ஆண்டின் பொதுக்காலம்
23-ஆம் ஞாயிறு எசே 33:7-9, உரோ: 13 8-10. மத்: 18 15-20
மறையுரை மொட்டுகள்
அருள்பணி Y இருதயராஜ்
பயங்கரக்
குடிப்பழக்கத்திற்கு அடிமையாகிவிட்ட இளைஞனுடைய அப்பாவிடம் அவர் நண்பர் கேட்டார், "உங்கள் பையன் பயங்கரமாகக் குடிக்கிறானே
அவனைக் கேட்டால் என்னr?" அதற்கு அப்பா கூறினார். "நான் கேட்டால் அவன் கொடுக்கமாட்டான்." மகனைத் திருத்த வேண்டிய அப்பாவே மகனிடம்
மதுபானத்தை எதிர்பார்க்கிறார். இது எப்படி இருக்குது?
பல
தீய பழக்க வழக்கங்களில் ஈடுபட்டிருந்த ஒரு பையனை அனுடைய அப்பா திருந்தவில்லை.
இறுதியில் அவன் சிறையில் அடைக்கப்பட்டான் அப்பா அவனைச் சிறையில் பார்க்கச்
சென்றபோது மகன் அப்பாவிடம் சொன்னது
துள்ளி
திரிகின்ற பருவத்தில் -என்
துடுக்கு
அடக்கி -என்னைப்
பள்ளிக்கு
அனுப்பாத - என்
தந்தையாகிய
பாதகனே
உரிய
காலத்தில் தன்னுடைய தவறுகளைச் கட்டிக்காட்டித் தன்னைத் திருந்தாத தகப்பனை அவனுடைய
மகன் "பாதகனே" என்று அழைத்தான்.
தவறு
செய்கிறவர்களைத் திருத்துவது நம்முடைய கடமை பெற்றோர்கள் பிள்ளைகளையும் நண்பர்கள்
நண்பர்களையும் திருத்த வேண்டும். கூடிக் குடித்து கும்மாளம் அடிப்பதற்காக நட்பு இல்லை. நண்பன்
தவறு செய்யும்போது அவன் தவறுகளைச் சுட்டிக்காட்டித் திருத்துவதற்கே நட்பு உள்ளது
நகுதல்
பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று
இடித்தற்பொருட்டு (குறள் 784)
இவ்வுலகம்
தீயவர்களால் கெடுவதில்லை. தீயவர்களின் தீச்செயல்களைக் கண்டு, கண்டனக் குரல் எழுப்பாமல் இருப்பவர்களால் தான் உலகம் கெடுகிறது.
இன்றைய அருள்வாக்கு வழிபாடு நாம் தீமை செய்பவர்களைத் திருத்த வேண்டும் என்று அறிவுறத்துகிறது. முதல் வாசகத்தில்
கடவுள் இறைவாக்கினர் எசேக்கியேல் வாயிலாகக் கூறுகிறார். தீயவர்களை நாம்
எச்சரித்தும் அவர்கள் தீமையில் செத்தால் அவர்கள் அழிவுக்கு நாம் பொறுப்பாளிகள் அல்ல.
மாறாக தீயவர்களை நாம் எச்சரிக்காமல் அவர்கள் தீமையில் இறந்தால், அவர்களுடைய
அழிவுக்கு நாம் பொறுப்பாளிகள் .
இன்றைய
நற்செய்தியில் கிறிஸ்து நாம் தீமை புரிபவர்களை எவ்வாறு திருத்த வேண்டுமென்று
அறிவுறுத்துகிறார். தவறு இழைப்போரைத் தனிப்பட்ட முறையில் திருத்த வேண்டும் அது
இயலவில்லை என்றால், ஒன்று
அல்லது இரண்டு பேர் முன்னிலையில் அவரைத் திருத்த வேண்டும். அதுவும் நடக்கவில்லை
என்றால், வழக்கைத்
திருச்சபைக்குக் கொண்டுவரவேண்டும் திருச்சபையின் தீர்ப்புக்குக் கட்டுப்படாதவர்
பிற இனத்தவருக்குச் சமம்! திருச்சபைக்குத தீர்ப்பு வழங்கும் அதிகாரம் உண்டு.
அத்தீர்ப்புக்குக் கிறிஸ்தவர்கள் கட்டுப்பட்டவர்கள் என்பதை இன்றைய நற்செய்தியில்
கிறிஸ்து வலியுறுத்துகிறார் கிறிஸ்தவர்களிடையே ஏற்படும் வழக்குகளைச் சிவில்
நீதிமன்றங்களுக்குக் கொண்டு செல்வதை மிகவும் வன்மையாக கண்டிக்கிறார் திருத்தூதர்
பவுல் (1கொரி 6:1-8). மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்க
வேண்டிய திருப்பணியாளர்களும் துறவறத்தாரும் சொத்துரிமைக்காக இன்று நீதிமன்றம்
செல்வது நீதிபதிகளுக்கே அதிர்ச்சியூட்டுகிறது.
இருவர்
ஒரு பொருள்மீது உரிமை பாராட்டி வழக்குமன்றம் செல்வதால் யார் பயனடைகின்றனர்? ஒரு பசுமாட்டின் மீது இருவர் உரிமை
பாராட்டி நீதிமன்றம் செல்கின்றனர். ஒருவர் இது என் மாடு என்றுகூறிப் பசுவின்
கொம்பைப் பிடித்து இழுக்கிறார். மற்றவர் "இது என் மாடு" என்றுகூறிப் பசுவின் வலைப் பிடித்து
இழுக்க நடுவில் வழக்குரைஞர் பசுவின் மடியிலிருந்து பால் கரந்து குடித்துக்
கொண்டிருக்கிறார்!. இருவர் நீதிமன்றத்துக்குப் போவதால் வழக்குரைஞர்களுக்குத் தான்
இலாபம் இது தேவையா? நீங்கள்
உங்கள் எதிரிகளோடு உடன்பாடு செய்யாமல் நீதிமன்றம் சென்றால், நடுவர் சிறையில் உங்களை அடைப்பார்
கடைசிக் காசுவரை திருப்பிச் செலுத்தாமல் அங்கிருந்து வெளியேற மாட்டர்கள்" (மத் 525-26) என்று கிறிஸ்து எச்சரித்துள்ளார் ஒரு
காதலன் தன் காதலிக்கு எழுதிய கடிதத்தில் கொஞ்சம் தலைமுடியை வைத்து அனுப்பினான்.
