Wednesday 4 July 2018

ஆண்டின் பொதுக்காலம் 14-ம் ஞாயிறு


ஆண்டின் பொதுக்காலம் 14-ம் ஞாயிறு

எசே 2:23-24: 2கொரி 12:7-10; மாற் 6:1-6


மகிழ்ச்சியூட்டும் மறையுரை -குடந்தை ஆயர் F. அந்தோனிசாமி

எது அர்த்தமுள்ள வழிபாடு?

இயேசுவின் காலத்தில் அவரைப் பார்த்து எத்தனையோ பேர் ஆச்சரியப்பட்டார்கள்.

இயேசு அப்பங்களைப் பலுகச் செய்தபோது (யோவா 6:1-13) மக்கள் ஆச்சரியப்பட்டார்கள்.

இயேசு நோயாளிகளைக் குணமாக்கியபோது (மத் 9:27-31) மக்கள் ஆச்சரியப்பட்டார்கள்.

இயேசு ஊமைகளைப் பேசவைத்தபோதும் (மத் 9:32-33), முடவர்களை நடக்க வைத்தபோதும் (மத் 9:1-7), பாவங்களை மன்னித்தபோதும் (லூக் 7:36-50), பேய்களை ஓட்டியபோதும் (மாற் 1:21-28), இறந்தவர்களை உயிர்ப்பித்தபோதும் (யோவா 11:1-44) மக்கள் ஆச்சரியப்பட்டார்கள்.

ஆனால் இப்படி ஆச்சரியப்பட்டவர்கள் அத்தனை பேரின் வாழ்விலும் இயேசு புதுமை செய்யவில்லை. யார் யார் இயேசுவை ஆண்டவராக, கடவுளாக ஏற்றுக்கொண்டார்களோ அவர்கள் வாழ்க்கையில் மட்டும்தான் அற்புதங்கள் புரிந்தார்.

இன்றைய நற்செய்தியிலே நாசரேத்து மக்கள் இயேசுவைப் பார்த்து ஆச்சரியப்படுவதைப் பார்க்கின்றோம். ஆனால் அவரைக் கடவுளாக ஏற்றுக்கொள்ள பலர் மறுத்ததால் அங்கே அவர் அதிகமான புதுமைகளை நிகழ்த்தவில்லை.

இயேசுவின் மீது நம்பிக்கை வைக்காதது மட்டுமல்ல, பழைய ஏற்பாட்டு மக்களின் குணம் படைத்தவர்களாய் (முதல் வாசகம்) அவரைக் கொலை செய்யவும் நாசரேத்து மக்கள் துணிந்தார்கள் (லூக் 4:28-30). இயேசுவைக் கண்டு மக்கள் வியப்புற்றார்கள்; இயேசுவோ அவர்களது நம்பிக்கையின்மையைக் கண்டு வியப்புற்றார் (மாற் 6:6அ).

நாமெல்லாம் இயேசுவைக் கடவுளாக ஏற்றுக்கொள்கின்றவர்கள்தான்! ஆனால் இன்னலிலும், நெருக்கடியிலும் நாம் தத்தளித்துத் தடுமாறும்போது இயேசுவைக் கடவுளாக ஏற்றுக்கொள்ளத் தயங்குகின்றோம்.

கிறிஸ்துவைப் பின்பற்ற விரும்பிய ஒருவர் தனது விருப்பத்தை அவரது கிறிஸ்தவ நண்பரிடம் தெரிவித்தார். அவரது நண்பர் அவரை கோயிலுக்கு அழைத்துச்சென்று சிலுவையிலே தொங்குகின்ற இயேசுவை சுட்டிக்காட்டி, இவர்தான் நீ வழிபட விரும்பும் இயேசு என்றார். அவரது நண்பரோ அதிர்ச்சி அடைந்து, இயேசுவுக்கே இந்தக் கதி என்றால், எனக்கு என்னென்ன நேருமோ! இப்படி சிலுவையிலே இறந்து கிடக்கும் இயேசுவை வழிபட நான் விரும்பவில்லை என்று சொல்லிச் சென்றுவிட்டார்.

புனித பவுலடிகளாரைப் போல கிறிஸ்துவோடு (இரண்டாம் வாசகம்) பாடுபடத் தயாராக இருப்பவர்களால் மட்டுமே இயேசுவை ஆண்டவராகவும் கடவுளாகவும் ஏற்றுக்கொள்ள முடியும். அவர்கள் வாழ்வில் மட்டுமே புதுமைகள் நடக்கும்.

இதுவே நமது செபமாக இருக்கட்டும்: இயேசுவே! உம்மீது நாங்கள் கொண்டிருக்கும் பக்தி முழுமையானதாக அமைய, எங்கள் வழிபாடு அர்த்தமுள்ளதாக அமைய, எங்கள் நம்பிக்கையை விசாலப்படுத்தும். உம்மைப் பெரிய இறைவாக்கினராக மட்டுமல்ல, இறைவனாகவும் ஏற்று வாழ வரம் தாரும். ஆமென்.

மேலும் அறிவோம் :

கற்றதனால் ஆய பயன்என்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின் (குறள் : 2).

பொருள் : நூல்கள் பலவற்றைக் கற்று அறிஞராக விளங்குபவர், தூய தத்துவப் பேரறிஞனாகிய இறைவனது திருவடிகளைத் தொழுது பயன்பெற வேண்டும். அத்தகைய பணிவு இல்லையென்றால் கல்வியறிவால் உரிய பயன் கிடைக்காது.



