Tuesday 24 April 2018

பாஸ்கா காலம் 5-ஆம் ஞாயிறு

பாஸ்கா காலம் 5-ஆம் ஞாயிறு
திப 9:26-31; 1யோவா 3:18-24; யோவா 15:1-8

 

மறையுரை மொட்டுக்கள் – அருள்பணி இருதயராஜ்


ஓர் ஊரில் விவசாயி ஒருவர் வேளாண்மையில் தலைகீழ் புரட்சியை ஏற்படுத்த விரும்பினார் வெங்காயத்தை  நறுமணமிக்க வாசனைப் பொருளாக மாற்ற நினைத்தார். எனவே கற்பூரத்தினால் பாத்திகட்டி, கஸ்தூரியை உரமாகப்போட்டு, பன்னீரைப் பாய்ச்சி வெங்காயத்தை நட்டார். வெங்காயம் தனக்குரிய நாற்றத்தை இழந்து விட்டு, கற்பூரம், கஸ்தூரி, பன்னீர் ஆகியவற்றின் வாசனைகளை ஈர்த்து ஒருவாசனைப் பொருளாக அது உருவெடுக்கும் என்று கனவுகண்டார். வெங்காயம் நன்றாக உருண்டு, திரண்டு வளர்ந்தது. ஆனால், அதைப்பிடுங்கி முகர்ந்து பார்த்தபோது, அதில் கற்பூரத்தின் வாசனையோ கஸ்தூரியின் வாசனையோ பன்னீரின் வாசனையோ கடுகளவும் காணப்பட வில்லை, மாறாக, வெங்காயத்தின் இயல்பான நாற்றம் இம்மியளவும் குறையவில்லை. 'சென்மப் புத்தியைச் செருப்பால் அடித்தாலும் போகாது' என்ற பழமொழி உண்மையானது.

கடவுளால் தெரிந்து கொள்ளப்பட்ட இஸ்ரயேல் மக்களுக்குக் கடவுள் எவ்வளவோ செய்தும் அவர்களது திமிர்பிடித்த குணம் சிறிதளவும் மாறவில்லை , இந்த அவலநிலையைக் கடவுள் திராட்சைத் தோட்டக் கவிதை வாயிலாக இறைவாக்கினர் எசாயா நூலில் எடுத்துரைக்கிறார். ஒருவர் தனது திராட்சைத் தோட்டத்தை நன்றாகப் பண்படுத்தி, நல்ல இனத் திராட்சைக் கொடியை நட்டு, அது நற்கனிகளைத் தரும் என்று எதிர்பார்த்தார், ஆனால் திராட்சைக் கொடியோ காட்டுக் கனிகளைக் கொடுத்தன. இஸ்ரயேல் மக்கள்தான் அத்திராட்சைத் தோட்டம், கடவுள் அவர்களிடம் எதிர்பார்த்த கனிகள் நீதியும் நேர்மையும்; ஆனால் அவர்கள் கொடுத்த கனிகளோ இரத்தப்பழியும் முறைப்பாடு(எசா 5:1-7).

இப்பின்னணியில் நாம் இன்றைய நற்செய்திக்கு விளக்கம் காணவேண்டும். இஸ்ரயேல் மக்கள் உண்மையான திராட்சைக் கொடி அல்ல. இயேசு, “நானே உண்மையான திராட்சைச்செடி" என்கிறார். (யோவா 15:1). அவர் தான் கடவுளுடைய விருப்பத்தை நிறைவேற்றி, மீட்பின் கனியை வழங்கினார், இயேசுவின் சீடர்கள் அவரில் நிலைத்திருந்து, அவரோடு இணைந்திருந்து நற்கனி தரவேண்டும். அவரை விட்டுப் பிரிந்து அவர்களால் ஒன்றும் செய்ய இயலாது.

இயேசுவின் சீடர்களாகிய நாம் அவருடைய அன்பில் நிலைத்திருந்து, அவருடைய வார்த்தைகள் நமக்குள் நிலைத்திருந்து மிகுந்த கனிதர வேண்டும். அக்கனி நிலைத்திருக்க வேண்டும். இவ்வாறு நாம் கடவுளை மாட்சிமைப்படுத்த வேண்டும் என்பதே இயேசுவின் விருப்பமாகும்.

நாம் தரவேண்டிய கனியோ அன்பின் கனியாகும். “நீங்கள் ஒருவர் மற்றவரிடம் அன்பு கொள்ள வேண்டும் என்பதே எள் கட்டளை” (யோவா 15:17). இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் யோவான் கூறுவது போல, நாம் இயேசுவில் நம்பிக்கை வைத்து, அவருடைய அன்புக் கட்டளையைக் கடைப்பிடித்தால் நாம் கடவுளோடு இணைந்து வாழ முடியும், கடவுளும் நம்மோடு இணைந்திருப்பார் (1 யோவா 3:23-24).

நாம் இயேசுவோடும் இயேசு நம்மோடும் நாம் விண்ணகப் புனிதர்களுடனும் ஒருவர் மற்றவருடனும் இணைந்திருப்பது தான் 'புனிதர்களின் தோழமை' என்னும் கோட்பாடாகும். திராட்சைக் கொடி உருவகமானது புனிதர்களின் தோழமைக்கு இறையியல் அடிப்படையாகும். திராட்சைக் கொடியின் உயிர்தான் அதன் எல்லாக் கிளைகளிலும் உள்ளது. எனவே நாமனைவரும் கிறிஸ்துவோடு இணைந்து ஒரே திருச்சபையின் உறுப்பினர்கள். நாம்! இறைமக்கள் சமுதாயத்தின் உடன் குடிமக்கள். கடவுளின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்" (எபே 2:19), எனலே மனிதநேய அடிப்படையில் மட்டுமல்ல, புனிதர்களுடைய தோழமையின் அடிப்படையிலும் ஒருவர் மற்றவர்க்கு உதவிசெய்ய அழைக்கப்பட்டிருக்கிறோம். "எல்லாருக்கும். சிறப்பாக, நம்பிக்கைக் கொண்டோரின் குடும்பத்தினருக்கும் நன்மை செய்ய முன் வருவோம்" {கலா 6:10).

மகிழ்ச்சியாக வாழ்வதற்கு வழி என்ன என்பதை அன்னைத் தெரசா பின்வருமாறு கூறியுள்ளார்; "மெளனத்தின் கனி செபம்; செபத்தின் கனி அன்பு; அன்பின் கனி சேவை; சேவையின் கனி மகிழ்ச்சி." அழகான, ஆழமான வாழ்க்கை நெறி!

