Tuesday 26 March 2019

தவக்காலத்தின் 4-ஆம் ஞாயிறு

தவக்காலத்தின் 4-ஆம் ஞாயிறு


இன்றைய வாசகங்கள்:


யோசுவா. 5:9-10,12
2 கொரிந்தியர். 5:17-21
லூக்கா. 15:1-3, 11-32



ஜெர்மன் நாட்டு ஓவியர் ஒருவர் இயேசுவைப் போல சிறுவன் ஒரு படத்தை வரைவதற்கு மாதிரிக்காக ஒரு சிறுவனைப் பல இடங்களில் தேடினார். இறுதியில் ஒரு சிறுவனைக் கண்டுபிடித்து அவனை வரைந்தார். சில ஆண்டுகளுக்குப் பிறகு இயேசுவைக் காட்டிக் கொடுத்த யூதாசைப் போன்ற தோற்றத்தில் உள்ள ஒரு மனிதனை ஓவியமாக வரைய வேண்டும் என்று தேடி ஒருவனைக் கண்டுபிடித்தார். வரைந்து முடிக்கும்போது அவனைப் பார்த்து சில ஆண்டுகளுக்கு முன் இயேசுவைப் போன்று வரைந்த சிறுவனின் முகச்சாயல் உன்னிடம் சிறிது தெரிகிறது என்றார் அந்த ஓவியர். அதற்கு அந்த மனிதன், நான் சிறுவனாக இருக்கும்போது, அன்பும், இரக்கமும் உள்ள தந்தையும், சகோதர பாசம் கொண்ட சகோதரனும் எனக்கு இருந்தார்கள். ஆனால் காலப்போக்கில் வளர்ந்தபின் மனம் போன போக்கில் வாழ்ந்து இன்று இந்த நிலைக்குத் தள்ளப்பட்டேன் என்றான் அந்த மனிதன்.

பெற்றோர்களின் அன்புக்கு நன்றியுடன் நடந்து கொள்ளாத பிள்ளைகளே இன்று அதிகம். ஊதாரி மகன் அன்புள்ள தந்தையிடமிருந்து பிரிந்து சென்றான். இவனது அன்பு உறவுகளிலிருந்து பிரிந்து செல்கிறான். இப்படி தந்தையின் இல்லத்தை விட்டுப் பிரிந்து செல்லும் ஒவ்வொருவருக்கும் எச்சரிக்கை விடுப்பதே இன்றைய வழிபாட்டின் மையக் கருத்தாகும்.

பழைய ஏற்பாட்டிலே இஸ்ரயேல் மக்கள் எவ்வளவு குற்றம் புரிந்தாலும் கடவுள் தனது மாறாத அன்பினால் மன்னித்து தேனும், பாலும் பொழியும் புதிய நாட்டையே பரிசாக வழங்கினார்.

ஊதாரி மகன் தந்தையிடமிருந்து பிரிந்து சென்று பன்றியோடு சேர்ந்து பன்றியாக, இழிவான நிலைக்குத் தள்ளப்படுகிறான். இந்த நிலையில் சிந்திக்கிறான். அறிவுத் தெளிவு பெற்று தந்தையின் அன்பைத் திரும்பப் பெற விரும்புகிறான். இதற்கு மூன்று செயல்பாடுகள் உதவியாக அமைந்தன:

1) சுய ஆய்வு செய்தல் 2) எழுதல் 3) ஒப்புரவாகுதல்

புதிய வாழ்வு பெற முடியும் என்ற நம்பிக்கையோடு, பாவத்தையும், தீய எண்ணங்களையும் தீயிட்டுக் கொளுத்திவிட்டு தந்தையோடு ஒப்புரவாக திரும்புகிறான். தந்தையும் வாஞ்சையோடு வரவேற்கிறார். மூத்த மகனைத் தவிர குடும்பமே மகிழ்ச்சியில் உள்ளது.

மூத்த மகன் தான் நல்லவன் என்பதை பல சான்றுகளுடன் சுட்டிக்காட்டுகிறான். உம் கட்டளையை மீறியது இல்லை. அடிமை போன்று உமக்கு ஊழியம் செய்த எனக்கு ஒரு ஆட்டுக்குட்டி கூட கொடுத்ததில்லையே என்று குற்றம் சாட்டுகிறான். தந்தையின் இரக்கத்தையும், பெருந்தன்மையையும் அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மகிழ்ச்சியடைய முடியவில்லை. தம்பியை மன்னிக்கும் மனம் இல்லை. ஏற்றுக்கொள்ளும் இதயம் இல்லை.

இறைவன் பாவிகளை வெறுப்பதில்லை . மாறாக மனம் மாறி வரும் பாவிகளை குணமாக்கும் மருத்துவர் தான் இறைவன் என்பதை மறந்துவிடக் கூடாது.

ஊதாரி மகனின் தந்தையிடம் இருந்த அன்பையும், பாசத்தையும், மன்னிப்பையும் நம் இதய வரிகளாக்குவோம்.

இந்த தவக்காலம் நம்மில் கிடக்கும் சுயநலம், பாவம் போன்ற ஆன்ம அழுக்குகளை அப்புறப்படுத்த அருமையான வாய்ப்பாக அமைந்துள்ளது. நம்மில் மாற்றம் காணவும், பிறரை மன்னிக்கவும் முன் வருவோம்.





பாவத்தை விட்டுவிடுவோம் எப்போதும் நாம் மனத்தூய்மையுடையவர்களாய் வாழ என்ன செய்யவேண்டும்? என்பதைச் சுட்டிக்காட்ட இதோ ஒரு கதை!

அவன் ஒரு பாவி! அவனுக்கு ஒரு நாள் தான் ஒரு புனிதனாக வேண்டும், அக ஒளி பெற்றவனாக, தூய்மை நிறைந்த மனம் படைத்தவனாக மாற ஆசை வந்தது.

எல்லாருக்கும் நல்வழி காட்டும் புனிதர் ஒருவர் காட்டுக்குள் வாழ்வதாக அவன் அறிந்து, அந்தப் புனிதரைத் தேடி காட்டுக்குள் சென்றான்.

அவரிடம் போய் அந்தப் பாவி, சுவாமி, நான் ஒரு பெரிய பாவி ! மனம் திரும்பி நல்லவனாக வாழ ஆசைப்படுகின்றேன். எனக்கு நல்வழி காட்டுங்கள் என்றான். அந்தப் பாவியைப் பார்த்து அந்த முனிவர், நீ போய் ஒரு வெங்காயத்தாமரைச் செடியைக் கொண்டு வா என்றார். அவனும் கொண்டு வந்தான். அந்த முனிவர், இந்தச் செடியைக் கொண்டு போய் கடலில் எறிந்து விட்டு வா என்றார். அதை எடுத்துக்கொண்டு அவன் கடற்கரைக்குச் சென்றான். அவன் எத்தனை முறை அந்தச் செடியை கடலுக்குள் எறிந்தாலும் அத்தனை முறையும் அந்தச் செடியைக் கரைக்குக் கொண்டுவந்து சேர்த்தன அந்தக் கடலலைகள்.

பாவி திரும்பி வந்தான். நடந்ததை முனிவரிடம் சொன்னான். அதற்கு அந்த முனிவர், மகனே! அந்தக் கடலுக்கு நன்றாகத் தெரியும். ஒரு செடி கடலுக்குள் புகுந்தால் போதும் ! அது வளர்ந்து, படர்ந்து கடல் முழுவதையும் அடைத்துவிடும். அதனால்தான் அந்தச் செடி உள்ளே வராதபடி அந்தக் கடலலைகள் அதைத் தூக்கி எறிந்திருக்கின்றன.

உன் மனம் முழுவதையும் பாவத்தால் நிரப்ப ஒரு சிறு பாவம் போதும் ! ஆகவே ஒரு சிறு பாவம் கூட உனக்குள் நுழையாமல் பார்த்துக்கொள், பாவம் உன் பக்கத்தில் வரும்போது அதைத் தூக்கி எறிந்துவிடு என்றார்.

அவனும் அவ்வாறே செய்தான். புனிதனானான். கடவுளுக்கு ஏற்புடையவனானான்.

மேலும் அறிவோம்.
அறத்தான் வருவதே இன்பம்மற் றெல்லாம்
புறத்த புகழும் இல (குறள் :39)

பொருள்: அறச்செயல்களால் வருவது மட்டுமே உண்மையான இன்பம் ஆகும். புகழையும் தரும். அதற்கு மாறான வழியில் வருபவை இன்பம் போலத் தோன்றினாலும் துன்பம் ஆகும் ; புகழையும் கெடுக்கும்.



