Saturday 16 December 2017

திருவருகைக் காலம் முன்றாம் ஞாயிறு - 17-12-2017


திருவருகைக் காலம் முன்றாம் ஞாயிறு - 17-12-2017

இன்றைய வாசகங்கள்:


காலி மனத்தோடு காத்திருப்போம்

மகிழ்வுட்டும் மறையுரை
குடந்தை அந்தோணிசாமி


இதோ திருமுழுக்கு யோவான் தன்னைப் பற்றி என்ன சொல்கின்றார் பாருங்கள் !
நாள் மெசியா அல்ல (யோவா 1:19). நான் எலியா அல்ல (யோவா :2அ). நான் வரவேண்டிய இறைவாக்கினர் அல்ல (யோவா 1:2 ஆ) எனக்குப் பின்வருபவர் என்னைவிட வலிமை மிக்கவர் (மாற் 1:7).
எனக்குப்பின் வருபவரின் மிதியடிவாரை அவிழ்க்கக்கூட எனக்குத் தகுதியில்லை (யோவா :27).
எனக்குப்பின் வருபவர் என்னைவிட முன்னிடம் பெற்றவர் [ Gulumsum ill:3094).
வரவிருப்பவரை வெளிப்படுத்தவே நான் வந்துள்ளேன் (யோவா l:3).
நான் மெசியாவிற்கு முன்னோடியாக அனுப்பப்பட்டவன்(யோவா 3:28).
நம் நடுவே வந்திருப்பவரின் செல்வாக்குப் பெருகவேண்டும்; எனது செல்வாக்குக் குறையவேண்டும் (யோவா 3:30).
திருமுழுக்கு யோவான்தன்னைப் பற்றிக் கூறியுள்ளதையெல்லாம்
கூட்டி, பெருக்கி, கழித்து, வகுத்துப்பார்த்தால் நமக்கு ஓர் உண்மை வெளிப்படும். அது என்ன உண்மை? தூய ஆவியாரால் அருள்பொழிவு
செய்யப்பட்ட ஆண்டவராகிய இயேசுவே! நான் ஒன்றுமில்லாதவன்,
வெறுமையே உருவானவன் என்று திருமுழுக்கு யோவான் சொல்லாமல்
சொன்னார்.
தன்னையே வெறுமையாக்கிக் கொண்டு, தன்னிடம் வருபவரின் நிறை ஆசியைப் பெற திருமுழுக்கு யோவான் தாழ்ச்சி நிறைந்த உள்ளத்தோடு, காலி மனத்தோடு காத்திருந்தார். இயேசுவுக்கு வெறுமை என்றால் மிகவும் பிடிக்கும். நரிகளுக்குப் பதுங்கு குழிகளும், வானத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு, மானிட மகனுக்கோ தலைசாய்க்கக்கூட இடமில்லை (லூக் 9:58) என்றவர் இயேசு.
எல்லாரையும்விட அவரையே நாம் அதிகம் அன்பு செய்ய வேண்டும் (மத் 10:37) என்று விரும்புகின்றார் இயேசு.
என் பொருட்டுத் தம் உயிரை இழப்போரே அதைக் காத்துக்கொள்வர் (மத் 10:39) என்றவர் இயேசு.
தன்னையே வெறுமையாக்கிக் கொண்டவர் இயேசு (பிலி 2:7).
தனக்குப் பிரியமான ஒன்றைத் தந்த திருமுழுக்கு யோவானுக்கு எண்ணற்ற வரங்களை இயேசு அளித்தார்.
தனக்கு முன் சென்று மனிதர்களின் மனதைச் செம்மைப்படுத்தும் முன்னோடியாக திருமுழுக்கு யோவானைத் தேர்ந்துகொண்டார் இயேசு (யோவா 1:23).
தன்னை உலகுக்கு அறிமுகப்படுத்திவைக்கும் பேற்றினைத் திருமுழுக்கு யோவானுக்கு இயேசு தந்தார் (யோவா 1:29).
தனக்குத் திருமுழுக்குக் கொடுக்க திருமுழுக்கு யோவானை இயேசு தேர்ந்துகொண்டார் (யோவா 1:32-34).
தன்னை இறைமகன் என அறிந்துகொள்ளும் ஞானத்தைத் திருமுழுக்கு யோவானுக்கு இயேசு தந்தார் (யோவா :34).
நம்மைச் சந்திக்க வரும் இயேசு திருமுழுக்கு யோவானை ஆசிர்வதித்ததுபோல நம்மையும் ஆசிர்வதிக்க விரும்பினால், அமைதி அருளும் ஆண்டவரால் நமது உள்ளமும், ஆன்மாவும், உடலும் முழுமை பெற விரும்பினால் (1 தெச 5:23-24), வெறுமை நிறைந்த, தாழ்ச்சி நிறைந்த காலியான மனத்தோடு இயேசுவுக்காகக் காத்திருக்க வேண்டும்.


நீங்கள் அறியாத ஒருவர்

அருள்பணி ஏசு கருணாநிதி மதுரை

நம் சமகாலத்தில் வாழ்ந்த சிறந்த ஆன்மீகவாதி இயேசுசபை அருள்தந்தை அந்தோனி டிமெல்லோ அவர்கள் 'சாதனா' என்ற நிறுவனத்தின் வழியாக ஜென் வகை புத்தமதத்தை கிறிஸ்தவம் கலந்து கொடுத்து தம் புதிய சிந்தனைகள் வழியாக இந்த உலகிற்கு அறிமுகமானவர். அவர் தன் 'ஒன் மினிட் விஸ்டம்' என்ற நூலில் பின்வரும் நிகழ்வை பதிவு செய்கின்றார்:
புத்த மடாலயம் ஒன்றில் நிறைய புத்த பிக்குகள் தங்கியிருந்தனர். அவர்களுக்குள் அடிக்கடி சண்டை சச்சரவுகள் வந்துகொண்டே இருந்தன. ஒருநாள் வேறொரு நாட்டுப் புத்த பிக்கு ஒருவர் இந்த மடாலயம் வழியே பயணம் செய்ய நேர்கிறது. தன் பயணம் நீண்ட பயணம் என்பதால் இந்த மடாலயத்தில் தங்கி ஓய்வெடுத்துவிட்டுப் புறப்படலாம் என இங்கே தங்குகின்றார். அங்கே நடந்த சண்டை சச்சரவுகளால் இரவில் அவரால் நிம்மதியாக தூங்க முடியவில்லை. காலையில் எழுந்து தன் பயணத்தைத் தொடருமுன் மடாலயத்தில் இருந்த புத்த பிக்குகளில் ஒருவரை அழைத்து, 'புத்தர் இங்கே இருக்கின்றார். நீங்கள் அவர்களை அறியவில்லையா?' என்று கேட்டு விட்டுத் தன் வழியே புறப்பட்டுச் செல்கின்றார். 'புத்தர் நம் நடுவே இருக்கின்றார்' என்ற செய்தி அனைத்து பிக்குகள் மத்தியிலும் வேகமாகப் பரவுகின்றது. 'இவர் புத்தராக இருப்பாரோ!' 'அவர் புத்தராக இருப்பாரோ!' என்று ஒருவர் மற்றவரை நினைத்துக்கொண்டு ஒருவருக்கொருவர் அன்புடனும், நட்புடனும், மரியாதையுடனும் பழகத் தொடங்குகின்றனர். அந்த மடலாயம் தான் தொலைத்த மகிழ்வை மீண்டும் கண்டுகொள்கிறது.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். யோவா 1:6-8,19-28) எருசலேமிலுள்ள யூதர்கள் குருக்களையும் லேவியர்களையும் யோவானிடம் அனுப்பி, 'நீர் யார்?' என்று கேட்டபோது, இறுதியாக, ' நீங்கள் அறியாத ஒருவர் உங்களிடையே நிற்கிறார்' என்று இயேசுவைக் குறித்து திருமுழுக்கு யோவான் சான்று பகர்கின்றார். 'அறிதல்' என்பது யோவான் நற்செய்தியில் மிக முக்கியமான வார்த்தை. ஏனெனில் 'அறிதல்' என்பது ஒருவருக்கு நிலைவாழ்வைக் கொடுக்கும் என்பது யோவான் நற்செய்தியாளரின் புரிதல். இதை நாம் யோவா 17:3ல் வாசிக்கின்றோம்: 'உண்மையான ஒரே கடவுளாகிய உம்மையும் நீர் அனுப்பிய இயேசு கிறிஸ்துவையும் 'அறிவதே' நிலைவாழ்வு.'
திருவருகைக்காலத்;தின் மூன்றாம் ஞாயிற்றை நாம் 'மகிழ்ச்சி ஞாயிறு' என்று கொண்டாடுகின்றோம். இன்றைய திருப்பலியின் தொடக்கப் பல்லவி 'கௌதேத்தே' ('மகிழ்ந்திருங்கள்') என்று சொல்வதால் இந்த ஞாயிறு 'கௌதேத்தே' ஞாயிறு அல்லது மகிழ்ச்சி ஞாயிறு என அழைக்கப்படுகின்றது.
இன்றைய முதல் வாசகத்தில் (காண். எசாயா 61:1-2,10-11) 'மகிழ்ச்சி' என்ற கருத்துரு, 'பெருமகிழ்ச்சி,' 'பூரிப்பு,' என்ற நேரடியான வார்த்தைகளாலும், 'விடுதலை,' 'நேர்மை,' 'துளிர்த்தல்,' 'முளைத்தல்' போன்ற மறைமுகமான வார்த்தைகளாலும் சொல்லப்படுகிறது. இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். 1 தெச 5:16-24) தூய பவுல் 'மகிழ்ச்சி' என்ற கருத்துருவை 'எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருங்கள்' என்ற அறிவுரை வழியாக முதன்மைப்படுத்துகின்றார். நற்செய்தி வாசகத்தில் 'மகிழ்ச்சி' என்ற வார்த்தை நேரடியாக இல்லை என்றாலும் திருமுழுக்கு யோவானின் சான்று பகர்தல் அவரை மகிழ்ச்சிநிறை மனிதராக முன்வைக்கின்றது.
இன்றைய வாசகங்களின் பின்புலத்தில் மகிழ்ச்சிக்கான வழி என்ன என்பதைப் பார்ப்போம்:
1. ஆண்டவரே மகிழ்ச்சியின் ஊற்று
இன்றைய முதல் வாசகத்தில் 'மகிழ்ச்சி' என்பது ஆண்டவர் வழங்கும் கொடையாகத் திகழ்கின்றது. அதாவது, பாபிலோனியாவில் அடிமைப்பட்டுக் கிடந்த மக்கள் நாடு திரும்பிய பின் நடக்கும் நிகழ்வுகளை இறைவாக்குரைக்கின்ற அல்லது பதிவு செய்கின்ற எசாயா, மூன்றாம் ஊழியர் பாடலில் ஆண்டவரின் அருள்பொழிவு தன்னிடம் இருப்பதாக உருவகிக்கின்றார். இது மெசியாவைக் குறித்த முன்னறிவிப்புப் பாடலாக இருந்தாலும், இங்கே இறைவாக்கினரும், இஸ்ரயேல் மக்கள் ஒவ்வொருவரும் தங்களையே 'ஊழியர்' என்று கருதிக்கொள்ள அழைக்கப்படுகின்றனர்.
ஆண்டவரால் அருள்பொழிவு பெற்ற நிலையில் இருக்கும் ஒவ்வொருவரும் 'ஒடுக்கப்பட்டோருக்கு நற்செய்தி அறிவிக்கவும், உள்ளம் உடைந்தோரைக் குணப்படுத்தவும், சிறைப்பட்டோருக்கு விடுதலை பறைசாற்றவும், கட்டுண்டோருக்கு விடிவைத் தெரிவிக்கவும், ஆண்டவர் அருள்தரும் ஆண்டினை முழக்கமிட்டு அறிவிக்கவும்' அழைப்பு பெறுகின்றார். இப்படிப்பட்ட பணியைச் செய்யும் யாவரும் கடவுளின் மகிழ்ச்சியைக் கண்டுகொள்கின்றனர்.
இப்படி பணி செய்யும் ஒருவர், 'ஆண்டவரில் நான் மகிழ்ச்சி அடைவேன். என் கடவுளில் என் உள்ளம் பூரிப்படையும்' என்று தன் மகிழ்ச்சியை ஆண்டவரில் கண்டுகொள்வார்.
இவ்வளவு நாளாக இருளிலிலும், இறப்பின் பிடியிலும் நின்ற இஸ்ரயேல் இப்போது 'மலர்மாலை அணிந்த மணமகன்போலும், நகைகள் அணிந்த மணமகள் போலும்' ஜொலிக்கிறது. 'மலர்மாலை அணிதலும்,' 'நகைகள் அணிதலும்' நிறைவையும், தயார்நிலையையும் குறிக்கிறது. இங்கே மணமகன் அணிசெய்யப்படுவது 'விடுதலை' மற்றும் 'நேர்மை' என்னும் ஆடைகளால். 'விடுதலை' என்பது கட்டின்மையையும், 'நேர்மை' என்பது 'ஆண்டவரின் நீதியையும்' குறிக்கிறது.
இவ்வாறாக ஆண்டவர் இஸ்ரயேலை தன் ஊழியராக ஏற்று அருள்பொழிவு செய்து அதற்கு தன் விடுதலை மற்றும் நேர்மை வழியாக மகிழ்ச்சியைக் கொடையாகக் கொடுக்கிறார்.
2. மகிழ்ச்சியின் ஃபார்முலா
'எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருங்கள். இடைவிடாது இறைவனிடம் வேண்டுங்கள். எல்லாச் சூழ்நிலையிலும் நன்றி கூறுங்கள்' என்பதே கிறிஸ்து இயேசு வழியாக கடவுள் வெளிப்படுத்திய திருவுளம் என இன்றைய இரண்டாம் வாசகத்தில் அறுதியிட்டுக் கூறுகிறார் தூய பவுல். இந்த மூன்று சொற்றொடர்களை நாம் நன்கு கவனித்தோமெனில், 'இறைவனிடம் வேண்டுவதற்கும்,' 'நன்றி கூறுவதற்கும்' அடிப்படையாக இருக்கும் ஓர் உணர்வு 'மகிழ்ச்சி.'
இந்த மகிழ்ச்சிக்கான மூன்றடக்கு ஃபார்முலா ஒன்றைக் கொடுக்கிறார் பவுல்:
அ. அனைத்தையும் சீர்தூக்கிப் பாருங்கள்.
ஆ. நல்லதைப் பற்றிக் கொள்ளுங்கள்.
இ. தீயதை விட்டு விலகுங்கள்.
ஆக, நம் வாழ்க்கை நிகழ்வுகள் அல்லது தேர்வுகள் ஒவ்வொன்றிலும் இந்த மூன்று அடுக்கு ஃபார்முலாவை பொருத்திப்பார்த்துச் செயல்பட்டால் அங்கே மகிழ்ச்சி தானாக வந்துவிடும். இந்த மூன்றடுக்கில் ஏதாவது ஒன்றில் நாம் தடுமாறும்போதுதான் மகிழ்ச்சியை இழந்துவிடுகிறோம்.
அனைத்தையும் சீர்தூக்கிப் பார்க்காமல் நாம் அவசரப்படும்போதும், நல்லதைப் பற்றிக்கொள்வதற்குப் பதிலாக தீயதைப் பற்றிக்கொள்ளும்போதும், விட்டு விலக வேண்டிய தீமையிடம் ஒட்டி உறவாடும்போதும் நான் என் மகிழ்ச்சியை இழக்கிறேன்.
இந்த இடத்தில் நாம் மகிழ்ச்சிக்கும், இன்பத்திற்கும் உள்ள வித்தியாசத்தையும் நாம் உணர்ந்துகொள்ள வேண்டும். சில நேரங்களில் நம் தவறான முடிவுகள் அல்லது தேர்வுகளின் போது வெளிப்படும் சின்ன இன்ப உணர்ச்சியை நாம் மகிழ்ச்சி உணர்வாக எடுத்துக் குழப்பிக் கொள்கின்றோம். இது தவறு.
3. நீங்கள் அறியாத ஒருவர்
இயேசு, திருமுழுக்கு யோவான், குருக்கள், லேவியர் அனைவரும் ஒரே காலம் மற்றும் இடத்தில் வாழ்ந்தாலும் திருமுழுக்கு யோவான் மட்டுமே இயேசுவை அறிந்துகொள்கிறார். ஏன் திருமுழுக்கு யோவானுக்கு மட்டும் இது சாத்தியமானது? அவருடைய பிறப்பும் முன்னறிவிக்கப்பட்டது என்பதலா? இல்லை. அதையும் தாண்டிய ஏதோ சில காரணிகள் இருந்திருக்க வேண்டும்.
அந்தக் காரணிகளில் மூன்றை நாம் இன்றைய நற்செய்தி வாசகத்திலிருந்து நம்மால் எடுத்துக்கொள்ள முடியும்:
அ. தன்னை அறிந்தவர்
திருமுழுக்கு யோவான் தான் யார் என்று முதலில் தெளிவாக அறிந்திருந்தார். 'நான் மெசியா அல்ல,' 'நான் எலியா அல்ல,' 'நான் இறைவாக்கினர் அல்ல' என தான் என்னவெல்லாம் 'இல்லை' என்பதை முதலில் அறிந்திருக்கின்றார். தான் இல்லாத ஒன்றை தான் என்று முகமூடி அணிந்து கொள்ள அவருக்கு விருப்பமில்லை. ஏனெனில் முகமூடிகள் சில மணிநேரங்கள் நிலைக்கக் கூடியவை. முகமூடிகள் சிலரை சில நேரம் ஏமாற்றலாம். ஆனால், எல்லாரையும் எல்லா நேரமும் ஏமாற்ற முகமூடிகள் திறமையற்றவை. அவை கிழிந்து போகும். அல்லது அவை கிழிக்கப்படும். தனக்கு நன்மை தரக்கூடிய அந்த முகமூடிகள்கூட தனக்கு வேண்டாம் என நினைக்கிறார் திருமுழுக்கு யோவான்.
ஆ. தன் வரையறை அறிந்தவர்
'அவர் அந்த ஒளி அல்ல. மாறாக, ஒளியைக் குறித்து சான்று பகர வந்தவர்' என திருமுழுக்கு யோவானைப் பற்றி நற்செய்தியாளர் யோவான் எழுதுகின்றார். ஒளியைக் குறித்துச் சான்று பகர்கிறவர் ஒளிக்கு அருகில்தான் நிற்க வேண்டும். ஆக, ஒளிக்கும் சான்று பகர்பவருக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. இருந்தாலும் தன்னை ஒளியிலிருந்து விலக்கி நிற்கின்றார் திருமுழுக்கு யோவான். ஆக, தன் வரையறையை தானே வகுத்ததோடல்லாமல் அந்த வரையறைக்குள் தன்னை நிறுத்திக்கொள்வதில் உறுதியாயிருக்கிறார்.
இ. மிதியடிவாரை அவிழ்க்க
மிதியடிவாரை அவிழ்ப்பது என்பது மணமகன் நிலையை ஏற்பதற்குச் சமம். யூதர்களின் லெவிரேட் திருமண முறையில் திருமணம் முடிக்கத் தயாராகும் ஆண் அதற்குச் சாட்சியாக தன் மிதியடிகளைக் கழற்றிக் கொடுப்பார் (காண். ரூத்து 4:7). தான் மிதியடிவாரை அவிழ்க்கத் தகுதியற்றவர் என்று சொல்வதன் வழியாக தான் மணமகன் அல்ல என்பதையும் வெளிப்படையாகக் கூறுகின்றார் திருமுழுக்கு யோவான்.
இந்த மூன்று நிலைகளிலும் இவர் தெளிவாக இருந்ததால் 'அவர்கள் அறியாத ஒருவரை' திருமுழுக்கு யோவான் அறிந்துகொள்கின்றார்.
இவ்வாறாக, இன்றைய இறைவாக்கு வழிபாடு நமக்கு மூன்று வாழ்க்கைப் பாடங்களைக் கற்றுக்கொடுக்கிறது:
1. மகிழ்வனைத்தின் ஊற்று அவரென்று உணர்வது
2. மூன்றுஅடுக்கு மந்திரத்தைக் கையாளுவது
3. அறிவது - தன்னை, தன் வரையறையை, பிறரை
இன்று 'நாம் அறியாத ஒன்றாக' மகிழ்ச்சி விரலிடுக்களில் ஒளிந்து மறைந்துவிடுகிறது.
திருமுழுக்கு யோவான் நமக்கு மாதிரியாக நிற்கட்டும் - மகிழ்ச்சிக்கு!






