Tuesday 30 October 2018

பொதுக்காலம் ஆண்டின் 31-ஆம் ஞாயிறு


பொதுக்காலம் ஆண்டின் 31-ஆம் ஞாயிறு



இன்றைய வாசகங்கள்


இணைச்சட்டம் 6:2-6
எபிரேயர் 7:23-28
மாற்கு 12:28-34

 


அன்பே நம் வாழ்வு

இறை இயேசுவில் அன்பார்ந்த சகோதரர்களே, சகோதரிகளே,

இன்றைய உலகம் பலவிதமான முன்னேற்றப் பாதைகளிலே கால் எடுத்து வைத்து 21-ஆம் நூற்றாண்டைக் கடந்து - கொண்டிருக்கிறது.
 மாதக் கணக்காக கடலிலே பயணம் செய்து அமெரிக்காவை அடைந்த மனிதன் இன்று சில மணி நேரங்களிலே ஒரே நாளிலே ஆகாய விமானம் மூலம் அடையத் துடிக்கிறான்.

தன் வீடு விட்டு தன் உறவினர் வீடு செல்ல தனி காரிலே, வாகனத்திலே செல்ல நெடுஞ்சாலையைத் தேர்ந்தெடுக்கிறான். ஏனெனில் தங்கு தடையின்றி தான் நினைக்கும் நேரத்தில் தான் விரும்பும் இடத்தை அடைய முடியும் என்பது அவனது திட்டம்.

வாழ்க்கையிலே இன்று பணம், பதவி, சொகுசான வாழ்வு விரைவில் பெற வேண்டுமானால் மருத்துவராகவோ, கணினி பொறியாளராகவோ, வழக்கறிஞராகவோ விளங்க வேண்டும் என்பதற்குப் படிப்பில் கவனம் செலுத்தி அத்தகையப் பயிற்சியைத் தேடுகின்றான்.

நோயற்ற வாழ்வும், ஆரோக்கியமான உடலும் கொண்டவனாகத் திகழ, தகுந்த தண்ணீரைப் பருகவும், அன்றாட உடல் பயிற்சியும், உணவும் பெற வழிவகைகளைத் தேடுகின்றான் மனிதன். இவ்வாறு மனித சமுதாயம் வாழ்வில் முன்னேற எடுக்கும் பாதைகளை, முயற்சிகளை அடுக்கிக்கொண்டே போகலாம்.

அன்பார்ந்தவர்களே, இதேபோல், இறை இயேசுவின் சீடத்துவ நிலையில் நீங்களும், நானும் நிறைவு பெற்று அவரைப் பின்பற்றும் நமக்குப் பலவிதமான கடமைகள் உண்டு. இவைகளில் எது முக்கியம்? தேவை? என்பதை நம் ஆண்டவரே நமக்குத் தெளிவாகத் தருகின்றார்.

மனிதன் தேடுதலிலே ஈடுபட்டவன். உம்மில் இளைப்பாறும் வரை என் உள்ளம் நிம்மதி காணவில்லையே என்று அகுஸ்தினார் கூறியது போல் மனித உள்ளம் இறைவனைத் தேடுகின்றது. தேடும் இந்த மனித உள்ளம் இறைவனை அடைய சிறந்த வழி என்ன?

இன்றைய வாசகங்கள் மிகத் தெளிவாக அந்த வழியை என்பதை மிக ஆணித்தரமாகத் தருகின்றன. இணைச் சட்டத்திலே (6:5) கூறப்பட்டதுபோல : நம் ஆண்டவராகிய கடவுள் ஒருவரே. இருவர் அல்ல. எனவே உன் முழு உள்ளத்தோடும், முழு மனத்தோடும் முழு ஆற்றலோடும் அன்பு செய்வாயாக (மாற்கு 12:30). இது முதற் கட்டளை. உன் மீது அன்பு கூறுவதுபோல, உன்னை அடுத்து இருப்பவர் மீதும் அன்பு காட்டுவாயாக (மாற்கு 12:31). இது இரண்டாம் கட்டளை. இவை இரண்டும் மேலான கட்டளை என நம் ஆண்டவர் இன்று நமக்குத் தருகிறார்.

ஆனால் நாம் எவ்வாறு கடவுளை அன்பு செய்கிறோம் என்பதை அறிய முடியும்? சிலர் சொல்லலாம். நான் தினமும் செபிக்கிறேன். செபமாலை சொல்லுகிறேன். விவிலியம் வாசிக்கிறேன். ஞாயிறு திருப்பலியில் தவறாது பங்கெடுக்கிறேன். இதனால் நான் இறைவனை அன்பு செய்கிறேன் என்று நீங்கள் கூறலாம். இவையெல்லாம் நமக்குத் தேவைதான். இவை அந்த அன்புக்கு இட்டுச் செல்லும் செயல்கள் என்பதை மறுக்க முடியாது.

ஆனால் இவைகள் நான் சரியான பாதையில் கடந்து செல்கின்றேன் என்பதற்குச் சாட்சியாக இருக்க முடியாது. ஏனெனில் நான் உங்களுக்குப் புதியதொரு கட்டளை கொடுக்கிறேன். நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல், நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள். இந்த அன்பால் நீங்கள் என் சீடர்கள் என்பதை எல்லாரும் அறிந்து கொள்வார்கள் (யோவா. 13:34) என்றார். சின்னஞ்சிறிய ஒருவருக்குச் செய்தபோதெல்லாம் நீ எனக்கே செய்தாய் (மத். 25:40) என்கிறார் ஆண்டவர்.

ஆனால் அன்புக்குரியவர்களே இன்று மனிதன் மதத்தால், மொழியால், இனத்தால், சாதியால் கூறுபோட்டு சங்கங்கள், கட்சிகள் என்று சுற்றுச் சுவரை எழுப்பி மனித மாண்பையே கொலை செய்து கொண்டிருக்கிறான். சாத்தானின் கூட்டங்கள் இரவும், பகலுமாக இந்த அழிவுப் பாதையிலே இட்டுச் சென்று கொண்டிருக்கிறது.

அன்பார்ந்தவர்களே! அழைக்கப்பட்டவர்களாகிய நாம் வாழ்வது எப்படி? அழுகிய நாற்றமெடுத்த தொழுநோயாளியின் புண்களையே கழுவித் துடைத்து கொண்டிருந்த அன்னை தெரெசாவைப் பார்த்து ஒருவன் கேட்டான், அம்மா! நான் 10000 ரூபாய் கொடுத்தாலும் இதைச் செய்ய மாட்டேன். உங்களால் இதைச் செய்ய எவ்வாறு முடிந்தது என்று. அன்னை சொன்னார்கள்: 'துன்புறும் கிறிஸ்துவையல்லவா இவனிடத்தில் நான் காண்கிறேன்' என்று. ஏன்! கிறிஸ்மஸ் நள்ளிரவில் திருப்பலிக் காண அன்னைத் தெரெசா தன் சகோதரிகளோடு இரவில் கல்கத்தாவில் நடந்து சென்றபோது அருகில் உள்ள மருத்துவமனையில் பக்கத்தில் உள்ள குப்பைத் தொட்டியில் பச்சிளம் குழந்தை குளிரிலே நடுங்கி அழும் சப்தம் கேட்டு திடுக்கிட்டார்கள். குழந்தையைத் தூக்கிக் கொண்டு மடத்திற்கு வந்து சுத்தம் செய்து புதிய ஆடை உடுத்தி அந்தக் குழந்தையைச் சுற்றி அமர்ந்து தாலாட்டுப் பாடி மகிழ்ந்தார்கள். ஆம் இந்த அன்பைத்தான் நம் ஆண்டவர் நம்மிடம் எதிர்பார்க்கின்றார். 

புனித பவுல் அடிகளார் (1 கொரி. 13:4) கூறுவது போல இந்த அன்பு பொறுமையுள்ளது, கனிவுள்ளது, பொறாமைப் படாது, இறுமாப்பு அடையாது, இழிவானதைச் செய்யாது, தன்னலம் நாடாது, தீங்கு நினையாது. மாறாக இந்த அன்பு அனைத்தையும் பொறுத்துக் கொள்ளும்.

இறுதியாகப் புனித அசிசியாரோடும் சேர்ந்து செபிப்போம். ஓ! தெய்வீகக் குருவே ஆறுதல் பெறுவதைவிட ஆறுதல் கொடுக்கவும், பிறர் என்னைப் புரிந்துகொள்வதை விட பிறரைப் புரிந்து கொள்ளவும், பிறர் அன்பைத் தேடுவதைவிட, பிறருக்கு அன்பு காட்டவும் எனக்கு அருள் புரியும்.





தேவை திசை மாறாத அன்பு கடவுளை நாம் முழு இதயத்தோடும், முழு அறிவோடும், முழு ஆற்றலோடும் அன்பு செய்கின்றோமா? ஒரு பங்குத் தந்தையிடம் அவரது பங்கு மக்களில் ஒருவர் வந்து, "சுவாமி, எனக்காக வேண்டிக்கொள்ளுங்கள்" என்றார். "செபிக்கும்போது ஏதாவது ஒரு குறிப்பிட்ட கருத்துக்காக செபிப்பது நல்லது. ஆகவே எந்தக் கருத்துக்காக செபிக்கவேண்டுமென்று கூறினால் நன்றாக இருக்கும்" என்றார் பங்குத் தந்தை, வந்தவரோ, "என் மனைவி என்னை அன்பு செய்ய வேண்டும்" என்று செபியுங்கள் என்றார். பங்குத் தந்தையோ, "ஏன், உங்களுக்கும், உங்கள் மனைவிக்குமிடையே ஏதாவது பிரச்சினையா?” என்றார். அதற்குக் கணவர், "அப்படியெல்லாம் ஒன்றுமில்லை சுவாமி. என் மனைவி நான் விரும்புகின்ற அளவுக்கு என்னை அன்பு செய்வதில்லை" என்றார்.

நிகழ்ச்சியில் வந்த கணவருக்கும், அவருடைய மனைவிக்கும் இடையே உள்ள பிரச்சினையைப் போன்றதுதான் நமக்கும் கடவுளுக்குமிடையே உள்ள பிரச்சினை. கடவுளைப் பார்த்து, "கடவுளே உமது மக்கள் நீர் விரும்பும் அளவுக்கு உம்மை அன்பு செய்கின்றார்களா?" என்று கேட்டால், கடவுள் என்ன பதில் சொல்வார்? "என் மக்கள் நான் விரும்பும் அளவுக்கு என்னை அன்பு செய்கின்றார்கள்” என்று கடவுள் கூறினால் (முதல் வாசகம், நற்செய்தி) நாம் மகிழ்ச்சி அடைவோம். அப்படிச் சொல்லமாட்டார் என்றால், நமது வாழ்க்கையைத் திருத்தி அமைத்துக்கொள்வோம்.

நமது இதயம் (உணர்வுகளின் கூட்டு) எப்பொழுதும் சூரியனைப் பார்த்திருக்கும் சூரியகாந்திப் பூவைப் போல் இறைவனைப் பார்த்திருக்க வேண்டும். நமது அறிவு (எண்ணங்களின் கூட்டு) எப்பொழுதும் ஞாயிறைப் பார்த்திருக்கும் தாமரையைப் போல கடவுளைப் பார்த்திருக்க வேண்டும். நமது ஆற்றல் (நமது செயல்களின் கூட்டு) நாளும், பொழுதும் ஆண்டவரைப் போற்றிக்கொண்டேயிருக்க வேண்டும். நமது இறை அன்பு | திசை மாறினால், நமது பிறர் அன்பு திசை மாறும் ! நமது இறை அன்பு திசை மாறும்போது மீட்பராம் இயேசுவின் துணையை நாடுவோம் (இரண்டாம் வாசகம்).

மேலும் அறிவோம் :
அன்பகத்(து) இல்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரந்தளிர்த்(து) அற்று (குறள் : 78).

பொருள் : உள்ளத்தில் அன்பு இல்லாமல் குடும்பம் நடத்துவது என்பது பாலைவனத்தில் பட்ட மரம் மீண்டும் துளிர்விட்டுத் தளிர்த்தது என்று கூறுவது போலாகும்! அன்பில்லாமல் குடும்பம் நடத்துவது கொடுமை மிக்கது!




ஒரு வழக்கறிஞருக்கு அடிக்கடி வயிற்றுப்போக்கு ஏற்பட்டது, ஏனென்றால், அவர் சட்டத்தைக் கரைத்துக் குடித்து விட்டாராம்! கிறிஸ்துவின் காலத்தில் வாழ்ந்த சட்ட வல்லுநர்களுக்கும் அடிக்கடி சட்ட வயிற்றுப் போக்கு ஏற்பட்டது. அவர்கள் கடவுள் தந்த பத்துக் கட்டளைகளை 613 சட்டங்களாகப் பெருக்கினர். இவற்றில் 248 சட்டங்கள் மனிதர் என்னென்ன செய்ய வேண்டும் என்று விதித்த நேர் மறைச் சட்டங்கள், எஞ்சியிருந்த 365 சட்டங்கள் மனிதர் என்னென்ன செய்யக்கூடாது என்று தடை செய்த எதிர்மறைச் சட்டங்கள். இச்சட்டங்கள் மனிதர் தாங்க முடியாத பெருசுமையாகிவிட்டன. மறைநூல் அறிஞர்களும் பரிசேயரும் "சுமத்தற்கரிய பழுவான சுமைகளைக் கட்டி மக்களின் தோளில் வைக்கிறார்கள்" (மத் 23:4) என்ற கிறிஸ்துவே கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இச்சூழலில் இன்றைய நற்செய்தியில் மறைநூல் அறிஞர் ஒருவர் கிறிஸ்துவை அணுகி வந்து அவரிடம், "அனைத்திலும் முதன்மையான கட்டளை எது?" (மாற் 12:28) என்ற கேட்டது நியாயமான கேள்வி, கிறிஸ்து எல்லாச் சட்டங்களின் சாரத்தை இரண்டே கட்டளைகளில் அடக்கிவிட்டால், விவிலியத்தை மேற்கோள் காட்டியே அவர் பதிலளிக்கிறார், இணைச்சட்ட நூலை மேற்கோள் காட்டி, கடவுளை முழு உள்ளத்துடன் அன்பு செய்வது முதன்மையான கட்டளை என்று அறிக்கையிடுகின்றார் (இச 8:4 5). லேவியர் நூலை மேற்கோள் காட்டி நம்மை நாம் அன்பு செய்வது போல் அடுத்திருப்பவரையும் அன்பு செய்வது இரண்டாம் கட்டளை என்று கூறுகிறார் (லேவி 19:18).

கிறிஸ்துவினுடைய போதனையின் புதிய அம்சம், அவர் இறையன்பையும் பிறரன்பையும் வெவ்வேறாகப் பிரித்துக் காட்டாமல், இரண்டையும் இணைத்துக் காட்டுகிறார். மேலும் பிறரன்புக் கட்டளை, இரண்டாம் கட்டளை முதலாவது கட்டளைக்கு இணையானது என்று கூற அவர் தயங்கவில்லை ) (மத் 22:39). உண்மையில் பிறரன்புதான் இறை அன்பின் வெளிப்பாடாகும்.

'அபு பென் ஆடம்' என்பவர் கண்ட ஒரு காட்சியில் ஒரு வானதூதர் கடவுளை அன்பு செய்வோரின் பட்டியலைக் காட்டினார். அதில் தன்னுடைய பெயர் இடம் பெறாததைக் கண்டு ஏமாற்றம் அடைந்த அவர் வானதூதரிடம் : "அபு பெண் ஆடம் தனது அயலாரை அன்பு செய்யும் மனிதன்" என்று எழுதும்படி கேட்டுக் கொண்டார். அடுத்த நாள் அதே வானதூதர் காட்சியில் இறையடியார்கள் பட்டியலைக் காட்டினார். அதில் அடி பென் ஆடத்தின் பெயர் முதலிடத்தில் இருந்தது. கண்ணுக்குப் புலப்படுகின்ற மனிதர்களை அன்பு செய்ய முடியாதவர்கள் கண்ணுக்குப் புலப்படாத கடவுளை அன்பு செய்ய இயலாது. அப்படி அவர்கள் சொன்னால், அது பச்சைப் பொய் என்கிறார் புனித யோவான் ( 1 யோவா 4:19),

இக்காலத்தில் அடுத்தவர்களுடைய பிரச்சினைகளைக் குறைந்த அளவு பொறுமையுடன் கேட்டால், அதுவே மாபெரும் அன்பாகும். இன்றைய மனிதர் பரபரப்பான உலகில் இயந்திரமயமான வாழ்க்கை நடத்துகின்றனர், அவர்களுக்கு மற்றவர்களுக்கு நேரம் ஒதுக்க மனமில்லை . "எல்லாரிடமும் கைக்கடிகாரம் உள்ளது; ஆனால் எவருக்குமே நேரம் இல்லை " {Everybady have a 'watch; but nobady has time.) ஒருவர் தன் நண்பருடன் ஒருமணி நேரம் பேசித் தன் பிரச்சினைகளைக் கொட்டித் தீர்த்தார். இறுதியில், "நன்றி நண்பா! என் தலைவலி எல்லாம் போய் விட்டது” என்றார், அதற்கு நண்பர் அவரிடம், "உன் தலைவலி எங்கும் போகவில்லை : எனக்கு இப்ப உன்னுடைய தலைவலி வந்துவிட்டது" என்றார், பிறருடையப் பிரச்சினைகளைக் கேட்பதால் நமக்குத் தலைவலி வந்தாலும் பரவாயில்லை, அவர்களுக்குப் பொறுமையுடன் செவிசாய்க்க வேண்டும். அவ்வாறு செய்யும்போது நாம் கிறிஸ்துவை நம் வாழ்வில்  பிரதிபலிக்கின்றோம். “மெய்யாகவே அவர் நம் பிணிகளைத் தாங்கிக் கொண்டார்; தமது துன்பங்களைச் சுமந்து கொண்டார்” (எசா 53:4),


கடவுளை அன்பு செய்கிறோம். ஆனால் இன்றைய முதல் வாசகத்தில் கடவுள் கேட்பதைப்போல் அவரை முழு உள்ளத்துடன் அன்பு செய்கின்றோமா ? கடவுளை அன்பு செய்வதில் நாம் இருமனப்பட்டவர்களாய் இருக்கின்றோம். ஒரு பாட்டி ஆலயத்திகுச் சென்றபோதெல்லாம், மிக்கேல் வானதூதரைத் தொட்டுக் கும்பிடுவார்; அதே நேரத்தில் அத்தூதரின் காலடியில் கிடக்கும் லூசிப்பேயையும் தொட்டுக் கும்பிடுவார். ஏன் அவர் அவ்வாறு செய்தார்? என்று கேட்டதற்கு அவர் கூறிய பதில்: “விண்ணகம் சென்றால், மிக்கேல் தூதர் கவனித்துக் கொள்வார்; நரகம் சென்றால் லூசிப்பேய் கவனித்துக் கொள்ளும். இருவரையும் திருப்திப்படுத்துவது நல்லது.

