Monday, 25 February 2019

ஆண்டின் பொதுக்காலம் எட்டாம் ஞாயிறு.

ஆண்டின் பொதுக்காலம் எட்டாம் ஞாயிறு.



இன்றைய வாசகங்கள்


சீராக் ஞானம் 27:4-7
1 கொரிந்தியர் 15:54-58
லூக்கா 6:39-45





தன்னிடம் உள்ள தவறை ஏற்றுக்கொள்ளாமல் அடுத்தவர் மீது குற்றம் சுமத்துவது என்பது மனிதனுக்கு கை வந்த கலையாகிவிட்டது. ஒருவன் டிக்கெட் வாங்காமல் ரயிலில் பயணம் செய்கிறான். அவனிடம் எப்படி வந்தாய்...? என்று கேட்டால் அவன் திருட்டு ரயிலில் வந்தேன் என்கிறான். திருட்டுத்தனம் செய்வது இவன்... அந்த ரயில் திருட்டு ரயிலாம். அதற்குக் கெட்ட பெயர். ஒருவன் ரூபாய் நோட்டு அடிக்கிறான். ஆனால் அந்த நோட்டுக்குப் பெயர் கள்ளநோட்டு. சட்ட விரோதமாக சாராயம் காய்ச்சுவதும், விற்பதும் இவன்... ஆனால் அதற்குப் பெயர் கள்ளச் சாராயம். தான் செய்த தவற்றை ஏற்றுக்கொள்ளாமல் அடுத்தவர் மீது குற்றம் சுமத்துகிறவர்கள் இன்றைக்கு அதிகம் பேர். உன் கண்ணில் உள்ள விட்டத்தைக் கவனியாது உன் சகோதரன் கண்ணிலிருக்கும் துரும்பை பார்ப்பதேன் (நற்செய்தி)

புதிதாகக் கட்டிய மதில் சுவரின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. ஏன்? இந்த சுவரை இடித்தாய்....? என்று வேலைக்காரனிடம் கேட்டார் வீட்டின் உரிமையாளர். அதற்கு அவன் என் மீது எந்த தவறும் இல்லை . சுவரும் உறுதியாக இல்லை , அதை கட்டிய கொத்தனார்தான் காரணம் என்றான். கொத்தனாரைக் கேட்டால், கலவை போட்டுக் கொடுத்தவன் கலவையில் அதிகமாகத் தண்ணீர் ஊற்றிவிட்டான் என்றான். கலவைப் போட்டவனை கேட்டால், அந்தக் குடத்தின் வாய் அகலமாக இருந்தது. லேசாக சாய்த்தேன். தண்ணீர் அதிகமாகக் கொட்டிவிட்டது. குடத்தை தயாரித்தவன்தான் காரணம் என்றான். இப்படி தங்கள் தவற்றை ஏற்க மறுத்து அடுத்தவர் மீது குற்றம் சுமத்துவதைப் பார்க்கிறோம். இன்றைய நற்செய்தியும் இதே கருத்தை வலியுறுத்துகிறது.

மனிதனுடைய வார்த்தைகள் தான் மனதிலுள்ள எண்ணங்களை வெளிப்படுத்துகின்றன (முதல் வாசகம்) நல்லவன் நல்லவற்றையே, தீயவன் தீயவற்றையே தனதாக்கிக் கொள்கிறான். மனிதனுடைய வார்த்தைக்கும் செயலுக்கும் பிறப்பிடம் அவன் உள்ளமே. உள்ளம் நல்லதாக இருப்பின் சொல்லும் செயலும் நல்லவையாக இருக்கும். பிறர் உங்களுக்கு என்ன செய்ய வேண்டுமென்று விரும்புகிறீர்களோ, அப்படியே நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள் (லூக். 6:31). கெட்ட கனி தரும் நல்ல மரமுமில்லை . நல்ல கனி தரும் கெட்ட மரமும் இல்லை. ஒவ்வொரு மரத்தையும் அறிவது அதன் கனியாலே. ஏனெனில் முட்செடியில் அத்திப்பழம் பறிப்பாருமில்லை. நெருஞ்சியில் திராட்சைக் குலை கொய்வாருமில்லை (லூக். 6:43 - 46). தனது நிலையை அறியாமல் அடுத்தவர்களைக் குறைகூறும் மனிதர்கள் ஒரு விதத்தில் மனநோயாளிகள் எனலாம். தன்னையே முழுவதும் அறிவதுதான் வாழ்க்கையின் முதற்படி. தன்னை முழுமையாகப் புரிந்தவன் பிறரையும் புரிந்து கொள்வான். ஒருவன் தன்னையே நன்கு புரிந்துகொண்டால்தான் நிறை , குறைகளோடு மற்றவர்களை ஏற்றுக்கொள்ள முடியும். தான் செய்யும் தவறுகளை ஏற்றுக்கொண்டு கிறிஸ்தவ வாழ்க்கை வாழ்பவன்தான் பிறருக்கு வழிகாட்ட முடியும். இருளைப் பழிப்பதைவிட ஒளியேற்றுவதே மேல் என்பதை உணர வேண்டும்.

ஒரு முதியவர் தூங்கிக் கொண்டிருந்தபோது அவரது பேரப்பிள்ளைகள் அழுகிய முட்டையை உடைத்து அவரின் மீசையில் தடவி விட்டார்கள். தூக்கம் கலைந்து, எழுந்திருந்த தாத்தாவுக்கு ஏதோ துர்நாற்றம் அடிக்கிறது. இங்கு என்ன போட்டு வைத்திருக்கிறீர்கள் என்று வீட்டில் உள்ளவர்களைத் திட்டிவிட்டு மாடிக்குச் சென்றார். மணக்க மணக்க உணவு வகைகளுக்கு மத்தியில் இவருக்கு மட்டும் நாற்றம் அடித்தது. தாத்தா தன் மீசையில் இருந்து வரும் நாற்றத்தை உணராமல், கண்டு பிடிக்காமல் மற்றவர்களை குறை சொல்கிறார். முட்டையின் நாற்றம் எப்படி அவரை மற்ற வாசனைகளை அனுபவிக்க அனுமதிக்க வில்லையோ, அதேபோல்தான் சில விஷயங்களைப் பற்றி நாம் கொண்டிருக்கும் தவறான கருத்துக்கள் மற்ற நல்ல காரியங்களைப் பரிசீலிக்கக்கூட நம்மை அனுமதிப்பதில்லை. இதை இன்றைய நற்செய்தி வாசகத்தின் வழியாக நன்கு அறிந்து கொள்ளலாம். நாம் எந்தெந்த விதத்தில் சரியாகச் செயல்படுகிறோம். எந்தெந்த விதத்தில் தப்பித்துக் கொள்ள மற்றவர்கள் மீது குற்றம் சுமத்துகிறோம் என்று சிந்திப்போம். பல சமயங்களில் மற்றவர்களைப் பற்றி குறை சொல்லி, குற்றவாளியாக்குவதில் இருக்கும் ஆர்வம், நிறைவு காணும் பண்புகளில் இருப்பதில்லை. மிகப்பெரிய தவறுகள் செய்பவன், சிறிய தவறு செய்தவனை மிகப்பெரிய குற்றவாளியாக்குவது மிகப்பெரிய தவறாகும் என்பதை உணர்வோம். மற்றவர்களிடம் குறைகளைக் காண்பதை தவித்து, நிறைகளைக் காணும் நல்ல இதயத்தை இறைவன் நமக்குத் தர வேண்டும் என செபிப்போம்.

