Saturday 31 March 2018

ஆண்டவரின் உயிர்ப்பு பெருவிழா

1 ஏப்ரல் 2018


ஆண்டவரின் உயிர்ப்பு பெருவிழா


பாஸ்காத் திருவிழிப்பு (புனித சனி) 
தொநூ 1:1-2:2; விப 14:15-15:1; எசே 36: 16-17ஆ, 18-28; உரோ 6:3-11; மாற் 16:1-7
 


மகிழ்ச்சியூட்டும் மறையுரைகள்

குடந்தை ஆயர் F. அந்தோனிசாமி

உயிர்க்க வேண்டிய உணர்வுகள் இது ஒரு போர் வீரனின் வாழ்க்கையிலே நடந்த உருக்கமான நிகழ்வு! அவன் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவன். போர்க்களத்திலே காயப்பட்டான். அவன் வாழ்க்கையின் கடைசி அத்தியாயம் எழுதப்படப் போகும் நேரம். மரணம் அவனை அழைத்தது. பயங்கரக் காயம். ஊர்ந்து, ஊர்ந்து அவனுடைய கூடாரத்தை அடைந்துவிட்டான். முகம் குப்புறக் கிடந்தவன், தட்டுத்தடுமாறி அவன் பொன்னென போற்றிய விவிலியத்தை எடுத்தான். இரத்தக்கறைப் படிந்த விரல்களால் விவிலியத்தின் பக்கங்களைப் புரட்டினான். அவனுடைய கண்கள் யோவான் எழுதிய நற்செய்தியிலுள்ள பதினோராம் இயலைத் தேடின. அவன் கண்கள் அந்த இயலைக் கண்டுகொண்டன. அவனுடைய இரத்தம் தோய்ந்த விரல் அந்த இயலின் இருபத்தைந்தாவது இறைவாக்கியத்தின்மீது பட்டது. இதோ அந்த அற்புத இறைவாக்கியம்: "'இயேசு அவரிடம், உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே. என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இறப்பினும் வாழ்வார்' என்றார்.” இயேசுவின் இணையில்லா வாக்குறுதியை இதயத்தில் ஏந்தியவனாய் அந்தப் போர்வீரன் கல்லறைக்குள் சென்றான்.

நிச்சயமாக அமைதி நிறைந்த மனத்தோடு அவன் இறந்திருப்பான். மரண நேரத்தில் அவன் அழுது புலம்பவில்லை . ஆண்டவனைச் சபிக்கவில்லை. மாறாக இயேசு என்னை உயிர்ப்பிப்பார் என்ற ஆழமான, அழியாத, மாறாத, மங்காத நம்பிக்கை நிறைந்த கடைசி மூச்சோடு அவன் இவ்வுலக வாழ்விற்கு விடை கொடுத்திருப்பான்.
நாம் உயிர்ப்போமா? உயிர்க்க மாட்டோமா? என்ற கேள்விக்குப் பதில் சொல்லவே இன்று இயேசு நம்முன் உயிர்த்து நிற்கின்றார். செங்கடலை இரண்டாகப் பிளந்து மரணத்திலிருந்து இஸ்ரயேல் மக்களைக் காப்பாற்றிய இறைவன் (விப 14:15-15:1) இன்று கல்லறையைப் பிளந்து உயிர்த்த இயேசு கிறிஸ்துவாய் நம்முன்னே காட்சி அளிக்கின்றார்.
இன்று இவர்மீது நம்பிக்கை வைக்கும் அனைவருக்கும் வாழ்வு உண்டு, உயிர் உண்டு, உயிர்ப்பு உண்டு (உரோ 6:3,7).

இன்று நம்மைச் சுற்றி எத்தனையோ கல்லறைகள்! நாம் உயிரோடு இருக்கும்போதே நமக்குக் கல்லறை கட்டப்படுகின்றது ! கல்லறையை உடைக்க நமக்குச் சக்தியும் இல்லை; நமக்காகக் கல்லறையை உடைக்க நம் அருகில் ஆள்களுமில்லை!

இதோ நம் கண்முன்னேயுள்ள புதிய சிந்தனைகள் நமக்குப் புத்துயிர் ஊட்டட்டும்.
மரணம் வந்தாலும் நாம் மரிக்க மாட்டோம்! எப்போது?

நம்பிக்கை என்னும் நங்கூரத்தோடு நம் வாழ்க்கைக் கப்பல் கட்டப்பட்டிருக்கும்போது! இன்று நாம் நமது உயிருக்குள் நம்பிக்கையை ஊற்றிவைப்போம்! நம்பிக்கையில் உயிரை ஊற வைப்போம்! சாவை, சாவு தீர்மானித்துக்கொள்ளட்டும்! வாழ்வை - மறுவாழ்வை - உயிர்ப்பை நாம் தீர்மானித்துக்கொள்வோம்! சுடும்வரை நெருப்பு ! சுற்றும் வரை பூமி! நம்பும் வரை வாழ்வு!
மேலும் அறிவோம் :

ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்(கு)
ஆழி எனப்படு வார் (குறள் : 989).

பொருள் : சால்பு ஆகிய நிறை பண்புக்குக் கடல் போன்று திகழும் சான்றோர் இறுதிக் காலத்தில் இயற்கையே நிலை குலைந்தாலும் தாங்கள் தங்கள் நிலையிலிருந்து மாறாதிருப்பர்!
சாவின் கொடுக்கு முறிந்தது

கல்லறைக்கு அப்பால்

அருள்பணி இ.லூர்துராஜ்


'வார்த்தை மீது வாசல்கள்” (Windows on the Word) என்ற ஆங்கில நூலில் காணும் நிகழ்ச்சி இது.

டாக்டர் தேஹான் என்பவர் தனது இரு மகன்களுடன் பசுமையான வயல்வெளி வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். எங்கிருந்தோ வேகமாகப் பறந்து வந்த தேனீ ஒன்று மூத்தமகன் ரிச்சர்டின் கண்களுக்குமேல் - கண்ணிமையில் கொட்டி விட்டது. அந்தத் தேனீயைக் கீழே உதறித் தள்ளிவிட்டு அங்கிருந்த புல்தரையில் ரிச்சர்ட் விழுந்து கதறினான், அலறினான் வலி தாங்க இயலாமல்.
அதையெல்லாம் கண்டு அதிர்ந்து நின்றான் சின்னவன் மெர்வின். சிறிதுநேரத்தில் அதே தேனி அவனைச் சுற்றி வட்டமிட்டது. தன் அண்ணன் துடித்த துடிப்பை நினைத்தான். அழத் தொடங்கினான். அது தன்னைக் கொட்டிவிடுமோ என்று மிரண்டான். அதே புல்தரையில் உருண்டான், புரண்டான். அப்போது அவனுடைய தந்தை ஓடிவந்து மெர் வினைக் கைகளில் அணைத்துக் கொண்டு “மெர்வின், பயப்படாதே. தைரியமாயிரு. அந்தத் தேனீ உன்னை ஒன்றும் செய்ய முடியாது. அது ஏற்கனவே தன் கொடுக்கை இழந்து விட்டது. அந்தத் தேனீ உன்னை வளைய வளைய வட்டமிடலாம். அச்சுறுத்தலாம். உன் அண்ணனைக் கொட்டியபோதே அதன் கொடுக்கு முறிந்து விட்டது" என்றார்.

