Thursday 7 October 2021

பொதுக் காலத்தின் 28-ஆம் ஞாயிறு - இரண்டாம் ஆண்டு

பொதுக் காலத்தின் 28-ஆம் ஞாயிறு - இரண்டாம் ஆண்டு



இன்றைய வாசகங்கள்:-

சாலமோனின் ஞானம் 7: 7-11 |எபிரேயர் 4: 12-13 | மாற்கு 10: 17-30




கப்பலில் பயணம் செய்து கொண்டிருந்த ஒருவனுக்கு திடீரென ஒரு அச்சம் தோன்றியது: கடலில் விழுந்து விட்டால் தான் எப்படி உயிர் பிழைப்பது என்ற எண்ணம் அவனை வாட்டியது. கப்பல் தலைவனிடம் சென்று தன் அச்சத்தை விளக்கினான். கவலைப்படாதே , உனக்குத்தான் நன்கு நீந்தத் தெரியுமே என்றான் கப்பல் தலைவன். உடனே அவன், இல்லை ! நேற்று கூட நன்கு நீந்தத் தெரிந்த ஒருவன் கடலில் விழுந்து மூழ்கி இறந்து போனானே என்றதற்கு கப்பல் தலைவன் அம்மனிதன் கடலில் வீழ்ந்தபோது தன்னுடைய பொருட்கள் அடங்கிய இரண்டு பெட்டிகளை தன் இரு கைகளிலும் பிடித்திருந்தான். அப்பெட்டிகளின் எடை அவனை நீருக்குள் இழுத்துச் சென்றுவிட்டது. எனவேதான் எங்களால் கூட அம்மனிதனைக் காப்பாற்ற இயலவில்லை என்று சொன்னான். இக்கதை தரும் பாடத்தை நமக்கு அளிப்பதே இன்றைய வாசகங்கள். மனிதன் படைக்கப்பட்ட போது கள்ளங்கபடம் இல்லாமல் (Innocence) இருந்தான். அவன் வளர வளர அவனுக்குள் பல மூட்டைகள் ஏறிக் கொண்டன. நல்லவைகள் பஞ்சு மூட்டையைப் போல இலேசாக இருந்தன. தீயவையே பாறாங்கற்களைப்போல கடினமாயின. இதுபோன்ற மூட்டைகள் அவனுக்குள் இருக்கும் வரை குழப்பம்தான்.


கட்டளைகளை யெல்லாம் கடைப்பிடித்த இளைஞன் ஒருவனுக்குத் தனக்கு நிலைவாழ்வு கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்தது. ஆண்டவர் இயேசுவிடம் சென்று வினவினான். பாதி கிணற்றைத் தாண்டும் சக்தி கொண்ட அவுனுக்கு மீதிப் பாதி கிணற்றைத் தாண்ட ஆண்டவர் வழிவகைச் சொன்னார். உமக்கு இன்னும் ஒன்று குறைபடுகிறது. நீர் போய் உமக்கு உள்ளவற்றை விற்று ஏழைகளுக்குக் கொடும். அப்போது விண்ணகத்தில் செல்வராய் இருப்பீர். பின்பு வந்து என்னைப் பின்பற்றும் (மாற்.10:21) என்றார். ஆண்டவர் காட்டிய வழி அவனுக்கு உகந்ததாக இல்லை. நீ கட்டளைகளையெல்லாம் கடைப்பிடிப்பதால் மீட்பு அடைந்துவிட்டாய் என்று இயேசு சொல்வார் என்று எண்ணி வந்த இளைஞனுக்கு, இன்னும் அதிகமாக, எல்லாவற்றிற்கும் மேலாக அனைத்தையும் இழக்கச் சொல்கிறாரே என்று முகம் வாடி வருத்தத்தோடு சென்றான்.

நாமும் மீட்படைய வேண்டும் என்று விரும்புகிறோம். நம்மை மீட்க வேண்டும் என்பது இறைத்தந்தையின் விருப்பம். அவ்விருப்பத்தை நிறைவேற்ற இயேசு தன்னுயிரைத் தந்தார். இன்னும் குறைவாக இருப்பது என்ன? நம் ஒத்துழையாமை. பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில் நாம் சேகரித்தவற்றை, நாம் அடைந்தவற்றைக் காப்பாற்றுவதற்காக நாம் நடத்துகின்ற போராட்டம் பெரிது. நாம் சேர்த்தவைகள்: பணம், பதவி, படிப்பு, பட்டம், பகைமை, சொத்து, சொந்தம்... போன்ற சுமைகளே நம்மை மூழ்கடிக்கும். இவற்றையெல்லாம் விடுத்துக் கள்ளம் கபடற்ற முதல் நிலைக்கு நாம் செல்ல வேண்டும். அறிவு நம்மை அனைத்தையும் துறக்க வைக்கும். வளர்ந்தாலும், பெரியவரானாலும் ஞானம் என்கிற கொடை நம்மைக் குழந்தைகளாக்கும். இது தனி மனித முயற்சியால் இயலாது. ஆனால் கடவுளுக்கு அப்படியல்ல, கடவுளால் எல்லாம் இயலும் (மாற் 10:27). பின்பு வந்து என்னைப் பின்பற்றும் (மாற் 10:21) என்று சொன்ன இயேசுவின் வார்த்தைகளுக்குச் செவிமடுத்து ஞானத்தைப் பெறுவோம். இலவசமாய் இறைவன் தரும் நிறை வாழ்வைப் பரிசாகப் பெற்றுக்கொள்வோம்.



எப்படி பணத்தைப் பயன்படுத்துவது?

