Friday 15 March 2019

தவக்காலம் 2-ஆம் ஞாயிறு



தவக்காலம் 2-ஆம் ஞாயிறு

இன்றைய வாசகங்கள்


தொடக்க நூல். 15:5-12, 17-18
பிலிப்பியர்  3:14:1
லூக்கா 9:28-36




இயேசு தோற்றம் மாறுதல்

 

ஆசியா கண்டத்திலே மலைகளுக்குச் சிறப்பிடம் உண்டு. ஆழ்நிலை தியானத்தில் ஈடுபடுவோர் இறைவனைத் தேடி இமயமலையை நாடுகின்றனர். காரணம் காலம் காலமாக இறைவனைச் சந்திக்க ஏற்ற இடமாக மலைகள் கருதப்பட்டன. கடவுள் மேலே இருக்கிறார் என்ற எண்ணத்தில் மலைகளில் ஏறிச் செல்வதின் மூலமாகக் கடவுளிடம் நெருங்கிச் செல்வதாக மக்கள் கருதுகிறார்கள். இதனால்தான் இந்தியத் திருநாட்டிலே கோவில்கள் எல்லாம் மலை மேல் எழுப்பப்பட்டிருப்பதை நாம் பார்க்கிறோம்.

இரண்டாவது மலைகளில் காணப்படும் இயற்கை எழிலும், அமைதியும் இறைவனைத் தேடவும், இறைவனோடு ஒன்றிக்கவும் ஏற்ற சூழ்நிலையாக உள்ளன. சுருங்கக் கூற வேண்டுமானால் இறைவன் - மனித சந்திப்பிற்கு ஏற்ற இடமாக மலைகள் விளங்குகின்றன.

விவிலியத்தில் பார்த்தால் மலைகள் இறைவனின் பிரசன்னத்தைக் குறிக்கின்றது. மலைகள் இறைவனைச் சந்திக்கும் இடமாக அமைகின்றன.

அபிரகாம் தன் மகன் ஈசாக்கை மோரியா மலையிலே பலியிட முயன்றபோது இறைவனைச் சந்திக்கிறார் (தொடக்க நூல் 22:1-19)
இஸ்ரயேல் மக்களின் தலைவனாக இருந்து வழிநடத்திய மோசே இறைவனைச் சீனாய் மலையில் சந்தித்ததைப் பற்றி விடுதலைப் பயணத்தில் (வி.ப. 24:12-18) வாசிக்கிறோம்.

எலியாஸ் இறைவாக்கினர் கார்மேல் மலையில் இறைவனைச் சந்தித்ததாக (1 அரச.18:31-40) அரசராகமத்தில் வாசிக்கிறோம்.

- இத்தகைய பின்னணியில் புதிய ஏற்பாட்டிற்கு நாம் கடந்து வரும்போது இயேசு மலை மீது ஏறிப் போதித்தார் என்று வாசிக்கிறோம். இயேசுவின் உருமாற்ற நிகழ்ச்சியும் தபோர் மலையில் நடைபெறுகிறது. அதுமட்டுமல்ல தந்தையும் மகனும் கல்வாரி மலையில் சந்திக்கிறதை நாம் காண்கிறோம்.

இறைவன் மனிதர்களைச் சந்திக்கிறார் என்று சொல்லும் போது கண்ணுக்குத் தெரியும் வகையில் மனித உருவில் வந்து சந்திக்கிறார் என்று பொருள் அல்ல. தன் வார்த்தை வழியாகவோ இவரே என் அன்பார்ந்த மகன் (லூக் 9:35), இயற்கை அடையாளங்கள் வழியாகவோ, இயற்கையில் நடந்த மாற்றங்கள் (மத். 27:51, 52) வழியாகவோ, அல்லது நெருப்பு வடிவிலோ, மேகங்கள் வடிவிலோ இறைவன் மனிதர்களைச் சந்திக்கிறார். இத்தகையப் பின்னணியில் இன்றைய உருமாற்ற நிகழ்ச்சியை நாம் காண வேண்டும். செபிப்பதற்குத் தனிமையாக பேதுருவையும் யாக்கோபையும் யோவானையும் அழைத்துக் கொண்டு ஓர் உயர்ந்த மலைக்குச் சென்றார் இயேசு. அங்கே அவர்கள் முன் உருமாறினார். அவரது முகத்தோற்றம் மாறியது. ஆடையும் வெண்மையாய் மின்னியது. இறைவனோடு இயேசுவும் இருக்கிறார் என்றும், இறைவனின் சித்தப்படி தன் பணியை ஆற்றுகிறார் என்பதையும் எலியாசும், மோயீசனும் தோன்றி உரையாடுவதும், இறைதந்தையின் 'இவரே என் அன்புக்குரிய மைந்தர். நான் தேர்ந்தெடுத்துக் கொண்டவர் இவரே. இவருக்குச் செவிசாயுங்கள்' (லூக். 9:35) என்ற குரலும் வெளிப்படுத்துகிறது.
இந்த நிகழ்ச்சிகள் புகட்டும் பாடம் என்ன? நமக்குத் தரும் செய்தி என்ன ?

1. நாம் கல்வாரி பலிக்கு வரும்போது இயேசுவைப் போல் நாம் மலையில் ஏறுவதை உணர வேண்டும். இந்த பலிபீடம் தபோர், கல்வாரியை உணர்த்துகிறது. நமது பலவீனங்கள், குறைகள், வாழ்க்கைப் போராட்டங்கள் அனைத்தையும் பீடத்திற்கு கொண்டு வருகின்றோம். இறைவன் தன் நிறை வளத்தையும், ஆற்றலையும், அமைதியையும் கொண்டு வந்து நம்மோடு பகிர்ந்துகொள்ளப் போகிறார். இந்த மேலான திருப்பலியில் நாம் பங்கெடுக்கும் இந்த வேளையில் தந்தைக்கும் இயேசுவுக்கும் நடந்தது போல் நமது சந்திப்பு இங்கே நிகழ வேண்டும்.

2. இரண்டாவதாக, தபோர் மலையைப் போல் நம் உள்ளங்கள் விண்ணகத்தை நோக்கிய வண்ணமாக அமைய வேண்டும். மண்ணோடு மண்ணாக இருக்கிற குடிவெறி, பொறாமை, சாதிச்சண்டை, சச்சரவு போன்ற ஆசைகளை விட்டு விலகி உயர்ந்து நிற்க வேண்டும். 


 3.மூன்றாவதாக, இரவுக்குப் பின் பகல், அமாவாசைக்கு அடுத்து பௌர்ணமி, துன்பத்திற்குப் பின் இன்பம் என்பதைப்போல, பெரிய வெள்ளிக்குப் பின் உயிர்த்த ஞாயிறு வரும். இதேபோல் இயேசுவின் பாடுகள் அவரது மகிமைக்குத் தேவை. நமது மகிமையான வாழ்விற்குத் துன்பம் நாணயத்தின் ஒரு பக்கம் என்பதை மறக்கக் கூடாது என்பதை இன்று நமக்கு நினைவுபடுத்துகிறது.

4. நான்காவதாக இறையனுபவம் நமக்குக் கிடைத்தால் அதில் நாம் தரிசித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்ற ஆவல், ஆசை தானாகப் பிறக்கும். இதன் வெளிப்பாடாகத்தான் பேதுரு மூன்று கூடாரம் அமைப்பேன் என்கிறார். இது ஆன்மீக வெளிப்பாடு. இயேசுவின் உருமாற்ற நிகழ்ச்சியும் நமக்குத் தரும் ஆன்மீகம் இதுதான்.

ஆண்டவரின் இல்லத்தில் என் வாழ்நாள் எல்லாம் நான் குடி இருக்க வேண்டும் (திபா. 27:4).



இயேசுவுக்குச் செவிசாய்ப்போம்

 

இன்றைய நற்செய்தியில் விண்ணகத் தந்தை இயேசுவுக்கு செவிசாய்க்குமாறு கட்டளையிடுகின்றார். செவிசாய்த்தல் என்றால் இயேசு சொல்வதை முழு மனத்தோடும், முழு உள்ளத்தோடும் கேட்டல்.

இயேசு நமக்குச் சொல்லியுள்ளதையெல்லாம் கூட்டி, பெருக்கி, வகுத்து, கழித்துப் பார்த்தால், மிஞ்சுவது மூன்றெழுத்து. அந்த மூன்றெழுத்தின் பெயர் அன்பு.

அன்பு என்றால் என்ன? என்பதைச் சுட்டிக்காட்ட இதோ ஓர் உண்மை நிகழ்வு.
1852 - ஆம் வருடம் பிப்ரவரி மாதம் 27 - ஆம் தேதி நடந்த நிகழ்வு இது.