இயேசுவுக்கு சான்று பகர்ந்த திருமுழுக்கு யோவான்

அருள்பணி அந்தோணிராஜ் -பாளை மறைமாவட்டம்

ஒருமுறை ஒரு பங்குத்தளத்தில் தியானப் பிரசங்கம் நிகழ்த்துவதற்காக இறையடியார் பரதேசி பீட்டருக்கு அழைப்பு வந்தது. அப்போது அவர், தான் பிரசங்கம் செய்ய இருக்கும் நாளுக்கு முந்தைய நாளிலேயே அங்கு வருவதாக அந்தப் பங்குத்தந்தையிடம் சொன்னார், பங்குத்தந்தையும் அதற்குச் சரியென்று ஒத்துக்கொண்டார்.
தியான பிரசாங்கத்திற்கான வேலைகளும் வெகுவிமரிசையாக நடந்தன. ஆனால் பரதேசி பீட்டர், தான் கூறியபடி அன்றையநாளில் வரமுடியவில்லை. இரவு நீண்டநேரம் ஆகிவிட்டது,
இனி அவர் காலையில்தான் வருவார் என்று பங்குதந்தையும் கோவில் கதவுகளை அடைத்துவிட்டு தூங்கச் சென்றுவிட்டார். ஆனால் பரதேசி பீட்டர் வந்த பேருந்து விபத்துக்குள்ளாக, விபத்து நடந்த இடத்தில் இருந்து வேறு பேருந்து கிடைக்காததால் அவர் நடந்தே நடு இரவில் ஆலயம் வந்து சேர்ந்தார். அங்கு ஆலயம் பூட்டப்பட்டு இருந்தது. வெளிக்கதவும் பூட்டப்பட்டு இருந்தது. காவலரையும் காணவில்லை. எனவே, அவர் வெளிக் கதவிலே தலைவைத்து நன்கு தூங்கிவிட்டார்.
அதிகாலையில் திருப்பலிக்கு மக்கள் வருவார்கள் என்பதால் காவலர் தூங்கி எழுந்து கதவைத்திறந்தார். அங்கு பரதேசி பீட்டர் எளிய கோலத்தில் ஒரு பரதேசி போன்று தூங்கிக்கொண்டு இருந்தார். அவரை இதுவரை பார்த்திராத காவலர் அவரைத் தட்டி எழுப்ப, அசதி மிகுதியால் அவர் எழுந்திரிக்க முடியவில்லை. அதனால் அந்த காவலர் அவரை கோபத்தோடு காலால் எத்தி, “இன்று இங்கு எவ்வளவு பெரிய மனிதர் வர போகின்றார்?, நீ இங்குவந்து இப்படித் தூங்கிகொண்டு இருக்கின்றாய்?” என்றார். அதற்கு அவர், “வருவோர் போவோருக்கு தொல்லை இல்லாமல் நான் இங்கு சற்றுத்தள்ளி சிறிதுநேரம் படுத்துக்கொள்கிறேன்” என்றார். அதற்கு அந்த காவலாளி அவர் வைத்திருந்த சோல்னா பையை பறித்துத், தூர எறிந்தார். அப்போது அதற்குள் இருந்த திருமறை நூலும் வெளியே வந்துவிழுந்தது. பின் காவலாளி வேறு பக்கம் சென்றுவிட்டார்.
இவர் கீழே விழுந்த திருமறை நூலை எடுத்து தட்டிக்கொண்டு இருக்கும் வேளையில், இவர் வருகின்றாரா என்று பார்க்க வந்த குருவானவர் நடந்த நிகழ்ச்சிகள் தெரியாமல் அவரை பார்த்து சந்தோசம்கொண்டு, அவரை உள்ளே அழைத்துச்சென்று தகுதியான ஓய்வு எடுக்க, அறையொன்றை கொடுத்து ஓய்வு எடுக்கச் சொல்லிவிட்டு ஆலயத்திற்கு சென்றார்.
தியான பிரசங்கம் சரியாக பத்து மணிக்கு ஆரம்பமானது. ஆலயத்தின் பீடத்தருகில் பரதேசி பீட்டர் பிரசங்கிக்க உள்ளே வந்துநின்றார். அப்போது பிரசங்கியார் யார் என்பதைக் காண விரும்பிய காவலாளி ஆலயத்தின் உள்ளே சென்று பார்க்கும்போதுதான், யாரை காலால் உதைத்து வெளியே தள்ளினாரோ அவர்தான் அங்கு அனைவராலும் பாராடடப்பட்டுக்கொண்டு இருந்தார். அதைக்கண்டு நடுங்கிப்போன காவலாளி, உடனே பங்கு தந்தையிடம் சென்று நடந்ததை கூறி கதறி அழுதார். பங்கு தந்தைக்கும் கவலையாகி போய்விட்டது. மாலை வேளையில் பிரசங்கம் முடிந்தவுடன் காவலாளி பரதேசி பீட்டரின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார். அப்போது பரதேசிப் பீட்டர் அவரிடம், “நான் கடவுளல்ல, கடவுளைப் பற்றி எடுத்துத்துரைக்கும் ஒரு சாதாரண மனிதர், எதற்காக என்னுடைய காலில் விழுகிறாய்?” என்று சொல்லி அவரை மன்னித்து, இதைக்குறித்து தான் ஒன்றும் கவலைப்படவில்லை என்று சொல்லி அங்கிருந்த எல்லோரையும் பரவசப் படுத்தினார்.
“நான் கடவுளல்ல, கடவுளைப்பற்றி எடுத்துரைக்கும் ஒரு சாதாரண மனிதர்” என்ற இறையடியார் பரதேசிப் பீட்டர் வார்த்தைகள் நமது சிந்தனைக்கு உரியது. திருவருகைக் காலம் மூன்றாம் ஞாயிற்றுக்கிழமையான இன்று நாம் படிக்கக்கேட்ட வாசகங்கள் தரும் சிந்தனை ‘திருமுழுக்கு யோவானைப் போன்று இயேசுவுக்கு சான்று பகர்ந்து வாழ்வோம்’ என்பதாகும். நாம் எப்படி இயேசுவுக்கு சான்றுபகர்ந்து வாழ்வது எனச் சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.
திருவருகைக் காலம் தொடங்கியதிலிருந்தே நாம் திருமுழுக்கு யோவானைக் குறித்து அதிகமாக வாசிக்கின்றோம். இன்றைய நாளிலும் நாம் அவரைக் குறித்துத்தான் சிந்தித்துப் பார்க்க இருக்கின்றோம். இன்றைய நற்செய்தி வாசகத்தில் எருசலேமிலுள்ள யூதர்கள் அனுப்பிய குருக்களும் லேவியர்களும் நீர் யார்? என்று கேட்கின்றபோது அவர் நான் மெசியாவும் அல்ல, எலியாவும் அல்ல மாறாக மெசியாவைக் குறித்து சான்றுபகர வந்தவன் என்று மிகத் திட்டவட்டமாகக் கூறுகின்றார். வீண் பெருமைகளையும், அடுத்தவருக்குச் சேரவேண்டிய பேரையும் புகழையும் தானே அனுபவிக்கும் மக்களுக்குக் மத்தியில், திருமுழுக்கு வித்தியாசமான மனிதராகத் திகழ்கின்றார். அவர் தான் உண்மையிலே மெசியா அல்ல, மெசியாவைக் குறித்துச் சான்று பகரவந்தவன் என்ற முழங்குகின்றார்.
திருமுழுக்கு யோவான் நினைத்திருந்தால், தான்தான் மெசியா எனச் சொல்லியிருக்கலாம், மக்களும் அதை நம்பி இருப்பார்கள். ஏனென்றால் அந்தக் காலத்தில் வாழ்ந்த மக்கள் மெசியாவின் வருகைக்காக ஆவலோடு எதிர்பார்த்திருந்தார்கள். அத்தகைய சூழலை தனக்குச் சாதகமாக பயன்படுத்திக்கொண்டு திருமுழுக்கு யோவான் தன்னை மெசியா என மக்களிடத்தில் கூறியிருக்கலாம். ஆனால் அவர் அப்படிச் செய்யவில்லை. அவர் தான் ஒளியைக் குறித்து சான்றுபகர வந்தவனே ஒழியே, தான் ஒளி அல்ல என்பதைத் திட்டவட்டமாக அறிவிக்கின்றார்.
திருமுழுக்கு யோவானின் இத்தகைய ஒரு பெருந்தன்மைக்குப் பின்னால் இருந்த மனநிலை என்னவென்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். நிச்சயமாக தன்னை முழுமையாக ஏற்றுக்கொண்ட, முழுமையாக அன்புசெய்த ஒருவரால்தால் இப்படிச் செய்யமுடியும்.
திருமுழுக்கு யோவான் தன்னை முழுமையாக ஏற்றுக்கொண்டார்; முழுமையாக அன்புசெய்தார். அதனால்தான் அவர் அப்படிச் சொன்னார். ஆகவே, இறைப்பணியைச் செய்யும் ஒவ்வொருவரும் தன்னை முழுமையாக ஏற்றுக்கொள்ளக்கூடியவராகவும், முழுமையாக அன்பு செய்யக்கூடியவராக இருக்கவேண்டும். தன்னை ஏற்றுக்கொள்ளாத ஒருவரால் பிறரையும் ஏற்றுக்கொள்ள முடியாது, பிறரை அன்புசெய்யமுடியாது ஆழமான உண்மை.
திருமுழுக்கு யோவானிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டிய அடுத்த பாடம்: தன்னை முன்னிலைப்படுத்தாமல், தன் தலைவனாகிய இயேசுவை முன்னிலைப்படுத்தக் கூடிய ஒரு பண்பாகும். ஒரு இறையடியாருக்கு இருக்கவேண்டிய தகுதியே இதுதான். ‘கடவுளின் மகிமையையும், பெருமையையும் விளங்கிச் செய்ய தான் ஒரு கருவி என்ற மனப்பான்மையோடு வாழவேண்டும். இதற்கு அடிப்படையாக இருப்பது தாழ்ச்சி என்ற குணம்தான். திருமுழுக்கு யோவான் சொல்கிறார், “நீங்கள் அறியாத ஒருவர் உங்களிடையே நிற்கிறார்; அவர் எனக்குப்பின் வருபவர்; அவருடைய மிதியடி வாரை அவிழ்க்கக்கூட எனக்குத் தகுதியில்லை” என்று. இப்படியெல்லாம் சொல்வதற்கு திருமுழுக்கு யோவானிடத்தில் நிறைய தாழ்ச்சி இருந்திருக்கவேண்டும். எனவே, இறையடியார் ஒவ்வொருவரும், இறைப்பணி செய்கின்ற ஒவ்வொருவரும் ‘தான் ஒன்றுமில்லை, எல்லாப் புகழும் இறைவனுக்கே’ என்ற மனநிலையோடு வாழவேண்டும். அதற்குத் தான் என்ற ஆணவத்தை அல்ல, தாழ்ச்சியை ஆடையாக அணியவேண்டும்.
ஒரு ஞானியிடத்தில் சீடராகச் சேர்வதற்கு இளைஞர் ஒருவர் தன்னுடைய இரண்டு கைகளிலும் தாமரை மலர்களை ஏந்தி வந்தார். அப்போது அந்த ஞானி அவரிடத்தில், “கீழே போடு” என்று கத்தினார். தாமரை மலரை இடது கையில் வைத்திருப்பது அமங்களம் என்பதற்காகத்தான் ஞானி கீழேபோடு என்று சொல்கிறாரோ என நினைத்த அந்த இளைஞர், தன்னுடைய இடது கையிலிருந்த தாமரை மலரைக் கீழே போட்டார். அப்போதும் அந்த ஞானி ‘கீழே போடு’ என்று கத்தினார். தன்னுடைய வலது கையில் இருக்கும் தாமரை மலரையும் கீழே போடச் சொல்கிறாரோ என்னவோ என நினைத்த அந்த இளைஞர் தன்னுடைய வலது கையிலிருந்த தாமரை மலரையும் கீழே போட்டார். அப்போதும் ஞானி அந்த இளைஞரைப் பார்த்து ‘கீழே போடு என்று கத்தினார்.