சிந்தனைக்கு:


நொண்டி நொண்டி நடந்தவனைப் பார்த்து மனதுருகிப்போன அவனது நண்பன் எனக்கும் இப்படித்தான் இருந்தது. நான் மொட்டை அடித்துக் கொண்டேன். கால் சரியாகிவிட்டது என்றான். அப்படியே இவனும் மொட்டை அடித்துக்கொண்டான். கால் சரியாகவில்லை. அன்னதானம் செய்தும் பணத்தை அள்ளி இறைத்தும், பத்தியங்கள் மேற்கொண்டும் சரியாகவில்லை. இறுதியில் தன்னைத்தானே ஆராய்ந்துப் பார்த்ததில் தன் செருப்பில் குத்திக் கொண்டிருந்த ஆணியே தன்னை நொண்டியாக நடக்க வைத்தது என்று கண்டுபிடித்தான். அந்த ஆணியைப் பிடுங்கி எறிந்த பிறகு நன்றாக நடந்தான். தன்னிடம் இருக்கும் தவற்றை அறியாது வாழ்ந்துக் கொண்டிருக்கும் மனிதர்கள் இன்று அதிகம்.

முதலில் நாம் திருந்துவோம்; பிறகு மற்றவர்கள் திருந்த அறிவுரைகள் சொல்வோம், வழி காட்டுவோம்.




குறையில்லாத மனிதரில்லை
இன்றைய நற்செய்தியின் வழியாக இயேசு மற்றவர்களின் குறைகளை நாம் சுட்டிக்காட்டி அவர்களைக் குறைவாகப் பேசக்கூடாது என்கின்றார்.

ஓர் இளைஞனும், ஓர் இளம் பெண்ணும் ஒருவரையொருவர் சந்தித்தனர். அவனுக்கு வயது 35 இருக்கும்; அவளுக்கு வயது 30 இருக்கும். அது ஓர் இரயில் பயணம். இருவருக்குமிடையே உரையாடல் தொடங்கியது. அவன் அவளைப் பார்த்து, உனக்குத் திருமணம் ஆகிவிட்டதா? என்று கேட்டான். அவள், இல்லை என்றாள். அவன், எனக்கும் திருமணம் ஆகவில்லை என்றான்.

அவள் அவனைப் பார்த்து, எப்படிப்பட்ட பெண்ணை நீ திருமணம் செய்துகொள்ள விரும்புகின்றாய்? என்று கேட்டாள். அதற்கு அந்த இளைஞன், நான் திருமணம் செய்துகொள்ள விரும்பும் பெண் அழகாக இருக்க வேண்டும், அன்பு உள்ளம் கொண்டவளாக இருக்க வேண்டும், பொய் சொல்லாதவளாக, திருடாதவளாக, புறணி பேசாதவளாக, கோபப்படாதவளாக, பத்துக்கட்டளைகளைத் தவறாது பின்பற்றுபவளாக, ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக் காண்பவளாக இருக்கவேண்டும் என்றான். அப்போது அந்த இளைஞன், நீ எப்படிபட்ட இளைஞனை திருமணம் செய்துகொள்ள விரும்புகின்றாய்? எனக் கேட்டான்.

அதற்கு அந்தப் பெண், என்னை மணம் முடிக்க விரும்புகின்றவன் அழகாக இருக்க வேண்டும், அன்பு நடமாடும் கலைக்கோயிலாக இருக்கவேண்டும், பொய் சொல்லக்கூடாது, திருடக்கூடாது, என்னை எப்போதும் மதிப்போடும் மரியாதையோடும் நடத்தவேண்டும், பத்துக்கட்டளைக்களுக்கு எதிராக ஒருபோதும் செயல்படக்கூடாது என்றாள்.

அதற்கு அந்த இளைஞன், எனக்கும் திருமணம் நடக்கப் போவதில்லை. உனக்கும் திருமணம் நடக்கப் போவதில்லை என்றான்.

அந்த இளைஞன் சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை. குறையில்லாத மனிதர் இந்த உலகத்தில் கிடையாது. குறையில்லாத மனிதரைத் தேடுவது, முள்ளில்லாத மீனைத் தேடுவதற்குச் சமம்.

இதனால்தான் இயேசு, மனிதர்களின் குறைகளைப் பார்க்க வேண்டாம். அதைப்பற்றி பேச வேண்டாம் என்கின்றார்.

இன்றைய முதல் வாசகத்தில் சீராக்கின் ஞான நூல் நாம் பேசுவதற்கு முன்னால் நம்மையே நாம் சோதித்துப் பார்க்க வேண்டும் எனக் கூறுகின்றது. நாம் எப்போதுமே மற்றவர்களிடம் உள்ள நிறைவைக் கண்டு அவர்களின் ஈடேற்றத்திற்காக உழைக்க வேண்டும். மோசேயினுள் இறைவன் சுதந்தரத் தாகத்தைக் கண்டது போல, இயேசு மகதலா மரியாவுக்குள் ஒரு நற்செய்தியாளரைக் கண்டது போல நாம் எவ்வளவுக்கு எவ்வளவு மற்றவர்களின் நிறைவைப் பாராட்டுகின்றோமோ, அவ்வளவுக்கவ்வளவு அவர்கள் குறைகள் குறைய, மறைய வாய்ப்பு உண்டு.

மேலும் அறிவோம் :

தன் குற்றம் நீக்கிப் பிறர்குற்றம் காண்கிற்பின்
என் குற்றம் ஆகும் இறைக்கு (குறள்: 436).

பொருள் : முதலில் தன் குறையை அறிந்து அதனைப் போக்கிக்கொண்டு, பிறகு பிறர் குறையைக் காணும் வல்லமை வாய்ந்த ஆட்சியாளர்க்கு எந்தக் குறையும் வராது!

 

ஓர் அம்மா தனது 10 வயது மகனிடம் 30 ரூபாய் கொடுத்து சல்லடை வாங்கி வரும்படி கேட்டார். அவன் கடைக்குச் சென்று சல்லடை வாங்காமல் வெறுங்கையுடன் திரும்பினான். "சல்லடை எங்கடா?" என்று அம்மா கேட்டதற்கு அவன், "போமா! அது எல்லாம் பொத்தலாக இருக்கின்றது” என்றான். அம்மா தனது மகனின் மரமண்டையை கண்டு அழுவதா? சிரிப்பதா? என்று தெரியமல் மௌனியாக நின்றார்.

