Friday 26 August 2022

பொதுக் காலத்தின் 22-ஆம் ஞாயிறு மூன்றாம் ஆண்டு

 பொதுக் காலத்தின் 22-ஆம் ஞாயிறு  மூன்றாம் ஆண்டு

இன்றைய நற்செய்தி வாசகங்கள்.

சீராக்கின் ஞான நூல் 3: 17-18,20,28-29
எபிரேயர் 12: 18-19, 22-24
லூக்கா  14: 1,7-14

வழங்குபவர்கள் 

  1. ஞாயிறு  இறைவாக்கு - அருள்பணி முனைவர் அருள் பாளை
  2. மகிழ்ச்சியூட்டும் மறையுரைகள் - குடந்தை ஆயர் F.அந்தோனிசாமி
  3. தெய்வத்திரு அருள்பணி Y.இருதயராஜ்
  4. திருவுரைத் தேனடை-அருள்பணி இ.லூர்துராஜ் - பாளை
  5. மறையுரைச் சிந்தனைகள் -அருள்பணி மரிய அந்தோணி  பாளை
  6. ஞாயிறு சிந்தனை -அருள்பணி ஏசு கருணாநிதி மதுரை
  7. ஞாயிறு மறையுரை -அருள்பணி எல்.எக்ஸ்.ஜெரோம் சே.ச
  8. ஞாயிறு மறையுரை -அருள்பணி. குழந்தைஇயேசு பாபு சிவகங்கை
  9. .ஞாயிறு மறையுரை-அருள்பணி.அ.மாணிக்கம்-பாலக்குறிச்சி திருச்சி

ஐந்து ஆண்டுகளுக்கு முன் ஜெர்மனி சென்றபோது ஒரு சிறுவனின் புதுநன்மை விழாவிலும், அவனது தாத்தாவின் 50-ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவிலும் பங்கெடுக்க வாய்ப்புக் கிடைத்தது. ஏராளமான விருந்தினர்கள் இந்த விருந்திற்கு அழைக்கப்பட்டிருந்தார்கள். எல்லா (International food) நாட்டின் உணவையும் உள்ளடக்கிய சுவையான விருந்து தயாரிக்கப் பட்டிருந்தது. சுவையான பல நாட்டு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. நல்லதொரு நன்றி அறிதல் திருப்பலிக்குப் பின் விருந்து நடைபெற்றது.
ஆனால் எல்லாப் பிறந்த நாட்கள் கொண்டாட்டங்களைவிட இது வித்தியாசமான ஒன்று. அழைப்பிதழில் நன்கொடைகள். அன்பளிப்புகள் தவிர்க்கப்பட வேண்டும், வாங்கப்படாது என்று தெளிவாகப் பொறிக்கப்பட்டிருந்தது. மேலும் ஏழை நாடாகிய ஆப்பிரிக்கா, இந்தியாவில் உள்ள அனாதை இல்லங்களுக்கு நன்கொடை கொடுத்தால் அது ஆயர்கள் மூலமாக அனுப்பி வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதேபோல் வருகை தந்த அனைவரும் தாராள உள்ளத்துடன் தந்த அன்பளிப்புக்கள் 25 லட்சம் கிடைத்தது. அதை இந்திய நாட்டிற்கு அனுப்புவதாக அறிவித்தார்கள். இந்த விருந்தானது நம் ஆண்டவர் படம் பிடித்துக் காட்டும் விருந்துக்கு மிகப் பொருத்தம் ஆகும். நீ விருந்துக்கு அழைக்கப்படும்போது முதல் இடம் தேடாதே ஏனெனில் அழைப்பவன் தான் யாருக்கு எந்த இடம் எனக் குறிப்பிட உரிமை உண்டு. அது நீ அல்ல. இரண்டாவது நீ விருந்து கொடுக்கும்போது ஏழைகள், அனாதைகள், ஊனமுற்றோர் இவர்களை அழைத்து உதவி செய். இவர்கள் உடன் திருப்பித் தரமுடியாதவர்கள். ஆனால் கடவுள் உன்னை ஆசீர்வதிப்பார் என்று தெளிவாக்கப்படுகிறது.

  • ஆண்டவர் இரண்டு கருத்துகளை இன்று முன் நிறுத்த விரும்புகின்றார்.
  • நாம் நம்மையே தாழ்த்திக்கொள்ளவில்லை என்றால் பிறரால் தாழ்த்தப்படுவோம் என்ற எச்சரிக்கையைத் தருகிறார்.

தாழ்ச்சி உள்ளவர்கள் மற்றவர்மீது குறிப்பாக ஏழைகள்மீது அக்கறை காட்ட முடியும். வாழ்விலும் ஆன்மீகத்திலும் முதிர்ச்சி அடைந்தவர்கள் தங்களை உயர்த்திக்கொள்ள விரும்புவதில்லை. அறிவியல் கண்டுபிடிப்புக்களை மேற்கொண்ட நியூட்டன் தன் வாழ்வின் இறுதியில் நான் கடற்கரையில் விளையாடும் ஒரு சிறுவன். இங்கே ஒரு கூழாங்கல், அங்கு ஒரு சங்கு எனச் சிலவற்றைக் கண்டுபிடித்திருக்கிறேன் என்று தன்னைப் பற்றித் தாழ்ச்சியாகக் கூறியுள்ளார்.

அன்னை தெரெசாவும் தன் அன்பு மற்றும் அறப்பணிகளைப் பற்றிப் பேசும்போது, நாங்கள் செய்யும் எல்லாப் பணிகளையும் இவ்வுலகில் நடைபெறும் பணிகளோடு ஒப்பிடும்போது அவை கடலின் ஒரு துளிக்குச் சமம் என்றார்கள்.

