Tuesday 27 March 2018

புனித வெள்ளி

புனித வெள்ளி
எசா 52:13 - 53 :12; எபி 4:14-16; 5:7-9; யோவா 18:1-19:42





சிலுவை கற்றுக்கொடுக்கும் பாடம் என்ன?

மகிழ்ச்சியூட்டும் மறையுரை. குடந்தை ஆயர் அந்தோணிசாமி


சில ஆண்டுகளுக்குமுன் அமெரிக்காவிலுள்ள சிகாகோ நகரில் வாழ்ந்த மனிதர் ஒருவர் ஏதோ ஒன்றைத் தேடி எண்ணற்ற செப் வழிபாடுகளில் பங்குகொண்டார். வழிபாடு நடத்தியவர்களெல்லாம் மிக அருமையாக அறிவுரை வழங்கினார்கள். ஆனாலும் அவர் தேடியது அவருக்கக் கிடைக்கவில்லை! தான் தேடியது கிடைக்கவில்லையே என்ற கவலையில் படுத்தபடுக்கையானார். அவர் மரண வேளையிலிருந்தபோது அவருக்காகச் செபிக்க போதகர் ஒருவர் அவர் வீட்டுக்குச் சென்றார். அவரது படுக்கையின் பக்கத்தில் மண்டியிட்டு மன்றாடினார். அப்பொழுது அவருடைய கண்களிலிருந்து கண்ணீர்த்துளிகள் கீழே விழுந்தன. ஆண்டவரே இந்த அன்பு மகனை எடுத்துக்கொள்ளாதேயும் என உருக்கமாக செபித்தார். அதைப் பார்த்த படுக்கையிலே படுத்திருந்த மனிதர், இத்தனை ஆண்டுகளாக, நான் எதைத் தேடினேனோ அது இன்று எனக்குக் கிடைத்துவிட்டது. மற்ற போதகர்களெல்லாம் அவர்கள் விரும்பியதை எனக்குக் கொடுத்தார்கள். ஆனால் இவரோ நான் விரும்பியதை எனக்குக் கொடுத்திருக்கின்றார். என்னை அன்பு செய்யும் ஒருவரைத் தேடினேன். இனி எனக்குக் கவலையில்லை எனச் சொல்லி எழுந்து அமர்ந்தார்; அவரும் மாபெரும் போதகரானார்.

இதோ நமக்காக கண்ணீரைச் சிந்தி, நமக்காகத் தம் உயிரைத் தந்து நம்மீது அளவில்லா அன்பைப் பொழிந்திருக்கும் இயேசுவை ஒருமுறை உற்றுப்பார்ப்போம். மனம் திரும்ப விரும்பாத எருசலேமைப் பார்த்து அழுதவர் இவர்! (லூக் 19:41-44). இலாசரின் இறப்பைக் கண்டு அழுதவர் இவர்! (யோவா 11:35). நமது வேண்டுதல்கள் கேட்கப்படவேண்டும் என்பதற்காக கண்ணீர் சிந்தி கதறி மன்றாடியவர் இவர்! (எபி 5:7).

நமது ஆண்டவராகிய இயேசு நம்மீது அவர் கொண்டிருக்கும் ஆழமான அன்பை வெளிப்படுத்த கண்ணீரை மட்டுமல்ல, தமது உயிரையே நமக்குக் கொடுத்திருக்கின்றார் (யோவா 19:30).
எனக்காகக் கண்ணீர் சிந்தி, தம் உயிரையே கொடுத்த ஆண்டவர் இயேசு என்னோடு இருக்கும்போது எனக்கு எந்தக் குறையும் இருக்காது; அப்படியே
என் வாழ்க்கையில்,
முள் குறுக்கிட்டால் அதை அவர் மலராக மாற்றிடுவார்;
தேள் குறுக்கிட்டால் அதை அவர் தேனாக மாற்றிடுவார்;
சாவு குறுக்கிட்டால் அதை அவர் வாழ்வாக மாற்றிடுவார்
என நம்பி நமது வாழ்க்கைப் பயணத்தைத் தொடருவோம். தம் உயிரையே எனக்காகக் கொடுக்க முன்வந்திருக்கும் இயேசு. சாதாரண வரங்களை நான் கேட்கும்போது அவற்றை எனக்குக் கொடுக்காமலிருப்பாரோ? என நம்மையே நாம் கேட்டுக்கொள்வோம்.
மேலும் அறிவோம் :
ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை
வைத்திழக்கும் வன்க ணவர் (குறள் : 228).
பொருள் : வறியவர்க்கு வேண்டியவற்றைக் கொடுத்து அவர் மகிழ்வதைக் கண்டு அருளுடையவர் அடையும் இன்பம் பெரிதாகும். அத்தகைய இன்பத்தைப் பற்றித் தெரியாதவரே தாம் சேர்த்த பொருளை ஏழை எளியோருக்கு வழங்காது பிறர் கொண்டு போக இழக்கும் இரக்கம் அற்றவர் ஆவர்!




