Monday 25 February 2019

ஆண்டின் பொதுக்காலம் எட்டாம் ஞாயிறு.

ஆண்டின் பொதுக்காலம் எட்டாம் ஞாயிறு.



இன்றைய வாசகங்கள்


சீராக் ஞானம் 27:4-7
1 கொரிந்தியர் 15:54-58
லூக்கா 6:39-45





தன்னிடம் உள்ள தவறை ஏற்றுக்கொள்ளாமல் அடுத்தவர் மீது குற்றம் சுமத்துவது என்பது மனிதனுக்கு கை வந்த கலையாகிவிட்டது. ஒருவன் டிக்கெட் வாங்காமல் ரயிலில் பயணம் செய்கிறான். அவனிடம் எப்படி வந்தாய்...? என்று கேட்டால் அவன் திருட்டு ரயிலில் வந்தேன் என்கிறான். திருட்டுத்தனம் செய்வது இவன்... அந்த ரயில் திருட்டு ரயிலாம். அதற்குக் கெட்ட பெயர். ஒருவன் ரூபாய் நோட்டு அடிக்கிறான். ஆனால் அந்த நோட்டுக்குப் பெயர் கள்ளநோட்டு. சட்ட விரோதமாக சாராயம் காய்ச்சுவதும், விற்பதும் இவன்... ஆனால் அதற்குப் பெயர் கள்ளச் சாராயம். தான் செய்த தவற்றை ஏற்றுக்கொள்ளாமல் அடுத்தவர் மீது குற்றம் சுமத்துகிறவர்கள் இன்றைக்கு அதிகம் பேர். உன் கண்ணில் உள்ள விட்டத்தைக் கவனியாது உன் சகோதரன் கண்ணிலிருக்கும் துரும்பை பார்ப்பதேன் (நற்செய்தி)

புதிதாகக் கட்டிய மதில் சுவரின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. ஏன்? இந்த சுவரை இடித்தாய்....? என்று வேலைக்காரனிடம் கேட்டார் வீட்டின் உரிமையாளர். அதற்கு அவன் என் மீது எந்த தவறும் இல்லை . சுவரும் உறுதியாக இல்லை , அதை கட்டிய கொத்தனார்தான் காரணம் என்றான். கொத்தனாரைக் கேட்டால், கலவை போட்டுக் கொடுத்தவன் கலவையில் அதிகமாகத் தண்ணீர் ஊற்றிவிட்டான் என்றான். கலவைப் போட்டவனை கேட்டால், அந்தக் குடத்தின் வாய் அகலமாக இருந்தது. லேசாக சாய்த்தேன். தண்ணீர் அதிகமாகக் கொட்டிவிட்டது. குடத்தை தயாரித்தவன்தான் காரணம் என்றான். இப்படி தங்கள் தவற்றை ஏற்க மறுத்து அடுத்தவர் மீது குற்றம் சுமத்துவதைப் பார்க்கிறோம். இன்றைய நற்செய்தியும் இதே கருத்தை வலியுறுத்துகிறது.

மனிதனுடைய வார்த்தைகள் தான் மனதிலுள்ள எண்ணங்களை வெளிப்படுத்துகின்றன (முதல் வாசகம்) நல்லவன் நல்லவற்றையே, தீயவன் தீயவற்றையே தனதாக்கிக் கொள்கிறான். மனிதனுடைய வார்த்தைக்கும் செயலுக்கும் பிறப்பிடம் அவன் உள்ளமே. உள்ளம் நல்லதாக இருப்பின் சொல்லும் செயலும் நல்லவையாக இருக்கும். பிறர் உங்களுக்கு என்ன செய்ய வேண்டுமென்று விரும்புகிறீர்களோ, அப்படியே நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள் (லூக். 6:31). கெட்ட கனி தரும் நல்ல மரமுமில்லை . நல்ல கனி தரும் கெட்ட மரமும் இல்லை. ஒவ்வொரு மரத்தையும் அறிவது அதன் கனியாலே. ஏனெனில் முட்செடியில் அத்திப்பழம் பறிப்பாருமில்லை. நெருஞ்சியில் திராட்சைக் குலை கொய்வாருமில்லை (லூக். 6:43 - 46). தனது நிலையை அறியாமல் அடுத்தவர்களைக் குறைகூறும் மனிதர்கள் ஒரு விதத்தில் மனநோயாளிகள் எனலாம். தன்னையே முழுவதும் அறிவதுதான் வாழ்க்கையின் முதற்படி. தன்னை முழுமையாகப் புரிந்தவன் பிறரையும் புரிந்து கொள்வான். ஒருவன் தன்னையே நன்கு புரிந்துகொண்டால்தான் நிறை , குறைகளோடு மற்றவர்களை ஏற்றுக்கொள்ள முடியும். தான் செய்யும் தவறுகளை ஏற்றுக்கொண்டு கிறிஸ்தவ வாழ்க்கை வாழ்பவன்தான் பிறருக்கு வழிகாட்ட முடியும். இருளைப் பழிப்பதைவிட ஒளியேற்றுவதே மேல் என்பதை உணர வேண்டும்.