தாயுமானவரும் பிறரன்புப் பணியில்தான் இன்பநிலை அடங்கியுள்ளது எனக்குறிப்பிட்டுள்ளார்.

“அன்பர் பணிசெய்ய என்னை ஆளாக்கி விட்டுவிட்டால்
இன்பநிலைதானே வந்து எய்தும் பராபரமே."
“பெறுவதைவிடதருவதே இன்பம்"  (திப 20:25)

 பிறர்க்குக் கொடுத்துக் கொடுத்து இன்பம் பெறத் தெரியாத சுல்நெஞ்சம் உடையவர்கள், தமது உடமையை வைத்து வைத்து இறுதியில் இழந்து விடுவர் என எச்சரிக்கிறார் வள்ளுவர்,
”கத்துலக்கும் இன்பம் அறியார்கொல் தாம் உடமை
வைத்து இழக்கும் வன் கணவர்” (குறள் 228)

அன்பு இல்லாமல் பிறர்க்குக் கொடுக்கமுடியும். ஆனால் கொடுக்காமல் அன்பு செய்ய முடியாது. எனவேதான் அன்பே உருவான கடவுள் நம்வாழ்வுக்குத் தேவையான அனைத்தையும் கொடுப்பதோடு, நமது மீட்புக்காகத் தமது ஒரே மகனையும் கொடுத்தார் (யோவா 3:18) அம்மகன் தம்மையே நமக்காகப் பலியாக்கித் தமது உடலையும் இரத்தத்தையும் நமக்குப் பிட்டுக் கொடுத்தார், பிழிந்து கொடுத்தார்.

”பசுவின்பால் முழுவதும் கன்றிற்கில்லை;
பூவின் நறுமணம் முழுவதும் சோலைக்கில்லை ,
நெற்கதிர் முழுவதும் வயலுக்கில்லை,
குளத்துநீர் முழுவதும் குளத்திற்கில்லை ,
மரத்தின் கனி முழுவதும் மரத்திற்கில்லை,
யாழின் இசை முழுவதும் யாழிற்கில்லை”
இவ்வாறு இயற்கையிலே எல்லாமே தனக்காக மட்டும் பயன்படாது பிறர்க்காகப் பயன்படும்போது, நாம் மட்டும் நமக்காகவே வாழ்வது முறையா?

பிறரிடம் வாங்கி வாங்கி வாழ்ந்தார் என்ற நிலைமாறி, பிறர்க்குக் கொடுத்துக் கொடுத்துச் செத்தார் என்ற நிலையை அடைவோமாக. நாளை அல்ல, இன்றே அன்பென்னும் நற்கனி தருவோம், "நாம் சொல்லிலும் பேச்சிலும் அல்ல, செயலில் உண்மையான அன்பை விளங்கச் செய்வோம்" (1 யோவா 3:18)



நாம் புல்லாங்குழல் ஆவோம்.

மகிழ்ச்சியூட்டும் மறையுரைகள்.
குடந்தை ஆயர் அந்தோனிசாமி


இன்றைய நற்செய்தியிலே, நீங்கள் என்னுள்ளும் என் வார்த்தைகள் உங்களுள்ளும் நிலைத்திருந்தால் நீங்கள் விரும்பிக் கேட்பதெல்லாம் கிடைக்கும் (யோவா 15:7) என்கின்றார் இயேசு. இயேசுவின் வார்த்தைகளைக் கூட்டி, பெருக்கி, வகுத்து, கழித்துப் பார்த்தால் மூன்றெழுத்து மிஞ்சும். இயேசுவுக்கு மூன்றெழுத்து; அவர் போதித்த வேதத்திற்கும் மூன்றெழுத்து. அந்த மூன்றெழுத்துதான் அன்பு என்னும் மூன்றெழுத்து. இந்த அன்பு நமக்குள்ளிருந்தால் நாம் விரும்பிக் கேட்பதையெல்லாம் அன்பே உருவான கடவுள் (1 யோவா 4:8) நமக்குத் தருவார்.

அன்பு என்றால் என்ன? என்பதற்கு இதோ ஒரு சிறு விளக்கம்.
அப்போது நான் 9-ஆம் வகுப்புப் படித்துக்கொண்டிருந்தேன். ஆண்டுத் தேர்வு எழுதும் நேரம். திடீரென டைஃபாய்ட் காய்ச்சல். படுத்த படுக்கையானேன். 21 நாள்கள். நிலமை மோசமாகிக்கொண்டே சென்றது. ஒரு நாள் இரவு! அது மறக்கமுடியாத இரவு! மணி 12 இருக்கும். என்னால் மூச்சுவிட முடியவில்லை! நான் செத்துவிடுவேனோ என்று பயந்தேன். அஞ்சி, அம்மா என்றேன். உடனே என்னப்பா? என்ற பதில் வந்தது! எல்லாரும் உறங்கிக்கொண்டிருந்தார்கள். ஆனால் என்னுடைய அன்னை மட்டும் உறங்கவில்லை. என் பக்கத்திலேயே படுத்திருந்தார்கள். நான், செத்துவிடுவேனோ என்று பயமாக இருக்கின்றது என்றேன். என் தாயோ, நீ சாகமாட்டாய் பயப்படாதே என்றார்கள்.

அமைதியாக குழந்தை உறங்க தாய் உறங்காமலிருப்பதற்குப் பெயர்தான் அன்பு! அஞ்சுகின்றவர்களைப் பார்த்து, அஞ்சாதே! என்று சொல்வதற்குப் பெயர்தான் அன்பு! ஆறுதல் தேடுகின்றவர்களின் அருகிலிருப்பதற்குப் பெயர்தான் அன்பு!

அச்சப்பட்ட இடையர்களைப் பார்த்து, அஞ்சாதீர்கள் (லூக் 2:10) என்ற வானதூதரைப் போல வாழ முன்வருவதற்குப் பெயர்தான் அன்பு!

தம்மை நோக்கி மன்றாடுகின்றவர் அனைவரின் பக்கத்திலும் இருக்கும் ஆண்டவரைப் போல வாழ முன்வருவதற்குப் பெயர்தான் அன்பு!

யாரால் அன்பு செய்ய முடியும்? ஒரு கோழையால் ஒருபோதும் அன்பு செய்யமுடியாது! அன்பு செய்ய ஆசைப்படுகின்றவர்களுக்கு சவுலிடமும், பர்னபாவிடமும் நின்று நிலவிய துணிச்சல் வேண்டும்.