அந்தப் பள்ளிக்கூடத்தில் அந்த வகுப்பில் அவன்தான் கணக்கில் முதல் மாணவன். அவன் 99 மதிப்பெண் பெற்று முன்னிலையிலிருந்தான். ஆனால் அவனுடைய கணித ஆசிரியர் அவனைக் கடுமையாகக் கண்டித்தார். கண்டிக்கப்பட்டவன் கண்டிப்புக்குக் காரணம் கேட்டான். ஆசிரியரோ ஒரு வெள்ளைத்தாளில் ஒரு கரும்புள்ளியை வைத்துவிட்டு, மாணவனைப் பார்த்து, நீ பெற்றிருக்கின்ற மதிப்பெண் இந்த வெள்ளைத் தாளிலுள்ள கருப்புப் புள்ளி போல் இருக்கின்றது. நீ முழுவதும் வெள்ளையாக இருப்பதையே நான் விரும்புகின்றேன் என்றார். இயேசு இன்றைய நற்செய்தியிலே அவரைச் சந்திக்க வந்த மனிதரிடம் ஒரு கறுப்புப் புள்ளி இருப்பதை, ஒரு குறை இருப்பதைக் கண்டார். நிலை வாழ்வை, இறைவனுடைய நிறை ஆசியை உரிமையாக்கிக்கொள்ள விரும்பிய அந்தச் செல்வர் மோசே கொடுத்திருந்த கட்டளைகளை அப்பழுக்கில்லாமல் பின்பற்றியவர். இருப்பினும் இயேசுவின் சீடத்துவத்துக்கு ஒவ்வாத ஒன்று அவரிடமிருந்தது. அது என்ன? அவருக்கு அடிமையாக இருக்க வேண்டிய சொத்து அவரை அடிமைப்படுத்தி வைத்திருந்தது.

ஞானம் நிறைந்த (முதல் வாசகம்), உயிருள்ள, ஆற்றல் மிக்க (இரண்டாம் வாசகம்) இயேசுவின் வார்த்தைகள் அந்தப் பணக்காரரின் மனத்துக்குள் புகாதவாறு அவருடைய பண ஆசை அவரைத் தடுத்து நிறுத்திவிட்டது. அவருக்குத் தெரிந்ததெல்லாம் பணம் ஒன்றுதான். இயேசுவின் அறிவுரை, விண்ணகம், விண்ணக வாழ்வு போன்ற மதிப்பீடுகளெல்லாம் அவருடைய அகராதிக்கு அப்பாற்பட்டவை. அவர் பணம் பந்தியிலே குணம் குப்பையிலே இதைப் பார்த்து அறிந்து நடக்காதவன் மனிதனில்லே என்று பாடித்திரிந்தவர். இயேசுவின் சீடர்களாக வாழ விரும்புகின்றவர்கள் நூற்றுக்கு நூறு அவருடைய வார்த்தைகளுக்கு முதலிடம் கொடுக்க வேண்டும்.

எவ்வளவுக்கு எவ்வளவு நாம் பற்றற்றவர்களாகத் திகழ்கின்றோமோ அந்த அளவுக்கு அம்மையும், அப்பனுமாகிய கடவுள் நம்மைத் தாங்கிப்பிடித்து வாழவைப்பார். பணத்தைச் சோற்றுக்கு ஊறுகாய் போலப் பயன்படுத்துவது நல்லது.

மேலும் அறிவோம் :

    யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
    அதனின் அதனின் இலன் (குறள் : 341).

பொருள் : ஒருவன் எத்தகைய பொருள்களில் இருந்து வேண்டாம் என்று விட்டு விலகுகிறானோ, அந்தப் பொருள்களால் அவனுக்குத் துன்பம் எதுவும் நேராது!



கிரேக்க நாட்டுத் தத்துவமேதை ஒருவர் தம் வீட்டிற்கு முன்புறம், "ஞானம் இங்கே விற்கப்படும்" என்று ஒரு விளம்பரப் பலகையில் எழுதி வைத்திருந்தார், இந்த நூதனமான விளம்பரத்தைப் படித்த ஒரு பணக்காரர் தமது வேலைக்காரரிடம் பணம் கொடுத்து, ஞானம் வாங்கி வரும்படி அவரை அம்மேதையிடம் அனுப்பினார். அம்மேதை அப்பணத்தை வாங்கிக் கொண்டு, ஒரு காகிதத் துண்டில், "நீ எதைச் செய்தாலும் தன் இறுதி முடிவை நினைத்துக்கொள்” என்று எழுதிக் கொடுத்தார், அப்பணக்காரர் அவவாக்கியத்தைப் பொன் எழுத்துக்களால் பொறித்து, சட்டம் கட்டி, தம் வீட்டின் மையப் பகுதியில் தொங்கவிட்டு, நாள்தோறும் படித்து, வாழ்வின் நிலையாமையை உணர்ந்து, தம் செல்வத்தின் பெரும் பகுதியை ஏழைகளுக்குக் கொடுத்து உதவி, உண்மையில் ஞானியாக வாழ்ந்து நல்ல மரணமடைந்தார்.

நாம் எதைச் செய்தாலும் நம் வாழ்வின் இறுதி முடிவை நம் கண்முன் நிறுத்த வேண்டும். “இருப்பது பொய், போவதுமெய்." இதுதான் வாழ்வு. "வீடு வரை உறவு, வீதி வரை மனைவி, காடு வரை பிள் ளை, கடைசிவரை யாரோ?" திலையற்ற வாழ்வை எண்ணிப்பார்த்ததால்தான் பலர் ஞாளிகளாக மாறினர். இன்றைய பதிலுரைப் பாடலும், "எங்கள் வாழ்நாள்களைக் கணிக்க எங்களுக்குக் கற்பியும்; அப்போது ஞானமிகு உள்ளத்தைப் பெற்றிடுவோம்" (திபா 30:12) எனக் கூறுகிறது.