ஏன்? என்று
கேட்டதற்கு அவன் கூறினான் "என்
காதலி என் கடிதத்தை மொட்டைக் கடிதம் என்று நினைக்கக்கூடாது" என்றான். இன்று திருச்சபையில்
திருப்பணியாளர்கள் கூட ஒருவர் மற்றவருடைய பெயர் களங்கப்படும் விதத்தில் மொட்டைக்
கடிதங்கள் எழுதுகின்றனர்; சுவரொட்டிகளில்
பிறருடைய அந்தரங்க வாழ்வை அம்பலத்திற்குக் கொண்டுவந்து ஆனந்தம் அடைகின்றனர்.
இவர்களுடைய வக்கிரப் புத்தியால் தூய ஆவியாருக்கே மன உளைச்சல் ஏற்பட்டு மருந்துவ
விடுப்பில் சென்று விட்டாராம்!
கிறிஸ்தவர்களிடையே
தலைதூக்கும் பொறமை, மனக்கசப்பு
கட்சி மனப்பான்மை பேய்த்தன்மை வாய்ந்தது என்கிறார் திருத்தூதர் யாக்கோபு (யாக் 3:13-16).
திருச்சபையில் இடறலை உருவாக்கும
அலகையின் கையாட்களின் "கழுத்தில்
எந்திரக் கல்லைக் கட்டித் தொங்கவிட்டு ஆழ்கடலில் அமிழ்த்துவது
அவர்களுக்கு நல்லது" என்கிறார்
ஆண்டவர் (மத் 18:6-7). ஒவ்வொரு
மறைமாவட்டத்திலும் அமைதிக்குழு இருக்க வேண்டும் இக்குழு சமரச முயற்சியில் இடுபட
வேண்டும் இக்குழுவின் நியாமான தீர்ப்புக்குக் கட்டுப்படாதவர்களைத்
திருச்சபையிலிருந்து நீக்கிவிட வேண்டும். எத்தனை சட்டங்கள் இயற்றினாலும் அன்புதான்
உச்சச் சட்டம். இன்றைய இரண்டாம் வாசகத்தில் புனித பவுல் கூறுகிறார் "அன்பே திருச்சட்டத்தின் நிறைவு (உரோ 13:10, பிறரைக் குறை கூறுவதிலும் பிறரை விமர்சனம்
செய்வதிலும் அன்பே முதலிடம் பெற வேண்டும்.
அன்பே
இல்லாத விமர்சனம் தவறு. விமர்சனமே இல்லாத அன்பும் தவறு. அன்போடு கூடிய விமர்சனமே
சரியாகும்!
மனம் ஒத்திருத்தல் - கடமைகளும், உரிமைகளும், தடைகளும்.
அருள்பணி ஏசு கருணாநிதி -மதுரை
சாலையில்
செல்லும் ஆட்டோக்களின் பின்னால் எழுதப்பட்டிருக்கும் வாசகங்களை வாசிப்பதில் எனக்கு
அலாதிப் பிரியம். ஒவ்வொரு மனிதரும் ஒவ்வொரு வகை என்பது போல ஒவ்வொரு ஆட்டோவும் ஒரு
வகை. எந்த இரண்டு ஆட்டோக்களும் ஒன்று போல இருக்க நான் பார்த்ததே இல்லை. ஆட்டோ
வாசகங்களில் சில 'பெண்களின் திருமண வயது 21' என்று நாட்டின் நடைமுறையைச் சொல்வது போலவும், சில 'பிரசவத்திற்கு இலவசம்' என தன் விளம்பரம் செய்வது போலவும் இருக்கும். அண்மையில் என்னை
ஒரு வாசகம் மிகவும் கவர்ந்தது.
அது
இதுதான்: 'நான் பேசும் வார்த்தைகளுக்கு நான்
பொறுப்பு. ஆனால் நீ புரிந்து கொள்ளும் அர்த்தத்திற்கு நான் பொறுப்பு அல்ல.'
தான்
பேசிய வார்த்தைகள் மற்றவரால் அல்லது மற்றவர்களால் புரிந்து கொள்ளப்படாத அல்லது
தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டவரின் உள்ளத்தின் சோகமும், ஏமாற்றமும், விரக்தியும், கோபமும் ஒரு சேர இந்த வாசகத்தில் தெரிந்த. அப்படி இந்த நபர்
என்ன பேசி அடுத்த நபர் இவரின் பேச்சுக்கு வேறு அர்த்தம் கொடுத்தார் என்று
தெரியவில்லை. ஆனால், இவரின் வார்த்தைகள் கற்பனை வார்த்தைகள்
அல்ல. எதார்த்தமான வார்த்தைகள். நாம் அன்றாடம் உரையாடல்களில் பரிமாறப்படும்
வார்த்தைகள் தொடங்கி, கடிதம், புத்தகம், குறுஞ்செய்தி என நாம் பகிர்ந்து கொள்ளும் எல்லா வார்த்தைகளும்
சரியாகப் புரிந்து கொள்ளப்படுகின்றன என்று நம்மால் சொல்ல முடியாது. மெய்யியலில்
மொழி பற்றி படிக்கும்போது சொல்வார்கள். ஒருவரின் வாயிலிருந்து வார்த்தை
புறப்பட்டவுடன் அவருக்கு அந்த வார்த்தையின்மேல் உள்ள உரிமை போய்விடுகிறது. அதைக்
கேட்பவர் எப்படியும் புரிந்து கொள்ளலாம். எந்த அர்த்தமும் அதற்குக் கொடுக்கலாம்.
