Tuesday 22 January 2019

ஆண்டின் பொதுக் காலம் 3-ஆம் ஞாயிறு

 ஆண்டின் பொதுக் காலம் 3-ஆம் ஞாயிறு
 

இன்றைய நற்செய்தி வாசகங்கள்:-

நெகேமியா 8:2-4 அ, 5-6, 8-10
1 கொரிந்தியர் 12:12-30
லூக்கா 1:1-4, 4:14-21
 





அன்று ஓய்வு நாள் . செபக்கூடத்திற்குச் சென்ற இயேசு வாசிக்க எழுந்தார். அவர் கையில் எசாயா எழுதிய இறைவாக்குகளின் ஏட்டுச் சுருள் தவழ்ந்தது. அதை விரித்தார், படித்தார். இயேசுவின் விளக்கம் தேன் என்று சொல்லும் அளவுக்கு இதமாக இருந்தது. மக்களுக்கு மறு வாழ்வு கொடுக்கத் தான் பாடுபடப்போவதாக இயேசு உரைத்தபோது இருந்தவர்கள் எல்லையில்லா பெருமகிழ்ச்சி அடைந்தார்கள்.

இயேசு தான் போதித்ததைச் சாதித்துக் காட்டிய ஒரு சாதனை நாயகன். நேர்மையாளரை வெள்ளி காசுக்கும், வறியவரை இரு காலணிக்கும் விற்கிறார்கள் என்று ஆமோஸ் (ஆமோ. 2:6) எழுதி வைத்திருக்கிறார். அப்படிப்பட்ட வறியவர்க்கே நற்செய்தி போதிக்க வந்ததாக இயேசு கூறுகிறார்.

ஆம்! அன்று பாவச் சிறையிலிருந்த மகதலா மரியா (லூக். 7:36-40), நல்ல கள்ளன் (லூக். 23:43) போன்றவர்களுக்கு சுதந்திரம் அளித்தார் இயேசு. நேர்மையாளரைக் குறித்து உண்டாகும் மகிழ்ச்சியைவிட, மனம் மாறிய ஒரு பாவியைக் குறித்து விண்ணுலகில் மிகுதியான மகிழ்ச்சி உண்டாகும் (லூக். 15:7) என நான் உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். ஏழை எளியவருக்கு உதவாத எந்த இதயமும் இயேசுவுக்கு ஏற்புடையது அல்ல என்பது இங்கே நமக்குப் புலனாகிறது. இன்றைய முதல் வாசகமும் இதே கருத்தைத்தான் வலியுறுத்துகிறது.

நம்மைச் சுற்றியுள்ளவர்களை நாம் வெறுத்தால் அது நம்மையே வெறுத்ததற்கு ஒப்பாகும். காரணம் மனித சமுதாயம் என்பது ஓர் உடலைப் போன்றது. அந்தச் சமுதாயத்தில் உள்ள அனைவரும் உடலின் உறுப்புகள் என்பதை இன்றைய இரண்டாம் வாசகம் கோடிட்டுக் காட்டுகிறது. கிறிஸ்தவ வாழ்வில் பொறாமை, அநீதி, அக்கிரமம், வஞ்சகம், சூழ்ச்சி, சுயநலம் என்ற சொற்களுக்கே இடமில்லை .


கடையிலே இரண்டு பெண்கள் பூ வாங்கினார்கள். ஒருத்தி வாங்கிய பூவை தலையிலே சூடி, பொழுது விடிந்ததும் குப்பையிலே தூக்கி எறிந்தாள். அடுத்தவளோ வாங்கிய பூவை தெய்வத்திற்கு வைத்தாள். பொழுது விடிந்ததும் பக்தர்கள் தெய்வத்திற்கு படைக்கப்பட்ட பூவை குருவிடமிருந்து பெற்றுச் சென்று பெட்டியிலே பத்திரமாக பூட்டி வைத்தார்கள். ஒன்றுதான். ஆனால் ஒரு முழம் குப்பையிலே . மறு முழம் பெட்டியிலே. வாழ்க்கை முறைக்கு ஏற்ப அந்த வாழ்க்கையின் அர்த்தம் தாழ்ந்தோ, உயர்ந்தோ நிற்கும்.

ஏழை, எளியவர்களை அன்பு செய்து, ஆண்டவராம் நம் இயேசு வாழ்ந்த அர்த்தமுள்ள வாழ்க்கை என்றும் விடிவெள்ளியாக நம் வாழ்க்கையில் சுடர் விடுவதாக.




வருத்தத்தைப் போக்கி கிறிஸ்து வளமையோடு நம்மை வாழவைப்பார்


இன்றைய பாரதத்தின் மக்கள் தொகை ஏறக்குறைய 125 கோடி. இவர்களில் பல கோடி மக்கள் ஒருவேளை உணவோடு உறங்கச் செல்கின்றார்கள்! இன்று பல வீடுகளில் கூரை வழியாக வறுமை எட்டிப்பார்த்துக்கொண்டிருக்கின்றது.

பாவம் தலைவிரித்தாடுகின்றது. 30.12.2006 தேதியிட்ட தமிழ் நாளேடு ஒன்றில் வந்த செய்தி இது. சென்னையில் நடந்த கொடூரம் இது! செல்ஃபோன் வாங்கவேண்டுமென்பதற்காக ஒருவனுடைய மூன்று நண்பர்கள் அவனைக் கடத்திச்சென்று அவனைக் குத்திக் கொலை செய்திருக்கின்றார்கள். மூன்று பேரும் 18 வயதிற்கு உட்பட்டவர்கள்.

சர்க்கரை வியாதியின் சாம்ராஜ்யமாக மாறிக்கொண்டு வருகின்றது இந்தியா!

மரணம்! இன்று நம் நடுவே எத்தனை கார் விபத்துக்கள், இரயில் விபத்துக்கள், விமான விபத்துக்கள்! நான் பயணம் செய்யும்போது தவறாது செய்யும் மன்றாட்டு: கடவுளே என்னையும் இந்த வாகனத்தை ஓட்டும் ட்ரைவரையும் காப்பாற்றும் என்பதாகும்! பயணம் செய்து திரும்பி வரும்போது அப்பாடா பிழைத்தோம் என பெருமூச்சு விட வேண்டியிருக்கின்றது.

நம்மைச் சுற்றி ஒரு புறம் வறுமை! மறு புறம் நோய்! வேறொரு புறம் மரணம்! நமது வாழ்க்கையில் எத்தனைக் கீறல்கள்! இறுக்கத்திலிருந்தும், தயக்கத்திலிருந்தும் விடுபட்டு நாம்
சுதந்தரப் பறவைகளாக சிறகடித்துப் பறக்க முடியாதா? ஏன் முடியாது? முடியும் என்கின்றது இன்றைய நற்செய்தி ! இன்று இயேசு நற்செய்தியிலே தோன்றி, ஆண்டவருடைய ஆவி என்மேலே. அவர் என்னை அருள்பொழிவு செய்துள்ளார். எளியோர்க்கு நற்செய்தியை அறிவிக்கவும், சிறைப்பட்டோர்க்கு விடுதலை வாழ்வு வழங்கவும், அடிமைகளுக்கு உரிமை வாழ்வு கொடுக்கவும், கண்ணொளி இழந்தவர்க்குப் பார்வை வழங்கவும், அருள்தரும் ஆண்டினை அறிவிக்கவும் தாம் அனுப்பப்பட்டதாகக் கூறுகின்றார்.

இவர் போதித்ததைச் சாதித்துக் காட்டியவர்!

யோவா 2:1-11: கானாவூர் கல்யாணம்! அங்கே பஞ்சம்! வறுமை ! திருமணத்திற்குத் தேவையான திராட்சை இரசம் வேண்டும்.

இயேசு என்னும் மீட்பர் அங்கே தோன்றி, புதுமை செய்து கல்யாண வீட்டின் இறுக்கத்தையும் புழுக்கத்தையும் போக்கினார்.