இதோ இன்னொரு பரிசேயன்

 வானகத்தில் ஒருநாள் கடவுள் உலா வந்தார். தன்னையே அவரால் நம்ப முடியவில்லை . அவருக்கே ஒரே ஆச்சரியம். இறந்தவர் அனைவரும் மோட்சத்தில்! எவருமே இல்லை நரகத்தில்!

இது எப்படி? இறைவன் சிந்தனையில் சிறிது குழப்பம். “அப்படி என்ன, உலகில் அத்தனை பேருமா யோக்கியர்களாகி விட்டனர்? இல்லை, ஒருவேளை நாம்தாம் நீதியின் தேவனாகச் செயல்பட வில்லையா? எது எப்படி இருந்தாலும் எவருமே செல்லவில்லை யென்றால் நரகம் தான் எதற்கு? நமது தீர்ப்பை மறுசிந்தனை செய்ய வேண்டும்''.

வானதூதர் கபிரியேலை அழைத்தார். "அனைவரையும் மீண்டும் நம் நீதி அரியணைக்கு முன் வரச்சொல், பத்துக் கட்டளைகளை எடுத்து ஒவ்வொன்றாகப் படி" :

கபிரியேல் வாசித்தார். முதல் கட்டளை - "நாமே உன் கடவுள். எம்மைத் தவிர வேறு தெய்வங்கள் கூடாது. இந்தக் கட்டளைக்கு எதிராக என்று இறைவன் தொடங்கியதும் எங்கோ மூலையில் ஒருவன் முணுமுணுத்தான்: “ஞாயிறுக்கு ஞாயிறு ஒரே சருவேசுரனை விசுவசிக்கிறேன் என்று சொல்வது உம் காதில் விழவில்லையா?” "என்ன சொன்னாய்?" அதட்டலோடு கேட்டார் ஆண்டவர் "ஆலயத்தில் தான் ஒரே சருவேசுரன். அன்றாட வாழ்வில் மணமுடிக்க முகூர்த்த நேரம், நோய் வந்தால் தாயத்து, பயணம் செய்தால் சகுணம்... இப்படி ஓராயிரம் சருவேசுரன்கள் என்பதை மறைத்து யாரிடம் கதை விடுகிறாய்?” எங்கும் ஒரே அமைதி. இந்த முதல் கட்டளையை மீறியவர்கள் நரகத்துக்குச் செல்லுங்கள் என்றதும் சிலர் எழுந்து சென்றனர்.

இப்படியே கட்டளை-2, கட்டளை-3, கட்டளை-4, கட்டளை-5 என்று இடையிடையே சிறிது விளக்கிச் சொன்னதும் உள்ளம் உறுத்தப் பலர் சென்றனர் நரகம் நோக்கி.

கட்டளை-6 என்று கபிரியேல் சொல்லத் தொடங்குமுன்னேயே அங்கிருந்த அத்தனைபேரும் தலைகுனிந்தபடி புறப்பட்டு விட்டனர் - ஒருவரை, கட்டையாய் கருப்பாய் வழுக்கையாய் மொழுக்கையாய் ஒரு சந்நியாசியைத் தவிர.
கடவுள் பார்த்தார். மோட்சமே காலியாகிவிட்டது தரும் சங்கடமாய் இருந்தது. அதனால் கபிரியேலிடம் சொன்னார் “மீண்டும் அனைவரையும் மோட்சத்திற்குள் வரச்சொல்". கேட்டதும் அந்த சந்நியாசி சத்தமாகக் கத்தினாராம் "என்ன நீதி இது? இப்படி நடக்கும் கான்று முன்கூட்டியே சொல்லியிருக்கக் கூடாதா?" முன்னதாகத் தெரிந்திருந்தால் தானும் கொஞ்சம் இந்த ஆறாம் கட்டளையை அசைபோட்டிருக்கலாமே என்ற ஏக்கமோ என்னவோ!

இதோ இங்கே இன்னொரு பரிசேயன், இன்னொரு மூத்த மகன். இதுதான் தங்களையே நீதிமான்களாக நினைத்துக் கொள்ளும் புண்ணியவான்களின் புனிதம்.

பாவிகளுக்காக அல்ல பரிசேயர்களுக்காகவே இயேசு சொன்ன கதை தானே ஊதாரி மைந்தன் உவமை (லூக்.15:2,3). பாவி மனந்திரும்பிய கதை மட்டுமல்ல, தன்னையே நேர்மையாளன் என்று நினைப்பவன் மனம் திரும்ப வேண்டிய கதை.

தந்தையின் அன்புத் தழுவுதலுக்காக அறிவு தெளிந்து வீடு திரும்பும் தம்பியாக மட்டுமல்ல மனந்திரும்பி வரும் பாவியை மகனாக அணைத்து ஆட்கொள்ளும் தந்தையாக, தம்பியாக ஏற்று மகிழும் அண்ணனாக மாற, வாழ மனமாற்றத்துக்கு நம்மை அழைக்கும் காலமே தவக்காலம்.

நம் கடவுள் மன்னிக்கும் தந்தை. “அவர் உன் குற்றங்களை யெல்லாம் மன்னிக்கிறார். உன் நோய்களையெல்லாம் குணமாக்குகிறார்” (தி.பா.103:3) என்று தெம்போடு பாடும் திருப்பாடல் ஆசிரியர் தொடர்கிறார் “அவர் நம் பாவங்களுக்கு ஏற்ப நம்மை நடத்துவதில்லை. நம் குற்றங்களுக்கு ஏற்ப நம்மைத் தண்டிப்பதில்லை (தி.பா.103:10) ஆறுதலும் புதுவாழ்வும் தரும் வார்த்தைகள்.

ஆனால் அடுத்து வரும் தி.பா.103:12 தான் நம் ஆழ்ந்த சிந்தனைக்குரியது. “மேற்கினின்று கிழக்கு எத்துணை தொலைவில் உள்ளதோ அத்துனை தொலைவிற்கு நம் குற்றங்களை நம்மிடமிருந்து அகற்றுகிறார்"

மேற்கு எங்கே இருக்கிறது, கிழக்கு எங்கே இருக்கிறது? இதுதான் மேற்கு இதுதான் கிழக்கு என்று நிருணயிப்பது எது? ஒருவன் தான் நிற்கும் நிலையை வைத்தே, மேற்கு, கிழக்கு, மேற்குக்கும் கிழக்குக்கும் உள்ள தொலைவு எல்லாமே தீர்மானிக்கப்படுகின்றன. நிலைப்பாட்டில் கொஞ்சம் அசைந்து நகர்ந்தால் மேற்கு கிழக்காகலாம், கிழக்கு மேற்காகலாம். ஆக, நாம் எடுக்கும் நிலைப்பாடே இறைவனின் இரக்கத்துக்கும் மன்னிப்புக்கும் நம்மை உரித்தாக்குகிறது.

“என் தந்தையிடம் செல்வேன்” - இளையமகன் எடுத்த நிலைப்பாடு தந்தையிடம் கொண்டு போய்ச் சேர்த்தது - அடிமையாக அல்ல, மகனாக. மூத்த மகன் எடுத்த நிலைப்பாடோ, தந்தை வருந்தி அழைத்தும் அடிமை போன்று வீட்டுக்கு வெளியே நிற்க வைத்தது.

“அப்பா, கடவுளுக்கும் உமக்கும் எதிராக நான் பாவம் செய்தேன்" - இளையமகனின் இந்த நிலைப்பாடு, அவனது உள்ளத்தில் பாவ உணர்வை கிளர்ந்தெழச் செய்தது. அந்தக் குற்ற உணர்வு வளர்ச்சிக்கானது (பேதுருவுடையது போன்றது) அழிவுக்கானது அன்று (யூதாசுடையது போன்றது) தன்னை நீதிமானாக நினைத்த மூத்த மகனுடைய வாழ்வோ மந்த வாழ்வு, கடமைக்காக வாழும் பரிசேய வாழ்வு, பாதுகாப்போடு வாழும் போலியான வாழ்வு.

பசியே ஊதாரி மகனைத் தன்னிலை உணர வைத்தது. ஆன்மீகப் பசியோடு தாகத்தோடு இத்தவக்காலத்தில் தந்தையை நாடுவோம். அந்த ஒப்புரவு அருட்சாதனம் பெறத் தேவையானவை மூன்று என்பார். ஒப்புரவுப் பணியையே குருத்துவப் பணியாகக் கொண்ட தூய வியான்னி: 1. குருவானவரில் பிரசன்னமாக இருக்கும் கடவுளைக் காண விசுவாசம். 2. கடவுள் மன்னிப்புக்கான அருளைக் கொடுப்பார் என்ற நம்பிக்கை. 3. பாவத்தால் கடவுளைப் புண்படுத்தியதற்காக வருந்தவும் அவரை நேசிக்கவும் அன்பு.



