குத் தருவேன்" என்று உறுதியளித்து, அவர்களைத் தன் திராட்சைத் தோட்டத்திற்கு அனுப்பினார். வேலைக்கு ஆள்களை அமர்த்துவதற்காக ஒரே நாளில் ஐந்து தடவை அவரே சந்தை வெளிக்கு நேராகச் சென்றார். பொழுது சாய்கின்ற மாலை நேரத்திலும் கூட சென்று, கடைசி குழுவாக சில வேலையாட்களை தனது திராட்சைத் தோட்டத்தில் வேலை செய்வதற்காக அனுப்புகிறார். இவ்வாறு, நிலக்கிழாரே ஐந்து தடவை வெளியே சென்று இயன்ற அளவுக்கு எல்லா வேலையாட்களையும் அனுப்பி வைப்பதற்கு, இறையரசுப் பணியிலிருக்கின்ற அவசர நிலைமையே காரணமாகும்.

2. தகுதியற்ற வேலையாட்கள்: இயேசு வாழ்ந்த காலத்தில், யாராவது ஒருவர் தங்களை வேலைக்கு அமர்த்துகின்ற வரையில், ஒவ்வொரு நாளும் வேலையாட்கள் சந்தை வெளியில் காத்திருப்பது வழக்கமாக இருந்தது. காலை 9 மணிக்கும், மதியம் 12 மணிக்கும், பிற்பகல் 3 மணிக்கும், மறுபடியும் மாலை 5 மணிக்கும் பலர் வேலையின்றி நிற்பதை நிலக்கிழார் கண்டார். சந்தை வெளியில் தான் வேலை தேடி நிற்கின்ற ஆள்களை கண்டறிந்து வேலைக்கு அமர்த்த முடியும். நேர்மையான கூலி தரப்படும் என்ற ஒப்பந்தத்தோடு தான், இந்த வேலையாட்கள் பணிக்கு அமர்த்தப்படுகிறார்கள். இறுதிக் கட்டமாக, மாலை ஐந்து மணிக்கு வேலைக்கு அமர்த்தப்படுகின்ற ஆள்கள், "எங்களை எவரும் வேலைக்கு அமர்த்தவில்லை" என்று சொல்கிறார்கள். "வேலைக்குத் தகுதியற்றவர்கள்" என மற்ற நிலக்கிழார்களால் கைவிடப்பட்டவர்களே இவர்கள் என்பதையே இவர்களுடைய பதில் எடுத்துக் காட்டுகின்றது. இதே காரணத்திற்காகத் தான் மற்றும் பலரும் வேலை செய்வதற்கு அழைக்கப்படவில்லை போலும். இயேசுவால் இறையரசின் பணிக்கு அழைக்கப்பட்ட வரிதண்டுவோரும், விலைமாதரும் இந்த வகையைச் சார்ந்தவர்களே.

3. உரிமையாளரின் அருளை அடிப்படையாகக் கொண்டதே, வெகுமதி: "சாதனைக்கு நிகரான பரிசு, பணிக்கு ஏற்ற ஊதியம்" என்னும் வழக்கமான எதிர்பார்ப்புகளுக்கு எதிரானதாக இந்த உவமை காணப்படுகிறது.  "பகல் முழுவதும் வேலைப் பளுவையும் கடும் வெயிலையும் தாங்கியபடி", நீண்ட நேரம் திராட்சைத் தோட்டத்தில் வேலை செய்தவர்கள் எனக் குறிப்பிடப்படுவோர், யூத மக்கள். மாலை 5 மணிக்கு கடைசியாக அழைத்து வரப்பட்டவர்கள் என குறிப்பிடப்படுவோர், புதிய கிறிஸ்தவர்கள். இவர்களில் பெரும்பாலோர் தங்களுக்கென எந்தவிதமான வழிமரபும், சடங்கு முறைகளும், தெய்வ நம்பிக்கையும் இல்லாத நிலையிலும், இறையரசின் அனைத்து பயன்களையும் பெற்றுக் கொண்ட பிற இனத்தவர் ஆவர். ஆனால், கடைசியாக வந்தவர் முதற்கொண்டு அனைவருமே ஒருநாளுக்கான ஊதியத்தைப் பெற்றுக் கொண்டார்கள்.கடைசியாக வந்தவர்கள், அவர்களுக்கு கொடுக்கப்பட்ட ஊதியத்திற்கு தகுதியானவர்கள் அல்லர்; மற்றவர்களுக்கு சமமாக அவர்களுக்கு கொடுக்கப்பட்ட ஊதியம், திராட்சைத் தோட்டத்தின் உரிமையாளருடைய மேலான அருளை அடிப்படையாகக் கொண்டதாகும். மற்றவர்களுக்கு நிகரான ஊதியத்தை கொடுத்ததோடு, முதலில் வந்தவர்களோடு இறுதியாக வந்தவர்களையும் சரிசமமாக அந்த உரிமையாளர் பாவித்தார். அதனால் தான் நிலத்தின் உரிமையாளர், அவருக்கு எதிராக முணுமுணுத்த முதலில் வந்தவர்களை பார்த்து, "நான் நல்லவனாய் இருப்பதால் உமக்குப் பொறாமையா?" என்று கேட்கிறார். எனவே, முற்றிலும் தலைவருடைய அருள்நலத்தையும், பேரருளையும் அடிப்படையாகக் கொண்டதே, வெகுமதி என்பது.

இறையரசில் நமக்கு கிடைக்கின்ற வெகுமதி என்பது, திராட்சைத் தோட்டத்தின் உரிமையாளராகிய கடவுளுடைய திருவருளையும், அருள்நலத்தையும் அடிப்படையாகக் கொண்டதே. அத்தகைய வெகுமதி, ஒருவருடைய திறமை, வேலை நேரம் அல்லது வேலைப்பளு ஆகியவற்றைச் சார்ந்ததல்ல.

பயன்பாடு:

ஒவ்வொன்றிற்கும் ஒரு விலை உண்டு என்பதை நாம் நமது இளமைப் பருவத்திலேயே கற்றுக் கொள்கிறோம். எதுவுமே இலவசமாக வருவதில்லை. எனவே, எவ்வளவு அதிகமாக பொருள் ஈட்ட முடியுமோ, அந்த அளவு சம்பாதிப்பதில் குறியாயிருக்கிறோம். நெற்றி வியர்வை நிலத்தில் விழ உழைத்து, நம்மிடம் இருப்பதை எல்லாம் சம்பாதித்திருக்கிறோம் என்று சொல்லிக் கொள்வதில் நாம் பெருமையடைகிறோம். நீங்கள் சம்பாதிப்பது உங்களுக்கு கிடைக்கிறது. நீங்கள் எதையும் சம்பாதிக்கவில்லை என்றால், எதையும் அடைந்திட உங்களுக்குத் தகுதியில்லை என்றாகிறது. அன்றாட வாழ்க்கையில், இதுவே நமது மனப்பாங்கு. இந்த வகையில் தான் நாம் வளர்கிறோம். மற்றவர்கள் நம்மை விட சுலபமாக சிலவற்றை அடைவதை காணப் பொறுக்காதவர்கள் சிலர் உண்டு. இன்றைய நமது வாழ்வில், நாம் கையாளுகின்ற அளவுகோல் இதுவே.

ஆனால், இறையரசின் வழிமுறைகள் வேறுபட்டவை. கடவுளின் வெகுமதிகளை நாம் சம்பாதிக்க முடியாது. அவை இறைவன் நமக்குத் தருகின்ற கொடைகள் ஆகும். "கடவுள் தாராள மனமுடையவர்; இது முதல் விதி. இந்த முதல் விதியைக் கற்றுத் தேர்வதே இரண்டாவது விதி" - இது முன்னர் ஒருவர் கூறிய முதுமொழி. "என் எண்ணங்கள் உங்கள் எண்ணங்கள் அல்ல, உங்கள் வழிமுறைகள் என் வழிமுறைகள் அல்ல" என்று கூறுகின்ற கடவுளை பற்றி பேசுகின்ற இறைவாக்கினர் எசாயா, இறுதியில் இரத்தின சுருக்கமாக, "மண்ணுலகத்திலிருந்து விண்ணுலகம் மிக உயர்ந்து இருப்பதுபோல உங்கள் வழிமுறைகளைவிட என் வழிமுறைகளும், உங்கள் எண்ணங்களைவிட என் எண்ணங்களும் மிக உயர்ந்திருக்கின்றன" என்று கடவுள் கூறுவதாக முடிக்கிறார்.