ஒரு முதியவர் தூங்கிக் கொண்டிருந்தபோது அவரது பேரப்பிள்ளைகள் அழுகிய முட்டையை உடைத்து அவரின் மீசையில் தடவி விட்டார்கள். தூக்கம் கலைந்து, எழுந்திருந்த தாத்தாவுக்கு ஏதோ துர்நாற்றம் அடிக்கிறது. இங்கு என்ன போட்டு வைத்திருக்கிறீர்கள் என்று வீட்டில் உள்ளவர்களைத் திட்டிவிட்டு மாடிக்குச் சென்றார். மணக்க மணக்க உணவு வகைகளுக்கு மத்தியில் இவருக்கு மட்டும் நாற்றம் அடித்தது. தாத்தா தன் மீசையில் இருந்து வரும் நாற்றத்தை உணராமல், கண்டு பிடிக்காமல் மற்றவர்களை குறை சொல்கிறார். முட்டையின் நாற்றம் எப்படி அவரை மற்ற வாசனைகளை அனுபவிக்க அனுமதிக்க வில்லையோ, அதேபோல்தான் சில விஷயங்களைப் பற்றி நாம் கொண்டிருக்கும் தவறான கருத்துக்கள் மற்ற நல்ல காரியங்களைப் பரிசீலிக்கக்கூட நம்மை அனுமதிப்பதில்லை. இதை இன்றைய நற்செய்தி வாசகத்தின் வழியாக நன்கு அறிந்து கொள்ளலாம். நாம் எந்தெந்த விதத்தில் சரியாகச் செயல்படுகிறோம். எந்தெந்த விதத்தில் தப்பித்துக் கொள்ள மற்றவர்கள் மீது குற்றம் சுமத்துகிறோம் என்று சிந்திப்போம். பல சமயங்களில் மற்றவர்களைப் பற்றி குறை சொல்லி, குற்றவாளியாக்குவதில் இருக்கும் ஆர்வம், நிறைவு காணும் பண்புகளில் இருப்பதில்லை. மிகப்பெரிய தவறுகள் செய்பவன், சிறிய தவறு செய்தவனை மிகப்பெரிய குற்றவாளியாக்குவது மிகப்பெரிய தவறாகும் என்பதை உணர்வோம். மற்றவர்களிடம் குறைகளைக் காண்பதை தவித்து, நிறைகளைக் காணும் நல்ல இதயத்தை இறைவன் நமக்குத் தர வேண்டும் என செபிப்போம்.

சிந்தனைக்கு:


நொண்டி நொண்டி நடந்தவனைப் பார்த்து மனதுருகிப்போன அவனது நண்பன் எனக்கும் இப்படித்தான் இருந்தது. நான் மொட்டை அடித்துக் கொண்டேன். கால் சரியாகிவிட்டது என்றான். அப்படியே இவனும் மொட்டை அடித்துக்கொண்டான். கால் சரியாகவில்லை. அன்னதானம் செய்தும் பணத்தை அள்ளி இறைத்தும், பத்தியங்கள் மேற்கொண்டும் சரியாகவில்லை. இறுதியில் தன்னைத்தானே ஆராய்ந்துப் பார்த்ததில் தன் செருப்பில் குத்திக் கொண்டிருந்த ஆணியே தன்னை நொண்டியாக நடக்க வைத்தது என்று கண்டுபிடித்தான். அந்த ஆணியைப் பிடுங்கி எறிந்த பிறகு நன்றாக நடந்தான். தன்னிடம் இருக்கும் தவற்றை அறியாது வாழ்ந்துக் கொண்டிருக்கும் மனிதர்கள் இன்று அதிகம்.

முதலில் நாம் திருந்துவோம்; பிறகு மற்றவர்கள் திருந்த அறிவுரைகள் சொல்வோம், வழி காட்டுவோம்.




குறையில்லாத மனிதரில்லை
இன்றைய நற்செய்தியின் வழியாக இயேசு மற்றவர்களின் குறைகளை நாம் சுட்டிக்காட்டி அவர்களைக் குறைவாகப் பேசக்கூடாது என்கின்றார்.

ஓர் இளைஞனும், ஓர் இளம் பெண்ணும் ஒருவரையொருவர் சந்தித்தனர். அவனுக்கு வயது 35 இருக்கும்; அவளுக்கு வயது 30 இருக்கும். அது ஓர் இரயில் பயணம். இருவருக்குமிடையே உரையாடல் தொடங்கியது. அவன் அவளைப் பார்த்து, உனக்குத் திருமணம் ஆகிவிட்டதா? என்று கேட்டான். அவள், இல்லை என்றாள். அவன், எனக்கும் திருமணம் ஆகவில்லை என்றான்.

அவள் அவனைப் பார்த்து, எப்படிப்பட்ட பெண்ணை நீ திருமணம் செய்துகொள்ள விரும்புகின்றாய்? என்று கேட்டாள். அதற்கு அந்த இளைஞன், நான் திருமணம் செய்துகொள்ள விரும்பும் பெண் அழகாக இருக்க வேண்டும், அன்பு உள்ளம் கொண்டவளாக இருக்க வேண்டும், பொய் சொல்லாதவளாக, திருடாதவளாக, புறணி பேசாதவளாக, கோபப்படாதவளாக, பத்துக்கட்டளைகளைத் தவறாது பின்பற்றுபவளாக, ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக் காண்பவளாக இருக்கவேண்டும் என்றான். அப்போது அந்த இளைஞன், நீ எப்படிபட்ட இளைஞனை திருமணம் செய்துகொள்ள விரும்புகின்றாய்? எனக் கேட்டான்.

அதற்கு அந்தப் பெண், என்னை மணம் முடிக்க விரும்புகின்றவன் அழகாக இருக்க வேண்டும், அன்பு நடமாடும் கலைக்கோயிலாக இருக்கவேண்டும், பொய் சொல்லக்கூடாது, திருடக்கூடாது, என்னை எப்போதும் மதிப்போடும் மரியாதையோடும் நடத்தவேண்டும், பத்துக்கட்டளைக்களுக்கு எதிராக ஒருபோதும் செயல்படக்கூடாது என்றாள்.

அதற்கு அந்த இளைஞன், எனக்கும் திருமணம் நடக்கப் போவதில்லை. உனக்கும் திருமணம் நடக்கப் போவதில்லை என்றான்.

அந்த இளைஞன் சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை. குறையில்லாத மனிதர் இந்த உலகத்தில் கிடையாது. குறையில்லாத மனிதரைத் தேடுவது, முள்ளில்லாத மீனைத் தேடுவதற்குச் சமம்.