நம்
வார்த்தைகள் எப்படி மற்றவரால் தவறாகப் புரிந்துகொள்ளப்படுகின்றனவோ, அப்படியே நம்முடைய செயல்களும் மற்றவர்களால் தவறாகப்
புரிந்துகொள்ளப்படலாம். இந்த புரிதல், புரிந்து கொள்ளுதல்
பிரச்சினையை நினைத்துப் பார்க்கின்ற போது சிலருக்கு 'நாம் தனியாகவே இருந்துவிட்டால் எத்துணை நலம்!' என்று தோன்றும். ஐரோப்பாவின் சில நகரங்களில் இந்த வழக்கம்
வந்துவிட்டது. அதாவது, பெயருக்கு மட்டும் நாடு, மொழி, இனம் ஆகிய அடையாளங்களைக்
கொண்டிருப்பர். மற்றபடி மனிதரின் எந்தக் கூட்டமும், குழுவும்
இவர்களைப் பாதிக்காது. 'தன்னலம் என்னும் மதிப்பீடு' (தெ வெர்ச்சு ஆஃப் செல்ஃபிஷ்னெஸ்) என்பதுதான் இவர்களின் தாரக
மந்திரம்.
இன்றைக்கு
நாம் வாழும் உலகம் இப்படிப்பட்ட ஒரு மதிப்பீட்டைத்தான் நம்மேல் புகுத்திக்கொண்டிருக்கின்றது.
யாரும் யாரையும் புரிந்துகொள்ள, யாரும் யாரையும் ஏற்றுக்கொள்ள, யாரும் யாருக்காகவும் வாழத் தயாராக இல்லை. அப்படி செய்வதற்கான
நேரமும் இல்லை. காலையில் தொடங்கும் ஓட்டம் இரவு வரை ஓடிக்கொண்டே இருக்கிறது. இரவு
வீடுகளுக்கு வரும் வேகமாக துணி மாற்றிவிட்டு அவரவருடைய அறையில் அமர்ந்துவிட்டு, சேர்ந்து டிவி பார்த்துக்கொண்டே சாப்பிட்டுவிட்டு மறுபடியம்
நம் அறைகளுக்குள் சென்றுவிடுகிறோம். இது இரவும், பகலும்
போல தினமும் தொடர்கிறது.
இந்தப்
பின்புலத்தில் 'மனம் ஒத்திருத்தல்' அல்லது 'மனம் ஒத்து வாழ்வது' பற்றி இன்றைய இறைவாக்கு வழிபாடு அறிவுறுத்துகிறது.
எதற்காக
மனம் ஒத்து வாழ வேண்டும்? எதற்காக நான் அடுத்தவருடன் பேச
வேண்டும்? எனக்கு ஏன் அடுத்தவர் தேவை? அடுத்தவர் என்ன நினைத்தால் எனக்கென்ன? - இப்படி நீங்கள் கேட்பவராக இருந்தால் இந்த ஞாயிறு
திருப்பலிக்குச் செல்ல வேண்டாம். சமூக அல்லது கூட்டு வாழ்க்கை தேவை என்று சிந்தனை
அளவிலாவது - செயல்வடிவம் இல்லாவிட்டாலும் - ஏற்றுக்கொண்ட ஒருவரால்தான் இன்றைய
இறைவாக்கு வழிபாட்டைப் புரிந்துகொள்ள முடியும்.
இன்றைய
நற்செய்தி வாசகத்திலிருந்து (காண். மத் 18:15-20) தொடங்குவோம். இன்றைய நற்செய்தியின்
வார்த்தைகளை இயேசு சொல்லியிருப்பதற்கான வாய்ப்பே இல்லை. அதற்கு முக்கியக் காரணம், இன்றைய நற்செய்திப் பகுதியில் வரும் 'எக்ளேசியா' (மத் 18:17) (திருச்சபை) என்ற
வார்த்தை. 'திருச்சபை' என்ற வார்த்தை நம்பிக்கை கொண்டவர்களைக் குறிக்க எறக்குறைய 60
முதல் 80 ஆம் ஆண்டுகளில்தாம் பயன்படுத்தப்படுகிறது. ஆக, மத்தேயு நற்செய்தியாளரின் திருச்சபையில் உள்ள ஒரு
பிரச்சினையைப் பின்புலமாக வைத்து நற்செய்தியாளர் இயேசுவே இந்த அறிவுரையைச்
சொல்வதாக எழுதுகிறார். மேலும் இந்த இறைவார்த்தைப் பகுதி மற்ற நற்செய்தி நூல்களில்
(மாற்கு, லூக்கா, யோவான்)
இல்லை.
மத்தேயு
நற்செய்தியாளரின் திருச்சபை சேர்ந்து வரத் தொடங்கியபோது அவர்களுக்குள் சில
மனத்தாங்கல்கள், புரிந்துகொள்ளாமை, அல்லது தவறான புரிந்துகொள்ளுதல் இருக்கின்றது. இதை சரி செய்ய
மத்தேயு நற்செய்தியாளர் எடுக்கும் ஆயுதம்தான் இயேசுவின் அறிவுரை. அதாவது, இன்றைக்கு இருக்கிற நீட் பிரச்சினையை சரி செய்ய காமராஜரும், காந்தியும் அன்றே யோசனை சொல்வதாக சில வாட்ஸ்ஆப் வீடியோக்கள்
வருகின்றனவே அதைப் போல. இப்போது இருக்கின்ற பிரச்சினை ஒன்றிற்கான தீர்வை ஏற்கனே
இருந்த தலைவர் சொல்லது போல எழுதுவது. விவிலியத்தில் இதற்கு 'ரெட்ரோஜெக்சன்' (பின்னோக்கிப் புகுத்துதல்)
என்று பொருள். இந்த இலக்கிய உத்தியைத்தான் மத்தேயு நற்செய்தியாளர்
பயன்படுத்துகின்றார்.
இன்றைய
நற்செய்தியை 'மனம் ஒத்திருத்தல்' என்ற வார்த்தையை மையமாக வைத்து இரண்டு உள்பகுதிகளாகப்
பிரிக்கலாம்:
அ.
மனம் ஒத்திருத்தலின் கடமைகள் (18:15-17)
ஆ.
மனம் ஒத்திருத்தலின் உரிமைகள் (18:18-20)
அ.