இன்றைய முதல் வாசகம் ஞானத்தின் சிறப்பை எடுத்துரைக்கின்றது. ஞானத்திற்கு ஈடு இணையானது இவ்வுலகில் வேறெதுவுமில்லை. ஞானத்திற்கு முன் வெள்ளி வெறும் களிமண்; தங்கம் வெறும் தவிடு; செல்வம் வெறும் குப்பை: அழகு வெறும் மாயை; புகழ் வெறும் புகை.

அறிவு ஞானமாகக் கனிய வேண்டும். அறிவைப் புத்தகம் வாயிலாகவும் பல்கலைக் கழகங்கள் மூலமாகவும் பெற முடியும். நவீனக்கலையைக் கலைக்கணிப் பொறிவாயிலாகக் கற்றுக் கொள்ள முடியும், இவ்வுலகம் முழுவதையும் இணையதளம் மூலமாக இணைக்க முடியும். சின்னத் திரைகளும் பெரிய திரைகளும் நமக்குக் கேளிக்கைகளை வழங்க முடியும். ஆனால் ஞானமானது கடவுள் நமக்கு அளிக்கும் மேலான கொடை; தூய ஆவியார் நம் மீது பொழியும் ஒப்புயர்வற்ற வரம் சாலமோன் அரசர் கடவுளிடமிருந்து செல்வத்தையோ புகழையோ ஆயுளையோ கேட்காமல் ஞானத்தைக் கொடையாகக் கேட்டுப் பெற்றுக் கொண்டார். பகுத்தறிவு இறைஞானமாகக் கனிய வேண்டும். மெய்யறிவு சூன்யத்தில் அல்ல, பூரணத்தில் சங்கமிக்கும்: கடவுளிடம் சரண் அடையும். பழங்காலத்தில் அறுவது வயது நிறைவடைந்த கணவனும் மனைவியும் இல்லறம் துறந்து வனவாசம் மேற்கொள்ளக் காட்டுக்குச் சென்றனர். முன்னே சென்ற கணவர் தரையில் கிடந்த ஏதோ ஒரு பொருளைக் காலால் மணலைக் கொண்டு மறைத்தார். அதைக் கவனித்த மனைவி அவரிடம், "எதைக் காலால் மூடி மறைக்கிறீர்கள்?" என்று கேட்டதற்கு, கணவர், "தரையில் மாணிக்கக் கல் ஒன்று கிடக்கிறது. அதை உன் கண்களில் படாதபடி மூடி மறைத்தேன்" என்றார், அதற்கு மனைவி, “ என்னங்க, துறவறம் மேற்கொண்ட பிறகும், உங்களுக்கு மண்ணுக்கும் மாணிக்கத்திற்கும் வேறுபாடு தெரிகிறதா?" என்று கேட்டார். ஞானத்தில் தம் கணவரையே விஞ்சி விட்டார் அந்த மனைவி!

கடவுளை யார் தேடுவர் ? மண்ணையும் மாணிக்கத்தையும் சமமாகப் பார்ப்பவர்கள். ஒட்டையும் செல்வத்தையும் ஒன்றாகக் காண்பவர்கள் தான் கடவுளை நாடுவர் என்கிறார் தாயுமானவர்.

"ஓடும் இருநிதியம் ஒன்றாகக் கண்டவர்கள் நாடும் பொருளான நட்பே பராபரமே".

இன்றைய நற்செய்தியில், கடவுளுடைய ஞானம் எனப்படும் கிறிஸ்துவை (1கொரி 1:24) பணக்கார வாலிபர் ஒருவர் மேலோட்டமாகப் பின்பற்ற விரும்பினார். ஆனால் கிறிஸ்துவோ தம்மை வேரோட்டமாக, நெருக்கமாகப் பின்பற்ற அவருக்கு அழைப்பு விடுத்தார், அவருடைய உடமைகளை எல்லாம் விற்று, அவற்றை ஏழைகளுக்கு வாரி வழங்கிவிட்டு, வெறுங்கையுடன் தம்மைப் பின்பற்ற அழைத்தார், ஆனால் அப்பணக்கார வாலிபர் தமது உடமைகளைத் துறக்க மனமின்றி முகவாட்டத்துடன் போய் விட்டார், அவருக்கு மண்ணக அறிவு இருந்தது. ஆனால் விண்ணக ஞானமில்லை . கடவுளுக்கும் செல்வத்திற்கும் ஊழியம் புரிய அவர் விரும்பினார். ஆனால் கிறிஸ்துவோ, "எவரும் கடவுளுக்கும் செல்வத்துக்கும் ஊழியம் செய்ய முடியாது" (மத் 6:24) என்பதை அவருக்குத் திட்டவட்டமாக உணர்த்தினார்.

கிறிஸ்து இவ்வுலகச் செல்வத்தின் அவசியத்தை மறுக்க வில்லை. பொருட்பால் இல்லை என்றால், காமத்துப் பாலும் வாங்க முடியாது. ஏன், ஆவின்பால் கூட வாங்க முடியாது என்பது கிறிஸ்துவுக்கு நன்றாகவே தெரியும். ஆனால், கிறிஸ்துவோடு ஒப்பிடும் போது, இவ்வுலகச் செல்வங்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டு, இரண்டாம் நிலையை அடைகின்றன, கிறிஸ்து எல்லாவற்றையும் இரண்டாம் நிலைக்குத் தள்ளி விடுகிறார். இவ்வுண்மையைத் திருத்தூதர் பவுல் தன்குனர்ந்திருந்தார், எனவே தான் அவர், “கிறிஸ்துவை ஆதாயமாக்கிக் கொள்ள அனைத்தையும் குப்பையாகக் கருதுகிறேன்” (பிலி 3:8) என்றார். இவ்வுலக செல்வங்களுக்கு அடிமை ஆகிறவர்கள் கடவுளுக்கு அடிமை ஆகமுடியாது.

