Sunday 17 February 2019

ஆண்டின் பொதுக்காலம் 7-ஆம் ஞாயிறு

ஆண்டின் பொதுக்காலம் 7-ஆம் ஞாயிறு

 

இன்றைய வாசகங்கள்:
1 சாமு 26:2, 7-9, 12-13, 22-23; 1 கொரி 15:45-49; லூக் 6:27-37


நாய்கள் கடிப்பதும், கழுதை உதைப்பதும், புலிகள் பாய்வதும், நரிகள் ஏய்த்துப் பிழைப்பதும் இயற்கை. அவைகளின் பிறவிக் குணம் என்பது நமக்குப் புரியும். ஆனால் மனிதன் எந்த நேரத்தில் கடிப்பான். எந்த வேளையில் உதைப்பான் என்பது தெரியாது. மனிதனின் பிறவிக்குணம் இதுதான் என்று நம்மால் சொல்ல முடியுமா? நிச்சயமாக முடியாது. ஆனால் மனிதன் சிறப்பானவன். தொடக்க நூல் (தொநூ 1:26, 27) வசனங்களில் கூறப்பட்டிருப்பது போல, நாம் இறைவனின் சாயல். இந்த உலகிற்கு அடிமை யாகாதபடி சுதந்திரமாக வாழ, செயல்பட அழைக்கப்பட்டவர்கள். மாறாக எந்த நேரத்தில் மனிதன் என்ன செய்வான் என்று யாராலும் கணிக்க முடியாத நிலையை நாம் பார்க்கிறோம். 


1. அமெரிக்க நாட்டிலே ஜனாதிபதி தேர்தலிலே ஆப்ரகாம்
லிங்கன் அமோக வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றினார். ஒவ்வொரு துறைக்கும் தகுதியான அமைச்சரை நியமனம் செய்து கொண்டிருந்தார். பாதுகாப்புத் துறைக்கு யாரை நியமிப்பது என்ற கேள்வி எழுந்தது. ஆப்ரகாம் லிங்கன் ஸ்டான்டன் என்பவரை இந்தப் பணிக்கு நியமித்தார். ஆனால் அவருடைய நெருங்கிய நண்பர்கள் அதிர்ச்சி அடைந்து, ஜனாதிபதி அவர்களே! உங்களைத் தாக்கித் தரக்குறைவாகப் பேசிய மனிதனையா நியமிக்கிறீர்கள் என்று கேட்டார்கள். ஆம் அவர் என்னைத் தாக்கிப் பேசினார் என்பது நன்றாகத் தெரியும். ஆனால் அவர் நாட்டுக்குத் தேவை. பாதுகாப்புத் துறை அவருக்குப் பொருத்தம் என்றார். இதைப் பார்த்த அவரது எதிரியாக இருந்த ஸ்டான்டன், காலம் தம்மை அழிக்காதபடி லிங்கன் காலத்தை வென்றுவிட்டார் என்றார்.

2. அமெரிக்கா ஜனாதிபதி ரீகன் சுடப்பட்டு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்படும்போது வேதனை இருந்தாலும் அதிகாரிகளோடு மகிழ்ச்சியோடு பேசிக்கொண்டு சென்றாராம். திருத்தந்தை 2 - ம் அருள் சின்னப்பர் - தான் சுடப்பட்டு குணமானவுடன் சிறைக்குச் சென்று சுட்டவனை கட்டித் தழுவி மன்னிக்கின்றேன் என்றார். இந்த நிகழ்வுகளை விவரிக்கும் ராம் மோகன் காந்தி என்ற இந்திய பத்திரிக்கையாளர் அழகாக இவ்வாறு எழுதுகிறார்: ரீகன் மகிழ்ச்சியுடன் சென்ற நிகழ்ச்சி அவர் எந்த அளவிற்கு மனிதத் தன்மை மிக்கவர் என்பதைக் காட்டுகிறது. ஆனால் திருத்தந்தை 2-ம் அருள் சின்னப்பரின் செயலோ அவர் எந்த அளவுக்கு இறைத் தன்மை வாய்ந்தவர் என்பதைக் காட்டுகிறது என்றார்.

இன்றைய முதல் வாசகத்திலே (1 சாமு. 26:9) கூறப்படுவது போல தாவீதைக் கொல்ல நினைத்த சவுல் அரசன் கூடாரத்தில் தூங்கிக் கொண்டிருந்தபோது, தாவீதின் கூட்டாளி அபிசாயி இதோ உமது எதிரி தூங்குகிறான். நிலத்தில் பதிய ஈட்டியால் குத்தட்டுமா எனக் கேட்கிறான். தாவீதோ அபிசாயியை நோக்கி: அவரைக் கொல்லாதே. ஆண்டவரால் திருப்பொழிவு செய்யப் பட்டவர் மீது கை வைப்பது குற்றம் என்றார்.

இன்றைய நற்செய்தி இதை முன் வைத்துதான் மூன்று செய்திகளைத் தருகிறது.

1. மனிதன் முழு மனிதனாக வாழ மன்னிக்கும் மனமுடையவனாக இருக்க வேண்டும். பொறாமை, பழிவாங்குதல், பகைமை, வெறுப்பு இவையெல்லாம் மனிதப் பண்பு அல்ல. மன்னிப்பது மனிதனின் முதிர்ச்சி பெற்ற நிலையைக் காட்டும் வெளிப்பாடு. அன்பின் பிரதிபலிப்பு. பழிவாங்கும் மனிதன் பரிதாபத்திற்கு உரியவன். வளர்ச்சி அடையாதவன். அடிப்பவனைத் திருப்பி அடித்தல் மிருகத்தின் செயல்பாடு. எனவே இயேசு சொல்கிறார் உங்கள் பகைவருக்கு அன்பு காட்டுங்கள் (மத். 5:4 லூக். 6:27)

2. இரண்டாவதாக மனிதன் நல்லதையே செய்ய வேண்டும்.

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்கிறார் வள்ளலார்.

சிறுமை கண்டு பொங்குவாய் என்கிறார் கவிஞன் பாரதியார். இயேசு சொன்னார், "உங்களைச் சபிப்போருக்கு ஆசி கூறுங்கள். உங்களை இகழ்ந்து பேசுவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள். உங்களை ஒரு கன்னத்தில் அறைபவனுக்கு மறு கன்னத்தையும் காட்டுங்கள் என்றார்.

பிறர் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என *விரும்புகிறீர்களோ அதையே நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள் (மத். 7:12, லூக். 6:31) என பொன்விதியாகத் தருகிறார்.

3. மனிதன் என்பவன் சுதந்திரமாக வாழ அழைக்கின்றார். நன்மை செய்பவனுக்கே நன்மையும், தீமை செய்பவனுக்குத் தீமை | செய்வதும் சிந்திக்கத் தெரியாத, சுதந்திரத்தை மறந்த மிருகச் செயல்.

எனவேதான் இயேசு கேட்கிறார், "உங்களுக்கு நன்மை செய்பவர்களுக்கே நீங்கள் நன்மை செய்தால் உங்களுக்கு வரும் பயன் என்ன?" (லூக். 6:3 மத். 5:45 - 46). ஏனெனில் இறைவன் நன்றி கெட்டோருக்கும் பொல்லாதாருக்கும் நன்மை செய்கிறார் (லூக். 6:35).

1. கண்ணுக்குக் கண் பல்லுக்குப் பல் என்பது கிறிஸ்தவ
வாழ்க்கை அல்ல. மாறாக நாம் பகைவருக்கு அன்பு செய்வதின் மூலம்தான் கடவுளின் இயல்பில் பங்கெடுக்கிறோம். இறை மக்களாக இருக்க முடியும்.