மத் 9:27-31: அவர்கள் இருவரும் பார்வை இழந்தவர்கள்! ஆகவே பாதையோரத்தில் தள்ளப்பட்டார்கள். மீட்பர் இயேசு அவர்களைச் சந்திக்க, அங்கே புதுமை ஒன்று நடந்தது. அவர்களது இறுக்கமும் புழுக்கமும் நீங்கின.

லூக் 7:36-50: அவள் ஒரு பாவத் தொடர்கதை! எங்கோ , எப்படியோ, மன நிம்மதியைத் தொலைத்துவிட்டாள். இயேசு என்னும் மீட்பரை அவள் சந்தித்தாள்! அவள் வாழ்க்கையிலே வசந்தம் பிறந்தது. அவளிடமிருந்த இறுக்கமும் புழுக்கமும் மறைந்தன.

யோவா 11:1- 44 : இலாசரை அடக்கம் செய்துவிட்டார்கள்! இலாசர் அடக்கம் செய்யப்பட்டபோது அவரது சகோதரிகளின் மகிழ்ச்சியும் அடக்கம் செய்யப்பட்டது. அங்கே இயேசு என்னும் மீட்பர் தோன்றினார்! இலாசர் உயிர்பெற்று எழுந்தார்! அந்த சகோதரிகளின் மனத்திலிருந்த இறுக்கமும் நடையிலிருந்த தயக்கமும் மறைந்தன.


அன்று அப்படிப் புதுமை செய்த இயேசு இன்றும் நம் நடுவிலே நற்கருணை உருவிலே வாழ்ந்து கொண்டிருக்கின்றார். நாம் செய்யவேண்டியதெல்லாம் ஒன்றே!

லூக் 11 : 9: கேளுங்கள் கொடுக்கப்படும், தட்டுங்கள் திறக்கப்படும், தேடுங்கள் கண்டடைவீர்கள் என்றவரிடம்,

மத் 21: 22: நீங்கள் நம்பிக்கையோடு கேட்பதையெல்லாம் பெற்றுக்கொள்வீர்கள் என்றவரிடம்,

திவெ 3:20: இதோ நான் கதவருகில் நின்று தட்டிக்கொண்டிருக்கின்றேன். நீங்கள் கதவைத் திறந்தால் உள்ளே வந்து உணவருந்துவேன் என்றவரிடம்

நாம் நமக்கு வேண்டியதைக் கேட்க வேண்டும்; அவரது ஆசியை, உதவியை நாம் பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.

டி.வி.யில் கோடீஸ்வரன், குரோர்பதி நிகழ்ச்சியைப் பார்த்திருக்கின்றோம். அதில் ஒரு காலக்கட்டத்தில் ஹெல்ப் லைன்ஐ அதாவது வெளியே இருந்து நமக்குக் கிடைக்கக்கூடிய உதவியைப் பயன்படுத்திக்கொள்கின்றீர்களா? என்று கேட்பார்கள்.

நாம் அன்றாட வாழ்க்கையிலே 3 ஹெல்ப் லைன்களைத்தான் பயன்படுத்துகின்றோம். அதாவது மூன்று உதவிகளைத்தான் நாம் பயன்படுத்திக்கொள்கின்றோம்.

ஒன்று இயற்கையின் வளங்களை, பொன்னையும், மண்ணையும், மணியையும் பயன்படுத்தி நமது வாழ்க்கையை வளப்படுத்திக்கொள்ளப்பார்க்கின்றோம்.

இரண்டாவதாக நமது திறமைகளைப் பயன்படுத்தி நமது வாழ்க்கையை வளப்படுத்திக் கொள்ளப்பார்க்கின்றோம்.


மூன்றாவதாக நமது சொந்தங்களையும் பந்தங்களையும் நண்பர்களையும் அன்பர்களையும் பயன்படுத்தி நமது வாழ்க்கையை வளமாக்கிக்கொள்ள விரும்புகின்றோம்.

நான்காவது ஹெல்ப் லைன் ஒன்று உண்டு! அது ஹியூமன் ஹெல்ப் லைன் அல்ல ! அது டிவைன் ஹெல்ப் லைன் ! அது ஒரு தெய்வீக உதவி! அது மீட்பராம் இயேசுவிடமிருந்து வரும் அற்புத உதவி, ஆனந்த உதவி, அதிசய உதவி. அந்த உதவியைப் பெற நாம் செய்யவேண்டியதெல்லாம் ஒன்றே!

ஆண்டவரை உதவிக்கு அழைத்தால் போதும்!

வறுமையும் நோயும் பாவமும் மரண பயமும் சூழ்ந்து நின்று நம்மை அச்சுறுத்தும்போது கூனிக்குறுகிப்போய் கலக்கத்திற்கும் கவலைக்கும் கண்ணீருக்கும் இடம் கொடுக்காமல் எல்லா ஆற்றலும் மிக்க இயேசு ஆண்டவர் பக்கம் நமது நம்பிக்கை நிறைந்த கண்களைத் திருப்புவோம். நாம் கிறிஸ்துவின் உடல் (இரண்டாம் வாசகம்). ஆகவே அவர் நமது உடலிலுள்ள எந்த உறுப்பையும் துன்புற விடமாட்டார். அவர் நமது அழுகையை அழித்து, வருத்தத்தைப் போக்கி, நம்மை வளமுடன் வாழவைப்பார் (முதல் வாசகம்).

மேலும் அறிவோம்:
தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் (கு) அல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது (குறள் : 7).
பொருள் : தன்னிகரற்ற அருளாளனாகிய இறைவன் திருவடி சேர்வோர் உள்ளத்தில் துன்ப துயரங்கள் நீங்கிவிடும். ஏனையோர்
மனக்கவலை மாறாது.



எட்டாம் வகுப்பு மாணவர்களிடம் வகுப்பு ஆசிரியர் அவர்களுடைய முக்கியமான பிரச்சினை என்னவென்று கேட்டதற்கு அவர்கள்: "எங்கள் பெற்றோர்கள்" என்றனர். பிள்ளைகள் தங்களுடைய பெற்றோர்களின் கட்டுப்பாட்டிலிருந்து விடுதலை பெற விரும்புகின்றனர். கல்லூரி மாணவர்களின் தாரக மந்திரம்: "கல்லூரிக்குக் 'கட்' அடிப்போம்; தேர்விலே 'பிட்' அடிப்போம்; பெண்களைச் 'சைட்' அடிப்போம்", இது கல்லூரி மாணவர்களின் கனாக்காணும் காலங்கள்! ஒரு கணவர் தம் மனைவியிடம், "நீ என்னை உன் நாயைப் போல் நடத்து; நாயோடு கொஞ்சி விளையாடுவதுபோல் என்னுடனும் கொஞ்சி விளையாடு: நாயுக்கு வயிறு நிறைய சாப்பாடு போடுவது போல எனக்கும் வயிறு நிறைய சாப்பாடு போடு, எல்லாவற்றிற்கும் மேலாக, நாயை இரவிலே அவிழ்த்து விடுவதுபோல, என்னையும் அவிழ்த்துவிடு: தேடாதே" என்றார். இது ஒரு கணவர் காணும் விடுதலை வாழ்வு!

இன்றைய உலகிலே எல்லாருமே எவ்விதக் கட்டுப்பாடு மின்றிச் சுதந்திரப் பறவையாகப் பறக்க விரும்புகின்றனர். ஆனால், விடுதலைப் பெருமூச்சு விடுவதற்குப் பதிலாக ஏக்கப் பெருமூச்சு விடுகின்றனர். விடியலைத் தேடுபவர்கள் அமாவாசை இருட்டில் அகப்பட்டு அவதிப்படுகின்றனர். எங்கே விடுதலை? என்று வினவுகின்றனர், இவ்வினாவுக்கு விடையளிக்கிறது இன்றைய அருள்வாக்கு வழிபாடு. கடவுள் இஸ்ரயேல் மக்களை எகிப்தின் அடிமைத்தளையிலிருந்து விடுவித்து, அவர்களுடன் உடன்படிக்கை செய்தார். ஆனால் அந்த மக்களோ கடவுளுக்குக் கீழ்ப்படியாமல், அவருடைய கட்டளைகளை மீறி, பிற இனத்தெய்வங்களை வழிபட்டனர். அதன் விளைவாகப் பல்வேறு நாடுகளுக்கு அடிமைகளாகக் கொண்டு செல்லப்பட்டனர். கி.மு. 5ஆம் நூற்றாண்டில் பாபிலோனியாவுக்கு யூதர்கள் அடிமைகளாகச் சென்றனர்.