இதனால்தான் இயேசு, மனிதர்களின் குறைகளைப் பார்க்க வேண்டாம். அதைப்பற்றி பேச வேண்டாம் என்கின்றார்.

இன்றைய முதல் வாசகத்தில் சீராக்கின் ஞான நூல் நாம் பேசுவதற்கு முன்னால் நம்மையே நாம் சோதித்துப் பார்க்க வேண்டும் எனக் கூறுகின்றது. நாம் எப்போதுமே மற்றவர்களிடம் உள்ள நிறைவைக் கண்டு அவர்களின் ஈடேற்றத்திற்காக உழைக்க வேண்டும். மோசேயினுள் இறைவன் சுதந்தரத் தாகத்தைக் கண்டது போல, இயேசு மகதலா மரியாவுக்குள் ஒரு நற்செய்தியாளரைக் கண்டது போல நாம் எவ்வளவுக்கு எவ்வளவு மற்றவர்களின் நிறைவைப் பாராட்டுகின்றோமோ, அவ்வளவுக்கவ்வளவு அவர்கள் குறைகள் குறைய, மறைய வாய்ப்பு உண்டு.

மேலும் அறிவோம் :

தன் குற்றம் நீக்கிப் பிறர்குற்றம் காண்கிற்பின்
என் குற்றம் ஆகும் இறைக்கு (குறள்: 436).

பொருள் : முதலில் தன் குறையை அறிந்து அதனைப் போக்கிக்கொண்டு, பிறகு பிறர் குறையைக் காணும் வல்லமை வாய்ந்த ஆட்சியாளர்க்கு எந்தக் குறையும் வராது!

 

ஓர் அம்மா தனது 10 வயது மகனிடம் 30 ரூபாய் கொடுத்து சல்லடை வாங்கி வரும்படி கேட்டார். அவன் கடைக்குச் சென்று சல்லடை வாங்காமல் வெறுங்கையுடன் திரும்பினான். "சல்லடை எங்கடா?" என்று அம்மா கேட்டதற்கு அவன், "போமா! அது எல்லாம் பொத்தலாக இருக்கின்றது” என்றான். அம்மா தனது மகனின் மரமண்டையை கண்டு அழுவதா? சிரிப்பதா? என்று தெரியமல் மௌனியாக நின்றார்.

இன்றைய முதல் வாசகம் கூறுகிறது: "சல்லடையில் சலிக்கின்ற போது உமி தங்கிவிடுவதுபோல, மனிதரின் பேச்சில் மாசு படிந்து விடுகிறது. மரத்தின் கனி மரத்தின் தன்மையை வெளிப்படுத்துவது போல, மனிதரின் சொல் உள்ளத்தில் உள்ளதைக் காட்டுகிறது" (சீஞா 27:4-7). இன்றைய நற்செய்தியில் கிறிஸ்து கூறுகிறார்: " ஒரு மரத்தை அதன் கனிகொண்டே அறிய முடியும், அவ்வாறே ஒருவரின் பேச்சைக் கொண்டே அவர் எத்தகையவர் என்பதை அறிய முடியும். ஏனெனில் உள்ளத்தின் நிறைவையே வாய் பேசும்" (லூக் 6:43-45).

பயனில்லாத சொற்களைப் பேசுபவரை மனிதரில் பதர் என்று முத்திரை குத்துகிறார் ஐயன் திருவள்ளுவர்.

பயன் இல் சொல்பாராட்டுவானை மகன் எனல்
மக்கள் பதடி எனல்   (குறள் 196)


இரண்டு பேருடைய நாக்கு மட்டும் அவர்கள் இறந்த பின்னும் அழியாமல் இருந்தது என்று திருச்சபை வரலாறு கூறுகிறது. ஒருவரின் நாக்கு அதிகம் பேசியதற்காக அழியாமல் பாதுகாக்கப்பட்டது. மற்றவரின் நாக்கோ அவர் ஒன்றுமே பேசாமல் மௌனம் காத்தமைக்காக அழியாமல் பாதுகாக்கப்பட்டது.

புனித பதுவை அந்தோணியார் கி.பி. 1231- ஆம் ஆண்டு இறந்தார். அடுத்த ஆண்டு அவரது கல்லறையைத் திறந்தபோது, அவரது உடல் முழுவதும் அழிந்துபோன நிலையில், அவரது நாவு மட்டும் அழியாமல் இருந்தது. அதைக்கண்ட புனித பொனவெந்தூரா என்பவர், ”கடவுளைப் புகழ்ந்த நாவைக் கடவுள் அழியாமல் பாதுகாத்தார் " என்றார்.

ஐரோப்பாவில் பொகேமியா நாட்டு அரசன் வென்செஸ்லாசின் மனைவி சோபியா என்பவர். அவரின் ஆன்ம குரு ஜான் நெபோமுக். அவரிடம் அரசன் தன் மனைவி சோபியாவின் பாவ அறிக்கையை வெளியிடுமாறு கேட்க, அவர் மௌனம் காத்தார். அதற்காக அவர் கொல்லப்பட்டார். 1383-ஆம் ஆண்டு அவர் அடக்கம் செய்யப்பட்டார். 330 ஆண்டுகளுக்குப்பின் அவரது கல்லறை திறக்கப்பட்டது. அப்போது அவரது நாக்கு அழியாமல் இருந்தது. 1729-ஆம் ஆண்டு திருத்தந்தை 13-ஆம் பெனடிக்ட் அவருக்குப் புனிதர் பட்டம் கொடுத்தார். பாவசங்கீர்த்தன் இரகசியத்தை வெளியிடாமல் மெளனம் காத்தமைக்காக அவரது நாவு அழிவுறாமல் பாதுகாக்கப்பட்டது.