2.பகைவரை மன்னித்து அன்பு செய்ய ஆரம்பிக்கும்போது நம் உள்ளத்தில் நிம்மதி நிரம்பி வழிகிறது. பழி வாங்கத் துடிப்பவர்களிடத்தில் கோபமும், மன உளைச்சலும் ஏற்பட்டு, உடல் நோய்கள் குறிப்பாக நீரழிவு வியாதி, புற்று நோய்கள் எல்லாம் வந்துவிடுகின்றன. இது எப்படி என்றால் பாடம் எடுத்துக் கொண்டிருந்த ஆசிரியர், ஒரு மாணவனை நோக்கித் தண்ணீர் நிரம்பிய டம்ளரை அப்படியே பிடித்துக்கொண்டு நிற்கச் சொன்னார். டம்ளரை அப்படியே ஒருமணி நேரம் பிடித்த போது மாணவனுக்கு அந்த சிறிய டம்ளர் பெரிய பாரமாக, ஒருவகையான பாரங்கல் போன்ற கனத்தை உணர வைத்தது. நாம் பிறர் மீது வைத்திருக்கும் வெறுப்புக்கள் நீண்ட காலத்திற்கு நம் மனதில் சுமந்தால் அது பாரங்கல்லாகி கனக்கும். மாறாக மன்னிப்பு என்பதே நமக்கு விடுதலை தரும். விடுதலையின் காரணமாக நாம் அமைதியைக் காண்கிறோம்.

3. பகைவர்களை மன்னித்து அன்பு காட்டும் போது நாம் முதிர்ச்சி
அடைந்தவர்களாக மாற ஆரம்பிக்கிறோம். பழிவாங்கல் நீங்கும் போது மிருகத் தன்மை நம்மை நெருங்காது. ஆன்மீக முதிர்ச்சியில் வளர ஆரம்பிக்கிறோம். அதே நேரத்தில் நம் எதிரியில் இருக்கும் மிருகத் தன்மையை வலுவிழக்கச் செய்கிறோம். இதுதான் முதிர்ச்சி நிலை.

எத்தனை ஆண்டுகள் இந்த உலகில் வாழ்வோம் என்பது முக்கியம் அல்ல. எப்படியும் வாழலாம் என்பதும் மூடத்தன்மை . தாயையும் தந்தையையும் தேர்ந்தெடுக்க நமக்கு உரிமை இல்லை. முக அமைப்பையோ, உடல் நிறத்தையோ, மாற்றவோ, பிறப்பையோ, இறப்பையோ எடுக்க, நிறுத்த நமக்கு உரிமை இல்லை . ஆனால் நமது கையில் இருப்பது நமது வாழ்க்கை . மாறாக இப்படித்தான் வாழ வேண்டும் என்பதை இயேசு இன்று தெளிவுபடுத்துகிறார். இரக்கம், ஈகை, அன்பு, பிறருக்கு உதவுதல், மன்னித்தல் போன்ற மதிப்பீடுகளில் வாழ்ந்து காட்டி நமக்கு மாதிரி தருகிறார். வாழப் புறப்படுவோம். ஆமென்.



மன்னிப்போம்

இன்றைய நற்செய்தியைக் கூட்டி, பெருக்கி, வகுத்து, கழித்துப் பார்த்தால் மிஞ்சுவது மன்னிப்பு! உங்களிடம் அன்பு செலுத்துவோரிடமே நீங்கள் அன்பு செலுத்தினால் உங்களுக்கு வரும் நன்மை என்ன? (லூக் 6:32) என்று கேட்கின்றார் இயேசு.

நமது பகைவர்களையும் அன்பு செய்யும் அளவுக்கு நமது மன்னிப்பு உயர்ந்து நிற்க வேண்டும் என்பது இயேசுவின் ஆசை!

ஒரு மலையடிவாரத்தில் ஆடுகள் அவற்றின் குட்டிகளோடு மேய்ந்துகொண்டிருந்தன! தனது குட்டிக்கு இரைதேடிவந்த தாய்ப்புலி ஒன்று அந்த ஆடுகளைத் துரத்தத் துவங்கியது. ஆடுகள் தெரிந்தோடின. ஓடமுடியாத ஒரு சிறு ஆட்டுக்குட்டியை கவ்விப்பிடித்தது அந்தப்புலி! அந்தக் குட்டியின் தாய் ஆடு, புலியின் பின்னால் ஓடியது. புலியைப் பார்த்து, என் குட்டியை விட்டுவிடு! என்னை வேண்டுமானால் சாப்பிடு என்றது!

புலியோ குட்டியை விடவில்லை ! ஆடுகள் சிதறி ஓடியபோது ஆபத்தை உணர்ந்த ஆடுகளுக்குச் சொந்தக்காரர்கள் ஈட்டிகளோடும், தீப்பந்தங்களோடும் புலியைத் துரத்தத் தொடங்கினார்கள். புலி பயந்துபோய் ஆட்டுக்குட்டியைப் போட்டுவிட்டு எங்கோ ஓடி மறைந்தது.!
ஆட்டுக்குட்டியின் கழுத்தில் பயங்கரக் காயங்கள்! மருத்துவமனையில் சேர்த்தார்கள்! சரியான நேரத்தில் கொண்டு வந்ததால் குட்டியைக் காப்பாற்ற முடிந்தது என்றார் டாக்டர். தாய் ஆடு அன்று மாலை வீட்டிலே சமைக்கப்பட்ட சாப்பாட்டை தனது குட்டிக்கு வீட்டிலிருந்து எடுத்துக்கொண்டு மருத்துவமனைக்கு வந்துகொண்டிருந்தது! அப்போது ஒரு புலிக்குட்டியின் முனகல் சத்தம் கேட்டது! குகை! அதற்குள் ஆடு நுழைந்தது! அதன் குட்டியைக் கடித்துக் குதறிய புலியின் குட்டி அது என்பதை அந்த ஆடு அறிந்துகொண்டது.

நடந்ததையெல்லாம் மறந்துவிட்டு ஆடு தன் குட்டிக்குக் கொண்டுசென்ற உணவை புலிக்குட்டிக்கு ஊட்டிக்கொண்டிருந்தது.

அந்த சமயம் தாய்ப்புலி குகைக்குள் நுழைந்துவிட்டது. ஆடு பயத்தில் நடுங்கியது. அப்போது அந்தப் புலி, காலையில் நான் உனது குட்டியைத் தூக்கிச்சென்று அதைக் காயப்படுத்தினேன்! அதை மறந்து என் குட்டிக்கு உணவூட்டிக்கொண்டிருக்கின்றாய்! உன் அன்பு - அது பேரன்பு! மன்னிப்பே உருவான உன் முன்னால் மண்டியிடுகின்றேன். இனிமேல் உன் சந்ததியைத் தொடமாட்டேன் என்றது.

கதையில் வந்த ஆட்டைப்போன்று வாழ உலகின் பாவங்களைப் போக்கும் செம்மறியான இயேசு நம்மை அழைக்கின்றார்.

இயேசு காட்டும் வழியில் நம்மால் வாழமுடியுமா? தாவீதைக் கொல்ல, தேர்ந்தெடுக்கப்பட்ட மூவாயிரம் பேருடன் சவுல் அலைந்து திரிந்தார்! சவுலுக்கு தாவீதைக் கொல்ல சந்தர்ப்பம் கிடைக்கவில்லை! ஆனால் தாவீதுக்கு சவுலைக் கொல்ல சந்தர்ப்பம் கிடைத்தது ! ஆனாலும் சவுலை தாவீது கொலை செய்யவில்லை! அவரை மன்னித்துவிட்டார்.

தாவீதைப் போல நம்மால் வாழமுடியுமா?

மனித சாயலில் மட்டும் நாம் வாழ்ந்து கொண்டிருந்தால் நம்மால் நமக்கு எதிராகக் குற்றம் செய்வோரை மன்னிக்க முடியாது! மாறாக இன்றைய இரண்டாம் வாசகத்தில் புனித பவுலடிகளார் கூறுவது போல நாம் இயேசுவின் சாயலை நமது சாயலாக்கிக்கொண்டால், அவராக நாம் மாறிவிட்டால் நம்மால் நமது பகைவர்களை மன்னிக்க முடியும் !