மறையுரை மொட்டுக்கள் - அருள்பணி Y. இருதயராஜ்


ஒரு கிராமத்திற்கு அருகில் 'சர்க்கஸ்' நடந்து கொண்டிருந்தது. 'சர்க்கஸ்' கூடாரம் ஒருநாள் திடீரென்று தீப்பிடித்துக் கொண்டது. அந்த 'சர்க்கஸில்' கோமாளியாக நடித்தவன் உருக்குள் ஓடி வந்து, தீயை அணைக்கும்படி ஊர் மக்களைக் கெஞ்சிக் கேட்டான். ஆனால் அவ்வூர் மக்கள் அவனை நம்ப மறுத்தனர். அந்தக் குள்ளன் தங்களை ஏமாற்றுவதாக நினைத்தனர். சிறிது நேரத்தில் தீயானது ஊருக்குள் பரவி, ஊரில் பெரும்பகுதியை எரித்துவிட்டது. அவ்வூர் மக்கள் கோ மாளியின் வெளித்தோற்றத்தை வைத்து அவனை எடைபோட்டதால் ஏமாந்தனர்.

ஒருவருடைய வெளித்தோற்றத்தைக் கண்டு அவரை ஏளனம் செய்யலாகாது. ஏனெனில், அவர் மாபெரும் தேரிலே சிறிய அச்சாணி போன்று இருக்கலாம், பிரமாண்டமான தேரும் அச்சாணி இல்லாமல் முச்சாணும் ஓடாது. இது வள்ளுவரின் வாய்மொழி.

"உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு
அச்சாணி அன்னார் உடைத்து" (குறள் 667)

இன்றைய நற்செய்தியில், கிறிஸ்து தம் சொந்த ஊராகிய நாசரேத்தில், ஓய்வு நாளன்று, தொழுகைக் கூடத்தில் மக்களுக்குப் போதிக்கிறார், அவரது போதனையைக் கேட்ட மக்கள் வியப்படைந்த போதிலும், அவர்கள் அவரை ஓர் இறைவாக்கினராகவோ மெசியாவாகவோ ஏற்க மறுத்தனர், ஏனெனில் அவர் ஒரு தச்சர்: அவருக்குப் படிப்போ, பட்டமோ, பதவியோ ஏதுமில்லை, அவரது உறவினர்களும் சாமானிய மக்கள்.

நாசரேத்தூர் இயேசுதான் மெசியா என்று பிலிப்பு நத்தானியேலிடம் கூறியபோது, "நாசரேத்திலிருந்து நல்லது எதுவும் வர முடியுமா?" (யோவா 1:46) அன்று அவர் ஏளனமாகக் கேட்டார். இயேசுவின் ஊரை வைத்து அவரை எடைபோட்டார் நத்தானியேல்.

"எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" (குறள் 355)
என்ற உண்மையை மறந்துவிட்டார் அவர்,

கடவுளுடைய எண்ணங்களும் வழிமுறைகளும் மனிதருடைய எண்ணங்களிலிருந்தும் வழிமுறைகளிலிருந்தும் முற்றிலும் வேறுபட்டவை (எசா 55:8-9). மேலும், மனிதர் முகத்தைப் பார்க்கின்றனர்; கடவுளோ அகத்தைப் பார்க்கின்றார் (1சாமு 16:13). மக்களுக்கு முன்பாகத் தங்களை நேர்மையாளர்களாகக் காட்டிக் கொண்ட பரிசேயர்கள் கடவுளின் பார்வையில் அருவருப்புக்குரியவர்கள் (லூக் 16:14).

கலக்காரர்களும் வணங்காக்கழுத்தினரும் கடின இதயம் கொண்டவர்களுமான இஸ்ரயேல் மக்களுக்கு, அவர்கள் கேட்டாலும் கேட்காவிட்டாலும், இறைவாக்கு உரைக்கும்படி கடவுள் எசேக்கியேலை இன்றைய முதல் வாசகத்தில் கேட்கிறார் (எசே 2:2-5) இறைவன் பெயரால் இறைவாக்குரைப்பது இறைவாக்கினரின் கடமை. அதை ஏற்பதும் ஏற்காதிருப்பதும் மக்களைப் பொறுத்தது. நாற்பது ஆண்டுகளாக இஸ்ரயேல் மக்கள் பாலைநிலத்தில் கடவுளுடைய குரலைக் கேட்டும் தங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொண்டனர் (திபா 95:8-10).

இருப்பினும், கடவுள் தாம் பேசுவதை நிறுத்திக் கொள்ளவில்லை. முற்காலத்தில் முன்னோர்களிடம் இறைவாக்கினர் வாயிலாகப் பேசிய கடவுள், இறுதியாகத் தம் மகன் வாயிலாகப் பேசினார் (எபி 1:1). ஆனால் இஸ்ரயேல் மக்கள் கடவுள் மகன் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளவில்லை. அவர் தமக்குரியவர்களிடம் வந்தார். அவருக்குரியவர்கள் அவரை ஏற்றுக் கொள்ளவில்லை " (யோவா 1:11), ஏனெனில், அவர்கள் அவரை ஊனக்கண்கொண்டு. அதாவது, மனித முறையில் பார்த்தனர்; எடைபோட்டனர்: புறக்கணத்தனர்.

நமது பார்வை எத்தகைய பார்வை? நாம் மற்றவர்களை எப்படிப் பார்க்கிறோம்? மதிப்பீடு செய்கிறோம்? மனித முறையிலா? அல்லது நம்பிக்கை அடிப்படையிலா? திருத்தூதர் பவுல் கூறுகிறார். "இனிமேல் தாங்கள் எவரையும் மனித முறைப்படி மதிப்பிடுவதில்லை . முன்பு தாங்கள் கிறிஸ்துவையும் மனித முறைப்படிதான் மதிப்பிட்டோம். ஆனால் இப்போது அவ்வாறு செய்வதில்லை " (2கொரி 5:16).