நவீன், பிரவீன் என்ற இரு மாணவர்கள் வகுப்பில் சண்டை போட்டனர். அவர்கள் ஏன் சண்டையிடுகின்றனர்.? என்று ஆசிரியர் கேட்டபோது, நவீன் என்ற மாணவன், "சார், பிரவீன் என்னை முட்டாள் என்று திட்டுகிறான்” என்றான். ஆனால், பிரவீன் அவன் சொன்னதை மறுத்து, "இல்லை சார்! நவீன் தான் முதலில் என்னை முட்டாள் என்று திட்டினான்” என்று கூறினான். அதற்கு ஆசிரியர். "ஏண்டா நான் இங்கே ஒருத்தன் இருக்கின்றேன் என்பதை மறந்து விட்டீர்களா?" என்று கேட்டார். ஆசிரியரும் ஒரு முட்டாள்?

ஒரு வகையில் நாமனைவருமே முட்டாள்கள். நாம் செய்யும் எத்தனையோ காரியங்கள் முட்டாள் தனமானவை. ஆனால், ஒரு முட்டாள் தான் ஒரு முட்டாள் என்பதை ஏற்றுக் கொள்ளும்போது அவன் அறிவாளியாகின்றான். ஒரு பாவி, தான் ஒரு பாவி என்பதை ஏற்றுக் கொள்ளும்போது அவன் ஒரு நீதிமானாகின்றான். இந்த உண்மையை இன்றைய நற்செய்தி கூறும் "காணமற்போன மகன்" உவமை நன்கு உணர்த்தி, நம்மை மனமாற்றத்திற்கு அழைக்கிறது. கடவுளுடைய நிபந்தனையற்ற அன்புக்கும் மனிதருடைய முழுமையான மனமாற்றத்திற்கும் இவ்வுவமை சிறந்ததோர் எடுத்துக்காட்டு.

பாவம் என்பது கடவுளையே வெறுக்கும் அளவுக்கு ஒருவர் தம்மீது அன்பு செலுத்துவதாகும். இளைய மகன் தன்னுடைய தந்தையை வெறுத்தான்; தந்தை இறந்து போனால் நன்று என்று எண்ணினான். ஏனெனில் தந்தை உயிருடன் இருக்கும் வரை அவனுக்குத் தந்தையின் சொத்தில் பங்கு கிடைக்காது. அவன் சுதந்திரப் பறவையாகப் பறக்க முடியாது. அவ்வாறே பாவியும் ஒரு வகையில் 'கடவுள் செத்துவிட்டால் நல்லது: கடவுள் இருப்பது எனக்கு ஓர் இடையூறு. எனது கட்டுப்பாடற்ற வாழ்வுக்கு அவர் ஒரு வேகத்தடை. எனது முன்னேற்றத்துக்கு அவர் ஒரு முட்டு கட்டை' என்று எண்ணி மனக் கசப்படைகின்றான்.

பாவம் என்பது தந்தையாகிய கடவுளிடமிருந்து வெகு தொலைவில் செல்வது. சிற்றின்பப் பன்றிகள் கூட்டத்தில் வாழ்வது; பாவத் தவிட்டால் வயிற்றை நிரப்புவது. சுருக்கமாக, மகன் என்ற 2. யரிய நிலையிலிருந்து அடிமை என்ற இழிநிலைக்குத் தள்ளப்படுவது "பாவம் செய்கிற எவரும் பாவத்துக்கு அடிமை... வீட்டில் அடிமைக்கு நிலையான இடமில்லை " (யோவா 3:34-35).

மனநிலை பாதிக்கப்பட்ட ஒருவர் மல்லாக்கப் படுத்து ஒரு பாட்டைப் பாடினார். திடீரென்ற குப்புறப்படுத்து மற்றோர் பாடலைப் பாடினார். ஏன் அவர் அவ்வாறு செய்தார்? என்று அவரைக் கேட்டபோது அவர், "இசைத் தட்டைத் திருப்பிப் போட்டேன்" என்றார்.

காணாமற்போன இளைய மகன் மனமாற்றம் அடைந்தான். தனது வாழ்வு என்னும் இசைத் தட்டைத் திருப்பிப் போட்டான், மனமாற்றம் என்பது பாவத்தின் மறுநிலை. பாவம் என்பது கடவுளை வெறுக்கும் அளவுக்குத் தன்னை அன்பு செய்வது என்றால், மனமாற்றம் என்பது தன்னையே வெறுக்கும் அளவுக்குக் கடவுளை அன்பு செய்வதாகும்.

ஒரு காலத்தில் தன் தந்தையை வெறுத்த இளைய மகன் தன் இழிவுநிலையை உணர்ந்து தன்னை வெறுக்கத் தொடங்கினான். தன் தந்தையின் அன்பு அவனை உந்தித் தள்ளியது; அறிவு தெளிந்தான்; எழுந்தான்; தந்தையின் இல்லத்தை நோக்கித் திரும்பி நடந்தான். தன் பாவத்தை அறிக்கையிட்டான், தந்தையின் அரவணைப்பில் மூழ்கி அகமகிழ்ந்தான். தன் சுயவினையால் தனக்குத் தானே அவன் தேடிக்கொண்ட திண்டாட்டம், தந்தையின் அன்பு வரவேற்பால் மாபெரும் கொண்டாட்டமாக மாறியது. அவன் புதிய படைப்பாக மாறிவிட்டான். 'ஒருவர் கிறிஸ்துவோடு இணைந்திருந்தால் அவர் புதிதாகப் படைக்கப்பட்டவராய் இருக்கிறார். பழையன கழிந்து புதியன புகுந்தன அன்றோ ! இவையாவும் கடவுளின் செயலே" (2 கொரி 5:17-18).

மனமாற்றம் அடைய நமது அறிவு தெளிந்து, நாம் பாவி என்று எற்றுக் கொள்ள வேண்டும். மன்னன் தாவீது, கொலை, விபசாரம் ஆகிய இருபெரும் பாதகச் செயல்களைச் செய்தார். அவரது கொடிய பாவச் செயல்களை உணர்த்த வந்த இறைவாக்கினர் நாத்தான் கூறிய கதையைக் கேட்டுச் சமூக நீதியை நிலைநாட்டக் கொதித்தெழுந்தார், தன் சுய அநீதியைப் பற்றி அணுவளவும் அலட்டிக் கொள்ளவில்லை , இறைவாக்கினர், "நீயே அம்மனிதன்" (2 சாமு 12:7) என்று அவரது பாவநிலையைச் சுட்டிக்காட்டிய போது, "நான் ஆண்டவருக்கு எதிராகப் பாவம் செய்துவிட்டேன்" (2 சாமு 12:13) என்றார். "கடவுளே! தூயதோர் உள்ளத்தை என்னுள்ளே படைத்தருளும். உறுதி தரும் ஆவியை, புதுப்பிக்கும் ஆவியை, என்னுள்ளே உருவாக்கியருளும்" (திபா 51:10) என்று கண்ணீர் சிந்தி மன்றாடினார்.

சமூகப் பாவங்களையும் நிறுவனங்களின் ஊழல்களையும் மட்டுமே சுட்டிக்காட்டி, நமது சொந்தப் பாவநிலையை உணராது மறந்துப்போகும் ஓர் ஆபத்தான நிலையிலிருந்து நம்மை விடுவித்துக் கொள்ள இத்தவக்காலத்தில் முயலுவோம்.

மனமாற்றமடைய நாம் கடவுளின் மாபெரும் இரக்கத்தை எண்ணிப் பார்க்க வேண்டும், "ஆண்டவர் இரக்கமும் அருளும் கொண்டவர். அவர் நம் பாவங்களுக்கு ஏற்ப நம்மை நடத்துவதில்லை. நம் குற்றங்களுக்கு ஏற்ப நம்மைத் தண்டிப்பதில்லை " (திபா 103:8-10). " உலகினரின் குற்றங்களைப் பொருட்படுத்தாமல் கடவுள்
கிறிஸ்துவின் வாயிலாக அவர்களைத் தம்மோடு ஒப்புரவாக்கினார்" (2ஆம் வாசகம், 2 கொரி 5:13).