50 ஆண்டுகள் அடிமை வாழ்வுக்குப் பின்னர், சீருஸ் மன்னர் அவர்களுக்கு விடுதலை அளித்தார். அவர்கள் 61 ருசலேம் திரும்பி, ஆலயத்தை மீண்டும் கட்டி எழுப்பி ஆண்டவரை வழிபட முயற்சி எடுத்தனர், எஸ்ரா என்ற சட்ட வல்லுநர் மக்களுக்குச் சட்ட நூலை வாசித்தபோது அவர்கள் அழுதனர் (முதல் வாசகம்). கடவுளும் அவருடைய அருள் வாக்கு அடங்கிய மறைநூலும் அவர் களுக்கு விடுதலை கொடுத்தது. கடவுளை விட்டு அகலும் எவரும் அடிமைகளாகின்றனர்; கடவுளை நெருங்கும் எவரும் விடுதலை பெறுகின்றனர். கடவுளுக்கு வெளியே தேடும் விடுதலை வெறும் பகற்கனவே! இன்றைய நற்செய்தியில் கிறிஸ்து நாசரேத்து தொழுகைக் கூடத்தில் இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து தம்மைக் குறித்து எழுதப்பட்ட பகுதியை (எசா 61:1-2) வாசித்து, மக்களிடம் கூறியது: "நீங்கள் கேட்ட இந்த மறைநூல் வாக்கு இன்று நிறைவேறிற்று" (லூக் 4:21). மறைநூலின் மையம் கிறிஸ்து. மறைநூலில் எழுதப்பட்ட எல்லா இறைவாக்குகளும் கிறிஸ்துவில் நிறைவடைகின்றன, மறைநூல் கிறிஸ்துவுக்குச் சாட்சியம் அளிக்கிறது (யோவா 5:39). முற்காலத்தில் இறைவாக்கினர் வாயிலாக முன்னோரிடம் பேசிய கடவுள் இறுதிக் காலத்தில் கிறிஸ்து வழியாகப் பேசியுள்ளார் (எபி 1:1).

கிறிஸ்து மக்களுக்கு வழங்கிய செய்தி விடுதலைச் செய்தி. எளியவர்களுக்கு நற்செய்தி சொல்லவும் ஒடுக்கப்பட்டவர்களுக்கு உரிமை வாழ்வு வழங்கவும் அவர் இவ்வுலகிற்கு வந்தார், கிறிஸ்து கொண்டு வந்த விடுதலை வெறும் புறவிடுதலை மட்டுமல்ல, மாறாக அக விடுதலை, ஆன்மீக விடுதலை, அவர் யூதர்களிடம் கூறியது: "பாவம் செய்யும் எவரும் பாவத்திற்கு அடிமை. மகன் உங்களுக்கு விடுதலை அளித்தால்தான் நீங்கள் உண்மையில் விடுதலை பெற்றவராய் இருப்பீர்கள்" (யோவா 8:34-36). கிறிஸ்து தான் உலகின் பாவங்களைப் போக்கும் உண்மை யான செம்மறி (யோவா 1:29), அவர் பலருடைய பாவ மன்னிப்புக்காக இரத்தம் சிந்தினார் (மத் 26:28). நாம் பாவத்திலிருந்து விடுதலை பெற வேண்டும். 38 ஆண்டுகளாகத் தீராத நோயால் அவதிப்பட்ட ஒருவரைக் குணப்படுத்திய கிறிஸ்து, மீண்டும் அவரைப் பார்த்த போது அவரிடம் கூறியது: "பாரும்! நீர் நலமடைந்துள்ளீர். இதை விடக் கேடான எதுவும் உமக்கு நிகழாதிருக்க இனிப்பாவம் செய்யாதீர்" (யோவா 5:14). ஒரு தீய செயல் மற்றொரு தீய செயலுக்கு வித்திடுவதால், தீக்குப் பயப்படுவதை விடத் தீய செயலுக்குப் பயப்பட வேண்டும்.

தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப்படும் (குறள் 202)

அழிவுக்குச் செல்லும் அகலமான பாதையில் செல்லாது. வாழ்வுக்கு இட்டுச் செல்லும் இடுக்கமான வாயிலின் வழியாகச் செல்ல அழைப்பு விடுக்கிறார் ஆண்டவர் (மத் 7:13-14). பாவங்களில் எல்லாம் கொடிய பாவம் வடிகட்டிய தன்னலம். பிறரைப் பற்றி அலட்டிக் கொள்ளாத நிலை. இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல் திருச்சபையை, இறைமக்கள் சமூகத்தை ஓர் உடலுக்கு ஒப்பிடுகிறார். உடலில் ஒர் உறுப்பு துன்புற்றால், உடல் முழுவதும் துன்புறுகிறது. உடலில் ஓர் உறுப்பு இன்புற்றால், முழு உடலும் இன்புறுகிறது (1 கொரி 12:26). அவ்வாறே நாமும் பிறருடைய துன்பத்தை நம்முடைய துன்பமாகவும், பிறருடைய இன்பத்தை நம்முடைய இன்பமாகவும் கருதி. அழுவாரோடு அழுது மகிழ்வாரோடு மகிழ வேண்டும் (உரோ 12:15) நமக்குச் சமுதாய அக்கறை வேண்டும். பிறருடைய துன்பத்தை நம்முடைய துன்பமாகக் கருதாவிட்டால், நம்மிடம் பகுத்தறிவு இருந்தும் அது பயனற்றது.

அறிவினான் ஆகுவது உண்டோ பிறிதின் நோய்
தம் நோய்போல் போற்றாக் கடை             (குறள் 315)

ஒரு பெரியவர் ஒரு குடும்பத் தலைவரிடம், “மனிதராகப் பிறந்ததற்கு நாலு பேருக்கு நன்மை செய்ய வேண்டும்" என்றார். அதற்குக் குடும்பத் தலைவர், "நானும் நாலு பேருக்கு நன்மை செய்கிறேன். அவர்கள் எனது மனைவியும் எனது மூன்று பிள்ளைகளும்” என்றார், நமது அன்பு நமது குடும்பம் என்னும் குறுகிய வட்டத்துக்குள் முடங்கிவிடாமல் மற்றவர்களையும் அரவணைக்கும் உலகளாவிய அன்பாக இருக்கவேண்டும். புறநானூற்று ஆசிரியர் இந்த உலகம் இன்னும் அழியாமல் இருப்பதற்குக் கூறும் காரணம்: இவ்வுலகில் இன்னும் தனக்காக வாழாமல் பிறருக்காக வாழும் மனிதர் ஒரு சிலர் இருப்பதால்,

"உண்டால் அம்ம இவ்வுலகம்... தமக்கென முயலா நோன்தான்,
பிறர்க்கென முயலுநர் உண்மையானே”  (புறம் 182)

பாவத்திலிருந்து குறிப்பாகத் தன்னலத்திலிருந்து விடுதலை அடைந்து, உலகம் தரமுடியாத அமைதியைப் பெற்று மகிழ்வோம்.




துணிவுள்ள இறைவாக்கினர்களாவோம்

 
நிகழ்வு
 
         விவேகானந்தர் அமெரிக்கா சென்றிருந்த தருணம், அங்கிருந்த பல இடங்களுக்குச் சென்று அவர் சொற்பொழிவு ஆற்றிவந்தார். அவ்வாறு அவர் சென்ற இடங்களிலெல்லாம், ‘இறைவன்மீது நம்பிக்கை வைத்து வாழவேண்டும், அப்படி வாழ்கின்றபோது எதைக் குறித்தும் பயப்படத் தேவையில்லை’ எனப் பேசிவந்தார்.

