Monday 30 April 2018

பாஸ்கா காலம் 6-ஆம் ஞாயிறு



பாஸ்கா காலம் 6-ஆம் ஞாயிறு


திப 10:25-26, 34-35, 44-48; 1யோவா 4:7-10; யோவா 15:9-17




மறையுரை மொட்டுக்கள் -அருள்பணி இருதயராஜ்


கத்தோலிக்கக் கிறிஸ்தவர்கள் பலர் விண்ணகம் சென்றனர், அங்கு அவர்கள் இந்துக்களையோ முகமதியர்களையோ அல்லது வேறு கிறிஸ்துவச் சபையினரையோ காணவில்லை, அதனால் அவர்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் விண்ணகத்தின் நடுவே ஒரு பெரிய குறுக்குச்சுவர் இருப்பதைக்கண்டு, அவர்கள் பேதுருவிடம், "இக்குறுக்குச்சுவரின் மறுபக்கம் வேறுயாராவது இருக்கிறார்களா?" என்று கேட்டனர், அதற்குப் பேதுரு, "ஆம், நீங்கள் யாரெல்லாம் விண்ணகத்திற்கு வரமாட்டார்கள் என்று நினைத்தீர்களோ அவர்களை யெல்லாம் இக்குறுக்குச் சுவரின் மறுபக்கம் உங்கள் கண்ணில் படாமல் வைத்திருக்கிறோம்" என்றார். ஒரு குறிப்பிட்ட மதத்தினர் தான் விண்ணம் செல்வார்கள் என்னும் தவறான கருத்தைக் கொண்டவர்கள் சிந்திப்பதற்காக உருவாக்கப்பட்ட கதை இது!

மீட்பு என்பது யூதர்களுக்கு மட்டும் உரித்தான தனி உடமை அல்ல; அது எல்லா இனத்தாருக்கும் உரிய பொது உடமை என்பது. இன்றைய முதல் வாசகத்தில் தெளிவாக உணர்த்தப்படுகிறது. கொர்னேலியு என்பவர் யூத இனத்தைச் சேராத பிற இனத்தவர், ஆனால் கடவுளுக்கு அஞ்சி வாழ்ந்தவர். கடவுளுடைய ஆணையின் படி பேதுரு அவர் வீட்டிற்குச் சென்று மீட்பின் நற்செய்தியை அறிவித்துக் கொண்டிருந்தபோதே தூய ஆவியார் கொர்னேலியு மீதும் அவர் வீட்டிலிருந்த அனைவர் மீதும் இறங்கிவர, அவர்கள் அனைவரும் அயல்மொழிபேசி ஆண்டவரைப் போற்றிப் புகழ்ந்தனர். திருமுழுக்குப் பெறுவதற்கு முன்னரே உறுதிப்பூசுதல் பெற்று விட்டனர்! இந்நிகழ்வு மூலம் பேதுரு அறிந்து, அறிவித்த உண்மை : "கடவுள் ஆள்பார்த்துச் செயல்படுவதில்லை. எல்லா இனத்தவரிலும் அவருக்கு அஞ்சி நடந்து நேர்மையாகச் செயல்படுபவரே அவருக்கு ஏற்புடையவர்" (திப 10:34).

மீட்படைய இயேசுவின் பெயரைத் தவிர வேறுபெயர் கிடையாது (திப 4:12) என்று ஆணித்தரமாக எடுத்துரைத்த பேதுரு, நல்மனம் கொண்ட அனைவரும் மீட்படைய இறைவன் வழிவகுத்துள்ளார் என்பதையும் அறிவித்துள்ளார். விண்ணகப் பேரின்பத்திற்கு எல்லா இனத்தவரும் அழைக்கப்பட்டுள்ளனர். விண்ணகத்தில் "யாராலும் எண்ணிக்கையிட முடியாத பெரும் திரளான மக்களைக் கண்டேன், அவர்கள் எல்லா நாட்டையும் குலத்தையும் மக்களினத்தையும் மொழியையும் சார்ந்தவர்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார் திருத்தூதர் யோவான் (திவெ 7:9).

ஆவியானவர் தாம் விரும்பியபடி செயல்படுகிறார். அதாவது அவருடைய செயல்பாட்டை எவராலும் தடுத்து நிறுத்த முடியாது (யோவா 3:8), மேலும், "கடவுளின் வார்த்தையைச் சிறைப்படுத்த முடியாது" (2தீமோ 2:9), "இறைவன் மீட்பைத் திருமுழுக்கு என்னும் அருள் சாதனத்துடன் கட்டுண்டிருக்கச் செய்துள்ளார், ஆனால் அவரோடு தமது அருள்சாதனங்களால் கட்டுண்டவர் அல்லர்" என்று 'கத்தோலிக்கத் திருச்சபையின் மறைக்கல்லி' (எண் 257) குறிப்பிட்டுள்ளது நமது கவனத்தை ஈர்க்கின்றது. ஆம், கடவுளின் கரங்களை எவரும் கட்டுப்படுத்த முடியாது.

தங்களுடைய குற்றமின்றி கிறிஸ்துவையும் திருச்சபையையும் அறியாதவர்கள், நேரிய உள்ளத்துடன் மனச்சான்றின் குரலைக்கேட்டு. கடவுளுடைய திருவுளத்தை நிறைவேற்றினால், அவர்களும் இறையருளால் மீட்புப் பெறமுடியும் என்று தெளிவுபடுத்தியுள்ளது. இரண்டாம் வத்திக்கான் வங்கம் (திருச்சபை, எண் 18) எங்கெல்லாம் உண்மையும் நன்மையும் காணப்படுகிறதோ அவை அனைத்துமே உண்மைக்கும் நன்மைக்கும் காற்றாகிய கடவுளிடமிருந்தே வருகிறது என்பதை ஏற்று, பிறசமயத்தாரோடு நல்லுறவை வளர்ப்பது காலத்தின் கட்டாயமாகும்.

ஒருமுறை ஒரு சிறுவனிடம், "இந்துக்கள் விண்ணகம் செல்வார்களா?" என்று நான் கேட்டதற்கு, அச்சிறுவன், "நிச்சயமாகச் செல்வார்கள். ஏனென்றால், நாம் கிறிஸ்துவை அறிந்திருந்தும் கெட்டவர்களாக இருக்கின்றோம், ஆனால் இந்துக்கள் கிறிஸ்துவை அறியாதிருந்தும் நல்லவர்களாக இருக்கிறார்கள்" என்றான். அவன் சொன்னது எனக்கு வியப்பாக இருந்தது.

