Saturday 23 March 2019

தவக்காலத்தின் மூன்றாம் ஞாயிறு

தவக்காலத்தின் மூன்றாம் ஞாயிறு


இன்றைய நற்செய்தி வாசகங்கள்.


விடுதலைப் பயணம் 3:1-8, 13-15
1கொரிந்தியர். 10:1-6,10-12:17-4:1
லூக்கா 13:-1-9

பீட்டர் என்பவர் கடவுளைத் தேடும் மனிதர். ஒருவன் பீட்டரைப் பார்த்து நீ கடவுளைக் காண வேண்டும் என்றால் உயர்ந்த மலையின் உச்சிக்குச் செல்ல வேண்டும் என்றான். இதை நம்பி மலை ஏறத் தொடங்கினான் பீட்டர். இந்த ஆவலால் தூண்டப்பட்ட இவரை, பசியோ, தாகமோ, களைப்போ தடுக்க முடியவில்லை . இதே நேரம் கடவுள் என்ன செய்ய விரும்பினார் தெரியுமா?

மக்களோடு இருக்க விரும்பினார். மக்களின் துன்பம், துயரம், கண்ணீர் இவைகளால் தூண்டப்பட்டு இவர்களைத் தேற்ற வேறு வழியாக கீழே இறங்கி வந்தார். ஆனால் பீட்டர் தான் சென்ற வழியிலும், மலை உச்சியிலும் கடவுளைக் காண முடியவில்லை . இதை அறிந்த பீட்டர் கவலையோடும், மனக் கலக்கத்தோடு கடவுளே! நீர் எங்கே இருக்கிறீர் என்று உச்சக் குரலில் கேட்டார். ஒரு குரல் பதிலாக எதிரொலித்தது. அவர் இங்கே இல்லை . தன் மக்களோடு இருக்கிறார் என்ற பதில் வந்தது. இதை ஜாண் டோன் என்ற கவிஞர் தன் கவிதையில் இவ்வாறு விவரிக்கிறார். கடவுள் ஆகாயத்திலும், பாலைவனத்திலும், காட்டிலும், மேட்டிலும் இல்லை. கடவுள் நம்மோடு இருக்கிறார். இந்தப் பேருண்மையைத் தான் இன்றைய வாசகம் நமக்குத் தருகிறது.

இன்றைய மோசேயின் அழைப்பைப் பற்றிய விடுதலை பயண நூல் நமக்கு என்ன கூறுகிறது? மோசே ஒரு கொலைகாரன். பார்வோனின் அரண்மனையில் வளர்ந்தவன். எகிப்தியனை வெட்டி மண்ணிலே புதைத்தவன். இப்படிப்பட்ட கொலைகாரனைக் கடவுள் எரியும் புதரிலே எரியாது நின்று இஸ்ரயேல் மக்களுக்கு விடுதலை வீரராகத் திகழ அழைக்கின்றார். ஆம், பாவிகள் மனம் திரும்பினால் பரமனின் செயல்களில் சிறந்தவர்களாகத் திகழ்வார்கள் என்பதற்குத் தகுந்த சான்று.

புதிய ஏற்பாட்டிலே இயேசுவைச் சந்திக்கின்றோம். இயேசு எப்படிப்பட்டவர் என்பதற்கு ஓர் அழகான உவமையைத் தருகிறார். தோட்டத்திலே காய்க்காத அத்திமரத்தை ஏன் பூமிக்குப் பாரமாக உள்ளது, வெட்டி வீழ்த்தி விடு என்கிறார் தோட்டக்காரனை நோக்கி. ஐயா பொறும், இந்த ஆண்டு மட்டும் சுற்றிலும் கொத்தி எருப்போடுவேன். காய் தந்தால் சரி. இல்லையேல் வெட்டிவிடலாம் என்கிறான் தோட்டக்காரன். ஆம் தோட்டக்காரனைப் போன்றவர் தான் நம் ஆண்டவர் இயேசு. தந்தையிடம் பாவிகளுக்காகப் பரிந்து பேசுகிறார். எத்தகைய பெரிய வேசியாக இருந்தாலும் சரி பழைய பாவ வாழ்க்கையைக் களைந்துவிட்டு நற்செய்திக் கனி கொடுக்கும் வாழ்க்கைப் பிறப்பால் அவன் மீட்புப் பெறுவான். இதற்குச் சான்றுதான் இன்று வாசிக்கப்பட்ட மோசே வாழ்க்கை.

நிகழ்ச்சி

புனித பெலார்ஜியா. இவள் மயக்கும் அழகியாக இருந்தாள். ஆலயம் செல்வாள். இறைவார்த்தையைக் கேட்க அல்ல, மாறாக மனிதர்களின் மனதை மயக்க. ஆலயத்தில் ஆயர், "இதுவரை மனம் திரும்பாத பாவிகளே! இன்றாவது மனம் திரும்புங்கள். ஏனெனில் யாராலும் கடைசித் தீர்ப்பில் தப்ப முடியாது" என்றார். கூட்டத்தில் பலர் கண்ணீர் வடித்தார்கள். பெலார்ஜியாவின் இதயத்தையும் ஆயரின் ஆணித்தரமான மறையுரை அம்பாக துளைத்தது. முகத்தைத் துணியால் மூடித் தேம்பித் தேம்பித் தன் பாவத்திற்காக அழுதாள். மனம் திரும்பி பாவ அறிக்கையிட்டு புதிய வாழ்வில் நுழைந்தாள். இன்று அவள் மாபெரும் புனிதை (பயங்கர முடிவு 1 கொரி. 10:10-12).

இறைவன் பாவிகள் மனம் திரும்புவதை விரும்புகிறார். அதற்காகக் காத்திருக்கிறார். ஆகவே இது இறைவனது இரக்கத்தின் காலம். இஸ்ரயேலுக்குக் கொடுக்கப்பட்ட அதே வாய்ப்பு இன்று நம் ஒவ்வொருவருக்கும் கொடுக்கப்படுகிறது. இந்த வாய்ப்பை நான் விட்டுவிடக் கூடாது. ஆண்டவரின் இரக்கத்தை உணர்ந்த வர்களாக அவர் கொடுக்கின்ற வாய்ப்புக்களைப் பயன்படுத்தி அவர் எதிர்பார்க்கிற பலனைத் தருபவர்களாக வாழ உறுதி எடுப்போம்.


கடவுள் பொறுமையே உருவானவர்

காய்க்காத, கனி கொடாத, அத்தி மரத்தை வெட்டிவிடச் சொல்லும் முதலாளியிடம், தொழிலாளர், இந்த மரத்தை இப்போது வெட்ட வேண்டாம்; இந்த மரத்தைச் சுற்றிலும் கொத்தி எருபோட்டுக் காத்திருப்போம் என்று சொல்வதை இன்றைய நற்செய்தி நமக்குச் சுட்டிக்காட்டுகின்றது.

தொழிலாளரின் கூற்று வழியாக இயேசு நமக்குச் சுட்டிக் காட்டும் உண்மை என்ன? இயேசு நம்மைப் பார்த்து, கடவுள் பொறுமையே உருவானவர்; ஒரு பாவி சாகவேண்டும் என்று அவர் விரும்புவதில்லை; அவன் எப்படியாவது வாழவேண்டும் என்றே விரும்புகின்றார் ; அவர் பாவிகள் ஒரு நாள் மனம் திரும்புவார்கள் என்ற நம்பிக்கையோடு காத்திருப்பவர் என்று கூறுகின்றார்.