இதை நுட்பமாகக் கவனித்துவந்த ஒருசில இளைஞர்கள், ‘இந்த மனிதர் செல்லும் இடங்களிலெல்லாம் இறைவன்மீது நம்பிக்கை வைத்து வாழவேண்டும், துணிவோடு இருக்கவேண்டும் என்று போதித்துக்கொண்டு வருகிறாரே, உண்மையில் இவர் துணிவுள்ள மனிதர்தானா? என்பதை சோதித்துப் பார்ப்போம்’ என்று அதற்கான வேலைகளில் அவர்கள் இறங்கினார்கள்.

ஒருநாள் விவேகானந்தர் ஒரு பெரிய அரங்கில் சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்தார். அப்போது திடிரென்று அந்த அரங்கத்திற்குள் நுழைந்த ஒருசில முகமூடி அணிந்த மர்ம நபர்கள், துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டார்கள். இப்படியொரு திடீர் தாக்குதலை யாரும் எதிர்பாராததால், அரங்கில் இருந்த எல்லாரும்  அலறியடித்துக்கொண்டு வெளியே ஓடினார்கள். ஒருசில பெண்கள் துப்பாக்கிச் சத்தம் கேட்டு அந்த இடத்திலேயே மயக்கம் போட்டு விழுந்தார்கள். ஆனால் ஒரே ஒருவர் மட்டும் தான் இருந்த இடத்தை விட்டு நகராமல், அப்படியே இருந்தார். அது வேறுயாருமல்ல, விவேகானந்தர்தான்.

ஏறக்குறைய பத்து நிமிடங்களுக்கு மேல் நடைபெற்ற துப்பாக்கிச் சுடுதல் ஒருவழியாக ஓய்ந்தது. அதிர்ஷ்டவசமாக யார்மீதும் குண்டுகள் பாயவில்லை. இதற்குப் பின்பு எல்லாரும் அரங்கத்திற்குள் வந்ததும், விவேகானந்தர் எந்தவொரு பதட்டமோ, பயமோ இல்லாது  தான் விட்ட இடத்திலிருந்து பேசத் தொடங்கினார். எல்லாரும் ஆச்சரியத்தோடு அவரைப் பார்த்தார்கள். அந்நேரத்தில் அங்குவந்த ஒருசிலர் இளைஞர்கள் விவேகானந்தரிடம் சென்று, “சுவாமி! எங்களை மன்னித்துக் கொள்ளுங்கள். நாங்கள்தான் இந்தத் துப்பாக்கிச் சுடுதலில் ஈடுபட்டோம்... நீங்கள் எத்துணைத் துணிவுள்ளவர் என்பதைச் சோதித்துப் பார்க்கவே இவ்வாறு செய்தோம்... துப்பாக்கிச் சத்தம் கேட்டு எல்லாரும் ஓடி ஒழிந்தபோது, நீங்கள் மட்டும், எதற்கும் பயப்படாமல், அப்படியே இருந்தீர்கள் அல்லவா!. உண்மையில் நீங்கள் துணிவுள்ள மகன்தான்” என்று அவரை வெகுவாகப் பாராட்டினார்கள்.

இறைவனைப் பற்றிப் போதிப்பவர்கள், இறைவார்த்தையை எடுத்துரைக்கும் இறையடியார்கள், எதற்கும் அஞ்சாமல் துணிவோடு இருக்கவேண்டும். அதற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டுதான் இந்த நிகழ்வு.

இயேசு என்னும் பெரிய இறைவாக்கினர்

பொதுக்காலத்தின் மூன்றாம் ஞாயிற்றுக்கிழமையில் இருக்கின்ற நமக்கு இன்றைய இறைவார்த்தை, நாம் ஒவ்வொருவரும் துணிவுள்ள இறைவாக்கினராக வாழவேண்டும் என்றொரு அழைப்பைத் தருகின்றது. நாம் எப்படி இயேசுவைப் போன்று துணிவுள்ள இறைவாக்கினர்களாக வாழலாம் என்று இறைவார்த்தையின் ஒளியில் சிந்தித்துப் பார்ப்போம்.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு நாசரேத்தில் உள்ள  தொழுகைக்கூடத்திற்கு சென்று கற்பிக்கின்றார். லூக்கா நற்செய்தியில் இடம்பெறுகின்ற இந்த நிகழ்வு இயேசுவை இறைவாக்கினருக்கெல்லாம் பெரிய இறைவாக்கினராகவும், இயேசுவின் வழியில் நடக்கின்ற ஒவ்வொருவரும் அவர்போன்று எப்படி நடக்கவேண்டும் என்ற சிந்தனையையும் நமக்குத் தருகின்றது.




  1. வழிபாடுகளில் தவறாது கலந்துகொண்ட இயேசு   

மறைத்திரு. மரிய அந்தோணிராஜ்,  

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு தமது வழக்கப்படி, ஓய்வுநாளில் தொழுகைக்கூடத்திற்குச் சென்றார் என்று வாசிக்கின்றோம் (4:16). அப்படியானால், அவர் வழிபாடுகளில் தவறாது கலந்துகொண்டு, ஆண்டவரோடு கொண்டிருந்த உறவில், அன்பில் நிலைத்திருந்தார் என்று உறுதியாகச் சொல்லலாம். இந்த நிகழ்வு மட்டும் கிடையாது. பனிரெண்டு வயது நிரம்பிய ஒவ்வொரு யூதரும் எருசலேமில் ஆண்டுதோறும் நடைபெறும் பாஸ்கா விழாவில் கலந்துகொள்ளவேண்டும். இயேசு அதில் தவறாது கலந்துகொண்டார் என்பதை விவிலியம் நமக்கு மிகத் தெளிவாக எடுத்துரைக்கின்றது (லூக் 2:41-42, யோவா 2:13). இயேசுவுக்கு பரிசேயர்கள் பின்பற்றி வந்த சடங்குமுறைகளில் மாற்றுக்கருத்து இருந்தாலும்கூட, அதைக் குறித்து காரசாரமாக அவர்கோடு அவர் விவாதித்தாலும்கூட, வழிபாடுகளில் தவறாது கலந்துகொண்டு இறை மனித உறவில் நிலைத்திருந்தார்.

இன்றைக்கு ஒருசிலர், நான் ஏன் ஆலயத்திற்குச் சென்று ஆண்டவனை வழிபடவேண்டும்? என்று பிதற்றுவதைப் பார்க்க முடிகின்றது. இத்தகையோர் இயேசுவின் வாழ்வை ஆழமாக படித்துப் பார்ப்பது நல்லது. நாம் ஏன் வழிபாடுகளில் கலந்துகொள்ளவேண்டும் என்பதற்கான தெளிவாக பதிலை எபிரேயர் திருமுகத்தின் ஆசிரியர் இன்னும் அழகாக எடுத்துரைப்பார். “சிலர் வழக்கமாகவே நம் சபைக் கூட்டங்களில் கலந்துகொள்வதில்லை. நாம் அவ்வாறு செய்யலாகாது; ஒருவருக்கொருவர் ஊக்கமூட்டுவோமாக; இறுதிநாள் நெருங்கிவருவதைக் காண்கின்றோம்; எனவே இன்னும் அதிகமாக ஊக்கமூட்டுவோம்” என்று. (எபி 10:25). ஆம், வழிபாடு என்பது இறைவனைத் தொழுவதற்காக மட்டுமல்ல, நம்மை நாமே ஊக்கப்படுத்திக்கொள்ளவும்தான். இதனை நாம் உணர்ந்து செயல்படுவது நல்லது.

