Wednesday 6 March 2019

தவக் காலம் முதல் ஞாயிறு - ஆண்டு 3


தவக் காலம் முதல் ஞாயிறு - ஆண்டு 3

இணைச்சட்டம் 26:4-10; உரோமையர் 10:8-13; லூக்கா 4:1-13



தவக்காலம் இறை மனித உறவைப் புதுப்பிக்கும் காலம். சுயநலத்தால், ஆணவத்தால், அதிகாரத்தால் தேங்கிய குட்டை போன்ற வாழ்வை ஓடும் நீரோடையாக மாற்றும் காலம். நாற்பது ஆண்டுகள் இஸ்ரயேல் மக்கள் பாலைவனச் சோதனைகளைக் கடந்து சுதந்திர பூமியில் கால் பதித்தார்கள். இயேசு நாற்பது நாட்களில் தனக்கு வந்த சோதனைகளை வென்று சாதனை படைத்தார். விவிலியத்தில் நாற்பது என்பது புனிதமான எண்ணாகும். நோவாவின் காலத்தில் நாற்பது நாட்கள் இரவும் பகலும் மழை பெய்தது. இஸ்ரயேல் மக்கள் நாற்பது ஆண்டுகள் பாலைவனத்தில் பயணம் செய்தார்கள் (இ.ச. 8:2). மோசே நாற்பது நாட்கள் சீனாய் மலையில் தங்கி இருந்தார் (வி.ப. 24:18). எலியா நாற்பது நாட்கள் உண்ணாமல் பயணம் செய்தார் (1 அரச 19:8). இயேசுவின் பாலைவன வாழ்வும் நாற்பது நாட்கள். தவக்கால 40 நாட்களும் நம்மையே சுய ஆய்வு செய்து, சோதனைகளை வென்று இறைவனின் அருளைப் பெறும் காலம். இக்காலம் நம்மையே புதுப்பிக்க அழைக்கிறது. எனவேதான் புனித பவுல் அடிகளார், இதுவே தகுந்த காலம் என்று கூறுகிறார் (2 கொரி. 2). நில், கவனி, செல் என்ற எச்சரிக்கை ஆன்மீக வாழ்விலும் தவக்கால தொடக்கத்திற்கும் பொருந்தும் இயேசுவுக்கு மூன்று சோதனைகள் வந்தன: 1. உணவைக் குறுக்கு வழியில் பெற சோதனை 2. அதிசயங்களைப் பார்க்கச் சோதனை 3. அடிமைச் சுகம் காணச் சோதனை இயேசு சோதிக்கப்பட்டார். ஆனால் வீழ்ச்சியடையவில்லை. இயேசு பாலைவன சோதனையை வென்ற பிறகு தூய ஆவியின் துணையோடு போதிக்கும் பணியை, குணப்படுத்தும் பணியை, வழிநடத்தும் பணியை, அநீதியை எதிர்க்கும் பணியைத் தொடர கலிலேயாவில் காலடி பதித்தார் (லூக். 4:14).

பணக்காரன் ஒருவன் ஒரு துறவியிடம் சென்று, எனக்கு நிறையப் பணமிருந்தும் நிம்மதியே இல்லை. எந்த வேலையைத் தொடங்கினாலும் சோதனையாகவே இருக்கிறது. என்ன காரணம்? என்று கேட்டான். துறவியானவர் பதில் சொல்லாமல், அருகில் இருந்த ஒரு குழந்தையை அழைத்து ஒரு ஆப்பிள் பழத்தைக் கொடுத்தார். வலது கையால் வாங்கிக் கொண்டது. இன்னொரு பழத்தைக் கொடுத்தார். அதை இடது கையால் வாங்கிக் கொண்டது. மூன்றாவது பழத்தையும் கொடுத்தார். முதல் இரண்டு பழங்களையும் நெஞ்சிலே அணைத்துக் கொண்டு மூன்றாவது பழத்தை வாங்க முயற்சி செய்தது. ஆனால் பழம் நழுவி கீழே விழுந்தது. குழந்தை அழுதது. இரண்டு பழங்கள் போதும் என்று நினைத்திருந்தால் இப்போது அந்தக் குழந்தை அழத் தேவையில்லை. அதுபோல, போதும் என்ற மனமிருந்தால் நிம்மதி கிடைக்கும். சோதனை இருக்காது என்றார் துறவி. இயேசுவின் மூன்று சோதனைகளும் நமக்குச் சிறந்த பாடமாக அமைகிறது. பாவத்தைத் தவிர்க்கவும், மாயக்கவர்ச்சிகளில் மயங்காமல் இருக்கவும், இயேசு நமக்கு வழிகாட்டுகிறார். சோதனையின்போது செபம், தவம் இவைகளின் வழியாக இயேசு மனவலிமையைப் பெற்றார். இன்றையச் சூழலில் நமக்கு இலக்குத் தெளிவாக இருந்தால் வெற்றி உறுதியாகும். சோதனை நேரத்தில் பேச வேண்டிய நேரத்தில் இயேசு பேசினார். அமைதி காக்க வேண்டிய நேரத்தில் அமைதி காத்தார். இதைத்தான் நாமும் இயேசுவிடம் கற்றுக் கொள்ள வேண்டும். சோதனை நேரத்தில் நாம் கடவுளோடு இருக்கிறோமா? என்பது முக்கியம். இயேசு தனது பணி வாழ்வில் தெளிவாகச் செயல்பட்டார். பணம், பதவி, புகழ் ஒரு மனிதனை ஆட்டிப்படைக்கும் சக்திகளாகும். இவைகளை இயேசு தூய ஆவியானவரின் துணையால் வென்றார். நாமும் நமது வாழ்வில் சோதனை நேரங்களில் நிதானமாகச் செயல்பட்டு சாதனை படைப்போம்.






வருமுன் காப்போம் 

இன்றைய நற்செய்தி இயேசு அலகையால் பாலைநிலத்தில் சோதிக்கப்பட்டதை நமக்குச் சுட்டிக்காட்டுகின்றது.
அலகை என்றால் யார் என்பதற்கு யோபு என்னும் நூலில் விளக்கமொன்றை நாம் காண்கின்றோம் (யோபு 1:1-12).