உலகத்திலேயே மிகவும் மதிப்பு வாய்ந்தது மன்னிப்புதான். இது தன்னை வழங்குபவருக்கும், பெறுபவருக்கும் பன்மடங்கு இலாபத்தைத் தரும்!
மன்னிப்பவர்களுக்கு ஏழுவரங்கள் கிடைக்கும் என்று இயேசு கற்பித்த மன்றாட்டுகூறுகின்றது. மன்னிப்பைப் பெறுபவருக்கு மனமாற்றம் என்ற மாபெரும் பரிசு கிடைக்கும் (1 சாமு 26:21, 25, லூக் 23:47).

மேலும் அறிவோம் :
கறுத்து இன்னா செய்தவக் கண்ணும் மறுத்து இன்னா
செய்யாமை மாசற்றார் கோள் (குறள் : 312).

பொருள் : பெருஞ்சினம் கொண்டு ஒருவர் தம்மைத் துன்புறுத்தும் போதும் அதற்கு மாறாகத் துன்புறுத்தாது பொறுத்துக்கொள்வதே மாசற்ற சான்றோரின் செயலாகும்.






ஒருவர் தம் நண்பரிடம், "என் வீட்டில் ஒரே பிரச்சினை. என் அம்மா ரசம் வைத்தால் என் மனைவிக்குப் பிடிப்பதில்லை. என் மனைவி ரசம் வைத்தால் என் அம்மாவுக்குப் பிடிப்பதில்லை" என்றார். நண்பர் அவரிடம், “நீ என்ன செய்கிறாய்?” என்று கேட்டதற்கு அவர், “நான் இரண்டு பேருக்கும் இடையே சமரசம் செய்கிறேன்” என்றார்!

வாழ்க்கையில் நாம் செய்ய வேண்டிய இன்றியமையாத காரியம் மற்றவர்களுடன். குறிப்பாக நம்மை வெறுப்பவர்களுடன், சமரசம் செய்வதாகும். "உங்கள் எதிரிகளுடன் உடன்பாடு (சமரசம்) செய்து கொள்ளுங்கள்" (மத் 5:25) என்கிறார் கிறிஸ்து,

கிறிஸ்துவின் பணி மீட்புப் பணி. மீட்புப் பணி என்பது ஒப்புரவுப்பணி. அவர் யூத இனத்துக்கும் பிற இனத்துக்கும் இடையே நின்ற பகைமை என்னும் சுவரைத் தகர்த்து அவ்விரு இனத்தையும் ஓரினமாக ஒப்புரவாக்கினார் (எபே 2:14). கிறிஸ்து திருச்சபையிடம் ஒப்புரவுப் பணியை ஒப்படைத்துள்ளார் (2 கொரி 5:18-19).

இன்றைய அருள்வாக்கு வழிபாடு நாம் நம் பகைவர்களையும் மன்னித்து அவர்களோடு ஒப்புரவாகும்படி அழைக்கிறது.

முதல் வாசகம் மன்னர் தாவீதின் பெருந்தன்மையைக் காட்டுகிறது. தாவீது தமது சிறு வயதிலிருந்தே மன்னர் சவுலுக்கு நன்மைதான் செய்தார். ஆனால், தாவீதின் பேரும் புகழும் மக்கள் மத்தியில் வளர்வதைக் கண்டு சவுல் காழ்ப்பு உணர்வு கொண்டு தாவீதைக் கொலை செய்ய பலமுறை முயற்சி எடுத்தார். ஆனால் தாவீதோ சவுலைக் கொலை செய்யத் தமக்கு வாய்ப்புக் கிடைத்தும் அவரைக் கொல்லாமல் காப்பாற்றுகிறார்,

உலகில் சால்பு என்னும் பண்பு கொண்ட சான்றோர்கள் உள்ளனர். அவர்கள் தீமை செய்பவர்களுக்கும் நன்மை செய்வர். அவ்வாறு செய்யவில்லை என்றால், சால்பு என்ற பண்பு பொருளற்றுப் போய்விடும், தாவீது தாம் ஒரு தலைசிறந்த சான்றோர் என்பதை எண்பிக்கின்றார்.

இன்னா செய்தார்க்கும் இனியவே செய்யாக்கால்
என்ன பயத்ததோ சால்பு? (குறள் 987)

'கன்னத்தில் முத்தமிட்டால்' என்ற திரைப்படம் குடியரசுத் தலைவர் விருது பெற்ற படம். "குடியரசுத் தலைவரிடமிருந்து விருது பெற என்ன செய்ய வேண்டும்?" என்று ஒருவரைக் கேட்டதற்கு அவர், "கன்னத்தில் முத்தமிட வேண்டும்" என்றார்,

ஆனால், கிறிஸ்துவின் விருது பெறுவதற்குக் கன்னத்தில் முத்தமிடத் தேவையில்லை, மாறாக, நம்மை ஒரு கன்னத்தில் அறைபவருக்கு மறு கன்னத்தையும் காட்ட வேண்டும் (லூக் 6:29).

"விண்ணகத் தந்தை நிறைவுள்ளவராய் இருப்பதுபோல நீங்களும் நிறைவுள்ளவராய் இருங்கள்" (மத் 5:48) என்று மத்தேயு நற்செய்தியில் கிறிஸ்து மலைப்பொழிவுக்கு முத்தாய்ப்பு வைக்கிறார், ஆனால், லூக்கா நற்செய்தியில், “உங்கள் தந்தை இரக்கம் உள்ளவராய் இருப்பது போன்று நீங்களும் இரக்கம் உள்ளவர்களாய் இருங்கள்" (லூக் 6:36) எனக் கூறிக் கிறிஸ்து தமது சமவெளிப் பொழிவுக்கு முத்தாய்ப்பு வைக்கிறார். இரக்க குணம் நம்மை ஆட்சி செய்து, அதன் விளைவாக நாம் நமது பகைவர்களை அன்பு செய்து, நம்மை வெறுப்பவர்களுக்கு நன்மை செய்து, நம்மைச் சபிப்பவர்களுக்கு ஆசி கூறுவதன் மூலமாக நாமும் வானகத் தந்தையைப் போல நிறைவுள்ளவர்களாக முடியும் என்பதை வலியுறுத்துகிறது லூக்கா நற்செய்தி.

ஒரு சந்நியாசி ஓர் ஆற்றிலிருந்து மேலே வர முடியாமல் தத்தளித்துக் கொண்டிருந்த ஒரு தேளை ஒரு குச்சி மூலம் வெளியே கொண்டு வந்தார், தேள் குச்சியின் மேல் வந்ததும் சந்நியாசியின் கையில் கொட்டிவிட்டது. ஆயினும் அவர் மீண்டும் குச்சி மூலம் தேளை மேலே கொண்டு வந்தார். மறுபடியும் அத்தேள் அவரைக் கொட்டிவிட்டது. இதைக் கவனித்த அருகில் இருந்தவர்கள் சந்நியாசியிடம், “தேள் திரும்பத் திரும்பக் கொட்டியும் எதற்கு நீங்கள் அத்தேளுக்கு உதவி செய்கிறீர்கள்?" என்று கேட்டனர். அதற்கு சந்நியாசி அவர்களிடம், “தீமை செய்வது தேளுடைய இயல்பு; துன்பப்படுகிறவர்களுக்கு உதவி செய்வது எனது இயல்பு. தேளுடைய இயல்பு தீயது என்பதற்காக எனது நல்ல இயல்பை நான் மாற்றிக் கொள்ளமாட்டேன்" என்றார்.