  1. ஆண்டவரின் அருள்தரும் ஆண்டினை எடுத்துரைத்த இயேசு   

தொழுகைக்கூடத்திற்குச் செல்கின்ற இயேசு, எசாயாவின் சுருளேட்டை எடுத்து வாசிக்கத் தொடங்கிவிட்டு, அதற்கு விளக்கம் கொடுக்கத் தொடங்குகின்றார். வழக்கமாக யூதர்களின் தொழுகைக்கூடத்தில் வழிபாடனது இறைவேண்டலோடு தொடங்கி, இறைவார்த்தை வாசிக்கப்பட்டு, அதற்கு விளக்கம் கொடுக்கப்படும். பின்னர் குருவானவர் (ரபி) இருந்தால் ஆராதனையோடு நிறைவுபெறும் (இச 6:4-9,11:13-21) இயேசு தொழுகைக்கூடத்திற்குச் சென்றபோதும் அப்படித்தான் நடைபெறுகின்றது. இதை ஒட்டி இன்னொரு விஷயம், இயேசு வாசித்த எசாயாவின் சுருளேட்டை வாசிக்கின்றவர்கள், அதற்கு விளக்கம் கொடுக்கின்றபோது மெசியாவைக் குறித்து விளக்கம் கொடுப்பார்கள். ஆனால் இயேசுவோ, ‘நீங்கள் கேட்ட வாக்கு இன்று நிறைவேறிற்று’ என்கின்றார். அதுமட்டுமல்லாமல் ஆண்டவரின் அருள்தரும் ஆண்டினை எடுத்துரைக்க நான் வந்திருக்கிறேன் என்கின்றார்.


அருள்தரும் ஆண்டு அல்லது ஜூபிலி ஆண்டினைக் குறித்து லேவியர் புத்தகம் 25 அதிகாரம் எடுத்துச் சொல்கின்றது. ஏழு ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு வரும் ஐம்பதாம் ஆண்டில் அடிமைகள் விடுவிக்கப்பட்டு, கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யவும், நிலைத்திற்கு ஓய்வு கொடுக்கப்படவும் வேண்டும். இத்தகைய அருள்தரும் ஆண்டினை எடுத்துச் சொல்லும் இயேசு தன்னுடைய பணிவாழ்வில் செய்துகாட்டுகின்றார். பொருளாதார ரீதியில் அல்ல, ஆன்மீக ரீதியில் மக்களுடைய பாவங்களை மன்னித்து, மக்களுக்கு இளைப்பாற்றி வழங்குவதன் வழியாக.


இயேசு கிறிஸ்து, ஆண்டவரின் அருள்தரும் ஆண்டினை முழக்கமிட்டு அறிவிப்பதோடு மட்டுமல்லாமல், இன்னபிற காரியங்களையும் செய்வேன், அதுவும் எலியா, எலிசா இறைவாக்கினர்களைப் போன்று எல்லா மக்களுக்கு செய்வேன் என்று சொன்னதும், தொழுகைக்கூடத்தில் இருந்த யூதர்கள் கொதித்தெழுகிறார்கள்.
 

  1. துணிவுள்ள (பெரிய) இறைவாக்கினர் இயேசு

மெசியா என்பவர் யூதர்களுக்கு மட்டும்தான் சொந்தம் என்று நினைத்துக்கொண்டிருந்த யூதர்கள் மத்தியில், மெசியாவாகிய தான் யூதர்களுக்கு மட்டுமல்ல, எல்லா மக்களுக்கும் சொந்தம், எல்லாருக்கும் மத்தியிலும் தன்னுடைய பணி இருக்கும் என்று சொல்வதனால் தனக்குப் பெரிய பிரச்சனை வரும் என்று இயேசுவுக்கு நன்றாகவே தெரிந்திருக்கும். அப்படியிருந்தும் அவர் துணிவோடு தன்னுடைய பணியென்ன, தன்னுடைய பனியின் இலக்கு மக்கள்  யார்? யார்? என்று எடுத்துரைக்கின்றார். இதனால் யூதர்கள் இயேசுவை மலைமீது இருந்து தள்ளிவிட்டு கொல்லமுயல்கின்றார்கள்.

  ஏற்கனவே இயேசுவை தச்சர் மகன் என்று புறக்கணிக்கும் யூதர்கள், அவர் எல்லாருக்கும் மத்தியிலும் பணிசெய்வேன் என்று சொல்வதைக் கேட்டு அவரைக் கொல்லமுயல்கிறார்கள். அதற்காக பயந்துவிட்டு தன்னுடைய கொள்கையிலிருந்து அவர் பின்வாங்கிவிடவில்லை. மாறாக இறுதிவரைக்கும் துணிவுடன் இருந்து ஆண்டவரின் வார்த்தையை எடுத்துரைக்கின்றார். இயேசுவின் வழியில் நடந்து, இறைப்பணியை செய்கின்ற ஒவ்வொருவரும் எதிர்வரும் சவால்களைக் கண்டு பயந்துவிடாமல், துணிவோடு இருந்து இயேசுவுக்கு சான்று பகரவேண்டும் என்பதுதான் அவர் இந்நாளில் நம்மிடமிருந்து எதிர்பார்க்கின்ற ஒன்றாக இருக்கின்றது.

  சிந்தனை

 
இறைவாக்கினருக்கு ஏச்சுக்களும் பேச்சுக்களும் இலவசம் என்பதுபோல, இயேசுவின் வழியில் நடக்கின்ற ஒவ்வொருவருக்கும், அவர் பணிசெய்கின்ற ஒவ்வொருவருக்கும் அவரைப் போன்று ஏச்சுக்களும் பேச்சுக்களும் உண்டு. அதற்காக நாம் கலந்கிவிடாமல், அவர்மீது நம்பிக்கை வைத்து, துணிவோடு இறைவாக்கினர் பணியைச் செய்யவேண்டும். அப்போதுதான் நாம் துணிவுள்ள இறைவாக்கினர்களாக மாறமுடியும்.

  ஆகவே, இயேசுவின் வழியில் நடக்கும் நாம், துணிவுள்ள இறைவக்கினர்களாவோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.





அறியாமையிலிருந்து விடுதலை

இம்முறையும் பரிச்சயமான ஒரு கதையுடன் தொடங்குவோம். ஜென் துறவி கிம்கானிடம் ஒரு இளைஞன் வருகிறான். 'சுவாமி! எனக்கு வாழ்க்கை ரொம்பக்     கஷ்டமாக இருக்கிறது. எந்தப் பக்கம் திரும்பினாலும் ஆபத்து இருப்பது போல இருக்கிறது. யாரும் என்னைக் கண்டுகொள்வதில்லை. யாரைப் பார்த்தாலும் எனக்குப் பயமாக இருக்கிறது' என்று புலம்புகிறான். அப்போது கிம்கான் ஒரு உவமை சொல்கிறார்: 'காட்டு வழியே பயணம் செய்து கொண்டிருந்த ஒருவனை ஒரு புலி துரத்துகிறது. எப்படியாவது புலியிடமிருந்து தப்பி ஓடவிட வேண்டும் என நினைத்த அவன் வேகமாக ஓடுகிறான். ஓடும் வழியில் ஒரு பெரிய பள்ளத்தாக்கு. பின்னால் புலி. முன்னால் பள்ளத்தாக்கு. இருந்தாலும் பள்ளத்தாக்கில் குதிக்கிறான். குதித்து கீழே போய்க்கொண்டிருக்கும் வழியில் ஒரு மரத்தின் வேரைப் பற்றிக் கொள்கிறான். அப்பாடா! என்று பெருமூச்சு விட்டவாறு கீழே பார்க்கிறான். அங்கே புலி அவனுக்காகக் காத்திருக்கிறது. அண்ணாந்து மேலே பார்க்கிறான். இரண்டு எலிகள் அவன் பற்றியிருந்த வேரைத் தோண்டிக் கொண்டிருக்கின்றன. தன் அருகில் ஒரு ஸ்ட்ராபெரிக் கொடி. அழகான பழங்கள் தொங்கிக் கொண்டிருக்கின்றன. அதில் ஒன்றைப் பறித்து வாயில் போட்டு 'என்ன சுவையாய் இருக்கின்றது இந்தப்பழம்' என்றான் அவன்.' உடனே ஞானம் பெற்றான் இளைஞன்.

