Friday 25 August 2017

பொதுக்காலம் 21-ஆம் ஞாயிறு


பொதுக்காலம் 21-ஆம் ஞாயிறு
எசாயா 22:19-25, உரோமர் 11:33-36, மத்தேயு 16:13-20
 

மறையுரை மொட்டுகள்

அருள்பணி Y இருதயராஜ் -

 
18-ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்து அரசராக இருந்த ஒருவர் காலையில் வெளியே சென்றவர் நள்ளிரவு வீடு திரும்பினார். அரசி கதவைத் தாளிட்டுத் தூங்கிவிட்டார் அரசர் கதவைத் தட்ட அரசி, "யார் அது" என்று கேட்க, அரசர், "நான்தான் இங்கிலாந்து அரசர்" என்று கூற அரசி கதவைத் திறக்கவில்லை மறுபடியும் அரசர் கதவைத் தட்ட "யார் அது" என்று அரசி கேட்க, அரசர் "நான்தான் முப்படைகளின் தலைவர்" என்று கூற அரசி கதவைத் திறக்கவில்லை. ஆத்திரமடைந்த அரசர் மூன்றாம் முறைச் சற்றுக் கோபத்துடன் கதவைத் தட்ட அரசி, "யார் அது?" என்று கேட்க, அரசர், "நான் தான் உன் அன்புக் கணவர்" என்று சொன்னவுடன் அரசி கதவைத் திறந்து அரசரைக் கட்டி அனைத்து முத்தம் கொடுத்தார். ஒருவர் அரசராகவும் முப்படைத் தலைவராகவும் இருக்கலாம். ஆனால் அரசிக்கு அவர் முதலில் கனாவர். அதன் பிறகுதான் மற்றெல்லாம்.

இன்றைய நற்செய்தியில் கிறிஸ்து, "நான் யார்?" என்று கேட்ட கேள்விக்கு அவருடைய சீடர்கள், மக்கள் நடுவில் அவரைப் பற்றி நிலவிய கருத்துக்களைப் பிரதிபலித்து கிறிஸ்துவைத் திருமுழுக்கு யோவான் என்றும், எரேமியா, எலியா, இறைவாக்கினருள் ஒருவர் என்றும் பதில் கூறினர். ஆனால் இதெல்லாம் உண்மையான பதில் இல்லை. அந்நிலையில் பேதுரு, "நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன்" என்று சொன்னவுடன் கிறிஸ்து அவரிடம் விண்ணகத்தின் திறவுகோலை ஒப்படைக்கிறார் கட்டவும் கட்டவிழ்க்கவும் அவருக்கு அதிகாரம் அளிக்கிறார்.

அரசியைப் பொறுத்தமட்டில் அரசர் முதலில் அவரது கணவர், அவ்வாறே கிறிஸ்துவைப் பொறுத்தமட்டில் அவர் முதல் முதல் கடவுளின் மகன். அதன் பின்தான் அவருடைய மற்றப் பணிகள், கிறிஸ்து "நான் யார்?" என்று கேட்கிறார், "எனது பணி என்ன?" என்று கேட்கவில்லை. ஒருவருடைய இயல்பிலிருந்து அவருடைய செயல்கள் பிறக்கின்றன. இந்த அடிப்படையான மெய்யியல் உண்மையை மறந்து ஒருசில இறையியலார்கள் கிறிஸ்துவின் இறைத்தன்மையை ஓரங்கட்டிவிட்டு அவருடைய பணிகளை மையப்படுத்தி அவரை ஒரு புரட்சியாளராக வெளிச்சம் போட்டுக் காட்டுவது முழுமையான இறையியலாக இருக்க முடியாது. அன்று மகதலா மரியா அழுதுகொண்டு, "என் ஆண்டவரை எடுத்துக்கொண்டு போய்விட்டனர் அவரை எங்கு வைத்தனரோ எனக்குத் தெரியவில்லை" (யோவா 20:13) என்று கேட்டதைப் போல் கேட்கவேண்டியுள்ளது.

கிறிஸ்துவை கடவுளுடைய மகனாக ஏற்றுக்கொள்வதற்கு மனித அறிவு மட்டும் போதாது இறைவெளிப்பாடு தேவைப்படுகிறது எனவேதான் கிறிஸ்து பேதுருவிடம் கூறுகிறார். "யோனாவின் மகனான சீமோனே, நீ பேறு பெற்றவன். ஏனெனில் எந்த மனிதரும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை மாறாக விண்ணகத்திலுள்ள என் தந்தையே வெளிப்படுத்தினார்" (மத் 16:17). கிறிஸ்துவிடம் வருவதற்குக் கடவுளின் தனிப்பட்ட அருள் தேவைப்படுகிறது. "என் தந்தை அருள் கூர்ந்தால் அன்றி யாரும் என்னிடம் வர இயலாது" (யோவா 6:65) என்று கிறிஸ்து யூதர்களிடம் கூறியது இதை எண்பிக்கிறது.

பேதுருவின் நம்பிக்கை அறிக்கையின் மீது தமது திருச்சபையைக் கட்டி எழுப்புவதாகக் கிறிஸ்து கூறுகின்றார் கிறிஸ்து பேதுருவைப் பாறை என்று அழைக்கின்றார் விவிலியம் கடவுளைப் பாறை என்று அழைக்கிறது. "என் கற்பாறையும் கோட்டையும் நீரே! (திபா 31:3). பாறை உறுதியானது, அதைவிட உறுதியானது கடவுளின் அன்பு "மலைகள் நிலைசாயினும், குன்றுகள் இடம் பெயரினும் உன்மீது நான் கொண்ட பேரன்போ நிலைசாயாது" (எசா 54:10) கடவுள் உண்மையுள்ளவர், கிறிஸ்துவும் உண்மையுள்ளவர் கிறிஸ்துவுக்கு ஆமென்" என்று பெயர் ஏனெனில் அவர் நம்பிக்கைக்குரியவர் உண்மையான சாட்சி (திவெ 314). அவ்வாறே திருச்சபையும் உண்மையானது திருத்தூதர் பவுல் திருச்சபையைக் "கடவுளின் வீடு" என்றழைத்து, "திருச்சபை உண்மைக்குத் தூணும் அடித்தளமுமாய் இருக்கிறது" (1 திமொ 3:14-15) என்கிறார்.

இன்றைய முதல் வாசகம் பின்வருமாறு கூறுகிறது. தாவீது குடும்பத்தின் திறவுகோலைக் கடவுள் கிறிஸ்துவுக்குக் கொடுப்பார் அவருக்குத் திறக்கவும் பூட்டவும் அதிகாரம் இருக்கும் (எசா 22:19-23). கிறிஸ்து தமக்குள்ள அதிகாரத்தைப் பேதுருவுக்குக் கொடுக்கிறார் பேதுருவின் வழித்தோன்றல்கள் திருத்தந்தையர்கள். திருத்தந்தையர்களின் தலையான பணி விசுவாசிகளை உறுதிப்படுத்தும் பணி (லூக் 22:32) பேதுரு மட்டுமல்ல முழுத் திருச்சபையும் கிறிஸ்துவிடமிருந்து திறவுகோலைப் பெற்றது என்கிறார் புனித அகுஸ்தின் இரண்டாம் வத்திக்கான் சங்கமும் முழுத் திருச்சபையும் விசுவாச அறநெறி கோட்பாட்டில் வழுவா வரம் கொண்டுள்ளது என்று அறிக்கையிட்டுள்ளது "தூயவரான கடவுளால் அருள்பொழிவு பெற்று நம்பிக்கை கொண்டோர் அனைவரின் கூட்டம் நம்பிக்கையிலே தவற முடியாது" (திருச்சபை எண் 12)

மனைவி ஒருவர் தன் கணவரிடம், "என்னங்க என்னை உங்களுக்குப் பிடித்திருக்கிறதா?" என்று கேட்டதற்கு கணவர் அவரிடம், "நீ போட்டிருக்கிற நகையெல்லாம் எனக்குப் பிடிச்சிருக்கு" என்றார். அதற்கு மனைவி, "அத்தனையும் கல்யாணி கவரில் நகை" என்றார். இன்று "கவரிங் நகை" போன்ற போலியான சபைகள் மக்களைக் கவர்ந்து ஈர்க்கின்றன போலிப் போதகர்களின் கவர்ச்சியான போதகத்தில் மயங்கிக் கத்தோலிக்கத் திருச்சபையிலிருந்து விலகாதிருக்க விழிப்புடன் இருக்க வேண்டும். கிறிஸ்தவர்களுடைய முக்கியமான கடமைகளில் ஒன்று திருச்சபையின் ஒன்றிப்பில் நிலைத்திருப்பது என்று திருச்சபைச் சட்டம் கூறுகிறது. "கிறிஸ்தவ விசுவாசிகள், தங்கள் செயல்பாட்டு முறையிலும் கூடத் திருச்சபையோடு உள்ள உறவு ஒன்றிப்பை எப்பொழுதும் பேணிக் காக்கக் கடமைப்பட்டுள்ளனர் " (தி. ச. 209, ப. 1). திருச்சபையில், திரு மேய்ப்பர்களிடம் பல குறைகள் இருக்கலாம். ஆனால், திருத்தந்தை ஆறாம் பவுல் கூறியதுபோல, "திருச்சபை நோயுற்றிருப்பதற்காகவே அதை நாம் அதிகம் அன்பு செய்ய வேண்டும்." "தமது சிறு மந்தையாகிய" (மத் 12:32) திருச்சபையைக் கிறிஸ்து கைவிட மாட்டார். "பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றி கொள்ளா" (மத் 16-18).


இருவகை அனுபவம்: இரத்தமும்-சதையும், வெளிப்பாடும்..

அருள்பணி ஏசு கருணாநிதி -மதுரை

கடந்த சில மாதங்களுக்கு முன் வெளிவந்த ஆனந்தவிகடனில் 'வலைபாயுதே' என்ற பக்கத்தில் இரசம் பற்றிய ஒரு துணுக்கு இருந்தது: 'நம் தட்டுக்களை எளிதாக கழுவுவதற்கு உதவியாக ஏதோ ஒரு தமிழ்ப்பெண் கண்டுபிடித்த கண்டுபிடிப்பே இரசம்.' அதாவது, இரசம் ஊற்றி சாப்பிட்ட தட்டைக் கழுவுவது எளிதாக இருக்கும். இதே இரசம் பற்றிய மற்றொரு பதிவில், 'இரசம் என்பது சாமானியர்களின் மதுபானம்' என எழுதியிருந்தது. தண்ணீர், மிளகு, கறிவேப்பிலை, கொத்தமல்லி, தக்காளி, உப்பு என சேர்த்து நல்ல கொதிநிலையில் இறக்கி வைக்கும் இரசம் ஒன்றுதான். ஆனால், அதைக் குடிக்கும் அல்லது அதோடு உண்ணும் ஒவ்வொருவரும் அதை ஒவ்வொரு விதமாக பார்க்கின்றோம். ஆக, ஒன்றின் இருப்பு அல்லது சுவை என்பது அது எப்படி இருக்கிறது அல்லது சுவைக்கிறது என்பதைவிட அதை அனுபவிப்பரைப் பொறுத்தே அமைகின்றது. இந்த அனுபவத்தை முற்சார்பு எண்ணம் (prejudice or pre-understanding) என அழைக்கிறது மெய்யியல். இவ்வாறாக, நாம் அனுபவிக்கும் ஒன்றில் நம் தடத்தை நாம் அப்படியே பதித்துவிடுகின்றோம்.

இதைவிட உயர்ந்ததொரு நிலை இருக்கிறது. அதுதான் வெளிப்பாடு. அதாவது மனிதர்கள் தாங்களாக அனுபவித்திராத ஒன்றைப் பற்றி கடவுள் வெளிப்படுத்துவதுதான் வெளிப்பாடு. வேற்று கிரகத்தார் அல்லது வெளிநாட்டவர் ஒருவரை நம் உணவறைக்கு அழைத்து வந்து ஒரு கப் ரசம் ஊற்றிக் கொடுத்து குடிக்கச் சொல்கிறோம் என வைத்துக்கொள்வோம். அவர் தன் வாழ்வில் ரசம் பற்றி அறிந்திருக்கவே வாய்ப்பில்லை. அவர் குடித்து முடித்தவுடன், இதுதான் 'இரசம்' என சொல்கிறோம். இப்போது இது இரசம் என்பதை அவருடைய முன்அனுபவம் அல்லது முற்சார்பு எண்ணம் சொல்லவில்லை. அவராக, அதை அனுபவித்துப் பார்க்கவும் இல்லை. மாறாக, வெளியே இருந்து ஒருவர் வெளிப்படுத்தியதால் அந்த அனுபவத்தை அவர் பெறுகிறார். மேலும் இதை வெளிப்படுத்திய நாம் அந்த நபருக்கு கடவுளாகவே (புதியதை அறிமுகப்படுத்துபவராக) தெரிகின்றோம்.

இவ்வாறு, வாழ்வில் நாம் பெறும் அனுபவங்களை இரண்டாகப் பிரிக்கலாம்: (அ) இரத்தமும், சதையும் சார்ந்தது. (ஆ) கடவுள் சார்ந்தது.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். மத் 16:13-20) பேதுருவின் நம்பிக்கை அறிக்கையை வாசிக்கக் கேட்கின்றோம். இயேசுவின் மலைப்பொழிவு, உவமைப்பொழிவு, அற்புதங்கள் நிகழ்வு என மூன்று கட்டங்களில் இயேசுவை சீடர்களுக்கு அறிமுகப்படுத்திய மத்தேயு நற்செய்தியாளர் தனது இந்த அறிமுகம் சீடர்கள் மேல் எத்தகையை பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதை அறியும் நிகழ்வே இது. இந்த நிகழ்வு மாற்கு (8:27-30) மற்றும் லூக்கா (9:18-20) நற்செய்திகளிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்வுதான் ஒத்தமைவு நற்செய்திகளின் மையமாக இருக்கிறது.