இளைய மகன் எதிர் பார்த்தது வேலைக்காரனுக்குரிய இடம், அடிமையின் உணவு. ஆனால், அவன் தந்தை அவனுக்களித்ததோ மகனுக்குரிய நிலை (கைக்கு மோதிரம், காலுக்கு மிதியடி, முதல் தரமான ஆடை, அன்பின் முத்தம், மாபெரும் விருந்து). கடவுள் பாவியை மன்னித்து ஏற்று. அவரது இல்லமாகிய திருச்சபையில் இடமளித்து, சமாதான முத்தம் அளித்து, நற்கருணைத் திருவிருந்தில் பங்களிக்கிறார். "இனி நீங்கள் அடிமைகள் அல்ல; பிள்ளைகள் தாம்" (கலா 4:7).

ஒப்புரவு அருளடையாளம் நாம் எவ்வளவு பெரிய பாவிகள் என்பதை உணர்த்துவதில்லை. மாறாகக் கடவுள் எவ்வளவு இரக்கம் உள்ளவர் என்பதை உணர்த்துகிறது. "ஆழ்கடல் ஆழ்கடலை அழைக்கிறது" (திபா 42:7), ஆம், நமது பாவம் என்னும் ஆழ்கடல், கடவுளின் இரக்கம் என்னும் ஆழ்கடலை அழைக்கிறது.

| இறுதியாக, தந்தை மகனை ஏற்றுக்கொள்ளும்போது, அண்ணன் தம்பியை ஏற்க மறுக்கின்றார், பாவியாகிய தம்பி வீட்டுக்குள்ளே இருக்க, நீதிமானாகிய அண்ணன் வீட்டுக்கு வெளியே நிற்கிறார். பிறரின் மனம் மாற்றத்தைக் கண்டு நாம் மகிழவேண்டும்; பழிவாங்கும் எண்ணம் கூடாது. ஏனெனில், "மனமாறத் தேவையில்லாத் தொண்ணூற்றொன்பது நேர்மையாளர்களைக் குறித்து உண்டாகும் மகிழ்ச்சியைவிட, மனம் மாறிய ஒரு பாவியைக் குறித்து விண்ணுலகில் மிகுதியான மகிழ்ச்சி உண்டாகும்" (லூக் 15:7).



அளவற்ற அன்புகொண்ட ஆண்டவரோடு ஒப்புரவாகுவோம்.

  ஒரு கோடீஸ்வரத் தந்தை இருந்தார். அவருக்கு ஒரே ஒரு மகன். தன்னுடைய மகன் எது கேட்டாலும் அதை உடனுக்குடன் வாங்கித் தருவார், ஒருபோதும் எதையும் அவர் இல்லை என்று சொல்லியதில்லை. அந்தளவுக்கு தந்தை அவனுக்கு செல்லம் கொடுத்து வளர்த்தார்.

  ஒருநாள் அவர் தன்னுடைய மகனுக்குப் பாடம் சொல்லிக்கொடுக்கும் ஆசிரியரிடம் சென்று, “என்னுடைய மகன் எப்படிப் படிக்கிறான்?” என்று கேட்ட, ஆசிரியரோ, “உங்கள் மகன் குறைந்த மதிப்பெண்களே எடுக்கிறான்; பணம் இருக்கிற திமிரில் யாரையும் மதிப்பதில்லை. ஊதாரித்தனமாக இருக்கிறான்” என்று சொல்லி மிகவும் வருத்தப்பட்டார். இதைக்கேட்ட தந்தை மனம் ஒடிந்துபோனார். தன்னுடைய மகனை எப்படியாவது நல்வழிப்படுத்தவேண்டும் என்று நினைத்தார்.

  மகனுக்குப் பிறந்தநாள் வந்தது. அன்று அவன் தந்தையிடம் வந்து, விலை உயர்ந்த பைக் ஒன்றை பரிசாக தரவேண்டும் என்று கேட்டுவிட்டு தன் நண்பர்களோடு ஊர் சுற்றப் போய்விட்டான். இரவு நீண்டநேரம் கழித்துத்தான் அவன் வீட்டுக்கு வந்தான். அந்நேரம் வரைக்கும் தந்தை அவனுக்காகக் காத்திருந்தார். அவர் அவனிடம் பரிசுப் பொருளைக் கொடுத்துவிட்டு, “அன்பு மகனே! இதில் நீ கேட்ட பரிசுப் பொருளும், கூடவே ஒரு புத்தகமும் இருக்கிறது. இந்தப்  புத்தகம்தான் என் வாழ்வில் மிகப்பெரிய உந்து சந்தியாக இருந்தது. நீயும் ஊதாரித்தனமாக இல்லாமல் கடமை உணர்வோடு வேலை பார்க்க இது உனக்கு உதவியாக இருக்கும்” என்றார். இதைக்கேட்ட மகனால் தந்தையின் பேச்சை பொறுக்க முடியவில்லை. தந்தை தன்னைக் குத்திக்காட்டி பேசுகிறார் என்று நினைத்துக்கொண்டு, அவர் கொடுத்த பரிசுப்பொருளை தூர வீசி எறிந்துவிட்டு, வீட்டைவிட்டு வெளியேறினான்.

  வருடங்கள் பல உருண்டோடின. ஆனால் தந்தையோடு மட்டும் அவன் ஒரு வார்த்தைகூட பேசவில்லை. தன்னுடைய வைராக்கியத்தோடு கூடிய கடின உழைப்பால் அவன் மிகப்பெரிய தொழிலதிபராக மாறி, தன்னுடைய நிறுவனத்தில் பொறுப்புடன் வேலை பார்த்துக்கொண்டிருந்தான்.
 
ஒருநாள் அவனுக்கு தந்தை இறந்த செய்தி வந்தது. அவனும் இறுதியாக தன்னுடைய தந்தையைப் பார்க்கச் சென்றான். அங்கே தந்தையின் உடல் இருந்த இடத்திற்குப் பக்கத்தில் ஒரு பொட்டலம் இருந்தது. அது முன்பொருநாள் அவனுடைய தந்தை அவனுக்குப் பிறந்தநாள் பரிசாகக் கொடுத்தது. அந்தப் பொட்டலத்தை அவன் பிரித்துப் பார்த்தான். அதில் அவன் கேட்ட விலை உயர்ந்த பைக்கின் சாவி இருந்தது. அப்போதுதான் அவன் உணர்ந்தான். தந்தை தன்னை எந்தளவுக்கு அன்பு செய்திருக்கிறார் என்று. காலம் முழுவதும் இப்படித் தந்தையின் உண்மையான அன்பை உணராமல் இருந்துவிட்டோமே என்று மனம் வருந்தி அழுதான்.
 
தவக்காலத்தின் நான்காம் ஞாயிற்றுக்கிழமையில் இருக்கும் நமக்கு இன்றைய நாள்  வாசகங்கள் “அளவுகடந்த அன்புகொண்டிருக்கும் கடவுளோடு ஒப்புரவாகுங்கள்” என்ற சிந்தனையை வழங்குகிறது. இரக்கமும், அன்பும் கொண்ட ஆண்டவரோடு ஒப்புரவாகவேண்டும் என்பதுதான் இன்றைய நாள் வாசகங்களின் சாராம்சமாக இருக்கிறது.
 
நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசுவின் புகழ்பெற்ற உவமைகளில் ஒன்றான ஊதாரி மைந்தன் உவமையை வாசிக்கின்றோம். இவ்வுவமையை ‘ஊதாரிமைந்தன் உவமை’ என்று சொல்வதைவிடவும், ‘ஊதாரித்தந்தை உவமை’ என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும் என்று தோன்றுகிறது. ஏனென்றால் இவ்வுவமை தந்தையின் – தந்தை கடவுளின் – அளவு கடந்த இரக்கத்தையும், அன்பையும் சுட்டிக்காட்டுவதாக இருக்கிறது. இப்போது தந்தை தன் இளைய மகன் மீது அதாவது ஊதாரி மகன்மீது எந்தளவுக்கு இரக்கம் கொண்டிருந்தார் என்பதை சித்தித்துப் பார்ப்போம்.
 
