Wednesday 30 January 2019

ஆண்டின் பொதுக் காலம் நான்காம் ஞாயிறு

ஆண்டின் பொதுக் காலம் நான்காம் ஞாயிறு 

இன்றைய நற்செய்தி வாசகங்கள்:-

ஏரேமியா1:4-5, 17-19
1 கொரிந்தியர் 12:12-31, 13:13
லூக்கா  4: 21-30




 


இன்றைய திருவழிபாட்டின் மையப்பொருளாக இன்றைய இரண்டாம் வாசகம் அமைகிறது (1 கொரி. 13). அன்பு இல்லாமல் வேறு திறமைகள் இருந்தால் அதனால் பயன் ஒன்றுமில்லை என்றும், அன்பின் பண்புகள் எப்படிப்பட்டவை என்றும் எடுத்துக்காட்டுகிறார் பவுலடியார்.

ஆப்ரகாம் லிங்கன் அமெரிக்க நாட்டின் ஜனாதிபதியாக இருந்தபோது அவரைத் திட்டியவர்களில் அவரது கட்சியைச் சார்ந்த ஸ்டாண்டன் என்பவரைப் போல, வேறு யாரும் இருக்க முடியாது. ஆப்ரகாம் லிங்கனை தந்திரகாரக் கோமாளி என்றும், ஆப்பிரிக்கா கொரில்லா போன்ற வார்த்தைகளாலும் வசை பாடினார் ஸ்டாண்டன். இதற்காக லிங்கன் இவரை ஒதுக்கவில்லை. மாறாக உயர்ந்த பதவியைத்தான் கொடுத்தார். ஆனால் சில ஆண்டுகளுக்குப் பின் லிங்கன் சுட்டுக் கொல்லப்பட்டபோது அவரது உடல் ஒரு அறையில் கிடத்தப்பட்டு கிடந்தது. அப்போது ஸ்டாண்டன் கண்ணீரோடு இதோ உலகம் இதுவரைக் காணாத மாபெரும் தலைவர் இங்கே கிடத்தப்பட்டு இருக்கிறார் என்றார்.

புனித பவுல், அன்பின் பரிமாணங்கள் பற்றிக் கூறும்போது, அன்பு பொறுமையுள்ளது அன்பு அழுக்காறு கொள்ளாது, பெருமை பேசாது, இறுமாப்பு அடையாது, இழிவானதைச் செய்யாது, தன்னலத்தை தேடாது சீற்றத்திற்கு இடந்தராது, வன்மம் வைக்காது; அநீதியைக் கண்டு மகிழ்வுறாது, உண்மையைக் கண்டு உளம் மகிழும், அனைத்தையும் தாங்கிக் கொள்ளும் (1 கொரி. 13:4-7) என்று கூறுகிறார். இந்த அன்பின் பரிமாணங்கள் அனைத்தும் ஆப்ரகாம் லிங்கனிடம் இருந்தது என்றால் மிகையாகாது.

அன்பைவிடச் சிறந்தது வேறு எதுவும் இல்லை . ஒருவருக்கு பல மொழி பேசும் திறமை இருக்கலாம். இறைவனுடைய திட்டத்தை முன்னறிவிக்கும் வரம் இருக்கலாம். ஆழ்ந்த விசுவாசம்
இருக்கலாம். ஆனால் இவையனைத்தும் அன்பின் அடிப்படையிலே அமையாவிட்டால், போட்டி, தற்புகழ்ச்சி, பெருமை இவற்றிற்கு இட்டுச் செல்லும் (1 கொரி. 13:1-3).

இன்றைய முதல் வாசகமும், நற்செய்தியும் இறைவாக்கினர் பணி எவ்வளவு துன்பங்கள் நிறைந்தது என்றும், ஓர் உண்மையான இறைவாக்கினருக்கு அளவற்ற பிறரன்பு தேவைப்படுகின்றது என்பதையும் உணர்த்துகின்றது. இறைவனின் அன்பை எடுத்துரைக்கின்றபோது அளவற்ற பொறுமை, சகிப்புத் தன்மை, மன்னிப்பு போன்ற அன்பின் பரிமாணங்கள் நம்மில் இடம் பெற வேண்டும் என்பதையே இவை நமக்குச் சுட்டிக்காட்டுகிறது.

அன்பை எப்படிக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதற்கு இயேசு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறார். எனவே, நான் உங்களிடம் அன்புகூர்ந்தது போல. நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்புகூர வேண்டுமென்பதே எனது கட்டளை (யோவா. 13:34) என்று உறுதியாக அவரால் கூற முடிந்தது.

இயேசு எல்லாரையும் அன்பு செய்து, பாவிகளைத் தேடிச் செல்லும் நல்ல ஆயனாக திகழ்கிறார். பாவிகளை மன்னிக்க தந்தையிடம் மன்றாடுகிறார். யூதாஸ் தன்னைக் காட்டிக் கொடுத்தபோதும், அவனின் தவறுகளைச் சுட்டிக்காட்டினாரே தவிர, எதிரியாகப் பாவிக்கவில்லை . தன் நண்பனுக்காக உயிரைக் கொடுப்பதைவிட மேலான அன்பு இல்லை (யோவா. 15:13) என்று கூறிய இயேசு அதைத் தன் வாழ்வாக நிகழ்த்தினார். நம் பாவங்களுக்காக உயிரையே கொடுத்தார். இயேசுவின் அன்பு மன்னிக்கும் அன்பு. தியாகத்தின் அன்பு. நிபந்தனையற்ற நிலையான அன்பு. ஆம்! அன்பர் இயேசுவின் அன்பைக் கடைப்பிடித்து அவரின் சாட்சிகளாகத் திகழ்வோம்.



 

நம்பிக்கையால் எல்லாம் முடியும்..


ஒரு சந்தேகம்! ஒரு சிலர் வாழ்க்கையிலே புதுமை நடக்கின்றது. ஒரு சிலர் வாழ்க்கையிலே புதுமை நடப்பதில்லை! இது ஏன்? இந்தக் கேள்விக்கு இன்றைய நற்செய்தியில் இயேசு பதில் கூறுகின்றார்.

ஒரு சிலர் ஆழமாக நம்புகின்றார்கள்! ஆகவே அவர்கள் வாழ்க்கையில் புதுமை நடக்கின்றது (நற்செய்தி).

நம்பிக்கை என்றால் என்ன? இதைச் சுட்டிக்காட்ட இதோ ஓர் அருமையான உதாரணம்.

ஜப்பான் நாடு. அங்கே ஒரு பெரிய இலட்சாதிபதி. அவரிடம் ஒரு தொழிற்சாலை! அந்தத் தொழிற்சாலைக்குத் தேவையான ஓர் இராட்ச்ச இயந்திரத்தை அமெரிக்காவிலிருந்து வரவழைத்திருந்தார். அந்த இயந்திரத்தில் திடீரென்று கோளாறு.

இயந்திரம் வேலை செய்யவில்லை. உடனே அந்த ஜப்பான் நாட்டு இலட்சாதிபதி அமெரிக்காவிற்குச் செய்தி அனுப்பினார். தகவலைப் பெற்ற உடனே இயந்திரத்தை விற்ற கம்பெனி ரிப்பேர் செய்ய ஆள் அனுப்பிவைத்தது. அனுப்பப்பட்ட ஆள் சில மணி நேரங்களில் ஜப்பானை அடைந்தார்.

அவர் ஓர் இளைஞர். வயது இருபதுதான் இருக்கும்; அவர் கையில் ஒரு பெட்டி இருந்தது.