கையிலிருந்த இரண்டு மலர்களையும் கீழேபோட்டாயிற்று. இன்னும் எதைக் கீழே போடுவது என்று குழம்பிப்போன இளைஞர் ஞானியிடத்தில், “இன்னும் எதைக் கீழே போடுவது?” என்று கேட்டார். அதற்கு ஞானி, “நான் கீழேபோடச் சொன்னது தாமரை மலர்களை அல்ல, தான் என்ற ஆணவத்தை” என்றார். அப்போதுதான் அந்த இளைஞர் உண்மையை உணர்ந்தார். சீடராக இருப்பதற்கு முதன்மையான தகுதியே தான் என்ற ஆணவத்தை அகற்றுவதுதான்.
ஆகவே, திருமுழுக்கு யோவான் எப்படி தாழ்ச்சியோடு வாழ்ந்தாரோ அதைப்போன்று இறைப்பணி செய்யும் நாம் ஒவ்வொருவரும் தாழ்ச்சியோடு வாழவேண்டும்.
நிறைவாக கிறிஸ்தவர்களாகிய நாம் ஒவ்வொருவரும் கடைபிடித்து வாழக்கூடிய பண்பு ; எல்லாச் சூழ்நிலைகளிலும் நன்றிசொல்வதாகும். தெசலோனிக்கேயருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய இரண்டாம் வாசகத்தில் படிக்கின்றோம்,
“எல்லாச் சூழ்நிலையிலும் நன்றிகூறுங்கள்’ என்று. ஆம், கிறிஸ்துவின் சீடர்களாகிய நாம் ஒடுக்கபட்டவருக்கு நற்செய்தியை அறிவிக்கின்றபோது, உள்ளம் உடைந்தவரைக் குணப்படுத்துகிறபோது, சிறைப்பட்டவருக்கு விடுதலையைப் பறைசாற்றுகின்றபோது... (முதல் வாசகம்) பல்வேறு சவால்களை, பிரச்சனைகளை சந்திக்கலாம். அத்தகைய தருணங்களில் நாம் மனம் உடைந்துபோகக்கூடாது, மாறாக நாம் நன்றிசெலுத்தவேண்டும்.
ஏனென்றால் நாம் எல்லாவற்றிற்கும் நன்றிசெலுத்துகின்றபோது வாழ்க்கையை எதிர்மறையாக அல்ல, நேர்மறையாக பார்க்கப் பழகிவிட்டோம் என்று அர்த்தமாகும்.
கவிஞன் ஒருவன் சொல்வான், “கண்ணீர் துளியில் வைரங்கள் செய்யும் கலைகள் கண்டுகொள், காலுக்கு செருப்பு எப்படி வந்தது ? முள்ளுக்கு நன்றி சொல்” என்று. ஆகவே நாம் எல்லாச் சூழ்நிலைகளிலும் இறைவனுக்கு நன்றிசொல்ல கற்றுக்கொள்வோம். அதைவிடவும் திருமுழுக்கு யோவானைப் போன்று நம்மை முழுமையாய் ஏற்றுக்கொள்வோம், தாழ்ச்சியோடு வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம். 



Saturday 9 December 2017

திருவருகை ஞாயிறு -2 - ஆண்டு-2

திருவருகை ஞாயிறு -2 - ஆண்டு-2

எசா 40:1-5, 9-11; 2 பேது 3 - 8-14; மாற் 1:1-8



இறைவன் கூக்குரலிடுகிறார்

அருள்பணி லூர்துராஜ் பாளை மறைமாவட்டம்

கோவை நகர். கௌலி ப்ரவுன் சாலை. ஹவுசிங் யூனிட் காம்பவுண்ட்சுவர் அந்த வழியாகச் செல்லும் அனைவரும் நின்று படித்து இரசிக்கும் வண்ணம் சுவர் எழுத்துக்கள் கிண்டலடிப்பது போல கிறிஸ்தவ சமய ஒரு பிரிவினருக்கும் பெரியார் கட்சித் தொண்டர் களுக்கும் இடையே நடைபெற்ற சுவர் எழுத்துப்போட்டி.

"இயேசு சீக்கிரம் வருகிறார்' - அல்லேலூயா இயக்கத்தினர்
அதுவரை மக்கள் என்ன செய்வது"-திராவிடக் கழகத்தினர்
"அதுவரை பாவம் செய்தலை விட்டுமனந்திரும்பி நட'- அ.இ.
'இப்போது அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார்" – தி.க.
"நீ மனந்திரும்பட்டும் என்று காத்துக்கொண்டிருக்கிறார்"- அ.இ.

சுவையான, சிந்திக்கத் தூண்டும் சுவர் எழுத்துப் போராட்டம் "ஆண்டவர் தம் வாக்குறுதியை நிறைவேற்றக் காலம் தாழ்த்துவதாகச் சிலர் கருதுகின்றனர். ஆனால் அவர் அவ்வாறு காலந்தாழ்த்துவதில்லை. மாறாக உங்களுக்காகப் பொறுமையோடிருக்கிறார். யாரும் அழிந்து போகாமல் எல்லாரும் மனம் மாற வேண்டுமென விரும்புகிறார்" (2 பேதுரு 39) மனிதன் மனந்திரும்பட்டும் என்று கடவுள் காத்துக் கொண்டிருப்பவர் மட்டுமல்ல. கூக்குரல் இடுபவரும் கூட. "பாலை நிலத்தில் குரல் ஒன்று முழங்குகின்றது. ஆண்டவருக்காகப் பாதையைச் செம்மையாக்குங்கள்" (எசா 40:3)
பாலைவனத்தில் ஒரு கூக்குரல் - இது திருமுழுக்கு யோவானின் குரல் என்று நாம் நினைக்கிறோம். உண்மை அதுவல்ல. கூக்குரல் இடுவது இறைவனே. பாலை நிலம் என்பது நமது வாழ்க்கையே! அமைதியாகத் தாழ்ந்த குரலில் பேகம் இறைவன் அவ்வப்போது கூக்குரலிடுகிறார், நம்மை உசுப்புவதற்காக சுனாமியாகச் சுழன்றடித்த பேரிடர் இறைவனின் கூக்குரல் இல்லையா? இயற்கைக்கு ஊறுவிளைவிக்காதே என்பதுதானே அதன் முழக்கம் சுட்டெரிக்கும் வெயிலும் வெப்பமும் கூட இறைவனின் கூக்குரல் அன்றோ சுற்றுப்புறச் சூழலை மாசுபடுத்தாதே என்பதுதானே அதன் விளக்கம்.
இயற்கையின் சீற்றமாக மட்டுமல்ல, இறைவாக்கினரின் எச்சரிக்கையாகவும் இறைவன் கூக்குரலிடுகிறார் என்பதுதான் இன்றைய திருவழிபாட்டுச் செய்தி
தூங்குபவனை எழுப்பிவிடலாம். தூங்குவது போல் பாசாங்கு செய்பவனை என்ன செய்தும் எழுப்ப முடியாது. இறைவாக்கினர் எசேக்கியேல் வழியாக இறைவன் எழுப்பும்கூக்குரல் தூங்குகிறஅல்லது தூங்குவது போல் நடிக்கிற நம்மை உலுக்கட்டும் "மனம் மாறி உங்கள் குற்றங்கள் அனைத்தையும் விட்டு விலகுங்கள். எனக்கு எதிராக நீங்கள் இழைத்த குற்றங்கள் அனைத்தையும் விட்டு விடுங்கள். புதிய இதயத்தையும் புதிய மனத்தையும் பெற்றுக் கொள்ளுங்கள். மனம் மாறுங்கள் வாழ்வு பெறுங்கள்" (எசேக்.18:30-32)
மனந்திரும்பத்தேவையில்லை என்று தான் இன்றைய மனிதனும் நினைக்கிறான். இயேசுவைப் பொறுத்தவரை அவரைக் கொன்றவர்கள், மனந்திரும்ப மறுத்தவர்கள் ஒழுக்கக்கேடு உள்ளவர்கள் அல்ல. தங்களையே நேர்மையாளர்களாக நினைத்த பரிசேயர்களே!
'பாவமே இல்லை என்று சொல்வது தான் இன்றைய உலகின் மிகப்பெரிய பாவம்' என்றார் திருத்தந்தை 6ஆம் பவுல். அழுக்கோடிருக்கும் குழந்தை, அம்மா குளிக்கக் கூட்டிப்போகும் போது அடம்பிடிப்பதைப்போல தன் மன அழுக்குகளைப் பற்றி உணர்வற்று இருக்கிறோம்.
தன்னிலை உணர்தல், தன் தவறுகளை ஏற்றுக் கொள்ளுதல் இதுவே மனந்திரும்புதலின் அச்சாணி, தவறு என்பது முதுகுபோல, தன் தவற்றை எவரும்பார்ப்பதில்லை. அதனால்தான் அடுத்தவன் கண்ணில் உள்ள துரும்பைப் பார்க்கிறோம். நம் கண்ணில் உள்ள விட்டத்தை நம்மால் பார்க்க முடிவதில்லை.
உடல் அழுக்கைச் சுட்டிக்காட்டப் பலர் வருவர். மனஅழுக்கை அவரவர் உணர்ந்தால்தான் உண்டு. அப்படியே உணர்ந்தாலும் அதிலிருந்து விடுபட நாம் கையாளும் வழிகள் பெரிதும் பலவீனமானவை.
ஒரு முக்கிய தலைவர் தன் செயலரோடு வெளிநாட்டுக்கு விமானம் ஏறினார். ஒரே துர்நாற்றம் எங்கிருந்து வருகிறது? புரியவில்லை. விமானத்தை விட்டு இறங்கி விடுதியில் தங்கியபோது அதே துர்நாற்றம். பிறகுதான் தெரிந்தது அதற்குக் காரணம் தன் செயலரின் காலுறை (Socks) என்று. உடனே கத்தினார். உன் சாக்ஸை மாற்று என்று. உடனே செயலர் மாற்றிக் கொண்டாராம் வலது காலில் இருந்த காலுறையை எடுத்து இடது காலிலும் இடது காலில் இருந்ததை எடுத்து வலது காலிலுமாக.
இப்படித் தான் இருக்கின்றன நமது மனமாற்றங்கள் எல்லாம். சில சமயங்களில் DDT பாவசங்கீர்த்தனங்களில் திருப்தி காண்கிறோம். குளம் ஒன்றில் நாற்றக் குமிழிகள் கொப்புளித்தன. நாற்றம் தாங்காது மக்கள் முறையிட அரசு அதிகாரிகள் வந்தனர். DDT மருந்து அடித்தனர். நாற்றம் குறைந்தது. போய் விட்டனர். பின்னும் குமிழிகள். மறுபடி நாற்றம். மறுபடி அதே மருந்தடிப்பு தற்காலிக நிவாரணம். மீண்டும் நாற்றம். ஒருவன் சொன்னான்: "நீர்க்குமிழிகள் எழுந்தால் குளத்தின் ஆழத்தில் ஏதோ அழுகிக் கிடக்கிறது என்று பொருள்' மூச்சைப் பிடித்து ஆழத்தில் இறங்கி அழுகிய பிணத்தை எடுத்து எறிந்தார்கள். பிறகு குமிழி இல்லை. நாற்றம் இல்லை. நீரும் தெளிந்தது.
"இன்று நீங்கள் அவரது குரலுக்குச் செவிசாய்த்தால் எத்துணை நலம்! அன்று மெரிபாவிலும், பாலை நிலத்தில் மாசாவிலும் செய்ததுபோல், உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள்’ (தி.பா.95:7,8)