தாழ்ச்சி உள்ளவர்கள் பெறக்கூடிய நன்மைகள் பற்றியும் இன்றைய வாசகங்கள் எடுத்துரைக்கின்றன.

  • தாழ்ச்சியோடு செயல்படுபவர்கள் கடவுளால் உயர்த்தப்படுவார்கள். எனவே யாக்கோபு தன் திருமடலில் ஆண்டவர் முன் உங்களைத் தாழ்த்துங்கள். அவர் உங்களை உயர்த்துவார். (யாக். 4:10) என்கிறார்.
  • நீதிமொழிகள் இறுமாப்பு ஒருவரை தாழ்த்தும். தாழ்ச்சி ஒருவரை உயர்த்தும் (நீதிமொழி 29:23) என்கின்றன. அன்னை தெரெசா இதற்குச் சான்று.
  • தாழ்ச்சி உள்ளவர்களுக்குக் கடவுளின் மறைபொருள் வெளிப்படுத்தப்படுகிறது. எளியோருக்குத்தான் நற்செய்தி என்கிறார் இயேசு. ஞானிகளுக்கும் விவேகிகளுக்கும் மறைத்துக் குழந்தைகளுக்கு. அதாவது குழந்தை உள்ளம் கொண்டவர்களுக்கு விண்ணரசின் மறைபொருளை கடவுள் வெளிப்படுத்துகிறார் (லூக். 10:21). எளியோருக்குத் தான் ஆண்டவர் தம் மறைபொருளை வெளிப்படுத்துகிறார் (சீராக்
  • 3:19).

தாழ்ச்சி உள்ளவர்கள் ஆண்டவரை மாட்சிமைப்படுத்தும் பேறுபெற்றவர்கள். சீராக் நூலில் கூறப்படுவதுபோல, தாழ்ந்தோரால் அவர் மாட்சிமை பெறுகிறார் (சீராக் 3:20).

இதற்கு உதாரணமாகத் திகழ்பவர் நம் ஆண்டவர் இயேசு (யோவா. 17:4). நம் தாய் மரியா.

தாழ்ச்சி உள்ளவர்கள் வாழ்வில் வீழ்வதில்லை. மாறாக ஆணவம் உள்ளவர்கள்தான் வீழ்த்தப்படுவார்கள். உள்ளத்தில் செருக்குடன் சிந்திப்போரை சிதறடித்து வருகிறார், வலியோரை அரியணையினின்று தூக்கி எறிந்துள்ளார். தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துகிறார் (லூக். 1:53). தாழ்ச்சி உள்ளவர்கள் விட்டுக் கொடுக்கும் மனம் உடையவர்கள். தாழ்ச்சி என்றால் வளைந்து கொடுப்பதாகும்.

மார்ட்டின் லூத்தர் கூறுகிறார். 'ஒரு ஆற்றின் குறுகியப் பாலத்தின் நடுவே இரண்டு மலைகள். ஆடுகள் எதிர் எதிராக நடந்து வந்தன. விலகிச் செல்வதற்கு வழியில்லை. மோதிக்கொண்டால் ஆற்றில் விழ வேண்டும். பின்னோக்கிச் செல்லவும் முடியாது. இந்த நிலையில் ஒரு ஆடு படுத்துக் கொள்ள மற்ற ஆடுகள் அதன்மீது கடந்து சென்றன. தாழ்ச்சி இருந்தால் வாழ்க்கைப் பாலத்தை எந்தப் பிரச்சனையும் இல்லாமல் கடப்போம் என்பது உறுதி.''

  • ஒருமுறை வின்சென்ட் தே பவுல் அவரது அலுவலகத்தில் அமர்ந்து இருந்தார். பெண்ணொருத்தி அவரை அணுகி, என் மகனுக்கு வேலை வேண்டும் என்று கேட்டார். ஆகட்டும். பார்க்கலாம் என்றார். அந்தப் பெண்ணுக்கு வந்தது கோபம். உடனே வேலை கொடுக்காமல் ஆகட்டும் பார்க்கலாம் என்று சொல்வதா எனச் சொல்லி மேசை மீதிருந்த பேப்பர் வெயிட்டைத் தூக்கிப் புனிதர்மீது எறிந்தாள். தலையில் காயம், குருதி கொட்டியது. குருதியைத் துடைத்துக் கொண்டே தன்னைச் சுற்றியுள்ளவர்களைப் பார்த்து, இந்தப் பெண் இவளது மகனை எவ்வளவு அன்பு செய்கிறாள் பாருங்கள் என்றார். இன்று இந்தப் புனிதர் வணக்கம் பெறுகிறார்.

அருகம்புல் தரையிலே படர்ந்து வளரும் தாவரம். தண்ணீர் உள்ள இடத்தில் தலைதூக்கி நிற்கும். வெயிலிலும், மழையிலும் அழிவுறாத ஒன்று. எல்லாக் காலங்களிலும் கால்நடைகளுக்கு
உணவாகிறது. மனிதருக்கு மருந்தாகிறது. ஆம் தாழ்ச்சியுள்ளவர்கள் அருகம்புல் போன்றவர்கள். தாழ்நிலை பொருளாதாரம் கொண்டவராக இருக்கலாம். ஆனால் இறைவனைப் பற்றிக் கொள்பவர்கள் சார்ந்து இருப்பவர்கள். தன் ஒவ்வொரு செயலையும் இறைவனில் ஊன்றிச் செய்பவர், எப்பொழுதும் ஒரே நிலைப்பாடு கொண்டவர், எல்லாருக்கும் பணிந்திருப்பவர், பணி செய்பவர், நம்பிக்கைக்குரிய மருந்தாக உள்ளவர். இதைத்தான் சீராக் நூல் போற்றுகிறது.