இதோ அந்த விளக்கம்!
ஊசு என்ற நாட்டில் யோபு என்ற மனிதர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் ஒரு நீதிமான். கடவுளுக்கு அஞ்சி தீயதை விலக்கி வாழ்ந்தவர். அவருக்கு ஏழு புதல்வரும், மூன்று புதல்வியரும் இருந்தனர். அவர் ஒரு பெரிய பணக்காரர்.
என் பிள்ளைகள் ஒரு வேளை பாவம் செய்து, உள்ளத்தில் கடவுளைத் தூற்றியிருக்கக்கூடும் என்று யோபு நினைத்து, தினந்தோறும் காலையில் எழுந்து அவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப எல்லாருக்காகவும் எரிபலியை ஒப்புக்கொடுப்பார்.


ஒரு நாள் அலகை, அதாவது சாத்தான் கடவுள் முன்னால் நின்றான். கடவுள் சாத்தனைப் பார்த்து, எங்கிருந்து வருகின்றாய்? என்றார். அதற்கு சாத்தான், நான் உலகத்தைச் சுற்றிப்பார்த்துவிட்டு வருகின்றேன் என்றான். கடவுள் சாத்தானிடம், என் ஊழியன் யோபுவைப் பார்த்தாயா? அவனைப் போல மாசற்றவனும், நேர்மையானவனும், கடவுளுக்கு அஞ்சி , தீமையானதை விலக்கி நடப்பவனும் மண்ணுலகில் ஒருவனும் இல்லை என்றார்.
சாத்தானோ கடவுளைப் பார்த்து, நீர் அவனைப் பாதுகாப்பதால்தான் அவன் நீதிமானாய் இருக்கின்றான். அவனுக்குரியவற்றின் மீது நீர் கை வைத்தால் அவன் உன்னைப் பழிப்பான் என்றான்.


கடவுளோ, இதோ! அவனுக்குரியவையெல்லாம் உன் கையிலே; அவன் மீது மட்டும் கை வைக்காதே என்றார்.

சாத்தான் யோபுவை சோதித்தான். யோபுவுக்கு சொந்தமானவை அனைத்தையும் அழித்தான். ஆனால் யோபு எந்த சோதனைக்குள்ளும் விழவில்லை! சாத்தான் திரும்பவும் ஆண்டவர் முன்னால் தோன்றி, யோபுவின் மீது கைவைக்க உத்தரவு கேட்டான். ஆண்டவர் சாத்தானிடம், இதோ அவன் உன் கையிலே! அவன் உயிரை மட்டும் விட்டுவை (யோபு 2:6) என்றார்.


சாத்தான் யோபுவை உள்ளங்கால் முதல் உச்சந்தலைவரை எரியும் புண்களல் வாட்டி வதைத்தான் (யோபு 2:7). ஆனால் யோபு கடவுளுக்கு எதிராக எதுவும் பேசவில்லை !


யோபு நூலின் வழியாக, சாத்தான் என்பவன் மனிதர்களை கடவுளின் மதிப்பீடுகளுக்கு எதிராகச் (யோபு 1:8) செயல்படத் தூண்டுகின்றவன் (யோபு 2:3) என்பது நமக்குப் புரிகின்றது.


இன்றைய நற்செய்தியில் சாத்தான் அவனது தீய செயல்பாட்டின்படி வாழ இயேசுவை அழைக்கின்றான்.


முதல் சோதனை சுயநலத்திற்கு இடம் கொடுக்கவும், இரண்டாவது சோதனை மண்ணாசைக்கு இடம் கொடுக்கவும், மூன்றாவது சோதனை தற்புகழ்ச்சிக்கு இடம் கொடுக்கவும், நான்காவது சோதனை (லூக் 4:13, 22:42அ) விண்ணகத் தந்தையின் விருப்பத்திற்கு எதிராக செயல்படவும் இயேசுவை அழைக்கின்றன.


ஆனால் இயேசு எல்லா சோதனைகளையும் வென்றார். அவரின் வெற்றிக்குக் காரணமாய் இருந்தது யார்? தூய ஆவியார்! கடவுளின் வல்லமையாகத் திகழ்பவர் தூய ஆவியார் (லூக் 4:1).


சாத்தானை அப்பாலே போ என்று சொல்லும் அளவுக்கு நமக்கு ஆற்றலைத் தரும் வல்லமை மிக்கவர் தூய ஆவியார்.


இன்றைய முதல் வாசகம் கூறுவது போல நமது ஆவி ஏக்கத்தோடு தூய ஆவியாரை நாளும் பொழுதும் தேட வேண்டும் (எசா 26:9 அ) ; தூய ஆவியாரை நோக்கி, வாரும் தூய ஆவியாரே என்று மன்றாட வேண்டும். இன்றைய இரண்டாம் வாசகத்தில் புனித பவுலடிகளார் கூறுவது போல கடவுளை நோக்கி மன்றாடும் யாவருக்கும் அவர் அளவற்ற நலன்களைப் பொழிகின்றார் (உரோ 10:12ஆ).

மேலும் அறிவோம் :
வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும் (குறள் : 435).


பொருள் : குற்றம் எதுவும் வருவதற்கு முன்பே அது வாராதவாறு பாதுகாத்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு காத்துக்கொள்ளாதவரின் வாழ்வு, நெருப்பின் முன்னால் வைக்கப்பட்ட வைக்கோற்போர் போன்று அழிந்து ஒழியும்!



திருமணமாகாத ஒருவர் திருமணமான ஒருவரிடம், "கடவுள் தரும் சோதனைக்கும் மனைவி தரும் சோதனைக்கும் உள்ள வேறுபாடு என்ன?” என்று கேட்டதற்கு அவர், “மனைவியே கடவுள் தந்த சோதனைதானே” என்று பதிலளித்தார்.

நாமனைவரும் பலவிதங்களில் சோதிக்கப்படுகிறோம். அப்போது "சோதனை மேல் சோதனை போதுமடா சாமி" என்று கடவுளை நொந்து கொள்கிறோம். ஆனால், கடவுள் எவரையும் சோதிப்பதில்லை ; மனிதர் தங்கள் தீயநாட்டங்களால் சோதிக்கப்படுகின்றனர். தீய நாட்டங்களோ கருவுற்றுப் பாவத்தையும். பாவம் சாவையும் விளைவிக்கிறது என்கிறார் திருத்தூதர் புனித யாக்கோபு (காண், யாக் 1:13-14).