நாம் பேச வேண்டிய நேரத்தில் பேச வேண்டும், பேசக் கூடாத நேரத்தில் மௌனம் காக்க வேண்டும் என்பதற்கு இந்த இரண்டு புனிதர்களும் எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றனர்.

கிறிஸ்து பேச வேண்டிய நேரத்தில் பேசினார், அதிகாரத்துடன் பேசினார். அவருடைய பேச்சில் விளங்கிய ஞானத்தைக் கண்டு மக்கள் மலைத்துப் போயினர் (மத் 7:28). ஆனால் பாடுகளின் நேரத்தில், அவர் மீது அவரது பகைவர்கள் அடுக்கடுக்காய் குற்றங்களைச் சுமத்தியபோது அவர் மெளனம் காத்தார். அதைக் கண்ட ஆளுநர் பிலாத்து வியப்படைந்தார் (மத் 27:4), “நானோ செவிடர் போல் காது. கேளாமலும் ஊமைபோல் வாய் திறவாமலும் இருக்கிறேன்" (தி பா 38:13) என்ற திருப்பாவுக்கு இலக்கணம் ஆனார்.

நாம் அடிக்கடி பிறருடைய குற்றங்களை மிகைப்படுத்தி அவர்களைக் கடுமையாக விமர்சனம் செய்கின்றோம், அவ்வாறு செய்வதற்கு நமக்கு உரிமையில்லை என்கிறார். இன்றைய நற்செய்தியில் கிறிஸ்து. ஏனெனில் நம்மிடத்தில் கணக்கற்ற குற்றங்கள் உள்ளன. முதலில் நம் கண்ணில் உள்ள மரக்கட்டயை எடுத்துவிட்டு அதன்பின் மற்றவர் கண்ணில் இருக்கும் துரும்பை எடுக்க முன்வரவேண்டும் (லூக் 6:41-42). முதலில் தன்னுடைய குற்றங்களை நீக்கிவிட்டு, அதன்பின் பிறருடைய குற்றங்களைக் களைய முற்பட்டால், ஒரு தலைவனுக்கு எந்தக் குற்றமுமில்லை என்கிறார் ஐயன் திருவள்ளுவர்,

தன் குற்றம் நீக்கிப் பிறர்குற்றம் காண்கிற்பின்
என் குற்றமாகும் இறைக்கு? | (குறள் 4:36)


வழக்கமாக, தலைவர்கள் தமக்கடியில் உள்ளவர்களுடைய குற்றங்களைச் சுட்டிக்காட்டுவர். தங்களிடத்திலும் அதே குற்றங்கள் இருப்பதை அவர்கள் உணர்வதில்லை. பிறருடைய குற்றங்கள் உடைத்தெறியப்பட வேண்டிய கண்ணாடி அல்ல, நமது குற்றங்களைப் பிரதிபலிக்கும் கண்ணாடியாகும்.

ஒருவர் தனது மகளுக்குத் திருமணம் செய்து அவரைத் தன் மருமகனிடம் ஒப்படைத்து, "மாப்பிள்ளை என் மகளுக்குக் கொஞ்சம் வாய் நீளம்; அவளைக் கவனிச்சுக்குங்க” என்றார். அதற்கு மருமகன் மாமனாரிடம், "கவலைப்படாதீர்கள்; நான் அவளை நன்றாக கவனித்துக் கொள்வேன். எனக்குக் கொஞ்சம் கை நீளம்" என்றார், பெண்களுக்கு வாய் நீளமாக இருப்பதால் ஆண்களுக்கு கை நீளமாகிறது. நாவை அடக்கினால் குடும்பத்தில் பல பிரச்சினைகள் தலையெடுக்காத.

மிக நல்லவர்களிடத்திலும் பல குற்றங்கள் உள்ளன; மிகக் கெட்டவர்களிடத்திலும் சில நல்ல குணங்கள் உள்ளன; எனவே பிறருடைய குறைகளைப்பற்றிப் பேசலாகாது.





 
நற்கனிகள் அறிதலும் தருதலும்

ஆர்எம்எஸ் டைட்டானிக் என்ற ஆடம்பரப் பயணிகள் கப்பல் பற்றி நாம் கேள்விப்பட்டிருப்போம். 'கடவுளால் கூட இக்கப்பலைக் கவிழ்க்க முடியாது' என்று விளம்பரம் செய்யப்பட்டு, 1912ல் தன் முதல் சேவையைத் துவக்கியது இக்கப்பல். உலகின் மிகப் பெரிய பயணிகள் நீராவிக் கப்பலும் இதுவே. இங்கிலாந்திலிருந்து புறப்பட்டு நியுயார்க் நகர் நோக்கிச் சென்ற இக்கப்பல் 1912ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் நாள் இரவு வட அட்லாண்டிக் பெருங்கடலில் பனிப்பாறை ஒன்றின் மேல் மோதி, மோதிய 3 மணி நேரங்களில் முழுவதுமாகக் கடலில் மூழ்கியது. கப்பலின் கேப்டன் எவ்வளவோ முயன்றும் கப்பலைப் பனிப்பாறையின்மேல் மோதவிடாமல் தடுக்க முடியவில்லை என்பதுதான் சோகம். கடலில் தெரிந்த பனிப்பாறை கடலுக்கு மேல் நீட்டிக்கொண்டிருந்த அளவை மட்டும் வைத்து பனிப்பாறையின் கனத்தை குறைவாக மதிப்பிட்டதால்தான் இந்த ஆபத்து நேரிட்டது. வெறும் 5 சதவிகத பனிப்பாறை மட்டுமே கடலின் மேற்புரத்தில் தெரிய மீதி 95 சதவிகிதம் கடலுக்கு அடியில் மூழ்கி மிதந்துகொண்டிருக்கும். வெளியில் தெரியும் சிறு பகுதியை மட்டும் வைத்து ஒட்டுமொத்த பனிப்பாறையின் அளவை ஊகிப்பது தவறு. அதே வேளையில், பனிப்பாறையின் இருப்பை இந்த நுனிப்பகுதி காட்டுகிறது என்பதை அறியாமல் அதன் இருப்பைக் கண்டுகொள்ளாமல் இருப்பதும் தவறு.