மனம் ஒத்திருத்தலின் கடமைகள்
'மனம் ஒத்திருத்தல்' என்பதை கிரேக்கத்தில் 'சிம்ஃபொனேயோ' என்று வாசிக்கின்றோம். இதிலிருந்துதான் 'சிம்ஃப்ஃபனி' என்ற ஆங்கில வார்த்தை
வருகின்றது. 'ஒருங்கியக்கம்' அல்லது 'ஒருங்கமைவு' என்று மொழிபெயர்க்கலாம். ஒலிகள் இணைந்து சென்றால் அது
சிம்ஃப்ஃபனி. அந்த ஒலிகள் இஷ்டத்திற்குச் சென்றால் அது இரைச்சல். அதுபோலவே மனித
மனங்கள் இணைந்து சென்றால் அது 'ஒத்திருத்தல்' அல்லது சிம்ஃப்ஃபனி. இஷ்டத்திற்குச் சென்றால் அது இரைச்சல்
தவிர வேறொன்றும் இல்லை.
'மனம் ஒத்திருத்தல்' என்பது தேவையா அல்லது தேவையில்லையா என்று விவாதம் செய்யாமல், 'மனம் ஒத்திருத்தல்' சமூகத்திற்கும், திருச்சபைக்கும் அவசியம் என்பதை ஒரு அடிப்படையாக
எடுத்துக்கொள்கின்றார் மத்தேயு. இப்படி மனம் ஒத்திருக்கும் சமூகத்தில் நபர்
அ-வுக்கும், நபர் ஆ-வுக்கும் இடையில் பிளவு
வருகிறது. இந்தப் பிளவிற்குக் காரணம் நபர் 'ஆ' செய்த குற்றம். கிரேக்கத்தில் 'ஹமார்த்தியா' ('பாவம்') என்று கொடுக்கப்பட்டுள்ளது.
எந்தப் பாவம் அல்லது எவ்வளவு கனமான பாவம் என்பது கொடுக்கப்படவில்லை. 'அ'வையும், 'ஆ'வையும் பிரிக்கும் அளவிற்குக் கனமான பாவம்தான்.
இப்படி
பிரிந்து நிற்கும் 'அ'
மற்றும் 'ஆ' மனம் ஒத்திருக்க என்ன செய்ய
வேண்டும்?
மூன்று
படிகளாக பிரச்சினையைத் தீர்க்கின்றார் மத்தேயு:
முதலில், ஒன் டு ஒன். நேருக்கு நேராக 'அ'வும், 'ஆ'வும் சந்திக்க வேண்டும். 'அ' 'ஆ' செய்த குற்றத்தை
எடுத்துக்காட்ட வேண்டும். அல்லது சுட்டிக்காட்ட வேண்டும். அல்லது திருத்த
வேண்டும். 'சரிப்பா. நான் செய்தது தவறுதான்' என 'ஆ' 'ஸாரி' கேட்டுவிட்டால் மேட்டர் ஓவர்.
அப்படி இல்லைன்னா இரண்டாவது படி.
இரண்டாவதாக, ஒன்றிரண்டு பேரைக் கூட்டிக்கொண்டு 'ஆ'விடம் செல்ல வேண்டும். ஆனால் 'ஆ' ரொம்ப பிடிவாதமா இருந்தால்
அடுத்த படி.
மூன்றாவதாக, திருச்சபையிடம் சொல்ல வேண்டும். அதாவது கூடி வரும் சபை. அந்த
சபைக்கும் செவிசாய்க்காவிட்டால், 'ஆ'வை அப்படியே கழற்றிவிட்டுவிட வேண்டும்.
இங்க
கவனிக்க வேண்டியது என்னவென்றால், 'திருச்சபை என்பது ஒரு உடல்.
அங்கே ஒரு உறுப்பு துன்புற்றால், மற்ற உறுப்பும் துன்புறுகிறது' என்ற சிந்தனை மேலோங்கி இருக்கிறது. ஆகையால்தான், ஒருவருக்கும் மற்றவருக்கும் இருக்கின்ற பிரச்சினை அவர்களின்
தனிப்பட்ட பிரச்சினையாகப் பார்க்கப்படாமல் திருச்சபையின் பிரச்சினையாகப்
பார்க்கப்படுகிறது. ஆனா இன்னைக்கு இத மாதிரி ட்ரீட்மென்ட் கொடுத்தால், 'நீ ரொம்ப யோக்கியமா?' என ஒருவர் மற்றவரைக்
கேட்டுக்கொண்டு இன்னும் பிரச்சினை பெரிதாகிவிடும்.
மத்தேயுவின்
திருச்சபையைப் பொறுத்தவரை, திருச்சபையின் ஒவ்வொரு
உறுப்பினரும் மிக முக்கியமானவர். ஆக, ஒவ்வொருவரும் அடுத்தவரோடு மனம்
ஒத்திருக்க வேண்டும். பிரிந்திருப்பவர்கள் ஒப்புரவாக வேண்டும்.
ஆக, மனம் ஒத்திருத்தலின் முதல் கடமை என்னவென்றால் 'குற்றம் கடிதல்.' இதையே இன்றைய முதல்
வாசகத்திலும் (காண். எசே 33:7-9) பார்க்கின்றோம். இஸ்ரயேல் வீட்டாருக்குக்
காவலாளியாக, பொறுப்பாளனாக எசேக்கியேல் இறைவாக்கினரை
ஏற்படுத்திய கடவுள் இறைவாக்குரைக்குமாறு அவரை அவர்களிடம் அனுப்புகின்றார்.
இறைவாக்கினர் என்ன செய்ய வேண்டும்? 'தீமை செய்தவர்களிடம் தீமையைச்
சுட்டிக்காட்ட வேண்டும்.' இப்படிச் சுட்டிக்காட்டி
குற்றங்கடியும் போது அவர்கள் திருந்துவர். அப்படி இவர் தீமையைச்
சுட்டிக்காட்டவில்லை என்றால் தீமை இவர்மேலேயே விழும்.
அடுத்தவரிடம்
இருக்கும் நன்மையைச் சுட்டிக்காட்டிவிடலாம். சில நேரங்களில் இது கடினமாகத்தான்
இருக்கும். ஆனால் அடுத்தவரிடம் இருக்கும் தீமையை அல்லது குற்றத்தைச்
சுட்டிக்காட்டுவது ரொம்ப கடினம். குறிப்பாக நமக்கு நெருக்கமானவர்களிடம் அவர்களின்
குற்றத்தை எடுத்துரைப்பது இன்னும் அதிகக் கடினம். 'உறவு
கசந்துவிடுமோ?' 'அவர் என்னைப் பற்றி என்ன நினைப்பாரோ?' என்று நாம் சில நேரங்களில் நினைத்து குற்றங்கடிய
மறுக்கின்றோம். குற்றத்தைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுகிறோம். இப்படிச்
சுட்டிக்காட்டாமல் இருப்பதும் குற்றம் என எசேக்கியேல் இறைவாக்கினரைக் கடிந்துகொள்கின்றார்
கடவுள்.
