Wednesday 16 January 2019

ஆண்டின் பொதுக்காலம் இரண்டாம் ஞாயிறு

ஆண்டின் பொதுக்காலம் இரண்டாம் ஞாயிறு


எசாயா 62:1-5
1கொரி. 12:4-11
யோவா. 2:1-12

 

சில ஆண்டுகளுக்கு முன்னால் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னையின் அருளால் நடந்த அற்புதம் இது. நான் குறிப்பிடும் அந்த தம்பதியர் பாளையங்கோட்டையிலே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இளம் தம்பதிகள் திருமணம் முடித்து ஐந்து ஆண்டுகளாக குழந்தைப் பாக்கியம் இல்லாமல் இருந்தவர்கள். எத்தனையோ மருத்துவத் துறையை நாடியும் பலன் கிடைக்கவில்லை. பெண்ணோ இந்து மதத்திலிருந்து கத்தோலிக்க திருமறைக்கு திருமணத்தின்போது மனம் மாறியவர். குழந்தை இல்லாத நிலையில் கத்தோலிக்க மதத்தில் சேர்ந்ததால்தான் இந்த அவல நிலை என்று நினைத்து பரம்பரை கிறிஸ்துவனாக இருந்த கணவரை வற்புறுத்தி திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு அழைத்துச் சென்று திருநீறு பூசி காணிக்கை செலுத்தியும் வந்தார்கள். ஆனால் பலன் இல்லை. இந்த சூழ்நிலையில் மனம் உடைந்த இந்தத் தம்பதியரைச் சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இவர்களுக்கு ஆறுதல் கூறி, நீங்கள் வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை திருத்தலம் சென்று செபித்து வாருங்கள். அன்னை மரியா, கானாவூர் திருமணத்தின் குறையை நீக்கியது போல, உங்கள் குறை நீங்க தன் மகன் இயேசுவிடம் பரிந்து பேசுவார்கள் என்று சொல்லி அனுப்பி வைத்தேன். அங்கே, தினமும் ஈர உடையோடு தவம் செய்தும், அங்கே வைக்கப்பட்டுள்ள குணமானவர்களின் காணிக்கைப் பொருட்களைப் பார்வையிட்டும், செபித்தும் இரண்டு மாதங்கள் தங்கி இருந்தார்கள். என்ன ஆச்சரியம்! குழந்தைப் பாக்கியமே கிடைக்காது என்று மருத்துவர்களால் தெரிவிக்கப்பட்டும் அந்த இரண்டாவது மாதத்திலே வேளாங்கண்ணியிலே கருவுற்று வீடு திரும்பினார்கள் அந்த சகோதரி. அவரும் ஒரு மருத்துவர்! ஆம்! நான் கண்டதையும், கேட்டதையும் உங்களுக்கு அறிவிக்கிறேன். ஓர் ஆண் மகனைப் பெற்றார்கள். அவருக்கு சார்லஸ் பிரேம்குமார் என்று பெயரிட்டார்கள். அவரும் இப்போது ஒரு டாக்டர்.


ஆம்! இயேசு கானாவூரில் மட்டுமல்ல, இன்றும் அவரது தாயின் சொல்லிற்கிணங்க அற்புதங்கள் செய்து வருகிறார் என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

இன்று நமக்கு எத்தனையோ வரங்கள் தேவைப்படுகின்றன. ஆண்டவரின் கையில் நாம் அழகிய மணி முடியாகவும், அரச மகுடமாகவும் விளங்க வேண்டும். மணமகனைப்போல, மணப்பெண்ணைப் போல மங்களம் நிறைந்தவளாக (எசாயா 62:1-5) நாம் திகழ வேண்டும் என விரும்புகிறோம். இந்த விருப்பங்களையெல்லாம் நிறைவேற்றிக் கொள்ள அழகான வழி, அன்னை மரியாவின் பரிந்து பேசுதலுக்காக நாம் நம்பிக்கையோடு அவளை நோக்கி மன்றாடுவதாகும்.

அம்மா! அன்னை கன்னித் தாயே! இதோ உமது பிள்ளைகளாகிய நாங்கள் உம்மிடம் ஓடி வந்தோம். எங்கள் குறை தீரவும், உமது திருமகனின் புகழை நாங்கள் பாடவும், பரிந்து பேசம்மா என்று செபிப்போம்.



இயேசு நம்மோடு இருக்க, நமக்குக் குறையேது?

இயேசு ஒரு போதும் நமது குறையைப் பார்க்கமாட்டார்; நமது நிறையைத்தான் பார்ப்பார். இன்றைய நற்செய்தியிலே வரும் கதாப்பாத்திரங்களைப் பாருங்கள்.

மாதா - நிறைவுள்ளவர்.

சீடர்கள் - நிறைவுள்ளவர்கள்.

பணியாளர்கள் - நிறைவுள்ளவர்கள்.

பணியாளர்களின் தலைவனுக்குத் தெரியுமே திராட்சை இரசம் எங்கிருந்து வந்ததென்று! தெரிந்திருந்தும் அவன் நன்றி சொல்லவில்லை! அவன் நன்றி சொல்ல மறந்தவன்.

கணவனும் மனைவியும் - அவர்களும் நன்றி சொல்லவில்லை!

விருந்தினர்கள் - அவர்களும் நன்றி சொல்லவில்லை.

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்நன்றி கொன்ற மகற்கு என்பார் திருவள்ளுவர்.

திருமண வீட்டில் 3 பேர் நிறைவுள்ளவர்கள் ! 3 பேர் குறையுள்ளவர்கள்! ஆனால், இயேசு குறையைப் பார்க்காமல், நிறையைப் பார்த்து புதுமை செய்தார்.

இயேசு எப்பொழுதுமே நிறைவைப் பார்ப்பவர், நேர்மறையாகச் சிந்திப்பவர்.

மத் 9:9-13 முடிய உள்ள பகுதி :

எல்லாரும் புனித மத்தேயுவிடம் ஒரு பாவியைப் பார்த்தனர். ஆனால் இயேசுவோ அவருக்குள் ஒரு புனிதரை, ஒரு நற்செய்தியாளரைப் பார்த்தார்.

யோவா 4:1-42 முடிய உள்ள பகுதி :

எல்லாரும் அந்த சமாரியப் பெண்ணுக்குள் ஒரு பாவியைப் பார்த்தனர்! ஆனால் இயேசுவோ அவளுக்குள் ஒரு புனிதையை, இறைத் தூதரைப் பார்த்தார்.

எல்லாரும் சவுலிடம் ஒரு சமய விரோதியைக் கண்டார்கள். ஆனால் இயேசுவோ, அவரிடம் ஒரு திருத்தூதரை, மறைச்சாட்சியைக் கண்டார்.

நாம்தான் அடிக்கடி நமது குறைகளை நினைத்துக் கூனிக் குறுகிப் போகின்றோம். ஆனால் இயேசுவோ, நம்மிடம் உள்ள நல்ல குணங்களைப் பார்த்து நம்மை ஆசிர்வதிக்கக் காத்துக்கொண்டிருக்கின்றார்.

இந்த உண்மை , மன்னிப்பே உருவான , அன்பே உருவான, கருணையே உருவான, பரிவே உருவான, பாசமே உருவான இயேசுவின் பக்கம் நம்மை உந்தித் தள்ளட்டும்.