ஜென் கதைகள் பெரும்பாலும் நிறைவு பெறும்போது 'உடனே ஞானம் பெற்றான் சீடன்' என்றே முடிகின்றன. மதம் சார்ந்த போதனைகள் என்றாலும் சரி, மதம் சாராத போதனைகள் என்றாலும் சரி, பெரும்பாலும் இவை அனைத்தும் மனிதர்களை அறியாமையிலிருந்து விடுவிப்பதையே நோக்கமாகக் கொண்டிருக்கின்றன. அல்லது அறியாமை என்பது ஞானம் அடைவதற்கான தடையாக இருக்கிறது. அல்லது அறியாமை அகலும்போது ஞானம் பிறக்கிறது.

இன்றைய இறைவாக்கு வழிபாடு 'அறியாமையிலிருந்து விடுதலை' என்ற மையக்கருத்தைக் கொண்டு சுழல்கிறது.

இன்றைய முதல் வாசகம் (காண். நெகே 8:2-4,5-6,8-10) நெகேமியா நூலிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. ஏறக்குறைய கி.மு. 450ல் நெகேமியா ஆளுநராக இருந்தபோதுதான் சிதைந்து கிடந்த எருசலேம் நகரையும் ஆலயத்தையும் கட்டி எழுப்புகின்றார். எருசலேம் நகரின் மதில்களைக் கட்டி முடித்த அவர், ஏழைகளின் கடன்களை செல்வந்தர்கள் மன்னிக்க வேண்டும் என்று சமூகப் புரட்சியும், ஆலயத்தின் நிகழ்வுகளை ஒழுங்குபடுத்தவும் செய்தார். இவரோடு தோள் கொடுத்து நின்றவர் மறைநூல் அறிஞரும் குருவுமான எஸ்ரா. இருவரும் இணைந்து யூதா நாட்டை குழப்பத்திலிருந்தும், சமய கண்டுகொள்ளாத்தன்மையிலிருந்தும், ஏழ்மையிலிருந்தும் காப்பாற்றுகின்றனர்.

இந்தப் பின்புலத்தில் எஸ்ரா செய்த ஒரு முக்கியமான செயலைத்தான் இன்றைய முதல் வாசகத்தில் வாசிக்கின்றோம். இஸ்ரயேல் மக்கள் பாபிலோனியாவின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெற்று எருசலேம் திரும்பி ஏறக்குறைய ஒரு நூற்றாண்டு கடந்தாலும், அவர்கள் எதிர்பார்த்த அளவிற்கு ஆன்மீக, அரசியல், பொருளாதார, சமய நிலைத்தன்மையைப் பெற முடியவில்லை. கடவுள் தங்களைத் தண்டித்துவிட்டதாக எண்ணிய பலர் தங்களின் சமயத்தைக் கைவிடவும், தங்களின் சமகாலத்தில் மேலோங்கி நின்ற உலகியல் தத்துவங்களாலும் இழுக்கப்படுவும் செய்தனர். சமய மறுமலர்ச்சி காலத்தின் தேவையாக இருந்தது. எஸ்ரா தொடங்கிய மறுமலர்ச்சி ஒரு சமூக நிகழ்வாகத் தொடங்குகிறது. அனைத்து தண்ணீர் வாயிலுக்கு முன் இருந்த வளாகத்தில் ஒன்றுகூட்டுகிறார் எஸ்ரா. அவர்கள் முன் திருச்சட்டத்தை வாசிக்கின்றார். 'ஒரே ஆளென மக்கள் கூடிவந்தார்கள்' எனப் பதிவு செய்கிறார் ஆசிரியர். அதாவது, இவ்வளவு நாள்கள் தங்களுக்குள் மக்கள் வேறுபட்டுக் கிடந்தாலும், அவர்களின் வெறுமை மற்றும் அடிமைத்தன அனுபவம் எல்லாரையும் ஒன்றுகூட்டி, அவர்களுக்குள் இருந்த வேற்றுமைகளைக் களைகின்றது. 'ஆண்களும், பெண்களும், புரிந்து கொள்ளும் ஆற்றல் மிக்க சிறுவர்களும்' என அனைவரும் இணைந்து வருகின்றனர். இந்தச் சொல்லாடல் இரண்டு முறை பயன்படுத்தப்படுகிறது. எருசலேம் ஆலயம் ஆண்களை மட்டுமே உள்ளே அனுமதித்தது. பெண்கள் மற்றும் குழந்தைகள் வெளியில் நிறுத்தப்பட்டனர். ஆனால், தோரா என்னும் இறைவார்த்தையை கேட்க எல்லாரும் அழைக்கப்படுகின்றனர். மேலும், தோரா முன் எல்லாரும் சமம் என்னும் நிலை உருவாகிறது.

எஸ்ரா திருச்சட்ட நூலை வாசிக்க, மக்கள் அறியாமையிலிருந்து விடுதலை பெறும் நிகழ்வு மூன்று பகுதிகளாக நடக்கிறது: (அ) 'திருநூலைத் திறந்தபோது எல்லாரும் எழுந்து நின்றார்கள்,' (ஆ) 'எஸ்ராவோடு இணைந்து கடவுளை வணங்கினர்,' (இ) 'வாசிக்கப்பட்டதன் பொருளைப் புரிந்துகொண்டனர்.' 'எழுந்து நிற்றல்' மக்களின் தயார்நிலையையும், 'முகங்குப்புற பணிந்து வணங்குதல்' அவர்களின் சரணாகதியையும், 'பொருளைப் புரிந்துகொள்ளுதல்' அவர்கள் பெற்ற தெளிவையும் குறிக்கிறது. திருச்சட்ட நூலின் பொருள் புரிந்த மக்கள் அழுது புலம்பியதாகவும் அவர்களை எஸ்ரா ஆறுதல் படுத்துவதாகவும் பதிவு செய்கிறார் ஆசிரியர்.

இவர்கள் ஏன் அழுதார்கள்? 'பல்வேறு நிலைகளில் தங்கள் ஆண்டவர் தங்களை வழிநடத்தியதை மறந்து போன தங்களின் மறதிக்காக' அழுதார்களா? அல்லது 'இறைவன் இவ்வளவு நாள்கள் தங்களை கைவிட்டதற்காக' அழுதார்களா? அல்லது 'இத்திருச்சட்டத்திற்கும் தங்கள் வாழ்விற்கும் இடையே எவ்வளவு பெரிய விரிசல் இருக்கிறது என்ற குற்ற உணர்வால்' அழுதார்களா? இந்த மூன்று காரணங்களுக்காகவும் அழுதிருக்கலாம். ஆனால், இவர்களின் கண்ணீர் இவர்களின் அறியாமையிலிருந்து விடுதலை பெறச் செய்கிறது. ஆகையால்தான், மக்களின் கண்ணீர்ப் பெருக்கைக் கண்ட எஸ்ரா உடனடியாக, 'இன்று கடவுளாகிய ஆண்டவரின் புனித நாள். எனவே அழுது புலம்ப வேண்டாம். நீங்கள் போய்க் கொழுத்தவற்றை உண்டு, இனிய திராட்சை இரசத்தைக் குடியுங்கள். எதுவும் தயார் செய்யாதவருக்குச் சிறிது அனுப்பி வையுங்கள் ... ஏனெனில் ஆண்டவரின் மகிழ்வே உங்களது வலிமை' என அறிவுறுத்துகிறார்.