மனம்
ஒத்திருத்தலின் இரண்டாவது கடமை அன்பு செய்வது. இதை இன்றைய இரண்டாம் வாசகத்தில்
(காண். உரோ 13:8-10) வாசிக்கின்றோம். தன் அறிவுரைப்பகுதியைத் தொடர்கின்ற பவுல்
அன்பின் முக்கியத்துவத்தை எடுத்தியம்புகின்றார்: 'நீங்கள்
யாருக்கும் எதிலும் கடன்படாதீர்கள். ஒருவருக்கொருவர் அன்பு செலுத்துவதே நீங்கள்
செலுத்த வேண்டிய ஒரே கடனாய் இருக்கட்டும்.' அதாவது, நான் மற்றவரிடமிருந்து பெறுகின்ற அன்பை வட்டியும், முதலுமாக மற்றவரிடம் செலுத்திவிட வேண்டும். அன்பை எனக்கென
வைத்துக்கொள்ளக் கூடாது. இப்படிப்பட்ட அன்பு 'அடுத்தவருக்குத்
தீங்கிழைக்காது' எனவும் சொல்கின்றார் பவுல்.
இப்படிப்பட்ட அன்பு இருக்கும் இடத்தில், 'விபசாரம், கொலை, களவு, கவர்தல்' போன்றவை இருக்காது என்பது
பவுலின் வாதம்.
இவ்வாறாக, நாம் மனம் ஒத்திருக்க இரண்டு கடமைகள் அவசியம்:
1.
குற்றங்கடிதல்
2. அன்பு செய்தல்
2. அன்பு செய்தல்
ஆ.
மனம் ஒத்திருத்தலின் உரிமைகள்
திருச்சபையில்
உள்ள அங்கத்தினர்கள் மனம் ஒத்திருத்தலால் இரண்டு நன்மைகளைப் பெறுகின்றனர்:
ஒன்று, தாங்கள் விரும்பியதைக் கடவுளிடமிருந்து பெற்றுக்கொள்கின்றனர். 'உங்களுள் இருவர் மண்ணுலகில் தாங்கள் வேண்டும் எதைக் குறித்தும்
மனமொத்திருந்தால் விண்ணுலகில் இருக்கும் என் தந்தை அதை அவர்களுக்கு அருள்வார்' (18:19) என்று இயேசு சொல்வதாகப் பதிவு செய்கிறார் மத்தேயு.
அதாவது, இங்கே தனிமனித நன்மை அல்ல. மாறாக, குழுவின் நன்மையே முதன்மைப்படுத்தப்படுகிறது.
இரண்டு, கடவுளின் பிரசன்னம் திருச்சபையின் நடுவில் வரும்: 'ஏனெனில் இரண்டு அல்லது மூன்று பேர் என் பெயரின் பொருட்டு எங்கே
ஒன்றாகக் கூடியிருக்கின்றார்களோ அங்கே அவர்களிடையே நான் இருக்கிறேன் என உறுதியாக
உங்களுக்குச் சொல்கிறேன்' (18:20) என்கிறார் இயேசு.
இயேசுவின் இதே வார்த்தைகளைச் சொல்லி நாம் பல இடங்களில், நேரங்களில் செபிக்கின்றோம். 'கூடி
வருதல்' என்பது மிகவும் சாதாரண வார்த்தையாக
இங்கே தெரிகிறது. ஆனால் இது சாதாரண வார்த்தை அல்ல. சினிமா அரங்கிலோ, சாலையிலோ, பேருந்து நிறுத்தத்திலோ மக்கள்
கூடி வருதல் அல்ல இது. இத்தகைய கூடுகைகளில் உடல்கள்தாம் நெருக்கமாக இருக்கின்றனவே
தவிர, உள்ளங்கள் அல்ல. மாறாக, இயேசு குறிப்பிடும் கூடுகை உள்ளங்களின் கூடுகை. ஆக, கடவுளின் பிரசன்னம் ஆள்சார்ந்த பிரசன்னம் என்ற நிலை சற்று மாறி, 'ஆள்கள்' சார்ந்த அல்லது 'மனம் ஒத்திருக்கும் ஆள்கள்'
சார்ந்த
பிரசன்னமாக மாறுகிறது. அப்படியென்றால் கடவுளின் பிரசன்னம் இம்மண்ணில் வர எனக்கு
அடுத்திருப்பவருடன் மனம் ஒத்திருப்பது அவசியமாகிறது.
இவ்வாறாக, நாம் மனம் ஒத்திருக்கும்போது நாம் பெறும் நன்மைகள் அல்லது
உரிமைகள் இரண்டு:
1.
கடவுளிடமிருந்து நம் கொடைகளைப் பெறுகிறோம்
2.
கடவுளை நம் நடுவில் பிரசன்னமாக்குகிறோம்
இறுதியாக,
மனம்
ஒத்திருத்தலுக்கு தடையான இரண்டு காரணிகளை இன்றைய பதிலுரைப்பாடல் (திபா 95) அழகாக
பதிவு செய்கிறது:
1.
அவரது குரலுக்குச் செவிகொடுத்தல் - அடுத்தவரின் குரலுக்குச் செவிகொடுக்கத் தயாராக
இருக்கும் ஒருவரால்தான் அடுத்தவரோடு மனம் ஒத்திருக்க முடியும். அப்படி இல்லாமல், ஒருவருக்குத் தனது குரல் மட்டுமே கேட்டுக்கொண்டிருந்தால்
அவரால் அடுத்தவரோடு ஒத்துப்போக முடியாது. இதுதான் இஸ்ரயேல் மக்களுக்கு நடந்தது.