நம்மைப் பொறுத்தவரை இயேசு சாவின் கொடுக்கை முறித்து விட்டார். ''சாவு, வீழ்ந்தது. வெற்றி கிடைத்தது. சாவே, உன் வெற்றி எங்கே? சாவே, உன் கொடுக்கு எங்கே? (1 கொரி. 15;55) என்ற திருத்தூதர் பவுலின் ஆவேச வார்த்தைகள் எவ்வளவு ஆழமானவை! அர்த்தமுள்ளவை!

கிறிஸ்துவின் உயிர்ப்பில் திருத்தூதர் வைத்துள்ள நம்பிக்கை, உறுதிப்பாடு வியப்புக்குரியவை. “பாவமே சாவின் கொடுக்கும். ஆகவே நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வழியாக நமக்கு இந்த வெற்றியைக் கொடுக்கும் கடவுளுக்கு நன்றி" என்று திருத்தூதர் பவுலோடு கிறிஸ்தவ உலகமே ஆர்ப்பரிக்கும் பாஸ்கா இரவு இது!

சாவின் மீது வெற்றி, சாவுக்குக் காரணமான பாவத்தின் மீது வெற்றி, பாவத்துக்குக் காரணனான சாத்தானின் மீது வெற்றி, இம்முப்பெரும் வெற்றிக்காக உயிர்த்த ஆண்டவரைக் கைகுலுக்கிப் பாராட்டுவோம். இயேசு பெற்ற அம்முப்பெரும் வெற்றியில் நமக்கும் பங்களிப்பதற்காக அவருக்கு நன்றி கூருவோம்.

1. இயேசு பாவத்தை வென்றார். அவரது உயிர்ப்பு பாவத்தின் மயக்கத்திலிருந்து நம்மை விடுவிக்கிறது. கல்வாரிப் பலியே பாவப் பரிகாரப் பலிதான். கடவுளுக்கும் மனிதனுக்குமிடையே, மனிதனுக்கும் மனிதனுக்குமிடையே இருந்த உறவுக்கான தடைச் சுவர்களை உடைத்தெறிந்த பலி, "கிறிஸ்துவும் பலரின் பாவங்களைப் போக்கும் பொருட்டு ஒரே முறை தம்மைத்தாமே பலியாகக் கொடுத்தார். அவர் மீண்டும் ஒருமுறை தோன்றுவார். ஆனால் பாவத்தின் பொருட்டு அல்ல, தமக்காகக் காத்திருப்பவர்களுக்கு மீட்பு அருளும் பொருட்டே தோன்றுவார்'' (எபி.9:28)

2. இயேசு சாவை வென்றார். அவரது உயிர்ப்பு சாவின் தூக்கத்திலிருந்து நம்மை எழுப்புகிறது. "பாவத்துக்குக் கிடைக்கும் கூலி சாவு. மாறாகக் கடவுள் கொடுக்கும் அருள்கொடை நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவோடு இணைந்து வாழும் நிலைவாழ்வு” (உரோமை 6:23). "எல்லாப் பகைவரையும் அடிபணிய வைக்கும் அவரை அவர் ஆட்சி செய்தாக வேண்டும். சாவே கடைசிப் பகைவன். அதுவும் அழிக்கப் படும்” (1 கொரி.15:25, 26) திருத்தூதர் உரத்துச் சொன்ன வார்த்தைகள் இவை. இயேசு வந்ததே, வாழ்வு சாவை விட வலிமையானது என்பதை உணர்த்தவே!

3. இயேசு அலகையை வென்றார். அவரது உயிர்ப்பு அலகையின் மாயையிலிருந்து நம்மைத் தெளிவிக்கிறது. ''கடவுளின் அருளால் அனைவருடைய நலனுக்காகவும் இவர் சாவுக்கு உட்பட வேண்டியிருந்தது... ஊனும் இரத்தமும் கொண்ட அப்பிள்ளைகளைப் போல் அவரும் அதே இயல்பில் பங்கு கொண்டார். இவ்வாறு சாவின் மேல் ஆற்றல் கொண்டிருந்த அலகையைச் சாவின் வழியாகவே அழித்து விட்டார். வாழ்நாள் முழுவதும் சாவு பற்றிய அச்சத்தினால் அடிமைப் பட்டிருந்தவர்களை விடுவித்தார்” (எபி.2:9, 14, 15). ஏற்கனவே பாலை வனத்திலும் தொழுகைக் கூடத்திலும் சாத்தானை விரட்டியடித்தவர் தானே இயேசு!

"உடலின் உயிர்ப்பை நம்புகிறேன். முடிவில்லா வாழ்வை நம்புகிறேன்” - இது நமது நம்பிக்கைக் கோட்பாட்டின் தெளிவு. உயிர்ப்பு என்பது கிறிஸ்தவக் கோட்பாட்டின் மையம். கிறிஸ்தவ நம்பிக்கைக்கும் வாழ்வுக்கும் ஓர் உந்துசக்தி.

சிறந்த கிறிஸ்தவரும் அறிவியல் அறிஞருமான மைக்கேல் பாரடே மரணப்படுக்கையில் இருந்தார். "சாவுக்குப் பிறகு கிடைக்கும் வாழ்வு எப்படியிருக்கும்?" என்று கேட்டபோது அவர் சொன்னார்: "எனக்குத் தெரியாது. ஆனால் நான் நிலையானவற்றில் நம்பிக்கை கொண்டுள்ளேன். காரணம், நான் நம்பும் மீட்பர் உயிர்த்து இன்றும் வாழ்கின்றார். எனவே நான் வாழ்வேன் என்பது உறுதி ". உயிர்ப்பு என்பது மேலோட்டமாகப் பார்த்தால் புரியாத புதிராக, அறிவுக்குப் புலப்படாததாகத் தோன்றும். ஆழமான நம்பிக்கை கொண்டு பார்த்தால் இம்மறைபொருள் காட்டும் மேன்மையை உணர முடியும்.