நாம் இன்னும் மனித முறைப்படிதான் மற்றவர்களைப் பார்க்கிறோம், ஒருவருடைய பணம், பதவி, பட்டம், ஊர், சாதி ஆகியவற்றைக் கொண்டே அவரை மதிப்பிடுகிறோம். ஏழைகளுக்கு ஒருவிதமான வரவேற்பும் பணக்காரர்களுக்கு ஒருவிதமான வரவேற்பும் கொடுத்து. ஆள் பார்த்துச் செயல்படாதிருக்க நமக்கு அறிவுறுத்துகிறார் யாக்கோபு (யாக். 2:1-4),

திருப்பணியாளர்களையும் நாம் மனித முறையில் தான் காண்கிறோம். ஓர் இளைஞனிடம், "நீ ஏன் பூசைக்குச் செல்வதில்லை" என்று கேட்டதற்கு, “அவன் பூசைக்கு எவன் போவான்?' என்றான், அவன் தனது பங்கு குருவை மனித முறையில் பார்த்ததால், அவருடைய குறைகளைத்தான் கண்டான், அந்தப் பங்கு குரு வழியாகக் கடவுள் செயல்படுவதை அவனால் பார்க்க முடியவில்லை .

குருக்களின் தகுதியுடமை அவர்களிடமிருந்து வரவில்லை : அது கடவுளிடமிருந்தே வருகிறது, அவர்களுடைய வலுவின்மையில் கடவுளுடைய வல்லமை நிறைவாய் வெளிப்படுகிறது (2கொரி 12:9). "பேதுரு திருமுழுக்குக் கொடுக்கட்டும்; இயேசுதான் திருமுழுக்குக் கொடுக்கிறார்; யூதாசு திருமுழுக்குக் கொடுக்கட்டும், இயேசுதான் திருமுழுக்குக் கொடுக்கிறார்" என்ற புனித அகுஸ்தீனாரின் கூற்றை நாம் மறந்து விடக்கூடாது.

"முகத்தில் கண் கொண்டு காணும் மூடர்காள், அகத்தில் கண்கொன்டு காண்பதே ஆனந்தம்" என்கிறார் திருமூலர், முகக்கண் கொண்டு பார்ப்பது முட்டாள் தனம்; அகக்கண் கொண்டு. அதாவது. நம்பிக்கைக் கண்கொண்டு காண்பதே அறிவுடமை; அதுவே கடவுளைக் காணும் பேரின்பத்திற்கு வழிவகுக்கும்.

பரிசேயர்களும் மறைநூல் அறிஞர்களும் தலைக்கனம் கொண்டவர்களாய், தங்களுக்குத்தான் எல்லாம் தெரியும் என்ற மமதை கொண்டவர்களாய், இயேசுவைத் தச்சனான யோசேப்பின் மகன் என்று ஏளனம் செய்து, அவரை ஏற்றுக்கொள்ளாமல் இருளிலே மடிந்தனர். அத்தகைய ஆபத்திற்கு நாம் இலக்காகாமல் எச்சரிக்கையுடனும் விழிப்புடனும் வாழக் கற்றுக்கொள்வோமாக.

மன்றாட்டு

எல்லா உண்மைகளும் எனக்குத் தெரியும் என்ற தலைக்கனத்திலிருந்தும், புதிய உண்மைகளைக் கண்டு பின் வாங்கும் கோழைத்தனத்திலிருந்தும். அரைகுறை உண்மைகளுடன் திருப்தி கொள்ளும் அசட்னடத் தளத்திலிருந்தும் உண்மையின் இறைவா! எங்களை விடுவித்தருளும்.



ஞாயிறு இறைவாக்கு - அருள்பணி முனைவர் ம. அருள்

உன்னை அழைக்கிறார்.

1993-ஆம் ஆண்டிலே நம் பாரத பூமியிலே மகாராஸ்டிரா மாநிலத்தில் லாத்தூர் என்ற மாவட்டத்தில் நடந்த பூகம்பம் நாம் எல்லோரும் அறிந்த ஒன்று. 50,000-க்கு மேற்பட்ட மக்கள் உயிர் இழந்தார்கள். மரங்கள் வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டு எல்லாம் சுடுகாடாய் மாறிய சம்பவம் நம்மை எல்லாம் அதிர வைத்தது. மக்கள் ஆழ்ந்த நித்திரையில் இருக்கும் அதிகாலை நேரம். அந்த நேரத்தில் பூமியானது அதிர்ந்தது, பிளந்தது, மக்கள் மடிந்தார்கள். இப்படிப்பட்ட ஒரு கோர நிகழ்ச்சி நடக்கும் என்று மட்டும் அவர்கள் தெரிந்து அல்லது உணர்ந்து இருப்பார்கள் என்றால் ஒரு வேளை விழிப்போடு காத்திருந்து தங்கள் உயிரையாவது காப்பாற்றி இருக்கலாம். இப்படிப்பட்ட நிகழ்ச்சி நடக்கும் என்றும் அங்கும் இங்கும் வதந்திகள் பரவின. முன் அறிவிப்புக்களும் தரப்பட்டன. ஆனால் அவைகள் எல்லாம் இவர்களின் உணர்வுக்கு எட்டவில்லை. இப்படிப்பட்ட நிகழ்ச்சி இந்தியாவில் மட்டுமல்ல, உலகத்தின் ஒவ்வொரு பகுதியிலும் இன்று நடப்பவை.

மனிதன் கடந்த கால நிகழ்ச்சி பற்றிக் கவலை கொள்வதில்லை. இன்றைய நிகழ்ச்சியும் இவனது கவனத்தில் இடம் பெறுவதில்லை. நாளைய வாழ்வு எனக்கு எப்படி இருக்கும் என ஆவலோடு நோக்குகிறான். வான நட்சத்திரங்கள் என்ன சொல்லுகின்றன? என் கைரேகையில் எனக்கு என்ன எழுதியுள்ளது? இந்த சோசியன் என்ன சொல்லுகிறான்? இந்தப் பறவை, கிளி எடுக்கும் பகுதியில் என்ன எழுதியுள்ளது என்று படித்தவனும் சரி, படியாதவனும் சரி இன்று தேடும் படலம் குறைந்தபாடில்லை. இப்படிப்பட்ட சோசியங்கள் எல்லாம் வாழ்வின் நிகழ்ச்சிகளோடு முழுமையாக நிறைவு பெறுவதில்லை.