இன்றைய முதல் வாசகம் கூறுகிறது: "சல்லடையில் சலிக்கின்ற போது உமி தங்கிவிடுவதுபோல, மனிதரின் பேச்சில் மாசு படிந்து விடுகிறது. மரத்தின் கனி மரத்தின் தன்மையை வெளிப்படுத்துவது போல, மனிதரின் சொல் உள்ளத்தில் உள்ளதைக் காட்டுகிறது" (சீஞா 27:4-7). இன்றைய நற்செய்தியில் கிறிஸ்து கூறுகிறார்: " ஒரு மரத்தை அதன் கனிகொண்டே அறிய முடியும், அவ்வாறே ஒருவரின் பேச்சைக் கொண்டே அவர் எத்தகையவர் என்பதை அறிய முடியும். ஏனெனில் உள்ளத்தின் நிறைவையே வாய் பேசும்" (லூக் 6:43-45).

பயனில்லாத சொற்களைப் பேசுபவரை மனிதரில் பதர் என்று முத்திரை குத்துகிறார் ஐயன் திருவள்ளுவர்.

பயன் இல் சொல்பாராட்டுவானை மகன் எனல்
மக்கள் பதடி எனல்   (குறள் 196)


இரண்டு பேருடைய நாக்கு மட்டும் அவர்கள் இறந்த பின்னும் அழியாமல் இருந்தது என்று திருச்சபை வரலாறு கூறுகிறது. ஒருவரின் நாக்கு அதிகம் பேசியதற்காக அழியாமல் பாதுகாக்கப்பட்டது. மற்றவரின் நாக்கோ அவர் ஒன்றுமே பேசாமல் மௌனம் காத்தமைக்காக அழியாமல் பாதுகாக்கப்பட்டது.

புனித பதுவை அந்தோணியார் கி.பி. 1231- ஆம் ஆண்டு இறந்தார். அடுத்த ஆண்டு அவரது கல்லறையைத் திறந்தபோது, அவரது உடல் முழுவதும் அழிந்துபோன நிலையில், அவரது நாவு மட்டும் அழியாமல் இருந்தது. அதைக்கண்ட புனித பொனவெந்தூரா என்பவர், ”கடவுளைப் புகழ்ந்த நாவைக் கடவுள் அழியாமல் பாதுகாத்தார் " என்றார்.

ஐரோப்பாவில் பொகேமியா நாட்டு அரசன் வென்செஸ்லாசின் மனைவி சோபியா என்பவர். அவரின் ஆன்ம குரு ஜான் நெபோமுக். அவரிடம் அரசன் தன் மனைவி சோபியாவின் பாவ அறிக்கையை வெளியிடுமாறு கேட்க, அவர் மௌனம் காத்தார். அதற்காக அவர் கொல்லப்பட்டார். 1383-ஆம் ஆண்டு அவர் அடக்கம் செய்யப்பட்டார். 330 ஆண்டுகளுக்குப்பின் அவரது கல்லறை திறக்கப்பட்டது. அப்போது அவரது நாக்கு அழியாமல் இருந்தது. 1729-ஆம் ஆண்டு திருத்தந்தை 13-ஆம் பெனடிக்ட் அவருக்குப் புனிதர் பட்டம் கொடுத்தார். பாவசங்கீர்த்தன் இரகசியத்தை வெளியிடாமல் மெளனம் காத்தமைக்காக அவரது நாவு அழிவுறாமல் பாதுகாக்கப்பட்டது.

நாம் பேச வேண்டிய நேரத்தில் பேச வேண்டும், பேசக் கூடாத நேரத்தில் மௌனம் காக்க வேண்டும் என்பதற்கு இந்த இரண்டு புனிதர்களும் எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றனர்.

கிறிஸ்து பேச வேண்டிய நேரத்தில் பேசினார், அதிகாரத்துடன் பேசினார். அவருடைய பேச்சில் விளங்கிய ஞானத்தைக் கண்டு மக்கள் மலைத்துப் போயினர் (மத் 7:28). ஆனால் பாடுகளின் நேரத்தில், அவர் மீது அவரது பகைவர்கள் அடுக்கடுக்காய் குற்றங்களைச் சுமத்தியபோது அவர் மெளனம் காத்தார். அதைக் கண்ட ஆளுநர் பிலாத்து வியப்படைந்தார் (மத் 27:4), “நானோ செவிடர் போல் காது. கேளாமலும் ஊமைபோல் வாய் திறவாமலும் இருக்கிறேன்" (தி பா 38:13) என்ற திருப்பாவுக்கு இலக்கணம் ஆனார்.

நாம் அடிக்கடி பிறருடைய குற்றங்களை மிகைப்படுத்தி அவர்களைக் கடுமையாக விமர்சனம் செய்கின்றோம், அவ்வாறு செய்வதற்கு நமக்கு உரிமையில்லை என்கிறார். இன்றைய நற்செய்தியில் கிறிஸ்து. ஏனெனில் நம்மிடத்தில் கணக்கற்ற குற்றங்கள் உள்ளன. முதலில் நம் கண்ணில் உள்ள மரக்கட்டயை எடுத்துவிட்டு அதன்பின் மற்றவர் கண்ணில் இருக்கும் துரும்பை எடுக்க முன்வரவேண்டும் (லூக் 6:41-42). முதலில் தன்னுடைய குற்றங்களை நீக்கிவிட்டு, அதன்பின் பிறருடைய குற்றங்களைக் களைய முற்பட்டால், ஒரு தலைவனுக்கு எந்தக் குற்றமுமில்லை என்கிறார் ஐயன் திருவள்ளுவர்,

தன் குற்றம் நீக்கிப் பிறர்குற்றம் காண்கிற்பின்
என் குற்றமாகும் இறைக்கு? | (குறள் 4:36)


வழக்கமாக, தலைவர்கள் தமக்கடியில் உள்ளவர்களுடைய குற்றங்களைச் சுட்டிக்காட்டுவர். தங்களிடத்திலும் அதே குற்றங்கள் இருப்பதை அவர்கள் உணர்வதில்லை. பிறருடைய குற்றங்கள் உடைத்தெறியப்பட வேண்டிய கண்ணாடி அல்ல, நமது குற்றங்களைப் பிரதிபலிக்கும் கண்ணாடியாகும்.

