Thursday 19 April 2018

பாஸ்கா காலம் 4-ஆம் ஞாயிறு


பாஸ்கா காலம் 4-ஆம் ஞாயிறு

இன்றைய வாசகங்கள்

திப 4:8-12; 1யோவா 3:1-2; யோவா 10:11-18


மறையுரை மொட்டுக்கள் - இருதயராஜ்


ஒரு பங்குத் தந்தை தனது பங்கிலே தங்குவதில்லை, ஞாயிறு திருப்பலியை நிறைவேற்றியபின் உடனடியாக 'மோட்டார் சைக்கிளில்' மாயமாக மறைந்து விடுவார். ஒரு ஞாயிறு அன்று திருப்பலி திறைவேற்றிய உடனே "மோட்டார் சைக்களில் வழக்கம் போல் பறந்து சென்ற அவர், ஒரு பெரிய குழியில் விழுந்து விட்டார்; வெளியே வரமுடியாமல் திணறினார். அவ்வழியே சென்ற பங்கு மக்கள், "இவர் அடுத்த ஞாயிற்றுக்கிழமை தான் நமக்குத் தேவைப்படுவார், அதுவரை அவர் இக்குழியிலேயே கிடக்கட்டும்" என்று சொல்லிவிட்டுச் சென்றனர்.

இன்று கத்தோலிக்கத் திருச்சபையிலிருந்து மக்கள் பல்வேறு சபைகளுக்குச் செல்வதற்குப் பல காரணங்கள் கூறுகின்றனர். அக்காரணங்களில் ஒன்று. "பங்குத் தந்தைக்கு மேய்ப்புப்பணி சார்ந்த அக்கறையில்லை, அவர் பங்கில் தங்குவதில்லை, பங்கு மக்களை அவர்களின் வீடுகளுக்குச் சென்று சந்திப்பதில்லை."
இப்பின்னணியில் இன்றைய நற்செய்தியில் நாம் வாசிக்கும் 'நல்லாயன் உவமை” முக்கியத்துவம் பெறுகிறது. பழைய உடன்படிக்கையில், கடவுளுக்கும் இஸ்ரயேல் மக்களுக்கும் இடையே நிலவிய உறவு ஓர் ஆயனுக்கும் அவருடைய ஆடுகளுக்கும் இடையே நிலவிய உறவுக்கு ஒப்பிடப்பட்டுள்ளது (எசா 40:11; எரே 23:3-4; எசே 34:11-16: திபா 23).
நல்லாயனுடைய தனிப்பண்புகள்: “அவர் இரவும் பகலும் தன் ஆடுகளுடன் இருக்கிறார். அவற்றின்மீது அக்கறை கொண்டு, அவற்றின் தேவைகளை நிறைவுசெய்து, அவற்றிற்காகத் தம் உயிரையும் கொடுத்து, அவற்றைக் கொடிய விலங்குகளிடமிருந்து பாதுகாக்கிறார்.”

ஆனால், போலி ஆயர்கள் தங்கள் ஆடுகளை மேய்க்காமல் தங்களையே மேய்த்துக் கொண்ட அவலநிலையில் (எசா 24:7-8). 'என் இதயத்திற்கேற்ற மேய்ப்பர்களை உங்களுக்குக் கொடுப்பேன்' என்று கடவுள் வாக்களித்தார் (எரே 3:15), கடவுளால் வாக்களிக்கப்பட்ட ஒப்புயர்வற்ற ஆயர் இயேசு கிறிஸ்துவே. அவர்தம் ஆடுகள் ஒவ்வொன்றையும் தனிப்பட்ட முறையில் அறிந்து, அன்புசெய்து. அவற்றிற்காகத் தன் இன்னுயிரையும் கையளிக்கிறார். மேலும் அவரது மந்தையைச் சாராத மற்ற ஆடுகளையும் கூட்டிச் சேர்த்து ஒரே மேய்ப்பன் கீழ் ஒரே மந்தையை உருவாக்குகிறார் (யோவா 10:14-16).