கடவுளிட மிருந்து நமக்கு வேண்டிய அருளாதாரத்தையும், பொருளாதாரத்தையும் நாம் பெற்று வாழ ஓர் அழகான வழி அன்பு வழி (1 யோவா 3:22-23).

நாம் அன்பினால்
வார்க்கப்பட்ட புல்லாங்குழலாவோம்!
இறைவன் அவரது தெய்வீகக் கீதத்தை
அதன் வழியாக இசைக்கட்டும்!

மேலும் அறிவோம் :
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்(கு)
என்புதோல் போர்த்த உடம்பு (குறள் : 80).

பொருள் : அன்பு நிறைந்த உள்ளத்துடன் இயங்குவதே உயிருடன் கூடிய உடலாகும். அன்பு நெஞ்சம் இல்லாத உடல், உயிரற்ற எலும்புக்கூட்டைத் தோலால் போர்த்திய வெற்றுடல் ஆகும்.

 

சாலையோரம் ஒரு தடாகம்.

கல்லறைக்கு அப்பால்
அருள்பணி இ.லூர்துராஜ்

சாலையோரத்தில் ஒரு தடாகம். தடாகம் முழுவதும் பூத்துக் குலுங்கும் தாமரை மலர்கள். இந்த மலர்களுக்கு உயிர் அளிப்பது எது? ஒளி. உயிர் வளர்ப்பது எது? நீர். ஒருவர் தடாகத்தில் இறங்குகிறார். தண்டோடு இரு மலர்களைக் கொய்கிறார். ஒன்றைத் தண்ணீரிலும் இன்னொன்றைத் தரையிலும் வீசி எறிந்து விட்டுப் போய் விடுகிறார். மறுநாள் அதேவழியில் திரும்பும்போது பார்க்கிறார். தண்ணீரில் போட்ட மலர் அழுகிக் கிடக்கிறது. தரையில் வீசிய மலர் உலர்ந்து கிடக்கிறது. அதை அழுகச் செய்தது எது? நீர்தான். உலரச் செய்தது எது? ஒளி தான். உயிர் அளிக்கும் ஒளியே உலரச் செய்யுமா? உயிர் வளர்க்கும் நீரே அழுகச் செய்யுமா?

தடாகத்தில் வேரூன்றி நிற்கும் போது உயிர் வளர்க்கும் ஒளியே தடாகத்தோடு தொடர்பற்றுப் போகிறபோது மலரை உலரச் செய்கிறது. அதேபோல் உயிர் வளர்க்கும் நீரே, மலரை அழுகச் செய்கிறது. அவ்வாறே இறைவனை நினைப்பதும், இறைவனில் நிலைப்பதும்.

இறைவனை நினைப்பது, இறைவனில் நிலைப்பது என்பதுதான் எவ்வளவு கடினம்! கல்லூரி மாணவன் ஒருவன் இப்படிச் செபிப்பானாம்: "இறைவா, என்னால் உன்னை எங்கே நினைக்க முடிகிறது? தெருவெல்லாம் ஒரே சந்தடி ஆலயத்திற்குள் நுழைந்தாலோ பார்வையை இழுக்கும் பாவையர்!... இந்நிலையில் நான் உன்னை நினைக்கா விட்டால் என்ன, பொருட்படுத்தாதே. ஆனால் நீ மட்டும் என்னை நினைக்கத் தவறாதே".

வறுமையில், பிணியில், வாழ்க்கையின் மாயக் கவர்ச்சியில் கடவுளை நினைப்பது, கடவுளில் நிலைப்பது கடினம்தான். ஆனால் அந்தக் கடவுள் நம்மை நினைத்தால்...

படுக்கையிலிருந்து எழுந்ததும் புனித பிலிப்பு நேரி சொன்ன காலைச் செபம் என்ன தெரியுமா? “இறைவா, உன் கைகள் இன்று முழுவதும் என் தோள் மேல் இருக்கட்டும். இல்லையெனில் நான் உன்னைக் காட்டிக் கொடுத்து விடுவேன்" இது கடவுளுக்கு விடுத்த சவால் அல்ல. தனக்குத்தானே விடுத்துக் கொண்ட எச்சரிக்கை.

'Nothing good without God' என்பார்கள். GOOD என்ற நான்கெழுத்தில் GOD என்ற மூன்றெழுத்தை நீக்கினால் எஞ்சி இருப்பது என்ன? வெறும் '0'.

With Christ you are a hero. Without him just a zero. கிறிஸ்து இன்றி நமது வாழ்க்கை வெறும் சீரோ, சைபர், கூமுட்டை. கிறிஸ்து ஒருவரே மதிப்புள்ளவர். நமக்கு மதிப்பு ஊட்டுபவர். யார் முதலில் என்பதைப் பொருத்தது அது. எத்தனை பூஜ்யங்களை முதலில் அடுக்கிக் கடைசியில் இறைவன் என்ற ஒன்றை வைத்தால் அந்த ஒன்றுக்கு மட்டுமே மதிப்பு. பூஜ்யங்கள் வெறும் பூஜ்யங்களே! முதலில் ஒன்றை வைத்து அடுத்துப் பூஜ்யங்களை அடுக்கினால் ஒவ்வொரு பூஜ்யமும் மதிப்புப் பெறும், அந்த ஒன்றுக்கும் கூட மதிப்பூட்டும் - ஒன்று பத்தாக, ஒன்று நூறாக, ஒன்று ஆயிரமாக, ஒன்று இலட்சமாக, ஒன்று கோடியாக.

பம்பலூனா போரில் காயமுற்று இஞ்ஞாசியார் மருத்துவமனை யில் இருந்தபோது பொழுது போக்குக்காகப் படிக்க வீரர் வரலாறு கேட்டார். கிடைத்ததோ புனிதர் வரலாறு. "இவர்களால் முடிந்தால் என்னால் ஏன் முடியாது?' அப்பொழுது உணர்ந்தார்: “Nothing good without God", இறைவனிலன்றி நன்மையானது எதுவும் இல்லை . எல்லாம் தீமைகளே! இறைவனிலன்றி புனிதமானது எதுவும் இல்லை. எல்லாம் பாவங்களே! இறைவனிலன்றி வீரமானது எதுவும் இல்லை. எல்லாம் கோழைத்தனங்களே! “இறைவனின் அதிமிக மகிமைக்காகத்" தன்னையே அர்ப்பணித்தார். அவர் எழுதிய "மன்ரேசா' என்ற தியான நூலைப் பற்றிப் புனித சலேசியார் சொல்கிறார்: "அந்த நூலில் எத்தனை எழுத்துக்கள் உள்ளனவோ அதற்கும் அதிகமான புனிதர்களை உருவாக்கியுள்ளது".