எஸ்ராவின் இவ்வார்த்தைகளில், (அ) 'அழ வேண்டாம்' என்ற கட்டளையும், (ஆ) இல்லாதவரோடு பகிருங்கள் என்ற கரிசனையும், (இ) 'ஆண்டவரின் மகிழ்வே உங்களின் வலிமை' என்ற வாக்குறுதியும் இருக்கிறது. 'அழவேண்டாம்' என்ற செய்தியானது இங்கே நான்கு முறை சொல்லப்படுகின்றது. 'ஆண்டவரின் மகிழ்வே' என்னும் சொல்லாடலை, 'ஆண்டவர் தரும் மகிழ்வு' அல்லது 'ஆண்டவர் என்னும் மகிழ்வு' என்று பொருள் கொள்ளலாம். இனி இறைவார்த்தையின் வடிவில் விளங்கும் இறைவனின் மகிழ்ச்சியே இஸ்ரயேல் மக்களின் வலிமையாக இருக்கப்போகிறது.

ஆக, இறைவனைப் பற்றிய அறியாமையில் இருந்த மக்கள் அவரின் இருப்பை திருச்சட்ட நூல் வாசிப்பின் வழியாக உணர்ந்ததால், அவர்களின் அறியாமையிலிருந்து விடுதலை பெறுகின்றனர். இதன் விளைவு, ஆண்டவரின் மகிழ்வைத் தங்களின் வலிமையாக மாற்றிக்கொள்கின்றனர்.

இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். 1 கொரி 12:12-30), தங்களுக்குள் யார் பெரியவர்? யார் அதிகக் கொடைகள் பெற்றவர்? தங்களுள் யார் மேன்மையானவர்? என்ற பிளவுபட்டு நின்ற கொரிந்து நகரத் திருச்சபைக்கு, உடல் மற்றும் அதன் இருப்பு-இயக்கத்தை உருவமாக முன்வைத்து அனைத்து உறுப்புகளும் இணைந்து செயல்படுவதன் அவசியத்தை வலியுறுத்துகின்றார்.

இன்றைய இரண்டாம் வாசகப் பகுதி மூன்று பிரிவுகளைக் கொண்டுள்ளது: முதல் பிரிவில் (12:12-13), தூய ஆவியார் வழியாக ஒரே உடலாய் இருக்கும்படி திருமுழுக்குப் பெற்ற அனைவரும் கிறிஸ்துவின் உடலின் உறுப்பினர் ஆகிறார்கள் என்ற இறையியலை முன்வைக்கின்றார் பவுல். இரண்டாம் பிரிவு (12:14-26) மனித உடல், அதன் உறுப்புக்களின் இருப்பு, இயக்கம், இன்றியமையாமை பற்றி விளக்குகிறது. மூன்றாம் பிரிவில் (12:27-30), 'நீங்கள் கிறிஸ்துவின் உடல். ஒவ்வொருவரும் அதன் தனித்தனி உறுப்புகள்' என்று மறுபடியும் வலியுறுத்தி, திருச்சபையின் பல்வேறு பணிநிலைகளை எடுத்துரைக்கின்றார்.

திருச்சபையின் பணிநிலைகள் எல்லாம் படிநிலைகள் என்ற அறியாமையில் இருந்துகொண்டு ஒருவர் மற்றவரோடு சண்டையிட்டுக்கொண்டிருந்த மக்களை அவர்களின் அறியாமையிலிருந்து விடுதலை செய்து, அவர்களின் தனித்தன்மை மற்றும் ஒருங்கியக்கத்தை நினைவூட்டுகின்றார் பவுல். தங்களுக்குள் நிலவிய ஒருமையை அறியாதவாறு அவர்களின் கண்கள் மறைக்கப்பட்டிருக்க, அவர்கள் தங்களின் வேற்றுமைகளை மட்டும் முன்னிறுத்தி ஒருவர் மற்றவரைத் தாழ்த்தவும், காயப்படுத்தவும், அழிக்கவும் முயல்வது தவறு என்பது இதிலிருந்து தெளிவாகிறது.

ஆக, 'நான்' என்ற அறியாமையிலிருந்து விடுதலை செய்து, 'நாம்' என்ற அறிவிற்குத் தன் திருச்சபையை அழைத்துச் செல்கிறார் பவுல்.

இன்றைய நற்செய்தி வாசகம் (காண். லூக் 1:1-4, 4:14-21) இரண்டு பிரிவுகளைக் கொண்டுள்ளது: (அ) லூக்காவின் நற்செய்தி முன்னுரை (1:1-4), (ஆ) இயேசுவின் பணித் தொடக்கம் (4:14-21).

நான்கு வாக்கியங்களாக தமிழ் மொழிபெயர்ப்பில் கொடுக்கப்பட்டுள்ள, நான்கு வசனங்களும் கிரேக்கத்தில் ஒரே வாக்கியமாக இருப்பது லூக்காவின் இலக்கியத்திறனுக்கு சிறந்த சான்று. தன் நற்செய்தியை 'மாண்புமிகு தியோபில் அவர்களே' என தொடங்குவதுபோல, தான் எழுதும் திருத்தூதர் பணிகள் நூலையும் இவ்வாறே தொடங்குகிறார். இந்த 'தியோபில்' ஒரு வரலாற்று நபரா, அல்லது இந்த நூலை வாசிக்கும் அனைவருமா என்பது புரியாத புதிராகவே உள்ளது. 'தியோபில்' என்றால் 'கடவுளால் அன்புசெய்யப்படுபவர்' என்பது பொருள். நற்செய்தியை வாசிக்கும் அனைவருமே கடவுளால் அன்பு செய்யப்படுபவர்தாம். அல்லது கடவுளால் அன்புசெய்யப்படுபவர் மட்டுமே நற்செய்தியை வாசிக்க முடியும். மேலும், லூக்கா தன் நற்செய்தி தான் ஆராய்ச்சி செய்ததன் பயனாக எழுதப்பட்டது எனவும், இதன் நோக்கம், தியோபில் அவர்கள் தான் கேட்டதை உறுதி செய்துகொள்வதற்காகவும் என்று சொல்வதன் வழியாக, 'தெயோபில்' அவர்களின் கிறிஸ்துவைப் பற்றிய 'அறியாமையிலிருந்து அவரை விடுதலை செய்வதற்கும்' என்று மொழிகிறார் லூக்கா.

நற்செய்தி வாசகத்தின் இரண்டாம் பிரிவை இன்னும் மூன்று உட்பிரிவுகளாகப் பிரிக்கலாம்: (அ) இயேசுவின் கலிலேயப் பணி (14:14-15), (ஆ) இயேசு எசாயா இறைவாக்கினர் வாசகத்தை வாசித்தல் (14:16-20), (இ) இயேசுவின் போதனை (14:21).

மாற்கு 6ல் இயேசு நாசரேத்தில் பணி தொடங்குவதை ஒத்ததாக இருக்கிறது லூக்காவின் இந்த படைப்பு. மாற்கு நற்செய்தியாளருக்கும், லூக்கா நற்செய்தியாளருக்கும் இதில் உள்ள பெரிய வேறுபாடு என்னவென்றால் எசாயாவின் இறைவாக்குப் பகுதியை இயேசு வாசிக்கும் நிகழ்வுதான். 'இயேசு தம் சொந்த ஊரான நாசரேத்துக்கு வந்தார்' என லூக்கா நிகழ்வைத் தொடங்குகிறார். நாசரேத்து இயேசுவின் குழந்தைப் பருவ நிகழ்வுகளில் முக்கியமான ஒரு ஊர் (காண். 1:26, 2:4, 39, 51). இந்த ஊரில்தான் இயேசு 'வளர்ந்தார்'. இயேசு தொழுகைக்கூடங்களில் கற்பித்தார் என 14:15ல் லூக்கா குறிப்பிட்டாலும், இயேசுவின் தொழுகைக்கூட நிகழ்வு இங்கேதான் தொடங்குகிறது. 'வாசிக்க எழுந்தார். போதிக்கும்போது அமர்ந்தார்' (4:20, 5:3). எழுவதும், அமர்வதும் இங்கே நாம் கவனிக்க வேண்டியவை. இயேசுவின் காலத்தில் தொழுகைக்கூடத்தில் என்ன மாதிரியான செப ஒழுங்கு இருந்திருக்கும் என்பது நமக்கு தெரியவில்லை. ஆனால், வழக்கமான வழிபாட்டில், ஷெமா இஸ்ரயேல், பத்துக்கட்டளைகள் வாசித்தல், 18 ஆசியுரைகள், புனிதநூல் வாசகம், திருப்பாடல்கள்,  வாசக விளக்கம், இறுதி ஆசீர் என்னும் ஏழு கூறுகள் இருக்கும். லூக்கா இவற்றில் 'வாசகம்' மற்றும் 'விளக்கம்' என்னும் இரண்டு கூறுகளை மட்டுமே குறிப்பிடுகின்றார்.