கடவுள் அன்பே உருவானவர். அன்பு பொறுமையுள்ளது .... எரிச்சலுக்கு இடம் கொடுக்காது ...... அன்பு அனைத்தையும் பொறுத்துக்கொள்ளும் ; அனைத்தையும் நம்பும் ; அனைத்தையும் எதிர்நோக்கி இருக்கும்; ..... (1கொரி 13 : 4-7) என்கின்றார் புனித பவுலடிகளார். இதோ நமது கடவுள் எப்படிப்பட்டவர் என்பதைச் சுட்டிக்காட்ட கதையொன்று!

விண்ணிலிருக்கும் வானதூதர்களுக்கெல்லாம் பல மாதங்களாக, பல ஆண்டுகளாக ஒரு சந்தேகம்! நினிவே நகர் மக்களைப் பார்த்து யோனா வழியாகக் கடவுள், நினிவே அழிக்கப்படும் என்று கூறினார். ஆனால் கடவுள் அவர்களை அழிக்கவில்லை (யோனா 3:1-10). விண்ணகத் தந்தை இயேசு வழியாக மனம் மாறாவிட்டால் நீங்கள்  அனைவரும் அழிவீர்கள் (லூக் 13:3) என்கின்றார். ஆனால் யாரையும் அவர் அழிக்கவில்லை .

விண்ணகத் தந்தையிடம் எல்லா வானதூதர்களும் சென்றார்கள்! கடவுள், என்ன எல்லாரும் சேர்ந்து வந்திருக்கின்றீர்கள்? என்றார்.

எல்லா சம்மனசுக்களும், ஆண்டவரே, உலகத்திலுள்ள எத்தனையோ பேர் உமக்கு எதிராகப் பாவம் செய்திருக்கின்றார்கள். உமது பத்துக் கட்டளைகளையெல்லாம் ஒன்றுமில்லாமல் ஆக்கிவிடுகின்றார்கள். நீர் எத்தனையோ இறைவாக்கினர்களை அனுப்பிவைத்தீர். யாருக்கும் அவர்கள் செவி கொடுக்கவில்லை. இறுதியாக உமது ஒரே பேரான மகனை அனுப்பிவைத்தீர். அவரையும் ஈவு இரக்கமின்றி சிலுவையிலே தொங்கவிட்டு கொன்றுவிட்டார்கள்.
 
 இவ்வளவு பாவங்களை அவர்கள் செய்திருந்தாலும் அவர்களை ஏன் நீர் விட்டுவைத்திருக்கின்றீர்? உமக்குக் கோபமே வராதா? என்றார்கள்.

அதற்குக் கடவுள் அவர்களைப் பார்த்து, என் பெயர் அன்பு; அன்புக்குள் எப்படி கோபம் இருக்க முடியும்?

அன்புக்கு மறுபெயர் பொறுமை ; அன்புக்கு மறுபெயர் நம்பிக்கை; அன்புக்கு மறுபெயர் எதிர்நோக்கு என்றார்.

மனம் திருந்தி, திரும்பி வந்த மகனின் (லூக் 15 : 11-32) தந்தை அவரது மகனுக்காகக் காத்திருந்தது போல, பாவிகளாகிய நமது மனமாற்றத்திற்காகக் காத்திருப்பவர் விண்ணுலகிலிருக்கின்ற நமது தந்தை .

நம்மையே நாம் எப்போதும் தூய்மையாக வைத்துக்கொள்ளவேண்டும். ஏனென்றால் நாம் வாழுகின்ற பூமி புனிதமானது. தொடக்க நூல் 1: 31 கடவுள் தாம் உருவாக்கிய அனைத்தையும் நோக்கினார். அவை மிகவும் நன்றாய் இருந்தன என்கின்றது. கடவுளின் கைவேலைப்பாடுகள் எப்படி புனிதமில்லாமல் இருக்க முடியும்?

நாம் வாழும் வீடு, இந்த உலகம் புனிதமாக இருப்பதால், அந்த வீட்டுக்குள் வாழும் நாம் அனைவரும் புனிதர்களாக, புனிதைகளாக இருக்க வேண்டும்!
மோசே காலத்தில் வாழ்ந்த நமது முன்னோர்களில் பெரும்பான்மையோர் உண்மையான இறைவனை மறந்து, தீயனவற்றின் மீது ஆசை வைத்தார்கள் (1 கொரி 10 : 6). நாமோ கிறிஸ்து என்னும் பாறையின் மீது நமது வீட்டைக்கட்டி அவர் தரும் அருளைப் பருகி விண்ணகத் தந்தைக்கு ஏற்புடைய மக்களாக வாழ்வோம் . 

மேலும் அறிவோம்:
ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்
பொறுத்தாரைப் பொன்போல் பொதிந்து (குறள் : 155).
பொருள் : அயலார் செய்த தீமையைப் பொறுத்துக் கொள்ளாமல் அவரைத் தண்டிப்போரைச் சான்றோர் ஒரு பொருளாகக் கருதி மதிக்கமாட்டார்கள். ஆனால் அயலார் செய்திடும் தீமையைப் பொறுத்தாற்றிக் கொள்வோரை அறவோர் அருமையும் அழகும் மதிப்பும் மிக்க பொன்னைப் போன்று போற்றிப் பேணிக் கொள்வர்.


ஏமாறாதே... ஏமாற்றாதே...


"கங்கை எங்கே போகிறாள்?” - ஜெயகாந்தனின் நாவல்.

எங்கோ இமயத்தில் பிறந்து எப்படியெல்லாமோ வளைந்தும் நெளிந்தும் காடுமலையைக் கடந்தும் வங்கக் கடலில் சங்கமமாகும் கங்கை போன்றவள் பெண். - இதுதான் கதையின் கரு.

கதைத் தலைவி கங்கா. வாழ்வில் தான் சந்தித்த காதல் தோல்வி, அதனால் வந்த துயரம், ஏமாற்றம், இழப்பு அனைத்தையும் மறக்க நினைத்துக் குடிக்கிறாள். குடிபோதைக்கு அடிமையாகிறாள். அதைக் கண்ட தோழி அவளைக் கடிந்து கொள்கிறாள்: “பாவி, இப்படியா மதுவை விழுங்குவது அது நஞ்சடி .

"நான் மதுவையா விழுங்குகிறேன், இல்லை என் துன்பத்தை விழுங்குகிறேன், என் தோல்வியை விழுங்குகிறேன், என் இழப்பை விழுங்குகிறேன், என் ஏமாற்றத்தை விழுங்குகிறேன்...'' படபடக்கிறாள் கங்கா .

''நீ உன்னையே ஏமாற்றிக் கொள்கிறாய்" - இது தோழி.

"அப்படியே இருக்கட்டும். பிறர் என்னை ஏமாற்றி என் வாழ்வைக் குலைக்கலாம். நான் என்னையே ஏமாற்றிக் கொள்ளக் கூடாதோ?"

