Wednesday 6 February 2019

ஆண்டின் பொதுக் காலம் ஐந்தாம் ஞாயிறு

ஆண்டின் பொதுக் காலம் ஐந்தாம் ஞாயிறு

 

 இன்றைய நற்செய்தி வாசகங்கள்:

 எசாயா  6:1-8;
1 கொரிந்தியர்  15:1-11;
லூக்கா 5:1-11




கடவுளால் ஆகாதது ஒன்றுமில்லை என்பதை நிரூபிக்க மூன்று நிகழ்ச்சிகளை இன்றைய வார்த்தை வழிபாடு நமக்குத் தருகிறது.

இறைவாக்கு உரைக்க இறைவன் எசாயாவை அழைத்தபோது, நான் தூய்மையற்ற உதடுகளைக் கொண்ட மனிதன் என்றார் எசாயா. ஒன்றுமில்லாமையிலிருந்து உலகைப் படைத்த இறைவனுக்கு எசாயாவின் உதடுகளைச் சுத்தப்படுத்த எவ்வளவு நேரம் ஆகும்? இறைவன் எசாயாவின் உதடுகளைத் தொட, பரிசுத்தமாக்கப்பட்ட எசாயா, இதோ நானிருக்கிறேன். என்னை அனுப்பும் என்றார் .
இரண்டாவது, புனித பவுல் உயிர்த்த இயேசுவைப் பற்றி எடுத்துரைக்கிறார். எந்த சக்தியாலும் இயேசுவின் உயிர்ப்பை தடுத்து நிறுத்த முடியவில்லை என்று உரைத்தார் துணிவோடு.

மூன்றாவது, பேதுரு, செபதேயுவின் மக்கள் யாக்கோபு, யோவான் இரவு முழுவதும் கடலிலே ஒன்றும் அகப்படாமல் சோகத்தில் இருந்தபோது, இயேசு அவர்களைச் சந்திக்கிறார். மீன் ஒன்றும் அகப்படவில்லை என்று கலங்கிய கண்களோடு பேதுரு இயேசுவை நோக்கிக் கூற , ஆழத்திற்கு தள்ளிக் கொண்டுபோய், மீன் பிடிக்க உங்கள் வலைகளைப் போடுங்கள் என்றார் இயேசு. அவ்வாறே பேதுருவும் யாக்கோபும், யோவானும் நம்பி வலைகளை ஆழத்தில் வீச, ஏராளமான மீன்களை வளைத்துப் பிடித்தனர். ஆம்! இயேசுவால் ஆகாதது ஒன்றுமில்லை.

விமான ஓட்டி ஒருவர் நள்ளிரவில் பயணிகளைப் பார்த்து, நாம் ஆபத்தில் சிக்கிக் கொண்டிருக்கிறோம். கடவுள் தான் நம்மைக் காப்பாற்ற வேண்டும் என்றார் ஆங்கில மொழியில். ஆங்கிலம் தெரியாத ஒருவர் தன் பக்கத்திலிருந்தவரைப் பார்த்து, விமானஓட்டி என்ன சொல்கிறார் என்று கேட்டார். கேட்டவருக்குக் கிடைத்த பதில், நம்பிக்கை இல்லை என்று கூறுகிறார் என்பது.

நாம் இவ்வுலகில் வாழ்வதே நம்பிக்கையில்தான். நாம் நம்பவில்லை என்றால் உலகில் ஒரு நொடிப்பொழுதும் வாழவே முடியாது. ஆகவே நம்பிக்கையை ஆடையாக அணிந்து, இறைவனால் முடியாதது ஒன்றுமில்லை என்பதை உணர்ந்தவர்களாக வாழ்வோம். அப்போது அவர் நம்மீது கருணை மழை பொழிந்திடுவார்
.






நம்புகின்றவர்கள் வெற்றிபெறுவார்கள்

நம்பிக்கை என்றால் என்ன என்பதைச் சுட்டிக்காட்ட இதோ ஒரு குட்டிக்கதை! பேரரசன் ஒருவன் ஓர் ஊரில் ஓர் அழகான கோயிலைக் கட்ட விரும்பினான். கோயில் கட்டும் வேலை துவங்கியது. கோயில் கட்டப்பட்ட இடத்திற்குப் பக்கத்தில் குடிசை ஒன்று ! அந்தக் குடிசைக்குள்ளே சிறுவன் ஒருவன். அவன் தினம் தினம் கோயில் கட்டும் இடத்திற்குச் சென்று கோயில் கட்டப்படுவதை வேடிக்கைப் பார்ப்பான். கோயில் கட்டப்படும் வேலை ஏறக்குறைய முடிந்துவிட்டது. கோபுரத்தின் உச்சிப்பகுதி கட்டப்பட்டது.