அப்பாட்டி போன்று நாமும் இருமனப்பட்டவர்களாய் உள்ளோம், ஒவ்வொரு கனமான பாவமும் ஒரு வகையில் சிலை வழிபாடு எனலாம். சிலைவழிபாட்டிற்குத் திருத்தூதர் பவுல் கூறும் இலக்கணம்; "படைக்கப்பட்டவற்றை வழிபட்டு அவற்றுக்குப் பணிவிடை செய்தார்கள்; படைத்தவரை மறந்தார்கள் " (உரோ 1:25). அதே திருத்தூதர் பொருளாசையைச் சிலைவழிபாட்டிற்கு ஒப்பிடுகிறார், கிறிஸ்துவும், நாம் இரு தலைவர்களுக்கு, ஊழியம் செய்ய முடியாது என்கிறார், "நீங்கள் கடவுளுக்கும் செல்வத்துக்கும் பணிவிடை செய் முடியாது" (மத் 5:24)

இன்றையப் பதிலுரைப்பாடல் (திபா 18) கூறுகிறது: "கடவுளே நமது ஆற்றல், கற்பாறை, மீட்பர், கேடயம், அரன்," அவரை முழுமையாக அன்புகூர நமக்கு அழைப்பு விடுக்கிறது,

எனவே கடவுளை முழுமையாக அன்பு செய்து, நம்மை நாம் அன்பு செய்வதுபோல நமக்கு அடுத்திருப்பவரையும் அன்பு செய்வோம். இறை அன்பு இல்லாத பிறர் அன்பு வேரற்ற மரம், பிறர் அன்பு இல்லாத இறை அன்பு கனிகொடாத மரம், பிறர்க்கு உதவி செய்வதைவிட பிறரிடம் இனிமையாகப் பேசுவது சிறந்ததாகும்.
.
அகார், அமர்ந்து ஈதலின் நன்றே முகன் அமர்ந்து
இன் நிசாலன் ஆகப்பெறின்
(குறள் 92)




அன்பின் வழியது உயிர்நிலை


1971ஆம் ஆண்டு வெளிவந்த 'ஃபிட்லர் ஆன் தெ ரூஃப்' என்ற திரைப்படத்தில் ஒரு காட்சி உண்டு.

கதாநாயகனும் கதாநாயகியும் தங்களின் திருமணத்தின் 25ஆம் ஆண்டு (வெள்ளி விழா) விழாவைக் கொண்டாடத் தயாராகிக் கொண்டிருப்பார்கள். விருந்திற்கு நிறைய விருந்தினர்களும், நண்பர்களும் வந்து கொண்டிருப்பார்கள். கதாநாயகி பரபரப்பாக ஓடிக்கொண்டிருப்பார். அந்த நேரத்தில் கதாநாயகன் கதாநாயகியிடம், 'டார்லிங், டு யு லவ் மீ?' என்று கேட்பார். 'விளையாடாதீங்க. விளையாட இது நேரமா?' எனக் கேட்டுவிட்டு கதாநாயகி அங்கிருந்து ஓடிவிடுவார். சில நிமிடங்கள் கழித்து அவரை மீண்டும் சந்திக்கும் கதாநாயகன், 'டு யு லவ் மீ?' என்று கேட்பார். அப்போது கதாநாயகி அவரின் கைகளைக் பிடித்துக்கொண்டு, '25 ஆண்டுகள் உனக்கு உணவு சமைத்தேன். உனக்கு துணிகள் துவைத்தேன். உன் இன்ப துன்பங்களில் பங்கேற்றேன். உன்னோடு அழுதேன். உன்னோடு சிரித்தேன். உன்னோடு குழந்தைகள் பெற்றுக்கொண்டேன். உன்னோடு அவர்களை வளர்த்தேன். உன்னோடு வேலை செய்தேன். இது எல்லாம் அன்பென்றால், அந்த அன்பைத்தான் நான் உனக்குச் செய்தேன். அன்பே, ஐ லவ் யூ' என்பார்.

இன்றைய இறைவாக்கு வழிபாடு முழுவதும் (இரண்டாம் வாசகம் தவிர) 'அன்பு' என்ற ஒற்றைச் சொல்லால் கட்டப்பட்டிருக்கிறது. நாம் அதிகமாகப் பயன்படுத்தியதால் பயனை இழந்த சில சொற்களில் 'அன்பு' என்ற சொல்லும் ஒன்று. அன்பிற்கு நிறைய பரிமாணங்கள் உண்டு. கடவுள் மனிதனிடம் காட்டும் அன்பு கருணை. மனிதன் கடவுளிடம் காட்டும் அன்பு பக்தி. கணவன் மனைவியிடையே உள்ள அன்பு காதல். நண்பர்களிடையே உள்ள அன்பு நட்பு. பெற்றோர் பிள்ளைகளிடையே உள்ள அன்பு பாசம். இருப்பவர் இல்லாதவருக்குக் காட்டும் அன்பு இரக்கம். இல்லாதவர் இருக்கிறவருக்குக் காட்டும் அன்பு நன்றி. மேலிருப்பவர் கீழிருப்பவருக்குக் காட்டும் அன்பு வரவேற்பு. கீழிருப்பவர் மேலிருப்பவருக்குக் காட்டும் அன்பு மரியாதை. ஆக, இன்று நாம் எந்த அன்பைப் பற்றிப் பேசுவது என்பது முதல் கேள்வியாக இருக்கிறது. மேலும், இன்று 'அன்பு' என்ற வார்த்தையின் ஆங்கிலப் பதம் உணர்வையும் தாண்டி விருப்பு வெறுப்புக்களைக் குறிக்கவும் பயன்படுகிறது: 'ஐ லவ் பீட்சா,' 'ஐ லவ் மை பைக்,' 'ஐ லவ் மை மாம்' என பீட்சா, பைக், அம்மா என அனைத்தையும் ஒரே தளத்தில் நிறுத்திவிடுகிறது ஆங்கில 'அன்பு.'

இன்று நாம் பதிலுரைப்பாடலில் வாசிக்கும் திருப்பாடல் 18 மிக முக்கியமான திருப்பாடல். ஏனெனில், இங்கே ஒரு இடத்தில் தான் (18:1), பழைய ஏற்பாட்டில், மனிதர்கள் கடவுளைப் பார்த்து, 'ஐ லவ் யு ஆண்டவரே' என்று சொல்கிறார்கள்:

'என் ஆற்றலாகிய ஆண்டவரே, உம்மிடம் நான் அன்புகூர்கின்றேன்!'

இந்தப் பாடலின் சூழலை நாம் 2 சாமு 21-22ல் வாசிக்கிறோம். தாவீது எதிரிகளின் கையினின்று, குறிப்பாக சவுலின் கையினின்று, ஆண்டவர் தம்மை விடுவித்தபோது இந்தப் பாடலைப் பாடுகின்றார்.

இந்தப் பாடலில் வரும் சில உருவகங்களைப் புரிந்துகொண்டால் அன்பின் ஆற்றல் நமக்குப் புரியும்:

'ஆண்டவரே, நீர் என் விளக்குக்கு ஒளியேற்றுகின்றீர்.
என் கடவுளே, நீர் என் இருளை ஒளிமயமாக்குகின்றீர்.
உம் துணையுடன் நான்
எப்படையையும் நசுக்குவேன்.
என் கடவுளின் துணையால்
எம்மதிலையும் தாண்டுவேன்' (திபா 18:28-29)

மேற்காணும் உருவகங்கள் அன்பின் மூன்று இயல்புகளைச் சுட்டிக்காட்டுகின்றன:

அ. அன்பு இருள் இருக்கும் இடத்தில் ஒளி ஏற்றும்
ஆ. அன்பு எதிரியை எதிர்கொள்ளும் துணிவைத் தரும்
இ. அன்பு நாம் உயரே பறக்க இறக்கைகள் அளிக்கும்

இந்த மூன்று இயல்புகளையும் நாம் கருணை, பக்தி, காதல், நட்பு, பாசம், இரக்கம், நன்றி, வரவேற்பு, மரியாதை என்னும் அன்பின் பரிமாணங்களில் பார்க்கலாம்.

அன்பின் திசைகளை வைத்து அன்பை இறையன்பு, பிறரன்பு என்று நாம் பிரிக்கிறோம். மனிதர்கள் தங்களுக்கு மேல் நோக்கி காட்டும் இறையன்பு. மனிதர்கள் தங்களுக்கு நேர்கோட்டில் காட்டும் அன்பு பிறரன்பு. மேலும், இறையன்பு என்று சொல்லும்போது அது இறைவன் செய்யும் அன்பு அல்ல. மாறாக, இறைவனிடம் நாம் காட்டும் அன்பு. அதுபோல, பிறரன்பு என்பது நாம் பிறர் செய்யும் அன்பு அல்ல. மாறாக, பிறரிடம் நாம் கொள்ளும் அன்பு.

பரிசேயர், சதுசேயர் ஆகியோரைத் தொடர்ந்து இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். மாற் 12:28-34) மறைநூல் அறிஞர் ஒருவர் இயேசுவிடம் கேள்வி கேட்கின்றார்: 'அனைத்திலும் முதன்மையான கட்டளை எது?'

கேட்கின்ற அவருக்கே விடையும் தெரியும். ஏனெனில், ஒவ்வொரு யூதரும் இணைச்சட்ட நூல் 6:4,5 மற்றும் லேவியர் நூல் 19:18 ஆகிய இரண்டு கட்டளைகளையும் இரண்டு கண்களாகக் கொண்டிருந்தனர். ஒருவேளை, இந்த இரண்டில் முதன்மையானது என்பது பற்றி அவர்களுக்குள் கருத்து வேறுபாடுகள் இருந்திருக்கலாம். ஒருவேளை இயேசு, 'இறையன்பை' முதன்மையானது எனச் சொன்னால், அவரை 'பிறரன்பு' மற்றும் சமூகநீதிக்கு எதிரானவர் என்று குற்றம் சுமத்தலாம். அல்லது, 'பிறரன்பை' முதன்மையானது எனச் சொன்னால், அவர் இறைவனைப் பழிக்கிறார் என்றும், அவர் இறைமகன் அல்லர் என்றும் குற்றம் சுமத்தலாம். ஆனால், இயேசு மிகத் தெளிவாக முதல்-இரண்டு என கட்டளைகளைக் கொடுத்து, அவற்றை ஒரே தளத்தில் நிறுத்துகின்றார். இயேசுவின் பதிலை கேள்வி கேட்டவரும் ஏற்றுக்கொள்கின்றார். அப்படி ஏற்றுக்கொண்டவரை, 'நீர் இறையாட்சியினின்று தொலைவில் இல்லை' எனப் பாராட்டுகிறார் இயேசு.

அ. முதன்மையான கட்டளை

'இஸ்ரயேலே கேள். உன் ஆண்டவராகிய கடவுள் ஒருவரே' என்ற பகுதியை மட்டும் இயேசு, 'நம் ஆண்டவராகிய கடவுள்' என மாற்றுகின்றார். இவ்வாறாக, தன்னையும் மானிடரோடு ஒருங்கிணைத்துக்கொள்கின்றார். இத்தகையை ஒருங்கிணைத்தலையே இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். எபி 7:23-28) எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமடலின் ஆசிரியர் தலைமைக்குரு என்னும் உருவகம் வழியாக முன்வைக்கின்றார்.

'முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு மனத்தோடும், முழு ஆற்றலோடும்' என நான்கு வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார் இயேசு (மாற்கு). ஆனால், இணைச்சட்ட நூலில் (6:4), 'முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் முழு ஆற்றலோடும்' என்ற மூன்று வார்த்தைகளாகப் பார்க்கிறோம்.

'இதயம்' என்பது ஒருவரின் சிந்தனையையும், 'உள்ளம்' என்பது ஒருவரின் தெரிவையும், 'மனம்' என்பது ஒருவரின் உயிரையும், 'ஆற்றல்' என்பது ஒருவரின் உடல் வலிமையையும் குறிக்கிறது. இவ்வாறாக, ஒருவரின் முழு ஆளுமை முழுவதும் இறைவனை நோக்கி இருக்க வேண்டும்.

ஆக, இறைவனை அன்பு செய்வது என்பது வெறும் வழிபாட்டு முறைமைகள் அல்லது சட்ட முறைமைகள் பற்றியது அன்று.

ஆ. இரண்டாவது கட்டளை

'உன்மீது நீ அன்புகூர்வது போல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்புகூர்வாயாக.' பழைய ஏற்பாட்டில், 'அடுத்தவர்' என்ற வார்த்தை சக யூதர் அல்லது சக குலத்தவரைக் குறித்தது. ஆனால், இதை நாம் 'எல்லாரும்' என விரித்தும் பொருள் கொள்ளலாம்.

இந்த அன்பு ஒற்றைச் சொல் நமக்கு வைக்கும் வாழ்வியல் சவால்கள் எவை?

1. இறையன்பு - பிறரன்பு

'இறையன்பு' எப்படி இருக்க வேண்டும்?

'முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு மனத்தோடும், முழு ஆற்றலோடும் இருக்க வேண்டும்.'

'பிறரன்பு' எப்படி இருக்க வேண்டும்?

'என்னை அன்பு செய்வதுபோல பிறரை நான் அன்பு செய்ய வேண்டும்.'

ஒருவேளை இந்த முறைமைகளை மாற்றி அமைத்தால் என்ன ஆகும்?

ஒருவேளை, நான் பிறரை 'முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு மனத்தோடும், முழு ஆற்றலோடும்' அன்பு செய்தால் என்ன ஆகும்? எனக்கு விரக்திதான் மிஞ்சும். ஏனெனில், குறைவான நான் குறைவான மற்றவரை முழுமையாக அன்பு செய்ய முடியாது.

ஒருவேளை, நான் இறைவனை 'என்னை அன்பு செய்வது போல அன்பு செய்தால்' என்ன ஆகும்? என் விருப்பு, வெறுப்புகளுக்கேற்ற கடவுளையும் ஆட்டுவிக்கத் தொடங்குவேன்.

ஆக, முறைமைகள் மாறாமல் அன்பு செய்தல் வேண்டும்.

'இறைவன்' என்பவர் யார்? நான் கண்களை மூடி இறைவன் என்று சொல்லும்போது என் உள்ளத்தில் எழும் உருவம் என்ன? அல்லது யார்? இந்த உருவத்தை நோக்கி என்னால் என் முழு இதயத்தை, உள்ளத்தை, மனத்தை, ஆற்றலை திருப்ப முடியுமா?

'பிறர்' என்பவர் யார்? என் நண்பரா? உறவினரா? எனக்குப் பிடிக்காதவரா? அல்லது எல்லாருமா? என்னை அன்பு செய்வதுபோல, என்னால் அடுத்தவரை அன்பு செய்ய முடியுமா? முதலில் என்னை அன்பு செய்வது என்றால் என்ன? என்னை நான் ஏற்றுக்கொள்கிறேனா? என்னையே நான் மதிக்கிறேனா?

2. அறிவுத்திறன்

மறைநூல் அறிஞர் 'அறிவுத்திறனோடு' பதில் தந்ததைக் கண்டு இயேசு அவரைப் பாராட்டுகின்றார். 'காதலுக்கு கண்ணில்லை' என்பார்கள். அல்லது 'கண்மூடித்தனமான அன்பு' என்று சொல்வார்கள். ஆனால், அன்பில் தான் அறிவுக்கு நிறைய வேலை உண்டு. அறிவுத்திறன் இல்லாத ஒருவரால் அன்பு செய்ய முடியாது. அன்பில் ஒருவர் தன் முழு அறிவுத்திறனையும் பயன்படுத்த வேண்டும். இங்கே அறிவு என்பது வெறும் மூளை சார்ந்த, பிரித்துப் பார்க்கும் அறிவு அல்ல. மாறாக, மனம் சார்ந்த, ஒருங்கிணைக்கும் அறிவு.

3. கேள்

நம் மேல் இருக்கும் இறைவனும், நம்மைச் சுற்றி இருக்கும் மனிதர்களும் நாம் கேட்கும் குரல்களாக நம்மைச் சுற்றி இருக்கிறார்கள். ஆக, இக்குரல்களைக் கேட்டால்தான் இவர்களை அன்பு செய்ய முடியும். 'இஸ்ரயேலே, பார்' என்று சொல்லாமல், 'கேள்' என்று கட்டளையிடுகிறார் இறைவன். நாம் பார்க்கும் கண்கள் தாங்களாகவே மூடிக்கொள்ளும் இயல்புடையவை. ஆனால், காதுகள் அப்படி அல்ல. நாமே மூடினாலே ஒழிய அவைகள் திறந்தே இருக்கும். மற்றவர்களின் குரல் அதில் விழுந்துகொண்டேதான் இருக்கும். இக்குரல்களைக் கேட்கும் ஒருவர்தான் அன்பிற்கு இதயத்தைத் திறக்க முடியும்.

இறுதியாக,

'அன்பின் வழியது உயிர்நிலை' என்கிறார் திருவள்ளுவர் (குறள் 80). 'இறையன்பு' என்ற வேரையும், 'பிறரன்பு' என்ற கிளையையும் முன்வைக்கிறது இன்றைய இறைவாக்கு வழிபாடு. உயிர்நிலை இறைவனில் புறப்பட்டு நம் வழியாக ஒருவர் மற்றவரிடம் செல்கிறது. ஆக, இறைவனை நான் என்னில் அனுபவித்து, அதே இறைவனை நான் பிறரில் அனுபவிக்கிறேன். ஆக, இறைவன் மற்ற இறைவனோடு செயலாற்ற என் உடல், உள்ளம், இதயம், மனம் வாய்க்காலாக இருக்கின்றது.

துரமாக இருப்பவர்களை, இருப்பவற்றை அன்பு செய்வது எளிது. 'நான் அமெரிக்கர்களை அன்பு செய்கிறேன்' என்று என்னால் எளிதாகச் சொல்ல முடியும். ஆனால், 'என் அடுத்த அறையில் இருப்பவரை நான் அன்பு செய்கிறேன்' என்று சொல்வது அவ்வளவு எளிதல்ல.

அன்பை ஒரு ரொமான்டிக் அனுபவமாக பார்க்காமல், அதை அன்றாட வாழ்வியல், செயல்முறை எதார்த்தமாகப் பார்த்தால், அடுத்தவருக்கும் எனக்கும் உள்ள உள்ளத்தின் தூரமும் குறையும்.


 


Tuesday 23 October 2018

பொதுக்காலம் ஆண்டின் 30-ஆம் ஞாயிறு


 பொதுக்காலம் ஆண்டின் 30-ஆம் ஞாயிறு


இன்றைய வாசகங்கள்

எரேமியா 31:7-9;
எபிரேயர் 5:1-6;

மாற்கு 10:46-52




ஓர் இளைஞன் 21 வயதில் வியாபாரத்தைத் தொடங்கினான். பெரும் இழப்பு. சட்ட சபைக்குப் போட்டியிட்டார். மண்ணைக் கவ்வினார். தொழில் தொடங்கினார். தோல்வியைத் தழுவினார். நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டார். படுதோல்வி . நாற்பத்து ஏழாவது வயதில் துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு தோல்விக்கு மேல் தோல்வி. ஆனால் 52 வயதில் ஜனாதிபதி தேர்தலில் குதித்தார். வெற்றி அவரை முத்தமிட்டது. அவரின் புகழ் உலகெங்கும் பரவியது. அவர் யார் தெரியுமா? தன்னம்பிக்கை இழக்காது, தோல்வியைக் கண்டு துவளாது , தடைக்கற்களைக் கண்டு தடுமாறாது, விடா முயற்சியோடு போராடி இறுதி இலக்கை தன் வசப்படுத்திக் கொண்ட மாமனிதர்! அவர்தான் அமெரிக்காவின் ஜனாதிபதியாக திகழ்ந்த ஆப்ரகாம் லிங்கன்.

