Thursday 3 January 2019

ஆண்டவரின் திருக்காட்சிப் பெருவிழா


ஆண்டவரின் திருக்காட்சிப் பெருவிழா

இன்றைய வாசகங்கள்.
I. எசாயா 60:1-6  II. எபேசியர் 3:2-3, 5-6  III. மத்தேயு 2:1-12

இயேசு ஒரு குறிப்பிட்ட இனத்தார்க்கு மட்டும் சொந்தமல்ல. அவர் எல்லார்க்கும் சொந்தமானவர் என்பதைச் சுட்டிக் காட்டுகிறது இன்றையப் பெருவிழா.

எட்டுத் திக்கு மக்களும் இறைவனின் மக்களே என்பதைச் சுட்டிக்காட்டவே கிழக்கிலிருந்து (மத். 2:1) மூன்று ஞானிகள் புறப்பட்டு இயேசுவைக் காணச் சென்றார்கள் என்று திருவிவிலியம் கூறுகிறது.

இயேசு எல்லார்க்கும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியைக் கொண்டு வந்தவர். இதனால்தான் அவர் பிறந்தபோது விண்ணகத் தூதர் பேரணி, உன்னதத்தில் கடவுளுக்கு மாட்சி உரித்தாகுக! உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி உண்டாகுக! (லூக். 2:13-14) எனக் கடவுளைப் புகழ்ந்த து! ஆம். இயேசு நன்மனம் படைத்த அனைவருக்கும் சொந்தமானவர்.

அவர் வாழ்ந்தபோது எந்த இனத்தாரையும் அவர் புறக்கணிக்க வில்லை! பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன் (மத். 11:28) என்றார்.

அவர் சாகும்போது, தந்தையே இவர்களை மன்னியும் (லூக். 23:34) எனச் சொல்லி பாவிகள் எல்லாருக்காகவும் செபித்தார்.

இன்றும் கேட்பவர்கள் அனைவருக்கும் தூய ஆவியைத் தந்து (லூக். 11:9-13) அருங்கொடைகள் அனைத்திற்கும் ஆதி காரணமாக விளங்கி வருகிறார்.

நமது ஆண்டவர் அனைவரையும் அன்பு செய்யும் ஆண்டவராக விளங்குவதால், நாம் எந்த வேற்றுமையும் பாராட்டாது அனைவருக்கும் அன்பு நண்பர்களாக விளங்க வேண்டும். பிற இனத்தாரும் நமது பங்காளிகளே என்கிறார் புனித பவுல் (எபே. 3:6).

ஒளிவீசும் ஞாயிறைப் பார்க்கிறோம். அது வேற்றுமை பாராட்டுவதில்லை !

குளிர் சிந்தும் திங்களைப் பார்க்கிறோம். அது வேற்றுமை பாராட்டுவதில்லை!

ஆடி வரும் தென்றலைப் பார்க்கிறோம். அது வேற்றுமை பாராட்டுவதில்லை.

ஓடி வரும் அருவியைப் பார்க்கிறோம். அது வேற்றுமை பாராட்டுவதில்லை.

மலர், மணம், தேன், சுவை, கடல், கரை இவை யாவும் வேற்றுமை பாராட்டுவதில்லை! நாம் மட்டும் ஏன் வேற்றுமை பாராட்ட வேண்டும்? நாம் இயற்கையின் மணி மகுடமல்லவா?

அன்று ஒளியாய்ப் பிறந்து (எசா. 6:1) ஞான ஒளி வீசி பிற இனத்தாரை தம்மை நோக்கி ஈர்த்தார் இயேசு! வந்தவர் அனைவரும் அவரைக் கண்டு அவரிடமிருந்து அமைதியும், மகிழ்ச்சியும், நம்பிக்கையும் பெற்று வீடு திரும்பினர். அதேபோல கிறிஸ்தவர்களாகிய நாம் மற்றவர்களை நம்பால் ஈர்க்கும், வாழ்வளிக்கும் ஒளி விளக்காகத் திகழ வேண்டும்.






இயேசு நமக்குக் காட்சி தருவாரா?

கடவுள் யாருக்குக் காட்சி கொடுப்பார் என்பதை இன்றைய விழா நமக்குக் கற்பிக்கின்றது!

இயேசு பிறந்தபோது அவரை இடையர்கள் தேடிச் சென்றனர்; ஞானிகள் தேடிச் சென்றார்கள்; ஏரோது மன்னன் தேடினான்; அவனுடைய ஆள்கள் தேடினார்கள்.

ஆனால் முதல் இரண்டு பிரிவினருக்கு மட்டும்தான் இயேசு காட்சித் தந்தார். ஏரோதிற்கும், அவனுடைய ஆள்களுக்கும் இயேசு காட்சி தரவில்லை ! காரணம், இடையர்களும் ஞானிகளும் தங்களிடமுள்ளதை இயேசுவுக்கு கொடுக்கச் சென்றார்கள். ஆனால் நரரோதும் அவனுடைய ஆள்களும் இயேசுவின் உயிரை எடுக்க அவரைத் தேடினார்கள் (மத் 2:16-18).

இடையர்கள் தங்களது பாராட்டையும், மகிழ்ச்சியையும், பாடலையும் இயேசுவுக்குக் காணிக்கையாகக் கொடுக்க அவரைத் தேடினார்கள் (லூக் 2:20).

ஞானிகள் தங்கள் வணக்கத்தையும் (மத் 2:2) பொன்னையும் சாம்பிராணியையும் வெள்ளைப் போளத்தையும் காணிக்கையாகக் கொடுக்க இயேசுவைத் தேடினார்கள் (மத் 2:11).

எடுக்க நினைத்தவர்களுக்குக் குழந்தை இயேசு காட்சிக் கொடுக்கவில்லை; கொடுக்க நினைத்தவர்களுக்கே அவர் காட்சி கொடுத்தார்!

கடவுள் நமக்குக் காட்சி தர வேண்டுமானால், அவரது ஆசியை நாம் பெற விரும்பினால், நாம் நம்மிடம் உள்ளதை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ளவேண்டும்!

கொடுப்பவர்களுக்கு இறைவனின் ஆசி கிட்டும் என்பதற்கு விவிலியத்திலிருந்து இதோ இரண்டு உதாரணங்கள்.

ஆபிரகாமுக்கு வயது தொண்ணூற்றொன்பது (தொநூ 17:1). ஆனால் அவருக்குக் குழந்தை இல்லை! அவரது மனைவி ஒரு கிழவி (தொநூ 18:12). ஆபிரகாம் கடவுள் மீது முழு நம்பிக்கை வைத்து வாழ்ந்தவர்! ஆனால் அவர் கேட்ட பிள்ளை வரம் அவருக்குக் கிடைக்கவில்லை. உயர்ந்த,
உன்னதமான இறை நம்பிக்கையாளருக்குக் கடவுளுடைய ஆசி கிடைக்கவில்லை!

எப்போது அவருக்கு ஆசி கிடைத்தது தெரியுமா? அவர் முன்பின் தெரியாத மூன்று மனிதர்களுக்கு உணவும் தண்ணீரும் கொடுத்து உபசரித்தபோதுதான் அவருக்குக் குழந்தை வரம் கிடைத்தது (தொநூ 18:1-15).

புதிய ஏற்பாட்டில் பெரும்பாவியான சக்கேயு இயேசுவைப் பார்த்து, ஆண்டவரே, என் உடைமைகளில் பாதியை ஏழைகளுக்குக் கொடுத்துவிடுகின்றேன்; எவர் மீதாவது பொய்க் குற்றம் சுமத்தி எதையாவது கவர்ந்திருந்தால் நான் அதை நான்கு மடங்காகத் திருப்பிக் கொடுத்துவிடுகின்றேன் (லூக் 19:8) என்று கூறியபோதுதான் சக்கேயுவுக்கு இயேசு மீட்பராகக் காட்சியளிக்கின்றார்.