சிலுவையடிக்கு வரட்டும் - அருள்பணி லூர்துராஜ்

இரவாகட்டும் பகலாகட்டும் எப்பொழுதெல்லாம் என்னைச் சுற்றிலும் அமைதி தவழ்கிறதோ, நிம்மதி நிலவுகிறதோ, அப்பொழுதெல்லாம் எங்கிருந்தோ வரும் ஒரு சோகக்குரல் - துயரக் குரல் என்னை உலுக்குகிறது. முதன்முறையாகக் கேட்ட போது குரல் வந்த திசை நோக்கிச் சென்றேன். குரலுக்குரியவரைத் தேடினேன். அக்குரல் சிலுவையிலிருந்து வந்தது. குரலுக்குரியவர் பாடுகளின் எல்லையிலே வேதனையின் விளிம்பிலே மரச்சிலுவையில் தொங்கிக் கொண்டிருந்தார், மண் புழுவாய்த் துடித்துக் கொண்டிருந்தார். அருகிலே சென்று “இறக்கி விடுகிறேன்" என்று சொல்லி கால்களில் துளைத்திருந்த ஆணிகளைக் கழற்ற முயன்றேன். ஆனால் அவரோ விட்டு விடு. உன்னால் மட்டும் முடியாது. உலகில் உள்ள ஒவ்வொரு ஆணும் ஒவ்வொரு பெண்ணும் ஒவ்வொரு குழந்தையும் ஒன்று திரண்டு வந்தால் அன்றி, என்னைச் சிலுவையினின்று இறக்க முடியாது. என் வேதனையைக் குறைக்க முடியாது' என்றார். உடனே நான் “உலகம் முழுவதும் என்றைக்கு உம் சிலுவையடிக்கு வரப்போகிறது? உம் வேதனை தீரப் போகிறது? உலகம் கிடக்கட்டும். இதோ நான் இருக்கிறேன். என்னால் ஏதாவது செய்ய முடியும் என்றால் சொல்லும்” என்றேன். “அப்படியா?” அவர் சொன்னார் “முதலில் இந்த இடத்தை விட்டுப் போ. உலகெங்கும் போ. ஊர் ஊராகப் போ. உன்னைச் சந்திக்கும் ஒவ்வொருவரிடமும் சொல். உனக்காக ஒரு மனிதன் சிலுவையில் தொங்கிக் கொண்டிருக்கிறான் என்று".

எனது கற்பனை அன்று; ஓர் ஆங்கிலக் கவிஞன் காவியமாக்கிய கடவுளின் சோகக்கதை. கல்வாரி என்பது என்றோ ஒருநாள் நடந்து முடிந்த பழைய நிகழ்ச்சி அல்ல. இன்றும் ஒவ்வொரு மனித வாழ்விலும் நடந்து கொண்டிருக்கும் தெய்வத்தின் துயர நிகழ்ச்சி என்பதை அழகாகச் சித்தரிக்கும் அற்புதமான கவிதை,

உனக்காக, எனக்காக, ஒவ்வொரு மனிதனுக்காக அங்கே இயேசு சிலுவையில் தொங்கிக் கொண்டிருக்கிறார். வேதனையில் துடித்துக் கொண்டிருக்கிறார்.
ஏன் இந்த நிலை? வாய் திறந்து சொல்லும் நிலையில் அவர் இல்லை. அதோ இன்னும் துடித்துக் கொண்டிருக்கிறதே அந்த இதயத்தில் சாய்ந்து உற்றுக்கேள். அவரது இதயம் இப்படித் துடித்துக் கொண்டிருக்கும்... அன்பு, பாவம்... பாவம், அன்பு, அன்பு பாவம் என்று. ஆம் அனைத்துக்கும் காரணம் 1.பாவம் - அன்பு என்ற ஒன்று மட்டும் இல்லாதிருந்தால் என்றோ உலகை அழித்திருக்கக் கூடிய மனிதனின் பாவம். 2. அன்பு - பாவத்தால் உலகம் அழிவதைப் பார்த்துச் சகிக்காத கடவுளின் அன்பு.

ஆம், பாவம் கடவுளைப் பழிவாங்கிவிட்டது. அன்பு கடவுளைப் பலியாக்கிக் கொண்டது. தெய்வத்தைப் பொருத்தவரை அது அன்புப் பலி. மனிதனைப் பொருத்தவரை அது கடவுள் கொலை. பாவம் அன்புக்கு இழைத்த கொடுமை சிலுவை.

அதோ சிலுவையில் இருகைகள் விரித்த நிலையில் இயேசு இருப்பது ஏன் தெரியுமா? இத்தாலிக் கவிஞர் தாந்தேயின் பார்வையில் அன்புக்கும் பாவத்துக்குமிடையே நடந்த போராட்டத்தின் விளைவாம்!

ஆதியில் மனிதன் கடவுளோடு கைகோர்த்துத் திரிந்தானாம். பாவம் நுழைந்தது. அன்புறவு அறுந்தது. பிரிவு. பிளவு. பாவம் மலிய மலிய இடைவெளியும் விரிந்தது. கடவுளை விட்டு மனிதன் ஒடினான். ஓடினான். ஓடிக்கொண்டே இருந்தான். அவனைத் தடுத்து ஆட்கொள்ள கடவுள் துரத்தினார். துரத்தினார். துரத்திக் கொண்டே இருந்தார்.

மனிதனோ அழிவின் வாசலுக்கே சென்று விட்டான். நரகம் எங்கே இருக்கிறது? கல்வாரிக்குப் பின்னேயாம்! பாவப்படுகுழியில் புரண்டு நரகத்தில் விழப்போகும் மனிதனைத் தடுப்பதற்காகத் தன் சக்தியை எல்லாம் - அன்புதானே அவரது சக்தி - ஒன்று திரட்டி அவனுக்கு முன்னே ஓடிச்சென்று தன் இரு கைகளையும் விரித்தார்.