என்னால் முடியும் என்ற ஒரு மனநிலை வேண்டும். அதைத்தான் ஆன்மீக மொழியில் விசுவாசம், நம்பிக்கை என்றழைக்கிறோம்.
சைக்கிளை ஓட்டாமல் ஒருவர் சைக்கிள் ஓட்ட கற்றுக்கொள்ள முடியுமா? நீரில் இறங்காமல், நீச்சல் கற்றுக்கொள்ள முடியுமா? அதேபோல், ஆண்டவரில் விசுவாசம் வைக்காமல் அவரிடம் எப்படி நன்மை பெற முடியும்?

இன்றைய முதல் வாசகத்தில் இறைவன் இஸ்ரயேல் மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் கடவுளாக சித்தரிக்கப்படுகிறார். சிதறிக் கிடக்கும் மக்களை ஒன்று சேர்க்கும் கடவுளே யாவே! இறைவனின் இந்த நல்ல, வல்ல செயல்களில் இஸ்ரயேல் மக்கள் நம்பிக்கை கொள்ள அழைப்பதே இன்றைய முதல் வாசகத்தின் மையப் பொருள்.

இன்றைய நற்செய்தியிலே தரப்படுகின்ற பார்த்திமேயு என்ற குருடனைப் பாருங்கள். ஏராளமானோர் இயேசுவின் பின்னால்
கூட்டமாகச் சென்றதைப் பொருட்படுத்தாமல் கூக்குரலெழுப்பிக் கத்துகின்றான். யார் என்ன சொன்னாலும் பொருள் படுத்தவில்லை. ஆண்டவர் இயேசுவையே நோக்குகிறான். மற்றவர்கள் அவன் கண்களுக்குத் தெரியவில்லை. ஆண்டவர் மட்டுமே தெரிந்தார். பார்த்திமேயு குரல் எழுப்பியபோது மற்றவர்கள் தடுத்தார்கள், அதட்டினார்கள். பார்த்திமேயு முடங்கவில்லை. மீண்டும் அதிகமாகக் கத்தினான். தன் முயற்சியில் வெற்றி கண்டான். ஆண்டவரின் கவனத்தைக் கவர்ந்தான். ஆண்டவர் அவனைக் கூப்பிட்டு, நான் உனக்கு என்ன செய்ய வேண்டும் (மாற் 10:51) என்று கேட்கிறார்.

நான் பார்வை பெற வேண்டும் என்றான். கேட்டது கிடைத்தது. கேளுங்கள் கொடுக்கப்படும் (லூக். 11:9) என்ற ஆண்டவர் தன் வார்த்தைகளைப் பொய்யாக்கவில்லை. பார்த்திமேயு கேட்டது கிடைத்தது.

பிச்சை கேட்பவன் கெளரவம் பார்க்க முடியுமா? நமக்கோ கேட்பதற்கு கஷ்டம்! எனக்கு என்ன தேவையென்று ஆண்டவருக்கு தெரியாதா? என்ற வீண் வம்பு பேசியே வீணாகிப் போகிறோம்.

வாய்ப்புக்களை இழக்கின்றவர்கள் வாழ்வை இழக்கிறார்கள். மற்றவர்கள் அதட்டுகிறார்கள் என்று அமைதி காத்திருந்தால் பார்த்திமேயு என்ற கதாபாத்திரம் விவிலியத்தில் இல்லாமலேயே போயிருக்கக் கூடும்.

வாய்ப்புக்களைப் பயன்படுத்தி வாழத் தெரியாத சிலர் கூறுவதுண்டு. இந்த சாமியார் இருக்கும் வரை நான் கோவில் பக்கமே போகமாட்டேன். யாருக்கு நட்டம்? பார்த்திமேயு இயேசுவை மட்டும் சிந்தித்தானா அல்லது மற்றவர்கள் அதட்டுகிறார்களே என்று சிந்தித்தானா? கடவுளைச் சந்திக்க யாரும் தடையாக இருக்க முடியாது, உன்னைத் தவிர. முயன்றால் முடியாதது ஒன்றுமில்லை என்பதை பர்த்தலோமேயு நமக்குக் காட்டுகிறார். முதல் முயற்சியிலே வெற்றியில்லையே என்று சோர்ந்துவிடாதே! வெற்றி பெறும்வரை, தொடர்ந்து இறுதி இலக்கையே நோக்கிய வண்ணமாகப் புறப்பாடு என்பதையும் இன்று பார்த்திமேயு நமக்குப் பாடமாகத் தருகிறார்.

இயேசுவின் கருணை உள்ளம் பார்த்திமேயு வழியாக இன்று நமக்கு வெளிப்படுத்தப்படுகிறது.

உதவிக்கரம் நீட்ட எத்தனையோ முறை உங்களுக்கு வாய்ப்புக்கள் கிடைத்தும், நல்ல சமாரித்தனைப் போல நீங்கள் அதை பயன்படுத்திக் கொள்ளவில்லையென்றால் நாம் பார்வை அற்றவர்களே! நன்மைகள் செய்ய வாய்ப்பு இருந்தும் நன்றாக அறிந்திருந்தும் அதைச் செய்யாவிட்டால் பாவம்.

இறுதியாக பார்த்திமேயு தனது அழுக்கடைந்த மேலாடையை வீசி எறிந்துவிட்டு துள்ளிக் குதித்து இயேசுவிடம் வந்தது போல, நாமும் நமது பழைய பாவ இயல்பைக் களைந்துவிட்டு புதிய வாழ்வைத் தொடங்க (எபே. 4:22-24) புறப்படுவோம். புதிய பார்வை பெற்று புதுப்படைப்பாக மாறுவோம்.
 


நமது பிரச்சினைகளை இயேசு தீர்த்துவைப்பார். 

விடுதலை தேடும் உலகம் இது! 
இல்லாமையிலிருந்து விடுதலை; கல்லாமையிலிருந்து விடுதலை;
அறியாமையிலிருந்து விடுதலை; வெள்ளத்திலிருந்து விடுதலை;
பூகம்பத்திலிருந்து விடுதலை; நோயிலிருந்து விடுதலை;
பாவத்திலிருந்து விடுதலை; மரணத்திலிருந்து விடுதலை.

இதுவே இன்றைய மனிதனின் மூச்சும் பேச்சும். விடுதலை நிறைந்த இறையரசிலே (உரோ 14:17) நாமெல்லாம் கானத்து மயிலாக, வானத்துக் குயிலாக ஆடிப்பாடி வாழ விரும்புகின்றோம். இதோ நாம் தேடும் விடுதலையை, நமக்குத் தரும் ஆற்றல்மிக்க இயேசுவை இன்று நமக்கு இன்றைய நற்செய்தி சுட்டிக்காட்டுகின்றது.

அவர் பெயர் பார்த்திமேயு. அவர் பார்வை அற்றவர். அவர் காலதேவன் கண் திறப்பான் எனக் காத்திருந்தார். காத்திருந்த காலம் அவருக்குக் கனிந்தது! மீட்பர் வந்தார் ! பார்வையற்றோர் பார்வை பெறுவார் (லூக் 4:18) என முழக்கமிட்டவர் வந்தார். மகன் உங்களுக்கு விடுதலை அளித்ததால் நீங்கள் உண்மையிலேயே விடுதலை பெற்றவர்களாய் இருப்பீர்கள் (யோவா 8:36) என்றவர் வந்தார். யாரேனும் தாகமாயிருந்தால் என்னிடம் வரட்டும். என்னிடம் நம்பிக்கை கொள்வோர் பருகட்டும் (யோவா 7:37) என்று உரைத்தவர் வந்தார். பார்த்திமேயு தாகத்தோடு உடல் நலம் கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு காத்திருந்தார்; விடுதலை அடைந்தார் ; இயேசுவுடன் வழி நடந்தார்.

இயேசு இன்றும் அரும் அடையாளங்கள் பல செய்துகொண்டுதான் இருக்கின்றார். இதற்கு லூர்து நகரிலும் வேளாங்கண்ணியிலும் பூண்டியிலும் நடக்கும் புதுமைகள் சாட்சி சொல்லும். விடுதலையை விரும்பும் நாம் அனைவரும் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்! அது என்ன? நமது முழு நம்பிக்கையையும் இயேசுவின் மீது வைக்க வேண்டும்.

அண்மையில் ஓர் அபூர்வக் காட்சி ஒன்றை சாலையொன்றில் கண்டேன். அந்த மோட்டார் சைக்கிளில் நான்குபேர் பயணம் செய்து கொண்டிருந்தார்கள். சைக்கிளை ஓட்டியவர் பின்னால் இரண்டு பேர் அவருக்கு முன்னால் ஒருவர்! மோட்டார் சைக்கிளை ஓட்டிய அப்பா முன்னால் அவரது நான்கு வயது மகன் அமர்ந்திருந்தான். மக்கள் நெருக்கம் நிறைந்த குறுகிய சாலை அது! அப்பா மிகக் கவனமாக, பய பக்தியோடு வண்டியை ஓட்டிக்கொண்டிருந்தார். ஆனால் மகனோ, அந்தச் சிறுவனோ டைட்டானிக் ஸ்டைலில் இரண்டு கைகளையும் விரித்து சிரித்தபடி பயணம் செய்தான். அவனுக்கு அச்சமே இல்லையா? கொஞ்சம் கூட அச்சமில்லை! காரணம் அப்பா மோட்டார் சைக்கிளை ஓட்டுகின்றார் என்ற உள் உணர்வு. இப்படிப்பட்ட உள் உணர்வுக்குப் பெயர்தான் நம்பிக்கை.

இருளும் ஒளிதான் எனக்கு (திபா 139 : 5,12) என்று திருப்பாடல் ஆசிரியரோடு சேர்ந்து பாடுவதற்குப் பெயர்தான் நம்பிக்கை. இயேசுவின் மீது நமது முழு நம்பிக்கையையும் வைக்கும்போது அவர் நமது பிரச்சினையை அவரது பிரச்சினையாக மாற்றிக்கொள்வார்.

மேலும் அறிவோம் :
அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ்? ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும் (குறள் : 71).

பொருள் : ஒருவர் உள்ளத்தில் கொண்டிருக்கும் அன்பினைத் தாழ்ப்பாள் இட்டு அடைத்து வைக்க இயலாது. அன்பரின் துன்பத்தைக் காணும்போது சிந்திடும் கண்ணீர்த்துளியே அந்த அன்பைப் பலரும் அறியச் செய்துவிடும்.



கண்மருத்துவரிடம் ஓர் இளைஞன், "டாக்டர் எனக்கு ஆண்கள் சுத்தமாகத் தெரியலை. பெண்கள் மட்டும், அதுவும் வயசுப் பெண்கள் மட்டும் தெரியுது. என் பார்வை கிட்டப் பார்வையா? அல்லது எட்டப் பார்வையா? என்று கேட்டதற்கு, மருத்துவர், "உன் பார்வை கெட்டப் பார்வை" என்றார், நம்மில் பலருக்குப் பார்வைக் கோளாறு உள்ளது. நாம் யாரைப் பார்க்க விரும்புகிறோமா, எப்படிப் பார்க்க விரும்புகிறோமோ அப்படித் தான் பார்க்கிறோம். நமக்குத் தேவையான நலமான பார்வையை இன்றைய அருள்வாக்கு வழிபாடு அளிக்கிறது,

இன்றைய நற்செய்தியில் பர்த்திமேயு என்ற பார்வையற்ற பிச்சைக்காரருக்குக் கிறிஸ்து பார்வை அளிக்கிறார். இன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்கினர் எரேமியா, அரீரியாவில் அடிமைகளாய்ச் சிதறிக்கிடந்த எஞ்சிய இஸ்ரயேல் மக்களைக் கடவுள் மீண்டும் எருசலேமுக்கு அழைத்து வருவார் என்றும், அவர்களில் பார்வையற்றவரும் அடங்குவர் என்றும் முன்னறிவிக்கிறார். அப்படித் திரும்பி வருபவர்கள் மகிழ்ச்சி நிறைந்தவர்களாகக் காணப்படுவர், கண்ணீரோடு விதைப்பவர்கள் மகிழ்ச்சியுடன் அறுவடை செய்வது போல் (பதிலுரைப்பாடல், திபா 126:5) அகதிகளாக அவதிப்பட்ட இஸ்ரயேல் மக்கள் மகிழ்ச்சியுடன் தாயகம் திரும்புவர்.

தாவீது மகனும் மெசியாவுமாகிய கிறிஸ்து பார்வையற்ற பர்த்திமேயுவுக்குப் பார்வை அளித்து, இன்னல் நீக்கி இன்பம் கொடுத்து, இருளிலிருந்து மக்களை ஒளிக்குக் கொண்டுவந்து மகிழ்வைத் தருகிறார். பர்த்திமேயு பார்வை பெற்றார் என்பதைவிட அவர் கிறிஸ்துவின் சீடராக மாறி அவரைப் பின்பற்றினார் என்பது நமது கவனத்தை ஈர்க்கிறது. உயிர்த்த கிறிஸ்துவை மகதலா மரியா மட்டும் ஒருமுறை 'ரபூனி', அதாவது, போதகரே என்றழைத்து அவரைப் பற்றிக் கொள்கிறார் (யோவா 20:16-17). பாத்திமேயுவும் கிறிஸ்துவை 'ரபூனி' என்றழைத்து அவரைப் பின்பற்றி அவரது சீடராக உருவெடுக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கிறிஸ்து சிலுவை சுமந்து சென்றபோது அவரைப் பின் தொடர்ந்த ஓர் இளைஞன் தனக்கு ஆபத்து வந்தபோது தன் போர்வையைத் தூக்கி எறிந்துவிட்டு ஆடையின்றி ஒடினான் (மாற் 14:51-52). ஆனால் பர்த்திமேயுவோ தம் போர்வையைத் தூக்கி எறிந்துவிட்டு கிறிஸ்துவைப் பின் தொடர்கிறார் (மாற் 10:50-52). பார்வை உள்ளவன் கிறிஸ்துவை விட்டுவிட்டு ஓடுகிறான்; பார்வையற்றவன் கிறிஸ்துவை நெருங்கி வருகிறான். புறப்பார்வை உள்ளவன் ஆன்மீகக் குருடனாகிறான். புறப்பார்வை அற்றவன் ஆன்மீக ஞானியாகிறான். "பார்வையற்றோர் பார் வை பெறவும், பார்வையுடையோர் பார்வையற்றோர் ஆகவும் வந்தேன்" (யோவா 12:39) என்று கிறிஸ்து ஆன்மிகக் குருடர்களாகிய பரிசேயரிடம் கூறியது நினைவு கூறத்தக்கது.

நமது பார்வை எவ்வாறு உள்ளது? ஒருவர் கண் மருத்துவரிடம் சென்று. "எனக்கு எல்லாமே இரண்டு இரண்டாகத் தெரிகிறது என்றதற்கு, மருத்துவர் அவரிடம், அதற்கு ஏன் நான்கு பேர் வந்திருக்கிறீர்கள்? என்று கேட்டாராம்! கண் மருத்துவருக்கே பார்வைக் கோளாறு! மனித இனத்தை ஓரினமாக இணைக்க வேண்டிய கிறிஸ்துவர்களுக்கே பார்வைக் கோளாறு. இக்கோளாறு திருத்தூதர் பவுல் காலத்தில் இருந்தே வருகிற ஒரு தொற்று நோய், அவர் காலத்தில் கொரிந்து திருச்சபையில் நான்கு கட்சிகள் இருந்தன: பவுல் கட்சி, அப்பொல்லோ கட்சி, கேபா கட்சி, கிறிஸ்துவின் கட்சி (1கொரி 1:12}, இத்தகைய கட்சி மனப்பான்மை கொண்ட கிறிஸ்துவர்கள் ஆவியில் வாழ்வதில்லை; ஊனியல்பில் வாழ்கின்றனர் என்று பாடுகிறார் பவுல் (1 கொரி 3:1-4).

அன்றைய நிலையை விட இன்றைய நிலை இன்னும் மோசமாகக் காட்சி அளிக்கிறது. தமிழகத் திருச்சபையில் காணப்படும் சாதி வேறுபாட்டைக் கண்டு, தூய ஆவியாருக்கே மன உளைச்சல் (Ternsion) ஏற்பட்டு, மருத்துவ விடுப்பில் (Madical Leave) போய் விட்டாராம்! வேடிக்கையாக அல்ல, வேதனையாக இருக்கிறது. நெஞ்சுப் பொறுக்குதில்லையே, இந்த இழிநிலையை நினைத்துவிட்டால்.

கிறிஸ்துவக் கண்ணோட்டத்தில் யூதர் என்றும் கிரேக்கர் என்றும், அடிமை என்றும் உரிமைக் குடிமகன் என்றும், ஆண் என்றும் பெண் என்றும் இல்லை (கலா 3:28). கிறிஸ்துவே அனைவருள்ளும் அனைத்துமாய் இருக்கிறார் (கொலோ 3:11). இத்தகைய பார்வை என் இன்னும் நமக்கு வரவில்லை? 'ரபூனி நான் பார்வை பெறவேண்டும்.' நாம் நமது இலக்கை அடையும் வரை மனந்தளராது போராட வேண்டும் என்பதற்குப் பர்த்திமேயு ஓர் எடுத்துக் காட்டாகத் திகழ்கிறார். கிறிஸ்துவிடம் வராமல் அவரைத் தடுக்க மற்ற மக்கள் முயன்றனர். ஆனால் பாத்திமேயு அத்தடைகளை எல்லாம் தாண்டி கிறிஸ்துவிடம் ஓடி வந்தார்; தமது இலக்கை அடைந்தார்; பார்வை பெற்றார். நாம் நினைப்பதெல்லாம் உயர்வாக இருக்கவேண்டும்; நாம் விரும்பியது கிடைக்கவில்லை என்றாலும் நாம் நம் இலக்கிலிருந்து பின் வாங்கக்கூடாது.

"உள்ளுவது எல்லாம் உயர்வு உள்ளல், மற்றும் அது
தள்ளினும் தள்ளாமை நீர்த்து" (குறள் 596)

ஆர்த்தி என்ற ஒரு சிறுமி கூட்டத்தில் அம்மாவை விட்டுப் பிரிந்து விட்டாள். அவள் 'அம்மா அம்மா' என்று கத்துகிறாள், அவளுடைய அம்மாவும் 'ஆர்த்தி ஆர்த்தி' என்று கத்துகிறாள். அவ்வாறே நாம் கடவுளைத் தேடும்போது கடவுளும் நம்மைத் தேடுகிறார். பர்த்திமேயு 'தாவீதின் மகனே எனக்கு இரங்கும்' என்று கத்துகிறார், கிறிஸ்துவும் அவரைக் கூப்பிடுங்கள்" என்கிறார், கடவுளை நோக்கி நாம் இரண்டு அடி எடுத்து வைத்தால், கடவுள் நம்மை நோக்கி இருபது அடி எடுத்து வைக்கிறார். ஆழம் ஆழத்தை அழைக்கிறது (திபா 42:7) என்பதற்கிணங்க, 'அவலம்' என்ற ஆழத்தில் அமிழ்ந்து அவதிப்படும் நாம், 'இரக்கம்' என்ற கடவுளின் இணையற்ற ஆழத்தை அழைக்கவேண்டும். 'ஆண்டவரே எனக்கு இரங்கும்' என்பது தான் நமது அன்றாட மன்றாட்டு.