முதலாவதாக இளையமகன் தந்தையிடம் வந்து, சொத்தில் தனக்குள்ள பங்கை பிரித்துத்தருமாறு கேட்கும்போது அவர் அவனுக்கு (அவர்களுக்கு) சொத்தை பகிந்தளிக்கிறார் என்று வாசிக்கின்றோம். பொதுவாக ஒரு யூதத் தந்தையானார் சொத்தை அப்படி பகிர்ந்தளிக்க முடியாது. ஏனென்றால் இணைச்சட்ட நூல் 21:17 ல் சொல்லப்படுகிறது ‘தலைச்சன் பிள்ளைக்கு சொத்தில் இரண்டு பங்குதரவேண்டும்’ என்று. அப்படியானால் உவமையில் வரும் தந்தையானார் சொத்தில் மூத்தவனுக்கு இரண்டு பங்கும், இளையமகனுக்கு ஒருபங்கும் தந்திருக்கவேண்டும். ஆனால் அவர் அப்படிச் செய்யாமல் சொத்தை அவர்களுக்குப் சமமாகப் பகிர்ந்தளித்தார் என்றால் இது தன்னைவிட்டுப் பிரிந்துபோகும் இளையமகன் நன்றாக இருக்கவேண்டும் என்ற எண்ணத்தில் அவர் இப்படிச் செய்கிறார். இது ஒருவிதத்தில் தந்தையின் இரக்கத்தையே காட்டுகிறது.
 
இரண்டாவதாக ஊதாரித்தனமாக வாழ்ந்த இளையமகன் தன்னுடைய தவறை உணர்ந்து தந்தையிடம் திரும்பிவரும்போது, அவன் தொலையில் வரும்போதே தந்தை பார்த்துவிட்டு ஓடோடிச்சென்று அவனைக் கட்டித்தழுவி முத்தமிடுகிறார். அப்படியானால் தந்தை தன்னுடைய மகன் எப்போது தன்னிடம் திரும்பி வருவான் என்று ஆவலோடு காத்துக்கொண்டிருந்ததைக் காட்டுகிறது.
 
இந்த இடத்தில் நாம் 17 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புகழ்பெற்ற ஓவியரான ரேம்பரன்ட் (Rembrandt) என்பவர் வரைந்த ‘ஊதாரி மைந்தன் ஓவியத்தை’ இணைத்துப் பார்த்து சிந்திப்பது இன்னும் பொருத்தமாக இருக்கும் என்று தோன்றுகிறது. ஏனென்றால் Oil Painting என்ற வகையில் உருவாகி இருக்கும் அந்த ஓவியத்தில் தவறான வாழ்வு வாழ்ந்து, மனந்திரும்பி வரும் இளைய மகன் தன்னுடைய தந்தையின் பாதத்தில் விழுந்து மன்னிப்புக் கேட்கின்றான். அப்போது தந்தையானார் அவனை இருகரத்தால் மார்ப்போடு அணைத்துகொள்கிறார். அந்த இருகைகளில் வலக்கையானது  தாயின் கைபோன்று இருக்கிறது. அதாவது மனம்மாறி வரும் பிள்ளையை கடவுள் ஒருதாயைப் போன்று தேற்றி அரவணைக்கிறார் என்பதைச் சுட்டிக்காட்டுவதாக இருக்கிறது.

 மூன்றாவதாக உவமையில் இளையமகன் தந்தையிடம் வந்து, தன்னுடைய தவறை அறிக்கையிட்ட உடன், தந்தையானவர் தன்னுடைய பணியாளர்களிடம், “முதல்தரமான ஆடையைக் கொண்டுவந்து இவனை உடுத்துங்கள்; இவனுடைய கைக்கு மோதிரமும், காலுக்கு மிதியடியும் அணிவியுங்கள்; கொழுத்த கன்றை அடியுங்கள். நாம் விருந்துண்டு மகிழ்வோம்” என்கிறார். இங்கே கையில் மோதிரம் அணிவது என்பது இளையமகனை தந்தையானவர் தன்னுடைய மகனாக ஏற்றுக்கொள்வதற்குச் சமமாக இருக்கிறது.
 
ஆக ஊதாரித்தனமாக வாழ்க்கை வாழ்ந்த இளையமகன் தன்னுடைய தவறை உணர்ந்து மன்னிப்புக் கேட்கும்போது, அவனை அவனுடைய தந்தை மனதார மன்னித்து ஏற்றுக்கொண்டதுபோல, தந்தைக் கடவுளும் நாம் செய்யும் தவறுகளை மனதார மன்னித்து ஏற்றுக்கொள்வார் என்பதை இது நமக்கு உணர்த்துகிறது.

 விவிலியம் முழுமைக்கும் இந்த உண்மையைத்தான் நாம் தொடர்ந்து வாசிக்கின்றோம், திருப்பாடல் 103: 8 ஆம் வசனம் சொல்கிறது, “ஆண்டவர் இரக்கமும், அருளும் கொண்டவர்; நீடிய பொறுமையும், பேரன்பும் உள்ளவர்” என்று. எனவே அத்தகைய இரக்கமுள்ள கடவுளிடம் நாம் நமது பாவ வாழ்விலிருந்து மனமாறி, அவரோடு ஒப்புரவாகுவோம்.
 
தூய பவுல் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய இரண்டாம் வாசகத்தில் கூறுவார், “கடவுளோடு ஒப்புரவாகுங்கள்” என்று. ஆம், இந்த தவக்காலத்தில் நாம் அனைவருமே கடவுளோடு ஒப்புரவாக வேண்டும் என்றும்தான் இறைவார்த்தையானது நமக்கு அழைப்புத் தருகிறது. ஏனென்றால் இன்றைக்கு மனிதர்கள் உலக செல்வத்திற்குப் பின்னால், உலக காரியத்திற்குப் பின்னால் அலைவதைப் பார்க்கமுடிகிறது. கடவுளை மறந்து, மனம்போன போக்கில் வாழும் மக்கள்தான் அதிகமாக இருக்கிறார்கள். இத்தகைய சூழலில் நாம் கடவுளோடு ஒப்புரவாகுவது சாலச்சிறந்த ஒன்றாகும்.
 
மக்கள்மீது உண்மையான அன்பும், பாசமும், ஈகைக்குணம் கொண்ட அரசன் ஒருவன் இருந்தான். அவன் தன்னுடைய நாட்டில் ஓர் அருங்காட்சியம் வைத்திருந்தான். அதில் ஏராளமான அரியவகைப் பொருட்கள் இருந்தன. அந்த அருங்காட்சியத்திலிருந்து மக்களுக்குத் தேவையான எந்தப் பொருளையும் எடுத்துக்கொள்ளலாம் என்று அறிவிப்பு வேறு செய்திருந்தான். இதனால் மக்கள்கூட்டம் அங்கே அலைமோதியது. எல்லாரும் அருங்காட்சியத்திலிருந்த அரியவகைப் பொருட்களை எடுப்பதிலே தீவிரம் கட்டினார்கள்.
 
அந்நேரத்தில் சிறுவன் ஒருவன் அங்கே வந்தான். வந்தவன் அங்கே இருந்த படைவீரர்களிடம் சென்று, “இவ்வளவு பொருட்களையும் மக்களுக்கு தாராளமாகத் தரும் நல்ல உள்ளம் படைத்த அரசரைப் பார்க்கவேண்டும்” என்றான். உடனே அந்த சிறுவன் அரண்மனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அரசர் முன்பாக நிறுத்தப்பட்டான்.
 
சிறுவனைப் பார்த்த அரசர், “தம்பி உனக்கு என்னவேண்டும்?” என்று கேட்டார். அதற்கு அந்தச் சிறுவன், “எனக்கு ஒன்றும் வேண்டாம், எல்லாப் பொருட்களையும் மக்களுக்குத் தாராளமாகத் தரும் நல்ல உள்ளம்கொண்ட உங்களைப் பார்த்ததே போதும்” என்றான். இதைக் கேட்ட அரசர் உள்ளம் மகிழ்ந்து அவனிடம், “பொருள் வேண்டும் என்று அலையும் மக்களுக்கு மத்தியில் அரசரைப் பார்த்தாலே போதும் என்று நினைத்த உன்னை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது” என்று சொல்லி அவனுக்கு அதிகமாக பொன்னும், பொருளும் கொடுத்து வழியனுப்பினார்.
 
பணம், பணம் என்று அலையும் மக்கள், அத்தகைய வாழ்க்கையை விடுத்து இறைவன் மட்டும்போதும் என்று அவரோடு நல்லுறவு கொண்டு, ஒப்புரவாக வாழ்ந்தார்கள் என்றால் கடவுள் எல்லா ஆசிரையும், அருளையும் தருவார் என்பதை இந்த கதையானது நமக்கு எடுத்துரைக்கிறது.
 
ஆகவே தவக்காலத்தில் இருக்கும் நாம் ஒவ்வொருவரும் கடவுளின் அளவுகடந்த அன்பை உணர்ந்து வாழ்வோம். அவர் நம்மீது இரக்கமும், அருளும் கொண்டவர் என்பதை நமது வாழ்வில் அனுபவித்து, அதனை பிற மக்களுக்கும் எடுத்துப்போம். அதோடு மட்டுமல்லாமல் இறைவனோடு நல்லுறவு கொள்வோம். அப்போது இன்றைய முதல் வாசகத்தில் கேட்பதுபோல இறைவன் நம்மீது இருக்கும் பழிச்சொல்லை நீக்கி, நமக்கு அமைதியையும், இறையருளையும் தருவார்.