ஆம் அன்புக்குரியவர்களே! எதிர்காலம் எனக்கு எப்படி இருக்கும் என அறிய ஆசிக்கிறீர்களா? இதற்குத் தகுந்த பதில் தருவதுதான் விவிலியம். பழைய ஏற்பாட்டில் எத்தனையோ இறைவாக்கினர்கள் தோன்றினார்கள். இன்றைய வார்த்தை வழிபாட்டிலே தரப்பட்டிருப்பதுபோல, எசேக்கியேல் என்பவரும் ஓர் இறைவாக்கினர்தான். இந்த இறைவாக்கினர்கள் எல்லாம் இறைவனுக்கும் மக்களுக்கும் பாலமாக வாழ்வைக் கட்டி எழுப்பும் கலைஞர்களாக இருந்தார்கள். காலத்தின் குறிகளைச் சரியாகக் கணக்கிட்டு இறைவனின் குரலுக்குச் செவிமடுத்தார்கள். வீரத்தோடும் மனபலத்தோடும் மக்களிடம் எடுத்துரைத்தார்கள். மக்களின் கடின உள்ளத்தைக் கடிந்துகொண்டார்கள். மக்களின் இன்ப துன்பத்தில் பங்கெடுத்தார்கள். நீதிக்கும், உண்மைக்கும் சான்றாகத் திகழ்ந்தார்கள். இதனால் உலகம் இவர்களை வெறுத்தது. ஆனால் யாருக்கு அழிவு? பூமியானது அதிரும் என்று கூறியவர்களுக்கா? அல்லது ஆழ்ந்த நித்திரையில் இருந்தவர்களுக்கா?

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் நாசரேத் என்ற சிற்றூரிலே மனிதனாகத் தோன்றினார் இயேசு என்ற நாமம் கொண்ட இந்தப் பெரிய இறைவாக்கினர். இறைவாக்கினர்கள் எல்லாம் இவரைப் பற்றித்தான் முன் அறிவித்தார்கள். மனிதனை இறைமயமாக்க மனிதனாகத் தோன்றினார். வீரத்தோடு போதித்தார். உண்மைக்குச் சான்று பகர்ந்தார். இருட்டடிப்பு வாழ்க்கை நடத்தும் பணக்காரர், பதவிக்காரர், அதிகாரம் படைத்தோர், உயர்ந்தோர் எனத் தன்னையே உயர்த்திய தன்னலவாதிகள் அனைவரையும் சாடினார். அவரது ஞானத்தைக் கண்டு வியந்தது ஒரு மக்கள் கூட்டம். ஆனால் உண்மையை ஏற்க மறுத்த கூட்டத்திற்கு இயேசு தடைக்கல் ஆனார். இதைப் பற்றித்தான் மாற்கு நற்செய்தியிலே 6ஆம் அதிகாரத்திலே ஒன்று முதல் 6 வசனங்கள் அழகாக விவரிக்கின்றன. வாசித்துப் பாருங்கள். உலகம் வாழ்வு பெறத் தன்னையே பலியாக்கியவர் இந்த இயேசு பெருமான்

இன்றைய திருவார்த்தைக்குச் செவிமடுக்கும் நண்பனே! உன்னிடம் இன்று ஒரு கேள்வியை எழுப்ப விரும்புகிறேன். இறைவன் உன்னை அழைக்கலாம். எதற்காக? ஒரு இறைவாக்கினராக! இத்தகைய அழைப்புக்கு நீ உரியவன் என்றால் நீ தயார்தானா? உண்மைக்கு, நீதிக்குச் சான்று பகர நீ தயார்தானா?

இறைவன் தன் அன்பை உன் மூலமாக மக்களுக்குத் தர விரும்பினால் அதை மறுக்காதே! மறுத்தால் உன் வாழ்வில் மாபெரும் கொடையை இழந்து நிற்பாய்! நீ ஒரு இறைவாக்கினராக இல்லாமல் இருக்கலாம். ஆனால் தேவன் உன்னை இறைவாக்கினரின் குரலுக்குச் செவிமடுக்க அழைக்கலாம். உன் இருண்ட வாழ்வில் இருந்து உன்னை ஒளிமிக்க வாழ்வுக்குக் கொண்டு வர அழைக்கலாம். அசட்டையாக இராதே! காலமும் தாழ்த்தாதே! லாத்தூர் மாவட்டத்தில் நடந்த பூகம்பத்தை உன் நினைவுக்குக் கொண்டு வா! உலக வாழ்வை அதன் இன்பத்தைக் கண்டு மதி மயங்கி ஆழ்ந்த நித்திரையில் இருந்துவிடாதே. இறைவன் உன்னை இன்று அழைக்கிறார் எதற்காக? நாம் பரிசுத்தராய் இருப்பதுபோல நீங்களும் இருங்கள் (1 பேதுரு 1:15. 16) என்று புனித பேதுரு மூலமாக அறிவிக்கும் செய்திக்குச் செவிமடுப்போம்.