மரபுவழியே சொல்லப்படுகின்ற பழங்கதை ஒன்று உண்டு. விண்ணகத்தில் பதினோரு திருத்தூதர்களையும் ஒன்றுசேர்த்த இயேசு கிறிஸ்து, தன்னோடு "இறுதி இராஉணவு" கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்தார். அவர்களும் உடனே சம்மதித்தார்கள். இரவு உணவில் கலந்து கொள்ள வந்த திருத்தூதர்களை வரவேற்ற இயேசு, அவர்களை இருக்கைகளில் அமரும்படி கேட்டுக் கொண்டார். அங்கே பதிமூன்று இருக்கைகள் போடப்பட்டிருப்பதைக் கண்டு, திருத்தூதர்கள் வியப்படைந்தார்கள். எல்லாம் தயார்நிலையிலிருந்த போதும், கொண்டாட்டத்தை ஆரம்பிக்காமல், தாமதம் செய்தார் இயேசு. "சற்று பொறுத்திருப்போம்" என்பது போல அனைவரையும் காத்திருக்க வைத்தார். வெகுநேரம் ஆன பிறகு, இறுதியாக அங்கே யூதாஸ் வந்துசேர்ந்தார். அவரைப் பார்த்ததும் இயேசு, தனது இருக்கையை விட்டெழுந்து சென்று, யூதாஸை வரவேற்றார். அவரை முத்தமிட்ட இயேசு, "நண்பரே, நீண்ட நேரமாக நாங்கள் உமக்காக காத்திருக்கிறோம். வாரும்" என்று இன்முகத்தோடு அழைத்து வந்தார். அங்கிருந்த மற்ற எல்லோருக்கும் யூதாஸ் அழிவைக் குறிப்பவராக தென்பட்டார். ஆனால், தன்னுடைய இராஉணவில் ஒரு பங்கேற்பாளராக இயேசு யூதாஸைக் கண்டார்.


முதன்முதலாகச் சென்று, காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை திராட்சைத் தோட்டத்தில் பணியாற்றுகின்ற வேலையாட்களாக ஒருவேளை நாமும் இருக்கலாம். ஆனால். இறைவனின் திராட்சைத் தோட்டம் என்பது, மணமாகாத அன்னையர், மணமுறிவு பெற்றவர்கள், மறுமணம் புரிந்தோர், மது மற்றும் போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையானோர், விலைமாதர், எய்ட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டோர், ஓரின சேர்க்கையாளர் போன்ற வழிதவறிச் சென்ற மக்களுக்கும் உரியது என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். திராட்சைத் தோட்டத்தின் உரிமையாளரான இறைவன், தனது தோட்டத்தில் பணியாற்றுவதற்காக இறுதிக் கட்டத்தில் யாரை அழைப்பார் என்பது நமக்குத் தெரியாது. கடவுளை பொருத்தவரையில், எதுவுமே காலங்கடந்த நிலையல்ல. திருத்தூதர் பேதுரு காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை உழைத்தவர். கல்வாரியில் வலதுபக்கத்து சிலுவையில் இருந்த கள்வனோ கடைசி நேரத்தில் வந்தவர். ஆனால், இறையரசில் இருவரும் ஒரே மாதிரியான வெகுமதியையே பெற்றார்கள்.

முடிவுரை:

உதவியற்ற நிலையிலிருக்கின்ற நமது சொந்த வலிமை மற்றும் நமது திறமை ஆகியவற்றை மட்டும்  கொண்டு, விண்ணகம் செல்வதற்கான வழிமுறைகளை நாம் மேற்கொள்ள முடியாது என்பதை, இன்றைய நற்செய்தி உவமை எடுத்துரைக்கின்றது. முடிவில்லா நிலைவாழ்வின் வெகுமதியை அடைந்திட போதுமான நற்செயல்களை இவ்வுலக வாழ்வில் நாம் செய்திடல் இயலாது. அதனால் தான் அவருடைய திருவருளோடு ஒத்துழைத்து நாம் செயலாற்ற வேண்டுமென்று கடவுள் எதிர்பார்க்கிறார். திராட்சைத் தோட்டத்தின் அதிபரான இறைவனுடைய எண்ணங்களும், வழிமுறைகளும், நம்முடைய எண்ணங்கள் - வழிமுறைகளிலிருந்து வேறுபட்டவை. இறைவனின் வழிகளை உணர்ந்து, பின்பற்றுவதற்கு தேவையான ஞானத்தை தூய ஆவி நமக்கு அருள்வாராக.





 ‘என் வழிமுறைகள் உங்கள் வழிமுறைகள் அல்ல’

அருள்பணி மரியஅந்தோணிராஜ்-பாளையங்கோட்டை


முன்பொரு காலத்தில் ஓர் அரசன் இருந்தான். அவன் மிகச்சிறந்த ஞாபகசக்தி உடையவன்; அதோடு கூர்மையான அறிவும் நிரம்பப் பெற்றவன். ஒரு கவிதையை ஒருமுறை கேட்டால் போதும்; அதை வரிமாறாமல், வார்த்தை மாறாமல் அப்படியே திருப்பிச்சொல்ல அவனால் முடியும். அவன் சபையில் விதூஷகன் ஒருவன் இருந்தான். அவனும் நினைவாற்றலில் சிறந்தவன்தான். எதையும் இரண்டு முறை கேட்டால், அப்படியே திருப்பிச் சொல்லும் சக்தி உடையவன் அவன். அந்த அவையில் அடிமைப்பெண் ஒருத்தி இருந்தாள். மூன்றுமுறை கேட்டால், அதை அட்சரம் பிசகாமல் திருப்பிச் சொல்வாள் அவள்.

அந்த அரசன் ஓர் நயவஞ்சகன். எந்தப் புலவன் வந்து மன்னனைப் புகழ்ந்து பாடினாலும், 'நீ பாடவிருக்கும் பாடல் இதுவரை நான் கேள்விப்படாத, உன்னுடைய சொந்தப் பாடலாக இருந்தால், தகுந்த சன்மானம் தருவேன்” என்பான்.

வந்த புலவனும், தன் கவிதையைப் படிப்பான். ஒருமுறை கேட்டதுமே மன்னனுக்குத்தான் அது மனப்பாடம் ஆகிவிடுமே! எனவே, ஏதோ ஒரு பெயரைக் குறிப்பிட்டு, “அந்தக் கவிதை அவர் எழுதியது; நான் ஏற்கெனவே படித்திருக்கிறேன்” என்று சொல்லி, அதை அப்படியே மளமளவென்று ஒப்பிப்பான். புலவன், ''இல்லை. இந்தக் கவிதை என் சொந்தக் கவிதை'' என்று சாதித்தால், “கிடையவே கிடையாது! இந்தக் கவிதை என் விதூஷகனுக்குக்கூடத் தெரியும்” என்று சொல்லி, விதூஷகனைப் பாடச்சொல்வான் மன்னன். புலவன் பாடி ஒருமுறை, மன்னர் திரும்பச் சொல்லி ஒருமுறை என விதூஷகன் அந்தக் கவிதையை இரண்டு முறை உன்னிப்பாகக் கவனித்திருப்பதால், அவனும் அதை வரி மாறாமல் சொல்லுவான். அப்போதும், ''இருக்க முடியாது! இந்தக் கவிதையை நான் நேற்றுத்தான் புனைந்தேன்!'' என்று புலவன் அழாக்குறையாகச் சொன்னால், “இல்லை. நீ பொய் சொல்கிறாய். என்னுடைய அடிமைப்பெண்கூட இந்தக் கவிதையைச் சொல்வாள்” என்று சொல்லி, அவளைச் சொல்லச் சொல்லுவான் அரசன். மூன்று முறை கேட்டதால், அவளும் வார்த்தை பிசகாமல் அந்தக் கவிதையைத் திரும்பச் சொல்ல, புலவன் குழம்பிப்போய் சித்தம் கலங்கி, புத்திசுவாதீனத்தை இழக்கும் அளவுக்கு வந்துவிடுவான்.

'அல் அஸ்மாய்' என்கிற கவிஞனுக்கு மட்டும் இந்த உண்மை தெரியும். அரசனுடைய நினைவாற்றல் குறித்தும் தெரியும். எனவே, இதுவரை யாரும் உபயோகிக்காத வித்தியாசமான சொற்களைப் பயன்படுத்தி, அவர் ஒரு கவிதையைத் தயார் செய்தார். அதை அரசனோ, விதூஷகனோ, அடிமைப்பெண்ணோ மனப்பாடம் செய்து திரும்பச்சொல்லவே முடியாது என்கிற அளவில் மிகக் கடினமான ஒரு கவிதையை உருவாக்கினார் அவர். பின்பு, ஒரு வழிப்போக்கரைப்போல மாறுவேடம் பூண்டு, அரசவைக்குச் சென்றார்.

“மன்னரே, நான் உங்களைப் புகழ்ந்து ஒரு கவிதை தயாரித்திருக்கிறேன். உங்களுக்கு படித்துக்காட்ட விரும்புகிறேன்” என்றார். அதற்கு அரசர், “புலவரே! என் நிபந்தனை உங்களுக்குத் தெரியும் அல்லவா?” என்றார். “நன்றாகத் தெரியும். அந்த நிபந்தனைக்கு நான் ஒப்புக் கொள்கிறேன்” என்று சொல்லி அவர் அந்தப் பாடலைப் பாடிக் காண்பித்தார். கடினமான பதங்களுடன்கூடிய, கரடுமுரடான வரிகள் கொண்ட அந்தப் பாடலைக் கேட்ட மன்னனால், திருப்பிச் சொல்ல முடியவில்லை. மன்னரே தடுமாறியதால், விதூஷகனும் மலங்க மலங்க விழித்தான். அடிமைப்பெண்ணாலும் எதுவும் செய்ய முடியவில்லை. இறுதியில் மன்னன் தன்னுடைய மன்னன் தோல்வியை ஒப்புக்கொண்டான். 'அல் அஸ்மாய்’ என்ற அந்த கவிஞனின் வழிமுறை, எண்ணம், அணுகுமுறை எல்லாம் வித்தியாசமாக இருந்தது. அதனாலேயே அவரால் நயவஞ்சக அரசனை வெற்றிக்கொள்ள முடிந்தது.