இயேசுவுக்கு ஒருவர் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்பது முக்கியமில்லை. ஞானிகள் கிழக்கிலிருந்து எருசலேமுக்கு வந்தார்கள். இயேசுவுக்கு ஒருவர் எந்த இனத்தைச் சேர்ந்தவர் என்பதும் முக்கியமல்ல (முதல், இரண்டாம் வாசகங்கள்). ஞானிகள் யூத இனத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல.


இயேசுவுக்கு வேண்டியதெல்லாம் அவர்களுக்குக் கொடுக்கும் மனம் உள்ளதா என்பதுதான். நாம் கடவுள் மீது நம்பிக்கை வைத்திருப்பது பாராட்டுக்குரிய ஒன்றாகும். ஆனால் அதே நேரத்தில் புனித யாக்கோபு சொல்வதையும் நம் நினைவில் கொள்ளவேண்டும். கடவுள் ஒருவரே என்பதை நீங்கள் நம்புகின்றீர்கள்; நல்லதுதான். பேய்களும்கூட அவ்வாறு நம்பி அச்சத்தால் நடுங்குகின்றன (யாக் 2:19). நம்மிடம் நம்பிக்கை உண்டு என்றால் அதைச் செயலில் காட்ட வேண்டும் (யாக் 2:14) என்கின்றார் புனித யாக்கோபு.

செயல்களிலெல்லாம் சிறந்த செயல் நம்மிடம் உள்ளதை மற்றவர்களுக்குக் கொடுத்தலாகும் (1 கொரி 13:13).

ஞானிகளிடமிருந்தது போல, நம்மிடம் பொருளிருந்தால் பெட்டியைத் திறந்து மற்றவர்க்குப் பொருளைக் கொடுப்போம்; அது இல்லையென்றால் இடையர்களைப் போன்று நமது அர்த்தமுள்ள வார்த்தைகளை சிறப்பாக வறியோருக்கு வாரி வழங்குவோம்!

அப்போது எந்தக் குழந்தை இயேசு ஞானிகளுக்கு காட்சியளித்தாரோ அதே குழந்தை இயேசு நமக்கும் காட்சியளித்து நமக்கு ஆசியளிப்பார்.

மேலும் அறிவோம்:
இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய
தாமே தமியர் உணல் (குறள் : 229).

பொருள் : பெரிதும் தேடித் திரட்டிய பொருள் அனைத்தையும் பிறருக்குக் கொடுத்தால் குறையுமோ என்று தாமே சுவைப்பது, பிறரிடம் கையேந்திக் கெஞ்சிக் கேட்பதைக் காட்டிலும் கொடிய செயலாகும்.





நான்காவது ஞானி - திருக்காட்சிப் பெருவிழா 


ஒருநாள் வான்வெளியில் சூரியன், சந்திரன், விண்மீன்களுக்கு இடையே காரசாரமாக விவாதம் நடந்தது. “நானே பெரியவன். நான் இல்லாமல் ஒளியேது? உயிரேது? நிலவு கூட என்னிடமிருந்துதான் ஒளியைப் பெறுகிறாய்" என்றது சூரியன். “அழகு என்றாலே நான் தானே. கவிஞனின் கண்ணில் படுகிறேன். கனவாக என்னை நினைத்த மனிதனே தேடிவந்து என்னில் கால் பதித்து விட்டான்” என்றது சந்திரன். மௌனமாக இருந்த விண்மீன் வாய்திறந்து சொன்னது: “இறைவன் குழந்தையாகப் பிறந்த போது என் ஒளிதானே அவரது பிறப்பை அறிவித்தது. கீழ்த்திசை ஞானிகளை வழிநடத்தி அவரைக் கண்டடையச் செய்தது. இன்று கூட அவருடைய பிறப்பு விழாவுக்குக் கிறிஸ்மஸ் நட்சத்திரமாக எவ்வளவு சிறப்புச் சேர்க்கிறேன்..." அதற்கு மேல் சூரியனால், சந்திரனால் எதுவும் பேச முடியவில்லையாம்!

அந்த விண்மீன் “யாக்கோபிலிருந்து விண்மீன் ஒன்று உதிக்கும். இஸ்ரயேலிலிருந்து செங்கோல் என்று எழும்பும்" எனத் தூய ஆவியால் ஏவப்பட்டு பிலயாம் உரைத்த யாக்கோபின் குலக்கொழுந்தாக இருக்கலாம் (எண்.2417). இறைவாக்கினர் எசாயா குறிப்பிட்டது போல் “எழு! ஒளி வீசு! உன் ஒளி தோன்றியுள்ளது. ஆண்டவரின் மாட்சி உன் மேல் உதித்துள்ளது. பிற இனத்தார் உன் ஒளி நோக்கி வருவர்” (எசா. 60:1-3). இஸ்ரயேல் மக்கள் மேல் பெருமளவில் தோன்றிய இறைமாட்சிமையாக இருக்கலாம். கீழ்த்திசை ஞானிகள் கண்டது அந்த மாட்சிமையின் வெளிப்பாடு.

கிறிஸ்துதான் உலகை மீட்கும் உன்னத ஒளி என்ற இறைவெளிப்பாட்டினைத் தொடக்ககாலத் திருச்சபையில் பவுல் எபேசியரோடு எப்படியெல்லாம் பகிர்ந்து கொள்கிறார்! “நற்செய்தியின் வழியாக, பிற இனத்தாரும் கிறிஸ்து இயேசுவின் மூலம் உடன் உரிமையாளரும் வாக்குறுதியின் உடன் பங்காளிகளும் ஆகியிருக்கிறார்கள் என்பதே அம்மறைபொருள்” (எபே.3:6)

ஒளியானது பாவ இருளைச் சுட்டெரிக்கும் தீப்பிழம்பாகும். இருளைப் புறங்காணச் செய்யும். இருண்ட இதயத்தில் நம்பிக்கைத் தீபத்தை ஏற்றும். பகைமையை நீக்கும். பாசத்தைப் பெருக்கும். அப்படிப் பட்ட ஒளியாய் இயேசுவைக் கண்டு வணங்கி மகிழ்ந்தனர். பிற இனத்து ஞானிகள். ஆனால் இயேசுவின் பிறப்பைக் கேட்டதும் "ஏரோது அரசன் கலங்கினான். அவனோடு எருசலேம் முழுவதும் கலங்கிற்று'' (மத்.2:3) பிறருடைய அரசை வீழ்த்தவா இயேசு வந்தார்? எல்லா மக்களும் வாழ்வு பெற வேண்டும் என்றுதானே அவர் பிறப்பெடுத்தார்!

திறந்த மனம், தேடும் ஏக்கம் இருந்தால் எந்த நிலையிலும் அந்தத் தெய்வத்தைக் காணலாம்.

"நான்காவது ஞானி” (The fourth magi) என்பது ஒரு கற்பனைக் கதை. அருத்தாபன் என்ற நான்காவது ஞானி மற்ற மூவருடன் தொடர்பு கொண்டு மெசியாவைத் தரிசிக்கச் செல்ல ஏற்பாடாகி இருந்தது. குறிப்பிட்ட இடத்திற்கு வருமாறு அறிவிக்கப் பட்டிருந்தார். ஆனால் இவர் தாமதமாகிவிடவே, மற்ற மூவரும் மூன்று திசைகளிலிருந்து புறப்பட்டு விண்மீன் வழியே நடக்க ஆரம்பித்து விட்டனர். அருத்தாபன் வந்த போது ஞானிகளைக் காணவில்லை. அவர் கையில் விலையுயர்ந்த மூன்று முத்துக்கள். அவர்கள் சென்ற பாதையைக் கேட்டறிந்தார். அதுவோ மிகப் பெரிய பாலைவனம். தன் குதிரையால் கடக்க முடியாது. ஆனால் மெசியாவைத் தரிசிக்க வேண்டும். என்ன செய்வது? மெசியாவுக்கென வைத்திருந்த மூன்று முத்துக்களில் ஒன்றை விற்று ஒட்டகம் வாங்கினார். பாலைவனம் கடந்தார். பல ஆண்டுகளாயின. மெசியாவை மட்டும் பார்க்க முடியவில்லை. அங்கு விசாரித்தார். ஒருவருக்கும் தெரியவில்லை. தான் இருப்பது பாலஸ்தீன் நாடு என்பது மட்டும் தெரிந்தது. இரண்டு முத்துக்களைப் பொக்கிஷம் போல் பாதுகாத்து மெசியாவுக்கென வைத்திருந்தார்.
அதோ, தொலைவில் ஒரு பெண் தலைவிரி கோலமாக ஒடி வருகிறாள். பின்னால் ஒரு பெரிய யூதக் கூட்டமே அவளைத் துரத்தி வருகிறது. அந்தப் பெண் ஓடிவந்து இவர் காலில் விழுந்து கதறுகிறாள். விபச்சாரத்தில் பிடிபட்டவளாம், கல்லால் எறிந்து கொல்லப் போகிறார்களாம். புரிந்தது அருத்தாபனுக்கு. அவளைப் பின்னுக்குத் தள்ளி, தலைமைக் குருவைத் தனியே அழைத்துப் பேசி அவர் கையில் இரண்டாவது முத்தை அழுத்தினார். கற்கள் எல்லாம் கீழே விழுந்தன. கண்ணீரோடு நன்றி சொன்னாள் அந்தப் பெண்.