அரிது, அரிது, பணக்காரர் விண்ணரசில் நுழைவது அரிது என்று ஆணித்தரமாக அறிக்கையிடும் கிறிஸ்து, பணக்காரர்களும் இறையருளால் விண்ணகம் செல்ல முடியும் என்பதையும் எடுத்துக்கூறத் தயங்கவில்லை , பணக்கார சக்கேயு ஓர் ஊழல் பெருச்சாளி: இறையருளால், அதாவது கிறிஸ்துவின் பிரசன்னத்தால் மனமாற்றம் அடைந்தார். அதன் விளைவாகத் தாம் இழைத்த அநீதிகளுக்கு நான்கு மடங்கு ஈடு செய்யவும், தமது செல்வத்தில் பாதியை ஏழைகளுக்கு வழங்கவும் முன் வந்தார்; மீட்படைந்தார் (லூக் 19:8-10).

எவ்வகைப் பொருளாசையும் கொள்ளாது எச்சரிக்கையாக இருக்க வேண்டும், ஏனெனில் செல்வப் பெருக்கால் வாழ்வு வந்துவிடாது. (லூக் 12:15). நிலையற்ற செல்வத்தை ஏழைகளுக்குக் கொடுத்து அதன்மூலம் நிலை வாழ்வைப் பெற்றுக் கொள்ள வேண்டும் (லூக் 18:9), உலகச் செல்வத்தைப் பயன்படுத்தும் போது அவற்றில் மூழ்கி ஆன்மாவை இழக்காமல் இருக்கக் கற்றுக்கொள்வதுதான் வாழ்க்கைக் கலையாகும் (1 கொரி 7:31).

கணவர் ஒருவர் தம் மனைவிக்குக் குடைபிடித்துக் கொண்டு போனார், ஏன் அவர் அவ்வாறு செய்தார்? என்று அவரைக் கேட்டதற்கு அவர் தந்த பதில்: "போகும் வழியில் துணிக்கடை, நகைக்கடைகள் உள் ளன், அக்கடைகளை என் மனைவி பார்க்காதப்டி கு கடை யை இருபக்கங்களிலும் வளைத்துப்பிடித்து மிகவும் தந்திரமாக அவளை வீட்டிற்குத் தள்ளிக்கொண்டு போய் விடுவேன்."

இவ்வுலக மாயை நமது கண்களில் பட்டு நம்மைத் திசை திருப்பாமல் செய்ய நமக்கொரு குடை தேவைப்படுகிறது. அதுதான் கடவுளுடைய வார்த்தை : உயிருள்ள, ஆற்றல்மிக்க, இருபக்கமும் வெட்டக்கூடிய கூர்மையான வாளான, உள்ளத்தை சாடுருவுகிற கடவுளுடைய வார்த்தையால் மெய்யறிவும் ஞானமும் பெற்று ஞானிகளாக வாழக் கற்றுக் கொள்வோம். பல்வேறு வாழ்க்கைப் போராட்டங்களால் நாம் நசுக்கப்பட்டு, பிழியப்பட்டு பெறுகின்ற பட்டறிவினால் நாம் ஞானிகளாக மாறவேண்டும், வாழ்க்கை அனுபவம்தான் நமது சிறந்த ஆசான். கெட்ட பின்னாவது ஞானியாக வேண்டாமா?

தொட்டிலுக்கு அன்னை, கட்டிலுக்குக் கன்னி, பட்டினிக்குத் தீனி, சுட்டபின் நெருப்பு, கெட்டபின் ஞானி! "நீ எதைச் செய்தாலும் உன் இறுதி முடிவை நினைத்துக் கொள்"
 



”அது சரி, ஆனால்...” விளையாட்டு

இரண்டு சந்தர்ப்பங்களில்‌ இறைவன்‌ சிரிக்கிறாராம்‌!

மருத்துவர்‌ ஒரு நோயாளியிடம்‌ “கவலைப்படாதீர்கள்‌. கண்டிப்பாக உங்கள்‌ உயிரைக்‌ காப்பாற்றி விடுவேன்‌” என்று கூறித்‌ தேற்றும்போது இறைவன்‌ சிரிக்கிறார்‌. காரணம்‌? உயிரை எடுப்பதும்‌ கொடுப்பதும்‌ மருத்துவர்‌ கையிலோ இருக்கின்றது? அடுத்தது இரு சகோதரர்கள்‌ தங்கள்‌ நிலத்தைப்‌ பிரித்துக்‌ கொள்கின்றபோது இது என்னுடையது' என்கிறான்‌ ஒருவன்‌. “இல்லை தன்னுடையது” என்கிறான்‌ மற்றவன்‌. சிரித்துக்‌ கொண்டே கடவுள்‌ தனக்குள்‌ சொல்கிறார்‌: “இந்த உலகம்‌ அனைத்தும்‌ என்னுடையது. ஆனால்‌ இவர்களோ இது என்னது அது உன்னது எனச்‌ சொல்லிச்‌ சண்டையிட்டுக்‌ கொள்கின்றனர்‌.

அன்று பேதுருவும்‌ யோவானும்‌ ஆலய முற்றத்தில்‌ முடவனைச்‌ சந்திக்கின்றனர்‌. பிச்சை கேட்ட அவனிடம்‌ பேதுரு “பொன்னும்‌ வெள்ளியும்‌ என்னிடம்‌ இல்லை. என்னிடம்‌ உள்ளதை நான்‌ தருகிறேன்‌. இயேசுவின்‌ பெயரால்‌ உனக்குச்‌ சொல்கிறேன்‌. எழுந்து நட” (தி.ப. 3:6) என்றார்‌. அவனும்‌ எழுந்து நடக்கிறான்‌.