அந்தக் கோபுரத்தின் மீது ஏற வேண்டும். ஏறி அங்கிருந்து ஊரைப் பார்க்கவேண்டும். சிறுவனது கனவு நனவாகும் நாள் வந்தது.

கோபுரத்தின் உச்சியில் வேலை செய்துகொண்டிருந்த கொத்தனாரின் தலைப்பாகை கீழே விழுந்துவிட்டது. நல்ல வெயில்! கொத்தனார் குனிந்து பார்த்தார். அங்கே அந்தச் சிறுவன் நின்றுகொண்டிருந்தான். கொத்தனார் அவனைப் பார்த்து, தம்பி, என் தலைப்பாகை கீழே விழுந்துவிட்டது ; அதை எடுத்துத்தர முடியுமா? என்று கேட்டார்.
நிச்சயமாக, இதற்காகத்தானே இத்தனை நாள்கள் , இத்தனை மாதங்கள் காத்திருந்தேன் எனச் சொல்லி, சிறுவன் துண்டை எடுத்துக்கொண்டு ஏணியில் ஏறினான். பாதி தூரம் சென்றிருப்பான். என்ன நினைத்தானோ தெரியவில்லை, கீழே குனிந்து பார்த்தான்.
அதள பாதாளம்! கைகளும், கால்களும் நடுங்கத் தொடங்கின. கொத்தனாரைப் பார்த்து, ஐயா எனக்கு மயக்கம் வருகின்றது என்றான். அதற்குக் கொத்தனார், தயவு செய்து கீழே பார்க்காதே, மேலே பார், என்னைப் பார் என்றார். அந்தச் சிறுவனும் அப்படியே மேலே பார்த்தபடியே ஏணியில் ஏறினான்.

உச்சியை அடைந்தான். அவன் கனவு நனவாகியது; எல்லையில்லா பெருமகிழ்ச்சி அடைந்தான்.

இந்நிகழ்ச்சியில் வந்த சிறுவன் கொண்டிருந்த மனநிலைக்குப் பெயர்தான் நம்பிக்கை.
கொத்தனார் நம்மைவிடப் பெரியவர். அவர் சொல்வதில் உண்மையிருக்கும் என அந்தச் சிறுவன் நம்பினான்.

கதையில் வந்த கொத்தனாரைப் போன்றவர்தான் கடவுள் ! கடவுள் நம்மைவிடப் பெரியவர், அவர் சொல்லும் சொல்லில் உண்மையைத் தவிர வேறொன்றும் இருக்காது என்று சொல்வதற்குப் பெயர்தான் நம்பிக்கை.

இதோ, பழைய ஏற்பாட்டிலிருந்தும், புதிய ஏற்பாட்டிலிருந்தும் இரண்டு உதாரணங்கள். தானியேல் நூல் இயல் 6. அங்கே நாம் தானியேல் இறைவாக்கினரைச் சந்திக்கின்றோம். அவர் அரசனின் தவறான ஆணைக்குக் கீழ்ப்படிய மறுத்ததால் சிங்கங்களின் குகைக்குள் எறியப்பட்டார். ஆனால் அவரோ தம் கடவுள் இறந்தவர்களின் கடவுள் அல்ல, உயிருள்ளவரின் கடவுள் என்று நம்பி, தமது நம்பிக்கை நிறைந்த கண்களைக் கடவுள் பக்கம் திருப்பினார். சிங்கங்களின் வாய்கள் கட்டப்பட்டன ! அவர் காப்பாற்றப்பட்டார்.
இன்றைய நற்செய்தி புனித பேதுருவின் வாழ்க்கையில் நடந்த ஓர் அருமையான நிகழ்வை நமக்குப் படம் பிடித்துக்காட்டுகின்றது.

அது காலை நேரம். கிழக்கு வெளுத்தது, கீழ்வானம் சிவந்தது. பறவைகள் எல்லாம் கூட்டைவிட்டு வானில் பறந்து கானம் பாடின. தெவிட்டாத தீந்தென்றல் இயற்கையை அழகாகத் தாலாட்டியது.

கடல் சிரித்தது ! கரை சிரித்தது !