இயேசு என்ற ஒரு நபர் நிற்கின்றார். அவரை இரண்டு வகையானவர்கள் பார்க்கின்றார்கள்: (அ) முதல் வகையினர் மக்கள். இவர்கள் இரத்தமும், சதையும் நிலையிலிருந்து பார்க்கின்றனர். (ஆ) இரண்டாம் வகையினர் சீடர்கள். இவர்கள் விண்ணகத்தந்தை வெளிப்படுத்தும் வெளிப்பாடு நிலையிலிருந்து பார்க்கின்றனர்.

அ. இரத்தமும், சதையும்

'இரத்தமும், சதையும்' என்பது கிரேக்க மொழியிலிருந்து இலத்தீன் மற்றும் ஆங்கிலத்திற்குள் நுழைந்திருக்கும் ஒரு சொல்லாடல். 'மனித உடல்' அல்லது 'மனிதர்' அல்லது 'மனித வலுவின்மை' ஆகியவற்றைக் குறிக்கும் சொல்லாக இது இருக்கிறது. எபிரேய மற்றும் தமிழ் இலக்கியங்கள் 'இரத்தமும், சதையும்' என்பதற்குப் பதிலாக, 'எலும்பும், சதையும்' (காண். தொநூ 2:23 மற்றும் பட்டினத்தாரின் உடற்கூற்றுவண்ணம் வ. 1,24) எனக் குறிப்பிடுகின்றன. ஆணின் விந்து அல்லது சுக்கிலம் எலும்பை உருவாக்குகிறது என்பதும், பெண்ணின் விந்து அல்லது சுரோணிதம் சதையை உருவாக்குகிறது என்ற புரிதலும் இதன் பின்புலத்தில் இருக்கிறது. இந்தப் புரிதல் நமக்கு ஏற்புடையதாகவும் இருக்கிறது. ஏனெனில் 'இரத்தமும், சதையும்' என்ற சொல்லாடல் மனித உடலின் 'மென்மைத்தன்மையை' மட்டுமே முன்வைக்கின்றனவே தவிர, 'வன்மைத்தன்மை' பற்றி ஒன்றும் சொல்வதில்லை. ஆக, கிரேக்க அல்லது ஆங்கில சொல்லாடலை விட எபிரேயம் அல்லது தமிழ் சொல்லாடல் முழுமையானதாகத் தெரிகிறது.

சொல்லாடல் ஆராய்ச்சி விட்டு, விவிலியப் பொருளுக்கு வருவோம்.

'மானிட மகன் யாரென்று மக்கள் சொல்கிறார்கள்?' எனக் கேட்கின்றார் இயேசு. மாற்கு மற்றும் லூக்கா நற்செய்தியாளர்கள், 'நான் யாரென்று மக்கள் சொல்கிறார்கள்?' என இயேசு கேட்பதாகப் பதிவு செய்கின்றனர். ஆனால் மத்தேயு, 'நான்' என்பதை விடுத்து, 'மானிட மகன்' என்ற வார்த்தையைப் பயன்படுத்துகின்றார்.

'சிலர் திருமுழுக்கு யோவான் எனவும் சிலர் எலியா எனவும் சிலர் எரேமியா அல்லது பிற இறைவாக்கினருள் ஒருவர் என்றும் சொல்கின்றனர்' என மறுமொழி பகர்கின்றனர் சீடர்கள். இயேசுவின் சமகாலத்தவர்கள் திருமுழுக்கு யோவானைக் கண்டவர்கள். மெசியா என மக்கள் சந்தேகப்பட்ட ஒருவர் திடீரென ஏரோதால் கொலைசெய்யப்படுகின்றார். கொலைசெய்யப்பட்ட ஒருவர் மீண்டும் உயிர்பெற்று வரலாம் என சில பரிசேயர்கள் நம்பினர். சதுசேயர்களுக்கு இத்தகைய நம்பிக்கை கிடையாது. அடுத்ததாக, எலியா. இஸ்ரயேல் மக்களின் மாபெரும் இறைவாக்கினர் எனப் போற்றப்பெறும் இவ்விறைவாக்கினர் தம் பணிவாழ்வில் பாகால் இறைவாக்கினர்களைக் கொன்றழித்தவர். தன் யாவே கடவுளே உண்மையான கடவுள் என அறிக்கையிட்டவர். இதன் முத்தாய்ப்பாக இவர் இறக்காமல் அப்படியே வானிற்கு தங்கத்தேரில் எடுத்துக்கொள்ளப்படுகின்றார். இப்படி வானிற்கு ஏறிச்சென்ற இவர் மீண்டும் வருவார் என சிலர் நம்பினர். அடுத்ததாக, எரேமியா. பாபிலோனியாவிற்கு நாடுகடத்தப்பட்ட இஸ்ரயேல் மக்கள் மீண்டும் நாடு திரும்பி புத்துயிர்பெற்றதை பதிவு செய்தவரும், 'புதிய உடன்படிக்கை' என்ற கருத்தியலை இஸ்ரயேல் மக்களுக்குச் சொன்னவரும் இவரே. தான் அறிவித்த 'புதிய உடன்படிக்கையை' மீண்டும் நிலைநிறுத்த இவர் பிறக்கலாம் எனவும் சிலர் நம்பினர். இறுதியாக, சிலர் தொட்டும் தொடாமல் 'இறைவாக்கினருள் ஒருவர்' எனச் சொல்கின்றனர். இந்த எல்லா புரிதல்களிலும் என்ன தெரிகிறது என்றால் இயேசு என்பவர் ஏற்கனவே இருந்த ஒரு நபரின் தொடர்ச்சி என்பதுதான்.

இதுதான் இரத்தமும், சதையும் அல்லது மனித உள்ளம் கொண்டிருக்கிற புரிதல். காலத்திற்கும், இடத்திற்கும் உட்பட்டு வாழும், உட்பட்டு சிந்திக்கும் நாம் எல்லாவற்றையும் காலத்தின் தொடர்ச்சியாக அல்லது இடத்தின் நீட்சியாகவே பார்க்கின்றோம். ஆக, இரத்தமும் சதையும் எண்ணும் சிந்தனை காலத்திற்கும் இடத்திற்கும் உட்பட்டதாக இருக்கிறது. இந்த சிந்தனை மூளையிலிருந்து செயல்படும். 'இதன் தொடர்ச்சி அது, அதன் தொடர்ச்சி வேறொன்று' என மூளைதான் வரையறுக்கிறது.

இந்த வகை சிந்தனை நம் உறவுநிலைகளிலும் இருக்கலாம். அதாவது நாம் அன்பு செய்யும் நபரை நாம் காலத்திற்கு உட்படுத்தியே பார்க்கின்றோம். ஆகையால்தான், நேற்று 10 நிமிடம் பேசிய நபர் இன்று 5 நிமிடம் பேசினால் அல்லது நேற்று விறுவிறுப்பாக பேசிய நபர் இன்று சோர்வாகப் பேசினால் நம் மனம் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றது. நேற்று 10 நிமிடம் பேசியவர் என்று 15 நிமிடம் பேச வேண்டும் என்றும் நேற்று விறுவிறுப்பாக பேசியவர் இன்னும் அதிக விறுவிறுப்பாக பேச வேண்டும் எனவும் விரும்புகிறோம்.

இதை நாம் கடவுளுக்குப் பொருத்திப் பார்த்தோம் என்றால், போன வருடம் 10 லட்சம் கொடுத்த கடவுள் இந்த வருடம் 20 லட்சம் கொடுக்க வேண்டும், போன வருடம் காய்ச்சலை குணமாக்கிய கடவுள் இந்த வருடம் கேன்சரைக் குணமாக்கவும் வேண்டும் என செபிக்கின்றோம். இவ்வாறாக, இரத்தமும் சதையும் அனுபவம் குறுகியதாக இருப்பதோடல்லாமல், அடுத்தடுத்து நீட்டிக்கொண்டு போவதாகவும் இருக்கிறது. மேலும் இவ்வகையான அனுபவத்தை நாம் எல்லா மனிதர்களிடமிருந்தும் பெற்றுக்கொள்கின்றோம். இப்படித்தான் எல்லாரும் சிந்திக்கிறார்கள் என்ற ஒரு கட்டமைப்பும் இங்கே இருக்கிறது.

ஆ. வெளிப்பாடு

இயேசுவின் கேள்வி திரும்பவும் வருகிறது. ஆனால் இம்முறை சற்றே மாறுபடுகிறது: 'ஆனால் நீங்கள், நான் யாரெனச் சொல்கிறீர்கள்?'

'அவர்கள்' என்ற வார்த்தை 'நீங்கள்' என மாறிவிட்டது. மூன்றாம் நபர் நிலையிலிருந்து கேள்வி இரண்டாம் நபர் நிலைக்கு மாற்றப்படுகிறது. 'மானிட மகன்' என்ற வார்த்தைக்குப் பதிலாக 'நான்' என வெளிப்படையாகச் சொல்கின்றார் இயேசு.

சீடர்களின் பிரதிநிதியாக முன்வருகின்ற பேதுரு, 'நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன்' என பதில் சொல்கின்றார். மாற்கு நற்செய்தியில் பேதுருவின் பதில், 'நீர் மெசியா' என்றும், லூக்கா நற்செய்தியில், 'நீர் கடவுளின் மெசியா' என்றும் உள்ளது.

பேதுருவின் இந்தப் பதிலைக் கேட்டவுடன், 'யோவானின் மகனான சீமோனே, நீ பேறுபெற்றவன். ஏனெனில் எந்த இரத்தமும் சதையும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை. மாறாக, விண்ணகத்திலுள்ள என் தந்தையே வெளிப்படுத்தியுள்ளார்' என பாராட்டுகின்றார்.

விண்ணகத்தந்தையின் வெளிப்பாடு காலத்திற்கும், நேரத்திற்கும் அப்பாற்பட்டது. ஆகையால்தான், இயேசுவை காலத்தின் வளர்ச்சி அல்லது இடத்தின் நீட்சியாகப் பார்க்காமல், 'நீர் மெசியா' என்ற புதிய கோணத்தில் பார்க்கிறார் பேதுரு. 'ஆயிரக்கணக்கான வருடங்களாய் ஆண்டவரே உம்மை எதிர்பார்த்தோம்' என்று மெசியாவின் வருகைக்காக காத்திருந்தது இஸ்ரயேல் சமூகம். ஆனால் யாருக்கும் கிடைக்காத வெளிப்பாடு சீடர்களுக்குக் கிடைக்கிறது. அவர்கள் இயேசுவை மெசியாவாக கண்டுகொள்கின்றனர். இந்தக் கண்டுகொள்ளுதல்தான் அவர்களின் நம்பிக்கைப் பயணத்தின் உச்சம்.

ஆக, நம்பிக்கைப் பயணத்தில் ஒரு கட்டத்தில் எரியும் சின்ன ஆயிரம் வாட்ஸ் பல்ப்தான் வெளிப்பாடு. இந்த வெளிச்சத்தில் நம் முன் இருப்பவர் யார் என்று நமக்குத் தெரிந்துவிடுகிறது.

இதை நம் உறவு நிலைகளுக்குப் பொருத்திப்பார்ப்போம். நாம் அனைவரும் ஏதோ ஒரு இடத்தில் ஏதோ ஒரு நேரத்தில் பிறந்து நம் வாழ்க்கையைத் தொடங்கியவர்கள். நம் ஒவ்வொருவருக்கும் குடும்பம், பின்புலம் என இருக்கிறது. இந்தப் பின்புலத்தை மட்டும் பார்த்து நாம் உறவாடினால் உறவு நீடிப்பதில்லை. மற்றவரின் குடும்பமும், பின்புலமும் நமக்குப் பிடிக்காமல் போய்விட வாய்ப்பு இருக்கிறது. ஆனால், வெளிப்பாடு அல்லது நம்பிக்கை என்ற ஒளி பிறக்கும்போது அடுத்தவரைப் பற்றிய ஒரு புதிய பிம்பம் நம் மனதில் பதிகிறது. நம் மனது அதை அப்படியே எடுத்துக்கொள்கிறது. இந்த புதிய பிம்பமே நாம் ஒருவர் மற்றவரோடு உறவாட நம்மைத் தூண்டுகிறது.

கடவுளோடு நாம் கொள்ளும் உறவிற்கும் இதைப் பயன்படுத்தலாம். ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு, மோசே, இயேசு, அகுஸ்தினார் போன்றவர்களின் கடவுள் அனுபவங்கள் இப்படித்தான் இருக்கின்றன. இவர்கள் கடவுளிடம், 'இது வேண்டும், அது வேண்டும்' எனக் கேட்பதில்லை. மாறாக, ஒரு குறிப்பிட்ட இடத்தில் நேரத்தில் தாங்கள் காணும் ஒளியில் கடவுளை அப்படியே பற்றிக்கொள்கின்றனர்.

இவ்வாறாக, நம் மனித அனுபவம் இரண்டு நிலைகளில் நடந்தேறுகிறது.

முதல் நிலையில் அல்லது இரத்தமும் சதையும் நிலையில் நம் அனுபவம் இருந்தால் என்ன நடக்கும்? என்ற கேள்விக்குப் பதிலாக வருகிறது இன்றைய முதல் வாசகம் (காண். எசா 22:19-23). யூதா நாட்டின் செபுனா என்ற அரண்மனைப் பொறுப்பாளன் தன் இரத்தமும் சதையும் என்ற நிலையில் சிந்திக்கிறவனாய் இருக்கிறான். அவனை எசாயா இறைவாக்கினர் வழியாகக் கண்டிக்கின்ற யாவே இறைவன், 'உன்னை உன் பதவியிலிருந்து இறக்கி விடுவேன். உன் நிலையிலிருந்து கவிழ்த்துவிடுவேன்' என்கின்றார். அதாவது, 'இதுதான் நான். இப்படித்தான் எனக்கு எல்லாம் நடக்கும்' என்று யாரும் கணிக்க முடியாது. இருந்தாலும் இப்படிக் கணித்து வாழ முற்படுகிறான் செபுனா. ஆகையால் இறைவனால் தண்டிக்கப்படுகிறான்.