நமக்குள் இயல்பாக இருக்கும் தீய நாட்டங்களைப் பயன்படுத்தி நம்மைச் சோதிப்பது அலகை. அலகையோ தொடக்க முதல் பொய்யன். பொய்மையின் பிறப்பிடம் (யோவா 8:44), அது மனிதரை வஞ்சித்துப் பாவத்தில் விழச் செய்கிறது, எனவேதான், "எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும். தீயோனிடமிருந்து எங்களை விடுவியும்” (மத் 6:13) என்று மன்றாடக் கிறிஸ்து பணித்துள்ளார்.

கிறிஸ்துவே எல்லா வகையிலும் நம்மைப் போல் சோதிக்கப்பட்டவர், எனினும் அவர் பாவம் செய்யாதவர் (எபி 4:15). அலகை கிறிஸ்துவை மூன்று விதங்களில் சோதித்தது. மூன்று முறையும் அவர் இறைவாக்கை மேற்கோள் காட்டி அலகையை வென்றார்
.
உலகனைத்தும் தீயோனின் பிடியில் இருக்கிறது (1 யோவா 5:19) என்றும், இவ்வுலகைச் சார்ந்தவை அனைத்தும் உடல் ஆசை, இச்சை நிறைந்த பார்வை, செல்வச் செருக்கு என்றும் (1 யோவா 2:16) யோவான் இவ்வுலகின் தீய சக்திகளை இனம் காட்டுகிறார். இம்முப்பெரும் தீய சக்திகளைக் கொண்டு அலகை கிறிஸ்துவை திசை திருப்ப முயன்றது.


முதலாவது, மனிதரிடம் இயல்பாக உள்ளது உடல் ஆசை; ஊன் இயல்பின் இச்சைகள். உடலின் இச்சைகளைப் பூர்த்தி செய்வதில் மனிதர் குறியாக உள்ளனர்; தொகை தொகையாகச் செலவழித்து வகை வகையான இன்பங்களைத் துய்க்கின்றனர்.


40 நாள்கள் பாலைநிலத்தில் எதுவும் உண்ணாமல் நோன்பிருந்த கிறிஸ்து பசியுற்றார். அவரின் உடலின் தேவையை நன்கறிந்த அலகை, கல்லை அப்பமாக மாற்றிச் சாப்பிடும்படி அவரைச் சோதித்தான். ஆனால், கிறிஸ்துவோ இணைச்சட்ட நூலிலிருந்து மேற்கோள்காட்டி “மனிதர் அப்பத்தினால் மட்டும் வாழ்வதில்லை " (இச 8:3) எனக்கூறி அலகையை வெல்லுகிறார்.

நமது ஐம்புலன்களின் இச்சைகளைத் தணித்துக் கொள்ளும்படி, நவீன ஊடக உலகம் பல்வேறு கவர்ச்சிமிக்க விளம்பரங்களை நம் கண்முன் நிறுத்துகிறது. ஓர் உணவு விடுதியில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. ஏனென்றால், அவ்விடுதியில் குஷ்பு இட்டிலி, சிம்ரன் கோழிக் குழம்பு. ரம்பா தொடைக் கறி கொடுக்கிறார்களாம். "கோழி ருசியாய் இருந்தா கோழியைத் தின்பேன், குமரி ருசியாய் இருந்தா குமரியைத் தின்பேன்". இது இவ்வுலகின் வழி, அலகை காட்டும் வழி.


நாம் பசிக்காகச் சாப்பிடுகிறோம். வெறும் ருசிக்காக மட்டும் சாப்பிடுவதில்லை. வாழ்வதற்காகச் சாப்பிடுகிறோம், சாப்பிடுவதற்காக வாழ்வதில்லை. சாப்பாட்டிலேயே குறியாக உள்ளவர்களைப் பற்றித் திருத்தூதர் பவுல், "வயிறே அவர்கள் தெய்வம்" (பிலி 3:19) என்கிறார்.

உண்டு உண்டு கொழுத்து மாரடைப்பால் மாண்டு போகாமல், நமக்குள்ள உணவைப் பிறருடன் பகிர்வோம். பசியால் வாடும் ஒருவர்க்கு நாம் உணவு கொடுக்காததால் அவர் இறந்தால், நாம் அவரைக் கொல்லும் கொலைகாரர்கள். தவக்காலத்தில் நோன்பு இருந்து. பசிப்பிணி ஒழிப்பிற்காகத் தாராள மனத்துடன் உதவ முன் வருவோம்.
செவிக்கு உணவு இல்லாத போதுதான், வயிறுக்குச் சிறிது உணவு கொடுக்க வேண்டும்.
செவிக்குணவு இல்லாத போழ்து சிறிது
வயிற்றுக்கும் ஈயப்படும் (குறள் 412)


"மனிதர் அப்பத்தினால் மட்டுமன்று, மாறாக, கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் உயிர் வாழ்கின்றனர்" (இச 8:3). எனவே, தவக்காலத்தில் வாழ்வு தரும் வார்த்தையைப் படித்து பயனடைவோம்.




இந்தச் சோதனை எதற்கு?

ஆண்டு - 3 சாதனையாளர்களின் பேரும் புகழும் தான் நம் நினைவுக்கு வருகிறதே தவிர அவர்கள் நடந்து வந்த பாதையில் கடந்து வந்த சோதனைகளையும் வேதனைகளையும் நாம் நினைத்துப் பார்ப்பதில்லை.

மாமன்னன் நெப்போலியன் ஒருமுறை அமைச்சரவையைக் கூட்டி ஏதோ முக்கியமான திட்டம் பற்றி விவாதித்துக் கொண்டிருந்தான். அந்தக் கலந்துரையாடலில் நெப்போலியன் பேசியபோதெல்லாம் கடைசி இருக்கைகளில் அமர்ந்திருந்த இரண்டு அமைச்சர்கள் சிரித்துக் கொண்டனர். சிரிப்பா என்று மன்னனுக்கு வியப்பு! கூட்டம் முடிந்தபின் அந்த அமைச்சர் இருவரையும் தனியாக அழைத்து இது பற்றிக் கேட்டான். அவர்களோ உதறல் எடுத்துப் பயத்தில் ஒன்றுமே இல்லை என்று சத்தியம் செய்தனர். மன்னன் விடுவதாக இல்லை. உண்மையைச் சொன்னால் தண்டிக்கப் போவதில்லை என்று உறுதி அளித்தான். உடனே அந்த அமைச்சர்கள் "அரசே, நீங்கள் பேசும் ஒவ்வொரு முறையும் இரண்டு தோள்களையும் மேல்நோக்கிக் குலுக்குகிறீர்கள். அளவுக்கு அதிகமாகக் குலுக்கிக் கொண்டே பேசுவது பார்ப்பதற்குப் பரிகாசமாய் இருக்கிறது. எனவே சிரித்து விட்டோம். மன்னித்து விடுங்கள்" என்றனர்.