பாலைநிலத்தில் வழியெங்கும் அவர்கள் தங்களின் குரலுக்குச் செவிகொடுத்தார்களே அன்றி
கடவுளின் குரலுக்குச் செவிகொடுக்கவே இல்லை.
2.
இதயத்தைக் கடினப்படுத்திக்கொள்ளாதிருத்தல் - 'கனிந்த உங்கள் உள்ளம் எல்லா
மனிதருக்கும் தெரிந்திருக்கட்டும்' என்கிறார் பவுல். கனிவுக்கு
எதிர்ப்பதமே கடினப்படுத்திக்கொள்ளுதல். நம் இதயம் கடினம் ஆகும்போது இரத்தம் அங்கே
உள்ளே நுழைய முடிவதில்லை. உருவகமாகச் சொன்னால் உறவுகள் அங்கே நுழைய முடிவதில்லை.
இரத்தம் நுழையாத இதயம் இறந்த இதயமாக இருக்கிறது.
இவ்வாறாக, மனம் ஒத்திருத்தலுக்கான தடைகளை அகற்றி, அதற்கான கடமைகளைச் செய்து,
உரிமைகளை
அனுபவிக்க இன்று நம்மை அழைக்கிறது இன்றைய இறைவாக்கு வழிபாடு.
அன்போடும் அக்கறையோடும் திருத்துகின்ற சமூகம்
மறையுரை வழங்குபவர் Fr. Freddy is a Redemptorist priest belonging to the Province of Bangalore. Currently he is attached to the Archdiocese of St. Louis, Missouri state, U.S.A.
முன்னுரை:
ஒரு
சிறிய கிராமத்திலிருந்த ஆலயத்தில் ஞாயிறு திருப்பலியின் போது குருவுக்கு
உதவிசெய்து கொண்டிருந்த ஒரு பீடச்சிறுவன், தன் கையிலிருந்த திராட்சை இரசக்
குவளையை தவறுதலாகக் கீழே போட்டுவிட்டான். அவன் கன்னத்தில் பலமாக அறைந்த
அந்த குரு, "பீடத்தைவிட்டு உடனே வெளியே போ; இனி ஒருபோதும் திரும்பி வராதே"
என்று உரத்த குரலில் கண்டிப்பாக கூறினார். பல ஆண்டுகளுக்குப் பின்னர்
யுகோஸ்லோவியாவில் கம்யூனிஸ புரட்சி தலைவரான டிட்டோ (Tito) தான் அந்தச்
சிறுவன். இரண்டாம் உலகப் போர் நடைபெற்றபோது, யுகோஸ்லோவியாவில் கொரில்லா
தாக்குதலுக்கு தலைமையேற்று நடத்திய டிட்டோ, பின்னாளில் அந்த நாட்டின்
ஜனாதிபதியாகப் பொறுப்பேற்று, கம்யூனிஸக் கொள்கைகளை வலுவாக
செயல்படுத்தினார். வேறொரு நாட்டில் ஒரு பெருநகரத்திலிருந்த பேராலயத்தில்,
ஒரு ஆயர் நிறைவேற்றிய ஞாயிறு திருப்பலியில் உதவியாக இருந்த மற்றொரு
பீடச்சிறுவன், இதேபோல தவறுதலாக இரசக் குவளையை கீழே போட்டுவிட்டான். அந்தச்
சிறுவனை கனிவான இளமுறுவலோடு நோக்கிய ஆயர், "ஒருநாள் நீயும் ஒரு குருவாக
ஆவாய்" என்று மெல்லிய குரலில் கூறினார். இந்தச் சிறுவன் யாரென்று
உங்களுக்குத் தெரியுமா? அவர்தான் பின்னாளில் பேராயரான ஃபுல்டன் ஷீன்.
இருவேறு நபர்கள், ஒரே மாதிரியான தவறு - ஆனால், அவர்களுக்கு கிடைத்ததோ
வெவ்வேறு விதமான திருத்தும் நடவடிக்கைகள். விசுவாச வாழ்வினின்று
விரட்டியடிக்கச் செய்கின்ற கோபத்துடன் கூடிய தண்டனையை ஒருவர் பெற்றார்.
கடவுளுக்கும், சமூகத்திற்கும் தனது அர்ப்பணத்தை ஆழமாக்குகின்ற வகையில்,
அன்புடன் கூடிய திருத்தத்தை மற்றொருவர் அடைந்தார். இதுவே "அக்கறையோடு
வழிநடத்துதல்", "அன்புடன் திருத்துதல்" ஆகும்.
இறைவார்த்தை:
அக்கறையோடு திருத்தி வழிநடத்துவதில் சமூகத்தின் பங்களிப்பைக் குறித்து
இன்றைய நற்செய்தி வாசகம் எடுத்துரைக்கின்றது. சமூகத்தின் அங்கமான ஒருவரை
"அக்கறையோடு திருத்தி வழிநடத்துவது" அந்தச் சமூகத்தின் முக்கியமான கடமை
என்று எடுத்துக் காட்டுகின்ற இன்றைய நற்செய்தி வாசகம், அதற்கான வழிமுறைகளை
முன்மொழிகின்றது.
1. குறிப்பிட்ட குற்றங்களில் பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள்: ஒருவர்
மீது ஒரு குறிப்பிட்ட குற்றம் சுமத்தப்படும் போது, அவ்வாறு குற்றம்
சுமத்தப்பட்ட நபரோடு தனிப்பட்ட சந்திப்பு ஒன்றை நடத்த முனைவதே, ஒரு சமூகம்
செய்யவேண்டிய முதற்கட்ட செயல்பாடு ஆகும். "பாலைவெளியில், தன்னுடைய
சகோதரர்கள் தன்னை ஒரு வணிகக் குழுவினருக்கு அடிமையாக விற்றது தவறு" என்பதை
யோசேப்பு சுட்டிக் காட்டுவதை தொடக்க நூலில் வாசிக்கிறோம். ஆனால், தனது
பணியாளர்கள் அனைவரையும் வெளியேற்றிவிட்டு, தன் சகோதரர்களோடு அவர் தனிமையில்
இருக்கின்ற நேரத்தில் தான் அவர்களுடைய தவறை யோசேப்பு சுட்டிக் காட்டினார்
(தொடக்க நூல் 45: 1-5) என்பது குறிப்பிடத்தக்கது.