இந்துக்கள் மீட்படையலாம்; கிறிஸ்துவர்கள் மீட்படையாது போகலாம், புனித அகுஸ்தீனாரின் கூற்றை மேற்கோள்காட்டி இரண்டாம் வத்திக்கான் சங்கம் பின்வருமாறு கூறுகிறது, "திருச்சபையில் இணைந்திருந்தும், அன்பில் நிலைத்திராது, 'உள்ளத்தாலன்றி', 'உடலால் மட்டும் அதன் மடியில் தவழ்கின்றவர்கள் மீட்படைவதில்லை (திருச்சபை, எண் 14).

எனவே நாம் திருமுழுக்குப் பெற்றிருக்கிறோம் என்ற ஒரே காரணத்திற்காக மட்டும் மீட்படைய முடியாது. திருச்சபையில் இருந்தால் மட்டும் போதாது, அன்பில் நிலைத்திருக்க வேண்டும். சென்ற ஞாயிற்றுக்கிழமை நாம் வாசிக்கக்கேட்ட நற்செய்தியின் தொடர்ச்சியான இன்றைய நற்செய்தியில் தம் ஆண்டவர் அன்பை வலியுறுத்துகின்றார், "என் அன்பில் நிலைத்திருங்கள்... நான் உங்களிடம் அன்பு கொண்டிருப்பதுபோல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு கொண்டிருக்க வேண்டும் என்பதே என் கட்டளை" (யோவா 15:10,12)

இன்றைய இரண்டாவது வாசகத்திலும் திருத்தூதர் யோவான் பிறரன்பை முன்னிலைப்படுத்துகிறார். அன்பு செய்யாதவர்கள் கடவுளை அறியமுடியாது. ஏனெனில் அன்பே கடவுள் (1 யோவா 4:7-8). 7).

தெரு நடுவில் கீழே விழுந்து கிடந்த ஊனமுற்ற ஒருவரை மற்றொருவர் தூக்கிவிட்டு, அவருக்குப் பணமும் கொடுத்து உதவினார். ஊனமுற்றவர் தன் கண்களில் கண்ணீர் மல்க அவரிடம், "நீங்கள் இயேசு ஆண்டவரா?" என்று கேட்டார். அதற்கு அவர், “நான் இயேசு ஆண்டவர் அல்ல; ஆனால் அவரைப் பின்பற்றும் சீடர்களில் ஒருவர் நான்" என்றாம். இவ்வாறு தான் நாம் இக்காலத்தில் இயேசுவின் அன்பு நற்செய்தியின் சாட்சிகளாகத் திகழ வேண்டும்.

கடவுள் நமது அன்பிற்காகக் காத்திராமல், அவரே முதன் முதல் நம்மை அன்பு செய்து, நமது பாவங்களுக்குக் கழுவாயாகத் தமது மகனை அனுப்பினார், அவ்வாறே நாமும் பிறருடைய அன்பிற்காகக் காத்திராமல், பிறரை அன்பு செய்ய முன்வருவோம். ஏனெனில் கிறிஸ்துவின் பேரன்பு நம்மை ஆட்கொண்டு, நம்மை உந்தித் தள்ளுகிறது (2 கொரி 5:14).



கடவுளின் குழந்தைகளுக்கு எது அழகு?

மகிழ்ச்சியூட்டும் மறையுறைகள் - குடந்தை ஆயர் அந்தோனிசாமி


இன்றைய அருள்வாக்கின் மையக் கருத்து சகோதர அன்பு. நீங்கள் ஒருவர் மற்றவரிடம் அன்பு கொள்ள வேண்டும் என்பதே என் கட்டளை (யோவா 15:12) என்கின்றார் இயேசு.

பத்திரிகை ஒன்றில் வெளிவந்த நெஞ்சைத் தொடும் ஓர் உண்மைச் சம்பவம். அது ஓர் இரயில் பயணம். அந்த இரயில் நாகப்பட்டினத்திலிருந்து சென்னைக்குப் புறப்பட்டது. அந்த இரயிலில் பயணம் செய்தவர்களுள் வயதான இரண்டு தம்பதியரும் இருந்தனர்.

உறங்கும் நேரம் பிறந்தது. வயதான அந்தப் பெண் உறங்கச் செல்வதற்கு முன்னால் கணவரது கையை ஒரு நாடாவால் கட்டி மறுமுனையை தனது கையில் கட்டிக்கொண்டார். அப்படி அவர் செய்ததற்குக் காரணம் என்ன?

அவரது கணவர் ஒரு மன நோயாளி. அவர் மத்திய அரசுத் துறையில் அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர். ஆனால் எப்படியோ அவரது மனநிலை பாதிக்கப்பட்டு, அவர் ஒரு குழந்தையைப் போல் ஆனார். பாவம்! அவரது மனைவியைக் கூட அவரால் அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை. அந்த மனைவிக்கு கணவரின் வாழ்விலே புதுமை நடக்கும் என்ற நம்பிக்கை!

நிகழ்ச்சியிலே வருகின்ற அந்தப் பெண் வாழ்ந்த வாழ்வுக்குப் பெயர்தான் அன்பு வாழ்வு! உறக்கத்தில்கூட நான் உங்களுக்கு உதவி செய்யக் காத்திருக்கின்றேன் என்று அவரது கணவருக்கு அவருடைய கையைக் கட்டியிருந்த நாடா வழியாக எடுத்துச்சொன்ன அந்த மனைவி ஓர் அன்பு மனைவி

அன்பிலே மூன்று வகையான அன்பு உண்டு :
1. நம்மை அன்பு செய்பவர்களை மட்டும் அன்பு செய்வது.
2. நம்மை அன்பு செய்யாதவரையும் அன்பு செய்வது.
3. நமது பகைவர்களையும் அன்பு செய்வது.