பொதுக்காலத்தின் இருபத்து ஐந்தாம் ஞாயிற்றுக்கிழமையான இன்று நாம் படிக்கக்கேட்ட வாசகங்கள் அனைத்தும் ‘கடவுளின் வழிமுறைகள், எண்ணங்கள் எல்லாம் மனிதரின் வழிமுறைகள், எண்ணங்கள் அனைத்தையும் விட உயர்வானது என்ற சிந்தனையை வழங்குகின்றது. அது எப்படி என்று இப்போது சிந்தித்துப் பார்ப்போம்.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு கூறுகின்ற திராட்சைத் தோட்ட உரிமையாளர் உவமையில், வேலையாட்கள் திராட்சைத் தோட்டத்தில் உழைப்பதற்காக விடியற்காலை, காலை ஒன்பது மணி, பகல் பன்னிரண்டு மணி, பிற்பகல் மூன்று மணி, மாலை ஐந்து மணி என வேலைக்கு அமர்த்தப்படுகிறார்கள். ஆனால் கூலிகொடுக்கப்படும்போது எல்லாரும் சமமான கூலி பெறுகிறார்கள். இதனால் முன்கூட்டியே வேலைக்கு வந்தவர்கள் முணுக்கிறார்கள். ஆனால் திராட்சைத் தோட்ட உரிமையாளரோ, எல்லாருக்கும் சமமான கூலி கொடுப்பது தன்னுடைய விருப்பம் என்று சொல்லி அவர்களுடைய வாயை அடைக்கின்றார்.

வேலைக்குத் தகுந்தவாறுதான் கூலிகொடுக்கவேண்டும் என மனித கண்ணோட்டத்தில் நாம் சொல்லலாம். ஆனால் கடவுளது பார்வை அப்படிக்கிடையாது, அது இன்றைய முதல் வாசகத்தில் நாம் படிப்பதுபோல ‘கடவுளின் எண்ணங்கள் மனிதர்களின் எண்ணங்களைவிட உயர்ந்ததாக, கடவுளின் வழிமுறைகள் மனிதர்களின் வழிமுறைகளைவிட உயர்ந்ததாக இருக்கின்றது. உவமையில் கடவுளின் எண்ணம் எந்தளவுக்கு மனிதர்களின் எண்ணங்களை விட உயர்ந்து நிற்கின்றது என்று நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

ஏற்கனவே சொன்னதுபோல மனிதர்களாகிய நாம் வேலைக்குத் தகுந்த கூலியைத்தான் தருகின்றோம். ஆனால் ஆண்டவராகிய கடவுளோ அதற்கு மேலும் சென்று கூலியைத் தருகின்றார். இந்த உவமையைக் குறித்து சொல்கிறபோது ஒருசில விவிலிய அறிஞர்கள், “திராட்சைத் தோட்ட உரிமையாளர் கடைசியில் வந்த கூலியாட்களுக்கும் ஒரு தெனாரியம் கொடுக்கக் காரணம், அந்த கூலியாட்களை நம்பி அவர்களுடைய குடும்பம் இருக்கிறது. எனவே ஒரு தெனாரியத்திற்கும் குறைவாக ஊதியம் கொடுத்தால் அவர்களுடைய குடும்பம் பட்டினியில் வாடக்கூடும் என்பதற்காகத்தான் திராட்சைத் தோட்ட உரிமையாளர் இப்படிச் செய்தார்” எனக் கூறுவார்கள்.

அப்படியானால் விடியற்காலையிலிருந்தே வேலைபார்க்கும் கூலியாட்களுக்கு ஒரு தெனாரியம் என்ற கூலி அநீதியாக இல்லையா? என்று நாம் கேள்வி கேட்கலாம். அதற்கு உவமையிலே பதில் இருக்கின்றது. திராட்சைத் தோட்ட உரிமையாளார் தனக்கு எதிராக முணுமுணுத்தவர்களைப் பார்த்துச் சொல்கிறார், “நான் உனக்கு அநியாயம் செய்யவில்லை. நீர் என்னிடம் ஒரு தெனாரியம் கூலிக்கு ஒத்துக்கொள்ளவில்லையா? உமக்குரியதைப் பெற்றுக்கொண்டு போய்விடும். உமக்குக் கொடுத்தபடியே கடைசியில் வந்த இவருக்கும் கொடுப்பது என் விரும்பம்” என்று. ஆகவே திராட்சைத் தோட்ட உரிமையாளர் யாருக்கும் அநீதி இழைக்கவில்லை, மாறாக கடைசியில் வந்த கூலியாட்கள்மீது, அவர்கள் குடும்பத்தின்மீது கொண்ட இரக்கத்தினால் பெருந்தன்மையோடு நடந்துகொண்டார் எனப் புரிந்துகொள்ளவேண்டும்.

ஆண்டவராகிய கடவுளும் எளியவர், சமுதாயத்தில் உள்ள வறியவர்பால் அதிக அன்பும், கரிசனையும் கொண்டு இருக்கிறார் என்றால், பணம்படைத்தவர்களும், அதிகாரம் படைத்தவர்களும் கடவுள் அநீதியாக நடந்துகொள்கிறார் எனப் புரிந்துகொள்ளக்கூடாது. மாறாக எளியவரும், வறியவரும் தங்களுடைய வாழ்வில் ஏற்றம் பெறவேண்டும் என்பதற்காகத்தான் கடவுள் இப்படிச் செயல்படுகின்றார் எனப் புரிந்துகொள்ளவேண்டும். (இடஒதுக்கீட்டையும் இங்கே இணைத்துப் பார்த்து புரிந்துகொள்ளவேண்டும்)

பல நேரங்களில் மனிதர்கள் அப்படியிருப்பதில்லை. கடவுளின் தயவு எளியவருக்குக் கிடைத்துவிட்டால் வலியவர்கள் அதைக்கண்டு பொறாமை கொள்கிறார்கள். உவமையிலும்கூட திராட்சைத் தோட்ட உரிமையாளர் கடையில் வந்த கூலியாட்களுக்கு ஒரு தெனாரியம் கொடுத்ததை முதலில் வந்தவர்கள் பொறாமைக் கண்கொண்டு பார்க்கிறார்கள். அதனால்தான் அவர், “நான் நல்லவனாய் இருப்பதால் உமக்குப் பொறாமையா?” என்கிறார். ஆகவே வாழ்க்கையில் எத்தகைய தருணத்திலும் ஒரு மனிதரின் வளர்ச்சியைக் கண்டு மகிழவேண்டுமே ஒழிய பொறாமைப்படக் கூடாது. பின்னர் பொறாமையே அம்மனிதரின் அழிவுவுக்குக் காரணமாகிவிடும்.

ஓர் ஊரில் துணி துவைப்பவனும் மண்பானை செய்கின்ற குயவனும் அருகருகே வசித்து வந்தார்கள். துணி துவைப்பவனோ வசதியாக இருந்தான். இதைக் கண்டு குயவனுக்குத் தாங்கமுடியவில்லை. ஒவ்வொரு நாளும் குயவன் துணி துவைப்பவனை பொறாமைக் கண்கொண்டு பார்த்தான். குயவன் துணிதுவைப்பவனை எப்படியாவது ஒழித்துக்கட்டவேண்டும் எனத் தீர்மானித்தான்.

ஒருநாள் அவன் அந்நாட்டு அரசனிடம் சென்று, நயவஞ்சகமாகப் பேசி அவரைத் தன்பக்கம் இழுத்து, அழுக்குத் துணிகளை வெள்ளை வெளேரென வெளுக்கும் துணி துவைப்பவனை அரண்மனையில் இருக்கும் பட்டத்து யானையை வெள்ளை வெளேரென ஆக்கும்படி கேட்டுக்கொண்டான். அரசரும் குயவனுடைய பேச்சில் மயங்கி, துணி துவைப்பவனை அழைத்துக்கொண்டு வரச் சொல்லி அவனை யானையை வெள்ளையாக வெளுக்கும்படி கேட்டுக்கேட்டான். இதைக் கேள்விப்பட்ட துணி துவைப்பவன் இவையெல்லாம் தன்னுடைய வீட்டுக்குப் பக்கத்து வீட்டில் வசிக்கும் குயவனின் வேலையாகத் தான் இருக்கும் எனப் புரிந்துகொண்டான். எனவே அவன் அரசனிடம், “மன்னா! இந்த யானையை வெள்ளையாக ஆக்கவேண்டுமென்றால், அதற்கு ஒரு பெரிய மண்பானை தேவைப்படும். அந்த மண்பானையில் வைத்துத்தான் இந்த யானையை குளிப்பாட்டி, வெள்ளையாக்க முடியும்” என்றான்.