இயேசு நம்மை ஒருபோதும் கைவிட மாட்டார் (முதல் வாசகம்) ; தள்ளிவிடமாட்டார். அவரது மன்னிப்பில் தூய்மை பெற்று, அவரது வரங்களால் நிரப்பப்பட்டு (இரண்டாம் வாசகம்) புத்தாண்டில் நாம் புது வாழ்வைத் தொடங்குவோம்.
மேலும் அறிவோம் :
தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார் (குறள் : 104).

பொருள் : நன்றி பாராட்டும் பண்புடையவர், பிறர் தமக்குச் சிறிதளவே உதவினாலும் அதனைப் பெருமை பொருந்திய பனையளவாகக் கருதிப் போற்றுவர்.




இரண்டு சிறுவர்கள் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது ஒருவன் மற்றவனிடம், "வீட்டிலே யார் பெரியவங்க? அப்பாவா அல்லது அம்மாவா?" என்று கேட்டான். அதற்கு மற்றவன், "நிச்சயமாக அம்மா தான் பெரியவங்க. ஏனென்றால், எங்கள் அப்பா தனது தொழிற்சாலையிலே 100 பேரை அடக்கி ஆள்கிறார். ஆனால், வீட்டிலே அம்மா எங்க அப்பாவையே அடக்கி ஆளுகிறாங்க" என்றான். இச்சிறுவன் கூறியதைப் போலவே புனித ஜான் மரி வியான்னி பின்வருமாறு கூறியுள்ளார்: "கடவுளை விடச் சக்தி வாய்ந்த ஒருவரை எனக்குத் தெரியும். அவர் தான் செபிக்கத் தெரிந்த மனிதர். கடவுள் உலகையே ஆளுகிறார், ஆனால் செபிக்கத் தெரிந்த மனிதர் கடவுளையே ஆளுகிறார். கடவுள் 'முடியாது' என்று சொன்ன பிறகும், செபிக்கத் தெரிந்தவர் கடவுளை 'முடியும்' என்று சொல்ல வைக்கிறார்”, புனித வியான்னியின் கூற்று முழுக்க முழுக்க உண்மை என்பது கானாவூர் திருமணத்தில் புலனாகிறது. மரியாவின் வேண்டுகோளுக்குக் கிறிஸ்து முதலில் முடியாது: எனது நேரம் இன்னும் வரவில்லை ' என்று சொல்லிவிட்டார். ஆனால், மரியா மனந்தளராது. பணியாளர்களிடம் 'இயேசு சொல்வதைச் செய்யுங்கள்' என்று கூறியபின், இயேசுவால் தம் தாயின் விண்ணப்பத்தை மறுக்க முடியவில்லை. தமது முதற் புதுமையைச் செய்கிறார். 'முடியாது' என்ற சொன்ன இயேசுவை 'முடியும்' என்று சொல்ல வைக்கிறார் மரியா.

நாம் மனந்தளராமல் எப்பொழுதும் இறைவனிடம் மன்றாட வேண்டும் (லூக் 18:1). நமக்குத் தேவையானது கிடைக்கும்வரை நாம் கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும்; தட்டிக் கொண்டே இருக்க வேண்டும்: தேடிக்கொண்டே இருக்க வேண்டும் (லூக் 11:9-10). புனித மோனிக்கா தமது மகன் அகுஸ்தினார் மனமாற்றத்திற்காக 16 ஆண்டுகள் தொடர்ந்து கண்ணீர் சிந்திச் செபித்தார். அவருடைய வேண்டுதல் கேட்கப்பட்டது. ஒரு திரு மணவிருந்தில் நான்கு பந்திகளிலும் தொடர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த ஒருவரைப் பார்த்து பந்தி பரிமாறியவர், "என்னப்பா நாலு பந்தியிலும் தொடர்ந்து சாப்பிடுற; எனக்கு ஞாபக சக்தி இல்லை என்றா நினைக்கிறாய்?" என்று கேட்டார். அதற்கு அந்தச் சாப்பாட்டு ராமன். "என்ன செய்கிறது? உங்களுக்கோ ஞாபக சக்தி அதிகம்; எனக்கோ ஜீரண சக்தி அதிகம்" என்றார்! பலருக்கு ஜீரண சக்தி அதிகம். சாப்பாட்டிலேயே அவர்கள் குறியாக இருக்கின்றனர். அடுத்தவர்களைப் பற்றி அலட்டிக் கொள்வதில்லை. ஆனால், மரியாவுக்கு ஞாபக சக்தி அதிகம். பிறருடைய தேவைகளைக் குறிப்பறிந்து உணர்ந்து அவற்றைப் போக்கத் தீவிரமாகச் செயல்படுகிறார். "பெண்கள் வல்லினமா? மெல்லினமா? இடையினமா?" என்று ஓர் அறிஞரைக் கேட்டதற்கு அவர், “பெண்கள் செலவினம்" என்றார். ஆனால், உண்மையில் பெண்கள்
"மரியினம்": மரியாவின் வாரிசுகள். மரியாவைப் போன்று மென்மையான தாய்மை உணர்வுடன், "உண்டி கொடுத்தார், உயிர் கொடுத்தார்" என்ற கொள்கைக்கேற்ப, பசித்தவர்களுக்கு உணவளித்து உயிர் கொடுப்பவர்கள் பெண்கள். பெண்ணாகப் பிறப்பது ஒரு சாபக்கேடு அல்ல, மாறாக அது ஒரு மாபெரும் பேறு; ஏனெனில் தாமரை போன்ற அவர்களது கைகளால் தான் உலகில் அறங்கள் வளரும்.

இளவரசன் உதய குமாரனை மயக்கிய மணிமேகலை அழகி. ஆனால் தன் தலையை மொட்டை அடித்து, காவி உடை அணிந்து, அமுத சுரபியைக் கொண்டு மக்களின் பசி போக்கிய மணிமேகலை பேரழகி, எப்பொழுதெல்லாம் பெண்கள் பிறரை வாழ வைக்கின்றார்களோ, அப்போதெல்லாம் அவர்கள் பேரழகிகளாகத் திகழ்கின்றனர். பெண்களிடம் தாழ்வு மனப்பான்மை இருக்கக் கூடாது. ஆண்களுடன் போட்டி போட்டுக் கொண்டு தங்கள் தனித்தன்மையை இழந்து விடக்கூடாது. இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல் கூறுவதுபோல, கடவுள் எல்லாருக்கும் ஒரே விதமான கொடைகளைக் கொடுப்பதில்லை. மாறாக, வெவ்வேறு வரங்களைப் பொது நன்மைக்காகப் பகிர்ந்தளிக்கிறார் (1 கொரி 12:4- 11). பெண்ணிடத்தில் தாய்மைப் பண்பு மற்ற எல்லாப் பண்புகளைவிட விஞ்சி நிற்க வேண்டும். கானாவூர் திருமணத்தில் இயேசு செய்த புதுமையின் இறுதிப் பயன் என்ன என்பதை யோவான் அழுத்தமாகக் கூறியுள்ளார். "இதுவே இயேசு செய்த முதல் அரும்அடையாளம், இது கலிலேயாவிலுள்ள கானாவில் நிகழ்ந்தது. இதன் வழியாக அவர் தம் மாட்சிமையை வெளிப்படுத்தினார். அவருடைய சீடரும் அவரிடம் நம்பிக்கை கொண்டனர்" (யோவா 2:11).