விரித்த அந்த அன்புக் கைகளைச் சிலுவையில் அறைந்துவிட்டு - ஆணி கொண்டு பிணைத்துவிட்டுக் கீழே குனிந்து தன் இச்சைப்படி சென்றான் மனிதன்.

கடவுள் கைகளை விரித்தது மனிதன் தன் பாவத்தால் அவரைச் சிலுவையில் அறைந்து கொல்வதற்காகவா? அழிவை நோக்கிச் செல்லும் மனிதனைத் தடுத்து ஆட்கொள்வதற்காகவன்றோ!

கடவுளின் விலை என்ன? 30 வெள்ளிக் காசுகள் என்கிறான் மனிதன். மனிதனின் விலை என்ன? என் குருதி, என் உயிர் என்கிறார் இறைவன்.
இரு ஒருபுறம் இருக்கட்டும். இன்று இயேசுவைச் சிலுவையில் இருந்து இறக்க வேண்டுமா? “ஒவ்வொரு மனிதனும் கல்வாரியின் உச்சிக்கு வந்தால் ஒழிய...” ஆண்டவர் அழைக்கிறார்.

வாருங்கள் சிலுவையடி நோக்கி மலை ஏறுவோம். ஆனால் யாரைப்போல? பரிசேயர், படைவீரர், பொதுமக்கள் என்று எத்தனையோ பேர் அங்கே சென்றார்கள். ஆறுதலாக நின்றவர்கள் மூன்று பேர் மட்டுமே. களங்கமின்மைக்குச் சின்னமான அன்னை மரியா. அர்ப்பணத்துக்கு அடையாளமான திருத்தூதர் யோவான். தவறான வாழ்க்கைக்காக மனத்துயர் கொண்ட மகதலா மரியா. இந்த மூன்று பேரில் ஒருவராக மாறாதவரை, சிலுவையடிக்குச் செல்ல எவருக்கும் உரிமையில்லை ; தகுதியும் இல்லை !

நாம் அத்தனை பேரும் அன்னை மரியா போல மாசற்றவர்கள் அல்லர்; யோவான் போல முழுநேர இறையாட்சி ஊழியர்கள் அல்லர்; நம் சார்பாக, நம் பதிலாள் போல் நிற்பவர் மகதலா மரியா, பாவியாக வாழ்ந்து இயேசுவின் கனிந்த பார்வையில் மனமுருகி மனம் மாறியவர்.
மலை ஏறுவது கடினமாயிற்றே, பழக்கமில்லையே என்ற தயக்கமா? மலையேறுவது கடினம் தான். பாவத்தை நினைப்பது, வருந்துவது, திருந்துவது, அறிக்கையிடுவது அனைத்துமே கடினம்தான். ஆனால் எந்தப் பாவத்துக்காக மன்னிப்புப் பெறுவதும், விட்டுவிலக உறுதிபூணுவதும் கடினமாக இருக்கிறதோ, அந்தப் பாவத்துக்காக - அதே பாவத்துக்காக - அதோ அங்கே சிலுவையில் தொங்கிக் கொண்டிருப்பது இன்னும் அதிகக் கடினமாக இருக்கிறது!




மறையுரை மொட்டுக்கள்-அருள்பணி Y.இருதயராஜ்

இயேசு கிறிஸ்து மூன்று ஆண்டுகள் பல்வேறு இடங்களில் போதித்தார். வீட்டிலே போதித்தார்; வீதியிலே போதித்தார்; மலையிலிருந்து போதித்தார்: பாலைநிலத்தில் போதித்தார்; ஆலயத்தில் போதித்தார். ஆனால், இறுதியாக அவர் சிலுவையிலிருந்து போதித்தலை ஈடு இணையற்ற போதனை. சிலுவையில் தொங்கிய அவர் வாயிலிருந்து உதிர்ந்த ஏழு முத்துக்களைப் பெரிய வெள்ளியாகிய இன்று கவனமுடன் கேட்போம்: ஆழ்ந்து சிந்திப்போம், செயல்வடிவம் கொடுப்போம்.

1. முதல் முத்து "தந்தையே, இவர்களை மன்னியும்; ஏனெனில் தாங்கள் செய்வது என்னவென்று இவர்களுக்குத் தெரியவில்லை" (லூக் 23:34).

தம்மைச் சிலுவையில் அறைந்த கொலைபாதகர்களுக்காகத் தந்தையிடம் மன்னிப்புக் கேட்கின்றார். நமக்குத் தீமை செய்தவர்களைச் சபிக்கின்றோம்; பழிக்குப் பழிவாங்கத் துடிக்கின்றோம் ஆனால் இயேசுவோ தீமை செய்கிறவர்களுக்காகப் பரம தந்தையிடம் பரிந்து பேசுகிறார். இயேசுவைப் பின்பற்றி நம் பகைவர்களை மன்னித்து, அவர்கள் புரிந்த குற்றங்களை மறந்து, அவர்களுக்கு நன்மை செய்வோம். பிறர் குற்றங்களை மனத்திலே நீண்டகாலம் வைத்திருந்தால், நமது மனம் புண்ணாகிச் சீழ்வடியும். நாம் குணமடைய பிறருடைய பிழைகளை மன்னிப்பது அவசியமாகும், "உங்கள் பகைவரிடம் அன்பு கூருங்கள்; உங்களை வெறுப்போருக்கு நன்மை செய்யுங்கள். உங்களைச் சபிப்போருக்கு ஆசி கூறுங்கள்” (லூக் 6:27), "இன்னா செய்தாரை ஒறுத்தல், அவர் நாண நன்னயம் செய்துவிடல்,”

2. இரண்டாம் முத்து "நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர் என உறுதியாக உமக்குச் சொல்கிறேன்” (லூக் 23:43).