மன்னன் அவர்களை அனுப்பிவிட்டுத் தன் அறைக்குச் சென்று யோசித்தான். தீரச் சிந்தித்தவனாய் திடீரென்று எழுந்து இரண்டு கூரிய வாள்களைத் தன் இரு தோள்களுக்கு மேலே கட்டித் தொங்க விட்டு கூட்டத்தில் பேசுவதுபோல் பேசத் தொடங்கினான். தன் இயல்பான, வழக்கமான தோள் குலுங்கல் அப்போதும் ஏற்பட கூரிய வாள்கள் தோள்களைப் பதம் பார்த்தன. குருதி கொட்டியது. மன்னன் விடவில்லை. அப்பழக்கம் தீருமட்டும் பேசி இறுதியில் வெற்றி கண்டான்.


வாழ்க்கை என்பது சவால். சோதனைகளின்றி, போராட்டங்களின்றி எந்த மனிதனும் மேதையானதில்லை, வீரனானதில்லை, புனிதனானதில்லை .

இந்தப் பின்னியில் இறைவார்த்தையை நினைத்துப் பாருங்கள். ''பாவத்திற்கு எதிரான போராட்டத்தில் (சோதனையில்) இரத்தம் சிந்தும் அளவுக்கு நீங்கள் இன்னும் எதிர்த்து நிற்க வில்லை". (எபி. 12:4)


ஆலிவ் எண்ணெய் வேண்டுமா? ஒலிவ இலைகள் நசுக்கப்பட வேண்டும். திராட்சை மது வேண்டுமா? திராட்சைக் கனிகள் பிழியப்பட வேண்டும். வாசனைத் திரவியங்கள் வேண்டுமா? மல்லிகை போன்ற மலர்கள் கசக்கப்பட வேண்டும். அதுபோலத்தான் நசுக்கப்படாமல், பிழியப்படாமல், கசக்கப்படாமல், சோதிக்கப்படாமல் எதையும் சாதிக்க முடியாது.

புனிதர்கள் எல்லாம் சோதனைகளைக் கண்டு புலம்பியதில்லை. மகிழ்ச்சியோடு ஏற்று தங்கள் விசுவாசத்தை வெளிப்படுத்தும் அரிய வாய்ப்பாகவே எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ''நாங்கள் எல்லாச் சூழ்நிலைகளிலும் இன்னலுற்றாலும் மனம் உடைந்து போவதில்லை. குழப்பமுற்றாலும் நம்பிக்கை இழப்பதில்லை. துன்புறுத்தப்பட்டாலும் கைவிடப்படுவதில்லை. வீழ்த்தப்பட்டாலும் அழிந்து போவதில்லை. இயேசுவின் வாழ்வே எங்கள் உடலில் வெளிப்படுமாறு நாங்கள் எங்கே சென்றாலும் அவருடைய சாவுக்குரிய துன்பங்களை எங்கள் உடலில் சுமந்து செல்கிறோம்” (2 கொரி.4:3-10) என்ற திருத்தூதர் பவுலின் மன உறுதி இருந்தால் சோதனைகளைக் கண்டு துவண்டு விடமாட்டோம்.


லூக்.22:31இல் படிக்கிறோம்: ''சீமோனே, சீமோனே, இதோ கோதுமையைப் போல உங்களைப் புடைக்கச் சாத்தான் அனுமதி கேட்டிருக்கிறான் (யோபு நினைவுக்கு வரட்டும்). ஆனால் நான் உனது நம்பிக்கை தளராதிருக்க உனக்காக மன்றாடினேன்” என்றார் இயேசு. சோதனையில் நாம் விழாதபடி, விழுந்தாலும் உடனே எழுந்துவிட இயேசு நமக்காகச் செபித்துக் கொண்டிருக்கிறார். அதனால்தான் மறுதலித்த மறுகணம் பேதுருவால் மனந்திரும்ப முடிந்தது!


மனிதனுக்குச் சோதனைகளை அனுமதிக்கும் இறைவன், அனுமதிப்பதோடு வாளாவிருப்பதில்லை. திருத்தூதர் பவுல் மொழிவது போல்  ''கடவுள் நம்பிக்கைக்குரியவர். அவர் உங்களுடைய வலிமைக்கு போல நீங்கள் சோதனைக்குள்ளாக விடமாட்டார். சோதனை வரும்போது அதைத் தாங்கிக் கொள்ளும் வலிமையை உங்களுக்கு அருள்வார்; அதிலிருந்து விடுபட வழிசெய்வார்” (1 கொரி.10:13)


சோதனைகளும் கீழான எண்ணங்களும் எழும் அதே ஆன்மாவில்தான் இறைவனும் உள்ளார் என்பதை மறந்து விடுகிறோம். அவர் நம்மைக் கை நெகிழ்ந்து விட்டது போன்ற உணர்ச்சிக்கும் உள்ளாகிறோம்.


இதே உணர்ச்சியின் தாக்குதலுக்கு ஆளான தூய சியன்னா கத்தரின் ஆண்டவரை வினவினார்: "ஆண்டவரே என் இதயம் தாய்மையற்ற எண்ணங்களால் நிறைந்தபோது நீர் எங்கே இருந்தீர்?'' அவரோ அவளது இதயத்திலேயேதான் அவ்வமயம் இருந்ததாகக் கூறினார். அவளால் முதலில் நம்ப முடியவில்லை . அவர் இருக்கும் இதயத்திலும் அத்தகைய எண்ணங்களா? பின் ஆண்டவர் அவளிடம் "அச்சோதனைகள் உனக்கு வேதனை தந்ததா, மகிழ்ச்சி அளித்ததா?" எனக் கேட்க, தாளமுடியாத வேதனை என்று அவள் கூற, ஆண்டவர் "நான் உன் இதயத்தில் இருந்ததாலேயே நீ வேதனையுற்றாய். நான் இல்லாதிருந்திருப்பின் அவை உனக்கு மகிழ்ச்சி அளித்திருக்கும். உனக்குள்ளே இருந்து உன் எதிரிகளிடமிருந்து உன்னைப் பாதுகாத்தேன்” என்றார்.