ஜப்பான் நாட்டு இலட்சாதிபதி அந்த இளைஞரைப் பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தார். கைதேர்ந்த என்ஜீனியர் ஒருவரை அனுப்பாமல் சின்னப்பையன் ஒருவரை அனுப்பி வைத்திருக்கின்றார்களே என்று எண்ணி, அமெரிக்காவிலிருந்த, இயந்திரத்தை விற்ற கம்பெனியோடு தொடர்பு கொண்டு பேசினார். தொலைபேசியில் பதில் வந்தது. கம்பெனிக்காரர்கள் ஜப்பான் நாட்டு இலட்சாதிபதியிடம், அங்கே வந்திருப்பவர் பார்ப்பதற்கு சிறியவராக, இளைஞராக இருக்கலாம். ஆனால் அவரைவிட உங்கள் இயந்திரத்தைச் சரிபார்க்க வேறு ஒரு சிறந்த ஆள் இந்த அமெரிக்காவில் கிடையாது என்றனர்.

ஜப்பான் நாட்டுக்காரர், ஏன் இப்படிச் சொல்லுகின்றீர்கள்? என்றார். அந்தக் கேள்விக்கு பதில் வந்தது. இதுதான் பதில்: அங்கு வந்திருப்பவர்தான் அந்த இயந்திரத்தைக் கண்டுபிடித்தவர். அவரால் எப்படிப்பட்ட குறைகளையும் கண்டுபிடித்து தீர்த்துவைக்கமுடியும், நம்புங்கள்.

வந்த செய்தியை ஜப்பான் நாட்டுக்காரர் நம்பினார். ஓரிரு நிமிடங்களில் இயந்திரம் ஓடத்துவங்கியது.
நாம் ஒவ்வொருவரும் ஜப்பான் நாட்டுக்கார இலட்சாதிபதி போன்றவர்கள். அதைப் பழுது பார்க்க வந்த அந்த இளைஞரைப் போன்றவர் கடவுள்.

நம்மை உருவாக்கிய கடவுளால் (முதல் வாசகம்) நமக்குள் ஏற்படும் எந்தக் கோளாறையும் சரிசெய்ய முடியும் என்று சொல்லி அவரிடம் நம்மையே நாம் அர்ப்பணிப்பதற்குப் பெயர்தான் நம்பிக்கை.

நாம் வணக்கம் செலுத்தும் மரியாவைப் போன்று, என்னைப் படைத்த கடவுளால் ஆகாதது எதுவுமில்லை என்று நம்பி, இதோ ஆண்டவருடைய அடிமை; உமது வார்த்தையின்படியே ஆகட்டும் என்று சொல்வதற்குப் பெயர்தான் நம்பிக்கை.

எங்கே நம்பிக்கை இருக்கின்றதோ அங்கே உடல் நலம் இருக்கும். எங்கே நம்பிக்கை இருக்கின்றதோ அங்கே உள்ள அமைதி இருக்கும்.

கிறிஸ்து பிறப்புக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன் இஸ்ரயேல் நாட்டிலே எலியா என்னும் இறைவாக்கினர் காலத்திலே ஊரெல்லாம், நாடெல்லாம் பஞ்சம் (1 அர 17:8-16).

அப்பொழுது சாரிபாத்து என்னும் நகரிலிருந்த ஒரு கைம்பெண்ணின் வீட்டில் மட்டும் பஞ்சமில்லை ; எடுக்க எடுக்க எண்ணெயும் குறையவில்லை; அள்ள அள்ள மாவும் மறையவில்லை. காரணம் அந்தக் கைம்பெண் நம்பினார். இஸ்ரயேல் நாட்டிலே எத்தனையோ தொழுநோயாளிகள் இருந்தார்கள் (2 அர 5:1-14). ஆனால் நாமான் என்பவர் மட்டும்தான் குணமானார். காரணம் அந்த நாமான் மட்டும்தான் நம்பினார்.

எங்கே நம்பிக்கை இருக்கின்றதோ அங்கே புதுமை நடக்கும்.
பழைய ஏற்பாட்டில், செங்கடல் இரண்டாகப் பிரிந்தது நம்பிக்கையினால்!
வானத்திலிருந்து மன்னா பொழிந்தது நம்பிக்கையினால்! கற்பாறை இரண்டாகப் பிளந்து தண்ணீர் வந்தது நம்பிக்கையினால்!

புதிய ஏற்பாட்டில்,
நோயாளிகள் உடல் நலம் பெற்றது நம்பிக்கையினால்!
பாவிகள் பாவமன்னிப்பு பெற்றது நம்பிக்கையினால் இறந்தவர்கள் உயிர்பெற்று எழுந்தது நம்பிக்கையினால்!
இன்று நம்மைச் சுற்றி எத்தனையோ துன்பங்களும் துயரங்களும்.

இதோ ஒரு புதுக்கவிதை!
தாயின் பாசத்தைப் பற்றி
மகன் மேடையிலே அருமையாக
சொற்பொழிவு ஆற்றிக்கொண்டிருந்தான். அதை டி.வி.யில் கேட்டுக்கொண்டிருந்தார் தாய்.
எங்கிருந்து? முதியோர் இல்லத்திலிருந்து!

இதோ இன்னொரு புதுக்கவிதை!
வடக்கே கங்கை!
தெற்கே காவிரி!
இரண்டு நதிகளுக்குமிடையே ஒரு தொட்டி!
குப்பைத் தொட்டி!
அதற்குள்ளே தாகத்தால் ஒரு குழந்தை
அழுதுகொண்டிருந்தது!

ஒரு பக்கம் பாசத்திற்காக ஏங்கும் பெற்றோர்கள் !
மறு பக்கம் பாதுகாப்பிற்காக ஏங்கும் குழந்தைகள்!

இன்று ஆபத்து நேரத்திலே உதவி செய்பவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்.

அன்றொரு நாள் தனது தம்பி ஆபேலைக் கொன்றவனைப் பார்த்து, உன் தம்பி ஆபேல் எங்கே? என்று கேட்டார் கடவுள் (தொநூ 4:9).

காயினோ ஒரு கேள்விக்கு, மற்றொரு கேள்வியால் பதில் சொன்னான். என் தம்பிக்கு நானென்ன காவலாளியா? என்றான். அந்தக் கேள்வி இன்று மூலைமுடுக்கெல்லாம் எதிரொலிக்கின்றது.

இன்று இதுவே நமது மன்றாட்டாக இருக்கட்டும் :
இறைவா!
இன்று எனக்குப்
பொன்னும் வேண்டாம், பொருளும் வேண்டாம்.
மண்ணும் வேண்டாம், மணியும் வேண்டாம்.
பட்டமும் வேண்டாம், பரிசும் வேண்டாம்.
அழகும் வேண்டாம், அந்தஸ்தும் வேண்டாம்.
நீர் விரும்பும், நம்பிக்கையை எனக்குத் தாரும்.
காரணம், நம்பிக்கை
கடலை விட ஆழமானது,
இமயத்தை விட உயரமானது,
நைலை விட நீளமானது.
தாஜை விட அழகானது.
நம்பிக்கையால்
முள்ளை மலராக்க முடியும்,
தேளை தேனாக்க முடியும்,
கல்லை கனியாக்க முடியும்.
முடியும், முடியும், முடியும், நம்பிக்கையால் எல்லாம் முடியும்.

மேலும் அறிவோம்:
உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு (குறள் : 788)..