இயேசுவோடு சிலுவையில் அறையப்பட்ட இருகள்வர்களில் ஒருவர் இயேசுவிடம், "இயேசுவே, நீர் ஆட்சியுரிமை பெற்று வரும்போது என்னை நினைவிற்கொள்ளும்" என்று மன்றாடினான். இயேசுவின் அரசு ஒருநாள் நிறைவாக வரும் என்று அவன் நம்பினான். இயேசு அவனிடம், "நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர் என உறுதியாக உமக்குச் சொல்கிறேன்" என்றார்.
வாழ்நாள் முழுவதும் கொலையும் களவும் செய்த கள்வனுக்கு இயேசு பேரின்ப வீட்டை வாக்களிக்கிறார். இவ்வாறு அவனுக்கு நம்பிக்கை அளித்து, அவன் மூலமாக நமக்கும் நம்பிக்கை அளிக்கிறார்,
ஒருவர் தமது வாழ்க்கையில் எந்தக் கட்டத்திலும் மனம் மாறலாம் எனக்கு வயதாகிவிட்டது: நான் பாவப் பழக்கத்திற்கு அடிமையாகிவிட்டேன், இனி என்னைத் திருத்திக்கொள்ள முடியாது, எனது வாழ்ககை அஸ்தமாகிவிட்டது; எனக்கு இனி விடியல் இல்லை என்று அவநம்பிக்கை அடையக்கூடாது. இயேசுவிடம் சென்று, இதயம் திறந்து பேசுவோம். அவர் நிச்சயமாக நமது குணத்தை மாற்றி, வாழ்வை மாற்றுவார். நமக்குப் புதுப் பொலிவும் வலிவும் கிடைக்கும். "நம்பிக்கை வேண்டும் நம் வாழ்வில். இலட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில்,"

3. மூன்றாம் முத்து 'அம்மா, இவரே உம் மகன்; இவரே உம் தாய்" (யோவா 19:26)

இயேசு தமது இறுதிக்களி இரத்தம்வரை சிந்தி எல்லாவற்றையும் தியாகம் செய்துவிட்டார். அவருடைய ஆடைகளைப் படைவீரர்கள் தங்களுக்குள் பகிர்ந்து கொண்டனர். எஞ்சி இருந்தது சிலுவை அருகில் நின்று கொண்டிருந்த அவரது தாய் மட்டுமே. அத்தாயையும் "இதே உம் தாய்" என்று கூறி யோவாளிடம் ஒப்படைத்து, அதன் மூலம் அத்தாயை உலக மக்கள் அனைவாக்கும் தாயாகத் தாரைவார்த்துக் கொடுத்துவிட்டார். யோவான் மரியாவை ஏற்றக்கொண்டதுபோல, நாமும் அவரை நம் தாயாக ஏற்றுக்கொள்ள வேண்டும். இல்லையெனில், இயேசுவின் உயிலை, இறுதி விருப்பத்தை நாம் ஏற்றக்கொள்ளாதவர்கள் ஆகிறோம். இயேசு தம்மையும் தமது தாயையும் நமக்களித்ததுபோல், நாமும் நமக்குள்ள அனைத்தையும் பிறர்க்கு அளிக்க முன்வர வேண்டும்.

4. நான்காம் முத்து “என் இறைவா, என் இறைவா, ஏன் என்னைக் கைவிட்டீர்?"

இயேசு சிலுவையில் அடைந்த கொடிய வேதனை, எல்லாராலும் தனிமைப்படுத்தப்பட்டது "எல்லாரும் என்னைவிட்டு ஓடிவிடுவீர்கள். இருப்பினும் நான் தனியாக இல்லை. என் தந்தை என்னோடு இருக்கிறார்” என்று ஆணித்தரமாகக் கூறிய இயேசு "என் இறைவா, என் இறைவா, ஏன் என்னைக் கைவிட்டீர்?" என்று எவ்வாறு கூறலாம்? இயேசு கூறிய இவ்வாக்கியம் திருப்பா 22-இன் தொடக்கம். இத்திருப்பாவில் கூறப்பட்டது அவரில் நிறைவேறியது. அவர் இத்திருப்பா முழுவதையும் சொல்லிச் செபித்திருப்பார். இத்திருப்பா அவநம்பிக்கையின் வெளிப்பாடு அல்ல, மாறாக நம்பிக்கையின் வெளிப்பாடு.
நம் வாழ்க்கையில் நாம் எல்லாராலும் ஏன் கடவுளாலும்கூட கைவிடப்பட்ட ஒரு கசப்பான உணர்வை அடையலாம், ஆனால் நாம்ஒருபோதும் அவநம்பிக்கை அடையலாகாது. "அடிப்பவரும் அவரே. அணைப்பவரும் அவரே, காயப்படுத்துகிறவரும் அவரே, காயத்தைக் குணப்படுத்துபவரும் அவரே" என்ற மன உறுதிப்பாடு தமக்கு வேண்டும்.