நல்லாயன் கிறிஸ்துவைப் பின்பற்றி, திருப்பணியாளர்கள், குறிப்பாக பங்குத்தந்தையர்கள், தங்களுடைய பங்கில் தங்கியிருந்து, பங்குமக்கள் ஒவ்வொருவரையும் தனிப்பட்ட முறையில் அறிந்து, அன்பு செய்து, வீடுகளில் அவர்களைச் சந்தித்து, இயன்ற மட்டும் அவர்களுடைய தேவைகளை நிறைவுசெய்து, அவர்கள் மந்தையை விட்டு விலகாமல் பாதுகாப்பதில் கண்ணும் கருத்துமாய் இருக்க வேண்டும். கட்டாயத்தினாலோ இழிவான ஊதியத்திற்காகவோ பணிபுரியாமல் ஆர்வத்துடன் பணியாற்ற வேண்டும். மக்களை அடக்கி ஆளாமல் மக்களுக்கு எடுத்துக்காட்டாக இருத்தல் அவசியம் (1 பேது 5:2-3).

காணாமற்போன தனது ஒரே ஆட்டைத் தேடிச் சென்றவர், பல இடங்களில் ஆட்டைக் காணாத நிலையில், ஒரு பூங்காவிற்குச் சென்றார். இரு காதலர்கள் இப்பூங்காவில் மெய் மறந்து பேசிக் கொண்டிருந்தனர். காதலன் காதலியிடம், "மானே! உன் முகத்தில் உலகமே தெரிகிறது” என்றான், உடனே ஆட்டைத் தேடிச் சென்றவர் அக்காதலனிடம், "தம்பி, அந்தப் பெண் முகத்தில் உலகமே தெரிஞ்சா, என் ஆடு எங்கே நிற்கிறது? என்று தயவு செய்து சொல்லப்பா' என்றார். இது பழைய கதை என்றாலும், ஓர் ஆயனுக்குத் தன் ஆட்டின் மீது இருக்கவேண்டிய அக்கறையை எடுத்துக்காட்டுகிறது. திருப்பணியாளர்கள் ஆலயத்திற்கு வருகின்றவர்களுக்கு மட்டும் பணிபுரியாமல், ஆலயத்திற்கு வராதவர்களையும் தேடிச் செல்லவேண்டாமா?

திருமேய்ப்பர்கள் தங்கள் ஆடுகளை அக்கறையுடன் கண்காணிக்க வேண்டும், அவ்வாறே ஆடுகளும் தங்களுடைய மேய்ப்பர்களுடைய குரலுக்குச் செவிமடுத்து, மந்தையில் திருட்டுத்தனமாக நுழைந்து ஆடுகளைப் பறித்துக் கொண்டுபோகும் ஓநாய்களான போலிப்போதகர்களிடம் சிக்கிக் கொள்ளாமல் விழிப்பாயிருக்க வேண்டும்,
"ஆண்டவர் என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை " என்னும் 23-ம் திருப்பாவைக் குருக்கள், கன்னியர், பொதுநிலையினர் உண்மையிலேயே இன்று பாட முடியுமா? நமது நல்ல ஆயன் இயேசு கிறிஸ்துவா? அல்லது டி.வி. யா?

23-வது திருப்பாவை இக்காலத்தில் பின்வருமாறு தான் பாடமுடியும்: "டி.வி, என் ஆயன்; ஆகவே எனக்கொரு குறையுமிராது. அது என்னை பஞ்சுமெத்தையில் படுக்கச் செய்கிறது விசுவாச வாழ்விலிருந்து விலகச்செய்கிறது. என் ஆன்மாவைக் கொலை செய்கிறது, சிற்றின்பத்திற்கும் வன்முறைக்கும் அது என்னை அழைத்துச் செல்கிறது. தனிமையைக் கண்டு நான் பயப்படவே மாட்டேன். ஏனெனில் என் டி.வி, என்றும் என்னுடன் இருக்கின்றது. உலக மனப்பான்மையாலும் நுகர்வுப் பொருள் கலாசாரத்தாலும் டிவி, என்னைத் திருநிலைப்படுத்துகிறது. என் பேராசைப் பொங்கிவழிகிறது. சோம்பலும் அறியாமையும் என்னைப் பின்தொடரும். வாழ்நாள் முழுவதும் டி.வியைப் பார்த்த வண்ணம் என் இல்லத்தில் குடியிருப்பேன்."