திருத்தந்தை 13ம்‌ சிங்கராயர்‌ ஒரு மனிதரைப்‌ பேதுரு பேராலயத்துக்கும்‌ தனது மாளிகைக்கும்‌ அழைத்துச்‌ சென்றார்‌. அங்குள்ள ஆடம்பரப்‌ பொருள்களையெல்லாம்‌ காட்டி, '“பேதுருவோடு சேர்ந்து வெள்ளியும்‌ பொன்னும்‌ என்னிடமில்லை என்று இனி எங்களால்‌ கூற முடியாது” என்றாராம்‌. உடனே அந்த மனிதர்‌ திருத்தந்தையைப்‌ பார்த்து, “ஆகவேதான்‌ உங்களால்‌ எழுந்து நட என்றும்‌ சொல்ல இயலவில்லை” என்று பதில்‌ கூறினாராம்‌.

பணத்துக்கோ பணக்காரர்களுக்கோ எதிரானவரல்ல இயேசு. நிக்கதேம்‌, சக்கேயு போன்ற செல்வந்தர்களின்‌ நெருங்கிய 'நண்பர்‌ அன்றோ! பணத்தால்‌ வரும்‌ தீமைகள்‌, ஆபத்துக்கள்‌ குறித்து எச்சரிக்கிறார்‌.

பணம்‌ என்ற தேவதைக்குப்‌ பலியாகாதது எது? கற்பு பலியாக்கப்படுகிறது. அதுதான்‌ விபச்சாரம்‌. உண்மை பலியாக்கப்படுகிறது. அதுதான்‌ பொய்ச்சாட்சி, நீதி பலியாக்கப்படுகிறது. அதுதான்‌ அநீதத்‌ தீர்ப்பு. அன்பு பலியாக்கப்படுகிறது. அதுதான்‌ வஞ்சனை. நேர்மை பலியாக்கப்படுகிறது, அதுதான்‌ ஊழல்‌. நியாயம்‌ பலியாக்கப்படுகிறது, அதுதான்‌ சுரண்டல்‌. இப்படிப்‌ பணத்துக்காக பலியாக்கப்படுபவை பல. அவை ஒவ்வொன்றிலும்‌ கிறிஸ்துவின்‌ சீடன்‌ . என்ற நிலையும்‌ பலியாக்கப்படுகிறது. “எவரும்‌ இரு தலைவர்களுக்குப்‌ பணிவிடை செய்ய முடியாது” (மத்‌. 6:24).

பணத்தை மட்டும்‌ நம்பி இருப்பவர்கள்‌ கடவுளின்‌ அரசில்‌ நுழைவது எவ்வளவு அரிது! (மார்க்‌ 10:23). ஆலமரம்‌ எதை நம்பி வாழ வேண்டும்‌? வேரையா, விழுதையா? ஐயமில்லாமல்‌ வேரைத்தான்‌. அதற்காக விழுதுகளை விட்டுவிட வேண்டும்‌ என்றில்லை. ஆனால்‌ விழுதான செல்வத்தை மட்டுமே நம்பிக்கொண்டு ஆணி வேரான ஆண்டவனை மறக்கும்போது முன்னுரிமை கொடுப்பதில்‌ முறைகேடு அல்லவா ஏற்பட்டுவிடுகிறது! பணநிலை அல்ல, மனிதனின்‌ மனநிலையே நம்பிக்கையின்‌ உரைகல்‌.

ஒருவன்‌ யாரை நம்பி வாழ்கிறான்‌ என்று கண்டறிய இறைவன்‌ சோதனைகளை நடத்தி இருக்கிறான்‌. 2 எடுத்துக்காட்டுகள்‌.

1. ஆபிரகாமிடம்‌ மகனைப்‌ பலிகொடுக்கக்‌ கேட்டது. ஆபிரகாம்‌ நம்பி இருந்தது வேரான கடவுளையா, விழுதான மகனையா?சோதனையில்‌ வென்றார்‌. மனநிறைவோடு திரும்பினார்‌.

2. இயேசு சந்தித்த பணக்கார இளைஞனை அழைத்தது. அவன்‌ நம்ப வேண்டியது வேரான இறைவனையா, விழுதான சொத்து சுகத்தையா? சோதனையில்‌ தோற்றான்‌ மனம்‌ வாடித்‌ திரும்பினான்‌.

கிறிஸ்தவ வாழ்க்கை கட்டளைகளுக்கு அப்பால்‌. பத்துக்‌ கட்டளைகள்‌ மனிதன்‌ மனிதனாக வாழத்தானே தவிர மனிதன்‌ கிறிஸ்தவனாக வாழ அல்ல. திருஅவைக்‌ கட்டளைகள்‌ கடமை மறந்த கிறிஸ்தவனுக்கு ஒரு குறைந்த நிலை -வடிவமைப்பே தவிர இலட்சிய வாழ்க்கைக்கான வழியல்ல.

வானக வாழ்வு ஒரு மாளிகை என்றால்‌, அம்மாளிகையைக்‌ கட்டி எழுப்பக்‌ கடவுள்‌ அமைத்துத்‌ தந்த சாரம்தான்‌ இவ்வுலகம்‌. உலகம்‌ தரும்‌ செல்வம்‌. செல்வத்தால்‌ வரும்‌ இன்பம்‌. வீடு எதற்காகக்‌ கட்டுகிறோம்‌, இருக்கவும்‌, அமரவும்‌, படுக்கவும்‌ நடமாடவும்தானே, சாரத்திலும்‌ ஒரளவு அவற்றைச்‌ செய்யலாமே என்றெண்ணி வீட்டைக்‌ கட்டுவதை விடுத்து, சாரத்திலேயே குடியிருக்க நினைப்பவனை என்னவென்பது?