இன்னொரு உருவகம். நம் தோட்டத்தில் இருக்கின்ற ஒரு மாமரம். ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் மாம்பழங்கள் பழுத்துத் தொங்குகின்றன என வைத்துக்கொள்வோம். மாம்பழம் என்ற கனியை மரத்தின் மற்ற பகுதிகளான கிளை, தண்டு, வேர் ஆகியவற்றோடு ஒப்பிட்டால் கனியின் அமைப்பும் அளவும் மிகவும் சிறியது. ஆனால், அச்சிறிய கனியைக் கொண்டே நாம் அந்த மரத்தின் இயல்பைச் சொல்லிவிடலாம். அது இனிமையான கனி கொடுக்கும் மரமா அல்லது புளிக்கும் கனி கொடுக்கும் மரமா என்பதை நாம் சொல்வதற்கு அதன் கனியை மட்டுமே எடுத்துக்கொள்கிறோம். யாரும் மரத்தின் இலை அல்லது தண்டைச் சாப்பிட்டுவிட்டு மரத்தை ஆய்வு செய்வதில்லை. கனி என்ற மரத்தின் சிறிய நீட்சி ஒட்டுமொத்த மரத்தின் இயல்பைச் சுட்டிக்காட்டுகிறது.

பனிப்பாறையின் நுனி மற்றும் மரத்தின் கனி இவை இரண்டிற்கும் இன்றைய இறைவாக்கு வழிபாட்டிற்கும் என்ன தொடர்பு? வெறும் நுனியைக் கண்டு மொத்தத்தையும் அளந்துவிடாதே என எச்சரிக்கிறது இன்றைய முதல் வாசகம். வெறும் கனியைக் கண்டு ஒரு மரத்தின் இயல்பை அளவிடு என அறிவுறுத்துகிறது இன்றைய நற்செய்தி வாசகம். மறைந்திருக்கும் நல் இயல்பு வெளியில் தெரியும் பேச்சிலும் செயலிலும் வெளிப்படுகிறது. நல்ல இயல்பிலிருந்தே நல்ல சொற்களும், நற்செயல்களும் வெளிவர முடியும்.

எப்படி?

இன்றைய முதல் வாசகம் (காண். சீஞா 27:4-7) இஸ்ரயேலின் பிந்தைய ஞானத் தொகுப்பான சீராக்கின் ஞானத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. ஞானம் என்பது கடவுளின் கட்டளைகளுக்கும், நியமங்களுக்கும் கீழ்ப்படிவதன் கொடை எனப் பொதுவாக அறியப்பட்டாலும், ஞானம் மனித வாழ்வின் அன்றாட அறநெறி மற்றும் வாழ்வியல் குறித்த சிந்தனைகளின் தொகுப்பாகவே அமைகிறது. உருவகங்கள், பழமொழிகள் என காணக்கூடிய ஒன்றிலிருந்து காண இயலாத மதிப்பீடுகளுக்கு மக்களை அழைத்துச் சென்றனர் ஞானியர். இவ்வகையில் ஏறக்குறைய கி.மு. 200ல் யேசு பென் எலயேசர் பென் சீராக் (காண். சீஞா 50:27) என்பவரால் எழுதப்பட்ட சீராக்கின் ஞானநூல் பல ஞானக் கோர்வைகளைப் பல்வேறு தலைப்புக்களில் தாங்கி நிற்கிறது. இஸ்ரயேல் மக்களின் சட்டநூல்கள் என்றழைக்கப்படுகின்ற முதல் ஐந்நூல்களில் உள்ள கருத்துக்களை எடுத்து அக்கருத்துக்களை அன்றாட வாழ்வில் செயல்முறைப்படுத்தும் வழிமுறைகளைத் தருகிறார் ஆசிரியர். 

அவ்வகையில் ஒரு மனிதரின் மறைந்திருக்கும் குணம் அல்லது இயல்பு எப்படி வெளிப்படும் என்பதை இரண்டு பழமொழிகள் வழியாக விளக்குகிறார் ஆசிரியர். முதல் பழமொழி: 'சலிக்கின்றபோது சல்லடையில் உமி தங்கிவிடுகின்றது. அவ்வாறே, மனிதரின் பேச்சில் மாசுபடிந்து விடுகின்றது.' அதாவது, சலிக்கின்ற போது சல்லடையில் மேலே தங்குகின்ற உமி, அந்த அரிசியில் இவ்வளவு மாசு இருந்திருக்கிறது என்பதைக் காட்டுகிறது. உமி குறைவாக இருந்தால் அரிசி கலப்படமற்றது என அறிகிறோம். அதுபோல, ஒரு மனிதர் பேசும்போது அவரிடம் எவ்வளவு மாசு இருக்கிறது என்பதை அவரிடமிருந்து வெளியே வரும் வார்த்தைகள் காட்டிவிடுகின்றன. ஆக, பேச்சும் மாசுள்ளதாக இருக்கலாம். பேசுபவரின் உள்ளமும் மாசுள்ளதாக இருக்கலாம். எனவே, வார்த்தைகளைப் பற்றிய அக்கறையும், வார்த்தை வெளிவரும் உள்ளம் பற்றிய அக்கறையும் அவசியம். இரண்டாவது பழமொழி: 'குயவரின் கலன்களை சூளை பரிசோதிக்கிறது. மனிதரை உரையாடல் பரிசோதிக்கிறது.' மண்பானை செய்கின்ற குயவன் எப்படிப்பட்ட மண்ணைப் பயன்படுத்தினான், எப்படிப் பிசைந்தான், எவ்வளவு நீர் ஊற்றினான், எப்படி சக்கரத்தில் சுற்றினான் என்னும் அவனுடைய கைப்பக்குவத்தை நெருப்பு பரிசோதிக்கும். அதுபோல, மனிதன் எப்படிப்பட்டவன் என்பதை அவனுடைய உரையாடலை வைத்து மற்றவர்கள் பரிசோதிப்பர். நெருப்பில் இடும் போது கீறல் விடாத பானை நல்ல பானை என அறியப்படுவது போல, ஒரு மனிதர் நல்லவர் என்பதை அவருடைய உரையாடல் வழியாக நாம் கண்டுகொள்கிறோம். தொடர்ந்து, 'ஒருவர் பேசுவதற்கு முன்பே அவரைப் புகழாதே. பேச்சைக் கொண்டே அவரை அறிந்துகொள்ளலாம்' என எச்சரிக்கிறார் ஆசிரியர். ஒருவனுடைய உரையாடலைக் கேட்குமுன்பே, அவனுடைய வெளி அலங்காரத்தை வைத்து அவனைப் புகழ வேண்டாம் என்றும், பார்ப்பதற்கு பகட்டாக இருக்கும் அவன் பேசுவது மடமையாக இருக்கலாம் என்பதும் இதன் பொருள்.