ஆனால் அந்த மீனவர்களின் முகங்களில் சிரிப்பு இல்லை. காரணம் இரவு முழுவதும் பாடுபட்டும் எந்த மீனும் அவர்களுக்குக் கிடைக்கவில்லை. அங்கே இயேசு தோன்றுகின்றார்.

கவலையா? அங்கே இயேசு தோன்றுவார்.
கண்ணீரா? அங்கே இயேசு தோன்றுவார்.
மயக்கமா? அங்கே இயேசு தோன்றுவார். 

தயக்கமா? அங்கே இயேசு தோன்றுவார்.

அந்த மீனவர்கள் மனத்தினிலே கவலை! நடந்ததை அறிந்துகொண்டு இயேசு ஆழத்திற்குத் தள்ளிக்கொண்டு போய், மீன்பிடிக்க உங்கள் வலைகளைப் போடுங்கள் (லூக் 5:4) என்றார். இரவு முழுவதும் முயன்றும் எங்களுக்கு மீன் கிடைக்கவில்லை. ஆனால் உமது வார்த்தையின் மீது நம்பிக்கை வைத்து வலையை வீசுகின்றோம் என்று சொல்லி அந்த மீனவர்கள் வலையை வீசினார்கள். ஏராளமான மீன்கள் கிடைத்தன.


இன்று நாம் சிங்கக் குகைக்குள் எறியப்படாமலிருக்கலாம். ஆனால் சில சமயங்களில் வறுமை என்னும் குகைக்குள் எறியப்படுகின்றோம். நோய் என்னும் குகைக்குள் எறியப்படுகின்றோம்.

மரணம் என்னும் குகைக்குள் எறியப்படுகின்றோம்.


பல சமயங்களில்
முத்துக்குள் சிப்பி இருப்பதில்லை! 

மண்ணுக்குள் மாணிக்கம் இருப்பதில்லை! 
தண்ணீருக்குள் தாமரை இருப்பதில்லை!
எத்தனை முறை முயன்றாலும், எவ்வளவு முயன்றாலும் படிக்கும் பாடத்தில் வெற்றி கிடைப்பதில்லை!
 இல்லறத்திலும் சுகம் இல்லை , துறவறத்திலும் சுகம் இல்லை !
எடுக்கும் முயற்சியில் சிகரம் கிடைப்பதில்லை ! இல்லறத்திலும் துன்பம், துறவறத்திலும் துன்பம்!

இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்போரே எல்லாரும் என்னிடம் வாருங்கள் (மத் 11:28) என்ற இயேசுவின் வார்த்தைகள் மீது நம்பிக்கை வைத்து நமது நம்பிக்கையுள்ள கண்களை நற்கருணை ஆண்டவர் பக்கம் திருப்பி, வளமோடும் நலமோடும் வாழ்வோம். எசாயாவின் நம்பிக்கையை (முதல் வாசகம்), புனித பவுலடிகளாரின் நம்பிக்கையை (இரண்டாம் வாசகம்) நமது ம்பிக்கையாக்கிக் கொள்வோம்.

மேலும் அறிவோம் :
வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்
மற்றைய எல்லாம் பிற (குறள் : 661).

பொருள் : செயல்திறம் என்று அறிஞர் பெருமக்கள் போற்றிப் புகழ்வது ஒருவருடைய மன உறுதியே ஆகும். ஏனைய உறுதிகள் அனைத்தும் செயல் உறுதி என்று கூறப்படா!




மனநோய் மருத்துவமனை ஒன்றில் ஒருநாள் காலையில் ஒரு மனநோயாளி தனது கட்டிலுக்கு அருகிலிருந்த சுவற்றில் தனது காதை வைத்து அச் சுவற்றிலிருந்து ஏதோ கேட்பதைப் போன்று காட்டிக் கொண்டார். அவரைப் பார்த்த மற்ற மனநோயாளிகளும் சுவற்றில் காதை வைத்துக் கேட்டனர், காலை 10.00 மணிக்கு மனநோயாளிகள் பிரிவுக்கு வந்த மருத்துவரும் தனது காதை சுவற்றில் வைத்துக் கேட்க, அவர் காதில் ஒன்றும் கேட்கவில்லை . எனவே அவர் மனநோயாளிகளிடம், "சுவற்றில் என்ன கேட்கின்றீர்கள்? என் காதில் ஒன்றும் கேட்கவில்லை ” என்றார். ஒரு மனநோயாளி மருத்துவரிடம், "நீங்கள் சுத்தப் பைத்தியம், நாங்கள் காலையிலிருந்தே காதை வைத்துக் கேட்டுக்கொண்டு இருக்கின்றோம். இன்னும் ஒன்றையும் எங்களால் கேட்க முடியல்லை; அப்படியிருக்க உங்களுக்கு மட்டும் வந்தவுடனே கேட்குமா?" என்றார்.