பழைய பாவ இயல்பைக் களைந்து எறிந்துவிட்டு, புதியதொரு வாழ்வைத் தொடங்குவது எவ்வாறு என்பதையும் பார்த்திமேயு நமக்கு உணர்த்துகிறார். தமது மேலுடையை வீசி எறிந்துவிட்டு, துள்ளிக் குதித்துக் கொண்டு கிறிஸ்துவிடம் வருகிறார்; பார்வை பெறுகிறார்: புதிய மனிதராகிறார்; இயேசுவின் சீடராகிறார். இயேசுவைப் பின் தொடர்கிறார், நாமும் புதுப்படைப்பாக மாற வேண்டும். "ஒருவர் கிறிஸ்துவோடு இணைந்திருக்கும்போது அவர் புதிதாகப் படைக்கப்பட்டவராய் இருக்கிறார். பழையன கழிந்து புதியன புகுந்தன அன்றோ" (2கொரி 5:17).

கந்தல் ஆடை அணிந்து என்னிடம் வந்த ஒரு பிச்சைக் காரருக்குப் புதிய வேட்டியும் புதிய சட்டையும் கொடுத்தேன். ஒரு வாரம் கழித்து அவர் பழைய கந்தல் ஆடையுடன் வந்ததைக் கண்டு அவரிடம், "புதிய வேட்டியும் சட்டையும் எங்கே?" என்று கேட்டதற்கு அவர்: "புதிய வேட்டி கட்டிக்கிட்டுப் பிச்சை கேட்டால், யார் பிச்சை போடுவார்?" என்றார். அவருடைய பிச்சைக்காரப் புத்தி அவரைவிட்டு அகலவில்லை. கந்தலை அகற்றிக் கண்ணியமாக வாழ அவருக்குக் கண்பார்வை இல்லை,

நமது நிலை என்ன? பழைய சித்தையில் புதிய இரசத்தை மாற்றிக் கொண்டிருக்கிறோம். அடிப்படையில் மனமாற்றமின்றி ஆயிரம் அமைப்புகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். மனம் மாற்றமின்றி அமைப்புகளை மட்டும் மாற்றுவதால் ஒரு பயனும் விளையாது. பர்த்திமேயுவைப் பின்பற்றிப் புதிய பார்வை பெறுவோம்; புதுப்படைப்பாக மாறுவோம்: புத்துலகம் படைப்போம்,

"ரபூனி நான் பார்வை பெற வேண்டும்."





Tuesday 16 October 2018

பொதுக்காலம் ஆண்டின் 29-ஆம் ஞாயிறு


பொதுக்காலம் ஆண்டின் 29-ஆம் ஞாயிறு



இன்றைய வாசகங்கள்


எசா 53:10-11
எபிரேயர் 4:14-16
மாற்கு 10:35-45

சாய்ந்து கொள்ள தேவை ஒரு தோள் !


ஓர் ஊரிலே எல்லாருக்கும் நல்லவராக மனிதநேயம் மிகுந்த பெரியவர் ஒருவர் வாழ்ந்து வந்தார். காலையிலே சூரியோதயமாகவும், மாலையிலே சந்திரோதயமாகவும் விளங்கிய அவருக்கு ஒரு மகன். அவனுக்கு வயது பத்து இருக்கும். ஒருநாள் அவன் அவனது தாயைப் பார்த்து, அம்மா, அப்பாவைப்போலவே நானும் ஒருநாள் எல்லாராலும் போற்றப்படும் பெரிய மனிதராக வாழ விரும்புகின்றேன். அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்? என்றான்.
தாய் மகனைப் பார்த்து, "மகனே, நான் உன்னை ஒரு கேள்வி கேட்கின்றேன். நீ சரியான பதிலைச் சொன்னால், நீ கேட்ட கேள்விக்கு நான் பதில் சொல்கின்றேன்” என்றாள். "சரி" என்றான் மகன். "உன் உடலிலே உள்ள உறுப்புகளில் மிகவும் உயர்ந்தது எது?" மகன் சொன்ன எந்த பதிலையும் தாய் சரியானது என ஏற்றுக்கொள்ளவில்லை. மகன் தோல்வியை ஏற்றுக்கொண்டு, "நீங்களே பதிலைச் சொல்லி விடுங்கள் அம்மா” என்றான்.
தாய் மகனைப் பார்த்து, "மனித உடலிலே மிகவும் உயர்ந்த உறுப்பு அவனது தோள்தான். காரணம் அதுதான் சோர்ந்துகிடக்கும் மனிதர்களையெல்லாம் தாங்கிப்பிடித்து ஆறுதல் அளிக்கின்றது. நீ உயர்ந்த மனிதனாக வாழ விரும்பினால், ஆறுதல் தேடும் தலைகளுக்கு உனது தோள்கள் மீது சாய அனுமதி அளி. அப்போது ஊரும், உலகும் உன்னைப் போற்றும் " என்றாள். இதே உண்மையைத்தான் இன்றைய நற்செய்தியிலே இயேசு சுட்டிக் காட்டுகின்றார். தொண்டுகளிலே சிறந்த தொண்டு துவண்டு விழும் தலையை நமது தோள் மீது சுமப்பதாகும் (முதல் வாசகம்).
இயேசு, தொண்டர்களாக வாழ முன் வாருங்கள், அப்போது உலகம் உங்களை வணங்கும் என்று போதித்ததோடு நிறுத்திக்கொள்ளவில்லை. போதித்ததைச் சாதித்தும் காட்டினார். "பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்” (மத் 11:28) என்று சொன்ன இயேசு, வார்த்தையை வாழ்வாக்கி, வலுவற்றவர்களின் மீது இரக்கத்தைப் பொழிந்து (இரண்டாம் வாசகம்) மக்களின் உடல் பாரத்தை (மத் 9:27-31), மன பாரத்தை (லூக் 7:36-50) இறக்கி வைத்தார். இயேசு பலரின் பாவத்தைச் சுமந்தார் (எசா 53:12). "சிலுவையின் மீது தம் உடலில் நம் பாவங்களை அவரே (இயேசுவே), சுமந்தார்” (1 பேதுரு 2:24) என்கின்றார் புனித பேதுரு. "எல்லா நோயாளர்களையும் அவர் குணமாக்கினார். இவ்வாறு அவர் நம் பிணிகளைத் தாங்கிக் கொண்டார். நம் துன்பங்களைச் சுமந்துகொண்டார் என்று இறைவாக்கினர் எசாயா உரைத்தது நிறைவேறியது" (மத் 8:16இ-17) என்கின்றார் புனித மத்தேயு.

இதுவே நமது செபமாக இருக்கட்டும்:
“இறைவா, நடந்து, நடந்து கால்கள் களைத்துவிட்டன ! ஏந்தி, ஏந்தி கைகள் சோர்ந்துவிட்டன!
பார்த்துப் பார்த்து கண்கள் பூத்துவிட்டன!
இப்போது எங்களுக்குத் தேவையானதெல்லாம்
சாய்ந்துகொள்ள ஒரு தோள்! ஒரு தொண்டர்! என்று சொல்லி அழுகின்ற இடிந்துபோன இதயங்களுக்கு நான் இதம் தர,
நான் தோள் கொடுக்க, எனக்கு
உமது இரக்கத்தையும், ஆசியையும் தந்தருளும். ஆமென்."

மேலும் அறிவோம் !

தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்(கு) அல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது (குறள் : 7). 


பொருள் : தன்னிகரற்ற அருளாளனாகிய இறைவன் திருவடி சேர்வோர் உள்ளத்தில் துன்ப துயரங்கள் நீங்கிவிடும். ஏனையோர் மனக்கவலை மாறாது.






பள்ளி ஆய்வாளர் ஒருவர் பத்தாம் வகுப்பு மாணவர்களிடம், "எந்தப் பாடத்திலும் 'பெயில்' ஆகாத மாணவர்கள் மட்டும் வலது கையை உயர்த்திப் பிடியுங்கள்" என்றார். ஒரே ஒரு மாணவன் மட்டும் கையை உயர்த்தினான், அதைப்பார்த்த மற்ற மாணவர்கள் சிரித்தனர், அவர்கள் ஏன் சிரிக்கின்றனர்? என்று ஆய்வாளர் கேட்டார். அதற்கு மாணவர்கள், "சார், அவன் ஒரு பாடத்திலும் தேர்வு எழுதவில்லை " என்றனர். ஒரு பாடத்திலும் தேர்வு எழுதவில்லை யென்றால், 'பெயில்' ஆகமுடியாது. ஆனால் அது ஒரு சாதனையா?

துறைமுகத்தில் இருக்கும் கப்பல் எவ்வித ஆபத்துமின்றி பாதுகாப்பாக இருக்கும். ஆனால் துறைமுகத்தில் இருப்பதற்காக எத்தக் கப்பலும் செய்யப்படுவதில்லை , கப்பல் கடலில் பயணம் செய்யவேண்டும்: கடல் கொந்தளிப்பு, புயல், பனிப்பாறை முதலிய பல்வேறு தடைகளையும் மேற்கொள்ள வேண்டும், தனது இலக்கை அடைந்து சாதனை படைக்க வேண்டும், அவ்வாறே மனிதர்களும் தங்கள் வாழ்வில் எழும் பல்வேறு சவால்களைச் சமாளித்து சாதனை புரிய வேண்டும்.

பறவை பிறந்தது பறப்பதற்காக: மனிதன் பிறந்தது துன்புறுவதற்காக (யோபு 5:7). கிறிஸ்துவும் துன்புறுவதற்காகவே இவ்வுலகிற்கு வந்தார். அவர், "எல்லாவகையிலும் நம்மைப் போலச் சோதிக்கப்பட்டவர், எனினும் பாவம் செய்யாதவர்” (எபி 4:15) என்று. இன்றைய இரண்டாவது வாசகம் தெளிவாகக் கூறுகிறது.

இறைவாக்கினர் எசாயா என்பவர் கிறிஸ்துவைத் 'துன்புறும் ஊழியனாகச் சித்தரித்து நான்கு கவிதைகள் எழுதியுள்ளார், துன்புறும் ஊழியனைப் பற்றிய நான்காம் கவிதையின் ஒருபகுதி இன்றைய முதல் வாசகமாக அமைந்துள்ளது. கடவுள் கிறிஸ்துவைப் பலருடைய பாவங்களுக்காக வதைத்தார்; கிறிஸ்து பிறருடைய பாவங்களுக்காகத் தம்மைப் பரிகாரப்பலியாக்கினார். ஆனால் இறுதியில் உயர்வடைந்து. தமது வாழ்வின் நிறைவை எய்தினார், சிலுவை அவரை வீழ்த்தவில்லை, மாறாக, சிலுவையைக் கொண்டே பாவத்தையும் பாவத்திற்குக் காரணமான அலகையையும் அவர் வீழ்த்தினார்.

கிறிஸ்துவின் சீடர்களுக்குச் சிலுவை விருப்பப்பாடமல்ல), கட்டாயப்பாடம், "என்னைப் பின்பற்ற விரும்புவர் எவரும் தன்னலம் துறந்து தம் சிலுவையை நாள்தோறும் தூக்கிக் கொண்டு என்னைப் பின்பற்றட்டும்" (லூக் 9:23). தமது சிலுவைச் சாவைக் கிறிஸ்து மூன்று முறை முன்னறிவித்தார். மூன்று முறையும் சீடர்கள் அதைப்புரிந்து கொள்ளவில்லை. முதன்முறை. பேதுரு கிறிஸ்துவிடம், "ஆண்டவரே, இதுவேண்டாம். இப்படி உமக்கு நடக்கவே கூடாது" (மத் 16:22) என்றார், இரண்டாம் முறை, சீடர்கள் தங்களுக்குள் யார் பெரியவர் என்று வாதாடினர் (மாற 9:34), மூன்றாம் முறை, யாக்கோபும் யோவானும் விண்ணகத்தில் தங்களுக்கு முதல் இரண்டு இடங்களை ஒதுக்கீடு செய்து கொடுக்கும்படி கிறிஸ்துவிடம் விண்ணப்பித்தனர் (மாற் 10:37) வீடுபற்றி எரியும்போது பீடிக்கு நெருப்புக் கேட்ட கதை!

கிறிஸ்து தம் சீடர்களின் மடமையைக் கண்டு மனவருந்தி, அவரோடு விண்ணக மகிமையில் பங்குபெற விழைகின்றவர்கள் அவருடைய துன்பக் கலத்தில் பருக வேண்டுமென்றும், அவருடைய பாடுகளின் திருமுழுக்கைப் பெறவேண்டுமென்றும் திட்டவட்டமாகக் கூறினார். மேலும், கிறிஸ்துவின் சீடர்கள் மற்றவர்களிடமிருந்து பணிவிடை ஏற்காமல், மற்றவர்களுக்குப் பணிபுரிய வேண்டும் என்றும் சீடர்களுக்கு அறிவுறுத்தினார்.

இன்றைய காலக்கட்டத்தில் இல்லறத்தாரும் துறவறத் தாரும் ஆடம்பர வாழ்வையும் சொகுசு வாழ்வையும் விரும்புகின்றனர், இறையரசுக்காகவோ மற்றவர்களுடைய நலனுக்காகவோ உழைக்கவும் ஊழியம் புரியவும் விரும்புவதில்லை . பணிவிடை பெறவே விரும்புகின்றனர்: பணிவிடை புரிய முன்வருவதில்லை . சுருக்கமாக, கிறிஸ்துவின் மனநிலை (பிலி 2:5) நம்மிடம் இல்லை .

ஒரு குடும்பத்தில் கணவர் தம் மனைவியிடம் சமைக்கும் படி கேட்டதற்கு அவர், "நான் உங்கள் மனைவி மட்டுமே; சமையல்காரி அல்ல" என்று நறுக்கென்று பதில் சொன்னார். அன்று இரவு திருடன் வீட்டில் புகுந்து மனைவியின் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியைப் பறித்தான். கணவர் அதைப் பார்த்துக்கொண்டு சும்மா இருந்தார், மனைவி அவரிடம், "என்னங்க, சும்மா பார்த்துக்கொண்டு இருக்கிறீங்க; திருடனை அடிச்சு விரட்டுங்க” என்றதற்கு. கணவர், "நான் உனக்குக் கணவன் மட்டுமே; காவற்காரன் அல்ல; போலிசைக் கூப்பிடு" என்று பதிலடி' கொடுத்தார்!

கணவனும் மலைவியும் கடமை, உரிமை என்ற குறுகிய வட்டத்திற்குள் வாழ்ந்து கொண்டு, ஒருவர் மற்றவர் மீது வஞ்சகம் தீர்த்துக் கொள்ள விரும்பினால், இல்லறம் நரகமாகி விடும். பழி வாங்குவதில் அல்ல, பணிவிடை புரிவதில் ஒருவர் மற்றவருடன் போட்டிபோட வேண்டும். "உணவு விடுதியில் சாப்பிடும் இட்லிக்கும் வீட்டில் சாப்பிடும் இட்லிக்கும் உள்ள வேறுபாடு என்ன?" என்று ஒரு கணவரிடம் கேட்டதற்கு அவர், உணவு விடுதியில் இட்லி சாப்பிட்ட பிறகு மாவு ஆட்டுவேன்: வீட்டில் மாவு ஆட்டியபின் இட்லி சாப்பிடுவேன்" என்றார் வீட்டு வேலையில் மனைவிக்கு உதவி செய்வது கணவனுக்கு இழிவு அல்ல. அது அவருடைய கடமையாகும்,

பயிற்சி காலத்தில் குருவானவர்களும் நவகன்னியர்களும் கிராமங்களுக்குக் களப்பணிபுரிய மகிழ்ச்சியுடன் செல்வர். ஆனால் குருக்களாகவும் கன்னியர்களாகவும் மாறியபின் அவர்கள் அத்தகைய பணிகளை மேற்கொள்ளவதில்லை. தாழ்ச்சி அவர்களிடமிருந்து விடைபெற்றுக் கொள்கிறது; தலைக்கனம் ஏறிவிடுகிறது. இருப்பினும், வித்தியாசமான துறவிகளும் இருக்கின்றனர். ஓர் அருள்சகோதரி ஒரு பணக்காரரிடம் சென்று தனது அனாதைக் குழந்தைகளுக்காக நன்கொடை கேட்டார். அப்பணக்காரர் அந்த அருள்சகோதரி முகத்தில் காரித் துப்பி, அவருடைய கன்னத்தில் அறைந்தார். ஆனால் அந்த அருள்சகோதரியோ மிகவும் பணிவுடன், புன்னகை பூத்த முகத்துடன் பணக்காரரிடம், "இது நீங்கள் எனக்கு அளித்த பரிசு; என் அனாதைக் குழந்தைகளுக்கு ஏதாவது கொடுங்கள்” என்று கேட்டார். பணக்காரர் அச்சகோதரியிடம் மன்னிப்புக் கேட்டு, அவருக்குத் தேவையான பணத்தைக் கொடுத்தார், அவர் தான் அன்னை தெரசா!

தாழ்ச்சியின் அவசியத்தைப் பற்றிக் கிறிஸ்து தமது சீடர்களுக்குப் பலமுறை "கொள்கை விளக்கம்" (Theory) அளித்தார். அது அவர்களது மரமண்டையில் ஏறவில்லை . இறுதியாக அவர் "செய்முறைப் பயிற்சி" (Practical) செய்து காட்டினார், இறுதி இரவு உணவின்போது அவர்களுடைய பாதங்களைக் கழுவி, "நான் செய்தது போல நீங்களும் செய்யுமாறு உங்களுக்கு முன்மாதிரி காட்டினேன்” (யோவா 13:15) என்றார். இல்லறத்தாரும் துறவறத்தாரும் மற்றவர்மேல் ஆதிக்கம் செலுத்துவதற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு, மற்றவருக்கு ஊழியம் புரிய முன்வந்தால் இவ்வையகம் வானமாக மாறாதா?

"அன்பர் பணி செய்ய என்னை ஆளாக்கி விட்டுவிட்டால்
இன்பநிலை தாளே வந்து எய்தும் பராபரமே" - தாயுமானவர்







இயலும் - இயலாதவர்களுக்காக!
 
 

அருள்பணியாளருக்கு ஆங்கிலத்தில் வழங்கப்படும் சொல்லாடல்களில் ஒன்று, 'விகார்' (vicar) - இந்த வார்த்தையிலிருந்துதான் 'விகர் ஜெனரல்' (குருகுல முதன்மைகுரு), 'விகர் ஃபோரேன்' (வட்டார முதன்மைகுரு) போன்ற அலுவல்சார் சொற்கள் பிறக்கின்றன. 'விகர்' என்பது 'விகாரியுஸ்' என்ற லத்தீன் மூலத்திலிருந்து வருகிறது. 'விகாரியுஸ்' என்றால் 'பிறர் பொருட்டு,' 'பிறருக்காக' என்பது பொருள். இதை இன்றைய தமிழில் 'பகராள்' என்றும் சொல்கிறார்கள். அருள்பணியாளரை 'கிறிஸ்துவின் விகார்' - 'கிறிஸ்துவின் பதில் ஆள், அல்லது பகர் ஆள்' என்றும் அழைத்தார்கள்.

கிறிஸ்துவுக்குப் பதிலாக அல்லது கிறிஸ்துவின் இடத்தில் இருப்பவர் அருள்பணியாளர்.

அது எப்படி? ஒருவர் இன்னொருவர் இடத்தில் இருக்கலாம்.