மகிழ்வுட்டும் மறையுரை

குடந்தை அந்தோணிசாமி

ஆண்டவரின் ஆசியைப் பெறுவோம்

பிறக்கப்போகும் ஆண்டவர் எப்படிப்பட்டவர் என்பதை இறைவாக்கினர் எசாயா தெளிவாக முதல் வாசகத்தில் சுட்டிக்காட்டுகின்றார்: ஆயனைப்போல் தம் மந்தைகளை அவர் மேய்ப்பார்; ஆட்டுக் குட்டிகளைத் நம் கையால் ஒன்று சேர்ப்பார்; அவற்றைத் தம் தோளில் தூக்கிச் சுமப்பார்: ளையாடுகளைக் கவனத்துடன் நடத்திச் செல்வார் (எசா 40:11). அவர் மிகுந்த பொறுமையைக் கையாள்வார்; யாரும் அழிந்து போகாமல் எல்லாரும் நாம் மாறவேண்டும் என்று விரும்புவார் (2 பேது 3:9).
திருமுழுக்கு யோவான் எப்படிப்பட்டவர் என்று நமக்குத் தெரியும். வர் மனிதராய்ப் பிறந்தவர்களுள் திருமுழுக்கு யோவானைவிடப் பெரியவர் வரும் தோன்றியதில்லை (மத் 1:1) என்று இயேசுவால் புகழப்பட்டவர். அப்படிப்பட்டவர் தன்னைவிட இயேசு வலிமை மிக்கவர் எனச் சுட்டிக்காட்டுகிறார்.(மாற்கு l:7).
ஆக, ஒரு நல்ல ஆயனை, நாம் நலமுடன் வாழவேண்டும் என்று விரும்புகின்றவரை, வலிமைமிக்கவரை நாம் நம் நடுவே சில வாரங்களில் வரவேற்கப்போகின்றோம். வரவிருக்கும் ஆண்டவரை நாம் தகுதியுடன் வரவேற்க என்ன செய்ய வேண்டும்? என்பதை இன்றைய நற்செய்தி கட்டிக்காட்டுகின்றது.
திருமுழுக்கு யோவான் நம்மைப் பார்த்து: மனம் மாறுங்கள் என்கின்றார்: இயேசுவிடமிருந்து தூய ஆவியாரின் வரங்களையும் (கொரி 12:8-10), கனிகளையும் (கலா 5:22-23) பெற்று நாம் வளமுடன் வாழ நமது மனமாற்றத்தை ஒரு நிபந்தனையாக நம்முன் வைக்கின்றார்.
மனம் என்பது ஒரு காசுபோன்றது. அதற்கு இரண்டு பக்கங்கள் உள்ளன. ஒன்று ஆசை, மற்றொன்று அறிவு. அறிவே ஆசைக்கு அடித்தளம். ஆசையே அனைத்திற்கும் காரணம்! மனமாற்றம் அடைய விரும்புகின்றவர்கள் காணாமற்போன மகன் போல அறிவுத் தெளிவை (லூக் 15:17) ஆராய்ந்துபார்க்க வேண்டும் மதிப்பீட்டுப் பட்டியல் சரியாக இருக்கின்றதா? என்பதை உய்த்துணர வேண்டும்!
இதோ தன் அறிவைத் தெளிவாக வைத்திருந்த ஒரு மனிதனின் கதை இக்கதை நம் மதிப்பீட்டுப் பட்டியலை சரிபார்க்க நமக்கு உதவும்.
டெட்ரூஜென் (Tetsugen) என்ற ஒரு ஜப்பானியர் தியானத்தில் (Zen) மிகுந்த ஈடுபாடு உடையவர். அப்பொழுது சீன மொழியில் மட்டுமிருந்த புத்தரது ஆத்திரங்களை ஜப்பானிய மொழியில் அவர் வெளியிடத் தீர்மானித்தார். மரப்பலகையில் அந்தச் சூத்திரங்களைச் செதுக்கி ஏழாயிரம் பிரதிகளை வெளியிடத் தீர்மானித்தார். நன்கொடை வசூலித்தார். பத்து வருடங்கள் உருண்டோடின திடீரென யூஜி ஆற்றில் வெள்ளம் வந்து மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். சேர்த்த பணத்தை ஏழை மக்களின் பட்டினியைப் போக்கச் செலவழித்தார். மீண்டும் பணம் சேர்த்தார். திடீரென மக்களைத் தொற்றுநோய் பற்றியது. நன்கொடையை நோயுற்றோர்க்குக் கொடுத்தார். மீண்டும் நன்கொடை வசூலித்து இருபது வருடங்கள் கழித்து மூன்று பிரதிகள் எடுத்தார். அதில் ஒரு பிரதி இன்றும் ஒபாக்கூ (Obaku) மடாலயத்தில் உள்ளது.
இந்த ஜப்பானியர் மனித வாழ்க்கையைவிட மேலானது எதுவும் இல்லை என்பதை உலக மக்களுக்குச் சுட்டிக்காட்டுகின்றார். மனிதர்கள் வாழவேண்டும் என்பதற்காக நல்லாயனாக உதித்து பாவிகளாகிய நமக்காக உயிரைக் கொடுத்த உத்தமரைச் சந்திக்க, நாம் அவரைப் போலவே மக்களின் வாழ்க்கைக்கு நமது மதிப்பீட்டுப் பட்டியலிலே முதலிடம் கொடுப்போம்.
மனம் எனும் விளக்கினிலே மனமாற்றம் எனும் எண்ணெயூற்றி,
மனித நேயம் எனும் திரியிட்டு
வாழ்வு எனும் ஒளிதந்து, இருள்போக்கி –
பாவ இருள்போக்கி பெறுவோம்.
ஆண்டவரின் ஆசியைப் பெறுவோம்!
மேலும் அறிவோம் :
இருள் நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி
மாசறு காட்சி யவர்க்கு (குறள் : 352).
பொருள்: அறியாமை ஆகிய மயக்கம் களைந்து மெய்யறிவு பெற்றவர்க்கு மாசற்ற உண்மை தோன்றும்: அறியாமை இருள் விலகுவதால் இன்பப் பேறு வாய்க்கும்!




மனமாற்றும்..

அருள்பணி முனைவர் ம.அருள்



திருவருகைக் காலம் மனமாற்றத்தின் காலம். இதில் நான்கு கூறுகள் உண்டு. 1. மனம் வருந்துதல் 2. மனமாற்றம் 3. இறைவனின் வருகைக்காகக் காத்திருத்தல். 4. அதற்காக தயாரித்தல். இன்றைய இறைவார்த்தை வழிபாடு நமக்கு இன்று விடுக்கும் சவால் மனமாற்றம்தான். பாபிலோனிய அடிமைத் தனத்திலிருந்து இஸ்ரயேல் மக்கள் புறப்பட்ட காலம். ஏனெனில் மக்களின் இதயங்களை நெறிப்படுத்தி, இறைவனின் கருணையை எடுத்துரைத்து, உள்ளம் கலங்க வேண்டாம் என்று நம்பிக்கையூட்டுகிறது முதல் வாசகம் (எசாயா:40:9-11). இதற்காக ஆண்டவன் வழியை ஆயத்தமாக்குங்கள் பள்ளத்தாக்குகள் நிரப்பப்பட்டுக் குன்றுகள் தாழ்த்தப்படட்டும் கரடு முரடானவை சமதளமாக்கப்படட்டும் என்று இந்த மனித உள்ளத்தில், அறை கூவல் விடுக்கிறார் இறைவாக்கினர் (எசாயா:40:3-4). இன்றைய நற்செய்தி அறிவிப்பது போல, பாலைவனத்திற்கு வந்து பாவ மன்னிப்பு பெறுங்கள், மனம் மாறி திருமுழுக்குப் பெறுங்கள் என்று அழைப்பு விடுக்கிறார் திருமுழுக்கு யோவான் (மாற்கு:1:4).
பழைய ஏற்பாட்டிலே இஸ்ரயேல் மக்கள் எகிப்திலிருந்து வெளிவந்த போது, அவர்கள் பலவற்றை விடவேண்டியிருந்தது. தாங்கள் வழக்கமாக உண்ட மீன், வெங்காயம், கொம்மட்டிக்காய், கீரை, வெள்ளைப் பூண்டு ஆகியவற்றை விட வேண்டியிருந்தது (எண்:11:4-5). பாலை நிலத்திற்கு வருவது என்பது, நாம் வழக்கமாகச் சார்ந்திருக்கும் பாவநிலையை விட்டுவிட்டு கடவுள் முன் வருவதைக் குறிக்கிறது. ஆகவே பாலை நிலம் போதல் என்பது மனம் திரும்புதலின் முதல் படியாகும்.
நாம், பிறந்த குழந்தையாக இருந்தபோது திருமுழுக்குப் பெற்றுவிட்டோம். இந்த திருவருகைக் காலத்தில் ஒரு திருமுழுக்கு நம்மில் நடைபெற வேண்டும். அதாவது நாம் நம்மையே சரிக்கட்டி, அல்லது ஏமாற்றி ஒளித்து வைத்திருக்கும் தீய பழக்கங்கள், செயல்கள், மற்றும் ஒளித்து வைத்திருக்கும் இடங்களை விட்டு வெளியேற வேண்டும். நம்மில் இருக்கும் பாவம் என்ற பள்ளதாக்குகள் அகற்றப்பட்டு, சரிசெய்யப்பட வேண்டும். நம்மிடம் மலை போல் குவியும் கோபம், விரோதம், பகைமை, பொய்மை, பொறாமை, திருட்டு, காமம், களவு, வஞ்சகம், தீச்செயல்கள் தீக்கிரையாக்கப்பட வேண்டும். இறைவன் படைத்த சாதகப் பறவையானது குளம், குட்டைகளில் தேங்கிக் கிடக்கும் நீரையோ, கழிவு நீரையோ பருகாது. கார் காலத்தில் பெய்யும் மழை நீரை வாய் திறந்து பருகி உயிர் வாழ்கிறது. நாமும் சாதகப் பறவையாக மாற இந்த திருவருகைக் காலம் அழைப்பு விடுக்கிறது. யாரும் அழிந்து போகாமல், எல்லோரும் மனம் மாறவேண்டும் என கடவுள் காத்திருக்கிறார் (2பேதுரு:3:9) என்று புனித பேதுரு இன்றைய இரண்டாம் வாசகத்தில் குறிப்பிடுகிறார்.
அன்பார்ந்தவர்களே! அவன் அப்படி, இவள் இப்படி என்றெல்லாம் மற்றவரை குறை கூறி தீர்ப்பிட்டு அவர்கள் மனம் மாற வேண்டும் என நினைக்கிறோம். மாறாக 80 வயதான ஒருவர், முதலில், இந்த உலகை மாற்றுவேன் என சபதமிட்டு, தோல்வி கண்டார். பின் ஊரையும் என் குடும்பத்தையும் மாற்றுவேன் என கூறி அதிலும் தோல்வியைக் கண்டார். இறுதியாக இறைவா! என்னை மாற்றிட எனக்கு வரம் தாரும் என வேண்டி சிந்திக்கத் தொடங்கினார். ஆம்! இந்த திருவருகைக் காலம் நாம் நம்மில் உள் நோக்கிய ஒரு பயணம் செய்ய அழைப்பு விடுக்கிறது. இது தான் அகப்பார்வை. நாம் நல்லவர்களாக பிறர் முன் காட்டிய போலித் தனமான வெளித்தோற்றத்தைக் களைந்துவிட்டு, சக்கேயுவைப் போல, மரியமதலேனாளைப் போல, கண்ணீர் சிந்தி மனம் மாறிய பேதுருவைப் போல மனமாறுவோமா? கண்ணகியின் காற் சிலம்புக்கு முன் பாண்டிய மன்னன் நெடுஞ்செழியன், நானே கள்வன், நானே குற்றம் செய்தவன் என சுய பரிசோதனை செய்தது போல நாமும் செய்வோமா?