  • ஆனால் அகந்தை உள்ளவர்கள் திருத்தம் பெற இயலாதவர்கள். தன் எண்ணம், தன் மேம்பாடு, தன் செயல்களே மேலானவை என்று தம்மையே கடவுளாக்கிக் கொள்பவர்கள். இவர்களது வாழ்வு அழிவு சக்திகளாகத்தான் மாறும். சமூக அமைப்பில் வேறுபாட்டைப் புகுத்திச் சமூகம் துண்டாக்கப்படும். பழைய ஏற்பாட்டிலே குருக்கள், பரிசேயர், சதுசேயர், மூப்பர்கள் தங்களை மேலானவர்களாகக் கருதி பிறரை ஏற்காத அகந்தை நிலையில் வாழ்ந்தார்கள். இவர்களைத்தான் இயேசு கடினவார்த்தை கொண்டு சாடினார். (லூக். 18:9-14) ஆயக்காரன் - பரிசேயன் உவமை.
  • இயேசு முதல் இடம் பிடித்து விருந்துண்ண வந்தவர்களுக்குக் கூறுவதாவது, உங்களுள் முதல்வராக இருக்க விரும்புகிறவர் பணியாளராக இருக்கட்டும் (மத். 20:27). குழந்தைகளாக மாறாவிடில் விண்ணரசில் சேரமாட்டீர்கள் (மத். 18:3) என்றும் கூறுகிறார்.

இரண்டாவது விருந்து படைக்கிறவர்களுக்கு ஓர் அறிவுரை கூறுகிறார். உறவினர்களோடும், அடுத்திருப்போரிடமும், செல்வந்தர்களோடும் பகிர்ந்து கொள்வதைவிட தாழ்நிலை நிற்பவர்களோடு பகிர்தல் மேலானது என்றும் கூறுகின்றார். தாழ்ச்சி என்பது தன்னைத் தாழ்த்திக் கொள்வது, செயல்பாடாக மாறும்போது தன்னை ஏழைகளோடு ஒருவராக மாற்றிக் கொள்வது. கைமாறு எதிர்பாராமல் பணி செய்வது. இது கடினமான பண்பு. இதைச் சிறிது சிறிதாக வளர்த்துக்கொள்ள வேண்டும்.

நான் கனிவும் மனத்தாழ்ச்சியும் உள்ளவன். ஆகவே என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு என்னிடம் கற்றுக் கொள்ளுங்கள் (மத். 11:29) என்கிறார் இயேசு. தன்னையே வெறுமையாக்கி அடிமையின் தன்மை பூண்ட இயேசுவின்தாழ்ச்சியைவிட நாம் பின்பற்ற வேறு எதுவும் இல்லை. இதைப் பின்பற்றியவள்தான் நம் தாய் மரியா. இதோ உமது அடிமை. உம் வார்த்தையின்படி நடக்கட்டும் என்றாள் (லூக்.1:38).

இரு தத்துவங்கள்:

  • தண்ணீரில் நீந்துபவன் கையைக் கீழே அமுக்கினால்தான் மேல்நோக்கி வர முடியும்.
  • ஆகாயத்திலே பறக்கிற பறவையானது தன் இறக்கைகள் இரண்டையும் கீழே அமுக்குவதால் தான் மேல் நோக்கிப் பறக்க முடியும்.
 

எதையும் எதிர்பாராமல் தர்மம் செய்வோம் !

ஓ மனிதா!
ஆடிவரும் தென்றலும்
பாடிவரும் பறவையும்
ஓடிவரும் அருவியும்
உலகத்திடமிருந்து எதையுமே
எதிர்பார்ப்பதில்லை!
நீ இயற்கையின் சிகரமல்லவா?
வெளியே வா!
உன் சுயநலச் சிறையை விட்டு
வெளியே வா!
உடைத்தெறி - உடைத்து எரி -
கைம்மாறு கருதி தர்மம் செய்யும்
உன் மனத்தை உடைத்தெறி - உடைத்து எரி -
அப்போது உனக்கு
வானம் கூட வசப்படும்.
இதுதான் இன்றைய நற்செய்தி தரும் அருள்வாக்கு!

இன்றைய நற்செய்தியிலே நாம் யாருக்கு உலகத்திலே விருந்து வைக்க வேண்டும்? யாரை மகிழ்ச்சிப்படுத்த வேண்டும்? என்பதை இயேசு தெளிவாக்குகின்றார். நாம் பேறுபெற்றவர்களாய், அதாவது ஆண்டவரால் ஆசிர்வதிக்கப்பட்டவர்களாக, உயிர்த்தெழும்போது
அவரிடமிருந்து கைம்மாறு பெறுகின்றவர்களாக வாழ, நாம் இவ்வுலகில் என்ன செய்ய வேண்டும்? என்பதை நமக்கு நம் ஆண்டவர்
சுட்டிக்காட்டுகின்றார்!

இன்று இயேசு நம்மைப் பார்த்து, நீங்கள் செய்த உதவிக்குக் கைம்மாறாக யார் திரும்ப உதவி செய்ய முடியாதோ அவர்களுக்கு உதவி செய்யுங்கள் என்கின்றார். செல்வரும் இலாசரும் உவமையில் ஆபிரகாம் செல்வரைப் பார்த்து, மகனே, நீ உன் வாழ்நாளில் நலன்களையே பெற்றாய் ; அதே வேளையில் இலாசர் இன்னல்களையே அடைந்தார். அதை நினைத்துக்கொள். இப்பொழுது அவர் இங்கே ஆறுதல் பெறுகின்றார் ; நீயோ மிகுந்த வேதனைப்படுகின்றாய் (லூக் 16:25) என்று கூறுவதைப் பார்க்கின்றோம்.