ஆனால், இரண்டாம் நிலையில் அல்லது வெளிப்பாட்டு நிலையில் அனுபவம் கொண்டிருக்கின்ற எலியாக்கிமிற்கு லக்கி ப்ரைஸ் அடிக்கிறது: 'அந்நாளில் தாவீது குடும்பத்தாரின் திறவுகோலை அவன் தோள்மேல் வைப்பேன். அவன் திறப்பான். எவனும் பூட்ட மாட்டான். அவன் பூட்டுவான். எவனும் திறக்கமாட்டான்' என்கிறார் ஆண்டவராகிய கடவுள். இதே நிலைதான் இன்றைய நற்செய்தியிலும் உள்ளது. பேதுருவின் சிறப்பான பதிலைப் பாராட்டுகின்ற இயேசு, 'உன் பெயர் பேதுரு. இந்தப் பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன் ... விண்ணரசின் திறவுகோல்களை நான் உன்னிடம் தருவேன்' என்கிறார்.

இரத்தமும் சதையும் நிலையிலிருந்து விடைபகர்ந்த மக்களுக்கு எந்தக் கைம்மாறும் இல்லை. ஆனால் கடவுளின் வெளிப்பாட்டிற்குத் தம்மையே திறந்து கொடுத்த பேதுருவுக்கு கைம்மாறு கிடைக்கிறது.

கைம்மாறு பெற்றுத்தரும் கடவுளின் வெளிப்பாடு என்பது ஒரு கொடை. ஆகையால்தான், 'ஆண்டவரின் மனத்தை அறிபவர் யார்? அவருக்கு அறிவுரையாளராய் இருப்பவர் யார்? தமக்குக் கைம்மாறாக ஏதாவது கிடைக்கும் என முன்னதாகவே அவரிடம் கொடுத்து வைத்தவர் யார்?' என இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண் உரோ 11:33-36) மேற்கோள் காட்டுகின்றார் பவுல்.

இந்த இருவகை அனுபவங்கள் நமக்கு வைக்கும் சவால்கள் இரண்டு:

1. நம் உறவுநிலைகள்

எனக்கும் எனக்குமான உறவு, எனக்கும் பிறருக்குமான உறவு, எனக்கும் இறைவனுக்குமான உறவு என்ற இந்த மூன்று நிலைகளின் தரத்தை நிர்ணயிப்பவை மேற்காணும் அனுபவங்களே. எப்படி? 'இரத்தமும் சதையும்' என்ற நிலையில் மட்டுமே நான் உறவு கொண்டால் என்னை தாழ்வாக மதிப்பிடுபவனாகவும், அல்லது மிக உயர்வாக மதிப்பிட்டு ஆணவம் கொண்டவனாகவும், பிறரை அவர்களின் பின்புலத்தோடு மட்டும் பார்ப்பவனாகவும், இறைவனை அடுத்தவர்கள் காட்டும் அடையாளங்கள் வழி மட்டுமே பார்ப்பேன். ஆனால் 'வெளிப்பாடு' நிலையில் இருந்தால் நான் என்னை முழுமையாக ஏற்றுக்கொள்வேன். பிறர்மேல் பரிவும் பொறுமையும் காட்டுவேன். கடவுளோடு நான் இரண்டறக் கலந்துவிடுவேன்.

2. வெளிப்பாடும் கண்டுகொள்பவரும்

எல்லார் மேலும் நிலா ஒளிர்ந்தாலும் அதை வெகு சிலரே கண்டுகொள்கின்றனர். இயேசு எல்லாருக்கும் பொதுவான மனிதராக வலம் வந்தார். போதித்தார். நோய்களைக் குணமாக்கினார். அறிவுரைகள் தந்தார். ஆனால் எல்லா மக்களும் அவரை மெசியாவாக கண்டுகொள்ளவில்லை. சீடர்கள் மட்டுமே கண்டுகொள்கின்றனர். கடவுள் வெளிப்படுத்தும் புள்ளியும், நாம் புரிந்து கொள்ளும் புள்ளியும் இணையுமிடத்தில்தான் கண்டுகொள்தல் தோன்றுகின்றது. ஆக, என்னையும் இறைவனையும் நான் எப்படி இணைத்துக்கொள்கிறேன்.

இறுதியாக, இரத்தமும் சதையும் - இந்த இரண்டால்தான் நீங்களும், நானும் கட்டப்பட்டிருக்கிறோம். ஆனால் இதிலிருந்து கடக்கும் ஆற்றலும் நமக்கு உண்டு. அந்த ஆற்றலே வெளிப்பாட்டைக் கண்டுகொள்ள உணர்கிறது.

என் வாழ்வு, வளர்ச்சி, உறவு, நம்பிக்கை என எல்லாப் பயணங்களிலும் 'இரத்தமும் சதையும்' நிலையிலிருந்து, 'வெளிப்பாடு' நிலைக்கு உயர்ந்தால் என் அனுபவமும் இறையனுபவமே ... இனிய அனுபவமே!







நீங்கள் என்னை யாரென்று சொல்லுகிறீர்கள்


அருள்திரு முனைவர் .அருள்.

நிகழ்ச்சி

பல ஆண்டுகளாக ஒருவர் மேஸ்திரியாக ஒரு காண்ட்ராக்டரிடம் வேலை செய்து வந்தான். அவரின் செயல்பாடுகள், நேர்மைக் குணம் முதலாளிக்கு மிகவும் பிடித்துப் போய்விட்டது. சில ஆண்டுகளுக்குப் பிறகு மேஸ்திரி முதலாளியிடம் சென்று, "ஐயா! நான் அடுத்த மாதத்திலிருந்து வேலையைவிட்டு நின்றுவிடலாம் என நினைக்கிறேன்" என்றான். முதலாளி கோபமாக, "இப்படி திடீரெனச் சொன்னால் எப்படி? இன்னும் ஆறு மாதங்கள் நீ என்னிடம் வேலை செய்துதான் ஆக வேண்டும்என்றார். "உன் குடிசைக்கு எதிரே உள்ள பாறை மீது ஒரு நவீன மாடலில் ஒரு வீடு கட்ட வேண்டும். அதை முடித்துவிட்டு வேலையிலிருந்து நீ நின்றுகொள்என்றார். சரி என்று சொல்லி ஆறு மாதத்திற்குள் பாறைமீது அழகான ஒரு வீட்டைக் கட்டி முடித்துக் கொடுத்தார் அந்த மேஸ்திரி. அப்போது முதலாளி அந்த மேஸ்திரியைப் பார்த்து, நீ பல ஆண்டுகளாக என்னிடம் வேலை செய்தவர். சில நேரங்களில் உனக்கு என் மீது நம்பிக்கை இல்லாமல் போயிற்று. பல சமயங்களில் என்னை நீ சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. இருப்பினும் இத்தனை ஆண்டுகள் என்னைவிட்டுப் பிரியாமல், பலவிதமான துன்பங்களோடு என்னோடு இருந்து, எனக்கு ஆறுதல் தந்தாய். காலப்போக்கில் மனதளவில் நீ என்னை மற்றவர்களைவிட நன்கு புரிந்துகொண்டாய். அதற்கு வெகுமதியாக உனக்கு நான் பரிசு கொடுக்க வேண்டும். அதனால் பாறைமீது நீ கட்டிய வீட்டை உனக்கே பரிசாகத் தருகிறேன் என்று கூறி, புதிய வீட்டுச் சாவியை அந்த மேஸ்திரியிடம் கொடுத்தார் அந்த முதலாளி.

ஆண்டவர் இயேசுவும் தனது மேஸ்திரியாக இருந்த பேதுருவையும் இவ்வாறுதான் எடைபோட்டார். எனவே உன் பெயர் பாறை,  இந்தப் பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். விண்ணகத்தின் திறவுகோல்களை உனக்குத் தருவேன் (மத். 16:18) என்று கூறி அதிகாரத்தின் சாவியை புனித பேதுருவிடம் ஆண்டவர் இயேசு ஒப்படைக்கின்றார். ஏனெனில் தொடக்கத்தில் இயேசுவை அறிவுப்பூர்வமாகப் புரிந்துகொண்ட பேதுரு, காலப்போக்கில் அனுபவத்தின் வழியாக, இதயப்பூர்வமாக உணர்ந்து கொண்டார். எனவேதான் நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன் (மத். 16:17) என்று வெளிப்படுத்தினார்.

அன்பார்ந்தவர்களே! மூன்று ஆண்டுகளாகத் தன்னோடு இருந்து, உண்டு, உறங்கி சென்ற இடமெல்லாம் பின்தொடர்ந்து, தான் செய்த வல்ல செயல்களையெல்லாம் கண்ணாரக் கண்ட தன் சீடர்களை நோக்கி, இயேசு ஒரு கேள்வி எழுப்புகிறார். மனுமகனை மக்கள் யார் என்று சொல்லுகிறார்கள்? நீங்கள் என்னை யாரென்று சொல்லுகிறீர்கள் (மத். 16:14-15) என்றும் கேட்கிறார். ஏன் இந்தக் கேள்வியைக் கேட்கிறார்? இதுவரைப் பின்தொடர்ந்த மக்கள் பலர் இயேசுவில் விசுவாசமிழந்தனர். உற்றார், உறவினர் அவர்மேல் இடறல்பட்டனர். சீடர் பலர் இயேசு தன் உடலை உணவாகத் தருவேன் என்றவுடனும் நெருக்கடி நிலை ஏற்பட்டவுடனும் அவரைவிட்டுப் பிரிந்து சென்றனர். இந்த சூழலில் தந்தையாகிய இறைவன் இவ்வுலகிற்கு இயேசுவை எதற்காக அனுப்பினார் என்பதை மக்கள் புரிந்துகொண்டனரா, அந்தப் பணியை இந்தச் சீடர்கள் தொடர்ந்து செய்வார்களா? தன்னோடு மூன்று ஆண்டுகள் இருந்து பயிற்சி பெற்ற சீடர்கள் தன்னைப் புரிந்துகொண்டார்களா என்பதை அறிய, ஒரு நேர்முகத் தேர்வு நடத்துகிறார் இயேசு. ஏனெனில் இன்றைய இரண்டாம் வாசகத்தில் (உரோ. 11:33) கடவுளின் அருட்செல்வம் ஞானம், அறிவு, தீர்ப்புகள் இவற்றை மனிதன் தன் அறிவினால் அறிய இயலாது. அனைத்தும் அவரிடமிருந்தே, அவருக்காகவே இருக்கின்றன என்கிறார் புனித பவுல் அடிகளார்.

இப்படிப்பட்ட சூழ்நிலை வந்தபோது, இயேசுவின் இதயம் எழுப்பிய கேள்விதான், மக்கள் என்னை யாரென்று சொல்லுகிறார்கள். ஆனால் இயேசுவை அனுபவ ரீதியாக அறிந்த பேதுரு, ஒரே வரியில் பதில் சொல்லி, இயேசுவின் இதயத்தில் நிரந்தர இடத்தைப் பிடித்துவிட்டார். இதை அறிந்த இயேசு, பேதுருவை அடித்தளமாகக் கொண்டு திருச்சபையைக் கட்டுவேன் என்கிறார்.


இயேசு எனக்கு யார்? சிலுவையில் தொங்கிய வலது புறத்துக் கள்வன், நான் யார்? ஏன் இப்படி ஆனேன் என்று சிந்தித்தான். விபச்சாரப் பெண் மதலேன் மரியாள் இப்படி ஏன் தள்ளப்பட்டேன் என்று சுய ஆய்வு செய்தாள். சக்கேயுதன் எதிர்கால நிலைப்பாடு என்ன என்று யோசித்தான். இதனால் அறிவு ரீதியாக மட்டுமல்ல, இதயப்பூர்வமாக இயேசுவைச் சொந்தமாக்கிக் கொண்டார்கள் இந்த மூவரும். 


  •  இன்று கிறிஸ்தவர்களாகிய நம்மைப் பிற மக்கள் யார் என்று சொல்லுகிறார்கள்? கல்வி, மருத்துவம் போன்ற உதவியால் மதம் மாற்றுபவர்கள், சமூக அக்கறையற்றவர்கள், பிரச்சனையைக் கண்டு கொள்ளாதவர்கள் கோழைகள்! அல்லேலூயா கோஷ்டிகள், பெயரளவில் கிறிஸ்தவர்கள் என்கிறார்களா? அப்படியென்றால் அது உண்மையா?
  • நாம் நம்மைச் சுற்றி எத்தகைய சமூகத்தைக் கட்டி எழுப்புகிறோம்? சாதியம், ஆணாதிக்கம், மத அடிப்படை வாதம், சுய நலம் நிறைந்த அடிமை சமூகத்தையா? அல்லது நீதி, அன்பு, அமைதி, சமத்துவம், சகோதரத்துவம் நிறைந்த சமூகத்தையா






மறையுரை வழங்குபவர் Fr. Freddy is a Redemptorist priest belonging to the Province of Bangalore. Currently he is attached to the Archdiocese of St. Louis, Missouri state, U.S.A.

முன்னுரை:
கத்தோலிக்கத் திருச்சபையின் குருவாக இருந்து பின்னர் அதிலிருந்து விலகிச் சென்ற மார்ட்டின் லூதர் 1517 ஆம் ஆண்டு லுத்தரன் சபையை நிறுவினார். மணமுறிவுக்கும், மறுமணம் செய்துகொள்வதற்கும் அப்போதைய பாப்பரசர் அனுமதி தராத காரணத்தால், 1534 ஆம் ஆண்டு அரசர் எட்டாம் ஹென்றி ஆங்கிலிக்கன் சபையை தொடங்கினார். ஸ்காட்லாந்து நாட்டைச் சார்ந்த ஜான் நாக்ஸ் என்பவர் 1560 ஆம் ஆண்டு பிரிஸ்பிடேரியன் சபையை (Presbyterian Church) நிறுவினார். மெதடிஸ்ட் சபை (Methodist Church) என்பது ஜான் மற்றும் சார்லஸ் வெஸ்லி என்பவர்களால் 1744 ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டில் தொடங்கப்பட்டது. ஆம்ஸ்டர்டாம் நகரில் ஜான் ஸ்மித் என்பவர் 1605 ஆம் ஆண்டு பாப்திஸ்து சபையை (Baptist Church) ஏற்படுத்தினார். “Church of the Nazarene", "Pentecostal Gospel", "Holiness Church", "Pilgrim Holiness Church", "Jehovah's Witnesses" - இது போன்ற பற்பல சபைகளை சார்ந்திருப்பவர்கள் பலர். இந்த சபைகளெல்லாம் கடந்த நூறு ஆண்டுகளில் மனிதர்களால் புதிதாக உருவாக்கப்பட்ட நூற்றுக்கணக்கான பல பிரிவுகளில் ஒன்று என்பது தெளிவு.