இன்று நாம்‌ யாரை நம்பி வாழ்கிறோம்‌ என்றறிய இறைவன்‌ நம்மைச்‌ சோதித்தால்‌ ... சோதனையில்‌ வெற்றி பெறத்‌ தேவையான ஞானத்தை நாடுவோம்‌. ஒழுங்காக ஒரு புள்ளிவிவரம்‌ எடுத்தால்‌, உலகத்தில்‌ அருள்‌ இல்லாமல்‌ அல்லது பொருள்‌ இல்லாமல்‌ துன்புறுபபர்களை விட அறிவில்லாமல்‌ ஞானமில்லாமல்‌ அல்லல்படுபவர்கள்‌ தாம்‌ அதிகம்‌ என்பது தெரியவரும்‌. ஞானத்தின்‌ ஆவியோடு ஒப்பிடும்போது செல்வம்‌ ஒன்றுமே இல்லை. (சா.ஞா. 7:7-11)

கருத்தரங்கு ஒன்றில்‌ பெண்‌ அடிமைத்தனம்‌, வரதட்சணை போன்ற சமூகத்‌ தீமைகள்‌ பற்றி அலசப்பட்டது. வரதட்சணை ஒழிக்கப்பட வேண்டும்‌ என்று தீர்க்கமாக முடிவு எடுக்கப்பட்டது. சில நாள்களுக்குப்‌ பின்‌ அதில்‌ கலந்து கொண்ட இளைஞனுக்கு திருமணம்‌, வரதட்சனை ஐந்து லட்சமாம்‌!

இன்று நம்மிடையே நல்ல கருத்துக்கள்‌, தீர்மானங்கள்‌ இல்லாமல்‌ இல்லை. ஆனால்‌ செயல்பாடுதான்‌ கேள்விக்குறி. இத்தகைய நடைமுறையை எரிக்‌ புரோம்‌ என்ற உளவியல்‌ நிபுணர்‌ “அது சரி, ஆனால்‌” (“yes, but” game) என்ற உளவியல்‌ விளையாட்டு என்கிறார்‌. நல்ல நல்ல கருத்துக்களை மகிழ்ச்சியுடன்‌ ஏற்றுக்‌ கொண்டு 'ஆம்‌' என்பது. தொடர்ந்து 'ஆனால்‌' என்று சொல்லி மறுத்துவிடுவது. இன்று சமுதாயத்திலும்‌ அரசியலிலும்‌, திருஅவையிலும்‌ உள்ள பெரிய நோய்‌ இதுதான்‌!

பணக்கார இளைஞன்‌ வருகிறான்‌. வருத்தத்தோடு. திரும்புகிறான்‌. நிகழ்ச்சியின்‌ தொடக்கத்தில்‌ நம்பிக்கையும்‌ உற்சாகமும்‌. இறுதியில்‌ வருத்தமும்‌ விரக்தியும்‌. நல்ல மனம்‌ மட்டும்‌ போதாது. அது வெறும்‌ கற்பனையே. உழைப்பும்‌ உற்சாகமான முயற்சியும்‌ எந்தத்‌ தடையையும்‌ மேற்கொள்ளும்‌ துணிவும்‌ தேவை.

இயேசுவா? செல்வமா? செல்வத்தை இழக்க மனமில்லாத இளைஞன்‌ இயேசுவை இழக்கத்‌ துணிந்துவிட்டான்‌. பணத்திற்கு முதலிடம்‌ தரும்‌ யாரும்‌ இறைவனை, இறையரசை உரிமையாக்கிக்‌ கொள்ள முடியாது. செல்வத்தை இழக்கத்‌ துணியும்‌ மனம்‌ மகிழ்ச்சியை இழப்பதில்லை. இயேசுவை இழக்கத்‌ துணியும்‌ மனம்‌ மகிழ்ச்சியை இழக்கிறது. காரணம்‌ செல்வம்‌ நிலையற்றது. இயேசு நிலையானவர்‌, நிரந்தரமானவர்‌.

வாழ்வதற்குப்‌ பொருள்‌ வேண்டும்‌.
வாழ்வதிலும்‌ பொருள்‌ வேண்டும்‌.
ஒர்‌ இளைஞன்‌ ஒரு துறவியிடம்‌ “நான்‌ இதுவரை பொய்‌ சொன்னதில்லை. திருடியதில்லை. யாருக்கும்‌ தீங்கு நினைத்ததில்லை. எனக்கு விண்ணகப்‌ பேறு கிடைக்குமா?'' என்று கேட்டான்‌. துறவியோ “மரமும்‌ மண்ணும்‌ மட்டையும்‌ முக்தி பெறுமாயின்‌ உனக்கும்‌ முக்தி உண்டு: என்றார்‌. அதாவது மரமும்‌ மண்ணும்‌ பொய்‌ சொல்வதில்லை. திருடுவதில்லை. எவருக்கும்‌ தீங்கு இழைப்பதில்லை. நீ மோட்சம்‌ செல்ல வேண்டுமானால்‌ அதை நிர்ணயிப்பது நீதான்‌ எனவே நீ நல்லவனாக, குறிப்பாக உன்னிடம்‌ உள்ளதைப்‌ பிறரோடு பகிர்ந்து கொள்பவனாக வாழும்‌ போது நிலை வாழ்வு என்பது நிச்சயம்‌.

ஒவ்வொரு மனிதனுக்கும்‌ இரண்டு இலக்குகள்‌ உண்டு.
1. இந்நேரத்து இலக்கு (Immediate goal)

2. இறுதி இலக்கு (ultimate goal)

 அனைவருக்கும்‌ இறுதி இலக்கு நிலை வாழ்வை உரிமையாக்கிக்‌ கொள்வதாகும்‌. இன்றைய இலக்கு அன்றாடம்‌ உண்மையிலும்‌ நீதியிலும்‌ தூய்மையிலும்‌ புனிதத்திலும்‌, பாசத்திலும்‌ பகிர்விலும்‌ வாழ்வதாகும்‌.