அக்கறையோடு திருத்துவதற்கு தனிப்பட்ட முறையில் இவ்வாறு எடுக்கப்படுகின்ற
முயற்சி வெற்றிபெறாத நிலையில், சமூகத்திலிருக்கின்ற இரண்டு அல்லது மூன்று
பேரோடு சேர்ந்த கூட்டு முயற்சி தேவைப்படுகிறது. இரண்டு அல்லது மூன்று
சாட்சிகளுக்கான அவசியம், மறைநூலின் திருச்சட்டங்களில் காணக்கிடக்கின்றது.
"ஒருவனது எந்தக் குற்றத்தையும் எந்தப் பழிபாவச்செயலையும் உறுதி செய்ய, ஒரே
சாட்சியின் வாக்குமூலம் போதாது. இரண்டு அல்லது மூன்று சாட்சிகளின்
வாக்குமூலத்தாலே அது உறுதிசெய்யப்பட வேண்டும்" (இணைச்சட்டம் 19:15). இதனை
அடிப்படையாகக் கொண்டுதான், "தனியாக தீர்ப்பிடாதே; ஏனெனில், கடவுளைத் தவிர
வேறு எவரும் தனியாக தீர்ப்பிட முடியாது" என்று யூத மதகுருக்கள்
சொல்லிவந்தார்கள்.
மேற்கண்ட முயற்சிகள் எதுவும் பலன் தராத நிலையில், "திருச்சபை" போன்ற
பொதுநிலையினருக்கு வெளிப்படுத்துவதும், குற்றம் சுமத்தப்பட்டவரை
சமூகத்திலிருந்து ஒதுக்கிவைப்பதும், “அக்கறையோடு திருத்துவதற்கான
வழிமுறை”களில் இறுதி கட்ட செயல்களாகும். இது, கும்ரான் (Qumran)
மலைப்பகுதிகளில் வாழ்ந்தவர்கள் பின்பற்றிவந்த மிகத் தீவிரமான ஒரு நடவடிக்கை
ஆகும்.
2. அக்கறையோடு திருத்துவதற்கான அதிகாரமும், அதற்கான அறிக்கையும்:
குற்றம் இழைக்கின்ற உறுப்பினரை தடை செய்வதற்கும், அனுமதிப்பதற்குமான
அதிகாரம் சமூகத்திடம் இருக்கின்றது. "ஒருவரை தடை செய்வது" என்று சமூகம்
முடிவெடுக்கும் போது, கடவுள் அந்த சமூகத்தின் வழியாக செயலாற்றுகிறார்.
அதுபோலவே, "ஒருவரை அனுமதிப்பது" என்று சமூகம் முடிவெடுக்கும் போதும்,
கடவுள் அந்த சமூகத்தின் வழியாக செயலாற்றுகிறார்.
3. அக்கறையோடு திருத்தி வழிநடத்துவதில் ஜெபத்தின் முக்கியத்துவம்:
ஒருவரை அக்கறையோடு திருத்திட சமூகம் முடிவு செய்வதற்கு முன்னதாக,
திருத்தப்பட வேண்டிய அந்த நபருக்காக சமூகத்தினர் அனைவரும் ஒன்றிணைந்து
ஜெபிக்க வேண்டியது அவசியமாகிறது. "இரண்டு அல்லது மூன்று பேர் என் பெயரின்
பொருட்டு எங்கே ஒன்றாகக் கூடியிருக்கின்றார்களோ அங்கே அவர்களிடையே நான்
இருக்கிறேன்' என்று இன்றைய நற்செய்தியில் இயேசு கூறுவதை போல, குற்றம்
சுமத்தப்பட்டவரைக் குறித்து ஆய்ந்தறிவதற்காக சமூகத்தினர் ஒன்று கூடும்போது,
கடவுள் அவர்கள் நடுவே இருக்கிறார். குற்றம் இழைத்தவருக்காக சமூகத்தினர்
எல்லோரும் ஒன்றிணைந்து ஜெபித்திட முன்வராமல், "அக்கறையோடு திருத்துவதற்காக"
எடுக்கப்படுகின்ற எந்த நடவடிக்கையும் பலன் தராது. ஜெபத்தில் ஒன்றிணைந்த
சமூகம் எடுக்கின்ற முடிவுகளை, இறைத்தந்தையும் ஆசீர்வதித்து அனுமதிக்கிறார்.
குற்றம்
இழைத்த தனது உறுப்பினரை, அன்பாலும், ஜெபத்தாலும் அக்கறையோடு திருத்தி
வழிநடத்துவதில் முனைப்பாக இருக்கின்ற திருச்சபை என்னும் இறைசமூகத்தைக்
குறித்தே இன்றைய நற்செய்தி எடுத்துச் சொல்லுகிறது.
பயன்பாடு:
"ஒரு
குழந்தையை வளர்த்தெடுப்பது, ஒரு ஊரின் செயல்பாடு" என்னும் முதுமொழி,
கிறிஸ்துவ திருமறையைப் பொருத்த மட்டில் உண்மையென்றே தெரிகிறது. முன்னர்
ஒருவர் கூறியது போல, கிறிஸ்தவ வாழ்வு என்பது ஒரு "சமூக செயல்திட்டம்"
ஆகும். இது ஒரு தனிப்பட்ட முறையிலான பக்தி முயற்சியல்ல. Facebook, Airbnb,
Lyft, Twitter, Wikipedia, Wikileaks, Quirky, Kickstarter - இவை போன்ற
பற்பல அமைப்புகளை நாம் பார்க்கிறோம். இவற்றிற்கெல்லாம் சமூகமே அடித்தளமாக,
மையமாக இருக்கின்றது. தான் சார்ந்திருக்கின்ற சமூகத்தில் தான், ஒருவர்
தன்னுடைய வேர் போன்ற ஆதாரப் பிடிப்பை காண்கிறார். ஒருவரை அக்கறையோடு
திருத்தி வழிநடத்துவதற்கான பொறுப்பு, அந்த சமூகத்திற்கு இருக்கிறது.