தீமை செய்பவர்களுக்கும் நன்மை செய்ய வேண்டும். “தீமை உங்களை வெல்ல விடாதீர்கள். நன்மையால் தீமையை வெல்லுங்கள்" (உரோ 12:21)

ஆபிரகாம் லிங்கன் தம்மை அவதூறாகப் பேசிய ஓர் அரசியல் வாதியைத் தமது அமைச்சரவையில் ஓர் அமைச்சராக்கினார். அதைக் கண்ட மற்ற அமைச்சர்கள், "உங்கள் பகைவனைப் பழிவாங்காமல் அவரை ஏன் அமைச்சராக்கினீர்கள்?" என்ற கேட்டதற்கு லிங்கன், "அவரை அமைச்சராக்கிப் பழி வாங்கிவிட்டேன்" என்றார். பகைவர்களைத் தண்டிக்கும் சிறந்த வழி அவர்களுக்கு நன்மை செய்வதாகும்.

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்துவிடல் (குறள் 314)

வாழ்நாளெல்லாம் நாம் மகிழ்ச்சியாய் இருக்க நாம் கடைப்பிடிக்க வேண்டிய தங்கமான விதிமுறை: “உன்னைக் காயப்படுத்தியவரை நேசி; உன்னை நேசிப்பவரைக் காயப்படுத்தாதே".

சல்லடத்தில் எல்லாமே பொத்தல். அது ஊசியைப் பார்த்து, "உன் காதில் ஒரு பொத்தல் இருக்கின்றது" என்ற தாம். பிறருடைய குற்றங்களை விமர்சிக்கும் நாம் நம்முடைய குற்றங்களைப் பார்ப்பதில்லை. பிறருடைய குற்றங்கள் உடைத்து எறியப்பட வேண்டிய கண்ணாடி அல்ல, மாறாக நமது குற்றங்களைப் பிரதிபலிக்கும் கண்ணாடியாகும், பிறரைத் தீர்ப்பிடுவதையும் கண்டனம் செய்வதையும் இன்றைய நற்செய்தியில் கிறிஸ்து தடை செய்கிறார்,

ஆதாம் மண்ணைச் சார்ந்தவர்; கிறிஸ்துவோ விண்ணைச் சார்ந்தவர்; எனவே நாம் ஆதாமின் சாயலை மட்டுமல்ல, கிறிஸ்துவின் சாயலையும் தாங்கியவர்கள் (இரண்டாம் வாசகம்). ஆதாமின் மனித இயல்பு பழிவாங்கும் இயல்பு: கிறிஸ்துவின் தெய்வீக இயல்பு மன்னிக்கும் இயல்பு. "தந்தையே இவர்களை மன்னியும். ஏனெனில் தாங்கள் செய்வது என்னவென்று இவர்களுக்குத் தெரியவில்லை" (லூக் 23:34). எனவே மன்னிப்போம், மறப்போம்.

ஒவ்வொரு திருப்பலியிலும் நாம் பிறருடன் ஒப்புரவாகி, அதன் அடையாளமாக ஒருவருக்கொருவர் சமாதானத்தை அறிவிக்கின்றோம். பிறருடன் ஒப்புரவாகவில்லையெனில், நாம் பலி ஒப்புக் கொடுக்கத் தகுதியற்றவர்கள் (காண். மத் 5:23-24).



உன்னதக் கடவுளின் மக்கள் யார்?

மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.


நிகழ்வு

  முன்பொரு காலத்தில் ப்ரோகுளுஸ் என்றொரு செல்வந்தர் இருந்தார். அவரிடத்தில் ஏராளமான அடிமைகள் இருந்தார்கள். அந்த அடிமைகளில் பாலுஸ் என்ற அடிமையை அவருக்கு மிகவும் பிடிக்கும். பாலுஸ் தன்னுடைய கடமைகளில் மிகவும் பொறுப்புள்ளவனாகவும் நம்பிக்கைக்குரியவனாகவும் இருந்தான். அதனாலேயே அவனை ப்ரோகுளுஸிக்கு மிகவும் பிடித்துப் போனது.
 
ஒருநாள்  ப்ரோகுளுஸ் தன்னோடு பாலூசையும் கூட்டிக்கொண்டு, புதிதாக அடிமைகளை விலைக்கு வாங்க அடிமைச்சந்தைக்குச் சென்றார். அடிமைகளை ஏலத்திற்கு விடுவதற்கு முன்பு இருவரும் எந்தெந்த அடிமைகளையெல்லாம் விலைக்கு வாங்கலாம் என்று ஒரு பார்வை பார்க்க அடிமைச் சந்தைக்குள்ளே சென்றனர். அப்படிச் செல்லும்போது மெலிந்த தேகத்துடன் வயதான ஒருவர் காணப்பட்டார். அவரைப் பார்த்ததும் பாலுஸ் தன் எஜமானரிடம், “ஐயா! இந்த அடிமையை நாம் விலைக்கு வாங்குவோம்... இவர் இரண்டாள் வேலையைச் செய்வார்” என்றார். “பாலுஸ்! நீ சுயநினைவோடுதான் பேசுகிறாயா... இந்த ஆளைப் பார்ப்பதற்கே மிகவும் பரிதாபமாக இருக்கின்றது... அப்படியிருக்கும்போது இவர் இரண்டாள் வேலையைச் செய்திடுவார் என்று சொல்கிறாயே... எது எப்படி” என்று இழுத்தார் ப்ரோகுளுஸ்.

  “ஐயா! இவரைப் பார்ப்பதற்குத்தான் அப்படியிருக்கின்றது. ஆனால், இவர் இரண்டாள் வேலையைச் செய்யக்கூடியவர் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது” என்று உறுதியாகச் சொன்னான் பாலுஸ். “சரி, நீ சொல்லிவிட்டாய் என்பதற்காக வாங்குகிறேன்” என்று அடிமைகள் ஏலம் விடப்பட்ட நேரத்த்தில் ப்ரோகுளுஸ், மெலிந்த தேகத்தோடு இருந்த அந்த வயதான அடிமையை விலைக்கு வாங்கிக்கொண்டு போனார்.
 

 நாட்கள் மெல்ல நகர்ந்தன. பாலுஸ் தன் எஜமானர் ப்ரோகுளுஸிடம் சொன்னதுபோன்றே அந்த அடிமை வந்தபிறகு இருமடங்கு வேலைகள் நடந்தன. இது ப்ரோகுளுஸிற்கு ஆச்சரியமாக இருந்தன. ‘வயதான, அதுவும்  மெலிந்த தேகத்தோடு இருக்கும் அந்த மனிதரால் எப்படி இருமடங்கு வேலைகள் நடைபெறுகின்றன?... அது எப்படி என்று பார்த்துவிடுவோம்’ என்று ப்ரோகுளுஸ் அந்த மனிதரைக் கூர்ந்து கவனிக்கத் தொடங்கினார். அப்போதுதான் தெரிந்தது, நடந்த வேலைகள் அனைத்தும் அந்தப் பெரியவர் செய்யவில்லை.... பாலுஸ்தான் செய்கிறான் என்று. அது மட்டுமல்லாமல், பாலுஸ் மற்ற எல்லா அடிமைகளை விடவும் வயதான அந்த அடிமையை அதிக அக்கறையோடு கவனிப்பதும் தெரியவந்தது.
 

உடனே ப்ரோகுளுஸ் பாலுசை அழைத்து, “இந்தப் பெரியவர்மீது இவ்வளவு அக்கறை காட்டுகிறாயே! இவரென்ன உன்னுடைய தந்தையா?... உறவுக்காரரா?... இல்லை தெரிந்தவரா?” என்றார். அதற்கு பாலுஸ், “இவர் என்னுடைய தந்தையோ, உறவுக்காரோ, தெரிந்தவரோ இல்லை. இவர் எனக்கு எதிரி!... சிறுவயதில் நானும் என்னோடு பிறந்தவர்களும் என் தந்தையோடு மகிழ்ச்சியாக வாழ்ந்துகொண்டிருந்தபோது, இவர் எங்களுடைய தந்தையைக் கொன்றுவிட்டு, எங்கள் அனைவரையும் அடிமைகளாக விற்றுவிட்டார்... ஆனாலும் கிறிஸ்தவராகிய எனக்கு இவரை அடிமைச் சந்தையில் பார்த்தபோது பழிவாங்கத் தோன்றவில்லை. மாறாக, இவருக்கு நல்லது செய்யத் தோன்றியது. அதனால்தான் இவரை இங்கு அழைத்துக்கொண்டு வந்து, இவர்மீது தனிப்பட்ட அன்பு கட்டி வருகிறேன்” என்றான்.
 