திருத்தூதர் தெளிவுபடுத்துவது இதுதான்: “இறந்தோர் உயிர்த்தெழ மாட்டார் எனில் கிறிஸ்துவும் உயிருடன் எழுப்பப்படவில்லை என்றாகி விடும். கிறிஸ்து உயிருடன் எழுப்பப்படவில்லை என்றால் நாங்கள் பறைசாற்றிய நற்செய்தியும் நீங்கள் கொண்டிருக்கிற நம்பிக்கையும் பொருளற்றதாயிருக்கும்” (1கொரி. 15:13,14)

ஆம், இயேசு உயிர்த்து விட்டார். நமது உயிர்ப்பு வாழ்வுக்கும் உறுதி தந்துவிட்டார். அவரோடு நாமும் உயிர்க்கின்றோம்.
- பொய்யைவிட உண்மை மேலானது என்பதை இயேசுவின் உயிர்ப்புஎண்பிக்கிறது.
- தீமையைவிட நன்மை உறுதியானது என்பதை இயேசுவின் உயிர்ப்பு எடுத்து இயம்புகிறது.
- பகைமையை விட அன்பு, மன்னிப்பு உயர்ந்தது என்பதை இயேசுவின் உயிர்ப்பு உணர்த்துகின்றது. 
- சாவை விட வாழ்வு சக்தியானது என்பதை இயேசுவின் உயிர்ப்பு உறுதிசெய்கின்றது.

உயிர்ப்பு நமக்கு அனுபவமாகட்டும். அல்லேலூயா!


மறையுரை மொட்டுக்கள் 

அருள் பணி Y. இருதயராஜ்.


பிரான்சு நாட்டில் வாழ்ந்த ஓர் இளைஞர் ஒரு புதிய சமயத்தை நிறுவ விரும்பி, அதைக்குறித்து ஒரு பெரியவரிடம் ஆலோசனை கேட்டபோது, அப்பெரியவர் அந்த இளைஞரிடம், "நீ நிறுவவிருக்கும் புதிய சமயம் நீ இறந்த பிறகும் நிலைத்திருக்க வேண்டுமென்றால், நீ ஒரு வெள்ளிக்கிழமையன்று சிலுவையில் அறையப்பட்டுச் சாக வேண்டும்; மறுநாள் சனிக்கிழமை கல்லறையில் அடக்கம் செய்யப் பட்டு, மூன்றாம் நாள் ஞாயிற்றுக்கிழமை உயிர்த்தெழ வேண்டும்" என்றார், அப்பெரியவர் சொன்னதில் பொதிந்திருந்த உண்மையை உணர்ந்த அந்த இளைஞர் தனது என்னத்தைக் கைவிட்டு விட்டார்.

கிறிஸ்துவ சமயம் கடந்த இருபது நூற்றாண்டுகள் எத்தனையோ சவால்களையும் வேதகலாபனைகளையும் கடந்து வந்து, இன்றும் உயிர்த் துடிப்புடன் இருப்பதற்குக் காரணம் அது கிறிஸ்துவின் உயிர்ப்பை அடித்தளமாகக் கொண்டுள்ளது. நற்செய்தியானது கிறிஸ்துவின் உயிர்ப்பை விளக்குகிறது என்பதைவிட, கிறிஸ்துவின் உயிர்ப்புத் தான் நற்செய்திக்கே விளக்கமளிக்கிறது. ஏனெனில் புனித பவுல் சுட்டிக் காட்டியுள்ளது போல், கிறிஸ்து உயிர்க்கவில்லை என்றால் நற்செய்தியும் பயனற்றது, நமது நம்பிக்கையும் பயனற்றது (1கொரி 15:14).

கிறிஸ்து தமது அதிகாரத்திற்கும் போதனைக்கும் தமது உயிர்த்தெழுதலைத்தான் சான்றாக முன்வைத்தார். “இக்கோவிலை இடித்து விடுங்கள், நான் மூன்று நாளில் இதைக்கட்டி எழுப்புவேன் (யோவா 2:19). அவர் குறிப்பிட்ட கோவில் அவர் உடல் என்பதை அவரின் சீடர்கள். அவர் உயிர்த்தபின் நினைவு கூர்ந்து, அவரில் நம்பிக்கை கொண்டனர் (யோவா 2:21-22).

திருத்தூதர்களுடைய போதனையின் மையக்கருவாக விளங்கியது கிறிஸ்துவின் உயிர்ப்பாகும், வாழ்வுக்கு ஊற்றானவரை நீங்கள் கொன்றுவிட்டீர்கள். ஆனால் கடவுள் இறந்த அவரை உயிரோடு எழுப்பினார், இதற்கு நாங்கள் சாட்சிகள்" (திப 3:15-16).

கடைக்குச் சென்ற ஒருவர், அக்கடையிலிருந்த காலியான டின்னிலிருந்து 1/2 கிலோ கொடுக்கும்படி கடைக்காரரிடம் கேட்டபோது, கடைக்காரர் அவரது அறியாமையை எண்ணி விழுந்து விழுந்து சிரித்தார். காலியான டின்னிலிருந்து எதையாவது எடுக்க முடியுமா? சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்!

ஆனால், காலியாகக் கிடந்த இயேசுவின் கல்லறை இயேசுவின் உயிர்ப்பை எடுத்துரைத்தது. அதிகாலையில் இயேசுவின் கல்லறைக்குச் சென்ற பெண்கள் காலியாகக் கிடந்த கல்லறையைக் கண்டனர். வானதூதர் அவர்களுக்குக் கொடுத்த விளக்கம்: "சிலுவையில் அறையப்பட்ட நாசரேத்து இயேசுவைத் தேடுகிறீர்கள். அவர் உயிருடன் எழுப்பப்பட்டார். அவர் இங்கே இல்லை " (மாற் 18:6).

பேதுருவுடன் இயேசுவின் கல்லறைக்குச் சென்ற அன்புச் சிடர் யோவான், கல்லறைக்குள் சென்றார், கண்டார், நம்பினார்" (யோவா 20:8), அவர் கண்டதோ காலியான கல்லறை: ஆனால் அவர் நம்பியதோ உயிர்த்த இயேசுவை. எனவே, காலியான கல்லறையே இயேசுவின் உயிர்ப்புக்குச் சாட்சியம் பகர்ந்தது.

இயேசுவின் உயிர்ப்பு நமது உயிர்ப்புக்கு ஒரு முன்னோடியாகத் திகழ்கிறது. இறந்தவர்கள் உயிர்க்கவில்லை என்றால் இயேசுவும் உயிர்க்கவில்லை (1கொரி 15:13). கிறிஸ்துவில் நம்பிக்கை கொள்வோம் இறப்பினும் வாழ்வர் (யோவா 11:25). கிறிஸ்துவின் திருவுடலை உண்டு அவரது இரத்தத்தைப் பருகுவோர் நிலை வாழ்வைக் கொண்டுள்ளனர் (யோவா 6:54), அவர்கள் ஏற்கெனவே சாவைக் கடந்து வாழ்வுக்கு வந்து விட்டார்கள் (யோவா 5:24).