சில ஆண்டுகள் கழிந்தன. அருத்தாபனுக்கு வயதாகிவிட்டது. சாவதற்கு முன்பாவது மெசியாவை நான் பார்க்க முடியுமா? என்ற கேள்வியை நெஞ்சத்திலும் எஞ்சிய ஒரு முத்தைக் கையிலும் வைத்துக் கொண்டு கூனிக்கூனிச் சென்ற அர்த்தாபனுக்கு அந்தக்கூட்டம் புரிபடவில்லை. கேட்டார். யாரோ மெசியாவாம். தெய்வ நிபந்தனைக்காக அந்த மனிதனைக் கொல்லப் போகிறார்களாம். ஒடினார். எங்கும் கூட்டம் காவலர்கள் தடுத்தனர். வீட்டின் தாழ்வாரத்தில் நின்று மெசியாவைப் பார்க்க கடைசி முத்தையும் கொடுத்து விட்டு ஏறி நின்றார். மெசியாவின் பின்புறம் மட்டும் அவர் கண்ணில் பட்டது. அப்போது கூட்ட நெரிசலில் கூரை சரிய ஒடுகள் அருத்தாபனின் தலையைத் தாக்க, ரத்தம் வழியக் கீழே விழுகிறார். அருத்தாபன் சாகும் தறுவாயில் நினைவற்று அவர் முனகுவதை அருகிலிருந்த காவலர்கள் கேட்கின்றனர்: “எப்போது ஆண்டவரே நான் உம்மைப் பார்த்தேன்? எப்போது ஆண்டவரே நான் உமக்கு உதவி செய்தேன்?..

இறைவன் ஏதோ ஒரு விதத்தில் தன்னை வெளிப்படுத்தத்தான் செய்கிறார். மிகச்சிறியவற்றிலும் மிக எளியவற்றிலும் தன் முகத்தைக் காட்டக் கூடும். அதைக் கண்டுபிடிக்கும், உணர்ந்து அறியும் ஞானம் நமக்கு வேண்டும். கனவுகள், நிகழ்வுகள், உள்மன எச்சரிப்புகள், அனுபவ உணர்வுகள் இவை எல்லாவற்றையும் புரிந்து வாழ்க்கையில் உண்மையையும் நன்மையையும் தேடிக் கண்டுபிடிப்பவர்களாக நாம் இருக்க வேண்டும். அப்போது நாமும் ஞானிகளே!


கத்தோலிக்கர் ஒருவர் விண்ணகம் சென்றார். விண்ணகத்தின் நடுவே ஒரு பெரிய குறுக்குச் சுவரைக் கண்டு பேதுருவிடம், “இந்தக் குறுக்குச் சுவருக்கு மறுபுறம் யாராவது இருக்கின்றார்களா?" என்று அவர் கேட்டதற்கு, பேதுரு அவரிடம், "நீங்கள் விண்ணகத்துக்கு வரமாட்டார்கள் என்று நினைத்த மற்ற மதத்தைச் சார்ந்தவர்களெல்லாம் மறுபுறத்தில் இருக்கின்றனர்” என்றார்! கிறிஸ்தவர்கள் மட்டும்தான் மீட்படைவார்கள், மற்ற மதத்தினர் எல்லாம் நரகத்துக்குச் செல்வார்கள் என்று ஒரு சிலர் நினைக்கின்றனர். அவ்வாறே யூதர்களும் நினைத்தனர், யூதர்கள் தான் மீட்படைவர்; பிற இனத்தவர் நரகத்தை எரியூட்டும் மரக்கட்டைகளாகக் கடவுளால் பயன்படுத்தப்படுவர் என்று அவர்கள் தப்பாக நினைத்தனர். ஆனால், கடவுள் எல்லா மனிதரும் மீட்படைய விரும்புகிறார் (1 திமொ 2:4). எந்த இனத்தவரும் கடவுளுக்கு அஞ்சி, அவருக்கு ஏற்புடையதைச் செய்தால் அவர்களும் மீட்படைவர் (திப் 10:35). மீட்பு என்பது யூதர்களுக்கு மட்டும் உரிய தனியுடைமையன்று, மாறாக அது எல்லா இனத்தாருக்கும் உரிய பொதுவுடைமை என்பதை இன்றைய பெருவிழாவும், இன்றைய அருள்வாக்கு வழிபாடும் தெளிவாக உணர்த்துகின்றன. மக்களினத்தார் அனைவரும் உன் ஒளியை நோக்கி வருவர் (முதல் வாசகம்). மக்களினத்தார் அனைவரும் அவரை வணங்குவர். அவருக்கு ஊழியம் புரிவர் (பதிலுரைப் பாடல்), நற்செய்தியின் வழியாகப் பிற இனத்தவரும் சுவாக்குறுதியின் உடன்பங்காளிகள் (இரண்டாம் வாசகம்). பிற இலாத்தைச் சார்ந்த ஞானிகள் கீழ்த்திசையிலிருந்து பெத்லகேம் வந்து  குழந்தை இயேசுவை ஆராதித்துக் காணிக்கை செலுத்தினர் (நற்செய்தி).

இன்றைய விழா பிற இனத்தைச் சார்ந்த நம்முடைய விழா. பிற இனத்தவராகிய நம்மையும் கடவுள் இருளிலிருந்து தமது வியத்தகு ஒளிக்கு அழைத்துள்ளார். நாம் தேர்ந்தெடுக்கப்பட்ட இனம்; அரச | குருக்களின் திருக்கூட்டம்: தூய மரபினர்; கடவுளின் உரிமைச் சொத்தான மக்கள் (1 பேது 2:9), எனவே, நாம் கடவுளுக்கு நன்றி செலுத்துவோம். பொன்னையும், தூபத்தையும், வெள்ளைப் போளத்தையுமல்ல, நம்மையே கடவுளுக்குக் காணிக்கையாக ஒப்புக் கொடுப்போம். மற்றவர்களை நமது ஒளிமயமான அன்பு வாழ்வால் கிறிஸ்துவிடம் கொண்டு வரும் விண்மீனாகச் செயல்படுவோம், கீழ்த்திசை ஞானிகள் நமக்குக் கற்றுக் கொடுக்கும் பாடம் என்ன ? எத்தகைய தடைகள் வந்தாலும் நமது குறிக்கோளை அடைய வேண்டும். நாம் எண்ணுவது திண்ணமாக இருந்தால் நாம் எண்ணுவதைக் கட்டாயம் அடைவோம் என்பதில் ஐயமில்லை .

எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின் (குறள் 666)

எந்த விண்மீனை நம்பி ஞானிகள் தங்கள் பயணத்தைத் தொடங்கினரோ அந்த விண்மீன் மறைந்துவிட்டது. ஆனால் அவர்கள் அதனால் மனமுடைந்து போகவில்லை, முன்வைத்த காலைப் பின்வைக்கவில்லை. மன்னன் ஏரோது ஒரு கொடுங்கோலன் என்பதை அவர்கள் அறிந்திருந்தும் அவர்கள் அவனிடம் சென்று தேவையான தடயங்களைப் பெற்று, தங்கள் பயணத்தைத் தொடர்ந்தனர். மறைந்த விண்மீன் மீண்டும் தோன்றியது. அதன் துணையுடன் பெத்லகேம் சென்று குழந்தை இயேசுவை அதன் தாய் மரியாவுடன் கண்டு ஆராதித்து, காணிக்கை செலுத்தினர். "கலப்பையில் கைவைத்தபின் திரும்பிப் பார்ப்பவர் எவரும் இறையாட்சிக்கு உட்படத் தகுதியுள்ளவர் அல்ல" (லூக் 9:62) என்று ஆண்டவர் கூறிய அருள்வாக்கிற்கு அவர்கள் சிறந்ததோர் இலக்கணமாகத் திகழ்கின்றனர்.

நமது வாழ்க்கையில் நமக்கென்று ஓர் இலட்சியம் வேண்டும். ஒரு மாணவன் ஒரு பாடப் புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தான். ஒரு பெரியவர் அவனிடம், "படித்து முடித்தவுடன் என்ன செய்வாய்?” என்று கேட்டதற்கு, "புத்தகத்தை மூடிவிடுவேன்” என்றான். இன்று எத்தனையோ இளைஞர்கள் தங்கள் வாழ்வில் எத்தகைய கொள்கைப் பிடிப்போ இலட்சியமோயின்றித் தங்கள் பொன்னான வாழ்வை வீணாக்கிக் கொண்டிருக்கின்றனர், அவர்களைப் பார்த்துக் குடியரசுத் தலைவர் "கனவு காணுங்கள்" என்று அறிவுறுத்துகிறார். ஆனால், அவர்களோ "தாவணிக் கனவுகள்” காண்கின்றனர். "ஆடிக்குப் பின் ஆவணி, தாடிக்குப் பின் தாவணி” என்ற புதிய பழமொழி உருவாகியுள்ளது; வேடிக்கையாகவும் வேதனையாகவும் உள்ளது. ஒரு சிலர் வாழ்வில் ஏற்பட்ட தோல்விகளைத் தாங்கிக் கொள்ள இயலாது. தற்கொலை முயற்சியில் இறங்குகின்றனர். தற்கொலை செய்ய முடிவு கட்டிய ஓர் இளைஞன் ஒருவருடைய, ஒரு மணி நேரச் சொற்பொழிவைக் கேட்ட பின்பு அவரிடம், "உங்களின் சொற்பொழிவு எனது தற்கொலை முயற்சியைத் தடுத்து நிறுத்தி விட்டது" என்றான். சொற்பொழிவாளர் அவனிடம், "எவ்வாறு?" என்று கேட்டார். அவன் அவரிடம், "இவ்வளவு மோசமான சொற்பொழிவு ஆற்றுகிறவர்கள் எல்லாம் உயிரோடு இருக்கும் போது, நான் ஏன் தற்கொலை செய்யவேண்டும்?" என்று பதில் சொன்னான்.
.
நமது வாழ்வில் நமக்குப் பெரிய எதிரி தாழ்வு மனப்பான்மை, நம்மை மற்றவர்களுடன் ஒப்பிட்டு நம்மைக் குறைவாக எடைபோடக் கூடாது. தாழ்வு மனப்பான்மை கொண்ட பெண்கள் இங்கிலாந்து பிரதமராக இருந்த மார்கரெட் தாட்சர் கூறியுள்ளதை நினைவில் நிறுத்த வேண்டும், "காலையில் கூவுவது சேவலாக இருக்கலாம், ஆனால் முட்டையிடுவது, பெட்டைக் கோழி மட்டும்தான்”. வாழ்க்கை என்பது ஒரு தொடர் தேடல். 'தேடல் உள்ளவர்களுக்கே வாழ்க்கையில் பசி இருக்கும், தேடல் உள்ளவரை வாழ்வில் ருசியிருக்கும்", ஞானிகள் தேடினர்; தாங்கள் தேடியதைக் கண்டடைந்தனர், நாமும் தேட வேண்டும்; நல்லவற்றைத் தேடவேண்டும். "தேடுங்கள், நீங்கள் கண்டடைவீர்கள்” (லூக் 11:9) என்று கிறிஸ்து நமக்கு உறுதி மொழி அளித்துள்ளார். வாழ்க்கை என்பது ஒரு கடல், கொந்தளிக்காத கடல் உண்டா? வாழ்க்கை என்பது ஒரு போர்க்களம். காயமில்லாத போர்க்களம் உண்டா? வாழ்க்கை என்பது ஒரு வேள்வி. தீ இல்லாத வேள்வி உண்டா? வாழ்க்கை என்றால் என்ன என்று ஒரு மலையைக் கேட்டதற்கு, "ஏறிப் பார் என்றது". வாழ்க்கை என்றால் என்ன என்று ஒரு ஆற்றைக் கேட்டதற்கு, "குதித்துப் பார்” என்றது. ஒருவர் ஓர் எறும்பைப் பார்த்து, "நீ எப்படி இவ்வளவு சுறுசுறுப்பாய் இருக்கின்றாய்?" என்று கேட்டதற்கு அந்த எறும்பு, "உன்னைப்போல் வீண்பேச்சுப் பேச எனக்கு நேரமில்லை. வாழ்வில் முன்னேற வேண்டுமென்றால், என்னோடு தரையில் ஊர்ந்து வா" என்றது. புலர்ந்துள்ள புத்தாண்டில், ஞானிகளைக் கண்முன் கொண்டு, புத்தொளி பெறுவோம், தடைக்கற்களைப் படிக்கற்களாகக் கொண்டு புதிய சாதனை படைப்போம்.

வாழ்க்கை கவிதை வாசிப்போம்
வானம் அளவு யோசிப்போம்
முயற்சி என்ற ஒன்றை மட்டும்
மூச்சுப் போல சுவாசிப்போம்.- திரைப்படப்பாடல்

அமெரிக்காவில் மூலதனம் இருக்கலாம். ஆனால் இந்தியாவில் மூளைதனம் இருக்கிறது. சிந்திப்போம்! செயல்படுவோம்!




இரண்டாம் முறை விண்மீன்

'நம் அனைவருக்கும் இரண்டு வாழ்க்கை உண்டு. இரண்டாம் வாழ்க்கை எப்போது தொடங்குகிறது என்றால், 'இருப்பது ஒரு வாழ்க்கைதான்' என்ற புரிதல் வரும்போது' என்பது டுவிட்டர் வாக்கு. 'வாழ்வில் இரண்டாம் வாய்ப்பு வருவதில்லை' என்று சிலர் சொல்லக் கேட்டிருக்கிறேன். ஆனால், வாழ்வில் இரண்டாம் வாய்ப்புக்கள் வரவே செய்கின்றன. எப்படி?