பிர்கெசன் ஹெட் என்ற கப்பல் கிழக்கு ஆப்பிரிக்காவின் பக்கத்திலுள்ள கடலில் பயணம் செய்துகொண்டிருந்தது. அந்தக் கப்பலில் 643 பிரயாணிகள் பயணம் செய்தார்கள். அந்தப் பயணிகளில் 21 பெண்கள், 31 குழந்தைகள் இருந்தார்கள்.
ஒரு நாள் காலைப் பொழுது! யாரும் எதிர்பாராத ஒன்று நடந்தது ! கப்பல் தடுமாறியது! கப்பலின் கீழ்ப்பகுதி எப்படியோ உடைந்து தண்ணீர் கப்பலுக்குள் புகத் தொடங்கியது.
கப்பல் பணியாளர்களும், அக்கப்பலில் பயணம் செய்த போர் வீரர்களும் கப்பலைக் காப்பாற்றப் போராடினர். அப்போது

கப்பலில் பயணம் செய்த ஆண்கள் சிறு பிள்ளைகளையும், பெண்களையும் உயிர் காக்கும் படகுகளில் ஏற்றினர். குழந்தைகளும் பெண்களும் ஏறிச்செல்லும் அளவுக்குத்தான் படகுகளில் இடமிருந்தது.

குழந்தைகளையும், பெண்களையும் ஏற்றிக்கொண்டு படகுகள் நகர்ந்தன! அப்போது கப்பலின் ஒரு பகுதி தண்ணீருக்குள் மூழ்கியது.
கப்பலில் இருந்த அத்தனை பேரும் திமிங்கலங்களுக்கு இரையாகப் போகின்றார்கள் என்பது நன்றாகத் தெரியும். இருந்தாலும் அவர்கள் முகத்திலே ஒரு தெய்வீகப் புன்னகை.

643 பேரில் 52 பேர் மட்டும் காப்பாற்றப்பட்டார்கள்! மற்ற அனைவரும் தண்ணீருக்குள் மூழ்கி இறந்தார்கள்.
தண்ணீருக்குள் மூழ்கி இறந்தவர்கள் கொண்டிருந்த மன நிலைக்குப் பெயர்தான் அன்பு!
அன்பு என்பது ஒரு மீட்புச் செயல்.

மற்றவர்களுக்காக நமது உயிரைக் கொடுக்கும் அளவுக்கு நமது அன்பு உயர்ந்து நிற்கவேண்டும்.

அன்பு செய்தால் என்ன கிடைக்கும்?

அன்பு செய்தால் நமது ஆசைகளைக் கடவுள் நிறைவேற்றி வைப்பார் (முதல் வாசகம்) ; அன்பு செய்தால் நமது தாய் நாடாகிய (இரண்டாம் வாசகம்) விண்ணகத்தில் நமக்கு இடம் கிடைக்கும் (மத் 25:31-40).

மேலும் அறிவோம் :
அன்பிலார் எல்லாம் தமக்குரியர்; அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு (குறள் : 72).

பொருள் : அன்பு இல்லாதவர் எல்லாப் பொருள்களையும் தமக்கே உரிமை பாராட்டுவர். அன்பு உள்ளம் கொண்டவர் தம் உடல் பொருள் ஆவி அனைத்தையும் பிறர்க்கு வழங்குவர்.




உருமாற்றத் திருக்காட்சி - 3


 பால் நிறைந்த சாடிக்குள் இரண்டு தவளைகள் விழுந்து விட்டன. ஒரு தவளை கொஞ்ச நேர முயற்சிக்குப் பின் 'இனி வாழ்வில்லை, வெளியேற வழியில்லை' என நம்பிக்கை இழந்தது. அப்படியே பாலில் மூழ்கிச் செத்தது!
இன்னொன்று நம்பிக்கை இழக்கவில்லை. எப்படியாவது கரையேறிவிடலாம், விடுதலை பெறலாம் என விடாமுயற்சியோடு பாலில் நீந்திக் கொண்டே இருந்தது. நேரம் ஆக ஆகக் காலில் ஏதோ தட்டுப்படவே அங்கே தயிர்க்கட்டி (வெண்ணெய்) ஒன்று மிதந்து கொண்டிருப்பதைக் கண்டது. நீண்ட நேரம் நீந்தியதால், பால் கடையப்பட்டு வெண்ணெயாகத் திரண்டது. இப்போது அதன்மேல் எறிக் காலை ஊன்றி எளிதாகத் துள்ளி வெளியேறியது தவளை!

நம்பிக்கை இழந்ததால் ஒரு தவளை மடிந்தது; நம்பிக்கையோடு இருந்ததால் ஒரு தவளை வாழ்வு கண்டது! உயிர்ப்பின் மகிமை பற்றிய நம்பிக்கை உலக வாழ்வின் சோர்வை அகற்றும்.

தவளைக்குக் கூட ஏதோ ஒரு நம்பிக்கை இருந்தது. ஆனால் வாழ்வு பற்றிய தெளிவான பார்வை இல்லை.

இயேசு மறுஉருவானார். அவர் இறந்து உயிர்த்தபின் பெறப் போகும் மகிமையின் முன் சுவை அந்தத் தோற்ற மாற்றம்!

இயேசு இன்று வாழ்ந்தால் அவரை நாம் மெசியாவாக இனம் கண்டு கொள்வோமா? மாட்டோம். அவ்வளவு சாதாரண வாழ்க்கை அவருடையது. இஸ்ரயேல் மக்களின் எதிர்பார்ப்புக்கு மாறாக ஏமாற்றம் தரும் சாமான்ய வாழ்க்கை அது. அந்த வாழ்க்கையில் இயேசு சந்தித்த சோதனைகளில் மிகப்பெரிய சோதனை எது தெரியுமா? கடவுளின் அரசை நிறுவ வந்த தனக்குச் சிலுவைச்சாவு தான் முடிவா? கடவுளின் அன்பைப் போதிக்க வந்த தனக்குக் கல்வாரி மரணம்தான் பரிசா?

கடவுளின் பராமரிப்பை உணர்த்தச் செயல்பட்ட தனக்குப் பாடுகளின் ITதைதான் இறுதியா? மனிதனின் பாவத்தையெல்லாம் தன்மேல் ஏற்று | மன்னிப்பும் விடுதலையும் வாழ்வும் அருளும் அளிக்க வந்த தனக்கு செம்மறி போலச் சிலுவை மரணத்தை ஏற்பதைத் தவிர வேறு வழி இல்லையா?

இதுதான் இயேசுவின் பிரச்சனை, போராட்டம்! இயேசு நாற்றுக்கு நூறு கடவுள். எனினும் நூற்றுக்கு நூறு மனிதன். எனவே சோதனையில் அவருக்கு ஒரு நம்பிக்கையும் ஊக்கமும் வேண்டும். தெளிவும் தெம்பும் வேண்டும். அதற்குத்தான் உருமாற்றம்.

"அவர் சீடருக்குத் தம் மரணத்தை முன்னறிவித்து புனித மலையில் தமது மாட்சிமையை வெளிப்படுத்தினார். சட்டமும் இறைவாக்கினரும் சான்று பகரப் பாடுகளின் வழியாகவே அவர் உயிர்ப்பின் மகிமையை அடைய வேண்டும் என்பதை விளங்கச் செய்தார்" உருமாறிய நிகழ்வின் உட்பொருள் உணர்த்தும் திருப்பலியின் தொடக்கவுரை இது.

மறைநூல் சுட்டிக்காட்டும் மெசியா துன்புறும் இறை ஊழியனே! மறைநூல் என்பது சட்டம், இறைவாக்குக்களின் தொகுப்பாகும் சட்டத்தின் பிரதிநிதி மோசே. இறைவாக்கினரின் பிரதிநிதி எலியா. அந்த இருவரில் சட்டமும் இறைவாக்கும் சான்று பகர "துன்புறும் மெசியாவே தன் அன்பு மகன்” என்று வானகத் தந்தையும் சான்று பகர்கிறார்.

நமக்குத் துன்பமே இறுதியல்ல. மரணமே முடிவல்ல. பாடுகளின் வழியாகவே உயிர்ப்பின் மகிமை. ஆனால் துன்பம் இல்லாத இன்பம், உழைப்பு இல்லாத ஊதியம், தியாகம் இல்லாத செழுமை, சிலுவை இல்லாத மகிமை... இதுவே மனித இன ஏக்கம்! இத்தகைய சிலுவைக்கு எதிரிகளாய் உள்ளவர்களை, புழுதியில் இறங்காமல் அறுவடை தேடுபவர்களை "அழிவே அவர்கள் முடிவு வயிறே அவர்கள் தெய்வம். மானக்கேடே அவர்கள் பெருமை" (பிலிப்.3:19) என்று சரமாரியாகச் சாடுகிறார் திருத்தூதர் பவுல். அவர்கள் எண்ணுவதெல்லாம் மண்ணுலகைச் சார்ந்தவை பற்றியே. ஆனால் துன்பங்களை ஏற்று, மீட்பரை எதிர்பார்த்து துணிவுடன் வாழ்ந்தால், அவர் தமது ஆற்றலால் தாழ்வுக்குரிய நம் உடலை மாட்சிக்குரிய தமது உடலின் சாயலாக உருமாற்ற வல்லவர்” (பிலிப்.3:21)  

கோதுமை மணி மண்ணில் விழுந்து மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும் (யோ. 12:24) அதுபோல் கிறிஸ்து எப்போது மகிமை பெறுகின்றார்? ''உயர்த்தப்படும் போது " (யோ. 12:32) இங்கே கிறிஸ்துவின் மரணமே அவரது மகிமையாய் மாறுகின்றது. உலகத்தின் கண்களுக்கு அது தோல்வி. ஆனால் இறைவனின் திட்டத்தில் அதுவே மகிமை. ''மாட்சிப்படுத்தினேன். மீண்டும் மாட்சிப்படுத்துவேன்" வானிலிருந்து வந்து இயேசுவை திடப்படுத்திய தந்தையின் குரல்.

இந்த நியதி கிறிஸ்துவுக்கு மட்டுமல்ல திருச்சபைக்கும் பொருந்தும். எங்கெல்லாம் அது துன்புற்றதோ அங்கெல்லாம் துடிப்போடு அது வளர்ந்தது. மறை சாட்சியரின் இரத்தம் நம்பிக்கையின் வித்து' என்பதே வரலாறு.

இதயமற்ற நீரோ மன்னன் இரக்கமற்றுக் கிறிஸ்தவர்களை வதைத்துக் கொண்டிருந்தான். விசுவாசத்தை வெளிப்படையாக மறுக்க மறுத்தவர்களை வெட்டிக் கொன்றான். இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில் கூட மனந்தளராது செபத்தில் நிலைத்து, வரவிருக்கும் வாழ்வின் பொருட்டு பெறப் போகும் மாட்சிமையை நினைத்து இயேசுவின் சாட்சிகளாகத் திகழ்ந்தனர். திருத்தொண்டர் லாரன்ஸ் கொதிக்கும் வாணலிலே வாட்டப்பட இருப்பதாக அச்சுறுத்தினார்கள். ஆனால் அவர் "நான் பெறப் போகும் அளவற்ற மகிமையைக் குறித்து இந்தத் துன்பச் சாவைப் பெருமையோடு ஏற்றுக் கொள்கிறேன்" என்று வீர முழக்கமிட்டாராம்.

"இக்காலத்தில் நாம் படும் துன்பங்கள் எதிர்காலத்தில் நமக்காக வெளிப்படப் போகிற மாட்சியோடு ஒப்பிடத் தகுதியற்றவை'' (ரோமை.8:18) என்ற திருத்தூர் பவுலின் எண்ணம் நம் உணர்வுகளாட்டும்!




ஒரு சிறுவன் தன் அம்மாவிடம், "அம்மா! நீ ரொம்ப அழகாய் இருக்கிற” என்றதற்கு அம்மா அவனிடம், “கோபுரம் பூசு மஞ்சள் தூளின் மகிமைதான் கண்ணா !" என்றார்.

ஒரு கணவர் தமது மனைவியிடம், "உன் நகையெல்லாம் படு ஜோர்" என்றதற்கு அவர் கணவரிடம், “அத்தனையும் கல்யாணி கவரிங் நகை" என்றார்.

ஒரு வீட்டில் நான்கு பெண் பிள்ளைகளின் தாய் இறந்துவிட்டார். அவரின் மூன்று மகள்கள், "அம்மா! போயிட்டீயே" என்று அழுதனர். ஒரு மகள் மட்டும், "தாயே! போயிட்டீயே" என்று அழுதாள். ஏனெனில் அவள் சிறிது நேரத்திற்கு முன்பு தான் 'லிப்ஸ்டிக்" உதட்டில் பூசியிருந்தாள், அது இன்னும் காயவில்லை. அம்மா என்றால் உதடுகள் ஒட்டிக் கொள்கின்றன. எனவே 'தாயே' என்று அழுதாள்!


பெண்கள் ஒப்பனை மூலம் உருமாற்றம் அடைய விரும்புகின்றனர். நாடுகளோ, "உலகமயமாக்குதல்" மூலம் பொருளாதாரத்தில் உருமாற்றம் அடைய விரும்புகின்றன. ஆனால், இயேசு கிறிஸ்துவோ பாடுகளின் மூலம் உருமாற்றம் அடையவேண்டும் என்று இன்றைய நற்செய்தியில் கோடிட்டுக் காட்டுகிறார்.

கிறிஸ்து மலைமீது தோற்றம் மாறிய நிகழ்வின் உட்பொருளை இன்றைய திருப்பலியின் தொடக்கவுரை பின்வருமாறு கூறுகிறது: "கிறிஸ்து சீடருக்குத் தம் மரணத்தை முன்னறிவித்து, புனித மலையில் தமது மாட்சிமையை வெளிப்படுத்தினார். சட்டமும் இறைவாக்கினரும் சான்று பகர்ந்தவாறு, பாடுகளின் வழியாகவே தாம் உயிர்ப்பின் மகிமையை அடைய வேண்டும் என்பதை விளங்கச் செய்தார்",

கிறிஸ்து தமது பாடுகளை முதன் முறையாக முன் அறிவித்த போது (லூக் 9:22), சீடர்களுக்கு அதைப்புரிந்து கொள்ளவோ, ஏற்றுக்கொள்ளவோ தேவையான மனப்பக்குவம் இல்லை. எனவேதான் பேதுரு. “ஆண்டவரே, இது (சிலுவைச்சாவு) வேண்டாம். இப்படி உமக்கு நடக்கக்கூடாது" (மத் 16:22) என்று கூறித் தமது எதிர்ப்பைத் தெரிவித்தார்.

சிலுவையினால் சீடர்களின் மனதில் எழுந்த இடறலை நீக்க கிறிஸ்து உயர்ந்த மலையில் தமது மூன்று சீடர்கள் முன் தமது மாட்சிமையை வெளிப்படுத்தினார். இந்த மூன்று சீடர்கள் தான் (பேதுரு, யோவான், யாக்கோபு) கிறிஸ்து பூங்காவனத்தில் இரத்த வியர்வை வேர்க்கும் காட்சியைக் காண இருப்பவர்கள் (மத் 26:37).

பழைய ஏற்பாடு, சட்டம் மற்றும் இறைவாக்கு என்ற இரு பகுதிகளைக் கொண்டது. இயேசு தோற்ற மாற்றம் அடைந்தபோது, சட்டத்தின் பிரதிநிதியாக மோசேவும், இறைவாக்கினரின் பிரதிநிதியாக எலியாவும் இயேசுவுடன் தோன்றுகின்றனர். இவர்கள் இருவரும் கிறிஸ்து எருசலேமில் சந்திக்கவிருக்கிற அவருடைய சிலுவைச் vாவைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தனர் என்று லூக்கா குறிப்பிடுகிறார் (லூக் 9:31). மோசே, எலியா ஆகிய இருவர் மூலமாகச் சட்டமும் இறைவாக்கும் இயேசுவுக்குச் சான்று பகர்கின்றன. அத்துடன், "இவரே என் அன்பு மைந்தர். நான் தேர்ந்து கொண்டவர் இவரே" (லூக் 9:35) என்று விண்ணகத் தந்தையும் இயேசுவுக்குச் சான்று பகர்கிறார்.


சிலுவைச் சாவு வேண்டாம் என்று கூறிய பேதுரு கிறிஸ்துவின் மாட்சிமையைக் கண்டு, "ஆண்டவரே நாம் இங்கேயே இருப்பது நல்லது” (லூக் 9:33) என்றார். வேண்டாம் வேண்டாம், சிலுவை வேண்டாம். வேண்டும்; வேண்டும், மகிமை வேண்டும். இது தான் பேதுருவின் விருப்பம்: அதுவே நமது விருப்பமும் கூட, ஆனால் சிலுவை வாயிலாகவே நாம் மகிமையடைய வேண்டும் என்பது கடவுளின் விருப்பம், அவரது திட்டம்.

| சிலுவையான து. புதுமைகளை விரும்பும் யூதர்களுக்கு ஒரு தடைக்கல்; ஞானத்தைத் தேடும் கிரேக்கர்களுக்கு ஒரு மடமை, ஆனால் கடவுளால் அழைக்கப்பட்டவர்களுக்குச் சிலுவை கடவுளின் வல்லமை; கடவுளின் ஞானம் (1 கொரி 1:22-24).


பள்ளிக்குச் சென்ற ஒரு சிறுவனிடம், "உனக்குப் பள்ளிக்குச் செல்லுவது பிடிக்கிறதா?" என்று கேட்டதற்கு அவன், "பள்ளிக்குச் செல்லுவதும் பிடிக்கிறது: பள்ளியிலிருந்து வீடு திரும்புவதும் பிடிக்கிறது. ஆனால் இந்த இரண்டிற்கும் இடையே நடப்பவைதான் ( வகுப்புகள்) பிடிப்பதில்லை " என்றான். அவ்வாறே. நமக்குக் கிறிஸ்துவின் பிறப்பும் பிடிக்கிறது: அபேருடைய உயிர்ப்பும் பிடிக்கிறது. ஆனால் இவை இரண்டிற்கும் இடையே நிகழ்ந்த அவரின் சிலுவைச் சாவு பிடிக்கவில்லை .

கிறிஸ்துவின் பள்ளியிலே சிலுவைப் பாடம் விருப்பப்பாடமல்ல: மாறாக, அது கட்டாயப் பாடம். “என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து தம் சிலுவையைத் தூக்கிக் கொண்டு என்னைப் பின்பற்றட்டும்” (மத் 16:24). நாம் ஒன்றை இழந்தால்தான் மற்றொன்றைப் பெறமுடியும். இதுதான் இயற்கையின் நியதி. கோதுமைமணி மண்ணில் விழுந்து மடிந்தால்தான் அது பலன் தர முடியும் (யோவா 12:24), பெண் ஒருவர் பேறுகால வேதனை அடைந்தால் மட்டுமே குழந்தைப் பேற்றை அடைய முடியும் (யோவா 16:21). - 


இன்றைய முதல் வாசகத்தில், ஆபிரகாம் தமது ஊரையும் உடைமைகளையும், உற்றாரையும், உறவினரையும் இழந்தார். எனவே தான் அவர் புதிய நாட்டைப் பெற்றார். பல இனத்தவருக்குத் தந்தையானார். ஆபிரகாம் "தாம் எங்கே போக வேண்டும் என்று தெரியாதிருந்தும் அவர் புறப்பட்டுச் சென்றார் " (எபி 11:8). எனவேதான் அவர் விசுவாசத்தின் தந்தையாக உருமாற்றம் அடைந்தார், மரியன்னை தமது சுயவிருப்பத்தை இழந்து, கடவுளின் விருப்பத்துக்குத் தம்மைக் கையளித்த தால்தான் அவர் மீட்பரின் தாயாக உருமாற்றம் அடைந்தார்.

நாம் இறந்து மண்ணில் புதைக்கப்பட்டால்தான் வேற்றுருப் பெற்று உயிர்த்தெழ முடியும். இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல் கூறுகிறார்: கிறிஸ்துவின் இரண்டாம் வருகையின் போது. அவர் தமது ஆற்றலால் தாழ்வுக்குரிய நம் உடலை மாட்சிக்குரிய தமது உடலின் சாயலாக உருமாற்றுவார் (பிலி 3:20-21).

தவக்காலத்தில் சிலுவைப் பாதையைச் செய்கின்றவர்களாக மட்டும் இராது, அன்றாட வாழ்க்கைச் சிலுவையைச் சுமப்பவர்களாகவும் இருப்போம். காட்டு மரங்கள் மனிதர்களிடம் கூறுவது: "நாங்கள் சிலுவை மரங்களைக் கொடுக்கத் தயார். ஆனால் சிலுவை மரத்தில் அறையப்படுவதற்குத்தான் எந்த மனிதரும் முன் வருவதில்லை "

"கிறிஸ்து இயேசுவுக்கு உரியவர்கள் தங்கள் ஊனியல்பை அதன் இழிவுணர்ச்சிகளோடும் இச்சைகளோடும் சேர்த்துச் சிலுவையில் அறைந்துவிட்டார்கள்” (கலா 5:24).




உறுதியற்ற நிலையை எதிர்கொள்ளல்

'மாற்றம் ஒன்றே மாறாதது' என்பது எப்படி உண்மையோ, அதுபோலவே, மனித வாழ்வில் 'உறுதியற்ற நிலையே உறுதியானது' என்பதும் உண்மையே. ஒன்றும் ஒன்றும் இரண்டு என்பது போலவும், இரண்டு சதவிகித ஹைட்ரஜனும் ஒரு சதவிகித ஆக்ஸிஜனும் இணைந்தால் தண்ணீர் என்பது போலவும் உள்ள கணித மற்றும் வேதியியல் வாய்ப்பாடுகளின் உறுதித்தன்மையைப் போல வாழ்வியல் எதார்த்தங்கள் இருப்பதில்லை. 

நன்றாக உழைக்கிறோம். நேர்மையாக இருக்கிறோம். ஆனால், வாழ்வில் முன்னேற்றம் இல்லை. எடுத்த காரியம் நிறைவேறுவது இல்லை. தினமும் ஆலயம் செல்கிறோம். நற்செயல்கள் செய்யத் தயாராக இருக்கிறோம். ஆனால் எதிர்பாராத ஆபத்துக்கள் வந்தே தீருகின்றன. நம் குழந்தை நன்றாகப் படிக்கிறார். ஆனால், படிப்பிற்கேற்ற பலன் இல்லை. நம் மகன் நன்றாக வேலை செய்கிறார். ஆனால், வேலையில் அவருக்கு உயர்வே இல்லை. இம்மாதிரியான நேரங்களில், 'நாம் ஒன்று நினைக்கத் தெய்வம் ஒன்றும் நினைக்கும்' என்று சொல்லி நம்மையே தேற்றிக்கொண்டாலும், வாழ்வின் உறுதியற்ற தருணங்கள் நம் வாழ்வில் நமக்கு அச்சத்தையும், ஏக்கத்தையும் கொடுத்துக்கொண்டே இருக்கின்றன.நாம் எப்போதும் சறுக்கலான மணலில் நடப்பதுபோலுவே உணர்கிறோம். உறுதியற்ற நிலையில் நம்மை வருத்தும் இன்னொரு பிரச்சினை குழப்பம். குறிப்பாக, தெரிவு செய்வதில் குழப்பம். நன்மையைத் தெரிந்துகொள்வதா? தீமையைத் தெரிந்துகொள்வதா? என்ற குழப்பத்தைவிட, இரண்டு நன்மைகளுக்குள் ஒரு நன்மையைத் தெரிவு செய்வதுதான் பெரிய குழப்பமாக இருக்கிறது. நம் குழப்பத்திற்கும் உறுதியற்ற நிலைகளுக்கும் விவிலியத்தில் விடை தேடினால், சில நேரங்களில் குழப்பமும் உறுதியற்ற நிலைதான் இன்னும் அதிகமாகிறது. 'நீ நல்லது செய்தால் உயர்வடைவாய் அல்லவா?' (தொநூ 4:7) என்று நம்மை நல்லது செய்யத் தூண்டும் விவிலியம், 'நல்லவர்களுக்கும் கெட்டவர்களுக்கும் ஒன்றுபோலவே நேரிடும்' (சஉ 9:2) என்று சொல்லி, 'அப்படி என்றால் கெட்டவராய் இருந்தால் என்ன?' என்று நம்மை நம் மதிப்பீடுகளோடு சமரசம் செய்துகொள்ளவும் தூண்டும்போது, நம் உறுதியற்ற நிலையும் குழப்பமும் இன்னும் அதிகமாகிறது.

உறுதியற்ற நிலையை எதிர்கொள்ள முடியுமா? எதிர்கொள்ள வேண்டுமா? அதை எப்படி எதிர்கொள்வது?

தங்கள் வாழ்வில் தாங்கள் சந்தித்த உறதியற்ற நிலைகளை ஆபிரகாம், பிலிப்பு நகரத் திருச்சபையினர், மற்றும் திருத்தூதர்கள் எப்படி எதிர்கொண்டார்கள் என்பதைத்தான் இன்றைய இறைவாக்கு வழிபாடு நமக்குக் காட்டுகிறது.

இன்றைய முதல் வாசகத்தில் (காண். தொநூ 15:1-4), 'உன்னை பெரிய இனமாக மாற்றுவேன்' என்று ஆபிராமுக்கு ('ஆபிரகாம்' என்ற பெயர் மாற்றம் அடைவது 17:5ல்தான்) வாக்குறுதி கொடுக்கும் கடவுள் அவருக்குத் தோன்றுவதைப் பார்க்கிறோம். 'உன்னை நான் பெரிய இனமாக்குவேன். உனக்கு ஆசி வழங்குவேன். உன் பெயரை நான் சிறப்புறச் செய்வேன்' என்று (12:1) வாக்குறுதி கொடுத்துத் தன்னைத் தன் 'ஊரிலிருந்து' புறப்படச் செய்த இறைவன் இவ்வளவு நாள்கள் ஆகியும் ஒன்றும் செய்யாமல் இருக்கிறாரே என்று தன் உள்ளத்தில் குழப்பமும் ஐயமும் கொள்ள ஆரம்பிக்கின்றார் ஆபிராம். இந்த நேரத்தில் ஆண்டவர் ஆபிராமை வெளியே (அவரின் கூடாரத்திற்கு வெளியேயும், அவரின் மனத்திற்கு வெளியேயும்) அழைத்து, 'வானத்தை நிமிர்ந்து பார். முடியுமானால், விண்மீன்களை எண்ணிப்பார். இவற்றைப் போலவே உன் வழிமரபினரும் இருப்பர்' என்கிறார். 'ஆபிராம் ஆண்டவர்மீது நம்பிக்கை கொண்டார். அதை ஆண்டவர் அவருக்கு நீதியாகக் கருதினார்' என உடனே பதிவு செய்கிறார் ஆசிரியர். 'நீதி' என்பதற்கு 'மற்றவரோடு சரியான உறவில் இருப்பது' என்று பொருள். ஆக, ஆபிராம் கடவுளோடு கொள்ளும் சரியான உறவு நம்பிக்கையில் கட்டப்படுகிறது.

தொடர்ந்து, ஆண்டவர், 'இந்நாட்டை உனக்கு உரிமைச்சொத்தாக அழிக்க உன்னைக் கல்தேயரின் ஊர் என்ற நகரிலிருந்து இங்கு அழைத்து வந்த ஆண்டவர் நானே' என்கிறார். இது முந்தைய வாக்குறுதியைவிட இன்னும் அதிகம் உறுதியற்றது. நம்ம ஊர் பேருந்து நிலையத்திற்கு வெளியே சிறிய குடிசை போட்டு அமர்ந்து ஊசி பாசி பிண்ணிக் கொண்டிருக்கும் ஒரு நரிக்குறவரிடம் கடவுள், 'உனக்கு அமெரிக்க ஐக்கிய நாடுகளை உரிமைச் சொத்தாகத் தருவேன்' என்று சொன்னால் அவர் எப்படி அதிர்ச்சி அடைந்து புன்னகை பூப்பாரோ அப்படித்தான் நகைக்கின்றார் ஆபிராம். ஏனெனில், கல்தேயரின் ஊர் என்றழைக்கப்படும் கானான் அன்று ஒரு பெரிய கனவு நாடாக இருந்தது. அதன் வளமும், பலமும் பலரின் கண்களை அந்நாட்டை நோக்கித் திருப்பியது. தான் ஒரு சாதாரண நாடோடி என்பதை அறிந்திருந்த ஆபிராம், இந்த வாக்குறுதியின் உறுதித்தன்மையை அறிந்துகொள்ளும் பொருட்டு, 'என் தலைவராகிய ஆண்டவரே, இதை நான் உரிமையாக்கிக் கொள்வேன் என்பதை எப்படித் தெரிந்துகொள்வேன்?' எனக் கேட்கின்றார். உடனே ஆண்டவர் ஆபிராமுடன் உடன்படிக்கை செய்துகொள்ள முன்வருகின்றார். உடன்படிக்கை என்பது ஒரு எழுத்துப் பத்திரம் போன்ற ஆவணம். இதில் உடன்படிக்கை செய்துகொள்ளும் இரு நபர்களின் உரிமைகளும் கடமைகளும் எழுதப்பட்டிருக்கும். மேலும், இது எழுதப்பட்டவுடன் அதன் வெளி அடையாளமாக பலி ஒன்று ஒப்புக்கொடுக்கப்படும். எபிரேயத்தில், 'உடன்படிக்கை செய்தல்' என்பதை 'உடன்படிக்கையை வெட்டுதல்' என்று சொல்கின்றனர். அதாவது, உடன்படிக்கையின்போது பலிப் பொருள்கள் வெட்டப்படும். வெட்டப்பட்ட பலிப்பொருள்களுக்கு நடுவே உடன்படிக்கை செய்யும் இருவரும் நடந்து செல்ல வேண்டும். 'நான் உடன்படிக்கையை மீறினால் நானும் இப்படி வெட்டப்படுவேன்' என்று இருவரும் உணர்ந்துகொள்வதற்காகவே (காண். எரே 34:18) அவர்கள் இப்படி நடுவே நடப்பது வழக்கம். முதல் வாசகத்தில் கடவுளே உடன்படிக்கை செய்துகொள்ள முதலில் முன்வருகின்றார். மேலும், கடவுள் மட்டுமே தீச்சட்டி மற்றும் தீப்பந்தம் வடிவில் அந்தப் பலி கூறுகளுக்கிடையே நடக்கின்றார். இவ்வாறாக, கடவுள் தன்னை நிபந்தனையற்ற நிலையில் ஆபிராமோடு தன்னை இணைத்துக்கொள்கின்றார். மேலும், தான் கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேறும் என்ற உறுதியையும் கடவுள் ஆபிராமுக்குத் தருகின்றார். காணக்கூடிய அடையாளத்தின் வாயிலாக ஆபிராமின் உறதியற்ற நிலையையும் குழப்பத்தையும் நீக்குகின்றார் கடவுள்.

ஆக, கடவுள் தனக்கு மொழிந்த குழந்தைப் பேறு மற்றும் வாக்களிக்கபட்ட நாடு என்னும் வாக்குறுதிகள் பற்றி உறுதியற்ற நிலையில் இருந்த ஆபிராம், கடவுளின் உடன்படிக்கைச் செயல்பாட்டால் தன் உறுதியற்ற நிலையை எதிர்கொண்டு, தன் நம்பிக்கையால் வெற்றியும் காண்கிறார்.

இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். பிலி 3:17-4:1), பவுல், பிலிப்பு நகரத் திருஅவையில் விளங்கிய போலிப் போதனையை எதிர்கொள்கின்றார். பிலிப்பியில் பவுல் நற்செய்தி அறிவித்தபின், சில போலிப் போதர்கள் - யூதம் தழுவியோர் - எழுந்து மாற்று நற்செய்தி ஒன்றைப் போதிக்கின்றனர். மேலும், கிறிஸ்தவ நம்பிக்கையாளராக ஒருவர் மாறினாலும் யூதச் சட்டங்களையும், மரபுகளையும், முறைமைகளையும் பின்பற்ற வேண்டும் என்றும், அச்செயல்களாலேயே ஒருவர் கடவுளுக்கு ஏற்புடையவர் ஆகமுடியும் என்றும் போதிக்கின்றனர். இப்படியாக நம்பிக்கையாளர்கள் தங்களின் மீட்பு பற்றிய உறுதியற்ற நிலைக்கும் குழப்பத்திற்கும் தள்ளப்படுகின்றனர். இதைக் கேள்வியுறுகின்ற பவுல் போலிப் போதகர்கள்மேல் கோபம் கொண்டு வெகுண்டெழுகின்றார். அவர்களை, 'நாய்கள்' என்றும், 'கெட்ட ஊழியர்கள்' என்றும், 'உறுப்பு சிதைப்போர்' என்றும் சாடுகின்றார் (காண். பிலி 3:2). மேலும்,  இன்றைய வாசகத்தில் 'வயிறே அவர்கள் தெய்வம்' என்று சொல்லும் பவுல், அவர்கள் கொடுத்த உணவு சார்ந்த மரபு முறைமைகளைக் கடிந்துகொள்கின்றார். ஏனெனில், யூத மரபில் நிறைய உணவுசார்ந்த முறைமைகள் இருந்தன. மேலும், 'மானக்கேடே அவர்கள் பெருமை' என்று சொல்லும்போது, மற்றவர்கள் பார்வையில் அருவறுப்பாய் இருந்த விருத்தசேதனத்தை அவர்கள் தங்கள் பெருமையாகக் கருதியதைக் கடிந்துகொள்கின்றார். இறுதியாக, ஒட்டுமொத்தமாக, 'அவர்கள் எண்ணுவதெல்லாம் மண்ணுலகைச் சார்ந்தவை பற்றியே' என்கிறார். இவ்வாறாக, யூத போலிப் போதகர்கள் இவ்வுலக வாழ்விற்குத் தேவையான வாழ்வியல் முறைமைகளைப் பற்றிப் பேசுவதைச் சாடுகின்றார் பவுல். 

இந்தப் பின்புலத்தில் தன் போதனை பற்றிய சில தெளிவுகளை முன்வைக்கின்றார் பவுல். நற்செய்திக்கும் யூத முறைமைகளுக்கும் தொடர்பில்லை என்பதைச் சொல்கின்றார். ஏனெனில், கிறிஸ்தவ நம்பிக்கையாளர் பெறுகின்ற மீட்பு முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்ததே அன்றி செயல்கள் சார்ந்தது அல்ல என்கிறார். ஏனெனில், விருத்தசேதனம் போன்ற செயல்கள் வழியாகவும், உணவு மற்றும் உடலியல் முறைமைகளைப் பின்பற்றுவதால்தான் மீட்பு என்றால், இயேசுவின் சிலுவை மரணம் முழுமைற்றதாகப் போய்விடும். எனவே, போலிப் போதகர்களை, 'சிலுவைக்குப் பகைவர்களாய் நடப்போர்' என்றழைக்கும் பவுல், 'நீங்கள் அனைவரும் என்னைப் போல வாழுங்கள்' என்கிறார். அதாவது, 'சட்டம்தான் எல்லாம்' என்று நினைத்து சட்டத்திற்கு எதிராக இருந்த கிறிஸ்தவ நம்பிக்கையாளர்களைத் தண்டிக்கச் சென்ற நான், இப்போது மனமாற்றம் பெற்று இயேசுவை மட்டுமே பற்றிக்கொண்டிருக்கிறேன். ஆக, 'நீங்களும் என்னைப்போல இயேசுவை மட்டும் பற்றிக்கொள்ளுங்கள்' என்கிறார் பவுல். இந்த உலகு பற்றிக் கவலைப்பட்டுக் கொண்டிருந்தவர்களை விண்ணகம் நோக்கியும், இயேசுவின் மீட்புச் செயல் நோக்கியும் திருப்புகின்றார் இயேசு. 

ஆக, போலிப் போதகத்தால் உருக்குலைந்து உறுதியற்ற மற்றும் குழப்ப நிலையில் இருந்த பிலிப்பி நகர நம்பிக்கையாளர்களை, தன் போதனையாலும் முன்மாதிரியான வாழ்வாலும் உறுதியாக்குகின்ற பவுல், 'ஆண்டவரோடுள்ள உறவில் நிலைத்திருங்கள்' என அறிவுரை பகர்கின்றார்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். லூக் 9:28-36) இயேசுவின் உருமாற்ற நிகழ்வை வாசிக்கின்றோம். இயேசுவுக்கு மிக நெருக்கமான மூன்று திருத்தூதர்கள் - பேதுரு, யோவான், யாக்கோபு - இந்நிகழ்வில் இயேசுவுடன் உடனிருக்கின்றனர். மலையில் தோன்றிய மோசேயும், எலியாவும், உருமாறிய இயேசுவின் தோற்றமும் திருத்தூதர்களைக் குழப்பத்திற்குள் தள்ளுகின்றன. இந்தக் குழப்பத்தில்தான், 'ஆண்டவரே, நாம் இங்கேயே இருப்பது நல்லது. உமக்கு ஒன்றும் மோசேக்கு ஒன்றும் எலியாவுக்கு ஒன்றுமாக மூன்று கூடாரங்களை அமைப்போம்' என்கிறார் பேதுரு. இப்படிச் சொல்வதன் வழியாக, (அ) பேதுரு, இயேசுவை மோசேக்கும் எலியாவுக்கும் நிகராக்குகின்றார், (ஆ) பேதுரு 'ஆண்டவரே' என அழைத்து இயேசுவின் முக்கியத்துவத்தை அறிக்கையிடுகின்றார், மற்றும் (இ) மலையிலேயே நிரந்தரமான இடத்தைத் தெரிவு செய்ய நினைக்கின்றார். 

பேதுருவும் மற்ற இரு திருத்தூதர்களும் இயேசு யார் என்ற ஒரு குழப்பத்திலும் உறுதியற்ற நிலையிலும் இருக்கின்றனர். இந்நேரத்தில் அவர்களின் குழப்பத்தை நீக்கும் வண்ணம், மேகத்தினின்று, 'இவரே என் மைந்தர். நான் தேர்ந்துகொண்டவர் இவரே. இவருக்குச் செவிசாயுங்கள்' என்ற குரலொலி கேட்கின்றது. 'மைந்தர்' என்ற நிலையில் இயேசு, மோசே மற்றும் எலியாவைவிட மேன்மையானவராகின்றார். 'தேர்ந்தகொண்டவர்' என்ற நிலையில் அவர் மெசியாவாக இருக்கிறார். மேலும், இவருக்குச் செவிகொடுக்க திருத்தூதர்கள் அழைக்கப்படுகின்றனர். 

ஆக, கடவுளின் குரலும் அவரின் கட்டளையும் திருத்தூதர்களின் உள்ளத்திலிருந்த உறுதியற்ற நிலையையும், குழப்பத்தையும் அகற்றி உறுதி தருகின்றது. இயேசு யார்? என்பது பற்றிய உறுதியை திருத்தூதர்கள் பெற்றுக்கொள்கின்றனர். 

இவ்வாறாக, கடவுள் தேர்ந்துகொண்டவர்களும், கடவுளைத் தேர்ந்துகொண்டவர்களும் - ஆபிராம், பிலிப்பு நகர நம்பிக்கையாளர்கள், திருத்தூதர்கள் - உறதியற்ற நிலையையும், குழப்பத்தையும் எதிர்கொள்கின்றனர். எதிர்கொண்ட அவர்கள் கடவுளின் உடன்படிக்கையால், வாக்குறுதியால், போதனையால், கட்டளையால் உறுதியும் பெறுகின்றனர். இதையே இன்றைய திருப்பாடல் ஆசிரியரும் (காண். திபா 27), தன் உறுதியற்ற நிலையிலும், தன் குழப்பத்திலும், 'ஆண்டவரே என் ஒளி' என்று கண்டுகொள்கின்றார்.

கடந்த வாரம், நம் நம்பிக்கையை, நம் நம்பிக்கையால் அறிக்கை செய்தோம். நம் வாழ்வின் நம்பிக்கையில் உறுதியற்ற நிலை வரும்போது நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை இன்றைய இறைவாக்கு வழிபாட்டில் அறிகிறோம். இவ்வறிதல் நமக்குத் தரும் வாழ்வியல் சவால்கள் எவை?

1. நம்பிக்கை


'ஆபிராம் ஆண்டவர்மீது நம்பிக்கை கொண்டார்' என்ற சொல்கிறது இன்றைய முதல் வாசகம். 'நம்பிக்கை' என்பது ஐயமற்ற நிலை. உயரம் தாண்டும் விளையாட்டு வீரர் ஓடிக்கொண்டே இருக்கும்போது, தனக்கு முன் இருக்கும் அந்தக் குச்சியின் உயரத்தைத் தான் தாண்டிவிடுவேன் என்ற உறுதியில் ஐயமற்று இருக்க வேண்டும். 'தாண்டிவிடுவேனா?' என்ற ஐயம் சிறுதுளி வந்துவிட்டாலே அவரால் உயரே எழ முடியாமல் போய்விடலாம். தாமஸ் ஆல்வா எடிசன் அவர்களின் ஆய்வகம் ஒருமுறை தீப்பற்றி எரிந்துவிட, 'என் பிழைகள் எல்லாம் எரிந்துவிட்டன. என் நம்பிக்கை எரியவில்லை. மீண்டும் அனைத்தையும் எழுப்புவேன்' என்று சொல்லி அவர் மீண்டும் உருவாக்கிய ஆய்வகமே இன்று நாம் அனுபவிக்கும் பல கண்டுபிடிப்புக்களின் தளமாக மாறியது. 'அக்கா, ஒரு பென்சில் வாங்குங்க. அண்ணா, ஒரு பேனா வாங்குங்க!' என்று சொல்லி பேருந்தைச் சுற்றி சுற்றி வரும் சின்னக் குழந்தைகளின் கண்களில் இருந்து நம்பிக்கையை நாம் கற்றுக்கொள்ளலாம். 'இன்று மாலைக்குள் எல்லாப் பேனாக்களும், பென்சில்களும் விற்றுவிடும். நாம் மாலையில் நன்றாக உணவருந்தி உறங்கலாம்!' என்ற நம்பிக்கையே அவர்களை ஒவ்வொரு பேருந்திற்குள்ளும் ஏறி இறங்க அவர்களை உந்தித் தள்ளுகிறது. நம்பிக்கை என்ற அந்த நெருப்புத்துளி நம் உள்ளத்தில் இருக்கும்போது, ஒரு கதவு அடைக்கப்பட்டாலும், மறுகதவு நோக்கி நம் கால்கள் தாமாகவே நகர்ந்து செல்லும்.


2. உடனடி ரிசல்ட் வேண்டாம்


பிலிப்பி நகர மக்கள் தங்களின் மீட்புக்கு உடனே பரிசு கிடைக்க வேண்டும் என்று பொறுமையற்ற நிலையில் இருக்கின்றனர். பொறுமையற்ற நிலையில்தான் நாம் யார் சொன்னாலும் எதைச் சொன்னாலும் நம்ப ஆரம்பிப்போம். 'விண்ணகமே நம் தாய்நாடு', எனவே பொறுத்திருங்கள் என அறிவுரை பகர்கின்றார் பவுல். நம் வாழ்வில் உறுதியற்ற நிலையும் குழப்பமும் வரக் காரணம் நம்முடைய பொறுமையின்மையே. ஆக, அதைக் களைதல் அவசியம். 

3. சலனமற்ற மனம்


உருமாற்ற மலையில் சஞ்சலத்தோடு பேசிய திருத்தூதர்கள் மலைக்குக் கீழே வந்தவுடன் அமைதி காக்கின்றனர். சலனம் மறைந்து அமைதி பிறக்கும்போது வாழ்வில் பல தெளிவுகள் பிறக்கும். இந்த அமைதியில்தான் இயேசுவை யார் என்று அடையாளம் கண்டுகொள்கின்றனர். மீன் மார்க்கெட் மாதிரி சத்தம் போட்டுக் கொண்டே இருக்கும் நம் மனமும் நூலகம் போல அமைதியானால்தான் உறுதியற்ற நிலை மறையும். உறுதியற்ற நிலையிலும், குழப்பத்திலும் இருக்கும்போதும் கொஞ்சம் நம் பயணத்தை நிறுத்திவிட்டு அல்லது வேகம் குறைத்துவிட்டு, அமைதி காத்தல் நலம். மனத்தின் சலனம் அடங்கும் வரை காத்திருந்தால் நம் கண்களுக்குக் காட்சிகள் தெளிவாகும். நாம் என்ன பேசுகிறோம் என்பதும் நமக்குத் தெளிவாகும்.

இறுதியாக, நம் நம்பிக்கை வாழ்விலும், அன்றாட நல்வாழ்விலும் உறுதியற்ற நிலைகளும் குழப்பங்களும் தவிர்க்க முடியாதவை. ஆனால், நம்பிக்கை, பொறுமை, அமைதி நம் நம்பிக்கையையும், நல்வாழ்வையும் உறுதிப்படுத்தும் - இன்றும் என்றும்.


பாடுகளின் வழியாக பரலோகம்

உயிரியல் ஆசிரியர் ஒருவர் தன்னுடைய மாணவர்களுக்கு கம்பளிப்புழு எப்படி வண்ணத்துப்பூச்சியாக மாறுகிறது என்பது குறித்து செய்முறைப் பாடம் நடத்திக்கொண்டிருந்தார். அவர் தன்னுடைய மாணவர்களிடம் கம்பளிப்புழு கூட்டைச் சுட்டிக்காட்டி, “இன்னும் ஒருசில மணித்துளிகளில் இந்தக் கூட்டில் இருக்கக்கூடிய கம்பளிப்புழு வண்ணத்துப்பூச்சியாக மாறும், அது எப்படி மாறுகிறது என்பதை கவனித்துக் கொண்டிருங்கள்” என்று சொல்லிவிட்டு வெளியே சென்றுவிட்டார். மாணவர்கள் யாவரும் கம்பளிப்புழு கூட்டையே பொறுமையாக பார்த்துக்கொண்டிருந்தார்கள். அப்போது கூட்டில் இருந்த கம்பளிப்புழு கஷ்டப்பட்டு வெளியே வந்துகொண்டிருந்தது. அதைப் பார்த்து இரக்கப்பட்ட மாணவன் ஒருவன், கூட்டிலிருந்து அதனை  வெளியே எடுத்துவிட்டான். ஆனால் சிறுது நேரத்தில் வெளியே வந்த அந்த கம்பளிப்புழு இறந்துபோனது. மாணவன் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து நின்றான்.
 
இந்த நேரத்தில் வெளியே சென்ற ஆசிரியர் வகுப்புக்கு உள்ளே வந்தார். அவரிடத்தில் மாணவர்கள் அனைவரும் நடந்ததை எல்லாம் சொன்னார்கள். அதற்கு அவர், “அன்பு மாணவர்களே! கம்பளிப்புழு தன் கூட்டைவிட்டு வெளியேவரக் கஷ்டப்படுகிறது என்று நினைத்து நீங்கள் அதனை வெளியே எடுத்துவிட்டிருக்கிறீர்கள். ஆனால், உண்மையில் அந்த கம்பளிப்புழு கஷ்டப்பட்டு வெளியே வருகிறபோதுதான் அதனுடைய சிறகுகள் வலுபெறும். ஒரு முழு வண்ணத்துப்பூச்சியாக மாறும்” என்றார்.  தொடர்ந்து அவர் அவர்களிடம், “நமது வாழ்விலும் இப்படி கஷ்டங்களை, வலிகளை, துன்பங்களைத் தாங்கிக்கொண்டால்தான் உயர்ந்த லட்சியத்தை அடையமுடியும்” என்றார்.
 
நாம் சந்திக்கும் துன்பங்கள் நம்மைப் புடமிடுகின்றன; நமக்கு ஏற்படும் அவமானங்கள் நம்மைச் செதுக்குகின்றன. எப்படி உளியானது கல்லைச் செதுக்க அது சிற்பமாக மாறுகிறதோ அதுபோல” என்பார் எழுத்தாளர் வெ. இறையன்பு.
 
தவக்காலத்தின் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமையில் இருக்கும் நமக்கு இன்றைய நாள் வாசகங்கள் நமக்குத் தரும் சிந்தனை “பாடுகளின் வழியாகப் பரலோகம்” என்பதாகும்.  அதாவது சிலுவைச்சாவின் வழியேதான் நமக்கு மீட்பு உண்டு என்பதே இன்றைய வாசகங்களின் சாராம்சமாக இருக்கிறது. நற்செய்தி வாசகத்திலே ஆண்டவர் இயேசு உருமாற்றம் அடைகின்றார். அதில் மோசேயும், இறைவாக்கினர் எலியாவும் உடன் இருக்கிறார்கள். எருசலேமில் இயேசு மூப்பர்கள் மற்றும் மறைநூல் அறிஞர்கள் கையில் ஒப்புவிக்கப்பட்டு, கொலை செய்யப்படவும், மூன்றாம் நாளில் மாட்சியுடன் உயிர்த்தெழுவதன் முன் அடையாளமாக இந்த உருமாற்ற நிகழ்வு இருக்கிறது.
 
ஏற்கனவே சீடர்கள் இயேசு சிலுவைச்சாவைப் பற்றி மூன்றுமுறை முன்னறிவித்ததால் குழம்பிப்போய் இருந்தார்கள். இதனால் உருமாற்ற நிகழ்வு ஒருவிதத்தில் அவர்களையும் நம்பிக்கையில் உறுதிப்படுத்தியது என்றுகூடச் சொல்லலாம்.
 

இயேசுவின் சீடர்களைப் போன்றுதான் நாமும் பாடுகள், துன்பங்கள் இவையெல்லாம் எதற்கு என்று நினைக்கிறோம்; துன்பமில்லா இன்பமான வாழ்வு வாழ நினைக்கிறோம். ஆனால் ஆண்டவர் இயேசுவோ பாடுகளின் வழியேதான் நமக்கு மீட்பு என்பதை நற்செய்தியில் திரும்பத் திரும்ப வலியுறுத்துகிறார். யோவான் நற்செய்தி 12:24 ல் ஆண்டவர் இயேசு கூறுவார், “கோதுமை மணி மண்ணில் விழுந்து மடியாவிட்டால் அது அப்படியே இருக்கும். மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும்” என்று. ஆக கோதுமை மணியைப் போன்று நாமும் மடியவேண்டும், பாடுகளை அனுபவிக்கவேண்டும். அப்போதுதான் நாமும் இயேசுவின் மகிமையில் பங்குபெற முடியும்.
 

ஆனால் இன்றைக்கு நிலைமை முற்றிலும் வித்தியாசமாக இருக்கிறது. யாருக்கும் துன்பங்களை, சவால்களை எதிர்கொள்ள துணிவில்லை. எல்லாவற்றிலும் பாதுக்காப்பு தேடியே நமது வாழ்வானது ஓடிக்கொண்டிருக்கிறது. பாதுகாப்பான இடம், பாதுகாக்கப்பட்ட குடிநீர் என்று பழக்கப்பட்ட நமக்கு சாதாரண ஒரு பிரச்னையையும் எதிர்கொள்ள முடியவில்லை.

 
ஒருமுறை ஹங்கேரி நாட்டில் ஓர் ஆலயத்தில் பொது ஆராதனை நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது திடிரென்று துப்பாக்கி ஏந்திய தீவிரவாதிகள் சிலர் ஆலயத்திற்குள் நுழைந்தார்கள். இதைப் பார்த்த மக்கள் அனைவரும் (குருவானவர் உட்பட) எங்கே தங்களுடைய உயிருக்கு ஆபத்து வந்துவிடுமோ  என்று பதறியடித்துகொண்டு ஓடினார்கள். 
ஆனால் அந்த கூட்டத்தில் இருந்த ஒரே ஒரு தாத்தா, பாட்டி மட்டும் ஆலயத்தைவிட்டு நகராமல் அப்படியே இருந்தார்கள். “எல்லாரும் அலறியடித்துக் கொண்டு ஓடும்போது, நீங்கள் மட்டும் ஏன் இந்த ஆலயத்திலேயே இருக்கிறீர்கள்? உங்களுக்கு உயிர்மேல் பயமில்லையா? என்று அந்த முகமூடி அணிந்த தீவிரவாதிகள் அவர்களிடம் கேட்டார்கள். அதற்கு அவர்கள், “எங்கள் உயிரைப் பற்றி எங்களுக்குக் கவலையில்லை. நாங்கள் செத்தாலும் இந்த ஆலயத்திலே சாகிறோம்” என்றார்கள். இதைக்கேட்டு வியந்த அந்த தீவிரவாதிகள் அவர்களிடம், “நாங்கள் தீவிரவாதிகள் அல்ல, மாறாக யாராரெல்லாம் கிறிஸ்துவுக்காக எதையும் இழக்கத் துணிந்தவர்கள் என்பதைச் சோதித்துப் பார்க்க வந்த இயேசுவின் உண்மையான ஊழியர்கள்” என்றார்கள்.
  இயேசுவுக்காக எதையும், ஏன் தங்களுடைய உயிரையும் இழக்கத் துணியும் இயேசுவின் உண்மையான சீடர்கள்  குறைந்து போய்விட்டார்கள் என்பதை இந்த நிகழ்வானது நமக்கு எடுத்துக்காட்டுகிறது. 
இந்த பின்னணியில்தான் நாம் இயேசுவின் உருமாற்றத்தையும், அது உணர்த்தும் ‘பாடுகளின் வழியே மீட்பு உண்டு’ என்று உண்மையையும் புரிந்துகொள்ள வேண்டும். இயேசு சாவைத் துணிவுடன் ஏற்றுக்கொண்டார். தன்னைப் பின்தொடர்ந்து வரும் சீடர்களும் சிலுவையை தூக்கிக்கொண்டு வரவேண்டும் என்கிறார்.
 
பிலிப்பியருக்கு எழுத்தப்பட்ட திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய இரண்டாம் வாசகத்தில் பவுலடியார் கூறுவார், “கிறிஸ்துவின் சிலுவைக்குப் பகைவர்களாய் நடப்போர் பலர் உள்ளனர்” என்று. ஆம், துன்பமில்லா, இன்பமான வாழ்வு வாழ நினைக்கும் ஒவ்வொருவரும்; பிறர்நலத்தை நாடாமல், தன்னலச் சேற்றில் மூழ்கிக் கிடக்கும் ஒவ்வொருவரும்; இந்த மண்ணுலகு சார்ந்தவை பற்றியே எண்ணுபவர்கள் யாவருமே இயேசுவின் சிலுவைக்கு பகைவர்கள்தான். ஏனெனில் சிலுவை மண்ணுலகு சார்ந்தவற்றை அல்ல விண்ணுலகு சார்ந்த காரியங்களையே நமக்கு நினைவூட்டுகிறது.

 
ஆகவே இயேசுவின் சீடர்களாக இருக்கும் நாம் ஒவ்வொருவரும் சிலுவை, பாடுகள், துன்பம் இவையெல்லாவற்றையும் ஒதுக்கித்தள்ளாமல், அவற்றைத் துணிவுடன் ஏற்றுக்கொண்டு, இயேசுவின் வழியில் நடக்க முயலுவோம்.
 
அடுத்ததாக நாம் இயேசுவின் பாடுகளின் வழியில் நடப்பதோடு மட்டுமல்லாமல், அவரோடு நல்லுறவு ஏற்படுத்திக்கொள்ள முன்வரவேண்டும். இரண்டாம் வாசகத்தில் பவுலடியார் கூறுகிறார், “ஆண்டவரோடு உள்ள உறவில் நிலைத்திருக்கள்” என்று. இந்த தவக்காலத்திலே ஆண்டவருக்கும், நமக்கும் உள்ள உறவில் நிலைத்திருப்பது மிகவும் சாலச் சிறந்த ஒன்றாகும். ஏனென்றால் நமது வாழ்க்கை வேலை, படிப்பு, உழைப்பு என்று சுழன்றுகொண்டிருக்கிறது. இதனால் கடவுளோடு உள்ள உறவில் தொய்வு ஏற்பட்டு, நமது வாழ்வே எந்திரத்தனமானதாக மாறிப்போய்விடுகிறது. இந்த சூழ்நிலையில்தான் நாம் இறைவனோடு உள்ள உறவில் வளர்வது மிகவும் தேவையானதாக இருக்கிறது.
 
சில ஆண்டுகளுக்கு முன்பாக ஒருவன் பொதுத்தொலைபேசி நிலையத்திற்குச் சென்று, வெளியூரில் இருக்கும் தன்னுடைய நெருங்கிய உறவினருக்கு தொலைபேசி வழியாகப் பேசினான். ஆனால் மறுமுனையிலிருந்து சத்தம் கேட்காததால் கொஞ்சம் சத்தமாகப் பேசினான். அப்போதும் அவனுக்கு மறுமுனையில் இருப்பவர் பேசும் சத்தம் கேட்கவில்லை. இதனால் அவன் இன்னும் அதிக சத்தமாகப் பேசினான்.
 
அதற்குள் பொதுத் தொலைபேசி நிலையத்தைச் சுற்றி பெருங்கூட்டமே கூடிவிட்டது. அவன் எதற்கு இவ்வளவு மக்கள் கூடியிருக்கிறார்கள் என்று புரியாமல் விழித்தான். அதன் பின்னர்தான் உண்மையை உணர்ந்தான் தான் தொலைபேசியை மாற்றி வைத்துப் பேசிக்கொண்டிருக்கிறோம் என்று. 
மனிதர்களோடு உள்ள தொடர்பு சரியில்லாதபோதே மிகப்பெரிய குழப்பம் ஏற்படுகிறது என்று சொன்னால், கடவுளுக்கும், மனிதருக்கும் இடையே உள்ள உறவு சரியில்லாதபோது அது மிகப்பெரிய குழப்பத்திற்கும், ஆபத்துக்கும்தான் நம்மை இட்டுச் செல்லும். அதனால்தான் பவுலடியார், “ஆண்டவரோடு உள்ள உறவில் நிலைத்திருங்கள்” என்கிறார்.

 
இப்படி ஆண்டவரோடு உள்ள உறவில் நிலைத்திருந்ததற்கு நமக்கு மிகப்பெரிய உதாரணமாக இருப்பவர் முதல் வாசகத்தில் நாம் படிக்கக்கேட்கும் நமது முதுபெரும் தந்தை ஆபிரகாம். அவர் கடவுளின் வார்த்தைக்கு கீழ்படிந்து நடந்தார்; அவர்மீது ஆழமான நம்பிக்கை கொண்டு வாழ்ந்தார். அதனால்தான் கடவுள் ஆபிரகாமின் நம்பிக்கையைப் பார்த்து, “உன் மரபை வானத்து விண்மீன்களைப் போலவும், கடற்கரை மணலைப் போலவும் பெருகச் செய்வேன்” என்கிறார். 
எனவே இந்த தவக்காலத்தில் ஆபிரகாம் எப்படி ஆண்டவரோடு உள்ள உறவில் நிலைத்திருந்தாரோ அதுபோன்று நாமும் நமது நம்பிக்கையால், கீழ்படிதலுள்ள வாழ்வால் நல்லுறவில் நிலைத்திருப்போம். அத்தோடு இயேசுவைப் போன்று நமது வாழ்வில் வரும் துன்பங்களை, பாடுகளை துணிவுடன் ஏற்றுக்கொள்வோம். அதன் வழியாக இறையருளை நிறைவாய் பெறுவோம்.
 
“இதோ என் எதிரிலுள்ள கம்பத்தில் என்னைத் தூக்கிலிட்டாலும் சரி, துப்பாக்கியால் என்னைச் சுட்டாலும் சரி, நான் என் கொள்கைகளை எவருக்கும் விட்டுக்கொடுக்க மாட்டேன் - புரட்சியாளர் சேகுவேரா.



No comments:

Post a Comment