மனித வாழ்க்கையில் இன்பங்களும் துன்பங்களும் ஒரு நாணயத்தின் இருபக்கங்கள் போல, தவிர்க்க முடியாதவை. இன்பங்கள் சூழும் நேரம் கடவுள் நம்மை அன்பு செய்கிறார் என நினைக்கும் நாம், துன்பங்கள் வந்தால் மட்டும் கடவுள் நம்மை நாம் செய்யாத தவறுகளுக்காகத் தண்டிக்கிறார் என நினைத்து வருந்துகிறோம். திராட்சைக் கொடிக்கு உரமிட்டுத் தண்ணீர் ஊற்றும் போது மட்டுமல்ல, அதைக் கழித்துவிடும் போது கூட அதன் முழுமையான பலனை எதிர்பார்த்துத்தான் அவ்வாறு செய்கிறார். "கனி தரும் அனைத்துக் கிளைகளையும் மிகுந்த கனிதருமாறு கழித்து விடுவார் (யோவான் 15:2). கழிப்பதும் தறிப்பதும் திராட்சைக் கொடியின் நன்மைக்கே, ஆகவே இன்பங்களிலும் துன்பங்களிலும் இறைவன் நம்மைச் சமமாகவே அன்பு செய்கிறார் என்பதை உணர்ந்து இறைவனில் நிலைத்து நற்கனிகள் கொடுப்போம்.

திராட்சைக் கொடி செடியோடு இணைந்திருக்கவும், கனிதரவும் வேண்டும் என்ற இரு கருத்துக்கள் உவமையில் வலியுறுத்தப்படுகின்றன.

கனி தருவது இன்றியமையாதது. "கனிகொடாத கொடிகள் அனைத்தையும் அவர் தறித்து விடுவார் . கொடி கனி தருவதற்குச் செடியோடு இணைந்திருத்தல் வேண்டும். இவ்வாறு கனி தருதல், இணைந்திருத்தல் இரண்டும் முக்கியமானவை. எனினும் கனி தருவதே முதன்மையானது. ஆக, கொடியின் குறிக்கோள் செடியோடு இருப்பதல்ல, மாறாகக் கனி கொடுப்பதே! கிறிஸ்தவச் செயல்பாட்டை முதன்மைப்படுத்தாது, கிறிஸ்தவராய்ப் பெயரளவில் இருப்பதிலே நிறைவு காண்பவர் இயேசுவின் சீடரல்லர்.

கிளைகளாகிய நாம் திராட்சைச் செடியான இயேசுவோடு மூன்று வழிகளில் இணையலாம்.

1. இயேசுவின் பெயரால் ஒன்று கூடும் போது, அவர் நம்மோடு, நம் மத்தியில் இருப்பதாக வாக்களித்திருக்கிறார். "இரண்டு அல்லது மூன்று பேர் என் பெயரின் பொருட்டு எங்கே ஒன்றாகக் கூட்டியிருக்கிறார்களோ, அங்கே அவர்களிடையே நான் இருக்கிறேன்” (மத்-18:20)

2. இயேசுவின் வார்த்தைக்குச் செவி மடுக்கும் போது, நாம் கேட்பதையெல்லாம் தருவதாக வாக்களிக்கிறார். “நீங்கள் என்னுள்ளும் என் வார்த்தைகள் உங்களுள்ளும் நிலைத்திருந்தால் நீங்கள் விரும்பிக் கேட்பதெல்லாம் நடக்கும்" (யோவான் 15:7) காண்க லூக்.10:16.

3. இயேசுவின் திரு உடலையும் தீரு இரத்தத்தையும் பகிர்ந்திடும் போது, "எனது சதையை உண்டு என் இரத்தத்தைக் குடிப்போர் என்னோடு இணைந்திருப்பர். நானும் அவர்களோடு இணைந்திருப்பேன்' (யோவான் 6:56).  நாம் இயேசுவின் மறையுடலின் உறுப்புக்கள். உடலை பிரிந்து உறுப்புக்கள் ஒன்றும் செய்ய இயலாது. அதுபோல் இயேசுவில் இணைந்து நாம் நற்கனிகள் தர வேண்டும் என்பதே தந்தையின் விருப்பம்.





 என்னைவிட்டு பிரிந்து

அருள்பணி ஏசு கருணாநிதி

உயர்ந்த மரம் ஒன்று. அந்த மரத்தில் நிறைய இலைகள் தளிர்த்திருந்தன. எல்லா இலைகளும் காற்றில் சலசலத்துக்கொண்டிருக்க ஒரு இலை மட்டும் சலசலக்காமல் விறைப்பாக நின்றது.
மரம் கேட்டது, 'எல்லாரும் காற்றில் சலசலக்க நீ மட்டும் விறைப்பாக இருப்பதேன்?'
இலை சொன்னது, 'நான் கோபமாக இருக்கிறேன்?'
... 'ஏன் கோபம்?'
... 'எனக்கு ஒரே இடத்தில் இப்படி ஒட்டிக்கொண்டு இருப்பது பிடிக்கவில்லை.'
... 'அப்படியா? நீ ஒட்டிக்கொண்டு இருப்பதுதானே உனக்கு நல்லது'
... 'எனக்கு இப்படி இருக்க விருப்பமே இல்லை'
மரம், 'சரி நீ உனக்கு விருப்பம்போல் செய். இப்போது நான் வேகமாக என்னையே ஆட்டுகிறேன். நீ தனியே பிய்ந்து போவாய். சந்தோஷமாக இரு!'
அப்படியே மரம் வேகமாக ஆட்ட, இந்த இலை மரத்திலிருந்து பிரிந்துவிடுகிறது. அப்படியே ஒய்யாரமாக அது கீழே விழ ஆரம்பித்தது. 'ஆஹா, நான் பறக்கிறேனே!' என்று சொல்லிக்கொண்டு மற்ற இலைகளையும், மரத்தையும் ஏளனமாகப் பார்த்தது. கீழே விழ ஆரம்பித்த இலை சற்று நேரத்தில் தரையைத் தொட்டது. தரையின் மண் உடலில் பட்டவுடன், 'ஐயோ, உடம்பெல்லாம் அழுக்காயிடுச்சே' என்று வருத்தப்பட்டது. சற்று நேரத்தில் இன்னொரு காற்றடிக்க, அது மறுபடியும் பறக்க ஆரம்பித்தது. 'அழுக்கானால் என்ன? நாம்தான் பறக்கிறோமே!' என்று மகிழ்ச்சி கொண்டது. சற்று நேரத்தில் சாலை, மனிதர்களின் மிதி, வாகனங்களின் சுமை, என அனைத்தையும் தாங்கி சாலையில் ஒதுங்கியது. காலையில் சாலையைக் கூட்ட வந்த குப்பை வண்டிக்குள் சிக்கி சில மணி நேரங்களில் நெருப்புக்கு இரையாகியது.

