Thursday 26 July 2018

பொதுக்காலம் ஆண்டின் 17-ஆம் ஞாயிறு

பொதுக்காலம் ஆண்டின் 17-ஆம் ஞாயிறு

இன்றைய வாசகங்கள் 
2 அரசர். 4:42-44
எபே 4:1-6
யோவா. 6:1-15



தொடக்கம் -அருள்பணி -முனைவர் ம.அருள்

ஒரு வங்கியின் மேலாளர் புகை வண்டிக்காகக் காத்திருந்தார். புகை வண்டி வரத் தாமதமாகவே செய்தித்தாளைப் படித்துக் கொண்டே ஒரு பிஸ்கட் பாக்கெட்டைப் பிரித்துச் சாப்பிட ஆரம்பித்தார். தன் இருக்கைக்கு அருகில் இருந்த சிறுவனும் அந்த பிஸ்கட் பாக்கெட்டில் இருந்து பிஸ்கட்டை எடுத்துச் சாப்பிட ஆரம்பித்தான். இதைப் பார்த்த இந்த வங்கி மேலாளர், இப்படியா குழந்தையை வளர்ப்பார்கள் என்று தனக்குள்ளே சொல்லிக் கொண்டு எரிச்சலோடு கூடிய முகத்தோடு சிறுவனைப் பார்த்து முகம் சுளித்தார். மீண்டும் சிறுவன் பிஸ்கட்டை எடுத்துச் சாப்பிட்டான். இறுதியில் ஒரு பிஸ்கட் மட்டும் இருந்தது. இதையாவது விட்டு வைப்பானா இந்தப் பயல் என்று பார்த்தார் மேலாளர் . ஆனால் அந்த பிஸ்கட்டை இரண்டாக உடைத்துப் பாதியை மேலாளருக்கு கொடுத்தான். நாகரிகம் இல்லாத சிறுவன் என்று முகம் சுளித்தார். ஆனால் புகை வண்டி வந்தவுடன் அவர் ஏறிக்கொண்டார். பையனின் பெற்றோரோ எதிர்நோக்கிச் செல்லும் வண்டிக்காகக் காத்திருந்தனர். வண்டி ஏறியவுடன் பயணச்சீட்டுப் பரிசோதகர் வந்து, பயணச் சீட்டைக் கேட்டவுடன் பையைத் திறந்தார் வங்கி மேலாளர். அப்போதுதான் பார்த்தார், தான் வாங்கிய பிஸ்கட் பாக்கெட் பையில் இருப்பதையும், பையனுடைய பிஸ்கட்டைத்தான் தான் சாப்பிட்டிருக்கிறேன் என்பதையும் அறிந்து வெட்கப்பட்டார். ஒரு சிறுவன் தன் பிஸ்கட் பாக்கெட்டைத் தன்னைச் சாப்பிட அனுமதித்ததும், இறுதியாக இருந்த ஒரு பிஸ்கட்டையும் பாதி பிட்டுக் கொடுத்ததையும் நினைத்து வியந்து போனார். எனக்கோ எவ்வளவோ வாய்ப்பு இருந்தும், மற்றவரோடு பகிராமல் சுயநலமாக உள்ளேனே என்று தன்னைப் பற்றி ஆய்வு செய்ய ஆரம்பித்தார்.

இன்றைய நற்செய்தியைப் பாருங்கள். ஒரு சிறுவனிடம் இருந்த 5 வாற்கோதுமை அப்பமும், இரண்டு மீன்களும் 5000 பேருக்கு மேலாகப் பகிர்ந்தளிக்கப்பட்டு மீதியாக 12 கூடைகளில் எடுக்கப்பட்டதாக வாசிக்கிறோம்.

பழைய ஏற்பாட்டில் பசியாக இருந்த இஸ்ரயேல் மக்களுக்கு மன்னாவைக் கொடுத்து அவர்களின் பசியைப் போக்கினார் இறைவன். ஆனால் புதிய ஏற்பாட்டில் தன்னையே உணவாக கொடுக்கும் முன் 5 அப்பத்தை பலுக வைத்துப் புதுமை செய்து, பகிர்தலே சிறந்தது என்பதைச் செய்து காட்டுகிறார் இயேசு.
கொடுப்பவர்கள் இறைவனின் இதயத்தில் நிரந்தர இதயத்தைப் பிடிப்பவர் ஆவார்கள். புனித லூக்கா (லூக். 21: மாற். 12:41-44) நற்செய்தியிலே வாசிப்பது போல விதவைப் பெண்ணின் காணிக்கையை இயேசு வியந்து பாராட்டிய நிகழ்வே இதற்குச் சான்றாகும். பகிரா மனநிலைக்கு காரணம் என்ன?

சிலர் பகிராமல் இருப்பதற்குக் காரணம், மனித இதயத்தில் ஏற்படும் ஒரு விதமான விரக்தி மனநிலை. அதாவது உலகமே வறுமையால் வாடுகிறது. நான் மட்டும் பகிர்ந்தால் என்ன மாற்றம் நடைபெறப் போகிறது. எனவே பகிர்தலும், பகிராமல் இருப்பதும் ஒன்றுதான் என்ற எண்ணம் பலரை ஆட்டிப்படைக்கிறது. இப்படிப்பட்ட மனநிலையில்தான் அந்திரேயா (யோவா. 6:9) இயேசுவை நோக்கி இத்தகைய கூட்டத்திற்கு 5 அப்பமும், 2 மீன்களும் எந்த மூலைக்குப் பயன்படும் என்று கேட்கிறார்.
அன்பான சகோதரனே! சகோதரியே! உலகத்தின் பசியை நீக்க முடியாவிட்டாலும், ஒரு மனிதனுக்கு, ஒரு குடும்பத்திற்காவது நம்மால் இயன்ற உதவிகளைச் செய்வது மேலானது. இன்றைய உலகில் திருச்சபை என்ற சங்க ஏடு (இ. உல. தி .69) கூறுவது போல, பசியால் மடியும் மனிதனுக்கு உணவளிக்காவிட்டால் நீ அவனைக் கொன்றவனாவாய். எப்போதெல்லாம் நீ தேவைக்கு அதிகமாகச் சேர்த்து வைத்து பிறருக்குக் கொடுக்காமல் பதுக்கி வைக்கிறாயோ, அப்போதெல்லாம் நீ அவர்களை வஞ்சிக்கிறாய். தேவைக்கு உரியதை சேகரிப்பது சேமிப்பு. ஆனால் தேவைக்கு அதிகமாகச் சேகரிப்பது, பிறர் தேவைக்கு உரியதைச் சேமிப்பது என்பது திருட்டு என்கிறார் புனித பேசில்.