நற்செய்தியின் தொடக்கம் நம்பிக்கை  

அருள்பணி ஏசு கருணாநிதி - மதுரை

'அஞ்சாதீர்கள். இதோ, எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். இன்று ஆண்டவராகிய மெசியா என்னும் மீட்பர் உங்களுக்காக தாவீதின் ஊரில் பிறந்திருக்கிறார்!'  
வயல்வெளியில் தங்கி தங்கள் கிடையைக் காவல் காத்துக்கொண்டிருந்த இடையர்களுக்கு இயேசுவின் பிறப்பு மகிழ்ச்சியூட்டும் 'நற்செய்தி' என அறிவிக்கப்படுகின்றது. ஆங்கிலத்தில் 'நோ நியூஸ் இஸ் குட் நியூஸ்' என்ற பழமொழி உண்டு. அதாவது, ஒன்றைப் பற்றி செய்தி வராமல் இருக்கிற வரைக்கும் அது நல்ல செய்தி. அல்லது செய்தி என்று ஏதாவது ஒன்றைப் பற்றி ஏதாவது வந்தால் அங்கே ஏதோ எதிர்மறையானது இருக்கிறது என்று அர்த்தம்.   இன்றைய முதல் (காண். எசாயா 40:1-5, 9-11) மற்றும் நற்செய்தி வாசகங்களின் (காண். மாற்கு 1:1-8) மையமாக இருக்கும் ஒற்றைச் சொல் 'நற்செய்தி.' 'நற்செய்தி' என்றால் 'நல்ல செய்தி' என்று புரிந்து கொள்வது மிகவும் குறுகிய புரிதலாக இருக்கும். 'நற்செய்தி' என்ற வார்த்தைக்கான விளக்கத்தை நம் மேனாள் திருத்தந்தை 16ஆம் பெனடிக்ட் அவர்கள், 'நாசரேத்தூர் இயேசு' நூல் முதல் பாகத்தில் பின்வருமாறு பதிவு செய்கிறார்:  
'நற்செய்தியாளர்கள் இயேசுவின் போதனையை 'யுவாங்கெலியோன்' என்ற கிரேக்க பதத்தால் குறிப்பிடுகின்றனர். இந்த பதத்தின் பொருள் என்ன? இதை நாம் 'நற்செய்தி' என்று மொழி பெயர்க்கிறோம். 'நற்செய்தி' என்ற வார்த்தை கவர்ச்சிகரமாக இருக்கிறது. ஆனால், 'யுவாங்கெலியோன்' என்ற வார்த்தையின் முழுப்பொருளை இது பிரதிபலிப்பதில்லை. தங்களையே தலைவர்களாகவும், மீட்பர்களாகவும், இரட்சகர்களாகவும் கருதிக்கொண்ட உரோமை பேரரசர்களின் வார்த்தை இது. பேரரசரால் விடுக்கப்பட்ட எல்லா செய்தியும் - நல்லது, கெட்டது, மகிழ்ச்சி தரக்கூடியது, துன்பம் தரக்கூடியது - இலத்தீன் மொழியில் 'எவாங்கெலியும்' என்று சொல்லப்பட்டது. இதன் பொருள் என்னவென்றால், பேரரசனிடமிருந்து வரும் எச்சொல்லும் உலகை மாற்றக்கூடிய ஆற்றல் பெற்றுள்ளது. இந்த வார்த்தையை நற்செய்தியாளர்கள் எடுத்து தங்களின் எழுத்துக்களுக்குப் பெயராகச் சூட்டக் காரணம் என்னவென்றால், உரோமைப் பேரரசர்களின் வார்த்தைகள் பல நேரங்களில் நல்லதற்கான மாற்றத்தைக் கொண்டுவரவில்லை. அவர்கள் சொன்னார்கள். செய்யவில்லை. ஆனால், தனது சொந்த அதிகாரத்தால் பேசும் இயேசுவின் வார்த்தை ஒரே நேரத்தில் சொல்லாகவும், செயலாகவும் வெளிப்படுகிறது.'  
இவ்வாறாக, எந்த வார்த்தை ஒரே நேரத்தில் சொல்லாகவும், செயலாகவும் வெளிப்படுகிறதோ அந்த வார்த்தையே 'நற்செய்தி.' இன்று சில வங்கிகள் மற்றும் தனியார் நிறுவனங்களில்கூட இந்நிறுவனங்களின் தயாரிப்புக்களை மற்றவர்களுக்குப் பரவாலக்கம் செய்பவரை 'எவான்ஞ்செலிஸ்ட்' ('நற்செய்தியாளர்') என்று அழைக்கின்றனர். ஆனால் இவர்களின் நற்செய்தி சொல்லாகவும், செயலாகவும் இருக்கிறதா என்பது ஐயத்திற்குரியது.  
'கடவுளின் மகனாகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியின் தொடக்கம்' என்று தன் நற்செய்தி நூலுக்கு முகவுரை தருகின்றார் இரண்டாம் நற்செய்தியாளர் மாற்கு.   நற்செய்தியின் தொடக்கம் என்று எழுதிவிட்டு உடனடியாக வாசகரை பாலைநிலத்திற்கு அழைத்துச் செல்கின்றார் மாற்கு நற்செய்தியாளர்:  
நற்செய்தி தொடங்கும் இடம்: பாலைவனம் 
நற்செய்தியைத் தொடங்குபவர்: திருழுழுக்கு யோவான் 
நற்செய்தியின் கூறு: 'வலிமைமிக்க ஒருவர் ... தூய ஆவியால் திருமுழுக்கு'  
ஆக, நற்செய்தி என்பது யாரும் எதிர்பாராத இடத்தில், யாரும் எதிர்பாராத நபரால், யாரும் எதிர்பாராத விதமாக தொடங்குகிறது. இதுதான் கிறிஸ்து பிறப்பின் எதார்த்தமும் கூட: யாரும் எதிர்பாராத இடத்தில், யாரும் எதிர்பாராத நபர் வழியாக, யாரும் எதிர்பாராத விதமாக நடந்தேறுகிறது.  
திருவருகைக்காலத்தின் இரண்டாம் ஞாயிற்றில் நாம் ஏற்றும் திரி 'நம்பிக்கை' என்ற மதிப்பீட்டைக் குறிக்கிறது. நற்செய்தியின் தொடக்கமாக இருப்பது நம்பிக்கை.  
எப்படி?  
இன்றைய முதல் வாசகத்தின் பின்புலம் பாபிலோனிய அடிமைத்தனம். யூதா நாடு நெபுகத்னேசர் மன்னன் காலத்தில் அடிமைப்படுத்தப்பட்டு எருசலேம் மக்கள் அனைவரும் பாபிலோனியாவுக்கு நாடுகடத்தப்படுகின்றனர். 'எல்லாம் முடிந்துவிட்டது. இனி ஒன்றுமில்லை. அரசன் இல்லை. மண் இல்லை. நாடு இல்லை. ஆலயம் இல்லை. திருச்சட்டம் இல்லை' என புலம்பியவர்களைப் பார்த்து, 'ஆறுதல் கூறுங்கள் ... என் மக்களுக்கு கனிமொழி கூறுங்கள்' என்கிறார் ஆண்டவராகிய கடவுள். மேலும், ஆண்டவரின் மாட்சி வெளிப்படுவதற்கான வேலைகளையும் முடுக்கிவிடுகின்றார் இறைவாக்கினர்.  
'பாலை நிலம்,' 'பாழ்நிலம்,' 'பள்ளத்தாக்கு,' 'மலை-குன்று,' 'கோணலானது,' 'கரடுமுரடானவை' என ஆறுவகை சீரமைப்புக்களைப் பதிவு செய்கின்றார் இறைவாக்கினர் எசாயா. இந்த ஆறு இடங்களும் உருவாகக் காரணம் எருசலேமைச் சூழ்ந்திருந்த போர்மேகம். எங்கும் போர் நடந்து கொண்டிருந்ததால் 'பாலை நிலத்தில்' பாதை மறைந்து போய் கிடந்தது. மேய்ச்சல் நிலம் பாழ்நிலம் ஆனது. போர்களில் ஒளிந்து கொள்வதற்கா பள்ளங்கள் தோண்டப்பட்டதால் ஆங்காங்கே செயற்கை பள்ளத்தாக்குகள் இருந்தன. மலை மற்றும் குன்றுகள் மக்கள் ஒளிந்து கொண்டு தாக்கும், போரிலிருந்து தப்பிக்கும் அரண்களாக செயல்பட்டன. வேகமாக செல்ல வேண்டும் என்ற அவசரத்தில் நிறைய கோணல் மாணல் சாலைகள் உருவாகின. எங்கும் நிலையான அமைதி இல்லாததால் சாலைகள் சீரமைக்கப்படாமல் குண்டுங் குழியுமாய் கரடு முரடாய் இருந்தன. மேலும், தொடர்ந்துவரும் 'ஆயன்-ஆடு' உருவகங்கள் பின்புலத்தில் பார்த்தால் இந்த ஆறுமே ஆடுகள் மேய்வதற்கு எதிராக உள்ள இடங்கள். மேற்காணும் இடங்களில் அல்லது இடங்களால் ஆடுகள் காணாமல்போகும், வழிதவறும், காயங்கள் ஏற்படும் வாய்ப்புக்கள் நிறைய உண்டு.   இந்த இடத்தில் 'சீயோனே, நற்செய்தி தருபவளே,' 'எருசலேமே, நற்செய்தி உரைப்பவளே' என எருசலேமை இளநங்கையாக உருவகம் செய்து 'நற்செய்தியை' பறைசாற்றுகிறார் இறைவாக்கினர். இந்த நற்செய்தியைத் தரும் அரசன் யார் என்றும், அவர் என்ன செய்வார் என்றும் தொடர்ந்து அவரே சொல்கின்றார்:   'ஆயனைப் போல தம் தந்தையை அவர் மேய்ப்பார். 
ஆட்டுக்குட்டிகளைத் தம் கையால் ஒன்று சேர்ப்பார்.  அவற்றைத் தம் தோளில் தூக்கிச் சுமப்பார். 
சினையாடுகளைக் கவனத்துடன் நடத்திச் செல்வார்.'   'இனி தங்களுக்கு ஒன்றுமே இல்லை. எல்லாம் அழிந்துவிட்டது' என்று எண்ணியவர்களின் வாழ்க்கையில், 'இன்னும் நிறைய இருக்கிறது' என்று வாழ்க்கையின் கதவுகளைத் திறந்துவிடுகின்றார் கடவுள்.
ஆக, நற்செய்தியின் தொடக்கமாக நம்பிக்கை இருக்கிறது.   இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். 2 பேதுரு 3:8-14) ஆண்டவரின் இரண்டாம் வருகை பற்றிப் பதிவு செய்கின்ற பேதுரு அந்த நாளில் 'புதிய விண்ணகம் மற்றும் புதிய மண்ணகம் மலரும்' என்றும், இந்த நாளுக்கான தயாரிப்பாக மக்கள் 'மாசுமறுவற்றவர்களாய், நல்லுறவு கொண்டவர்களாய் விளங்கவும் வேண்டும்' என்கிறார்.   இன்றைய நற்செய்தி வாசகத்தை முதல் வாசகத்தின் தொடர்ச்சியாக வரைகின்றார் மாற்கு. மலாக்கி இறைவாக்கினர் மற்றும் எசாயா இறைவாக்கினரின் உருவகங்களை எடுத்து திருமுழுக்கு யோவானுக்குப் பொருத்துகின்றார்: 'தூதன்,' 'குரல்,' 'வழி,' 'பாதை.'   ஆக, நற்செய்தியின் தொடக்கமாக இருப்பது ஆயத்தம் அல்லது தயாரிப்பு. அந்த தயாரிப்பு பாலைநிலங்களில் நடந்தேறுகிறது. அந்த தயாரிப்பை செய்பவர் திருமுழுக்கு யோவான். அவரிடம் சென்றவர்கள் தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு திருமுழுக்கு பெற்றுவந்தனர். இந்த நிகழ்வு முழுக்க முழுக்க பாலைவனத்தில் நடந்தேறியது என்பதைக் குறிக்கவே நற்செய்தியாளர், 'ஒட்டக முடி ஆடை,' 'தோல் கச்சை,' வெட்டுக்கிளி,' 'காட்டுத்தேன்' போன்ற அடையாளங்களையும் பயன்படுத்துகின்றார். மேலும், தனக்குப்பின் வருபவரின் பண்புகளையும் பட்டியலிடுகின்றார் மாற்கு.   நம்பிக்கை கொண்ட ஒருவரே ஆயத்தம் அல்லது தயாரிப்பு செய்ய முடியும்.   இன்றைய இறைவாக்கு வழிபாடு நமக்கும் தரும் பாடங்கள் எவை?  
1. நம் கண்களையும் தாண்டிய நிகழ்வு ஒன்று உண்டு  நம்பிக்கைக்குப் பல நேரங்களில் தடையாக இருப்பது நம் கண்கள். நாம் காண்பது மட்டுமே உண்மை என்று நினைத்துக்கொண்டு, நம் எண்ணங்களுக்கு நம் பார்வை அல்லது காட்சியால் குறுகலான ஃப்ரேம் ஒன்றை நாம் ஏற்படுத்திவிடுகிறோம். ஆனால், கண்களின் காட்சிகளையும் கடந்த நிகழ்வுகள் நம் வாழ்வில் உண்டு. பாபிலோனிய அடிமைத்தனத்தில் சிக்குண்ட இஸ்ரயேல் மக்கள் கஷ்டப்பட்டதும் இந்தப் பார்வைக் குறைபாடால்தான். அவர்களின் பார்வையை அகலமாக்குகின்றார் கடவுள்.  இயேசுவின் வருகை அல்லது பிறப்பு செய்த மிகப்பெரிய காரியம் இதுதான். நம் கண்களைத் திறந்துவிட்டது. கடவுளை அப்பா என்றழைக்கவும், ஒருவர் மற்றவரை சகோதரர், சகோதரி என்று ஏற்று அன்பு செய்யவும் நம்மைத் தூண்டியது. இயேசுவின் இறையரசு போதனையே மக்களை தங்கள் எண்ணங்களை விரிவடையச் செய்யும் போதனைதான். இத்திருவருகைக்காலத்தில் இந்த எண்ணத்தை நம் மனத்தில் பதிய வைப்போம். நாம் காணும் அனைத்தையும் தாண்டிய வாழ்க்கை அல்லது எதார்த்தம் அல்லது நிகழ்வு உண்டு.  
2. நற்செய்தி  நற்செய்தி என்பது 'சொல்லும், செயலும் இணைந்திருக்கும் நிலை' என்று மேலே கண்டோம். இந்த வரையறையின்படி பார்த்தால் கடவுளின் செய்தி மட்டுமே இன்று நற்செய்தியாக இருக்கிறது. நம் சமூக, அரசியல், பொருளாதார, தகவல் தொழில்நுட்ப வாழ்வில் நாம் பேசும், பரிமாறும் பல வார்த்தைகள் வெறும் வார்த்தைகளாகவே நின்றுவிடுகின்றன. அவைகள் செயல்களாக மாற்றம் பெறத் தவறிவிடுகின்றன. இன்று நான் உரைப்பது நிறைவேறாமல் போவதற்கு தடையாக இருப்பது எது? எனக்கு நானே கொடுக்கும் சின்ன சின்ன வாக்குறுதிகள்கூட பல நேரங்களில் நற்செய்தியாக மாறுவதில்லை. இதற்குக் காரணம் என்ன? என்னுடைய சோம்பலா? அல்லது பின்னால் பார்த்துக்கொள்ளலாம் என்று மேலோட்டமான போக்கா? 
 3. கடவுளின் மகனாகிய இயேசு கிறிஸ்து  இயேசு யார் என்பதை இரண்டு அடைமொழிகளால் சொல்லிவிடுகின்றார் மாற்கு: 'கடவுளின் மகன்,' 'கிறிஸ்து.' இந்த இரண்டு வார்த்தைகளை தன் நற்செய்தி நூலில் விரிவாக்கம் செய்து எழுதுகின்றார் மாற்கு. இன்று நாம் தயாரிக்கும் கிறிஸ்து பிறப்பு கொண்டாட்டங்களின் பலூன், நட்சத்திரம், விளக்குகள், குடில்கள், பாடும் கேரல்கள் நடுவில் என் இயேசு யார்? என்று என்னால் வரையறுக்க முடியுமா? எனக்கும் அவருக்கும் உள்ள உறவை நான் எந்த வார்த்தைகளைக் கொண்டு வரையறை செய்வேன்? அவர் என்னுள் ஏற்படுத்தும் மாற்றம் என்ன?  திருமுழுக்கு யோவான் இயேசுவை 'தன்னைவிட வலிமைமிக்கவர்' என்றும், 'தூய ஆவியால் திருமுழுக்கு கொடுப்பவர்' என்றும் வரையறுக்கின்றார். என் வரையறை என்ன? 
 4. சிறுநுகர் வாழ்வு  இன்று வாழ்வியல் மேலாண்மையில் அதிகம் பேசப்படும் வார்த்தை 'மினிமலிஸ்ட் லிவ்விங்'. அதாவது குறைவானவற்றைக் கொண்டு நிறைவாக வாழ்வது. திருமுழுக்கு யோவானின் வாழ்க்கை முறை நமக்குச் சவாலாக இருக்கின்றது: 'ஒட்டக முடி ஆடை, தோல் கச்சை, வெட்டுக்கிளி, காட்டுத்தேன்'. இந்த நான்கையும் நாம் பயன்படுத்த வேண்டும் என்பது பொருள் அல்ல. மாறாக, தன்னை அறிந்த ஒரு வாழ்வு. தன்னை அறிந்த ஒருவர், தன்னிலே கட்டின்மை அல்லது விடுதலை பெற்ற ஒருவர் தன் அடையாளங்களைத் தன் ஆடையோடும், தன் உணவோடும் இணைத்துக்கொள்வதில்லை. 'உணவைவிட உடலும், உடையைவிட உயிரும்' என்று இயேசு சொல்வதன் பொருள் இதுவே. அதாவது, வாழ்வில் எல்லாமே இரண்டு கோடுகள். ஒரு கோட்டைவிட மற்ற கோடு சிறியதாக வேண்டுமென்றால் ஒரு கோட்டை நீட்டிவிட வேண்டும். தனக்கு தன் தயாரிப்பு பணி என்ற கோடு பெரியதாக இருந்ததால் திருமுழுக்கு யோவான் தன் உடை மற்றும் உணவு என்ற கோட்டைக் குறுக்கிக் கொண்டார்.
 இந்த கிறிஸ்து பிறப்புக் காலம் என் வாழ்வில் சிறுநுகர் பண்பை வளர்த்தால் நலம். தன் மகனுக்காக மாட மாளிகை கட்டவில்லை கடவுள். மாறாக, ஏற்கனவே இருக்கின்ற மாட்டுத் தொழுவம் ஒன்றை அப்படியே எடுத்துப் பயன்படுத்திக்கொண்டார். இதுதான் சிறுநுகர் வாழ்வு. இன்று நாம் பயன்படுத்தும் சிறிய குண்டூசியிலிருந்து மேலே அனுப்பும் விண்கலம் வரை நாம் இந்தப் பூமியைச் சுரண்டிச் செய்தவைதாம். சுரண்டிக்கொண்டே, வாங்கிக்கொண்டே, குவித்துக்கொண்டே இருப்பதைக் கொஞ்சம் நிறுத்தி இன்னும் கொஞ்சம் இரசிக்கவும், வாழவும் அழைப்பு விடுக்கின்றார் திருமுழுக்கு யோவான்.  
5. மாசுமறுவற்றவர்களாய், நல்லுறவு கொண்டவர்களாய்  உரோமையின் பேதுரு பசிலிக்காவின் 'பியத்தா' (வியாகுல மாதா) சிலையை வடிக்கின்ற மைக்கேலாஞ்சலோ அன்னை மரியாளின் முகத்தை அழகான இளமையான முகமாக வடிக்கின்றார். இதற்கான காரணம் கேட்டபோது 'மாசில்லாத இடத்தில் நோயும், முதுமையும், இறப்பும் இல்லை. அங்கே வளமையும், இளமையும், அழகுமே இருக்கும்' என பதில் தருகிறார்.  பாலைவனம், பாழ்நிலம், பள்ளத்தாக்கு, மலை-குன்று, கோணலானவை இவை அனைத்தும் நம் உறவு நிலைகளின் உருவகங்களாகக்கூட இருக்கலாம். இவற்றை சரி செய்யவும் இன்றைய நாள் நமக்கு அழைப்பு விடுக்கிறது. 
 இறுதியாக,   நம்பிக்கை என்று நாம் இன்று ஏற்றும் மெழுகுதிரி நற்செய்தியின் தொடக்கமாகட்டும் நம் வாழ்வில். அந்த திரியின் ஒளியில் நாமும் ஒளிர்வோம் நற்செய்தியாக!