ஆனால், இறைமகன் இயேசு கிறிஸ்துவால் கி.பி.33 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது "கத்தோலிக்கத் திருச்சபை" என்பதும், இந்தத் திருச்சபை இன்றைக்கும் மாறுதலின்றி அதே சபையாகவே இருக்கிறது   என்பதும் கத்தோலிக்கக் கிறிஸ்தவர்களாகிய நமக்குத் தெரியும். இந்தத் திருச்சபையை ஏற்படுத்திய இறைவன் நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராக இருப்பதுபோல, அவரால் நிறுவப்பட்ட கத்தோலிக்கத் திருச்சபையும் கடந்த காலம், நிகழ் காலம் மற்றும் வருங்காலம் ஆகிய எல்லாக் காலங்களிலும் மாறாத ஒன்றாக இருக்கிறது.

இறைவார்த்தை:
"திருச்சபை" (Church) என்ற சொல், இன்றைய நற்செய்தி வாசகத்திலும், மத்தேயு நற்செய்தி 18:17 என்ற பகுதியிலும் காணப்படுகிறது. "சொல்பிறப்பியல்" முறைப்படி, "church" என்ற பதம் "அழைக்கப்படுத்தல்" என்பதைக் குறிப்பதாகவும், பண்டைய கிரேக்க நாட்டில் ஆங்காங்கே நடைபெற்ற உள்ளூர் அரசியல் கூட்டங்களைக் குறிப்பதாகவும் கையாளப்பட்டது. திருச்சபையின் வெவ்வேறு சிறப்பம்சங்களை இன்றைய நற்செய்தி வாசகம் எடுத்துரைக்கிறது.

  1. அனைத்து அதிகார மையங்களுக்கிடையில், திருச்சபையே கிறிஸ்துவின் வல்லமை: கலிலேயக் கடலிலிருந்து வடக்கே இருபது மைல் தொலைவிலிருக்கின்ற பிலிப்பு செசாரியா பகுதியில் இன்றைய நற்செய்தி சம்பவம் நிகழ்கிறது. பாகால், பான் ஆகிய வேற்றுமத கடவுளர்களின் வழிபாட்டு மையமாக இந்தப் பகுதி இருந்தது. இந்த இடத்தில் அகஸ்டஸ் சீசருக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு ஆலயத்தை அரசர் ஏரோது கட்டியிருந்தார். அரசியல் அதிகாரத்திற்கும், அந்நிய கடவுளர்களின் சக்திக்கும் அடையாளமாக இந்த இடம் இருந்தது. மற்ற அனைத்து அதிகாரங்களையும் மாற்றியமைக்கின்ற விதமாக, தமது திருச்சபையை இயேசு இந்த இடத்தில் நிறுவுகிறார்.

பாதாளத்திற்கு எதிராகவும் இயேசுவின் திருச்சபை மேலோங்கி நிற்கும். பான் என்ற கடவுளுக்கான கோவில் அமைந்திருந்த குகையின் நுழைவாயில், பாதாளத்தின் வாயிற்கதவுகளாகக் கருதப்பட்டது. வேற்றுமதத்தினர் செலுத்திய பலிப்பொருள்கள் இந்தக் குகையினுள் வீசப்பட்டன. இந்தக் குகையில் நுழைவதற்கான வழி, நரகத்திற்கு இட்டுச் செல்லும் வழியாகக் கருதப்பட்டது. திருச்சபையில் இருக்கின்ற கிறிஸ்துவின் அதிகாரத்தை, அலகையின் அதிகாரம் ஒருபோதும் வெற்றிகொள்ள இயலாது.

  1. பேதுருவின் விசுவாச அறிக்கையே திருச்சபையின் தொடக்கமாக அமைந்தது: "மானிடமகன் யாரென்று மக்கள் சொல்கிறார்கள்?" என்று இயேசு தன் சீடர்களைக் கேட்டார். இந்த முதல் கேள்விக்கு சீடர்கள் அளித்த மறுமொழி, இயேசுவின் கவனத்தை ஈர்க்கவில்லை. அவர்களுடைய கூற்றுக்கு இயேசு பதில் கூறவுமில்லை. "ஆனால் நீங்கள், நான் யார் எனச் சொல்கிறீர்கள்?" என்ற அவருடைய கேள்விக்கான பதிலே இயேசுவின் இலக்காக இருந்தது.  "நீரே மெசியா, வாழும் கடவுளின் மகன்" என்று பேதுரு உரைத்ததன் பின்னரே, இயேசு தமது திருச்சபையைக் குறித்து பேச ஆரம்பிக்கிறார். இயேசுவுக்காக தன் உடலையும், இரத்தத்தையும் இழந்த பேதுருவின் தியாகத்தில் அல்லாமல், விண்ணகத் தந்தையின் வெளிப்பாடான பேதுருவின் விசுவாச அறிக்கையோடு தான் திருச்சபையின் தொடக்கமும் அமைந்தது.

  1. "திருச்சபையின் பாறை" இறைவனாலேயே தேர்ந்தெடுக்கப்பட்டது: "சீமோன்" என்ற பெயரை இயேசு மாற்றியமைக்கிறார். சீமோன் என்ற எபிரேய சொல்லுக்கு, "செவிமடுத்தல்", "நாணல் போன்ற" "புல் போன்ற" என்று நேரிடையான அர்த்தங்கள் உண்டு. சீமோன் என்னும் மனிதருடைய வலுவின்மையையும், கடுங்காற்று போன்ற உலகியல் முறைமைகள் எவ்வாறு சுலபமாக இவரை வீழ்த்திவிடும் என்பதையும், இந்தப் பெயர் குறிப்பால் உணர்த்துவதாக இருந்தது. சீமோன் என்னும் சொல் அரமேய மொழியில் மணற் துகள்களைக் குறிப்பதாகும். இத்தகைய பெயர் கொண்ட ஒருவரை இயேசு பாறையாக மாற்றுகிறார். கடவுள் ஆபிரகாமைப் பார்த்தபோது, "இந்த உலகை கட்டியெழுப்புவதற்கான பாறையைக் கண்டுகொண்டேன்" என்று வியந்து கூறியதாக, பழங்கால யூத மதகுருக்கள் சொல்லுவதுண்டு. இப்போது பேதுரு திருச்சபையின் புதிய ஆபிரகாமாக இருக்கிறார். பேதுருவின் வடிவில் புதியதொரு பாறையை இயேசு காண்கிறார். யூத மரபின்படி, பாறையின் மீது கட்டப்பட்டிருந்த எருசலேம் தேவாலயம் உலகத்தின் மையமாகக் கருதப்பட்டது. இன்று இந்த இடத்தில் Dome of the Rock என்ற இஸ்லாமிய தொழுகைக் கூடம் அமைந்துள்ளது. புதிய தேவாலயமாகிய திருச்சபையைக் கட்டியெழுப்பிட பேதுரு பாறையாகிறார். திருச்சபையின் தலைவரான பேதுரு, கடவுளாலேயே தேர்ந்தெடுக்கப்பட்டார்.

  1. இறையரசின் திறவுகோல்களை கொண்டிருக்கும் ஒரே திருச்சபை: "அனுமதிப்பது", "தடைசெய்வது" - இவையெல்லாம் போதனை செய்வதற்கு தங்களுக்கு இருக்கும் அதிகாரத்தைக் காட்டுவதற்காக யூத மதகுருக்கள் கையாண்ட சொல்லாடல்கள் ஆகும். திருச்சட்டங்களுக்கு விளக்கம் அளிக்கவும், அதனைக் குறிப்பிட்ட இடங்களில் பயன்படுத்தவும், எதை அனுமதிப்பது அல்லது தடைசெய்வது என்பதை எடுத்துச் சொல்லவும் தங்களுக்கு மட்டுமே அதிகாரம் உண்டு என்பது அவர்களுடைய எண்ணம். பழைய ஏற்பாட்டில், திறவுகோல்களின் காப்பாளர் அந்த வீட்டின் பொறுப்பாளர் மற்றும் ஆசிரியருக்கான அதிகாரத்தைக் கொண்டிருந்தார் (எசாயா 22:25). விசுவாசத்தை விளக்கிச் சொல்லும் ஆசிரியராகவும், தனது மக்களை வழிநடத்துகின்ற பொறுப்பாளராகவும், பேதுருவை இயேசு ஏற்படுத்தினார். பேதுருவுக்குப் பிறகு, விசுவாசத்தை விளக்கிச் சொல்லுகின்ற அதிகாரம் படைத்த ஆசிரியராகவும், மக்களை நிர்வகிக்கும் பொறுப்பாளராகவும் இருப்பது, திருச்சபையே.

இயேசுவால் நிறுவப்பட்ட திருச்சபையே, கிறிஸ்துவின் வல்லமை. இயேசுவில் கொண்டிருக்கும் விசுவாசத்தை அறிக்கையிடும் திருச்சபை இதுவேகாலத்தின் சோதனைகளை வென்று நிற்கின்ற பாறையும் இந்தத் திருச்சபை தான். இறைமக்களுக்கு கற்பிக்கவும், அவர்களை வழிநடத்தவும் அதிகாரம் படைத்த திறவுகோல்களின் காப்பாளராக இருப்பதுவும் இந்த திருச்சபையே.
  
பயன்பாடு:
நாம் சார்ந்திருப்பது இந்தத் திருச்சபையைத்தான். இன்றைய நாள்களில், திருச்சபையின் தவறான போக்குகளை சுட்டிக்காட்டி, மக்கள் திருச்சபையின் மீது குற்றம் சுமத்துகிறார்கள். இவ்வாறு சுட்டிக்காட்டப்படும் தவறான போக்குகள் பலநேரங்களில் உண்மையாகவே இருக்கின்றன. நாம் செய்கின்ற செயல்களில் மக்கள் திருப்தி அடைவதில்லை. மனித வலுவின்மையின் அடிப்படையில் குருக்கள் மீது குற்றம் சாட்டுகிறோம். அதிக அளவில் சட்டங்களுக்கும், சடங்கு-சம்பிரதாயங்களுக்கு மதிப்பளிப்பதாகவும், உலகத்தின் உண்மைநிலைகளுடன் தொடர்பற்று இருப்பதாகவும் திருச்சபையின் மீது நாம் குற்றம் சுமத்த முடியும்.

கடவுளின் மக்களை, திருச்சபையை எதுவும் அழித்திடவில்லை. பாப்பரசர் ஏழாம் பயஸ் அவர்களை  சிறைபிடித்த பேரரசர் நெப்போலியன், ரோமன் கத்தோலிக்கத் திருச்சபையை நசித்துவிடுவதாக எச்சரித்தார். பேரரசரின் அறியாமையை எண்ணி மிகுந்த வருத்தமுற்ற வத்திக்கான் திருப்பீடத்தின் செயலரான  கர்தினால் கொன்சால்வி, "கடந்த 1800 ஆண்டுகளில் இந்தத் திருச்சபையை அழித்திட இந்த மதத்தின் குருக்களான எங்களாலேயே முடியவில்லையே? உன்னால் முடியும் என்று உண்மையாகவே நீ நினைக்கிறாயா?" என்று கேட்டார்.

திருச்சபையை மீண்டும் புதிதாகக் கட்டியெழுப்புவதே இன்று நம்முடைய தேவையாக இருக்கிறது. இத்தாலியில் அசிசி நகரிலுள்ள புனித தமியான் ஆலயத்தில் (Church of San Damiano) அசிசி நகர் புனித பிரான்சிஸ் ஜெபித்துக் கொண்டிருந்தபோது, "பிரான்சிஸ், என்னுடைய ஆலயத்தை செப்பனிட்டு சீர்திருத்திடு" (Repair my Church) என்று இயேசு தன்னிடம் கூறுவதைக் கேட்டார். இயேசுவின் அந்த கோரிக்கையை நிறைவேற்றுவதற்காக, தனது தந்தையின் சொத்துக்களை விற்று, தன் கையாலேயே அந்த ஆலயத்தை செப்பனிட ஆரம்பித்தார், பிரான்சிஸ். ஆனால், "repair my church" என்று இயேசு சொன்னது புனித தமியான் ஆலயத்தைக் குறித்து அல்ல: உள்ளேயே பெருகி வந்த தவறான போக்குகள் - பேராசைகள் இவற்றாலும், வெளியில் வளர்ந்திருந்த திருமறைக்கெதிரான கொள்கைகளாலும் சீரழிந்து கொண்டிருந்த உலகளாவிய திருச்சபையைக் குறித்து தான்” என்பதை புனித பிரான்சிஸ் உணர்ந்து கொள்ளவில்லை. எதிர்மறையான கண்ணோட்டத்துடன் திருச்சபையை அணுகுவது இன்றைய காலகட்டத்தில் எளிதுதான். ஆனால், புனித பிரான்சிஸை போல நாமும் திருச்சபையைக் கட்டியெழுப்புவர்களாக இருத்தல் இயலும்.

இறைவாக்கினர் எரேமியா கூறுகிறார்: "ஆண்டவர் கூறுவது இதுவே; சாலைச் சந்திப்பில் நின்று நோக்குங்கள்; தொன்மையான பாதைகள் எவை? நல்ல வழி எது? என்று கேளுங்கள்; அதில் செல்லுங்கள். அப்போது உங்களுக்கு அமைதி கிடைக்கும்" (எரேமியா 6:16). தொன்மையான பாதை என்பது திருச்சபையே. நல்ல வழியும் திருச்சபை தான். அதன் வழியில் நடக்கின்றபோது, எப்போதுமே நம் உள்ளங்களுக்கு அமைதி கிட்டும். 