 

 
விண்ணரசின் மதிப்பை உணராமல் வாழும் மானிடர்கள்!

நிகழ்வு
ஜூலியன் என்றொரு பெருஞ்செல்வந்தர் ஒருவர் இருந்தார். இவருக்கு ஒரு பண்ணை வீடு இருந்தது. அந்தப் பண்ணை வீட்டில்தான் இவர் தன்னுடைய பெரும்பாலான நேரங்களைச் செலவழித்தார். இவருடைய பண்ணை வீட்டின் ஒருபுறம் அருமையானதொரு தோட்டம் இருந்தது. அதில் வண்ண வண்ண மலர்கள் பூத்துக்குலுங்கின. பண்ணை வீட்டின் இன்னொரு பக்கம், மீன்குளம் ஒன்று இருந்தது. அதில் அரியவகை மீன்களெல்லாம் இருந்தன.

இப்படிப்பட்ட ஓர் அருமையான பண்ணைவீட்டில் எப்பொழுதும் இருந்து பழகியதால், ஜூலியனுக்கு அந்தப் பண்ணைவீடு பிடிக்காமல் போனது. அதை எப்படியாவது விற்றுவிட்டு, வேறோர் இடத்தில் நிலம் வாங்கிப் பண்ணை டு கட்டி அதில் வாழலாம் என்று முடிவுசெய்தார் ஜூலியன். இதைத் தொடர்ந்து இவர், நிலங்களை வாங்கி விற்கும் ஓர் இடத் தரகரிடம் தன்னுடைய விருப்பத்தைத் தெரிவித்தார். அவரும் இவரிடம் “அப்படியே செய்துவிடுவோம்” என்று சொல்லிவிட்டுச் சென்றுவிட்டார்.

மறுநாள் செய்தித்தாளில் இப்படியொரு விளம்பரம் வந்திருந்தது: “பண்ணை வீடு ஒன்று விற்பனைக்கு வருகின்றது. அதன் ஒருபுறம் அருமையான தோட்டமும், இன்னொரு புறம் மீன் குளமும் உள்ளது. சொர்க்கத்தில் இருப்பது போன்ற உணர்வைத் தரும் இந்தப் பண்ணை வீட்டின் விலை மிகவும் குறைவுதான். இதை வாங்க விருப்பமுள்ளோர் கீழ்க்காணும் தொலைபேசி எண்ணை அழைக்கவும்.”

செய்தித்தாளில் வந்த இந்த விளம்பரத்தைப் பார்த்ததும், ஜூலியன் மிகவும் உற்சாகமடைந்து, ‘எப்படியாவது அந்தப் பண்ணை வீட்டை வாங்கிவிடவேண்டும்’ என்று நினைத்துக்கொண்டு, விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டிருந்த எண்ணைத் தொடர்புகொண்டு பேசினார். கடைசியில்தான் தெரிந்தது, அது தன்னுடைய பண்ணை வீடுதான் என்று. இப்படிப்பட்ட பண்ணை வீட்டையா நாம் விற்கத் துணிந்தோம் என்று நினைத்து, ஜூலியன் தன்னுடைய பண்ணை வீட்டை விற்கும் எண்ணத்தைக் கைவிட்டார்.

ஆம், இந்த நிகழ்வில் வருகின்ற ஜூலியன், எப்படித் தன்னுடைய பண்ணை வீட்டின் அருமையையும் மகத்துவத்தையும் உணராமல் இருந்தாரோ, அப்படித்தான் இன்றைக்குக் பல கிறிஸ்தவர்கள் விண்ணரசின் மகத்துவத்தை உணராமல் வாழ்த்துகொண்டிருக்கின்றார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில், பொதுக்காலத்தின் இருபத்து எட்டாம் ஞாயிறான இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை, எல்லாருக்கும் உரிய விண்ணரசின் மகத்துவத்தை நாம் உணரவும், அந்த விண்ணரசில் நாம் பங்குபெற என்ன செய்யவேண்டும் என்பதையும் எடுத்துக்கூறுகின்றது. அதைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

கொடுக்கப்பட்ட அழைப்பைப் புறக்கணிக்கும் மக்கள்
நற்செய்தியில் ஆண்டவர் இயேசு, விண்ணரசைப் பெரிய விருந்துக்கு ஒப்பிடுகின்றார். இந்த உவமையில் வருகின்ற மன்னர் தன்னுடைய மகனுக்கு நடத்திய திருமணத்திற்கு ஏற்பாடு செய்திருந்த விருந்தில் கலந்துகொள்வதற்கு, ஏற்கெனவே அழைப்புப் பெற்றிருந்தவர்களிடம். ‘விருந்து ஏற்பாடாகிவிட்டது’ என்ற செய்தியைச் சொல்ல தன் பணியாளர்களை அனுப்பி வைக்கின்றார். ஆனால், அழைப்புப் பெற்றவர்களோ மன்னர் அனுப்பி வைத்த பணியாளர்களிடம் ஒவ்வொரு காரணத்தைச் சொல்லி திருமண விருந்துக்குக் வராமல் போகின்றார்கள். இன்னும் ஒருசிலர் அனுப்பப்பட்டவர்களைப் பிடித்துக் கொலைசெய்கின்றார்கள்.