உடனே அரசன் குயவனிடம், யானையைக் குளிப்பாட்டும் அளவுக்கு ஒரு மண்பானையை செய்துகொண்டு வருமாறு கேட்டுக்கொண்டான். குயவனும் ஒருமாத காலம் கடுமையாகப் போராடி, யானை குளிக்கும் அளவுக்கு ஒரு மண்பானையைக் கொண்டுவந்தான். பின்னர் அரசன் அங்கே இருந்த சேவகர்களிடம், யானையை தூக்கி மன்பானைக்குள் இறக்கிவைக்குமாறு கேட்டுக்கொண்டான். சேவகர்களும் மன்னர் சொன்னதற்கு இணங்க யானையைக் கட்டி, மண்பானையில் இறக்கி வைத்தார்கள். ஆனால் அந்தோ பரிதாபம் யானையின் எடை தாங்காமல் மண்பானை உடைந்து போனது. இதைப் பார்த்த அரசன் குயவனிடம் இன்னொரு மண்பானை செய்துகொண்டு வருமாறு கேட்டுக்கொண்டான். அதற்கு குயவனோ, “அரசே! என்னால் இன்னொரு மண்பானை செய்யமுடியாது. துணி துவைப்பவன் மீது கொண்ட பொறாமையினால்தான் நான் இப்படி யானையை வெள்ளையாக்கும்படி கேட்டுக்கொண்டேன். ஆனால் அது எனக்கே வினையாகும் என்று நினைக்கவில்லை என்று சொல்லி, தன்னுடைய தவற்றை உணர்ந்து வருந்தி அழுதான்.

பொறாமையோடு வாழ்பவன் தன் பொறாமையினாலே அழிவான் என்பது இந்தக் கதை ஒரு நல்ல எடுத்துக்காட்டு.

ஆகவே, பிறர் வளர்ச்சியடையும்போது பொறாமைப்படாமல், மகிழ்ச்சியுறுவோம். ஆண்டவர் எப்படி எளியவர்மீது அதிகமாக அன்பும், இரக்கமும், கரிசனையும் கொண்டு வாழ்கிறாரோ அதைப் போன்று நாமும் எளியவர், வறியவர்மீது அன்பும் இரக்கமும் கொண்டு வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம். 



Saturday 16 September 2017

பொதுக்காலம் 24-ஆம் ஞாயிறு



பொதுக்காலம் 24-ஆம் ஞாயிறு

சீஞா 2:30-287 உரோ 14:1-8; மத் 18:21-35

மறையுரை மொட்டுக்கள்-அருள்பணி Y இருதயராஜ்

கடவுளிடம் ஒருவர் "கடவுளே! உங்கள் அடையாள அட்டையைக் காட்டுங்கள்" என்று கேட்டாராம். கடவுளின் அடையாள அட்டை என்ன? புனித யோவான் கூறுகிறார் கடவுள் அன்பாய் இருக்கிறார்" (1 யோவா 4:18) மனிதரிடம் அன்பு என்பது ஒரு சிறிய துளி. ஆனால் கடவுளோ அன்புக் கடல் அவருடைய அன்புக்கு ஆழம், அகலம், நீளம் உயரம் என்பது கிடையாது கடவுள் அன்பின் முழுமை. அவரிடம் அன்பைத் தவிர வேறெதுவும் கிடையாது. கடவுளின் தனிப் பண்பைப் பற்றி இன்றைய பதிலுரைப் பாடல் பின்வருமாறு கூறுகிறது "ஆண்டவர் இரக்கமும் அருளும் கொண்டவர். பொறுமையும் பேரன்பும் உள்ளவர். அவர் நம் குற்றங்களை எல்லாம் மன்னிக்கிறார்" (திபா 103) கடவுள் தம் மகன் கிறிஸ்துவை இவ்வுலகிற்கு அனுப்பியதன் நோக்கத்தைத் திருத்தூதர் பவுல் பின்வருமாறு கூறுகிறார். "கடவுள் உலகினரின் குற்றங்களை பொருட்படுத்தாமல் கிறிஸ்துவின் வாயிலாக அவர்களைத் தம்மோடு ஒப்புரவாக்கினார்" (2 கொரி 5-19) எனவே கடவுள் நம் பாவங்களுக்கு ஏற்றபடி நம்மைத் தண்டிக்கவில்லை நமது பாவங்களைக் கடவுள் கிறிஸ்துவின்மேல் சுமத்த அவர் நம் பாவங்களுக்குக் கழுவாய் ஆனார்.
 கடவுள் நம் குற்றங்களை கணிக்காமல் நம்மை மன்னித்தார் என்றால், நாமும் பிறருடைய குற்றங்களைப் பொருட்படுத்தாமல் மன்னிக்க வேண்டுமென்பது இன்றைய அருள்வாக்கு வழிபாட்டின் மையக்கருத்தாகும். இன்றைய முதல் வாசகம் கூறுகிறது "உனக்கு அடுத்திருப்பவர் செய்த அநீதியை மன்னித்துவிடு. அவ்வாறெனில் நீ மன்றாடும்போது உன் பாவங்கள் மன்னிக்கப்படும்" (சீஞா 23:2). இன்றைய நற்செய்தியில் ஆண்டவர் கூறுகிறார் உங்களுள் ஒவ்வொருவரும் தம் சகோதர சகோதரிகளை மனமாற மன்னிக்காவிட்டால்,விண்ணுலகில் இருக்கும் என் தந்தையும் உங்களை மன்னிக்கமாட்டார்" (மத் 1835)
நமக்கெதிராகக் குற்றம் புரிகின்றவர்களை ஏழுமுறை மட்டுமல்ல, எழுபதுமுறை வழுமுறை மன்னிக்க வேண்டுமெனப் பணிக்கிறார் கிறிஸ்து (மத் 1822). மன்னிப்பதற்கு ஒரு வரையறை இல்லை. இன்றைய நற்செய்தியில் கிறிஸ்து கூறும் உவமை வாயிலாகக் கிறிஸ்து நமக்கு உணர்த்தும் உண்மை "கடவுள் நம்முடைய கனமான பாவங்களை மன்னிக்கிறார். அப்படியிருக்க நாம் நமக்கு எதிராகச் சிறுசிறு குற்றங்களை இழைக்கின்றவர்களை மன்னிக்காமல் இருப்பது முறையா?"
ஓர் இளம் பெண் திருமணமாகி ஒரு சில நாள்களே தன் கணவருடன் வாழ்ந்தார். அதன் பிறகு கணவரின் கொடுமை தாங்கமுடியாமல் அம்மா வீட்டுக்கு வந்துவிட்டார். மீண்டும் கணவருடன் சேர்ந்து வாழ மறுத்து, மண முறிவு கேட்டார் அவரிடம், "உங்கள் கணவரை மன்னித்து அவருக்காகச் செபியுங்கள்" என்றேன். அதற்கு அவர் "என் கணவரை மன்னிக்கத் தயார் ஆனால் அவருக்காகச் செபிக்கச் சொல்லுவது கொஞ்சம் “ஓவராகத் தெரியவில்லையா?" என்று கேட்டார். கிறிஸ்து சிலுவையில் தொங்கியபோது தம்மைச் சிலுவையில் அறைந்தவர்களை மன்னித்ததுடன், அவர்களுக்காகத் தம் தந்தையிடம் வேண்டிக்கொண்டார். அவரது இச்செயல் மனிதக் கணிப்பின்படி கொஞ்சம் "ஒவராகத்தான்" தெரிகிறது. ஆனால் அவரது செயல் அவர் உண்மையிலேயே கடவுள் என்பதை வெளிப்படுத்துகிறது. ஏனெனில் தவறிழைப்பது மனிதத்தன்மை. மன்னிப்பது தெய்வத்தன்மை பகைவர்களை மன்னிப்பதுடன் அவர்களுக்காகச் செபிக்கும்படி கிறிஸ்து நமக்கு அறிவுறுத்துகிறார் "உங்கள் பகைவர்களிடம் அன்பு கூருங்கள் உங்களைத் துன்புறுத்துவோருக்காக இறைவனிடம் வேண்டுகள்" (மத் 5:44)
நாம் பகைவர்களுக்கு நன்மை செய்வதில் நிலத்தைப் போன்று இருக்க வேண்டும் என்கிறார் வள்ளுவர் நிலமானது தன்னை வெட்டிக் காயப்படுத்துபவர்களைத் தாங்குவதோடு அவர்களுக்குத் தேவையான உணவுப் பொருள்களையும் கொடுக்கிறது.
அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார் பொறுத்தல் தலை (குறள் 151)
ஒரு பெண்மணிக்கு நீண்ட காலமாக ஆஸ்த்மா நோய். அவள் பல மருத்துவர்களை அணுகியும், பல செபக்கூட்டங்களில் கலந்து கொண்டும் அவருக்குக் குணம் கிடைக்கவில்லை. ஏனெனில் அவர் ஒருவரை மன்னிக்க மறுத்துவிட்டார் என்று அவர் தனது பகைவரை மனப்பூர்வமாக மன்னித்தாரோ அன்று அவருக்குப் பூரண குணம் கிடைத்தது. பிறரை மன்னிக்காவிட்டால், நம் மனப்புண் ஆறாது.
மன்னிப்பவரின் உள்ளம்  ஒரு மாணிக்கக் கோவில். மன்னிக்காதவரின் வாழ்வு தடமே இல்லாமல் மறைந்து போகும் என்கிறது ஒரு திரைப்படப் பாடல். 
மன்னிக்கத் தெரிந்த மனிதனின் உள்ளம்
மாணிக்கக் கோயிலடா - அதை
மறந்தவன் வாழ்வு தடம் தெரியாமல்
மறைந்தே போகுமடா. 