5. ஐந்தாம் முத்து "நான் தாகமாயிருக்கிறேன்" (யோவா 19:28)

"யாராவது தாகமாயிருந்தால் என்னிடம் வரட்டும், என்னில் நம்பிக்கை கொள்பவன் குடிக்கட்டும்.* மற்றவர்களின் தாகத்தைத் தனளிக்க வந்த இயேசு தமது தாகத்திற்குத் தண்ணீர் கேட்கிறார், அவரது தாகம் உடல் தாகம் என்பதைவிட, இதயத் தாகம், ஆன்மத் தாகமாகும். அனைவரையும் மீட்க வேண்டும் என்ற தாகம். அவருக்குப் கசப்பு கலந்தக் காடியைக் கொடுத்தார்கள், ஆனால் அவர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை, இயேசுவின் தாகத்தைத் தணிக்க வேண்டுமென்றால், தண்ணீர் இல்லாமல் தவிப்போர்க்குத் தண்ணீர் கொடுக்க வேண்டும். "தாள் தாகமாய் இருந்தேன், எனக்குக் குடிக்கக் கொடுத்தீர்கள்."

6. ஆறாம் முத்து "எல்லாம் நிறைவேறிற்று” (யோவா 19:30)

இயேசு எந்த நோக்கத்திற்காக இவ்வுலகத்திற்கு வந்தாரோ அந்த நோக்கம் நிறைவேறிவிட்டது. சிலுவைச் சாவின் வழியாக அவர் உலகை மீட்க வேண்டுமென்ற கடவுளுடைய திட்டத்தை நிறைவேற்றிய நிலையில் "எல்லாம் நிறைவேறிற்று" என்று மறைநூல் நிறைவேறும் வண்ணம் மனநிறைவுடன் கூறினார். அவருடைய பகைவர்கள் அவருடைய சாவுடன் அவர் கதை முடிந்துவிட்டது என்று அக்களித்தனர். ஆனால் இயேசுவோ தமது சாவால், *எல்லாம் நிறைவேறிவிட்டது, அதாவது, முழுமை பெற்றுவிட்டது" என்று பெருமிதத்துடன் கூறுகின்றார், கடவுள் நம்மிடம் ஒப்படைத்துள்ள கடமையைச் செய்து முடிக்கும்போது, நாமும், "எல்லாம் நிறைவேறியது” என்று மன நிறைவுடன் கூறமுடியும்.
மனிதரின் பார்வையில் இயேசுவின் இறப்பு ஒரு படுதோல்வி; ஆனால் கடவுளின் பார்வையில் அது மாபெரும் வெற்றி. அவ்வாறே, நமது வாழ்வும் மனிதரின் பார்வையில் ஒரு படுதோல்வியாகக் காட்சி அளிக்கலாம், ஆனால் கடவுளோடு இணைந்து நமது கடமையைச் செய்யும்போது, தோல்வியும் வெற்றியாக மாறும். பிறர்க்காக நாம் வாழும்போது, நமது சாவு முடிவில்லா வாழ்வாகிறது.

7. ஏழாவது முத்து "தந்தையே, உம் கையில் என் உயிரை ஒப்படைக்கிறேன்" (லூக் 23:46).

இயேசு உயிர் விட்டபோது கதிரவன் ஒளி கொடுக்க மறுத்துவிட்டது; புவியெங்கும் இருள் பரவியது: கற்பாறைகள் வெடித்தன; நிலம் நடுங்கியது. இயற்கையின் தலைவர் இறப்பதைக் கண்டு இயற்கையே அழுதது. இயேசுவின் சாவை ஒரு சிலர் வேடிக்கைப் பார்த்தனர்; ஒருசில பெண்கள் அழுதனர், ஒரு சிலர் மார்பில் அறைந்து கொண்டனர். ஆனால் இயேசுவோ, ஒரு குழந்தை தன் தாயின் மடியில் கண்மூடி அமைதியாய் உறங்குவதுபோல, கடவுளின் கரங்களில் தமது ஆவியை ஒப்படைத்து இறுதி மூச்சை விடுகிறார். நாமும் கடவுளின் அரவணைப்பில் உயிர் விடும் வரம் வேண்டுவோம்,
இயேசு உயிர் நீத்ததைக் கண்ட, சிலுவை அடியில் நின்ற நூற்றுவர் தலைவன், "உண்மையில் இவர் கடவுளின் மகன்" என்று அறிக்கையிட்டார், நாமும் அவருடன் சேர்ந்து விசுவாச அறிக்கையிடுவோம். இயேசுவின் சாவு கடவுளின் சாவு: இயேசுவின் சாவு மனிதரின் மீட்பு.