இயேசுவின் காலத்தில் தோரா நூல் எழுத்துவடிவத்தில் முழுமை பெற்று, தொழுகைக் கூடங்களில் வாசிக்கப்பட்டது. இறைவாக்கு நூல்கள் வாசிக்கப்படுவதற்கு வாய்ப்பில்லையென்றாலும், எசாயா 61 முக்கியமான பகுதியாக இருந்ததால் அது செபக்கூட வாசகத்தில் இடம் பெற்றது. எசாயா 61ல் தான் 'மெசியா', அதாவது 'அருள்பொழிவு பெற்றவர்' என்ற வார்த்தை வருகிறது. ஒட்டுமொத்த யூத நம்பிக்கையின் அடிப்படையே மெசியாவின் வருகையே. இந்தப் பகுதியை இயேசுவே விரும்பி எடுத்தாரா, அல்லது அது விரித்து அவரிடம் கொடுக்கப்பட்டதா என்று தெரியவில்லை. மேலும், செபக்கூடத்தில் உள்ள ஏவலரின் பணி மிகவும் முக்கியமானது. இவர் வெறும் எடுபுடி வேலைக்காக இருப்பவர் என்றாலும், இவருக்கு எழுதப் படிக்க தெரியும். எபிரேயம் தெரியும். இயேசு எபிரேயத்தில் வாசித்துவிட்டு, அரமேயத்தில் விளக்கம் தந்திருப்பார். வழக்கமாக மூன்றுபேர் வாசகங்கள் வாசிப்பர். மற்றவர்கள் என்ன வாசித்தார்கள் என்பதும் நமக்கு சொல்லப்படவில்லை.

லூக்கா 4:18-19, எசாயா 61:1 மற்றும் 58:6ன் கிரேக்க பதிப்பிலிருந்து (எழுபதின்மர் நூல்) எடுக்கப்பட்டுள்ளது. இதை அப்படியே எடுத்து பயன்படுத்தாமல், லூக்கா கொஞ்சம் மாற்றம் செய்கின்றார்: 'ஆண்டவரின் ஆவி என்மேல் உள்ளது. ஏனெனில் அவர் எனக்கு அருள்பொழிவு செய்துள்ளார்.ஏழையருக்கு நற்செய்தி அறிவிக்கவும், ('உள்ளம் உடைந்தோரை குணப்படுத்தவும்' என்னும் வாக்கியத்தை விட்டுவிடுகின்றார்), சிறைப்பட்டோருக்கு விடுதலையை பறைசாற்றவும், பார்வையற்றோர் பார்வை பெறுவர் என அறிக்கையிடவும், ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்யவும், ஆண்டவர் அருள்தரும் ஆண்டினை அறிவிக்கவும் அவர் என்னை அனுப்பியுள்ளார்.' மேலும், 'கடவுள் அநீதிக்குப் பழிவாங்கும்...' என்று தொடருமுன் இயேசு சுருளை சுருட்டிவிடுகிறார். இயேசு வாசித்த இந்த இறைவாக்குப் பகுதியில் மையமாக இருப்பது, 'பார்வையற்றோர் பார்வை பெறுவர்' என்பதுதான். இங்கே வெறும் புறக்கண் பார்வையை மற்றும் இறைவாக்கினர் குறிப்பிடவில்லை. மாறாக, 'ஆண்டவரின் ஆவியையும், ஆண்டவரின் அருள்தரும் ஆண்டினை அறிவிக்க வந்த அருள்பொழிவு பெற்றவரான' இயேசுவை அடையாளம் கண்டுகொள்ளும் அகப்பார்வையைத்தான் குறிக்கிறது. ஆகையால்தான், சற்று நேரத்தில், 'நீங்கள் கேட்ட இந்த மறைநூல் வாக்கு இன்று நிறைவேறிற்று' என்று தன்னில் மறைநூல் வாக்கு நிறைவேறுவதாக அறிக்கையிடுகின்றார் இயேசு.

ஆக, தெயோபில் அவர்கள் லூக்காவின் பதிவின் வழியாகவும், நாசரேத்து மக்கள் இயேசுவின் போதனை வழியாகவும் அறியாமையிலிருந்து விடுதலை பெறுகின்றனர்.

இவ்வாறாக, முதல் வாசகத்தில் எஸ்ராவின் திருச்சட்ட நூல் வாசிப்பு எருசலேம் மக்களுக்கும், இரண்டாம் வாசகத்தில் பவுலின் 'உடல் உருவகம்' கொரிந்து நகர மக்களுக்கும், நற்செய்தி வாசகத்தில் இயேசுவின் தொழுகைக்கூடப் போதனை நாசரேத்து மக்களுக்கும் 'அறியாமையிலிருந்து விடுதலை' தருவதாக இருக்கின்றது. இம்மூன்றையும் இணைத்து இன்றைய பதிலுரைப் பாடல், 'ஆண்டவரின் நியமங்கள் சரியானவை. அவை இதயத்தை மகிழ்விக்கின்றன. ஆண்டவரின் கட்டளைகள் ஒளிமயமானவை. அவை கண்களை ஒளிர்விக்கின்றன' (திபா 19) என்கிறது.

இன்றைய இறைவாக்கு வழிபாடு நமக்கு விடும் சவால் என்ன?

இன்று பல நேரங்களில் நாம் பெற வேண்டிய புற விடுதலைகள் என்று பொருளாதாரம், அரசியல், சமூகம், சமயம் போன்ற தளங்களை ஆராய்கிறோம். ஆனால், இவையெல்லாம் தொடங்க வேண்டியது 'அக விடுதலையில்தான்.' இன்று என் மனத்தில் இருக்கும் அறியாமை இருள் அழிந்தால்தான் என்னால் அடுத்தவரைச் சரியாகப் பார்க்க முடியும். இதையே இயேசு, 'உண்மை உங்களை விடுதலை செய்யும்' என்கிறார்.

இறைவார்த்தை வாசிப்பின் வழியாகவும், இணைந்த திருச்சபை வழியாகவும் நாம் அறியாமையிலிருந்து விடுதலை பெற முடிகிறது. நாம் பெறுகிற இந்த விடுதலை எப்படி வெளிப்பட வேண்டும்?

அ. ஆண்டவரின் மகிழ்வு நம் வலிiமாக வேண்டும். ஏனெனில், நம் மகிழ்வுகள் குறுகியவை. அவை நம் வல்லமையைக் கரைத்துவிடுபவை. ஆனால், ஆண்டவரில் கொள்ளும் மகிழ்வு நமக்கு வலுவூட்டும்.

ஆ. வேற்றுமை பாரட்டாமல் ஒற்றுமையைக் கொண்டாடுவது. இப்படிக் கொண்டாடும்போது நம்மால் ஒருவர் மற்றவரின் திறன்களை மதிக்க முடிகிறது.

இ. தியோபில் போல ஏக்கமும், நாசரேத்து மக்கள் போல 'இயேசுவின்மேல் கண்களைப் பதிய வைத்தலும்' இருத்தல் வேண்டும்.

இறுதியாக, மகிழ்ச்சி, ஒற்றுமை, நம்பிக்கை - இவை மூன்றும் அறியாமையிலிருந்து விடுதலை பெறுபவர் சுவைக்கும் கனிகள்.







No comments:

Post a Comment