ஒருதாய் தம் மகளுக்குப் பரத நாட்டியம் கற்றுக் கொடுத்து, கடைசியில் மகளின் பரத நாட்டியத்தை அரங்கேற்றம் செய்து பெருமிதம் அடைகிறார். அவ்வாறே மரியாவும் தம் மகன் கிறிஸ்துவினுடைய மீட்பின் நற்செய்தியைக் கானாவூரில் அரங்கேற்றம் செய்து எல்லையில்லா ஆனந்தம் அடைகிறார், கிறிஸ்துவின் மாட்சிமை வெளிப்படவும் அவருடைய சீடர்கள் அவரிடம் விசுவாசம் கொள்ளவும் மரியா மூலகாரணமாக இருக்கிறார். எனவே, மரியா கிறிஸ்துவின் மகிமையை மறைக்கிறவர் அல்ல, மாறாக அதை வெளிச்சத்துக்குக் கொண்டு வருபவர். மரியாவைப் பின்பற்றி, மரியாவின் திருத்தலங்கள் மக்களின் நம்பிக்கையை வியாபாரமாக மாற்றிக் காசு சம்பாதிக்காமல், கிறிஸ்துவின் மகிமையை வெளிப்படுத்தும் புனிதத் தலங்களாகத் திகழவேண்டும்,

ஒருவர் போலிப் போதகரா? அல்லது உண்மையான போதகரா? என்பதை அறிந்து கொள்ள உதவும் அமிலப் பரிசோதனை என்ன? போலிப்போதகர்கள் தங்களை மையமாக வைத்து தங்களுக்கு விளம்பரம் தேடுவார்கள். ஆனால், உண்மையான போதகர்கள் மரியாவைப் போன்று கடவுளை மையப்படுத்தி அவரை மகிமைப்படுத்துவார்கள். திருமுழுக்கு யோவானைப் போன்று உண்மையான போதகர்கள், "அவரது (கிறிஸ்துவின்) செல்வாக்குப் பெருக வேண்டும்; எனது செல்வாக்குக் குறைய வேண்டும்" (யோவா 3:30) என்னும் மனநிலையைக் கொண்டிருப்பர். மரியாவின் இறுதிக் கட்டளை; "அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்" (யோவா 2:5).

மரியா கிறிஸ்துவின் தாய் என்பதைவிட கிறிஸ்துவின் தனி முதற் சீடர் ஆவார். கிறிஸ்துவின் சீடராகத் திகழ வேண்டுமென்றால், அவரின் வார்த்தையைக் கடைப்பிடிக்க வேண்டும். “என் வார்த்தையை நீங்கள் தொடர்ந்து கடைப்பிடித்தால், என் சீடராய் இருப்பீர்கள்" (யோவா 8:31). நாம் கிறிஸ்துவின் விசிறிகளா? அல்லது அவருடைய சீடர்களா? கடவுள் இஸ்ரயேல் மக்களோடு திருமண உடன்படிக்கை செய்து கொண்டார் (முதல் வாசகம், எசா 62:1-5). கிறிஸ்து புதிய உடன் படிக்கையின் மணமகன், அவர் கொண்டு வந்த இறையாட்சி ஒரு திருமண விருந்தாகும். அவர் தமது முதல் புதுமையை ஒரு திருமணத்தில் செய்தது மிகப் பொருத்தமானது. அவர் கொடுத்த முதல் தரமான இரசம் நற்கருணை என்னும் அன்பு விருந்துக்கு அடையாளம், அதில் பங்கு பெறும் நாம் பேறுபெற்றோர். சட்டமென்னும் பழைய சித்தையில் அன்பு என்னும் புதிய இரசத்தை ஊற்றாது. புதிய சித்தையில் புதிய இரசத்தை மாற்றுவோம். இனி நாம் சட்டத்திற்கு அடிமைகள் அல்ல, மாறாக அன்பின் அடிமைகள். அன்பே அனைத்திலும் சிறந்த நெறி (1 கொரி 12:31)



தூய ஆவியின் கொடைகள் பொது நன்மைக்காகவே!

அருள்பணி மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.


அமெரிக்காவில் வாழ்ந்த மிகப்பெரிய செல்வந்தர் வில்லியம் ஆலன் ஒயிட். மிகுந்த தாராள உள்ளமும், இரக்க குணமும் உடையவர். ஒருமுறை அவர் தனக்கென்று  இருந்த 50 ஏக்கர் நிலத்தையும் தன்னுடைய ஊர் மக்களுக்காக எழுதி வைத்தார். இதை அறிந்த அவருடைய உறவுக்காரர் ஒருவர் அவரிடம், “எதற்காக இவ்வளவு நிலத்தையும் ஊர் மக்களுக்கு எழுதி வைக்கிறீர்கள்” என்று கேட்டார்.

அதற்கு அவர், “நான் என்னிடம் இருப்பதை பிறருக்குக் கொடுக்கிறபோது மூன்றாவது விதமான மகிழ்ச்சியை அனுபவிக்கிறேன்” என்றார். “அது என்ன மூன்றாவது விதமான மகிழ்ச்சி. அதைக் கொஞ்சம் எனக்குத் தெளிவாக விளக்குங்கள்” என்று கேட்க, வில்லியம் ஆலன் ஒயிட் மறுமொழியாக, “பணம் மூன்றுவிதமான மகிழ்ச்சிகளைத் தருகிறது. முதலாவது பணத்தைச் சேர்ப்பதில் மகிழ்ச்சி; இரண்டாவது கஷ்டப்பட்டு சேர்த்த பணத்தை பாதுகாப்பதில் மகிழ்ச்சி; மூன்றாவது மற்ற எல்லாவற்றையும்விட சிறந்தது, அது நம்மிடம் இருப்பவற்றை பிறருக்குக் கொடுக்கும்போது கிடைக்கும் மகிழ்ச்சி.

பலர் தாங்கள் பெற்ற செல்வத்தை; திறமைகளை; கடவுள் கொடுத்த ஆசிர்வதங்களை தங்களுக்குள்ளே வைத்துக்கொள்கிறார்கள். அதனால் அவர்கள் மூன்றாவது விதமான மகிழ்ச்சியை அடைவதில்லை. ஆனால் நான், என்னிடம் இருப்பதை பிறருக்குக் கொடுப்பதால் அதை அனுபவிக்கிறேன்” என்றார்.

நம்மிடம் இருப்பதை பிறருக்குக் கொடுக்கும்போது கிடைக்கும் மகிழ்ச்சி மற்ற எல்லாவற்றையும் விட உயர்ந்தது என்பதை இந்நிகழ்வு நமக்குச் சுட்டிக்காட்டுகிறது.

பொதுக்காலத்தின் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமையில் இருக்கும் நமக்கு இன்றைய நாளில் நாம் படிக்கக்கேட்ட வாசகங்கள் தரும் அழைப்பு  “நமக்குக் கொடுக்கப்பட்ட கொடைகள் பிறரது நம்மைக்காகவே” என்பதே. கடவுள் கொடுத்த திறமைகள், கொடைகள், வாய்ப்பு வசதிகள் யாவற்றையும் நமது சொந்த தேவைக்காகவே பயன்படுத்தி வாழும் நமக்கு, இன்றைய வாசகங்கள் அவற்றைப் பொதுநலத்திற்காக பயன்படுத்த அழைப்புத் தருகிறது.