நம்மை அன்பு செய்பவர்களை மட்டும் அன்பு செய்வது எல்லாரும் செய்யக்கூடிய ஒன்று. தம்மை அன்பு செய்யாதவரையும் அன்பு செய்பவர்கள் புனிதர்கள். நமது பகைவர்களையும் அன்பு செய்வது இயேசுவின் அன்பு; அது நம்மை இயேசுவுக்குள் வாழவைக்கும் (இரண்டாம் வாசகம்). ஆள் பார்த்துச் செயல்படாத கடவுளைப் போல் (முதல் வாசகம்) வாழ முற்படுவதே கடவுளின் குழந்தைகளுக்கு அழகு.
மேலும் அறிவோம்:
அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும்
பண்புடைமை என்னும் வழக்கு (குறள் : 992).

பொருள் : அன்புடையவராக வாழ்தலும் நல்ல குடும்பத்தைச் சார்ந்தவராகத் திகழ்தலும் பண்புடைமை என்று சான்றோர் போற்றும் நெறிமுறைக்கு உரிய இரண்டு நல்ல வழிகள் ஆகும்!



ஒரு மெளன அலறல்

கல்லறைக்கு அப்பால் ... அருள்திரு இ. லூர்துராஜ்


கருச்சிதைவுக்கு எதிராக எழுதிய மனித உயிரின் மாண்பு பற்றிய ஆங்கில நூல் “The silent Scream" அதாவது "ஒரு மௌன அலறல்” கவிதை நயம், கற்பனை வளம் நிறைந்த, ஆனால் நெஞ்சத்தை முள்ளாக உறுத்தும், நெருப்பாகப் பொசுக்கும் ஒரு மெளன அலறல். அதில் இப்படி ஒரு சில வரிகள்.

“உலகில் பிறப்பெடுக்கும் ஒவ்வொரு மனித உயிரும் சிறப்பான ஒரு செய்தியைச் சொல்ல, சிறப்பான ஒரு பாடலை இசைக்க சிறப்பான ஓர் அன்பைப் பகிர வருகிறது. அதற்குத் தாயின் கருவறையே கல்லறையாகிற போது, அல்லது தவிர்க்க இயலாத சூழல் காரணமாகப் பிறந்ததும் குப்பைத் தொட்டியோ முட்புதரோ அதற்குப் புகலிடமாகிற போது மனிதன் சொல்கிறான்: “கடவுளே, உனது சிறப்பான அந்தச் செய்தி எனக்கு வேண்டாம், சிறப்பான அந்தப் பாடல் வேண்டாம், சிறப்பான உமது அன்பு வேண்டாம்" என்று,

"கொலை செய்யாதே" என்கிறது ஐந்தாம் கட்டளை. ஏன்? உயிர் இறைவனுக்கு உரியது. அதை எடுக்க எவருக்கும் உரிமையில்லை என்பதால் மட்டுமா? அன்பு வேண்டாம் என்ற உறவின் முறிவால் இல்லையா?

திருமுழுக்கு மட்டும் போதாது இறைவனுக்கு உகந்தவர்களாக அன்பில் நிலைப்பது இன்றியமையாதது. அதுவும் "என் அன்பில் நிலைத்திருங்கள் என்கிறார் இயேசு.
“எப்பொழுதும் மகிழ்ச்சியாய் இருங்கள். இடைவிடாது இறைவனிடம் வேண்டுங்கள். எல்லாச் சூழ்நிலையிலும் நன்றி கூறுங்கள்” (1 தெச.5:16) இது நமக்காகக் கிறிஸ்து வழியாகக் கடவுள் வெளிப்படுத்திய திருவுளம் என்கிறார் திருத்தூதர் பவுல். “உள்ள மகிழ்ச்சியே மனிதரை வாழ வைக்கிறது. அகமகிழ்வே மானிடரின் வாழ்நாளை வளரச் செய்கிறது" (சீராக்.30:22) மகிழ்ச்சியின் தேவையை வலியுறுத்தும் வசனம் இது!

அன்பு ஒன்றே மகிழ்வைத் தரும். மனநிறைவைத் தரும். "என் மகிழ்ச்சி உங்களுள் இருக்கவும் உங்கள் மகிழ்ச்சி நிறைவு பெறவுமே இவற்றை உங்களிடம் சொன்னேன்” (யோவான் 15:11) என்கிறார் இயேசு. மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமாயின் அவர் சொல்வது: “நான் என் தந்தையின் கட்டளைகளைக் கடைப்பிடித்து அவரது அன்பில் நிலைத்து இருப்பதுபோல நீங்களும் என் கட்டளைகளைக் கடைப்பிடித்தால் என் அன்பில் நிலைத்திருப்பீர்கள்" (யோவான் 15:10).

இயேசு குறிப்பிடும் கட்டளை என்ன? “நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்” (யோவான் 13:34) இயேசு தன் இரத்தத்தால் முத்திரை யிட்டுத்தந்த புதிய கட்டளை. புதிய உடன்படிக்கை இவ்வன்பின் தனித்தன்மை .

''தம் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதைவிடச் சிறந்த அன்பு யாரிடமும் இல்லை (யோவான் 15:13) அன்பின் ஆழத்தை உணர்த்த இயேசு நட்பை எடுத்துக்காட்டாகக் கையாளுகிறார். ''உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு இது நட்புக்கு வள்ளுவர் தரும் இலக்கணம். ஆனால் இயேசு அதற்கும் மேலே சென்று "நண்பர்களுக்காக உயிர் கொடுத்தல்” என்பதை முன்வைக்கிறார்.

இயேசு சொன்னது போலவே நமக்காக உயிரைக் கொடுத்தார். நாம் அவரது நண்பர்கள் என்பதற்காகவா? பாவிகள், பகைவர்கள் என்பதால் அன்றோ ! ''நாம் பாவிகளாய் இருந்த போதே கிறிஸ்து நமக்காகத் தம் உயிரைக் கொடுத்தார். இவ்வாறு கடவுள் நம்மீது கொண்டுள்ள தம் அன்பை எடுத்துக் காட்டியுள்ளார்'' (உரோமை 5:8). பகைவர்களையும் நண்பர்களாகக் கருதியன்றோ உயிரைக் கொடுத்தார்!. அந்த அன்புக்கு கைமாறாக நாமும் உயிர்த்தியாகம் செய்ய வேண்டும் என்று கேட்கவில்லை. மாறாக “நான் கட்டளையிடுவது எல்லாம் நீங்கள் செய்தால் நீங்கள் என் நண்பர்களாக இருப்பீர்கள்" (யோவான் 15:14) என்றார்.