கங்காவுக்கு என்ன பதில் சொல்வது? அவளது உணர்வு விரக்தியின் வெளிப்பாடு.

பிறர் நம்மை ஏமாற்றலாம். அதனால் தாழ்ந்துவிடமாட்டோம், தரம் இழந்து விடமாட்டோம். பிறர் செய்யும் சூழ்ச்சி, சதி பெரும்பாலும் நம் அறிவைக் கடந்தது. ஆனால் நாம் நம்மையே ஏமாற்றிக் கொள்ளக் கூடாது.

யூதர்கள் அப்படித்தான் தங்களையே ஏமாற்றிக் கொண்டிருந்தார்கள். சிலோவாம் விபத்து, கலிலேயர் படுகொலை இவைபற்றிய அவர்களது தவறான சிந்தனைகளைச் சாடுகிறார் இயேசு.

பாவம் என்பதே தன்னை ஏமாற்றிக் கொள்வதுதான்.

எங்கோ படித்த ஆங்கில வரிகள் : “Sin is a futile attempt on the part of the human being to be happy at the expense of his brothers and sisters because of his lack of relationship with the Father in heaven”. வானகத் தந்தையோடு கொண்ட உறவுச் சீர்கேட்டினால், தனது உடன்பிறப்புக்களை இரையாக்கி இன்பம் காண மனிதன் மேற்கொள்ளும் பயனற்ற முயற்சியே பாவம்.

தன்னை ஏமாற்றிக் கொள்ளும் இந்த அவலத்திலிருந்து மீளுதலே மனந்திரும்புதல்.

சிலோவாம் விபத்தில் சிதைந்து இறந்தார்கள், பிலாத்துவின் கொலை வெறியால் மாண்டு மடிந்தார்கள் என்றால் நம்மை விட அவர்கள் பெரும் பாவிகள் என்பதாலா? இந்நாள் வரை நாம் விட்டு வைக்கப்பட்டிருக்கிறோம் என்றால் நாம் பாவமற்றவர்கள் என்பதால் அல்ல. கடவுளின் இரக்கம் நம்மைக் காத்து வருகிறது. அந்த இரக்கத்தில் நம்பிக்கை வைத்து நாம் விரைவில் மனந்திரும்பாவிடில் அவர்களைப் போல நாமும் அழிந்துபடுவோம்.

மனந்திரும்பாவிடில் அழிவீர்கள் என்று எச்சரிக்கும் இயேசு மனந்திரும்ப இறைவன் தரும் மறுவாய்ப்புப் பற்றியும் உணர்த்துகிறார். அதுதான் காய்க்காத அத்தி மரத்தின் கதை (லூக்.13:6-9)

மனமாற்றம் அடையக் கடவுளைப் பற்றிய சரியான பார்வை வேண்டும். இறைவன் யார்? என்ற கேள்விக்கு இருவிதமான பதில்களைப் பெறுகிறார் மோசே. "இருக்கின்றவராக இருக்கின்றவர் நானே" (வி.ப.3:14) கடவுள் இருத்தலையே இயல்பாகக் கொண்டவர். நாமோ இருத்தலை இரவலாகப் பெற்றவர்கள். அவர் என்றும் இருக்கின்றவராகவே இருக்கின்றவர். நாமோ ஒருநாள் இல்லாதவராக இருப்போம். இந்த மெய்யியல் பார்வை மனித மனத்திலே பதியுமோ என்னவோ என்று நினைத்த கடவுள். மீண்டும் மோசேயை நோக்கிக் கூறுவார்: "உங்கள் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவர் - ஆபிரகாமின் கடவுள், ஈசாக்கின் கடவுள், யாக்கோபின் கடவுள்... இதுவே என்றென்றும் என் பெயர் " (வி.ப.3:15). இவரே இறையியல் சுட்டிக் காட்டும் இறைவன். உடன்படிக்கையின் இறைவன். உறவாடும் இறைவன். இரக்கமும் அருளும் கொண்டவர். அவர் நம் பாவங்களுக்கு ஏற்ப நம்மை நடத்துவதில்லை (தி.பா.103:8-10) நிலையான அருளன்பு இருப்பதால் பாவியின் அழிவை அல்ல, அவன் திருந்தி வாழ்வதையே விரும்புகிறார். (எசேக்.18:23)

உள்ளார்ந்த நேர்மையான மனமாற்றம் கடவுளின் மனத்தையே மாற்றிச் செயல்பட வைக்கும் என்பதற்கு எத்தனை விவிலியச் சான்றுகள்!

- 40 நாட்களில் அழிக்கப்படும் என்ற இறைவாக்கினரின் எச்சரிக்கை
கேட்டு மனம் மாறிய நினிவே மக்களைக் கண்டு இறைவன் தன் மனத்தையே மாற்றிக் கொள்ளவில்லையா? (யோனா 3:4-10)
 
தம் தீய வழிகளை விட்டுத் திரும்பினால் யூதாவின் இனத்தாருக்கு அளிக்க விருந்த தண்டனை பற்றித் தன் மனத்தை மாற்றிக் கொள்வதாக இறைவன் எரேமியாவுக்கு வாக்களிக்க வில்லையா? (எரேமி 26:3, 13)

வணங்காகக் கழுத்தினராகச் சிலை வழிபாட்டில் இன்பம் கண்ட இஸ்ரயேல் மக்களுக்குத் தீங்கிழைக்கும் எண்ணத்தை மோசேயின் பரிந்துரை காரணமாக மாற்றிக் கொள்ளவில்லையா? (வி.ப.32:914)

கடவுளுக்கு இரு கரங்கள். ஒன்று நீதியின் கரம். மற்றது இரக்கத்தின் கரம். அன்புக் கரத்தின் தழுவலுக்கு இணங்கவில்லை என்றால், இரக்கத்தின் கரம் சுருங்கும். நீதியின் கரம் நீளும். நீதியின் கரத்தின் முன்னே மனிதன் நிலைகுலைந்து போவான். ''எனவே நிலையாய் நிற்பதாக நினைக்கின்றவனுக்கு எச்சரிக்கை. அவன் நிலைகுலைந்து போகலாம்” (1 கொரி.10:12)



ஒரு பங்குத் தந்தை ஞாயிறு மறையுரையின்போது, "இந்தப்| பங்கு மக்கள் அனைவரும் நரகத்துக்குத்தான் போவார்கள்" என்று கத்தினார். அதைக் கேட்ட ஓர் இளைஞர் சிரித்தார். ஏன் அவர் சிரித்தார் என்று பங்குத் தந்தை கேட்டபோது அவர், "நான் இந்தப் பங்கு இல்லை; வெளியூர்ப் பங்கு" என்றார்,
நம்மிலே பலர் மற்றவர்கள்தான் மனம் மாற வேண்டும்; நான் மனம் மாறத் தேவையில்லை. மற்றவர்கள்தான் நரகத்துக்குப் போவார்கள். நான் நரகத்துக்குப் போக மாட்டேன் என்று நினைக்கின்றனர். ஆனால் இன்றைய நற்செய்தியில், கிறிஸ்துவிடம் இரண்டு விபத்துக்களில் இறந்தவர்களைப் பற்றிக் கூறிய போது இரு முறையும் இயேசு கூறியது: "இவ்விருவிபத்துக்களில் இறந்தவர்கள்தான் பாவிகள், மற்றவர்கள் நீதிமான்கள் என்று நினைக்காதீர்கள். மனம் மாறாவிட்டால் அனைவரும் அழிவீர்கள்". ஒவ்வொரு சாவும் கூறும் செய்தி: மனம் மாறுங்கள்.