நிற்க.

கடந்த வாரம் ஒரு ஆலயத்தில் திருப்பலி முடிந்து அங்கிருந்த ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தேன். நான் அந்த ஆலயத்தில் அருள்சகோதரராக வார இறுதி பணி செய்திருப்பதால் அவரை அப்போதிருந்தே தெரியும். தன் குடும்பம், வேலை, குழந்தைகள் பற்றி பேச ஆரம்பித்த அவர், 'என் வாழ்க்கை ஓடாத பஸ்சில் ஏறி அமர்ந்துகொண்டு டிக்கெட் எடுப்பது போல இருக்கிறது' என்றார். அவர் பேசிய அந்த நேரத்தில் அவரின் வார்த்தைகள் என்னில் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. ஆனால், மாலையில் வீடு வந்தவுடன் அதைப் பற்றி யோசித்தேன். 'ஓடாத பஸ்சில் ஏறி அமர்ந்து டிக்கெட் எடுப்பது' - பஸ் ஓடாது என்று தெரிந்தும் ஏன் அதில் ஏற வேண்டும்? அப்படி ஓடாது என்று தெரிந்தும் ஏன் டிக்கெட் எடுக்க வேண்டும்? பஸ்சில் ஏறி டிக்கெட் எடுப்பதன் நோக்கமே அதோடு ஓடி இலக்கை அடைவதுதான். அப்படி என்றால் இலக்கை அடைய உதவாத பேருந்தில் ஏறி அமர்வதால் என்ன பயன்? டிக்கெட் எடுப்பதால் யாருக்கு லாபம்?

இப்படி நிறைய கேள்விகள்.

ஆக, இருபது நிமிடம் ஏறி அமர்கின்ற பேருந்தில் நாம் அமர்வதன் நோக்கமே நம் இலக்கை அடைவதுதான். இவ்வாறாக, 'பேருந்தில் ஏறுதல்,' 'இலக்கை அடைதல்' என்னும் இரண்டு நிகழ்வுகள் இங்கே நடந்தேறினால்தான் நாம் வாங்கும் டிக்கெட்டிற்கு மதிப்பு இருக்கிறது. இல்லையா?

'பேருந்தில் ஏறுதல்,' 'இலக்கை அடைதல்' - இந்த இரண்டு வார்த்தைகளை, 'இணைந்திருத்தல்,' 'கனி தருதல்' என்னும் இரண்டு வார்த்தைகளாக நாம் இன்றைய நற்செய்தி வாசகத்தில் படிக்கின்றோம். இயேசு தன்னை திராட்சைக் கொடியாகவும், தன் சீடர்களை அதன் கிளைகளாகவும் உருவகித்துப் பேசுகின்ற இந்த நற்செய்திப் பகுதியை நாம் பலமுறை வாசித்திருக்கின்றோம். பல நேரங்களில் இங்கே 'இணைந்திருத்தல்' என்ற ஒன்றை மட்டுமே நாம் சிந்திக்கின்றோம். ஆனால், அதையும் தாண்டி மற்றொரு பரிமாணம் இருக்கிறது. அதுதான் 'கனி தருதல்.'

'இணைந்திருத்தல்' மற்றும் 'கனிதருதல்' என்னும் சொல்லாடல்களை இன்றைய நற்செய்தியின் பின்புலத்தில் புரிந்துகொள்வோம்:

அ. இணைந்திருத்தல். 'திராட்சைச் செடியொடு அதன் கொடி இணைந்திருப்பதுபோல இணைந்திருக்க வேண்டும்' என்கிறார் இயேசு. 'செடி' - 'கொடி' என்று புதிய மொழிபெயர்ப்பில் இருப்பது குழப்பத்தைத் தருகிறது. ஏனெனில் நம் பேச்சுவழக்கில் 'செடி-கொடி' என்று நாம் சொல்வது இரண்டு வேறுபட்ட தாவர வகைகளைக் குறிக்கிறது. பழைய மொழிபெயர்ப்பில் இருக்கும், 'கொடி-கிளை' சொல்லாடல்தான் தெளிவான பொருளைத் தருகிறது. மேலும், திராட்சை தானாக நின்று வளரும் செடி அல்ல. மாறாக, தூணிலோ, குச்சியிலோ, வேலியிலோ, பந்தலிலோ படரும் ஒரு கொடிதான். திராட்சைக்கொடி என்பது யூதர்களின் காதுகளுக்குப் பரிச்சயமான ஒரு உருவகம். முதல் ஏற்பாட்டில் இஸ்ராயேல் மக்கள் 'யாவே இறைவனின் திராட்சைத் தோட்டம்' என்று அழைக்கப்பட்டனர் (காண். எரே 2:21, எசே 19:10-14, ஒசேயா 10:1, திபா 80:8-19, எசா 27:2-6). ஆக, முதல் ஏற்பாட்டில் யாவே இறைவனுக்கும், இஸ்ராயேல் மக்களுக்குமான உறவைக் குறித்துக்காட்டிய ஒரு உருவகத்தை, இரண்டாம் ஏற்பாட்டில் இயேசுவுக்கும், சீடர்களுக்கும் குறித்துக்காட்டுவதன் வழியாக, இயேசுவை புதிய இறைவன் என்றும், சீடர்களை புதிய இஸ்ரயேல் என்றும் முன்மொழிகின்றார் யோவான் நற்செய்தியாளர். இந்த இணைந்திருத்தல் மேல்நோக்கியும் இருக்க வேண்டும். கீழ் நோக்கியும் இருக்க வேண்டும். செடியோடு இணைகின்ற கொடி மேல்நோக்கி செடியோடும், கீழ்நோக்கி இலைகளோடும் இணைதல் வேண்டும். மேல்நோக்கிய இணைதல் இல்லையென்றால் கொடி காய்ந்துவிடும். கீழ்நோக்கிய இணைதல் இல்லையென்றால் இலைகள் வாடிவிடும். இவ்வாறாக, இயேசுவின் சீடர்கள் இயேசுவோடும், ஒருவர் மற்றவரோடும் இணைந்திருக்க வேண்டும்.