ஒருவர் தனது மகளுக்குத் திருமணம் செய்து அவரைத் தன் மருமகனிடம் ஒப்படைத்து, "மாப்பிள்ளை என் மகளுக்குக் கொஞ்சம் வாய் நீளம்; அவளைக் கவனிச்சுக்குங்க” என்றார். அதற்கு மருமகன் மாமனாரிடம், "கவலைப்படாதீர்கள்; நான் அவளை நன்றாக கவனித்துக் கொள்வேன். எனக்குக் கொஞ்சம் கை நீளம்" என்றார், பெண்களுக்கு வாய் நீளமாக இருப்பதால் ஆண்களுக்கு கை நீளமாகிறது. நாவை அடக்கினால் குடும்பத்தில் பல பிரச்சினைகள் தலையெடுக்காத.

மிக நல்லவர்களிடத்திலும் பல குற்றங்கள் உள்ளன; மிகக் கெட்டவர்களிடத்திலும் சில நல்ல குணங்கள் உள்ளன; எனவே பிறருடைய குறைகளைப்பற்றிப் பேசலாகாது.





 
நற்கனிகள் அறிதலும் தருதலும்

ஆர்எம்எஸ் டைட்டானிக் என்ற ஆடம்பரப் பயணிகள் கப்பல் பற்றி நாம் கேள்விப்பட்டிருப்போம். 'கடவுளால் கூட இக்கப்பலைக் கவிழ்க்க முடியாது' என்று விளம்பரம் செய்யப்பட்டு, 1912ல் தன் முதல் சேவையைத் துவக்கியது இக்கப்பல். உலகின் மிகப் பெரிய பயணிகள் நீராவிக் கப்பலும் இதுவே. இங்கிலாந்திலிருந்து புறப்பட்டு நியுயார்க் நகர் நோக்கிச் சென்ற இக்கப்பல் 1912ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் நாள் இரவு வட அட்லாண்டிக் பெருங்கடலில் பனிப்பாறை ஒன்றின் மேல் மோதி, மோதிய 3 மணி நேரங்களில் முழுவதுமாகக் கடலில் மூழ்கியது. கப்பலின் கேப்டன் எவ்வளவோ முயன்றும் கப்பலைப் பனிப்பாறையின்மேல் மோதவிடாமல் தடுக்க முடியவில்லை என்பதுதான் சோகம். கடலில் தெரிந்த பனிப்பாறை கடலுக்கு மேல் நீட்டிக்கொண்டிருந்த அளவை மட்டும் வைத்து பனிப்பாறையின் கனத்தை குறைவாக மதிப்பிட்டதால்தான் இந்த ஆபத்து நேரிட்டது. வெறும் 5 சதவிகத பனிப்பாறை மட்டுமே கடலின் மேற்புரத்தில் தெரிய மீதி 95 சதவிகிதம் கடலுக்கு அடியில் மூழ்கி மிதந்துகொண்டிருக்கும். வெளியில் தெரியும் சிறு பகுதியை மட்டும் வைத்து ஒட்டுமொத்த பனிப்பாறையின் அளவை ஊகிப்பது தவறு. அதே வேளையில், பனிப்பாறையின் இருப்பை இந்த நுனிப்பகுதி காட்டுகிறது என்பதை அறியாமல் அதன் இருப்பைக் கண்டுகொள்ளாமல் இருப்பதும் தவறு.

இன்னொரு உருவகம். நம் தோட்டத்தில் இருக்கின்ற ஒரு மாமரம். ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் மாம்பழங்கள் பழுத்துத் தொங்குகின்றன என வைத்துக்கொள்வோம். மாம்பழம் என்ற கனியை மரத்தின் மற்ற பகுதிகளான கிளை, தண்டு, வேர் ஆகியவற்றோடு ஒப்பிட்டால் கனியின் அமைப்பும் அளவும் மிகவும் சிறியது. ஆனால், அச்சிறிய கனியைக் கொண்டே நாம் அந்த மரத்தின் இயல்பைச் சொல்லிவிடலாம். அது இனிமையான கனி கொடுக்கும் மரமா அல்லது புளிக்கும் கனி கொடுக்கும் மரமா என்பதை நாம் சொல்வதற்கு அதன் கனியை மட்டுமே எடுத்துக்கொள்கிறோம். யாரும் மரத்தின் இலை அல்லது தண்டைச் சாப்பிட்டுவிட்டு மரத்தை ஆய்வு செய்வதில்லை. கனி என்ற மரத்தின் சிறிய நீட்சி ஒட்டுமொத்த மரத்தின் இயல்பைச் சுட்டிக்காட்டுகிறது.

பனிப்பாறையின் நுனி மற்றும் மரத்தின் கனி இவை இரண்டிற்கும் இன்றைய இறைவாக்கு வழிபாட்டிற்கும் என்ன தொடர்பு? வெறும் நுனியைக் கண்டு மொத்தத்தையும் அளந்துவிடாதே என எச்சரிக்கிறது இன்றைய முதல் வாசகம். வெறும் கனியைக் கண்டு ஒரு மரத்தின் இயல்பை அளவிடு என அறிவுறுத்துகிறது இன்றைய நற்செய்தி வாசகம். மறைந்திருக்கும் நல் இயல்பு வெளியில் தெரியும் பேச்சிலும் செயலிலும் வெளிப்படுகிறது. நல்ல இயல்பிலிருந்தே நல்ல சொற்களும், நற்செயல்களும் வெளிவர முடியும்.

எப்படி?

இன்றைய முதல் வாசகம் (காண். சீஞா 27:4-7) இஸ்ரயேலின் பிந்தைய ஞானத் தொகுப்பான சீராக்கின் ஞானத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. ஞானம் என்பது கடவுளின் கட்டளைகளுக்கும், நியமங்களுக்கும் கீழ்ப்படிவதன் கொடை எனப் பொதுவாக அறியப்பட்டாலும், ஞானம் மனித வாழ்வின் அன்றாட அறநெறி மற்றும் வாழ்வியல் குறித்த சிந்தனைகளின் தொகுப்பாகவே அமைகிறது. உருவகங்கள், பழமொழிகள் என காணக்கூடிய ஒன்றிலிருந்து காண இயலாத மதிப்பீடுகளுக்கு மக்களை அழைத்துச் சென்றனர் ஞானியர். இவ்வகையில் ஏறக்குறைய கி.மு. 200ல் யேசு பென் எலயேசர் பென் சீராக் (காண். சீஞா 50:27) என்பவரால் எழுதப்பட்ட சீராக்கின் ஞானநூல் பல ஞானக் கோர்வைகளைப் பல்வேறு தலைப்புக்களில் தாங்கி நிற்கிறது. இஸ்ரயேல் மக்களின் சட்டநூல்கள் என்றழைக்கப்படுகின்ற முதல் ஐந்நூல்களில் உள்ள கருத்துக்களை எடுத்து அக்கருத்துக்களை அன்றாட வாழ்வில் செயல்முறைப்படுத்தும் வழிமுறைகளைத் தருகிறார் ஆசிரியர். 