மனம் மாற்றம் என்றால் மனதைக் கட்டுப்படுத்தும் முயற்சியல்ல. ஓர் இளைஞன் காமவேட்கையால் வேதனையுற்று, காட்டுக்குச் சென்று ஒரு மரத்தடியில் அமர்ந்து கண்களை மூடித் தியானம் செய்ய | முற்பட்டான், காலை 10 மணிக்குக் கண்களைத் திறந்தபோது அவன் | முன் நின்றுகொண்டிருந்த ஓர் அழகிய பெண் அவன் தியானத்தைக் | கலைத்து விட்டாள். இரண்டாம் நாள் அவன் தன் கண்களை ஒரு துண்டால் இறுகக் கட்டிக் கொண்டு தியானம் தொடங்கினாள். காலை 10 மணிக்கு மறுபடியும் அவன் முன் நின்ற அந்த அழகியை அவன் கண்ணால் காணவில்லை என்றாலும், அவள் காலில் அணிந்திருந்த கொலுசின் சத்தம் அவன் தியானத்தைக் கலைத்துவிட்டது.

| மூன்றாம் நாள் அவன் தன் கண்களைத் துண்டால் மூடியதுடன் தன் இருகாதுகளிலும் பஞ்சை வைத்து அடைத்துத் தியானம் செய்தான். காலை 10 மணிக்கு அவள் வந்தபோது, அவளை அவன் கண்ணால் பார்க்கவில்லை, கொலுசு சத்தத்தைக் காதால் (கேட்கவில்லை , எனினும், அவள் கூந்தலின் மல்லிகைப்பூ அவன் மூக்கைத் துளைத்து அவன் தியானத்தைக் கலைத்துவிட்டது.

நான்காம் நாள் அவன் தன் கண், காது, மூக்கு அனைத்தையும் அடைத்துவிட்டுத் தியானம் தொடங்கினான். காலை 10 மணிக்கு அவள் வந்தபோது, அவன் அவளைக் கண்ணால் காணவில்லை; கொலுசு சத்தத்தைக் காதால் கேட்கவில்லை; மல்லிகைப் பூவை மூக்கால் நுகர வில்லை , இருப்பினும் அவன் மனம், "பத்து மணி ஆகிவிட்டது. இந்நேரம் அவள் வந்திருப்பாள்" என்று நினைவூட்டி அவனை வறுத்தெடுத்தது!

மனமாற்றம் என்பது தீய எண்ணங்களுடன் போராடுவது அல்ல, விவிலிய அடிப்படையில், மனம் மாற்றம் என்பது, நம்மையே நமது வாழ்வின் மையமாக வைக்காமல் கடவுளை நம் வாழ்வின் மையமாக வைப்பது. பாவம் என்பது கடவுளுக்கு முதுகையும் உலகிற்கு முகத்தையும் காட்டுவது. மனம் மாற்றம் என்பது கடவுளுக்கு முகத்தையும் உலகிற்கு முதுகையும் காட்டுவது. "எனக்கு முகத்தையல்ல முதுகையே காட்டுகின்றனர்” (எரே 2:27).

மனமாற்றம் அடையக் கடவுளைப் பற்றிய சரியான எண்ணம் தேவை, கடவுள் யார்? இன்றைய முதல் வாசகத்தில் கடவுள் மோசேவிடம் இருக்கின்றவராக இருக்கிறவர் நானே" (விப 3:14) என்று தம்மை வெளிப்படுத்துகிறார். மெய்யியல் அடிப்படையில் கடவுள் என்றும் இருக்கிறவர் ; முதலும் முடிவும் இல்லாதவர். அவரிடம் மாற்றமோ மாற்றத்தின் நிழலோ கிடையாது (யாக் 1:17). ஆனால் இறையியல் அடிப்படையில் கடவுள் அன்பே உருவானவர் (1 யோவா 4:16). இன்றைய பதிலுரைப் பாடல் கூறுவதுபோல, "ஆண்டவர் இரக்கமும் அருளும் கொண்டவர்; நீடிய பொறுமையுள்ளவர். நம் குற்றங்களை யெல்லாம் மன்னிக்கிறார். நம் நோய்களை யெல்லாம் குணமாக்குகிறார்" (திபா 103).
கடவுள் அன்பினால் மனிதனைப் படைத்தார். அவன் பாவம் செய்தபோது நீதியின்படி அவனைத் தண்டித்தார். ஆனால் இரக்கமிகுதியினால் அவனை மீட்டருளினார். கடவுளிடம் அன்பு உண்டு; நீதியும் உண்டு. ஆனால் அனைத்துக்கும் மேலாக அவரிடம் இரக்கம் உண்டு. எனவேதான் அவர் பாவியின் அழிவை விரும்பாமல், அவன் மனம் மாறி வாழ்வதையே விரும்புகிறார் (எசே 18:23).

கடவுள் நீடிய பொறுமையுள்ளவர். மூன்று ஆண்டுகளாகக் கனி கொடாத அத்தி மரத்தை வெட்டி வீழ்த்தாமல், அது கனி தரும் என்று எதிர்பார்த்து அதற்கு உரமிடுபவர் (லூக் 13:6-9). ஆனால் அதே நேரத்தில் கனி தராத அத்தி மரத்தைச் சபிக்கவும் செய்கிறார் (மத் 21:18-19).

கடவுள் நம்மிடம் என்ன எதிர்பார்க்கிறார் என்பதை அவரே கூறுவதைக் கேட்போம். "நேர்மையைக் கடைப்பிடித்தலையும், இரக்கம் கொள்வதில் நாட்டத்தையும், உன் கடவுளுக்கு முன்பாகத் தாழ்ச்சியோடு நடந்து கொள்வதையும் தவிர வேறு எதை ஆண்டவர் உன்னிடம் கேட்கிறார்" (மீக 6:8).

நீதி, நேர்மை, இரக்கம், தாழ்ச்சி ஆகிய நற்கனிகளைக் கடவுள் நம்மிடம் எதிர்பார்க்கிறார். பாவிகளாகிய நாம் நமது ஆணவத் திமிரைத் தளர்த்தவும், ஏழைகளுக்கு உணவளித்து அவரின் வள்ளல் தன்மையைக் கண்டுபாவிக்கவும் கடவுள் நமக்குச் சிறப்பாக இத்தவக்காலத்தைக் கொடுத்துள்ளார்,

மணமில்லாத மண்ணில் வளரும் மல்லிகைச் செடி மணமிக்க மலரைத் தருகிறது. மணமில்லா மண்ணில் வளரும் மாமரம் சுவையான
மாங்கனியைத் தருகிறது. சுவையில்லாத புல்லைத் தின்கின்ற பசு சுவையான பாலைக் கொடுக்கிறது, ஆனால், கடவுளுடைய சுவையான அருள்வாக்கைக் கேட்டும், ஆற்றல்மிக்க அருளடையாளங்களில் பங்கேற்றும் நாம் நற்கனி கொடாதது ஏன்?