இது வெறும் கற்பனையல்ல, முழுக்க முழுக்க உண்மை . துறவறத்தாரும் இல்லறத்தாரும் டி.வி.-யின் பிடியில் சிக்கித் தவிக்கின்றனர். டி.வி. நம்மை அடிமைப்படுத்தி, நமது மூளையைச் சலவை செய்து, சுயமாகச் சிந்திக்கும் ஆற்றலைப் பறித்து விட்டது. இப்பேராபத்திலிருந்து நாம் நம்மையும் நம்மைச் சார்ந்திருப்போரையும் காத்துக் கொள்ளவேண்டும்,
'நல்லாயன் ஞாயிறு' என்றழைக்கப்படும் இந்த ஞாயிறு இறை அழைத்தல் நாளாகவும் கொண்டாடப்படுகின்றது. பெரிய திரையிலும் சின்னத்திரையிலும் சிக்கித் தவிக்கும் இன்றைய இளைய சமுதாயம், "என் பின்னே வாருங்கள்; நான் உங்களை மனிதரைப் பிடிப்பவர் ஆக்குவேன்" (மாற் 1:17) என்னும் நல்லாயன் குரலைக் கேட்டு. விசுவாசம் மற்றும் அர்ப்பண உணர்வுடன் அவரைப் பின்பற்றத் துணிச்சலுடன் முன் வரவேண்டும், கடலுக்குத் தேவை 'மீன்வலை' (fishing net), காதலுக்குத் தேவை 'இணையக வலை' (internet), ஆனால் இறை அழைத்தலுக்குத் தேவை 'விசுவாச வலை' (Faith net).
'ஆப்பிள் பெண்ணே நீயாரோ? ஐஸ்க்ரீம் சிலையே நீ யாரோ? உன்னைக்காணும் முன்னே கடவுளே வந்தாலும் தொழமாட்டேன்" எனப்பாடுகிறது திரைப்பட உலகம். "ஆண்டவரே நாங்கள் யாரிடம் செல்வோம்? வாழ்வளிக்கும் வார்த்தைகள் உம்மிடம் தானே உள்ளன" (யோவா 6:68) என்றழைக்கிறது விவிலிய உலகம். முந்தைய உலகம் நிழல் உலகம்; பிந்தைய உலகம் நிஜ உலகம், இன்றைய இளைஞர்கள் நிழல் உலகத்திலிருந்து நிஜ உலகத்திற்கு வருவார்களா?
"இளைஞரே, நீங்கள் வலிமை வாய்ந்தவர்கள், கடவுளின் வார்த்தை உங்களுள் நிலைத்திருக்கிறது. தீயோனை நீங்கள் வென்று விட்டீர்கள்" (1 யோவா 2:14),




கல்லறைக்கு அப்பால்...

அருள்னணி இ.லூர்துராஜ்


குருவுக்கான வரைபடம்


பழைய ஏற்பாட்டில் கடவுள் தன் மக்களோடு செய்து கொண்ட உடன்படிக்கை உறவை மூன்று விதங்களில் பார்க்கலாம்.
1, தந்தை - மக்கள் உறவு 
2. கணவன் - மனைவி உறவு
 3. ஆயன் - மந்தை உறவு
இந்த மூன்று வகை உறவுகளில் ஆயன் - மந்தை உறவு சிறிது அதிக அழுத்தம் பெறுவதை விவிலியத்தில் உணரலாம். (தி.பா.23, எசா.40,  எரேமி.23, எசேக்.34, யோவான் 10)

இந்த அடிப்படையில் இறைமகன் இயேசுவோடு அவரது அடிச்சுவட்டில் திருத்தூதர் வழிமரபினரும் ஆயர்பணி செய்ய அழைக்கப்படுகிறார்கள். அந்த வகையில் இன்று பங்குக் குருக்களும் ஆயர்களாகக் கருதப்படுகிறார்கள்.