பாலுஸ் இவ்வாறு பேசுவதைக் கேட்ட அவனுடைய எஜமானன் ப்ரோகுளுஸ், ‘இப்படியெல்லாம் பகைவர்களை மன்னித்து அன்புசெய்யும் மனிதர்கள் இருப்பார்களா?’ என்று பாலுசைப் பார்த்து வியந்து நின்றார்.

பொதுக்காலத்தின் ஏழாம் ஞாயிற்றுகிழமையில் இருக்கும் நமக்கு, இன்றைய நாளில் நாம் படிக்கக்கேட்ட நற்செய்தி வாசகம், நம்மை உன்னதக் கடவுளின் மக்களாக வாழவதற்கு அழைப்புத் தருகின்றது. அதற்கு நாம் என்ன செய்வது என்று இப்போது சிந்தித்துப் பார்ப்போம்.
 

  1. வன்முறைசெய்வோர் கடவுளின் மக்களாக முடியாது

இந்த உலகத்தில் மூன்று விதமான மனிதர்கள் இருக்கிறார்கள். அதில் முதலாவது வகையினர், வன்முறையாளர்கள். இப்படிப்பட்டவர்கள் ‘அடித்தால் திரும்பி அடிக்கவேண்டும்’, ‘ஒரு கண்ணை எடுத்தால் பதிலுக்கு ஒரு கண்ணை எடுக்கவேண்டும்’ என்ற மனநிலையோடு செயல்படக்கூடியவர்கள். இவர்களுடைய எண்ணமெல்லாம் வன்முறையால்தான் விடிவு வரும் என்பதாகும். இயேசுவின் காலத்தில் வாழ்ந்த தீவிரவாதக் குப்பலை இதற்கு எடுத்துக்காட்டாகச் சொல்லலாம்.

இவர்களுடைய எண்ணத்தின்படி, வன்முறைக்கு வன்முறைதான் தீர்வு என்றால், இந்த உலகத்தில் யாரும் இருக்க முடியாது அல்லது முள்ளை முள்ளால்தான் எடுக்கவேண்டும் என்றால், கண்ணில் விழுந்த முள்ளை முள்ளால் எடுக்குமா?. சாத்தியமில்லைதானே, அதுபோலத்தான் இந்த உலகத்தில் அமைதி பிறக்க வன்முறை ஒருபோதும் தீர்வாக இருக்காது; வன்முறையாளர்கள் உன்னதக் கடவுளின் மக்களாகவும் முடியாது.

  1. எதையும் எதிர்பார்த்து அன்பு செய்பவர்கள் கடவுளின் மக்களாக முடியாது

 வன்முறையாளர்கள் ஒருவகையினர் என்றால், எதையும் எதிர்பார்த்து அன்பு செய்யக்கூடியவர்கள் இந்த உலகத்தில் இருக்கின்ற மற்றொரு வகையினராக இருக்கிறார்கள்.


ஒரு பொருளைக் கொடுப்பதிலிருந்து ஒருவரை அன்பு செய்வதுவரைக்கும் இங்கு எல்லாமே எதிர்பார்ப்போடுதான் நடைபெறுகின்றன. நான் உனக்கு ஒரு நல்லது செய்தால் பதிலுக்கு நீ எனக்கு நல்லது செய்யவேண்டும் என்றும் நான் உன்னை அன்பு செய்கிறேன் என்றால் பதிலுக்கு நீ என்னை அன்பு செய்யவேண்டும் என்ற எதிர்பார்ப்பில் இந்த உலகமே இயங்கிக்கொண்டிருக்கின்றது போலும் என்று எண்ணத் தோன்றுகின்றது. இப்படி எதையும் எதிர்பார்த்து அன்பு செய்யக்கூடியவர்கள் அல்லது அன்பு செய்பவர்களை மட்டும் அன்பு செய்பவர்கள் கடவுளின் மக்களாக இருக்கமுடியாது. இவர்கள் நற்செய்தியில் இயேசு சொல்வதுபோல பாவிகள்தான் (6: 32). பாவிகள்தான் அன்பு செய்பவர்களை அன்பு செய்வார்கள்.
 

  1. பகைவர்களை அன்புசெய்பவர்களே கடவுளின் மக்கள்  


வன்முறையாளர்கள், எதையும் எதிர்பார்த்து அன்பு செய்யக்கூடியவர்கள் வரிசையில் மூன்றாவது வரக்கூடியவர்கள் பகைவர்களையும் அன்பு செய்யக்கூடியவர்கள்; தீமைக்கு நன்மை செய்யக்கூடியவர்கள்.


பகைவர்களை அன்புசெய்வது என்பது இந்த உலகத்தின் போக்குக்கு எதிராகச் செல்லக்கூடியது. இது எல்லாராலும் முடியாது. தூய ஆவியின் அருட்பொழிவைப் பெற்றிருக்கின்ற ஒருவரால்தான் முடியும் (உரோ 5:5). அப்படித் தூய ஆவியின் அருட்பொழிவைப் பெற்று, பகைவர்களை அன்புசெய்கின்றபோது அல்லது தீமை செய்பவர்களுக்கு நன்மை செய்கின்றபோது, நாம் உன்னதக் கடவுளின் மக்களாகின்றோம் என்பதில் எந்தவொரு மாற்றுக்கருத்தும் கிடையாது. ஏனெனில் கடவுள்தான் தன்னை வெறுப்போரையும் சபிப்போரையும் அன்பு செய்கின்றவராக இருகின்றார்.


ஆகையால், நம்மை வெறுப்போரையும் நமக்கு எதிராகத் தீமை செய்வோரையும் அன்பு செய்வோம். அதன்வழியாக உன்னதக் கடவுளின் அன்பு மக்களாவோம்.

 
சிந்தனை
 

         “அன்பு ஒன்றும்தான் எதிரியையும் நண்பராக்கும்” என்பார் ஜூனியர் மார்டின் லூதர் கிங். ஆம், தன்னலமற்ற, பிரதிபலன் பாராத அன்பு பகைவரையும் நண்பராக்கும் அதே நேரத்தில் நம்மை உன்னதக் கடவுளின் மக்களாகவும் மாற்றும்

  ஆகவே, எல்லாரையும் எந்தவொரு எதிர்பார்ப்பில்லாமல் அன்புசெய்வோம்; தீமை செய்வோருக்கு நன்மை செய்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

 


 
 