நாம் நற்கனித்தராவிட்டால், இன்றைய இரண்டாம் வாசகத்தில் இஸ்ரயேல் மக்களுக்கு நேரிட்ட அதே அழிவு நமக்கும் நேரிடும். இஸ்ரயேல் மக்கள் ஒரே ஆன்மீக உணவை உண்டும், ஒரே ஆன்மீகப் பானத்தைப் பருகியும் அவர்களில் பெரும்பான்மை யினர் கடவுளுக்கு உகந்தவர்களாய் இருக்கவில்லை. அவர்களுக்கு நிகழ்ந்தது நமக்கு ஓர் எச்சரிக்கை என்கிறார் திருத்தூதர் பவுல் (1 கொரி 10:1-6).

இன்று கிறிஸ்து நமக்கு விடுக்கும் எச்சரிக்கை: "மனம் மாறாவிட்டால் நீங்கள் அனைவரும் அழிவீர்கள்” (லூக் 13:3).

பாலைநிலத்திலிருந்து திரும்ப

புனித இஞ்ஞாசியாரின் புகழ்பெற்ற 'ஆன்மீகப் பயிற்சிகள்' ('Spiritual Exercises') நூலில், 'தெரிதலும் தெரிவுசெய்தலும்' ('Discernment') பற்றிச் சொல்லும்போது, இருவகை உணர்வுகளைப் பற்றிக் குறிப்பிடுகின்றார்: 'ஆறுதல்' ('consolation'), 'வெறுமை' (desolation). நம் வாழ்வின் நிகழ்வுகள் நாம் எதிர்பார்ப்பது போலச் செல்லும்போது, அல்லது நமக்கு நடக்கும் எல்லாம் நேர்முகமாகவே நடக்கும்போது, நாம் மேற்கொள்ளும் முயற்சிகள் அனைத்திலும் நாம் வெற்றி பெறுகிறபோது, நம் உறவுநிலைகள் நமக்கு அமைதி தருவனவாக இருக்கும்போது, நம் உடல்நலம் நன்றாக இருக்கும்போது போன்ற சூழல்களில் நாம் 'ஆறுதல்' கொள்கிறோம். ஆனால், 'ஆறுதல்' மட்டுமே நம் வாழ்வியில் அனுபவமாக இருப்பதில்லை. சில நிகழ்வுகள் நம் எதிர்பார்ப்பிற்கு முரணாக நடந்தேறும். நமக்கு நடக்கும் எல்லாம் எதிர்மறையாகவே நடக்கும். நம் முயற்சிகள் அடுத்தடுத்து தோல்வியைத் தரும். நாம் மேற்கொள்ளும் எந்த முயற்சியும் வெற்றி தராது. நம் உறவுநிலைகளில் அமைதி குலையும். நம் உடல்நலம் குன்றும். இச்சூழல்களில் நாம் அடையும் உணர்வின் பெயர் 'வெறுமை.'

நம் உடல் பசியால், தாகத்தால் வாடுவதுபோல, நம் மூளை புதிய சிந்தனை இல்லாமல் வறண்டு போவதுபோல, நம் இதயம் புதிய உறவுகளைத் தேடுவதுபோல, நம் உள்ளம் அல்லது ஆன்மாவும் வெறுமையை அனுபவிக்கிறது. ஆன்மாவின் ஊற்று சுரப்பது நிற்கும்போது, ஆன்மா என்னும் கிணறு வற்றும்போது நாம் என்ன செய்ய வேண்டும் என்பதையே இன்றைய இறைவாக்கு வழிபாடு நமக்குச் சுட்டிக்காட்டுகிறது.

தவக்காலத்தின் முதல் வாரத்தில் இயேசுவோடு புறப்பாலைவனத்தில் இருந்து, அவரோடு இணைந்து நம் நம்பிக்கையை அறிக்கையிட்டோம். கடந்த வாரம் அவரோடு உருமாற்ற மலையில் இருந்து நம் வாழ்வின் உறுதியற்ற நிலையை எதிர்கொண்டோம். இன்று, நம் ஆன்மீகப் பாலைநிலத்திலிருந்து திரும்புவோம்.

இன்றைய முதல் வாசகம் (காண். விப 3:1-8,13-15) மோசேயின் அழைப்பு நிகழ்வை நமக்குப் படம்பிடித்துக்காட்டுகிறது. 'மோசே மிதியானின் அர்ச்சகராகிய தம் மாமனார் இத்திரோவின் ஆட்டு மந்தையை மேய்த்துவந்தார்' என்ற தொடக்க வசனமே மோசேயின் பாலை அனுபவத்தை நமக்கு எடுத்துச் சொல்கிறது. எகிப்தின் வளம் மிக்க நைல் நதியிலிருந்து 'வெளியே எடுக்கப்பட்டு,' 'எபிரேயத் தாயே தாதியாகப் பாலூட்ட,' 'பாரவோனின் மகளின் அரவணைப்பில்' வாழ்ந்த மோசே, இப்போது, தனக்குச் சொந்தமில்லாத இடத்தில், தனக்குச் சொந்தமில்லாத ஆடுகளை, தனக்குச் சொந்தமில்லாத நிலத்தில் மேய்த்துக்கொண்டிருக்கிறார். இப்படியாக தனக்குத்தானே அந்நியராக நிற்கின்றார் மோசே. இந்த நேரத்தில்தான், முட்புதர் ஒன்று எரிந்துகொண்டிருப்பதையும் அது தீய்ந்துபோகாமல் இருப்பதையும் காண்கின்றார். 'இந்த மாபெரும் காட்சியைக் காண்பதற்காக நான் அப்பக்கமாகத் திரும்புவேன்' என்று மோசே முட்புதர் நோக்கித் திரும்புகின்றார். அவர் அணுகி வருவதைக் கண்டு, 'இந்த இடம் தூய்மையானது. இங்கே அணுகி வராதே. உன் மிதியடிகளை அகற்று' என எச்சரிக்கிறார் கடவுள். கடவுள் தன்னையே, 'ஆபிரகாமின் கடவுள், ஈசாக்கின் கடவுள், யாக்கோபின் கடவுள்' என்று மோசேயின் மூதாதையரின் கடவுளாகத் தன்னை முன்வைக்கின்றார். எகிப்தில் தன் மக்கள் படும் துன்பங்களைக் கண்டு தான் இறங்கி வந்திருப்பதாகச் சொல்கின்றார் கடவுள்.