ஒருவர் குளவியால் கொட்டப்பட்டு இறந்து விட்டார். அவரைக் கொட்டிய அதே குளவி அவரது மகனை ஒரு வாரம் கழித்து கொட்ட வந்தபோது, அவன் அலறிக் கொண்டு அவன் அம்மாவைக் கட்டிப் பிடித்தான். அவன் அம்மா அவளிடம், "நீ பயப்படாதே! இக்குளலி உன் அப்பாவைக் கொட்டிய போது அது தன் கொடுக்கை இழந்து விட்டது. இனிமேல் அதனால் உன்னை ஒன்றும் செய்ய முடியாது" என்றார்.

ஆம், இயேசு இறந்தபோது அவர் தமது சாவினால் சாவின் கொடுக்கை முறித்து விட்டார், சாவு தனது கொடுக்கை இழந்து விட்டது. "சாவு முற்றிலும் ஒழிந்தது. வெற்றி கிடைத்தது. சாவே உன் வெற்றி எங்கே? சாவே உன் கொடுக்கு எங்கே?" (1கொரி 15:54-55).

நாம் திருமுழுக்குப் பெற்றபோது இயேசுவின் சாவிலும் உயிர்ப்பிலும் பங்கு பெற்றுள்ளோம். அவரோடு நாம் இறந்து விட்டோம் என்றால், அவரோடு உயிர்ப்பது நிச்சயமாகி விட்டது (உரோ 6:3-11).

கிறிஸ்துவின் உயிர்ப்பு நமது வாழ்வுக்குப் புதிய நம்பிக்கையைக் கொடுக்கிறது. கிறிஸ்துவின் கல்லறைக்குச் சென்ற பெண்கள் கல்லறை வாயிலை மூடியிருந்த பெரிய கல்லை (எவ்வாறு அகற்றுவது என்ற கவலையுடன் சென்றனர், ஆனால் அக்கல்லானது ஏற்கெனவே, புரட்டப்பட்டிருந்தது (மாற் 16:3 4), அவ்வாறே நமது வாழ்வில் வரும் பெரிய இடர்களையும் உயிர்த்த இயேசு அகற்றி விடுவார். நாம் அஞ்சத் தேவையில்லை. மலைகள் போலத் தடைகள் வந்தாலும் நாம் மலைத்திடாது நமது வாழ்வுப் பயணத்தைத் தொடர்வோம். ஏனெனில் உயிர்த்த ஆண்டவர் உலகம் முடியும் வரை எந்நாளும் நம்மோடு இருக்கிறார் (மத் 28:20). நாம் உயிர்ப்பின் மக்கள்; தம் கீதம் அல்லேலூயா!
பெரிய கொடிமரத்தில் ஏறிய ஒருவர் கீழே இறங்கியபோது மிகவும் பயந்தார். கீழே இருந்தவர்கள் அவரிடம், கீழே பார்க்காமல் மேலே வானத்தைப் பார்த்துக் கொண்டே இறங்கும்படி கேட்டனர். அவரும் மண்ணைப் பார்க்காமல் விண்ணைப் பார்த்த வண்ணம் கீழே இறங்கினார். நாமும் நம்மையும் நமது பிரச்சினைகளையும் மட்டும் பார்த்தால் நமது தலை சுற்றும்; மயக்கமும் தயக்கமும் வரும். எனவே, நாம் மேலுலகைப் பார்த்த வண்ணம் வாழ வேண்டும். ஏனெனில், அங்குதான் கிறிஸ்து கடவுளின் வலப்பக்கம் அமர்ந்துள்ளார் (கொலோ 3:1-3).

பாஸ்காத் திருவிழிப்பில் நாம் காண்பது புதிய நெருப்பு, புதிய ஒளி. புதிய தண்ணீர், புதுப்படைப்பு, புதுவாழ்வு. பழையன கழிந்து, புதியன புகுந்தன. இவை யாவும் கடவுளின் செயலே (2 கொரி 5:17-18).

“ஆண்டவர் தோற்றுவித்த வெற்றியின் நாள் இதுவே; இன்று அக்களிப்போம்; அகமகிழ்வோம்" (திபா 118:24).


கல்லை நமக்கு யார் அகற்றுவார்?

அருள்பணி ஏசு கருணாநிதி


இந்த ஆண்டு திருநீற்றுப் புதன் மற்றும் பாஸ்கா ஞாயிறு வருகின்ற தேதிகள் உலகின் பார்வைக்கு சற்றே வித்தியாசமாக உள்ளன.

பிப்ரவரி 14 உலகமே வாலன்டைன் டே (காதலர் தினம்) கொண்டாடும் நாளன்று திருநீற்றுப் புதன் வந்தது. ஏப்ரல் 1 உலகமே முட்டாள்கள் தினம் கொண்டாடும் அன்று பாஸ்கா பெருவிழா வருகிறது. தமக்குரியவர்களை இறுதிவரை அன்பு செய்த மனுக்குலத்தின் காதலன் இயேசுவின் உயிர்ப்பு ஆள்வோரின் பார்வையில் ஒரு முட்டாள்தனமான நிகழ்வாக இருந்திருக்கலாம். 'இயேசு உயிர்த்துவிட்டார்' என்ற செய்தி 'ஏப்ரல் ஃபூல்' செய்தியாக இருந்திருக்கலாம். அல்லது 'ஏப்ரல் ஃபூல்' என எல்லாரையும் ஏமாற்றிவிட்டு அந்த மாபரன் உயிர்த்துவிட்டார் என வைத்துக்கொள்ளலாம்.

இயேசுவின் உயிர்ப்பை அவரோடு இருந்தவர்களைத் தவிர எல்லாரும் நம்பி எதிர்நோக்கினர்.

இயேசுவின் எதிரிகளும் அவரை சிலுவையில் அறைந்தவர்களும் அவர் உயிர்த்துவிடுவார் என்று நம்பியதால் கல்லறைக்குக் காவல் வைக்கின்றனர். இயேசு உயிர்த்துவிடுவார் என்ற நம்பிக்கை இல்லாததால் என்னவோ சீடர்களும், சீடத்திகளும், நலவிரும்பிகளும் நறுமணப்பொருள்களை எடுத்துக்கொண்டு கல்லறை நோக்கி விரைகின்றனர். அவர்களின் எண்ணம் மற்றும் ஏக்கம் இயேசுவின் உயிர்ப்பு அல்ல. மாறாக, 'கல்லை நமக்கு யார் அகற்றுவார்?' என்ற கவலையே அவர்களின் உள்ளங்களில் இருந்தது.

'கல்' - இயேசுவுக்கும் வெளியில் இருப்பவர்களுக்கும் நடுவில் இருக்கும் தடை. இந்த தடை அகன்றால்தான் அவர்கள் அவரின் உடலை நெருங்க முடியும். 