நமக்காகப் பலியான இயேசு

அருள்பணி மரிய அந்தோனிராஜ்

ஜப்பானில் உள்ள கடற்கரைக் கிராமம் அது. அந்தக் கிராமத்தில் நிலநடுக்கம், சுனாமி போன்ற இயற்கைப் பேரிடர்கள் எல்லாம் அடிக்கடி ஏற்படும். மக்களும் அவையெல்லாம் தங்களுடைய வாழ்வில் ஓர் அங்கம் என்பதுபோல் வாழப் பழகிக்கொண்டார்கள்.
இவற்றுக்கிடையில் ஒருநாள் அந்தக் கிராமத்தில் இருந்த மலை உச்சியில் நெல் பயிரிட்டு சாகுபடி செய்துவந்த பெரியவர் ஒருவர் கடல் நோக்கி தன்னுடைய கண்களை ஏறெடுத்துப் பார்த்தார். அப்போது அவர் கண்ட காட்சி அவரை ஒரு கணம் நிலைகுலைய வைத்தது. ஏனென்றால், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கடலில் அலைகள் கொந்தளித்துக் கொண்டு வந்தன. உடனே அந்தப் பெரியவர் ‘இச்செய்தியை மக்களுக்கு எப்படியாவது அறிவிக்கவேண்டும், இல்லையென்றால் கடல் தண்ணீர் ஊருக்குள் புகுந்து மக்கள் எல்லாரையும் கொன்றொழித்துவிடும்’ என்று யோசித்தவாறு, பரபரப்பானார். பின்னர் ஏதோ சிந்தனைவயப்பட்டவராய், ஒரு தீப்பந்தத்தைப் பொருத்தி, தனது வயலுக்குத் தீ வைத்தார். அவர் வைத்த தீயில் வயல் கொழுத்துவிட்டு எரிந்தது.
இதனைக் கீழேயிருந்து பார்த்த மக்கள், வாளியில் நீரை ஏந்திக்கொண்டு தீயை அணைப்பதற்காக மேலே ஓடிவந்தார்கள். எல்லாரும் மேலே ஓடி வருவதற்குள் வயற்காடு முழுவதும் எரிந்து சாம்பலாயிருந்தது. வந்தவர்கள் அனைவரும் அந்தப் பெரியவரிடம், “வயலில் எப்படி தீப்பற்றியது?” என்று கேட்டார்கள். அதற்கு அந்தப் பெரியவரோ, “நான்தான் தீ வைத்தேன்” என்றார். அவர் எதற்காகத் தீ வைத்தார் என்று சொல்வதற்குள் மக்கள் அனைவரும், “இந்த ஆள் சரியான லூசாக இருப்பாரோ” என்று திட்டத்தொடங்கினார்கள். அவர் அவர்களை அமைதிப் படுத்திவிட்டு தொடர்ந்து பேசினார், “நான் காரணமில்லாமல் என்னுடைய வயலைக் கொழுத்தவில்லை... தொலைவில் பாருங்கள். கடல் அலைகள் எப்படி கொந்தளித்துக் கொண்டு வருகிறன என்பதை. நான் உங்கள் அனைவரையும் இந்த ஆபத்திலிருந்து காப்பாற்ற நினைத்தேன். எனக்கு வேறு வழி தெரியவில்லை. அதனால்தான் நான் என்னுடைய வயலைக் கொழுத்தி, உங்களை இந்த மலை உச்சிக்குக் கொண்டு வந்தேன்”.
பெரியவர் இவ்வாறு பேசிக்கொண்டிருக்கும்போதே கொந்தளித்துக் கொண்டு வந்த கடல் அலைகள் ஊருக்குள் புகுந்து, வீடுகளையெல்லாம் தரைமட்டம் ஆக்கிவிட்டு, வந்த வேகத்தில் அப்படியே திரும்பிச் சென்றது. இதைப் பார்த்த மக்கள் அனைவரும், மிகப்பெரிய அழிவிலிருந்து தங்களைக் காப்பாற்றிய அந்த பெரியவருக்கு பெரிய நன்றிசொல்லிவிட்டு கீழே இறங்கிச் சென்றார்கள்.
ஊர் மக்களைக் காப்பாற்றும் பொருட்டு, தன்னுடைய வயலையே தீயிட்டுக் கொழுத்திய பெரியவரைப் போன்று, நம் ஆண்டவர் இயேசுவும் நாம் அனைவரும் வாழ்வு பெறும்பொருட்டு தன்னையே சிலுவையில் கையளித்தார். அந்த நிகழ்வினைத்தான் இன்று நாம் அனைவரும் ‘பெரிய வெள்ளியாக’ நினைவுகூர்ந்து பார்க்கின்றோம். ஆண்டில் எத்தனையோ வெள்ளிகள் வந்தாலும், ஆண்டவர் இயேசு மரித்த வெள்ளி போன்று வராது என்பதால்தான் இதனை பெரிய வெள்ளி என்று சிறப்பித்துக் கொண்டாடுகின்றோம்.
ஆண்டவராகிய கடவுள் இந்த உலகின் மேல்கொண்ட பேரன்பினால் மக்களை பாவத்திலிருந்தும் சாவின் பிடியிலும் மீட்க நினைத்தார். அதற்காக தன்னுடைய ஒரே மகன் இயேசு கிறிஸ்துவை இந்த உலகிற்கு அனுப்பினார். இயேசுவோ தன்னுடைய பாடுகளாலும் சிலுவைச் சாவினாலும் தந்தைக் கடவுளின் மீட்புத் திட்டம் நிறைவேற தன்னை முற்றிலும் கையளித்தார். ஆகவே, இயேசு பாடுகள் பட்டதும் கொடிய சிலுவைச் சிலுவைச் சாவை அனுபவித்ததும் நம்மீது கொண்ட அன்பினால்தான் என நாம் உறுதியாகச் சொல்லலாம். இதைத் தான் இறைவாக்கினர் எசாயா இன்றைய முதல் வாசகத்தில், “அவரோ நம் குற்றங்களுக்காகக் காயமடைந்தார்; நம் தீச்செயல்களுக்காக நொறுக்கப்பட்டார்; நமக்கு நிலைவாழ்வை அளிக்க அவர் தண்டிக்கப்பட்டார்” என்கின்றார்.
இயேசு நமக்காக பாடுகளையும் துன்பங்களையும் பட்டதுபோன்று, நாமும் ஒருவர் மற்றவருக்காக, இந்த மானுட விடியலுக்காக துன்பங்களைத் துணிவோடு ஏற்க என்பதைத்தான் இந்த நாள் நமக்கு எடுத்துக்கூறுகின்றது. நாம் பிறருக்காக, நாம் மானுட விடியலுக்காக துன்பங்களை ஏற்றுக்கொள்ள முன்வருகின்றோமா? அல்லது நாம் உண்டு, நம்முடைய வேலையுண்டு, குடும்பமுண்டு என்று இருக்கின்றோமா? என்பதை சிந்தித்துப் பார்க்கவேண்டும்.
வள்ளலார் ஒருமுறை குறிப்பிடுவர், “அடுத்தவரின் துன்பம் தீர்க்கத் துடிக்கும் அருட்கருணையே உண்மையான மனித நேயம்” என்று. நாம் இயேசு கிறிஸ்து போன்று மனிதநேய மிக்கவர்களாக வாழ, அவரைப் போன்று அடுத்துவரின் துன்பம் துடைக்க முயற்சி செய்வோம். இறைத்திருவுளம் நிறைவேற நம்மையே முற்றிலும் கையளிப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.