முடிவுரை:
நீங்களே திருச்சபை என்பதால், நெஞ்சை நிமிர்த்தி, தலையை உயர்த்தி நடைபோடுங்கள். இறைவனின் மிக உயரிய படைப்பான திருச்சபையில் நீங்களும் ஒரு உறுப்பினர் என்பதை எண்ணி பெருமை கொள்ளுங்கள். மரியாதையும், பெருமையும் மேலோங்க நமது விசுவாசத்திற்காக, நமது திருச்சபைக்காக துணிந்து பேசுங்கள். ஏனெனில், இந்தத் திருச்சபையைப் பார்த்து தான் இயேசு, "உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்" என்று கூறினார்.  


Friday 18 August 2017

20 ஆகஸ்ட் 2017: ஆண்டின் பொதுக்காலம் 20ஆம் ஞாயிறு


ஆண்டின் பொதுக்காலம் 20ஆம் ஞாயிறு - 20 ஆகஸ்ட் 2017:



I. எசாயா 56:1,6-7
II. உரோமையர் 11:13-15,29-32
III. மத்தேயு 15:21-28




பிள்ளைகளும், நாய்க்குட்டிகளும்!


மறையுரை-வழங்குபவர் :
அருள்பணி ஏசு கருணாநிதி-மதுரை மறைமாவட்டம் 


'ஹோம் ஒர்க் செய்ய, காய்கறி நறுக்க, பால்கனியில் அமர்ந்து பேப்பர் பார்க்க, லேப்டாப் வச்சி வேலை பார்க்க, வயசானவங்க டிவி பார்த்துகிட்டே டிஃபன் சாப்பிட, 3 ஆங்கிள், 6 உயரம் என மொத்தம் 18 வகையாக பயன்படும் டேபிள் மேட் அவங்க வீட்டுல இருக்க, இவங்க வீட்டுல இருக்கு, உங்க வீட்டுல இருக்கா?' என்ற விளம்பரத்தை நாம் பார்த்திருப்போம்.

டேபிளில் அமர்ந்து உண்ணும் பழக்கம் நடுத்தர வீடுகளிலும் இப்போது வேகமாக பரவிக்கொண்டு வருகின்றது.

மேசை - இந்த ஒற்றைச் சொல்லை மையமாக வைத்து இன்றைய முதல் மற்றும் மூன்றாம் வாசகங்கள் இருக்கின்றன. நான் இத்தாலியில் படித்தபோது ஆச்சர்யப்பட்ட ஒன்று மேசைப் பழக்கம். உணவு மேசையில் எப்படி இருப்பது? என்று ஒரு நாள் வகுப்பே நடத்தப்பட்டது. மேசையில் அமர்ந்திருக்கும்போது எந்தக் காரணத்தைக் கொண்டும் அடுத்தவரைத் தொடக்கூடாது. ஸ்பூன் அல்லது ஃபோர்க் கீழே விழுந்தால் எடுக்கக் கூடாது. ஒருவர் தூரத்தில் இருக்கும் கூடையிலிருக்கும் ரொட்டியில் ஒன்றைக் கேட்டால், கூடை முழுவதையும் தூக்கிக் கொடுக்க வேண்டும். தண்ணீரை கிளாஸில் ஊற்றும்போது புறங்கை கொண்டு ஊற்றக் கூடாது. இவை எல்லாவற்றிக்கும் மேலாக எந்த இடம் உனக்குக் குறிக்கப்பட்டிருக்கிறதோ அந்த இடத்தில்தான் நீ உட்கார வேண்டும்.

இத்தாலிய வீடுகளில் தங்களுக்கு பிடித்தமான அருள்பணியாளர் அல்லது அருள்சகோதரி வரும்போது அவரை முதன்மையான இருக்கையில் அமர வைத்து 'காப்போ தாவோலா' (மேசையின் முதல்வர்) என அறிவித்து மகிழ்வர். மேலும், ஒவ்வொரு வீடுகளிலும் இரண்டு மேசைகள் இருக்கும். வீட்டு உரிமையாளர்கள் அல்லது விருந்தினர்கள் அமர்ந்து சாப்பிட ஒரு மேசை. வழிப்போக்கர்கள் அல்லது பணியாளர்கள் அமர்ந்து சாப்பிட மற்றொரு மேசை. எந்தக் காரணத்திற்காகவும் வழிப்போக்கர்களும், முன்பின் தெரியாதவர்களும், பணியாளர்களும் முதல் மேசையில் அமர அனுமதிக்கப்படவே மாட்டார்கள்.

ஆக, மேசை என்பது ஒருவரின் உரிமையைக் காட்டுகிறது. இதே நிலை நம் ஊர் அரச அலுவலகங்களிலும், பள்ளிகளிலும் பார்க்கலாம். 'என் டேபிளுக்கு இன்னும் வரல!' என்று அலுவலகங்களில் சொல்வார்கள். அதாவது, என் உரிமைக்கு இன்னும் வரவில்லை என்பதே இதன் அர்த்தம். என் பள்ளியின் ஆசிரியை ஒருவரது மேசையை மற்ற ஒருவர் திறந்தபோது அவர் குய்யோ முறையோ என அலறினார். தன் மேசையைத் திறந்தது பெரிய குற்றம் என்றார். ஆக, மேசையின் மேல் நாம் கொண்டாடும் உரிமை இயல்பானது. மேலும், மேசை என்பது நம் வேலையை அடையாளப்படுத்துவதோடு அது சில நேரங்களில் நம் அடையாளமாகவும் மாறிவிடுகிறது.

இந்தப் பின்புலம் தெளிவானால் இன்றைய இறைவாக்கு வழிபாட்டின் பொருள் தெளிவாகும்.

இன்றைய முதல் வாசகத்தில் (காண். எசா 56:1,6-7) நாடுகடத்தப்பட்ட இஸ்ரயேல் மக்கள் மீண்டும் திரும்பிவருவர் என்றும், ஆண்டவரின் ஆலயம் மீண்டும் கட்டப்படும் என்றும் இறைவாக்குரைக்கின்ற எசாயா இறைவாக்கினர், ஆண்டவரின் திருமலை நோக்கி யூதரும், யூதரல்லாத புறவினத்தாரும் வருவர் என முன்மொழிகின்றார். ஆண்டவரின் திருமலை யூதர்களின் வழிபாட்டுத்தலம். இந்த இடத்திற்கு புறவினத்தார்கள் எப்படி அனுமதி பெறுவர்? யூதர்களுக்கு தங்களின் பிறப்புரிமையாக வருகின்ற இந்த உரிமை மற்றவர்களுக்கு எப்படி வருகிறது? மற்றவர்கள் செய்யும் நற்செயல்களால் இந்த உரிமை உருகிறது.

இந்த உரிமையைப் பெற மற்றவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதையும் பட்டியலிடுகின்றார் எசாயா:

அ. தங்களை ஆண்டவரோடு இணைத்துக்கொள்ள வேண்டும்
ஆ. ஓய்வுநாளைத் தீட்டுப்படுத்தாமல் கடைப்பிடிக்க வேண்டும்
இ. கடவுளின் உடன்படிக்கையைப் பற்றிக்கொள்ள வேண்டும்

இந்த மூன்று பண்புகளையும் பெற்றிருக்கும் பிற இனத்தவர்கள் ஆண்டவரின் மேசையின் மேல் - பலிபீடத்தின்மேல் - வழிபட உரிமை அல்லது தகுதி பெறுவார்கள். பிறப்பால் வழிபடும் உரிமையைப் பெற்றிருக்கும் யூதர்களோடு இணைகின்றனர் செயல்களால் உரிமை பெற்றவர்கள். இந்த உரிமைகளில் உயர்ந்தது எது, தாழ்ந்தது எது என்பது கிடையாது. இறைவின் இணைவதே அல்லது ஒன்றுசேர்ப்பதே முக்கியமானது.

இந்த இரண்டு வகை உரிமைகளையும் இன்றைய நற்செய்தி வாசகம்  (காண். மத் 15:21-28) 'பிள்ளைகள்,' 'நாய்க்குட்டிகள்' என உருவகப்படுத்துகிறது.  கானானியப் பெண்ணின் மகள் நலம் பெறும் நிகழ்வை மத்தேயு மற்றும் மாற்கு (காண். 7:24-30) மட்டுமே பதிவுசெய்கின்றனர். பெண்ணையும், புறவினத்தாரையும் இழிவுபடுத்துவதுபோல இந்நிகழ்வு இருப்பதால் லூக்கா இதை பதிவு செய்ய மறுக்கின்றார். இயேசுவை ஒரு குறிப்பிட்ட இனத்தின் மெசியா போல இது முன்நிறுத்துவதால் யோவான் இதை தன் நற்செய்திக்கு ஒவ்வாததாக நினைக்கின்றார். மத்தேயு மற்றும் மாற்கு நற்செய்தியாளரின் பதிவுகளில் சில முக்கியமான வித்தியாசங்களும் இருக்கின்றன. இந்த நிகழ்வு உண்மையில் நிகழ்ந்ததா? என்று கேட்டால், 'ஆம்' என்றே சொல்ல வேண்டும். ஏனெனில் நெருடலாக இருக்கும் நிகழ்வுகள் அனைத்தும் உண்மையான நிகழ்வுகள் என்பது விவிலிய ஆராய்ச்சியின் ஒரு விதி. இந்நிகழ்வை வாசிக்கும்போது நம்மை அறியாமலேயே ஒரு நெருடல் நம்மில் எழுகிறது. எப்படி?

இன்றைய நற்செய்தியில் வரும் கானானியப் பெண் மூன்று நிலைகளில் தாழ்த்தப்பட்டவளாக இருக்கின்றார்: முதலில் அவர் ஒரு பெண். இரண்டாவது அவர் ஒரு புறவினத்துப்பெண். மூன்றாவது அவர் பேய்பிடித்த மகளின் தாய். அதாவது கடவுளின் சாபத்திற்கு ஆளானவள். இப்படியாக மூன்று நிலைகளில் தாழ்த்தப்பட்ட ஒரு பெண் தன்னிடம் உதவி கேட்டுக் கதறி நிற்க, இயேசுவோ பாராமுகம் காட்டுகின்றார். ஓரிடத்தில் நின்று பதில் சொல்லாமல் நடந்துகொண்டே இருக்கின்றார். சீடர்கள் இவருக்காக பரிந்துபேசியபோது, 'இஸ்ரயேல் குலத்தாருள் காணாமல்போன ஆடுகளாய் இருப்போரிடமே நான் அனுப்பப்பட்டேன்' என தன் இனத்தைச் சார்ந்துகொண்டு பேசுகிறார் இயேசு. அனைத்திற்கும் மேலாக, இஸ்ரயேல் மக்களை 'பிள்ளைகள்' எனவும், புறவினத்தாரை 'நாய்கள்'   (அப்படித்தான் இருக்கிறது மூலமொழியில்) எனவும் உருவகித்து, 'பிள்ளைகளின் உணவை நாய்களுக்குப் போடுதல் முறையல்ல' என சப்பை கட்டு கட்டுகின்றார் இயேசு. இந்த நிகழ்வும், இயேசுவின் வார்த்தைகளும் இயேசுவை, 'மரியாதை தெரியாதவராக, பெண்ணை மதிக்காதவராக, சாதிப்பற்று அல்லது இனப்பற்று கொண்டவராக, மற்ற சாதி அல்லது இனத்தை வெறுக்கின்றவராக, தலைக்கனம் கொண்டவராக' சித்திரிக்கின்றன. இயேசுவைப் பற்றிய இந்தப் புரிதல் நமக்கு நெருடல்தானே.

இயேசுவின் இந்த நெருடல்தருகின்ற ஆளுமை இன்றுவரை விவிலிய ஆராய்ச்சியாளர்களுக்குப் புரியாத புதிராகவே இருக்கின்றது. இந்த நிகழ்வின் உரையாடல்களைக் கொண்டு நாம் இதன் கதைமாந்தர்களைப் புரிந்துகொள்ள முயற்சிப்போம்.

நிகழ்வில் 'பெண் - இயேசு,' 'சீடர்கள் - இயேசு' என இரண்டு மேடைகளில் உரையாடல்கள் நடக்கின்றன.

மேடை 1:
பெண்: 'ஐயா, தாவீதின் மகனே, எனக்கு இரங்கும். என் மகன் பேய்பிடித்துக் கொடுமைக்குள்ளாகி இருக்கிறாள்.'
இயேசு: (ஒருவார்த்தைகூட பதில் பேசவில்லை)
பெண்: 'ஐயா, எனக்கு உதவியருளும்!'
இயேசு: 'பிள்ளைகளுக்குரிய உணவை எடுத்து நாய்க்குட்டிகளுக்குப் போடுவது முறையல்ல'
பெண்: 'ஆம் ஐயா. ஆனாலும் தங்கள் உரிமையாளரின் மேசையிலிருந்து விழும் சிறு துண்டுகளை நாய்க்குட்டிகள் தின்னுமே'
இயேசு: 'அம்மா, உமது நம்பிக்கை பெரிது. நீர் விரும்பியவாறே உனக்கு நிகழட்டும்.'

மேடை 2:
சீடர்கள்: 'நமக்குப் பின்னால் கத்திக்கொண்டு வருகிறாரே, இவரை அனுப்பிவிடும்!'
இயேசு: 'இஸ்ரயேல் குலத்தாருள் காணாமற்போன ஆடுகளாய் இருப்போரிடமே நான் அனுப்பப்பட்டேன்'

முதல் மேடையில் பெண்ணும் இயேசுவும் மூன்று முறை பேசிக்கொள்கின்றனர். மூன்று முறை பெண் பேசுகின்றார். இரண்டுமுறை இயேசு பேசுகின்றார். மூன்று முறைகளும் இயேசுவைப் பார்த்து, 'ஐயா' என மரியாதையோடு அழைக்கின்றார். ஆனால் இயேசுவோ தொடக்கத்தில் மொட்டை கட்டையாக பெண்ணை அழைத்துவிட்டு, இறுதியாக, 'அம்மா' என மரியாதையோடு அழைக்கின்றார். மேலும், பெண் இயேசுவை, 'தாவீதின் மகனே' என அழைக்கின்றார். நிகழ்வின் தொடக்கத்தில் பேய் பிடித்திருக்கும் பேய் இறுதியில் நீங்குகிறது. 'தாவீதின் மகன்' என அறிக்கையிட்ட பெண்ணின் நம்பிக்கையை, 'உம் நம்பிக்கை பெரிது' என பாராட்டுகின்றார் இயேசு.