நாம் விண்ணகத்தை அடையவோ. விண்ணக எருசலேமை அடையவோ. பல்லாயிரக்கணக்கான வானதூதர் நடுவில் வாழவோ, நேர்மையாளர்களின் கூட்டத்தில் சேரவோ, புதியதோர் உடன்படிக்கையின் இணைப்பாளராகிய இயேசுவின் முன்னிலையில் நிற்கவோ (எபி 12:22-24) விரும்பினால். கைம்மாறு கருதாது பிறருக்கு உதவி செய்ய முன்வர வேண்டும். கைம்மாறு கருதாது. அதாவது எதையும் எதிர்பார்க்காது, நயாகரா நீர்வீழ்ச்சியைப் போல் நம்மால் வாழ முடியுமா?

நமக்கு முன்னே வாழ்ந்தவர் கோடி உண்டு! இதோ விவிலியத்திலிருந்து இரு உதாரணங்கள்!

அரசர்கள் இரண்டாம் நூலில் ஐந்தாம் இயலில் நாமான் நலம் பெற்றதைப் பற்றி நாம் படிக்கும்போது, செய்த புதுமைக்குக் கைம்மாறாக எதையுமே ஏற்றுக்கொள்ள விரும்பாத எலிசா இறைவாக்கினரைச் சந்திக்கின்றோம்!

சிரியா மன்னனின் படைத்தலைவனான நாமான், எலிசா கூறியபடியே ஏழுமுறை யோர்தான் நதியில் மூழ்கி நலமடைகின்றார். நலமடைந்தவுடன் அவர் எலிசாவிடம் வந்து, இதோ, உம் அடியான்: என் அன்பளிப்பை ஏற்றுக்கொள்ளும் (2 அர 5:15) என்றார். அதற்கு எலிசா, நான் பணியும் வாழும் ஆண்டவர் மேல் ஆணை! நான் எதையும் ஏற்றுக்கொள்ளேன் என்றார். நாமான் எவ்வளவோ வற்புறுத்தியும் அவர் அன்பளிப்பை ஏற்றுக்கொள்ளவில்லை (2 அர 5:16).

எலிசாவின் பணியாளன் கேசகி, எலிசாவிற்குத் தெரியாமல் நாமானிடமிருந்து அன்பளிப்புப் பெற்றபோது அவனைத் தொழுநோய் பிடித்துக்கொண்ட நிகழ்ச்சியை அரசர்கள் இரண்டாம் நூலில் ஐந்தாவது இயலில் நாம் படிக்கின்றோம் (2 அர 5:20-27).

கைம்மாறு கருதாது பிறருக்கு உதவி செய்த எலிசாவைக் கடவுள் மாபெரும் இறைவாக்கினராக, மக்களால் வானளாவப் புகழப்படும் தீர்க்கதரிசியாக உயர்த்தினார். எலிசா நோயினால் பாதிக்கப்பட்டு, சாகக்கிடந்தபொழுது இஸ்ரயேலின் அரசன் யோவாசு எலிசாவைப் பார்த்து, "என் தந்தாய், என் தந்தாய்! இஸ்ரயேலின் தேரே! அந்தத் தேரின் பாகனே ” என்று சொல்லி! கதறி அழுதான்.
எலிசா இற பிறகு ரது எலும்புகள்கூட புதுமை செய்தன (2 அர 13:21ஆ) என்று அறிகின்றோம்.

புதிய ஏற்பாட்டிலே எதையுமே மக்களிடமிருந்து எதிர்பார்க்காது தன்னிடம் உள்ளதைப் பிறரோடு பகிர்ந்துகொண்ட கன்னி மரியாவைச்
சந்திக்கின்றோம். மங்கள வார்த்தைத் திருநாளன்று தன் வாழ்வை உலகுக்குக் கொடுத்தார் (லூக் 1:26-38). கானாவூர் திருமணத்தின்
போது தம் மகன் வழியாகத் திராட்சை இரசத்தை திருமண வீட்டாருக்குக் கொடுத்தார் (யோவா 2:1-11). கல்வாரியில் பாவிகள் மீட்புப்பெற
தம் மகனையே கொடுத்தார் (யோவா 19:25-27).

வாழ்க்கையில் ஒருமுறைகூட அன்னை மரியா தனக்கென்று எதையும் பிறரிடமிருந்து எதிர்பார்க்கவில்லை! இப்படிப்பட்ட வாழ்வுக்குப் பரிசாக மரியாவிற்கு எத்தகைய பரிசுகளைக் கடவுள் தந்திருக்கின்றார் என்பதை ஊரறியும், உலகறியும். இன்று அன்னையின் பெயர் சொன்னால் எங்கும் அருள் மணக்கும், எட்டுத்திக்கும் புகழ் மணக்கும்; விண்ணகமும், மண்ணகமும் அருள்நிறை மரியே வாழ்க! என வாழ்த்தும்.

எதையும் எதிர்பார்க்காது பிறருக்கு உதவி செய்கின்றவர்களுக்கு மட்டுமே மறு உலகம் கிடைக்கும்; இரண்டாம் வாசகம் சுட்டிக்காட்டும் விண்ணகத்தில் நமக்கு இடம் கிடைக்கும்.