ஆ. கனிதருதல். கனிதராத மரத்தால் யாருக்கும் பலனில்லை. ஒரு மரத்தில் நிறைய கிளைகள் இருந்து அவற்றில் ஒன்றில்கூட கனிகள் இல்லையென்றால் அந்தக் கிளைகள் மரத்திற்குச் சுமையாகவே கருதப்பட்டு காலப்போக்கில் தறித்துவிடப்படும். இணைந்திருப்பதன் நோக்கம் கனிதருதலில் இருக்கின்றது. 'நீங்கள் கனி தந்து என் சீடராய் இருப்பதே என் தந்தைக்கு மாட்சி அளிக்கிறது' என்று சொல்கிறார் இயேசு. ஏனெனில் மரத்தின் கனி மரத்திற்கு மட்டுமல்ல, மரத்தை நட்டவருக்கும், மரத்தின் உரிமையாளருக்கும் பெருமை சேர்க்கிறது. சீடர்கள் எத்தகைய கனிகளைக் கொடுக்க வேண்டும் என்பது பற்றி இயேசு சொல்லவில்லை. சீடர்களின் நல்வாழ்வு, மகிழ்ச்சி, இறைவார்த்தைப் பணி, அமைதி, பொருளாதார முன்னேற்றம், இவை அனைத்துமே இயேசு விரும்பும் கனிகளாக இருக்கலாம்.

'என்னைவிட்டுப் பிரிந்து' உங்களால் இணைந்திருக்கவும் முடியாது, கனிதரவும் முடியாது என்கிறார் இயேசு. இவ்வாறாக, இணைந்திருத்தலுக்கும், கனிதருதலுக்கும் முதற்பொருளாய் இருப்பவர் இயேசுவே.

நாம் ஒருவர் மற்றவரோடு உள்ள தொடர்பு கம்பித் தொடர்பிலிருந்து கம்பியில்லாத் தொடர்பாக இன்ஃப்ரா ரெட், ப்ளுடீத், ஏர், வைஃபை என மாறிக்கொண்டிருக்கிறது. கம்பியில்லாத் தொடர்பும் தொடர்புதான். இன்று கடவுளோடு இணைந்திருப்பதையும், ஒருவர் மற்றவரோடு இணைந்திருப்பதையும் இன்று சில நேரங்களில் சுமையாகப் பார்க்கும் நிலைக்கு வந்துவிட்டோம். செடி கொடியைத் தாங்குவது அதற்கு வலிக்கத்தான் செய்யும். கொடி செடியோடு இணைந்திருப்பதால் அதன் சுதந்திரம் பறிபோய்விட்டதாக அது சில நேரங்களில் நினைக்கும். ஆனால், செடியும், கொடியும் இந்த வலியை ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும்.

இன்று கடவுளோடு நாம் இணைந்திருக்கத் தடையாக இருப்பது எது?

சில நேரங்களில் கடவுள் நம்மைவிட்டுத் தூரமாக இருக்கிறார். அவருக்கும் நமக்குமான இணைப்பை ஏற்படுத்துகின்ற வைஃபை பாஸ்வேர்ட் நமக்குத் தெரியாததுபோல இருக்கிறது. 'அன்பு' என்ற வார்த்தையே நம்மைக் கடவுளோடும் ஒருவர் மற்றவரோடும் இணைக்கிறது என்று சொல்கிறது இன்றைய இரண்டாம் வாசகம் (காண். 1 யோவா 3:18-24): 'ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துபவர் ... கடவுளோடு இணைந்திருக்கிறார். கடவுளும் அவரோடு இணைந்திருக்கிறார்.' அன்பு என்பது மிகப்பெரிய அல்லது மிக அகலமான வார்த்தை. இது நட்பு, கனிவு, பரிவு, துணிவு, பணிவு, கருணை, பாசம், தாராள உள்ளம், பொறுமை, அமைதி என பல சிறுசிறு நிலைகளில் தன்னை வெளிப்படுத்துகிறது.

இவ்வாறாக, இன்று 'என்னைப் பிரிந்து இணைந்திருக்கவும், கனிதரவும் உங்களால் முடியாது' என்று சொல்கின்ற இயேசு அன்பை நமக்கு வாழ்வாக்கிச் சென்றுள்ளார். அந்த வாழ்வையொட்டி நம் வாழ்வை அமைத்துக்கொள்ளுதல் நலம்.

இது சாத்தியமா? என்று கேட்டால், 'சாத்தியம்' என்று விடை தருகிறது இன்றைய முதல் வாசகம் (காண். திப 9:26-31). இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு கடவுளுக்கும் (தந்தைக்கும்) சீடர்களுக்கும் நடுவே நின்று இணைப்பை ஏற்படுத்துகின்றார். அந்த இணைப்பின் விளைவாக சீடர்கள் கனிதருகின்றனர். தந்தையும் மாட்சி பெறுகின்றார். அதே போல இன்றைய முதல் வாசகத்தில் பர்னபா சவுலுக்கும் திருச்சபைக்கும் நடுவே நின்று இணைப்பை ஏற்படுத்துகின்றார்.

பர்னபா.'பர்னபா' என்ற வார்த்தைக்கு இரண்டு அர்த்தங்கள் கொடுக்கலாம். அரமேயத்தில் 'பர் நப்யா' என்று பிரித்தால் 'இறைவாக்கினரின் மகன்' அல்லது 'இறைவாக்கின் மகன்' என்றும், கிரேக்கத்தில் 'ஹ்யோஸ் பராக்ளேசேயுஸ்' எனப் பிரித்தால் 'ஆறுதலின் அல்லது தேற்றரவின் மகன்' என்றும் மொழிபெயர்க்கலாம் (காண். திப 4:36). சைப்பிரசு நாட்டைச் சார்ந்த யோசே என்ற இவரைத்தான் 'பர்னபா' என்று மாற்றுகின்றனர் திருத்தூதர்கள். திப 14:14ல் இவரும் திருத்தூதர் என அழைக்கப்படுகின்றார். பவுலின் தூதுரைப் பயணங்களில் உடனிருந்த உற்ற தோழர் பர்னபா.