சார்லஸ் டிக்கன்ஸ் எழுதிய, 'எ கிறிஸ்மஸ் கேரல்' (ஒரு கிறிஸ்துபிறப்பு பாடல்) பிரபலமான நாவல். அந்த நாவலின் கதாநாயகன் எபநேசர் ஸ்க்ரூகே கிறிஸ்துமசுக்கு முந்திய மாலை தன் அலுவலகத்தில் அமர்ந்திருப்பார். இங்கிலாந்தின் குளிரின் நடுக்கத்தில் அவருடைய அலுவலக கிளார்க் கூனிக்குறுகி அமர்ந்திருப்பார். ஏனெனில், எபரேசர் தன் அலுவலகத்தை வெதுவெதுப்பாக்க பணத்தைச் செலவிட மாட்டார். எபநேசரின் உறவினர் ஒருவர் அவரை கிறிஸ்துமஸ் பார்ட்டிக்கு வருமாறு அழைப்பார். அந்த நேரத்தில் இன்னும் இருவர் கிறிஸ்துமஸ் நன்கொடை கேட்டு வருவார்கள். 'கிறிஸ்துமஸ் ... ஒரு ஹம்பக்!' என்று விரட்டி விடுவார். இரவில் தன் வீடு திரும்பிய அவருக்கு இறந்து போன தன் பிஸினஸ் பார்ட்னர் ஜேக்கப் மார்லியின் ஆவி காட்சிதரும். மார்லி தன்னுடைய பழைய தன்னலமான வாழ்விற்குத் தண்டனையாக பெரிய சங்கிலியைக் கட்டி அவர் இழுத்துக்கொண்டு செல்வதுபோல காட்சியில் இருக்கும். 'இந்த தண்டனையிலிருந்து நீ தப்பித்துக்கொள்' என மார்லியின் ஆவி எபநேசரை எச்சரிக்கும். 'இன்னும் சில இரவுகளில் மூன்று ஆவிகள் உனக்குத் தோன்றும்' என்றும் சொல்வார் மார்லி. அப்படியே தூங்கிப்போவார் எபநேசர். 'நேற்றைய கிறிஸ்துமஸ்' என்ற முதல் ஆவி வந்து எபநேசரை அவருடைய குழந்தைப் பருவத்திற்கு அழைத்துப்போய்க் காட்டும். தன் குழந்தைப் பருவ, இளமைப்பருவ நிகழ்வுகளை நினைத்து மகிழ்வார் எபநேசர். 'இன்றைய கிறிஸ்துமஸ்' என்ற இரண்டாம் ஆவி எபநேசரை லண்டன் தெருக்கள் வழியாக அழைத்துச் செல்லும். அந்த நேரத்தில் தன் மேலாடைக்குள் 'அறியாமை,' 'தேவை' என்று இரண்டு குழந்தைகள் ஒளிந்திருப்பதைக் காண்பார் எபநேசர். 'நாளைய கிறிஸ்துமஸ்' என்ற மூன்றாம் ஆவி இறந்துபோன ஒருவர் படும் துன்பத்தைக் காட்டும். அந்த இறந்துபோன நபரின் கல்லறையில் 'எபநேசர்' என எழுதியிருக்க, நம் கதாநாயகர் உடனே, தன் தவற்றை உணர்ந்து, 'என் 'அறியாமை,' மற்றும் என் 'தேவை' இவற்றுக்காக நான் வருந்துகிறேன்' என்று சொல்லி, வருவோர் போவோர், தேவையில் இருப்போர் அனைவருக்கும் தன் பணத்தைக் கொடுத்துவிட்டு, தன் உறவினரின் கிறிஸ்துமஸ் பார்ட்டிக்கு மகிழ்வுடன் செல்வார். இதுபோல அவர் தொடர்ந்து கருணை, தாராள உள்ளம், அன்பு, பரிவு கொண்டவராக விளங்குவதாக நாவல் முடிவுறும்.

எபநேசர் ஸ்க்ரூகேயைப் பொறுத்தவரையில் தான் கண்ட காட்சி அவருடைய இரண்டாம் வாழ்க்கையின் தொடக்கமாக இருக்கிறது. இவரைப் போலவே, புனித பவுல், அண்ணல் அம்பேத்கர், மகாத்மா காந்தி, அன்னை தெரசா என்று எல்லாருமே தங்கள் வாழ்வில் இறையனுபவம் பெற்றவுடன் தங்களின் இரண்டாம் வாழ்க்கையை புதிய பொலிவுடன் மாற்றி எல்லாருக்கும் எல்லாம் என ஆகின்றனர்.

இன்றைய நாளில் 'இரண்டாம் கிறிஸ்துமஸ்' என்று கிராமங்களில் சொல்லப்படுகின்ற 'ஆண்டவரின் திருக்காட்சிப் பெருவிழாவைக்' கொண்டாடுகிறோம். கீழைத்திருச்சபைகள் இன்றைய நாளைத்தான் கிறிஸ்து பிறப்பு நாளாகக் கொண்டாடுகின்றனர்.

'யூதர்களின் அரசராகப் பிறந்திருக்கிறவர் எங்கே?' என்று ஏரோதிடம் வருகின்ற கீழ்த்திசை ஞானியர், 'முன்பு எழுந்த விண்மீன் மீண்டும் தோன்றுவதை - இரண்டாம் முறை தோன்றுவதை - கண்டுகொள்கின்றனர்.' ஆக, இவர்கள் முதல் முறை பார்த்த விண்மீன் இவர்களை ஏரோதின் அரண்மனைக்குத்தான் அழைத்துச் சென்றது. இரண்டாம் முறை பார்த்த விண்மீன்தான் இவர்களை பெத்லகேமிற்கு அழைத்துச் செல்கிறது. இவ்வாறாக, வாழ்வின் ஆச்சர்யங்கள் இரண்டாம் முறைகளிலும் சாத்தியம் என்பதை உணர்த்துகின்றன இன்றைய வாசகங்கள்.

இன்றைய முதல் வாசகம் (காண். எசா 60:1-6) எசாயா இறைவாக்கினர் நூலின் மூன்றாம் பகுதியிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. பாபிலோனியாவுக்கு நாடுகடத்தப்பட்ட இஸ்ரயேல் மக்கள் திரும்பி வர அனுமதி பெற்ற காலகட்டத்தில் எழுதப்பட்டது இப்பகுதி. இன்றைய வாசகப் பகுதியில், 'எழு! உலகிற்கு ஒளி வீசு!' என்று எருசலேமைத் தூண்டி எழுப்புகிறார் எசாயா. ஏனெனில், 'உன் ஒளி தோன்றியுள்ளது,' 'ஆண்டவரின் மாட்சி உன்மேல் உதித்துள்ளது.' ஒளியும் மாட்சியும் ஆண்டவரின் காணக்கூடிய வெளிப்பாடுகள் (காண். எசே 1:4, விப 24:15-17). இவ்வாறாக, இருளடைந்து பாழடைந்து கேட்பாரற்றுக் கிடந்த நகரம் கடவுள் இரண்டாம் முறை வந்ததால் ஒளிர்கிறது. இவர்கள் அடிமைகளாக்கப்படும் முன் இருந்த ஒளி அடிமைத்தனத்தால் இருண்டு போனது. இரண்டாம் முறை இப்போது நகரம் ஒளிருமாறு மக்களைக் கவ்வியிருந்த இருளை அகற்றுகிறார் கடவுள். கடவுள் இரண்டாம் முறை வந்ததை ஒரு பெரிய ஒருங்கிணைவாக முன்வைக்கிறார் எசாயா: (அ) பிற இனத்தார் எருசலேம் நோக்கி வருவர், (ஆ) நாடுகடத்தப்பட்ட, இழுத்துச் செல்லப்பட்ட புதல்வர், புதல்வியர் தோளில் தூக்கிவரப்படுவர், (இ) கடலின் திரள் செல்வம், சொத்துக்கள், ஒட்டகத்தின் பெருந்திரள் எருசலேம் வரும், (உ) 'பொன்' (அரசனுக்கு), 'நறுமணப்பொருள்' (கடவுளுக்கு) ஏந்தி வருவர் மக்கள். இவ்வாறாக, கடவுளே அரசனாகவும் இருப்பார் என்பது குறிக்கப்படுகிறது. இக்கடவுள் எருசலேமிற்கு மட்டும் கடவுள் அல்ல. மாறாக, அனைத்து நாடுகளுக்கும் கடவுளாகவும் அரசனாகவும் இருப்பார்.

ஆக, எருசலேம் புத்துயிர் பெற்றதை அகில உலக புத்துயிர்ப்புக்குமான இரண்டாம் வாய்ப்பாகப் பார்க்கிறார் எசாயா. நாடுகடத்தப்பட்ட எருசலேம் மக்கள் தங்கள் நாடு திரும்புகின்றனர். அவர்களின் வருகை அனைத்துலக நாடுகளையும் சேர்த்துக் கொண்டு வருவதாக இருக்கிறது. இஸ்ரயேல் மக்கள் பெற்ற இரண்டாம் ஒளி அவர்களுக்கு மட்டுமல்லாமல், உலக மக்களுக்கும் வெளிச்சமாகவும், மாட்சியாகவும் இருக்கிறது.

இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். எபே 3:2-3, 5-6), 'நற்செய்தியின் வழியாக, பிற இனத்தாரும் கிறிஸ்து இயேசுவின் மூலம் உடன் உரிமையாளரும் ஒரே உடலின் உறுப்பினரும் வாக்குறுதியின் உடன் பங்காளிகளும் ஆகியிருக்கிறார்கள் என்னும் மறைபொருள்' தூய ஆவி வழியாகத் தனக்கும், திருத்தூதருக்கும், இறைவாக்கினருக்கும் வெளிப்படுத்தப்பட்டிருப்பதாக முன்வைக்கின்றார். யூதராக இருந்தால்தான் ஒருவர் கிறிஸ்தவராகவும், கிறிஸ்தவ சபையின் உறுப்பினராகவும் இருக்க முடியும் என்ற புரிதலில் இருந்த எபேசு நகரத் திருச்சபைக்கு, யூதரல்லாத புறவினத்தாரும் நம்பிக்கையின் வழியாக மறைபொருளில் பங்கெற்க முடியும் என அறிவுறுத்துகின்றார். பவுலின் இந்த வார்த்தைகள் இன்று நமக்கு மிகச் சாதாரணமாகத் தெரியலாம். ஆனால், அன்றைய காலகட்டத்தில் இது ஒரு பெரிய மறுமலர்ச்சியை உண்டாக்கியது. ஏனெனில், பவுலின் இதே உறுதிப்பாட்டால்தான் இன்று நீங்களும், நானும் கிறிஸ்தவராக இருக்கிறோம்.

ஆக, பிற இனத்தாருக்கு நம்பிக்கையின் வழியாக வழங்கப்படும் இரண்டாம் வாய்ப்பாக இருக்கிறது கிறிஸ்துவின் மறையுடலாகிய திருச்சபை.

இன்றைய நற்செய்தி வாசகம் (காண். மத் 2:1-2) 'ஞானிகள் வருகை' பற்றிப் பேசுகின்றது. நமக்கு மிகவும் தெரிந்த வாசகப் பகுதிதான். இவர்கள் ஏன் வர வேண்டும்? இவர்கள் இறையியல் தேவையையும், இலக்கியத் தேவையையும் நிறைவு செய்ய வருகின்றனர். 'இயேசுவை புதிய மோசே' என்ற இறையியலாக்கம் செய்ய விரும்புகிறார் மத்தேயு. ஆக, பாலன் இயேசுவை எகிப்திற்கு அனுப்பினால்தான் அவரை அங்கிருந்து அழைத்து வர முடியும். இப்போது திருக்குடும்பம் இருப்பது பெத்லகேமில். பெத்லகேமில் நடக்கும் இலக்கிய நிகழ்வு எகிப்துக்கு நகர்ந்தால்தான் இறையியல் சாத்தியமாகும். எனவே, குழந்தையை எகிப்திற்கு அனுப்ப வேண்டியதன் இறையியல் மற்றும் இலக்கியத் தேவையை நிறைவு செய்ய வருகின்றனர் 'ஞானிகள்.'

இவர்கள் யார்? இவர்கள் 'ஞானியரோ,' 'அரசர்களோ' அல்லர். இவர்களை பிரிவினை சபை விவிலியம் 'சாஸ்திரிகள்' என சரியாக மொழிபெயர்க்கிறது. இவர்கள் வானியல் பண்டிதர்கள். நட்சத்திரங்களையும், அவற்றின் நகர்வுகளையும், பறவைகள் மற்றும் விலங்குக் கூட்டங்களின் இடம் பெயர்தலையும் வைத்த வருங்காலத்தைக் கணிக்கத் தெரிந்தவர்கள். அவ்வளவுதான்! ஏனெனில், இவர்கள் அரசர்களாக இருந்திருந்தால், 'நீங்கள் போய்ப் பாருங்கள்' என்று ஏரோது அரசன் இவர்களை அனுப்பியிருக்க மாட்டான். 'நீங்கள் இங்கே தங்கி இளைப்பாறுங்கள். நான் காவலாளிகளை அனுப்பி விசாரிக்கிறேன்' என்று இவர்களை அரண்மனையில் அமர்;த்தியிருப்பான். மேலும், இவர்கள் மூன்று பேர் அல்லர். இவர்கள் கொண்டு வந்த காணிக்கைப் பொருள்களை வைத்து நாம் 'மூன்று நபர்கள்' வந்ததாகச் சொல்கிறோம். மேலும், இவர்கள் 'ஞானியர்' என அழைக்கப்படுகின்றனர். ஆனால், 'யூதர்களின் அரசனாகப் பிறந்திருக்கிறவர் எங்கே?' என்று யூதர்களின் அரசன் ஏரோதிடம் போய்க் கேட்பது ஞானம் அன்று. ஏரோது தன் அரியணையைத் தக்க வைக்க தன் குடும்பம் முழுவதின் இரத்தத்தையும் குடித்தவன். இத்தகைய அரசனிடம் போய் மற்றொரு அரசனைப் பற்றி விசாரிப்பது 'கொள்ளிக் கட்டையால் தலையைச் சொறிவதற்குச் சமமாக' இருந்திருக்கும். ஆனாலும், நம் நிகழ்வின்படி அவர்கள் அரண்மனைக்குத்தான் செல்கிறார்கள். ஏனெனில், இத்தகையோரின் சேவை அரசர்கள் எதிர்காலத்தைக் கணிப்பதற்கு அவர்களுக்கு உதவியாக இருந்தது. ஆகவேதான், இவர்கள் அரசனிடம் செல்கிறார்கள். மேலும், இவர்கள் எதையும் மூடி மறைக்காத, அதே நேரத்தில், துணிச்சல் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.

'அவரது விண்மீன் எழக் கண்டோம்' - இதுதான் அவர்கள் பெற்றிருந்த அடையாளம்.

ஏரோது தன் குள்ளநரித்தனத்தால், 'நீங்கள் சென்று குழந்தையைக் குறித்து திட்டவட்டமாய்க் கேட்டு எனக்கு அறிவியுங்கள். அப்பொழுது நானும் சென்று குழந்தையை வணங்குவேன்' என்று சொல்லி அவர்களை அனுப்பிவைக்கின்றான்.

அந்த நேரத்தில்தான் இரண்டாம் முறை அந்த விண்மீன் தோன்றுகின்றது. அரண்மனையின் உயரமான சுவர்கள் அதை மறைத்ததா? அல்லது ஏரோதின்முன் இவர்கள் மண்டியிட்டதால் விண்மீன் இவர்களுக்கு மறைவாயிருந்ததா? - தெரியவில்லை நமக்கு. ஆனால், 'அங்கே நின்ற விண்மீனைக் கண்டதும் அவர்கள் மட்டில்லாப் பெருமகிழ்ச்சி அடைகிறார்கள்.' மத்தேயு முதல் முறையாக அவர்களின் மகிழ்ச்சி என்ற உணர்வைப் பதிவு செய்கின்றார். வீட்டிற்குள் செல்லும் அவர்கள் குழந்தைக்கு தங்கம் (அரச நிலையின் அடையாளம்), தூபம் (இறை நிலையின் அடையாளம்), வெள்ளைப் போளம் (மனித நிலையின் அடையாளம்) பரிசளிக்கின்றனர். கனவில் எச்சரிக்கப்பட்டு வேறு வழியாகத் தங்கள் நாடு திரும்புகிறார்கள்.

இந்நிகழ்வில் இவர்கள் ஏரோதின் அரண்மனைக்கு வந்தது ஒருமுறைதான். வந்த வழி ஒருமுறைதான். இயேசுவைக் கண்டதும் ஒருமுறைதான். திரும்பும் வழியும் ஒருமுறைதான். ஆனால், விண்மீனைக் கண்டது மட்டும்தான் இரண்டுமுறை. அதுவும் இரண்டாம் முறை அவர்கள் கண்ட விண்மீன் அவர்களின் பாதையை முழுவதுமாக மாற்றிப் போடுகின்றது.