இங்கெல்லாம் பணித்தளம் ஒன்றுக்குப் பங்குக்குரு வேண்டுமா? பங்கு மக்களின் தலையெழுத்தோ, பணியேற்கும் குருவின் தலையெழுத்தோ ஆயரின் கையெழுத்தைப் பொறுத்தது.

அமெரிக்காவில் ஒரு பங்கில் அப்படி இல்லையாம். குரு இல்லாத காலியிடத்தை நிரப்ப நேர்ந்தால் மறைமாவட்ட அலுவலகத்திலிருந்து மூன்று நான்கு பெயர்ப் பட்டியலும் அவர்களது தகுதிகள் திறமைகள் பற்றிய விவரங்களும் அனுப்பப்படும். பங்குப் பேரவை அதனை அலசி ஆராயும். வேண்டுமானால் ஒவ்வொருவரையும் அழைத்து நேர்முகப்  பேட்டி காணும். பங்கின் வளர்ச்சிக்கு, மக்களின் ஆன்மிக வாழ்வுக்கு, அவர்கள் என்ன திட்டம் வைத்துள்ளார்கள் என்பதை அறிந்து திருப்தியானால் ஒருவரை மேலிடத்திற்குப் பரிந்துரைக்கும். இல்லை  யென்றால் புதிய பட்டியலைக் கோரும். அப்படி ஒரு முதிர்ச்சியான  செயல்பாடு. ஆனால் அதுவெல்லாம் நமது மண்ணுக்கும் மனநிலைக்கும்  ஒத்துவருமா என்பது வேறு கேள்வி.

இப்படி ஒரு பங்குப் பேரவைக்கு வந்த பட்டியல்களில் உள்ள  எந்தக் குரு பற்றியும் மக்களுக்குத் திருப்தி இல்லை. நெடு நாட்களாக  அங்கு நிரந்தரப் பணியாளர் நியமிக்க முடியாமல் இருந்தது. பேரவைத் தலைவர் பொறுமை இழந்தார். எரிச்சலடைந்தார். ஒருநாள் திடீரென்று பேரவையைக் கூட்டினார். தனக்கு வந்த ஒரு விண்ணப்பத்தைப்
பேரவையில் சமர்ப்பித்துப் படித்தார்.

“பெரு மக்களே, உங்கள் பங்கின் காலியிடத்தில் என்னை ஏற்றுக் கொள்ளும்படி விண்ணப்பிக்கிறேன்.

"எனக்கெனச் சிறப்புத் தகுதிகள் சில உண்டு. நல்ல மறையுரையாளர், நல்ல எழுத்தாளர் என்றெல்லாம் சொல்வார்கள். நல்ல நிர்வாகி என்பவர்களும் உண்டு. நான் சென்ற பல இடங்களிலும் உறுதியான தலைமைப் பண்போடு செயல்பட முனைந்துள்ளேன். எனக்கு வயது ஐம்பதுக்கு மேல். ஒரே இடத்தில் இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு மேல் இருந்ததில்லை. இருந்த இடங்களிலும் என் பணி குழப்பங்களையும் கலவரங்களையும் எழுப்பியதால் வெளியேற நேரிட்டது.

“மூன்று நான்கு முறை நான் சிறைவைக்கப்பட்டேன். நீதி மன்றத்துக்குக் கூடச் சென்றதுண்டு. தற்காப்புக்காக உச்ச நீதி  மன்றத்துக்கே அப்பீல் செய்த வரலாறு உண்டு. என் உடல் நிலையும்  மிகச் சீரானது என்று சொல்வதற்கில்லை. என் உள்ளமோ... ஏதோ ஒன்று முள்போல் குத்திக் கொண்டே இருக்கிறது என்றாலும், இயன்ற வரை நிறையவே உழைக்கிறேன்.