இதோ மனிதன்!

அருள்பணி  ஏசு கருணாநிதி


'இயேசு முள்முடியும் செந்நிற மேலுடையும் அணிந்தவராய் வெளியே வந்தார்.

பிலாத்து அவர்களிடம், 'இதோ! மனிதன்!' என்றான்.' (யோவான் 19:5)

இன்று நாம் வாசிக்கக் கேட்ட யோவான் நற்செய்தியாளர் எழுதிய பாடுகளின் வரலாற்றில் மையமாக இருப்பவை 'இதோ! மனிதன்' என்னும் இரண்டு வார்த்தைகள்தாம். கிரேக்கத்தில் 'இட்து ஹோ ஆன்த்ரபோஸ்' என இருக்கின்றது. 'மனிதன்' என்ற வார்த்தை தமிழில் 'ஆண்' என்று பாலினத்தை வேறுபடுத்துகிறது. ஆனால், கிரேக்கத்தில் இது பொதுவான பாலினம். ஆக, 'மனிதன்' என்ற இந்த வார்த்தை பெண் பாலினத்தையும் தன்னகத்தை வைத்துள்ளது என்பதை மனதில் கொள்வோம்.

யோவான் நற்செய்தி நூலில் யாரெல்லாம் இயேசுவைச் சந்திக்கிறார்களோ அவர்கள் எல்லாருமே இயேசுவைப் பற்றிய அறிக்கையையும் செய்கின்றனர். எடுத்துக்காட்டாக,

'இதோ, கடவுளின் ஆட்டுக்குட்டி!' என்கிறார் திருமுழுக்கு யோவான் (யோவா 1:36)

'ரபி, நீர் இறைமகன். நீரே இஸ்ரயேல் மக்களின் அரசர்' என்கிறார் நத்தனியேல் (1:49)

'ரபி, நீர் கடவுளிடமிருந்து வந்த போதகர்' என்கிறார் நிக்கதேம் (3:2)

'இவர் மெசியாவாக இருப்பாரோ' என்கிறார் சமாரியப் பெண் (4:29)

'ஆம் அண்டவரே, நீரே மெசியா! நீரே இறைமகன்! நீரே உலகிற்கு வரவிருந்தவர்' என்கிறார் மார்த்தா (11:27)

இந்த வரிசையில் பிலாத்து செய்யும் அறிக்கைதான், 'இதோ! மனிதன்!'

இந்த இரண்டு வார்த்தைகளை நாம் இன்றைய சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்.

பிலாத்துவின் இந்த அறிக்கை இயேசுவின் பாடுகள் வரலாற்றில் மிக முக்கிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஏனெனில், பிலாத்து இப்படி சொல்லி முடித்தவுடன், 'சிலுவையில் அறையும்! சிலுவையில் அறையும்!' என மக்கள் குரல் எழுப்புகின்றனர். அதன் பின் நிகழ்வுகள் வேகமாக ஓடுகின்றன.

பிலாத்துவின் இந்த வார்த்தைகளை நாம் இரண்டு விதங்களில் புரிந்துகொள்ளலாம்:

அ. படைப்பு மற்றும் மீட்பின் துவக்கம்

படைப்பின் தொடக்கத்தில் விண், மண், கதிரவன், நிலவு, கடல், தாவரம், உயிரினம் என உலகைப் படைத்து அணி செய்த கடவுள் இறுதியாக ஆதாமைப் படைத்து இவ்வுலகில் வைத்தபோது, 'இதோ! மனிதன்!' என்கிறார். படைப்பு அப்போதுதான் அழகும் நிறைவும் பெறுகிறது. இவ்வாறாக, படைப்பின் சிகரமாக, மாண்பாக மனிதன் படைக்கப்படுகின்றார். அங்கே கடவுள், 'இதோ! ஆண்!' என்று சொல்லவில்லை. மாறாக, 'இதோ! மனிதன்!' என்று ஆண், பெண், மூன்றாம் பாலினம் என அனைத்தையும் ஒற்றைச்சொல்லில் சொல்லிவிடுகின்றார்.