பொருள் : இடுப்பில் உடுத்தியுள்ள ஆடையைப் பறிகொடுப்பவனின் கை விரைந்து சென்று ஆடையைச் சரி செய்யப் பெரிதும் உதவும் ; அதுபோன்று, நண்பனுக்குத் துன்பம் வரும் போது துடித்தெழுந்து சென்று அத்துன்பத்தைப் போக்குவது உயரிய நட்பாகும்!



ஒரு கிராமத்துக்கு அருகாமையில் ஒரு மாபெரும் கூடாரத்தில் 'சர்க்கஸ்' நடந்து கொண்டிருந்தது. அக்கூடாரம் திடீரென்று தீப்பிடித்துக் கொண்டது. 'சர்க்கஸில்' கோமாளியாக நடித்த குள்ளன் ஒருவன் கிராமத்துக்கு ஓடிப்போய் மக்களிடம், "சர்க்கஸ் கூடாரம் தீப்பிடித்து எரிகிறது. தீயை அணைக்க உதவுங்கள்" என்று கேட்டான். ஆனால் ஊர் மக்கள் அவனை நம்ப மறுத்தனர். ஏனெனில் அவன் ஒரு கோமாளி, ஒரு குள்ளன். அதன் விளைவு என்ன? சர்க்கஸ் கூடாரம் மட்டுமல்ல, ஊர் முழுவதும் தீயினால் நாசமடைந்தது. ஒருவருடைய உருவத்தைக் கண்டு அவரைக் குறைவாக எடைபோடக் கூடாது. ஏனெனில் ஒரு மாபெரும் தேருக்கு ஒரு சிறிய அச்சாணி போன்று அவர் சமுதாயத் தேர் இயங்குவதற்கு அவசியமானவராக இருக்கலாம்.

உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு
அச்சு ஆணி அன்னார் உடைத்து  (குறள் 667)

நாசரேத்து ஊர் மக்கள் கிறிஸ்துவின் போதனையைக் கேட்டு வியப்படைந்தாலும் அவரை நம்ப மறுத்தனர். ஏனெனில் அவர் தச்சரான யோசேப்பின் மகன்; அவர் எந்தப் பள்ளியிலும் பயிலாதவர், பட்டம் பெறாதவர். அவரது எளிய பின்னணியை வைத்து அவரை மட்டமாக எடை போட்டனர். அவரை மனித முறையில் பார்த்தனர். முகக்கண் கொண்டு பார்த்தனர்; அகக்கண் கொண்டு பார்க்கவில்லை. திருத்தூதர் பவுல் கூறுகிறார்: “இனிமேல் நாங்கள் எவரையும் மனித முறைப்படி (ஊனக் கண் கொண்டு) மதிப்பிடுவதில்லை. முன்பு நாங்கள் கிறிஸ்துவையும் மனித முறைப்படி தான் மதிப்பிட்டோம். ஆனால் இப்போது அவ்வாறு செய்வதில்லை. எனவே ஒருவர் கிறிஸ்துவோடு இணைந்திருக்கும் போது அவர் புதிதாகப் படைக்கப்பட்டவராய் இருக்கிறார் , பழையன கழிந்து புதியன புகுந்தன் அன்றோ " (2 கொரி 5:16-17).

திருப்பணியாளர்களை நாம் எப்படிப் பார்க்கிறோம்? மனித முறையிலா? அல்லது விசுவாசத்தின் அடிப்படையிலா? ஓர் இளைஞனிடம், "நீ ஏன் பூசைக்குப் போவதில்லை?" என்று கேட்டதற்கு அவன் கூறியது: "அவன் பூசைக்கு எவன் போவான்?" அந்த இளைஞன் தனது பங்குப் பணியாளரை மனித முறையில் மதிப்பிட்டான். அவரைக் கிறிஸ்துவின் பதில்- ஆளாகப் பார்க்கவில்லை , திருப்பணியாளர்களைக் கிறிஸ்துவின் பதில் - ஆளாகப் பார்த்த புனித அகுஸ்தினார் பின்வருமாறு கூறியுள்ளார்: “பேதுரு திருமுழுக்கு அளிக்கட்டும், கிறிஸ்துதான் திருமுழுக்கு அளிக்கிறார். யூதாசு திருமுழுக்கு அளிக்கட்டும், கிறிஸ்து தான் திருமுழுக்கு அளிக்கிறார்”, எவ்வாறு கடவுள் கிறிஸ்துவில் செயல்பட்டாரோ அவ்வாறே கிறிஸ்து திருப்பணியாளர்களிடம் செயல்படுகிறார். திருப்பணியாளர்கள் கடவுளின் இணையற்றச் செல்வத்தைக் கொண்டுள்ள மண்பாண்டங்கள். அவர்கள் தகுதி அவர்களிடமிருந்து வரவில்லை . அது கடவுளிடமிருந்தே வருகிறது (2 கொரி 4:7). கடவுள் தகுதியுள்ளவர்களை அழைப்பதில்லை ; மாறாகத் தாம் அழைத்தவர்களைத் தமது திருப்பணிக்குத் தகுதியுள்ளவர்களாக மாற்றுகிறார். நாம் கருவியைப் பார்க்காமல் கருவியைப் பயன்படுத்தும் கடவுளைப் பார்க்கவேண்டும். நற்கருணை அருள் அடையாளம் விசுவாசத்தின் மறைபொருள் என்றால், குருத்துவமும் விசுவாசத்தின் மறைபொருள் என்பதில் ஐயமில்லை.

பொதுப்பணியில், குறிப்பாக நற்செய்தி அறிவிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளோர் கட்டாயம் எதிர்ப்புகளைச் சந்திக்க நேரிடும். ஆனால் அவர்கள் கிறிஸ்துவின் மன உறுதியைக் கொண்டிருக்கவேண்டும். நாசரேத்து ஊர் மக்கள் கிறிஸ்துவை ஊருக்கு வெளியே துரத்தி, மலை உச்சியிலிருந்து கீழே தள்ளிவிட முயற்சித்தனர். ஆனால் அவர் அச்சமின்றி அவர்கள் நடுவே நடந்து சென்று அங்கிருந்து போய்விட்டார் (லூக் 4:28-30). இன்றைய முதல் வாசகத்தில் கடவுள் இறைவாக்கினர் எரேமியாவுக்கு அளிக்கும் வாக்குறுதி நமக்குத் தெம்பு, ஊட்ட வேண்டும்: "அவர்கள் உனக்கு எதிராகப் போராடுவார்கள், எனினும் உன்மேல் வெற்றி கொள்ள அவர்களால் இயலாது. ஏனெனில் உன்னை விடுவிக்க நான் உன்னோடு இருக்கிறேன் (எரே 1:19),

கடவுளுக்காக உண்மையாகவே உழைப்பவர்களைக் கடவுள் ஒருபோதும் கைவிட மாட்டார். "கடவுள் நம் சார்பில் இருக்கும்போது, நமக்கு எதிராக இருப்பவர் யார்" (உரோ 8:31), எனவே, "போற்றுவார் போற்றட்டும், புழுதிவாரித் தூற்றுவார் தூற்றட்டும், எவர் வரினும் நில்லேன், அஞ்சேன்" என்ற மனத் துணிச்சலுடன் நம்மிடம் ஒப்படைக்கப்பட்ட பணியை நாம் தொடர்ந்து செய்து கொண்டே இருக்கவேண்டும். வாழ்க்கையில் எத்தகைய பிரச்சினைகள் வந்தாலும் நாம் நம் கண்முன் நிறுத்த வேண்டியது: "இதுவும் கடந்து போகும்". பிரச்சனைகள் நிரந்தரமானவை அல்ல. 10-ஆம் வகுப்பு ஆசிரியர் மாணவர்களிடம்: "ஒவ்வொரு மாணவனும் குறைந்தது இரண்டு மொழிகள் கற்றிருக்க வேண்டும்” என்றார். அதற்கு ஒரு மாணவன், "சார். எனக்கு இரண்டு மொழிகள் தெரியும், ஒன்று கனிமொழி, மற்றொன்று தேன்மொழி" என்றான்.

