Friday 13 April 2018

பாஸ்கா கால 3-ஆம் ஞாயிறு

பாஸ்கா கால 3-ஆம் ஞாயிறு 


இன்றைய வாசகங்கள்
திப 3:13-15, 17-19; 1 யோவா 2:1-5; லூக் 24:35-48


மகிழ்ச்சியூட்டும்  மறையுரைகள்


குடந்தை ஆயர் அந்தோனிசாமி
ஆண்டவரை அறிந்துகொள்வோம்.


சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன் அமெரிக்க நாட்டிலே நடந்த ஓர் உண்மை நிகழ்ச்சி. உலகப் புகழ்பெற்ற மாபெரும் நயாகரா நீர்வீழ்ச்சி! அதன் மீது கயிறு ஒன்று கட்டப்பட்டது. அதன் நீளம் ஆயிரத்து நூறு அடிகள். கையிலே எந்தக் கம்பும் இல்லாமல் அக்கயிற்றின் மீது பிரான்ஸ் நாட்டு நிபுணர் பிளாண்டைன் என்பவர் நடந்து காட்டினார்.

அவர் நடந்து சென்றதைப் பார்க்க பெரிய கூட்டம்! அந்தக் கூட்டத்தைப் பார்த்து பிளாண்டைன், "உங்களில் யாராவது முன்வந்தால், அவர்களை நான் என் தோள் மீது சுமந்துகொண்டு இந்தக் கயிற்றின் மீது நடந்து காட்டுகின்றேன்” என்றார். ஹாரி கால்கார்டு என்பவர் முன்வந்தார். ஹாரி கால்கார்டைச் சுமந்து கொண்டு பிளாண்டைன் கயிற்றின் மீது நடக்கத் துவங்கினார். கயிறு ஆடத்துவங்கியது. ஹாரி கால்கார்டின் மனத்துக்குள் அச்சம் புகுந்தது: கீழே பார்த்தார்.

பயணத்தைத் துவங்குவதற்கு முன் கயிற்றின் மறுபக்கம் போய் சேரும்வரை கீழே பார்க்கக்கூடாது என்று பிளாண்டைன் ஹாரி கால்கார்டை எச்சரித்திருந்தார். அதை மறந்து ஹாரி கால்கார்டு கீழே பார்த்தார். அவர் கண்கள் முன்னே சீறிப்பாய்ந்து கீழே விழுந்து கொண்டிருந்த மாபெரும் ஆறு! அவர் பயங்கரமான பள்ளத்தாக்கிற்குள், கற்பாறைகள் மீது விழுந்து கொண்டிருந்த தண்ணீரைப் பார்த்தார். அவர் நெஞ்சம் படபடத்தது, உடல் நடுங்கியது.

அப்போது பிளாண்டைன் தம் தோள் மீது சுமந்து சென்றவரிடம், கீழே பார்க்காதே! பார்த்தால் உன்னைக் கீழே போட்டுவிடுவேன் என்றார். அதன் பிறகு சுமக்கப்பட்டவர் கீழே பார்ப்பாரா? கீழே பார்க்கவில்லை ! மேலே பார்த்தார். அவரது அச்சம் அவரைவிட்டு அகன்றது ; நடுக்கம், குழப்பம், மயக்கம் அனைத்தும் மறைந்து போயின! வெற்றிகரமாக பிளாண்டைன் கயிறின் மறுபக்கத்தை அடைந்தார்.

இன்று நம் நடுவே உயிர்த்திருக்கும் இயேசு நம் ஒவ்வொருவரையும் பார்த்து : "உங்களை நான் சுமந்து செல்கின்றேன்! நீங்கள் என் தோள் மீது இருக்கின்றீர்கள். என் மீது நீங்களிருக்கும்போது உங்கள் பாவப் பள்ளத்தாக்குகளை, பயங்கரக் குற்றங்களை, ஆறாய்ப் பெருக்கெடுத்து ஓடும் அவமானச் செயல்களைப் பார்க்காதீர்கள். மேலே பாருங்கள். அன்பும், அருளும் மிக்க என் விண்ணகத் தந்தையைப் பாருங்கள். இரக்கமே உருவான அவரிடம் உங்களுக்காகப் பரிந்து பேசுகின்றேன் (இரண்டாம் வாசகம்). அவர் ஒருபோதும் உங்களை உதறித் தள்ளமாட்டார்" என்கின்றார்.