"மன்னியுங்கள், மன்னிப்புப் பெறுவீர்கள்" (லூக் 6.37)



மன்னிக்கும் மனம் - அருள்பணி ஏசு கருணாநிதி -மதுரை

டெகார்ட் என்ற பிரெஞ்சு மெய்யியலாளரின், 'கோஜிட்டோ எர்கோ சும்' என்ற சொல்லாடல் மிகவும் பிரசித்தி பெற்றது. மறுமலர்ச்சி காலம் தொடங்கியபொழுது, 'நான் சிந்திக்கிறேன். எனவே நான்' என்று பொருள்கொள்ளும் இந்தச் சொல்லாடல் மெய்யியலின் போக்கையே மாற்றிப்போட்டது.
1990 களில் பொதுவுடைமை மறைந்து பொருளாதாரத்தில் உலகமயமாக்கல் அல்லது முதலாளித்துவம் தலைதூக்கியபோது, 'சுமோ எர்கோ சும்' என்ற சொல்லாடல் உருவானது. 'நான் வாங்குகிறேன். எனவே நான்' என்பது இதன் பொருள்.
ஆனால், 2000 ஆண்டுகளாக கிறித்தவத்தின் அடிநாதமாக இருக்கும் சொல்லாடல் 'திமித்தோ எர்கோ சும்'. அதாவது, 'நான் மன்னிக்கிறேன். எனவே நான்.'
கிறித்தவத்தின் பிதாமகன் இயேசு, 'தந்தையே இவர்களை மன்னியும்' என்று தன் வாழ்வின் கடைசி நேரத்தில் அனைவரையும் மன்னித்தவர், 'மன்னிப்பு' ஒன்றையே தன் இறையாட்சியின் மையப்பொருளாகவும், தன் போதனையின் கருப்பொருளாகவும் கொண்டிருந்தார். மன்னிப்பு என்பது கோழைத்தனம் என்று சிலர் எண்ணலாம். உண்மையில், மன்னிப்பதற்குத்தான் அதிக மனத்திடமும், தைரியமும் தேவை.
இயேசுவின் மன்னிப்பு போதனை யூதக் காதுகளுக்கு அலர்ஜியாக அல்லது வித்தியாசமாக இருந்திருக்க வேண்டும். 'கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல்' என்று பழகிப்போன அவர்களுக்கு, 'உங்கள் பகைவர்களையும் மன்னியுங்கள்' என்று இயேசு சொன்னது கண்டிப்பாகப் புரிந்திருக்காது. 'கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல்' என்பது அவர்களைப் பொறுத்தவரையில் பழிதீர்த்தல் அல்ல. மாறாக, திருப்பிக் கொடுத்தல். 'எனக்கு வருவதை நான் திருப்பிக் கொடுக்க வேண்டும்' என்று அவர்கள் நினைத்தது சரிதான். ஏனெனில் இதைத்தான் நியூட்டனின் மூன்றாம் விதியும் சொன்னது: 'ஒவ்வொரு வினைக்கும் சமமான எதிர்வினை உண்டு.' இப்படித்தான் இயற்கையும் நடப்பதாக அவர்கள் நம்பினார்கள். 'மன்னிப்பு' என்ற வார்த்தையால் இயேசு இயற்கையின் போக்கையே திருப்புகின்றார்.
நம் மனித உடலும், உள்ளமும் இயல்பாகவே திருப்பிக் கொடுப்பதற்கே பழகியிருக்கிறது. இதைத்தான் நாம் உடலியல் படிப்பில் 'ரிஃப்ளக்ஸ்' என்கிறோம். நாம் ஒருவர் மற்றவரை மன்னிப்பதற்கு 'ரிஃப்ளக்ஸ்' என்னும் நிலையிலிருந்து 'ரிஸ்பான்ஸ்' என்ற நிலைக்குக் கடந்து செல்வது அவசியம் என்பதை இன்றைய நற்செய்தி வாசகம் (காண். மத் 18:21-35) நமக்கு அறிவுறுத்துகிறது.
இன்றைய நற்செய்தி வாசகத்தின் சூழல் பேதுருவின் கேள்வி: 'ஆண்டவரே, என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் எனக்கு எதிராகப் பாவம் செய்துவந்தால் நான் எத்தனை முறை அவரை மன்னிக்க வேண்டும்? ஏழு முறையா?' யூதப் போதனையும் மன்னிப்பைப் பற்றி பேசியது. ஆனால், மூன்றுமுறை மன்னித்தால் போதும் என வரையறுத்தது. பேதுரு கொஞ்சம் அதிகம் சென்று, 'ஏழு முறை போதுமா?' எனக் கேட்கிறார். நிறைவு அல்லது முழுமை என்பதைக் குறிக்கும் எண் ஏழு. இந்த நிறைவு போதுமா? எனக் கேட்பது போல இருக்கிறது பேதுருவின் கேள்வி. 'எண்ணிக்கை வேண்டாம். நீ சுவாசிக்கும் சுவாசத்திற்கு எண்ணிக்கை உண்டா?' என்று கேட்பது போல இருக்கிறது இயேசுவின் பதில்: 'ஏழுமுறை மட்டுமல்ல. எழுபது முறை ஏழு முறை என நான் உனக்குச் சொல்கிறேன்.' சொல்லி முடித்தவுடன் மன்னிப்பைப் பற்றிய ஓர் உவமையையும் சொல்கிறார் இயேசு.
'மன்னிப்பு' என்று தொடங்குவதற்குப் பதிலாக, 'விண்ணரசு பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பாகும்' எனத் தொடங்குகிறார் இயேசு. இவ்வாறாக, விண்ணரசின் முதற்கூறாக இருப்பது 'மன்னிப்பு' என்பதையும் உணர்த்திவிடுகிறார் இயேசு. இயேசுவின் உவமையில் மூன்று முக்கிய கதைமாந்தர்கள் இருக்கிறார்கள்: 'அரசன், பணியாளன் எக்ஸ், பணியாளன் ஒய்.' அரசனுக்கும் பணியாளன் எக்ஸ்க்கும் உள்ள உறவு மேல் கீழ் உறவு. பணியாளன் எக்ஸ்க்கும், பணியாளன் ஒய்க்கும் உள்ள உறவு சமநிலை உறவு. மேல் கீழ் உள்ள உறவில் பணியாளன் எக்ஸ் கடன்பட்டிருக்கும் தொகை 10000 தாலந்து (10 கோடி என வைத்துக்கொள்வோம்). சமநிலை உறவில் பணியாளன் ஒய் கடன்பட்டிருக்கும் தொகை 100 தெனாரியம் (1000 ரூபாய் என வைத்துக்கொள்வோம்). இரண்டு தொகைகளுக்கும் உள்ள வித்தியாசம் நம்மை மலைக்க வைக்கிறது. இரண்டு பணியாளர்களுமே தாங்கள் கடன் பட்டவர்களிடம் முறையிடுகின்றனர். பணியாளன் எக்ஸை மன்னித்துவிடுகின்றார் அரசன். பணியாளன் ஒய்யை மன்னிக்க மறுக்கின்றான் பணியாளன் எக்ஸ். இது அரசனுக்குத் தெரிவிக்கப்படுகிறது. அரசன் தன் மன்னிப்பைத் திரும்பப் பெற்றுக்கொள்கின்றார். ஆக, மன்னிப்பை அவன் மற்ற பணியாளனுக்குத் தராததால் அவன் பெற்ற மன்னிப்பு திருமப் பெறப்படுகின்றது. அல்லது மேலிருந்து கீழாக மன்னிப்பு பெற்ற ஒருவர் அதை சமநிலையில் இருக்கும் மற்றவரோடு பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதே இயேசு சொல்லும் மன்னிப்பு பாடம். 'வானகத் தந்தை நிறைவுள்ளவராய் இருப்பது போல நீங்களும் நிறைவுள்ளவராய் இருங்கள்' (மத் 5:48) என இயேசு சொல்வதன் பொருளையும் இங்கே உணரமுடிகிறது.

'மன்னிப்பு' - இதை நாம் எளிதாகச் சொல்லிவிடுகிறோம். ஆனால் இதை வாழ்வாக்குவது மிகவும் கடினம். நம்ம வாழ்க்கையில சில நேரங்களில் மேலிருந்து கீழ் அல்லது கீழிருந்து மேல் மன்னித்து விடுகிறோம். உதாரணத்திற்கு, என் அறையில் வேலை செய்யும் பெண் எனக்குத் தெரியாமல் ஒரு 100 ரூபாயை எடுத்துக்கொண்டால் அதை மன்னித்துவிடுவது எளிது. அல்லது அலுவலகத்தில் எனக்கு மேலிருக்கும் பாஸ் என்மேல் தவறாகக் கோபப்பட்டுவிட்டால் அவரை மன்னிப்பது எளிது. இந்த இரண்டு நிலைகளிலும் ஒரு சார்பு நிலை இருக்கிறது: வேலைக்காரப் பெண் என்னைச் சார்ந்திருக்கிறார். நான் என் பாஸை சார்ந்திருக்கிறேன். மன்னிப்பு எங்கே கடினமாகிறது என்றால் சமநிலையில் இருப்பவர்களிடம்தான்.