உடலில் தைத்த முள்
அருள்பணி ஏசு கருணாநிதி
காலில் முள் குத்திய அனுபவம் உங்களுக்கு உண்டா? கிராமத்தில் பிறந்த எனக்கு நிறையவே உண்டு. உள்ளங்கால் என்றால் முள் குத்துவதும், முன்னங்கால் என்றால் கல் எத்துவதும், பின்னங்கால் என்றால் அம்மி உரசுவதும் சகஜம்தானே என்பது கிராமத்தில் வளர்ந்த குழந்தைகளுக்குத் தெரியும். செருப்பு அணியாதவர்களுக்கு இந்தப் பிரச்சினை என்றால், செருப்பு அணிந்தவர்களுக்கு மற்றொரு பிரச்சினை உண்டு. அதுதான், காலணிக்குள் கல். வேகமாக நடந்து செல்லும்போது நம் காலணிக்குள் நுழையும் கல் நம் வேகத்தைக் குறைப்பதுடன், நம் காலைiயும், காலணியையும் பதம் பார்த்துவிடுகிறது. காலணிகள் ஷூ போன்று இருந்தால் நிலை இன்னும் ரொம்ப மோசம். நம் உடலுக்கு வெளியே உள்ள பொருள் உடலுக்குள் நுழைய முற்பட்டால், அல்லது உடலைக் கிழித்தால், தைத்தால் (தமிழில் பாருங்களேன்: முள் குத்தும்போது கால் கிழிபடுவதை அழகாக, 'முள் தைத்தது' என்று சொல்கிறார்கள். 'முள்' ஆக்சுவலா 'கிழிக்கத்தானே' செய்கிறது!)  எவ்வளவு துன்பமாக இருக்கிறது!

இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். 2 கொரி 12:7-10) தூய பவுல் தன் உடலில் தைத்த முள் போல் ஒன்று தன்னை வருத்திக்கொண்டிருப்பதாகப் பதிவு செய்கின்றார். பவுல் சொல்வது உடலுக்குள்ளே சதையைத் தைத்துக்கொண்டிருக்கும் ஒரு முள். அதாவது, நாம மீன் சாப்பிட முயற்சி செய்து ஒரு முள் தொண்டைக்குள் சிக்கிக் கொண்டு உள்ளேயும் போகாமல் வெளியேயும் வரமால் இருப்பது போல. இப்படி அனுபவப்பட்டவர்கள் வாழ்க்கையில் மீண்டும் மீனே சாப்பிடாமல் இருந்திருக்கிறார்கள்.

பவுலின் வார்த்தைகளில் நிறைய சோகம் தெரிகின்றன. அதை அவருடைய வார்த்தைகளிலேயே கேட்போம்:

அ. என்னிடம் பெருங்குறை ஒன்று - உடலில் தைத்த முள்போல - என்னை வருத்திக்கொண்டே இருக்கிறது.

ஆ. அதை என்னிடமிருந்து நீக்கிவிடுமாறு நான் மூன்று முறை ஆண்டவரிடம் வருந்தி வேண்டினேன்.

இ. ஆனால் அவர் அதை எடுக்கவில்லை. அதற்குப் பதிலாக, 'என் அருள் உனக்குப் போதும். வலுவின்மையில்தான் வல்லமை நிறைவாய் வெளிப்படும்' என்றார். (இந்தக் கடவுள் இப்படித்தான். பல நேரங்களில் நாம் கேட்பது எதையும் செய்யமாட்டார். அவரே தான் செய்வதற்கு ஒரு காரணமும் சொல்வார். ஆனால் பரவாயில்லை. பவுலின் செபத்தைக் கேட்கவாவது செய்தாரே!)

பவுல் இதை எழுதும்போது நிறைய கண்ணீரோடு எழுதியிருப்பார் என்றே என் கற்பனையில் தோன்றுகிறது. 'என் சதையில் தைத்த முள்போல' என்பதுதான் சரியான மொழிபெயர்ப்பு. நம் காலில் குத்தும் முள் தரும் வலியும், கன்னத்தில் அல்லது உதட்டில் குத்தும் முள்ளும் ஒரே வலியையா தருகிறது. இல்லை. முள் குத்தும்போது அல்லது நம் உடலில் ஊசி போடும்போது நமக்கு ஏன் வலிக்கிறது? மென்மையான ஒன்றின் மேல், வன்மையான ஒன்று பாயும் போது அங்கே வலி வருகிறது. இரண்டும் மென்மையாக இருந்தால் வலி இருப்பதில்லை. ஊசி போடுவதற்கு முன் உடலில் தேய்க்கப்படும் பஞ்சு நமக்கு வலி தருவதில்லை. இரண்டும் வன்மையாக இருந்தால் சத்தம் மட்டும்தான் வரும். வலி வராது. நம் உடலின் நகத்தின்மேல், இன்னொரு நகத்தைத் தேய்க்கும்போது அங்கே சத்தம்தான் வருகிறது. ஆக, எதிரெதிர் குணங்கள் கொண்டவை ஒன்றுக்கொன்று மோதும்போது வலி வருகிறது. நாம் இறுக்கமாக பேண்ட் அணியும்போது அதன் பொத்தான்கள் நம் இடுப்பு பகுதிக்கு கொடுக்கும் வலியையே நம்மால் தாங்க முடிவதில்லை. அப்படியிருக்க அதே இடுப்பு பகுதியில் ஒரு முள் அமர்ந்து நம்மை குத்திக்கொண்டிருந்தால் நம்மால் தாங்க முடியுமா?