இயேசுவும் (நற்செய்தி), அவருடைய சீடர்களும் (முதல் வாசகம்) நம்மிடம் எதிர்பார்ப்பது மனமாற்றம் ! அவர்கள் விரும்பும் மனமாற்றத்தை நாம் அடைய ஓர் அருமையான வழி விண்ணகத் தந்தையை நம்பிக்கையோடு நோக்குவதாகும்.

இறைவனைப் பார்க்கும்போது அவரின் மூன்று முக்கியமான குணங்களை நமது மனக்கண் முன்னால் நிறுத்திக்கொள்வது நல்லது :
1, கடவுளின் பாசம்: நாம் கடவுளின் உருவிலே படைக்கப்பட்டவர்கள் (தொநூ 1:27]. ஆகவே அவர் நம்மை ஒருபோதும் வெறுப்பதில்லை (எசா 49: 15-16).
2. கடவுளின் ஒப்பந்தம்: "இஸ்ரயேல்! முடிவில்லாக் காலத்திற்கும் உன்னோடு நான் மண ஒப்பந்தம் செய்து கொள்வேன்; நேர்மையிலும் நீதியிலும் பேரன்பிலும் உன்னோடு மண ஒப்பந்தம் செய்து கொள்வேன். மாறாத அன்புடன் உன்னோடு மலர் ஒப்பந்தம் செய்துகொள்வேன்; ஆண்டவராம் என்னை நீயும் அறிந்து கொள்வாய்" (ஓசே 2:19-20) என்கின்றார் நம் இறைவன்.
3. கடவுளின் பொறுமை : "ஆண்டவர் ... உங்களுக்காகப் பொறுமையோடிருக்கின்றார். யாரும் அழிந்து போகாமல், எல்லாரும் மனம் மாற வேண்டுமென விரும்புகின்றார்” (2 பேது 3:9) என்கின்றார் புனித பேதுரு.

மேலும் அறிவோம் :
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார் (குறள் : 3). 

பொருள் : அன்பால் இறைவனை நினைந்து போற்றுபவர் உள்ளமாகிய தாமரையில் வீற்றிருப்பவன் இறைவன். அந்த இறைவன் திருவடிகளைப் பின்பற்றி, நல்ல நெறியில் செல்வோர் பூவுலகில் நெடுங்காலம் புகழுடன் வாழ்வர்.

உயிர்ப்பின் சாட்சிகள்

கல்லறைக்கு அப்பால்

அருள்பணி இ.லூர்துராஜ்


1941 ஜனவரித் திங்கள். ஒருநாள் இங்கிலாந்து நாட்டுக் கடலில் சென்று கொண்டிருந்த கப்பலை ஆர்த்தெழுந்த புயற்காற்று அலைக் கழித்தது. இரவு நேரம், கப்பலை இருள் கவ்வியது. கப்பல் புயற்காற்றில் அலைமோத பொருட்கள் அனைத்தும் வெளியில் நாலாபக்கங்களிலும் வீசி எறியப்பட்டன. தங்கள் உயிரைக் காப்பாற்ற பயணிகள் பாய்மரக் கம்பத்தோடு தங்களைப் பிணைத்துக் கொண்டார்கள். பிணைத்துக் கொண்டபோது உடலில் காயம் அடைந்தார்கள். உடலில் காயம் பட்டாலும், இரத்தம் கசிந்தாலும், பாய்மரத்தோடு பிணைத்துக் கொண்டால் உயிர் பிழைப்போம் என்ற உறுதியான நம்பிக்கை இருந்தது.

பொழுதும் புலர்ந்தது. புயலும் ஓய்ந்தது. புதுத்தெம்பும் மலர்ந்தது.

திருத்தூதர்கள் வாழ்விலும் இயேசுவின் மரணம் ஒரு சூறாவளியையே கிளப்பிவிட்டது. அந்நேரத்தில் இவர்கள் தங்களை மெசியாவின் பாடுகள் பற்றிய இறைவாக்குக்களோடு பிணைத்துக் கொண்டு இருந்திருந்தால் தங்களுடைய வாழ்வில் அலைக்கழிக்கப்  பட்டிருக்க மாட்டார்கள்.