பலனை எதிர்பாராமல் பிறரை அன்பு செய்ய வேண்டும் என்பதுதான் அவருடைய கட்டளை. நீ என்னை அன்பு செய்தால் நான் உன்னை அன்பு செய்வேன் என்று சொல்பவன் மனிதன். நீ என்னை அன்பு செய்யாவிட்டாலும் உன்னைத் தேடிவந்து அன்பு செய்வேன் என்பவர் இறைவன். (2 கொரி.5:14,15).

பத்துக் கட்டளைகளின் சாரமாக இரண்டு கட்டளைகள் நமக்குத் தரப்பட்டுள்ளன. இரண்டு கட்டளைகளுக்குமே அடிப்படை அன்புதான். அன்பை விதைப்போம். அன்பை அறுவடை செய்வோம்.

"நான் கட்டளை இடுவதையெல்லாம் நீங்கள் செய்தால் நீங்கள் என் நண்பர்களாய் இருப்பீர்கள்''. (யோவான் 15:14)

இன்றைய மனிதனின் மன நிலை? பிறர் ஆணையிடப் பணிவதா? இதைச் செய் அதைச் செய்யாதே என்று பிறர் கட்டளை தந்து என் வாழ்க்கையை வழிப்படுத்துவதா? விடுதலை, சுதந்திரம், மக்களாட்சி என்ற உணர்வில் வளரும் தலைமுறையில்லவா இது!

கட்டளைகள் எல்லாம் வாழ்வின் வளத்தையும் நலத்தையும் நோக்கமாகக் கொண்டவை. வாழ்க்கையைத் தடையோட்டமாக்கி குறுக்கே தடைகளை வைத்து அவற்றில் மனிதன் தடுக்கித் தட்டுத் தடுமாறி விழுவதைப் பார்த்து மகிழ்பவர் அல்ல நம் கடவுள்.

இறைக் கட்டளைகளை எல்லாரும் கடைப்பிடித்தால் ஊர் எப்படி இருக்கும்! உலகம் எப்படி இருக்கும்! கற்பனை செய்து பாருங்கள். உங்கள் ஊரில் ஒருவர்கூடப் பொய் பேசுவதில்லை, பொறாமைப் படுவதில்லை, திருடுவதில்லை, பிறர் பொருளுக்கு ஆசைப்படுவதில்லை. பிறர் வளர்ச்சி கண்டு வயிறு எரிவதில்லை. எல்லாரும் எல்லாரையும் தன்னலமின்றி அன்பு செய்கிறார்கள்... இப்படிக் கூட ஓர் ஊர் இருக்குமா என்று நினைக்காதீர்கள். சும்மா கற்பனை செய்து பாருங்கள். அந்த ஊர் எப்படி இருக்கும்? அங்கே காவல் நிலையம் இருக்குமா? சிறைச்சாலை இருக்குமா? மருத்துவமனை இருக்குமா? அவைகள் எல்லாம் கடவுள் படைத்த அற்புத உலகில் மனிதனால் படிந்த கறைகளின் அடையாளங்கள்!

“கடவுள் ஆள் பார்த்துச் செயல்படுவதில்லை ” (தி.ப.10:34). பொதுமைப் பண்பு வாய்ந்த அன்பை அடிப்படையாகக் கொண்ட புதியதொரு சமுதாயமாக விளங்குவதே, விளங்க வேண்டியதே திருச்சபை.

“அன்பு செலுத்தும் அனைவரும் கடவுளிடமிருந்து பிறந்தவர்கள் அவர்களே கடவுளை அறிந்துள்ளார்கள். அன்பில்லாதோர் கடவுளை அறிந்து கொள்ளவில்லை. ஏனெனில் கடவுள் அன்பாய் இருக்கிறார்”. (1 யோவான் 4:7,8).





உறவின் சமநிலை

அருள்பணி  ஏசு கருணாநிதி

யூவல் நோவா ஹராரி என்ற இஸ்ரயேல் நாட்டு எழுத்தாளர் எழுதி வெளிவந்த (2014) நூல் 'சேபியன்ஸ். மனுக்குலத்தின் ஒரு சிறு வரலாறு'. இந்த நூலின் ஓரிடத்தில் மனித வாழ்வில் நாம் ஏற்றுக்கொள்ளும் இரண்டு பொய்களைக் குறிப்பிடுகின்றார். முதல் பொய்: 'எல்லா மனிதர்களும் சமம்.' இந்தப் பொய்யை நமக்கு அறிவுறுத்துவது உலக நாடுகளின் பிரகடனம். கொஞ்சம் கண்களைத் திறந்து பாருங்கள். எல்லா மனிதர்களும் சமமா? ஆண் வேறு, பெண் வேறு, மூன்றாம் பாலினம் வேறு. குழந்தை வேறு. முதியவர் வேறு. இளைஞன் வேறு. இளம்பெண் வேறு. மனித உயரத்தில் வேற்றுமை. தோலின் நிறத்தில் வேற்றுமை. மொழியில் வேற்றுமை. மதத்தில் வேற்றுமை. பொருளாதாரத்தில் வேற்றுமை. இப்படி நாம் அடுக்கிக்கொண்டே போகலாம். இப்படி வேற்றுமை நிறைந்த உலகில் 'எல்லா மனிதர்களும் சமம்' என்று சொல்வது முதல் பொய்.  இரண்டாவது பொய்: 'மனிதர்களில் பிறப்பிலேயே ஏற்றத்தாழ்வு இருக்கிறது.' இந்தப் பொய்யை நமக்கு அறிவுறுத்துவது நம் மண்ணில் ஆரியர்கள் கொண்டுவந்து நம்மேல் திணித்த மனுசாஸ்திரம். இந்த நூலின் படி பிரம்மாவின் தலை, வயிறு, தொடை, கால் ஆகிய நான்கு இடங்களிலிருந்து மனிதர்கள் பிறப்பெடுக்கின்றனர். இந்த நால்வருக்குள்ளும் பிறப்பிலேயே ஏற்றத்தாழ்வு இருக்கிறது.