இம்மை போதும், மறுமையை யார் பார்த்தது? என்ற வெளிப்புலன்களுக்கு உட்பட்ட எண்ண அலைகளுக்குள் நாம் சிக்குண்டு வாழ்ந்தால், அந்தச் சிக்கலிலிருந்து விடுபட இன்றே நாம் தர்மம் செய்யப்புறப்படுவோம். தண்ணீர் நெருப்பை அணைப்பது போல, நம் உள்ளத்தில் பற்றி எரியும் சுயநலத்தை, பாவத்தைத் தர்மம் அணைக்கும் (சீஞா 3:30).

மேலும் அறிவோம்:

கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்(டு)
என்னாற்றும் கொல்லோ உலகு (குறள் : 211).

பொருள்: காலம் அறிந்து, உலக மக்கள் வாழ்வதற்காக வான்மழை பொழிகிறது. அதற்கு இவ்வுலகம் எத்தகைய மாற்று உதவியும் செய்வதில்லை. மழை பொழியும் மேகத்தைப் போன்றவர் உலக நலம் கருதும் ஒப்புரவாளர் ஆவர். அவர்கள் எதிருதவி எதையும் எதிர்பாராது
உதவுகின்றனர்.






ஒரு கணவர் ஓர் அறிஞரிடம் சென்று. "என் மனைவி நான் கிழிச்ச கோட்டைத் தாண்டக்கூடாது. அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்டதற்கு அறிஞர் கூறியது: "முதலில் கோட்டை எங்கே கிழிப்பது என்பதை உங்கள் மனைவியைக் கேட்டுக் கிழியுங்கள்."

இன்றைய உலகை அச்சுறுத்துவது ஆணவம் என்ற அரக்கன்; கலக்கப் போவது யார்? நீயா? நானா? என்ற அகம்பாவம். யார் பெரியவர்?: கணவரா? மனைவியா?: மாமியா? மருமகளா?; ஆளுங்கட்சியா ? எதிர்க்கட்சியா?: அருள்பணியாளர்களா? பொது நிலையினரா? இப்பின்னணியில் இன்றைய அருள்வாக்கு வழிபாடு தாழ்ச்சியின் அவசியத்தை எடுத்துரைக்கிறது. ஆணவத்தால் வீழ்ச்சியுற்ற உலகைத் தமது தாழ்ச்சியால் உயர்த்திய இயேசு கிறிஸ்து இன்றைய நற்செய்தியில் கூறுகிறார்: "தம்மை உயர்த்துபவர் யாவரும் தாழ்த்தப்பெறுவர்; தம்மைத் தாழ்த்துவோர் உயர்த்தப்பெறுவர்" (லூக் 14:11) கிறிஸ்துவே தாழ்ச்சிக்கு சிறந்ததோர் எடுத்துக்காட்டு. கிறிஸ்து தம்மையே வெறுமையாக்கி, சாவை. அதுவும் சிலுவைச் சாவை ஏற்றுக் கொள்ளும் அளவுக்குத் தம்மைத் தாழ்த்தினார்; எனவே கடவுள் அவரை எல்லார்க்கும் மேலாக உயர்த்தினார் (பிலி 2: 6 -11). அவரிடம் நாம் கற்றுக்கொள்ள வேண்டியது: "நான் கனிவும் மனத் தாழ்மையும் உடையவன் என்று என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள்" (மத் 11: 29).

தாழ்ச்சி என்பது ஒருவருடைய மனநிலையைப் பொறுத்தது. தாழ்ச்சியுடையவர் எப்போதும் கடவுளுக்குப் பணிந்திருப்பார்; ஏழை எளியவர்களுடன் தோழமை கொள்வார். கிறிஸ்து தமது விருப்பத்தை நிறைவேற்றாமல் தமது தந்தையின் விருப்பத்தையே நிறைவேற்றினார். வர் மேட்டுக்குடி மக்களோடு பழகாமல் ஏழை எளியவர்களுடன் பழகினார். விவிலியத்தில் 'அனாவிம்' என்ற வர்க்கத்தினர் இருந்தனர். அவர்களிடம் செல்வமோ செல்வாக்கோ இல்லை; அவர்கள் செல்வந்தர்களால் ஒடுக்கப்பட்டனர். இந்நிலையில் அவர்கள் முழுக்க. முழுக்கக் கடவுளையே சார்ந்திருந்தனர். இவர்கள் "கடவுளின் ஏழைகள்" என்று அழைக்கப்பட்டனர். இவர்களைப்பற்றி இன்றைய பதிலுரைப்பாடல் பின்வருமாறு கூறுகிறது: "கடவுளே நீர் நல்லவர்; எனவே ஒடுக்கப்பட்டோர்க்கு மறுவாழ்வு அளித்தீர்" (திபா 68: 10).

அனாவிம் வர்க்கத்தினர்தான் கிறிஸ்து தமது மலைப் பொழிவில் குறிப்பிடும் "ஏழையரின் உள்ளத்தோர்" (மத் 5:3) மற்றும் "கனிவுடையோர்" (மத் 5: 5). ஏழைகளும் சாந்தம் உள்ளவர்களும்தான் இறையாட்சியின் அருளடையாளங்கள்; விண்ணரசின் வாரிசுகள். இவர்களைப் பற்றித்தான் அன்னை மரியா பின்வருமாறு பாடியுள்ளார்; "கடவுள் தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துகிறார்; பசித்தோரை நலன்களால் நிரப்புகிறார்: செல்வரை வெறுங்கையராய் அனுப்பி விடுகிறார்" (லூக் 1:50-53). எனவே தாழ்ச்சியுள்ளவர்களாய் இருக்கவேண்டுமென்றால், அனாவிம் வர்க்கத்தினரின் மனநிலையைக் கொண்டிருக்க வேண்டும். இத்தகைய மனநிலை இல்லாதவர்கள் கடவுளுக்கு அன்னியமானவர்கள் என்பதை அறிக. இன்றைய முதல் வாசகத்தில் சீராக் கூறுகிறார்: "நீ பெரியவனாய் இருக்கும் அளவுக்குப் பணிந்து நட" (சீஞா 3:18). ஒருவர் எவ்வளவுக்கு உயர் பதவியில் இருக்கின்றாரோ அவ்வளவுக்குப் பணிவுள்ளவராக இருத்தல் வேண்டும்; அது செல்வர்களுக்கு மிகவும் தேவை; பணிவு என்பது செல்வர்களுக்குக் கூடுதலான செல்வம்; அது அழகுக்கு அழகு சேர்ப்பது போன்றதாகும் என்கிறார் திருவள்ளுவர்.