சுடச்சுட ஒளிரும் பொன் போல் சோதனையில் விழாது. விளங்க விளங்க நம் இதயங்கள் இயேசுவின் திரு இருதயத்துக்கு ஏற்ற (இதயங்களாகின்றன. ஏற்றவையா எனக்காணவே அவர் சோதிக்கிறார். ''வெள்ளியை உலைக் களமும் பொன்னைப் புடக் குகையும் சோதித்துப் பார்க்கும். உள்ளத்தைச் சோதித்துப் பார்ப்பவர் ஆண்டவர்” (நீதி.17:3).


சோதனைக்கும் சாதனைக்கும் என்ன வேறுபாடு? சோதனையின் கொம்பை முறித்தால் அது சாதனை !



நம்பிக்கை(யால்) அறிக்கை

நாம் பயன்படுத்தும் ஸ்மார்ட்ஃபோனில் புதிய செயலி (ஆப்) ஒன்றை நிறுவும்போது, கூகுள் ப்ளேஸ்டோர் அல்லது ஐடியுன்ஸ் ஸ்டோர் நமக்கு ஒரு ஃபார்மைத் தந்து, 'ஏற்றுக்கொள்கிறேன்' அல்லது 'நிராகரிக்கிறேன்' என்ற தெரிவுகளை முன்வைக்கிறது. 'ஏற்றுக்கொள்கிறேன்' என்று டச் செய்தவுடன் செயலி நம் ஃபோனுக்குள் வருகிறது. புதிய மின்னஞ்சல் முகவரி, புதிய டுவிட்டர் அல்லது வாட்ஸ்ஆப் அல்லது ஃபேஸ்புக் கணக்குகளைத் தொடங்கும்போதும் நாம் இத்தகைய ஃபார்ம்களை வாசிக்காமல் 'ஏற்றுக்கொள்கிறோம்.' எல்லாம் ஒன்றும் நடக்காது என்ற நம்பிக்கையால்தான். இல்லையா? வங்கியில் நாம் இடும் கையெழுத்து, புதிய கணக்கு அல்லது புதிய வைப்பு நிதி, அல்லது வரி விலக்கு படிவங்களில் நாம் இடும் கையெழுத்துக்கள் அனைத்தும் நம்பிக்கையால்தான்!

திருமணத்தில் கணவனும், மனைவியும், 'இன்பத்திலும், துன்பத்திலும், உடல்நலத்திலும், நோயிலும் நான் உனக்குப் பிரமாணிக்கமாயிருந்து' என்று சொல்லும் வாக்குறுதியும், அருள்பணி நிலை ஏற்கும் இனியவர், 'இதோ! வருகிறேன்!' என்று சொல்லும் முன்வருதலும், 'இறைவனின் துணையால் விரும்புகிறேன்' என்று சொல்வதும், 'வாக்களிக்கிறேன்' என்று வாக்குறுதி கூறுவதும் நம்பிக்கையால்தான்.

ஆக, நம் அன்றாட வாழ்வில் சாதாரண செயலியை பதிவிறக்கம் செய்வதிலிருந்து, வாழ்க்கைத் தெரிவுகள் வரை நிறைய நிலைகளில் நாம் 'ஆம்' என்று அறிக்கை செய்கின்றோம். இந்த ஆம் என்ற வார்த்தையின் பின்னால் இருப்பது 'நம்பிக்கை.' என்ற அந்த ஒற்றைச் சொல். மேலும், இவ்வாக்குறுதிகள் பெரும்பானவற்றை நாம் கடைப்பிடிக்கவும் செய்கிறோம். நாம் 'ஆம். ஏற்றுக்கொள்கிறேன்' என்று அறிக்கையிடும்போது, அந்த அறிக்கை நமக்கு சில உரிமைகளைப் பெற்றுத்தருகிறது. செயலியைப் பயன்படுத்தி எல்லாரோடும் உரையாடுவதே அவ்வுரிமை. அதே போல, திருமணத்திலும், துறவறத்திலும் உரிமைகள் உண்டு. உரிமைகளோடு சேர்ந்து கடமைகள் இருந்தாலும், உரிமைகள் இவ்வறிக்கை வழியாக நமக்குக் கொடையாகக் கிடைக்கின்றன. 

ஆக, மனிதர்கள்மேல் நாம் நம்பிக்கை கொண்டு செய்யும் அறிக்கைகளே நமக்கு இவ்வளவு உரிமைகளைப் பெற்றுத்தருகிறது என்றால், கடவுள்மேல் நாம் நம்பிக்கை கொண்டு செய்யும் அறிக்கைகள் நமக்கு இன்னும் உரிமைகளைப் பெற்றுத்தரும் என்ற செய்தியைத் தருகிறது இன்றைய இறைவாக்கு வழிபாடு. நம்பிக்கையால் நாம் அறிக்கையிடும்போது நம் நம்பிக்கை தொடர் வலுப்பெறுகிறது.