ஆக, ஒருவரின் நாணயம், நற்குணம், நல்மதிப்பீடு ஆகியவை வெளிப்புற அடையாளங்களால் அறிந்துகொள்ளப்பட முடியாதவை. மாறாக, அவர் பேசும் சொற்கள் அவருடைய மூளையின், உள்ளத்தின் நீட்சியாக இருக்க, அவற்றை வைத்து நாம் அவரின் நாணயத்தையும், நற்குணத்தையும், நல்மதிப்பீட்டையும் அறிந்துகொள்ளலாம்.

இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். 1 கொரி 15:54-58) இறந்தோர் உயிர்ப்பு பற்றிய பவுலின் வாதம் நிறைவுக்கு வருகிறது. எசா 25:8 மற்றும் ஆமோ 13:14 என்னும் இறைவாக்குகளின் பின்புலத்தில், 'சாவு முற்றிலும் ஒழிந்தது. வெற்றி கிடைத்தது. சாவே, உன் வெற்றி எங்கே? சாவே, உன் கொடுக்கு எங்கே?' என்று அக்களிக்கிறார் பவுல். பவுலின் பார்வையில் கிறிஸ்துவின் உயிர்ப்பு இறந்தோர் அனைவருக்கும் கிடைத்த கொடை. ஏனெனில், கிறிஸ்துவில் இறந்தோர் அனைவரும் கிறிஸ்துவில் உயிர்ப்பர். கிறிஸ்துவின் உயிர்ப்பு நம்பிக்கையாளர்கள் அனைவருக்கும் இறவாமையைப் பெற்றுத் தருகிறது. தொடர்ந்து பவுல், 'நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வழியாக நமக்கு இந்த வெற்றியைக் கொடுக்கும் கடவுளுக்கு நன்றி' என்கிறார். 

இதன் பின்புலத்தில் உயிர்ப்பு பற்றிய உரையை நிறைவு செய்கிற பவுல், நிறைவாக கொரிந்து நகரச் சபைக்கு அறிவுரையும் வழங்குகின்றார்: 'உறுதியோடு இருங்கள். நிலையாய் இருங்கள். ஆண்டவரின் பணியை இன்னும் அதிகமாக எப்போதும் செய்யுங்கள்.' நாம் இறந்தவுடன்தான் எல்லாம் ஒன்றிமில்லாமல் போய்விடுகிறதே. அப்புறம் எதற்கு உழைக்க வேண்டும்? எனச் சிலர் கேள்வி எழுப்பியதன் பின்புலத்தில், 'நீங்கள் உழைப்பது வீண்போகாது' என்கிறார் பவுல். ஆக, இவ்வாழ்வில் நாம் செய்யும் செயல்கள் உயிர்ப்பின் கனிகளாகக் கனிகின்றன. இச்செயல்களை நிறுத்தும்போது நாம் கனிகளையும் நிறுத்துவிட வாய்ப்புண்டு. கனிகளைக் கருத்தில் கொண்டு தொடர்ந்து நம் வேலைகளைச் செய்ய வேண்டும்.

ஆக, இவ்வுலக வாழ்வு என்பது ஒரு மரம் போன்றது என்றால், அம்மரத்திற்காக நாம் செய்யும் உழைப்பு மறு உலகில் கனியாக நீளும். அக்கனிகள் இனிமையாக இருக்க வேண்டுமென்றால், நான் என் வாழ்க்கை என்ற மரத்தின் இயல்பை இனிமையானதாக தக்க வைத்துக்கொள்ள வேண்டும். அதற்காக நான் உழைக்க வேண்டும். என் நம்பிக்கையில் உறுதியாகவும் நிலைத்தும் இருத்தல் வேண்டும்.