இவ்வாறாக, முதல் வாசகத்தில் எருசலேம் இரண்டாம் முறை ஒளி பெற்று, கடவுளின் மாட்சியால் துலங்குகிறது. இரண்டாம் வாசகத்தில் புற இனத்தார் நம்பிக்கையின் வழி இரண்டாம் வாழ்வைப் பெறுகின்றனர். நற்செய்தி வாசகத்தில் இரண்டாம் முறை கண்ட விண்மீன் சாஸ்திரிகளுக்கு யூதர்களின் அரசனை அடையாளம் காட்டுகிறது.

வாழ்வின் இனிமைகள் இரண்டாம் முறையிலும் சாத்தியம் என்கிறது இன்றைய வழிபாடு. ஞானம் என்பது முதல் முறை எழுந்து நிற்பது அல்ல. மாறாக, முதல் முறை விழுந்து இரண்டாம் முறை எழுந்து நிற்பது.

இன்றைய நம் உலகம் முதல் முறைகளையே பெரிதும் கொண்டாடுகிறது. முதல் முறையில் வெல்லாதவர்களைத் தேவையற்றவர்கள் என முத்திரை குத்திவிடுகிறது. புனித அகுஸ்தினரின் வாழ்வை எடுத்துக்கொள்வோம். தன் மனமாற்றத்திற்கு முன் அவருடைய முதல் வாழ்வு அமைதியில்லாமல் இருக்கிறது. ஆனால், அதை அவர் விரக்தியாக எடுத்துக்கொள்ளவில்லை. இரண்டாம் வாழ்விற்குள் அடியெடுத்து வைக்கின்றார். மிகப்பெரிய இறையியலாராக மாறுகின்றார். மானிக்கேய சிந்தனையால் முதல் வாழ்வைக் கழித்த அவர், இறைவனில் தன் இரண்டாம் வாழ்வைக் கழிக்கிறார்.

2019ஆம் ஆண்டு தொடங்கி சில நாள்கள் கடந்திருக்கின்றன. 'இனி குடிக்க மாட்டேன்,' 'இனி கோபப் பட மாட்டேன்,' 'இனி உடல்நலம் கவனிப்பேன்,' 'இனி வாக்கிங் போவேன்,' 'இனி என் நேரம் வீணாக்க மாட்டேன்' என்று கடந்த ஆண்டு வாக்குறுதிகள் எடுத்து, நிறைவேற்ற முடியாமல் போயிருப்போம். அல்லது எடுத்த ஆறு நாள்களுக்குள் மீறியிருப்போம். ஆனால், அதற்காக நம்மை நாமே சபித்து குற்ற உணர்வு கொள்ள வேண்டாம். மீண்டும் ஒருமுறை வாழப் பழகுவோம். வாழ்வில் எல்லாமே ஒருமுறைதான் இந்த உலகம் பல இனியவர்களையும், இனியவைகளையும் இழந்திருக்கும்.

'தொடங்கியது எல்லாம் இனியதாக முடியும். அப்படி இனியதாக இல்லை என்றால் அது இன்னும் முடியவில்லை' என்பார் ஆஸ்கார் வைல்ட். எருசலேம் மக்களின் பயணம் பாபிலோனியாவின் அடிமை இருளில் முடியவில்லை. புறவினத்தாரின் பயணம் தங்கள் பாவ வாழ்க்கையோடு முடியவில்லை. சாஸ்திரிகளின் பயணம் ஏரோதின் அரண்மனையோடு முடியவில்லை. இரண்டாம் முறை ஒளி வந்தது. இரண்டாம் முறை வாழ்க்கை வந்தது. இரண்டாம் முறை விண்மீன் வந்தது.

இரண்டாம் முறை வரும் விண்மீனைக் காண மூன்று படிகள் அவசியம்: (அ) இதுதான் விண்மீன் எனத் தெரிய வேண்டும், (ஆ) பழைய விண்மீனோடு அதைப் பொருத்திப் பார்க்க வேண்டும், (இ) 'இதுவே அது' என்று முடிவு எடுத்து பயணம் தொடர வேண்டும்.

நாம் சந்தித்த பாபிலோனியாவும், ஏரோதுகளும் போதும். கொஞ்சம் அண்ணாந்து பார்ப்போம். வாழ்க்கை மீண்டும் விண்மீனாக ஒளிரும். ஏனெனில், முதல் முறை பார்த்ததும், பார்த்ததை மறந்ததும் நம் தவறாக, சந்தர்ப்ப சூழலாக இருக்கலாம். ஆனால், இரண்டாம் முறை பார்ப்பதும், விண்மீனைத் தொடர்வதும் நம் தெரிவாக இருக்க வேண்டும். தெரிவு பிறக்க தெளிவு பிறக்கும்.

அந்தத் தெளிவில் பெத்லகேம் குழந்தை நம்மில் ஒளிரும். ஏனெனில், முதல் மட்டுமல்ல. இரண்டாவதும் வெற்றியே!

திருக்காட்சிப் பெருநாள் நல்வாழ்த்துக்கள்!


எல்லாருக்குமான இறைவன் 

மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளை மறைமாவட்டம்.


  நிகழ்வு
 
         டோனி டி மெல்லோவின் கதை இது. ஓர் ஊரில் இறையடியார் ஒருவர் இருந்தார். அவர் இறைவனைத் தொழாத நாளில்லை. அப்படிப்பட்டவர் ஒருநாள் இறைவனிடம் மிக உருக்கமாக வேண்டிக்கொண்டிருக்கும்போது, இறைவன் அவருக்கு முன்பாகத் தோன்றினார். இறைவனின் தரிசனத்தை சிறிதும் எதிர்பார்த்திராத இறையடியார், அவருக்கு முன்பாக சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினார்.

  பின்னர் அவர் இறைவனைப் பார்த்து, “இறைவா! உன் கருணையோ கருணை. எளியவன் என்னைப் பார்க்க வந்திருக்கின்றாயே... சொல்லும் உமக்காக நான் என்னவேண்டுமானாலும் செய்கிறேன்” என்றார். உடனே இறைவன் அவரைப் பார்த்து, “எனக்கு ஃபுட்பால் ஆட்டம் பார்க்கவேண்டும் என்று நீண்ட நாள் ஆசை. பக்கத்தில் எங்காவது ஃபுட்பால் ஆட்டம் நடந்துகொண்டிருந்தால் என்னை அங்கு கூட்டிக்கொண்டு போவாயா?” என்று கேட்டார். “இதோ உடனே கூட்டிக்கொண்டு போகிறேன் சாமி” என்று இறையடியார் இறைவனை ஃபுட்பால் ஆட்டம் நடைபெற இருந்த ஒரு மைதானத்திற்குக் கூட்டிக் கொண்டு போனார்.
 
அவர்கள் மைதானத்திற்குள் சென்ற சிறிது நேரத்தில் போட்டி ஆரம்பமானது. அன்றைய நாளில் போட்டியானது கிறிஸ்தவர்கள் அணிக்கும் சீக்கியர்கள் அணிக்கும் இடையே நடைபெற்றது. போட்டி தொடங்கிய சிறுதுநேரத்திலே கிறிஸ்தவர்களின் அணியைச் சேர்ந்தவர்கள் முதல் கோலைப் போட்டார்கள். இதைப் பார்த்துவிட்டு இறைவன் மிகவும் உற்சாகமாகக் கத்தினார். தன்னுடைய தலையில் அணிந்திருந்த தொப்பியை மேலும் கீழும் தூக்கிப் போட்டுப் பிடித்தார். இதைப் பார்த்த இறையடியாருக்கு மிகவும் வியப்பாக இருந்தது. ‘இறைவன் ஃபுட்பால் ஆட்டத்தை நன்றாக இரசிக்கிறார் போலும், இரசிக்கட்டும்’ என்று நினைத்துவிட்டு, எதுவும் கேட்காமல் அமைதியாக இருந்தார்.