தம்முடைய சீடர்களுக்குத் தெளிவைத் தந்து நம்பிக்கைக்கு இட்டுச் செல்ல எப்படியெல்லாம் முயற்சிக்கிறார் உயிர்த்த இயேசு! கலங்கிய உள்ளங்களுக்கு அமைதி அளிக்கிறார்: "உங்களுக்கு அமைதி உரித்தாகுக என்று அவர்களை வாழ்த்தினார்" (லூக்.24:36). பல்வேறு வழிகளில் அவர்களுடைய நம்பிக்கைக்கு வலுவூட்டுகிறார்: "நானேதான். என்னைத் தொட்டுப் பாருங்கள். எனக்கு எலும்பும் சதையும் இருப்பதைக் காண்கிறீர்களே, இவை ஆவிக்குக் கிடையாதே என்று அவர்களிடம் கூறினார்" (லூக்.24:39) எம்மாவு சீடர்கள் போல, இறைவார்த்தை அவர்களது மனக் கண்களைத் திறக்கிறது: “அப்போது மறைநூலைப் புரிந்து கொள்ளுமாறு அவர்களுடைய மனக்கண்களைத் திறந்தார்” (லூக்.24:45) சீடர்களுடைய பணியை, பொறுப்பை நினைவூட்டுகிறார்: "மெசியா துன்புற்று இறந்து மூன்றாம் நாள் உயிர்த்தெழ வேண்டும் என்றும் பாவமன்னிப்புப் பெற மனம் மாறுங்கள். என எருசலேம் தொடங்கி அனைத்து நாடுகளிலும் அவருடைய பெயரால் பறைசாற்றப்படவேண்டும்... இவற்றுக்கு நீங்கள் சாட்சிகள்" (லூக்.24:46-48)

இயேசுவின் சீடர்கள் அவரது உயிர்ப்புக்குச் சாட்சிகள்! எனவேதான் தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்ட பேதுரு வீறுகொண்டு வீரியத்தோடு முழங்குகிறார்: “வாழ்வுக்கு ஊற்றானவரை நீங்கள் கொன்று விட்டீர்கள். ஆனால், கடவுள் இறந்த அவரை உயிரோடு எழுப்பினார். இதற்கு நாங்கள் சாட்சிகள்" (தி.ப.3:15)

இயேசுவின் உயிர்ப்பில் இரண்டு கோணங்கள் உண்டு.
1. இயேசுவின் உயிர்ப்பு ஒரு வரலாற்று நிகழ்வு என்பது. இது கல்லறைக் காவலர்களுக்குக் கூடத் தெரியும்.
2. இயேசுவின் உயிர்ப்பு மனிதகுல மீட்பு என்பது. இது அந்த நிகழ்ச்சியின் உட்பொருள். அதைத் திருத்தூதர்கள் மட்டுமே அனுபவ அறிவாகப் பெற்றனர். எனவேதான் அவர்கள் சாட்சிகள்.
உயிர்ப்பின் சாட்சிகள் என்பவர்கள் இயேசு உயிர்த்தார் என்பதைச் செய்தியாகச் சொல்பவர்கள் அல்ல. இயேசுவை மீட்பராக ஏற்றுக் கொண்டவர்கள். உயிர்த்த இயேசு உயிர்ப்பின் ஆற்றலைத் தம்மோடும், தம் வழியாகப் பிறரோடும் பகிர்ந்து கொள்கிறார் என்பதை உணர்ந்தவர்கள்.

உலகக் கண்ணோட்டத்தில் சாட்சி என்பவர் தான் கண்டதும் கேட்டதும் உண்மை என்று உறுதிமொழி கொடுப்பவர். ஆனால் விவிலியப் பார்வையில் தான் கண்டதற்கும் கேட்டதற்கும் தன்னையே அர்ப்பணிப்பவரே சாட்சி. கடந்த கால நிகழ்வாக அல்ல, இன்றைய எதார்த்தமாக வெளிப்பட வேண்டும் இயேசுவின் உயிர்ப்பு. கடந்த காலத்தைக் காட்டியே எந்தச் சமயமும் காலந்தள்ள முடியாது. அப்படி யென்றால் என்றோ ஒருநாள் சாவை வென்று கல்லறையினின்று இயேசு உயிர்த்தெழுந்தார் என்பதற்கு அல்ல, இன்று என் இதயக் குகையில் இயேசு எப்படி உயிரோட்டத்தோடு இயங்குகிறார் என்பதற்கு நான் சாட்சி. இயேசு பாவத்தை வென்று உயிர்த்தெழுந்தார் என்பதற்கல்ல, 