பவுலடியாரின் சதையில் குத்திய முள்ளாக அவர் எதைச் சொல்ல வருகிறார் என்பதற்கு பல யூகங்கள் இருக்கின்றன. இது அவரை வாட்டி வந்த உடல் நோயைக் குறிக்கிறது, அல்லது அவருடைய உள்ளத்தில் உள்ள ஏதோ ஒரு குற்ற உணர்வாக இருக்கலாம் அல்லது தன் எதிரியாக தான் நினைக்கும் ஒரு நபராக இருக்கலாம் அல்லது அவரின் திருச்சபையில் நிலவிய ஏதோ ஒரு பெரிய பிரச்சினையைக் குறிக்கிறது, அல்லது கொரிந்து மக்களால் ஒதுக்கப்பட்ட எதிர்மறை உணர்வைக் குறிக்கிறது என்று பல கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. உடலில் உள்ள நோய், மனதில் உள்ள வருத்தம், வெளியில் உள்ள குறை என எதுவாக இருந்தாலும், வலி என்னவோ பவுலடியாருக்கு அதிகமாகவே இருக்கிறது. இந்தக் குறை அல்லது வலிக்கு ஒரு நோக்கம் இருப்பதாகவும் சொல்கிறார் அவர். என்ன நோக்கம்? 'நான் இறுமாப்பு அடையாதவாறு!' சின்னக் குழந்தைக்கு அல்லது திருமண மணப்பெண்ணுக்கு நன்றாக அலங்காரம் செய்துவிட்டு, கன்னத்திற்கும், நாடிக்கும் இடையே வைக்கப்படும் திருஷ்டி பொட்டு போல! ஆக, எல்லாம் நல்லாயிருக்கக் கூடாது என்பதற்காக தானாக ஏற்படுத்திக்கொண்ட அல்லது ஏற்றுக்கொண்ட ஒரு குறை. மேலும் இந்தக் குறையை சாத்தான் அனுப்பியதாகவும் சொல்கிறார் பவுலடியார்.

தன் சதையில் குத்திய முள்ளை எடுக்க கடவுளிடம் பவுலடியார் முறையிட, கடவுளும் முள்ளை எடுப்பதற்குப் பதிலாக, 'என் அருள் உனக்குப் போதும். வலுவின்மையால்தான் வல்லமை வெளிப்படும்' என்கிறார். அதாவது, நிறைய மழை பெய்கிறது என வைத்துக்கொள்வோம். மேடுகளில் பெய்யும் மழை அப்படியே வழிந்து ஓடிவிடுகிறது. ஆனால் பள்ளங்களில், குண்டும், குழியுமான இடங்களில் பெய்யும் மழை அப்படியே ஆங்காங்கே தேங்குகிறது. ஆக, பள்ளங்களும், குண்டும் குழிகளும்தான் அருளைச் சேர்த்துவைக்கும் கலயங்கள். பவுலைப் பொறுத்தவரையில் இந்த வலுவின்மையில்தான் இறைவன் தன் அருளைத் தருவதாக உணர்கின்றார். மேலும், இந்த உணர்வினால் அவருடைய உள்ளத்தில் மகிழ்ச்சி பிறக்கிறது. ஆகையால்தான், 'என் வலுவின்மையிலும், இகழ்ச்சியிலும், இடரிலும், இன்னலிலும், நெருக்கடியிலும் நான் அகமகிழ்கிறேன்' என்கிறார் பவுல்.

இவ்வாறாக, ஒரு பக்கம் வலி, மறு பக்கம் அருள். ஒரு பக்கம் வலுவின்மை, மறு பக்கம் மகிழ்ச்சி என வாழ்வின் இருதுருவ அனுபவங்களை மிக அழகாகப் பதிவு செய்கிறார் பவுல். இரண்டாம் வாசகத்தில் நாம் காணும் இந்த இருதுருவ அனுபவமே இன்றைய முதல் மற்றும் மூன்றாம் வாசகங்களிலும் இருக்கின்றது.

இன்றைய முதல் வாசத்தில் (காண். எசே 2:2-5) இறைவாக்கினர் எசேக்கியேலை இறைவாக்குரைக்க கடவுள் இஸ்ரயேல் மக்களிடம் அனுப்புகிறார். இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். மாற் 6:-16) இயேசு ஓர் இறைவாக்கினராக தன் பிறந்தகம் வருகின்றார். இருவரும் எதிர்கொள்ளும் அனுபவங்களை இன்றைய வாசகங்கள் பதிவு செய்கின்றன.

எசேக்கியேல் இறைவாக்கினர் இறைவாக்குரைக்க வேண்டிய மக்களை மூன்று அடைமொழிகளால் அழைக்கிறார் யாவே இறைவன்: (அ) வன்கண்ணுடையோர் (2:4), (ஆ) கடின இதயம் கொண்டோர் (2:4), (இ) செவிசாய்க்காத செவிகள் கொண்டோர் (2:5). (அ) வன்கண்ணுடையோர்: எபிரேயத்தில் கடினமான அல்லது இறுகிய முகம் கொண்டோர் எனத் தரப்பட்டிருக்கிறது. வன்கண் அல்லது கடுமையான முகம் என்பது நம் முன் இருக்கும் நல்லவற்றை அல்லது நிறைவைப் பார்ப்பதற்குப் பதிலாக, நம் முன் உள்ள கெட்டவற்றையோ அல்லது குறையையோ மட்டும் பார்ப்பது. (ஆ) கடின இதயம் கொண்டோர். இதயத்தின் இயல்பு மென்மையாக இருப்பது, அல்லது வலுவற்று இருப்பது. வலுவற்று இருந்தால்தான் அது இரத்தத்தை சீர் செய்ய விரிந்து, சுருங்க முடியும். வலுவாகிவிட்டால் விரிந்தது சுருங்க முடியாது, சுருங்கியது விரிய முடியாது. ஆக, இயக்கம் இல்லாமல் இருக்கும் இதயமே கடின இதயம். (இ) செவிசாய்க்காத செவிகள்.செவிகளைத் திருப்பி கொண்டவர்கள் என்று எபிரேயம் சொல்கின்றது. ஆக, செவியில் விழாதவாறு பார்த்துக்கொள்வது. அல்லது கீழ்ப்படிய மறுப்பது.