எல்லார்க்கும் நன்றுஆம் பணிதல்; அவருள்ளும்
செல்வர்க்கே செல்வம் தகைத்து (குறள் 125)

தாழ்ச்சி என்பது தாழ்வு மனப்பான்மை அல்ல. ஓர் அக்கா தன் தங்கையிடம் கூறியது: "நீ என் தங்கச்சி; நாமிருவரும் ஒரு கட்சி: நம்மால் ஒன்றும் செய்ய முடியாது: ஏனெனில் நாமிருவரும் பொட்டச்சி," இவ்வாறு சொல்வது பெண் குலத்தையே இழிவுபடுத்துவதாகும். மரியன்னையிடம் தாழ்ச்சி இருந்தது. எனவேதான் அவர் கூறினார்: "அவர் (கடவுள்) தம் அடிமையின் தாழ்நிலையைக் கண்ணோக்கினார்" (லூக் 1:48). ஆனால் மரியன்னையிடம் தாழ்வு மனப்பான்மை இல்லை. எனவேதான் அவர் தன்னைப் பற்றி இறைவாக்குரைத்தார்: "இது முதல் எல்லாத் தலைமுறையினரும் என்னைப் பேறுபெற்றவர் என்பர்" (லூக் 1:49).

தாழ்ச்சி என்பது உண்மை நிலை. உண்மை நிலை என்ன? " நான் நட்டேன்; அப்பொல்லோ நீர் பாய்ச்சினார்; கடவுளோ விளையச் செய்தார். நடுகிறவருக்கும் பெருமை இல்லை; நீர் பாய்ச்சுபவருக்கும் பெருமை இல்லை: விளையச் செய்யும் கடவுளுக்கே பெருமை" (1 கொரி 3:6-7). நாம் அடையும் வெற்றியைப்பற்றி இறுமாப்புக் கொள்ளாமல், அவ்வெற்றியை நமக்குக் கொடுத்த இறைவனுக்கு மகிமை அளிப்பதே உண்மையான தாழ்ச்சியாகும். அகநிலையில் தாழ்ச்சியுள்ளவர்களாக இருந்தால், புறநிலையில் ஏழை எளியவர்களுடன் பழகுவோம். இன்றைய நற்செய்தியில் கிறிஸ்து கூறும் அறிவுரை: "விருந்துக்குப் பணக்கார உறவினர்களையும் நண்பர்களையும் அழைக்காமல், ஏழை எளியவர்களையும் அழையுங்கள். அப்போது மறுமையில் கைம்மாறு கிடைக்கும்" (லூக் 14:12-14).ஒரு பணக்காரர் தனது திருமண வெள்ளிவிழாவை ஓர் அனாதை இல்லத்தில் கொண்டாடி, அனாதை சிறுவர், சிறுமிகளுக்கு விருந்தளித்தார். நாமும் அவ்வாறு செய்யலாமே! அதற்கு மனமாற்றம் தேவை. இன்றைய இரண்டாம் வாசகம் கூறுகிறது: "நாம் இருப்பது சீனாய் மலை அல்ல; மாறாக, சீயோன் மலை," முன்னது அடிமை வாழ்வையும், பின்னது உரிமை வாழ்வையும் குறிக்கின்றன. நாம் ஆணவம் என்னும் அடிமைத்தளையை உதறித் தள்ளிவிட்டு, பணிவு என்னும் உரிமை வாழ்வைக் கடைப்பிடிப்போம்.

"ஒருவர் கிறிஸ்துவோடு இணைந்திருக்கும்போது அவர் புதிதாகப் படைக்கப்பட்டவராய் இருக்கிறார்" ( 2 கொரி 5: 17).


தலையாயது தாழ்ச்சி  


நெப்போலியன் என்றாலே இன்றுகூட நிமிர்ந்து நிற்கும் வீர இள நெஞ்சங்கள். இப்படி ஓர் ஈர்ப்பு அவனுக்கு எப்பொழுதும் உண்டு. ஆனால் அவன் வாழ்க்கையோ...  

கண்கண்ட கிறிஸ்துவாக உலகில் திகழ்ந்த திருத்தந்தைக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டான். காலங்காலமாக பாப்பரசர் மணிமுடி சூடப் பெருமை கண்ட ஃபிரான்ஸ் நாட்டு மரபை மாற்றி தனக்குத்தானே முடி சூட்டிக் கொண்டு தனக்கு நிகர் யார் என்ற செருக்கில் இறுமாந்திருந்தான். கட்டிய மனைவியை ஒதுக்கிவிட்டு இன்னொருத்தியோடு குடும்பத்தின் புனிதத் தன்மைக்கே களங்கமாக இருந்தான். முறை கெட்ட அவன் வாழ்வால் பாப்பரசர் திருஅவையை விட்டே அவனைப் புறம்பாக்கினார். தள்ளுண்ட செய்தி கேட்டு அவர் வருந்தவில்லை. ஏளனமாகச் சிரித்தான். இறுமாப்போடு சிரித்தான். "இவர் என்னைப் புறம்பாக்கி விட்டால் என் கையிலோ என் வீரர்களின் கைகளிலோ உள்ள துப்பாக்கிகள் நழுவிக் கீழே விழுந்திடுமோ?” இந்த ஏளனச் சிரிப்பு தனக்குத்தானே விதித்துக் கொண்ட தீர்ப்பு என்பதை அவன் அப்போது உணரவில்லை. காலமும் வரலாறும் உணர்த்தின.  