அவர் என் வாழ்வில் பாவத்தின் சக்திகளை வென்றுயிர்த்தார் என்பதற்கு நான் சாட்சி. உயிர்ப்பில் இயேசுவுக்கு என்ன நிகழ்ந்தது என்பதல்ல, உயிர்ப்பால் சீடர்களுக்கு என்ன நேர்ந்தது என்பதே சாட்சியத்திற்கான அடித்தளம். இயேசுவின் உயிர்ப்பால் மனிதன் பெறும் விடுதலை, காணும் மாற்றம், வாழ்க்கைத் திருப்பம் இவைதாம் நாம் சாட்சியா, எதிர் சாட்சியா என்பதை உணர்த்தும்.

இயேசு இயக்கம் பரவ உயிர்த்த இயேசுவின் சாட்சிகளாக நாம் திகழவேண்டியது தேவை. அதற்காக எங்கோ ஓர் இடறல், எவரோருவர் எதிர்சாட்சி என்பதால் இயேசுவைப் பற்றி அறிந்திருந்தும் அவரோடு இணைய மறுப்பது எந்த வகையில் நியாயம்? நாட்டின் தந்தை vப் போற்றப்படும் அண்ணல் காந்தி சொன்னார், “நான் கிறிஸ்துவை நேசிக்கிறேன், ஆனால் கிறிஸ்தவர்களை வெறுக்கிறேன்” என்று.
தனக்கு ஆசை இருந்தும் கிறிஸ்தவச் சமயத்தைத் தழுவத் தடையாக இருந்ததாம். கிறிஸ்தவர்கள் கிறிஸ்துவைப் போல் வாழ வேண்டியவர்கள் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அடையாளங்களாக அமையப் பெற்றவை என்றைக்கும் உண்மைப் பொருளுக்குப் பதிலாக அமைய முடியாது. "அந்த நிலாவைத் தான் என் கையிலே புடிச்சேன்” என்று தண்ணீரில் நிழலாய்ப் படிந்த நிலவைக் கையிலே தாங்கிப் பாடினாளே, அது உண்மையான நிலவாக முடியுமா? அதுபோல அறிவை வளர்த்துக் கொள்ளப் பலமுறை விவிலியத்தைப் படிக்கலாம். ஆனால் படித்தபின் அந்தக் கருத்து சூப்பர் என்று சொல்லிவிட்டு, அதில் உள்ள உண்மையை எதிர்கொள்ள, ஏற்றுக் கொள்ள மறுப்பவரை என்ன வென்பது?

"இயேசுவே இறைமகனாகிய மெசியா என நீங்கள் நம்புவதற் காகவும், நம்பி அவர் பெயரால் வாழ்வு பெறுவதற்காகவே இந்நூலில் உள்ளவை எழுதப் பெற்றுள்ளன'' (யோவான் 20:31) வாழ்வு தரும்படியாக வாழ்வுக்கு உயிர்த்தெழுந்த கிறிஸ்து உண்மையான இறைமகன் என்பது அவரது உயிர்ப்பில்தான் தெளிவாகிறது. இந்த வரலாற்று உண்மையை ஏற்றுக் கொள்ள, கிறிஸ்தவன் சரியில்லை என்று சொல்வதில் அர்த்தம் இல்லை. இந்தச் சிந்தனை, கிறிஸ்தவன் வாழுகிற தவறான வாழ்க்கைக் கான சப்பைக் கட்டு அல்ல!



மறைமொட்டுக்கள்
அருள்பணி இருதயராஜ்


இரண்டுபேர் கிணற்றில் குதித்தனர், அவர்களில் ஒருவர் தண்ணீரில் மூழ்கி இறந்து விட்டார்; மற்றவரோ தண்ணீர் மேல் மிதந்தார். காரணம் என்ன? தண்ணீரில் மூழ்கி இறந்தவர் தலைக்கனம் பிடித்தவர், தண்ணீர்மேல் மிதந்தவர் மர மண்டையர்.