ஆழத்திற்குப் படகைத் தள்ளி வலையை வீசும்படி பேதுருவை இயேசு கேட்டபோது பேதுரு அவரிடம், "நீங்கள் கடலைப் பற்றிய விபரம் தெரியாத ஆள் போல் இருக்குது; கடலைப் பற்றி நன்கு அறிந்த நாங்களே இரவு முழுவதும் மீன்பிடித்தும் ஒரு மீன் கூட அகப்படவில்லை. உங்க பேச்சைக் கேட்டு வலையை வீசினால் மீன் ஆகப்படுமா?” என்று அந்த மனநோயாளி மருத்துவரைக் கேட்டதுபோல கேட்டிருக்கலாம். ஆனால், பேதுரு அவ்வாறு செய்யாது இயேசுவிடம், "உமது சொல்லை நம்பி வலையைப் போடுகிறேன்" என்றார், வலைகள் கிழிந்து போகும் அளவுக்கு ஏராளமாக மீன்கள் அகப்பட்டன.

கடவுளை உண்மையாகவே நம்புகிறவர்களுக்கு எல்லாம் கை கூடும், "கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை " (லூக் 1:37). கடுகளவு நம்பிக்கை மலையையும் பெயர்க்கும் சக்தி வாய்ந்தது (மத் 17:20). கடவுளிடம் நம்பிக்கை கொண்டோர் இறப்பினும் உயிர் வாழ்வர் (யோவா. 11:25).

காதலர்கள் இருவர் ஓர் ஆழமான கிணற்றில் பேசிக் கொண்டிருந்தனர், "நீங்கள் ஏன் அவ்வாறு செய்கிறீர்கள்" என்று கேட்டதற்கு அவர்கள், "எங்கள் காதல் ஆழமானது" என்றார்களாம், கடவுள் மேல் நமக்குள்ள நம்பிக்கையும் ஆழமானதாக இருக்க வேண்டும். "ஆழத்திற்குப் படகைத் தள்ளிக் கொண்டு போங்கள்” என்று கிறிஸ்து இன்றைய நற்செய்தியில் கூறுகிறார்.

நமது நம்பிக்கை மேலோட்டமாக அமையாமல் வேரோட்டமாக இருக்க வேண்டும். தோல்விகளைக் கண்டு துவண்டு போகலாகாது. தோல்வி நம்மைத் துரத்திக் கொண்டு வந்தால் வெற்றி நம்மை நெருங்கி வருகிறது என்று நினைக்கவேண்டும், "நம்பிக்கை வேண்டும் நம் வாழ்வில்; இலட்சியம் நிச்சயம் வெல்லும் ஒருநாளில்" "நம்பினார் கெடுவதில்லை; இது நான்கு மறைத்தீர்ப்பு".

கடவுள் ஒரு சிலரைத் தமது இறையரசின் முழு நேரப் பணியாளர்களாகும்படி அழைக்கிறார். அவ்வாறு கடவுளால் அழைக்கப்பட்ட எசாயா, பவுல், பேதுரு ஆகிய மூவருமே தங்களது தகுதி இன்மையை உணர்கின்றனர்.

முதல் வாசகத்தில் எசாயா, "தூய்மையற்ற உதடுகளைக் கொண்ட மனிதன் நான்" என்கிறார் (எசா 6:5). இரண்டாம் வாசகத்தில் பவுல், "திருத்தூதர் என அழைக்கப் பெற தாம் தகுதியற்றவர்” என்கிறார் (1 கொரி 15:9). நற்செய்தியில் பேதுரு இயேசுவிடம், "ஆண்டவரே நான் பாவி. நீர் என்னை விட்டுப் போய்விடும்" என்கிறார் (லூக் 5:8).