இவ்வாறாக, எசேக்கியேல் உடலில் தைத்த முள்ளாக இருப்பவர்கள் 'வன்கண்ணுடைய,' 'கடின இதயம் கொண்ட,' 'செவிசாய்க்காத செவிகள் கொண்ட' இஸ்ரயேல் மக்கள். இப்படி ஒரு பக்கம் முள் இருந்தாலும் அவரும் மறுபக்கம் கடவுளின் அருளை உணர்கின்றார். எப்படி? 'ஆண்டவர் என்னோடு பேசுகையில் ஆவி என்னுள் புகுந்து என்னை எழுந்து நிற்கச் செய்தது' என்கிறார் எசேக்கியேல். இவ்வாறாக, தனக்குள் உள்ள ஆண்டவரின் ஆவியில் தன் இறைவனின், தன்னை அனுப்பியவரின் அருளைக் கண்டுகொள்கிறார் எசேக்கியேல். ஆக, 'முள்ளும் அருளும்,' 'வலுவின்மையும் மகிழ்ச்சியும்' இணைந்தே இருக்கின்றன எசேக்கியேலின் வாழ்வில்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு தன் சொந்த ஊருக்கு வருகின்றார். இயேசு தம் சொந்த ஊரான நாசரேத்தூரில் புறக்கணிக்கப்படுவதை மத்தேயு (13:53-58), மாற்கு (6:1-6) மற்றும் லூக்கா (4:16-30) என்ற மூன்று ஒத்தமைவு நற்செய்தியாளர்களும் பதிவு செய்கின்றனர். யோவான் இந்த நிகழ்வை பதிவு செய்யவில்லை என்றாலும், 'அவர் தமக்குரியவர்களிடம் வந்தார், அவருக்கு உரியவர்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை' (1:11) என்று இயேசு நிராகரிக்கப்பட்டதை ஒரு இறையியலாகப் பதிவு செய்கின்றார். மாற்கு நற்செய்தியாளரின் பதிவையே இன்றைய நற்செய்தி வாசகமாக வாசிக்கின்றோம்.

நற்செய்தியாளர்களின் பதிவுகளில் மாற்கு நற்செய்தியாளரின் பதிவுதான் ரொம்ப கரடுமுரடாக இருக்கின்றது. மத்தேயு கொஞ்சம் மெருகூட்டி எழுதுகின்றார். லூக்கா இதையே ஒரு இறையியல் நிகழ்வாக்கி இயேசுவை எசாயா போல ஒரு இறைவாக்கினர் எனச் சொல்லிவிடுகின்றார். 'இவர் தச்சன்' என்று மாற்கு சொல்வதை, 'இவர் தச்சனின் மகன்' என்று மத்தேயு சொல்கின்றார். மேலும், 'இயேசுவால் அறிகுறி செய்ய முடியவில்லை!' என்று மாற்கு சொல்ல, மத்தேயுவோ, 'இயேசு அறிகுறி ஒன்றும் செய்யவில்லை!' என்று எழுதுகின்றார். மேலும், இயேசுவின் சகோதரர்கள் பற்றி குறிப்பிலும் வித்தியாசங்கள் இருக்கின்றன. இந்த நிகழ்வு நாசரேத்தூரின் செபக்கூடத்தில் நடக்கின்றது. நாசரேத்தூரில் செபக்கூடம் இருந்ததற்கான தொல்லியல் சான்றுகள் இல்லை. இயேசுவின் உயிர்ப்புக்குப் பின் முதல் கிறிஸ்தவர்கள் செபக்கூடத்திலிருந்து வெளியேற்றப்பட்டதை ஒருவேளை பின்புலமாக மையப்படுத்தி, தலைவராம் இயேசுவே வெளியேற்றப்பட்டார் அல்லது ஒதுக்கப்பட்டார் என நற்செய்தியாளர்கள் பதிவு செய்திருக்கலாம்.

இயேசு தொழுகைக்கூடத்தில் கற்பித்ததைக் கேட்ட அவருடைய சித்தப்பா, பெரியப்பா, மாமா, சித்தி, பெரியம்மா, அத்தை வகையறாக்கள் ஒருசேர மூன்று உணர்வுகளை எழுப்புகின்றனர்: (அ) வியப்பு. (ஆ) தயக்கம். (இ) நம்பிக்கையின்மை.

முதலில் அவர்கள் கொள்ளும் வியப்பு கல்லின்மேல் விழுந்த விதைபோல இருக்கிறது. கல்லின் மேல் விழுந்த விதை சட்டென முளைக்கும். ஆனால் ஒரு நாளில் அது வாடி வதங்கிவிடும். இவர்களின் வியப்பு சட்டென்று தயக்கமாக மாறுகிறது. இந்தத் தயக்கத்தில் அவர்கள் மூன்று கேள்விகளை எழுப்புகின்றனர்: (அ) இவர் தச்சர் அல்லவா? (இயேசுவின் தொழில் - இங்கே 'டெக்னோன்' என்னும் கிரேக்க வார்த்தை 'கைவேலை செய்பவர்' என்ற பொருளையே தருகின்றது). ஆ. மரியாவின் மகன் தானே? (இயேசுவின் பிறப்பு - நாசரேத்தூர்காரர்கள் இயேசுவின் இயற்கைக்கு அப்பாற்பட்ட பிறப்பைப் பற்றி கேட்டிருக்கலாம். ஆகையால்தான், கணவன் துணையில்லாமல் மரியாளுக்குப் பிறந்த 'தவறான' குழந்தை என நையாண்டி செய்கின்றனர்). இ. இவரின் சகோதர, சகோதரிகள் நம்மோடு இல்லையா? (இயேசுவின் உறவினர்கள் - இங்கே சகோதர, சகோதரி என்பது உடன்பிறப்பைக் குறிக்கும் சொல்லாடல் அன்று. 'அதெல்ஃபோஸ்' என்ற கிரேக்கச் சொல்லாடல் நண்பர்கள், உறவினர்கள் என்ற பரந்த பொருளைக் கொண்டது. இதை வைத்து இயேசுவுக்கு நிறைய உடன்பிறந்தவர்கள் இருந்தார்கள் என்று சொல்வது ஏற்புடையது அல்ல.)