Saturday 2 December 2017

திருவருகைக்காலம் முதல் ஞாயிறு

3 டிசம்பர் 2017 திருவருகைக்காலம் முதல் ஞாயிறு

I. எசாயா 63:16-17, 64:1-3,8 / II. 1 கொரிந்தியர் 1:3-9  / III. மாற்கு 13:33-37

விழித்திரு

குகைக்குள்யே…

அருள்பணி லூர்துராஜ் பாளை மறைமாவட்டம்

இரண்டாம் உலகப் பெரும்போர் முடிந்த நேரம் ஜெர்மனி நாட்டு அதிபர் கொன்ராடு அடனாவர் வானொலி, தொலைக்காட்சி வழியாக மக்களுக்கு உரையாற்றுகிறார் "அழிவு சிதைவு இடிபாடுகளுக்கு இடையே நின்று கொண்டிருக்கிறோம். நாம் விழித்தெழும் நேரம் வந்து விட்டது. வீறுகொண்டு கரம் கோர்ப்போம் புதிய ஜெர்மனியைக் கட்டி எழுப்பக் கிடைக்கும் எந்த ஒரு வாய்ப்பையும் நழுவ விடக்கூடாது.
மக்கள் கூர்ந்து கேட்டனர். விழித்து எழுந்தனர். விளைவு? வளமான, செழிப்பான புதிய ஜெர்மனி.
திருவருகைக் காலத்தைத் தொடங்கும் போதே திருவழிபாட்டு முழக்கம் - விழிப்பாயிருங்கள் என்பதுதான் காரணம்? 'உறக்கத்தினின்று விழிதெழும் நேரம் ஏற்கனவே வந்துவிட்டது. நாம் கிறிஸ்துவின்மேல் நம்பிக்கை கொண்டபோது இருந்ததைவிட மீட்பு இப்பொழுது மிக அண்மையில் உள்ளது" (ரோமை,131)
போரினால் உண்டான பாதிப்பால் அச்சமும் அதிர்ச்சியும் கொண்ட ஜெர்மனி நாட்டு மக்களின் உள்ளத்தில் எத்தகைய உணர்வுகள் கிளர்ந்தெழுந்தனவோ அதே தாக்கத்துக்கு ஆளான இஸ்ரயேல் மக்களின் மன உணர்வுகளின் சித்தரிப்பே முதல் வாசகம்
- பபிலோனிய அடிமைத்தனத்துக்குப்பின் தாயகம் திரும்பிய நிலையில் அழிந்துபட்ட எருசலேமை, சிதைந்துவிட்ட திருக்கோவிலைச் கண்டு சிந்தையில் அமைதியிழந்து செல்வச் செழிப்பிழந்து இறைவழிபாட்டின் வளமை இழந்து வார்த்தைக்குள் அடங்காத வருத்தத்தை சோகத்தை ஏக்கத்தை வெளிப்படுத்தும் மன்றாட்டான புலம்பல்.
- இந்த இழிநிலைக்கெல்லாம் தங்கள் பாவ வாழ்வே, இறைவனை விட்டு அகன்ற அவலமே காரணம் என்ற தன்னிலை உணர்வு "நாங்கள் யாவரும் இலைபோல் கருகிப்போகின்றோம். எங்கள் தீச்செயல்கள் காற்றைப்போல் எங்களை அடித்துச் சென்றன" (எசாயா 64:6)
- இந்தத் தன்னுணர்வுக்கிடையிலும் உடைந்து போன இதயத்தின் அடித்தளத்தில் நம்பிக்கை வேரற்றுப் போகவில்லை. "ஆண்டவரே உம் வழிகளிலிருந்து எங்களைப் பிறழச் செய்ததேன்? உமக்கு அஞ்சி நடவாதவாறு எங்கள் நெஞ்சங்களைக் கடினப்படுத்தியதேன்?” (எசாயா 53:7) என்று தங்கள் தவறுகளுக்கெல்லாம் கடவுளுக்குமே பங்கு உண்டு என்பது போலப் புலம்பி "நாங்கள் களிமண், நீர் எங்கள் குயவன்" (எசா64:8) சீரழிந்த தன் வேலைப் பாடுகளைச் சீர்செய்ய இறைவனே இறங்கிவர உரிமையோடும் எதிர்பார்ப்போடும் கூடிய அழைப்பு
- களிமண் தானாகக் குடமாக முடியுமா? வனைந்திடக்குயவன் அங்கே வரவேண்டாமா? கற்பாறை தானாகச் சிலையாக முடியுமா? செதுக்கிடச் சிற்பி அங்கே வரவேண்டாமா? பாவியான மனிதன் தன் சொந்த முயற்சியால் மட்டும் படைத்தவனைச் சென்றடைய முடியுமா? "நீர் வானத்தைப் பிளந்து (கிழித்து என்பது பழைய மொழிபெயர்ப்பு) இறங்கி வரமாட்டீரோ?” (எசா.64:1) இந்த இதய எழுச்சி, ஏக்கக்கதறல் இறைவன் எனக்குத் தேவை அதுவும் உடனடித் தேவை என்ற அவசர எதிர்பார்ப்புக் கலந்த தவிப்பு: திருப்பாடல் 144:5இல் கூட இதே துடிப்பின் வெளிப்பாடு: "ஆண்டவரே உம் வான்வெளியை வளைத்து இறங்கி வாரும் இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையே உள்ள தடையை அவரால் மட்டுமே தகர்க்க முடியும். நம்மால் இயலாது நம்மால் முடிந்ததெல்லாம் ஓசோன் படலத்தில் ஒட்டைகளைப் போட்டதுதான்!
ஆண்டவர் வருவார். "இந்த இயேசு உங்களிடமிருந்து விண்னேற்றமடைந்ததைக் கண்டீர்கள் அல்லவா? அவ்வாறே அவர் மீண்டும் வருவார்' (தி.ப1:11) அதற்காக வானத்தை அண்ணாந்து பார்த்துக் கொண்டே நிற்பதா?
'விழிப்பாய் இருங்கள் ஏனெனில் வீட்டுத்தலைவர். எப்போது வருவார் என உங்களுக்குத் தெரியாது (மாற்கு 13:35)
சென்னையில் ஓர் அரசு அலுவலர் தன் ஸ்கூட்டரை வெளியே நிறுத்திவிட்டு மதிய உணவை முடித்து வெளியே வந்தவருக்கு ஒரே அதிர்ச்சி. ஸ்கூட்டரைக் காணோம். அங்குமிங்கும் தேடி அலைமோதிய அவர் சிறிது தொலைவில் ஸ்கூட்டரைப் பார்க்கிறார். மகிழ்ச்சியோடு அருகில் செல்கிறார். ஸ்கூட்டரில் ஒரு கடிதமும் 2 சினிமா டிக்கெட்டுகளும் இருந்தன. "ஐயா, எங்களை மன்னியுங்கள். ஒர் அவசர வேலைக்காக வண்டியை எடுத்துச் சென்றோம். சொல்லாமல் எடுத்துச் சென்ற குற்றத்துக்காக ரிசர்வ் செய்யப்பட்ட இந்த டிக்கெட்டுகளை வைத்துள்ளோம். உங்கள் மனைவியோடு இன்று மாலையில் படம் பார்த்து மகிழுங்கள்” என்பது கடித வாசகம், இரட்டிப்பான மகிழ்ச்சி உற்சாகத்தோடு திரையரங்கு சென்று திரும்பிய போது வீடே கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. விழிப்புணர்வைக் குலைக்க, கவனத்தைச் சிதறடிக்க, சாத்தான் எப்படியெல்லாம் திட்டமிடுகிறான். செயல்படுகிறான்.
விழித்துக் கொண்டோர் எல்லாம் பிழைத்துக் கொண்டார்
குறட்டை விட்டோர் எல்லாம் கோட்டை விட்டார்.
"சுதந்திரம் இருளில் வாங்கினோம். இன்னும் விடியவில்லை என்று யார் சொன்னது? விடிந்துவிட்டது. இன்னும் நாம்தாம் விழித்தெழவில்லை நாளை என்பது விடியலில் அல்ல, விழித்தலில் உள்ளது.