வெற்றி மேல் வெற்றி பெற்று வீறுடன் ரஷ்ய-நாட்டை நோக்கிப் படையெடுத்தான். அப்போது ரஷ்யர்கள் எதிர்த்து நிற்கவில்லை. போரிடுவதில் புது முறையைக் கையாண்டனர். தங்கள் நாட்டின் எல்லைப்புறம் தொடங்கி தங்கள் ஊர்களை தகர்த்துக் கொண்டே பின்வாங்கி வந்தனர். அழிந்துபட்ட ஊர்களைக் கைப்பற்றியபோது நெப்போலியன் படைக்கான உணவு கிடைக்கவில்லை. தலைநகர் மாஸ்கோவை நெருங்கியபோது பனிக்காலம் வேறு தொடங்கியது. உலகிலேயே கடுமையானது ரஷ்யக் குளிர். உணவின்றிப் பசியால் அவதி ஒரு புறம். பனியின் குளிரால் நடுக்கம் ஒருபுறம். அவனை அறியாமலேயே அவனது வீரர்களை அறியாமலேயே அத்தனை பேருடைய கைகளிலிருந்தும் துப்பாக்கிகள் நழுவிக் கீழே விழுந்தனவாம். தனக்கு நிகர் யார் என்ற செருக்கின் விளைவு சீரழிவைத் தந்தது.  

இது நேற்று இன்று என்றல்ல, நெப்போலியன் காலத்தில் மட்டுமல்ல. படைப்பின் தொடக்கத்திலேயே எழுந்தது. எனக்கு நிகர் யார்? என்ற அறிவின் ஒளிதாங்கி லூசிபெரின் புரட்சிப் புலம்பலை எதிர்த்துப் பொங்கி எழுந்த மிக்கேல் அதிதூதரின் அறைகூவல்தானே "இறைவனுக்கு நிகர் யார்?” என்பது! “தங்கள் பார்வையில் ஞானிகள் என்றும், தங்கள் கணிப்பில் கூர்மதி வாய்ந்தவர்கள் என்றும் தங்களையே கருதுபவர்களுக்கு ஐயோ கேடு" (எசா. 5:21).  

சொல்லுவார்கள்: "கோபம் கொண்டவன் தன்னை இழக்கிறான். பொறாமை கொண்டவன் நண்பனை இழக்கிறான். கர்வம் கொண்டவன் கடவுளை இழக்கிறான்”. முற்றிலும் உண்மை.  ஆணவம் முன் செல்லும். அவமானம் பின்தொடரும். "முதலில் வருவது இறுமாப்பு. அதனை அடுத்து வருவது அழிவு. மேன்மையடையத் தாழ்மையே வழி " (நீ. மொ. 18:12, 11:2). இறையச்ச உணர்வோடு கூடிய தாழ்ச்சி அது. "தாழ்மை உள்ளவர்களுக்கும் ஆண்டவரிடம் அச்சமுள்ளவர்களுக்கும் கிடைக்கும் பயன் செல்வமும் மேன்மையும் நீடித்த ஆயுளுமாகும்” (நீ.மொ. 22:4)  

தலையாய பாவம் ஆணவம் என்றால் தலையாய புண்ணியம் தாழ்ச்சி. தரைக்குள் மறைந்திருக்கும் இந்த வேரிலிருந்துதான் தளிர்க்கின்றன விண்ணகப் பண்புகள் அனைத்தும்.  

தாழ்ச்சி என்பது உண்மை என்பார்கள். தன்னைப் பற்றிய நேர்மையான பார்வை (simply an honest look at myself). நான் இருப்பது போல என்னைப் பார்ப்பது. அது தாழ்வு மனப்பண்மை அல்ல. பிந்தியது தன்னைப் பற்றி நல்லெண்ணம் கொண்டிருப்பதில்லை. எனவே எதையும் விரக்தியுடன் நோக்கும் நமக்கோ பிறருக்கோ வளர்ச்சி தராது. தளர்ச்சியையே தரும்.  

தாழ்ச்சிக்கு இயேசுவே நமக்கு முன்னோடி - வழிகாட்டி. "கிறிஸ்து இயேசு கொண்டிருந்த மனநிலையே உங்களிலும் இருக்கட்டும்" (பிலிப். 2:5) என்பார் திருத்தூதர் பவுல். இயேசுவின் மனநிலை என்றாலே தாழ்ச்சிதான் - தாழ்ச்சி என்பதுதான் இயேசுவின் அடையாளம்.  

ஆணவத்தால்தான் அழிவுற்றான் மனிதன். அவனை மீட்க மாற்றாகத் தாழ்ச்சியைத்தானே இறைவன் தேர்ந்தெடுக்க முடியும்! மனிதத்தன்மையிலிருந்து இறைத்தன்மைக்கு உயர விழைந்தான் மனிதன் (விலக்கப்பட்ட கனியைத் திண்றதன் நோக்கம் அது). ஆனால் இறைவனோ இறைத்தன்மையிலிருந்து மனிதத் தன்மைக்குத் தன்னையே தாழ்த்தினார்.  