ஆனால், மேற்கூறப்பட்ட மூவரையுமே கடவுள் தமது ஊழியத்துக்குத் தகுதியுள்ளவர்களாக மாற்றுகின்றார். நெருப்புப் பொறியால் எசாயாவின் உதடுகளைத் தொட்டு, அவரிடமிருந்த குற்றப் பழியையும் பாவங்களையும் அகற்றுகிறார் (எசா 6:6-7), திருத்தூதர் பவுல், "நான் இந்த நிலையில் இருப்பது கடவுளின் அருளால்தான். அவர் எனக்களித்த அருள் வீணாகிவிடவில்லை " என்கிறார் (1 கொரி 15:10). இயேசு பேதுருவிடம், "அஞ்சாதே, இது முதல் நீ மனிதரைப் பிடிப்பவன் ஆவாய்" என்கிறார் (லூக் 5:10).

கடவுள் தகுதியுள்ளவர்களை அழைக்கிறார் என்பதைவிட, தகுதியற்றவர்களை அழைத்து அவர்களைத் தமது பணிக்குத் தகுதியுள்ளவர்களாக மாற்றுகிறார் என்பதே உண்மை . இன்றும் கடவுள் தமது பணிக்கு இளைஞர்களையும் இளம் பெண்களையும் அழைக்கின்றார். அவர்கள் தங்களது சொந்தப் பலத்தை நம்பாமல். கடவுளின் அருளை நம்பி, எசாயா கூறியது போன்று. "இதோ நானிருக்கிறேன். அடியேனை அனுப்பும்" என்று பதிலளித்துக் கடவுளின் அழைத்தலை ஏற்க முன்வரவேண்டும்.

துறவற வாழ்வு மட்டுமல்ல, இல்லற வாழ்வும் இறைவனுடைய அழைத்தலே என்பதை அனைவரும் உணரவேண்டும். கடவுள் எல்லார்க்கும் ஒரே விதமான அழைத்தலைக் கொடுப்பதில்லை. "அருள்கொடைகள் பலவகை; ஆனால் ஆவியார் ஒருவரே" (1 கொரி 12:4).

திருப்பணியாளர்கள் செல்ல முடியாத இடங்களுக்கெல்லாம் பொதுநிலையினர் சென்று நற்செய்தியை அறிவிக்க வேண்டும். குருக்கள் அப்பத்தையும் இரசத்தையும் கிறிஸ்துவின் உடலாகவும் இரத்தமாகவும் வசீகரம் செய்கின்றனர். ஆனால், பொதுநிலையினரோ உலகையே இறைவனுக்கு அர்ப்பணிக்கின்றனர் என்று 2ஆம் வத்திக்கான் சங்கம் பணிந்து கூறுகிறது (தி. எண். 34), குடும்பம், பண்பாடு, பொருளாதாரம், அரசியல் போன்ற உலக அமைப்பைப் பொதுநிலையினர் நற்செய்தி உணர்வால் ஊடுருவி உலகில் இறையரசைக் கட்டி எழுப்புகின்றனர்.

ஒரு பேருந்தில் ஒரு பிச்சைக்காரர் கை நீட்டிப் பயணிகளிடம் பிச்சை கேட்டுக் கொண்டிருந்தார், அவரிடம் பேருந்து நடத்துனர், "டேய் பிச்சைக்காரா! கீழே இறங்கு. நீயும் கை நீட்டிக் காசு வாங்குற: நானும் கை நீட்டிக் காசு வாங்குறேன். நம்ம இரண்டு பேரிலே யார் நடத்துனர், யார் பிச்சைக்காரன் என்று மக்களுக்குத் தெரியாமல் போயிடும்" என்றார்.

இன்று திருச்சபையில் யார் திருப்பணியாளர், யார் பொதுநிலையினர் என்ற வேறுபாடு தெரியாமல் ஒரு குழப்பச் சூழ்நிலை உருவாகி வருகிறது. திருப்பணியாளர்களின் பணிகளைப் பொதுநிலையினரும், பொதுநிலையினரின் பணிகளைத் திருப்பணியாளரும் செய்து வருகின்றனர். இந்த அவல நிலையைப் பார்த்து மறைந்த திருத்தந்தை 2ஆம் ஜான்பால் பின்வருமாறு கூறினார்: "சாமியார்களின் சம்சாரித்தனமும் சம்சாரிகளின் சாமியார்த்தனமும் கண்டிக்கப்பட வேண்டும்".