கொரிந்தியருக்கு எழுதப்பட்ட திருமடலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய இரண்டாம் வாசகத்தில் பவுலடியார், ‘கடவுள் நம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான திறமையைக் கொடுத்திருக்கிறார். குறிப்பாக ஒரு சிலருக்கு ஞானம் நிறைந்த சொல்வன்மை, அறிவுநிறைந்த சொல்வன்மை, நம்பிக்கை, வல்ல செயல்கள் புரியும் ஆற்றல், பரவசப் பேச்சுப் பேசும் ஆற்றல், இன்னும் ஒருசிலருக்கு அவற்றை விளக்கும் ஆற்றல் இவையெல்லாம் கொடுத்திருக்கலாம். ஆனால் நாம் அதனை பிறருக்காக, பொது நன்மைக்காகப் பயன்படுத்த வேண்டும் என்றதொரு அழைப்பினை விடுக்கிறார் (1 கொரி 12:7).

ஆனால் நடைமுறையில் கடவுள்/ தூய ஆவியார்  கொடுத்த திறமைகளை, கொடைகளை பொது நன்மைகாகப் பயன்படுத்தாமல் தன்னுடைய சுயநலத்திற்காக, தன்னுடைய பெயர் விளங்கச் செய்வதற்குத்தான் மக்கள் பயன்படுத்திக் கொண்டிருப்பது வேதனை அளிக்கக்கூடிய ஒன்றாக இருக்கிறது. வெறுமனே பணம், பொருள் என்று மட்டுமல்லாமல் இறைவனின் பணி செய்ய கடவுள் கொடுத்திருக்கும் ஆற்றலையும், திறமையையும்கூட இன்றைக்கு மக்கள் தங்களுடைய சுயநலத்திற்காக பயன்படுத்துகிறார்கள்.  இது தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று.

ஒருமுறை மராட்டிய மன்னர் சிவாஜி பகைவர்களிடமிருந்து மக்களைக் காப்பாற்றுவதற்காக ஒரு பெரிய கோட்டையைக் கட்டிக்கொண்டிருந்தார். அந்த கோட்டையைக் கட்டும் பணியில் ஏராளமான மக்கள் ஈடுபட்டிருந்தார்கள். அரசர் அவர்கள் எல்லாருக்கும் உணவு கொடுத்து, அவர்களை பராமாரித்துக் கொண்டும் வந்தார். இது அவருடைய உள்ளத்தில் ஒருவிதமான கர்வத்தை உண்டுபண்ணியது. ‘நான்தான் எல்லாருக்கும் உணவு கொடுக்கிறேன். நான் எவ்வளவு பெரிய மன்னர்’ என்ற கர்வம் அவருடைய பேச்சிலே அடிக்கடி தெறித்தது.

இதைக் கண்ணுற்ற அவருடைய குரு மன்னருக்கு சரியான பாடம் கற்பிக்க வேண்டும் என்று நினைத்தார். அதனால் அவர் மன்னரிடம், “மன்னர் மன்னா! எனக்காக அருகே இருக்கக்கூடிய பாறையை உடைத்து, அதை இங்கே கொண்டுவர முடியுமா?” கேட்டார். அதற்கு மன்னரும் தன்னுடைய வேலையாட்களிடம் பாறையை உடைத்துக்கொண்டு வரச்சொல்ல, அவர்களும் அதைக் கொண்டுவந்தார்கள்.

அப்போது அந்த பாறைக்குள் இருந்து ஒரு தேரை (தவளை) வெளியே ஓடியது. உடனே குரு மன்னரை பார்த்து, “மன்னா! எல்லாருக்கும் உணவிடுகிறீர்கள், இந்த பாறைக்குள் இருந்த தேரைக்கும் நீங்கள்தானே உணவிடுகிறீர்கள்” என்று சொன்னதும், மன்னருக்கு, குரு தன்னுடைய ஆணவத்தான் சுட்டிக் காட்டுகிறார் என்பதை உரைத்தது. அதன்பிறகு ஆணவம் இல்லாது செயல்படத் தொடங்கினார்.

கடவுள் கொடுத்திருக்கும் கொடைகள்/பொறுப்புகள் எல்லாம் கடவுளின் பேர் விளங்கப் பயன்படுத்த வேண்டுமே ஒழியே அதனை தன்னுடைய பெயர் விளங்கப் பயன்படுத்துவது தவறு என்பதை இந்த நிகழ்வானது அழகாக எடுத்துரைக்கிறது.

ஆக, நம்மிடம் இருக்கும் எல்லாமும் நாம் பிறருக்காக பயன்படுத்த, இறைவன் கொடுத்த கொடைகள் என்பதை நாம் உணரவேண்டும். இதற்கு நம்மிடம் இருக்கக்கூடிய அடிப்படையான மனநிலை, நாம் அனைவரும் ஒரே உடலின் உறுப்புகள்,  இந்த உடலின் உறுப்புகளுக்குத் தலையாக இருப்பவர் கிறிஸ்துவே என்பதை நாம் உணரவேண்டும். உடலில் காலோ அல்லது தலையோ அடிபட்டிரும்போது கை சும்மா இருக்காது. உடனே அது உதவி செய்ய விரைந்து வரும். அதுபோன்றுதான் கிறிஸ்து என்ற உடலில் உறுப்புகளாக இருக்கும் நாம் அனைவரும், நம்மோடு வாழக்கூடிய மக்களின் நிலை அறிந்து, உதவி  செய்ய விரைந்து வரவேண்டும்.

அந்த வகையில் கடவுள் கொடுத்த எல்லா ஆசிர்வாதங்களையும் பொது நன்மைகாகப் பயன்படுத்திய ஒருவர் இருக்கிறார் என்று சொன்னால் அது இயேசுவைத் தவிர வேறு யாரும் இருக்க முடியாது. இன்று படிக்கக்கேட்ட நற்செய்தி வாசகம் அதற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டாக இருக்கிறது.

கானாவூர் திருமணத்திற்கு தன்னுடைய தாய் மற்றும் சீடர்களுடன் செல்லும் இயேசுக் கிறிஸ்து, அங்கே திருமண விருந்தின்போது திராட்சை இரசம் தீர்ந்துவிட்டது என்பதை தன்னுடைய தாயின் வழியாகக் கேள்விப்படுகிறார். தாயின் வேண்டுதலின் பேரில் தண்ணீரைத் திராட்சை இரசமாக மாற்றி, மணவீட்டாருக்கு நேரிட இருந்த அவப்பெயரைப் போக்குகிறார்.

இங்கே இயேசுக் கிறிஸ்து கடவுள் கொடுத்த அருளை தனது பெயர் விளங்கப் பயன்படுத்தவில்லை. மாறாக மணவீட்டாரின் அவல நிலை நீங்கவும், கடவுளின் பெயர் விளங்கவுமே அப்படிச் செய்கிறார். நற்செய்தியின் இந்த பகுதியில் மட்டுமல்லாது, எல்லா இடங்களிலும் இயேசு தன் அருளை பிறரது நலனுக்காகவே பயன்படுத்துகிறார். அதற்கு அடிப்படைக் காரணமாக இருந்தது ‘எல்லா மக்களும் இறைவனின் பிள்ளைகள்’ என்ற எண்ணமே. நாமும் இப்படி கடவுள் நமக்குக் கொடுத்திருக்கும் கொடையை பிறருக்காகப் பயன்படுத்தும்போது அதைவிடச் சிறந்த பேறு வேறு எதுவும் இருக்க முடியாது.