ஆனால், இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல் அடிகளார், "எல்லார்க்கும் ஒரே ஒரு மொழி மட்டும் கட்டாயம் தெரிய வேண்டும்; அதுதான் அன்பு மொழி" என்கிறார். கடப்பாறைக்குக் கூட மசியாத பாறை அப்பாறையின் மேல் வளரும் பசுமரத்து வேருக்குப் பிளந்து விடும். "பாறைக்கு (கடற்பாறைக்கு) நெக்குவிடாப் பாறை பசுமரத்து வேருக்கு நெக்குவிடும்". அவ்வாறே, அதிகாரத்தால்
சாதிக்க முடியாததை அன்பினால் சாதிக்க முடியும், "அன்பு அனைத்தையும் பொறுத்துக் கொள்ளும்; அனைத்தையும் நம்பும்; அனைத்தையும் எதிர்நோக்கி இருக்கும் அனைத்திலும் உறுதியாய் இருக்கும்” (1 கொரி 13:7). "அன்பு அனைத்தையும் மேற்கொள்ளும்: எனவே நாம் அன்புக்கு அடிபணிவோமாக" என்கிறார் இத்தாலியக் கவிஞர் தாந்தே. அகிலத்தில் சக்தி வாய்ந்த ஆயுதம் அணுகுண்டல்ல, மாறாக அன்பேயாகும்! கிறிஸ்து மண்ணுலகில் அன்புத் தீயை மூட்ட வந்தார். அது எப்போதும் பற்றி எரிந்து கொண்டிருக்க வேண்டும் என்பதே அவரது விருப்பமாகும் (லூக் 12:49).


இயேசு எல்லாருக்குமான இறைவன்


- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளை மறைமாவட்டம். நிகழ்வு

கிராசியன் வாஸ் எழுதிய “Little things about Great People” என்ற நூலில் இடம்பெறும் ஒரு நிகழ்வு. ஒருநாள் சுவாமி விவேகானந்தர் ஒரு கிராமத்துச் சாலை வழியாகச் சென்றுகொண்டிருந்தார். அப்போது அவருக்குப் பசியெடுத்தது. யாராவது உணவு தருவார்களா? என்று அவர் கண்களை ஏறெடுத்துப் பார்த்தபோது, பெரியவர் ஒருவர் தன்னுடைய வீட்டுக்கு முன்பாக இருந்த திண்ணையில் உணவு உண்டுகொண்டிருந்தார். அவரிடத்தில் சென்று உணவு கேட்போம் என்று விவேகானந்தர் அவரருகே சென்றார்.

“ஐயா! எனக்கு மிகவும் பசிக்கிறது... சாப்பிடுவதற்கு கொஞ்சம் உணவு தந்தால், நான் என்னுடைய பசியாற்றிக் கொள்வேன்” என்றார் விவேகானந்தர். அவரை மேலும் கீழுமாகப் பார்த்த அந்த பெரியவர், “உங்களுக்கு உணவுக்கு தருவதில் எனக்கொன்றும் ஆட்சோபனை இல்லை... ஆனால் நான் ஒரு துப்புரவுப் பணியாளன்; தீண்டத்தகாதவன். அப்படியிருக்கும்போது, நான் கொடுக்கிற உணவை நீங்கள் உண்பீர்களா? என்றுதான் நான் யோசிக்கிறேன்” என்றார்.

பெரியவர் இவ்வாறு சொன்னதுதான் தாம்தான், ‘ஒரு தீண்டத்தகாதவரிடமிருந்து உணவை வாங்கி உண்பதா?’ என்று விவேகானந்தர் வேகமாக நடக்கத் தொடங்கினார். சிறிதுதூரம் சென்றிருப்பார். அப்போது அவருடைய குருநாதர் சொன்ன ‘எல்லாரிடத்திலும் கடவுள் இருக்கிறார், அதனால் யாரும் யாருக்கும் கீழானவர்கள் அல்ல’ என்ற வார்த்தைகள் அவருக்கு நினைவுக்கு வந்தன. உடனே விவேகானந்தர் தன்னுடைய தவற்றை உணர்ந்து, அந்த பெரியவரை நோக்கி ஓடினார்.

“ஐயா! என்னை மன்னித்துக்கொள்ளுங்கள்... என்னை உயர்வாகவும் உங்களைத் தீண்டத்தகாதவராகவும் நினைத்து, நீங்கள் கொடுத்த உணவை சாப்பிடாமல் உதாசீனப்படுத்திவிட்டேன்... இப்போது என்னுள் இருக்கின்ற அதே இறைவன்தான் உங்களுக்குள்ளும் இருக்கிறார் என்ற உண்மையை உணர்ந்துகொண்டேன்” என்று சொல்லிவிட்டு அவரிடமிருந்து உணவை வாங்கி உண்ணத் தொடங்கினார்.

எல்லாரும் இறைவனின் மக்கள்; மக்கள் எல்லாருக்குள்ளும் இறைவன் இருக்கின்றார். அப்படி இருக்கும்போது பிறப்பின் அடிப்படையில் வேறுபாடு பார்ப்பது நல்லதல்ல என்ற உண்மையை எடுத்துச் சொல்லும் இந்த நிகழ்வு நமது சிந்தனைக்குரியதாக இருக்கின்றது.

பொதுக்காலத்தின் நான்காம் ஞாயிற்றுகிழமையில் இருக்கும் நமக்கு, இன்றைய நாளில், நாம் படிக்கக்கேட்ட நற்செய்தி வாசகம், இயேசு யூதருக்கு மட்டுமல்ல, அவர் எல்லாருக்குமான இறைவன் என்றொரு செய்தியைத் தருகின்றது.

1. இயேசுவின் அமுதமொழியைக் கேட்டு வியப்புற்ற மக்கள்

இயேசு, தான் வளர்ந்த ஊராகிய நாசரேத்துக்கு வந்து, அங்குள்ள தொழுகைக்கூடத்தில், இறைவாக்கினர் எசாயாவின் சுருளேட்டை எடுத்து வாசிக்கத் தொடங்குகிறார். மக்களோ அவருடைய வாயிலிருந்து வந்த அமுத மொழிகளைக் கேட்டு வியக்கின்றார்.

இதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. அவற்றுள் மிக முக்கியமானது, இயேசு பரிசேயர்கள் மற்றும் மறைநூல் அறிஞர்கள் போலன்றி அதிகாரத்தோடு போதித்தார் என்பதாகும். பரிசேயர்களும் மறைநூல் அறிஞர்களும், திருச்சட்டம் ‘இப்படிச் சொல்கிறது’ என்று போதித்து வந்தார்கள். இயேசுவோ அப்படியில்லாமல், “நான் உங்களுக்குச் சொல்கிறேன்” என்று அதிகாரத்தோடு போதித்தார். ஒருவர் அதிகாரத்தோடு போதிப்பது ஒன்றும் அவ்வளவு எளிதான ஒரு காரியமில்லை. உள்ளத்தில் உண்மையும் செயலில் நேர்மையும் இருக்கின்ற ஒருவரால் மட்டுமே அப்படிப் போதிக்க முடியும். இயேசுவிடம் உண்மையும் நேர்மையும் குடிகொண்டிருந்தன. அதனால்தான் அவரால் அதிகாரத்தோடு போதிக்க முடிந்தது.