'அவர் பெயர் என்ன?' என்று கேட்டால் நான் என்ன சொல்வேன்? என முதல் தயக்கத்தை வெளிப்படுத்துகின்றார் மோசே. மோசே தன் கடவுள் பற்றியும், தன் மூதாதையர் பற்றியும் அறியாமல் இருக்கிறார். அல்லது அவருடைய இந்த இக்கட்டான நிலையில் கடவுள் தன்னிடம் இல்லை என்றுகூட அவர் நினைத்திருக்கலாம். 'இருக்கின்றவாக இருக்கின்றவர் நானே' என்று தன் பெயரை வெளிப்படுத்துகின்றார் கடவுள். 'யிஹ்யே' என்ற இந்த எபிரேயச் சொல்லை, 'இருக்கின்றவராக இருக்கின்றவர்,' 'இருக்கின்றவற்றை இருக்கச் செய்கிறவர்' போன்று பல பொருள்களில் மொழிபெயர்க்கலாம். கடவுளின் பெயர் ஒன்றை மட்டும் நமக்குச் சொல்கிறது. 'இல்லாததை இருக்கச் செய்பவரும்,' 'இருப்பதை இருக்கச் செய்கிறவரும்' இறைவனே. மோசேயின் வெறுமையை நிரப்புகிறவரும், மக்களின் துன்பங்கள் துடைக்கிறவரும் இறைவனே. ஆக, இஸ்ரயேல் மக்கள் அனுபவித்த அடிமைத்தனம் என்னும் பாலைநிலைத்திலிருந்து அவர்களை விடுவிக்க மோசே என்னும் வெறுமையின் பாலைநிலத்தைத் தேர்ந்துகொள்கிறார் கடவுள். எப்படி எரிகின்ற முட்புதர் தீய்ந்துபோகவில்லையோ, அப்படியே கடவுளின் இருப்பு இஸ்ரயேல் மக்களுக்கு தீர்ந்துபோகவில்லை. இந்த அனுபவத்தையே இன்றைய திருப்பாடலில் (காண். 103) ஆசிரியர், 'ஆண்டவர் இரக்கமும் அருளும் கொண்டவர்' என்று புகழ்கின்றார்.

ஆக, 'ஆடு மேய்த்துக்கொண்டிருந்த மோசே' பாலைநிலத்திலிருந்து எகிப்திற்குத் திரும்புமாறு கடவுளால் அழைக்கப்படுகின்றார். இப்படித் திரும்பும் அவர் தன் கடவுளைக் கண்டுகொள்கின்றார். கடவுளைக் கண்டுகொண்ட அவர் கடவுள் அவருக்குத் தந்த பணியைச் செய்யப் புறப்படுகின்றார்.

இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். 1 கொரி 10:1-6, 10-12), சிலைகளுக்குப் படைக்கப்பட்ட உணவை உண்ணலாமா, வேண்டாமா என்பது பற்றிய அறிவுரையை கொரிந்து நகரத் திருச்சபைக்கு வழங்குகின்றார் பவுலடியார். கொரிந்து நகரத் திருச்சபை ஓர் அறிவுசார் திருச்சபை. எனவே, ஒரு சாரார், 'வேறு எந்தக் கடவுளும் இல்லை' (காண். 1 கொரி 8:4-6) என்ற புரிதலில், எல்லா உணவையும் - அது எந்த ஆலயத்தில் படைக்கப்பட்டாலும் - உண்ணலாம் என்ற எண்ணம் கொண்டிருந்தனர். மற்றொரு குழுவினர், இச்செயலைச் சிலைவழிபாடு என்று கருதி, மற்றவர்களின் இச்செயல்பாடு குறித்து இடறல்பட்டனர். இது நம்பிக்கையாளர்கள் நடுவே குழப்பத்தையும் பிரிவினையையும் உண்டாக்கியது. சிலைகள் கடவுளர்கள் அல்ல என்பதால் அவற்றுக்குப் படைக்கப்பட்ட யாவற்றையும் உண்ணலாம் என்று சொல்கின்ற பவுலடியார், அதே வேளையில், மற்ற நம்பிக்கையாளர்கள் இதைக் குறித்து இடறல் பட்டாலோ அல்லது இச்செயல் பிரிவினையை உண்டாக்கினாலோ, இச்செயல் தவிர்க்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்துகிறார் (காண். 1 கொரி 8:7-12, 10:23-30).

இந்தப் பின்புலத்தில், தனது அறிவுரைக்கு வலுசேர்க்கும் வண்ணம், முதல் ஏற்பாட்டு நிகழ்வு ஒன்றை எடுத்தாளுகின்றார் பவுல். இஸ்ரயேல் மக்கள் எகிப்தில் கடவுள் ஆற்றிய அரும் பெரும் செயல்களை அறிந்திருந்தாலும், மேகத்தின்கீழ் வழிநடத்தப்பட்டு, கடலைக் கால் நனையாமல் கடந்து, ஒரே ஆன்மீக உணவை உண்டு, ஒரே பாறையின் தண்ணீரைக் குடித்தாலும் அவர்கள் கடவுளுக்கு எதிராக முணுமுணுக்கவும், சிலைவழிபாட்டில் ஈடுபடவும் செய்தனர். இதனால், அவர்கள் கடவுளின் கோபத்திற்கும் தண்டனைக்கும் ஆளானார்கள். இந்த நிகழ்வைச் சுட்டிக்காட்டும் பவுலடியார், 'இவை யாவும் நமக்கு முன்னடையாளமாய்த் திகழ்ந்தன' என்கிறார். மேலும், கொரிந்து நகர மக்களும் 'ஒரே திருமுழுக்கு பெற்றாலும்,' 'ஒரே ஆன்மீக உணவை' (நற்கருணை) உண்டாலும், சிலைவழிபாட்டிலிருந்து அவர்கள் விடுவிக்கப்படுவதற்கு எந்தவித உத்தரவாதமும் இல்லை. இஸ்ரயேல் மக்களைப் போல கொரிந்து நகர மக்களும் பவுலின் அறிவுரைகளுக்கு எதிராக முணுமுணுக்கவே செய்தனர்.

ஆக, நம்பிக்கை கொண்ட கொரிந்து நகர மக்கள், சிலைவழிபாடு என்னும் தங்களின் பழைய பாலைநிலத்திலிருந்து, 'தண்ணீர் தரும் ஒரே பாறையாகிய கிறிஸ்துவை' நோக்கித் திரும்ப அவர்களை அழைக்கின்றார் பவுலடியார்.

இன்றைய நற்செய்தி வாசகத்தின் (காண். லூக் 13:1-9) முதல் பகுதி இரண்டு கொடூரமான நிகழ்வுகளோடு தொடங்குகிறது: ஒன்று, பலி செலுத்திக் கொண்டிருந்த கலிலேயரைப் பிலாத்து கொன்றான். இரண்டு, சீலோவாமிலே கோபுரம் விழுந்து  அங்கே வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த பதினெட்டுப் பேர் இறக்கின்றனர். இப்படி இறந்தவர்கள் எல்லாருமே எதிர்பாராத விதத்தில், இறப்புக்கான எந்தவித முன்தயாரிப்புமின்றி இறக்கின்றனர். நற்செய்தி வாசகத்தின் இரண்டாம் பகுதி, கனி தராத அத்திமரம் ஒன்று தன் தலைவரால் தான் எதிர்கொள்ளவிருக்கின்ற அழிவைப் பதிவு செய்கிறது. இந்நிகழ்வில் இயேசுவின் உருவகமாக வரும் தோட்டக்காரர், தலைவரிடம் அத்திமரத்திற்காக பரிந்து பேசி, கடைசி வாய்ப்பு ஒன்றைக் கெஞ்சிக் கேட்கின்றார்.