என் நினைவெல்லாம் இறைஇயேசுவே!

மகிழ்ச்சியுட்டும் மறையுரைகள்

குடந்தை ஆயர் அந்தோணிராஜ்

நம்பிக்கைக்குரிய (இரண்டாம் வாசகம்)கடவுள் நம்மைத் தேடிவரப் போகின்றார். அவரைக்குறித்து எசாயாமுதல் வாசகத்தில், ஆண்டவரே நீரே எங்கள் தந்தை நாங்கள்களிமண்,நீர் எங்கள் குயவன்; நாங்கள் அனைவரும் உம் கைவேலைப்பாடுகளே (எசா64:8) என்கின்றார்.
எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகம் கூறுவது போல, முற்காலத்தில் பலவகைகளில் இறைவாக்கினர் வழியாக நமது மூதாதையருடன் பேசிய கடவுள், நமது காலத்தில் தனது மகன் வழியாகப் பேசப்போகின்றார்.
கடவுள் நம்மைசந்திக்கவரும்போது நாம் விழிப்பாயிருக்கவேண்டும் என்று இயேசு நமக்கு இன்றைய நற்செய்தியின் வழியாக அறிவுறுத்துகின்றார்.
விழித்திருத்தல் என்றால் என்ன? என்பதை சுட்டிக்காட்ட இதோ ஒரு நிகழ்வு
இளைஞன் ஒருவன் ஒரு ஞாளியிடம் சென்று. நான் வாழ்க்கையில் வெற்றி அடைய என்ன செய்ய வேண்டும்? என்றான். ஞானியோ, நீ இருபத்திநான்கு மணிநேரமும் விழிப்பாயிருஎன்றார்.
சற்று புரியும்படிசொல்லுங்களேன் என்றான் இளைஞன். சரி, என்று சொல்லி குளம் ஒன்றிற்கு அந்த இளைஞனை அந்த ஞானி அழைத்துச் சென்றார். தண்ணிரில் இருவரும் இறங்கினார்கள்.
திடீரென அந்த இளைஞனின் தலையைதண்ணிருக்குள் அமுக்கினார் அந்த ஞானி. இளைஞனோதிணறிக்கொண்டு வெளியே வரமுயற்சித்தான். உடனே அவனுக்கு அந்த ஞானி விடுதலை அளிக்கவில்லை! சற்றுநேரம் கழித்து அந்த இளைஞனின் தலைக்குச் சுதந்தரம் அளித்தார். அந்த இளைஞனின் தலை தண்ணிரைவிட்டு வெளியே வந்ததும் ஞானி, நீ தண்ணிருக்குள் இருந்தபோது உன் நினைவெல்லாம் எங்கே இருந்தது? என்றார். அவனோ,
தண்ணிரைவிட்டு வெளியே வரவேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தது என்றான். வேறு எதைப்பற்றியாவது நினைத்தாயா? என்றார் ஞானி இளைஞனோ, இல்லை என்றான்.
அப்போதுஞானி, உன் எண்ணமெல்லாம் நீளதைவிரும்புகின்றாயோ அதன்பக்கம் மட்டுமே திரும்பியிருந்தால், எங்கும் எப்போதும் எதிலும் உன் அறிவு தூங்காமல் விழித்திருந்தால் நீ வெற்றி அடைவாய் என்றார்.
நமது மனம் ஒரு வெற்றுக்காகிதம் போன்றது! அதில் தூக்கம் என்று எழுதினால் நாம் தூங்கிவிடுவோம். விழிப்பு என்று எழுதினால் விழித்திருப்போம், வெற்றி பெறுவோம்.
இந்தத் திருவருகைக்காலத்திலேநாம் எப்போதும்இறைஇயேசுவின் வருகையைப் பற்றியே நினைத்துக்கொண்டிருக்க வேண்டும்! அந்த விழிப்புணர்வு நம்மை எல்லாவித தீய எண்ணங்களிலிருந்தும் தீய செயல்களிலிருந்தும் தீய சக்திகளிடமிருந்தும் விடுவித்து, கடவுளை நாம் முறையாக வரவேற்க, நம்மையே நாம் தயாரித்துக்கொள்ள நமக்குப் பெரிதும் உதவும்.
நமது அன்றாட ஆன்மிக வாழ்க்கையில் சற்று கண்ணயர்ந்தாலும் போதும் அந்த நேரத்தைப் பயன்படுத்திக்கொண்டு சோதிப்பவன், சாத்தான் தீய எண்ணங்கள் என்னும் விதைகளை நமது மனமென்னும் நிலத்தில் விதைத்துவிடுவான்.
கதையில் வந்த இளைஞன் முழுமூச்சோடு தண்ணிரைவிட்டு வெளியே வர ஏங்கியதுபோல நாமும் இயேசு ஆண்டவரைச்சந்திக்க எங்கும், எதிலும், எப்பொழுதும், என்நினைவெல்லாம் இயேசுவே என வாழமுன்வருவோம். மேலும் அறிவோம் :
நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்
கெடுநீரார் காமக் கலன் (குறள் : 605).
பொருள் : விரைந்து செய்யவேண்டிய செயலை மெதுவாகக் காலம் நீட்டித்துச் செய்வது, செய்யக் கருதிய செயலை மறப்பது, சோம்பிக் கிடப்பது, தூங்கித் தொலைவது ஆகிய நான்கும் அழிந்து போகும் இயல்புடையார் விரும்பி அணியும் அணிகலன்கள் ஆகும்!

 


எல்லா வகையிலும் செல்வராக!