திருப்பணியாளர்கள் இதுவரை செய்து வந்த ஒரு சில பணிகளைப் பொதுநிலையினர் தற்போது செய்து வருவதால் அவர்கள் திருப்பணியாளர்கள் ஆவதில்லை. உலகைச் சார்ந்து இருப்பது பொதுநிலையினரின் தனிப்பண்பாகும். உலகின் நடுவில் புளிப்புமாவு போல் செயல்பட்டு உலகக் காரியங்களில் நற்செய்தியைப் புகுத்துவது பொதுநிலையினருக்குரிய தனிப்பட்ட அழைத்தலாகும்.

எனவே, திருமுழுக்குப் பெற்ற ஒவ்வொருவரும் தத்தம் அழைத்தலுக்கு ஏற்பத் திருத்தூதுப்பணி ஆற்றுவதே காலத்தின் கட்டாயமாகும், உலகின் நடுவில் வாழ்ந்து பொதுநிலையினர் நற்செய்திப் பணிபுரியட்டும். அதே பணியை உலகிலிருந்து பிரிந்து குருக்களும் துறவறத்தாரும் ஆற்றட்டும். அரங்கை மாற்றாமல் அனைவரும் ஆண்டவருக்கு ஊழியம் புரிய ஆண்டவர் அருள்வாராக!





ஆழத்திற்குத் தள்ளிக்கொண்டு போ


 மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளை மறைமாவட்டம்.


நிகழ்வு
         கான்சாஸ் நகரில் இளைஞன் ஒருவன் இருந்தான். அவன் அற்புதமாக கேலிச் சித்திரங்களை வரையக்கூடியவன்.

 ஒருநாள் அவன் தான் வரைந்து வைத்திருந்த கேலிச் சித்திரங்களையெல்லாம் எடுத்துக்கொண்டு, ஒரு பெரிய நிறுவனத்தில் வேலை கேட்டுப்போனான். அந்த நிறுவனத்தில் இருந்தவர்களோ இளைஞன் கொண்டுவந்திருந்த கேலிச் சித்திரங்களைப் பார்த்துவிட்டு, “இந்த மாதிரிக் கேலிச் சித்திரங்களை எல்லாம் மக்கள் இரசித்துப் பார்க்கமாட்டார்கள்” என்று சொல்லி அனுப்பிவிட்டனர். இளைஞன் அதை நினைத்து வருத்தமடையாமல், மறுநாள் வேறு ஒரு நிறுவனத்திற்குச் சென்றான். அங்கேயும் அவன் வேறொரு ஏதோ ஒரு காரணத்திற்காக வெளியே அனுப்பி வைக்கப்பட்டான். இப்படி அவன் பல நிறுவனங்களின் வாசலை ஏறியபோதும், அவனுக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது. இதற்காக அவன் சிறிதும் மனதளராமல், ஒவ்வொரு நிறுவனமாக ஏறி இறங்கினான்.

  ஒருநாள் அவன் ஓர் அருட்தந்தையைச் சந்தித்து, வேலை கேட்டு நின்றான். அருட்தந்தையோ, “உனக்கு வேலை கொடுக்கிற அளவுக்கு இங்கு பெரிதாக வேலை எதுவும் இல்லை... வேண்டுமானால், இங்கேயே தங்கிக்கொண்டு ஆலயத்திற்கு விளம்பரப் பலகைகளைத் தயாரித்துக்கொடு” என்றார். அவனும் அதற்குச் சரியென்று சொல்லிவிட்டு, அருட்தந்தை கொடுத்த ஒரு சிறிய அறையில் தங்கிக்கொண்டு, ஆலயத்திற்கு வேண்டிய விளம்பரப் பலகைகளைத் தயாரித்துக் கொடுத்துக் கொண்டும் தன்னுடைய திறமைகளையும் வளர்த்துக் கொண்டும் வந்தான்.

 அந்த இளைஞன் தங்கியிருந்த அறை கொஞ்சம் பாழடைந்திருந்தது. அதனால் அவ்வப்போது அந்த அறைக்குள் எலிகள் வந்துபோயின. நாளடைவில் எலிகளுக்கும் அவனுக்கும் இணக்கம் ஏற்பட, அவன் எலிகளை சற்று வித்தியாசமாக வரைந்து, மக்களுடைய பார்வைக்கு வைத்தான். ஒருகட்டத்தில் அவன் வரைந்த எலிகளைப் பற்றிய கேலிச் சித்திரங்கள் பிரபலமடையவே, அவன் பெரும் பணக்காரன் ஆனான். ஆம்- அந்த இளைஞனின் பெயர் வால்ட் டிஸ்டினி, அவன் வரைந்த கேலிச்சித்திரத்தின் பெயர் மிக்கி மவுஸ். இன்றைக்கு உலகின் மிகப்பெரிய பொழுதுபோக்கு மையங்களாக இருக்கக்கூடிய டிஸ்டினி லாண்டும் டிஸ்டினி வோல்ட்டும் இவருக்குச் சொந்தமானவை என்பது குறிப்பிடத் தக்கது.