2. இயேசுவைப் புறக்கணித்த மக்கள்

இயேசு, எசாயாவின் சுருளேட்டை வாசித்தபோதும் அதற்கு விளக்கம் தந்த தும் வியப்புற்ற மக்கள், அவர் இறைவாக்கினர்கள் எலியாவைப் போன்று, எலிசாவைப் போன்று புறவினத்து மக்களுக்குப் பணிசெய்யப் போகிறேன் என்று சொன்னதும், தொழுகைக்கூடத்தில் இருந்த மக்கள் அவர்மீது சிற்றம் கொள்ளத் தொடங்குகிறார்கள்.

இஸ்ரயேலில் மூன்றரை ஆண்டுகள் வானம் பொய்த்து, கடுமையான பஞ்சம் ஏற்பட்ட சமயத்தில், கைம்பெண்கள் பலர் இருந்தார்கள். ஆனால் இறைவாக்கினர் எலியா சீதோனைச் சார்ந்த சாரிபாத்துக் கைம்பெண்ணிடம் அனுப்பப்பட்டார். (1அர 17:8-16) இறைவாக்கினர் எலிசாவோ இஸ்ரயேல் குடிகளில் தொழுநோயாளர்கள் பலர் இருந்தபோதும், புறவினத்தாராகிய சிரியாவைச் சார்ந்த நாமானின் தொழுநோயையே நீக்கினார் (2 அர 5: 1-15). இப்படி இரண்டு இறைவாக்கினர்களும் இனம் கடந்து, குறுகிய எல்லைகளைக் கடந்து, எல்லா மக்களுக்கும் பணிசெய்ததைப் போன்று, தானும் பணிசெய்யப் போகிறேன் என்று சொன்னதால், மக்கள் அவர்மீது சீற்றம் கொள்ளத் தொடங்குகிறார்கள்.

புறவினத்தாரை நாயினும் கீழென நினைத்த யூதர்கள் மத்தியில், அவர்களைப் பற்றிப் பேசினாலோ அல்லது அவர்களது மத்தியில்தான் தான் பணிசெய்யப் போகிறேன் என்று சொல்வதனாலோ, தனக்கு மிகப்பெரிய பிரச்சினை வரும் என்று இயேசுவுக்கு நன்றாகவே தெரிந்திருக்கும். இருந்தாலும் இயேசு தன் இலக்கு என்ன, இலக்கு மக்கள் யார், யார் என்பதைத் தெளிவாக எடுத்துச் சொல்லி, தான் யூதர்களுக்கு மட்டுமல்ல எல்லாருக்குமான இறைவன் என்பதை எடுத்துச் சொல்கிறார்.

இயேசு யூதர்கள் மட்டுமல்ல, எல்லாருக்குமான இறைவன் என்பதை, அவர் இறப்பின்போது, எருசலேம் திருக்கோவிலின் திரைச் சீலை இரண்டாகக் கிழிந்தததும் விண்ணேற்றம் அடையும்போது தன் சீடர்களிடம் சொன்ன, “நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்” (மத் 28:19) என்ற வார்த்தைகளும் நமக்கு மிகத் தெளிவாக எடுத்துக்கூறுகின்றன.

3. இயேசுவைக் கொலை செய்யவும் துணிந்த மக்கள்

இயேசு, தான் யூதர்களுக்கு மட்டுமல்ல, எல்லா மக்களுடைய மீட்புக்காகவும் வந்திருக்கிறேன் என்று சொன்னதும், தொழுகைக்கூடத்தில் இருந்த யூதர்கள், அவரை ஊருக்கு வெளியே துரத்தி, அவ்வூரில் இருந்த மலை உச்சியிலிருந்து கீழே தள்ளிவிட முயல்கிறார்கள். இயேசுவின் அமுதமொழியைக் கேட்டு வியந்த மக்களா, சிறிதுநேரத்தில் அவரை மலை உச்சிலிருந்து கீழே தள்ளிவிடப் பார்க்கிறார்கள்! என நினைக்கும்போது நமக்கு வியப்பாக இருக்கிறது... அந்தளவுக்கு அவர்கள் இனவெறியில் ஊறிப்போனவர்களாக இருந்திருக்கிறார்கள் என்பதை நினைத்துப் பார்க்கின்றபோதுதான் வேதனையாக இருக்கின்றது.

பலநேரங்களில் நாமும்கூட யூதர்களைப் போன்று கடவுள் ‘எங்கள் இனத்திற்கு அல்லது குலத்திற்குத்தான் சொந்தம்’ என்று உரிமை கொண்டாடுவது நம்முடைய குறுகிய மனப்பான்மையைக் காட்டுவதாக இருக்கின்றது. ஆகவே, கடவுளை ஒரு வட்டத்திற்குள் சுருக்கிக் கொள்ளாமல், அவர் எல்லாருக்கும் பொதுவானவர் என்ற பரந்த பார்வையோடு பார்ப்பது நல்லது.

சிந்தனை

“எல்லாருக்கும் கடவுளும் தந்தையுமானவர் ஒருவர்; அவர் எல்லாருக்குள்ளும் இருப்பவர்” என்பார் தூய பவுல் (எபே 4:6). ஆம், எல்லாருக்கும் தந்தை ஒருவராக இருக்கின்ற போது... அவர் எல்லாருக்குள்ளும் இருக்கும்போது இங்கே உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற வேறுபாட்டிற்கு வழியே இல்லை.

ஆகவே, இயேசுவை எல்லாருக்குமான இறைவன் என்பதையும் உணர்ந்து, நாம் அனைவரும் அவருடைய சகோதர, சகோதரிகள் என்பதை உணர்ந்து வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.



எதிராளியாய்

நான் பள்ளிப்பருவத்தில் 11ஆம் வகுப்பில் ஆங்கில வகுப்பில் கற்ற பல பாடங்களில் ஒன்று ஜெஸி ஓவன்ஸ் பற்றியது. ஒரு அடிமையின் பேரனான இவர் 1936ஆம் ஆண்டு நாசி ஜெர்மனி நகர் பெர்லினில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் நான்கு தங்கப் பதக்கங்கள் வென்றவர். இவர் தன் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்வை இப்படிப் பதிவு செய்கிறார்: '1928ஆம் ஆண்டு ஒஹையோவில் நான் அன்றாடம் உடற்பயிற்சி செய்யச் செல்வேன். தொடக்கத்தில் எனக்கு மிகவும் சோம்பலாக இருந்தது. சோம்பலைக் காரணம் காட்டி நான் சில நாள்கள் பயிற்சியைத் தள்ளிப் போட்டேன். பின் தட்ப வெப்பநிலையைக் காரணம் காட்டினேன். பின் என் உடல் வலியைக் காரணம் காட்டினேன். ஆனால், பறிற்சிக்கு என்னைத் தினமும் அழைத்த என் கோச் எனக்கு ஒரு எதிராளியாகத் தோன்றினார். அவரை இதற்காகவே வெறுத்த நான் ஒரு கட்டத்தில் அவர் சொல்வதுபோல செய்ய ஆரம்பித்தேன். ஒலிம்பிக் போட்டிகள் அறிவிக்கப்பட்டன. என் உடற்பயிற்சி மேல் நான் நம்பிக்கை கொண்டிருநதாலும், கொஞ்சம் கொஞ்சமாக நாசிச 'ஆரிய மேட்டிமை' மேலாண்மை என் மனத்தில் பயத்தை உண்டாக்கியது. அந்த நாள்களில் என் உடல்நலமும் குன்றியது. ஆனால், 'என்னை மற்றவர்கள் ஒதுக்கி வைக்கும்' மனப்பான்மைக்கு நான் என்றும் எதிரானவன் என்று பதிவு செய்ய ஓடினேன்.'