ஒருவர் மற்றவருக்காக நாம் செயல்படுவதை நிறைய இடங்களில் பார்க்கிறோம். 18 வயது நிரம்பாத ஒருவருக்குப் 'பதிலாக' வயது வந்தவர் ஒருவர் கையொப்பம் இடுவது, பிள்ளைகளுக்குப் 'பதிலாக' பெற்றோர்கள் உழைப்பது, ஒருவருக்குப் 'பதிலாக' மற்றவர் நீதிமன்றத்தில் பிணையாக நிற்பது, இறந்தவருக்குப் 'பதிலாக' திருமுழுக்கு வாங்குவது (தொடக்ககால திருச்சபையில் இருந்த ஒன்று). ஒருவருக்குப் பதிலாக நாம் அவருடைய வேலையைச் செய்யும்போது, அவரின் இயலாமையை நம் இயல்நிலை கொண்டு நிறைவுசெய்கிறோம்.

ஆக, நம் எல்லாருக்கும் 'இயல்நிலை' இருக்கிறது. 'என்னால் இது இயலும்' என்று சொல்கின்றோம்.

'என்னால் இது இயலும்,' 'எனக்கு இது இயலும்' என்று சொல்லும் நம் மனநிலையை, 'என்னால் இயலும்,' ஆனால், 'இது எனக்காக அல்ல, பிறருக்காக' என்று நம் இயல்நிலையை உயர்த்துகிறது இன்றைய இறைவாக்கு வழிபாடு.

இன்றைய நற்செய்திப் பகுதியிலிருந்து (காண். மாற் 10:35-45) நம் சிந்தனையைத் தொடங்குவோம்:

இன்றைய நற்செய்திப் பகுதியை ஒரு நாடகமாக எடுத்து அதை இரண்டு காட்சிகளாகப் பிரிக்கலாம்:

காட்சி 1: இயேசுவும் இருவரும் (10:35-40)
காட்சி 2: இயேசுவும் பதின்மரும் (10:41-45)

காட்சி 1: இயேசுவும் இருவரும் (10:35-40)

திரை விலக, இயேசு அமர்ந்திருக்கிறார் ஒரு நாற்காலியில். அவரிடம் வருகின்றனர் செபதேயுவின் மக்கள் யாக்கோபும், யோவானும். இயேசுவிடம் வந்தது செபதேயுவின் தாய் என்று பதிவு செய்து சீடர்களின் மானம் காக்க முயற்சி செய்கின்றார் மத்தேயு (காண். 20:20-28). லூக்கா மற்றும் யோவான் இந்த நிகழ்வு பற்றி தங்கள் நற்செய்திகளில் மௌனம் சாதிக்கின்றனர்.

'நாங்கள் கேட்பதை நீர் செய்ய வேண்டும் என்பது எங்கள் விருப்பம்!' என்று சுற்றிவளைக்கின்றனர் செபதேயுவின் மக்கள். 'என்ன செய்ய வேண்டும்?' என நேரிடையாகக் கேட்கின்றார் இயேசு. 'நீர் ஆயராக அல்லது பேராயராக இருக்கும் போது நாங்கள் துணை ஆயர்களாக இருக்க வேண்டும்!' (நீர் அரசராக இருக்கும்போது நாங்கள் உள்துறை மற்றும் நிதி அமைச்சர்களாக இருக்க வேண்டும்!) என்று கேட்கின்றனர்.

'முடியாது!' என்று சொல்லி முகத்தில் அடிப்பதற்குப் பதிலாக இரண்டு கேள்விகளை அவர்களை கேட்கின்றார் இயேசு. 'நான் குடிக்கும் கிண்ணத்தில் குடிக்க முடியுமா?' 'நான் பெறும் திருமுழுக்கை பெற முடியுமா?' 'முடியாது!' என்று சொல்வார்கள் என நினைத்திருப்பார் இயேசு. ஆனால் இந்த இடியின் மக்கள் 'முடியும்' என்று சொல்லி முடிக்கின்றனர். 'கிண்ணம்' மற்றும் 'திருமுழுக்கு' என்பது இயேசுவின் பாடுகளுக்கான உருவகம். இயேசுவின் இரத்தம் கொள்ளும் கிண்ணம் புதிய உடன்படிக்கையின் அடையாளம் (14:36) எனவும், 'இத்துன்பக்கலம் என்னை விட்டு அகலட்டும்' (14:36) என இயேசுவும் தன் பாடுகளை கிண்ணத்தோடு ஒப்பிடுகின்றார். மேலும் கிண்ணம் என்பது கடவுளின் கோபத்தின் அடையாளமாகவும், அந்தக் கோபத்தை நீக்கும் அடையாளமாகவும் சொல்லப்பட்டுள்ளது (காண். உரோ 3:24-26, 2 கொரி 5:21, கலா 3:13). தண்ணீர் துன்பத்தின் அடையாளம் என்பதை நாம் திபா 42:8 மற்றும் 69:3ல் வாசிக்கின்றோம். ஆக, இயேசுவின் பாடுகள் எப்படி இருக்கும் என்று தெரியாமலேயே 'முடியும்' என்று சொல்கின்றனர் இவர்கள். இயேசுவும் அதற்கு மறுப்பு ஏதும் சொல்லவில்லை. ஏனெனில் இயேசுவுக்குத் தெரியும், தனக்குப் பின் தன் சீடர்களும் துன்புறுவார்கள் என்பது (10:39).

வலப்புறமும், இடப்புறமும் இடம் தருவது கடவுள் என்று இயேசு சொல்லும்போது (10:40) தன் பாடுகளில் ஒளிந்திருக்கும் இறைத்திட்டத்தைச் சுட்டிக்காட்டுகின்றார். இறைத்திட்டம் இல்லாத துன்பம் பயன்தருவதில்லை.

காட்சி 2: இயேசுவும், பதின்மரும் (10:41-45)

காட்சி 1ல் வெறும் பார்வையாளர்களாக நின்றிருந்த, சீடர்கள் இருவரின்மேல் கோபம் கொண்ட பதின்மரை நோக்கித்திரும்புகிறது இயேசுவின் பார்வை. சீடத்துவத்தின் பொருள் என்ன என்பதை பணிவிடை புரிவது என்று விளக்கம் தருகின்றார் இயேசு. 'உங்களிடையே அப்படி இருக்கக் கூடாது' (10:43) என்பது புறவினத்தாரைக் குறித்தாலும், செபதேயுவின் மக்கள் போல் சிந்திக்கக் கூடாது என்றும் இயேசு சொல்கின்றார்.

தன்னிடம் வந்த தன் சீடர்களின் - யாக்கோபு, யோவான் - கோரிக்கையை இயேசு முழுமையாக நிராகரிக்கவில்லை. அவர்களின் விருப்பம் வெறும் உயரவா (அம்பிஷன்)-ஆக இருக்கிறதா? அல்லது அதில் செயல்பாடு (ஆக்ஷன்) இருக்கிறதா? என ஆய்வுசெய்கின்றார் இயேசு. அதனால்தான், 'உங்களால் இயலுமா?' என இரண்டுமுறை அவர்களிடம் கேட்கின்றார். அவர்கள், 'இயலும்' என்று சொன்னவுடன், அவர்களின் எண்ணத்தை இன்னும் உயர்த்துகின்றார் இயேசு.

எப்படி?

உங்களால் இயலுமா? - அப்படியானால் உங்களால் இயல்வதை உங்களுக்காக செய்யாதீர்கள். இயலாதவர்களுக்காக செய்யுங்கள் என அவர்களின் வட்டத்தை, பார்வையை விரிவுபடுத்துகின்றார் இயேசு.

இப்படி இயேசுவே செய்தார் என்பதைத்தான் இன்றைய முதல் (காண். எசா 53:10-11) மற்றும் இரண்டாம் (எபி 4:14-16) வாசகங்கள் நமக்குச் சொல்கின்றன.

துன்புறும் ஊழியனின் இறுதிப்பாடலை (மொத்தம் நான்கு பாடல்கள் - எசா 42:1-4, 49:1-6, 50:4-9, 53) நாம் எசாயா 53ல் வாசிக்கின்றோம். நீதியோடு இருந்த ஒரு ஊழியன் அநீதியால் துன்புறுகிறான் என்பதுதான் இந்தப் பாடலின் சாரம். 'அநீதி வென்றுவிட்டது, நீதி தோற்றுவிட்டது' என மேலோட்டமான வாசிப்பில் தோன்றினாலும், ஆழ்ந்து வாசிக்கும்போது இந்தப் பாடல் தரும் நான்கு வாக்குறுதிகள் மேலோங்கி நிற்கின்றன: 'நாடுகளுக்கு ஒளி தோன்றும்,' 'சிதறுண்டவர்கள் ஒன்றுகூட்டப்படுவர்,' 'பாவங்கள் எல்லாம் மன்னிக்கப்படும்,' மற்றும் 'ஆண்டவரின் நீங்காத உடனிருப்பு.'

இன்றைய முதல்வாசகம் வெறும் இரண்டு வசனங்களை மட்டும் கொண்டிருந்தாலும், அதில் சொல்லப்படும் கருத்துக்கள் ஐந்து:

1. ஊழியன் துன்புறுவது ஆண்டவரின் திருவுளத்தால்தான்
2. அவரின் உயிர் குற்றநீக்கப்பலியாக செயல்படுகிறது
3. அவரின் அறிவு பலரை நேர்மையாளராக்குகிறது
4. அவரின் துன்பம் மற்றவரின் துன்பத்திற்கு பொருள் தருகின்றது
5. மற்றவர்களின் தீச்செயல்களை அவர் சுமந்து கொள்கிறார்

துன்புறும் ஊழியனின் துன்பம், 'பிறருக்காக' - பிறரின் (இறைவனின்) திருவுளத்தால், பிறரின் (சக மனிதர்களின்) குற்றநீக்கப் பலியாக, பிறரை நேர்மையாளராக்க, பிறரின் துன்பத்திற்குப் பொருள்தர, பிறரின் தீச்செயல்களை நீக்க என பிறர்மையம் கொண்டிருப்பதாக இருக்கிறது.

இவ்வாறாக, துன்புறும் ஊழியன், தன்னால் 'இயலும்' என தான் உணர்வது அனைத்தையும், 'இயலாத' பலருக்காக, பலரின் நல்வாழ்வுக்காகச் செய்கின்றார்.

இயேசுவை ஒப்பற்ற தலைமைக்குருவாக முன்வைக்கின்ற எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமடல் (இன்றைய இரண்டாம் வாசகம்), இயேசு, தான் வலுவற்ற நிலையைத் தழுவிக்கொண்டது தனக்காக அல்ல, மாறாக, வலுவற்றவர்கள் வலுவான இறைவனை, அவரின் அரியணையை அணுகிச்சென்று பற்றிக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே என மொழிகின்றது. இயேசு இரக்கம் காட்டுகிறவர் என்பதால் நாம் துணிவுடன் அவரை அணுகிச்செல்ல முடியும். மற்றவரை அணுகிச் செல்லும் துணிவு என்றால் என்ன? நாம் ஒருவரிடம் உதவி கேட்க வேண்டியிருக்கிறது என வைத்துக்கொள்வோம். அந்த உதவியை நாம் பெற முதலில் அவரின் அருகில் செல்ல வேண்டும்? அணுக முடியாத ஒருவரின் அருகில் நாம் செல்ல முடியுமா? இல்லை. இயேசுவின் மனித இயல்பும், அந்த மனித இயல்பில் அவர் வெளிப்படுத்திய இரக்கமும் அவரை அணுகிச்செல்லும் துணிவை நமக்குத் தருகிறது.

இவ்வாறாக, அவர் வலுவின்மை ஏற்றதன் பலன் தனக்காக அல்ல, மாறாக, இயலாத பிறருக்காக என்கிறார் ஆசிரியர்.

'இயலாதவர்களுக்காக இயலும்' என்பதை 'பணிவிடை புரிதல்,' 'துன்புறுதல்' என்ற இரண்டு செயல்களால் முன்வைக்கிறது இன்றைய இறைவாக்கு வழிபாடு. இன்று நாம் இதிலிருந்து பெறும் வாழ்க்கைச் சவால்கள் எவை?

1. இயுலும் என்னும் உயரவா (உயர்-அவா, உயர்ந்த ஆசை)

ஷேக்ஷ்பியரின் ஜூலியஸ் சீசர் நாடகத்தில், சீசரைத் தான் கொன்றது அவருடைய உயரவாவிற்காகவே எனச் சொல்கின்றார் ப்ரூட்டஸ். ஆனால், சீசரின் நண்பர் மார்க் ஆண்டனி, 'சீசர் அத்தகு உயரவா' கொண்டிருக்கவில்லை என்கிறார். 'உயரவா' என்பது கிறிஸ்தவ மரபில் தேவையற்ற ஒன்று, அல்லது, பாவம் என்றே கருதப்படுகிறது. ஏனெனில், முதல் பெற்றோர், தாங்கள் கடவுளைப் போல இருக்க விரும்பியதை நாம் அவர்களின் உயரவா என எடுத்துக்கொள்கிறோம். இந்த உயரவா இருந்ததால்தான் குரங்கிலிருந்து மனிதன் வந்தான். அல்லது அவன் இன்றும் குரங்காகத்தான் இருந்திருப்பான். 'என்னால் எது இயலும்' என எனக்கு அடையாளம் காட்டுவது என்னுடைய உயரவாதான். இன்றைய நற்செய்தியில் நாம் காணும் யாக்கோபும், யோவானும் இத்தகைய உயரவா கொண்டிருக்கின்றனர். இயேசுவுக்கு வலப்புறமும், இடப்புறமும் இடம் கேட்கும்போது, இவர்களின் அவா மட்டும் உயரவில்லை. மாறாக, இயேசுவின் நிலையையும் இவர்கள் உயர்த்துகின்றனர். இயேசுவை அரசர் என்று நினைத்தது அவர்களின் புரிந்துகொள்ளாமை என நினைக்கிறோம். ஆனால், இவர்கள் புரியாமல் இப்படிக் கேட்டார்கள் என்றால், இயேசுவின் கேள்விகளுக்கு, 'இயலும்' என எப்படி பதில் மொழிந்தார்கள்? இவர்களின் உயரவா பற்றி ஆச்சர்யப்படுகின்ற இயேசு, இவர்களின் இந்தப் பதிலிலிருந்து தொடங்கி, சீடத்துவம் பற்றியும், பிறருக்கான துன்பம் மற்றும் பணிவிடை செய்தல் பற்றியும் பேசுகின்றார் இயேசு. தனிமனித உயரவா தனிமனிதனை மட்டும் மையமாக வைத்திருந்தால் அது சமுதாயத்தின் வீக்கமாக மாறிவிடும் என நினைக்கின்ற இயேசு, 'இயலும்' என தாங்கள் நினைக்கிறவர்கள், 'இயலாதவர்களைத்' தூக்கிவிட வேண்டும் என அறிவுறுத்துகின்றார். பிறஇனத்து ஆள்பவர்கள் தங்களால் 'இயலும்' என்ற நிலையை வைத்து, இயலாதவர்களை அடிமைப்படுத்துகின்றனர் என்று சொல்லி, 'உங்களிடையே அப்படி இருக்கக்கூடாது' என எச்சரிக்கின்றார் இயேசு. தொண்டராய் இருக்கும் ஒருவர் தன் தலைவரின் கால்களைத் தன் கைகளில் ஏந்துகிறார். இந்த ஏந்துதல் அடிமையின் அடையாளம் அன்று. மாறாக, 'என்னால் இயலும் - உன்னால் இயலாது' என்ற தன்மதிப்பின் அடையாளம். ஆக, 'இயலும்' என்னும் என் உயரவா இயலாதவர்களை உயர்த்த வேண்டும்.

2. துன்பம் ஏற்பது

மனிதக் கண்டுபிடிப்புகள் அனைத்தும் மனிதன் படும் துன்பத்தைக் குறைக்க உருவானவை. உணவைப் பச்சையாக உண்பது துன்பமாக இருந்தது. நெருப்பு உருவானது. இருள் துன்பமாக இருந்தது. மின்விளக்கு வந்தது. தகவல் பரிமாற்றம் துன்பமாகத் தெரிந்தது. தொலைபேசி வந்தது. ஒரே இடத்தில் அமர்ந்து பேசுவது துன்பமாகத் தெரிந்தது. அலைபேசி வந்தது. முகம் தெரியாமல் பேசுவது துன்பமாகத் தெரிந்தது. காணொளி அழைப்பு வந்தது. இப்படியாக துன்பம் போக்க நாம் கண்டுபிடித்துக்கொண்டேயிருக்கின்றோம். கண்டுபிடிப்புகள் துன்பத்தைக் குறைத்தாலும், துன்பத்தை அழித்துவிடுவதில்லை. புதிய துன்பங்களையே அவை கொண்டுவருகின்றன. துன்பம் என்பது மனிதகுலத்தோடு இணைந்த ஒன்று. இது எதிர்மறையான ஒன்றல்ல. மாறாக, நம்மை அடையாளம் காட்டுவதுதான் துன்பம். கிறிஸ்தவர்களாகிய நாம் சில நேரங்களில் துன்பத்திற்கு ஆன்மீகப்பொருள் அல்லது அறநெறிப் பொருள் கொடுத்துவிடுகிறோம். அல்லது துன்பத்தை ரொமான்ட்டிசைஸ் செய்ய ஆரம்பிக்கிறோம். துன்பம் என்பது இன்பத்தைப் போல ஒரு எதார்த்தம். அவ்வளவுதான். ஆக, துன்பத்தை இன்பமாக மாற்ற வேண்டிய தேவையில்லை. துன்பம் பிறருக்காக என்று இருக்கும்போது அதன் மதிப்பு இன்னும் கூடுகிறது.

3. இரக்கம் காட்டுவது

இன்று சக மனிதர்கள்மேல், உயிர்கள்மேல், இயற்கைமேல் நமக்கு இரக்கம் வேகமாக குறைந்துகொண்டே வருகிறது. 'என்னால் இயலும். எனவே, எனக்குத்தான் எல்லாம்' என்ற நிலை, நம்மை ஒருவரிடமிருந்து தூரமாக்கிவிடுகிறது. 'என்னால் இயலும் என்றால், உன்னாலும் இயலும். நீ முயற்சி செய்' என்று நாம் அடுத்தவருக்கு அறிவுறுத்தவும், 'நீ ஒரு சோம்Nபுறி. அதனால்தான் உன்னால் இயலவில்லை' என்று அடுத்தவரை நாம் குற்றம் சுமத்தவும் செய்யும்போதும் நாம் இரக்கம் காட்ட மறுக்கிறோம். வல்லவர்க்கெல்லாம் வல்லவரான இயேசு தன் வல்லமையோடு மனித வலுவின்மையை ஒப்பிட்டு, மனித வலுவின்மையை அவர் சாடவில்லை. மாறாக, வலுவின்மையோடு தன்னை ஒன்றிணைத்துக்கொள்கின்றார். இறங்கி வருதலே இரக்கம் என்கிறார் இயேசு.

இறுதியாக,

'என்னால் இயலும்' என்று இன்று நாம் கருதுபவற்றையெல்லாம் பட்டியல் இடுவோம். இயன்றதைவிட இன்னும் முயற்சி செய்வோம். 'என்னால் இயலும்' என நான் நினைப்பது எல்லாம் 'இயலாதவர்களுக்காக' என்று, துன்பம் ஏற்பதிலும், பணிவிடை புரிவதிலும், பிறரின் கால்களை நம் உள்ளங்கைகளில் ஏந்துவோம்.

தன் சீடர்களின் பாதங்களைக் கைகளில் ஏந்திய இயேசு இதையே பாடம் சொன்னார்.

அவரால் இயலும் எனில், அவரோடு வாழும் நமக்கும் இயலும்!