பர்னபாவின் ஆளுமை நமக்கு மூன்று விதங்களில் இங்கே வெளிப்படுகிறது:

1. இணைப்புக்கோடு. பர்னபா ஒரு இணைப்புக் கோடு - பவுலுக்கும், மற்ற தூதர்களுக்கும். இணைப்புக் கோடாக இருக்க வேண்டியவர் இரு தரப்பினரையும் அறிந்தவராக இருக்க வேண்டும். அறிமுகம் செய்து வைப்பது ஒரு கலை. எல்லாருக்கும் இது வந்துவிடாது. அறிமுகம் செய்து வைக்க நமக்கு இரண்டு அறிமுகங்கள் தேவை: முதலில் நாம் யாரை அறிமுகம் செய்து வைக்கிறோமோ அவரைப் பற்றி நாம் அறிந்திருக்க வேண்டும். இரண்டு நாம் யாரிடம் அறிமுகம் செய்து வைக்கிறோமோ அவர்களைப் பற்றியும் அறிந்திருக்க வேண்டும். மேலும், இந்த இரண்டு பேருக்கும் இடையே இருக்கின்ற பொதுவான குணம் என்ன என்பதை அறிந்து, இடம், பொருள், ஏவல் உணர்ந்துதான் அறிமுகம் செய்து வைக்க முடியும். சவுலைப் பற்றி மூன்று விடயங்களைச் சொல்கின்றார்: (அ) சவுல் ஆண்டவரைக் கண்டார், (ஆ) ஆண்டவர் அவரோடு பேசினார் ('அவர் ஆண்டவரோடு பேசினார்' என்றும் மொழிபெயர்க்கலாம்), (இ) தமஸ்குவில் நற்செய்தியை அறிவித்தார். ஆக, நீங்கள் இயேசுவைக் கண்டது போல அவரும் கண்டார். நீங்கள் அவரோடு, அல்லது அவர் உங்களோடு உரையாடியது போல இவரோடும் உரையாடினார். உங்களைப் போல இவர் பணியும் செய்கின்றார். ஆக, 'உங்களுக்கு சரி சமமானவர் இவர்' என்று அறிமுகத்தை நிறைவு செய்கின்றார்.

2. நம்பிக்கை. 'ஆண்டவர் பவுலுக்குத் தோன்றினார்' என்பதை நம்புகிறார். ஆச்சர்யமாக இருக்கிறது? கேள்வி கேட்கும் மனம் அல்ல, சரணடையும் மனமே நம்பிக்கையை நம்மில் வளர்க்கும். 'அப்படியா? ஆண்டவரைப் பார்த்தீங்களா? எங்கே? எப்போ? என்ன சொன்னார்?' என்ற எந்த கேள்வியும் இல்லாமல் நம்பும் துணிச்சல் இவருக்கு எங்கிருந்து வந்தது?

3. 'அவர் வளர வேண்டும். நான் குறைய வேண்டும்.' பர்னபாவால் அறிமுகம் செய்யப்பட்ட பவுலே காலப்போக்கில் பர்னபாவைவிட மிக முக்கியத்துவம் பெறுகின்றார். 'உன் வளர்ச்சிக்கு நான்தான் காரணம்' என்று சொல்லிக் காட்டவோ, அல்லது 'அவன் வளர்ந்து விட்டான், நான் அப்படியே இருக்கிறேன்' என்று பவுல் மேல் பொறாமைப்படவோ இல்லை பர்னபா. அடுத்தவரை வளரவிட்டுப் பார்க்கின்றார்.

பர்னபாவின் இந்தப் பண்பால் இன்றைய முதல் வாசகம் தொடர்ந்து, திருச்சபை வளர்ச்சி பெற்றது (திப 9:31) என நிறைவு பெறுகிறது.

இவ்வாறாக, இயேசுவைப்போல நாம் இணைந்திருத்தலும், கனிதருதலும் இயலும் என்பதை நமக்கு முன் பர்னபா என்னும் ஆளுமை வாழ்ந்துகாட்டிவிட்டது.

இறுதியாக, இந்தப் பர்னபாவின் பண்போ, அல்லது இயேசுவின் அன்போ நம்மிடம் இருந்தது என்றால்,

நாமும் அவரோடு இணைந்திருக்கவும், கனிதரவும் முடியும்.

ஏனெனில் அவரைப் பிரிந்து ... அவரைப் பிரிந்தால் வெற்றிடமே!







இறைவனோடு இணைந்திருப்போம், மிகுந்த கனிதருவோம்!