நிற்க.

சென்னையிலிருந்து மதுரைக்கு ஒரு பேருந்தில் நம்மால் எப்படி ஏறி பயணம் செய்ய முடிகிறது? அந்தப் பேருந்தை இயக்கும் ஓட்டுநர், நடத்துநர், நம் சீட்டில் நமக்கு அருகில் நம் சட்டைப்பையில் உள்ளது என்ன என்று தெரியும் அளவிற்கு, நம் ஃபோனில் அடுத்தவர் பேசுவதைக் கேட்கும் அளவுக்கு நெருக்கமாக அமர்ந்திருக்கும் நபர் இவர்களை எல்லாம் நமக்குத் தெரியாது. இருந்தாலும் எப்படி நம்மால் அவர்கள் அருகில் அமர்ந்து, ஏன் தூங்கி, பயணம் செய்ய முடிகிறது?

பயணத்தின்போது ஒரு ஓட்டலுக்குச் செல்கிறோம். ஏற்கனவே நிறையப்பேர் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார்கள். நாமும் ஒரு நாற்காலியில் அமர்ந்து உணவை ஆர்டர் செய்து சாப்பிடுகிறோம். சாப்பிட்டுவிட்டு பில் கட்டிவிட்டு வெளியே வந்துவிடுகிறோம். எவரோ சமைத்த உணவை, எவரோ வைத்து நடத்தும் உணவகத்தில், முன்பின் தெரியாத ஒருவர்முன் அமர்ந்து நாம் எப்படி சாப்பிடுகிறோம்?

20 வருடங்களாக யார், எவர் என்று தெரியாத ஒருவர் 20 வயதில் அப்படி தெரியாத ஒருவரை திருமணம் செய்து 80 வயது வரை 60 ஆண்டுகள் எப்படி இணைந்து வாழ முடிகிறது?

மனிதர்கள் பிரிந்து கிடந்தாலும் அவர்களை இணைக்கின்ற பிணைப்பு எது?

பிணைப்பு ஏற்படுவதுற்கு சமதளம் அவசியம். ஒரு மரத்துண்டை மற்றொரு மரத்துண்டோடு இணைக்க வேண்டும் என்றால் அவை இரண்டும் சம தளத்தில் இருக்க வேண்டும். ஒன்றோடொன்று பொருந்தும் தன்மை கொண்டிருக்க வேண்டும். பென்சிலும் மரத்துண்டுதான். விறகுக்கட்டையும் மரத்துண்டுதான். இரண்டையும் ஒன்றோடொன்று ஃபெவிகால் போட்டு இணைத்துவிட முடியுமா? ஒருவேளை இணைத்தாலும் அந்த இணைப்பு நீண்டதாக இருக்குமா?

கணித, இயற்பியல், வேதியியல் பாடங்களில் சமன்பாடு என்ற ஒன்று உண்டு. அதாவது அம்புக் குறிக்கு இருபக்கமும் இருக்கின்ற கூறுகள் சமமாக இருக்க வேண்டும். சில நேரங்களில் இந்தச் சமன் வெளிப்படையாக இருக்கும். சில நேரங்களில் மறைந்து கிடக்கும்.

மனித உறவுகளில் சில நேரங்களில் வெளிப்படையாக, சில நேரங்களில் மறைந்து கிடக்கும் சமன்பாடு அல்லது சமநிலை பற்றிப் பேசிகின்றன இன்றைய இறைவாக்கு வழிபாட்டு வாசகங்கள்.

இன்றைய முதல் வாசகத்தில் (காண். திப 10:25-26,34-35,44-48) விருத்தசேதனம் செய்த கிறிஸ்தவர்களுக்கு - அதாவது யூதராய் இருந்து கிறிஸ்தவர்களாக மாறிய (பேதுரு உள்பட) - ஒரு கேள்வி எழுகின்றது: 'விருத்தசேதனம் செய்யாத கிறிஸ்தவர்கள் - அதாவது, பிற இனத்தவராய் இருந்து கிறிஸ்தவர்களாய் மாறியவர்களோடு நாம் எப்படி உறவாடுவது? அவர்களைவிட நாம் மேலானவர்கள் இல்லையா?

இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். 1 யோவா 4:7-10) யோவானின் திருச்சபையில் ஒரு கேள்வி எழுகிறது: இயேசு அன்புக்கட்டளை கொடுத்துச் சென்றாரே. இந்த அன்புக்கட்டளையை நாம் எப்படி வாழ்வது? கடவுள் நம்மைவிட பெரியவர். அவரை நம்மால் அன்பு செய்ய முடியுமா? கடவுள் நம்மைவிட பெரியவர் இல்லையா?

இன்றைய மூன்றாம் வாசகத்தில் (காண். யோவா 15:9-17) தன் சீடர்களின் பாதங்களைக் கழுவி அவர்களோடு பந்தியில் அமர்ந்திருக்கும் இயேசு தனக்கும் தன் சீடர்களுக்கும் உள்ள உறவு தலைவர்-பணியாளர் உறவு அல்ல என்று சொல்வதோடு, இருவருக்குமான உறவு நண்பர்கள் உறவு என்கிறார். 'சீடர் குருவைவிட மேலானவர் அல்ல' (லூக் 6:40) என்று சொல்லும் இயேசுவால் எப்படி சீடர்களைத் தனக்கு இணையாக அழைக்க முடிந்தது?

ஆக,

பிற இனத்து கிறிஸ்தவர்களும் யூதர்களும் சமமா? - இது முதல் கேள்வி.

கடவுளும் மனிதர்களும் சமமா? - இது இரண்டாம் கேள்வி.

இயேசுவும் சீடர்களும் சமமா? - இது மூன்றாம் கேள்வி.

இந்த மூன்று கேள்விகளுக்கும் இன்றைய வாசகங்களே விடைகளையும் தருகின்றன. இந்த விடைகள் 'அழைத்தல்' மற்றும் 'மறுமொழி' என்ற இரண்டு நிலைகளில் உள்ளன.