இன்று அவருடைய சாதனைகள் முறியடிக்கப்பட்டாலும், அவர் அன்று தனக்கெனப் பதித்த முத்திரை அவருக்கானதே.

மனித வாழ்வின் தனி மனித வெற்றியும், குழும வெற்றியும் அடையும் வழி எதிராளியாக மாறுவதே. எதிராளியாக மாறுவது என்பது எதிர்த்து நிற்பது அல்லது எதிர்நீச்சல் போடுவது. எதிராளி என்பவர் பகையாளி அல்ல. பகையாளி என்பது ஒரு முடிந்த நிலை. ஆனால், எதிராளி என்பது ஒரு தொடர்நிலை.

'இன்னும் கொஞ்ச நேரம் தூங்கலாம்' என்ற என் காலை எண்ணத்திற்கு எதிராளியாக நிற்கும்போதுதான், நான் சுறுசுறுப்பாக வேலைகள் செய்ய முடிகிறது. 'கொஞ்சம் இனிப்பு சாப்பிடு. அப்புறம் மாத்திரை போட்டுக் கொள்ளலாம்' என்ற என் எண்ணத்திற்கு எதிராளியாக நிற்கும்போதுதான், நான் சர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைக்க முடிகிறது. ஆங்கிலேயேர்க்கு எதிராளியாய் நம் முன்னோர்கள் நின்றதால்தான் இன்று நாம் விடுதலைக் காற்றை சுவாசிக்க முடிகிறது. இப்படியாக கறுப்பின மக்கள் எழுச்சி, அடக்குமுறைகளுக்கு எதிரான எழுச்சி என சமூக நிகழ்வுகளிலும், இராஜாராம் மோகன்ராய், மார்ட்டின் லூத்தர் போன்றவர்கள் எடுத்த நிலைப்பாடுகளிலும், 'எதிராளியாய்' இருப்பதன் அவசியம் புரிகிறது. குடும்பத்தில் நடக்கும் இழப்புக்களையும் தாண்டிக் குடும்பத்தை எழுப்பும் அப்பாக்கள், அம்மாக்கள், வறுமையிலும், இயலாமையிலும் சாதிக்கும் குழந்தைகள் என எல்லாருமே 'எதிராளியாய்' இருப்பதால்தான் சாதிக்க இயல்பவர்கள் ஆகிறார்கள்.

மொத்தமாகச் சொன்னால், 'ஓடுகின்ற தண்ணீரின் ஓட்டத்திற்குத் தன்னையே கையளிக்கின்ற படகு கரை ஒதுங்குகிறது. ஓட்டத்திற்கு எதிராளியாய் நிற்கிற படகு மறுகரை சேர்கிறது.'

இன்றைய இறைவாக்கு வழிபாடு, 'எரேமியா,' 'பவுல்,' 'இயேசு' என்ற மூன்று எதிராளிகளின் நிலைப்பாட்டைப் பதிவு செய்து, நம்மையும் எதிராளிகளாய் வாழ அழைக்கிறது. எப்படி?

இன்றைய முதல் வாசகத்தில் (காண். எரே 1:4-5, 17-19) யாவே இறைவன் எரேமியாவை அழைக்கின்றார். எருசலேமின் அழிவையும், பாபிலோனியாவுக்கு மக்கள் நாடுகடத்தப்பட்டதையும் நேருக்கு நேர் பார்த்த இறைவாக்கினரும் எரேமியாவே. ஆக. இவருடைய வாழ்வு ஒரு முள்படுக்கையாகவே இருந்தது. 'நீ பிறக்குமுன்பே உன்னைத் திருநிலைப்படுத்தினேன்' என்னும் வாக்கியத்தில் எரேமியாவின் தேர்ந்துகொள்ளப்பட்ட நிலையையும், ஒரு குறிப்பிட்ட பணிக்கென 'ஒதுக்கிவைக்கப்பட்ட' நிலையையும் பார்க்கின்றோம். 'திருநிலைப்படுத்துதல்' என்பது பொறுப்புமிக்க வார்த்தை. ஏனெனில், திருநிலைப்படுத்தப்படும் பொருளும், நபரும் சிறப்பான பணி ஒன்றிற்காக ஒதுக்கிவைக்கப்படுகிறார். அவர் அச்சிறப்பான பணியிலிருந்து கொஞ்சம் விலகிவிடவோ, அதே நேரம் தானே மற்ற பணிகளைத் தேடிச் செல்லவோ கூடாது. எரேமியாவின் அழைப்பு இறைவாக்குரைக்கவும், அதிலும் யூதாவின் தலைவர்களுக்கும், அரசர்களுக்கும், குருக்களுக்கும் இறைவாக்குரைக்கவுமாக இருக்கிறது. சாதாரண நபர்களுக்கு ஒன்றைச் சொல்லி நம்பவைத்துவிடலாம். ஆனால், மேற்கண்ட மூவருக்கும் சொல்வது மிகப்பெரிய சவால். அதுவும் நல்ல செய்தி என்றால் பரவாயில்லை. அவர்களின் பிரமாணிக்கமின்மையையும், உடன்படிக்கைக்கு எதிராக அவர்கள் செய்த தவறுகளையும், அவர்களின் சிலைவழிபாட்டையும் சுட்டிக்காட்டுவது எரேமியாவுக்குப் பெரிய சவாலாக இருந்தது. மேலும், அவர்கள் ஆட்சி செய்த 'எருசலேமின் அழிவையும்' அவரே முன்னுரைக்கவும் வேண்டியிருந்தது. இவரின் இந்த இறைவாக்கு அவரைப் பொதுவான எதிரியாக்கிவிடுகிறது. அவர் ஏளனத்திற்கும், கேலிப் பேச்சிற்கும், வன்முறைக்கும், சிறைத்தண்டனைக்கும் ஆளாகின்றார். ஆனாலும், தன் இறைவாக்குப் பணியில் அவர் பின்வாங்கவே இல்லை. ஒரு கட்டத்தில், 'ஆண்டவரே! நீர் என்னை ஏமாற்றிவிட்டீர், நான் ஏமாந்து போனேன்' (20:7) என்று விரக்தி அடைந்தாலும், 'சுற்றிலும் ஒரே திகில்! அவன் மேல் பழிசுமத்துவோம்' (20:10) என்று மக்களின் கிளர்ச்சி பயத்தைத் தந்தாலும், 'உம் சொற்களை என்னால் அடக்கி வைக்க முடியாது' (20:9) என்றும் 'ஆண்டவர் வலிமை வாய்ந்த வீரரைப் போல என்னோடு இருக்கிறார்' (20:11) என்று நம்பிக்கை கொள்ளவும் செய்கிறார் எரேமியா. இவ்வாறாக, தவறான சமய எண்ணங்களிலும், தங்களின் மேட்டிமைப் போக்கிலும் மூழ்கி இருந்த தலைவர்களுக்கும், மக்களுக்கும் 'எதிராளியாய்' நிற்கிறார் எரேமியா. இவரின் இந்தத் துணிவிற்குக் காரணம், 'உன்னை விடுவிக்க நான் உன்னோடு இருக்கிறேன்' (1:19) என்ற ஆண்டவரின் வாக்குறுதியே.

இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். 1 கொரி 12:31-13:13) பவுல் 'பல்வேறு கொடைகள்' பற்றிய தன் போதனையை நிறைவு செய்கிறார். கொரிந்து நகர திருஅவை உறுப்பினர்கள் தாங்கள் பெற்றிருந்த அருள்கொடைகள் பற்றியும், செயல்பாடுகள் பற்றியும், தொண்டுகள் பற்றியும் அதிகம் பெருமை பாராட்டிக்கொண்டும், தாங்கள் பெற்றிருந்த ஞானம் நிறைந்த சொல்வளம், அறிவு சார்ந்து சொல்வளம், நம்பிக்கை, பிணிதீர்க்கும் கொடை, வல்ல செயல் செய்யும் ஆற்றல், இறைவாக்குரைக்கும் ஆற்றல், பரவசப் பேச்சு, அதை விளக்கும் ஆற்றல் போன்ற கொடைகளை முன்னிறுத்தி, ஒருவர் மற்றவரை ஒப்பீடு செய்துகொண்டு, பொறாமைப்பட்டு, தங்களுக்குள் கட்சி மனப்பான்மை கொண்டு பிளவுபட்டிருந்தனர். கடந்த வார வாசகத்தில் 'ஒரே உடல் பல உறுப்புகள்' என்று அவர்களை அறியாமையிலிருந்து அறிவுக்கு அழைத்த பவுல், இன்னும் ஒரு படி போய், 'எல்லாவற்றையும் விட சிறந்த நெறி ஒன்றை நான் உங்களுக்கு எடுத்துக்காட்டுகிறேன்' (12:31) என்று சொல்லி அன்பை முன்வைக்கிறார். அவர்கள் தாங்கள் பெருமை கொண்டிருந்த - பரவசப் பேச்சு, இறைவாக்குரைக்கும் ஆற்றல், மறைபொருள்கள் விளக்கும் ஆற்றல், மலைகளை இடம் பெயரச் செய்யும் நம்பிக்கை, தன்னையே எரிக்கும் அளவிற்கு தற்கையளிப்பு - அனைத்தும் அன்பை ஊற்றாகக் கொண்டிருக்கவில்லை என்றால் அவற்றால் ஒரு பயனும் இல்லை என்கிறார். ஏனெனில், அன்பு இல்லாத இடத்தில் இவை யாவும் தனி மனித பெருமைக்காகவும், புகழுக்காகவும், பண ஈட்டிற்காகவும் மட்டுமே பயன்படும்.

கிரேக்க மொழியில் அன்பு என்பதற்கு நான்கு வார்த்தைகள் உள்ளன: (அ) அகாபே (மேன்மையான அன்பு), (ஆ) ஈரோஸ் (உடல் சார்ந்த அன்பு, காமம்), (இ) ஃபிலியா (நட்பு அல்லது நலம்விரும்புதல்), (ஈ) ஸ்டோர்கே (பெற்றோர்-பிள்ளை பாசம்). பவுல் பயன்படுத்தும் வார்த்தை, 'அகாபே.' மூன்று நிலைகளில் அன்பு முக்கியத்துவம் பெறுகின்றது: (அ) மேன்மையான அருட்கொடையை விட அன்பு சிறந்தது. (ஆ) முதன்மையான திறன்களைவிடச் சிறந்தது.(இ) கதாநாயக வெற்றிச் செயல்களைவிடச் சிறந்தது. தொடர்ந்து அன்பு இப்படி இருக்கும், அப்படி இருக்காது என நேர்முக மற்றும் எதிர்மறை வார்த்தைகளில் பட்டியலிடுகின்றார் பவுல். மேலும், அன்பின் குணத்தை பெரிதுபடுத்தியும் காட்டுகின்றார்: 'எல்லாவற்றையும்' பொறுத்துக்கொள்ளும். 'எல்லாவற்றையும்' நம்பும். 'எல்லாவற்றையும்' எதிர்நோக்கி இருக்கும். 'எல்லாவற்றிலும்' மனஉறுதியாய் இருக்கும். மேலும், இந்த அன்பு அழியாதது என்கிறார் பவுல். ஏனெனில், இவ்வன்பு கடவுளில் ஊற்றெடுக்கிறது. கடவுள் அழிவில்லாதவர். எது எப்படியோ அன்பு இருந்தால் சரி! எல் கிரேக்கோ என்பவர் 'நம்பிக்கை, எதிர்நோக்கு, அன்பு' என்ற மூன்று மதிப்பீடுகளையும், மூன்று பெண்களாக உருவகித்து (மோதெனா ட்ரிப்டிக்) ஒரு படம் வரைந்துள்ளார். இதில் அன்பு என்ற பெண்ணின் காலைப் பிடித்துக்கொண்டு நிறைய குழந்தைகள் இருக்கும். ஆம், அன்பின் குழந்தைகள் கணக்கிலடங்காதவை! அன்பு என்றும் மேலனாது.

பவுல் இப்படி கொரிந்து நகரத் திருச்சபைக்கு எழுதிய அன்பின் பாடல் கேட்பதற்கு நமக்கு இனிமையாக இருக்கிறது. ஆனால், பவுலின் திருச்சபைக்கு ஒரு பெரிய அதிர்ச்சியாக இருந்திருக்கும். ஏனெனில், அவர்கள் கொண்டிருந்த அனைத்துப் பிரச்சினைகளையும் - பொறாமை, தற்புகழ்ச்சி, இறுமாப்பு, இழிவான ஊதியம், தன்னலம், எரிச்சல், தீவினை, பொய் - சுட்டிக்காட்டு, இச்செயல்கள் அன்பிற்கு இல்லை என்று சொல்வதன் வழியாக, 'உங்களிடத்தில் அன்பு இல்லை' என மறைமுகமாக அவர்களுக்கு எச்சரிக்கை விடுகின்றார் பவுல். பவுலின் இந்த மடலுக்காக கொரிந்து நகர மக்கள் அவரை நிராகரித்தார்கள் என்பதை நாம் அவரின் இரண்டாம் மடலில் வாசிக்கிறோம். இவ்வாறாக, பவுல், அன்பு பற்றிய போதனையால், அன்பை மற்ற எல்லாவற்றையும் விட உயர்த்தியதால், கொரிந்து நகரத் திருச்சபையின் 'எதிராளியாக' மாறுகின்றார். பவுலின் துணிவிற்குக் காரணம், இவர் கடவுளின் உடனிருப்பை அனுபவித்த விதமே. ஆகையால்தான், 'இப்போது நான் அறைகுறையாய் அறிகிறேன். அப்போது கடவுள் என்னை அறிந்துள்ளதுபோல் முழுமையாய் அறிவேன்' (13:12) என உறுதியாகக் கூறுகின்றார்.