இன்றைய முதல் வாசகம் (காண். இச 26:4-10), இஸ்ரயேல் மக்கள் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடுகின்ற வாரங்களின் திருவிழா அல்லது முதற்கனிகள் திருவிழாவின் பின்புலத்தில் அமைந்திருக்கிறது. இந்த நாளில்தான் இஸ்ரயேல் மக்கள், கடவுள் தங்களுக்குக் கொடையாக வழங்கிய நிலத்திற்காகவும், அவரின் சட்டத்திற்காகவும், சீனாய் மலையில் அவர் தங்களோடு செய்துகொண்ட உடன்படிக்கைக்காகவும் நன்றிகூறுகின்றனர். தன் நிலத்தின் பலன்களையும் கனிகளையும் ஒரு கூடையில் எடுத்துக்கொண்டு வருகின்ற இனியவர் ஆலயத்தின் முகப்பில் அவற்றை வைக்க வேண்டும். ஆலயத்தில் இருக்கும் குரு அக்கூடையை எடுத்துக்கொண்டு போய் பீடத்தின்முன் வைப்பார். அந்த நேரத்தில், இந்த இனியவர் பின்வரும் நம்பிக்கை அறிக்கையைச் செய்ய வேண்டும்: 'நிரந்தரக் குடியற்ற அரமேயரான என் தந்தை எகிப்து நாட்டுக்கு ... இதோ, நீர் எனக்குக் கொடுத்த நிலத்தின் முதற்பலனைக் கொண்டு வந்துள்ளேன்.' கடவுள் இஸ்ரயேல் மக்களை ஒரு இனமாக, நாடாக உருவாக்கிய மூன்று நிகழ்வுகள் இந்த அறிக்கையில் அடிக்கோடிடப்படுகின்றன: ஒன்று, 'நிரந்தரக் குடியற்ற அரமேயரான என் தந்தை' அல்லது 'நாடோடியான தந்தை' - இது ஆபிரகாமையும் மற்ற குலமுதல்வர்களையும் குறிக்கிறது. இவர்கள் நாடோடிகளாக இருந்தனர். இவர்களைக் கடவுள் தெரிந்துகொள்கிறார். இரண்டு, விடுதலைப் பயணம். எகிப்தில் பாரவோனுக்கு அடிமைகளாக இருந்த இஸ்ரயேல் மக்களை மோசேயின் தலைமையில் விடுவிக்கும் கடவுள், பல அருஞ்செயல்களை நிகழ்த்தி, தம் வலிய புயத்தால் அவர்களை வழிநடத்துகின்றார். மூன்று, பாலும் தேனும் பொழியும் நாடு. இஸ்ரயேல் மக்களின் மூதாதையருக்கு நிலத்தை வாக்களித்த கடவுள், பாலும் தேனும் பொழியும் நாட்டிற்கு அவர்களை அழைத்துச் சென்று அங்கே அவர்களைக் குடியேற்றுகின்றார். 

ஆக, முதற்கனிகளை ஆண்டவராகிய கடவுளுக்கு அர்ப்பணிக்கு அவரின் இல்லம் வரும் இனியவர் இந்த நம்பிக்கை அறிக்கை சொல்லும்போது, அல்லது கடவுள்மேல் கொண்ட நம்பிக்கையால் அறிக்கையிடும்போது, தன் இருப்பும், தன் இயக்கமும் கடவுளின் கொடை அல்லது கடவுள்தந்த உரிமை என்பதை அறிக்கையிடுகிறார். ஆக, சாதாரண நாடோடி இனத்தை ஒரு இனமாக, நாடாகக் கட்டி எழுப்பியது ஆண்டவரின் அருளே. அவரின் அருளே இவர்களைத் தெரிவு செய்து, விடுதலை செய்து, நாட்டில் குடியமர்த்தியது. எனவே, முதற்கனிகளை ஆண்டவருக்குப் படைக்க வந்த இஸ்ரயேல் மக்கள் கடவுள் தந்த உரிமைகளை நினைவுகூர்ந்து இவ்வறிக்கை செய்தனர்.

இன்றைய இரண்டாம் வாசகம் (காண். உரோ 10:8-13), 'மீட்பு எல்லாருக்கும் உரியது' என்று பவுல் இறையியலாக்கம் செய்யும் பகுதியிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. ஒருவர் எப்படி மீட்பு பெறுகிறார்? என்ற கேள்விக்கு பவுல் இரண்டு வழிகளைச் சொல்கின்றார். ஒன்று, 'இயேசு ஆண்டவர்' என வாயார அறிக்கையிடுதல். இரண்டு, இறந்த அவரைக் கடவுள் உயிர்த்தெழச் செய்தார் என நம்புதல். இங்கே, வாயார அறிக்கையிடுதலும், உள்ளார நம்புவதலும் இணைந்தே செல்கின்றன. 

முதலில், 'இயேசு ஆண்டவர்' என வாயார அறிக்கையிடுதல். இதைப் பவுலின் சமகாலத்துச் சூழலில் புரிந்துகொள்ள வேண்டும். இயேசுவின் சமகாலத்தவரைப் பொறுத்தமட்டில், குறிப்பாக அவரை எதிர்த்தவர்களைப் பொறுத்தமட்டில், அவர் ஒரு தோல்வி, அவர் ஒரு குற்றவாளி, உரோமையர்களால் சிலுவையில் அறையப்பட்டுக் கொலைசெய்யப்பட்ட ஒரு குற்றவாளி. இந்தப் பின்புலத்தில், 'இயேசுவே ஆண்டவர்' என பொதுவான இடத்தில் அறிக்கையிடுவது நம்பிக்கையாளருக்கு அவ்வளவு எளிய காரியம் அல்ல. ஏனெனில், 'குற்றவாளி' எனக் கருதப்படும் ஒருவரை, 'ஆண்டவர்' (அதாவது, 'கடவுள்') என எப்படி அறிக்கையிட முடியும்? யூதர்கள் தங்களுக்கு யாவே தவிர வேறு ஆண்டவர் இல்லை என நம்பினர். ஆக, அவர்கள் இந்த அறிக்கையை எதிர்ப்பார்கள். புறவினத்தார்கள் - குறிப்பாக, உரோமையர்கள் - தங்களுக்கு சீசரே ஆண்டவர் என நம்பினர். அவர்களும் இந்த அறிக்கையை எதிர்ப்பார்கள். இவ்வாறாக, அறிக்கையிடும் நம்பிக்கையாளர் அனைவரின் எதிர்ப்பையும் சம்பாதிக்க நேரிடும். இந்த அறிக்கைக்காக அவர் தண்டிக்கவும் கொலைசெய்யவும் படலாம். துணிச்சல் கொண்டிருக்கும் ஒருவரே இவ்வறிக்கை செய்ய முடியும். இரண்டாவதாக, இறந்த இயேசுவைக் கடவுள் உயிர்த்தெழச் செய்தார் என மனதார நம்புதல். மனது என்பது மூளை செயலாற்றும் இடம் என்றும், மனிதர்கள் முடிவுகளையும், தெரிவுகளையும் எடுக்கும் இடம் என்று கருதப்பட்டது. ஆக, ஒருவர் தன் முழு அறிவாற்றலோடு இயேசுவின் உயிர்ப்பை நம்ப வேண்டும். மேலும், அவரின் இத்தெரிவு அவரின் வாழ்க்கையின் போக்கையும் மாற்ற வேண்டும். 