"கிறிஸ்து தம்மையே தாழ்த்தி ... சிலுவைச் சாவை ஏற்கும் அளவுக்கு கீழ்ப்படிந்தார். அதனால்தான் கடவுள் அவரை எல்லாருக்கும் மேலாக உயர்த்தி எப்பெயருக்கும் மேலான பெயரை அவருக்கு அருளினார்" (பிலிப். 2:6-11). தொடக்கக் காலத் திருஅவை திருவழிபாட்டில் பயன்படுத்திய எவ்வளவு பொருத்தமான புகழ்ப்பா இது!  இறைமகன் மனிதப் பிறப்பெடுத்த செயலில் மட்டுமல்ல. அவருடைய வாழ்வு முழுவதுமே தாழ்ச்சி என்பது ஒரு தொடர் நிகழ்வாயிற்று. அதனால் கிறிஸ்தவத் தாழ்ச்சி என்பது -  

  1. "நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன். ஆகவே என் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக்கொண்டு என்னிடம் கற்றுக் கொள்ளுங்கள்'' (மத். 11:29) என்று தன்னைக் குறித்துச் சொன்ன இயேசுவைப் போல் இருப்பது.
  2.  தன் சீடர்களின் காலடிகளைக் கழுவும் அளவுக்குத் தன்னைத் தாழ்த்தி, "தொண்டு ஏற்பதற்கல்ல, மாறாகத் தொண்டு ஆற்றுவதற்கு" (மார்க். 10:45) என்று பிறருக்காகவே வாழ்ந்த இயேசுவைப் போல் வாழ்வது.


பூமிதானம் என்ற புரட்சித் திட்டத்துக்கு வித்திட்டவர் வினோபா.1931ஆம் ஆண்டு அவருக்குக் காந்தி அண்ணலிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. அதைப் பிரித்துப் படிக்கும்போதே அவர் முகம் மாறியது. உடனே கடிதத்தைக் கிழித்து குப்பைத் தொட்டியில் போட்டார். அதைப் பார்த்த நண்பருக்கு ஆச்சரியம். அதிரிச்சியும்கூட. குப்பைக் கூடையில் கிடந்த கடிதத்துண்டுகளையெல்லாம் பொறுக்கி எடுத்து ஒன்றிணைத்துப் படித்துப் பார்த்தார். அதில் காந்தி அவர்கள் "தங்களைப் போன்ற மிகப் பெரிய மாமனிதரை நான் இதுவரை கண்டதில்லை” என்று எழுதியிருந்தார். “என்னங்க இது, பத்திரப்படுத்த    வேண்டிய ஒன்றை இப்படிக் கிழித்துப் போட்டீர்களே!" என்று கேட்க, அதற்கு வினோபா "பெரியவர் நம்மேல் வைத்திருக்கும் அன்பு காரணமாக சில தவறுகள் செய்யலாம். அதற்கு முக்கியத்துவம் தரக்கூடாது. பெருந்தன்மையோடு எழுதிய வார்த்தைகளை நான் பாதுகாக்க முனைந்தால் நாளடைவில் அவை என் மண்டைக்குள் புகுந்து என் மனதைப் பாழாக்கி விடாதா? அப்புறம் நான் அகந்தையால் ஒன்றுக்கும் உதவாதவன் ஆகிவிடுவேன்” என்றாராம். மாமனிதரே என்றாலும் மனிதர் தரும் பெருமை தேடாத மாண்பு என்னே! "நீ பெரியவனாய் இருக்கும் அளவுக்குப் பணிந்து நட... இறுமாப்புக் கொண்டோரின் நோய்க்கு மருந்து இல்லை. ஏனெனில் தீமை அவர்களுள் வேரூன்றி விட்டது" (முதல் வாசகம் சீராக். 3:18,28).

 'ஒருவர் மற்றவரோடு பழகும்போது எல்லாரும் மனத்தாழ்மையை ஆடையாக அணிந்திருங்கள். ஏனெனில் செருக்குற்றோரைக் கடவுள் இகழ்ச்சியுடன் நோக்குவார். தாழ்நிலையில் உள்ளவர்களுக்கோ கருணை காட்டுவார். ஆகையால் கடவுளுடைய வல்லமை மிக்க கரத்தின் கீழ் உங்களைத் தாழ்த்துங்கள் அப்பொழுது அவர் ஏற்ற காலத்தில் உங்களை உயர்த்துவார்" (1 பேதுரு 5:5,6).
 
 கிறிஸ்துவின் தாழ்ச்சியில் நாம் பங்கு பெற்றோமானால் கிறிஸ்துவின் மாட்சியிலும் பங்கு பெறுவோம். அடக்கம் அமரருள் உய்க்கும், அடங்காமை ஆரிருள் உய்த்துவிடும் என்பது வள்ளுவர் வாக்கு. நிறைகுடம் தழும்பாது என்பது பழமொழி. தாழ்ச்சி என்பது தாழ்நிலையன்று. உயர்ந்த குணம். தாழ்ச்சி நம்மை உயர்த்தும். தற்பெருமை நம்மை வீழ்த்தும். எனவேதான் “தம்மைத் தாமே உயர்த்துவோர் யாவரும் தாழ்த்தப் பெறுவர்; தம்மைத் தாமே தாழ்த்துவோர் உயர்த்தப் பெறுவர்” (லூக்.14:11) என்றார் இயேசு.

 ஓர் எச்சரிக்கை: தாழ்ச்சி என்பது கூட அகந்தையின் அடையாளமாகிவிடும் ஆபத்து உண்டு.

 உயர்வில் தாழ்ச்சி கொள்வோம்.
 தாழ்ச்சியால் உயர்வு காண்போம்.