மன்னிக்கும் மனம் பெறுவது எப்படி?
இதற்கான பாடங்களை இன்றைய முதல் (காண். சீஞா 27:30-28:7) மற்றும் இரண்டாம் (காண். உரோ 14:7-9) வாசகங்கள் நமக்குச் சொல்கின்றன. கடவுளிடமிருந்து நாம் இரக்கம் பெற வேண்டுமென்றால் ஒருவர் மற்றவருக்கு இரக்கத்தைக் காட்ட வேண்டும் எனவும், கடவுளிடமிருந்து நாம் மன்னிப்பைப் பெற வேண்டுமென்றால் ஒருவர் மற்றவரை மன்னிக்க வேண்டும் எனவும் சொல்கின்ற சீராக்கு மன்னிப்பதற்கு எளிதான வழியைக் கற்றுக்கொடுக்கின்றார்.
நாம் மற்றவரை மன்னிக்கத் தடையாக இருப்பது எது தெரியுமா? நம் நினைவுதான்.
அதாவது, அடுத்தவர் நமக்கு இழைத்த தவறு நம் மனதில் நீங்காமல் நினைவாகப் பதிவாகிவிடும்போது நம்மால் அடுத்தவரை மன்னிக்க முடிவதில்லை. இதற்கு மாற்றாக சீராக்கு நினைவு முழுவதும் மற்றதைக் கொண்டு நிரப்பிவிட்டால் அடுத்தவரின் தவற்றை நினைவுகூர நமக்கு நேரமும் இடமும் இல்லை என்கிறார்.
அந்த மற்றது எது?
நான்கு: (அ) நம் முடிவு, (ஆ) நம் சாவு, (இ) கடவுளின் கட்டளைகள், (ஈ) கடவுளின் உடன்படிக்கை.
அ. நம் முடிவை நினைவில் கொள்ள வேண்டும்
தொடங்கியது எல்லாம் முடிய வேண்டும் என்பது இயற்கையின் நியதி. நம் தொடக்கம் எப்படி நம் கையில் இல்லையோ அதுபோலவே நம் முடிவும் நம் கையில் இல்லை. அப்படி இருக்க நாம் எதற்காக மற்றவர்களின் தவறுகளையும், அவர்கள் இழைத்த காயங்களையும் கையில் பிடித்துக்கொள்ள வேண்டும். எல்லாரையும், எல்லாவற்றையும் ஒருநாள் இறக்கிவைக்க வேண்டும். அப்படி இருக்க ஏன் எல்லாரையும், எல்லாவற்றையும் தூக்கிக்கொண்டே செல்ல வேண்டும்.

ஆ. நம் இறப்பை நினைவில் கொள்ள வேண்டும்
இறப்புக்குப் பின் ஒருவேளை வாழ்வு இருப்பதாக வைத்துக்கொள்வோம்(!). சீராக்கின் காலத்தில் இந்த சிந்தனை இல்லை. அந்த வாழ்வை அடைய நாம் தூய்மையாக இருக்க வேண்டும். மன்னிக்காத மனம் தூய்மையாக இருப்பதில்லை. இறப்பு நமக்கு எப்போது வரும் என்பது நமக்குத் தெரியாது. ஆக, எப்போதும் தயாராக இருக்க வேண்டும் என்றால் தூய்மையான மன்னிக்கின்ற உள்ளம் அவசியம்.

இ. கடவுளின் கட்டளைகளை நினைவில் கொள்ள வேண்டும்
இங்கே 'கட்டளைகள்' என்று சொல்லப்படுவது மோசே வழியாக இஸ்ரயேல் மக்களுக்கு ஆண்டவராகிய கடவுள் வழங்கிய 'பத்துக்கட்டளைகளே.' இந்த பத்துக்கட்டளைகளில் 'மன்னிப்பு' என்ற வார்த்தை அல்லது 'கட்டளை' இல்லை என்றாலும், இந்தப் பத்துக்கட்டளைகளைக் கடைப்பிடித்தால் மன்னிப்புக்கான தேவையே இல்லாமல் போய்விடுகிறது.

ஈ. கடவுளின் உடன்படிக்கையை நினைவில் கொள்ள வேண்டும்
'நாம் உங்கள் கடவுளாய் இருப்போம். நீங்கள் எம் மக்களாய் இருப்பீர்கள்' என உடன்படிக்கை செய்தார் கடவுள். நாம் சேர்ந்து இருக்கும்போதுதான் கடவுள் நம் கடவுளாய் இருக்கிறார். சேர்ந்து இருப்பதற்கு மன்னித்தல் அவசியமான ஒன்று.

இவ்வாறாக, இந்த நான்கு நினைவுகூர்தல்கள் வழியாக மன்னிப்பு சாத்தியம் என்பதை உணர்த்துகிறார் சீராக்கு.

உ. அனைவரும் கிறிஸ்துவுக்குள்
இதைத் தொடர்ந்து தூய பவுலடியாரும் உரோமை நகர திருச்சபைக்கு எழுதுகின்ற அறிவுரைப் பகுதியில், 'நாம் இருந்தாலும், இறந்தாலும் கிறிஸ்துவுக்குள்ளே இருக்கிறோம்' என்கிறோம். அதாவது, நாம் உறவு நிலைகளில் இருந்தாலும், இறந்தாலும் கிறிஸ்துவே இணைக்கின்றார் அனைவரையும். ஆகையால்தான், தூய அகுஸ்தினாரும் நாம் வைத்திருக்கும் உறவுகளை எல்லாம் கடவுளில் அன்பு செய்ய வேண்டும் என்கிறார். அப்படி அன்பு செய்யும் போது எந்தவொரு எதிர்மறையான நிலைகளுக்கும் அங்கே இடமில்லாமல் போய்விடுகிறது.
இப்படியாக, இந்த ஐந்து நிலைகளில் நாம் மன்னிப்பின் அவசியத்தை உணர்ந்துகொள்ள முடியும்.சரி.

மன்னித்தால் என்ன நடக்கிறது?

அ. நாம் மன்னிக்காதபோது இறந்த காலத்தில் வாழ்கின்றோம். நம் காயத்தில் வாழ்கின்றோம். சில நேரங்களில் மன்னிக்காத நாம் கஷ்டப்படுவோம். தவறு செய்த மற்றவர் ஜாலியாக இருப்பார். ஆக, அடுத்தவர் செய்யும் தவறுக்கு நாம் ஏன் கஷ்டப்பட வேண்டும்? மன்னித்துவிடுவோம்.
ஆ. மன்னிக்கும் உள்ளம் இருந்தால் நன்றாக தூக்கம் வரும். மன்னிக்காத போது பழிவாங்குதல் எண்ணம் வரும். பழிவாங்குதல் எண்ணம் கோபத்தைத் தூண்டும். கோபம் வெளிப்பட முடியாதபோது அது விரக்தியாக அல்லது இயலாமையாக மாறும். அந்த இயலாமை நம்மேல் நமக்குக் கோபத்தை வருவிக்கும். இப்படி குழப்பமான உள்ளம் இருக்கும் இடத்தில் உடலும் கஷ்டப்படும். தூக்கம் வராது. மன்னிப்பின் கனி தூக்கம்.
இ. மன்னிக்கும்போது நாம் அரசனாகின்றோம். அதாவது சமநிலையில் இருந்து மேல் நிலைக்கு உயர்கின்றோம். நம் நிலையை அல்லது கான்ஃபிடன்ஸ் லெவலை உயர்த்துவது மன்னிப்பு.
நிற்க.
கடைசியா அரசனுக்கு ஒரு கேள்வி.
அரசரே, உங்ககிட்ட நிறைய பணம் இருக்கு. அதனால, நீங்க 10000 தாலந்து என்ன, 10 லட்சம் தாலந்தையும் மன்னிப்பீங்க. ஏன்னா அது உங்க காசு இல்லைல. எவனோ ஒருவன் சம்பாதிச்ச காசு தான.
ஆனா, உங்க பணியாளன் எக்ஸ் ஏதோ ஒருவகையில் உங்ககிட்ட கடன் வாங்கி, இப்போ அதையும் இழந்து நிற்கிறான். இப்ப இவன் உழைத்து சம்பாதித்த 100 தெனாரியத்தை (100 நாள் கூலியை) சக பணியாளன் ஒய்க்கு கடன் கொடுக்கிறான். வாங்கியதும் போச்சு. உள்ளதும் போச்சு என்றால் இவன் என்ன செய்வான்? அடித்துத்தானே வாங்கணும். இது இவன் உழைத்த காசு அல்லவா?
ஆக, இன்னொருத்தன் காசை அல்லது நான் உழைக்காத காசை மன்னித்துவிடுவது எளிது. நான் உழைத்த காசை மன்னிப்பது கடினம்.
அரசன் உழைப்பதில்லை. ஆக, மன்னிப்பது எளிது.
பணியாளன் உழைத்தான். ஆக, மன்னிப்பது கடினம்.
நிற்க.