அவர் இனியவர்

திருவருகைக்காலத்தின் மூன்றாம் ஞாயிற்றை நாம் 'கௌதேத்தே தொமெனிக்கே' ('மகிழ்ச்சி ஞாயிறு') என்றழைப்பது போல, தவக்காலத்தின் நான்காம் ஞாயிற்றையும் 'தொமேனிக்கா லெயத்தாரே' ('மகிழ்ச்சி அல்லது அக்களிப்பு ஞாயிறு') என்று அழைக்கின்றோம். இன்றைய நாள் திருப்பலியின் வருகைப் பல்லவி மிக அழகாக இதை முன்வைக்கிறது: 'எருசலேமின்மேல் அன்பு கொண்ட அனைவரும் அவளுடன் அகமகிழ்ந்து அவள் பொருட்டு அக்களியுங்கள். அவளுக்காக புலம்பி அழும் எல்லாரும் அவளுடன் சேர்ந்து மகிழ்ந்து கொண்டாடி ஆர்ப்பரியுங்கள் ... நீங்கள் நிறைவடைவீர்கள் ... நிறைவாக அருந்தி இன்பம் காண்பீர்கள்' (காண். எசா 66:10-11). எருசலேமை இயேசுவின் பாடுகள், இறப்பு, உயிர்ப்போடு நாம் உருவகப்படுத்தினோம் என்றால், அவரோடு அவருடைய பாடுகளுக்காக அழும் நாம், அவருடைய உயிர்ப்பில் அக்களிப்போம் என்பதே நிதர்சனமான உண்மை. ஆக, தவக்காலத்தின் இலக்கு துன்பம் அல்லது பாவம் அல்ல. மாறாக, மகிழ்ச்சி அல்லது வெற்றியே. ஆக, இந்த ஞாயிறு அந்த மகிழ்ச்சியின், வெற்றியின் முன்சுவையாக நமக்குத் தரப்படுகிறது.

ஆஸ்கர் ஒயில்ட் மிக அழகான ஒரு வரிக்குச் சொந்தக்காரர்: 'இறுதியில் இல்லாமே இனிமையாக இருக்கும். அது இனிமையாக இல்லை என்றால் அது இறுதி அல்ல.' ஆக, இயேசுவின் பாடுகளும், இறப்பும் இறுதி அல்ல. ஏனெனில், அவை இனிமை அல்ல. உயிர்ப்பே இறுதி. ஏனெனில், உயிர்ப்பே இனிமை. இன்றைய இறைவாக்கு வழிபாடு நமக்கு, 'அவர் (ஆண்டவர்) இனியவர்' என்பதைச் சுட்டிக்காட்டி, அவரின் இனிமையை நாமும் சுவைக்கவும், அதே இனிமையை நாமும் வாழவும் நமக்கு அழைப்புவிடுக்கிறது.

இன்றைய இறைவாக்கு வழிபாட்டின் மையம் இன்றைய பதிலுரைப்பாடலில் இருக்கின்றது: 'ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள்' (திபா 34:8). தாவீது அபிமெலக்கின்முன் பித்துப்பிடித்தவர் போலத் தம்மைக் காட்டியபோது அவன் அவரைத் துரத்திவிட, அவனிடமிருந்து தப்பி வெளியேறுகின்றார். இந்த நேரத்தில், தன் உயிர் காக்கப்பட்ட இந்த நேரத்தில், கடவுளின் கருணையைப் புகழந்து பாடுகின்றார் தாவீது (காண். 1 சாமு 21:13-15). நம் மனங்கள் சோர்வுறும் நேரத்தில் எல்லாம் இப்பாடலைப் படித்தால் மனம் புத்துயிர்பெறும் என்பது என் தனிப்பட்ட அனுபவம்.

'இனிமை' - இது ஒரு வித்தியாசமான சுவை. சுவை என்பது ஒருவகை நேரடி வேதியல் உணர்வு என வரையறுக்கிறது விக்கிபீடியா. மேற்கத்தியர் சுவை நான்கு என்பர்: இனிப்பு, கார்ப்பு, கசப்பு, புளிப்பு. தமிழர் முறைப்படி சுவை ஆறு: இனிப்பு ('கனி'), கார்ப்பு ('மிளகாய்'), கசப்பு ('பாகற்காய்'), புளிப்பு ('புளியங்காய்'), உவர்ப்பு ('உப்பு'), துவர்ப்பு ('பாக்கு'). இந்த அறுசுவைகளும் மனித உடலுக்குத் தேவை என்கிறது சித்த மருத்துவம். இந்த அறுசுவைகளில் இனிப்புக்கு மட்டும் ஒரு தனித்தன்மை உண்டு. அது என்னவென்றால், 'இனிப்பு' மட்டும்தான் நாம் ஒருமுறை சுவைத்தாலும், மீண்டும் சுவைக்கத் தூண்டும் சுவை. மற்ற ஐந்து சுவைகளும் பொதுவாக ஒருமுறை மட்டுமே சுவைக்கக்கூடியவை. மேலும், 'இனிப்பு' சுவைதான் நம் உள்ளத்திற்கு நேர்முகமான உணர்வுகளையும், நம் உடலின் புன்னகைத் தசைநார்களையும் உயிர்க்கவல்லது. ஆகையால்தான், வெற்றி, மகிழ்ச்சி, உடற்பயிற்சி சோர்வு போன்ற நேரங்களில் இனிப்பு சுவை தரப்படுகிறது. இந்தப் பின்புலத்தில்தான் - அதாவது, அடிக்கடி நாம் தேடுவதாலும், அது நமக்குப் புத்துயிர் அளிப்பதாலும் - தாவீது ஆண்டவரை, 'இனியவர்' ('இனிப்பானவர்') என்று அழைக்கின்றார். ஆக, ஆண்டவரின் இனிமையை ஒருமுறை சுவைத்தால் போதும். அவரிடமே நாம் திரும்பத் திரும்பச் செல்வோம். ஆண்டவர் தாவீதை அச்சத்தினின்று விடுவிக்கிறார், அவமானத்திலிருந்து விடுவிக்கிறார், மற்றும் நெருக்கடியினின்று விடுவிக்கிறார்.

ஆண்டவரின் இனிமையை அல்லது ஆண்டவரை இனியவராக இன்றைய மற்ற வாசகங்களும் நமக்கு முன்வைக்கின்றன.

இன்றைய முதல் வாசகம் (காண். யோசு 5:9,10-12) இஸ்ரயேல் மக்கள் யோசுவாவின் தலைமையில் யோர்தான் ஆற்றைக் கடந்து பாலும் தேனும் பொழியும் கானான் நாட்டிற்குள் நுழைந்த பின் நடந்த முதல் நிகழ்வுகளைச் சொல்கிறது. இரண்டு நிகழ்வுகள் நடக்கின்றன: முதலில், பாலைநிலத்தில் பிறந்த ஆண்களுக்கு விருத்தசேதனம் செய்யப்படுகிறது. இவர்கள் இந்தச் சடங்கால் ஆண்டவருக்கு அர்ப்பணமானவர்கள் ஆகின்றார்கள். இவர்களின் பெற்றோர் பாலைநிலத்தில் மோசேக்கும் கடவுளுக்கும் எதிராக முணுமுணுத்ததால் கடவுளால் கொல்லப்படுகின்றனர். இந்தச் சடங்கு முடிந்ததுதும், ஆண்டவர் யோசுவாவிடம், 'இன்று எகிப்தியரின் பழிச்சொல்லை உங்களிடமிருந்து நீக்கிவிட்டேன்' என்கிறார். அது என்ன பழிச்சொல்? இஸ்ரயேல் மக்கள் எகிப்திலிருந்து புறப்பட்டவுடன் அவர்களைப் பின்தொடர்ந்து வருகின்ற எகிப்தியர், 'இஸ்ரயேல் மக்கள் மூடர்கள். ஏனெனில், தாங்கள் அறியாத ஒரு கடவுளைப் பின்பற்றிச் சென்று பாலைவனத்தில் நாடோடிகளாகத் திரிகிறார்கள். அவர்கள் கடவுளும் பொய். அவர்களுடைய கடவுளின் வாக்குறுதியும் பொய்' என பழித்துரைக்கின்றனர். ஆனால், இன்று, யோர்தானைக் கடந்து கானானில் மக்கள் குடியேறியவுடன் அவர்களின் பழிச்சொல் பொய்யாகிறது. கடவுள் தன் வாக்குறுதியை நிறைவேற்றி தன்னை உண்மையான கடவுள் என்று இஸ்ரயேல் மக்களுக்கும் எகிப்தியருக்கும் உணர்த்துகின்றார். இரண்டாவதாக, கில்காலில் இஸ்ரயேல் மக்கள் தங்கள் முதல் பாஸ்காவைக் கொண்டாடுகின்றனர். வாக்களிக்கப்பட்ட நாட்டில் கொண்டாடப்படும் முதல் பாஸ்காவும் இதுவே. இங்கே இவர்கள் நிலத்தின் விளைச்சலை உண்ண ஆரம்பிக்கின்றனர். உண்ட மறுநாளிலிருந்து மன்னா பொழிவது நின்றுவிடுகிறது. இது அவர்களுடைய வாழ்வில் ஒரு புதிய தொடக்கம். இதுவரை யாவே இறைவனோடு இருந்த தொப்புள் கொடி அறுந்து, இன்று இவர்கள் தாங்களாகவே தங்களின் சொந்தக் கால்களில் நிற்கத் தொடங்குகின்றனர். இவ்வாறாக, இறைவன் இவர்களைக் 'குழந்தைகள்' நிலையிலிருந்து 'பெரியவர்கள்' என்ற நிலைக்கு உயர்த்துகின்றார்.