மேற்காணும் இரண்டு நிகழ்வுகள் வழியாகவும், காய்க்காத அத்திமரம் உருவகம் வழியாகவும் இயேசு தன் சமகாலத்தவரைத் தங்களின் 'பாலைநிலத்திலிருந்து உடனடியாக திரும்ப' அழைப்பு விடுக்கின்றார். எதிர்பாராத இடத்தில், எதிர்பாராத நேரத்தில் இறந்தவர்களைப் பாவிகள் என்று அடையாளப்படுத்தும் போக்கை விடுத்து, தாங்கள் அந்நிலையிலிருந்து விடுபட வேண்டும் என்றும், இறப்பு எந்த இடத்திலும் எந்த நேரத்திலும் வரலாம் என்பதால் உடனடியாக மனம் மாறவும், அந்த மாற்றத்திற்கு உறுதுணையாக இயேசுவைப் பற்றிக்கொள்ளவும் வேண்டும்.

ஆக, கனிதராத வாழ்வு என்ற பாலைநிலத்திலிருந்து கனிதருதல் என்ற நிலைக்குத் திரும்ப தம் சமகாலத்தவரை அழைக்கிறார் இயேசு.

இன்று நம் ஒவ்வொருவரின் தனிநபர் வாழ்வுநிலையை உடல்சார், அறிவுசார், உறவுசார், ஆன்மீகம்சார் என்று நான்கு பகுதிகளாகப் பிரிக்கலாம். இவற்றில் ஒவ்வொரு நிலையிலும் நாம் பாலைநில அனுபவம் பெறுகின்றோம். பசி என்பது உடல்சார் பாலை, அறியாமை என்பது அறிவுசார் பாலை, தனிமை என்பது உறவுசார் பாலை, வெறுமை, உறுதியற்ற தன்மை, தவறான தெரிவுகள் போன்றவை ஆன்மீகம்சார் பாலை. முதல் மூன்றுநிலைப் பாலை அனுபவங்களை நாம் மிக எளிதாக வெற்றிகொள்ள முடியும். ஆனால், நான்காம் பாலை - ஆன்மீகம்சார் பாலைநிலைத்தை - வெற்றிகொள்வது அவ்வளவு எளிதல்ல. மோசேக்கு கடவுளின் பெயர் தேவைப்பட்டது. கொரிந்து நகர மக்களுக்கு பவுலின் நினைவூட்டல் தேவைப்பட்டது. இயேசுவின் சமகாலத்தவருக்கு எச்சரிக்கையும் வேகமும் தேவைப்பட்டது.
இன்று நாம் உணரும் ஆன்மீகம்சார் பாலைநில அனுபவம் என்ன? அதிலிருந்து நாம் எப்படி வெளியேறுவது? அல்லது பசுமை நோக்கித் திரும்புவது?

இன்றைய இறைவாக்கு வழிபாடு நமக்கு மூன்று வழிகளைக் கற்பிக்கிறது:

1. இறைவனை அறிதல் வேண்டும்

மோசே இறைவனால் அழைக்கப்படுவதற்கும் அனுப்பப்படுவதற்கும் முன் இறைவனை அவர் அறிந்துகொள்கின்றார். இறைவனின் அழைப்பும் அனுப்பப்படுதலும் மோசேக்கு அவர் எதிர்பாராத இடத்தில், அவர் எதிர்பாராத நேரத்தில், அவர் தன்னுடைய வேலையில் மும்முரமாய் இருந்தபோது அருளப்படுகின்றது. இறைவனின் அழைப்பை மோசே இரண்டு நிலைகளில் கண்டுகொள்கின்றார்: ஒன்று, தன் ஆடுகளின் பக்கம் இருந்த தன் முகத்தை எரியும் முட்புதர் பக்கம் திருப்புகின்றார். இரண்டு, இறைவனின் பெயரை அறிந்துகொள்கின்றார். ஆடுகளிலிருந்து கண்களைப் முட்புதர் பக்கம் திரும்புவது எளிதன்று. ஆடுகளை விட்டுவிடத் தயாராக இருக்க வேண்டும். தன் பாதுகாப்பு வளையத்திலிருந்து வெளியேற வேண்டும். மலை என்னும் பாதுகாப்பின்மையை நோக்கிச் செல்ல வேண்டும். தன் மிதியடிகளைக் கழற்ற வேண்டும். சில நேரங்களில் நம் மனம் பாலை அனுபவத்தில் இருக்கும்போது, விரக்தியை அனுபவிக்கும்போது, நாம் நம் ஆடுகளை விட்டுவிடத் தயாராக இருப்பதில்லை. நம் பாதுகாப்பின்மையை அல்லது வலுவின்மையை ஏற்றுக்கொள்ளத் தயராhக இருப்பதில்லை. அந்நேரங்களில், 'இது என்ன? வித்தியாசமாக இருக்கிறதே! எனக்குள் வெறுமையும் இருக்கிறது. அதே வேளையில் நான் உயிரோடும் இருக்கின்றேனே!' என்று நம்மைப் பற்றி நாமே ஆச்சர்யப்பட்டுக் கொண்டால் அங்கே இறைவனை அறிதல் சாத்தியமாகும். அங்கே, ஒன்றும் 'இல்லாமையில்,' 'இருக்கின்ற இறைவன்' எல்லாவற்றையும் இருக்கச் செய்வார். இழந்ததையும் திரும்ப அளிப்பார். நாம் விட்டுவிட்டு ஓடிவந்த எகிப்திற்கே நம்மை புதிய பணிக்காக அனுப்புவார்.

2. அதீத நம்பிக்கை அகற்ற வேண்டும்

பிரபலமான டைட்டானிக் கப்பல் தன் மீது கொண்டிருந்த அதீத நம்பிக்கையால் தனக்கு முன் சென்ற படகின் எச்சரிக்கையை எடுத்துக்கொள்ளவில்லை. 'இறைவன் தங்களோடு இருக்கிறார்' என்ற அதீத நம்பிக்கையே, இஸ்ரயேல் மக்களை, 'நாங்கள் என்ன செய்தாலும் ஆண்டவர் அன்பு செலுத்துவார்' என்று நினைக்கத் தூண்டியது. ஆகையால்தான், அவர்கள் சிலைவழிபாட்டில் ஈடுபடத் தொடங்கினர். 'சிலைவழிபாட்டு உணவை விட வேண்டும்' என்ற எச்சரிக்கையையும் கொரிந்து நகர மக்கள் ஏற்றுக்கொள்வதாகத் தெரியவில்லை. ஆக, ஆன்மீகப் பாலை அனுபவம் சில நேரங்களில் நம் அதீத நம்பிக்கையாலும், எச்சரிக்கைகளை உதாசீனப்படுத்துவதாலும் வரலாம்.

3. செயல் மாற்றம் வாழ்வு மாற்றம்

சில நேரங்களில் நாம் பயம் அல்லது விரக்தி உணர்வுகளால் அல்லது எதிர்மறை உணர்வுகளால் ஆட்கொள்ளப்படும்போது என்ன செய்வதென்று தெரியாமல் இருக்கிறோம். அந்த மாதிரியான நேரங்களில் இரண்டு விடயங்கள் செய்ய வேண்டும் என்று சொல்கிறது இன்றைய நற்செய்தி வாசகம்: (அ) இதுவரை செய்யாத ஒன்றைச் செய்வது - அத்திமரத்தை தலைவர் வெட்டப்போகிறார் என்று முடிவெடுத்தவுடன் தோட்டக்காரர் உடனடியாக மரத்திற்கு உரம் போட ஆரம்பிக்கிறார். இதுவரை செய்யாத ஒன்றை இவர் செய்ய ஆரம்பிக்கிறார். (ஆ) செயலை மாற்றுவதன் வழியாக உணர்வை மாற்றுவது - இது முந்தைய விடயத்தின் நீட்சியே. அதாவது, மனதை பிஸியாக வைத்துக்கொள்ளுமாறு ஏதாவது ஒன்றைச் செய்துகொண்டே இருப்பது. இம்மாதிரியான நேரங்களில் நம் மனம் ஒன்றும் செய்யாமல் இருந்துகொண்டு, 'எல்லாவற்றையும் தள்ளிப்போடச்' சொல்கிறது.

இவ்வாறாக,

தவக்காலத்தின் மூன்றாம் ஞாயிறு நம் ஆன்மீகப் பாலைவனத்திலிருந்து நம்மை வெளியே வர அழைக்கிறது. 'வாழ்வில் எல்லாம் முடிந்துவிட்டது. இனி இந்த அந்நிய மண்ணும், ஆடுகளும்தான் என் வாழ்வு' என்று எண்ணிய மோசேயைத் தடுத்தாட்கொள்ளும் கடவுள் எகிப்தின் வளமையை நோக்கிக் திரும்ப அனுப்புகிறார். நம்பிக்கையின்மை என்ற பாலைநிலத்திலிருந்து நம்பிக்கையை நோக்கிச் சென்ற கொரிந்து நகர மக்கள் ஒருவர் மற்றவருக்கு இடறலாக இல்லாத வண்ணம் பரந்த மனம் கொள்கின்றனர். மாற்றம், அதுவும் உடனே மாற்றம் என்று தன் சமகாலத்தவரை அவர்கள் இருந்த 'கண்டுகொள்ளாமை, தள்ளிப்போடுதல்' என்னும் பாலைநிலத்திலிருந்து வெளியே அழைக்கிறார் இயேசு. ஆறுதலும், வெறுமையும் மாறி மாறி வரும் வாழ்வியல் அலைகள். வெறுமையில் கொஞ்சம் அண்ணாந்து பார்த்தால், அங்கே 'இருக்கின்ற அவர் இருக்கின்றவராக இருப்பார்' - இன்றும் என்றும்!




மனம்மாறி இறைவனிடம் திரும்பி வருவோம்.

 

இங்கிலாந்து நாட்டின் டார்லிங்டன் நகரில் வாழ்ந்த ஒரு திருடன் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனைக்குப் பிறகு வீடு திரும்பினான். வீட்டுக்கு வந்த அவனை யாருமே ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் அவன் வாழ்க்கையை வெறுத்துப் போயிருந்தான். ஒருநாள் அவன் தெருவில் நடந்துசென்று கொண்டிருந்தபோது, எதிரிலே அந்நகரின் மேயர் ஜான் மோர்சல் வந்துகொண்டிருந்தார். அவருக்கு இவனை நன்றாகவே தெரியும். உடனே  அவன், அவரிடமிருந்து எப்படியாவது தன்னை மறைத்துக்கொள்ள வேண்டும் என்று  ஒளிந்து ஒளிந்து சென்றான். அப்போது திடிரெண்டு ஒரு கை அவன் தோள்மேல் பட்டது. திரும்பி பார்த்த அவன் அதிர்ந்துபோனான். ஏனென்றால் அவன் எதிரே ஜான் மோர்சல் நின்றுகொண்டிருந்தார். அவர் அவன் தோள்மேல் கைபோட்டு, “என்ன சகோதரா! நன்றாக இருக்கிறீர்களா? என்று நலம் விசாரித்தார். இது அவனுக்கு இன்னும் அதிர்ச்சியைத் தந்தது. சிறிது நேரம் அவர் அவனிடம் பேசிவிட்டு, அங்கிருந்து நகர்ந்து சென்றார்.



வருடங்கள் பல சென்றன. ஒரு நாள், வேறொரு நகரில் அவன் ஜான் மோர்சலைப் பார்த்து,  மிகுந்த சந்தோசத்தோடு அவரிடம் சென்று, “ஐயா! என்னை ஞாபகம் இருக்கிறதா?” என்றான். ஒரு நிமிடம் அவனை அமைதியாகப் பார்த்துவிட்டு அவர் ஞாபகம் இருக்கிறது என்பதுபோல் தலையாட்டினார். அப்போது அவன் அவரிடம்இ “ஐயா! அன்றைக்கு மட்டும் நீங்கள் என் தோள்மேல் கைபோட்டு, அன்பாகப் பேசி இருக்காவிட்டால், இன்றைக்கு நான் எப்படியோ இருந்திருப்பேன்இ என் வாழ்க்கையே முற்றிலும் சீரழிந்து போயிருக்கும். நீங்கள்தான் எல்லாரும் வெறுத்து ஒதுக்கிய திருடனாகிய என்னிடம் அன்பொழுகப் பேசினீர்கள்; நீங்கள்தான் என் குற்றங்களையெல்லாம் எல்லாம் மன்னித்து ஏற்றுக்கொண்டீர்கள்” என்றான். அன்போடு நடந்துகொண்டால் எப்படிப்பட்ட குற்றவாளியும் மனந்திரும்புவான் என்பதை இக்கதையானது சுட்டிக்காட்டுகிறது.



தவக்காலத்தின் மூன்றாம் ஞாயிற்றுக் கிழமை வாசகங்கள் நமக்கு “மனந்திரும்பி வாழ அழைப்புத் தருகிறது. இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசுவிடம் சிலர், பிலாத்து பலிசெலுத்திக்கொண்டிருந்த கலிலேயரைக் கொன்றான் என்ற செய்தியைச் சொல்கின்றனர். அதற்கு இயேசு, மனம் மாறாவிடில் நீங்கள் ஒவ்வொருவருமே அழிவீர்கள்” என்கிறார். இயேசுவின் இவ்வார்த்தைகள் சற்றுக் கடினமாக இருந்தாலும், அவர் நாம் அனைவரும் மனந்திரும்பி வரவேண்டும் என்று அன்போடு காத்துக்கொண்டிருக்கிறார். இன்றைய இரண்டாம் வாசகத்தில் பவுலடியார், “நீங்கள் கடவுளைவிட்டு விலகி சென்ற இஸ்ரயேல் மக்கள் போன்று அல்லாமல், கடவுளை நோக்கி வரும் மக்களாக வாழவேண்டும்”       (1கொரி 10:6) என்றதொரு அழைப்பினைத் தருகிறார். ஆம், கடவுளை விட்டு விலகிச்செல்வதுதான் பெரிய பாவம், விலகிச் சென்றவர்கள் மீண்டுமாக இறைவனிடம் திரும்பி வருவதே உண்மையான மனமாற்றம். ஆதலால் நாம் இருகின்றவராக, இருக்கின்ற இறைவனிடம் திரும்பி வருவோம். இறையருள் நிறைவாய் பெறுவோம்.




No comments:

Post a Comment