இன்றைய நற்செய்தி வாசகம் (காண். லூக் 6:39-45) ஒருவரின் நாணயம், நற்குணம், மற்றும் நன்மதிப்பீடு எப்படி இருக்க வேண்டும் என்றும், அது எப்படி கனியாக சொல்லிலும் செயலிலும் வெளிப்பட வேண்டும் என்பதை மூன்று உருவகங்கள் வழியாகப் பதிவு செய்கிறது. முதலில், 'பார்வையற்ற ஒருவர் பார்வையற்ற மற்றவருக்கு வழிகாட்டுவது' - இது முதலில் சீடர்களுக்கான போதனையாக இருக்கிறது. இயேசுவின் சீடர்கள், மற்றவர்களுக்கு வழிகாட்டுவதற்கு முன்பாக, தாங்கள் முதலில் இயேசுவிடமிருந்து கற்றுக்கொள்வது அவசியம். தங்களிலேயே நற்செயல் அல்லது நற்சொல் இல்லாத ஒருவர் அவற்றை மற்றவருக்குக் கொடுக்க முடியாது. இரண்டாவதாக, 'ஒருவர் தன் கண்ணில் இருக்கும் கட்டையைப் பார்க்காமல் மற்றவரின் கண்ணில் இருக்கும் துரும்பை எடுக்கக் கைநீட்டுவது.' இதுவும், சீடர்கள் மத்தியில் இருந்த ஒரு பிரச்சினையாக இருந்திருக்கலாம். ஒவ்வொருவரும் தன் குறையைக் கண்டுகொள்ளாமல் அடுத்தவரின் குறையைப் பெரிதுபடுத்தியிருக்கலாம். இயேசு இந்த வெளிவேடத்தைக் கண்டித்து, தன் சீடர்கள் ஒவ்வொருவரும் தங்களையே தன்னாய்வு செய்து பார்க்க அழைக்கின்றார். இப்படித் தன்னாய்வு செய்யும்போது ஒருவர் தன் மதிப்பீடுகளை மறு ஆய்வு செய்ய முடியும். அப்படிச் செய்யாதபோது அவர் வளர முடியாமல் போய்விடும். மேலும், தன் கண்ணையே ஒரு கட்டை மறைப்பதால் அடுத்தவருக்கு உதவி செய்வது தொந்தரவிலும் முடியலாம். மூன்றாவதாக, 'கெட்ட கனி தரும் நல்ல மரமில்லை. நல்ல கனி தரும் கெட்ட மரமில்லை. ஒவ்வொரு மரமும் அதனதன் கனியாலே அறியப்படும்.' ஒருவர் நீண்ட காலம் நடிக்கவும், ஏமாற்றவும் முடியாது. ஏனெனில், அவரின் செயல்களே அவரைக் காட்டிக்கொடுத்துவிடும் என எச்சரிக்கிறார் இயேசு. பொய்மை நீண்ட காலத்திற்கு உண்மை என்று தன்னைப் பற்றிச் சொல்லிக் கொண்டு வலம் வர முடியாது. மேலும், 'உள்ளத்தின் நிறைவையே வாய் பேசும்' என்று சொல்வதன் வழியாக ஒருவரை அவருடைய சொல் காட்டிக்கொடுத்துவிடும் என்கிறார் இயேசு.

இயேசுவின் இம்மூன்று உருவகங்களுமே சீடத்துவத்தை மையமாக வைத்திருக்கின்றன. இயேசுவின் சீடர் முழுமையான அறிவைப் பெற்றிருக்க வேண்டும், வெளிவேடமின்றி தன்னையே ஆய்வு செய்து பார்க்க வேண்டும், அடுத்தவருக்கு வழி காட்டுவதற்கு முன் தன்னையும், தன் வழியையும் அறிந்திருக்க வேண்டும், தன் வாழ்வில் உள்ள இரட்டைத்தன்மை அகற்ற வேண்டும்.
ஆக, ஒருவரின் உள்ளியல்பு அவரின் வழிகாட்டுதல், குற்றங்கடிதல், மற்றும் உரையாடுதல் ஆகியவற்றில் வெளிப்பட்டுவிடும் என்பதால் ஒருவர் கவனமாக இருக்க வேண்டும் என்றும் சொல்கிறது இன்றைய நற்செய்தி வாசகம்.

இவ்வாறாக, எளிய பழமொழிகள் மற்றும் உருவகங்கள் வழியாக சீராக்கும் இயேசுவும், 'ஒரு மனிதரின் உண்மையான குணம் அல்லது இயல்பும் அவரடைய உள்ளத்தின் பண்பாடும் அவரின் வார்த்தைகளில் வெளிப்படுகிறது' என்றும், பவுல், 'நல்ல செயல்கள் வழியாக உயிர்ப்பின் நற்கனிகளை அனுபவிக்க முடியம்' என்றும் நமக்கு அறிவுறுத்துகின்றனர்.

நாணயத்தின், நற்குணத்தின் நற்கனிகள் தருவது எப்படி?