இவ்வாறாக, இயேசுவை நம்பி, அந்த நம்பிக்கையால் அறிக்கையிடும்போது, அந்த நம்பிக்கைக்கு ஏற்ப தன் வாழ்க்கையை மாற்றி அமைத்துக்கொள்ளும்போது, மீட்பு என்னும் உரிமையைப் பெற்றுக்கொள்கின்றார்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். லூக் 4:1-13), இயேசுவின் சோதனைகளை லூக்கா பதிவின்படி வாசிக்கின்றோம். யோர்தானில் திருமுழுக்கு பெற்று தூய ஆவியால் நிரப்பப் பெற்ற இயேசு, அதே தூய ஆவியால் பாலைநிலத்திற்கு அழைத்துச் செல்லப்படுகிறார். இயேசுவின் பணிவாழ்வுத் தொடக்கத்திற்கு முன் இந்த இரண்டு முக்கியான நிகழ்வுகள் அவரின் வாழ்வில் நடக்கின்றன: ஒன்று, அவரின் திருமுழுக்கு. இரண்டு, அவரின் பாலைவனச் சோதனைகள். திருமுழுக்கு நிகழ்வில், வானத்திலிருந்து (கடவுளின்) குரல், 'என் அன்பார்ந்த மகன் நீயே. உன் பொருட்டு நான் பூரிப்படைகிறேன்' (காண். லூக் 3:22) என்று ஒலிக்கிறது. இவ்வாறாக, தான் யார் என்பதையும், தன்னுடன் கடவுள் என்னும் தன் தந்தை இருக்கிறார் என்பதையும் இயேசு இந்த நிகழ்வில் அனுபவிக்கிறார். இந்த அனுபவத்தை அவர் நம்பிக்கை அறிக்கை செய்ய வேண்டும். அல்லது தன் தந்தையாகிய கடவுள்மேல் கொண்டிருக்கின்ற நம்பிக்கையில் ஒரு அறிக்கை செய்ய வேண்டும். 

இயேசுவின் நம்பிக்கை அறிக்கையைத்தான் நாம் அவரின் பாலைவனச் சோதனைகள் நிகழ்வில் வாசிக்கிறோம். கடவுளின் திட்டங்களையும் நோக்கங்களையும் சீர்குலைக்க நினைக்கும் அலகை மூன்று நிலைகளில் இயேசுவைச் சோதிக்கிறது. கடவுளின் பணிகளை இயேசுவைச் செய்யவிடாமல் தடுக்கும் அலகையின் முயற்சியே இது.

முதலில், அலகை, 'கல் அப்பமாகும்படி கட்டளையிடும்' என்று இயேசுவுக்குச் சவால்விடுகிறது. ஒருவேளை இயேசு கல்லை அப்பமாக்கியிருந்தால், தன் பசியைத் தீர்த்துக்கொள்ள, அல்லது தன்னலத்திற்காக கடவுளின் வல்லசெயலாற்றும் கொடையைப் பயன்படுத்தியதுபோல ஆகிவிடும். 'மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல ...' (காண். இச 8:3) என்று மறைநூல் வாக்கைச் சுட்டிக்காட்டி, இயேசு சவாலை மறுக்கிறார். இவ்வாறாக, இயேசு, தன்னுடைய ஆற்றலைக் கடவுளின் திருவுளத்திற்காகவும், கடவுளின் நோக்கங்களுக்காகவுமே பயன்படுத்துவேன் என்று தெளிவாக அறிக்கையிடுகின்றார்.

இரண்டாவது சோதனையில், அலகை, இயேசு தன்னை வணங்கினால் உலகின்மேல் முழு அதிகாரத்தையும் வழங்குவதாகச் சொல்கிறது. இங்கே, இயேசு தன் தலைவர் யார் என்பதைத் தெரிவு செய்ய வேண்டும் - அலகையா? கடவுளா? யாருக்குப் பணிவது? மறைநூலை மறுபடி மேற்கோள் காட்டும் இயேசு - 'உன் கடவுளாகிய ஆண்டவரை வணங்கி அவர் ஒருவருக்கே பணி செய்வாயாக!' (காண். இச 6:13) - அவரின் தெரிவு கடவுள் மட்டுமே என்று அறிக்கையிடுகின்றார்.

இறுதிச் சோதனை கடவுளின் பெயர் தங்கியிருக்கும் எருசலேம் ஆலயத்தின் உச்சியில் நடைபெறுகிறது. அலகை, இப்போது தானே மறைநூலை மேற்கோள் காட்டி - 'உம்மைப் பாதுகாக்கும்படி கடவுள் தம் தூதருக்கு ... அவர்கள் தாங்கிக்கொள்வார்கள்' (காண். திபா 91:11-12) - இயேசு, கடவுள் மேல் உள்ள நம்பிக்கையைச் சோதிக்கும் பொருட்டு, அவரை உச்சியிலிருந்து கீழே குதிக்குமாறு சோதிக்கிறது. மறைநூலில் தான் சொன்ன வார்த்தைக்குக்குக் கடவுள் பிரமாணிக்கமாக இருக்கிறாரா என்று பார்! என்று இயேசுவிடம் சொல்வதாக அமைகிறது இச்சோதனை. இயேசுவின் மனத்தில் சந்தேகத் துளியை விதைக்க நினைக்கிறது அலகை. ஏனெனில், இந்த நம்பிக்கையால்தான் இயேசு தன் வாழ்வின் பணி, பாடுகள், மற்றும் இறப்பை எதிர்கொள்ளவேண்டும். 'உன் கடவுளாகிய ஆண்டவரைச் சோதிக்க வேண்டாம்' (காண். இச 6:16) என்று சொல்லி, கடவுள்மேல் தான் கொண்டுள்ள நம்பிக்கையில் சந்தேகம் இல்லை என்றும் உறுதிகூறுகிறார் இயேசு.

இம்மூன்று சோதனைகள் வழியாக, இயேசு, கடவுளின் பணியைச் செய்யவிடாமல் தடுக்க முயற்சி செய்தது அலகை. ஆனால், கடவுள் மேல் தான் கொண்டிருக்கிற நம்பிக்கையில், தன் நிலைப்பாட்டை அறிக்கையிடுகிறார் இயேசு. இவற்றின் வழியாக இயேசு தன் நம்பிக்கை, அர்ப்பணம், மற்றும் மனவுறுதியைத் தெளிவுபடுத்துகிறார். இயேசுவின் இந்த நம்பிக்கை அறிக்கை அவரின் பொதுவாழ்வைத் தொடங்க உரிமையளிக்கிறது. இயேசுவும் தன் பணியை உடனே தொடங்குகிறார் (காண். லூக் 4:14-15).