இன்றைய நற்செய்தி வாசகம் (காண். லூக் 4:21-30), இயேசுவின் நாசரேத்துப் போதனை அதைக் கேட்டவர்களின் நடுவில் ஏற்படுத்திய எதிர்வினையைப் பதிவு செய்கிறது. எசாயா இறைவாக்கினரின் பகுதியை வாசித்தவர், 'இது ஆண்டவரின் அருள்வாக்கு!' என்று இயேசு சொல்லியிருந்தால், எல்லாரும், 'ஆகா, ஓகோ, நல்லா வாசிக்கிற தம்பி!' என்று உச்சி முகர்ந்து கொண்டாடியிருப்பார்கள். ஆனால், இயேசு அப்படிச் சொல்லவில்லையே. 'நீங்கள் கேட்ட இறைவாக்கு இன்று நீங்கள் கேட்டதில் நிறைவேறியது!' என்கிறார். 'என்னது மெசியா பற்றிய எசாயா இறைவாக்கு நிறைவேறுகிறதா?' 'யார்ட்ட?' 'இவர்ட்டயா?' 'தம்பி, ஆர் யு ஓகே?' 'என்ன பேசுறோம்னு தெரிஞ்சுதான் பேசுறீங்களா?' 'இவர் யோசேப்போட பையன்தான!' என ஆளாளுக்கு பேச ஆரம்பிக்கின்றனர். 'இவர் யோசேப்பின் மகன் அல்லவா?' (லூக்கா 1:22) என்ற அவர்களின் வார்த்தைகள் இயேசு தூய ஆவியின் ஆற்றலால் பிறந்தார் என்பதைக் குத்திக் காட்டி, அவரின் பிறப்பைக் கேலி செய்வதாகக் கூட இருந்திருக்கலாம். சில நொடிகளில் எல்லாம் மாறிப்போனது. இயேசுவின் போதனையும், பணியும் புறவினத்தாரையும் உள்ளடக்கும் என்பதை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எலியா மற்றும் எலிசா போல தன்னுடைய இறைவாக்குப் பணியும் எல்லாருக்கும் உரியது என்பதில் தெளிவாக இருக்கிறார் இயேசு. அவர் தங்களின் எதிர்பார்ப்பிற்கு முரணாக இருந்ததால் அவரைப் புறக்கணிக்கின்றனர் மக்கள். அவரைப் பாராட்டிய சில நொடிகளில் அவர்மேல் சீற்றம் (கோபத்தின் கொடூர வடிவம்) கொண்டு அவரை ஊருக்கு வெளியே துரத்தி மலை உச்சியிலிருந்து கீழே தள்ளிக் கொன்றுவிட முனைகின்றனர். ஆக,

இயேசு தன் போதனையின் வழியாக தன் சொந்த ஊர் மக்களுக்கு 'எதிராளியாக' மாறினார். தன் இலக்கோடு சமரசம் செய்துகொள்ளாத இயேசு தன்னலம் மற்றும் குறுகிய எண்ணம் கொண்ட அந்த மக்களிடமிருந்து விலகித் தன் வழியே செல்கின்றார்.

இவ்வாறாக, எரேமியா தன் இனத்து அரசர்களுக்கும், மக்களுக்கும் தன் இறைவாக்குப் பணியால் எதிராளியாகவும், பவுல் தன் கொரிந்து நகர திருஅவைக்குத் தன் 'அன்பு' பற்றிய போதனையால் எதிராளியாகவும், இயேசு அனைவரையும் உள்ளடக்கிய இறைவார்த்தைப் பணியால் தன் சொந்த ஊர் மக்களுக்கு எதிராளியாகவும் மாறுகின்றனர். ஆனால், இவர்களை எதிர்த்தவர்கள் நடுவில் இவர்கள் பின்வாங்கவில்லை. இன்றைய பதிலுரைப் பாடல் (திபா 71) சொல்வதுபோல, 'என் தலைவரே, நீரே என் நம்பிக்கை. இனி வரும் நாள்களிலும் உம் வியத்தகு செயல்களை அறிவிப்பேன்' என்று துணிந்து முன்செல்கின்றனர்.

இன்று நம் தனிப்பட்ட வாழ்விலும், சமூக, மற்றும் அரசியல் வாழ்விலும் எதிராளியாக இருக்க இன்று நாம் அழைக்கப்படுகிறோம். எதிராளியாக மாறுவதற்கு மூன்று குணங்கள் அவசியம் என்பதையும் இன்றைய வாசகங்கள் குறித்துக்காட்டுகின்றன:

(அ) 'என்னால் முடியும்' என்ற தன்னம்பிக்கை. தான் சிறுவன் என்ற நிலையில் இருந்தாலும் எரேமியாவும், தான் அறிமுகமில்லாதவன் என்ற நிலையில் இருந்தாலும் பவுல், தான் சொந்த ஊர்க்காரன் என்றாலும் இயேசுவும், தங்களால் முடியும் எனத் தங்கள் மேல் முழு நம்பிக்கை கொண்டிருக்கின்றனர். ஆக, என்னிடம் உள்ள தேவையற்ற ஒரு பழக்கத்திற்கோ அல்லது குணத்திற்கோ நான் எதிராளியாக மாற வேண்டும் என்றால், 'என்னால் முடியும்' என்ற மனவுறுதியும் அதற்கான தன்னம்பிக்கையும் அவசியம்.

(ஆ) 'என் கடவுள் என்னோடு' - தன்னம்பிக்கை நம்மை விடப் பெரிய ஒன்றோடு கட்ட வேண்டும். அது விதியாகவோ, கடவுளாகவோ, கொள்கையாகவோ இருக்கலாம். மனிதர்கள்மேலும், இடங்களின் மேலும் கட்டவே கூடாது. ஏனெனில் அவர்களும், அவைகளும் மாறக்கூடியவை. ஆனால், மாறாத ஒன்றில் கட்டிக்கொள்ள வேண்டும் நம் நம்பிக்கையை. எரேமியா தன் ஆண்டவரின் மேல், பவுல் இயேசுவின் மேல், இயேசு தன் தந்தையின் மேல் நம்பிக்கையைக் கட்டியிருந்தனர்.

(இ) 'இலக்குத் தெளிவு' - நான் எதற்காக இங்கே இருக்கிறேன்? நான் எதை நோக்கிச் செல்கின்றேன்? என்ற கேள்விகள்தாம் இலக்கைத் தெளிவுபடுத்துகின்றன. எரேமியா, பவுல், இயேசு மூவரும் தங்கள் இலக்கை முன்வைத்து நடந்தனர். எதிர்ப்புகளைக் கண்டு அவர்கள் இலக்குகளோடு சமரசம் செய்துகொள்ளவில்லை. திரும்பச் செல்லவில்லை. எரேமியா தன் கோவில் திரும்பவில்லை. பவுல் தன் தர்சு நகரம் திரும்பவில்லை. இயேசுவும் நாசரேத்தூர் திரும்பவில்லை.

வாழ்வில் 'எதிராளி' நிலை என்பது நம் மாற்றத்திற்கான வளர்ச்சிநிலை. மருத்துவர் நோயாளிக்கு எதிராளியாய் நின்றால்தான் நோயைக் குணமாக்க முடியும். எடுக்கின்ற மாத்திரை நோய்க் கிருமிக்கு எதிராளியாக இருந்தால்தான் நோய் குணமாகும். நம்மில் போரடிக்கொண்டிருக்கும் ஒன்றிற்கு ஒன்று முரணான இயல்புகள் எதிராளியாக இருந்தால்தான் நாம் வளர முடியும்.

'பாம்பு பாம்பாக இல்லை என்றால் சிறுவர்கள் விறகோடு சேர்த்துக் கட்டிவிடுவார்கள்' என்பது ஆப்பிரிக்க பழமொழி. எதிராளியாக இல்லாதவரின் நிலையும் அப்படியே!


No comments:

Post a Comment