எனவேதான் எசாயா நூலில் கூறப்படுவதுபோல பசித்தோருக்கு உங்கள் உணவைப் பகிர்ந்து கொடுப்பதும், தங்க இடமில்லாத வறியோரை உங்கள் இல்லம் அழைத்து வருவதும், உடையற்றவர்களுக்கு உடுத்தக் கொடுப்பதும் அன்றோ நாம் விரும்பும் நோன்பு என்கிறார் ஆண்டவர். கொடுப்பதால், பகிர்வதால் மகிழ்ச்சி பிறக்கிறது. மக்களுக்கு கொடு, உண்ட பின் மீதி இருக்கும் என்பதற்கு இன்றைய விவிலிய நிகழ்ச்சி சான்று பகர்கின்றது.

இல்லாதவர்களோடு இருப்பவர் பகிர்ந்துகொண்டால், இருப்பவர், இல்லாதவர் என்ற நிலை மாறும். இதைத்தான் ஆதிக் கிறிஸ்தவர்கள் செய்து, இல்லாதவர் இருப்பவர் என்ற நிலையை மாற்றினார்கள் (தி.ப. 2:44).
சிந்தனைக்காக

பகிரும் மனநிலை இல்லாமல் போவது பற்றாக்குறையல்ல. ஏனெனில் இறைவன் தேவைக்கு ஏற்ப அனைத்தையும் படைத்துத் தந்துள்ளார். ஆனால் பிறரை நம் உடன்பிறப்பாக, சகோதரனாக, சகோதரியாக காண முடியாத மனநிலைதான்.

இரண்டாவது முன் கூறியதுபோல, வறுமை மிகுந்த இந்த நாட்டிலே எனது சிறிய பகிர்வால் என்ன செய்ய முடியும் என்று விரக்தியில் சுயதிருப்தி செய்து கொள்ளும் நிலை. ஆனால் இறைவன் கொடுத்த கால்கள் கரங்களை இயேசுவுக்குக் கொடுத்தாலே இயேசு மக்களுக்கு உதவி செய்யும் அளவுக்கு உயர்த்துவார்.

நமது உழைப்பையும், பகிரும் மனநிலையையும் கொடுத்தாலே நம் வழியாய் நற்செய்தியைப் பரப்பி ஏராளமான உள்ளங்களைச் சொந்தமாக்கிக் கொள்வார்.
எனவே பகிர்ந்து செயல்பட ஆரம்பிக்கும்போது இறைவனும் நம்மோடு இணைந்து செயல்படத் தொடங்குகிறார் என்பதை உணர்வோம்.




வாழ்வாங்கு வாழுங்கள்  -குடந்தை ஆயர் அந்தோனிசாமி

நடுத்தர வயதுள்ள ஒரு பெண்! அந்தப் பெண்ணைச் சுற்றி அழுகுரல்கள், அணைந்து கிடந்த விளக்குகள்!

அந்தப் பெண் தன்னிடமிருந்த பணத்தையெல்லாம் பயன்படுத்தி ஒரு பழைய கட்டடத்தை வாடகைக்கு எடுத்தார். அது ஏழைக் குழந்தைகளின் பள்ளிக்கூடமாகியது. அந்தக் கட்டடத்தில் அமர எந்த இருக்கையும் இல்லை, எந்த நாற்காலியும் இல்லை, எந்த மேசையும் இல்லை, எந்தக் கரும்பலகையும் இல்லை!

அழுக்குப் படிந்த தரை கரும்பலகையானது!

அந்தப் பெண் ஏழை எளியவர்களை அடிமைப்படுத்தியிருந்த வறுமையோடு போர் தொடுத்தார். என்னால் எது முடியுமோ அதை இந்த மக்களுக்குக் கொடுப்பேன் எனச்சொல்லி, நாளும் பொழுதும் மக்களின் நலனுக்காக உழைத்தார். அந்தப் பெண் வேறு யாருமல்ல! அன்னை தெரசாதான் அவர்!

இன்று எண்பதிற்கும் மேற்பட்ட பள்ளிக்கூடங்களையும் முந்நூற்றுக்கும் மேற்பட்ட நடமாடும் மருந்தகங்களையும் எழுபதுக்கும் மேற்பட்ட இறப்பவர்களைக் கண்காணிக்கும் இல்லங்களையும் முப்பதுக்கும் மேற்பட்ட குழந்தைகளைப் பராமரிக்கும் காப்பகங்களையும் நாற்பதாயிரத்துக்கும் மேற்பட்ட தன்னார்வத் தொண்டர்களையும் கொண்டதாக அன்னை தெரசாவால் நிறுவப்பட்ட துறவற சபை திகழ்கின்றது.

இன்றைய நற்செய்தியிலே வரும் சிறுவனைப் போல, எலிசாவிற்குக் கீழ்ப்படிந்த பணியாளனைப் போல தன்னிடம் இருந்ததை அன்னை தெரசா இயேசுவிடம் கொடுத்தார். இயேசுவோ அன்னை தெரசா கொடுத்ததை பலுகிப்பெருகச் செய்தார்.

1982-இல் திருத்தந்தை புனித இரண்டாம் ஜான்பால் ஸ்காட்லாந்து நாட்டுக்குச் சென்றபோது எடின்பர்க் என்ற நகரிலே இளைஞர்களைப் பார்த்து இவ்வாறு சொன்னார்: நற்செய்தியில் வந்த சிறுவன். அவனிடமிருந்த அனைத்தையும் இயேசுவிடம் கொடுக்க, இயேசு வியத்தகு முறையில் ஐயாயிரம் பேருக்கு உணவளித்தார்:

எல்லாரும் உண்ட பிறகு மீதியிருந்தது. நீங்கள் உங்கள் வாழ்க்கையை இயேசுவிடம் ஒப்படைத்துவிடுங்கள். அவர் உங்களை ஏற்றுக்கொள்வார்; ஆசியளிப்பார். நீங்கள் எதிர்பார்ப்பதைவிட அதிகமாக அவர் உங்கள் வாழ்க்கையைப் பயன்படுத்திக்கொள்வார் என்றார்.