அருட்பணி இயேசு கருணாநிதி


இன்று திருவருகைக்காலத்தின் முதல் ஞாயிறு. இன்று திருவழிபாட்டு ஆண்டின் முதல் நாள். வாசகப் புத்தகம், கட்டளை செபம், திருப்பலி புத்தகம் என அனைத்தும் புதிதாகத் தொடங்கும். திருவருகைக்காலத்தை திருஅவை மூன்று நிலைகளில் புரிந்துகொள்கிறது: ஒன்று, காலத்திற்கும் இடத்திற்கும் அப்பாற்பட்ட கடவுள் காலத்திற்கும், இடத்திற்கும் உட்பட்டு மனித வரலாற்றில் நுழைந்த மனுவுருவாதலை, முதல் வருகையை, மறுகொண்டாட்டம் செய்யும் கிறிஸ்து பிறப்பு விழா கொண்டாட்டத்திற்கான தயாரிப்பு காலம். இரண்டு, 'நீங்கள் காண மேலேறிச் சென்ற இயேசு மீண்டும் வருவார்' (திப 1:11) என்ற வானதூதரின் வார்த்தைகள் நிறைவேறும் என்று நம்பி இயேசுவின் இரண்டாம் வருகைக்குத் தயாரிக்கும் காலம். மூன்று, அன்றாடம் சின்னஞ்சிறு நிகழ்வுகளிலும், சின்னஞ்சிறு நபர்களிலும் வரும் இயேசுவின் மூன்றாம் வருகையை உணர்ந்தவர்களாய் எல்லாரும் எல்லாமும் - நம்பிக்கை, அமைதி, மகிழ்ச்சி, அன்பு - பெற்றுக்கொள்ள நம்மைத் தூண்டும் காலம்.
கிறிஸ்துவின் பிறப்பை ஒவ்வொரு நற்செய்தியாளரும் ஒவ்வொரு முறையில் பதிவு செய்கிறார்கள்: 'இதோ கன்னி கருவுற்று ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார். அக்குழந்தைக்கு இம்மானுவேல் எனப் பெயரிடுவர்'  (காண். மத் 1:22-23) என்று மத்தேயு நற்செய்தியாளரும்,
'இன்று ஆண்டவராகிய மெசியா என்னும் மீட்பர் உங்களுக்காகத் தாவீதின் ஊரில் பிறந்திருக்கிறார். குழந்தையைத் துணிகளில் சுற்றி தீவனத் தொட்டியில் கிடத்தியிருப்பதைக் காண்பீர்கள். இதுவே உங்களுக்கு அடையாளம்' (காண். லூக் 2:11-12) என்று லூக்கா நற்செய்தியாளரும்,
'வாக்கு மனிதர் ஆனார். நம்மிடையே குடிகொண்டார்' (காண். யோவா 1:14) என்று யோவான் நற்செய்தியாளரும் பதிவு செய்கின்றனர்.
ஆனால் பவுலோ, 'நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அருஞ்செயல்களை அறிந்திருக்கிறீர்களே! அவர் செல்வராயிருந்தும் உங்களுக்காக ஏழையானார். அவருடைய ஏழ்மையினால் நீங்கள் செல்வராகுமாறு இவ்வாறு செய்தார்' (காண். 2 கொரி 8:9) எனப் பதிவு செய்கின்றார்.  'செல்வராயிருக்கும் கடவுள் ஏழ்மையானார்' என்பதை 'கடவுள்தன்மையில் இருந்த அவர் மனிதத்தன்மை ஏற்றார்' என்றும், 'நாம் கடவுள்தன்மையை அடையுமாறு அவ்வாறு செய்தார்' என்றும் புரிந்துகொள்ளலாம்.
ஆக, கிறிஸ்து பிறப்பின் மையம் இதுதான்: 'செல்வம் ஏழையானது.' எதற்காக? 'அனைவரையும் செல்வராக்க!'  செல்வம் என்பது வெறும் பணம் அல்லது பொருளா? இல்லை. நல்ல வாழ்க்கை முறை, நல்ல உடல்நலம், நம்மைச் சுற்றியிருக்கும் உறவுகள், நாம் இரசிக்கும் இயற்கை, நம் மனித பலவீனம் என அனைத்தும் நம் செல்வங்களே. அல்லது, எப்போது நம் நிறைவு கொண்டவர்களாக உணர்கிறோமோ அப்பொழுதெல்லாம் நாம் செல்வர்களாயிருக்கிறோம்.
ஆக, திருவருகைக்காலத்தின் முதல் ஞாயிறாகிய இன்று, 'செல்வராவது என்றால் என்ன?' என்று சிந்திப்போம். இன்றைய இரண்டாம் வாசகத்தில் (1 கொரி 1:3-9) கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்தின் முன்னுரையை வாசிக்கக் கேட்கின்றோம். 'கிறிஸ்துவுடன் இணைக்கப்பெற்றுச் சொல்வன்மையும் நிறையறிவும் பெற்று. எல்லா வகையிலும் செல்வர்களானீர்கள் ... எதிலும் குறையே இல்லை' என்று கொரிந்து நகர மக்களை வாழ்த்துகின்றார் பவுல்.  கிறிஸ்துவோடு  இணைந்திருத்தல் நம்மைச் செல்வாராக்குகிறது என்பது பவுல் தரும் பாடம். இதுவே திருவருகைக் காலத்தின் முதல் ஞாயிறு தரும் பாடமும் கூட.  கிறிஸ்துவோடு இணைந்திருத்தல் என்பதை நாம் எப்படி புரிந்து கொள்வது?  இன்றைய மூன்றாம் மற்றும் முதல் வாசகங்கள் பயன்படுத்தும் மூன்று உருவகங்கள் வழியாக இதைப் புரிந்துகொள்ளலாம். அவை எவை?
அ. பொறுப்புணர்வோடு இருக்கும் பணியாளர்
ஆ. விழிப்போடு இருக்கும் வாயில் காவலர்
இ. தன்னையே குயவன் கையில் ஒப்படைக்கும் களிமண்
ஆக, 'பொறுப்புணர்வு,' 'விழிப்பு,' 'தற்கையளிப்பு' என்னும் மூன்று குணங்கள் இருந்தால், அல்லது இவற்றைக் கொண்டிருக்கும் 'பணியாளர், வாயில் காவலர், களிமண்' போல இருந்தால் நாமும் கிறிஸ்துவோடு இணைந்திருக்கவும், அதன் வழியாக செல்வராகவும் முடியும். இன்றைய நற்செய்தி வாசகத்திலிருந்து (காண். மாற் 13:33-37) தொடங்குவோம்.
நெடும் பயணம் செல்ல இருக்கும் ஒருவரின் வீட்டில் நடக்கும் நிகழ்வுகளை, அங்கே இருக்கும் பரபரப்பைப் பற்றிப் பேசுகின்றார் இயேசு. பயணம் பற்றிய இன்றைய நம் புரிதலுக்கும், அன்றைய புரிதலுக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. நெடும்பயணம் மேற்கொள்ள வேண்டும் - அல்லது கலிஃபோர்னியா செல்ல வேண்டும் - என வைத்துக்கொள்வோம். நாம் என்ன செய்வோம்? விமானம் வழியாக செல்கின்றோம். இந்த விமானம் எத்தனை மணிக்குப் புறப்படும், எத்தனை மணிக்கு தரையிறக்கும் என்பது மட்டுமல்லாமல், ஒரு குறிப்பிட்ட நேரத்தில் இந்த விமானம் எந்த இடத்தில் பயணம் செய்துகொண்டிருக்கிறது என்பதையும் நாம் அறிந்துகொள்ள முடியும். நம் வருகையை அங்கிருக்கும் நம் உறவினர்களுக்கு அல்லது நண்பர்களுக்கு அலைபேசி வழியாகச் சொல்லிவிட முடியும். குறுந்தகவல் அனுப்பவும், மின்னஞ்சல் செய்யவும் முடியும். ஆக, இன்று நாம் மேற்கொள்ளும் எல்லாப் பயணங்களும் எப்படி தொடங்கும், எப்படி முடியும் என்பதை ஓரளவு நம்மால் அறிந்துகொள்ள முடியும்.
ஆனால், இயேசுவின் காலத்தில் அப்படி அன்று. பாலஸ்தீனம் ஒரு பாலைவனம். நெடும்பயணம் செல்ல முதலில் நிறைய பணம் வேண்டும். ஒட்டகம் வேண்டும். வேலைக்காரர்கள், உணவு, மருந்து, தண்ணீர் என அனைத்தையும் பத்திரப்படுத்த வேண்டும். பயணித்தில் பாதுகாப்பிற்கு வாள் வாங்க வேண்டும். இரவில் தங்க கூடாரத்துணி, நெருப்பு என நிறைய தயாரிப்புக்களை செய்ய வேண்டும். இவ்வளவு தயாரிப்புக்களோடு சென்றாலும் திரும்பி வருவோம் என்ற உறுதி கிடையாது. மேலும் அந்த திரும்பி வருதலும் எப்போது என்றும் சொல்லிவிட முடியாது. 'போன நிலாவுக்கு போனவர் இந்த நிலாவுக்கும் வரல' என்று அகநானூற்றில் 'நிலாவை' வைத்து கணக்குப் பார்த்ததுபோல உறவினர்கள் கணக்குப் போட்டுக் காத்துக்கொண்டிருப்பர். மேலும் திரும்பி வருதல் பல நேரங்களில் உறுதி இல்லை என்பதால் வழக்கமாக நெடும்பயணம் செல்ல இருப்பவர் தன்னிடம் இருக்கும் ஆடுகள், மாடுகள்,  கோழிகள், புறாக்கள், தானியங்கள், காசுகள் அனைத்தையும் தன் பணியாளர்களுக்குப் பிரித்துக்கொடுத்துவிட்டுச் செல்வார். இதற்கான சான்றை நாம் 'தாலந்து எடுத்துக்காட்டிலும்' பார்க்கிறோம். இப்படியாக தங்கள் தலைவரின் சொத்துக்களைக் பகிர்ந்து பெற்றுக்கொண்ட பணியாளர்கள் என்ன செய்ய வேண்டும் என்றும், எப்படி இருக்க வேண்டும் என்பதை நற்செய்தி வாசகத்தின் இறுதிப் பகுதி சொல்கிறது.
தம் பணியாளர் ஒவ்வொருவருக்கும் அவரவருடைய பணிக்குப் பொறுப்பாக்குகின்றார் தலைவர். ஆக, இங்கே பணி உயர்வு நடக்கிறது. அதாவது, இவ்வளவு நாள் வீடு கூட்டிக் கொண்டிருந்தவர் இனி வீட்டின் சுத்தத்திற்கு பொறுப்பாளர் ஆகிறார். இவ்வளவு நாள் மாட்டுக்கு தீவனம் போட்டுக்கொண்டிருந்தவர் மாட்டுக்குப் பொறுப்பாளர் ஆகிறார். இவ்வளவு நாள் உணவு சமைத்தவர் உணவு சமைக்கும் பணிக்கு பொறுப்பாளர் ஆகின்றார். இவ்வளவு நாள் வீட்டிற்குக் காவல் செய்தவர் வீட்டுக்கே பொறுப்பாளர் ஆகின்றார். ஆக, பணியாளர் நிலையிலிருந்து ஒருவர் 'பொறுப்பாளர்' நிலைக்கு உயர்த்தப்படுகின்றார் என்றால் அவர் இன்னும் அதிக 'பொறுப்புணர்வை' பெற வேண்டும். இவ்வளவு நாள்கள் அடுத்தவர் சொல்லியே செய்துகொண்டிருந்த அவர் இன்று முதல் தானே செயல்பட வேண்டும். முடிவுகளைத் தானே எடுக்க வேண்டும். அந்த முடிவுகளால் வரும் விளைவுகளையும் எதிர்கொள்ள வேண்டும். எந்நேரமும் விழிப்பாக இருக்க வேண்டும். ஏனெனில் தான் பெற்றிருக்கின்ற சொத்து தன் தலைவருடையது. தன் சொத்தைக் காப்பதை விட விழித்திருந்து காக்க வேண்டும்.
நள்ளிரவில் வருவாரா? - அப்படி என்றால் விளக்குகள் ஏற்றி இருக்க வேண்டும்.
சேவல் கூவும் வேளையில் வருவாரா? - அப்படி என்றால் வீட்டு நாய்கள் கட்டப்பட வேண்டும்.
காலை வேளையில் வருவாரா? - அப்படி என்றால் பணியாளர் ஊர் சுற்றாமல் வீட்டில் இருக்க வேண்டும்.
ஆக, எந்த நிலையிலும் தயார்நிலை இருக்க வேண்டும்.  'பொறுப்புணர்வு,' மற்றும் 'விழிப்பு' இருக்கும்போது நாம் தயார்நிலையில் இருக்கின்றோம். இரண்டுமே அவசியம். வெள்ளம் வருவதை எதிர்கொள்வது எப்படி என்று கற்றுவிட்டு, அதற்குத் தேவையான முன்னேற்பாடுகளைச் செய்துவிட்டு, நாம் தூங்க ஆரம்பித்தால் அதனால் என்ன பயன்? அல்லது விழித்து மட்டும் இருத்துக்கொண்டு எந்த முன்னேற்பாடுகளையும் செய்யாமல் இருந்தால் அதனால் என்ன பயன்? ஆக, 'பொறுப்புணர்வு,' மற்றும் 'விழிப்பு' இரண்டும் சேர்ந்தே செல்ல வேண்டும்.
1. முதல் பாடம்: பொறுப்புணர்வு - 'நிகழ்வு ஒன்றை அல்லது நமக்கு நடக்கும் நிகழ்வு ஒன்றை எதிர்கொண்டு அதற்கேற்ற, நேரத்திற்குத் தகுந்த எதிர்வினை ஆற்றுவதே பொறுப்புணர்வு.' நாளை நான் தேர்வு எழுத வேண்டும் என்பது நிகழ்வு என வைத்துக்கொள்வோம். இந்த தேர்வை எதிர் கொள்ள தகுந்த முறையில் படிப்பது பொறுப்புணர்வு.
2. இரண்டாம் பாடம்: விழிப்பு - விழிப்பு என்பதை தூக்கமின்மை என்று நாம் புரிந்துகொள்ளலாமா? இல்லை. இன்றைய நம் வாழ்க்கை முறை நம்மை பரபரப்பாகவே வைத்திருக்கிறது. எங்கு பார்த்தாலும் பரபரப்பு? பரபரப்பான செய்திகள், பரபரப்பான விற்பனை, பரபரப்பான பயணம், பரபரப்பான வேலை, பரபரப்பான உரையாடல்கள், பரபரப்பான கொண்டாட்டங்கள். விளைவு, இரவில் தூக்கம் இன்மை. இன்று நம்மை வாட்டும் பெரிய நோய் 'தூக்கமின்மை.' தூக்கத்திற்கு மருந்து சாப்பிடுவது எல்லாராலும் ஏற்றுக்கொண்ட ஒன்று என்றாகிவிட்டது. தூக்கமின்மையின் பொருள் பரபரப்பு. குழந்தைகளும், வயதானவர்களும் எளிதில் தூங்கிவிடுகிறார்கள். எப்படி? 'வாழ்வின் வேகம் குறைந்தால் தூக்கம் தானாக வந்துவிடும்'. குழந்தைகளுக்கும், வயதானவர்களுக்கும் பரபரப்பு இல்லை. ஆக, விழிப்பு என்பது தூக்கமின்மையோ அல்லது பரபரப்போ அன்று. மாறாக, 'காத்திருத்தல்' அல்லது 'எதிர்நோக்கி இருத்தல்'. இதற்கு நல்ல எடுத்துக்காட்டு, 'வீட்டு வாயில்காவலர்.' இன்றைய வாயில்காவலர்கள் சிசிடிவி கேமராவை ஆன் செய்துவிட்டு அல்லது கதவுகளில் சென்சார் மற்றும் ஆன்ட்டி-தெஃப்ட் அலார்ம் பொருத்துவிட்டு தூங்கிவிடுகிறார்கள். இயேசுவின் சமகாலத்து பாலஸ்தீனத்தில் அப்படி அல்ல. வீட்டின் முன் அல்லது தோட்டத்தின் நடுவில் ஒரு கோபுரம் இருக்கும். அந்தக் கோபுரத்தின் மேல் ஏறி நின்றுகொள்ள வேண்டும் காவலர். கையில் ஒரு பெரிய குச்சியும், காலுக்கடியில் நிறைய கற்களும் வைத்துக்கொள்ள வேண்டும். ஆபத்து தூரத்தில் வரும்போது கற்களைக் கொண்டு எறிய வேண்டும். அருகில் வந்தால் கீழே குதித்து குச்சியோடு எதிர்கொள்ள வேண்டும். பராக்கிற்கும், கவனச்சிதறல் களுக்கும் இடம் கொடுக்கக்கூடாது. இவ்வாறாக, செய்ய வேண்டிய வேலையை சரியாகச் செய்வது விழிப்பு நிலை. இங்கே நாம் மற்றொன்றையும் கற்றுக்கொள்ள வேண்டும். 'பதறிய காரியம் சிதறிப் போகும்' என்பது முதுமொழி. பதற்றம் மற்றும் பரபரப்பு குறையும்போது நாம் செய்யும் வேலையை நம்மால் நிறைவாகவும், படைப்பாற்றலோடும் செய்ய முடியும்.
இன்றைய முதல் வாசகத்தில் (காண். எசாயா 63:16-17, 64:1,3-8) மூன்றாவது உருவகத்தைப் பார்க்கின்றோம். 'ஆண்டவரே, நாங்க அப்படி ஆயிட்டோம், இப்படி ஆயிட்டோம். நீர் எங்களைக் கண்டுகொள்ளவில்லை. அப்படி! இப்படி!' என்று புலம்பும் எசாயா, இறுதியாக, 'ஆண்டவரே, நீரே எங்கள் தந்தை. நாள் களிமண். நீர் எங்கள் குயவன். நாங்கள் அனைவரும் உம் கைவேலைப்பாடுகள்' என்று சரணாகதி ஆகின்றார். 'குயவன் கையில் இருக்கும் களிமண்' - இதற்கு வாய் இல்லை. தன் விருப்பு வெறுப்பை இது பதிவு செய்ய முடியாது. குயவன் தன்மேல் எவ்வளவு தண்ணீர் ஊற்றுவான், எவ்வளவு இறுக்கமாக பிசைவான், எந்தச் சக்கரத்தில் வைத்து நம்மை எவ்வளவு வேகத்தில் சுற்றுவான், எந்த வெயிலில் காய வைப்பான், எந்த நெருப்பில் சுடுவான், எந்த வர்ணம் பூசுவான் என எதையும் தீர்மானிக்க முடியாது களிமண். ஆனால், இது தன்னையே தன் தலைவன் கையில் ஒப்படைத்துவிட்டால் அழகிய மண்பாண்டமாக மாற முடியும். இதுதான்,
3. மூன்றாவது பாடம்: தற்கையளிப்பு. 'அவரின் கையில் நாம் குயவர்கள்' என்று அவரின் திட்டதிற்கு அப்படியே சரணாகதி ஆவது. கிறிஸ்து பிறப்பு கொண்டாட்ட நிகழ்வுகளில் நாம் சந்திக்கும் மரியாள், யோசேப்பு, சக்கரியா, எலிசபெத்து, இடையர்கள், மூன்று ஞானியர், சிமியோன், அன்னா என அனைவருமே தற்கையளிப்பு செய்தவர்கள். தங்கள் திட்டங்களை எல்லாம் இறைத்திட்டங்களுக்காக மாற்றிக்கொண்டவர்கள்.
இறுதியாக, 'எல்லா வகையிலும் செல்வராக' என்பதே முதல் ஞாயிற்றின் நம் இலக்காக இருக்கட்டும். இதை அடைவதற்கான 'பொறுப்புணர்வு,' 'விழிப்பு,' 'தற்கையளிப்பு' ஆகிய பண்புகளை, 'பணியாளர்,' 'வாயில்காவலர்,' 'களிமண்' என்னும் உருவகங்கள் நமக்குக் கற்றுத் தரட்டும். எல்லா வகையிலும் செல்வராகும் நாம், நம் வாழ்வின் நிறைகளை அறியவும், நிறைகளை மட்டுமே மற்றவரில் காணவும், மற்றவரின் குறைகளை நம் செல்வத்தால் நிரப்பவும் துணிந்தால் கிறிஸ்து நம்மில் என்றும் வருகின்றார். திருவருகைக்கால வாழ்த்துக்களும், செபங்களும்!