Thursday 11 October 2018

பொதுக்காலம் ஆண்டின் 28-ஆம் ஞாயிறு


பொதுக்காலம் ஆண்டின் 28-ஆம் ஞாயிறு


இன்றைய வாசகங்கள்


சாலமோனின் ஞானம் 7:7-11
எபிரேயர் 4:12-13
மாற்கு 10:17-30
 
 
 
 

கப்பலில் பயணம் செய்து கொண்டிருந்த ஒருவனுக்கு திடீரென ஒரு அச்சம் தோன்றியது: கடலில் விழுந்து விட்டால் தான் எப்படி உயிர் பிழைப்பது என்ற எண்ணம் அவனை வாட்டியது. கப்பல் தலைவனிடம் சென்று தன் அச்சத்தை விளக்கினான். கவலைப்படாதே , உனக்குத்தான் நன்கு நீந்தத் தெரியுமே என்றான் கப்பல் தலைவன். உடனே அவன், இல்லை ! நேற்று கூட நன்கு நீந்தத் தெரிந்த ஒருவன் கடலில் விழுந்து மூழ்கி இறந்து போனானே என்றதற்கு கப்பல் தலைவன் அம்மனிதன் கடலில் வீழ்ந்தபோது தன்னுடைய பொருட்கள் அடங்கிய இரண்டு பெட்டிகளை தன் இரு கைகளிலும் பிடித்திருந்தான். அப்பெட்டிகளின் எடை அவனை நீருக்குள் இழுத்துச் சென்றுவிட்டது. எனவேதான் எங்களால் கூட அம்மனிதனைக் காப்பாற்ற இயலவில்லை என்று சொன்னான். இக்கதை தரும் பாடத்தை நமக்கு அளிப்பதே இன்றைய வாசகங்கள். மனிதன் படைக்கப்பட்ட போது கள்ளங்கபடம் இல்லாமல் (Innocence) இருந்தான். அவன் வளர வளர அவனுக்குள் பல மூட்டைகள் ஏறிக் கொண்டன. நல்லவைகள் பஞ்சு மூட்டையைப் போல இலேசாக இருந்தன. தீயவையே பாறாங்கற்களைப்போல கடினமாயின. இதுபோன்ற மூட்டைகள் அவனுக்குள் இருக்கும் வரை குழப்பம்தான்.

கட்டளைகளை யெல்லாம் கடைப்பிடித்த இளைஞன் ஒருவனுக்குத் தனக்கு நிலைவாழ்வு கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்தது. ஆண்டவர் இயேசுவிடம் சென்று வினவினான். பாதி கிணற்றைத் தாண்டும் சக்தி கொண்ட அவுனுக்கு மீதிப் பாதி கிணற்றைத் தாண்ட ஆண்டவர் வழிவகைச் சொன்னார். உமக்கு இன்னும் ஒன்று குறைபடுகிறது. நீர் போய் உமக்கு உள்ளவற்றை விற்று ஏழைகளுக்குக் கொடும். அப்போது விண்ணகத்தில் செல்வராய் இருப்பீர். பின்பு வந்து என்னைப் பின்பற்றும் (மாற்.10:21) என்றார். ஆண்டவர் காட்டிய வழி அவனுக்கு உகந்ததாக இல்லை. நீ கட்டளைகளையெல்லாம் கடைப்பிடிப்பதால் மீட்பு அடைந்துவிட்டாய் என்று இயேசு சொல்வார் என்று எண்ணி வந்த இளைஞனுக்கு, இன்னும் அதிகமாக, எல்லாவற்றிற்கும் மேலாக அனைத்தையும் இழக்கச் சொல்கிறாரே என்று முகம் வாடி வருத்தத்தோடு சென்றான்.

நாமும் மீட்படைய வேண்டும் என்று விரும்புகிறோம். நம்மை மீட்க வேண்டும் என்பது இறைத்தந்தையின் விருப்பம். அவ்விருப்பத்தை நிறைவேற்ற இயேசு தன்னுயிரைத் தந்தார். இன்னும் குறைவாக இருப்பது என்ன? நம் ஒத்துழையாமை. பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில் நாம் சேகரித்தவற்றை, நாம் அடைந்தவற்றைக் காப்பாற்றுவதற்காக நாம் நடத்துகின்ற போராட்டம் பெரிது. நாம் சேர்த்தவைகள்: பணம், பதவி, படிப்பு, பட்டம், பகைமை, சொத்து, சொந்தம்... போன்ற சுமைகளே நம்மை மூழ்கடிக்கும். இவற்றையெல்லாம் விடுத்துக் கள்ளம் கபடற்ற முதல் நிலைக்கு நாம் செல்ல வேண்டும். அறிவு நம்மை அனைத்தையும் துறக்க வைக்கும். வளர்ந்தாலும், பெரியவரானாலும் ஞானம் என்கிற கொடை நம்மைக் குழந்தைகளாக்கும். இது தனி மனித முயற்சியால் இயலாது. ஆனால் கடவுளுக்கு அப்படியல்ல, கடவுளால் எல்லாம் இயலும் (மாற் 10:27). பின்பு வந்து என்னைப் பின்பற்றும் (மாற் 10:21) என்று சொன்ன இயேசுவின் வார்த்தைகளுக்குச் செவிமடுத்து ஞானத்தைப் பெறுவோம். இலவசமாய் இறைவன் தரும் நிறை வாழ்வைப் பரிசாகப் பெற்றுக்கொள்வோம்.
 
 
 

 


கிரேக்க நாட்டுத் தத்துவமேதை ஒருவர் தம் வீட்டிற்கு முன்புறம், "ஞானம் இங்கே விற்கப்படும்" என்று ஒரு விளம்பரப் பலகையில் எழுதி வைத்திருந்தார், இந்த நூதனமான விளம்பரத்தைப் படித்த ஒரு பணக்காரர் தமது வேலைக்காரரிடம் பணம் கொடுத்து, ஞானம் வாங்கி வரும்படி அவரை அம்மேதையிடம் அனுப்பினார். அம்மேதை அப்பணத்தை வாங்கிக் கொண்டு, ஒரு காகிதத் துண்டில், "நீ எதைச் செய்தாலும் தன் இறுதி முடிவை நினைத்துக்கொள்” என்று எழுதிக் கொடுத்தார், அப்பணக்காரர் அவவாக்கியத்தைப் பொன் எழுத்துக்களால் பொறித்து, சட்டம் கட்டி, தம் வீட்டின் மையப் பகுதியில் தொங்கவிட்டு, நாள்தோறும் படித்து, வாழ்வின் நிலையாமையை உணர்ந்து, தம் செல்வத்தின் பெரும் பகுதியை ஏழைகளுக்குக் கொடுத்து உதவி, உண்மையில் ஞானியாக வாழ்ந்து நல்ல மரணமடைந்தார்.

நாம் எதைச் செய்தாலும் நம் வாழ்வின் இறுதி முடிவை நம் கண்முன் நிறுத்த வேண்டும். “இருப்பது பொய், போவதுமெய்." இதுதான் வாழ்வு. "வீடு வரை உறவு, வீதி வரை மனைவி, காடு வரை பிள் ளை, கடைசிவரை யாரோ?" திலையற்ற வாழ்வை எண்ணிப்பார்த்ததால்தான் பலர் ஞாளிகளாக மாறினர். இன்றைய பதிலுரைப் பாடலும், "எங்கள் வாழ்நாள்களைக் கணிக்க எங்களுக்குக் கற்பியும்; அப்போது ஞானமிகு உள்ளத்தைப் பெற்றிடுவோம்" (திபா 30:12) எனக் கூறுகிறது.

இன்றைய முதல் வாசகம் ஞானத்தின் சிறப்பை எடுத்துரைக்கின்றது. ஞானத்திற்கு ஈடு இணையானது இவ்வுலகில் வேறெதுவுமில்லை. ஞானத்திற்கு முன் வெள்ளி வெறும் களிமண்; தங்கம் வெறும் தவிடு; செல்வம் வெறும் குப்பை: அழகு வெறும் மாயை; புகழ் வெறும் புகை.

அறிவு ஞானமாகக் கனிய வேண்டும். அறிவைப் புத்தகம் வாயிலாகவும் பல்கலைக் கழகங்கள் மூலமாகவும் பெற முடியும். நவீனக்கலையைக் கலைக்கணிப் பொறிவாயிலாகக் கற்றுக் கொள்ள முடியும், இவ்வுலகம் முழுவதையும் இணையதளம் மூலமாக இணைக்க முடியும். சின்னத் திரைகளும் பெரிய திரைகளும் நமக்குக் கேளிக்கைகளை வழங்க முடியும். ஆனால் ஞானமானது கடவுள் நமக்கு அளிக்கும் மேலான கொடை; தூய ஆவியார் நம் மீது பொழியும் ஒப்புயர்வற்ற வரம் சாலமோன் அரசர் கடவுளிடமிருந்து செல்வத்தையோ புகழையோ ஆயுளையோ கேட்காமல் ஞானத்தைக் கொடையாகக் கேட்டுப் பெற்றுக் கொண்டார். பகுத்தறிவு இறைஞானமாகக் கனிய வேண்டும். மெய்யறிவு சூன்யத்தில் அல்ல, பூரணத்தில் சங்கமிக்கும்: கடவுளிடம் சரண் அடையும்.
பழங்காலத்தில் அறுவது வயது நிறைவடைந்த கணவனும் மனைவியும் இல்லறம் துறந்து வனவாசம் மேற்கொள்ளக் காட்டுக்குச் சென்றனர். முன்னே சென்ற கணவர் தரையில் கிடந்த ஏதோ ஒரு பொருளைக் காலால் மணலைக் கொண்டு மறைத்தார். அதைக் கவனித்த மனைவி அவரிடம், "எதைக் காலால் மூடி மறைக்கிறீர்கள்?" என்று கேட்டதற்கு, கணவர், "தரையில் மாணிக்கக் கல் ஒன்று கிடக்கிறது. அதை உன் கண்களில் படாதபடி மூடி மறைத்தேன்" என்றார், அதற்கு மனைவி, “ என்னங்க, துறவறம் மேற்கொண்ட பிறகும், உங்களுக்கு மண்ணுக்கும் மாணிக்கத்திற்கும் வேறுபாடு தெரிகிறதா?" என்று கேட்டார். ஞானத்தில் தம் கணவரையே விஞ்சி விட்டார் அந்த மனைவி!

கடவுளை யார் தேடுவர் ? மண்ணையும் மாணிக்கத்தையும் சமமாகப் பார்ப்பவர்கள். ஒட்டையும் செல்வத்தையும் ஒன்றாகக் காண்பவர்கள் தான் கடவுளை நாடுவர் என்கிறார் தாயுமானவர்.
"ஓடும் இருநிதியம் ஒன்றாகக் கண்டவர்கள் நாடும் பொருளான நட்பே பராபரமே".

இன்றைய நற்செய்தியில், கடவுளுடைய ஞானம் எனப்படும் கிறிஸ்துவை (1கொரி 1:24) பணக்கார வாலிபர் ஒருவர் மேலோட்டமாகப் பின்பற்ற விரும்பினார். ஆனால் கிறிஸ்துவோ தம்மை வேரோட்டமாக, நெருக்கமாகப் பின்பற்ற அவருக்கு அழைப்பு விடுத்தார், அவருடைய உடமைகளை எல்லாம் விற்று, அவற்றை ஏழைகளுக்கு வாரி வழங்கிவிட்டு, வெறுங்கையுடன் தம்மைப் பின்பற்ற அழைத்தார், ஆனால் அப்பணக்கார வாலிபர் தமது உடமைகளைத் துறக்க மனமின்றி முகவாட்டத்துடன் போய் விட்டார், அவருக்கு மண்ணக அறிவு இருந்தது. ஆனால் விண்ணக ஞானமில்லை . கடவுளுக்கும் செல்வத்திற்கும் ஊழியம் புரிய அவர் விரும்பினார். ஆனால் கிறிஸ்துவோ, "எவரும் கடவுளுக்கும் செல்வத்துக்கும் ஊழியம் செய்ய முடியாது" (மத் 6:24) என்பதை அவருக்குத் திட்டவட்டமாக உணர்த்தினார்.

கிறிஸ்து இவ்வுலகச் செல்வத்தின் அவசியத்தை மறுக்க வில்லை. பொருட்பால் இல்லை என்றால், காமத்துப் பாலும் வாங்க முடியாது. ஏன், ஆவின்பால் கூட வாங்க முடியாது என்பது கிறிஸ்துவுக்கு நன்றாகவே தெரியும். ஆனால், கிறிஸ்துவோடு ஒப்பிடும் போது, இவ்வுலகச் செல்வங்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டு, இரண்டாம் நிலையை அடைகின்றன, கிறிஸ்து எல்லாவற்றையும் இரண்டாம் நிலைக்குத் தள்ளி விடுகிறார். இவ்வுண்மையைத் திருத்தூதர் பவுல் தன்குனர்ந்திருந்தார், எனவே தான் அவர், “கிறிஸ்துவை ஆதாயமாக்கிக் கொள்ள அனைத்தையும் குப்பையாகக் கருதுகிறேன்” (பிலி 3:8) என்றார். இவ்வுலக செல்வங்களுக்கு அடிமை ஆகிறவர்கள் கடவுளுக்கு அடிமை ஆகமுடியாது.

அரிது, அரிது, பணக்காரர் விண்ணரசில் நுழைவது அரிது என்று ஆணித்தரமாக அறிக்கையிடும் கிறிஸ்து, பணக்காரர்களும் இறையருளால் விண்ணகம் செல்ல முடியும் என்பதையும் எடுத்துக்கூறத் தயங்கவில்லை , பணக்கார சக்கேயு ஓர் ஊழல் பெருச்சாளி: இறையருளால், அதாவது கிறிஸ்துவின் பிரசன்னத்தால் மனமாற்றம் அடைந்தார். அதன் விளைவாகத் தாம் இழைத்த அநீதிகளுக்கு நான்கு மடங்கு ஈடு செய்யவும், தமது செல்வத்தில் பாதியை ஏழைகளுக்கு வழங்கவும் முன் வந்தார்; மீட்படைந்தார் (லூக் 19:8-10).
எவ்வகைப் பொருளாசையும் கொள்ளாது எச்சரிக்கையாக இருக்க வேண்டும், ஏனெனில் செல்வப் பெருக்கால் வாழ்வு வந்துவிடாது. (லூக் 12:15). நிலையற்ற செல்வத்தை ஏழைகளுக்குக் கொடுத்து அதன்மூலம் நிலை வாழ்வைப் பெற்றுக் கொள்ள வேண்டும் (லூக் 18:9), உலகச் செல்வத்தைப் பயன்படுத்தும் போது அவற்றில் மூழ்கி ஆன்மாவை இழக்காமல் இருக்கக் கற்றுக்கொள்வதுதான் வாழ்க்கைக் கலையாகும் (1 கொரி 7:31).

கணவர் ஒருவர் தம் மனைவிக்குக் குடைபிடித்துக் கொண்டு போனார், ஏன் அவர் அவ்வாறு செய்தார்? என்று அவரைக் கேட்டதற்கு அவர் தந்த பதில்: "போகும் வழியில் துணிக்கடை, நகைக்கடைகள் உள் ளன், அக்கடைகளை என் மனைவி பார்க்காதப்டி கு கடை யை இருபக்கங்களிலும் வளைத்துப்பிடித்து மிகவும் தந்திரமாக அவளை வீட்டிற்குத் தள்ளிக்கொண்டு போய் விடுவேன்."
இவ்வுலக மாயை நமது கண்களில் பட்டு நம்மைத் திசை திருப்பாமல் செய்ய நமக்கொரு குடை தேவைப்படுகிறது. அதுதான் கடவுளுடைய வார்த்தை : உயிருள்ள, ஆற்றல்மிக்க, இருபக்கமும் வெட்டக்கூடிய கூர்மையான வாளான, உள்ளத்தை சாடுருவுகிற கடவுளுடைய வார்த்தையால் மெய்யறிவும் ஞானமும் பெற்று ஞானிகளாக வாழக் கற்றுக் கொள்வோம். பல்வேறு வாழ்க்கைப் போராட்டங்களால் நாம் நசுக்கப்பட்டு, பிழியப்பட்டு பெறுகின்ற பட்டறிவினால் நாம் ஞானிகளாக மாறவேண்டும், வாழ்க்கை அனுபவம்தான் நமது சிறந்த ஆசான். கெட்ட பின்னாவது ஞானியாக வேண்டாமா?

தொட்டிலுக்கு அன்னை, கட்டிலுக்குக் கன்னி, பட்டினிக்குத் தீனி, சுட்டபின் நெருப்பு, கெட்டபின் ஞானி! "நீ எதைச் செய்தாலும் உன் இறுதி முடிவை நினைத்துக் கொள்"
 

 



எப்படி பணத்தைப் பயன்படுத்துவது?

அந்தப் பள்ளிக்கூடத்தில் அந்த வகுப்பில் அவன்தான் கணக்கில் முதல் மாணவன். அவன் 99 மதிப்பெண் பெற்று முன்னிலையிலிருந்தான். ஆனால் அவனுடைய கணித ஆசிரியர் அவனைக் கடுமையாகக் கண்டித்தார். கண்டிக்கப்பட்டவன் கண்டிப்புக்குக் காரணம் கேட்டான். ஆசிரியரோ ஒரு வெள்ளைத்தாளில் ஒரு கரும்புள்ளியை வைத்துவிட்டு, மாணவனைப் பார்த்து, நீ பெற்றிருக்கின்ற மதிப்பெண் இந்த வெள்ளைத் தாளிலுள்ள கருப்புப் புள்ளி போல் இருக்கின்றது. நீ முழுவதும் வெள்ளையாக இருப்பதையே நான் விரும்புகின்றேன் என்றார். இயேசு இன்றைய நற்செய்தியிலே அவரைச் சந்திக்க வந்த மனிதரிடம் ஒரு கறுப்புப் புள்ளி இருப்பதை, ஒரு குறை இருப்பதைக் கண்டார். நிலை வாழ்வை, இறைவனுடைய நிறை ஆசியை உரிமையாக்கிக்கொள்ள விரும்பிய அந்தச் செல்வர் மோசே கொடுத்திருந்த கட்டளைகளை அப்பழுக்கில்லாமல் பின்பற்றியவர். இருப்பினும் இயேசுவின் சீடத்துவத்துக்கு ஒவ்வாத ஒன்று அவரிடமிருந்தது. அது என்ன? அவருக்கு அடிமையாக இருக்க வேண்டிய சொத்து அவரை அடிமைப்படுத்தி வைத்திருந்தது.

ஞானம் நிறைந்த (முதல் வாசகம்), உயிருள்ள, ஆற்றல் மிக்க (இரண்டாம் வாசகம்) இயேசுவின் வார்த்தைகள் அந்தப் பணக்காரரின் மனத்துக்குள் புகாதவாறு அவருடைய பண ஆசை அவரைத் தடுத்து நிறுத்திவிட்டது. அவருக்குத் தெரிந்ததெல்லாம் பணம் ஒன்றுதான். இயேசுவின் அறிவுரை, விண்ணகம், விண்ணக வாழ்வு போன்ற மதிப்பீடுகளெல்லாம் அவருடைய அகராதிக்கு அப்பாற்பட்டவை. அவர் பணம் பந்தியிலே குணம் குப்பையிலே இதைப் பார்த்து அறிந்து நடக்காதவன் மனிதனில்லே என்று பாடித்திரிந்தவர். இயேசுவின் சீடர்களாக வாழ விரும்புகின்றவர்கள் நூற்றுக்கு நூறு அவருடைய வார்த்தைகளுக்கு முதலிடம் கொடுக்க வேண்டும்.
எவ்வளவுக்கு எவ்வளவு நாம் பற்றற்றவர்களாகத் திகழ்கின்றோமோ அந்த அளவுக்கு அம்மையும், அப்பனுமாகிய கடவுள் நம்மைத் தாங்கிப்பிடித்து வாழவைப்பார். பணத்தைச் சோற்றுக்கு ஊறுகாய் போலப் பயன்படுத்துவது நல்லது.