  தான் வரைந்த கேலிச் சித்திரங்கள் தொடக்கத்தில் பலராலும் புறக்கணிக்கப்பட்டபோது அதை நினைத்து மனந்தளராமல், தன்னுடைய திறமையின்மீது நம்பிக்கை வைத்து விடாமுயற்சியோடு போராடி, வாழ்க்கையில் வெற்றிகண்டார் வால்ட் டிஸ்டினி. நம்முடைய வாழ்க்கையில் வரும் சிறு சிறு தோல்விகளைக் கண்டு மனந்தளராமால், விடாமுயற்சியோடு, அதே நேரத்தில் நாம் எடுத்த காரியத்தில் மேம்போக்காக இல்லாமல், ஆழமாக சென்றால், வெற்றிகள் கைகூடுவது உறுதி.

  பொதுக்காலத்தின் ஐந்தாம் ஞாயிற்றுக்கிழமையில் இருக்கும் நாம், இன்றைய இன்றைய நாளில் படிக்கக்கேட்ட நற்செய்தி வாசகத்தை அடிப்படையாகக் கொண்டு, ‘ஆழத்திற்குத் தள்ளிக்கொண்டு போ’ என்ற தலைப்பில் சிந்திக்க இருக்கின்றோம். எனவே, அதைக் குறித்து இப்போது பார்ப்போம்.
 

  1. தோல்வியைச் சந்தித்த சீமோன்  

நற்செய்தியில், இயேசு கெனசரேத்து ஏரிக்கரைக்கு வந்தபோது, அங்கு முந்தின நாள் இரவு, கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்று, மீன்பாடு கிடைக்காமல் கரைக்குத் திரும்பி வந்து, வலைகளை அலசிக்கொண்டிருந்த சீமோனையும் அவருடைய கூட்டாளிகளையும் கண்டார். சீமோன் ஒரு மீனவர், அவருக்கு மீன்பிடிப்பதில் உள்ள நெளிவு சுழிவுகள் எல்லாம் தெரியும். அப்படியிருந்தும் அவருக்கும் அவருடைய கூட்டாளிகளுக்கும் இரவு முழுவதும் பாடுபட்டும்  மீன் ஒன்றும் கிடைக்காமல் இருப்பது வியப்பாக இருக்கின்றது.

  சில சமயங்களில், நமக்கு எல்லாம் அத்துப்பிடி என்று நினைத்துக்கொண்டிருக்கின்ற துறைகளில்கூட தோல்விகள் ஏற்படலாம். அத்தகைய தருணங்களில் நாம் மனமுடைந்து போகாமல், அடுத்த கட்டத்திற்கு நகர்வதுதான் நல்லது. முந்தின நாள் இரவு மீன்பிடிக்கச் சென்ற சீமோன், மீன் ஒன்றும் கிடைக்காததற்காக மீன்பிடித் தொழிலை விட்டுவிட்டு ஓடிவிடவில்லை, மாறாக, அவர் வலைகளை அலசிக்கொண்டிருக்கின்றார். வலைகளை அலசுதல் என்பது, மீண்டுமாக மீன்பிடிக்கச் செல்வதற்கு தன்னையே தயார்செய்வதாக இருக்கின்றது.
 


  1. ஆழத்திற்குத் தள்ளிக்கொண்டு போய் வலைவீசிய சீமோன்

படகில் அமர்ந்தவாறே மக்களுக்குப் போதித்த இயேசு பின்னர் சீமோனிடம், “ஆழத்திற்குத் தள்ளிக்கொண்டுபோய், மீன் பிடிக்க உங்கள் வலைகளைப் போடுங்கள்” என்கிறார்.