இங்கே மேசை ஒன்று இருக்கின்றது. அதில் வீட்டின் பிள்ளைகளம் அமர்ந்திருக்கின்றன. மேசைக்குக் கீழே அவர்கள் வளர்க்கும் நாய் படுத்திருக்கிறது. மேசையின்மேல் அமர்ந்து நாயால் உண்ணமுடியவில்லை என்றாலும், மேசையின்மேலிருந்து விழும் துண்டுகளை உண்பதால் நாயும் மேசையின்மேல் உள்ள உணவின் உரிமையாளர் ஆகிறது. இவ்வாறாக, 'பிள்ளைக்குரிய' மேசை உரிமை இயல்பாக வருகிறது. 'நாய்களுக்குரிய' உரிமை அவை மேசைக்கு அடியில் அமர்ந்திருப்பதில் வருகிறது. 'உன் உணவும், என் உணவும்,' 'பிள்ளைகளின் உணவும், நாய்களின் உணவே' எனத் தோலுரிக்கின்றார் கானானியப்பெண்.
தனக்கு இயல்பாக அல்லது பிறப்பால் வராத இறையரசு உரிமையைத் தன் நம்பிக்கையால் வெற்றிகொள்கின்றார் கானானியப்பெண்.

இரண்டாவது மேடையில் சீடர்களும், இயேசுவம் பேசிக்கொள்கின்றனர். தன் இனம் பற்றிய பேச்சை தன் இனத்தாரோடு வைத்துக்கொள்கின்றார் இயேசு. இந்த வகையில் இயேசு பரவாயில்லை. கொஞ்சம் சென்ஸிடிவ்வாக இருந்திருக்கிறார். சீடர்கள் பெண்ணைப் பற்றி இயேசுவிடம் சொல்வது தங்களின் விருப்பத்தால் மட்டுமல்ல. மாறாக, அந்தப் பெண்ணின் தொந்தரவால்தான்.
எது எப்படியோ, நிகழ்வின் தொடக்கத்தில் இருந்த குழந்தையின் பேய் நிகழ்வின் இறுதியில் காணாமல்போய்விடுகிறது. 'பிள்ளைகளைப்' போலவே, 'நாய்க்குட்டிகளும்' தங்கள் நம்பிக்கையால் நலம் பெறுகின்றன.


இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். உரோ 11:13-15, 29-32) தான் பிற இனத்து மக்களின் திருத்தூதர் என அறிக்கையிடும் பவுல் அதற்காக வருந்தவில்லை எனவும், கடவுளின் இரக்கத்தால் புறவினத்தாரும் உரிமைப்பேறு பெறுகின்றனர் எனவும் சொல்கின்றார். ஆக, 'பிள்ளைகள்' தங்கள் உரிமை என பெற்றுக்கொண்டவற்றை, 'புறவினத்தார்கள்' தங்களின் உரிமையை கடவுளின் இரக்கத்தால் பெற்றுக்கொள்கின்றனர்.

இன்றைய இறைவாக்கு வழிபாடு நமக்கு முன்வைக்கும் சவால்கள் எவை?

1. உரிமை
தனக்கு இயேசுவின்மேல் இல்லாத உரிமையை தன் நம்பிக்கையால் பெற்றுக்கொள்கிறார் கானானியப் பெண். கிறிஸ்தவர்களாகிய நம் உரிமை எங்கிருந்து வருகிறது? நாம் பெறுகின்ற திருமுழுக்கால் நாம் பிள்ளைகள் என்ற உரிமையையும், நாம் அறிக்கையிடும் விசுவாசத்தால் நாய்க்குட்டிகள் என்ற உரிமையையும் பெற்றுக்கொள்கின்றோம்.

2. பெண்
நாம் கிறிஸ்தவர்களாக மாறுவதற்கு இந்தப் பெண்தான் காரணம். இந்தப் பெண் மட்டும் இல்லை என்றால் இயேசு யூதர்களின் மெசியாவாக மட்டுமே இருந்து மறைந்திருப்பார். இவரிடம் நான் மூன்று நற்குணங்களைப் பார்க்கின்றேன்: (அ) துணிச்சல் - தான் வாழ்ந்த காலத்தின் சமூகம் வைத்திருந்த ஆண்-பெண் வேறுபாடுகளைத் தூக்கி எறிந்து, இயேசுவோடு பேசுகின்றார். (ஆ) விடாமுயற்சி - தன் இலக்கு என்பது தன் மகளின் உடல்நலம் என்பதில் தெளிவாக இருக்கின்ற அவர், அந்த இலக்கை அடையும்வரை போராடுகின்றார். தான் 'நாய்' என அழைக்கப்பட்டாலும் போராடுகின்றார். (இ) தோல்வியைச் சந்திக்கும் மனத்திடம் - இதை ஆங்கிலத்தில் 'ரெஸிலியன்ஸ்' என்பார்கள். அதாவது, தனக்கு ஏற்படுகின்ற எந்த இழப்பையும் பொறுத்துக்கொண்டு அதிலிருந்து நிமிர்ந்து வருவது.

3. எசாயாவின் அழைப்பு
இறைவனின் இல்லத்தை 'இறைவேண்டலின் வீடாக' அறிவிக்கின்ற எசாயா அந்த இல்லத்தை நோக்கி மற்றவர்கள் நகர்நது வர அவர்கள், உள்ளத்தாலும், உடலாலும் தூய்மை பெற்றிருக்க வேண்டும் என அறிவுறுத்துகின்றார். ஆக, எசாயாவின் அழைப்பு வெளிப்புறத்தில் உரிமை போலத் தெரிந்தாலும், உள்புறத்தில் அது கடமையாக இருக்கிறது.

4. நம் குறுகிய கண்ணோட்டம்
'என் இனம் - உன் இனம்,' 'நான் - நீ,' 'நாங்கள் - நீங்கள்' என்ற வேறுபாடு நம்மிடையே இருக்கக்கூடாது. இந்த வேறுபாடு இருக்கும்போது நம்மை அறியாமலேயே நம்மிடம் ஒரு பெருமித உணர்வு வந்துவிடுகிறது. இந்த உணர்வு வந்துவிட்டால் நாம் யாரையும் மதிப்பதும் கிடையாது. ஆக, பிரித்துப் பார்க்கின்ற பார்வை வேண்டாம்.

5. எளியவரும் வலியவரும்
எளிமை அல்லது வலிமை என்பது நாம் நிற்கும் தளத்தைப் பொறுத்தே இருக்கிறது. நம்மைவிட வலிமை குன்றி இருக்கும் குழந்தையை வெகு எளிதாக அடித்துவிடுகிறோம். அந்தக் குழந்தையால் நம்மைத் திருப்பி அடிக்க முடியாது என்பதால்தானே நாம் குழந்தையை வெகு எளிதாக அடித்துவிடுகிறோம். கானானியப்பெண் பெண் என்பதாலும், புறவினத்தாள் என்பதாலும் இயேசு அவரை 'நாய்' என அழைக்கின்றார். நம்மிடம் குச்சி இருக்கிறது என்பதற்காக நம்மைச் சுற்றி இருப்பவர்கள் எல்லாரையும் குரங்கு என நினைப்பது சால்பன்று.

இறுதியாக,

'நான் பிள்ளையா?' 'நான் நாய்க்குட்டியா?' என்ற கேள்வி எப்போதும் நம் எண்ண ஓட்டத்தில் இருக்க வேண்டும்.

பிள்ளைகளாகும் உரிமை இல்லாதவர்களுக்கும் உரிமை தருவது 'நம்பிக்கை'. இந்த நம்பிக்கையே பெண்ணின் மகளுக்கு நலம் தருகிறது.

மேசையில் விருந்தைத் தயாரித்து வைத்திருக்கும் இயேசு நம்மை இன்று அழைக்கின்றார். நாம் எப்படிச் செல்கின்றோம்? நாம் எந்த உரிமையில் செல்கின்றோம்? நம் உரிமையை நாம் தக்க வைத்துக்கொள்ள என்ன செய்கின்றோம்?