1. நல்ல உளப்பாங்கு கொண்டிருத்தல்

ஆங்கிலத்தில், 'ஆட்டிட்யூட்' என்று சொல்கிறோம். இன்று, ஒருவரின் நேர்காணலில் அவரின் சொற்கள் மற்றும் செயல்களைவிட, இந்த 'ஆட்டிட்யூட்' தான் அதிகாக ஆய்வு செய்யப்படுகிறது. இன்றைய நற்செய்தி வாசகம் நான்கு வகை உளப்பாங்கை எடுத்துக்காட்டி, முதல் மூன்று வகை உளப்பாங்கை விட்டுவிடவும், நான்காவதைப் பற்றிக்கொள்ளவும் அழைக்கிறது. (அ) கெட்ட கனி தரும் மரம் - 'கெட்ட கனியால் யாருக்கும் பலன் இல்லை. கெட்ட கனிகள் விஷமாக மற்றவர்களைக் கொல்லும் ஆற்றல் பெற்றவை' – இம்மரம் இயல்பிலேயே கெடுதல் செய்வதாக இருக்கிறது. இவ்வகை மரம் தீங்கையே உருவாக்குவதால், காலப்போக்கில் அதே தீங்கினால் தானும் அழிந்துவிடும். (ஆ) முட்செடிகள். முட்செடிகள் முள்கனிகளைத்தான் கொடுக்குமே தவிர அத்திப்பழங்களைக் கொடுக்காது. முட்செடிகள் போன்றவை அடுத்த மரங்களின் தண்ணீர் மற்றும் உரத்தை எடுத்துக்கொண்டாலும் இவைகள் தங்கள் இயல்பிலேயே தொடர்ந்து இருப்பவை. இவைகள், என்னதான் பசுமையாக, செழுமையாக இருந்தாலும் இவைகளின் அருகில் யார் சென்றாலும் இவை அவர்களைக் காயப்படுத்திவிடுகின்றன. (இ) முட்புதர் – திராட்சைக் கனியை நாம் முட்புதரிலிருந்து பெற முடியாது. திராட்சை உயரமான பந்தலில் வளரக் கூடியவை. ஆனால், முட்புதரோ தரையோடு தரையாக மண்டிக் கிடந்து, விஷப்பூச்சிகள் தங்கும் இடமாக மாறிவிடும். புதருக்குள் மறைந்திருப்பது யாருக்கும் தெரியாது. இப்படிப்பட்ட உள்ளம் கொண்டவர்கள் தங்கள் எண்ணங்களை மிகவும் தாழ்வான எண்ணங்களாக வைத்துக்கொண்டு விஷம் தங்கும் இடமாக மாறிவிடுவர். மற்றும் (ஈ) நல்ல கருவூலம் - ஒவ்வொரு வீட்டின் பாதுகாப்பான இடம் கருவூலம். இங்கே மிகவும் மேன்மையானவற்றிற்கு மட்டுமே இடமுண்டு. நல்லவரின் உள்ளம் நல்ல கருவூலமாக இருக்கும். இதிலிருந்து வெளிப்படுபவை மதிப்பு மிக்கவையாகவும், மற்றவர்களுக்குப் பயன் தருவனவாகவும் இருக்கும். ஆக, என் உளப்பாங்கு நல்ல கருவூலமாக இருத்தல் வேண்டும்.

2. இனிய வார்த்தைகளைப் பேசுதல்

இனிய சொற்கள் பற்றிப் பேச அறிவுறுத்தும் வள்ளுவர், இனிய வார்த்தைகளைப் பேசாதவர்கள் நல்ல கனிகளை விட்டுவிட்டு கசக்கின்ற காய்களைப் பறித்துக்கொள்கிறார்கள் என்கிறார். பேச்சு ஒரு கொடை. அதே வேளையில் அது நமக்குக் கொடுக்கப்பட்டுள்ள பொறுப்பு. நம் வார்த்தைகளே நம் உலகத்தை உருவாக்குகின்றன. நம் பேச்சு நம்மைப் பல்லக்கிலும் ஏற்றும், பாழுங்கிணற்றிலும் தள்ளும். இன்று நாம் அரசியல் மற்றும் ஊடகங்களில் கேட்கின்ற வார்த்தைகள் வெறும் வார்த்தைகளே. அவற்றால் யாருக்கும் எந்தப் பயனும் இல்லை. அவ்வார்த்தைகளுக்கும் செயல்களுக்கும் தொடர்பு இருப்பதில்லை. சமூக ஊடகங்களில் பரப்பப்படும் பல வார்த்தைகள் வதந்திகளாகவும், பொய்களாகவும் இருக்கின்றன. இவற்றால் வீணான அச்சமும் குழப்பமும் உருவாகிறது. ஆனால், இவற்றிற்கு மாறாக நம் வார்த்தைகள் அடுத்தவரின் மேல் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் வார்த்தைகளாக இருத்தல் வேண்டும். ஆக, பொறுப்புணர்வோடு நாம் வார்த்தைகளைக் கையாள வேண்டும்.

3. உன் வார்த்தையே நீ

'நீ அதிகமாக வெட்கம் அடைகிறாய். இந்த வெட்கத்திற்குக் காரணம் உன் பொய்மை. பொய் சொல்லாதே! அதிலும் உனக்கு நீயே பொய் சொல்லாதே. உனக்கு நீயே சொல்லும் பொய் உன்னைப் பெரிய தோல்விக்கு இட்டுச் செல்லும்' என்று இரஷ்ய எழுத்தாளர் டாஸ்டாய்வ்ஸ்கியும், 'நீ வெற்றி பெற வேண்டுமெனில் உனக்கு நீயே ஒரு போதும் பொய் சொல்லாதே' என்று பவுலோ கோயல்லோவும், 'உன் உள்ளத்தின் நிறைவே உன் பேச்சும்' என்று இயேசுவும் சொல்கின்றனர். நம்மிடம் உள்ள நாணயம் மற்றும் நன்மதிப்பீட்டின் நீட்சியாக நம் வார்த்தைகள் இருக்க வேண்டும். எனக்கு நான் கொடுக்கும் வாக்குறுதிகள் மற்றும் அடுத்தவருக்குக் கொடுக்கும் வாக்குறுதிகளில் நான் உண்மையோடு இருக்க வேண்டும். ஆகையால்தான், ஒளவையார், 'கற்பு என்பது சொல் திறம்பாமை' என்கிறார். சொல்லும், செயலும், என் இயல்பும் ஒன்றாக இருத்தலே கற்பு, தூய்மை. என் வார்த்தைகளே நானே நம்பவில்லை என்னும் நிலை வரும்போது, அடுத்தவர்கள் என் வார்த்தைகளை எப்படி நம்புவார்கள்?

வார்த்தையும் வாழ்வும், கனியும் மரமும், இயல்பும் வெளிப்பாடும் ஒன்றோடொன்று தொடர்புடையவை. இதை அறிந்து செயல்படும் 'நேர்மையாளர் பேரீச்சை மரமெனச் செழித்தோங்குவர். கேதுரு மரமெனத் தழைத்து வளர்வர் ... அவர்கள் முதிர் வயதிலும் கனி தருவர். என்றும் செழுமையும் பசுமையுமாய் இருப்பர்' (திபா 92:12,14).
 
 


 

No comments:

Post a Comment