இதோ நமது மனவானிலே வலம் வரும் சில ஆசை மேகங்கள்! 

வயிறார உண்பதற்கு நல்ல உணவு வேண்டும்! 
தெருவோர குழாய்களுக்குச் சுத்தமான தண்ணீர் வேண்டும்!
 எல்லாரும் குடியிருக்க விசாலமான வீடுகள் வேண்டும்! கட்டணமின்றி கற்கின்ற உயர்கல்வி வேண்டும்! 
எதிர்பார்க்காது பழகுகின்ற உயர்ந்த நண்பர்கள் வேண்டும்!
ஆத்திரப்படாத கணவர் வேண்டும்! 
அன்பு செய்யும் மனைவி வேண்டும்! 
நீ சொன்ன ஜோக்கை நினைச்சி சிரிச்சி சிரிச்சி பாதி உயிரு போயிட்டுது என்றார் மாமியார். மருமகளோ, அப்போ இன்னொரு ஜோக் சொல்லவா? என்றாள். இவ்வாறு கேட்காத மருமகள் வேண்டும்! 
என் மருமகள், என் மறு மகள் என்று சொல்லும் மாமியார் வேண்டும்!

இதோ இயேசு பேசுகின்றார் : என்னால் எல்லாம் முடியும் என நம்புங்கள். உங்களுக்குள் வாழும் இறை ஆவியாரை (இரண்டாம் வாசகம்) நோக்கிச் செபியுங்கள் (லூக் 11:9-13). அவர் தரும் நம்பிக்கை என்னும் வரத்தைப் பெற்று (1 கொரி 12:9) வாழ்வாங்கு வாழுங்கள்.

மேலும் அறிவோம்:
ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை 

வைத்திழக்கும் வன்க ணவர் (குறள் 228).

பொருள் : வறியவர்க்கு வேண்டியவற்றைக் கொடுத்து, அவர் மகிழ்வதைக் கண்டு அருளுடையவர் அடையும் இன்பம் பெரிதாகும். அத்தகைய இன்பத்தைப் பற்றித் தெரியாதவரே தாம் சேர்த்த பொருளை ஏழை எளியோருக்கு வழங்காது பிறர் கொண்டு போக இழக்கும் இரக்கம் அற்றவர் ஆவர்!



மறையுரைமொட்டுக்கள் -அருள்பணி  Y .இருதயராஜ்


சில ஆண்டுகளுக்கு முன்பு நான் ஒரு வீட்டிற்குச் சென்றபோது, அங்கிருந்த ஒரு சிறுவனிடம் இரண்டு 'சாக்லட்' கொடுத்து. அதில் ஒன்றை எனக்குத் திருப்பிக் கொடுக்கும்படி கேட்டேன். அவன் கொடுக்க மறுத்து விட்டான். அப்போது அவனுடைய அக்கா, "என் தம்பிக்கு மற்றவர்களிடமிருந்து வாங்கத்தான் தெரியும்; கொடுக்கத் தெரியாது" என்றாள்,
இன்றைய நற்செய்தியில் வருகின்ற சிறுவன் சற்று வித்தியாசமானவன். தன்னிடமிருந்த ஐந்து ஆப்பங்களை இயேசுவிடம் கொடுக்க முன் வருகிறான். அவனுடைய ஐந்து அப்பங்கள்தான் 5000 அப்பங்களாகப் பலுகுகின்றன அந்த ஐந்து அப்பங்கள் இல்லாமலேயே இவோ புதுமை செய்திருக்கலாம். இருப்பினும் நாம் நமக்குள்ளதைப் பிறருடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற அவசியத்தை உணர்த்தவே இயேசு அச்சிறுவனுடைய ஐந்து அப்பங்களைப் பெற்றுக்கொண்டு அவற்றைப் பழகச் செய்கிறார்.

நாம் நமக்குள்ளவற்றைப் பிறருடன் பகிரும்போது அவை குறையாமல் மிகுதியாகும், "கொடுங்கள் உங்களுக்குக் கொடுக்கப்படும் (லூக் 6:38). இன்றைய முதல் வாசகத்தில், இறைவாக்கினர் எலிசேயு 24) அப்பங்களைக் கொண்டு 100 பேருக்கு உணவளித்த பின்னும் நிறைய அப்பங்கள் மீதியிருந்தன, ஏழைக் கைம்பெண் இறைவாக்கினர் எலியாவுக்குப் பஞ்ச காலத்தில் அப்பம் சுட்டுக் கொடுக்கிறாள், பஞ்சம் முடியும்வரை பானையில் மாவும், கலயத்தில் எண்ணெயும் எடுக்க எடுக்க வளர்ந்து கொண்டே இருந்தன {1 அரச 17:10-16), மணிமேகலையின் அமுத சுரபியில் இருந்த உணவும் எடுக்க எடுக்கக் குறையவில்லை .

உலகில் பலர் பட்டினியால் சாவதைக் காணும்போது நமக்குக் கடவுள் மேல் கோபம் வருகிறது. இவ்வுலகில் ஒரு சிலர் பிச்சை எடுத்துத்தான் வாழ வேண்டுமென்று கடவுள் அவர்களைப் படைத்திருந்தால், அக்கடவுளே பிச்சை எடுத்து அழியட்டும் என்று கடவுளையே சபிக்கிறார் வள்ளுவர்,

"இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின்
பரந்துகெடுக உலகு இயற்றியான்"   (குறள் (362)

ஆனால் எல்லா உயிர்களும் உண்ணவேண்டும் என்பதுதான் கடவுளின் விருப்பமேயன்றி, எவரும் வெறும் வயிற்றுடன் படுக்கச் செல்ல வேண்டும் என்பதன்று. "எல்லா உயிரினங்களின் கண்களும் உம்மையே நோக்குகின்றன; தக்க வேளையில் நீரே அவற்றிற்கு உணவளிக்கின்றீர்” (பதிலுரைப்பாடல், திபா 145:15). எனவே, குறை கடவுளிடம் இல்லை ; மனிதரிடத்தில்தான் உள்ளது. பகிர் ந்து பொழவேண்டிய மனிதர் பதுக்கி வாழ்கின்றனர்.