'கல் அகற்றப்பட்டது இயேசுவை வெளியேற்றுவதற்கு அல்ல. மாறாக, சீடர்களை உள்ளே அனுப்புவதற்கு' என்கிறார் தூய அகுஸ்தினார். ஆக, கல் அகற்றப்படவில்லையென்றாலும் இயேசுவால் உயிர்க்க முடியும். அதைத்தான் அவருடைய உயிர்ப்புக்குப் பின் நிகழ்வுகளும் காட்டுகின்றன. பூட்டிய அறைக்குள் அப்படியே நுழையும் இயேசுவால் பூட்டிய கல்லறையிலிருந்து வெளியேற முடியும்.

தன் உயிர்ப்பு அனுபவத்தை 'உள்ளே சென்றார், கண்டார், நம்பினார்' என்ற மூன்று வார்த்தைகளால் பதிவு செய்கிறார் யோவான் (காண். யோவா 20:8).

'இயேசு இல்லை' என்பதைக் கண்டு அவர் உயிர்த்துவிட்டார் என நம்பினார்.

ஆக, இல்லாத ஒன்று இருக்கின்ற மற்றொன்றை அவருக்குச் சொல்லிவிடுகிறது. இவ்வாறாக, இல்லாமையும்கூட இருத்தலைச் சொல்லிவிட முடியும்.

பாஸ்கா இரவுத் திருப்பலியில், ஏழு முதல் ஏற்பாட்டு வாசகங்களும், ஒரு திருமுகமும், ஒரு நற்செய்தி வாசகமும் என மொத்தம் ஒன்பது வாசகங்கள் வாசிக்க வேண்டிய அறிவுறுத்தல் இருந்தாலும், இவற்றில் ஐந்து வாசகங்களையாவது வாசிக்க வேண்டியது கட்டாயம்.

ஒளி, இறைவார்த்தை, திருமுழுக்கு, நற்கருணை என இன்றைய வழிபாடு ரொம்ப கலர்ஃபுல்லாக இருக்கிறது. இந்த இரவு திருவிழிப்புதான் எல்லா திருவிழிப்புகளுக்கும் தாய் என்றும் அழைக்கப்படுகின்றது. முதல் ஏற்பாட்டு நிகழ்வான விடுதலைப்பயணத்தையும், இயேசுவின் உயிர்ப்பையும் இணைத்து இன்றைய வழிபாடு உருவாக்கப்பட்டிருக்கிறது.

இன்றைய முதல் வாசகத்தில் (தொடக்கநூல்) 'இல்லாமையிலிருந்து' 'இருப்புக்கும்', 'குழப்பத்திலிருந்து,' 'தெளிவுக்கும்,' 'இருளிலிருந்து,' 'ஒளிக்கும்' உலகம் கடந்து வருகிறது. இதுதான் படைப்பு.

இரண்டாம் வாசகத்தில் (விடுதலைப்பயணம்) 'எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து,' 'வாக்களிக்கப்பட்ட நாட்டிற்கும்,' 'பாரவோனை அரசனாகக் கொண்டதிலிருந்து,' 'யாவேயை அரசனாகக் கொள்வதற்கும்,' 'வாக்குறுதிக்கான காத்திருப்பிலிருந்து,' 'வாக்குறுதியின் நிறைவேறுதலுக்கும்' கடந்து செல்கின்றனர் இஸ்ரயேல் மக்கள். இதுதான் விடுதலைப்பயணம்.

மூன்றாம் வாசகத்தில் (எசேக்கியேல்) 'உலர்ந்த நிலையிலிருந்து,' 'உயிர்பெற்ற நிலைக்கு' எலும்புகளும், 'நாடுகடத்தப்பட்ட நிலையிருந்து,' 'சொந்த நாடு திரும்பும் நிலைக்கு' இஸ்ரயேல் மக்களும் திரும்புகின்றனர். இது அவர்களுக்கு இரண்டாம் மீட்பு.

நான்காம் (உரோமையர்) மற்றும் ஐந்தாம் வாசகங்களில் (லூக்கா), இயேசுவின் உயிர்ப்பு மையமாக இருக்கின்றது. 'இறப்பிலிருந்து,' 'உயிர்ப்புக்கு' இயேசு கடந்து போனதை கிறிஸ்தவ வாழ்வின் உருவகமாக பவுலும், 'உயிரற்ற அவர்,' 'உயிரோடிருக்கும் நிலைக்கு' என நேரிடையாக லூக்காவும் சொல்கின்றனர்.

ஆக, மேற்காணும் இந்த ஐந்து நிலைகளிலும், முன்னால் இருந்தது இப்போது இல்லை.

முன்னால் இருந்த குழப்பம் இல்லை.

முன்னால் இருந்த அடிமைத்தனம் இல்லை.

முன்னால் இருந்த நாடுகடத்தல் இல்லை.

முன்னால் இருந்த பாவ இயல்பு இல்லை.

முன்னால் இருந்த இறப்பு இல்லை.

'முந்தைய நிலை' மாறிவிட்டது. அல்லது 'கடந்து விட்டது'.

முந்தைய நிலையை மறைத்திருந்த கல் புரட்டப்படுகிறது.

எதற்காக மனித மனம் இந்த கடத்தலை அல்லது மாற்றத்தை விரும்புகிறது? இந்த ஐந்து நிகழ்வுகளும் அறிவியல் கோட்பாட்டிற்கும், லாஜிக்கிற்கும் அப்பால் இருக்கின்றன. இருள் ஒளியாகிறது. தண்ணீர் வறண்ட நிலமாகிறது. எலும்பில் சதையும் உயிரும் பிறக்கிறது. பாவம் புதுவாழ்வாகிறது. உயிரற்ற உடல் உயிர் பெறுகிறது.

முந்தைய நிலையிலிருந்து பிந்தைய நிலைக்கான மாற்றம் கல் நகர்த்தலில் இருக்கின்றது.

'அவர்கள் நிமிர்ந்து நோக்கியபோது'

- இதுவரை தங்கள் துக்கத்தால் முகத்தை கவிழ்த்து வைத்தவர்கள் நிமிர்ந்து பார்க்கும்போது தங்கள் கண்களுக்கு முன் அந்த அதிசயம் நடந்தேறியிப்பதைப் பார்க்கிறார்கள். 'கல் புரட்டப்பட்டிருப்பதைக் கண்டார்கள்' அவர்கள். 'அது பெரியதொரு கல்' என கல்லுக்கு வர்ணனை தருகின்றார் மாற்கு நற்செய்தியாளர்.

உள்ளே செல்கிறார்கள். இன்னொரு ஷாக் அங்கே அவர்களுக்குக் காத்திருக்கிறது. 'வெண்தொங்கல் ஆடை அணிந்த இளைஞர் ஒருவர் வலப்புறம் அமர்ந்திருக்கிறார்.'