"மற்றொன்றும் மறுப்பதற்கில்லை. பணியாற்றிய இடங்களில் எல்லாம் மதத் தலைமைப் பீடமும் என்னோடு எப்போதும் ஒத்துப் போனதும் இல்லை. புரிந்து கொண்டதும் இல்லை. இதையெல்லாம் அறிந்தும் நீங்கள் என்னைப் பயன்படுத்திக் கொள்ள விரும்பினால், என்னால் முடிந்த அனைத்தையும் அர்ப்பண உணர்வோடு உங்களுக்காகச் செய்வேன் என்று வாக்களிக்கிறேன்..."

விண்ணப்பம் படிக்கப்படும் போதே பலப்பல முணுமுணுப்புக்கள்,கண்டனக் கனைகள், எதிர்க்குரல்கள். "என்ன கிண்டலா? கோர்ட்,சிறை என்று சுற்றுபவனா நமக்குப் பங்குக் குரு? உடலும் சரியில்லை, மனமும் சரியில்லை என்பவனா நமக்குப் பங்குக்குரு? இருந்தஇடமெல்லாம் கலாட்டா, கலவரம் என்கிறான். இங்கேயும் இரண்டு படுத்தவா அந்தக்குரு?...

பொறுமையாக இருந்த தலைவர் அமளி சிறிது ஓய்ந்ததும் நிமிர்ந்து பேசினார்: “நண்பர்களே, விண்ணப்பத்தை இன்னும் படித்து முடிக்கவில்லை. எழுதியவர் யார் என்று கேட்கக்கூட எவரும் நினைக்கவில்லை . அதற்குள் இப்படியா?...” என்றதும் தான் வியப்புடன் யார் அது என்ற கேள்வியை எழுப்பினர்.

“இதை எழுதியவர் ஆனானப்பட்ட திருத்தூதர் பவுல். திருச்சபையின் வரலாற்றிலேயே தனக்கு ஈடாக, இணையாகத் தோன்றிய நற்செய்திப் பணியாளர் யார் என்று சவால் விடும் புரட்சியாளர் பவுல்''.

"புனித பவுலா!” வாயடைத்து நின்றனர். அத்தனை பேரும் தொடர்ந்து பேச ஒன்றும் தோன்றாதவர்களாய்.

நகைச் சுவைக்காகவோ, இப்படியும் நடந்திருக்குமோ என்ற கேள்வியை எழுப்புவதற்காகவோ, கத்தரிக்காயாகட்டும் அல்லது கருவாடாகட்டும், நல்லதா சிறந்ததா என்று சோதித்து வாங்குவது தானே மனித இயல்பு, அதன்படி குறையில்லாத குரு வேண்டும் என்று எதிர்பார்க்கும் மக்களுக்கு அறிவுரையாகவோ இந்தக் கதையைச் சொல்லவில்லை.

குரு என்பவர் யார்? குருத்துவ அழைப்பும் நிலையும் எத்தகையது? அதன் வாழ்வும் பணியும் எத்தகையது? என்பதற்கெல்லாம் ஒரு வரைபடம் வேண்டுமென்றால் அது திருத்தூதர் பவுலின் வரலாறாகத்தான் இருக்கும்.

இயேசு தன்னை ஓர் ஆயனாக வெளிப்படுத்தித் தன்னைப் பற்றிச் சொன்ன வார்த்தைகளை ஒவ்வொரு பங்குக் குருவும் தன்னைப் பற்றிச் சொல்ல முடியுமா? மக்களிடையே இருந்து எடுக்கப்பட்ட மனிதன்தான் குரு. தான் பெற்ற குருத்துவத் திருநிலையால் தன் மனிதத் தன்மையை இழந்து விடுவதில்லை, திடீரென்று சம்மனசாகி விடுவதும் இல்லை என்றெல்லாம் குறைகளுக்குச் சப்பை கட்டி வாழ முடியாது!

நம் தமிழகத்தில் பெரும்பான்மையான பங்குகளில் பங்குக் குருக்களுக்கும் பங்கு மக்களுக்கும் நல்ல உறவு இல்லை என்பது கசப்பான எதார்த்தம். இந்தச் சூழலில் நல்லுறவுக்கான வழி ஒன்றே ஒன்று தான். அது ஒருவர் மற்றவரை அவர் இருப்பது போல் ஏற்றுக் கொள்வதே!