இவ்வுலகச் செல்வங்கள் எல்லாம் எல்லாருக்கும் பொதுவானவை. வறுமையில் வாடுவோருக்கு வளமையில் இருப்பவர் அவசியமானவற்றைக் கொடுக்கக் கடமைப் பட்டுள்ளனர், அவ்வாறு அவர்கள் கொடுக்கவில்லை என்றால், வறுமையுற்றோர் தங்களுக்குத் தேவையானவற்றை மற்றவர்களிடமிருந்து எடுத்துக்கொள்ள உரிமை பெற்றுள்ளனர்; அவ்வாறு எடுப்பது திருடாகாது என்று இரண்டாம் வத்திக்கான சங்கம் கூறியுள்ளது.

"ஒருவர் மிகப்பெரும் இடர் நிலையில் உழன்றால், அவர் மற்றவர்களின் செல்வத்திலிருந்து தமக்குத் தேவையானதை எடுக்கும் இடரிமை பெற்றுள்ளான். பசியால் மடியும் மனிதருக்கு உணவளி; ஏனென்றால் அவர்களுக்கு உணவளிக்காவிட்டால் நீ அவர்களைக் கொண்றவளாவாய்" (இன்றைய உலகில் திருச்சபை, 69)

பிறர்க்கு நாம் உணவனிக்காமல் அவர்கள் இறந்தால், நாம் அவர்களைக் கொலை செய்தவர்கள்! பயங்கரமான கூற்று!

"தனி ஒருவனுககு, உணவு இல்லையெனில், செகத்தினை அழிந்திடுவோம்" பாரதியாரின் ஆவேசம்!

கண்ணகி மதுரையைத் தீயால் எரித்துச் சாம்பல் ஆக்கினாள். இருந்து என்ன தெரிகிறது?" என்று தமிழ் ஆசிரியர் மாணவர்களிடம் கேட்டபோது, அவர்கள், "அக்காலத்தில் தீயணைக்கும் படை  இல்லை என்பது தெரிகிறது என்றார்களாம், அவர்களுக்குக் கண்ணகியின் கற்பின் திறன் பற்றிக கடுகளவும் தெரியவில்லை ,

அவ்வாறே, "இயேசு ஐந்து அப்பங்களைக் கொண்டு ஐந்தாயிரம் பேருக்கு உணவு கொடுத்ததிலிருந்து என்ன தெரிகிறது?" என்று நம்மை யாராவது கேட்கும்போது, "நமக்குள்ளதை நாம் பிறருடன் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பது தெரிகிறது என்று நாம் பதில் சொன்னால், நாம் இப்புதுமையின் இறையியல் உண்மையை உணரத் தவறிவிடுகிறோம்,

இயேசு செய்து, பல்வேறு புதுமைகளில், ஏழே ஏழு புதுமைகளை மட்டும் யோவான் பொறுக்கி எடுத்துத் தனது நற்செய்தியில் எழுதியுள்ளார். மேலும், அவர் இயேசுவின் புதுமைகளை வெறும் புதுமைகளாகக் காணாமல், 'அரும் அடையாளங்களாகக்' காண்கின்றார், அரும் அடையாளம் என்றால், புதுமையைக் கடந்து சென்று, அதனுள் பொதிந்துள்ள ஆழமான இறையியல் உண்மையை உணர்த்தும் சாதனமாகும். அப்படியானால், அப்பம் பலுகுகிற புதுமையில் பொதிந்துள்ள ஆழமான இறையியல் உண்மை என்ன ?

பழைய உடன்படிக்கையில் இஸ்ரயேல் மக்கள் பாலை நிலத்தில் மோசே தலைமையில் 'மன்னா' என்ற அதிசய உணவை உண்டனர். புதிய உடன்படிக்கையில், இயேசு கிறிஸ்து பாலைநிலத்தில் அப்பங்களைப் பலுகச் செய்து மக்களுக்கு உணவளித்ததின் மூலம். அவரே புதிய மோசே, உலகிற்கு வரவிருந்த ஒப்புயர்வற்ற இறைவாக்கினர் என்ற ஆழமான இறையியல் உண்மையை வெளிப்படுத்துகிறார் யோவான்.

மோசே தமது இறுதி உரையில் இஸ்ரயேல் மக்களிடம், 'உன் கடவுளாகிய ஆண்டவர் உன் சகோதரர் நடுவினின்று என்னைப்போல் ஓர் இறைவாக்கினரை ஏற்படுத்துவார். நீ அவருக்குச் செவிகொடு (இச 18:15) என்று கூறினார். மோசேயால் முன்னறிவிக்கப்பட்ட அந்த இறைவாக்கினர்தான் இயேசு கிறிஸ்து இயேசுவின் புதுமையைக் கண்ட மக்களும், "உலகிற்கு வரவிருந்த இறைவாக்கினர் உண்மையில் இவரே" (யோவா 6:14) என்று கூறினார்கள்.

இயேசு கிறிஸ்து பல்வேறு இறைவாக்கினரில் ஒருவரல்ல. மாறாக, உலகிற்கு வரவிருந்த ஒப்புயர்வற்ற இறைவாக்கினர் : இறைவனால் அருள்பொழிவு பெற்ற மெசியா; உலக மீட்பர். இயேசு கிறிஸ்துவே இறைமகனும் மெசியாவும் ஆவார் என்பதை நம்பி, அவர் பெயரால் வாழ்வு பெறவேண்டும் என்பதே யோவான் நற்செய்தியின் ஒரே குறிக்கோளாகும் (யோவா 20:30).

நாமும், இன்றைய நற்செய்தி வாயிலாக, நமக்குள்ளவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற நமது சமுதாயக் கடமையை உணர்வதோடு நிறுத்திக்கொள்ளாமல், இயேசுவே கடவுள் உலகிற்கு அனுப்பிய இறுதி இறைவாக்கினர், கடவுளின் மகன் (எபி 1:1). அவரை நம்பி அவர் பெயரால் முடிவில்லா வாழ்வு பெறவேண்டும் என்ற ஆழமான இறையியல் உண்மையையும் உணர்வோமாக.