ஆக, இறைவனின் இனிமை இங்கே இரண்டு நிலைகளில் வெளிப்படுகிறது: ஒன்று, அவர் பழிச்சொல் நீக்குகின்றார். இரண்டு, அவர்களுக்கு புதிய தொடக்கத்தைத் தருகின்றார்.

இன்றைய இரண்டாம் வாசகம் (காண். 2 கொரி 5:17-21) பவுலடியார் தான் பெற்றிருக்கின்ற ஒப்புரவுத் திருப்பணி பற்றி கொரிந்து நகர மக்களுக்கு எடுத்தியம்புவதாக அமைந்துள்ளது. இவ்வாறாக, தன் திருத்தூதுப்பணியின் ஒரு முக்கிய அங்கமாக ஒப்புரவுப் பணியை முன்வைக்கின்றார். பாவம் இயல்பாகவே என்னைக் கடவுளிடமிருந்தும் ஒருவர் மற்றவரிடமிருந்தும் பிரித்துவிடுகிறது. கடவுளுக்கும் நமக்கும் பாவத்தால் எழுப்பப்பட்ட சுவரை உடைத்து, இருவரையும் இணைக்கும் பாலமாக கிறிஸ்து விளங்குகின்றார். ஆக, 'கிறிஸ்துவோடு ஒருவர் இணைந்திருக்கும்போது அவர் புதிதாகப் படைக்கப்பட்டவராய் இருக்கிறார். பழையன கழிந்து புதியன புகுந்தது அன்றோ! இவை யாவும் கடவுளின் செயலே' என்று சொல்லும் பவுலடியார், இந்த ஒப்புரவு முழுக்க முழுக்க கடவுளின் முன்னெடுப்பாக இருக்கிறது என்பதையும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறார். ஏனெனில், 'நாம் கிறிஸ்து வழியாகத் தமக்கு ஏற்புடையவராகுமாறு கடவுள் பாவம் அறியாத அவரைப் பாவநிலை ஏற்கச் செய்கிறார்.' அதாவது, கிறிஸ்து பாவநிலையை ஏற்றாரெனில், பாவத்தின் விளைவான இறப்பை ஏற்றார். ஆனால், அந்த இறப்பிலிருந்து அவர் உயிர்த்ததால் நம்மையும் அவரோடு இணைந்து புதுப்படைப்பாக்குகிறார்.

ஆக, இறைவனின் இனிமை இங்கேயும் இரண்டு நிலைகளில் வெளிப்படுகிறது: ஒன்று, கிறிஸ்து வழியாக இவ்வுலகைத் தம்மோடு ஒப்புரவாக்கி அதற்கு புத்துயிர் தருகின்றார். இரண்டு, இந்தப் பணி மற்றவர்களுக்கு அறிவிக்கப்படுமாறு திருத்தூதர்களிடம் இந்த ஒப்புரவுச் செய்தியை ஒப்படைக்கின்றார்.

இன்றைய நற்செய்தி வாசகம் (காண். லூக் 15:1-3,11-32) நமக்கு மிகவும் அறிமுகமான ஓர் உவமை. 'ஒரு தந்தையும் இரண்டு மகன்களும்' எனப்படும் இந்த எடுத்துக்காட்டை இயேசு, பரிசேயர் மற்றும் மறைநூல் அறிஞரின் முணுமுணுப்பிற்கு எதிர்சான்றாக வைக்கின்றார். ஆனால், பல நேரங்களில் இந்த எடுத்துக்காட்டை நாம் ஒப்புரவு வழிபாட்டிற்கு எடுத்து, இளைய மகனைப் போல மனம் திரும்ப வேண்டும் என்று சொல்லி இதன் பொருளை நீர்த்துப்போகச் செய்துவிடுகிறோம். இங்கே, கவனமையம் அல்லது கவனக்குவிப்பு இளைய மகனோ அல்லது மூத்த மகனோ அல்ல. மாறாக, தந்தையே. இக்கதையில் வரும் தந்தை தொடக்கமுதல் இறுதிவரை இனியவராக, கனிவுடையவராக, இரக்கம் உடையவராக இருக்கிறார். இயேசு தன் சமகாலத்தில் இரண்டு வகை மக்களோடு உறவாடுகிறார்: ஒன்று, வரிதண்டுபவர்கள், பாவிகள். இவர்கள் யூத சமூகத்தில் ஒதுக்கப்பட்டவர்களாகக் கருதப்பட்டனர். இரண்டு, யூதச் சட்டம் மற்றும் முறைமைகளுக்கு பிரமாணிக்கமாய் நடந்த பரிசேயர்களும் மறைநூல் அறிஞர்களும். இந்த இரண்டாம் குழுவினர், இயேசு முதல் குழுவினரோடு உறவாடுவதைக் கண்டு இடறல்பட்டனர். இந்த இரண்டு குழுக்களும் இரண்டு மகன்களையும் குறிக்க, உவமையில் வரும் தந்தை இயேசுவின் அல்லது கடவுளின் உருவகமாகிறார்.

இக்கதை நமக்குத் தெரியும். சுருக்கமாகச் சொன்னால், தூரத்திற்குச் செல்கின்ற இளைய மகன் இல்லம் திரும்புகிறான். வீட்டிற்குள்ளேயே இருக்கின்ற மூத்த மகன் இல்லம் திரும்ப மறுக்கிறான். இவ்விரண்டு கதைமாந்தர்களுக்காகவும் வீதிக்கு வருகின்றார் தந்தை: முதல் மகனை அரவணைத்துக் கொள்ளவும், இரண்டாம் மகனை அழைத்துச் செல்லவும். இக்கதையில் அப்பாதான் கதாநாயகன். ஏனெனில், இரண்டு மகன்கள் வீட்டிற்கு வரும் நேரத்தில் தந்தை அங்கு இருந்தார். இளையமகன் வீட்டைவிட்டுப் புறப்பட்ட நாளிலிருந்து தந்தை இவனுக்காக ஊருக்கு வெளியில் நிற்கின்றார். எல்லாவற்றையும் இழந்து அவன் வரும்போது ஊரார் கேலிபேசிவிடக்கூடாது என்ற அக்கறையில் அங்கேயே நிற்கிறார் தந்தை. இளையமகனைத் தந்தை எதிர்கொண்டது ஏதோ ஒரு விபத்தால் - சான்ஸ் - அல்ல. மாறாக, விருப்பத்தால் - சாய்ஸ். தானே, தெரிந்து, நின்று, தழுவி, அரவணைத்து, அள்ளிக்கொள்கின்றார் தந்தை. இதுதான் இந்தப் பெயரில்லாத் தந்தையின் இனிமை. இந்த இனிமை இரக்கத்தோடு காத்திருக்கிறது. தன் மகன் ஏற்படுத்தி பொருள்செலவைப் பெரிதாகப் பார்க்கவில்லை. தன் மகனைத் தீர்ப்பிடவில்லை. தன் பெயரைக் கெடுத்தாலும் அதை பொருட்படுத்தவில்லை. சேறு, சகதி, அழுக்கு என வந்த மகனிடம், 'நீ போய் முதலில் குளித்து வா!' என்று சொல்லவில்லை. அவன் தனக்குரியது என எல்லாவற்றையும் அள்ளிக்கொண்டு போனாலும், அவனுக்குரிய முதல்தர ஆடை, கைக்கு மோதிரம், காலுக்கு மிதியடியைத் தயாராக வைத்திருக்கிறது இந்த இனிமை. தன் மூத்த மகன் இல்லம் நுழைய மறுத்தாலும் அவனைக் கடிந்துகொள்ளாமல் அவனுக்கு விளக்கம் தருகிறது அவனுடைய பார்வையை அகலப்படுத்துகிறது இந்த இனிமை.