மெசியா பாடுபட்டு, சிலுவையில் இறந்து, உயிர்த்தெழுந்து உலகை மீட்க வேண்டும் என்னும் கடவுளின் மீட்புத் திட்டத்தைப் பரிசேயர்கள் புரிந்து கொள்ளவில்லை; ஏனெனில் அவர்கள் தலைக்கனம் பிடித்தவர்கள். இயேசுவின் சீடர்களும் புரிந்து கொள்ள வில்லை; ஏனெனில் அவர்கள் மரமண்டையினர். உண்மையில், உயிர்த்த ஆண்டவர் எம்மாவுக்குச் சென்றுகொண்டிருந்த இரு சீடர்களையும் 'அறிவிலிகளே, மந்த உள்ளத்தினரே' என்று கடித்துகொண்டார். (லூக் 24:25).

இன்றைய நற்செய்தியில் உயிர்த்த இயேசுவைக் கண்ட சீடர்கள் திகிலும் அச்சமும் கொண்டவர்களாய். ஏதோ ஓர் ஆவியைக் காண்பதாக நினைத்தனர். இயேசுவோ, "நான்தான்" என்றுகூறி, அவர்கள் கண்டது ஓர் ஆவியல்ல, மாறாக எலும்பும் தசையும் கொண்ட, ஊனுடல் எடுத்த அதே நாசரேத்து இயேசு என்பதை எண்பித்தார்.

கடவுள் ஒருவருக்குத்தோன்றி, "நான் தான் கடவுள்" என்று கூறியபோது, அம்மனிதர், "நீங்கள் கடவுள் என்பதை எண்பிக்க அடையாள அட்டை காட்டுங்கள்" என்று கேட்டாராம்.

உயிர்த்த ஆண்டவர் தம் சீடர்களுக்குக் காட்டிய அடையாள அட்டை என்ன? "என் கைகளையும் கால்களையும் பாருங்கள், என்னைத் தொட்டுப்பாருங்கள். எனக்கு எலும்பும் தசையும் இருப்பதைக் காண்கிறீர்களே. இவை ஆவிக்குக் கிடையாதே” என்றார் (லூக் 24:39).

'என் முகத்தைப் பாருங்கள்' என்று இயேசு கூறாமல், தமது கைகளிலும் கால்களிலும் ஆணிகளால் ஏற்பட்டத் தழும்பைப் பார்க்கும்படி கேட்கிறார். மகிமையுடன் உயிர்த்த இயேசு பாடுகளின் தழும்புகளுடன் உயிர்த்தெழுந்தார் என்பதை நாம் ஒருபோதும் மறக்கமுடியாது, வீர மரணம் அடைந்த அதே இயேசு விழுப்புண்களுடன் உயிர்த்தெழுந்தார்,

சிலுவையில் அறையப்பட்ட 'வரலாற்று இயேசுவும்' (Jesus of 
history), மாட்சியுடன் உயிர்த்தெழுந்த விசுவாச இயேசுவும் (Jesus of faith) ஒரே ஆள் தான் என்பதை ஐயத்திற்கு இடமின்றி எண்பிக்கிறார் நற்செய்தியாளர் லூக்கா, எனவேதான், உயிர்த்த இயேசு சீடர்களுக்கு முன்பாக வேகவைத்த மீனை உண்டார் என அவர் குறிப்பிட்டுள்ளார் . (லூக் 24:42-43). இயேசுவின் உயிர்ப்பு வரலாற்றிற்கு அப்பாற்பட்டது என்றாலும்கூட, அது உண்மை நிகழ்வு ஆகும்.