கொஞ்சம் எக்ஸ்ட்ரா

கடந்த மாதத்தில், 'எக்ஸ்டரா ஐ, எக்ஸ்ட்ரா இயர், எக்ஸ்ட்ரா ஹார்ட்' என்ற தலைப்பிட்ட டெட் காணொளி உரையைக் கேட்டேன். 'டெக்னாலஜி, என்டர்டயின்மெண்ட், டிசைன்' என்று மூன்று ஆங்கிலச் சொற்களின் முதல் எழுத்துகள் இணைவுதான் 'டெட்'. இந்தியப் பேச்சாளர்கள் வரிசையில் ஜோசப் அன்னம்குட்டி ஜோஸ் என்ற பாலக்காட்டு இளைஞர் ஒருவர் மேற்காணும் தலைப்பில் பேசினார். இவர் பண்பலை ஒன்றின் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருக்கிறார். மூன்று கதைகள் சொல்லி தன் உரையை நிகழ்த்தினார். அதில் முதல் கதை அவருடைய கல்லூரிப் பருவம் பற்றியது. எம்.பி.ஏ. படித்துக்கொண்டிருந்த அவர் முதல் பருவத்தில் ஒரு பாடத்தில் தவறி விடுகிறார். அவரால் அத்தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆசிரியர்கள் கடிந்துகொள்கிறார்கள். நண்பர்கள் அவரை ஒதுக்குகிறார்கள். மாலையில் வீட்டிற்கு வந்த அவர் தன் பெற்றோரை அழைத்து தான் தேர்வில் தவறியதைச் சொல்கிறார். அப்பாவும், அம்மாவும் அவரை ஒன்றும் சொல்லவில்லை. அப்பா அவரை அழைத்து, 'வா வெளியே போய்விட்டு வருவோம்' என்று தோளில் கைபோட்டு இவரை அழைத்துச் செல்கிறார். ஊருக்கு வெளியே இருக்கின்ற ஒரு சிறிய சாலையோர ஓட்டலுக்குச் செல்கிறார்கள். அப்பா, 'இரண்டு டீ, ஒரு மசால் தோசை' என்று ஆர்டர் செய்துவிட்டு அமர்கிறார். இவருக்கு ஒன்றுமே புரியவில்லை. தன்னை அப்பா தவறாகப் புரிந்துகொண்டாரோ என்றுகூட நினைக்கிறார். அவர்கள் ஆர்டர் செய்தவை வருகின்றன. மசால் தோசையை இவர் பக்கம் நகர்த்தி வைக்கும் அப்பா, 'ஜோஸ், சாப்பிடு! தோல்வி எப்போதும் முடிவல்ல' என்று டீயைக் குடிக்க ஆரம்பிக்கிறார். இவருக்கு கண்ணீர் பொங்கி வழிகிறது. இதுவரைத் தன் தோல்விக்காக அழாதவர் இப்போது தன் தந்தையின் பரிவின்முன் அழுகிறார். நாட்கள் நகர்கின்றன. இவர் அத்தேர்வை எழுதி வெற்றி பெறுகின்றார். அத்தேர்வின்போது இவருடைய அடுத்த பேட்ச் மாணவர்களின் நட்பும் கிடைக்கிறது. ஆக, கல்லூரி செயலராகவும் தெரிவுசெய்யப்படுகின்றார். 'என் அப்பா அன்று என்னை ஒரு எக்ஸ்ட்ரா கண் கொண்டு பார்த்ததால், எக்ஸ்டரா காது கொடுத்து நான் பேசியதைக் கேட்டதால், எக்ஸ்ட்ரா இதயம் கொண்டு என் தோல்வியை ஏற்றுக்கொண்டதால் என்னால் சாதிக்க முடிந்தது' என உரையின் முதல் பகுதியை நிறைவு செய்கிறார் ஜோஸ்.

கொஞ்சம் எக்ஸ்ட்ரா, அல்லது இன்னும் கொஞ்சம் - இதுதான் இன்றைய இறைவாக்கு வழிபாடு நமக்கு வழங்கும் செய்தியாக இருக்கிறது. நாம் காலையில் கண் விழித்தவுடன் தேடும் பற்பசை தொடங்கி, நாள் முழுவதும் பயன்படுத்தும் அலைபேசி, இணையதள சேவை எனத் தொடர்ந்து, இரவில் தூங்குவதற்கு முன் ஏற்றும் குட்நைட் லிக்விட் வரை, எல்லாவற்றிலும், 'கொஞ்சம் எக்ஸ்ட்ரா' என்று இன்றைய வியாபார உலகம் நம்மை ஈர்த்துக்கொண்டே இருக்கிறது. ஆனால், இந்த 'எக்ஸ்ட்ராக்கள்' எல்லாம் நம் மேல் சுமத்தப்பட்டவை. இவைகள் நமக்கு வழங்கப்படும் இலவசங்கள் அல்ல. இவற்றிற்கான பணமும் நம்மிடமிருந்து வசூலிக்கப்பட்டுவிடுகிறது. மேலும், இவைகள் ஒவ்வொன்றும் நிபந்தனைக்கு உட்பட்டவை. இன்றைய இறைவாக்கு வழிபாடு நம்மை அழைப்பது வியாபார நோக்கம் அற்ற, நிபந்தனைகள் அற்ற 'கொஞ்சம் எக்ஸ்டராவிற்கு.'

எப்படி?

இன்றைய முதல் வாசகம் (காண். 1 சாமு 26:2,7-9,12-13,22-23) தன் கைக்குக் கிடைத்த சவுலைக் கொல்லாமல் விடும் தாவீதின் பெருந்தன்மையையும், அவர் அருள்பொழிவு செய்யப்பட்ட சவுலின்மேல் வைத்திருந்த மதிப்பையும் எடுத்துரைக்கிறது. சவுல் இஸ்ரயேலின் முதல் அரசன். சிதறுண்டு கிடந்த இஸ்ரயேலின் பன்னிரு குலங்களை ஒன்றாகச் சேர்த்து, அன்றைய புதிய மற்றும் ஆற்றல்மிக்க எதிரியான பிலிஸ்தியரை வெல்வது சவுலின் முதன்மையான பணியாக இருந்தது. சவுல் இயல்பாகவே நல்லவர். மேலும், தொலைந்து போன கழுதையைத் தேடி வந்த அவரை ஆண்டவர் அரசராக்குகிறார். ஆக, ஆண்டவரால் தான் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையை அவர் நன்றாகவே அறிந்திருந்தார். பிலிஸ்தியருக்கு எதிரான போரில் தொடக்கத்தில் இவர் வெற்றி பெற்றாலும், காலப்போக்கில் இறைவாக்கினர் சாமுவேலோடு நடந்த உரசல்களாலும், தனக்கென்றும் தன் மாட்சிக்கென்றும் அரசாட்சியைப் பயன்படுத்தியதாலும் கடவுளின் அதிருப்திக்கு ஆளாகின்றார் சவுல். சவுல் அரசாட்சியில் இருக்கும்போதே தாவீது அரசராக அருள்பொழிவு பெறுகின்றார். பெலிஸ்தியன் கோலியாத்தை வென்றதில் தொடங்கி தாவீதின் ஆற்றல் மற்றும் போரிடும் திறன் மற்றவர்களால் அதிகம் பேசப்படுகிறது. இது சவுலின் பொறாமையைத் தூண்டி எழுப்புகிறது. தன் அரச இருக்கை தன்னிடமிருந்து பறிபோhய்விடுமோ என்ற பயத்தில் தாவீதை பல நேரங்களில் பல இடங்களில் கொல்ல முயல்கிறார் சவுல். ஒரு கட்டத்தில் சவுலிடமிருந்து தப்பி பாலைநிலத்தில் தஞ்சம் புகுகிறார் தாவீது. தாவீதை இவ்வாறு விரட்டிக்கொண்டே செல்லும் சவுல் ஒரு கட்டத்தில் தாவீதின் கைகளில் விழுகின்றார். இந்த நிகழ்வைத்தான் இன்றையை முதல் வாசகம் வர்ணிக்கிறது. சவுல் கூடாரத்திற்குள் தூங்கிக்கொண்டிருக்கின்றார். அவரோடு இருந்த படைவீரர்களும் தூங்குகின்றனர். பயணக் களைப்பு மற்றும் மலைப்பாங்கான இடம் என்பதால் மிகவும் அயர்ந்து தூங்குகிறார்கள். சவுலின் தலைமாட்டில் ஈட்டி இருக்கிறது. மேலும், தாவீதோடு உடன் வந்த அபிசாய் தானே சவுலைக் கொன்று தாவீதிடம் 'வெரி குட்' வாங்க முன் வருகின்றார். ஆக, தனக்கு முன் தூங்கிக் கொண்டிருக்கும் எதிரி, கையின் அருகில் ஈட்டி, தனக்குப் பதிலாகக் குத்தக் காத்திருக்கும் அபிசாய் என மூன்று வாய்ப்புக்கள் இருந்தும், 'அவரைக் கொல்லாதே! ஆண்டவரால் திருப்பொழிவு செய்யப்பட்டவர்மேல் கைவைத்துவிட்டுக் குற்றமற்று இருப்பவன் யார்?' என்று சொல்லிச் சவுலைக் கொல்லாமல் விடுகின்றார். மேலும், தான் அந்த இடத்திற்கு வந்து, சவுலுக்குத் தீங்கிழைக்க வாய்ப்பு கிடைத்தும், தான் தீங்கு செய்யாமல் விட்டதன் அடையாளமாக, 'தலைமாட்டில் இருந்த ஈட்டியையும், தண்ணீர்க் குவளையையும்' எடுத்துக்கொண்டு போகிறார் தாவீது. காலையில் துயில் எழும்பியதும் சவுல் தேடியவையும் இவைகளாகத்தான் இருந்திருக்கும். மேலும், மறுநாள், 'அவனவன் நீதிக்கும் உண்மைக்கும் ஏற்ப ஆண்டவர் என்னை உம்மிடம் ஒப்புவித்தும் ஆண்டவரால் திருப்பொழிவு செய்யப்பட்டவர்மேல் நான் கைவைக்கவில்லை' என்று உரக்கக் கூறுகிறார் தாவீது.