1. பிறஇனத்து கிறிஸ்தவர்களையும் யூதர்களையும் இணைக்கும் 'அழைத்தல்' தூய ஆவி. இந்த அழைத்தலுக்கு பேதுருவும், மற்ற யூத கிறிஸ்தவர்களும் அளிக்க வேண்டிய 'மறுமொழி' எல்லாரையும் ஏற்றக்கொள்வது. இதை நாம் பேதுருவின் வார்த்தைகளில் பார்க்கிறோம். கொர்னேலியு என்ற புறவினத்து அன்பருக்கு நற்செய்தி அறிவிக்கச் செல்லும் பேதுருவின் காலடிகளில் விழுந்து பணியும் கொர்னேலியுவைத் தூக்கிவிடும் பேதுரு, 'எழுந்திடும், நானும் ஒரு மனிதன்தான்' என்கிறார். தொடர்ந்து பேதுரு பேசிக்கொண்டிருந்தபோதே தூய ஆவி புறஇனத்தார் மேல் இறங்கி வருகின்றது. இதைக் கண்ட பேதுரு அவர்களுக்கு திருமுழுக்கும் கொடுக்கின்றார். இவ்வாறாக, தூய ஆவியார் சமநிலைக்கு 'அழைக்கின்றார்.' அந்த அழைத்தலுக்கு 'மறுமொழியாக' யூதகிறிஸ்தவர்கள் பிறஇனத்து கிறிஸ்தவர்களை ஏற்றுக்கொள்கின்றனர்.

2. 'ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துவோமாக' என்று தன் திருச்சபைக்கு அறிவுறுத்துகின்ற திருத்தூதர் யோவான், 'நாம் கடவுள்மீது அன்பு கொண்டுள்ளோம் என்பதில் அல்ல. மாறாக, அவர் நம்மீது அன்பு கொண்டு தம் மகனை நம் பாவங்களுக்குக் கழுவாயாக அனுப்பினார் என்பதில்தான் அன்பின் தன்மை விளங்குகிறது' என்கிறார். ஆக, கடவுளையும் மனிதர்களையும் இணைக்கும் அழைத்தல் 'அன்பு.' இந்த அன்பு கடவுளிடமிருந்து வருகிறது. இந்த அழைத்தலுக்கு மனிதர்கள் தரவேண்டிய மறுமொழி 'பிறரன்பு.'

3. தன் சீடர்களோடு பந்தியில் அமர்ந்திருக்கும் இயேசு, 'உங்களை நான் நண்பர்கள் என்றேன்' என்கிறார். இது 'அழைத்தல்.' தொடர்ந்து, 'நான் கட்டளை இடுவதையெல்லாம் நீங்கள் செய்தால் நீங்கள் என் நண்பர்களாய் இருப்பீர்கள்' என்கிறார். ஆக, அவரின் அழைத்தலுக்கு ஏற்ற மறுமொழியை சீடர்கள் தந்தால்தான் நண்பர்கள் நிலையில் அவர்களால் தொடர்ந்து நிற்க முடியும்.

இயேசு நண்பர்களைப் பற்றி இங்கே பேசுகிறார்கள் என்றவுடன் இது வேற டாபிக் என நினைத்துவிட வேண்டாம். அன்பில் நிலவும் இரண்டு நிலைகளைத்தான் இங்கே சொல்கின்றார்: (அ) பணியாளர் நிலை, (ஆ) நண்பர் நிலை.

அ. பணியாளர் நிலை. இந்த நிலையில் ஒருவர் மேலிருப்பார். மற்றவர் கீழிருப்பார். மேலிருப்பவர் கொடுத்துக் கொண்டிருப்பார். கீழிருப்பவர் பெற்றுக்கொண்டிருப்பார். கீழிருப்பவர் தான் நினைப்பது போல இல்லையென்றால் மேலிருப்பவர் அவர் மேல் கோபப்படுவார். அவரைத் தனக்கு வேண்டாம் என சொல்லி விடுவார். கீழிருப்பவர் தன்னிச்சையாக எதையும் செய்ய முடியாது. எப்போதும், 'மேலிருப்பவருக்கு இது பிடிக்குமா!' என்று நினைத்துக் கொண்டேதான் செய்ய வேண்டும். மேலிருப்பவரின் மனம் குளிருமாறே இவர் நடந்து கொள்ள வேண்டும். 'நீ எனக்கு மட்டும்தான்!' என்று மேலிருப்பவர் கீழிருப்பவரிடம் சொல்லிக் கொண்டே இருப்பார். 'தலைவர் செய்வது இன்னதென்று பணியாளருக்குத் தெரியாது!' என்கிறார் இயேசு. இந்த உறவில் அப்படித்தான் மேலிருப்பவர் எந்த மூடில் இருப்பார். எப்படி ஃபோன் எடுப்பார். என்ன நேரத்தில் கடிந்து கொள்வார் என்று எதுவும் கீழிருப்பவருக்குத் தெரியாது.

ஆ. நண்பர் நிலை. இந்த நிலையில் இரண்டு பேரும் ஒரே தளத்தில் இருப்பார். இருவரும் கொடுத்துக்கொள்வர். வாங்கிக்கொள்வர். என்னுடையது என் உரிமை, அவருடையது அவர் உரிமை என்று ஒருவர் மற்றவர் மேல் மதிப்பும், சுதந்திரமும் இருக்கும். 'உனக்குப் பிடிக்கவில்லை என்பதற்காக எனக்குப் பிடித்த ஒன்றை செய்யாமல் இருக்க என்னால் முடியாது!' என்று சொல்லும் உரிமை இந்த நிலையில் உண்டு. 'நான் உனக்கு தான். நீ எனக்கு தான். ஆனால், நான் உனக்கு மட்டும் அல்ல. நீ எனக்கு மட்டும் அல்ல' என்று அடுத்தவருக்கும் இடம் கொடுத்த அரவணைத்துக்கொள்வது இந்த நிலை. நண்பர்கள் நிலையில் ஒளிவு மறைவு இருக்காது.

இவ்வாறாக, 'தூய ஆவி,' 'அன்பு,' 'நண்பர் நிலை' என்ற மூன்று இடங்களிலுமே அழைத்தல் என்பது மேலிருந்து கீழ்நோக்கியதாக இருக்கிறது. இந்த மூன்றும் மேலிருந்து கீழ்நோக்கி வரும்போது நாம் தரவேண்டிய மறுமொழியும் - 'ஏற்றுக்கொள்ளுதல்,' 'பிறரன்பு,' 'கனிதருதல்' - இருந்தால்தான் உறவின் சமநிலை கிடைக்கிறது.