பொறுமையாக இருந்த தலைவர் அமளி சிறிது ஓய்ந்ததும் நிமிர்ந்து பேசினார்: “நண்பர்களே, விண்ணப்பத்தை இன்னும் படித்து முடிக்கவில்லை. எழுதியவர் யார் என்று கேட்கக்கூட எவரும் நினைக்கவில்லை . அதற்குள் இப்படியா?...” என்றதும் தான் வியப்புடன் யார் அது என்ற கேள்வியை எழுப்பினர்.
“இதை எழுதியவர் ஆனானப்பட்ட திருத்தூதர் பவுல். திருச்சபையின் வரலாற்றிலேயே தனக்கு ஈடாக, இணையாகத் தோன்றிய நற்செய்திப் பணியாளர் யார் என்று சவால் விடும் புரட்சியாளர் பவுல்''.
"புனித பவுலா!” வாயடைத்து நின்றனர். அத்தனை பேரும் தொடர்ந்து பேச ஒன்றும் தோன்றாதவர்களாய்.

நகைச் சுவைக்காகவோ, இப்படியும் நடந்திருக்குமோ என்ற கேள்வியை எழுப்புவதற்காகவோ, கத்தரிக்காயாகட்டும் அல்லது கருவாடாகட்டும், நல்லதா சிறந்ததா என்று சோதித்து வாங்குவது தானே மனித இயல்பு, அதன்படி குறையில்லாத குரு வேண்டும் என்று எதிர்பார்க்கும் மக்களுக்கு அறிவுரையாகவோ இந்தக் கதையைச் சொல்லவில்லை,
குரு என்பவர் யார்? குருத்துவ அழைப்பும் நிலையும் எத்தகையது? அதன் வாழ்வும் பணியும் எத்தகையது? என்பதற்கெல்லாம் ஒரு வரைபடம் வேண்டுமென்றால் அது திருத்தூதர் பவுலின் வரலாறாகத்தான் இருக்கும்.
இயேசு தன்னை ஓர் ஆயனாக வெளிப்படுத்தித் தன்னைப் பற்றிச் சொன்ன வார்த்தைகளை ஒவ்வொரு பங்குக் குருவும் தன்னைப் பற்றிச் சொல்ல முடியுமா? மக்களிடையே இருந்து எடுக்கப்பட்ட மனிதன்தான் குரு. தான் பெற்ற குருத்துவத் திருநிலையால் தன் மனிதத் தன்மையை இழந்து விடுவதில்லை, திடீரென்று சம்மனசாகி விடுவதும் இல்லை என்றெல்லாம் குறைகளுக்குச் சப்பை கட்டி வாழ முடியாது!
நம் தமிழகத்தில் பெரும்பான்மையான பங்குகளில் பங்குக் குருக்களுக்கும் பங்கு மக்களுக்கும் நல்ல உறவு இல்லை என்பது கசப்பான எதார்த்தம். இந்தச் சூழலில் நல்லுறவுக்கான வழி ஒன்றே ஒன்று தான். அது ஒருவர் மற்றவரை அவர் இருப்பது போல் ஏற்றுக் கொள்வதே!


 


மகிழ்சிசியூட்டும் மறையுறைகள்

குடந்தை ஆயர் அந்தோனிசாமி


நாம் மீட்புப் பெற என்ன செய்யவேண்டும்?


சென் மாஸ்டர் சோயென் ஷாக்கு அறுபத்தோரு வயதுவரை இந்த உலகத்திலே வாழ்ந்தார். இவர் வாழ்ந்த காலத்திட்டத்தில் அவர் மிகவும் அரிய போதனைகளை இந்த உலகுக்குத் தந்தார். இவருடைய வாழ்க்கையிலே நடந்த நிகழ்ச்சி இது!