அருள்பணி   மரிய அந்தோனிராஜ்


டைட்டானிக் கப்பலைக் குறித்துச் சொல்லப்படும் மிக முக்கியமான செய்தி. அந்தக் கப்பலை வடிவமைத்த பொறியாளர்கள் ‘டைட்டானிக் கப்பலுக்கு இணையான கப்பல் இந்த உலகத்தில் எங்கும் கிடையாது, இதனை இயேசு கிறிஸ்து நினைத்தாலும்கூட மூழ்கடிக்க முடியாது’ என்ற ஒருவிதமான ஆணவத்தில் வடிவமைத்தார்கள். அதனால் அதன் பக்கவாட்டில் ‘NOT EVEN CHRIST COULD MAKE IT SINK, NO GOD, NO POPE, NEITHER EARTH NOR HEAVEN CAN SWALLOW HER UP’ என்று எழுதி வைத்தார்கள்.
இதனைப் பார்த்த அந்தக் கப்பலில் பணியாற்றிய ஒருசில இறை நம்பிக்கையாளர்கள், “இப்படியெல்லாம் தயவு செய்து எழுதவேண்டாம், இறைவனுக்கு முன்பாக நாமெல்லாம் ஒன்றுமில்லை” என்றெல்லாம் அவர்களிடம் எடுத்துச் சொன்னார்கள். அவர்களோ, அதையெல்லாம் கேட்காமல், “நாம் யாரென்று இந்த உலகத்திற்குக் காட்டுவோம், அதனால் எழுதியது எழுதியதாகவே இருக்கட்டும்” என்று சொல்லி அப்படியே விட்டுவிட்டார்கள்.
குறிப்பட்ட நாளில் டைட்டானிக் கப்பல் கடலில் பயணமானது. தொடக்கத்தில் எல்லாமே நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது. மக்கள் அனைவரும் உலகத்தில் இருக்கும் மிகப்பிரமாண்டமான கப்பலில் பயணிக்கின்றோம் என்ற ஒருவிதமான மமதையோடு பயணம் செய்தார்கள். திடிரென்று கப்பல் பனிப்பாறையின் மீது மோதி மூழ்கத் தொடங்கியது. கப்பல் பனிப்பாறையில் மோதிய பகுதியில்தான் ‘NO GOD NO POPE’ என்று எழுதப்பட்டிருந்தது. ஆம், ‘கடவுளே வேண்டாம், ஏன் கடவுளைவிட நாங்கள் பெரியவர்கள் என்ற ஆணவத்தோடு செயல்பட்டதால், உலகத்திலே மிகப்பெரிய சொகுசுக் கப்பல் என்று மார்தட்டுக்கொண்டு பயணப்பட்ட டைட்டானிக் கப்பல், கடைசியில் பனிப்பாறையில் மோதி கடலுக்குள் மூழ்கும் அவலத்திற்குத் தள்ளப்பட்டது.
‘அவனின்றி ஓர் அணுவும் அசையாது’ என்று சொல்வார்கள். ஆம், ஆண்டவரின் துனையின்று நம்மால் ஒன்றும் செய்ய முடியாது என்பதுதான் யாராலும் மறுக்கமுடியாத உண்மை. பாஸ்கா காலத்தின் ஐந்தாம் ஞாயிறான இன்று நாம் படிக்கக்கேட்ட வாசகங்கள் ‘இணைவனோடு இணைந்திருப்போம், மிகுந்த கனிதருவோம் என்னும் சிந்தனையைத் தருகின்றது. நாம் அதனைக் குறித்து ஆழமாக சிந்தித்துப் பார்ப்போம்.
நற்செய்தி வாசகத்தில் இயேசு கிறிஸ்து கூறுவார், “உண்மையான திராட்சைக் கொடி நானே... நான் உங்களோடு இணைந்திருப்பது போல நீங்களும் என்னோடு இணைந்து இருங்கள். கிளைகள் திரட்சைக் கொடியோடு இணைந்து இருந்தாலன்றித் தானாகக் கனிதர இயலாது. அது போல நீங்களும் என்னோடு இணைந்திருந்தாலன்றிக் கனிதர இயலாது”. ஆம். நாம் மிகுந்த கனிதரவேண்டும் என்றால் இறைவனோடு/ இயேசுவோடு இணைந்திருக்கவேண்டும். இறைவனோடு எந்தெந்த வழிகளில் இணைந்திருக்கலாம் என்று இப்போது சிந்தித்துப் பார்ப்போம்.
இறைவனோடு எப்போதும் இணைந்திருப்பதற்கான முதன்மையான வழி இறைவேண்டல் அல்லது ஜெபம் செய்வது ஆகும். ஆண்டவர் இயேசு சென்ற இடங்களில் எல்லாம் நன்மைகள் பலபுரிந்து, ஆண்டவருடைய வார்த்தையை மிகத் துணிச்சலோடு எடுத்துரைப்பதற்கு மிக முக்கியமான காரணியாக இருந்தது அவர் அனுதினமும் செய்துவந்த ஜெபம்தான் என்று சொன்னால் அது மிகையாகாது. அவர் நாள்முழுவதும் செய்துவந்த பல்வேறு பணிகளுக்கு ஊக்கத்தையும் உத்வேகத்தையும் கொடுத்தது அவர் செய்துவந்த ஜெபம்தான். ஆகையால், நாம் இறைவனோடு இணைந்திருப்பதற்கு எப்போதும் ஜெபம் செய்யக்கூடிய மக்களாக இருக்கவேண்டும்.
இறைவனோடு இணைந்திருப்பதற்கான இரண்டாவது வழி இறைவார்த்தையைக் கேட்டு நடப்பது ஆகும். யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய இரண்டாம் வாசகத்தில், “கடவுளுடைய கட்டளையைக் கடைப்பிடிப்பவர் அவரோடு இணைந்திருக்கின்றார்; கடவுளும் அவரோடு இணைந்திருக்கின்றார்” என்கின்றார். இதுதான் உண்மை. யாராரெல்லாம் கடவுளின் கட்டளையைக் கடைப்பிடித்து வாழ்ந்தார்களோ/ வாழ்கின்றார்களோ அவர்களோடு கடவுள் இருந்தார்/ இருப்பார் என்று உண்மையிலும் உண்மை.
இஸ்ரயேல் மக்கள் கடவுளின் கட்டளையைக் கடைப்பிடித்து வாழ்ந்தபோது அவர்களோடு கடவுள் இருந்தார். என்றைக்கு அவர்கள் கடவுளின் கட்டளையை மறந்து, அதாவது யாவே கடவுளை மறந்துவிட்டு பாகாலை வழிபடத் தொடங்கினார்களோ அன்றைக்கே கடவுள் அவர்களை விட்டுப் பிரிந்து போனார்(?), அதனால் அவர்கள் வேற்று நாட்டவரால் நாடுகடத்தப்பட்டார்கள். ஆகவே, இஸ்ரயேல் மக்கள் கடவுளோடு இருந்தபோது, கடவுள் அவர்களோடு இருந்தார் என்பதையும், அவர்கள் கடவுளை விட்டுப் பிரிந்து சென்றபோது, கடவுள் அவர்களை விட்டுப்போனார் என உறுதியாகச் சொல்லலாம்.
கடவுளோடு ஜெபத்தின் வழியாகவும், அவருடைய கட்டளையைக் கடைப்பிடித்து வாழ்வதன் வழியாகவும் அவரோடு இணைந்திருக்கலாம் என்று சிந்தித்துப் பார்த்த நாம், கடவுளோடு இணைந்திருப்பதால் என்ன நன்மை கிடைக்கின்றது என்று சிந்தித்துப் பார்க்கக் கடமைப்பட்டிருக்கின்றோம். நற்செய்தியில் இயேசு கூறுவார், ‘ஒருவர் என்னுடனும் நான் அவருடனும் இணைந்திருந்தால் அவர் மிகுந்த கனி தருவார்” என்று. ஆம், நாம் கடவுளோடு இணைந்திருக்கின்றபோது நாம் மிகுந்த கனிதருவோம் என்பது ஆழமான உண்மை. நிறையப் புனிதர்கள், இறையடியார்கள் யாவரும் மிகுந்த கனிதரும் வாழ்க்கை வாழ்ந்ததற்குக் காரணம் அவர்கள் கடவுளோடு இணைந்திருந்ததே என்று நாம் உறுதிபடச் சொல்லலாம்.
ஆகவே, இயேசுவின் வழியில் நடக்கும்போது நாம் ஜெபத்தின் வழியாகும், இறைவார்த்தையைக் கேட்டு நடப்பதன் வழியாகவும் இறைவனோடு இணைந்திருப்போம், அதன்வழியாக மிகுந்த கணிதருகின்றவர்களாவோம், இறையருளை நிறைவாய் பெறுவோம்.





 

No comments:

Post a Comment