'அவர் இங்கே இல்லை ... அவர் சொன்னது போலவே உயிர்த்தெழுந்தார்' என்கிறார் இளைஞர்.

ஆக, இயேசுவின் உயிர்ப்பை நம்பவேண்டுமென்றால் அவருடைய வார்த்தைகளை நம்ப வேண்டும்.

இந்த மகிழ்ச்சி செய்தியைக் கேட்ட அவர்கள் ஓட்டம் பிடிக்கிறார்கள். 'எல்லாரிடமும் கூறுங்கள்' என்று சொன்னாலும் அவர்கள் சொல்லாமல் மெய்மறந்தவர்களாகின்றனர். 'அவர்கள் அச்சம் கொண்டிருந்தார்கள்.'

அதிகாலையில் விடியலுக்கு முன்பே எழுந்த வந்த மூன்ற பெண்கள் அடுத்தடுத்து அச்சத்தால் ஆள்கொள்ளப்படுகின்றனர். இவ்வாறாக, மாற்கு நற்செய்தியில் இறுதிவரை இயேசுவை அவருடைய சீடர்கள் புரிந்துகொள்ளாமலேயே இருந்துவிடுகின்றனர்.

இந்த புரிந்துகொள்ளாமைக்கு முதல் காரணம் அச்சம்.


கல் பற்றிய அச்சம், வானதூதர் பற்றிய அச்சம், இளைஞர் பற்றிய அச்சம், உயிர்ப்பு பற்றிய அச்சம் என வரிசையாக இவர்கள் அச்சத்தால் பீடிக்கப்படுகின்றனர்.

பல நேரங்களில் கல் தானாகவே அகன்றுவிடும் - அது எவ்வளவு பெரிய கல் என்றாலும் - என்பதை நாம் மறந்துவிடுகிறோம். அதற்குக் காரணம் நம்மிடம் இருக்கும் அச்சம்.

'அச்சம்' - இந்த ஒன்று நமக்கும் நம் எதார்த்தத்திற்கும் இடையே ஒரு பெரிய கல்லை நகர்த்திவைத்துவிடுகிறது.

ஆக, கல்லறையின் வெளியே இருந்த பெரிய கல் அகற்றப்பட்டாலும் அவர்கள் கண்களுக்கு முன் இருந்த கல் அகற்றப்படவில்லை. இன்று நம்மிடம் துலங்கும் அச்சங்களை நினைத்துப் பார்ப்போம்.

கல்லை நமக்குப் புரட்ட இறைவன் இருக்கிறார் என்றாலும், நமக்கு நாமே வைத்துள்ள கல்லை நாம் அகற்ற முன்வருவோம்.

நம் பாதைக்கு தடைக்கல்லாக இருந்த கெட்ட பழக்கங்கள், எண்ணங்கள் ஆகியவற்றை கஷ்டப்பட்டு 40 நாள்கள் தள்ளி வைத்திருந்தோம். இனியும் அவைகள் கற்களாக நம்முன் நிற்க வேண்டாம். கல் விலகியது. கட்டின்மை பிறந்தது.

என் கண்முன் நிற்கும் கற்கள் புரட்டப்பட அருள்தாரும் இறைவா!




கிறிஸ்து உயிர்த்தார் அல்லேலூயா!

அருள்பணி மரிய அந்தோனிராஜ்


இரண்டாம் உலகப் போர் மிகத் தீவிரம் அடைந்திருந்த தருணம். அந்த ஆண்டில் வந்த புனித வாரத்தின் புதன்கிழமை அன்று, அதிகாலை வேளையில், பிரான்சு நாட்டில் இருந்த ஒரு பிரசித்த பெற்ற தேவாலயத்தில் பெண்ணொருத்தி கண்ணீர் விட்டு அழுதுகொண்டிருந்தாள். அவளுடைய அழுகைச் சத்தம் ஆலயத்தின் பின்னால் இருந்து ஜெபித்துக்கொண்டிருந்த குருவானவரை ஏதோ செய்தது.

உடனே குருவானவர் அழுதுகொண்டிருந்த பெண்மணியின் அருகே வந்து, “ஏனம்மா! இந்த அதிகாலை வேளையில் இப்படி அழுதுகொண்டிருக்கின்றாய்? உனக்கு ஏதாவது பிரச்சனையா? உன்னுடைய பிரச்னையை என்னிடம் சொல். என்னால் முடிந்த மட்டும் உனக்கு நான் உதவி செய்கிறேன்” என்றார். அந்தப் பெண்மணியோ அழுகையை அடக்கமுடியாதவளாய், தன்னுடைய கையில் வைத்திருந்த தந்தியை எடுத்து, குருவானவரிடம் கொடுத்து, “என் மகன் நாட்டிற்காக இராணுவத்தில் பணியாற்றிக்கொண்டு வருகின்றான். ஆனால், போர்க்களத்தில் என்ன நடந்ததோ தெரியவில்லை. நேற்று இரவு ‘என் மகனைக் காணவில்லை, அவனை எவ்வளவு தேடியும் கிடைக்கவில்லை’ என்று தந்தி வந்திருக்கின்றது. அந்தத் தந்திதான் உங்களுடைய கையில் இப்போது இருப்பது. என்னுடைய ஒரே மகனும் என்னைவிட்டுப் போய்விட்டானே, இப்போது நான் என்ன செய்வேன்?” என்றாள். அதற்கு குருவானவர் அந்தத் தாயிடம், “கவலைப்படாதீர்கள் அம்மா! உங்களுடைய மகனுக்கு ஒன்றும் ஆகியிருக்காது. நீங்கள் கவலைப்படாமல் வீட்டிற்குச் செல்லுங்கள்” என்று சாந்தப்படுத்தி, குருவானார் அவரை வீட்டிற்கு அனுப்பி வைத்தார்.

அடுத்த நாள் பெரிய வியாழன். அன்றைய தினத்தில் குருவானவர் திருப்பலியை நிறைவேற்றும்போது தற்செயலாக முன்வரிசையில் அமர்ந்திருந்தவர்களைப் பார்த்தார். அங்கு முந்தைய தினத்தில் மகனைக் காணவில்லை என்று அழுத பெண்மணி, அன்றைக்கும் அழுதுகொண்டிருப்பதைப் பார்த்தார். அந்தத் தாயின் நிலை கண்டு, அவளுக்காகத் திருப்பலியில் மிக உருக்கமாக ஜெபித்தார். திருப்பலி முடிந்த பிறகும்கூட குருவானவர் அந்த தாயினை சந்தித்து, அவரைத் தேற்றினார். மறுநாள் பெரிய வெள்ளி. அன்றைக்கும் அந்தத் தாயானவள் ஆலயத்தில் அமர்ந்து அழுதுகொண்டே இருந்தாள். அன்றைய நாளில் அவளுடைய அழுகையில் அதிகமான வேதனை வெளிப்படுவதை அறிந்து குருவானவர் அவளுக்காகவும், அவளுடைய மகனுக்காகவும் வழிபாட்டில் மிக உருக்கமாக ஜெபித்தார்.