மறைநூலில் பலரும் தங்களுடைய பழைய நிலையிலிருந்து திருந்துவதையே
விரும்புகிறார்கள் என்பதை நாம் பார்க்கிறோம். "நீதிமான் என்னைக் கனிவோடு
தண்டிக்கட்டும்; அது என் தலைக்கு எண்;ணெய்போல் ஆகும்" (திருப்பாடல் 141:5)
என்று திருப்பாடல் ஆசிரியர் எழுதுகிறார். "திருத்துவது" என்பது, ஞானிகளுடைய
செயல். "இகழ்வாரைக் கடிந்து கொள்ளாதே; அவர்கள் உன்னைப் பகைப்பார்கள்.
ஞானிகளை நீ கடிந்து கொண்டால், அவர்கள் உன்னிடம் அன்புகொள்வர்". என்று
நீதிமொழிகள் (9:8) நூல் சொல்லுகிறது.
ஒழுங்குபடுத்துவதும், அறிவுரை செய்வதும் குழந்தை வளர்ப்பில் ஒருங்கிணைந்த
கடமைகளாகும். நீதிமொழிகள் நூலில், "பிரம்பைக் கையாளாதவர் தம் மகனை
நேசிக்காதவர்; மகனை நேசிப்பவரோ அவனைத் தண்டிக்கத் தயங்கமாட்டார்" (13:24)
என்றும், "மகன் திருந்துவான் என்கிற நம்பிக்கை இருக்கும்போதே அவனைக்
கண்டித்துத் திருத்து; இல்லாவிடில், அவன் கெட்டழிந்து போவதற்கு நீ
காரணமாயிருப்பாய்” (19:18) என்றும் நாம் வாசிக்கிறோம். "நம்முடையக்
குழந்தைகள் தவறாக நடந்து கொள்ளும்போது நாம் அவர்களை கண்டிக்கக்கூடாது.
அவ்வாறு கண்டிக்கப்படும் போது, அவர்களுடைய ஆளுமைத்தன்மைகள் நசுக்கப்பட்டு,
அவர்களின் சுய மரியாதையும் சேதப்படுத்தப்படுகிறது" என்று டாக்டர் பெஞ்சமின்
ஸ்போக் (Dr.Benjamin Spock) கூறினார். வல்லுனரான ஒருவருக்கு தான் பேசுவது
என்ன என்பது நன்றாகத் தெரியும் என்பதால், அவர் சொல்லுவதற்கெல்லாம் நாமும்
"சரி" என்று சொன்னோம். "நமது குழந்தைகளுக்கு மனசாட்சியே இல்லையா?", நல்லது
எது, தீயது எது என்று அவர்களுக்கு ஏன் தெரியவில்லை?,
அறிமுகமில்லாதவர்களையும், தங்கள் வகுப்பில் உடன் படிப்பவர்களையும்,
தங்களையும் கூட கொன்றொழித்துக் கொள்வதற்கு அவர்கள் சங்கடப்படுவதில்லையே,
ஏன்?" என்று இப்போது நம்மை நாமே கேட்டுக் கொள்கிறோம். கடவுள் தேவையில்லை
என்று தூக்கி எறிந்துவிட்டு, "உலகம் நரகமாகிக் கொண்டிருப்பது ஏன்?" என்று
வியப்படைகிறோம்.
சமூகத்தில் ஒரு உறுப்பினர் என்னதான் செய்திருந்தாலும், அன்பு, மன்னிப்பு,
ஒப்புரவு இவையே அக்கறையோடு திருத்தி வழிநடத்துதலின் நோக்கமாகும். இதைத்
தான், "முதியோரிடம் கடுமையாய் இராதே. அவர்களைத் தந்தையராக மதித்து ஊக்குவி.
இளைஞர்களைத் தம்பிகளாகவும், வயது முதிர்ந்த பெண்களை அன்னையராகவும், இளம்
பெண்களைத் தூய்மை நிறைந்த மனத்தோடு தங்கையராகவும் கருதி அறிவுரை கூறு"
என்று திமொத்தேயுவுக்கு எழுதிய முதல் திருமுகத்தில் (5:1,2) திருத்தூதர்
புனித பவுல் கூறுகிறார். இவை எல்லாவற்றையும் விட மிகவும் முக்கியமான ஒன்று:
திருத்தப்பட வேண்டியது நானாக இருந்தால், எந்த வகையில் திருத்தப்பட
வேண்டுமென்று நான் விரும்புகிறேன்?
ஒரு
சமூகமாக இருக்கின்ற நமக்கு, அதிலுள்ள ஒரு உறுப்பினரை அக்கறையோடு திருத்தி
வழிநடத்துவதற்கான கடமை உள்ளது. இந்தக் கடமையைப் புறக்கணிப்பது, ஒருவருடைய
எதிர்காலத்தை புறக்கணிப்பதற்கு ஒப்பாகும். இதைத் தான் புனித யாக்கோபு தனது
திருமுகத்தில் (5:19, 20) "என் சகோதர சகோதரிகளே, உங்களுள் ஒருவர் உண்மையை
விட்டு நெறிதவறி அலையும்போது, வேறொருவர் அவரை மனந்திரும்பச் செய்தால்,
தவறான நெறியிலிருந்து மனந்திருப்புகிறவர் அவரை அழிவிலிருந்து மீட்பார்
என்பதையும் திரளான பாவங்களைப் போக்குவார் என்பதையும் தெரிந்துகொள்ளுங்கள்"
என்று கூறுகிறார்.
முடிவுரை:
"நீங்கள் மற்றவர்களுக்காக என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? என்பதே
வாழ்க்கையில் மிகவும் அவசரமாக தொடர்ந்து கேட்கப்படுகின்ற கேள்வி" என்று
மார்ட்டின் லூதர் கிங் (Martin Luther King Jr.) கூறினார். ஆபேல்
இறந்ததற்கு பிறகு, யாவே கடவுள் காயினிடம் கேட்டக் கேள்வி, "உன் சகோதரன்
எங்கே?" என்பதே.
இறைவனின் திருப்பீடத்தின் முன்னே நாம் நிற்கின்ற வேளையில், இயேசு நம்மைப் பார்த்துக் கேட்கின்றக் கேள்வியும் இதுதான்: "உன் சகோதரன் எங்கே? உன் சகோதரி எங்கே?"
No comments:
Post a Comment