எல்லார்க்குள்ளும், எல்லார் வழியாகவும் இறைவன்
அருள்பணி ஏசு கருணாநிதி


உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் நடந்து முடிந்து இப்போதுதான் சூடு ஆறியுள்ளது. போட்டிகள் நடந்து முடிந்த இரண்டு நாள்களில் தினமணி இணையதள வலைப்பூவில் கட்டுரை ஒன்று வந்தது. கட்டுரையின் தலைப்பு, 'வாய்ப்பு நம்மைத் தவறவிட்டால் அது துரதிர்ஷ்டம். வாய்ப்பை நாம் தவறவிட்டால் ... திமிர்.' கட்டுரை குரோஷிய அணியின் முன்னணி வீரர் நிக்கோலா காலிநிக் அவர்களைப் பற்றியது. இவர் குரோஷிய அணியின் மிகச் சிறந்த வீரர். குரோஷிய அணி தனது முதல் ஆட்டத்தில் நைஜீரிய அணியை சந்தித்தது. அந்த ஆட்டத்தில் நிக்கோலா காலிநிக் முதலில் களமிறக்கப்படவில்லை. ஆட்டம் முடிய ஐந்து நிமிடங்களே இருக்கும்போது, குரோஷிய பயிற்சியாளர் நிக்கோலா காலிநிக்கை மாற்று வீரராக களமிறங்கும்படி கேட்டுக்கொண்டார். முதலிலிலேயே தன்னை களமிறக்காமல்போனது தனக்கு நேர்ந்த அவமானமாக நினைத்தார் காலிநிக். அதனால் களமிறங்க மறுத்துவிட்டார். அது ஒழுங்கீனமான செயல். பிரச்சினை அத்தோடு முடியவில்லை. காலிநிக் செய்த இந்த தவறுக்காக அவர் பயிற்சியாளரிடம் 'மன்னிப்பு கேட்க வேண்டும்,' என வலியுறுத்தப்பட்டது. அதற்கும் காலிநிக் உடன்படவில்லை. தொடர்ந்து அவர்மேல ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. அவர் அணியிலிருந்து நீக்கப்பட்டார். அங்கிருந்து புறப்பட்ட காலிநிக் விடுமுறையை அனுபவிக்க சென்றுவிட்டார். குரோஷியாவைப் பொறுத்தவரையில் இந்த உலகக் கோப்பை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில் இந்த நாடு இறுதிப்போட்டிவரை முன்னேறியது. இரண்டாவது இடத்தைப் பிடித்து சாதனை பதித்தது. இதில் பங்கேற்ற வீரர்கள் அனைவரும் வரலாற்றில் தங்கள் பெயரைப் பதிவுசெய்துவிட்டனர். காலிநிக் அந்தப் பட்டியிலில் இல்லை. காலிநிக் இப்படி ஒரு முடிவை எடுக்க முக்கிய காரணமாக இருந்தது அவருடைய ஈகோ. அதனால் விளைந்த கோபம்.

நிற்க.

கால்பந்து விளையாட்டில் இரண்டாம் இடத்தைப் பிடித்;த குரோஷிய அணியின் பயிற்சியாளர் தங்கள் அணியின் வெற்றிக்குக் காரணம் என்று சொன்ன ஒற்றை வார்த்தை இதுதான்: 'சினர்ஜி.' அதாவது, விளையாடிய 11 பேரும் சேர்ந்து விளையாடியதால், அந்த 11 பேருக்கு பக்கபலமாக 5 மாற்று வீரர்களும், அவர்களுக்கு உறுதுணையாக உடன் பயிற்சியாளர்களும், அவர்களுக்கு உறுதுணையாக நாட்டின் தலைவர்களும் இருந்ததால் இந்த வெற்றி உறுதியானது என்கிறார். ஆக, விளையாடிய நபர்கள், மாற்று வீரர்கள், பயிற்சியாளர்கள், நாட்டுத்  தலைவர்கள் என தனித்தனியே பிரித்துப் பார்த்தால் யாருக்கும் ஆற்றல் இல்லை. ஆனால், இவர்கள் எல்லாரும் சேர்ந்து வரும்போது இவர்களின் ஆற்றல் பன்மடங்கு பெருகுகிறது. இதுதான் 'சினர்ஜி' ('ஒருங்கியக்கம்,' 'ஒழுங்கியக்கம்,' 'கூட்டாற்றல்') என்பதன் பொருள். இந்த 'சினர்ஜி' விளையாட்டின் வெற்றிக்கு மட்டுமல்ல. மாறாக, வாழ்வின் வெற்றிக்குமான ஒரு முக்கியமான ஃபார்முலா.

'சினர்ஜி' என்ற இந்த வார்த்தையை தூய பவுல் உரோமையருக்கு எழுதிய திருமடல் 8:28ல் நாம் வாசிக்கின்றோம்: 'மேலும், கடவுளிடம் அன்புகூர்பவர்களோடு, அதாவது அவரது திட்டத்திற்கேற்ப அழைக்கப்பட்டவர்களோடு, அவர்கள் நன்மைக்காகவே ஆவியார் அனைத்திலும் 'ஒருங்கியக்கம்' செய்கிறார் என்பது நமக்குத் தெரியும்.' அதாவது, ஒருவர் கடவுளிடம் அன்புகூர்ந்தால், அவர் கடவுளால் அழைக்கப்பட்டவராக இருந்தால் இந்த பிரபஞ்சமே அவர் நன்மைக்காக செயலாற்றுமாம். அதாவது, எல்லாமே அவருக்கு நன்மையாகவே மாறும். இப்படியாக எல்லாவற்றையும் அவருக்குச் சாதகமாக மாற்றுவது தூய ஆவியார் என்கிறார் பவுல்.

இன்றைய இறைவாக்கு வழிபாட்டின் மையக்கருத்தும், இன்றைய நம் மறையுரைப் பொருளும் இதுவே:

'இறைவனே எல்லார் மூலமாகவும், எல்லாருடைய நன்மைக்காகவும் ஒருங்கியக்கம் செய்கிறார்.'

இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். எபே 4:1-6) கிறிஸ்தவின் உடலில் உள்ள ஒற்றுமை என்ற மையக்கருத்தில் ஒற்றுமை பற்றி அறிவுறுத்தும் பவுல், 'எல்லாருக்கும் கடவுளும் தந்தையுமானவர் ஒருவரே' என்றும், 'அவர் எல்லாருக்கும் மேலானவர், எல்லார் மூலமாகவும் செயலாற்றுபவர், எல்லாருக்குள்ளும் இருப்பவர்' என்றும் சொல்கிறார்.

ஒரு சின்ன உருவகத்தை எடுத்துக்கொள்வோம். என் அலைபேசி அடிக்கிறது. ஒரு புதிய எண் திரையில் மின்னி மறைகிறது. நான் எடுத்து, 'ஹலோ' என்கிறேன். மறுபக்கம் இருப்பவர், 'என் பழைய காலத்து நண்பர்.' அவர் அவருடைய மொபைலில் எண்ணை அழுத்தி, அந்த எண்ணின் இணைப்பு அவருடைய நெட்வொர்க் சென்று, பின் அது என்னுடைய நெட்வொர்க்கில் சர்வர் வழியாக இணைப்பு பெற்று, என் சர்வர் என் சிம்மை தொடர்பு கொண்டு, என் சிம் தன் மொபைலால் சப்போர்ட் செய்யப்பட்டு, ஒலித்து, நான் அழைப்பை ஏற்றுப் பேசுகிறேன். இப்படி பேசும்போது அந்தப் பக்கத்திலிருக்கும் என் நண்பரையும், இந்தப் பக்கத்தில் இருக்கும் என்னையும் இணைப்பது கண்ணுக்கே புலப்படாத ஒரு சர்வர் அல்லது சர்வரின் மென்பொருள். இந்த மென்பொருள் போன்றவர்தான் இறைவன். நம் எல்லாருக்குள்ளும் இருக்கும் அவர், எல்லாரையும் இயக்கி, எல்லார் வழியாகவும் செயலாற்றுகிறார்.

இந்தச் செயல்பாட்டைத்தான் நாம் இன்றைய முதல் (காண். 2 அர 4:42-44) மற்றும் மூன்றாம் (காண். யோவா 6:1-5) வாசகங்களில் பார்க்கின்றோம்.

இன்றைய முதல் வாசகத்தில் எலிசாவின் அரும்செயல் ஒன்றைப் பற்றி வாசிக்கின்றோம். எலிசா வெறும் இருபது கோதுமை அப்பங்களையும், ஒரு கோணிப்பை தானியக் கதிர்களையும் கொண்டு ஏறக்குறைய 100 பேருக்கு உணவளிக்கும் நிகழ்வுதான் இது. நிகழ்வின் தொடக்கத்தில் பசி இருக்கிறது. நிகழ்வின் இறுதியில் நிறைவு இருக்கிறது. இது எப்படி சாத்தியமாயிற்று?

முதலில், பாகால் சாலிசாவைச் சார்ந்த ஒரு மனிதர் இருபது அப்பங்களையும், கோணிப்பை நிறைய தானியக் கதிர்களையும் கொண்டுவருகிறார். கோணிப்பையில் தானியக்கதிர்களை கொஞ்சம்தான் வைக்க முடியும். ஆக, மிகக் குறைவான உணவை அவர் கொண்டுவருகிறார். அவர் கொண்டுவந்தது ஒருவேளை இறைவாக்கினர் எலிசாவுக்கு மட்டுமாக இருக்கலாம். ஆனால் எலிசா அதைத் தனக்கென வைத்துக்கொள்ளாமல் எல்லாருக்கும் பகிர்ந்து கொடுக்கச் சொல்கின்றார். அப்பங்களைக் கொண்டு வந்த அந்த நல்ல மனிதரின் பணியாளுக்கு ஒரு சந்தேகம் வருகிறது: 'இந்த நூறு பேருக்கு இதை நான் எப்படி பரிமாறுவேன்?' என தயக்கத்தோடு எலிசாவைக் கேட்கின்றார். 'இவற்றை இம்மக்களுக்கு உண்ணக்கொடு. ஏனெனில் உண்டபின்னும் மீதி இருக்கும் என்று ஆண்டவர் கூறுகிறார்' என்கிறார். பணியாளரும் பரிமாறுகின்றார். ஆண்டவரது வாக்கின்படி மீதியும் இருந்தது என நிறைவுபெறுகிறது வாசகம்.

மேற்காணும் நிகழ்வில், பசியால் இருந்தவர்கள் நிறைவு பெற காரணமாக இருந்தது யார்?

- அப்பங்கள் கொண்டு வந்த மனிதரா? அல்லது

- அதை மக்களுக்குக் கொடுக்கச் சொன்ன எலிசாவா? அல்லது

- தயக்கம் காட்டிய பணியாளரா? அல்லது

- 'கொடு, இன்னும் மீதி வரும்' என்று சொன்ன ஆண்டவரா?

அல்லது

- இவர்கள் எல்லாருமா?

இவர்கள் எல்லாரும்தான். இந்த எல்லார் வழியாகவும் செயலாற்றியவர் இறைவன். ஆக, 'அப்பம் கொண்டுவந்தவர்,' 'எலிசா,' 'பணியாளர்' என்ற மூன்று நபர்கள் தனித்தனியாக இருந்தாலும், அவர்கள் இணைந்து வரும்போது அவர்களின் ஆற்றலை பன்மடங்கு பெருக்கியவர் ஆண்டவர். ஆக, 'எல்லாருக்கும் மேலான' ஆண்டவர் 'எல்லாருக்குள்ளும்' செயலாற்றி, 'எல்லார் வழியாகவும் செயலாற்றி' எல்லாருடைய பசியையும் நீக்கி, எல்லாருக்கும் நிறைவு தருகின்றார்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு ஐந்து அப்பங்களை ஐயாயிரம் பேருக்குப் பகிர்ந்து வழங்கும் நிகழ்வின் யோவான் நற்செய்தியாளரின் பதிவை வாசிக்கின்றோம். இனி தொடர்ந்து வரும் நான்கு ஞாயிறு நற்செய்திகளும் 'வாழ்வுதரும் உணவு நானே' என்ற இதன் நீட்சியாகவே இருக்கும்.