மறையுரைச் சிந்தனை (ஆகஸ்டு 20) பொதுக்காலம் இருபதாம் ஞாயிறு

அருள்பணி மரிய அந்தோணிராஜ்  - பாளை மறைமாவட்டம்

‘எல்லா மக்களுக்கும் அருள்பாலிக்கும் இறைவன்’
நியூயார்க் நகரில் உள்ள ஒரு பிரசித்தி பெற்ற ஆலயம் அது. அந்த ஆலயத்திற்கு வருவோரெல்லாம் பணக்காரர்களும் தொழிலதிபர்களும் இன்னும் மெத்தப் படித்த மேதாவிகளும்தான்.
ஒருமுறை அந்த ஆலயத்தைக் கடந்து சென்ற கருப்பினத்தைச் சேர்ந்த ஓவன் என்ற இளைஞன் ஆலயத்தின் வெளித்தோற்றத்தையும் அழகையும் பார்த்துவிட்டு அந்த ஆலயத்தில் பொறுப்பாளராக இருந்த பாஸ்டரிடம், தன்னையும் ஆலயத்தில் ஓர் உறுப்பினராகச் சேர்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டான். அதற்கு பாஸ்டர் அவனிடம், “ஓவன்! பிறப்பால் நீ கருப்பினத்தைச் சேர்ந்தவனாக இருப்பதால், உன்னை இந்த ஆலயத்தில் ஓர் உறுப்பினராகச் சேர்த்துக்கொள்வதற்கு இங்கே உள்ளவர்கள் யோசிப்பார்கள். ஆகையால் நீ நேராக வீட்டுக்குச் சென்று, இறைவனிடம் இந்த ஆலயத்தில் உறுப்பினராக சேரவா? வேண்டாமா? என்று கேட்டுவா. கொஞ்சம் கால அவகாசம் கூட எடுத்துக்கொள்” என்று சொல்லி அனுப்பிவைத்தார். அப்படியாவது அவனது தொந்தரவு தீரும் என்றுதான் அவர் அனுப்பிவைத்தார்.
ஏறக்குறைய ஒருமாதம் ஆகியும் ஓவன் அந்த ஆலயத்தின் பக்கம் வராததைக் கண்டு பாஸ்டர் மிகவும் சந்தோசப்பட்டார். ஆனால் திடிரென்று ஒருநாள் ஓவன் பாஸ்டரை சென்று சந்தித்தான். அவனைப் பார்த்ததும் அவருக்குத் தூக்கி வாரிப்போட்டது. அப்போது அவர் அவனிடத்தில் கேட்டார், “ஓவன்!, நீ உன்னுடைய வீட்டிற்குச் சென்று கடவுளிடம் இந்த ஆலயத்தில் உறுப்பினராகச் சேர்வதற்காக அவருடைய விருப்பத்தைக் கேட்டாயா? என்று வினவினார். அதற்கு ஓவன், “நான் கடவுளிடம் என்னுடைய கருத்தைக் கேட்டேன். அதற்கு அவர், ‘ஓவன் நீ தயவுசெய்து இந்த ஆலயத்தில் உறுப்பினராகச் சேராதே, ஏனென்றால் நானும்கூட இந்த ஆலயத்தில் ஒரு உறுப்பினராகக்கூட இல்லை. என்னையும் அவர்கள் கடந்த 25 ஆண்டுகளாக உள்ளே வர அனுமதிப்பதில்லை” என்றான். இதைக் கேட்ட பாஸ்டர் அவமானத்தால் வெட்கித் தலை குனிந்து நின்றார்.
ஆலயம் என்பது எல்லா மக்களுக்கும், எல்லா இனத்தாருக்கும் சொந்தமானது. அதை ஒரு குறிப்பிட்ட இனத்தாருக்கு மட்டும் சொந்தம் கொண்டாடுகிறபோது, அங்கே கடவுள் இருப்பதில்லை என்று உண்மையை இந்த நிகழ்வு வேதனையோடு பதிவு செய்கிறது.
பொதுக்காலம் இருபதாம் ஞாயிற்றுக்கிழமையான இன்று நாம் படிக்கக்கேட்ட வாசகங்கள் தரும் சிந்தனை ‘எல்லா மக்களுக்கும் அருள்பாலிக்கும் இறைவன்’ என்ற என்பதாகும். ஆம், கடவுள் எல்லா மக்களுக்கும் பொதுவானவர். அவர் தங்கி இருக்கும் திருக்கோவிலானது எல்லாருக்கும் சொந்தமானது. எனவே நாம் இத்தகைய கருத்துகளை சற்று ஆழமாக சிந்தித்துப் பார்ப்போம்.
இறைவாக்கினர் எசாயாப் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில் ஆண்டவராகிய கடவுள் பிற இன மக்களைக் குறித்துக் கூறுகின்றார், “அவர்களை நான் என் திருமலைக்கு அழைத்து வருவேன்; இறைவேண்டல் செய்யப்படும் என் இல்லத்தில் அவர்களை மகிழச்ச்செய்வேன்; அவர்கள் படைக்கும் எரிபலிகளும் மற்றப் பலிகளும் என் பீடத்தின்மேல் ஏற்றுக்கொள்ளப்படும்; ஏனெனில், என் இல்லம் மக்களினங்கள் அனைத்திக்கும் உரிய இறை மன்றாட்டின் வீடு என அழைக்கப்படும்” என்று. இங்கே கடவுள், யூதர்கள் மட்டுமல்ல பிற இனத்தார் எழுப்பும் ஜெபங்களைக் கூட கேட்பார் என்றும், அவர் தங்கியிருக்கும் ஆலயம் எல்லா மக்களுக்கும் உரிய இறைவேண்டலில் வீடு என்பதை நாம் அறிந்துகொள்கிறோம். ஆகவே, கடவுளை - அவர் தங்கி வாசம் செய்யும் ஆலயத்தை - ஒரு குறிப்பிட்ட இனத்திற்கு, குறிப்பிட்ட சமுதாயத்திற்கு மட்டும் சொந்தம் கொண்டாடுவது மடமையிலும் மடமை என நாம் புரிந்துகொள்ளவேண்டும்.
சாலமோன் அரசர் எருசலேம் திருக்கோவிலைக் கட்டிமுடித்த பின்பு சொல்லக்கூடிய ஜெபம் இதுவாகத்தான் இருக்கின்றது: இஸ்ரயேல் மக்களைச் சாராத அன்னியர் ஒருவர் உமது பெயரை முன்னிட்டுத் தொலை நாட்டிலிருந்து வந்து, மாண்புமிக்க உமது பெயரையும், வலிமை வாய்ந்த உமது கையையும், ஆற்றம் மிகுந்த உமது புயத்தையும் பற்றிக் கேள்விப்பட்டு வந்து, இந்த கோவிலை நோக்கி வேண்டுதல் செய்தால், உமது உறைவிடமாகிய விண்ணிலிருந்து நீர் அவருக்குச் செவிசாய்த்து அந்த அன்னியர் கேட்பதை அருள்வாயாக” என்று ( 1 அர 8: 41- 43). ஆதலால்தான் இயேசு கிறிஸ்து எல்லாருக்கும் பொதுவான எருசலேம் ஆலயத்தை ஒரு குறிப்பிட்ட இனத்தவர் சொந்தம் கொண்டாடியபோது, அவர்களை விரட்டியடித்து இறைஇல்லம் எல்லாருக்கும் பொதுவானது என்பதை நிரூபிக்கிறார்.
இன்று நாம் படிக்கக்கேட்ட வாசகம் கூட, ஆண்டவர் இயேசு யூதர்களுக்கு மட்டுமல்ல, எல்லாருக்கும் பொதுவானவர் என்பதை நிரூபணம் செய்வதாக இருக்கின்றது. இயேசு புறவினத்தார் அதிகமாக வாழும் தீர், சீதோன் ஆகிய பகுதிகளுக்குச் செல்கிறார். அங்கேதான் கானானியப் பெண்மணி ஒருத்தி பேய்பிடித்து கொடுமைக்குள்ளாகி இருக்கும் தன்னுடைய மகளைக் குணப்படுத்தும்படி கேட்கின்றார். ஆனால் ஆண்டவர் இயேசுவோ அதைக் கண்டுகொள்ளாதவராய், ஏன் அவரை நாயென அழைக்கின்றார். (இயேசுவின் இவ்வார்த்தைகளை மேலோட்டமாகப் பார்க்கும்போது சற்றுக் கடினமாக இருந்தாலும், அவர் அப்பெண்ணின் நம்பிக்கையை சோதிப்பதற்காகக்கூட இப்படிப் பேசியிருக்கலாம் என புரிந்துகொள்ளலாம்). ஆனாலும் அப்பெண்மணி இயேசுவின்மீது உறுதியான நம்பிக்கையோடு இருந்தததால் அவளுடைய மகளுக்கு நலமளிக்கிறார். இங்கே இயேசு தான் ஒரு யூதன் என்பதையும் கடந்து, புறவினத்துப் பெண்மணியின் மகளுக்கு நலமளித்து தான் எல்லாருக்கும் பொதுவானவர், மேலும் நம்பிக்கையோடு கேட்டால், கேட்கிற வரங்களை அள்ளித்தருபவர் என்பதை எண்பித்துக் காட்டுகின்றார்.
இப்பகுதி இயேசுவின் பரந்த உள்ளத்தினைச் சுட்டிக்காட்டும் அதேவேளையில் கானானியப் பெண்மணியின் நம்பிக்கையை நமக்கு எடுத்தியம்புகிறது. கானானிய பெண்மணியோ இயேசு தன்னைக் கண்டுகொள்ளாவிட்டாலும், தன்னை அவர் நாயென அழைத்த பின்பும் அவள் தன்னுடைய நம்பிக்கையில் உறுதியாக இருக்கிறார். அதனால்தான் தன்னுடைய மகளது நோய் நீங்கப் பெறுகிறார். நம்முடைய வாழ்க்கையில் கனானியாப் பெண்மணியிடம் இருந்த அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கிறதா என சிந்தித்துப் பார்க்கவேண்டும். நிறைய நேரங்களில் இறைவனை நோக்கிய நம்முடைய ஜெபம் கேட்கப்படவில்லையென்றால் நாம் நம்பிக்கையில் நம்பிக்கையில் தளர்ச்சியுற்று விடுகின்றோம். ஆனால் தளராத நம்பிக்கைதான் தலைவன் இயேசுவிடமிருந்து எல்லா ஆசிரையும் பெற்றுத் தரும் என்பது உறுதி.
அது ஓர் அழகிய கிராமம். அந்த கிராமத்திற்கு ஒரு முனிவர் வந்திருந்தார். அவர் ஊருக்கு மத்தியில் இருந்த ஒரு மரத்தடியில்போய் அமர்ந்தார். சிறுது நேரம் கழித்து அவருக்குத் தாகம் எடுக்க தண்ணீர் வேண்டும் என்று மக்களிடம் கேட்டார். ஆனால் ஊரில் இருந்த யாருமே அவரைக் கண்டு கொள்ளவில்லை. இதனால் அவர் அந்த ஊருக்கு இன்னும் 50 வருடங்களுக்கு மழையே பெய்யாது, வானம் பொய்த்துவிடும்” என்று சாபம் போட்டார்.
இந்த சாபம் பற்றிக் கேள்விப்பட்ட அனைவரும் என்ன செய்வது என்றே தெரியாமல்
கவலையோடு அவரின் காலடியில் அமர்ந்து மன்னிப்பு கேட்டனர். சாபத்திற்கு விமோசனம் கிடையாது என்று அவர் கூறிவிட்டார். வேறு வழியின்றி
அனைவருமே அவரின் காலடியில் அமர்ந்து இருந்தனர். மேலிருந்து இதைக் கவனித்த வருண பகவான் தனது சங்கினை எடுத்து தலைக்கு வைத்துப் படுத்துவிட்டான். (வருண பகவான் சங்கை எடுத்து ஊதினால்தான் மழை வரும் என்பது நம்பிக்கை). இன்னும் 50 வருடங்கள்மழை பெய்ய வாய்ப்பில்லை என்பதால் இனி சங்குக்கு ஓய்வு என்றே வைத்து விட்டான்

இப்படி இருக்க அந்த ஊரில் ஓர் அதிசயம் நடந்தது. ஆம், அந்த ஊரில் இருந்த ஒரே ஓர் உழவன் மட்டும் தினமும் கலப்பையை எடுத்து, வயலுக்குச் சென்று வந்துகொண்டிருந்தான். அவனை அனைவரும் பரிதாபமாகவே பார்த்தனர். மழையே பெய்யாது எனும்போது இவன் வயலுக்கு போய் என்ன செய்யப் போகிறான் என்ற வருத்தம் அவர்களுக்கு ஏற்பட்டது. ஒருநாள் அவனிடம் அவர்கள் கேட்டே விட்டனர். “நீ செய்வது முட்டாள்தனமாக இல்லையா?” என்று. அதற்கு அவனின் பதில்தான் நம்பிக்கையின் உச்சம். 50 வருடங்கள் மழை பெய்யாது என்பது எனக்கும் தெரியும். உங்களைப் போலவே நானும் உழுதிடாமல் இருந்தால் 50 வருடங்கள் கழித்து உழுவது எப்படி என்றே எனக்கு மறந்து போயிருக்கும். அதனால்தான் தினமும் ஒருமுறை உழுது கொண்டு இருக்கிறேன்” என்றான்.
இது வானத்தில் இருந்த மழைக் கடவுளான வருணபகவானுக்குக் கேட்டது. அவரும் யோசிக்க ஆரம்பித்தார், ”50 வருசம் சங்கு ஊதாமல் இருந்தால் எப்படி ஊதுவது என்று மறந்து போயிருமே” என்று நினைத்து சங்கை எடுத்து ஊதிப் பார்க்க ஆரம்பித்தார். உடனே இடி இடித்தது.மழை பெய்ய ஆரம்பித்தது இறுதியாக அந்த உழவனின் நம்பிக்கை ஜெயித்து விட்டது. ஆம், நாம் நம்பிக்கையோடு வாழும்போது கடவுளிடமிருந்து பெற்றுக்கொள்ளும் நன்மைகள் ஏராளம்.
இறைவாக்கினர் எரேமியாப் புத்தகம் 39:18 ல் வாசிக்கின்றோம். அங்கே ஆண்டவர் எரேமியாவைப் பார்த்துக்கூறுவார், “நான் உறுதியாக உன்னைக் காப்பாற்றுவேன்; நீ வாளால் மடிய மாட்டாய்; உன் உயிரே கொள்ளைப்பொருளாய் அமையும். ஏனெனில், நீ என்னில் நம்பிக்கை வைத்துள்ளாய்” என்று. ஆகவே, இயேசுவின் வழியில் நடக்கும் நாம் ஒவ்வொருவும் அவர்மீது முழுமையான நம்பிக்கை கொண்டு வாழ்வோம், அதைபோன்று அவர் எப்படி யூதர் என்று புறவினத்தார் என்று பிரித்துப் பார்க்காமல் பரந்த பார்வைகொண்டு வாழ்ந்தாரோ, நாமும் அப்படி பரந்த பார்வை கொண்டு வாழ்வோம்.
உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய இரண்டாம் வாசகத்தில் பவுல் அடியார், தாம் புறவினத்தருக்கு பணிசெய்வதைக் குறித்து பெருமையாகச் சொல்கிறார். அவரைப் போன்று, நம் ஆண்டவர் இயேசுவைப் போன்று இறைவன் எல்லாருக்கும் பொதுவானவர், அவர் நம்முடைய அம்மையப்பன், நாம் அனைவரும் சகோதர சகோதரிகள் என்ற உணர்வோடு வாழ்வோம். நம்பிக்கையில் நிலைத்திருந்து இயேசுவுக்கு சான்று பகர்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

எல்லைகளின் தடைகளை தகர்த்திடுதல்

மறையுரை  வழங்குபவர் Fr. Freddy is a Redemptorist
priest belonging to the Province of Bangalore. Currently he is attached to the
Archdiocese of St. Louis, Missouri state, U.S.A.

முன்னுரை:
கிழக்கு ஜெர்மனியின் கம்யூனிச அரசு 1961 ஆம் ஆண்டு ஆகஸ்டு 13 ஆம் நாளன்று, பெர்லின் நகரத்தின் கிழக்கு - மேற்கு பகுதிகளுக்கிடையே முள்கம்பி வெளியுடன் கூடிய பலமான கான்கிரீட் சுவரை கட்டி எழுப்பியது. மேற்கு ஜெர்மனியிலிருந்த பாசிச கொள்கையாளர்கள் கிழக்கு ஜெர்மனியினுள் நுழைந்து, அந்நாட்டின் பொதுவுடைமை அரசுநிலையை சீர்குலைத்துவிடாமல் காப்பதே இத்தகைய தடுப்புச் சுவர் கட்டியதன் நோக்கமாகும். ஆனால், கிழக்கு ஜெர்மனி அரசின் கொள்கைகளை புறக்கணித்து, மேற்கு ஜெர்மனிக்கு பெருமளவில் மக்கள் நாடு கடந்து செல்வதை தடுப்பதற்கே இந்த நெடுஞசுவர் முக்கியமாகப் பயன்பட்டது. பன்னிரண்டு அடி உயரமும், நான்கு அடி அகலமும் கொண்ட இந்த வலுவான கான்கிரீட் சுவரின் மேற்பகுதியில் பெரிய குழாய்கள் பொறுத்தப்பட்டிருந்ததால், ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு ஏறி குதிப்பது இயலாத காரியமாக இருந்தது. அந்தச் சுவரின் கிழக்கு ஜெர்மனி நாட்டு பகுதியையொட்டி நீளமான "அழிவுத் தடம்" (Death Strip) அமைக்கப்பட்டிருந்தது. இந்த அழிவுத் தடத்தில், காலடிச்சுவடுகளை தெளிவாக காட்டுகின்ற மென்மையான மணற்பரப்பும், பேரொளி பாய்ச்சும் விளக்குகளும், கொடூரமான வேட்டைநாய்களும், தானியங்கி இயந்திர துப்பாக்கிகளும், தயாராக இருந்தன. மேலும், தப்பி ஓடுபவர்களை கண்டதும் சுடுவதற்கான கட்டளையோடு, ராணுவ வீரர்கள் எந்நேரமும் அந்தப் பகுதியில் காவலிருந்தர்ர்கள்.



கிழக்கு ஐரோப்பிய நாடுகளை சூழ்ந்திருந்த மறைமுகமான "பனிப்போர்" மெல்ல விலக ஆரம்பித்திருந்த காலகட்டத்தில், 1989 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 9 ஆம் நாளன்று, மேற்கு பகுதிகளுடனான உறவுகளில் மாற்றங்களை அறிவித்த கிழக்கு பெர்லின் நகர கம்யூனிஸ்ட் கட்சியின் செய்தி தொடர்பாளர், "அன்றைய தினம் நள்ளிரவு முதல் கிழக்கு ஜெர்மனியின் குடிமக்கள் நாட்டின் எல்லையை கடந்து செல்வதற்கு தடையேதுமில்லை" என்று கூறினார். இதனைத் தொடர்ந்து, கிழக்கு மற்றும் மேற்கு பெர்லின் மக்கள், கைகளில் மதுபான வகைகளை ஏந்தியவண்ணம், "வாயிற்கதவுகளைத் திறவுங்கள்" (Tur auf..!) என்று கூவியபடி சுவரின் இருமருங்கிலும் திரளாக ஒன்றுகூடினார்கள். அன்று நள்ளிரவில், சோதனைமையங்களின் அருகே வெள்ளமென மக்கள் திரண்டு நின்றார்கள்.