கடவுள் உங்களை நடத்துவது போலவே மற்றவர்களை நடத்திடுக

மறையுரை வழங்குபவர் Fr. Freddy is a Redemptorist priest belonging to the Province of Bangalore. Currently he is attached to the Archdiocese of St. Louis, Missouri state, U.S.A.
முன்னுரை:

     கொல்கத்தாவில் அன்னை தெரேசாவின் இல்லத்திற்கு அருகிலிருந்த இந்து கோவிலின் அர்ச்சகர் ஒருவர் அன்னையின் அறச்செயல்களை தீவிரமாக எதிர்த்து வந்தார். அன்னைக்கு எதிராக மக்களை ஒன்றுதிரட்டி கலவரம் செய்தார். சில மாதங்கள் கழிந்தன.  அன்னைக்கு எதிராக செயல்பட்ட அந்த காளிக் கோவில் அர்ச்சகர் தொழுநோயினால் பீடிக்கப்பட்டு, மரணப்படுக்கையிலிருந்தார். அவருடைய சொந்த குடும்பத்தார் அவரை வீட்டிலிருந்து புறந்தள்ளி, வெளியே தெருவில் போட்டுவிட்டார்கள். அவருடைய சக அர்ச்சகர்கள் அவரை சுத்தமற்றவராகக் கருதி, அருவருத்து வெறுத்து ஒதுக்கிவிட்டார்கள். இதனைக் கேள்விப்பட்டு, அந்த அர்ச்சக்கரைத் தேடித் சென்ற அன்னை தெரேசா, அவரைக் கண்டுபிடித்து, தன் இல்லத்திற்கு எடுத்துவந்து, எந்தவிதமான நிந்தனை உணர்வுமின்றி, அந்த அர்ச்சகருக்கு தானே சிகிச்சை அளித்து பராமரிக்க ஆரம்பித்தார்.

  அந்த அர்ச்சகர் அன்னை தெரேசாவை நோக்கி, "அம்மா, மன்னித்துவிடுங்கள். அன்றைய தினம் நாங்கள் உங்களுக்கெதிராக மிகப் பெரிய பாவம் செய்தோம். நாங்கள் பாவிகள், அம்மா.. மன்னியுங்கள்" என்று அரற்றினார். அன்னை அவரைப் பார்த்து, "எல்லோருமே உன்னத கடவுளின் குழந்தைகள் தான். யாரும் பாவம் செய்ததாக எனக்குத் தெரியவில்லை. யாரும் மன்னிப்பு கேட்கவேண்டிய அவசியமும் இல்லை. 'நிர்மல் ஹ்ருதய்' என்னும் எங்கள் இல்லத்தின் கதவுகள் எல்லாருக்கும் எப்போதும் திறந்தே இருக்கின்றன" என்று கூறினார். பலநாள்களுக்கு பின்னர் தன் உயிர் பிரியும் நிலையிலிருந்த அந்த அர்ச்சகர், தன்னை அணைத்துக் கொண்டிருந்த அன்னையைப் பார்த்து, "அம்மா, எங்கள் கோவிலில் காளிக்கு பல ஆண்டுகளாக சேவை செய்து வந்தேன். காளியின் முகத்தை நான் ஒருபோதும் பார்த்ததில்லை. இப்போது அந்த காளியை நேரிலே பார்க்கிறேன். நீதான் அந்த தேவதை" என்று மொழிந்தார்.

   அன்னை தெரேசா அந்த அர்ச்சகரை மன்னித்ததோடு அல்லாமல், அதற்கும் மேலானவற்றையும் செய்தார். அந்த அர்ச்சகரை ஏற்றுக் கொண்டு, அவருக்கு கண்ணியமான முறையில் இறப்பதற்கான வாய்ப்பை அன்னை தெரேசா அளித்தார். கடவுளை தரிசிப்பதற்காக அவருடைய கண்களைத் திறந்ததோடு, அவருடன் சமாதானம் செய்து கொள்வதையும் சாத்தியமாக்கினார். கடவுள் தன்னை நடத்துவதை போல, அன்னை தெரேசா அந்த அர்ச்சகரை நடத்தினார். கடவுளிடமிருந்து தான் பெற்ற இரக்கத்தை, ஒரு கண்ணாடியைப் போல அன்னை பிரதிபலித்தார்.

இறைவார்த்தை:

  தன் பணியாளர் ஒருவரை கடவுள் இரக்கத்தோடு நடத்திய விதத்தையும், அதே பணியாளர் தனது உடன் பணியாளர் ஒருவருக்கு அத்தகைய இரக்கத்தை தர மறுத்ததையும், இன்றைய நற்செய்தி வாசகம் எடுத்துரைக்கிறது. மன்னிப்பைக் குறித்து பேதுரு எழுப்பிய கேள்விக்கு மறுமொழியாக இயேசு சொல்கின்ற இந்த உவமை அமைந்துள்ளது.

1. பணியாளரின் நிலைமை: அந்தப் பணியாளர் பத்தாயிரம் தாலந்து கடன்பட்டிருந்தார். 'கி.மு. நாலாம் நூற்றாண்டில், யூதேயா, இதுமேயா மற்றும் சமாரியா ஆகிய நாடுகளிலிருந்து வசூலிக்கப்பட்ட மொத்த வரியின் தொகை அறுநூறு தாலந்து மட்டுமே' என்று வரலாற்று ஆசிரியரான ஜோஸேஃபஸ் (Josephus - Ant 17.11.4, 317-20) கூறுகிறார். இயேசு தனது உவமையில் குறிப்பிடுகின்ற தொகை பத்தாயிரம் தாலந்து ஆகும். அந்த வகையில், அந்த பணியாளர் கடன்பட்ட தொகை பல கோடி ரூபாய் மதிப்பிலானது. இங்கே சொல்லுக்கு நிகரான எண்ணிக்கை ஒரு பொருட்டல்ல. எண்ணிக்கைக்கு அப்பாற்பட்ட தொகை என்பதே இங்கு பொருள். நடைமுறையில் கணிப்பதற்கு இயலாத ஒரு தொகை என்றே கொள்ளவேண்டும். தனது வாழ்நாள் முழுவதும் உழைத்தாலும், அவனால் அந்தக் கடனை திருப்பி செலுத்த முடியாது. எந்தக் காலத்திலும் மீண்டெழ முடியாத ஒரு இக்கட்டான நிலைமையில் அந்தப் பணியாளர் இருந்தார்.

2. அரசரின் நடவடிக்கை: அரசர் இப்போது கணக்குப் பார்க்கத் தொடங்கினார். 'கணக்குப் பார்த்தல்' என்பது ஒரு இறுதி கட்ட நிகழ்வு. கடன்பட்ட தொகையை திருப்பி செலுத்த இயலாத நிலையில் அந்தப் பணியாளர் இருந்ததால், அவனையும் அவன் மனைவி மக்களோடு அவனுக்குரிய உடைமைகள் யாவற்றையும் விற்றுப் பணத்தைத் திருப்பி அடைத்திட வேண்டுமென்ற தண்டனையை அரசர் விதித்தார். 'ஒருவனை, அவன் குடும்பத்தாரோடும், உடைமைகளோடும் விற்றுவிடுதல்' என்பது இயேசுவின் காலத்தில் வழக்கத்திலிருந்த ஒரு தண்டனை முறையாகும்.

   "எல்லாவற்றையும் திருப்பித் தந்து விடுகிறேன்" என்று கூறி, அந்த பணியாளர் அரசரிடம் பணிந்து யாசித்தபோது, அரசர் அவனை விடுவித்து அவனது கடன் முழுவதையும் தள்ளுபடி செய்தார். ஒருவரை ஏழுமுறை மன்னிப்பதைக் குறித்து பேதுரு கேள்வி எழுப்பியிருந்தார். மறைநூலின் மரபினில், 'ஏழு முறை' என்பது முழுமையைக் குறிக்கின்ற எண்ணிக்கையாகக் கருதப்பட்டது. ஒரு குற்றத்திற்கு மன்னிப்பு வழங்குவதற்கு, ஒருவர் மூன்று மன்னித்தல் போதும் என்று யூத மதகுருக்கள் கருதினார்கள். "எழுபது தடவை ஏழுமுறை" என்ற பதம் 'எழுபது - ஏழு' என்ற எண்கள் குறிக்கின்ற கணித வரையறையையோ அல்லது 490 தடவை என்பதையோ சுட்டிக் காட்டுவதல்ல; மாறாக, எண்ணிக்கையில் அடங்காத ஒரு அளவையைக் குறிப்பதாகும். அந்தப் பணியாளரின் கடனைத் தள்ளுபடி செய்வதில், கற்பனைக்கு எட்டாத கருணையோடு அரசர் நடந்து கொண்டார்.