ஆக, இறைவனின் இனிமை இங்கேயும் இரண்டு நிலைகளில் வெளிப்படுகிறது: இளைய மகனுக்கு இரக்கமாக, கனிவாக, தழுவலாக, கரிசனையாக வெளிப்படுகிறது. மூத்த மகனுக்கு, விளக்கம் சொல்லிப் புரிய வைத்து, அவனுடைய கண்ணோட்டத்தை மாற்றுகிறது.

இவ்வாறாக, இன்றைய முதல், இரண்டு, மற்றும் மூன்றாம் வாசகங்கள், திருப்பாடலோடு இணைந்து 'இறைவனின் இனிமையை' அல்லது 'அவர் இனியவர்' என்பதை நமக்குக் காட்டுகின்றன. 'அவர் இனியவர்' என்றால் 'அந்த இனிமையை' நாம் அனுபவிக்கிறோம் என்றால், அவரைப் போல, 'நாம் இனியவர்' ஆவது எப்படி?

1. பழிச்சொல் நீக்கும் இனிமை

இஸ்ரயேல் மக்கள் வாக்களிக்கப்பட்ட நாட்டிற்குள் நுழையும்போது அவர்கள் வெளிப்புறத்தில் அவர்களுக்கு உணவு, பாதுகாப்பு, உடைகள், வீடு  என எல்லாம் இருந்தாலும் அவர்களின் உள்ளத்தில் ஒரு நெருடல் இருக்கிறது. அதுதான் எகிப்தியரின் பழிச்சொல். அந்தப் பழிச்சொல் அவர்கள் எந்த நன்மையையும் சுவைத்து அனுபவிக்க, அவர்களின் மகிழ்ச்சியை எதிர்கொள்ள அவர்களுக்குத் தடையாக இருக்கின்றது. இறைவன் இந்தப் பழிச்சொல்லைத் துடைக்கின்றார். 'நீங்கள் முட்டாள்கள், ஏமாளிகள், உங்கள் கடவுள் பொய்யர், நீங்கள் அழிந்துபோவீர்கள்!' என்ற பழிச்சொல்லைத் துடைக்கின்றார். இன்று நாம் அறிந்துகொள்ள வேண்டியதும் இதுதான். இறைவன் நம்மேல் உள்ள பழிச்சொல் அனைத்தையம் துடைக்க வல்லவர். 'இதோ என் அன்பார்ந்த மகன்-மகள்' என்று அவர் உங்களையும் என்னையும் அழைக்கும் அந்த நொடியே அனைத்துப் பழிச்சொல்லையும் துடைத்துவிடுகிறார். ஊரார் நம்மை 'விலைமாதுகளுடன் உறவு கொண்டவன்,' 'பன்றி மேய்த்தவன்,' 'பன்றியின் உணவை உண்டவன்,' 'தந்தை சொல் கேளாதவன்' என்று சொன்னாலும், சொந்த அண்ணனே, 'உம் மகன்' என்று மூன்றாம் நபராகப் பார்த்தாலும் இறைவன் பழிச்சொல்லை நீக்குகிறார். 'நான் உன் வீட்டு வேலைக்காரன்' என்று சொன்ன வாயெடுத்தவனை அதற்கு மேல் பேசவிடாமல் மகனுக்குரிய நிலையில் வைத்துக்கொள்கிறார். ஆக, இறைவன் என் பழிச்சொல்லை நீக்குகிறார் என்றால், நான் அவருடைய இனிமையை உணர்கிறேன் என்றால் என் நாவில் இத்தகைய சொற்கள் ஒருபோதும் வரக்கூடாது. இன்னா சொற்கள் விடுத்து இனிய சொற்கள் பேசும்போது நாமும் இனியவரே.

2. பழையன கழிக்கும் இனிமை

கிறிஸ்துவோடு உலகை ஒப்புரவாக்கும் இறைவன் பழையன அழித்தையும் அழிக்கின்றார். முதல் வாசகத்தில், இஸ்ரயேல் மக்களின் மன்னாவை நிறுத்துவதன் வழியாக மக்களின் பழைய சார்புநிலையை அழிக்கின்றார். நற்செய்தி வாசகத்தில், தந்தை இரண்டு மகன்களின் பழைய இயல்பையும் அழிக்கின்றார். இளைய மகன் கடந்த நாள்களில் என்ன செய்தான் என்றோ, எவ்வளவு கையிருப்பு கொண்டுவந்துள்ளான் என்றோ, அடுத்த என்ன ப்ளான் என்றோ கேட்கவில்லை. மூத்த மகன் வைத்திருந்த முற்சார்பு எண்ணத்தையும் அழிக்கிறார். ஆக, பழையது நமக்கு உற்சாகம் தந்தால் நலம். ஆனால், நம்மைக் கட்டிவைத்து நகர முடியாமல் செய்தால் அது கழிக்கப்பட வேண்டும். பழையதை மறந்து இன்றில் இப்பொழுதில் வாழும்போது இறைவனின் இனிமையை அனுபவிக்கவும் அதை மற்றவருக்கு வழங்கவும் முடியும். ஏனெனில், இறைவனுக்கு இன்று மட்டுமே உண்மை.

3. தழுவிக்கொள்ளும் இனிமை

இன்றைய நற்செய்தியில் வரும் தந்தையின் கணிதமும் லாஜிக்கும் வித்தியாசமாக இருக்கிறது. அவர் நிகழ்வுகள் ஒவ்வொன்றையும் பார்த்து வருத்தப்படாமல், நிகழ்வின் மொத்தத்தைப் பார்க்கிறார். 'நாம் மகிழ்ந்து கொண்டாடி இன்புற வேண்டும்' - இதுதான் இவருடைய மிஷன் ஸ்டேட்மண்டாக இருக்கிறது. அவன் போனான், அழித்தான், திரும்பினான். அதனால் என்ன? நடந்ததைப் பற்றி என்ன செய்ய முடியும்? அடுத்து என்ன செய்வது? 'மகிழ்நது கொண்டாடு' என்று இளைய மற்றும் மூத்த மகனை ஒருசேரத் தழுவிக்கொள்கிறார். இது யாரால் முடியும் என்றால், இறுதியை மனத்தில் வைத்துச் சிந்திப்பவரால் மட்டும்தான். 'ஒன்றின் தொடக்கமல்ல. அதன் முடிவே கவனிக்கத்தக்கது' என்கிறார் சபை உரையாளர். இறுதியில் எல்லாம் இனிமையாகும். ஆக, நிகழ்வுகளை இந்த இறுதியோடு இணைத்துப் பார்த்தால் இறைவனின் இனிமை நமக்குச் சொந்தமாகும்.

இறுதியாக, மகிழ்ச்சியின் ஞாயிற்றைக் கொண்டாடும் நாம், இறைவனின் இனிமையை அனுபவித்து மகிழ்வுறும் நாம், அதே இனிமையை மற்றவருக்கும் வழங்கும்போது மகிழ்ச்சி இரட்டிப்பாகும். காலையில் கூட்டைவிட்டுப் புறப்படும் பறவை மாலை கூட்டிற்குத் திரும்பலாம் என்ற நம்பிக்கையால்தான் சுற்றித் திரிகிறது. சுற்றித் திரிதல் தவறல்ல. கூடு திரும்பாமல் இருப்பதுதான் தவறு. இஸ்ரயேல் மக்கள் கானான் நாடு என்னும் கூடு திரும்பினர். கொரிந்து நகர மக்கள் ஒப்புரவு என்னும் கூடு திரும்பினர். இரு மகன்களும் தந்தையின் இல்லம் என்னும் கூடு திரும்பினர். இவர்கள் கூடு திரும்பக் காரணம் இவர்கள் அங்கே இனிமையைக் கண்டவர். இனிமையைக் காணும் இடம் நோக்கி நம் இதயம் சாயும் என்பது நம் மரபியல் ஊட்டம். அந்த இனிமை இறைவனிடம் என்றால் பயணம் இனிதாகும். ஏனெனில், அவர் இனியவர் - உங்களையும் என்னையும் போல!

No comments:

Post a Comment