சோயென் சிறுவனாக இருந்தபோது அவருடைய சென் மாஸ்டர் வெளியே சென்றிருந்தபோது கால்களை நீட்டி, பகலில் படுத்துத் தூங்கிவிட்டார்: சுமார் மூன்று மணி நேரம் சென்ற பிறகு அவர் திடீரென கண்விழித்தபோது அவருடைய சென்மாஸ்டர் உள்ளே நுழைவதைப் பார்த்துவிட்டார். என்னை மன்னித்துக்கொள் என்னை மன்னித்துக்கொள் என்று மெல்லக்கூறிவாறு, யாரோ ஒரு புகழ்பெற்ற விருந்தாளியைக் கடந்துசெல்லுவது, போல, சொயென் மீது கால்கள் படாதவாறு மிகவும் எக்சரிக்கையாக சென்மாஸ்டர் சோயெனைத் தாண்டி உள்ளே சென்றார்.

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு சோயென் பகலில் தூங்குவதே இல்லை. ஒரு சென்மாஸ்டாரின் அன்பு ஒரு சீடனை பகல் தூக்கத்திலிருந்து விடுவித்ததை மீட்டதை இங்கே காண்கின்றேன்.

நல்ல ஆயன் நானே. நல்ல ஆயர் ஆடுகளுக்கந்தத் தம் உயிரைக் கொடுப்பார். அவைகளுக்காக எனது உயிரைக் கொடுக்கின்றேன்" (யோவான்10:11,15) என்று சொன்னபடியே இயேசு அவரது உயிரை உலக மக்களுக்குக் கொடுத்தார். இப்படி உயிரைக் கொடுத்ததின் வழியாக ஒரு மனிதன் எந்த் அளவுக்கு இந்த உலகத்தை அன்பு செய்ய வேண்டும் என்பத்தை உலகுக்குக் கட்டிக்காட்டி, உலகத்தை இயேசு சுயநலத்திலிருந்து மீட்டார்.

நாம் உண்மையிலேயே கடவுளின் மக்களாக (இரண்டாம் வாசகம்) வாழ விரும்பினால், இயேசுவின் அன்பு நிறைந்த பிறப்பு, இறப்பு, உயிர்ப்பு இவற்றின் உள் பொருளை உணர்ந்து. சுயநலத்திலிருந்தும் அது பெற்றெடுக்கும் பாவங்களிலிருந்தும் நம்மையே நாம் விடுவித்துக்கொண்டு மீட்கப்பட்டவர்களாக வாழ முன்வர வேண்டும்.

நாம் மீட்பு பெறுவதற்காகவே (முதல் வாசகம்) இயேசு அவருடைய வாழ்க்கையை ஒரு முன் உதாரணமாக்கினார். இந்த உண்மையைப் உணர்ந்து, செயல்பட நமக்குத் தேவையான ஞானத்தைக் கேட்டு இறைவனிடம் மன்றாடுவோம்.

இறைவன் இயேசுவின் ஆழமான அன்பைப் பார்த்துப் பாராட்டுகின்ற பாராட்டாளர்களாக மட்டுமல்ல, இயேசுவின் வாழ்க்கையைப் படிக்கும் மாணவர்களாக மட்டுமல்ல, இயேசுவின் தியாகத்தை அறிக்கையிடும் நற்செய்தியாளர்களாக மட்டுமல்ல; இயேசுவின் சொல்லாலும், செயலாலும் தொடப்பட்டவர்களாய் விடுதலை அடைந்தவர்களாய் மீட்கப்பட்டவர்களாய் வாழ எங்களுக்கு அருள்தாரும். ஆமென்.

மேலும் அறிவோம்
ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல தாமுடைமை
வைத்திழக்கும் வன்க ணவர் (குறள்: 228)

பொருள் : வறியவர்க்கு வேண்டியவற்றைக் கொடுத்து. இவர் மகிழ்வதைக் கண்டு அருளுடையவர் அடையும் இன்பம் பெரிதாகும். அத்தகைய இன்பத்தைப் பற்றித் தெரியாதவரே தாம் சேர்த்த பொருளை ஏழை எளியோருக்கு வழங்காது. பிறர் கொண்டு போக இழக்கும் இரக்கம் அற்றவர் ஆவர்.



No comments:

Post a Comment