“சமுதாயச் சேவையை சட்டையாக மாற்றாதீர்கள்; உங்கள் உடம்பின் சதையாக மாற்றுங்கள்” என்பார் கவிஞர் வைரமுத்து. நாம் சமுதாயத்திற்கு ஏதோ ஒருசில நன்மைகளை மட்டும் செய்து திருப்திப்பட்டுக் கொள்ளாமல், எப்போதுமே இயேசுவைப் போன்று இறைபணி/சமூகப்பணி செய்ய வேண்டும் என்பதுதான் அவர் சொல்ல விரும்பும் கருத்து.

சில ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில், பனிப்பொழிவு அதிகமாக இருக்கும் ஒரு காலைப் பொழுதில், காரில் பயணம் செய்துகொண்டிருந்த ஒருவர் பனிப்பொழிவில் மாட்டிக்கொண்டார். எவ்வளவுதான் அவர் சத்தம் போட்டாலும் யாருமே அவருக்கு உதவ முன்வரவில்லை.

அப்போது அங்கு வந்த ஓர் இளைஞர், தன்னுடைய கையில் இருந்த இரும்புக் கம்பியால் பனிக்கட்டிகளை எல்லாம் உடைத்து, அகற்றிவிட்டு, அவரை அதிலிருந்து காப்பாற்றினார். தனக்கு தக்க நேரத்தில் வந்து உதவியதற்காக, அன்பளிப்பாக ஏதாவது தரலாம் என்று நினைத்த அந்தக் கணவான், தன்னுடைய பையிலிருந்து கொஞ்சம் டாலரை எடுத்து அதை அவரிடம் நீட்டினார்.

ஆனால் அந்த இளைஞர் பணத்தை வாங்க மறுத்துவிட்டுச் சொன்னார், “நான் DO UNTO OTHERS” என்று மன்றத்தில் உறுப்பினராக இருக்கிறேன். இந்த மன்றத்தின் முக்கியமான நோக்கம் தேவையில் இருப்பவருக்கு ஓடோடிச் சென்று உதவுவதுதான் என்று சொன்னதும், காரில் வந்திரந்த அந்த கணவான் நன்றிப் பெருக்கோடு அவரைக் கைகூப்பி வணங்கிவிட்டு, அங்கிருந்து சென்றார்.

நாம் ஒவ்வொருவருமே தேவையில் இருப்பவருக்கு, அதுவும் யாராக இருந்தாலும் உதவவேண்டும்; கடவுள் கொடுத்த கொடைகளை பிறர் நலனுக்காகப் பயன்படுத்த வேண்டும் என்பதை இந்நிகழ்வு நமக்கு உணர்த்துகிறது.

இப்படியெல்லாம் ஒரு மனிதர் வாழ்கிறபோது கடவுள் எத்தகைய ஆசிர்வாதத்தைத் என்று இன்றைய முதல் வாசகத்தில் (எசாயா புத்தகம் 62) படிக்கின்றோம்.

“அவர்களது வெற்றியையும், மேன்மையையும் புறவினத்தார் காண்பார்கள்; புதிய பெயரால் அழைக்கப்படுவார்கள்; இறைவனின் கையில் அழகிய மணிமுடி போன்றும், அரச மகுடம் போன்றும் இருப்பார்கள்” என்று இறைவாக்கினர் எசாயா கூறுகிறார். ஆம், இறைப்பணி நல்ல உள்ளத்தோடு செய்யும்போது இறைவனும் நம்மை ஆசிர்வதிப்பார் என்பதே உண்மை.

எனவே நாம், நமது ஆண்டவர் இயேசுவைப் போன்று கடவுள் நமக்குக் கொடுத்திர்க்கும் திறமைகளை/ கொடைகளை இறைவனின் பெயர் விளங்கவும், பொது நன்மைகாகவும் பயன்படுத்துவோம். அதன் வழியாக இறைவனின் அன்புப் பிள்ளைகள் ஆவோம். அவரது ஆசியை நிறைவாய் பெறுவோம்.

 
 
தலைவனின் தழுவல்

பழைய பொருட்கள் விற்கும் ஒரு கடையில் வயலின் ஒன்று பல நாட்களாக விற்காமல் கிடந்தது. அதை விலைகுறைத்தாலும் யாரும் வாங்குவதாகயில்லை. 'இதை வைத்து அடுப்பெரிக்கக்கூட முடியாது' என்று யாரும் வாங்காமல் ஒதுங்குகினர். அந்நேரம் அங்கே டிப்டாப்பாக ஒரு முதியவர் வந்தார். அந்த வயலினைத் தன் கையில் எடுத்து தான் வைத்திருந்த துணியால் மெதுவாகத் துடைத்தார். பின் அங்கேயே அமர்ந்து அதை வாசிக்கத் தொடங்குகினார். வயலினிலிருந்து புறப்பட்ட இசை கேட்டு கடை வீதியே ஸ்தம்பித்துத் திரும்பிப் பார்த்தது. வயலினை வாசித்து முடித்த முதியவர் அதை அதே இடத்தில் வைத்துவிட்டுப் போய்விட்டார். அவர் சென்ற சற்று நேரத்தில், 'அது எனக்கு, அது எனக்கு' என அந்த வயலினை வாங்கப் பலர் போட்டி போட்டுக் கொண்டு ஓடி வந்தனர். கேட்பாரற்றுக் கிடந்த அந்தப் பழைய வயலினுக்கு இப்போது ஏன் போட்டி? அந்த வயலினுக்கு மதிப்பைத் தந்தது எது? 'தலைவனின் தழுவல்' ('master's touch').

இசைத்தலைவன் தொட்டவுடன் வயலினின் மதிப்பு கூடுகிறது.

தலைவராம் இறைவன் தழுவும் பொருள்களும், நபர்களும் புதிய மதிப்பு பெறுகின்றனர் என்று நமக்கு முன்மொழியும் இன்றைய இறைவாக்கு வழிபாடு, அந்தத் தழுவலுக்கு நம்மை சரணாகதியாக்க அழைக்கின்றது.

இன்றைய முதல் வாசகம் (காண். எசா 61:1-5) எசாயா நூலின் மூன்றாம் பகுதியிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. கி.மு. 539ஆம் ஆண்டு பாரசீக அரசன் சைரசு பாபிலோனியாவில் சிறைப்பட்டுக் கிடந்த மக்கள் தங்கள் நாடுகளுக்குத் திரும்பலாம் என்று கட்டளை பிறக்கின்றார். சிலர் பாபிலோனியாவியே தங்கிவிட, சிலர் மட்டும் தங்கள் சொந்த நாட்டிற்குத் திரும்புகிறார்கள். திரும்பி வந்தவர்கள் தங்கள் நாடும், நகரும், ஆலயமும் சிதைந்து கிடந்ததைக் கண்டு மிகவும் துயருற்றனர். தரை மட்டமாகக் கிடந்த தங்கள் வீடுகள், ஆலயம், சாம்பலாகக் கிடந்த தங்கள் வயல்கள் என நிலம் வறண்டு கிடந்தது. 'எல்லாவற்றையும் சீக்கிரம் கட்டி எழுப்பிவிடலாம்' என்ற நம்பிக்கை சிறிது சிறிதாகக் கரைய ஆரம்பிக்கிறது. சோர்வும்,தோல்வியும், ஏமாற்றமும், சந்தேகமும் கவ்விக் கொள்கிறது. தங்கள் கடவுள் தங்கள் முன்னோர்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் பொய்யா? என்ற கேள்வியும் எழ ஆரம்பிக்கிறது. இந்தப் பின்புலத்தில்தான் இன்றைய எசாயாவின் இறைவாக்கு அங்கே உரைக்கப்படுகின்றது. முழு நம்பிக்கையாடும், தடுமாற்றமில்லா உறுதியோடும் எருசலேமின் புதிய மாட்சி பற்றி இறைவாக்குரைக்கின்றார் எசாயா.