  நேரம் ஆக ஆக, போட்டி இன்னும் சூடுபிடித்தது. யாரும் எதிர்பாராத தருணத்தில் சீக்கியர்களின் அணியைச் சேர்ந்தவர்கள் ஒரு கோலைப் போட்டார்கள். இதைப் பார்த்துவிட்டு இறைவன் முன்புபோல் உற்சாகத்தில் கத்தினார், தன்னுடைய தொப்பியைக் கழற்றி மேலும் கீழும் தூக்கப் போட்டுப் பிடித்தார். இது இறையடியாருக்கு இன்னும் ஆச்சரியத்தைத் தந்தது. உடனே அவர் இறைவனை அழைத்து, “இறைவா! நீங்கள் எந்த மதத்தைச் சார்ந்தவர்? கிறிஸ்தவ மதமா? சீக்கிய மதமா?” என்று கேட்டார். அதற்கு இறைவன், “நான் எந்த மதத்தைச் சார்ந்தவன் என்பதைவிட எல்லாருக்கும் சொந்தமானவன், எல்லாரும் என்னுடைய மக்கள். அதனால்தான் நான் இரு தரப்பினரும் கோல்போட்ட போது மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தேன்” என்றார்.

  இறைவன் எல்லாருக்கும் பொதுவானவர். அவரை ஒரு குறிப்பிட்ட பிரிவிற்கோ அல்லது ஒரு குறிப்பிட்ட குலத்திற்கோ மட்டும் சொந்தமாக்குவது அர்த்தமற்ற செயல்.

  குழந்தை இயேசுவைத் தேடிவந்த ஞானிகள்

  இறைவன் எல்லாருக்கும் பொதுவானவர் என்ற உண்மையினை உணர்த்தும் திருக்காட்சி பெருவிழாவை அல்லது மூன்று ஞானிகளுடைய பெருவிழாவை இன்று நாம்  கொண்டாடி மகிழ்கின்றோம். வானவியல் அறிஞர்களான இந்த மூன்று பேருமே வானத்தில் தோன்றிய விண்மீனைப் பார்த்துவிட்டு, யூதர்களின் அரசர் தோன்றியிருக்கின்றார் என்று உறுதிசெய்துகொண்டு, அவரைப் பார்க்க காணிக்கைப் பொருட்களோடு எருசலேமை நோக்கி வருகிறார்கள். வந்து குழந்தை இயேசுவைச் தரிசிகிறார்கள். பின்னர் தங்களுடைய இல்லத்திற்கு மாற்றுப் பாதையில் திரும்பிச் செல்கிறார்கள்.
 
இன்று இம்மூன்று ஞானிகளின் விழாவைக் கொண்டாடுகின்ற இவ்வேளையில், இவ்விழா நமக்குச் சொல்லும் செய்தி என்ன என்று சிந்தித்துப் பார்ப்போம்.
 

  1. இறைவன் வாக்கு மாறாதவர்
விண்மீன் வழிகாட்டுதலின் பேரில் எருசலேமிற்கு வந்த மூன்று ஞானிகளும், அங்கிருந்த ஏரோது மன்னனிடம் சென்று, “யூதர்களின் அரசராகப் பிறந்திருக்கிறவர் எங்கே? அவரை வணங்க வந்திருக்கிறோம்?” என்கிறார்கள். இதைக் கேட்டு ஏரோது கலங்கினாலும் தலைமைக் குருக்களையும் மறைநூல்கள் அறிஞர்களையும் கூப்பிட்டு, “மெசியா எங்கே பிறப்பார்?” என்று கேட்க, அவர்கள் பெத்லகேம் என்று சொல்கிறார்கள். இங்கேதான் நாம் ஒன்றை ஆழமாகச் சிந்தித்துப் பார்க்கவேண்டும். மெசியா பெத்லகேமில்தான் பிறப்பார் என்ற செய்தி மறைநூல் அறிஞர்களுக்கும் தலைமைக்குருக்களும் தெரிந்தபோதும், அவர்கள் மூன்று ஞானிகள் சொன்னதைக் கேட்டு இயேசுவை/மெசியாவைப் பார்க்கச் செல்லவில்லை. மாறாக மூன்று ஞானிகள்தான் இறைவார்த்தையை நம்பி, இயேசுவைக் காணச் செல்கின்றார்கள். கடைசியில் கண்டுகொள்ளவும் செய்கிறார்கள்.

 இறைவன் சொன்ன சொல் மாறாதவர் (13:8), அப்படிப்பட்டவருடைய வார்த்தைகளை நம்பிச் செயல்பட்ட மூன்று ஞானிகளைப் போன்று நாமும் செயல்பட்டால், இறைவனின் ஆசிரைப் பெறுவது உறுதி. 
  1. இயேசு – இறைவன் – எல்லாருக்கும் பொதுவானவர்

  இயேசுவைக் காணவந்த மூன்று ஞானிகளுமே யூதர்கள் அல்ல, அவர்கள் புறவினத்தார். அப்படியிருந்தபோதும் ‘யூதர்களின் அரசர்’ (?) என்று அறியப்பட்ட இயேசு, அவர்களுக்கும் தன்னை வெளிப்படுத்துகின்றார். இது ஆண்டவராகிய இயேசு யூதர்களுக்கு மட்டுமல்ல, எல்லாருக்கும் பொதுவானவர் என்ற உண்மையை மிகத் தெளிவாக எடுத்துச் சொல்கின்றது. இறைவன் எல்லாருக்கும் பொதுவானவர் என்றால், இறைவன் என் குலத்திற்கு, என் இனத்திற்கு மட்டும்தான் சொந்தம் என்று சொந்தம் கொண்டாடுவது எந்த விதத்தில் நியாயம்? அது ஒருபோதும் ஏற்றுக்கொள்ளத் தக்க ஒன்று.

  இறைவன் எல்லாருக்கும் பொது என்றால், யாவரும் ஓர் குலம், ஒரு தாயின் மக்கள் என்பதுதான் நிஜம்
  1. நேர்மையான உள்ளத்தோடு ஆண்டவரைத் தேடுவோர், அவரைக் கண்டுகொள்வர்
திருக்காட்சிப் பெருவிழா நமக்குக் கொடுக்கும் மிக முக்கியமான செய்தி, நாம் நேர்மையான உள்ளத்தோடு ஆண்டவரைத் தேடினோம் என்றால், அவரை நிச்சயமாக கண்டுகொள்வோம் என்பதாகும். மூன்று ஞானிகளும் இயேசுவை முழு மனதாக, அதே நேரத்தில் நேர்மையான உள்ளத்தோடு தேடினார்கள். இடையில் அவர்கள் ஏராளமான பிரச்சினைகளைச் சந்தித்திருக்கக்கூடும். அவற்றைக் கண்டெல்லாம் அவர்கள் மனந்தளராமல் ஆண்டவரைத் தேடினார்கள். இறுதியில் கண்டுகொள்ளவும் செய்தார்கள். நாமும் அவர்களைப் போன்று ஆண்டவரைத் தேடினால், நிச்சயம் கண்டுகொள்வோம் என்பது உறுதி.

  சிந்தனை
      

இன்றைக்கு கடவுளின் பெயராலே பிளவுபட்டுக் கிடக்கின்றோம். இந்தக் கோவில் எங்களுக்குத்தான் சொந்தம், அவர்கள் இதில் வழிபட உரிமை என்று வேற்றுமை பாராட்டுகின்றோம். ஆனால், இறைவன் ஒருவர்தான், அவர் எல்லாருக்கும் பொதுவானவர். அப்படிப்பட்டவரை நாம் நம்மிடம் இருக்கின்ற வேறுபாடுகளைக் களைந்து ஒற்றுமை உணர்வோடு வழிபடுவோம். அவரை முழு உள்ளத்தோடு தேடி, அவருக்கு உகந்த மக்களாவோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
 



No comments:

Post a Comment