ஆக, தனக்கு இன்னா செய்த சவுலை ஒறுக்காமல், அவரின் உயிரை விட்டுவைக்கின்றார் தாவீது. தன் கையில் சவுலின் உயிர் கிடைத்தும், தனக்கு வாய்ப்புகள் கிடைத்தும், அதைக் கடவுளே அனுமதித்தும், சவுலுக்குத் தீங்கு செய்ய மறுப்பதன் வழியாக, 'கொஞ்சம் எக்ஸ்ட்ரா' இதயம் கொண்டவராக நமக்கு முன்வைக்கப்படுகிறார் தாவீது.

இன்றைய இரண்டாம் வாசகம் (காண். 1 கொரி 15:45-49) இறந்தவர் உயிர்பெற்றெழுதல் பற்றிய போதனையின் தொடர்ச்சியாக இருக்கிறது. இறந்தவர் உயிர்ப்பு பற்றி கொரிந்து நகரத் திருச்சபைக்கு விளக்குகின்ற பவுல், 'ஆதாம்' 'கிறிஸ்து' என்ற இரண்டு உருவகங்களைப் பயன்படுத்தி, 'மனித' மற்றும் 'ஆவிக்குரிய' இயல்புகளின் குணநலன்களை முன்வைக்கின்றார். இங்கே, ஆதாம் உயிர் பெற்றவர் என்றும், கிறிஸ்து உயிர் தருபவர் என்றும் பவுல் முன்வைக்கின்றார். ஆதாம் உயிர் பெற்றார். ஆனால், அவருடைய மனித இயல்பில் அவர் இருந்ததால் அவரால் மீண்டும் உயிர் தர முடியவில்லை. ஏனெனில், மனித இயல்பு அழிவுக்குரியது. அது வரையறைக்குட்பட்டது. ஆனால், கிறிஸ்து அப்படி அன்று. அவர் தான் மனுவுரு ஏற்றபோது உயிர் பெற்றவராக இருந்தாலும், தன் உயிர்ப்பின் வழியாக அவர் உயிர்தருபவராக மாறுகின்றார். ஏனெனில், அவருடைய இயல்பு ஆவிக்குரியது. அது வரையறைகள் அற்றது. 

ஆக, ஆதாமால் கொஞ்சம் எக்ஸ்ட்ரா நடக்க முடியவில்லை என்றும், கிறிஸ்து தன் உயிர்ப்பால் 'உயிர்தரும்' எக்ஸ்ட்ரா நிலைக்கு உயர்ந்தார் எனவும் சுட்டிக்காட்டுகின்றார் பவுல். மேலும், ஒருவர் தன் ஆதாம் இயல்போடு இணைத்துக்கொண்டால் அவரால் வேறு ஒன்றும் செய்ய முடியாமல், மண்ணைச் சார்ந்த இயல்பைக் கொண்டவராக இறந்துவிடுவார் என்றும், ஒருவர் கிறிஸ்து இயல்போடு இணைத்துக்கொண்டால் அவரால் உயிர்தரும் இயல்பையும் பெற்று கிறிஸ்துவோடு உயிர்க்க முடியும் என்றும் அறிவுறுத்துகிறார் பவுல்.

இன்றைய நற்செய்தி வாசகம் (காண். லூக் 6:27-38) கடந்த வார சமவெளிப்பொழிவின் தொடர்ச்சியாக இருக்கிறது. சாதாரண மனித மூளைக்கு மிக அசாதாரணமாகவும், கடினமாகவும் தோன்றும் சிலவற்றைப் பின்பற்றுமாறு தன் சீடர்களுக்கு அறிவுறுத்துகின்றார் இயேசு. இயேசுவின் கட்டளை இரண்டு நிலைகளில் இருக்கிறது: (அ) 'பகைவரிடம் அன்பு, சபிப்பவருக்கு ஆசி, இகழ்ந்து பேசுபவருக்கு இறைவேண்டல், கன்னத்தில் அறைபவருக்கு மறுகன்னம், மேலுடையை எடுத்துக்கொள்பவருக்கு அங்கி, கேட்பவருக்குக் கொடுத்தல், பொருள்களை எடுத்துக்கொள்வோரிடமிருந்து திருப்பிக் கேட்காமல் இருத்தல்,' (ஆ) 'பிறருக்கு தீர்ப்பளிக்க வேண்டாம். மன்னியுங்கள். கொடுங்கள்.' ஒருவர் இந்த இரண்டு கட்டளைகளையும் பின்பற்ற வேண்டுமானால், அவர் தன்னுடைய தனிப்பட்ட அறநெறிக்கொள்கையையும், தான் மனித உறவுகளைப் பற்றி வைத்திருக்கின்ற எண்ணங்களையும் மறுஆய்வு செய்ய வேண்டும். இயேசுவின் புதிய கொள்கைத்திரட்டைப் பின்பற்ற அவரே மூன்று உந்துப்புள்ளிகளையும் தருகின்றார்: (அ) 'பிறர் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என விரும்புகிறீர்களோ, அதையே நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்' - ஆண்டான், அடிமை, இருப்பவன், இல்லாதவன், மேலிருப்பவன், கீழிருப்பவன், முதலாளி, வேலைக்காரன் என எல்லாருக்கும் பொருந்தும் இவ்விதி ஒருவரின் தனிமனித மாண்பை மையப்படுத்துவதாக இருக்கிறது. (ஆ) 'உங்கள் தந்தை இரக்கமுள்ளவராய் இருப்பது போல நீங்களும் இரக்கமுள்ளவராய் இருங்கள்' - கடவுளைப் போல இருத்தலை ஒரு ஐடியலாக முன்வைக்கிறார் இயேசு. ஆக, ஒருவரின் மனித இயல்பைச் சற்றே உயர்த்துகின்றார். (இ) 'நீங்கள் எந்த அளவையால் அளக்கிறீர்களோ அதே அளவையால் உங்களுக்கும் அளக்கப்படும்' - ஆக, நான் செய்வது எனக்கே திரும்பக் கிடைக்கும் என்ற ஆர்வம் அல்லது அச்சத்தினால் செய்ய அழைக்கிறார் இயேசு.

ஆக, மேற்காணும் இரண்டு கட்டளைகள் மற்றும் மூன்று உந்துபுள்ளிகளின் நோக்கம் ஒன்றுதான்: 'கொஞ்சம் எக்ஸ்ட்ரா வாழ்வது.' இப்படி வாழ்பவர்கள் 'உன்னத கடவுளின் மக்கள் எனப்படுவார்கள்' என்ற புதிய பெயரையும் இயேசு தருகின்றார். ஆக, எல்லாரும் செய்வதைப் போலச் செய்யாமல், கொஞ்சம் அதிகமாக செய்யச் சொல்கிறார் இயேசு.

நம் வாழ்வில் 'கொஞ்சம் எக்ஸ்ட்ரா கண், காது, இதயம்' கொண்டு எப்படி வாழ்வது?