'ஆண்டவரின் வாயிலிருந்து வரும் புதிய பெயர்' என்பதுதுதான் இறைவாக்கின் மையமாக இருக்கிறது. விவிலியத்தில் பெயர் மாற்றங்கள் இரண்டு பொருள்களைத் தருகின்றன: ஒன்று, பெயர் மாற்றம் பெறுகிற அந்த நபர் புதிய பணிக்கான அல்லது புதிய வாழ்க்கைமுறைக்கான அழைப்பைப் பெறுவார். இரண்டு, புதிய பெயரைத் தருவதன் வழியாகக் கடவுள் அந்த நபரின் மேல் புதிதாக உரிமை கொண்டாடுவார். இன்றைய முதல் வாசகத்தை, (அ) புதிய பெயர் (62:1-4), (ஆ) புதிய வாழ்க்கை நிலை (62:5), (இ) புதிய பாதுகாப்பு (62:6) என்று மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம். யூதர்களின் திருமணக் கொண்டாட்டம் மூன்று நிகழ்வுகளாக நடைபெறும். முதலில், வாக்குறுதி பத்திரம் எழுதப்படும். இரண்டு, மணமகனுக்கும் மணமகளுக்கும் இடையே உடன்படிக்கை செய்யப்படும். மூன்று, மணமகனும் மணமகளும் உடலால் இணைவர். இரண்டாவது நிகழ்வான உடன்படிக்கை அல்லது வாக்குறுதி பத்திரத்தில்தான் மனைவியின் பெயர் மாற்றப்படும். அதே போல, இங்கே ஆண்டவரும் இஸ்ரயேலை மணப்பதற்கு முன், தழுவிக்கொள்ளுமுன், அவளுக்கு பாபிலோனிய அடிமைத்தனத்தில் வழங்கப்பட்ட 'அசுவா' (கைவிடப்பட்டவள்), 'ஷெமமா' (பாழ்பட்டது) என்ற பெயர்களை மாற்றி, 'எப்சி-பா' (என் மகிழ்ச்சி அவளிடம்), 'பெயுலா' (மணமுடித்தவள்) என்ற புதிய பெயர்களை அளிக்கின்றார். நாடிழந்து நிற்கும், இழப்பை சரிசெய்ய முடியாமல் தவிக்கும் இஸ்ரயேல் மக்களை இறைவன் உரிமையாக்கிக் கொண்டு அவர்களுக்குப் புதிய வாழ்க்கை நிலையை வாக்களிக்கின்றார். மணமகளுக்கு பாதுகாப்பு தரும் மணமகன் போல இஸ்ரயேலுக்குப் பாதுகாப்பு தருவார் இறைவன். திருமணத்தில் மணமக்கள் ஒருவர் மற்றவருக்குத் தரும் உரிமை அவர்களுக்குப் பாதுகாப்பு அரணாக இருப்பது போல, இறைவன் இஸ்ரயேல் மக்கள் மேல் கொண்டாடும் உரிமை அவர்களின் பாதுகாப்பு அரணாக இருக்கின்றது.

ஆக, தவிடு பொடியாய்க் கிடந்த எருசலேம் நகரமும், அந்த நிலையில் கிடந்த நகரத்திற்குத் திரும்பிய மக்களும் தலைவனின் தழுவலால் புதிய பெயரும், புதிய வாழ்க்கை நிலையும், புதிய பாதுகாப்பும் பெறுகின்றனர்.

இன்றைய இரண்டாம் வாசகம் (காண். 1 கொரி 12:4-11) பவுல் கொரிந்த நகரத்திருச்சபையின் பிளவுகளில் ஒன்றான 'கொடைகள் பிளவு' பற்றியதாக இருக்கின்றது. கொரிந்த நகரத் திருச்சபை போட்டி, பொறாமை, பிளவு நிறைந்த சபையாக இருக்கிறது. அதன் பிளவுக்கான பல காரணங்களில் ஒன்று 'அருள்கொடையும்' அக்கொடையினால் வரும் 'திருத்தொண்டும்.' 'ஞானம் நிறைந்த சொல்வளம்,' 'அறிவுசெறிந்த சொல்வளம்,' 'நம்பிக்கை,' 'பிணிதீர்க்கும் அருள்கொடை,' 'வல்ல செயல் செய்யும் ஆற்றல்,' 'இறைவாக்குரைக்கும் ஆற்றல்,' 'ஆவிக்குரிய பகுத்தறியும் ஆற்றல்,' 'பரவசப் பேச்சு,' 'பேச்சை விளக்கும் ஆற்றல்' என கொரிந்து நகரத் திருச்சபை பெற்றிருந்த அருள்கொடைகளைப் பார்க்கும்போது நமக்மே ஆச்சர்யமாகவும் பொறாமையாகவும் இருக்கிறது. தொடக்கத் திருச்சபையில் துலங்கிய அருள்கொடைகள் இன்று நம்மிடையே இல்லாதது அல்லது குறைவாயிருப்பது ஏன்? ஆவியானவரின் செயல்பாடுகள் இன்று குறைந்துவிட்டனவா? அல்லது அவருடைய செயல்பாட்டிற்கு இன்றைய திருச்சபையின் இயல்பு தடையாக இருக்கின்றதா?

அருள்கொடைகள் இப்படிப் பலவாக இருந்தாலும், அவைகள் ஒரே புள்ளியில் சங்கமிக்கின்றன: அந்தப் புள்ளிக்கு இரண்டு முகங்கள் உண்டு: ஒன்று, 'ஆவியானவர்' என்னும் ஊற்று, இரண்டு, 'பொதுப்பயன்பாடு' என்னும் நோக்கம். ஆக, எல்லா அருள்கொடைகளும் ஒரே ஆண்டவரால் தழுவப்பட வேண்டும். அப்படி தழுவப்பட்டால்தாம் அவைகளால் பயன் உண்டு. அப்படிப் தழுவப்பட்ட கொடைகள் ஒட்டுமொத்த குழுமத்தின் வளர்ச்சிக்குப் பயனுள்ளவைகளாக அமைதல் அவசியம். பவுலின் மூவொரு இறைவன் தத்துவம் இங்கே காணக்கிடக்கிறது: 'அருள்கொடைகள் பல. தூய ஆவியார் ஒருவரே. தொண்டுகள் பல. ஆண்டவர் ஒருவரே. செயல்பாடுகள் பல. கடவுள் ஒருவரே' என, தூய ஆவி, மகன், தந்தை என தலைகீழாக மூவொரு இறைவனை புதிய கோணத்தில் தருகின்றார். அதாவது, கடவுளை மேலிருந்து கீழ் வருபவராகக் காட்டாமல், கீழிருந்து மேலேற்றுகிறார். இதை வைத்து பவுலை ஒரு மார்க்சிஸ்ட் என்று சொல்லலாம்! பவுலின் இரண்டாவது மார்க்கிய சிந்தனை இது: அருட்கொடைகள் ஒவ்வொருவரின் தனிப்பட்ட உடைமை என்றாலும், அது பயன்படுத்தப்பட வேண்டியது பொது நன்மைக்காக. கொடைகளை முன்னிறுத்தும்போது நாம் நமக்குள் ஒருவர் மற்றவரை ஒப்பீடு செய்யத் தொடங்குகிறோம். ஆனால், ஊற்றையும், நோக்கத்தையும் பார்த்தால் ஒப்பீடுகள் மறைந்துவிடும்.