இந்த நிகழ்வு எப்படி நடந்தேறுகிறது? மக்கள் பெருந்திரளாய் இயேசுவிடம் வருகின்றனர். 'இவர்கள் உண்பதற்கு நாம் எங்கிருந்து உணவு வாங்கலாம்?' எனத் தம் திருத்தூதர் பிலிப்பிடம் கேட்கிறார் இயேசு. தான் செய்யப்போவதை அறிந்திருந்தும் இயேசு அவ்வாறு கேட்டார் என இடையில் கமெண்ட் செய்கிறார் நற்செய்தியாளர். பிலிப்பு பெரிய கணித வாத்தியராக இருக்கிறார். 'இருநூறு தெனாரியத்திற்கு (அதாவது, 200 நாள் சம்பளத்திற்கு) அப்பம் வாங்கினாலும் ஆளுக்கு ஒரு சிறு துண்டும் கிடைக்காதே' என தயக்கம் காட்டுகிறார். அந்நேரம் இயேசுவின் மற்ற சீடர் அந்திரேயா, 'இங்கே சிறுவன் ஒருவன் இருக்கிறான். அவனிடம் ஐந்து வாற்கோதுமை அப்பங்களும் இரண்டு மீன்களும் உள்ளன' என்று கொஞ்சம் இருப்பதை முன்வைத்துவிட்டு, 'இத்தனை பேருக்கு இவை எப்படிப் போதும்?' என பின்வாங்குகின்றார். ஆனால் இயேசு இதைக் கேட்டவுடன், 'மக்களை அமரச்செய்யுங்கள்' எனப் பணிக்கின்றார். தொடர்ந்து சிறுவன் கொண்டுவந்த அப்பங்களை எடுத்து, நன்றி செலுத்தி, அமர்ந்திருந்தோருக்குக் கொடுக்க, மீன்களையும் அவ்வாறே கொடுக்க, அங்க அப்பம் பலுகத் தொடங்குகிறது. இந்தப் புதுமை எப்படி நடந்திருக்கும் என்ற யூகிக்கின்ற இறையியலாளர் ஒருவர் இதை பின்வருமாறு எழுதுகின்றார்: 'இயேசுவின் போதனை கேட்க வந்தவர்களில் சிலர் 'உடையவர்கள்,' பலர் 'இல்லாதவர்கள்.' 'ஒன்றுமில்லாத பலரை' பார்க்கின்ற அந்த சில 'உள்ளவர்கள்' தங்கள் உணவைத் தங்கள் பைகளில் இருந்து எடுக்க மனமில்லாது இருந்தனர். 'நான் உணவை வெளியே எடுத்தால் அதை இல்லாத இவனிடம் பகிர வேண்டுமே. நானும் பசியாகவே இருந்தவிட்டுப் போகிறேன்' என்ற மௌனம் காக்கின்றனர். இந்த மௌனம் இயேசுவின் கொடுத்தலால் உடைபடுகின்றது. சிறுவன் தன் கையில் உள்ளதைக் கொடுக்க, அதை இயேசு மற்றவர்களுக்குக் கொடுக்க, அதைத் தங்களிடம் வாங்கியவர்கள் தங்களோடு உள்ளதையும் இணைத்து மற்றவர்களிடம் கொடுக்க அரங்கேறுகிறது அந்த அற்புதம். பசியால் இருந்தவர்கள் நிறைவு பெறுகின்றனர். ஒன்றும் இல்லா இடத்தில் 12 கூடைகள் அப்பங்களால் நிறைகின்றன.

மேற்காணும் நிகழ்வில், பசி மறைந்து நிறைவு வர காரணமாக இருந்தவர் யார்?

- '200 தெனாரியத்திற்கு வாங்கினாலும் முடியாது' என்று சொன்ன பிலிப்பா? அல்லது

- தன் பிள்ளை பசியாற வேண்டும் என்று 5 அப்பங்களையும், 2 மீன்களையும் கொடுத்தனுப்பிய சிறுவனின் அம்மாவா? அல்லது

- அந்த சிறுவனை அடையாளம் கண்டு இயேசுவிடம் கொணர்ந்த அந்திரேயவா? அல்லது

- தன் ஐந்து அப்பங்களையும், இரண்டு மீன்களையும் இயேசுவிடம் கொடுக்க முன்வந்த அந்தச் சிறுவனா? அல்லது

- அவற்றை வாங்கி கடவுளுக்கு நன்றி செலுத்தி பகிர்ந்து கொடுத்த இயேசுவா? அல்லது

- இயேசுவிடமிருந்து வாங்கி திருத்தூதர்கள், திருத்தூதர்களிடமிருந்து சீடர்கள், சீடர்களிடமிருந்து வாங்கிய மற்றவர்களா?

அல்லது

- இவர்கள் எல்லாருமா?

இவர்கள் எல்லாரும்தான். இந்த எல்லார் வழியாகவும் செயலாற்றியவர் இறைவன். 'பிலிப்பு,' 'சிறுவனின் அம்மா,' 'அந்திரேயா,' 'சிறுவன்,' 'இயேசு,' 'பரிமாறியவர்கள்' என்று நபர்கள் தனித்தனியாக இருந்தாலும், அவர்கள் இணைந்து வரும்போது அவர்களின் ஆற்றலை பன்மடங்கு பெருக்கியவர் ஆண்டவர். ஆக, 'எல்லாருக்கும் மேலான' ஆண்டவர் 'எல்லாருக்குள்ளும்' செயலாற்றி, 'எல்லார் வழியாகவும் செயலாற்றி' எல்லாருடைய பசியையும் நீக்கி, எல்லாருக்கும் நிறைவு தருகின்றார்.

இவ்வாறாக, முதல் வாசகத்திலும், நற்செய்தி வாசகத்திலும் ஆண்டவராம் இறைவனே தன் செயலாற்றுதலால் அனைவரையும் இணைக்கின்றார். இந்த ஒருங்கியக்கம் ஒருவர் மற்றவருக்கு உதவி செய்வதோடல்லாமல், ஒருவர் மற்றவரின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் காரணமாகிவிடுகிறது.