மறுநாள் சனிக்கிழமை. அதாவது உயிர்ப்புப் பெருவிழா கொண்டாட்டத்தின் ஒருசில மணித்துளிகளுக்கு முன்பாக, உயிர்ப்புப் பெருவிழா வழிபாட்டிற்கு எல்லாம் தயாராக இருக்கின்றதா? என்று குருவானவர் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருந்தார். அப்பொழுது மகனைக் காணவில்லை என்று மூன்று நாட்களாக அழுதுகொண்டிருந்த தாயானவள் அவரிடம் வந்தாள். ஆனால், அவள் முன்பு இருந்ததைப் போன்று இல்லை, அவளுடைய முகத்தில் ஒருவிதமான மாற்றம் பிறந்திருந்தது. அவள் குருவானவரிடம் ஒரு தந்தியைக் கொடுத்து, “சுவாமி! போர்க்களத்தில் என் மகன் காணாமல் போய்விட்டதாகச் சொன்னேனே. அவன் இப்போது கிடைத்துவிட்டான் என்று தந்தி வந்திருக்கின்றது. அந்தத் தந்திதான் இது” என்று அந்தத் தாயானவள் தன்னிடம் இருந்த தந்தியை எடுத்து, குருவானவரிடம் படிக்கக் கொடுத்தார். தந்தியைப் படித்துப் பார்த்த குருவானவர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்.
“இயேசு கிறிஸ்து இறந்து உயிர்த்தெழுந்ததுபோல், உங்களுடைய மகனும் உயிர்த்தெழுந்திருக்கின்றான் – காணாமல் போய் கிடக்கப்பெற்றிருகின்றான். அதனால் இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள். இந்த உயிர்ப்புப் பெருவிழா உங்களுக்குத்தான் மிகவும் பொருள் நிறைந்தது” என்று வாழ்த்தி, அவரை அனுப்பி வைத்தார்.

போர்க்களத்தில் காணாமல் போன அந்தத் தாயின் மகன் கிடைக்கப் பெற்றதைப் போன்று – உயிர்த்தெழுந்ததைப் போன்று – நம் ஆண்டவர் இயேசுவும் சாவை வென்று வெற்றிவீரராக உயிர்த்தெழுந்துள்ளார். ஆகையால், நாம் இறைவனுக்கு நன்றி சொல்லுவோம். அது மட்டுமல்லாமல் இந்த உயிர்ப்புப் பெருவிழாவில் உயிர்த்த ஆண்டவர் இயேசு நமக்குத் தரும் செய்தி என்ன என்று சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

இயேசுவின் உயிர்ப்பு ஒரு கட்டுக்கதையோ அல்லது ஒரு பொய்யான பரப்புரையோ அல்ல. அது உண்மையிலும் உண்மையானது. இதில் எந்தவொரு மாற்றுக் கருத்தும் கிடையாது.
இயேசு உண்மையாகவே உயிர்த்தெழுந்தார் என்பதற்கு நம்மிடம் இருக்கும் முதன்மையான சான்று வெற்றுக் கல்லறையாகும். ஆம், வாரத்தின் முதல்நாளில் இயேசு அடக்கம் செய்துவைப்பட்ட கல்லறைக்கு வந்த மகதலா மரியா, அங்கு கல்லறையை மூடியிருந்த கல் அகற்றப்பட்டு, கல்லறை வெறுமையாக இருப்பதைப் பார்த்தார். ஆனால், அவரால் இயேசு உயிர்த்தெழுந்துவிட்டார் என்று நம்பமுடியவில்லை. அவரோ திகைத்துப் போய், நடந்தவற்றை எல்லாம் திருத்தூதர்களிடம் எடுத்துச் சொல்ல விரைகின்றார். அவர் திருத்தூதர்களிடம் நடந்தவற்றைச் சொன்னதும், பேதுருவும் யோவானும் கல்லறைக்கு விரைந்து வருகின்றார்கள். பேதுரு முதலில் கல்லறைக்குள் செல்கின்றார். அவருக்குப் பின்னால் யோவான் கல்லறைக்குள் செல்கின்றார். கல்லறையில் இயேசுவின் தலையை மூடியிருந்த துண்டு, மற்ற துணிகளோடு இல்லாமல், தனியாக சுருட்டி வைக்கப்பட்டிருப்பதைப் பார்க்கின்றார். கண்டார், ஆண்டவர் இயேசு உண்மையாகவே உயிர்த்தெழுந்துவிட்டார் என்று நம்புகின்றார். அந்த வகையில் வெற்றுக் கல்லறை ஆண்டவர் இயேசுவின் உயிர்ப்புக்கு முதன்மையான சான்றாகத் திகழ்கின்றது.

இயேசுவின் உயிர்ப்புக்கு இரண்டாவது சான்றாக இருப்பது திருத்தூதர்களின் சான்றுகள்தான். திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில் பேதுரு, “இயேசு தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு எங்கும் நன்மை செய்துகொண்டே சென்றார், யூதர்களோ அது பிடிக்காமல், அவரைச் சிலுவையில் அறைந்து கொன்றார்கள். ஆனால், கடவுளோ அவரை மூன்றாம்நாள் உயிர்த்தெழச் செய்தார். இதற்கு அவரோடு இருந்த நாங்கள் சாட்சிகள்” என்கிறார். எனவே, திருத்தூதர்களின் சான்றுகளை வைத்து இயேசு உயிர்த்தெழுந்துவிட்டார் என நாம் உறுதியாக நம்பலாம். ஆண்டவர் இயேசுகூட, “இக்கோவிலை இடித்து விடுங்கள். நான் இதை மூன்று நாட்களில் கட்டி எழுப்புவேன்” என்று கூறி, தான் மூன்றாம் நாளில் உயிர்த்தெழுவேன் என்று தன்னுடைய உயிர்ப்பைக் குறித்து முன்கூட்டியே சொல்கின்றார்.

ஆகையால், வெற்றுக் கல்லறை, சீடர்களின் சான்றுகள், இயேசுவின் வார்த்தைகள் இவையெல்லாம் வைத்து இயேசு உண்மையாகவே உயிர்த்தெழுந்துவிட்டார் என்று நாம் உறுதிபடச் சொல்லச் சொல்லலாம். பவுலடியார் இன்னும் ஒரு படி மேலே சென்று, “கிறிஸ்து உயிருடன் எழுப்பப்படவில்லை என்றால், நாங்கள் அறிவித்த நற்செய்தியும், நீங்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையும் வீண்: ( 1கொரி 15:14) என்று சொல்லி, இயேசுவின் உயிர்ப்பில்தான் திருச்சபை கட்டியெழுப்பப் பட்டிருக்கின்றது என்று ஆணித்தரமாகக் கூறுகின்றார். எனவே, இயேசுவின் உயிர்ப்பு கட்டுகதையோ, பொய்யான பரப்புரையோ அல்ல, மாறாக அது உண்மையானது என்பதை உறுதியாக நம்பலாம்.