அவ்வகையில் ஒரு மனிதரின் மறைந்திருக்கும் குணம் அல்லது இயல்பு எப்படி வெளிப்படும் என்பதை இரண்டு பழமொழிகள் வழியாக விளக்குகிறார் ஆசிரியர். முதல் பழமொழி: 'சலிக்கின்றபோது சல்லடையில் உமி தங்கிவிடுகின்றது. அவ்வாறே, மனிதரின் பேச்சில் மாசுபடிந்து விடுகின்றது.' அதாவது, சலிக்கின்ற போது சல்லடையில் மேலே தங்குகின்ற உமி, அந்த அரிசியில் இவ்வளவு மாசு இருந்திருக்கிறது என்பதைக் காட்டுகிறது. உமி குறைவாக இருந்தால் அரிசி கலப்படமற்றது என அறிகிறோம். அதுபோல, ஒரு மனிதர் பேசும்போது அவரிடம் எவ்வளவு மாசு இருக்கிறது என்பதை அவரிடமிருந்து வெளியே வரும் வார்த்தைகள் காட்டிவிடுகின்றன. ஆக, பேச்சும் மாசுள்ளதாக இருக்கலாம். பேசுபவரின் உள்ளமும் மாசுள்ளதாக இருக்கலாம். எனவே, வார்த்தைகளைப் பற்றிய அக்கறையும், வார்த்தை வெளிவரும் உள்ளம் பற்றிய அக்கறையும் அவசியம். இரண்டாவது பழமொழி: 'குயவரின் கலன்களை சூளை பரிசோதிக்கிறது. மனிதரை உரையாடல் பரிசோதிக்கிறது.' மண்பானை செய்கின்ற குயவன் எப்படிப்பட்ட மண்ணைப் பயன்படுத்தினான், எப்படிப் பிசைந்தான், எவ்வளவு நீர் ஊற்றினான், எப்படி சக்கரத்தில் சுற்றினான் என்னும் அவனுடைய கைப்பக்குவத்தை நெருப்பு பரிசோதிக்கும். அதுபோல, மனிதன் எப்படிப்பட்டவன் என்பதை அவனுடைய உரையாடலை வைத்து மற்றவர்கள் பரிசோதிப்பர். நெருப்பில் இடும் போது கீறல் விடாத பானை நல்ல பானை என அறியப்படுவது போல, ஒரு மனிதர் நல்லவர் என்பதை அவருடைய உரையாடல் வழியாக நாம் கண்டுகொள்கிறோம். தொடர்ந்து, 'ஒருவர் பேசுவதற்கு முன்பே அவரைப் புகழாதே. பேச்சைக் கொண்டே அவரை அறிந்துகொள்ளலாம்' என எச்சரிக்கிறார் ஆசிரியர். ஒருவனுடைய உரையாடலைக் கேட்குமுன்பே, அவனுடைய வெளி அலங்காரத்தை வைத்து அவனைப் புகழ வேண்டாம் என்றும், பார்ப்பதற்கு பகட்டாக இருக்கும் அவன் பேசுவது மடமையாக இருக்கலாம் என்பதும் இதன் பொருள்.

ஆக, ஒருவரின் நாணயம், நற்குணம், நல்மதிப்பீடு ஆகியவை வெளிப்புற அடையாளங்களால் அறிந்துகொள்ளப்பட முடியாதவை. மாறாக, அவர் பேசும் சொற்கள் அவருடைய மூளையின், உள்ளத்தின் நீட்சியாக இருக்க, அவற்றை வைத்து நாம் அவரின் நாணயத்தையும், நற்குணத்தையும், நல்மதிப்பீட்டையும் அறிந்துகொள்ளலாம்.

இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். 1 கொரி 15:54-58) இறந்தோர் உயிர்ப்பு பற்றிய பவுலின் வாதம் நிறைவுக்கு வருகிறது. எசா 25:8 மற்றும் ஆமோ 13:14 என்னும் இறைவாக்குகளின் பின்புலத்தில், 'சாவு முற்றிலும் ஒழிந்தது. வெற்றி கிடைத்தது. சாவே, உன் வெற்றி எங்கே? சாவே, உன் கொடுக்கு எங்கே?' என்று அக்களிக்கிறார் பவுல். பவுலின் பார்வையில் கிறிஸ்துவின் உயிர்ப்பு இறந்தோர் அனைவருக்கும் கிடைத்த கொடை. ஏனெனில், கிறிஸ்துவில் இறந்தோர் அனைவரும் கிறிஸ்துவில் உயிர்ப்பர். கிறிஸ்துவின் உயிர்ப்பு நம்பிக்கையாளர்கள் அனைவருக்கும் இறவாமையைப் பெற்றுத் தருகிறது. தொடர்ந்து பவுல், 'நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வழியாக நமக்கு இந்த வெற்றியைக் கொடுக்கும் கடவுளுக்கு நன்றி' என்கிறார். 

இதன் பின்புலத்தில் உயிர்ப்பு பற்றிய உரையை நிறைவு செய்கிற பவுல், நிறைவாக கொரிந்து நகரச் சபைக்கு அறிவுரையும் வழங்குகின்றார்: 'உறுதியோடு இருங்கள். நிலையாய் இருங்கள். ஆண்டவரின் பணியை இன்னும் அதிகமாக எப்போதும் செய்யுங்கள்.' நாம் இறந்தவுடன்தான் எல்லாம் ஒன்றிமில்லாமல் போய்விடுகிறதே. அப்புறம் எதற்கு உழைக்க வேண்டும்? எனச் சிலர் கேள்வி எழுப்பியதன் பின்புலத்தில், 'நீங்கள் உழைப்பது வீண்போகாது' என்கிறார் பவுல். ஆக, இவ்வாழ்வில் நாம் செய்யும் செயல்கள் உயிர்ப்பின் கனிகளாகக் கனிகின்றன. இச்செயல்களை நிறுத்தும்போது நாம் கனிகளையும் நிறுத்துவிட வாய்ப்புண்டு. கனிகளைக் கருத்தில் கொண்டு தொடர்ந்து நம் வேலைகளைச் செய்ய வேண்டும்.

ஆக, இவ்வுலக வாழ்வு என்பது ஒரு மரம் போன்றது என்றால், அம்மரத்திற்காக நாம் செய்யும் உழைப்பு மறு உலகில் கனியாக நீளும். அக்கனிகள் இனிமையாக இருக்க வேண்டுமென்றால், நான் என் வாழ்க்கை என்ற மரத்தின் இயல்பை இனிமையானதாக தக்க வைத்துக்கொள்ள வேண்டும். அதற்காக நான் உழைக்க வேண்டும். என் நம்பிக்கையில் உறுதியாகவும் நிலைத்தும் இருத்தல் வேண்டும்.