இந்தத் தயக்கம் நம்பிக்கையின்மையாக உருவெடுக்கிறது. அவர்களின் நம்பிக்கையின்மையால் இயேசுவால் 'வல்ல செயல் எதையும் அங்கே செய்ய இயலவில்லை' எனப் பதிவு செய்கிறார் மாற்கு. ஆக, நம் நம்பிக்கையின்மை கடவுளின் கைகளையும் கட்டிப்போட்டுவிடும் என்பதற்கு இந்த நிகழ்வு சான்றாக இருக்கிறது.

இங்கே, நாசரேத்தூர் மக்களின் 'வியப்பு,' 'தயக்கம்,' மற்றும் 'நம்பிக்கையின்மை' தன் உடலில் தைத்த முள்ளாக இயேசுவுக்கு இருந்தாலும், அவர் தன் தந்தையின் அருள் தன்னோடு இருப்பதை உணர்ந்ததால் தொடர்ந்து சுற்றிலுமுள்ள ஊர்களுக்குச் சென்று கற்பிக்கின்றார்.

'உடலில் தைத்த முள் போல' உணர்வு பவுலுக்கும், எசேக்கியேலுக்கும், இயேசுவுக்கும் இருந்ததுபோல நமக்கும் இன்று இருக்கிறது. ஆனால், இந்த உணர்வோடு சேர்ந்து கடவுளின் அருளும், அந்த அருள்தரும் மகிழ்வும் முன்னவர்களுக்கு இருந்தது என்பதை நாம் மறுக்க இயலாது.

இந்த இரட்டை உணர்வுகளோடு நம் வாழ்வை நாம் முன்நோக்கி நகர்த்துவது எப்படி? இன்றைய இறைவாக்கு வழிபாடே அதற்கான வழிமுறைகளையும் நமக்குச் சொல்கிறது:

1. இருப்பை உறதி செய்வது

அதாவது, உடலில் தைத்த முள் ஒருபோதும் நம்மை அழித்துவிடாமல் பார்த்துக்கொள்வது. எப்படி? எசேக்கியேல் என்னதான் கிளர்ச்சி செய்யும், கலக வீட்டாருக்கு அனுப்பப்பட்டாலும், அவர்கள் வன்கண்ணுடையோராய், கடின இதயத்தோடு, செவிசாய்க்காதவர்களாக இருந்தாலும், எசேக்கியேல் செய்ய வேண்டியதெல்லாம், 'தங்களிடையே ஓர் இறைவாக்கினர் வந்துள்ளார் என்பதை அவர்கள் அறிந்துகொள்ளச் செய்வது.' அப்படியானால், அவர் ஓர் இறைவாக்கினர் போல வாழவும், பணி செய்யவும், இருப்பை உறுதி செய்யவும் வேண்டும். ஆக, எனக்கு உள்ளே இருக்கும் முள்ளோ, அல்லது எனக்கு வெளியே இருக்கும் தடையோ என் இருப்பை உறுதி செய்யுமாறு நான் அவற்றுக்கு என்னை விற்றுவிடக்கூடாது. ஆக, அவற்றைப் பொருட்படுத்தாமல் நான் என் பணியைச் செய்ய வேண்டும். என் வேலையை வாழ வேண்டும்.

2. அகமகிழ்வது

உள்ளுக்குள்ளே வலி இருக்கும்போது எப்படி மகிழ்ச்சியாக இருக்க முடியும்? எனக் கேட்கலாம். முள் உள்ளே இருப்பது போல அருள் உள்ளே இருப்பதும் நிச்சயம்தானே. அப்படியிருக்க, அந்த அருளை நினைத்து நாம் மகிழ்ச்சி அடையலாமே. தன் தந்தையின் சொத்துக்களை எல்லாம் அழித்த இளைய மகனுக்கு, தான் அந்நிய நாட்டில் பட்ட கஷ்டம் முள்போல குத்தியபோது, தன் தந்தையின் இருப்பை நினைத்துப்பார்த்து பிறந்தகம் புறப்படவில்லையா? முள் குத்திய அதே நேரத்தில்தானே அவன் தன் தந்தையின் பெருந்தன்மையையும் எண்ணிப்பார்த்தான். ஆக, அவன் முள்ளுக்காக வருந்தாமால், தந்தையின் பெருந்தன்மையில் மகிழ்ந்து இல்லம் விரைகிறான். ஆக, நம் மகிழ்வை நம்முள் இருக்கும் கடவுளின் அருளில் கண்டுகொள்வது.

3. முள்ளுக்கும் நன்மை செய்வது

தன் சொந்த ஊரார் தன்னை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதற்தாக இயேசு யாரையும் சபிக்கவில்லை. அவர்கள் அப்படித்தான் என ஏற்றுக்கொள்கிறார். அங்கே உடல்நலமற்றிருந்தவர்களையும் குணமாக்குகிறார். ஆக, 'என்னைப் பார்த்து அவர்கள் வியக்கிறார்கள்! என் போதனையையும், என் அறிவையும் பாராட்டுகிறார்கள்' என்று அவர் குதிக்கவும் இல்லை. 'என்னைப் பற்றி தயக்கம் காட்டுகிறார்கள்' என்று அவர் வாடி வதங்கவும் இல்லை. சங்கு சுட்டாலும் வெண்மை தரும் என்பதுபோல தன் இயல்பை மாற்றிக்கொள்ள மறுக்கின்றார் இயேசு.

முள்ளும் அருளும், வலுவின்மையும் அகமகிழ்வும் இணைந்தே இருக்கும் என்பதுதான் வாழ்வியல் எதார்த்தம். முள்ளோடும் அருளோடும், வலுவின்மையோடும் அகமகிழ்வோடும் இணைந்தே நகரட்டும் நம் நாள்கள்.

'ஐயோ கால்ல முள் குத்திடுச்சு!' என்று யாரோ எங்கோ எழுப்பும் ஒலி இன்றும் நம் காதுகளில் விழத்தான் செய்கின்றன.





No comments:

Post a Comment