 தங்களை பிரித்துவைத்தத் தடைகளைத் தகர்த்தெறிய மக்கள் தீர்மானித்தபோது, பெர்லின் நகரத்தின் பெரும்சுவர் தரைமட்டமானது. தங்களை பிளவுபடுத்தி வைத்திருந்த எல்லையின் தடைகளை மக்கள் உண்மையிலேயே உடைத்தெறிந்தார்கள்.



இறைவார்த்தை:

இன்றைய நற்செய்தியில் காணப்படுகின்ற "எல்லைகளின் தடைகளைத் தகர்த்திடுதல்" என்னும் கருத்தைப் பற்றிய சில சிந்தனைகளை இன்று உங்களுடன் பகிர்ந்துகொள்ள விழைகிறேன். தடைகளை தகர்த்திட்ட இருவரை - அதாவது இயேசு மற்றும் கானானியப் பெண் ஆகிய இரண்டு நபர்களை - நாம் இங்கே காண்கிறோம். நற்செய்தி வாசகம் காட்டுகின்ற சம்பவம் தீர், சீதோன் பகுதிகளிலே நிகழ்கிறது. அரேபிய மொழியில் "மீன்பிடித்தல்" என்னும் பொருள்படும் "ஸாயிதா"  (Saida) என்ற பெயரால் இந்நாளில் அழைக்கப்படுகின்ற சீதோன், அந்த பகுதியில் குடியேறி வாழ்ந்துவந்த கானானின் தலைமகனான சீதோனின் (தொடக்க நூல் 10:15) வழிமரபினரால் அந்தப் பெயரைப் பெற்றது. சீதோனுக்கு தெற்கே இருபது மைல் தொலைவில் அமைந்துள்ள “தீர்”, அரேபிய மொழியில் "சோர்" (Sour) என்று இப்போது வழங்கப்படுகிறது. இஸ்ரேல் நாட்டிற்கு வடக்கே ஐம்பது மைல் தூரத்தில்  லெபனான் நாட்டில் இன்றைக்கும் தீர், சீதோன் பகுதிகள் இருக்கின்றன.



  • இயேசு தடைகளை உடைக்கிறார்:

  1. நாடுகளின் எல்லைகளை இயேசு உண்மையாகவே உடைத்தெறிந்தார்: கடவுள் நம்பிக்கையற்று, எல்லாவகையான தீமைகளும் கொண்டு குற்றமிழைக்கும் இனமாக கானானியர்களை இணைச்சட்ட நூலும், அதனையடுத்து வந்த இலக்கியங்களும் சித்தரிக்கின்றன. முற்றிலும் அழிக்கப்படவேண்டிய நாட்டின் மக்களாக கானானியர்கள் பார்க்கப்பட்டார்கள். கானானியர்களோடு கலந்து உறவாடுதல் யூதர்களுடைய பொதுவான வழக்கமல்ல. இந்த பகுதியில் வாழ்ந்த மக்களின் தீய நடத்தையும், சிலைவழிபாடும் இறைவாக்கினரால் கண்டிக்கப்பட்டது. பழைய ஏற்பாட்டு இறைவாக்கினர்கள் இந்த நகரின் இறுதி அழிவை முன்னறிவித்திருந்தார்கள். யூதர்களையும். அவர்களுடைய அண்டைநாட்டுக்காரர்களையும் பிரித்து வைத்திருந்த புவியியல் எல்லைகளை இயேசு உடைத்துவிட்டார்.



  1. "தனிப்பட்டதன்மை" என்ற மனப்பாங்கினை இயேசு உடைத்தெறிகிறார்: உதவி வேண்டுமென்று அந்தப் பெண் கேட்டபோது, "இஸ்ரயேல் குலத்தாருள் காணாமற்போன ஆடுகளாய் இருப்போரிடமே நான் அனுப்பப்பட்டேன்" என்று இயேசு பதிலிறுக்கிறார். "மெசியா இஸ்ராயேலின் தனிப்பட்ட சொத்து" என்று யூதர்கள் நினைத்தார்கள். மேலும் இயேசு, "பிள்ளைகளுக்குரிய உணவை எடுத்து நாய்க் குட்டிகளுக்குப் போடுவது முறையல்ல" என்று கூறுகிறார். உணவு என்பது இந்த இடத்தில் மீட்பைக் குறிக்கின்றது. மீட்பு என்பது தங்களுக்கு மட்டுமே சொந்தமான தனிப்பட்ட ஒன்று என்று யூதர்கள் நம்பினார்கள். இறுதியாக, அந்தப் பெண் வேண்டியதை இயேசு நிறைவேற்றியபோது, "தனிப்பட்டத்தன்மை" என்ற யூதர்களின் மனப்பாங்கின் எல்லைகளை உடைத்தெறிந்து, மெசியாவும், மீட்பும் அனைவருக்குமே உரியன என்ற கருத்தை நிலைநிறுத்துகிறார்.



  • எல்லைகளின் தடைகளையும் கானானியப் பெண் உடைக்கிறார்:

  1. சமூக எல்லைகளை இந்தப் பெண் உடைத்தெறிகிறார்: இயேசுவும் அவருடைய குழுவினர்  அனைவரும் யூதர்களாகவும், ஆண்களாகவும் இருந்தனர். அத்தகைய ஒரு கூட்டத்தினரை நெருங்கிச் செல்வதற்கு, அயல்நாட்டவரான இந்த கானானியப் பெண் மிகுந்த துணிவுடன் செயல்பட்டார். யூதர்களுக்கும், கானானியர்களுக்கும் இடையில் இருந்த முரண்பாடுகள் மிகவும் தொன்மையானவை. பகைவரின் அரணை ஊடுருவிச் செல்லுகின்ற வகையில் ஆபத்தான ஒரு வழியை இந்தப் பெண் தேர்ந்தெடுத்தார். இயேசுவிடம் உதவி பெறுவதற்காக, தனக்குப் பழக்கமான பாதுகாப்புச் சூழலை விடுத்து, மன அழுத்தம் தரக்கூடிய ஒரு செயலை செய்திட துணிவுகொண்டார். எந்தவொரு ஆண் துணையுமின்றி, அவர் இயேசுவிடம் வந்தது, அக்கால வழக்கத்திற்குப் புறம்பான ஒன்று. இயேசுவை சந்திப்பதற்காக எல்லாவிதமான சமூகத் தடைகளையும் இந்தப் பெண் உடைத்துவிட்டார்.



  1. மௌனம் என்னும் தடையை இந்தப் பெண் உடைத்தெறிகிறார்: தான் அன்பு செய்கின்ற தன் மகளின் உடல்நிலை குணமடைவதற்காக, அவளுடைய துயரத்தை தன் துயரமாக ஏற்றுக்கொண்ட இந்த கானானியப் பெண், தன்னுடைய கோரிக்கை நிராகரிக்கப்பட்டால் அதனையும் ஏற்றுக்கொள்ளுகின்ற மனநிலையோடு இருக்கிறார். தான் அங்கு இருப்பதையும், தனது வேண்டுகோளையும் இயேசு கண்டுகொள்ளாமல் உதாசீனப்படுத்தியது, அவளுக்கு பெருத்த அவமானம் தான். இயேசுவிடமிருந்த மௌனம் என்னும் தடையை இந்தப் பெண் உடைத்துவிட்டார்.



  1. அவமானத்தின் தடைகளை இந்தப் பெண் உடைத்தெறிகிறார்: இந்தப் பெண்ணை அனுப்பிவிடும்படி சீடர்கள் இயேசுவிடம் சொல்லுகிறார்கள். அவளுடைய வேண்டுகோளுக்கு இது ஒரு பெரிய அவமானம். கடவுளின் கட்டளைகளை பின்பற்றாததாலும், கடவுளின் உடன்படிக்கையின் வரம்பிற்குள் அவர்கள் இல்லாததாலும், புறவினத்தாரை யூதர்கள் செருக்குடனும், மரியாதையின்றியும் பாவித்து, "அழுக்கடைந்த நாய்"களாக அவர்களை கையாண்டார்கள். கிரேக்க சமூகத்தில், "நாய்" ஒரு அவமரியாதையின் சின்னமாகவும், வெட்கமற்ற, துடுக்கான பெண்ணைக் குறிப்பதாகவும் கருதப்பட்டது. சொல்வழியே வரக்கூடிய இதுபோன்றத் தடைகளையும்  இந்தப் பெண் உடைத்துவிட்டார்.



  1. தனது நம்பிக்கையின் தடைகளை இந்தப் பெண் உடைத்தெறிகிறார்: பல கடவுளர்களை வழிபடுகின்ற  மதத்தை இந்தப் பெண் பின்பற்றி வந்தார். இறந்துவிட்ட குடும்பத்தினரையும் கடவுள்களாக வணங்குவது இவருடைய சமூக மரபு. பாகால், யேல் மற்றும் அஷுரா ஆகியவை இவருடைய முக்கிய தெய்வங்கள். இதுவே இவருடைய அடிப்படையான நம்பிக்கை. ஆனால், இன்று இவர் இயேசுவைப் பார்த்து, "ஐயா, தாவிதின் மகனே, எனக்கு இரங்கும்" என்று கூறுகிறார். இரண்டாம் முறையாக இயேசுவின் முன் வந்து பணிந்து, "ஐயா, எனக்கு உதவியருளும்" என்றார். மூன்றாம் முறையாக, "ஐயா, ஆனாலும் தங்கள் உரிமையாளரின் மேசையிலிருந்து விழும் சிறு துண்டுகளை நாய்க்குட்டிகள் தின்னுமே" என்று சொல்லுகிறார். மூன்று தடவையும் இயேசுவை மெசியாவாக, ஆண்டவராக இந்தப் பெண் ஏற்றுக்கொள்ளுகிறார். இயேசுவிடமிருந்து தன்னைப் பிரித்து வைத்த தன்னுடைய மதம் சார்ந்த நம்பிக்கை என்னும் தடைகளையும் இந்தப் பெண் உடைத்துவிட்டார்.  

யூதர்களை விட மேலான நம்பிக்கையை வெளிப்படுத்திய ஒரு பெண்ணின் வேண்டுகோளை நிறைவேற்றுவதற்காக, எல்லாத் தடைகளையும் தகர்த்துவிட்ட கடவுளைக் குறித்து இன்றைய நற்செய்தி நிகழ்வு எடுத்துரைக்கிறது. தனது மெசியாவாக, மீட்பராக ஏற்றுக்கொண்ட இயேசுவிடம் சென்றடைவதற்காக எல்லாத் தடைகளையும் தகர்த்துவிட்ட ஒரு பெண்ணைப் பற்றியதே இந்த சம்பவம்.
  
பயன்பாடு:

நமக்கு நாமே கட்டிவைத்துள்ள எல்லைகளின் தடைகளை இன்று நாம் எண்ணிப் பார்ப்போம்.

  • தனிப்பட்டத்தன்மையின் அடிப்படையில், மற்றவர்களை குறைத்து மதிப்பிடுகின்ற பற்பல  தடைகளை நாம் உண்டாக்கி வைத்துள்ளோம்.



  • நமது அயலாருக்கு எதிராக தடைகளை ஏற்படுத்தியுள்ளோம். முன்னர் எப்போதும் இல்லாத வகையில், நமது அயலாரைக் கண்டு நாம் அச்சப்படுகிறோம். விண்வெளியில் நம்மால் பயணம் செய்யமுடியும். ஆனால், நமது அயலாருக்கு அருகாக நம்மால் நடந்து செல்ல இயலாது.



  • மதங்களின் அடிப்படையில் தடைகளை ஏற்படுத்தியிருக்கிறோம். நம்முடைய மதத்தைச் சாராத எவரும் நம்மைவிட தாழ்ந்தவர் என்றும், ஒரு மேம்பட்ட கடவுள் நம்பிக்கையையும், பண்பாட்டையும் அவர் கற்றுக் கொள்வது அவசியம் என்றும் நாம் எண்ணுகிறோம்.



  • அறிவியல், தர்க்கவியல், சுற்றுசூழல், பொது அறிவு - இவற்றின் அடிப்படையில் தடைகளை கட்டியெழுப்பியுள்ள நாம், அறியாமை, அரசியல், முன்னேற்றம், மற்றும் அரசியல் தலைவர்கள்  இவற்றிற்கெல்லாம் அழிவின் பலிபீடத்தில் அஞ்சலி செலுத்திக் கொண்டிருக்கிறோம்.



  • நமது தோல் நிறத்தின் அடிப்படையில் பல தடைகளை நாம் உண்டாக்கி வைத்திருக்கிறோம். அறிவாற்றல், உயரிய மதிப்பீடுகள், மரியாதை இவற்றையெல்லாம் தோலின் நிறத்திற்கு சமமாக்கி நாம் வைத்திருக்கிறோம். நிறத்தின் தரத்தை அறியாதார், கிறிஸ்துவையும் அறிவதில்லை என்பதை நாம் உணர தவறிவிடுகிறோம்.



  • பாலியல் நெறிகளின் அடிப்படையில் தடைகளை உண்டாக்கி, மக்களை "சபிக்கப்பட்டோர்" என்றும், "மீட்கப்பட்டோர்" என்றும் பாகுபடுத்தி வைத்துள்ளோம். மேலும், "நல்லவர் - கெட்டவர்", "புனிதமுடையோர் - புனிதமற்றவர்", "சமூக ரீதியாக ஏற்றுக்கொள்ளப்படுவோர் - ஏற்றுக்கொள்ளப்படாதோர்" - இவற்றின் அடிப்படையிலெல்லாம் மக்களுக்கு தடைகளை தயார் செய்துள்ளோம்.



"தடைகளைத் தகர்த்தெறிய நான் வந்துள்ளேன்" என்று இயேசு சொல்லுகிறார். "எல்லைகளின் தடைகளை ஏற்படுத்தவே நாங்கள் இருக்கிறோம்" என்று நாம் சொல்லுகிறோம்.



முடிவுரை:

மக்களை பிரித்தாளுகின்ற எல்லைகளின் தடைகளையெல்லாம், இயேசு ஒருவரால் மட்டுமே தகர்த்திட முடியும். இயேசுவோடு இணைந்து செயலாற்றுவதற்கு நமக்கு உதவிட வேண்டுமென்று இறைவனின் ஆவியிடம் மன்றாடுவோம்.