இன்றைய நற்செய்தி வாசகம் (காண். லூக் 6:39-45) ஒருவரின் நாணயம், நற்குணம், மற்றும் நன்மதிப்பீடு எப்படி இருக்க வேண்டும் என்றும், அது எப்படி கனியாக சொல்லிலும் செயலிலும் வெளிப்பட வேண்டும் என்பதை மூன்று உருவகங்கள் வழியாகப் பதிவு செய்கிறது. முதலில், 'பார்வையற்ற ஒருவர் பார்வையற்ற மற்றவருக்கு வழிகாட்டுவது' - இது முதலில் சீடர்களுக்கான போதனையாக இருக்கிறது. இயேசுவின் சீடர்கள், மற்றவர்களுக்கு வழிகாட்டுவதற்கு முன்பாக, தாங்கள் முதலில் இயேசுவிடமிருந்து கற்றுக்கொள்வது அவசியம். தங்களிலேயே நற்செயல் அல்லது நற்சொல் இல்லாத ஒருவர் அவற்றை மற்றவருக்குக் கொடுக்க முடியாது. இரண்டாவதாக, 'ஒருவர் தன் கண்ணில் இருக்கும் கட்டையைப் பார்க்காமல் மற்றவரின் கண்ணில் இருக்கும் துரும்பை எடுக்கக் கைநீட்டுவது.' இதுவும், சீடர்கள் மத்தியில் இருந்த ஒரு பிரச்சினையாக இருந்திருக்கலாம். ஒவ்வொருவரும் தன் குறையைக் கண்டுகொள்ளாமல் அடுத்தவரின் குறையைப் பெரிதுபடுத்தியிருக்கலாம். இயேசு இந்த வெளிவேடத்தைக் கண்டித்து, தன் சீடர்கள் ஒவ்வொருவரும் தங்களையே தன்னாய்வு செய்து பார்க்க அழைக்கின்றார். இப்படித் தன்னாய்வு செய்யும்போது ஒருவர் தன் மதிப்பீடுகளை மறு ஆய்வு செய்ய முடியும். அப்படிச் செய்யாதபோது அவர் வளர முடியாமல் போய்விடும். மேலும், தன் கண்ணையே ஒரு கட்டை மறைப்பதால் அடுத்தவருக்கு உதவி செய்வது தொந்தரவிலும் முடியலாம். மூன்றாவதாக, 'கெட்ட கனி தரும் நல்ல மரமில்லை. நல்ல கனி தரும் கெட்ட மரமில்லை. ஒவ்வொரு மரமும் அதனதன் கனியாலே அறியப்படும்.' ஒருவர் நீண்ட காலம் நடிக்கவும், ஏமாற்றவும் முடியாது. ஏனெனில், அவரின் செயல்களே அவரைக் காட்டிக்கொடுத்துவிடும் என எச்சரிக்கிறார் இயேசு. பொய்மை நீண்ட காலத்திற்கு உண்மை என்று தன்னைப் பற்றிச் சொல்லிக் கொண்டு வலம் வர முடியாது. மேலும், 'உள்ளத்தின் நிறைவையே வாய் பேசும்' என்று சொல்வதன் வழியாக ஒருவரை அவருடைய சொல் காட்டிக்கொடுத்துவிடும் என்கிறார் இயேசு.

இயேசுவின் இம்மூன்று உருவகங்களுமே சீடத்துவத்தை மையமாக வைத்திருக்கின்றன. இயேசுவின் சீடர் முழுமையான அறிவைப் பெற்றிருக்க வேண்டும், வெளிவேடமின்றி தன்னையே ஆய்வு செய்து பார்க்க வேண்டும், அடுத்தவருக்கு வழி காட்டுவதற்கு முன் தன்னையும், தன் வழியையும் அறிந்திருக்க வேண்டும், தன் வாழ்வில் உள்ள இரட்டைத்தன்மை அகற்ற வேண்டும்.
ஆக, ஒருவரின் உள்ளியல்பு அவரின் வழிகாட்டுதல், குற்றங்கடிதல், மற்றும் உரையாடுதல் ஆகியவற்றில் வெளிப்பட்டுவிடும் என்பதால் ஒருவர் கவனமாக இருக்க வேண்டும் என்றும் சொல்கிறது இன்றைய நற்செய்தி வாசகம்.

இவ்வாறாக, எளிய பழமொழிகள் மற்றும் உருவகங்கள் வழியாக சீராக்கும் இயேசுவும், 'ஒரு மனிதரின் உண்மையான குணம் அல்லது இயல்பும் அவரடைய உள்ளத்தின் பண்பாடும் அவரின் வார்த்தைகளில் வெளிப்படுகிறது' என்றும், பவுல், 'நல்ல செயல்கள் வழியாக உயிர்ப்பின் நற்கனிகளை அனுபவிக்க முடியம்' என்றும் நமக்கு அறிவுறுத்துகின்றனர்.

நாணயத்தின், நற்குணத்தின் நற்கனிகள் தருவது எப்படி?

1. நல்ல உளப்பாங்கு கொண்டிருத்தல்

ஆங்கிலத்தில், 'ஆட்டிட்யூட்' என்று சொல்கிறோம். இன்று, ஒருவரின் நேர்காணலில் அவரின் சொற்கள் மற்றும் செயல்களைவிட, இந்த 'ஆட்டிட்யூட்' தான் அதிகாக ஆய்வு செய்யப்படுகிறது. இன்றைய நற்செய்தி வாசகம் நான்கு வகை உளப்பாங்கை எடுத்துக்காட்டி, முதல் மூன்று வகை உளப்பாங்கை விட்டுவிடவும், நான்காவதைப் பற்றிக்கொள்ளவும் அழைக்கிறது. (அ) கெட்ட கனி தரும் மரம் - 'கெட்ட கனியால் யாருக்கும் பலன் இல்லை. கெட்ட கனிகள் விஷமாக மற்றவர்களைக் கொல்லும் ஆற்றல் பெற்றவை' – இம்மரம் இயல்பிலேயே கெடுதல் செய்வதாக இருக்கிறது. இவ்வகை மரம் தீங்கையே உருவாக்குவதால், காலப்போக்கில் அதே தீங்கினால் தானும் அழிந்துவிடும். (ஆ) முட்செடிகள். முட்செடிகள் முள்கனிகளைத்தான் கொடுக்குமே தவிர அத்திப்பழங்களைக் கொடுக்காது. முட்செடிகள் போன்றவை அடுத்த மரங்களின் தண்ணீர் மற்றும் உரத்தை எடுத்துக்கொண்டாலும் இவைகள் தங்கள் இயல்பிலேயே தொடர்ந்து இருப்பவை. இவைகள், என்னதான் பசுமையாக, செழுமையாக இருந்தாலும் இவைகளின் அருகில் யார் சென்றாலும் இவை அவர்களைக் காயப்படுத்திவிடுகின்றன. (இ) முட்புதர் – திராட்சைக் கனியை நாம் முட்புதரிலிருந்து பெற முடியாது. திராட்சை உயரமான பந்தலில் வளரக் கூடியவை. ஆனால், முட்புதரோ தரையோடு தரையாக மண்டிக் கிடந்து, விஷப்பூச்சிகள் தங்கும் இடமாக மாறிவிடும். புதருக்குள் மறைந்திருப்பது யாருக்கும் தெரியாது. இப்படிப்பட்ட உள்ளம் கொண்டவர்கள் தங்கள் எண்ணங்களை மிகவும் தாழ்வான எண்ணங்களாக வைத்துக்கொண்டு விஷம் தங்கும் இடமாக மாறிவிடுவர். மற்றும் (ஈ) நல்ல கருவூலம் - ஒவ்வொரு வீட்டின் பாதுகாப்பான இடம் கருவூலம். இங்கே மிகவும் மேன்மையானவற்றிற்கு மட்டுமே இடமுண்டு. நல்லவரின் உள்ளம் நல்ல கருவூலமாக இருக்கும். இதிலிருந்து வெளிப்படுபவை மதிப்பு மிக்கவையாகவும், மற்றவர்களுக்குப் பயன் தருவனவாகவும் இருக்கும். ஆக, என் உளப்பாங்கு நல்ல கருவூலமாக இருத்தல் வேண்டும்.