ஆக, தலைவனின் தழுவல் நம்பிக்கையாளர்களுக்கு நற்கொடைகளை வழங்குகிறது. இந்நற்கொடைகள் திருச்சபையின் பொதுநலத்திற்காகக் கையாளப்படுகின்றன.

'இயேசு கானாவூர் திருமண விழாவில் தண்ணீரை திராட்சை ரசமாக மாற்றிய நிகழ்வை' இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். யோவா 2:1-11) காண்கிறோம். நமக்குப் பரிச்சயமான இவ்வாசகப் பகுதியை கொஞ்சம் நெருக்கமாகப் பார்ப்போம்:

அ. பழைய புரிதல்களும், புதிய கேள்விகளும்

1. யோவான் நற்செய்தியில் வரும் ஒவ்வொரு நிகழ்வுக்கும் இரண்டு அடுக்கு அர்த்தங்கள் உண்டு: ஒன்று, மேலோட்டமானது. இரண்டு, ஆழமானது. உதாரணத்திற்கு, கானாவூர் திருமண விழாவில் மேலோட்டமான அர்த்தம் என்னவென்றால், இயேசு தண்ணீரை திராட்சை ரசமாக மாற்றியது. ஆனால், ஆழமான அர்த்தம் என்னவென்றால், இதன்வழியாக இயேசுவின் மாட்சிமை வெளிப்படுகிறது. இரண்டு அர்த்தங்களையும் நாம் அலசிப் பார்ப்பது அவசியம்.

2. மரியாள் பரிந்து பேசுபவரா? 'மரியாள் வழி இயேசுவிடம்' என்ற ஒரு சொல்லாடல் கேட்டிருப்போம். இந்த சொல்லாடல் உருவானதன் பின்புலம் கானாவூர் நிகழ்வுதான். மரியாள் கானாவூர் திருமண விழாவில் பரிந்து பேசுகிறார் என நாம் பல நேரங்களில் சொல்கிறோம். எனக்கு இந்த அர்த்தத்தில் உடன்பாடு இல்லை. மரியாள் இல்லையென்றாலும் இயேசுவின் முதல் அற்புதம் அன்று நடந்தேறியிருக்கும். இதற்காக, நான் மரியாளை தள்ளி வைக்கிறேன் என எண்ண வேண்டாம். தொழுநோயால் வருந்திய நாமானை இஸ்ரயேலுக்குச் சென்று நலம்பெறுமாறு அவரின் மன்னன் கடிதம் கொடுத்து அனுப்புகிறான். இதில் மன்னன் அனுப்புகிறான்தான். ஆனால், குணம் பெறக் காரணமாக இருந்தவர் எலிசா. மன்னன் கடிதம் கொடுத்ததால்தான் நாமான் நலம் பெற்றார் எனச் சொல்ல முடியுமா? இல்லை. கானாவூர் நிகழ்வை இலக்கிய அடிப்படையில் பார்த்தால் மரியாளின் வேலை, ஒரு ஏஜன்ட். அதாவது, ஒரு நிகழ்வு நடக்குமுன் நிகழ்ச்சி தொகுப்பாளர் தொகுத்து வழங்குவதுபோல. நிகழ்ச்சி தொகுப்பாளர் இல்லையென்றால் நிகழ்ச்சியே நடக்காது என்று நாம் சொல்ல முடியுமா?

3. திருமணம் என்று நிகழ்வு தொடங்குகிறது. ஆனால், மணமக்கள் பற்றி எந்தக் குறிப்பும் இல்லை. பாரம்பரியத்தில் இந்த திருமணம் யூதா ததேயுவின் திருமணம் என்பது பலரின் கருத்து. நற்செய்தியாளரின் உள்ளார்ந்த பொருளின்படி இயேசுவே இங்கே மணமகனமாகவும், ஒட்டுமொத்த மானுடம் மணமகளாகவும் இங்கே உருவகிக்கப்படுகிறது.

4. 'அம்மா, அதைப்பற்றி நாம் என்ன செய்ய முடியும்?' 'அம்மா' என்பது இங்கே பெண்களை மரியாதை நிமித்தம் அழைக்கும் வார்த்தையே அன்றி, 'தாய்' என்ற அர்த்தம் அல்ல. மேலும், தொடர்ந்து, 'உனக்கும், எனக்கும் என்ன?' என்பதுதான் சரியான மொழிபெயர்ப்பாக இருக்க முடியும். மேலும் முதல் ஏற்பாட்டில் இந்த சொல்லாடல் மிகுந்து கிடக்கிறது. ஒருவர் மற்றவரை தொந்தரவு செய்யும்போது, தொந்தரவு செய்யப்படுபவர், தொந்தரவு செய்பவரைப் பார்த்துக் கேட்பதாகவோ (நீத 11:12), அல்லது சம்பந்தப்படாத ஒருவரை ஒன்றில் வலுக்கட்டாயமாக சம்பந்தப்படுத்தும்போது, அவர் கழுவுற மீனுல நழுவுற மீனா ஓடும்போது சொல்வதாகவோ (2 அர 3:13) பயன்படுத்தப்பட்டுள்ளது.

5. 'நேரம்.' யோவான் நற்செய்தியில் இரண்டு வகை நேரம் குறிப்பிடப்படுகிறது. ஒன்று, 'க்ரோனோஸ்.' அதாவது, நாம் அன்றாடம் பயன்படுத்தும் நொடி, நிமிடம், மணி, நாள், வாரம் சம்பந்தப்பட்டது. இதன்படி, இந்த நிகழ்வு நடக்கும் நாள் 'மூன்றாம் நாள்.' இரண்டு, 'கைரோஸ்.' அதாவது, மீட்பு நேரம். இயேசு குறிப்பிடும் நேரம் இந்த இரண்டாம் நேரமே.

6. 'அறிகுறி.' யோவான், மற்ற நற்செய்தியாளர்கள் பயன்படுத்தும் 'அற்புதம்' (miracle) என்ற வார்த்தையை விடுத்து 'அறிகுறி' (sign) என்ற வார்த்தையைப் பயன்படுத்துகின்றார்;. இயேசு எப்படிப்பட்டவர், அவர் எதற்காக வந்தார் என்பதற்கான அறிகுறியாக அவரின் செயல்கள் இருந்தன என்பதைச் சுட்டிக்காட்டத்தான் யோவான் இச்சொல்லாடலைப் பயன்படுத்துகின்றார். அதாவது, அற்புதங்கள் செய்யப்பட்டதன் நோக்கம் அற்புதங்கள் அல்ல. மாறாக, அவற்றின் வழியாக என்ன வெளிப்பட்டது என்பதுதான் முக்கியம். இங்கே, சீடர்கள் இந்த அறிகுறியின் வழியாக இயேசுவின்மேல் நம்பிக்கை கொள்கின்றனர்.