உறவின் சமநிலை அடைதலை நாம் எப்படி அறிந்துகொள்வது? கனிதருதலில்.

கனி என்றால் என்ன? மரத்தின் உச்சகட்ட வளர்ச்சி தான் கனி. இலை - பூ - காய் என தொடரும் மரத்தின் பயணம் கனியில் முற்றுப்பெற்றுவிடுகிறது. கனிதான் மரத்தின் நோக்கம். ஆக, உறவில் கனி என்று சொல்லும்போது, உறவில் வளர்தல் அவசியம் - நீங்களும், நானும் அவரில்.
இறுதியாக,

'மனிதர்கள் அனைவரும் சமம்' என்ற பொய்யை நாம் நம்பினாலும், 'மனிதர்கள் பிறப்பிலேயே ஏற்றத்தாழ்வு கொண்டவர்கள்' என்ற பொய்யை நம்பினாலும், ஒருவர் மற்றவரோடு நாம் கொண்டிருக்கும் சமநிலையே நம்மை வளரச் செய்கிறது.

நம்மில் குடிகொண்டிருக்கும் ஆவியும், அடுத்தவரில் குடியிருக்கும் ஆவியும் கடவுளின் ஆவியே எனில், அங்கே அன்பு சாத்தியமே. இந்த அன்பினால்தான் இயேசுவும் நம்மைத் தேர்ந்துகொண்டு நம்மேல் உரிமை கொண்டாடுகின்றார்.

ஒருவர் மற்றவர்மேல் உரிமைகொள்ளும் சமநிலையே நம் அழைத்தலும் மறுமொழியாகட்டும் - இன்றும், என்றும். இந்த மறுமொழியே நாம் பேருந்தில் பயணம் செய்யவும், ஓட்டலில் உணவருந்தவும், அருள்பணி, திருமண உறவுகளில் நிலைக்கவும் தூண்டுகிறது.


“நான் உங்களிடம் அன்பு கொண்டிருப்பதுபோல, நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்புகொள்ளுங்கள்”