இவ்வாறாக, முதல் வாசகத்தில், இஸ்ரயேலர் இனியவர் ஒருவர், முதற்கனிகள் திருநாளில் கடவுள்மேல் கொண்ட நம்பிக்கையால் தான் பெற்ற கொடைகளுக்காக அவர்மேல் நம்பிக்கையை அறிக்கையிடுகின்றார். இரண்டாம் வாசகத்தில், ஒருவர் இயேசுவின் மேல் கொண்ட நம்பிக்கையால் செய்யும் அறிக்கை அவருக்குக் கடவுளின் மீட்பைப் பெற்றுத் தருகிறது. நற்செய்தி வாசகத்தில் இயேசு தன் தந்தையின்மேல் கொண்டுள்ள நம்பிக்கையால் தன் நிலைப்பாட்டை அறிக்கையிடுகின்றார். ஆக, நம்பிக்கை அறிக்கையும், நம்பிக்கையால் அறிக்கையிடுதலும் இம்மூன்று வாசகங்களிலும் இணைந்தே செல்கின்றன.

நாம் இன்று நம் நம்பிக்கையை அல்லது நம் நம்பிக்கையால் எப்படி அறிக்கையிடுவது?

1. ஒரே மனநிலை - கூடை நிறையும்போதும், வயிறு பசிக்கும்போதும்

இன்றைய இறைவாக்கு வழிபாடு இரண்டு வகை மனநிலைகளைப் பிரதிபலிக்கிறது. நாம் முதல் வாசகத்தில் சந்திக்கும் இஸ்ரயேலர் இனியவர் பெரிய கூடையில் முதற்கனிகள் நிறையக் கடவுளின் முன்னிலையில் நிற்கிறார். நற்செய்தி வாசகத்தில் ஒன்றுமே இல்லாத பாலைநிலை வெறுமையில் பசித்த வயிறாய் இயேசு இருக்கிறார். இந்த இரண்டுபேருமே கடவுளை நம்புகின்றனர். அந்த நம்பிக்கையில் அவரைப் பற்றியும், அவரின் அருஞ்செயல்கள் பற்றியும் அறிக்கையிடுகின்றனர்.  ஆக, நம் கைகள் நிறைய விளைச்சலும், நிலத்தின் பலனும் இருந்தாலும், நம் மனநிலை ஒன்றாக இருக்க வேண்டும். அந்த மனநிலை நம் நம்பிக்கையால் வடிவம் பெற வேண்டும். நம் கைகள் நிறையப் பலன் இருக்கும்போது கடவுளை நம்புவதும், அவரைப் பற்றி அறிக்கையிடுவதும் எளிது. ஆனால், வயிறு பசித்திருக்கும்போது மிகக் கடினம். ஏனெனில், 'பசி வந்தால் (இறைப்)பற்றும் போய்விடும்!' இதையே கண்ணதாசன், 'கடலளவு கிடைத்தாலும் மயங்க மாட்டேன். அது கையளவே ஆனாலும் கலங்க மாட்டேன். உள்ளத்திலே உள்ளதுதான் உலகம் கண்ணா. இதை உணர்ந்துகொண்டால் துன்பம் எல்லாம் விலகும் கண்ணா!' என்கிறார்.

2. ஒரே மனநிலை - ஆலயத்திலும் பாலைவனத்திலும்

முதல் வாசகத்தில் அறிக்கை ஆலயத்திலும், நற்செய்தி வாசகத்தில் அறிக்கை பாலைவனத்திலும் நடக்கிறது. ஆலயத்தில் எல்லாம் இனிமையாக இருக்கும். நம் மனம் ஒருமுகப்படும். அமைதியாக இருக்கும். நம்மைச் சுற்றி இருப்பவர்கள் நம் நல்லதே நினைப்பார்கள். எல்லாரும் அருகிருப்பார்கள். ஆனால், பாலைவனம் அப்படியல்ல. அங்கே தனிமை இருக்கும். நம் மனம் அலைபாயும். நம்மைச் சுற்றி அலகை மட்டுமே இருக்கும். நம் வீழ்ச்சியைப் பற்றியே நினைத்துக்கொண்டிருப்பார் மிஸ்டர் அலகை. நாம் எந்த இடத்தில் இருந்தாலும் நம்பிக்கை அறிக்கை அவசியம்.

3. ஒரே மனநிலை - நம் வேர்களை நினைக்கும்போதும் நம் கிளையைப் பரப்பும்போதும்

முதல் வாசகத்தில் இஸ்ரயேலர் இனியவர் தன் வேர்களை நினைத்துப் பார்க்கிறார். தன் அப்பா ஒரு நாடோடி என்று சொல்வதன் வழியாக, இருக்க இடமற்ற, உண்ண உணவற்ற, உடுக்க உடையற்ற தன் நொறுங்குநிலையை ஒரே நொடியில் நினைத்துப்பார்க்கிறார். ஆக, இன்று கனிகள் கைகளை நிறைத்தாலும் ஒரு காலத்தில் தான் ஒரு வெறுமையே என்று உணர்கிறார். அதே போல, இயேசுவும் தான் பெற்ற திருமுழுக்கில் தன் வேர்களைப் பதித்து, இறையாட்சி என்ற இலக்கை நோக்கிக் கிளைபரப்புகிறார். இந்த இரண்டு நிலைகளிலும் நம்பிக்கை அறிக்கை நடந்தேறுகிறது.

இறுதியாக, இன்றைய இரண்டாம் வாசகம் சொல்வதுபோல, நாம் அறிக்கையிடும் எல்லா வார்த்தைகளும் - அது கடவுள்முன் என்றாலும், ஒருவர் மற்றவர்முன் என்றாலும், எனக்கு நானே என்றாலும் - செயல்வடிவம் பெற வேண்டும். நிறைவேற வேண்டும். அந்தச் செயலின் ஊற்று நம்பிக்கை. நம்பிக்கையே செயலாகும்போது, நம்பிக்கை என்ற சொல்லின் பொருள் புரியும். ஏனெனில், 'செயல்' என்பதே 'சொல்.’ 
 
 

1 comment: