Wednesday 13 February 2019

ஆண்டின் பொதுக்காலம் 6-ஆம் ஞாயிறு


ஆண்டின் பொதுக்காலம் 6-ஆம் ஞாயிறு


இன்றைய வாசகங்கள்

எரேமியாஸ் 17:5-8
1கொரிந்தியர் 15:12, 16-28
லூக்கா 6:20-26
 



ஏழ்மை - வாழ்வு!

ஒரு நாள் வீதியிலே பிச்சை கேட்டுக் கொண்டிருந்த பிச்சைக்காரனை நோக்கி, அரசன் அரண்மனைக்கு வரச் சொன்னான். அரசன் பொன்னும், பொருளும் நிறையத் தருவான் என்ற எதிர்பார்ப்போடு அவன் உள்ளே சென்றான். வாயிற்காவலனும் உள்ளே போக அனுமதித்தான். அரசன் உள்ளே செபித்துக் கொண்டிருந்ததால் பிச்சைக்காரனைச் சிறிது நேரம் காத்திருக்கச் சொன்னார்கள். ஆனால் பிச்சைக்காரன் சிறிது நேரத்தில் வெளியே புறப்பட்டுச் சென்றான். அரசன் என்ன கொடுத்தார் என்று வாயிற்காவலன் ஆவலோடு கேட்டான். அரசனே ஒரு பிச்சைக்காரனாக ஆண்டவரிடம் கையேந்தி நிற்கிறார். அவரிடம் பிச்சை கேட்க முடியாது என்று திரும்பிவிட்டேன் என்றான் பிச்சைக்காரன்.

இந்தக் கதையைக் கேட்கின்ற நீங்கள், இன்றைய இறைவார்த்தையைக் கேட்ட நீங்கள் இயேசுவின் பார்வையில் யார் பேறு பெற்றவர்கள், யார் சபிக்கப்பட்டவர்கள் என்பதைச் சிந்திக்க அழைக்கிறேன்.

இறைவன் சமதளமான இடத்திலே வந்து போதித்தார் என வாசிக்கக் கேட்டோம். ஏனெனில் புனித லூக்கா குறிப்பிடுவது போல இறைவனே இறங்கி வந்து மனிதனோடு மனிதனாகப் பேசினார் என்பதைத்தான் இந்தச் சமதளமான இடம் குறிப்பிடுகிறது.

இன்றைய நற்செய்தியிலே லூக்கா நான்கு வகையான பேறுகளைத் தருகின்றார். ஏழைகளே! பேறு பெற்றவர்கள் என்கிறார். இயேசுவின் பார்வையில் பொருள் இல்லாமல் இருக்கிற ஏழைகள் மட்டுமல்ல, அருளில்லாமல் இருந்து அருளைத் தேடுபவர்களும் பேறு பெற்றவர்கள். எனவேதான் உண்மைச் செல்வமாகிய, நிலையான செல்வமாகிய விண்ணகத்தைத் தேட அழைக்கிறார் (மத். 6:3 லூக் 6:20).

(1) உடல் பட்டினியால் வாடுபவர்களைவிட ஆன்ம பசியால் வாடுபவர்களே பேறு பெற்றவர்கள் என்கிறார்.
(2) பெரும் கண்ணீரோடு புலம்புவதைவிட தங்கள் பாவத்திற்காக மனம் உடைந்து அழுபவர்களே பேறுபெற்றவர் என்கிறார்.
(3) உலகத்தால் வெறுக்கப்பட்டவர்கள் கடவுளால் ஏற்றுக் கொள்ளப்பட்டவர்கள் என்றும் தெரிவிக்கிறார்.

ஆனால் கடவுளை விட்டு உலகையும், உலகச் செல்வத்தையும் நம்பி வாழும் அத்தனை பேரும் சபிக்கப் பட்டவர்கள். இவர்கள் முத்து இல்லாத சிப்பி குப்பையிலே எறியப்படுவதுபோல ஒன்றுக்கும் உதவாதவர்கள்.

இயேசு வாழ்ந்த காலத்திலே பாலஸ்தீனத்திலே ஏழைகளுக்கும் செல்வந்தர்களுக்கும் இடையே பெரும் வித்தியாசம் இருந்தது. எடுபிடி வேலை செய்யவும், கூலி வேலை செய்யவும் ஏழை மக்கள் பயன்படுத்தப்பட்டார்கள். ஏழை மக்கள் பொருளாதாரத்தில் வளர்ந்துவிட்டால் இது போன்ற எடுபிடி வேலைக்கு வரமாட்டார்கள் என்று செல்வந்த வர்க்கம் ஏழைகளை அமுக்கிப் போட்டது. அதிக வட்டிக்கு முன் கூட்டியே பணம் கொடுத்து அதைத் திருப்பித் தரமுடியாத நிலையில் அவர்களைக் கொத்தடிமைகளாக ஆக்கிய காலம் இயேசுவின் காலம். அந்த அவல நிலைதான் இன்றும் நம் நாட்டில் காட்சி தருகிறது. ஏழை மக்கள் பல்வேறு துன்பங்களுக்கும், இன்னல்களுக்கும் உட்படுத்தப்படுகிறார்கள். தலைநிமிர முடியாத நிலையில் தவிக்கிறார்கள். இயேசுவின் பேச்சைக் கேட்க வந்தவர்களும் இத்தகைய ஏழை மக்கள் தான். எனவேதான் அவர்களுக்கு உயிரூட்டம் கொடுக்க, ஏழைகளே நீங்கள் பேறுபெற்றவர்கள்! இறையாட்சி உங்களுக்கு உரியதே (லூக். 6:20) என்கிறார்.

ஏழை என்பதாலோ, செல்வந்தன் என்பதாலோ கேடுற்றவன் என்பதும் சரியில்லை . மாறாக சமத்துவம், பிறர் அன்பு போன்ற உணர்வுகள் இல்லாமல், சுயநலம், அகங்காரம், ஆணவம் கொண்ட அத்தனை பேருமே ஆண்டவருக்கு முன் கேடுற்றவர்கள் தான். செல்வந்தர்கள் பேறுபெற்றவர்களாக மாற வேண்டுமானால், செல்வமாகிய, நிலையான செல்வமாகிய விண்ணகத்தைத் தேட அழைக்கிறார் (மத். 6:3 லூக் 6:20) திகழ வேண்டும்.

இரண்டாவது, நம்பிக்கையே வாழ்வு. ஆண்டவரில் நம்பிக்கை வைப்பவர் பேறு பெற்றவர். எரேமியாஸ் கூறுவது போல ஆண்டவரில் நம்பிக்கை வைப்பவர், நீர் அருகில் நடப்பட்ட மரத்திற்கு ஒப்பாவார். அது எப்போதும் பசுமையாய் இருந்து காலத்தில் கனி கொடுக்கும் (எரே. 17:7-8).

இறுதியாக இரு காரியங்கள் சொல்ல விரும்புகிறேன்.
1. ஏழைக்கு இரங்குபவன் இறைவனுக்கு வட்டிக்குக் கொடுக்கிறான். அதை அவர் திருப்பித் தருவார் என்று சொல்லப்பட்டது (நீதிமொழி 19:17). எனவே ஏழையாக உள்ள நாம் ஏழைக்கு இரங்குவோம். கொடுங்கள், உங்களுக்குகொடுக்கப்படும் (லூக். 6:38).

2. இரண்டாவது, மனிதர்களை நம்பாதீர்கள். மனிதர்களை
மதியுங்கள். மிதிக்காதீர்கள். மாறாக, இறைவனை மட்டும் நம்புங்கள். நல்லது நடக்கும்.

கடவுள் யார்?

கடவுள் எப்படிப்பட்டவர்? என்பதற்கு இன்றைய நற்செய்தியில் இயேசு விளக்கம் ஒன்றைத் தருகின்றார். கடவுள் யார்? என்ற கேள்விக்கு இன்றைய நற்செய்தி பதில் கொடுக்கின்றது.

கடவுள் ஏழைகளை செல்வந்தர்களாக்குபவர்; பட்டினியாய் கிடப்பவர்களுக்கு உணவு கொடுப்பவர் : அழுகின்றவர்களைச் சிரிக்கவைப்பவர். ஆம். கடவுள் என்பவர் எளியோரை உயர்த்துகின்றவர்.

ஒரு பெரிய நாட்டை பேரரசர் ஒருவர் ஆண்டு வந்தார். அவருக்குத் திடீரென ஒரு சந்தேகம்! ஓர் அரசர் நாட்டை ஆள்கின்றார். ஒரு போர் வீரன் போர்புரிகின்றான். ஓர் ஆசிரியர் கற்பிக்கின்றார். இப்படி இந்த உலகில் பிறந்த எல்லாரும் ஏதாவது ஒரு வேலையைச் செய்து கொண்டிருக்கின்றார்கள்! அது போல கடவுள் என்ன வேலை செய்துகொண்டிருக்கின்றார்? என்று அறிந்துகொள்ள அந்தப் பேரரசருக்கு ஆசை !

தலைமை அமைச்சனுக்குக் கூட பதில் தெரியவில்லை! அந்த அமைச்சனின் வழியாக பேரரசரின் சந்தேகத்தைப் பற்றியும், சந்தேகத்தைத் தீர்த்துவைக்க முடியாமல் தவிக்கின்றவர்களைப் பற்றியும் ஆடுமேய்க்கும் ஏழைச் சிறுவன் ஒருவன் அறிந்துகொண்டான்.

அவன் பேரரசர் முன்னால் நின்றான். இவனால் எப்படி இவ்வளவு பெரிய சந்தேகத்தைத் தீர்த்து வைக்க முடியும்? என்ற கேள்வி எல்லாருடைய மனத்திலும் எழுந்தது!

பேரரசர் முன்னால் நின்ற சிறுவன் அவரைப் பார்த்து, பேரரசே! கேள்வி கேட்பவன் மாணவன் ; பதில் சொல்பவர் ஆசிரியர். இதை ஏற்றுக்கொள்கின்றாயா? என்றான். அவர், ஆம் என்றார்.

சாதரணமாக ஆசிரியர்தான் உயர்ந்த இடத்தில் அமர்ந்திருப்பார், மாணவன் அவர் முன்னால் நின்று கொண்டிருப்பான். இதை ஏற்றுக்கொள்கின்றாயா? என்றான் சிறுவன்.

பேரரசர் , ஆம் என்றார்!

சிறுவனோ, அப்படியானால் இங்கே நான் ஆசிரியர், நீ மாணவன், கீழே இறங்கி வா! என்றான்.

சிறுவன் சிம்மாசனத்தில் அமர்ந்தான். பேரரசர் அவன் முன்னால் நின்றுகொண்டிருந்தார்.

அப்போது சிறுவன், இதைத்தான் கடவுள் செய்துகொண்டிருக்கின்றார்; உயர்ந்தோரைத் தாழ்த்தி, தாழ்ந்தோரை உயர்த்திக்கொண்டிருக்கின்றார் என்றான்.

ஆம். கடவுள் தாழ்ந்தோரை உயர்த்துகின்றவர். இன்றைய முதல் வாசகம் கூறுவதுபோல, கடவுள்
முள்ளை மலராக்குவார்!
கல்லைக் கனியாக்குவார்!

இன்றைய இரண்டாம் வாசகம் கூறுவது போல அனைவர்க்கும் கடவுள் இம்மையையும் தருவார், மறுமையையும் தருவார்.

கடவுளுடைய அரசாட்சியில், இறையாட்சியில், ஏழைகள், எளியவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள், ஒதுக்கப்பட்டவர்கள், ஓரங்கட்டப்பட்டவர்கள், இல்லாதவர்கள் ஆகியோருக்குத்தான் முதலிடம். இந்த உண்மையை நமது உள்ளத்தில் முள்ளெனத் தைத்துக்கொண்டு நமது முழு நம்பிக்கையையும் கடவுள் மீது வைப்போம் (முதல் வாசகம்).

மேலும் அறிவோம் :
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல (குறள் : 4).

பொருள்: இறைவன் விருப்பு வெறுப்பு இல்லாதவன். அவனுடைய திருவடியைச் சென்று அடைபவருக்குத் துன்பங்கள் எதுவும் தோன்றாது.




ஒருமுறை நான் ஒரு வீட்டுக்குச் சென்றபோது, அவ்வீட்டின் தலைவர் தமது மனைவியை எனக்கு அறிமுகப்படுத்திக் கூறியது: "சுவாமி! என் மனைவி தங்கமானவள், மாதத் தொடக்கத்தில் சம்பளம் வாங்கி அதை அப்படியே அவள் கையில் கொடுக்கும்போது, 'அத்தான்அத்தான்' என்று தேன் ஒழுகப் பேசுவாள். ஆனால் 15 ஆம் தேதி ஆனபிறகு 'போடா வாடா' என்று கத்துவாள்". காசு இருந்தால் அவன் அத்தான்; அது இல்லையென்றால் அவன் செத்தான்.

இன்றைய உலகம், ஒருவர் எத்தகையவர்? அவர் என்ன செய்தார் என்பதற்காக அல்ல, மாறாக அவரிடம் எவ்வளவு பணம் இருக்கிறது என்பதற்காகவே அவரை மதிக்கின்றது, இக்கசப்பான உண்மையை 'நல்வழி' நூல் பின்வருமாறு எடுத்துரைக்கின்றது.

கல்லானே ஆனாலும் கைப்பொருள் ஒன்று உண்டாயின்
எல்லாரும் சென்று அங்கு எதிர்கொள்வர் - இல்லானை
இல்லாளும் வேண்டாள் மற்றும் ஈன்றெடுத்ததாய் வேண்டாள்
செல்லாது அவன் வாயிற்சொல். (நல்வழி 34).

ஒருவர் படிக்காத முட்டாளாக இருந்தாலும், அவர் பணக்காரராய் இருந்தால், எல்லாரும் அவரை வரவேற்பர். மாறாக, அவரிடம் பணம் இல்லையென்றால், பெற்ற அம்மாவோ கட்டிய மனைவியோ அவரை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அவன் சொல்லை எவருமே மதிக்கமாட்டார்.

ஆனால், இன்றைய நற்செய்தியிலே இயேசு கிறிஸ்து, ஏழைகள் பேறு பெற்றவர்களென்றும், பணக்காரர்கள் சபிக்கப்பட்டவர்கள் என்றும் கூறுவது இவ்வுலகின் போக்குக்கு ஒத்துவராது. இதைக் கேட்பவர்கள் ஏளனம் செய்வார்கள். எனவேதான் இயேசு கிறிஸ்து, "நீங்கள் கடவுளுக்கும் செல்வத்துக்கும் பணிவிடை செய்ய முடியாது" (லூக் 16:13) என்று கூறியதைக் கேட்ட "பண ஆசைமிக்க பரிசேயர் இயேசுவை ஏளனம் செய்தனர்” (லூக் 16:14).

கடவுளின் எண்ணங்களும் வழிகளும் மனிதர்களின் எண்ணங்களையும் வழிகளையும் விட உயர்ந்தவை (எசா 55:8-9). இவ்வுலகின் தாரகமந்திரம்: உலகயமாக்குதல், தாராள மயமாக்குதல். நவீனமயமாக்குதல், ஆனால் கடவுளின் தாரக மந்திரம்: விசுவாசம், நம்பிக்கை, அன்பு.

இவ்வுலகு காட்டும் வழியைப் பின்பற்றினால் நிலையற்ற செல்வம் கிடைக்கலாம், ஆனால் கடவுள் காட்டும் வழியைப் பின்பற்றினால் நிலையான செல்வம் கிடைக்கும். மனிதருக்குப் பொருளும் வேண்டும்; அருளும் வேண்டும். பொருளில்லாதவர்கள் இவ்வுலக இன்பங்களைத் துய்க்கமுடியாது. அருளில்லாதவர்கள் மறுமைப் பேரின்பத்தைப் பெற முடியாது..

அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை; பொருளில்லார்க்கு
இவ்வுலகம் இல்லாகி யாங்கு (குறள் 247)

பொருளைத் தேடி அலையும் மக்கள் அருளுக்கு முதலிடம் கொடுத்தால், மற்றனைத்தையும் சேர்த்துப் பெறுவர் (மத் 6:33).

வறுமையோ, துன்பமோ, அழுகையோ தன்னிலே பேறுபெற்றவை என்றோ, அவற்றைக் கடவுள் விரும்புகிறார் என்றோ அல்லது அவற்றிலிருந்து நாம் விடுதலையைத் தேடக் கூடாது என்றோ இயேசு கிறிஸ்து கூறவில்லை. மாறாக, பண ஆசை கூடாது, பணத்தை நம்பி வாழ்பவர்கள் கடவுளை நம்புவது கடினம் என்பதையே அவர் இன்றைய நற்செய்தியில் சுட்டிக்காட்டுகிறார். இன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்கினர் எரேமியாவும், "மனிதரில் நம்பிக்கை வைப்போர் சபிக்கப்பட்டவர்; ஆண்டவரில் நம்பிக்கை வைப்போர் பேறுபெற்றோர்” எனக் கூறுகிறார். பதிலுரைப் பாடலும், 'ஆண்டவரில் நம்பிக்கை வைப்போர் என்றும் கனிதரும் மரம்போலப் பசுமையாக இருப்பர். ஆனால் ஆண்டவரில் நம்பிக்கை கொள்ளாத தீயோர் காற்று அடித்துச் செல்லும் பதரைப் போல் ஆவர்' எனக் கூறுகிறது.

ஒரு பணக்காரர் வீட்டில் ஒரு சிறுவன் வேலைக்காரனாக இருந்தான். ஒரு நாள் அவன் பணக்காரருடைய படுக்கை அறையைச் சுத்தம் செய்யச் சென்றபோது அந்த அறையிலிருந்த பஞ்சு மெத்தைப் படுக்கையில் படுத்துத் தூங்கிவிட்டான். பணக்காரர் அதைப் பார்த்துப் பயங்கர கோபத்துடன் தன் "பெல்ட்டால்" வேலைக்காரச் சிறுவனை பலமுறை அடித்தார், ஆனால் அச்சிறுவனோ பயங்கரமாகச் சிரித்தான். ஏன் அவன் அவ்வாறு சிரிக்கிறான் என்று பணக்காரர் அச்சிறுவனைக் கேட்டதற்கு அவன், "இப்படுக்கையில் அரைமணி நேரம் படுத்திருந்த எனக்கு இத்தண்டனை என்றால், இப்படுக்கையில் ஆயுள் முழுவதும் படுத்துறங்கும் உமக்குக் கடவுள் என்ன தண்டனை கொடுக்கக் காத்திருக்கிறாரோ ?" என்று சொல்லி மீண்டும் சிரித்தான்.

இன்றைய நற்செய்தியில் கிறிஸ்து. "செல்வர்களே ஐயோ! உங்களுக்குக் கேடு. ஏனெனில் நீங்கள் எல்லாம் அனுபவித்து விட்டீர்கள்" (லூக் 6:24) எனக் கூறுகிறார். யாக்கோபு என்பவர் தமது மடலில் செல்வர்களைப் பின்வருமாறு எச்சரிக்கின்றார்: "இவ்வுலகில் ஆடம்பரமாகவும் இன்பமாகவும் வாழ்ந்தீர்கள். கொல்லப்படும் நாளுக்காக உங்களைக் கொழுக்க வைத்தீர்கள்"  (யாக் 5:5).

இவ்வுலகில் துன்புறுகிறவர்கள் மறுமை வாழ்வை எண்ணி மகிழவேண்டும். நமக்கு மறுமை வாழ்வு இல்லையென்றால் மற்ற மக்களை விட நாம் பரிதாபத்துக்குரியவர்கள் என்று இன்றைய இரண்டாம் வாசகத்தில் பவுல் கூறுகிறார் (1 கொரி 15:16). கிறிஸ்து, "தாம் அடையவிருந்த மகிழ்ச்சியின் பொருட்டு, இழிவையும் பொருள் படுத்தாமல் சிலுவையை ஏற்றுக் கொண்டார். இப்போது கடவுளது அரியணையின் வலப்பக்கத்தில் வீற்றிருக்கிறார்" (எபி 12:2).

பணக்காரர்களும் ஆயக்காரச் சக்கேயுவைப் போன்று மனம்மாறித் தங்கள் செல்வத்தை ஏழைகளுடன் பகிர்ந்து கொண்டால் அவர்களுக்கும் மீட்பு உண்டு. "செல்வத்தின் பயன் ஈதல்".

ஓர் அரசியல்வாதி தான் ஆட்சிக்கு வந்தால் நிலம் கொடுப்பதாகவும், வீடு கட்டித் தருபவதாகவும் மற்றும் எல்லாச் சலுகைகளையும் ஏழைகளுக்குத் தருவதாகவும் வாக்குறுதிகளை அள்ளி வீசினார். அவரிடம் ஓர் ஏழை, "பத்து ரூபாய் கொடுங்கள்” என்று கேட்டதற்கு, "இல்லை" என்று கையை விரித்தார். சொல்லிலும் பேச்சிலும் அல்ல, செயலில் உண்மையான அன்பை விளங்கச் செய்வோம் (1 யோவா 3:18).

இப்போது செல்வம் இல்லாதவர்கள் கூட ஒரு காலத்தில் செல்வந்தவர்களாக வாய்ப்பு உண்டு. ஆனால், அருள் (இரக்கம்) இல்லாதவர்கள் ஒருக்காலும் சிறப்புறமாட்டார்கள்,

பொருள் அற்றார் பூப்பர் ஒருகால்; அருள் அற்றார்
அற்றார் மற்று ஆதல் அரிது (குறள் 248).


 மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளை- www.arulvakku.com

யார் பேறுபெற்றோர்!



 நிகழ்வு
          1835 ஆம் ஆண்டு, நியூயார்க் நகரில் இருந்த நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று விசாரணைக்கு வந்தது. மூதாட்டி ஒருத்தி ஒரு கடையிலிருந்து ரொட்டியைத் திருடிவிட்டாள் என்பதுதான் அந்த வழக்கு.

வழக்கை விசாரித்த நீதிபதி, மூதாட்டி ரொட்டியைத் திருடியது உண்மைதான் என்பதை உறுதி செய்தார். பின்னர் அவர் அந்த மூதாட்டியிடம், “நீங்கள் எதற்காக கடையிலிருந்து ரொட்டியைத் திருடினீர்கள் என்பதைத்  தெரிந்துகொள்ளலாமா?” என்று கேட்டார். முதாட்டியோ மிகவும் உடைந்த குரலில், “ஐயா! நான் ஓர் ஏழை, கணவனை இழந்தவள். எனக்கொரு மகள் இருக்கிறாள், அவளும் படுத்த படுக்கையாய் கிடக்கிறாள். அவளுக்கு இரண்டு பிள்ளைகள். அவளுடைய கணவன்கூட இப்போது அவளோடு இல்லை. இப்படிப்பட்ட சூழலில், என்னுடைய பிள்ளைக்கும் அவளுடைய பிள்ளைகளுக்கும் உணவு கொடுக்க என்ன செய்வது என்று யோசித்துக்கொண்டிருந்தேன். அப்போதுதான் வேறு வழியில்லாமல் கடையிலிருந்து ரொட்டி திருடலாம் என முடிவுசெய்து, இப்படியோர் செயலில் ஈடுபட்டேன்” என்றார்.

  அந்த மூதாட்டி சொன்னதைக் கொண்டிருந்த நீதிபதி உட்பட, நீதிமன்றத்தில் இருந்த  எல்லாரும் கணத்த இதயத்தோடு அமைதியாயினர். அப்போது நீதிபதி அந்த மூதாட்டியைப் பார்த்துச் சொன்னார், “அம்மா! சட்டத்திற்கு முன்பு எல்லாரும் சமம்... ஆதலால், நீங்கள் செய்த திருட்டுக் குற்றத்திற்குத் தண்டனையாக பத்து டாலர் அபராதம் கட்டவேண்டும், இல்லையென்றால், பத்து நாள் சிறைத்தண்டனையை அனுபவிக்கவேண்டும்” என்று உத்தரவிட்டார். “ஐயா! பத்து டாலர் என்னிடத்தில் இருந்தால், நான் ஏன் திருடப்போறேன்... மேலும் ரொட்டி திருடிய குற்றத்திற்காக நான் சிறைக்குச் சென்றால், என்னை நம்பி இருக்கக்கூடிய என் மகள் மற்றும் அவளுடைய பிள்ளைகள் சாப்பாட்டிற்கு எங்கு செல்வார்கள்... அதை நினைத்தால் நெஞ்சம் பதறுகிறது” என்று கண்ணீர் மல்கச் சொல்லிமுடித்தார்  அந்த மூதாட்டி.
 
ஒருசில நிமிடங்களுக்கு நீதிமன்றத்தில் பேரமைதி நிலவியது. பின்னர் நீதிபதி அந்த மூதாட்டியைப் பார்த்து, “அம்மா! நீங்கள் கட்டவேண்டிய பத்து டாலர் அபராதத் தொகையை நான் கட்டிவிடுகிறேன்” என்றார். பிறகு அங்கிருந்த மக்களைப் பார்த்து அவர், “இந்த மூதாட்டி ரொட்டி திருடுகின்ற நிலைமைக்கு வந்துவிட்டாரே... இதற்கு நாம்தான் காரணம். ஆகவே, இதற்குத் தண்டனையாக ஆளுக்கொரு டாலர் இவருக்குக் கொடுத்துவிட்டுப் போங்கள்” என்று சொல்லி தீர்ப்பை முடித்தார்.
 
இந்த உலகத்தில் பிறந்த யாரும் தனித்து வாழமுடியாது, ஒருவர் மற்றவரைச்  சார்ந்துதான் வாழவேண்டும். அப்படியிருக்கின்றபோது, பலர் பட்டினியாகக் கிடைக்கின்றபோது, ஒருசிலர் மட்டும் உண்டு கொழுத்து வாழ்வதை சுயல்நலம், அநீதி என்று சொல்லாமல், வேறு என்ன சொல்ல முடியும்?.
 
பொதுக்காலத்தின் ஆறாம் ஞாயிற்றுக்கிழமையில் இருக்கும் நமக்கு, இன்றைய நாளில் நாம் படிக்கக்கேட்ட நற்செய்தி வாசகம், சுயநலவாதிகளாக இல்லாமல், பிறர்நலவாதிகளாக இருக்கவும் இவ்வுலகு சார்ந்த காரியங்களில் மட்டும் பற்றுக் கொள்ளாமல், மறுவுலகு சார்ந்த காரியங்களில் பற்றுகொள்ளவும் அதன்மூலம் பேறுபெற்றவர்களாக வாழ அழைப்புத் தருகின்றது. நாம் அதைக் குறித்து இப்போது சிந்தித்துப் பார்ப்போம்.

  1. மலைப்பொழிவும் சமவெளிப்பொழிவும் வேறு வேறா? அல்லது ஒன்றுதானா?
ஒருசில விவிலிய அறிஞர்கள் லூக்கா நற்செய்தியில் இடம்பெறும் சமவெளிப்பொழிவும் (லூக் 6:17) மத்தேயு நற்செய்தியில் இடம்பெறுகின்ற மலைப்பொழிவும் (மத் 5 – 7) வேறு வேறு என்று சொல்வார்கள். இதற்கு அவர்கள் சொல்கின்ற மிக முக்கியமான காரணம், இரண்டும் இருவேறு இடங்களில் வருகிறது என்பதால். இன்னும் ஒருசில விவிலிய அறிஞர்கள் மலைப்பொழிவின் சுருக்கமே (Shorter Version) சமவெளிப்பொழிவு என்பார்கள். இது ஒருபுறமிருக்க Exegetical Fallacies என்ற புத்தகத்தில் டி.ஏ.கார்சன் என்ற விவிலிய அறிஞரோ, சமவெளி என்பது வேறொன்றுமில்லை, அது மலையில் இருக்கின்ற ஒரு சமதளமான பகுதி என்று குறிப்பிடுவார். இக்கூற்று உண்மையெனில் மலைப்மொழிவும் சமவெளிப்பொழிவும் வேறுவேறு அல்ல, அவை இரண்டும் ஒன்றுதான் என்று நாம் உறுதி செய்து கொள்ளலாம்.
  1. ஏழ்மை, பட்டினி, அழுகை, துன்பம் இவையெல்லாம் பேறுகளா? சாபங்களா?
யூதர்களைப் பொறுத்தளவில், நீடிய ஆயுளும் நலமான வாழ்வும் குறையாத செல்வமும் களஞ்சியம் நிறையத் தானியமும் பழுகிப்பெருகிய மந்தையும்தான் உண்மையான பேறுகளாகும். (இச 28; யோபு 1:1-12 நீமொ 3:1-10). அப்படி இருக்கும்போது, இயேசு ஏழைகளையும் (ஏழ்மை) பட்டினியாய் கிடப்போரையும் (பட்டினி) அழுவோரையும் (அழுகை) மானிடமகன் பொருட்டு துன்பப்படுவோரையும் (துன்பம்) பேறுபெற்றோர் எனச் சொல்கிறாரே, இதை எப்படிப் புரிந்துகொள்வது என்ற கேள்வி எழலாம்.

 இயேசு, நாம் ஏழ்மையில் இருக்கவேண்டும், பட்டினி கிடக்கவேண்டும், அழுதுகொண்டிருக்கவேண்டும் அல்லது துன்பப்பட்டுக் கொண்டிருக்கவேண்டும் என்று நினைப்பவரல்ல, அப்படி விரும்புகிறவரும் அல்ல. மாறாக இந்த ஏழ்மை, பட்டினி, அழுகை, துன்பம் போன்றவை எல்லாம் நம்மை இறைவன்மீது நம்பிக்கை வைத்து வாழவும் சக மனிதன்மீதும் கரிசனை கொண்டு வாழத் தூண்டுகிறதே, அதனால்தான் இத்தகைய நிலையில் இருப்போரைப் பேறுபெற்றோர் என இயேசு அழைக்கின்றார். இதனை உறுதிசெய்யும் வகையில்தான் இயேசுவின் காலத்தில் இருந்த ஏழைகளும் பாவிகளும் வறியவர்களும் அவரைத் தேடிச் சென்றார்கள் (லூக் 15:1) பணக்காரர்களோ இதற்கு மாறாக இருந்தார்கள்.
 

  1. செல்வந்தர்கள் பேறுபெற்றோர் ஆகமுடியாதா?

ஏழைகளையும் பட்டினியில் கிடப்போரையும் அழுதுகொண்டிருப்போரையும் மானிடமகன் பொருட்டு துன்புறுத்தப்படுவோரையும் பேறுபெற்றோர் எனச் சொல்லும் இயேசு, இதற்கு மாறாக இருக்கின்ற செல்வந்தரையும் உண்டு கொழுத்திருப்போரையும் பார்த்து ஐயோ கேடு என்று சொல்கிறாரே அது ஏன்?, அவர்களால் பேறுபெற்றோராக மாறமுடியாதா? எனக் கேள்வி எழலாம்.

  செல்வந்தர்கள் இயேசுவின் இத்தகைய கடுஞ்சொல்லுக்கு ஆளாகக் காரணம், அவர்கள் கடவுளை மறந்து, தங்களோடு வாழக்கூடிய சகமனிதர்களை மறந்து வாழ்வதனால்தான். எடுத்துக்காட்டாக, இயேசு சொல்லக்கூடிய உவமைகளில் வரும் அறிவற்ற செல்வந்தனும் (லூக் 12) லாசர் உவமையில் வரும் செல்வந்தனும் (லூக் 16) கடவுளை மறந்ததோடு மட்டுமல்லாமல், தங்களோடு வாழ்ந்த சக மனிதர்களையும் மறந்தார்கள். அதனால்தான் அவர்களுக்கு அப்படியொரு அழிவு நேர்ந்தது. ஒருவேளை அவர்கள் கடவுள்மீது நம்பிக்கை வைத்து, தங்களோடு வாழ்ந்த சகமனிதர்களை அன்பு செய்திருந்தார்கள் செய்தார்கள் எனில், அவர்களால் பேறுபெற்றவர்களாக மாறமுடிந்திருக்கும்.

 எனவே, ஒருவர் செல்வராக அல்லது ஏழையாக இருப்பது முக்கியவில்லை. அவர் இறைவன்மீது நம்பிக்கை வைத்து வாழ்வதும் சக மனிதர்களை அன்பு செய்வதுமே முக்கியம். இப்படிப்பட்டோர் மட்டுமே பேறுபெற்றோராக மாற முடியும்.
 

சிந்தனை

  ஆண்டவரை அடையவேண்டுமா, அடுத்தவரை அன்பு செய்’ என்பார் விவேகானந்தர். ஆம், அடுத்தவர்மீது நாம் கொள்ளும் அன்பும் ஆண்டவர்மீது நாம் கொள்ளும் அன்புமே நம்மை பேறுபெற்றவர்கள் ஆக்கும்.
 
ஆகவே, நாம் அயலாரையும் ஆண்டவரையும் அன்பு செய்வோம். அதன்வழியாக பேறுபெற்றவர்களாகி, இறையருள் நிறைவாய் பெறுவோம்.



நங்கூரப் புள்ளிகள்

என்.எல்.பி என்று சொல்லப்படும் நியூரோ லிங்விஸ்டிக் புரோகிராமிங் என்னும் உளவியல் பகுப்பாய்வில் பேசப்படும் சில கருத்துருக்களில் ஒன்று, 'நங்கூரமிடுவது' ('ஆங்க்கரிங்'). அதாவது, எதிர்மறையான நிகழ்வு ஒன்றை நான் எதிர்கொள்ள வேண்டும் என வைத்துக்கொள்வோம். பத்தாயிரம் பேர் அமர்ந்திருக்கும் ஒரு கூட்டத்தில் நான் பேச வேண்டும். எனக்குக் கூட்டத்தைப் பார்க்க பயமாக இருக்கிறது. என் பயத்தைப் போக்க நான் என்ன செய்ய வேண்டும்? நான் இதற்கு முன் பயமில்லாமல் பேசிய ஒரு நிகழ்வை என் மனத்தில் ஓடவிட்டு, அந்த எண்ண ஓட்டங்களை ஒரு மோதிரம், பேனா, சட்டை என ஏதாவது ஒன்றோடு இணைத்துவிட வேண்டும். இப்போது இக்கூட்டத்தின் முன் பேசுவதற்குமுன் நான் அந்த மோதிரத்தை அணிந்தாலோ, அந்தப் பேனாவைச் சட்டையில் வைத்திருந்தாலோ, அல்லது அந்தச் சட்டையை அணிந்தாலோ என் மனம் நேர்முகமான உணர்வுகளில் இருந்து ஆற்றல் பெற்று பயம் என்னும் எதிர்மறை உணர்வை அழித்துவிடும். இப்படியாக நேர்முகமான உணர்வின்மேல் உள்ளத்தைப் பதிய வைப்பதுததான் நங்கூரமிடுவது.

'நங்கூரம்' - இது ஒரு கப்பல் அல்லது கடல்தொழில் சொல்லாடல். நகர்கின்ற கப்பலை அல்லது பெரிய படகை நிலைநிறுத்தப் பயன்படுவது நங்கூரம். நங்கூரமிட்ட கப்பலை பெரும் புயலும் நகர்த்த முடியாது. எல்லா இடத்திலும் நங்கூரம் இறக்கிவிட முடியாது. சகதி அல்லது சேறு, பாறை அல்லது கடல் மலைப்பாங்கான பகுதிகளில் நங்கூரம் பதியாது. ஆக, சரியான நங்கூரப் புள்ளிகளைக் கண்டுபிடித்தால்தான் நம் கப்பலை நிலைநிறுத்த முடியும்.

இன்றைய இறைவாக்கு வழிபாடு நம்முடைய நங்கூரப் புள்ளிகள் எவை என ஆராய்ந்து பார்க்க அழைக்கின்றன.

நங்கூரப் புள்ளிகள்தாம் நம் வாழ்வின் நிகழ்வுகளை நகர்த்துகின்றன. எடுத்துக்காட்டாக, பழம் வாங்குவதற்கு சூப்பர் மார்க்கெட் செல்கிறோம். அங்கே நாம் வாங்க வேண்டிய பழங்களை கடைக்கு வெளியே வைத்திராமல் கடைக்கு உள்ளே தூரத்தில் வைக்கிறார்கள். ஏன்? பழங்களை வாங்கச் செல்லும் நம்முடைய கண்கள் வழியில் இருக்கும் அனைத்துப் பொருள்களின் மேல் படவும், அப்படிப் படுவதால் நாம் அவற்றால் ஈர்க்கப்பெறவும்தான். ஒருவேளை நான் ஒவ்வொரு பொருளாகப் பார்த்துக்கொண்டே சென்றால், அல்லது இவற்றை வாங்க முற்பட்டால், இவையும் தேவை என உணர்ந்தால் இறுதியில் பழங்கள் என்னும் அவசியத்தை விட்டுவிட வாய்ப்பிருக்கிறது. ஆக, கடைக்காரர் எனக்கு வைத்திருக்கும் நங்கூரப் புள்ளிகளிலிருந்து தப்பி, என்  வாங்குதலின் இலக்கு என்னும் பழங்கள் என்னும் நங்கூரப் புள்ளிகள் நோக்கி நான் நகர்ந்தால்தான் நான் பழங்களை வாங்க முடியும்.

ஆக, என் நம்பிக்கையை, என் நங்கூரத்தை இன்று நான் எதன்மேல் வைக்கிறேனோ அப்போதுதான் நான் வளர முடியும்.

மைக்கேல் ஜாக்சன் அவர்கள் மிகப்பெரிய பாடகரும் டான்சரும்தான். அதற்காக அவர் தினமும் தன் காட்சிக்கான டிக்கெட்டுகளை விற்றுக்கொண்டிருக்க வேண்டுமா? அண்மையில் 'இளையராஜா 75' கொண்டாடினோம். இந்த நிகழ்ச்சிக்காக இளையராஜான டிக்கெட்டுகளை விற்றுக்கொண்டிருந்தாரா? இல்லை! அதை மற்றவர்கள் பார்த்துக்கொள்வார்கள். மைக்கேல் ஜாக்சன், இளையராஜா இவர்களின் நங்கூரப் புள்ளிகள் இசையும் அதற்கேற்ற பயிற்சியும். அவர்கள் அதில் மனத்தைப் பதிய வைக்க வேண்டுமே தவிர, மேடை அமைப்பது, பந்தல் போடுவது, நாற்காலி அடுக்குவது போன்றவற்றில் தங்கள் மனத்தைப் பதிய வைக்கக்கூடாது. ஆக, சாதாரண வாழ்க்கை நிகழ்வுகள் தொடங்கி நம் உளப்பாங்கு புதுப்பித்தல் வரை நங்கூரப்புள்ளிகள் மிக முக்கியப் பங்காற்றுகின்றன.

இன்றைய முதல் வாசகத்தில் (காண். எரே 17:5-8) எரேமியா, 'மனிதர்மேல் நம்பிக்கை,' 'ஆண்டவர்மேல் நம்பிக்கை' என நம்பிக்கையை இரண்டாகப் பிரித்து, மனிதர்மேல் நம்பிக்கை வைப்போர் அடையும் துன்பத்தையும் அழிவையும், ஆண்டவரின்மேல் நம்பிக்கை வைப்போர் பெறுகின்ற மகிழ்ச்சியையும் வாழ்வையும் உருவகமாகப் பதிவு செய்கின்றார். எரேமியாவின் இந்த இறைவாக்கு நிகழ்வு யூதா அரசன் யோயாக்கினின் காலத்தில் (காண். 2 அர 23:36-37) நடக்கிறது. பாபிலோனியர்கள் யூதா நாட்டின்மேல் படையெடுத்து வந்தபோது, யோயாக்கின் பாபிலோனியாவுக்கு உடனடியாக சரணடைந்து தன் நாட்டை அழிவிலிருந்து தற்காலிகமாகக் காப்பாற்றுகிறார். ஆனால், சில ஆண்டுகள் கழித்து, தனக்கு அருகில் இருந்த எகிப்து நாட்டோடு கரம் கோர்க்கின்ற யோயாக்கின் பாபிலோனியாவுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்கிறார். ஆனால், பாபிலோனிய அரசன் நெபுகத்னேசர் மிக வேகமாக எழுந்து இக்கிளர்ச்சியை அடக்கி, கிமு 597ஆம் ஆண்டு யூதாவை முற்றுகைக்கு உட்படுத்துகிறார். உடனடியாக எகிப்தியர்கள் தாங்கள் கொடுத்த இராணுவ பலத்தை விலக்கிக்கொண்டு பின்வாங்குகிறார்கள். யோயாக்கின் கொல்லப்படுகிறார். எருசலேம் கைப்பற்றப்படுகிறது. இந்த நிகழ்வைத்தான் எரேமியா இன்றைய இறைவாக்கில் குறிப்பிடுகின்றார்: 'மனிதரில் (எகிப்தியரில்) நம்பிக்கை வைப்போர் (யோயாக்கினும் அவருடைய அரச அலுவலர்களும்), வலுவற்ற மனிதரில் (எகிப்தியர்) தம் வலிமையைக் காண்போர் (யோயாக்கினும் அவருடைய அரச அலுவலர்களும்) சபிக்கப்படுவர்.' யோயாக்கின் எருசலேமை அழிவிலிருந்து காப்பாற்ற தன் நங்கூரத்தை மனிதர்கள்மேல் பதித்தார். 'ஆண்டவரின் மேல் பதிக்கத் தவறிவிட்டார்.' மனிதர்கள்மேல் வைக்கின்ற நம்பிக்கை உடனடித் தீர்வைத் தரலாம். ஆனால், நிரந்தர தீர்வு ஆண்டவரிடமே உள்ளது. இப்படியாக, அரசர்களுக்கும், அரச அலுவலர்களுக்கும் இறைவாக்குரைக்கின்ற எரேமியா, தொடர்ந்து, அவர்கள் தங்கள் சக மனிதர்கள்மேலும், தங்கள் சிலைவழிபாட்டின்மேலும் நம்பிக்கை வைக்கின்ற நிலையைச் சாடுகின்றார். ஆண்டவரின்மேல் வைக்கும் நம்பிக்கை உடனடியாக பலன் தராததுபோலத் தோன்றினாலும் அது நீண்ட காலப் பலனை நிச்சயம் தரும். ஏனெனில், மனிதர்மேல் வைக்கும் நம்பிக்கை 'பாலைவனப் புதர்ச்செடி போன்றது.' பாலைவனத்தில் செடிகள் வேகமாக முளைக்கும். ஆனால், நிலத்தில் நீர் இல்லாததாலும், வெயிலின் கொடுமையாலும் மிக வேகமாகக் காய்ந்துபோய்விடும். புதர்கள் பார்ப்பதற்கு நிறைய இருப்பதுபோலத் தெரிந்தாலும் அவை தன்னிலே வலுவற்றது. அதுபோலவே, மனிதர்களும். எண்ணிக்கையில் நிறைய என்றிருந்தாலும் அவர்கள் தங்களிலேயே வலுவற்றவர்கள். ஆனால், நீர் அருகில் நடப்பட்ட மரம் முளைக்க நாள்கள் ஆகலாம். ஏன் மாதங்கள் ஆகலாம். ஆனால், அந்த மறைவான நாட்களில் அவ்விதையானது நீரோடை நோக்கி கீழாக வளர்கிறது. பின் வேகமாக மேலே வளர ஆரம்பிக்கும். அதன் நங்கூரம் தண்ணீரில் பதிந்திருப்பதால் வெப்பமிகு காலத்திலும் அதற்கு அச்சமில்லை. அது எப்போதும் கனி கொடுக்கும்.

ஆக, எகிப்தியர் என்னும் வலுவற்ற மனிதர்கள்மேல் நங்கூரத்தைப் பதிய வைக்காமல், ஆண்டவர்மேல் நம்பிக்கை வைத்து அவரையே நங்கூரப் புள்ளியாக்க வேண்டுமென்று இறைவாக்குரைக்கின்றார் எரேமியா.

இன்றைய இரண்டாம் வாசகம் (காண். 1 கொரி 15:12,16-20) இறந்தோர் உயிர்ப்பு பற்றிய பவுலின் விளக்கவுரையாகத் தொடர்கிறது. கொரிந்த நகர நம்பிக்கையாளர்கள் இறந்தோர் உயிர்ப்பை மறுத்தனர். ஏனெனில், அவர்கள் நடுவில் நிலவிய கிரேக்க தத்துவச் சிந்தனை அதற்கு இடையூறாக இருந்தது. தத்துவச் சிந்தனையைப் பொறுத்தவரையில் மனித ஆன்மா என்பது மனித உடலில் சிறைப்பட்டிருக்கிறது. உடல் தனக்கென்று ஆசைகளையும், உணர்வுகளையும் வைத்திருப்பதால் அது அழிவுக்குரியதாகவும், தாழ்வானதாகவும், வலுவற்றதாகவும் கருதப்பட்டது. ஆக, ஆன்மா உடலிலிருந்து பெரும் விடுதலைக்காகவே காத்திருக்கிறது. இப்படி இருக்க, இறந்தோர் உயிர்ப்பில் மீண்டும் ஆன்மா உடலுக்குள் வரும் என்பதை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. 'உடல் இல்லாத வாழ்வையே' அவர்கள் விரும்பினர். இந்தப் பின்புலத்தில் பவுல் மிகவும் பொறுமையோடும், சிந்தனைத் தெளிவோடும் அவர்களுக்குப் புரிய வைக்கிறார். உயிர்க்கும்போது இருக்கும் உடல் அழியாமையை அணிந்துகொள்கிறது என்றும், இந்த அழியா உடலையே இயேசு பெற்றார் என்றும், அவரின் இறப்பில் பங்கேற்கும் நாம் அவரைப் போல அழியா உடல் பெற்று உயிர்ப்போம் என்றும் விள்குகின்றார். ஆக, அழிந்துபோகும் இவ்வுலக உடலில் தங்கள் நம்பிக்கையைப் பதிய வைக்காமல், அழியாமல் உயிர்க்கும் அந்த உடலின்மேல் நம்பிக்கையைப் பதிய வைக்க அவர்களை அழைக்கின்றார் புனித பவுல்.

ஆக, அழிவுக்குரிய உடலின்மேல் நம்பிக்கை வைக்காமல் கிறிஸ்துவின் உயிர்ப்பு அவருக்குத் தந்த அழியாத உடலின்மேல் - நாம் பெறப்போகும் அந்த உடலின் மேல் - நம்பிக்கையைப் பதிய வைக்க அழைக்கின்றார் பவுல்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். லூக் 6:17,20-26) இயேசுவின் சமவெளிப்பொழிவை வாசிக்கின்றோம். இயேசுவின் மலைப்பொழிவில் (காண். மத் 5:3-10) 'எட்டுப் பேறுகளை' பதிவு செய்கின்றார் மத்தேயு. ஆனால், இயேசுவைச் சமவெளியில் நிற்கச் செய்யும் லூக்கா, அவரின் போதனைகளை, 'நான்கு பேறுகள்,' 'நான்கு சாபங்கள்' என வடிவமைக்கின்றார். இரக்கமே உருவான இயேசு, பகைவரையும் அன்பு செய்யச் சொல்லும் இயேசு மற்றவர்களைச் சபிக்கலாமா? செல்வமும், உணவும், சிரிப்பும், புகழ்ச்சியும் கொண்டிருப்பது தவறா? இவற்றை அல்லது இவற்றைப் பெற்றிருப்பவர்களை இயேசு ஏன் கடிந்து கொள்ள வேண்டும்? என்னும் கேள்விகள் நம்மில் எழலாம். இயேசு. 'செல்வம், உணவு, சிரிப்பு, புகழ்ச்சி' ஆகியவற்றைச் சபித்து, 'ஏழ்மை, பசி, அழுகை, புறக்கணிப்பு' ஆகியவற்றை மட்டுமே நாம் கொண்டிருக்க வேண்டும் என்று நமக்கு அறிவுறுத்தவில்லை. மாறாக, 'செல்வம், உணவு, சிரிப்பு, புகழ்ச்சி' போன்ற நான்கு வாழ்வியல் எதார்த்தங்களில் நம் மனம் நம்மேலும், நம் சக மனிதர்கள்மேலும், அவர்களின் அங்கீகாரத்தின் மேலும் தங்கி, நம் நம்பிக்கையைப் பதித்துவிடும் என்றும், 'ஏழ்மை, பசி, அழுகை, புறக்கணிப்பு' போன்ற வாழ்வியல் எதார்த்தங்களில்தாம் நம் மனம் இயல்பாக ஆண்டவரை நோக்கி எழும்பும் எனவும் சொல்லி, முன்னதை விடுத்துப், பின்னதைப் பெற்றுக்கொள்ள அழைக்கின்றார்.

ஆக, மனிதர்மேல் நம்பிக்கை வைப்பதை விடுத்து ஆண்டவர்மேல் நம்பிக்கை வைப்பதற்கான அழைப்பாகவே இருக்கிறது இயேசுவின் சமவெளிப்பொழிவு.

இவ்வாறாக, மனிதர்மேல் வைக்கும் நம்பிக்கை சிறிது காலமே பலன்தர, ஆண்டவர்மேல் வைக்கும் நம்பிக்கை நீண்ட நாள்கள் கனிதர நமக்கு வலுவூட்டும் என்று எரேமியாவும், அழியும் உடல்மேல் வைக்கும் நம்பிக்கையை விட கிறிஸ்துவின் அழியாத உடலின்மேல் வைக்கும் நம்பிக்கையை நமக்கு உயிர்ப்பைத் தரும் என்று பவுலும், 'செல்வம், உணவு, சிரிப்பு, புகழ்ச்சி' என்பவை மனிதர்மேல் நம்பிக்கை வைப்பதன் கனிகளாக இருந்தாலும் அவற்றால் நீடிய பயன் இல்லை என்றும், 'ஏழ்மை, பசி, அழுகை, புறக்கணிப்பு' போன்றவை ஆண்டவர்மேல் நம்பிக்கை வைப்பவருக்கு இறைவன் செயலாற்றும் தளங்களாக மாறும் என்று இயேசுவும் நமக்குச் சொல்கின்றனர். இவர்கள் மூவரின் வார்த்தைகளும் ஒன்றுதான்: 'மனிதர் என்னும் நங்கூரப் புள்ளி வலுவற்றது.கடவுள் என்னும் நங்கூரப் புள்ளி வலுவானது. வலுவற்றதை விடுத்து வலுவானதை நாம் பற்றிக்கொள்ள வேண்டும்.'

மனிதர் என்னும் நங்கூரப் புள்ளியை விட்டு, கடவுள் என்னும் நங்கூரப் புள்ளியை எப்படிப் பற்றிக்கொள்வது? மூன்று நிலைகளில் இது சாத்தியமாகும்.

1. வாழ்க்கையைப் பற்றிய பார்வையை அகலமாக விரிப்பது

தன் கப்பலையும் தன் இருப்பையும் மட்டும் பார்க்கின்ற மாலுமி நங்கூரத்தைத் தனக்குக் கீழ் இருக்கும் சேறு அல்லது பாறையின் மேல் இடுவார். ஆனால், கடல் மொத்தத்தையும் பார்க்கின்ற மாலுமி தன் கப்பலை நகர்த்திச் சென்று சேறு அல்லது பாறை இல்லாத இடத்தில் போடுவார். குறுகிய பார்வை கொண்டிருப்பதால் நம் வேலை எளிதாக முடிவதாக நினைக்கலாம். ஆனால், எளிதாக வருவது எல்லாம் இனிமையாக நீடித்து இருப்பதில்லை. யோயாக்கின் அரசன் தன் நாட்டின் உடனடி பாதுகாப்பைத்தான் பார்த்தாரே தவிர, ஒட்டுமொத்த அரசியல் சூழ்ச்சியை அல்லது ஆண்டவரின் உடனிருப்பை விரித்துப் பார்க்கவில்லை. கொரிந்தியர்கள் தாங்கள் பெற்றிருக்கும் இந்த உடலைப் பார்த்தார்களே தவிர, இதற்கு மேலும் அல்லது இதைவிடவும் அழியாத உடல் இருக்கிறது என்பதைப் பார்க்கவில்லை. செல்வம், உணவு, சிரிப்பு, புகழ்ச்சி கொண்டிருப்போரும் தங்களின் இப்போதைய இருப்பில் மகிழ்ந்தார்களே அன்றி, வாழ்வின் மறுபக்கத்தை அவர்கள் நீட்டிப்பார்க்கத் தவறிவிட்டனர். ஆக, யார் ஒருவர் இருப்பதிலிருந்து இல்லாதது வரை அகலமாகத் தன் கண்களை விரிக்கிறாரோ அவர்தான் தன் நங்கூரப் புள்ளியைச் சரியான இடத்தில் போட முடியும். எடுத்துக்காட்டாக, வால்ட் டிஸ்னி. தன் அறைக்குள் நுழைந்த எலிகளைக் கேலிச்சித்திரமாக வரைவதோடு நின்றிருந்தால் அவர் ஒரு கார்ட்டூன் வரைபவராகவே இருந்திருப்பார். ஆனால், 'மிக்கி மவுஸ்' என்ற ஒன்றை எடுத்து குழந்தைகள் பொழுதுபோக்கு என்று மாற்றியதால்தான் அவரால் டிஸ்னி உலகம் பற்றி யோசிக்க முடிந்தது. இயேசு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு. மீன் பிடித்துக்கொண்டிருந்தவர்கள் உருவில் பெரிய திருச்சபைத் தலைவர்களைப் பார்த்தார். ஆக, வாழ்வைப் பெரிதாக, முழுமையாக விரித்துப்பார்க்கும்போது நம் நங்கூரப் புள்ளியை நிலையானவற்றில் நாம் பதிக்க முடியும்.

2. உடனடி இன்பங்கள் தவிர்ப்பது

யோயாக்கின், கொரிந்து நகர மக்கள், மற்றும் செல்வர், உணவருந்தி இன்புற்றிருப்போர், சிரிப்போர், புகழ்ச்சியை இரசிப்போர் ஆகிய அனைவரும் உடனடியாகக் கிடைக்கும் முடிவுகள் பற்றியே கருத்தாய் இருந்தனர். இன்றைய உலகம் நமக்கு நிறைய உடனடி நங்கூரப் புள்ளிகளைத் தருகிறது. சமூக தொடர்பு செயலிகளும், விளம்பரங்களும் நம்மை அவை நோக்கி இழுக்கின்றன: களிப்பு, பொழுதுபோக்கு, அழகு, பணம், அறிமுகம், வெற்றி, வேலை என நிறைய நங்கூரப் புள்ளிகள் நம்மை அழைக்கின்றன. இவை எல்லாம் இன்பம் தருபவையே. ஆனால், எவ்வளவு வேகமாக இவை இன்பத்தைத் தருகின்றனவோ, அவ்வளவிற்கு வேகமாக இன்பத்தை இழக்கவும் செய்கின்றன. மேலும், இவை ஒருவரைத் தன்மையம் கொண்டவராக மாற்றிவிடுகின்றன.

3. கவனச் சிதறல்கள் குறைப்பது

'இரு மானைத் துரத்துபவர் ஒரு மானையும் பிடியார்' என்பதுபோல, ஒரே நேரத்தில் இரண்டு இடங்களில் நங்கூரம் போட நினைப்பவர் ஓரிடத்திலும் போட மாட்டார். ஆக, எது சரியானது என்பதைத் தேர்ந்து தெளிந்து, தெரிவு செய்ததில் முழுமையாக ஆற்றலைச் செலுத்தும் மனப்பக்குவமும், மனவுறுதியும் பெற வேண்டும். 'அது நன்றாக இருக்குமே, இது நன்றாக இருக்குமே' என்று வண்ணத்துப் பூச்சி போல பறந்துகொண்டிருந்தாலும், 'அவரைப் போல நான் இருப்பேன். இவரைப் போல நான் செய்வேன்' என்று ஒப்பீடுகள் செய்துகொண்டிருந்தாலும் நம்மால் நிலையானதில் நங்கூரம் பதிக்க முடியாது. யோயாக்கினுக்கு எகிப்து ஒரு கவனச் சிதறலாகவும், கொரிந்தியருக்கு தங்களின் கிரேக்க தத்துவ சிந்தனை ஒரு கவனச் சிதறலாகவும், இயேசுவின் சமகாலத்து எதிராளிகளுக்கு தங்களின் செல்வம், உணவு, சிரிப்பு, புகழ்ச்சி ஆகியவை கவனச் சிதறல்களாகவும் இருந்தன. இன்று என்னுடைய கவனச் சிதறல் எது?

இறுதியாக, கொஞ்சம் நிமிர்ந்து, கண்களையும் இதயத்தையும் திறந்து வைத்து அகலமாகப் பார்த்தால், பார்வை தெளிவாகும். என் நங்கூரப் புள்ளியை - அதாவது, நம்பிக்கை மையத்தை - சரியாகத் தெரிவு செய்து, அதற்கேற்ற உழைப்பைக் கொடுத்து, பொறுமையாகக் காத்திருந்தால் நானும் நிலைத்துக் கனிகொடுப்பேன்.

இதுவே, இன்றைய பதிலுரைப்பாடலில் (திபா 1) திருப்பாடல் ஆசிரியரின் இறைவேண்டலாக, ஏக்கமாக, எதிர்நோக்காக இருக்கிறது: 'ஆண்டவரின் திருச்சட்டத்தில் நங்கூரம் பதிப்பவர் நீரோடையோரம் நடப்பட்ட மரம் போல இருப்பார். பருவகாலத்தில் கனிதருவார். தாம் செய்வதனைத்திலும் வெற்றி பெறுவார்!'







No comments:

Post a Comment