  இவ்வாறு சொன்ன இயேசுவிடம் பேதுரு விசனப்பட்டிருக்கலாம், ‘இவர் தச்சரின் மகன்தானே, இவருக்கு எப்படி மீன்பிடிப்புப் பகுதி தெரியும், அதுவும் இந்தப் பகல்வேளையில்  இப்படி ஆழத்திற்குத் தள்ளிக்கொண்டுபோய், மீன்பிடிக்கச் வலைகளைப் போடச் சொல்கிறாரே’ என்று. ஆனால் அவர் அப்படியெல்லாம் விசனப்படாமல், “ஐயா, இரவு முழுவதும் நாங்கள் பாடுபட்டு உழைத்தும் ஒன்றும் கிடைக்கவில்லை; ஆயினும் உமது சொற்படியே வலைகளைப் போடுகிறேன்” என்று  படகை ஆழத்திற்கு இழுத்துக் கொண்டுபோய் வலைகளை வீசுகிறார். அதனால் வலையே கிழிந்து போகின்ற அளவுக்கு பெருவாரியான மீன்கள் கிடைக்கின்றன.

  இங்கு பேதுரு, இயேசுவின் வார்த்தைகளின்மீது கொண்ட அசைக்க முடியாத நம்பிக்கையையும் இயேசுவின் வார்த்தைகளுக்கு அவர் கீழ்ப்படிந்து நடந்ததையும் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும். வேறு யாராக இருந்தாலும் ஆழத்திற்குத் தள்ளிக்கொண்டு போகச் சொன்ன இயேசுவிடம், ‘எல்லாம் எங்களுக்குத் தெரியும்’ என்றுதான் சொல்லியிருப்பார்கள். ஆனால், பேதுருவோ அப்படிச் சொல்லாமல், இயேசுவின் வார்த்தைகளை நம்பி, அதன்படி நடக்கின்றார். அதனால் அதிசயத்தைக் கண்டுகொள்கிறார்.
 


  1. மனிதர்களைப் பிடிப்பவராக மாறிய சீமோன்
சீமோன் (பேதுரு), இயேசுவின் வார்த்தைகளைக் கேட்டு நடந்ததனால், நடந்த அதிசயத்தைக் கண்டு திகைத்துப் போய், “ஆண்டவரே, நான் பாவி, நீர் என்னை விட்டுப் போய்விடும்” என்கின்றார். ஆனால் இயேசுவோ அவரிடம், “அஞ்சாதே! இதுமுதல் நீ மனிதரைப் பிடிப்பவர் ஆவாய்” என்கிறார். இயேசுவின் இவ்வார்த்தைகள், ‘என் வாய் திக்கும்’ (விப 4:10), ‘நான் தூய்மையற்ற உதடுகளைக் கொண்டவன்’ (எசா 6:5) , ‘நான் சிறுபிள்ளைதானே’ (எரே 1:6) என்று சொன்ன, மோசே, இறைவாக்கினர்களான எசாயா, எரேமியா போன்றோரிடம் ஆண்டவர் சொன்ன திடப்படுத்தும் வார்த்தைகளை நமக்கு நினைவுபடுத்துவதாக இருக்கின்றன.

  மீன்பிடித் தொழிலைச் செய்து இயல்பாகவே பிரச்சினைகளை எதிர்கொள்வதற்கான மன உறுதியையும் பொறுமையையும் இணைந்து உழைப்பதற்கான ஆற்றலையும் பெற்றிருந்த சீமோனால், திரு அவைக்குத் தலைமை தாங்கி வழிநடத்த முடியும் என்பதை அறிந்த இயேசு, அவரை மனிதர்களைப் பிடிப்பவர் ஆக்குகின்றார். பேதுருவும் ஆண்டவரிடத்தில் தன்னை முழுவதும் ஒப்படைத்துவிட்டு அவர் பணி செய்யப் புறப்படுகின்றார்.

  சிந்தனை

  ஒரு சாதாரண மீனவராக இருந்த சீமோன் பேதுரு, மனிதர்களைப் பிடிப்பவர்களாக மாறி, பின்னர் திரு அவைக்கே தலைவராக மாறினார் என்றால், அது அவர் இயேசுவை முழுமையாக நம்பி, அவருக்குக் கீழ்ப்படிந்து நடந்ததனாலேயே சாத்தியமானது. நம்முடைய வாழ்விலும் அது போன்ற அதிசயங்கள் நடக்கவேண்டும் என்றால், நாம் இறைவனை முழுமையாக நம்பி, அவருடைய வார்த்தைகளுக்குப் கீழ்படிந்து நடக்கவேண்டும்.

  ஆகவே, நாம் இறைவன் மீது ஆழமான நம்பிக்கை வைத்து, அவருடைய வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிந்து நடப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

















No comments:

Post a Comment