இயேசுவின் உயிர்ப்பு மெய்யானது என்பதை பல்வேறு சான்றுகளின் சான்றுகளின் வழியாக அறிந்த நாம், இயேசுவின் உயிர்ப்பை எப்படி அர்த்தமுள்ளதாக்கப் போகின்றோம் என்று சிந்தித்துப் பார்ப்போம்.

இயேசுவின் உயிர்ப்பை மக்களுக்கு அறிவிக்கின்றபோது திருத்தூதர்கள் குறிப்பாக பேதுரு, ‘இவற்றிற்கு நாங்கள் சாட்சிகள்” என்பார். சாட்சிகள் என்று சொல்லும்போது அதில் மூன்று முக்கிய உண்மைகள் உள்ளடங்கி இருக்கின்றன. ஒன்று இயேசுவை முழுமையாக அறிதல். இரண்டு அறிந்ததை மக்களுக்கு அறிவித்தல். மூன்று அதற்காக உயிரைத் தருதல் என்பதாகும். பேதுரு உட்பட திருத்தூதர்கள் அனைவரும் இயேசுவை முழுமையாக அறிந்து, அறிந்தததை மக்களுக்கு அறிவித்து, அதற்காக தங்களுடைய உயிரையும் தந்தார்கள். நாம் இயேசுவின் உயிர்ப்புக்குச் சாட்சிகளாகச் திகழவேண்டும் என்றால், இயேசு உயிர்த்துவிட்டார் என்று அறிந்திருப்பது மட்டும் போதாது, அறிந்ததை அடுத்தவருக்கு அறிவிக்கவேண்டும். அதனை நம்முடைய வாழ்வாக்கவேண்டும். அப்போதுதான் நாம் இயேசுவின் உயிர்ப்புக்கு சாட்சிகளாகத் திகழ முடியும்.

ஒரு சமயம் ஒரு குருவானவரும், சோப்பு தயாரிக்கும் நிறுவனத்தை நடத்தி வந்தவரும் காலார நடந்துபோய்க் கொண்டிருந்தார்கள். இரண்டாமவருக்கு கடவுள்மீது நம்பிக்கை கிடையாது. அவர்கள் இருவரும் பேசிக்கொண்டு போகும்போது, வழியில் அப்பாவி மனிதன் ஒருவனை முரடர்கள் சிலர் கடுமையாக தாக்கிக் கொண்டிருந்தார்கள். இவர்கள் இருவரையும் பார்த்த முரடர்கள் அங்கிருந்து ஓடிவிட்டார். அப்போது சோப்பு தயாரிக்கும் நிறுவனத்தின் தலைவர் குருவானவரிடம், “இந்த உலகத்தில் கடவுள் என்ற ஒருவர் கிடையவே கிடையாது. அவர் மட்டும் இருந்திருந்தால் இந்தக் கொடுமைகள் எல்லாம் நடக்காது அல்லவா?” என்றார். அதற்கு குருவானவர் பதில் ஒன்றும் சொல்லாமல், அப்படியே சென்றார்.

சிறுது தூரத்தில் அழுக்குத் துணியுடன் சிறுவன் ஒருவன் எதிரே நடந்து வந்துகொண்டிருந்தான். அவனைப் பார்த்த குருவானவர், சோப்பு தயாரிக்கும் நிறுவனத்தின் தலைவரிடம், “இந்த உலகத்தில் சோப்பு என்ற ஒன்று கிடையாது என்றார். அதற்கு அவர், ஏன் அப்படிச் சொல்கின்றீர்கள்?” என்று கேட்டார். “சோப்பு என்ற ஒன்று இருந்திருந்தால், இந்தச் சிறுவன் இப்படி அழுக்குத் துணியுடன் திரியமாட்டான் அல்லவா” என்றார் குருவானார். “அழுக்குப் போகவேண்டும் என்றால், சோப்பினைப் பயன்படுத்தவேண்டும். அதைவிடுத்து, சோப்பைப் பயன்படுத்தாமல், உலகத்தில் சோப்பே இல்லை என்று எப்படிச் சொல்லலாம்” என்றார்.

உடனே குருவானவர் அவரிடம், “இப்போது சொன்னீர்களே அழுக்குப் போகவேன்றால் சோப்பைப் பயன்படுத்த வேண்டும் என்று, அது போன்றுதான் உலகில் உள்ள தீமைகள் குறைந்து நன்மைகள் பெருகவேண்டும் என்றால், மக்கள் கடவுளுக்கு உகந்த வாழ்க்கை வாழவேண்டும். அப்படி வாழாமல், கடவுள் இந்த உலகத்தில் இல்லவே இல்லை என்று ஒருபோதும் சொல்ல முடியாது” என்றார்.

ஆம், கடவுள் இந்த உலகத்தில் இருக்கின்றார் என்பதை நம்முடைய வாழ்வால் நிரூபிக்கவேண்டும் என்பதைப் போன்று, ஆண்டவர் இயேசு உண்மையாகவே உயிர்த்தெழுந்து விட்டார் என்பதை நம்முடைய சாட்சிய வாழ்வால் நிரூபிக்கவேண்டும்.
இயேசு இந்த உலகிற்கு அன்பையும், உண்மையான அமைதியையும், மன்னிப்பையும் கொண்டு வந்தார். நாம் அவருடைய விழுமியங்களின் படி நடக்கும்போது இயேசு உண்மையாகவே உயிர்த்துவிட்டார் என உறுதிபடச் சொல்லலாம். மட்டுமல்லாமல், இன்றைய இரண்டாம் வாசகத்தில் (கொலோசையருக்கு எழுதப்பட்ட திருமுகம்) பவுலடியார், “கிறிஸ்துவோடு உயிர்பெற்று எழுந்தவர்களானால் மேலுலகு சார்ந்தவற்றையே நாடுகள்” என்பார். கடவுளுக்கு உகந்த வாழ்ந்த வாழ்வதே மேலுலகு சார்ந்த வாழ்க்கையாகும்.

ஆகவே, இயேசுவின் உயிர்ப்புப் பெருவிழாவைக் கொண்டாடும் நாம், அவருடைய உயிர்த்தெழுதலில் நம்பிக்கை கொள்வோம், அவருடைய உயிர்ப்புக்கு சாட்சிகளாகத் திகழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

அன்பின் மடல் சார்பில் அனைவருக்கும் உயிர்ப்பு பெருநாள் நல்வாழ்த்துக்கள்!




No comments:

Post a Comment