மேலும் அறிவோம் :
யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன் (குறள் : 341).

பொருள் : ஒருவன் எத்தகைய பொருள்களில் இருந்து வேண்டாம் என்று விட்டு விலகுகிறானோ, அந்தப் பொருள்களால் அவனுக்குத் துன்பம் எதுவும் நேராது!



Friday 5 October 2018

ஆண்டின் பொதுக்காலம் 27ஆம் ஞாயிறு

ஆண்டின் பொதுக்காலம் 27ஆம் ஞாயிறு

 

இன்றைய வாசகங்கள்


I. தொடக்கநூல் 2:18-24 
II. எபிரேயர் 2:9-11  
III. மாற்கு 10:2-16

 

 "கடவுள் தரும் சோதனைக்கும் மனைவி தரும் சோதனைக்கும் உள்ள வேறுபாடு என்ன?" என்று ஒருவரிடம் கேட்டதற்கு அவர், "மனைவியே கடவுள் தந்த சோதனை தானோ!" என்றார், திருமண வாழ்வு ஒரு சிலருக்குச் சோதனையாகவும் வேறு சிலருக்கு வேதனையாகவும் உள்ளது. இச்சோதனையையும் வேதனையையும் சாதனையாக மாற்றுவதில்தான் திருமண வாழ்வின் வெற்றி அமைந்துள்ளது. திருமணத்தின் மாண்பையும் அதன் முறிவுபடாத தன்மையையும் இன்றைய அருள்வாக்கு வழிபாடு எடுத்துரைக்கிறது.

திருமணம் மனிதத் தன்மையை மட்டுமல்ல, தெய்வீகத் தன்மையையும் உடையது. அது படைப்பின் தொடக்கத்திலிருந்தே கடவுளால் ஏற்படுத்தப்பட்ட ஒரு புனிதமான அமைப்பு, கடவுள் தாம் படைத்த அனைத்தும் நன்றாக இருந்ததைக் கண்டார். ஆனால் மனிதன் தனிமையாக இருப்பது நன்றன்று (தொநூ 2:18) என்பதைக்கண்ட அவர், ஆணுக்குச் சரிநிகராகப் பெண்ணைப் படைத்தார். மனித இனம் ஆணினமோ பெண்ணினமோ அல்ல; மாறாக ஆணினமும் பெண்ணினமும் இணைந்த கலப்பினமே மனித இனமாகும், ஆறும். பெண்ணும் ஒன்றாக இணைந்தே கடவுளின் சாயலைப் பிரதிபலிக்கின்றனர். ஆணும் பெண்ணும் ஒருவர் மற்றவரைச் சார்ந்தும் தழுவியும் செயல்படுவதே கடவுளின் திட்டமாகும்,

"நட்பு நட்புதான், காதல் காதல்தான்; காதல் மாறலாம், நட்பு மாறுமா?" என்ற திரைப்படப் பாடலுக்கிணங்க, தம்பதியர்கள் என்றென்றும் நண்பர்களாகத் திகழ வேண்டும். ஒவ்வொருவரும் தம் இதயக் கிடக்கையில் உள்ள ஆழமான உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ள வேண்டும். நண்பர்கள் காதலர்களாக மாறுவதைவிட, காதலர்கள் நண்பர்களாக மாறுவதே முக்கியம், கணவனுக்கும் மனைவிக்கும் இடையேயுள்ள உறவு மிகவும் நெருக்கமானது, பிரிக்க இயலாதது. அதன் தன் காதலனிடம், "எனக்காக இருப்பீர்களா?" என்று கேட்டதற்கு அவள், "நம் காதல் இறவாக்காதல்" என்றான், உண்மையான அன்பு நிரந்தரமானது, சாகாத் தன்மையுடையது கிறிஸ்து தம்மவரை இறுதிவரை அன்பு செய்தார் (யோவா 1:3; 1 ); தம்மவருடன் உலகம் முடியும் வரை எந்நாளும் உடனிருக்கிறார் (மத் 24:30),

மணமுறிவு கடவுளின் திட்டத்திற்கு முரணானது. மணமுறிவை வெறுப்பதாகக் கடவுள் பழைய உடன் படிக்கையில் குறிப்பிடுகிறார் {மலா 2:15-16) மணவிலக்குச் சான்றிதழ் கொடுத்து மனைவியை விலக்கிவிட மோசே அனுமதி வழங்கியது மக்களின் கடின உள்ளத்தின் பொருட்டேயாகும். மணமுறிவினால் தடம்புரண்ட திருமண வாழ்வைக் கிறிஸ்து மீண்டும் அதன் தொடக்க நிலைக்குக் கொண்டுவந்து, "கடவுள் இணைத்ததை மனிதர் பிரிக்காதிருக்கட்டும்" (மாற் 10:9) என்று கண்டிப்பான கட்டளையைக கொடுத்தார்,

கடவுள் மனிதரை ஆணும் பெண்ணுமாகப் படைத்தார். இது படைப்பின் மறைபொருள், ஆண் கிறிஸ்துவாகவும் பெண் திருச்சபையாகவும் மாறுகின்றனர், இது மீட்பின் மறைபொருள், கணவனுக்கும் மனைவிக்கும் இடையே உள்ள உடன்படிக்கை கிறிஸ்துவுக்கும் திருச்சபைக்கும் இடையே உள்ள உடன்படிக்கையில் ஊன்றி, அதற்குச் சாட்சியம் பகர்கிறது (எபே 5:25-32). இவ்வாறு படைப்பிலும் மீட்பிலும் திருமண அன்பு கடவுளின் நிலையான அன்பிற்கு இலக்கணமாய் அமைந்துள்ளது. மணமுறிவை நாடும் தம்பதியர் கடவுளின் உடன்படிக்கையை முறித்து கடவுளுக்கே துரோகம் செய்கின்றனர், திருமண அன்பு கணவன் - மனைவி என்ற குறுகிய வட்டத்தில் முடிவடையாது. அதன் மூன்றாம் பரிமாணமாகிய குழந்தைச் செல்வத்தில் முழுமையடைகிறது. குழந்தையானது மணமக்களின் கூட்டொருமை; அவர்களுடைய அன்பின் நிலையான நினைவுச் சின்னம். நல்ல மனைவியும் நல்ல மக்களும் ஆண்டவர் தமக்கு அஞ்சி நடப்போருக்கு அருளும் பேறு என்று இன்றைய பதிலுரைப் பாடல் கூறுகிறது (திபா 128:3). திருமணத்தின் முறிவுபடாத தன்மையைப் பறைசாற்றிய உடனே, கிறிஸ்து குழந்தைகளை அரவணைத்து அவர்களுக்கு ஆசி வழங்குவது குறிப்பிடத்தக்கது (மாற் 10:13-18).

ஒரு கணவர் தம் மனைவியை என்னிடம் காட்டி, "சாமி! இவளுடன் 43 வருஷமா நரகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்" என்றார். அதற்கு அவருடைய மனைவி, "சாமி, நரகத்தில் இருந்து கொண்டே 6 பிள்ளைகளைப் பெத்த இவரு. மோட்சத்தில் இருந்தாருனா எத்தனை பிள்ளைகளைப் பெற்றிருப்பாரோ?" என்றார். திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயக்கப்பட்டாலும் நரகத்தில் வாழப்படுகின்றன என்று சொல்லப்படுகிறது, அன்பு உள்ள இல்லறம் சொர்க்கம்; அன்பு இல்லாத இல்லறம் நரகம்.

அன்பிலே இருவகை உண்டு. ஒன்று ஆள விரும்புகின்ற அன்பு, மற்றொன்று ஆட்பட விரும்புகிற அன்பு, ஆள விரும்புகிற அன்பு தன்னலமிக்க அன்பு, பிறரைப் பயன்படுத்தும் அன்பு, ஆட்பட விரும்புகிற அன்பு தியாகமிக்க அன்பு, பிறருக்குப் பயன்படுகின்ற அன்பு. கிறிஸ்துவின் அன்பு ஆளவிரும்புகிற அன்பு அல்ல, ஆட்பட விரும்புகின்ற அன்பு, "மானிட மகன் தொண்டு ஏற்பதற்கு அல்ல, மாறாகத் தொன்பாடு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்கும் வந்தார்" (மாற் 10:45), தம்பதியர்களிடையே கிறிஸ்துவின் தியாகமிக்க அன்பு இருந்தால், நீதிமானின் பொறுமையையும் கடவுள் பக்தியையும் கடவுள் பயமற்றவர்கள் இழித்துரைக்கின்றனர், நீதிமானுக்கு எதிர் காலம் இல்லை என்று ஏளனம் செய்கின்றனர். ஆனால் சுடவுள் நீதிமான்களை எல்லாவிதத் துன்பங்களிலிருந்தும் விடுவிக்கிறார். "செருக்குற்றோர் எனக்கு எதிராக எழுத்து என் உயிரைப் பறிக்கப் பார்க்கின்றனர், கடவுள் எனக்குத் துணைவராய் இருக்கிறார்" (திபா 54:3-4), தீமைக்குத் தீமை செய்பவர்களுக்கு கிடைப்பது ஒரு நாள் இன்பம், தீமையைப் பொறுத்துக் கொள்பவர்களுக்குக் கிடைப்பதோ நிரந்தர இன்பம்.

ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம், பொறுத்தார்க்குப்
பொன்றும் துரைசாம் புகழ் (குறள் 15)

 

 

 


மதிப்பிற்குரிய மறுபாதி

'தெ சிம்போசியம்' (The Symposium) என்ற தனது உரையாடலில், அரிஸ்டோஃபேனஸ் என்ற கதைமாந்தர் வழியாக, பிளேட்டோ 'உயிர்த்துணை' (soulmate) பற்றிய ஒரு கதையைப் பதிவுசெய்கின்றார். தொடக்கத்தில் மனிதர்களுக்கு நான்கு கைகள், நான்கு கால்கள், இருபக்கம் பார்க்கின்ற ஒரே தலை, மற்றும் ஆண், பெண், ஆண்-பெண் என்ற மூன்று பாலினம் இருந்ததாம். 'ஆண்,' சூரியனிடமிருந்தும், 'பெண்,' பூமியிடமிருந்தும், 'ஆண்-பெண்' நிலவிலிருந்தும் வந்தவர்களாம். மனிதர்கள் நிறைய ஆற்றலைக் கொண்டிருந்ததால் கடவுளர்கள் அவர்களைத் தங்களின் எதிரிகளாகப் பார்க்கத் தொடங்கினர். இவர்களை அழிக்க விரும்பிய கடவுளர்களுக்கு 'சேயுசு' ஒரு அறிவுரை கூறுகின்றார்: 'மனிதர்களை அழிக்க வேண்டாம். அவர்கள் ஒவ்வொருவரையும் இரண்டாக வெட்டி விடுவோம். தங்களின் மறுபாதியைத் தேடிக்கொண்டிருப்பதிலேயே அவர்கள் வாழ்க்கை கழிந்துவிடும். அவர்கள் அதிலேயே தங்கள் ஆற்றலை இழந்துவிடுவார்கள். நமக்கு எதிராக கிளர்ச்சி செய்ய மாட்டார்கள்.' கடவுளர்களுக்கு இந்த சேயுசின் இந்த அறிவுரை பிடித்திருக்க, மனிதர்களை இரண்டாக வெட்டிவிடுகின்றனர். அன்றுமுதல் இன்றுவரை ஒவ்வொருவரும் தன் உயிர்த்துணையை தேடிக்கொண்டிருக்கிறார்கள்.

நிற்க.

மனிதர்கள் ஒவ்வொருவரும் தேடிக்கொண்டே இருக்கும் மறுபாதியே உயிர்த்துணை. இந்த உயிர்த்துணையின் மதிப்பையும், அதன் இன்றியமையாத நிலையையும் நமக்கு முன்வைக்கிறது இன்றைய இறைவாக்கு வழிபாடு. ஒவ்வொருவரையும் அவரவர் மறுபாதியை மதிப்பிற்குரியதாக நடத்த உதவுவது நிரப்புதன்மை.

உயிர்த்துணை (soulmate), மறுபாதி (the other half), நிரப்புதன்மை (complementarity) என்ற மூன்று சொல்லாடல்களை முதலில் வரையறை செய்துகொள்வோம்.

1. உயிர்த்துணை

நம் தமிழ்மொழியில், திருமணத்தால் இணைக்கப்பெற்ற மனைவியை கணவரும், கணவரை மனைவியும், 'வாழ்க்கைத்துணை' என அழைக்கிறோம். 'உயிர்' மற்றும் 'வாழ்க்கை' என்னும் இரண்டு சொற்களுமே ஓரளவு மாற்றி பயன்படுத்தப்படக்கூடியவையே. 'துணை' ('help' or 'helper') எப்போது நமக்குத் தேவைப்படுகிறது? நம்மால் ஒன்றை நாமே செய்ய முடியாதபோது, அல்லது பயணம் செய்ய முடியாதபோது துணைக்கு ஒருவரை அழைக்கிறோம். ஆக, வாழ்வில் சேர்ந்து சுமக்கவும், சோர்ந்து விழாமல் பயணம் செய்யவும் உடன் வருபவர் வாழ்க்கைத் துணை. இவரை நாம், 'நுகத்தடித்துணை' என்றும் அழைக்கலாம். அதாவது, ஒரு கலப்பையை அல்லது வண்டிய இழுக்க இரண்டு மாடுகள் நுகத்தில் பூட்டப்பட வேண்டும். நுகத்தில் பூட்டப்படும் இரண்டு மாடுகளுமே ஒரே அளவு, வலிமை, நகர்வு கொண்டிருக்க வேண்டும். ஆக, வாழ்க்கை என்ற வண்டியை இழுக்க, நுகத்தோடு இணையும் துணையே உயிர்த்துணை.

2. மறுபாதி

'பகுதி' என்பதுதான் 'பாதி' என மருவி வந்திருக்கிறது என்கிறது தமிழ் இலக்கணம். 'மறுபாதி' அல்லது 'மறு பகுதி' என்று சொல்லும்போது, அதில் 'ஒருபாதி' அல்லது 'ஒரு பகுதி' மறைந்திருக்கிறது. 'ஒரு பகுதியின்' மீதியே 'மறு பகுதி.' ஆக, கணவர் 'ஒருபாதி' என்றால், மனைவி 'மறுபாதி.'

3. நிரப்புதன்மை

பகல்-இரவு, ஒளி-இருள் என்ற இருதுருவங்களை எடுத்துக்கொள்வோம். இத்துருவங்கள் ஒன்றோடொன்று எதிர்த்து நிற்பவை அல்ல. மாறாக, ஒன்றோடொன்று பொருந்தக்கூடியவை. அல்லது ஒன்றையொன்று நிரப்பக்கூடியவை. பகல் இரவையும், ஒளி இருளையும் நிரப்புவதுபோல, ஆண் பெண்ணையும், பெண் ஆணையும் நிரப்புகின்றனர்.

இன்றைய இறைவாக்கு வழிபாடு, மேற்காணும் மூன்று சொல்லாடல்களைக்கொண்ட ஒரு முக்கோணமாக நகர்கிறது.

முதல் வாசகத்திலிருந்து (காண். தொநூ 2:18-24) நம் சிந்தனையைத் தொடங்குவோம்.

இன்றைய முதல் வாசகத்தை நான்கு உட்பிரிவுகளாகப் பிரிக்கலாம்:

1. ஆதாமை வாட்டும் தனிமை
2. இந்த தனிமைக்கு இறைவனே தன் படைப்புப் பொருளில் ஆள் தேடுகின்றார்
3. தனிமை போக்க பெண்ணைப் படைக்கின்றார்
4. ஆண்-பெண் இணைந்திருத்தலின் நோக்கம் கற்பிக்கப்படுகின்றது

கடவுள் தான் படைத்த அனைத்தையும் பெயரிடுமாறு ஆதாமிடம் கொண்டு வருகின்றார். பெயரிடுதல் என்பதற்கு இரண்டு அர்த்தங்கள் உண்டு: ஒன்று, பெயரிடுதல் ஒருவர் மற்றவர்மேல் கொண்டிருக்கின்ற அதிகாரத்தைக் குறிக்கின்றது. இரண்டு, பெயரிடுதல் ஒருவர் மற்றவருக்கு மேல் உள்ள உரிமையை அல்லது உறவைக் குறிக்கின்றது. இதில் என்ன விந்தை என்றால், எல்லாவற்றிற்கும் பெயரிடும் ஆதாமால் தான் உறவுகொள்ள தனக்கேற்ற துணை எதுவும் இல்லை என்பதுதான். ஆதாமுக்கு ஆழ்ந்த தூக்கம் வரச்செய்த இறைவன் அவனது உடலிலுள்ள விலா எலும்பில் ஒன்றை எடுத்து பெண்ணாகப் படைக்கின்றார். பெண்ணைக் கண்டவுடன், 'இவளே என் எலும்பின் எலும்பும், சதையின் சதையும் ஆனவள். 'ஈஷ்'இடமிருந்து எடுக்கப்பட்டதால் 'ஈஷா' என்றழைக்கப்படுவாள் என்று பெண்ணுக்கு பெயர் கொடுக்கின்றான் ஆதாம். இறுதியாக, ஆண்-பெண் இணைந்திருப்பதின் நோக்கம் என்ன என்பது கற்பிக்கப்படுகின்றது.

தனிமை என்பது 'துணையின்மை' என்று கொடுக்கப்பட்டுள்ளது. தனிமை என்பது ஒரு உணர்வு. தனித்திருப்பது என்பது ஒரு எதார்த்தம். உதாரணத்திற்கு, நான் வேலையினிமித்தம் சென்னை செல்கிறேன் என வைத்துக்கொள்வோம். மதுரையில் என் வீட்டோடு தங்கியிருக்கும் நான் சென்னைக்குச் சென்று ஒரு ஓட்டலில் அறை எடுத்து தங்குகிறேன். ஆக, சென்னையில் நான் தனித்திருக்கிறேன். ஆனால், நான் தனிமையாய் உணரத் தேவையில்லை. என் வீட்டில் இருப்பவர்களோடு ஃபோனில் பேசலாம். டிவி பார்க்கலாம். தூங்கலாம். புத்தகம் வாசிக்கலாம். புதிய மனிதர்களோடு அறிமுகம் செய்து கொள்ளலாம். தனிமையில்லாமலும் தனித்திருக்கலாம். தனித்திருக்காமலும் தனிமை இருக்கலாம். சில நேரங்களில் என் வீட்டில் எல்லாரும் சூழ்ந்திருந்தாலும் தனிமை என்ற உணர்வு என்னை வாட்டி எடுக்கலாம். இதுவரை தான் படைத்த அனைத்தும் 'நன்று', 'நன்று' என்ற கடவுள், முதன் முறையாக 'மனிதன் தனிமையாய் இருப்பது நல்லதன்று!' என்று வருத்தப்படுகின்றார். ஆக, தனிமை என்ற உணர்விற்கு மருந்தாக முன்வைக்கப்படுபவர் பெண்.