2. இனிய வார்த்தைகளைப் பேசுதல்

இனிய சொற்கள் பற்றிப் பேச அறிவுறுத்தும் வள்ளுவர், இனிய வார்த்தைகளைப் பேசாதவர்கள் நல்ல கனிகளை விட்டுவிட்டு கசக்கின்ற காய்களைப் பறித்துக்கொள்கிறார்கள் என்கிறார். பேச்சு ஒரு கொடை. அதே வேளையில் அது நமக்குக் கொடுக்கப்பட்டுள்ள பொறுப்பு. நம் வார்த்தைகளே நம் உலகத்தை உருவாக்குகின்றன. நம் பேச்சு நம்மைப் பல்லக்கிலும் ஏற்றும், பாழுங்கிணற்றிலும் தள்ளும். இன்று நாம் அரசியல் மற்றும் ஊடகங்களில் கேட்கின்ற வார்த்தைகள் வெறும் வார்த்தைகளே. அவற்றால் யாருக்கும் எந்தப் பயனும் இல்லை. அவ்வார்த்தைகளுக்கும் செயல்களுக்கும் தொடர்பு இருப்பதில்லை. சமூக ஊடகங்களில் பரப்பப்படும் பல வார்த்தைகள் வதந்திகளாகவும், பொய்களாகவும் இருக்கின்றன. இவற்றால் வீணான அச்சமும் குழப்பமும் உருவாகிறது. ஆனால், இவற்றிற்கு மாறாக நம் வார்த்தைகள் அடுத்தவரின் மேல் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் வார்த்தைகளாக இருத்தல் வேண்டும். ஆக, பொறுப்புணர்வோடு நாம் வார்த்தைகளைக் கையாள வேண்டும்.

3. உன் வார்த்தையே நீ

'நீ அதிகமாக வெட்கம் அடைகிறாய். இந்த வெட்கத்திற்குக் காரணம் உன் பொய்மை. பொய் சொல்லாதே! அதிலும் உனக்கு நீயே பொய் சொல்லாதே. உனக்கு நீயே சொல்லும் பொய் உன்னைப் பெரிய தோல்விக்கு இட்டுச் செல்லும்' என்று இரஷ்ய எழுத்தாளர் டாஸ்டாய்வ்ஸ்கியும், 'நீ வெற்றி பெற வேண்டுமெனில் உனக்கு நீயே ஒரு போதும் பொய் சொல்லாதே' என்று பவுலோ கோயல்லோவும், 'உன் உள்ளத்தின் நிறைவே உன் பேச்சும்' என்று இயேசுவும் சொல்கின்றனர். நம்மிடம் உள்ள நாணயம் மற்றும் நன்மதிப்பீட்டின் நீட்சியாக நம் வார்த்தைகள் இருக்க வேண்டும். எனக்கு நான் கொடுக்கும் வாக்குறுதிகள் மற்றும் அடுத்தவருக்குக் கொடுக்கும் வாக்குறுதிகளில் நான் உண்மையோடு இருக்க வேண்டும். ஆகையால்தான், ஒளவையார், 'கற்பு என்பது சொல் திறம்பாமை' என்கிறார். சொல்லும், செயலும், என் இயல்பும் ஒன்றாக இருத்தலே கற்பு, தூய்மை. என் வார்த்தைகளே நானே நம்பவில்லை என்னும் நிலை வரும்போது, அடுத்தவர்கள் என் வார்த்தைகளை எப்படி நம்புவார்கள்?

வார்த்தையும் வாழ்வும், கனியும் மரமும், இயல்பும் வெளிப்பாடும் ஒன்றோடொன்று தொடர்புடையவை. இதை அறிந்து செயல்படும் 'நேர்மையாளர் பேரீச்சை மரமெனச் செழித்தோங்குவர். கேதுரு மரமெனத் தழைத்து வளர்வர் ... அவர்கள் முதிர் வயதிலும் கனி தருவர். என்றும் செழுமையும் பசுமையுமாய் இருப்பர்' (திபா 92:12,14).
 
 


 

Sunday, 17 February 2019

ஆண்டின் பொதுக்காலம் 7-ஆம் ஞாயிறு

ஆண்டின் பொதுக்காலம் 7-ஆம் ஞாயிறு

 

இன்றைய வாசகங்கள்:
1 சாமு 26:2, 7-9, 12-13, 22-23; 1 கொரி 15:45-49; லூக் 6:27-37


நாய்கள் கடிப்பதும், கழுதை உதைப்பதும், புலிகள் பாய்வதும், நரிகள் ஏய்த்துப் பிழைப்பதும் இயற்கை. அவைகளின் பிறவிக் குணம் என்பது நமக்குப் புரியும். ஆனால் மனிதன் எந்த நேரத்தில் கடிப்பான். எந்த வேளையில் உதைப்பான் என்பது தெரியாது. மனிதனின் பிறவிக்குணம் இதுதான் என்று நம்மால் சொல்ல முடியுமா? நிச்சயமாக முடியாது. ஆனால் மனிதன் சிறப்பானவன். தொடக்க நூல் (தொநூ 1:26, 27) வசனங்களில் கூறப்பட்டிருப்பது போல, நாம் இறைவனின் சாயல். இந்த உலகிற்கு அடிமை யாகாதபடி சுதந்திரமாக வாழ, செயல்பட அழைக்கப்பட்டவர்கள். மாறாக எந்த நேரத்தில் மனிதன் என்ன செய்வான் என்று யாராலும் கணிக்க முடியாத நிலையை நாம் பார்க்கிறோம். 