ஆ. சமய, சமூக பின்புலம்

யூத மரபில் திருமணம் என்பது எட்டு நாள்கள் நடக்கின்ற ஒரு குடும்ப, சமூக நட்பு விழா. இதில் மையமாக இருப்பது 'திராட்சை இரசம்.' உணவுப் பொருட்களில் தயாரிப்பிற்கு அதிக நாட்கள் எடுக்கும் பொருள் திராட்சைரசம் தான். ஆகையால் ஒரு திருமணம் என்றால் குறைந்தது ஆறு மாதத்திற்கு முன்னே திட்டமிட்டு திராட்சை ரசம் செய்யத் தொடங்க வேண்டும். அதற்கு ஆறு மாதத்திற்கு முன் திராட்சை பயிரிடவும் வேண்டும். ஆகையால் கானாவூரின் இந்தக் குடும்பம் ஏறக்குறைய ஒரு வருடமாக இந்தத் திருமணத்திற்கான தயாரிப்பை நிகழ்த்தியிருக்கவேண்டும். ஏதோ ஒரு காரணத்தால் திராட்சைரசம் தீர்ந்துவிட்டது. விருந்தினர்களுக்கு 'இல்லை' என்று சொன்னால் நன்றாக இருக்காது. அதுவும் சொந்தங்களுக்கு 'இல்லை' என்று சொன்னால் என்ன நடக்கும் என்பது நம் அனைவருக்குமே தெரியும். நமக்கு அறிமுகமாகாத மூன்றாம் நபரும், நம் நண்பர்களும் 'இல்லை' என்ற சொல்லை ஏற்றுக்கொள்வார்கள். ஆனால் நம் சொந்தக்காரர்கள் கண்டிப்பாக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். நம்மைக் குறைத்துப் பேச மற்றொரு 'டாபிக்' கிடைத்ததாக எண்ணுவார்கள். இந்த இக்கட்டான சூழலில்தான் இயேசுவின் அறிகுறி நிகழ்கின்றது.

இ. வாழ்வும், வாக்கும்

'தன்னைப் படைத்தவரைக் கண்ட தண்ணீர் வெட்கத்தால் தன் முகம் சிவந்து இரசமாய் மாறியது' என்று கவிதையாகச் சொல்கின்றார் ஒரு ஆங்கிலக் கவிஞர்.இன்றைய நற்செய்திப்பகுதியில் வருகின்ற 'தூய்மைச்சடங்கிற்கென வைக்கப்பட்ட ஆறு கற்தொட்டிகள்' என்னும் சொல்லாடலில், இந்த ஆறு கற்தொட்டிகளுக்கு ஒரு பெயரெச்சமும் கொடுக்கப்பட்டுள்ளது. யூத, இசுலாமிய, அல்லது சில இந்து மரபு வழிபாட்டுத்தலங்களுக்குச் சென்றால் வெளியே தண்ணீர்த்தொட்டி இருப்பதை நாம் பார்க்கலாம். இப்போது நவீனமாக திருகு-குழாய்கள் வைத்திருக்கிறார்கள். ஆனால் ஒரு சில இடங்களில் தண்ணீர் தொட்டியில் சேமிக்கப்பட்டிருக்கும். உள்ளே செல்பவர்கள் தங்கள் காலணிகளைக் கழற்றிவிட்டு இத்தண்ணீரில் இறங்கி பின் வழிபாட்டிற்குள் செல்வார்கள். கீழைமரபில் உள்ள மற்றொரு பழக்கம் - இரண்டு வகையான தண்ணீரைப் பயன்படுத்துதல்: குடிக்க ஒன்று, சுத்தம் செய்ய மற்றொன்று. குடிக்க வைத்திருக்கும் தண்ணீர் பாதுகாப்பாக இருக்கும். சுத்தம் செய்ய வைக்கப்படும் தண்ணீர் கேட்பாரற்றுக் கிடக்கும். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக நிலை எப்படியிருந்திருக்கும்? அதுவும் பாலஸ்தீனம் போன்ற வெப்பபூமியில் தண்ணீர் கிடைத்திருக்குமா? கிடைத்திருக்கும் தண்ணீரின் தரம் எப்படி இருந்திருக்கும்? தரம் தாழ்ந்த தண்ணீரைத் தலைவன் இயேசு தழுவியதால் அத்தண்ணீர் புதிய இயல்பு பெற்றது.

இன்றைய முதல் சிந்தனை: நாம் திராட்சை ரசமாக, இனிமையாக மாறுவதற்கு 'நீ இப்படி இருக்க வேண்டும், அப்படியிருக்க வேண்டும்' என்று இயேசு நம்மிடம் சொல்வதில்லை. நாம் எப்படி இருந்தாலும், எந்தப் பின்புலத்தில் வந்தாலும் அவர் தொட்டால் நாம் திராட்சை இரசமாக மாறமுடியும். இரண்டாவதாக, தண்ணீர் இரசமாக மாற வேண்டுமென்றால் தன் இயல்பை இழக்க முன்வர வேண்டும். 'இல்லை. நான் இப்படியே இருக்கிறேன். தூய்மைச் சடங்கிற்கு பயன்படும் தண்ணீராக மட்டும் இருக்கிறேன்' என்று தன்னையே சுருக்கிக் கொள்ளாமல், மற்றவர்கள் தங்கள் கைகளில் ஏந்தும் மதிப்பிற்குரிய பொருளாக மாறவேண்டுமானால் தன் இயல்பை இழக்க வேண்டும். நம் வாழ்விலும் நம் எண்ணங்கள் நிறைவேற வேண்டுமானால் நம் இயல்பை, தாழ்வு மனப்பான்மையை, குறுகிய எண்ணங்களை இழக்க வேண்டும். ஆன்மீகம் என்பது நம் இயல்பை மாற்றுவது. நம் கூட்டை உடைத்து வெளியேறுவது. மூன்றாவதாக, தலைவன் தழுவியவுடன் விளிம்பு மையமாகிவிடுகிறது. மையம் விளிம்பாகிவிடுகிறது. பணியாளன் திராட்சை இரசத்தின் ஊற்றை அறிகிறான். ஆனால், வீட்டுத் தலைவனுக்கு அது மறைபொருளாக இருக்கிறது.

ஆக, தலைவனின் தழுவல் தண்ணீரைத் திராட்சை இரசமாக மாற்றியதோடல்லாமல், கடவுளின் ஆட்சி வெளிப்படவும், இதன் வழியாகச் சீடர்கள் இயேசுவிடம் நம்பிக்கை கொள்ளவும் காரணமாக அமைகிறது.

இவ்வாறாக, தலைவனின் தழுவல் முதல் வாசகத்தில் எருசலேமிற்கு புதிய பெயரையும் பாதுகாப்பையும், இரண்டாம் வாசகத்தில் நம்பிக்கையாளர்களுக்கு அருள்கொடைகளையும், நற்செய்தி வாசகத்தில் தண்ணீரைத் திராட்சை இரசமாகவும் மாற்றுகிறது.

என் இன்றைய இயல்பும், இருப்பும் எப்படிப்பட்டதாக இருந்தாலும், என் தலைவன் என்னைத் தழுவும்போது என்னில் மகிழ்ச்சியும், வாழ்வும், நிறைவும் பொங்கி எழும். என் தலைவன் என்னைத் தழுவி மாற்றம் பெற்ற நான், என் தழுவலால் மற்றவர்களுக்கு மகிழ்ச்சியும், வாழ்வும், நிறைவும் தரும்போது நானும் அவரைப் போன்ற தலைவனே!

 


No comments:

Post a Comment