இங்கு மன்னர் ஏற்பாடு செய்திருந்த திருமண விருந்து என்பது விண்ணரசைக் குறிக்கின்றது; அழைப்புப் பெற்றவர்கள் யூதர்களைக் குறிக்கின்றார்கள். யூதர்கள் கடவுளால் சிறப்பாக அழைப்புப் பெற்றிருந்தார்கள். ஆனாலும் அவர்கள் கடவுளால் அனுப்பப்பட்ட இறைவாக்கினர்களைப் பிடித்துக் கொன்றொழிக்கின்றார்கள். இதனாலேயே அவர்களுக்கு கிபி. 70 ஆம் ஆண்டு மிகப்பெரிய அழிவு ஏற்பட்டது. அன்று யூதர்கள் கடவுளின் அழைப்பைப் புறக்கணித்ததுபோல், இன்று நாம் விண்ணரசில், ஆண்டவருடைய திருவிருந்தில் கலந்துகொள்ளாமல், ஏதோவொரு சாக்குப் போக்கைச் சொல்லிப் புறக்கணித்துக் கொண்டிருக்கின்றோம். இத்தகைய நிலையை நாம் மாற்றிக்கொள்வது மிகவும் நல்லது.

விண்ணரசில் எல்லாருக்கும் இடமுண்டு
திருமண விருந்துக்கு அழைப்புப் பெற்றவர்கள் அதாவது யூதர்கள் கடவுளின் அழைப்பு உதறித் தள்ளியதால், அந்த அழைப்பானது எல்லாருக்கும் கொடுக்கப்படுகின்றது. இதன்மூலம் விண்ணரசு என்பது ஒரு குறிப்பிட்ட மக்களுக்கு மட்டுமல்ல, அது எல்லா மக்களுக்கும் உரியது என்ற செய்தியானது சொல்லப்படுகின்றது. இந்த உண்மையை, இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகம் இன்னும் அழகாக, ஆழமாக எடுத்துக்கூறுகின்றது.

“படைகளின் ஆண்டவர் இந்த மலையில் மக்களினங்கள் அனைவருக்கும் சிறந்ததொரு விருந்தை ஏற்பாடு செய்வார்” என்று இன்றைய முதல் வாசகத்தில் வருகின்ற வரிகள், விண்ணரசு மக்கனினங்கள் அனைவருக்கும் உரியது என்ற செய்தியை மிகச் சிறப்பாக எடுத்துச் சொல்கின்றது. மேலும் இந்த விருந்தில் கலந்துகொள்வோருடைய முகத்தை மூடியுள்ள முக்காட்டையும், துன்ப துகிலையும் அகற்றி, கண்ணீரைத் துடைத்துவிடுவார் என்கின்றார் ஆண்டவர்.

இப்படி எல்லாருக்கும் உரிய... நம்முடைய துன்ப துயரங்கள் எல்லாம் நீங்கும்... திருவிருந்தில் அல்லது விண்ணரசில் பங்குபெறுவதற்கு நமக்கு ஒரு முக்கியமான தகுதி அல்லது நாம் ஒரு முக்கியமான செயலைச் செய்யவேண்டும். அது என்ன என்று தொடர்ந்து சிந்தித்துப் பார்ப்போம்.

விண்ணரசில் பங்குபெற தகுதியுள்ளவர்களாய் மாறவேண்டும்
மன்னர் கொடுத்த விருந்தை, அழைப்புப் பெற்றவர்கள் புறக்கணித்ததால், மன்னர் தன் பணியாளரிடம், “நீங்கள் சாலையோரங்களில் காணும் எல்லாரையும் அழைத்து வாருங்கள்” என்று சொல்ல, அவர்களும் அவ்வாறே செய்கிறார்கள். மன்னர் செய்த இத்தகையதொரு செயல், விண்ணரசு எல்லாருக்குமானது என்ற செய்தியை உணர்த்துகின்றது என்று மேலே பார்த்தோம். இவ்வாறு சாலையோரங்களில் இருந்து அழைக்கப்பட்டவர்களுள் ஒருவர், திருமண ஆடையின்றி இருப்பதைக் கண்டு, அவரை இருளில் தள்ளுமாறு தன்னுடைய பணியாளர்களுக்குக் கட்டளையிடுகின்றார் மன்னர்.

மன்னரின் இச்செய்தி, விண்ணரசு எல்லாருக்கும் உரியது என்றாலும், அதில் கலந்துகொள்வதற்கு தகுதி வேண்டும் என்ற செய்தியை நமக்குச் சுட்டிக்காட்டுகின்றது. இங்கு திருமண ஆடை அல்லது விண்ணரசுக்குள் நுழைவதற்கு ஒருவருக்கு இருக்கவேண்டிய தகுதி ‘நேர்மை’ என்று திருவிவிலிய அறிஞர்கள் குறிப்பிடுவார்கள். இதை இன்னும் தெளிவாகப் புரிந்துகொள்வதற்கு இறைவாக்கினர் எசாயா நூல் 61: 10 இல் வருகின்ற, “நேர்மை என்னும் ஆடையை எனக்கு அணிவித்தார்” என்ற வரிகளோடு இணைத்துப் பார்ப்பது நல்லது. திருமண விருந்தில் பங்கு பெறுவதற்குத் திருமண ஆடை எப்படித் தேவையானதாக இருக்கின்றதோ, அப்படி நாம் விண்ணரசுக்குள் நுழைய நேர்மை என்ற பண்பானது தேவையானதாக இருக்கின்றது.

பலநேரங்களில் நாம் நம்முடைய அன்றாட வாழ்க்கையில் நேர்மை இல்லாமலும், உண்மை இல்லாமலும் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இந்நிலையை நாம் நம்மிடமிருந்து தவிர்த்து, நேர்மையோடு வாழ்ந்து கடவுள் தருகின்ற விண்ணரசை உரிதாக்கிக் கொள்ள முயற்சி செய்வோம்.

சிந்தனை
‘கடவுள் படைப்பில் நேர்மையான மனிதனே, தலைசிறந்தவன்’ என்பார் போப் என்ற அறிஞர். ஆகையால், நம்முடைய அன்றாட வாழ்க்கையில் நேர்மையோடு நடந்து, இறைவன் தருகின்ற விண்ணரசை உரித்தாக்கிக் கொள்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.