கடவுளின் இந்தச் செயல்பாடு திடீரென்று நடந்துவிடுமா? அல்லது இந்தச் செயல்பாட்டைத் தூண்ட நாம் முன்வர வேண்டுமா? கடவுளின் செயல்பாடு மாயாஜாலம் அல்ல. அவரின் ஒருங்கியக்கம் ஒரு மேஜிக் அல்ல. மாறாக, அது சின்னஞ்சிறியவர்களின், சின்னஞ்சிறு செயல்களின் தொகுப்பாக இருக்கிறது.

எப்படி?

அ. அனைவரும் தத்தம் அழைப்பிற்கேற்ப வாழ வேண்டும்.

ஆ. முழு மனத்தாழ்மையோடும், கனிவோடும், பொறுமையோடும் ஒருவரையொருவர் அன்புடன் தாங்க வேண்டும்.

இ. ஒருமைப்பாட்டைக் காத்துக்கொள்ள முயற்சி செய்ய வேண்டும்.

அ. அழைப்பிற்கேற்ப வாழ்தல்

தன் வாழ்க்கை நிலை தன்னிடம் எதை எதிர்பார்க்கிறதோ, அதை நிறைவு செய்வது. எ.கா. இப்போது என் வாழ்க்கை நிலையில் நான் ஒரு மாணவன் என்றால், அந்த மாணவனுக்குரிய நிலையை நான் சமரசம் செய்யாமல் முழுமையாக வாழ வேண்டும். ஆசிரியர், மருத்துவர், அருள்பணியாளர், துறவி, இல்லத்தரசி என எல்லாருமே. அழைப்பு என்பது நாம் செய்யும் வேலை மட்டுமல்ல. வேலை செய்ய முடியாத குழந்தைகள், வயது முதிர்ந்தவர்கள், உடல்நலமற்றவர்கள் என அனைவருமே தங்களின் இருப்பு நிலைகளில் தங்களின் முழு ஆளுமையை வெளிக்கொணர முடியும்.

ஆ. மனத்தாழ்மை, கனிவு, பொறுமை, அன்பு கொண்டிருத்தல்

கூட்டு வாழ்க்கைக்கு அல்லது கூட்டியக்கத்திற்குத் தேவையானவை இந்த நான்கு குணங்கள்தாம். குரோஷிய அணியின் வீரர் காலிநிக் விளையாட்டிற்குள் நுழைய முடியாமல் அல்லது மற்றவர்களின் கூட்டாற்றலோடு தன் ஆற்றலைச் சேர்க்க முடியாமல்போகக் காரணம் அவரிடம் மேற்காணும் பண்புகளில் ஏதாவது ஒன்று குறைவுபட்டதால்தான். தான் அணியின் எந்த நிலையில் விளையாட அனுமதிக்கப்பட்டாலும் தன் திறன் மேல் தனக்கு உள்ள நம்பிக்கையை மையமாக வைத்துத் தன் திறனை அவர் வெளிக்கொணர்ந்திருக்கலாம். எடுத்துக்காட்டாக, நம் நற்செய்தியில் வரும் பிலிப்பு. '200 தெனாரியத்திற்கு அப்பம் வாங்கினாலும் ஒரு சிறு துண்டு கூட கிடைக்காது' என்று இயேசுவிடம் தயக்கம் காட்டினாலும், தன் கருத்தைச் சொன்னாலும், அந்திரேயா மற்றதொரு கருத்தைச் சொல்லும்போது அதை மறுக்காமல் ஏற்றுக்கொள்கின்றார். தான் செய்ததுதான் சரி என்றும், தன் கருத்து மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படவேண்டும் எனவும் வாதாடவில்லை பிலிப்பு. இதற்குக் காரணம் அவரிடமிருந்த மனத்தாழ்மையும், கனிவும், பொறுமையும், அன்புமே.

இ. ஒருமைப்பாட்டைக் காத்தல்

நாம் கையில் அணிந்திருக்கும் கடிகாரத்தின் இயக்கத்தைக் கவனித்தால் இது நமக்குப் புரியும். சிறிய கைக்கடிகாரத்தைப் பிரித்துப் பார்த்தால் அதனுள் சின்னச் சின்னக் கம்பிகளும், சுருள்கம்பிகளும் இருக்கும். சின்னக் கம்பிதானே. அதில் ஒன்று அறுந்தால் என்ன? என நாம் நினைக்கலாம். ஆனால், சின்னஞ்சிறிய கம்பிகளின் ஒருமைப்பாடுதான் ஒட்டுமொத்த கடிகார இயக்கத்திற்குக் காரணமாக இருக்கிறது. கடிகாரத்தின் பெரிய பகுதிகள் மட்டும்தான் கவனிக்கப்படவேண்டும், சிறிய பகுதிகள் கவனிக்கப்படத் தேவையில்லை என நினைப்பது தவறு. அந்திரேயா கொண்டு வந்த சிறுவனால் என்ன பயன்? அவனிடம் இருக்கும் கொஞ்ச அப்பங்களால் என்ன பயன்? என்று இயேசு சிறுவனை அனுப்பிவிடவில்லை. அந்தச் சிறுவனையே கிரியா ஊக்கியாக்கி பெரிய அரும் அடையாளத்தை நடத்துகிறார் இயேசு. ஏனெனில், இயேசுவுக்குத் தெரியும் - கூட்டத்தின் ஒரு பகுதியான இந்தச் சிறுவனும் முக்கியமானவனே என்று.

இறுதியாக,

இன்று எல்லாருக்கும் மேலான, எல்லார் மூலமாகவும் செயலாற்றுகின்ற, எல்லாருக்குள்ளும் இறைவன், நம் ஒவ்வொருவர் வழியாகவும் செயலாற்றுகின்றார். நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கிறார் என்பதை மனத்தில் இருத்தி, நாம் செய்யும் செயல்கள் அனைத்தும் அவருடைய செயல்களே என எண்ணி, அடுத்தவரின் பசி தீர்க்கும், அடுத்தவருக்கு நிறைவுதரும் செயல்களைச் செய்ய நம் ஆற்றலைக் கூட்டாற்றல் ஆக்கலாமே!


No comments:

Post a Comment