1. பிறரின் நல்வாழ்வு என் இலக்காக வேண்டும்

கொஞ்சம் எக்ஸ்ட்ரா கண், காது, இதயம் கொண்டு வாழ்வதன் இலக்கு தன்னுடைய நல்வாழ்வு அன்று. மாறாக, எனக்கு அடுத்திருப்பவரின் நல்வாழ்வு. அல்லது அடுத்தவரின் நல்வாழ்வை இலக்காக வைக்கும் ஒருவரால்தான் கொஞ்சம் எக்ஸ்ட்ரா செயல்பட முடியும். அடுத்தவரின் நல்வாழ்வை இலக்காக வைப்பது என்பது ஒருவருடைய தனிப்பட்ட வாழ்வை இழக்கத் துணிவது. தூங்கி எழும் சவுல் தன்னை மீண்டும் துரத்துவார், தன் உயிரைப் பறிக்கத் தேடுவார் எனத் தெரிந்தும், தன் பாதுகாப்பின்மையிலும் சவுலின் பாதுகாப்பை முதன்மைப்படுத்துகின்றார். சவுலின் உயிரைக் கொல்லாது விடுகின்றார். தன் இறப்பின் வழியாகத்தான் மானுடம் மீட்புப் பெற முடியும் என்று இயேசு மானுட நல்வாழ்வை இலக்காகக் கொண்டிருந்ததால்தான் அவரால் தன்னுடைய இன்னுயிரை இழக்க முடிகிறது. இன்னும் கொஞ்சம் எக்ஸ்ட்ரா என எல்லாவற்றையும் செய்ய முடிகிறது. இயேசுவின் சீடர்களும், அவருடைய இரண்டு கட்டளைகளைக் கடைப்பிடிப்பதன் நோக்கம் தங்கள் நல்வாழ்வு அல்ல. மாறாக, பிறரின் நல்வாழ்வே. ஏனெனில், இயேசுவின் கட்டளைகளைக் கடைப்பிடிக்கும் அவர்கள் நிறைய துன்பத்தைத் தாங்க வேண்டியிருக்கும். மற்றவர்கள் தங்களைக் காயப்படுத்துவதை அவர்கள் பொறுத்துக்கொள்ள வேண்டும். இது அவர்களின் மனச்சுமையை அதிகரிக்கும். கன்னத்தில் வலி அதிகமாகும். அலமாரியில் ஆடைகள் எண்ணிக்கை குறையும். வங்கிக் கணக்கில் பணம் குறையும். மற்றவர்களால் 'முட்டாள்' என்று கருதப்படும் நிலை உருவாகும். மற்றவர்களால் ஏமாற்றப்படும்போது கோபம் வரும். இருந்தாலும், இவை எல்லாவற்றிலும் பிறரின் நல்வாழ்வு முதன்மையாக நிற்பதால் இவர்கள் இவை அனைத்தையும் பொறுத்துக்கொள்ள வேண்டும்.

2. வலியை வலிந்து ஏற்றல் வேண்டல்

'தெ ஸெல்ஃபிஷ் ஜீன்' என்ற நூலின் ஆசிரியர் ரிச்சர்ட் டாக்கின்ஸ், மனித உடலின் ஜீன்கள் இயல்பாகவே தன்னலம் நோக்கம் கொண்டவை என்கிறார். இவைகளால் எந்த நேரத்திலும் தங்களைப் பற்றி மட்டுமே சிந்திக்க முடியும். மேலும், எந்த ஆபத்து நேரத்திலும் இவைகள் தங்களைத் தற்காத்துக்கொள்வதிலேயே கவனமாக இருக்கும் என்கிறார். ஏனெனில், ஜீன்கள் இயல்பாகவே வலியை ஏற்கத் தயங்குபவை. இன்றைய இறைவாக்கு வழிபாட்டில் நாம் காணும் தாவீது, இயேசு, இயேசுவின் சீடர்கள் இந்த இயல்புக்கு எதிராகச் செல்கிறார்கள். வலியைத் தாங்களாகவே ஏற்கிறார்கள். இன்றைய நம் உலகம் வலிகள் இல்லாமல் வழிகளைக் கற்றுக்கொடுக்க நினைக்கிறது. ஆனால், வலிகளை வலிந்து ஏற்பதில் வழிகள் தென்படுவதோடல்லாமல், வலிகளும் மறைந்துவிடும் எனக் கற்பிக்கிறது இன்றைய இறைவாக்கு வழிபாடு.

3. என் அளவை எது? என்ற தெளிவும் உறுதியும் வேண்டும்

வாழ்க்கை ஒரே அளவையால் எல்லாருக்கும் அளப்பதில்லை. மேலும், நான் பிறருக்கு அளக்கும் அளவையைப் போல அவரும் எனக்கு அளப்பதில்லை. நான் நன்றாகக் கூலி கொடுக்கும் வீட்டுத் தலைவியாக இருக்க, என் வீட்டில் வேலை செய்பவர் அதற்கேற்ற வேலை செய்வதில்லை. ஆசிரியரின் உழைப்பு என்ற அளவைக்கு ஏற்ப மாணவர்கள் உழைப்பதில்லை. நான் நல்லது செய்ய அதுவே எனக்குத் தீங்காகவும் முடியலாம். இம்மாதிரி நேரங்களில் எல்லாம், அளவைகளை மாற்றிக்கொள்ளும் சோதனை வரும். அச்சோதனையிலிருந்து விடுபட வேண்டும். தாவீதுக்கு சோதனை அபிசாய் வடிவிலும், மேலும் தன்னுடைய சிந்தனையாலும் வருகிறது. 'கடவுளே இதை அனுமதித்தார்' என்று தனக்குத் தானே நியாயம் சொல்லி சவுலை அவர் கொன்றிருக்கலாம். ஆனால், எந்த நிலையிலும் தன் தகைமை, தாராள உள்ளம் என்னும் அளவையை அவர் மாற்றிக்கொள்ளவே இல்லை. இதுதான் கன்சிஸ்டன்ஸி - மாறாத்தன்மை. ஆகையால்தான், இயேசுவும் 'தந்தை போல இரக்கம் கொள்ளுங்கள்' என்கிறார். கடவுள் தன் அளவையை ஆள்பார்த்து மாற்றுவதில்லை. எல்லார்க்கும் பெய்யும் மழையாக அவர் இருக்கிறார். 'என் அளவையை மாற்றிக்கொள்ள' என் ஆதாம் இயல்பு என்னைத் தூண்டும்போது, உடனடியாக மாறாத கிறிஸ்து இயல்பை அணிந்துகொள்ள வேண்டும்.

இறுதியாக, இன்று சரிக்குச் சரி, தவறுக்குத் தவறு, அல்லது சரிக்கும் தவறு, என்ற குறுகிய மனநலப் போக்கே நம் தனிப்பட்ட மற்றும் சமூக வாழ்வின் மகிழ்வைக் குலைக்கிறது. யாரும் தங்களுக்குக் குறிக்கப்பட்ட ஒன்றையே செய்யத் தயங்கும் இன்று, 'கொஞ்சம் எக்ஸ்ட்ரா' சாத்தியமா? என்ற கேள்வி எழுகிறது. ஆனால், இயேசுவின் மாற்றுக்கலாச்சாரம் எப்போதும் சாத்தியமே. இன்றைய பதிலுரைப் பாடலில் நாம் வாசிப்பது போல (திபா 103), ஆண்டவர் 'எனக்கு பேரன்பையும் இரக்கத்தையும் மணிமுடியாகச் சூட்டியிருக்கிறார்' என்றால், நானும் அவருடைய மகனாக, மகளாக, கொஞ்சம் எக்ஸ்ட்ரா அன்பு, இரக்கம் என வாழ்ந்தால் எத்துணை நலம்! 

கொஞ்சம் எக்ஸ்ட்ரா - என் வாழ்விலும், பணியிலும் - தாவீது போல, இயேசு போல!
 



No comments:

Post a Comment