3. பெற்ற கருணையை பகிர்ந்துகொள்ள தவறுதல்: கற்பனைக்கு எட்டாத கருணையை அரசரிடம் பெற்றுக் கொண்ட பணியாளர், தன்னிடம் நூறு தெனாரியம் கடன்பட்ட தனது உடன் பணியாளர் ஒருவரை, அதே போன்ற கருணையுடன் நடத்துவதற்கு ஒரு வாய்ப்புக் கிடைக்கிறது. ஒரு தெனாரியம் என்பது ஒரு பணியாளரின் சராசரி ஒருநாள் ஊதியம் ஆகும். ஆறாயிரம் தெனாரியம் கொண்டதே ஒரு தாலந்து. இங்கே அரசரிடம் இரக்கத்தைப் பெற்ற பணியாளர், தனது உடன் பணியாளர் ஒருவரை, அரசர் தன்னை நடத்தியது போல நடத்திட மறுக்கிறார். தன்னிடம் கடன்பட்டவனை விட 6,00,000 மடங்கு அதிகமான அளவு கடனை அரசர் தனக்கு தள்ளுபடி செய்திருக்கிறார் என்பதை இவர் மறந்துவிட்டார். கடனை திருப்பி வாங்குகின்ற வேட்கையில், உடல்ரீதியாக வன்முறையில் ஈடுபடவும் இவர் முனைகிறார்.

4. இரக்கம் திரும்பப் பெறப்படுத்தல்: தான் இரக்கம் காட்டிய பணியாளர், தன் உடன் பணியாளருக்கு செய்ததைக் கேள்விப்பட்ட அரசர், அவனை "பொல்லாதவன்" என்று சொன்னதோடு, அனைத்துக் கடனையும் அடைக்கும்வரை அவனை வதைப்போரிடம் ஒப்படைத்தார். ஆனால், கடன் முழுவதையும் திருப்பி செலுத்துவது என்பது நிச்சயமாக இயலாத காரியம். அந்தப் பணியாளர் அரசருக்குத் தரவேண்டிய கடன்தொகையை வைத்து மதிப்பிடும்போது, அவருக்கு அளிக்கப்பட்ட சிறை தண்டனை நிரந்தரமானது. காலவியல் (Eschatology) அடிப்படையில், நிரந்தரமான சிறைவாழ்க்கை என்பது மிக நீண்ட கால தண்டனையாகும். பாவங்களுக்காக கடவுளிடம் மன்னிப்பைப் பெற்ற சீடர் எவரும், இந்த உவமையில் சுட்டிக் காட்டப்படுகின்ற பணியாளரைப் போல, தன்னோடு இருக்கின்ற மற்றொரு சீடரின் பாவங்களை மன்னிக்க மறுத்தால், கடவுளும் தான் ஏற்கனவே அளித்த மன்னிப்பை திரும்ப பெற்றுக் கொள்வார் என்பது திண்ணம்.

இரக்கம், மன்னிப்பு, இறையருள் - இவற்றோடு கடவுள் தன் சீடர்களை நடத்துகிறார். அதே போல, தனது சீடர்களும் மற்றவர்களை நடத்தவேண்டும் என்று கடவுள் எதிர்பார்க்கிறார். கடவுள் தங்களை நடத்துவது போல சீடர்கள் மற்றவர்களை நடத்த தவறும்போது, தான் ஏற்கனவே அருளிய மன்னிப்பையும், இரக்கத்தையும் திரும்பப் பெற கடவுள் தயங்கமாட்டார்.

பயன்பாடு:

கடவுள் தன் மக்களை எவ்வாறு நடத்துகிறார்?

    ஒருவருடைய வயதை கடவுள் பெரிதாகக் கொள்வதில்லை; ஆபிரகாமை அவர் ஆசீர்வதித்தது வியப்பல்ல.
    ஒருவருடைய அனுபவத்தை கடவுள் பெரிதாகக் கருதுவதில்லை; தாவீதை அவர் தேர்ந்தெடுத்தது வியப்பல்ல.
    பாலின வேறுபாடுகளை கடவுள் பெரிதாக மதிப்பதில்லை; எஸ்தருக்கு உயர்வான வாழ்க்கையை அவர் தந்தது வியப்பல்ல.
    ஒருவருடைய பழைய வாழ்க்கைமுறை குறித்து கடவுள் கவலைப்படுவதில்லை; பவுலடியாரை திருத்தூதராக அவர் தெரிவு செய்தது வியப்பல்ல.
    ஒருவருடைய உடல் தோற்றத்தை கடவுள் ஒரு பொருட்டாக கருதுவதில்லை; குட்டையான தோற்றமுடைய சக்கேயுவை அவர் தேர்ந்தெடுத்தது வியப்பல்ல.
    ஒருவருடைய சரளமாக பேசும் திறமையை கடவுள் பெரிதாகக் கொள்வதில்லை: மோசேயை அவர் தேர்ந்தெடுத்தது வியப்பல்ல.
    ஒருவருடைய பணி அல்லது தொழிலைப் பற்றி கடவுள் கவலைப்படுவதில்லை; மகதலா மரியாவை அவர் தன் சீடராக ஏற்றுக்கொண்டார்.
    வர்க்கம் - இனம் சார்ந்த பாகுபாடுகளை கடவுள் மதிப்பதில்லை; தனது ஒரே பேறான மகனை இந்த உலகத்திற்கு அவர் அனுப்பியதில் வியப்பில்லை!

    தான் நிறைவேற்ற முடியாத எந்தவொரு உறுதிமொழியையும் கடவுள் நமக்குத் தருவதில்லை.
    தான் உதவி செய்ய இயலாத நபராக கடவுள் யாரையும் பார்ப்பதில்லை.
    எந்த ஜெபத்தையும் பதிலிறுக்க இயலாததாக அவர் நோக்குவதில்லை.
    எந்தவொரு ஆன்மாவையும் தான் அன்பு செய்ய முடியாததாக அவர் காண்பதில்லை.
    தன்னிடம் மன்னிப்பு பெற இயலாதவர் என்று எந்த பாவியையும் அவர் பார்ப்பதில்லை.

இதுவே தன்னுடைய மக்களை கடவுள் நடத்துகின்ற வழிமுறை.

   மேலும், நாம் மற்றவர்களைத் தீர்ப்பிடாமல் கருணையோடு நடத்திட வேண்டுமென்று கடவுள் எதிர்பார்க்கின்றார். "இரக்கம் காட்டாதோருக்கு இரக்கமற்ற தீர்ப்புதான் கிடைக்கும்" என்று திருத்தூதர் யாக்கோபு தனது திருமடலில் (2:13) கூறுகிறார். மன்னிக்கும் மனப்பாங்குடன் நாம் மற்றவர்களை நடத்திட வேண்டுமென்று அவர் எதிர்பார்க்கின்றார். இதைத் தான் சீராக் ஞான நூலிலிருந்து தரப்பட்டுள்ள இன்றைய முதல் வாசகம், "பழிவாங்குவோர் ஆண்டவரிடமிருந்து பழிக்குப்பழியே பெறுவர். ஆண்டவர் அவர்களுடைய பாவங்களைத் திண்ணமாய் நினைவில் வைத்திருப்பார். உனக்கு அடுத்திருப்பவர் செய்த அநீதியை மன்னித்துவிடு; அவ்வாறெனில் நீ மன்றாடும் போது உன் பாவங்கள் மன்னிக்கப்படும்" என்று எடுத்துரைக்கின்றது. "வலிமையற்றோர் ஒருபோதும் மன்னிப்பதில்லை; மன்னித்தல் என்பது வலியோரின் பண்பு" என்று மகாத்மா காந்தி கூறினார். கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்தில் (13:5), புனித பவுல், "அன்பு இழிவானதைச் செய்யாது; தன்னலம் நாடாது; எரிச்சலுக்கு இடம் கொடாது; தீங்கு நினையாது" என்று கூறுகிறார். அனைத்து கணிப்புகளும் அப்பாற்ப்பட்ட வகையிலான மன்னிக்கும் மனப்பான்மையே நம்மிடம் எதிர்பார்க்கப்படுகின்றது.

  கடவுள் நம்மை நடத்துவதை போல் நாம் மற்றவர்களை நடத்த தவறும்போது, கடவுள் நமக்கு தந்த இரக்கம், மன்னிப்பு, இறையருள் ஆகியவற்றை அவர் திரும்ப எடுத்துக் கொள்ளுகின்ற நிலை உண்டாகிறது.

முடிவுரை:

  "நம்மிடமிருந்து செல்வதே நமக்கு வந்து சேர்கிறது" என்பது ஒரு சொல்வழக்கு. நாம் எவ்வாறு மற்றவர்களை நடத்துகிறோமோ, அவ்வாறே நாமும் நடத்தப்படுவோம். கண்ணியம், கருணை, மன்னிப்பு, இறையருள் கலந்த உன்னத வழிகளில் கடவுள் நம்மை நடத்தி வருகின்றார். இதே வழிகளில் நம் அயலாரை நடத்துகின்ற மதிநுட்பத்தை நாமும் பெறுவோமாக. மற்றவர்கள் நமக்கு கடன்பட்டிருப்பதை விட மிகவும் அதிகமாக வேறு ஒருவருக்கு நாம் கடன்பட்டிருக்கிறோம் என்பதை எப்போதும் நினைவில் கொள்வோமாக.