அடுத்ததாக, 'தனக்கு தகுந்த துணையை மனிதன் காணவில்லை' என்கிறது பாடம். ஆக, ஆதாம் இதுவரை பெயரிட்ட மரங்கள், விலங்குகள் அனைத்தும் அவனுக்கு கீழே இருப்பவை. அவனுக்கு நிகராக இருக்கும் 'துணை' அங்கு இல்லை. இந்தத் துணையை ஆணின் விலா எலும்பிலிருந்து உருவாக்குகிறார் கடவுள். மேலும், எடுத்த இடத்தை சதையால் அடைக்கிறார். என்ன ஒரு விந்தை? 'எலும்பு சதையால் அடைக்கப்படுகிறது. எலும்பு ஒரு சதையாக உருப்பெறுகிறது.' அதாவது, 'கடினம்' என்னும் இயல்பு, 'மென்மை' என்ற இயல்பாக மாறுகிறது. மேலும், 'கடினம்' என்ற இயல்பை, 'மென்மை' என்ற இயல்பு நிரப்புகிறது. ஆணின் தலையிலிருந்து பெண் எடுக்கப்படவில்லை. ஆகவே, அவள் ஆணை ஆட்சி செலுத்த முடியாது. ஆணின் காலிலிருந்து அவள் எடுக்கப்படவில்லை. ஆகவே, அவள் ஆணுக்கு அடங்கி இருக்க முடியாது. மாறாக, அவள் விலா எலும்பிலிருந்து, இதயத்திற்கு அருகில் இருந்து எடுக்கப்படுகிறாள். ஆகவே, அவள் ஆணுக்குச் சமமாக இருக்கிறாள். ஆண் அவளை இதயத்திற்கு அருகில் வைக்க வேண்டும். பெண் அந்த இதயத்தைக் காப்பாற்ற வேண்டும்.

இறுதியாக, திருமணத்தின் நோக்கம். 'கணவன் தன் தாய் தந்தையை விட்டு' (தொநூ 2:24) என்ற இந்த வசனம் பிற்காலத்தில் சேர்க்கப்பட்டதாகத்தான் இருக்க வேண்டும். ஏனெனில் இங்கே ஆதாம்-ஏவாள்தான் முதற்பெற்றோர். இவர்களுக்குத் தாய் தந்தையர் யாருமில்லை. திருமணத்தில் ஆண் தன் பெற்றோரை விட்டு பெண்ணோடு சேரும் பழக்கம் நம் கலாச்சாரத்திலிருந்து வேறுபட்டதாக இருக்கிறது. நம் கலாச்சாரத்தில் பெண்தான் தாய் தந்தையைவிட்டு தன் கணவனோடு கூடி வருகின்றார். திருமண உறவில் நிகழும் பெரிய மாற்றம் என்னவென்றால் ஆணும், பெண்ணும் புதிதாய்ப் பிறக்கின்றனர். இனி பழைய உறவுகளை அவர்கள் பிடித்துக் கொண்டிருத்தல் கூடாது. ஆக, ஒருவர் மற்றவரை அன்பு செய்யத் தங்களையே அவர்கள் முழுவதுமாக ஒருவர் மற்றவருக்குக் கையளித்தல் வேண்டும்.

முதல் வாசகத்தின் பின்புலத்தில் பார்க்கும்போது, 'ஆணுக்கு' ஏற்ற உயிர்த்துணையாக 'பெண்' இருக்கிறாள். ஒரே உடலிலிருந்து எடுக்கப்பட்டதால், 'ஆண்' என்ற ஒருபாதியின் மறுபாதியாக இருக்கிறார் 'பெண்.' மேலும், இங்கே ஒருவர் மற்றவரின் தனிமையை நிரப்புவதால், ஆண்மையும், பெண்மையும் நிரப்புதன்மை கொண்டிருக்கிறது.

இன்றைய இரண்டாம் வாசகம் (காண். எபி 2:9-11) எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமடலிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. இன்னும் சில வாரங்களுக்கு இத்திருமடலிலிருந்துதான் வாசகங்கள் தொடரும். 'வானதூதர்கள்,' 'மனிதர்கள்' என்ற இரண்டு பரந்த வகையினத்தைப் பற்றிப் பேசுகின்ற திருமடலின் ஆசிரியர், 'வானதூதர்களுக்கு மேலாக' இருந்த இயேசு, தான் மனித உரு ஏற்றபோது, அந்த நிலையிலிருந்து 'தாழ்ந்தவராக' இருக்கிறார் என்று முன்வைக்கின்றார். இவரின் இந்த இறங்கிவருதலே, அவர் மனிதர்களை, 'சகோதரர், சகோதரிகள்' என்று அவர் அழைக்கக் காரணமாக இருக்கிறது. அதாவது, 'இயேசு இவர்களைச் சகோதரர், சகோதரிகள் என்று அழைக்க வெட்கப்படவில்லை' என பதிவு செய்கிறார் ஆசிரியர். 'கடவுளாக' இருந்த இயேசு, 'மனித' உரு ஏற்றதால், மனிதர்களை அவர் தம் 'உயிர்த்துணையாக' ஏற்றுக்கொள்கின்றார். மனிதராக அவர் மாறியது எதற்காக? மனிதர்களைத் தூய்மையாக்கவதற்காக. அதாவது, மனிதத்தின் மறுபாதியான தூய்மையை அவர்கள் கண்டுகொள்வதற்காக. இறுதியாக, இயேசுவின் மனித உரு ஏற்ற நிலை அவரை - கடவுளை - மனிதர்களோடு நிரப்புகிறது. இவ்வாறாக, கடவுளும் மனிதர்களும் ஒருவரையொருவர் எதிர்த்து நிற்பவர்களாக அல்லாமல், நிரப்புபவர்களாக மாறுகின்றனர்.

இன்றைய நற்செய்தி வாசகத்தை (காண். மாற் 10:2-16) இரண்டு பகுதிகளாகப் பிரிக்கலாம்:

1. மணவிலக்கு பற்றிய இயேசுவின் போதனை (10:2-12)
2. இயேசு சிறுபிள்ளைகளுக்கு ஆசி வழங்குதல் (10:13-16)

1. மணவிலக்கு அல்லது மணமுறிவு

இயேசுவின் காலத்தில் புழக்கத்தில் இருந்த மணமுறிவு பற்றி கட்டளை அல்லது விதிமுறை ஆணைக் காப்பாற்றும் முகமாகவும், பெண்ணை இழிவுபடுத்தக்கூடியதாகவும் இருந்தது. இயேசு அந்த விதிமுறை கொண்டிருந்த அவலத்தை தோலுரிக்கின்றார். மணவிலக்கு என்பது பற்றிய இயேசுவின் போதனை படைப்புத் திட்டத்தை ஆதாரமாகக் கொண்டிருக்கிறது. படைப்புத் திட்டத்தில் ஆணுக்கும், பெண்ணுக்கும் உரிய இடம் இருக்கிறது என்றும், இதில் தடுமாற்றம் நிகழும்போது மனிதர்கள் கடவுளின் படைப்புத் திட்டத்தோடே விளையாடுகிறார்கள் என்று மறைமுகமாகச் சுட்டிக் காட்டுகின்றார் இயேசு. மேலும், மணமுறிவு விபச்சாரத்திற்கு வழிவகுக்கிறது என்பதும் இயேசுவின் போதனை. விபச்சாரத்தில் பெண் விலை பேசப்படுகின்றார். விபச்சாரத்தில் பெண் வெறும் மோகப்பொருளாகப் பயன்படுத்துகின்றார். அன்பு செய்யப்படுவதற்காக படைக்கப்பட்ட ஒன்றை பொருள் போல பயன்படுத்தத் துவங்குவது படைத்தவரையே இழிவு செய்வதாகும்.

ஆண் மற்றும் பெண் படைக்கப்பட்டது ஒருவருக்கொருவர் உயிர்த்துணையாக இருப்பதற்குத்தானே தவிர, ஒருவர் மற்றவரின் 'உடல்துணையாக' இருப்பதற்கு அல்ல. வெறும் உடல்துணையாக தன் மறுபாதியை கருதும்போதுதான், மணமுறிவு, விபச்சாரம், திருமணத்திற்குப் புறம்பே உறவு போன்றவை தோன்றுகின்றன. மேலும், இப்படிப்பட்ட பிறழ்வுகளில் மனிதர்கள் தங்களுக்கான மறுபாதியை பல மறுபாதிகளில் தேடி அங்கலாய்க்கின்றனர். இறுதியில், ஒருவருக்கொருவர் உள்ள நிரப்புதன்மை மறைந்து, எதிர்தன்மை வளர ஆரம்பிக்கிறது.

2. குழந்தைகள் ஆசீர் பெறுதல்

இயேசு குழந்தைகளை ஆசீர்வதிக்கும் நிகழ்வையும் மாற்கு நற்செய்தியாளர் தொடர்ந்து பதிவு செய்வது, திருமணத்தின் நிறைவு குழந்தைப்பேறு என்பதை அழுத்தமாகப் பதிவு செய்கிறது.

'குழந்தைகள்' திருமண உறவின் நீட்சிகள். 'பெற்றோர்' என்பவர்களின் 'வாழ்க்கைத்துணை' 'குழந்தைகள்.' 'பெற்றோர் நிலையின்' மறுபாதிதான் 'பிள்ளைநிலை'. மேலும், பெற்றோர் பிள்ளைகளை, பிள்ளைகள் பெற்றோரை நிரப்புகின்றனர்.

இவ்வாறாக, இன்றைய முதல் வாசகமும் நற்செய்தி வாசகமும், ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள மறுபாதி நிலை மற்றும் நிரப்புதன்மையையும், இரண்டாம் வாசகம், கடவுளுக்கும் மனிதர்களுக்கும் உள்ள மறுபாதி நிலை மற்றும் நிரப்புதன்மையையும், நற்செய்தி வாசகம், பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் உள்ள மறுபாதி நிலை மற்றும் நிரப்புதன்மையையும் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.

இன்றைய நம் வாழ்க்கைச் சூழலில், இம் மறுபாதி நிலையும், நிரப்புதன்மையும் முன்வைக்கும் சவால்கள் எவை?

ஒரே பாலின திருமணம், திருமணம் தவிர்த்த குழந்தைப்பேறு, தனக்குத்தானே திருமணம், தனிப்பெற்றோர், இணைந்து வாழ்தல், ஒப்பந்த திருமணம் என இன்று திருமணம் பல பரிமாணங்களை எடுத்துவிட்டது. மேலும், திருமணத்திற்கு புறம்பான உறவு 'பிரமாணிக்கமின்மையாக' பார்க்கப்பட்ட நிலை மாறி, 'விருப்பநிலை' என்று ஏற்றுக்கொள்ளும் நிலை வந்துவிட்டது. காலப்போக்கில், அறிவியில் மற்றும் விஞ்ஞான மாற்றத்தால் ஒருவேளை மனிதர்கள் இறவாநிலையை அடைந்தார்கள் என்றால் - அதாவது, இயற்கை மரணத்தை தள்ளிப்போடுவது - முதலில் உடையும் நிறுவனம் திருமணமாகத்தான் இருக்கும். ஏனெனில், 200 அல்லது 300 ஆண்டுகள் வரை வாழும் மனிதர் ஒரே வாழ்க்கைத் துணையோடு வாழும் நிலை எப்படி இருக்கும்? மேலும், இன்று ஆண்-பெண், கணவன்-மனைவி உறவு நிலையில் சகிப்புத்தன்மை குறைந்துகொண்டே வருவதும் கண்கூடு.

நாம் இன்றைய இறைவாக்கு வழிபாட்டில் பேசும் 'உயிர்த்துணை,' 'மறுபாதி,' 'நிரப்புதன்மை' ஆகியவை சாத்தியமா?

முதலில், இந்த மூன்று சொற்களுக்கும் மையமாக இருக்க வேண்டிய வார்த்தை மதிப்பு. அது என்ன மதிப்பு?

ஆண்-பெண் திருமண உறவில், நீதி மற்றும் அன்பைவிட முக்கியமானதாக இருக்க வேண்டிய ஒரு பண்பு என்னவென்றால் மதிப்பு. அதாவது, ஒருவர் மற்றவரை மதித்தல். மதித்தால்தான் நீதிக்கும் அன்புக்கும் அடித்தளமாக இருக்கிறது. உதாரணத்திற்கு, நான் சாலையில் நடந்து செல்கிறேன். வழியில் ஒருவர் கேட்பாரின்றி படுத்திருக்கிறார். அவரை நான் மதித்தால்தான் அவருக்கு அருகில் சென்று அவரை நான் அன்பு செய்யவும், அவருக்கான நீதியை நான் பெறவும் முடியும். 'அவர் யாரே' என நான் வெறும் பிளாஸ்டிக் பேப்பர் போல அவரை நினைத்துக்கொண்டு கடந்து சென்றால், அவரை நான் மதிப்பதில்லைதானே.

ஆக, 'மதிப்பு' இருக்கும் இடத்தில் பிரமாணிக்கமின்மை மறையும். 'மதிப்பு' இருக்கும் இடத்தில் புரிதல் இருக்கும். இன்று, திருமண உறவோ, அல்லது துறவற உறவோ, அல்லது நட்பு உறவோ, அங்கே நம்மோடு உறவில் இருப்பவர் நம் மறுபாதியாக, நம் உயிர்த்துணையாக, நம்மை நிரப்புபவராக இருக்கிறார். அவருக்கு நான் கொடுக்க வேண்டியதெல்லாம் மதிப்பு மட்டுமே. அவர் 'என் மதிப்பிற்குரிய மறுபாதி' என்ற நிலை வந்தால் பாதி பிரச்சினை முடிந்துவிடும்.

இரண்டாவதாக, கண்ணுக்குப் புலப்படாத இறைத்தன்மை. நம் சக பாதியை, சக உயிர்த்துணையை நாம் வெறும் புறக்கண்களால் பார்த்தால் அவருடைய மனிதத்தன்மையும், குறைவும்தான் நம் கண்களில் படும். மாறாக, மற்றவரில் இருக்கும் இறைத்தன்மையை, அல்லது இறைவனின் கண் கொண்டு மற்றவரைப் பார்க்கும்போது, நாமும் ஆதாம்போல, 'இதோ, இவர் என் எலும்பின் எலும்பு, சதையின் சதை' என்று நாமும் சொல்ல முடியும்.

மூன்றாவதாக, ஒருவர் மற்றவரின் கைப்பாவை என்ற நிலை மாற வேண்டும். எப்படி?

கண்ணாடிப் பொருள்களை நாம் இடமாற்றம் செய்யும்போது, அவற்றை நாம் பொதியம் செய்து, அதன் மேல், 'உடையும் பொருள் - கவனம்' என எழுதுகிறோம். ஆனால், இப்படி எழுதப்படாத ஒட்டி ஒன்றை ஒவ்வொரு மனிதரும் தன்மேல் ஒட்டிக்கொண்டிருக்கிறார். மனிதர்கள் தங்களுக்குள்ளே உணர்ந்த முதல் எதிர்மறை உணர்வு 'தனிமை.' இந்தத் தனிமையே மனிதரின் 'வடுப்படும்நிலை' ('vulnerability') அல்லது 'நொறுங்குநிலை' (fragility) இந்த நொறுங்குநிலையில் இருக்கும் ஒரு ஆண், இதே நொறுங்குநிலையில் இருக்கும் பெண்ணின் துணையை நாடுகிறான். படைப்பின் தொடக்கத்தில் அனைத்தையும் நல்லதெனக் கண்ட கடவுள், 'மனித தனிமையை மட்டும் நல்லதன்று' (முதல் வாசகம்) என அறிகிறார். இத்தனிமையைப் போக்க தக்க துணை ஒன்றை படைக்கின்றார். பெண் ஆணிடமிருந்து எடுக்கப்பட்ட விலா எலும்பில் உருவாக்கப்பட்டவள் என்று உருவகப்படுத்துவதன் வழியாக, உடைத்து எடுக்கப்பட்ட விலாவிலிருந்து எடுக்கப்பட்ட பெண் தானும் உடைந்திருப்பதால், உடைந்திருக்கும் ஆணை உறுதிப்படுத்துவது தொடர் போராட்டமாகவே இருக்கும் என்பதே நிதர்சனமான உண்மை. 'இதோ, இவளே என் எலும்பின் எலும்பும், சதையின் சதையும் ஆனவள்' என ஆண் அவனை அரவணைத்துக்கொண்டாலும், 'இருவரும் ஒரே உடலாய் இருந்தாலும்,' 'எப்போது நாம் பிரிந்துவிடுவோமோ?' என்ற பயம் இருவரிடமும் இருந்துகொண்டே இருக்கும். மோசேயின் சட்டம் 'மணவிலக்குச் சான்றிதழ் கொடுத்து மனைவியை விலக்கிவிடலாம்' (நற்செய்தி வாசகம்) என்று ஆணுக்கு அதிகாரம் கொடுத்திருந்ததால், பெண் ஆணின் இரக்கத்திலேயே இருக்க வேண்டிய பொம்மை ஆனாள். பாவை (பெண்) ஆணின் கைப்பாவை ஆனாள். தன் மனைவியை விலக்கிவிடும் ஆண் மீண்டும் தனிமை ஆகிறான். அந்தத் தனிமை என்னும் உடைந்த நிலைக்கு முட்டுக்கொடுக்க வேறொரு பெண்ணை நாடுகிறான். அங்கே வேறொரு பெண்ணும் பொருளாக பயன்படுத்தப்படுகிறாள். ஆண்-பெண் உறவு தனிமை போக்கும் இனிமையாக மாறுவது எப்படி? இருவர் உறவில் இருக்கும் பயன்பாட்டுநிலை மறைந்து அன்பு உருவாவது எப்படி? இரண்டு வழிகள்: (அ) ஒருவர் மற்றவரின் 'நொறுங்குநிலையை' புரிந்துகொள்வது. இறைமகன் இயேசுவே மனித 'நொறுங்குநிலையை' புரிந்துகொள்ள மனிதராக வருகின்றார். மனிதர்களை தன் 'சகோதர, சகோதரிகள் என அழைக்க அவர் வெட்கப்படவில்லை' (இரண்டாம் வாசகம்). (ஆ) கணவன் மனைவியை, மனைவி கணவனை தன் குழந்தைபோல ஏற்றுக்கொள்வது. குழந்தைகளின் நொறுங்குநிலையை நாம் எப்படி மதிக்கிறோமோ, அப்படி ஒருவர் மற்றவரின் நொறுங்குநிலையை மதிப்பது. இம்மேலான புரிதலில் இருப்பவர்களுக்கு ஆண்டவர் வாழ்நாளெல்லாம் ஆசி வழங்குவார் (திபா 128).

இறுதியாக, பாதியாக இருக்கும் நம்மை வாட்டுவது தனிமையும், சோர்வும். நம்மைச் சுற்றி இருப்பவர்கள் நம் மறுபாதிகள். இவர்களை மதிப்புற்குரியவர்கள் என நாம் எண்ணி செயலாற்றும்போதும், நாம் ஒருவர் மற்றவரை நிரப்ப முடியும். 'என் சுண்டுவிரலை நகர்த்தும்போது எங்கோ தெரியும் நட்சத்திரத்தை நகர்த்துகிறேன்' என்ற நிலையில் நான் மற்றவரோடு இணைந்திருக்கிறேன். இந்த இணைந்திருத்தலில் மதிப்பு இருந்தால் அங்கே நிரப்புதன்மை நிரம்பி வழியும்.