'இதோ! மனிதன்!' - இனி இவன் இந்த உலகைப் பார்த்துக்கொள்வான் என்று கடவுள் முன்மொழிகின்றார். மனிதன் படைக்கப்பட்டவுன் படைப்பு உயிர்கொண்டு இயங்க ஆரம்பிக்கிறது.

அன்று கடவுள் செய்ததுபோலவே, இன்று பிலாத்து மீட்பு என்ற இரண்டாம் படைப்பைத் தொடங்கி வைக்கின்றார். அங்கே முதல் ஆதாம் 'இதோ மனிதன்' என்று காட்டப்பட்டார். இங்கே இரண்டாம் ஆதாம் அப்படியே காட்டப்படுகின்றார். 'இதோ மனிதன்' என்று இயேசு முன்வைக்கப்பட்டவுடன் மீட்பின் இயக்கம் உயிர்பெறுகிறது.

ஆ. நிர்வாணம்-வெறுமை-தனிமை-கையறுநிலை

'இதோ மனிதன்' - என்னும் வார்த்தைகள் மிகவும் சோகமான வார்த்தைகள். இந்த வார்த்தை நம் எல்லாருக்கும் பொருந்தும். மருத்துவமனையில் சிகிச்சைக்காக யாரும் உடனில்லாமல் படுத்திருக்கும்போது, கையில் காசு இல்லாமல் வயிற்றில் பசியோடு ஓட்டலைக் கடந்து செல்லும்போது, நீண்டதூர பயணத்தை தனியாக மேற்கொள்ளும்போது, திருமணம் நடக்கும்போது, அருள்பணி மற்றும் துறவற வாழ்விற்குள் அடியெடித்து வைக்கும்போது என வாழ்வின் எல்லா நிகழ்வுகளிலும், இந்த உலகமே நம்மை பார்த்து 'இதோ மனிதன்' என்று சொல்வதாக நாம் உணர்ந்திருப்போம்.

'இதோ மனிதன்' என்பது பிலாத்து பயன்படுத்தும் உச்சகட்ட கேலிச்சொல். எப்படி? யோவா 18:28-40ல் இயேசுவை, 'இதோ அரசன்' என்று சொல்லி மக்கள் பிலாத்துவிடம் கையளிக்கிறார்கள். யோவா 19:7ல் இயேசுவை, 'இதோ இறைமகன்' என்று மக்கள் சொல்கிறார்கள். ஆக, மக்களின் இந்த இரண்டு சொற்களையும் கேலி செய்து, 'இதோ மனிதன்' என்கிறார் பிலாத்து.

'அரசன் என்றால் இயேசு தனக்காக போரிட்டிருக்கலாம்!' 'இறைமகன் என்றால் பிலாத்து உட்பட அங்கே கூடியிருக்கிற எல்லா மக்களையும் அழித்திருக்கலாம்!' என்ற நினைப்பில் பிலாத்து இயேசுவை வெறும் 'மனிதன்' என்று சொல்கின்றார். இது இயேசுவைச் சீண்டிப் பார்க்கும் வார்த்தையாகவும் இருக்கிறது. பாலைநிலத்தில் 'நீ இறைமகனாய் இருந்தால்' என அலகை இயேசுவைச் சோதிக்கின்றான். இங்கே பிலாத்து, 'நீ மனிதன்தான்! நீ வேறொன்றுமில்லை! ரொம்ப ஆடாத!' என்று இயேசுவிற்கு கோபமூட்டி அவரைச் சோதிக்க நினைக்கின்றார் பிலாத்து.

'இதோ மனிதன்' என்ற பிலாத்துவின் வார்த்தை ஒரே நேரத்தில் இயேசுவின் நிர்வாணம், வெறுமை, தனிமை, மற்றும் கையறுநிலையைக் காட்டுகின்றது. 'இதோ மனிதன் - இவரை என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளுங்கள்' என்று இயேசுவை மக்கள் கூட்டத்திடம் கையளிக்கின்றார் பிலாத்து. தான் மனுவுரு எடுத்த வலியைவிட இயேசுவுக்கு இந்த வலிதான் அதிகமாக இருந்திருக்கும் என நினைக்கிறேன்.

இவ்வாறாக, 'இதோ மனிதன்' என்ற சொல்லாடல் ஒரே நேரத்தில் நம் மாண்பையும், நம் கையறுநிலையையும், நம் அழகையும், நம் அழுகையையும், நம் மதிப்பையும், நம் அவமானத்தையும் சொல்லிவிடுகிறது.

இதுவே வாழ்வின் மறைபொருளும்கூட.

சிலுவையில் அறையப்பட்ட இயேசு உயிர்ப்பார் என்று வேகமாக நம்பிக்கை செய்தியைச் சொல்லிவிட வேண்டாம். ஏனெனில், சிலுவையில் அறையப்பட்ட இயேசுவும் நம் நம்பிக்கையே. உயிர்ப்பின் நம்பிக்கையைவிட சிலுவைதரும் நம்பிக்கை ஆழமானது.

'இதோ மனிதன்' என்று நாம் உணர்ந்த நேரங்களையும், நம்முன் நம் சக மனிதர்கள் உணரும் நிகழ்வுகளையும் எண்ணிப்பார்ப்போம். இந்த நிலையில் நாம் மௌனம் மட்டுமே காட்ட முடியும்.

அந்த மௌனத்தில் நாம் மெய்ஞ்ஞானம் பெறுவோம்.


No comments:

Post a Comment