அருள்பணி ஏசு கருணாநிதி

ஒபேரா நடனத்தில் உலகப்புகழ் பெற்ற கலைஞர் எர்னஸ்டைன் ஸ்கூமென் (Ernestine Schumann) அவருடைய கலையுலகின் தொடக்க காலகட்டத்தில் அவரது கணவர் அவரைவிட்டுப் பிரிந்துபோனார். இதனால் அவர் தன்னுடைய நான்கு பிள்ளைகளையும் வைத்துக்கொண்டு மிகவும் கஷ்டப்பட்டுப்பட்டார். கையில் ஒரு பைசாகூட இல்லாத சூழ்நிலையில் தன்னுடைய வாழ்வையே முடித்துக்கொள்ளலாம் என அவர் தீர்மானித்தார்.
எனவே அவர் தன்னுடைய நான்கு பிள்ளைகளுடன் ஓடும் இரயிலில் விழுந்து தற்கொலை செய்துகொள்ளலாம் என்று முடிவுசெய்துகொண்டு தண்டவாளத்தில் பிள்ளைகளோடு அமர்ந்திருந்தாள். அப்போது எர்னஸ்டைன் ஸ்கூமெனின் மகள்களில் ஒருத்தி, “அம்மா! நான் உன்னை மிகவும் அன்பு செய்கின்றேன்” என்று மெல்லிய குரலில் சொன்னார். இக்கட்டான அந்த சூழ்நிலையில் மகளின் குரல் கடவுளின் குரலை போன்று அவருக்குக் கேட்டது. இதனால் அவர் தன்னுடைய தற்கொலை எண்ணத்தை மாற்றிக்கொண்டு வாழத் தொடங்கினார். ஒருசில ஆண்டுகள் கடினமான போராட்டத்திற்குப் பிறகு அவர் உலகப் புகழ்பெற்ற ஒபேரா நடனக் கலைஞர் ஆனார். எர்னஸ்டைன் ஸ்கூமென் அடிக்கடி சொல்கின்ற வார்த்தைகள் இதுதான், “அன்றைக்கு மட்டும் கடவுள் என் மகள் வழியாக ‘நான் உன்னை மிகவும் அன்பு செய்கின்றேன்’ என்று சொல்லவில்லை என்றால், என்றைக்கோ நான் தற்கொலை செய்து இறந்திருப்பேன்”. ஆம், கடவுள் எர்னஸ்டைன் ஸ்கூமெனை மட்டும் அல்ல, நம் ஒவ்வொருவரையும் அன்பு செய்கின்றார்,
பாஸ்கா காலத்தின் ஆறாம் ஞாயிற்றுக்கிழமையான இன்று நாம் படிக்கக்கேட்ட வாசகங்கள் கடவுள் நம்மீது கொண்டிருக்கின்ற அன்பையும், நாம் ஒருவர் மற்றவரிடம் எத்தகைய அன்பு கொண்டிருக்க வேண்டும் என்பதை நமக்கு எடுத்துக்கூறுகின்றன. நாம் அதனைக் குறித்து இப்போது சிந்தித்துப் பார்ப்போம். இன்றைய நற்செய்தியில் இயேசு கூறுகின்றார் “என் தந்தை என்மீது அன்புகொண்டுள்ளது போல நானும் உங்கள்மீது அன்பு கொண்டுள்ளேன்” என்று. தந்தையாய் கடவுள் இயேசுவின் மீதுகொண்ட அன்பை வார்த்தைகளால் விவரித்துச் சொல்லமுடியாது. ஏனென்றால், இயேசு தந்தையாம் கடவுளுக்கு அன்பார்ந்த மகனாக இருந்திருக்கின்றார் என்று விவிலியம் நமக்குச் சான்று பகர்கின்றது (மத் 17:5). அப்படியென்றால் தந்தைக் கடவுள் இயேசுவின்மீது எத்தகைய அன்புகொண்டிருந்தாரோ, அத்தகைய அன்பை இயேசு நம்மீது கொண்டிருக்கின்றார் என்பதுதான் உண்மை.
இயேசு நம்மீதுகொண்ட அன்பு எத்தகையது என்று இப்போது பார்ப்போம். முதலாவதாக, இயேசு நம்மீது கொண்ட அன்பு ஒரு நண்பன் இன்னொரு உயிர் நண்பன்மீது கொள்ளும் அன்பிற்கு இணையானது ஆம், இயேசு எல்லாம் வல்லவர், தமதிருத்துவத்தின் இரண்டாம் ஆள். அதையெல்லாம் அவர் கணக்கில் கொள்ளாமல், தாழ்நிலையில் இருக்கின்ற நம்மீது அன்புகொள்கின்றார், அன்பு கொள்வதோடு மட்டுமல்லாமல், நம்மைத் தன் நண்பராகக் கருதி நமக்காக தன்னுடைய உயிரையும் தர முன்வருபவராகவும் இருக்கின்றார். இதன்மூலம் அவருடைய அன்பு எத்துணை உயர்ந்தது என்பதை நாம் உணர்ந்துகொள்ளலாம்.
இரண்டாவதாக இயேசுவின் அன்பு பாரபட்சம் இல்லாத அன்பாக இருக்கின்றது. இயேசு ‘இவர் யூதர் அதனால் இவரை அன்பு செய்வேன் என்றோ, அல்லது அவர் புறவினத்தார், அதனால் அவருக்கு என்னுடைய அன்பு கிடையாது’ என்று இருக்கவில்லை, மாறாக அவர் எல்லாரையும் அன்பு செய்தார். அதுதான் அவருடைய அன்பாக இருந்தது. திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில் ஆண்டவர் புறவினத்தாராகிய கொர்னலேயு வழியாக செயல்படுகின்றார். அப்போது திருத்தூதர்களின் தலைவராகிய பேதுரு, “கடவுள் ஆள் பார்த்து செயல்படுவதில்லை என்பதை நான் உண்மையாகவே உணர்கின்றேன்” என்கின்றார். இந்த நிகழ்விற்கு முன்பு பேதுரு, ‘இயேசு யூதர்களுக்குத்தான்’ என்று நினைத்திருந்தார். ஆனால் இந்த நிகழ்வுக்குப் பின் அவருடைய பார்வையில் மாற்றம் வருகின்றது. ஆகவே, இயேசு எல்லா மனிதர்கள் வழியாகவும் செயல்படுகின்றார், அவருடைய அன்பு எல்லாருக்கும் உண்டு, அவருடைய அன்பில் பாரபட்சம் இல்லை என்பதை நாம் மிகத் தெளிவாக அறிந்துகொள்ளவேண்டும்.
மூன்றாவதாக இயேசுவின் அன்பு மன்னிக்கின்ற அன்பாக இருக்கின்றது. விவிலியத்தில் வருகின்ற பல நிகழ்வுகள் அவருடைய மன்னிக்கும் அன்பிற்கு சான்றாக இருக்கின்றது. தன்னைச் சிலுவையில் அறைந்து சித்ரவதை செய்தவர்களுக்காக தந்தையிடம் ‘தந்தையே இவர்களை மன்னியும்’ என்று சொல்லி ஜெபிப்பதன் வழியாக, இயேசு தன்னுடைய மன்னிக்கும் அன்பினை வெளிப்டுத்துகின்றார்.
இவ்வாறு ஓர் உயிர் நண்பனைப் போன்று நம்மீது அன்பு காட்டும், பாரபட்சமில்லாமல், மன்னிக்கின்ற அன்பினைப் நம்மீது பொழியும் இயேசுவைப் போன்று நாம் நம்மோடு வாழக்கூடியவர்கள்மீது அன்பு காட்டுகின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். பல நேரங்களில் நாம் நம் அருகில் வாழ்பவர்கள்மீதே அன்பு காட்டாமல், கண்டும் காணாத வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருக்கின்றோம், இந்நிலை மாறவேண்டும். நாம் ஒவ்வொருவரும் இயேசு நம்மை அன்பு செய்ததைப் போன்று ஒருவர் மற்றவரை அன்பு செய்யவேண்டும்.
இயேசு நம்மை அன்பு செய்ததுபோன்று ஒருவர் மற்றவரை அன்புசெய்கின்றபோது இறைவன் நமக்கு எத்தகைய கைம்மாறு தருவார் என்பதை இன்றைய இரண்டாம் வாசகம் சுட்டிக்கட்டத் தவறவில்லை. “அன்பு செலுத்தும் அனைவரும் கடவுளிடமிருந்து பிறந்தவர்கள்; அவர்கள் கடவுளை அறிந்துள்ளார்கள்” என்கிறார் தூய யோவான். ஆம். நாம் அன்பு செலுத்தும்போது கடவுளை அறிந்தவர்களாக மட்டுமல்லாமல், கடவுளின் மக்களாகின்றோம்.
இந்த இடத்தில் தூய அகுஸ்தினார் உண்மையான அன்பு என்பதற்கு கூறுகின்ற விளக்கத்தினை நம்முடைய சிந்தனைக்கு உட்படுத்திப் பார்ப்போம். “அன்புக்குக் கைகள் உண்டு, அவை அழுவோரின் கண்ணீர் துடைப்பதாக இருக்கும்; அன்புக்குக் கால்கள் அவை அவலநிலையில் இருப்போருக்கு உதவிட விரைவதாக இருக்கும். அன்புக்குக் கண்கள் உண்டு; அவை அல்லல்படுவோர்மீது பரிவு கொள்வதாய் இருக்கும்; அன்புக்கு காதுகள் உண்டு. அவை அண்டிவருவோரின் குறைகள் கேட்பதாய் இருக்கும். அன்பிற்கு இதயம் உண்டு. அது அயலானுக்காகவும், அடுத்திருப்பவருக்காக துடிப்பதாக இருக்கும்” என்று அவர் கூறுவார். ஆம், உண்மையான அன்பு என்பது வெறும் சொல்லல்ல, அது செயல்.
ஆகவே, இயேசுவின் வழியில் நடக்கும் நாம், அவரைப் போன்று ஒருவர் மற்றவரை அன்பு செய்வோம், எல்லாருக்கும் இரங்குவோம், அதன்வழியாக இறைவனின் அன்பு மக்களாக வாழ்வோம்.


No comments:

Post a Comment