இன்றைய முதல் வாசகத்தில் திருத்தூதர் பேதுரு இயேசு உண்மையிலே உயிர்த்தார் எனச் சான்று பகர்கிறார் (திப 3:13-15). திருத்தூதர் யோவானும், "தொடக்க முதல் இருந்த வாழ்வு அளிக்கும் வாக்கை நாங்கள் கேட்டோம்; கண்ணால் கண்டோம், கையால் தொட்டுணர்ந்தோம்" என்கிறார் (1யோவா 1:1). எனவே திருத்தாதர்கள் இயேசுவைக் கண்டு, கேட்டு அவருடன் உண்டு. உற்று உணர்ந்தனர், அவர்கள் தாங்கள் கண்டதையும் கேட்டதையும் தான் (திப 4:20) நமக்கு அறிவித்துள்ளனர். அவர்களுடைய சாட்சியத்தை ஏற்று, நிலைவாழ்வும் நிறைமகிழ்ச்சியும் அடைய நாம் அழைக்கப்பட்டுள்ளோம்.
இயேசு உயிர்த்தெழுந்தது மண்ணாக வாழ்வுக்குத் திரும்புவதற்காக அன்று, மாறாக விண்ணக மகிமையில் நுழைவதற்காகவே. அவர் விண்ணகத் தூயகத்தில் அமைந்து விட்டார். (எபி 9:24), அவ்வாறு அவர் விண்ணகம் செல்லுமுன், மறைநூலைச் சரியாகப் புரிந்து கொள்ளும் வண்ணம் தம் சீடர்களின் மனக்கண்களைத் திறந்தார். அவர்கள் மீது தூய ஆவியைப் பொழியப் போவதாக வாக்களித்தார், "பாவமன்னிப்புப் பெற மனம் மாறுங்கள்' என்று அனைத்துலக மக்களுக்கும் போதிக்கும்படி  போரித்தார் (லூக் 24:4549).

தூய ஆவியாரின் வல்லமையுடன், மறைநூலை மையமாகக் கொண்டு, அனைத்து நாட்டு மக்களுக்கும் 'மனமாற்றத்தின் நற்செய்தியை அறிவிப்பது திருச்சபையின் கடமையும் உரிமையுமாகும். இக்கடமையை ஆற்ற, விண்ணகத்தில் கடவுளின் வலப்பக்கம் அமர்ந்து நமக்காகப் பரிந்துபேசும் கிறிஸ்து (உரோ 8:34), உலகு முடியும் வரை எந்நாளும் நம்மோடு இருக்கிறார் (மத் 28:20) என்பதை நாம் உணர்ந்து வாழ்கிறோமா?

'நாயினும் கடையேன்', அதாவது 'நாயை விட நான் கேடுகெட்டவன்' என்ற தம் நாட்டு ஞானிகள் கூறுவர். ஏனெனில், நாயானது தனது தலைவர் மாறுவேடத்தில் வந்தாலும், தனது மோப்ப சக்தியால் அவரை அடையாளம் கண்டுகொள்ளும் ஆனால், கடவுள் பல்வேறு வடிவங்களில் வரும்போது அவரை அடையாளம் கண்டு கொள்ளும் ஆற்றல் மனிதருக்கு இல்லையே! எனவே, அவர்கள் நாயினும் கேடு கெட்டவர்கள் என வருந்துகின்றனர் ஞானிகள்.

உயிர்த்த இயேசு சீடர்களுக்கு வேற்றுருவில் (மாற் 16:12) தோன்றினார். ஆனால், எம்மாவுக்குச் சென்ற இரு சீடர்கள் அவரை அடையாளம் கண்டுகொள்ளவில்லை (லூக் 24:18). மகதலா மரியாவோ அவரைத் தோட்டக்காரர் என நினைத்தார் (யோவா 20:15).

திபேரியாக் கடல் அருகே அவர் தோன்றியபோது சீடர்கள் அவரை அறியவில்லை (யோவா 21:4).
இன்றும் இயேசு நம் வாழ்வில் பல்வேறு நிகழ்வுகளில், பல்வேறு வடிவங்களில் தோன்றி, "நான்தான்" என்கிறார். நாமே அவரை அடையாளம் கண்டு கொள்ளாதவாறு நமது பயஉணர்வு, பகைமை உணர்வு, தாழ்வு மனப்பான்மை, குற்ற உணர்வு. தன்னலம், ஆணவம், முன் சார்பு எண்ணங்கள் போன்றவை நமது விசுவாசப் பார்வையை மறைக்கின்றன.

இயேசுவின் இரண்டாம் வருகைவரை, அவரை மறைநூலிலும் அருளடையாளங்களிலும் அப்பம் பிடுவதிலும் இன்னும் சிறப்பாக ஏழை எளிய மக்களிலும் நமது இன்பதுன்பங்களிலும் கவலை கண்ணீரிலும் ஏக்கங்கள் ஏமாற்றத்திலும் அடையாளம் கண்டு கொள்ளப்பழகிக் கொள்வோம்,

அன்றாட வாழ்வும் ஓர் அருளடையாளமே!


No comments:

Post a Comment