1. அமெரிக்க நாட்டிலே ஜனாதிபதி தேர்தலிலே ஆப்ரகாம்
லிங்கன் அமோக வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றினார். ஒவ்வொரு துறைக்கும் தகுதியான அமைச்சரை நியமனம் செய்து கொண்டிருந்தார். பாதுகாப்புத் துறைக்கு யாரை நியமிப்பது என்ற கேள்வி எழுந்தது. ஆப்ரகாம் லிங்கன் ஸ்டான்டன் என்பவரை இந்தப் பணிக்கு நியமித்தார். ஆனால் அவருடைய நெருங்கிய நண்பர்கள் அதிர்ச்சி அடைந்து, ஜனாதிபதி அவர்களே! உங்களைத் தாக்கித் தரக்குறைவாகப் பேசிய மனிதனையா நியமிக்கிறீர்கள் என்று கேட்டார்கள். ஆம் அவர் என்னைத் தாக்கிப் பேசினார் என்பது நன்றாகத் தெரியும். ஆனால் அவர் நாட்டுக்குத் தேவை. பாதுகாப்புத் துறை அவருக்குப் பொருத்தம் என்றார். இதைப் பார்த்த அவரது எதிரியாக இருந்த ஸ்டான்டன், காலம் தம்மை அழிக்காதபடி லிங்கன் காலத்தை வென்றுவிட்டார் என்றார்.

2. அமெரிக்கா ஜனாதிபதி ரீகன் சுடப்பட்டு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்படும்போது வேதனை இருந்தாலும் அதிகாரிகளோடு மகிழ்ச்சியோடு பேசிக்கொண்டு சென்றாராம். திருத்தந்தை 2 - ம் அருள் சின்னப்பர் - தான் சுடப்பட்டு குணமானவுடன் சிறைக்குச் சென்று சுட்டவனை கட்டித் தழுவி மன்னிக்கின்றேன் என்றார். இந்த நிகழ்வுகளை விவரிக்கும் ராம் மோகன் காந்தி என்ற இந்திய பத்திரிக்கையாளர் அழகாக இவ்வாறு எழுதுகிறார்: ரீகன் மகிழ்ச்சியுடன் சென்ற நிகழ்ச்சி அவர் எந்த அளவிற்கு மனிதத் தன்மை மிக்கவர் என்பதைக் காட்டுகிறது. ஆனால் திருத்தந்தை 2-ம் அருள் சின்னப்பரின் செயலோ அவர் எந்த அளவுக்கு இறைத் தன்மை வாய்ந்தவர் என்பதைக் காட்டுகிறது என்றார்.

இன்றைய முதல் வாசகத்திலே (1 சாமு. 26:9) கூறப்படுவது போல தாவீதைக் கொல்ல நினைத்த சவுல் அரசன் கூடாரத்தில் தூங்கிக் கொண்டிருந்தபோது, தாவீதின் கூட்டாளி அபிசாயி இதோ உமது எதிரி தூங்குகிறான். நிலத்தில் பதிய ஈட்டியால் குத்தட்டுமா எனக் கேட்கிறான். தாவீதோ அபிசாயியை நோக்கி: அவரைக் கொல்லாதே. ஆண்டவரால் திருப்பொழிவு செய்யப் பட்டவர் மீது கை வைப்பது குற்றம் என்றார்.

இன்றைய நற்செய்தி இதை முன் வைத்துதான் மூன்று செய்திகளைத் தருகிறது.

1. மனிதன் முழு மனிதனாக வாழ மன்னிக்கும் மனமுடையவனாக இருக்க வேண்டும். பொறாமை, பழிவாங்குதல், பகைமை, வெறுப்பு இவையெல்லாம் மனிதப் பண்பு அல்ல. மன்னிப்பது மனிதனின் முதிர்ச்சி பெற்ற நிலையைக் காட்டும் வெளிப்பாடு. அன்பின் பிரதிபலிப்பு. பழிவாங்கும் மனிதன் பரிதாபத்திற்கு உரியவன். வளர்ச்சி அடையாதவன். அடிப்பவனைத் திருப்பி அடித்தல் மிருகத்தின் செயல்பாடு. எனவே இயேசு சொல்கிறார் உங்கள் பகைவருக்கு அன்பு காட்டுங்கள் (மத். 5:4 லூக். 6:27)

2. இரண்டாவதாக மனிதன் நல்லதையே செய்ய வேண்டும்.

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்கிறார் வள்ளலார்.

சிறுமை கண்டு பொங்குவாய் என்கிறார் கவிஞன் பாரதியார். இயேசு சொன்னார், "உங்களைச் சபிப்போருக்கு ஆசி கூறுங்கள். உங்களை இகழ்ந்து பேசுவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள். உங்களை ஒரு கன்னத்தில் அறைபவனுக்கு மறு கன்னத்தையும் காட்டுங்கள் என்றார்.

பிறர் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என *விரும்புகிறீர்களோ அதையே நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள் (மத். 7:12, லூக். 6:31) என பொன்விதியாகத் தருகிறார்.

3. மனிதன் என்பவன் சுதந்திரமாக வாழ அழைக்கின்றார். நன்மை செய்பவனுக்கே நன்மையும், தீமை செய்பவனுக்குத் தீமை | செய்வதும் சிந்திக்கத் தெரியாத, சுதந்திரத்தை மறந்த மிருகச் செயல்.

எனவேதான் இயேசு கேட்கிறார், "உங்களுக்கு நன்மை செய்பவர்களுக்கே நீங்கள் நன்மை செய்தால் உங்களுக்கு வரும் பயன் என்ன?" (லூக். 6:3 மத். 5:45 - 46). ஏனெனில் இறைவன் நன்றி கெட்டோருக்கும் பொல்லாதாருக்கும் நன்மை செய்கிறார் (லூக். 6:35).

1. கண்ணுக்குக் கண் பல்லுக்குப் பல் என்பது கிறிஸ்தவ
வாழ்க்கை அல்ல. மாறாக நாம் பகைவருக்கு அன்பு செய்வதின் மூலம்தான் கடவுளின் இயல்பில் பங்கெடுக்கிறோம். இறை மக்களாக இருக்க முடியும்.

2.பகைவரை மன்னித்து அன்பு செய்ய ஆரம்பிக்கும்போது நம் உள்ளத்தில் நிம்மதி நிரம்பி வழிகிறது. பழி வாங்கத் துடிப்பவர்களிடத்தில் கோபமும், மன உளைச்சலும் ஏற்பட்டு, உடல் நோய்கள் குறிப்பாக நீரழிவு வியாதி, புற்று நோய்கள் எல்லாம் வந்துவிடுகின்றன. இது எப்படி என்றால் பாடம் எடுத்துக் கொண்டிருந்த ஆசிரியர், ஒரு மாணவனை நோக்கித் தண்ணீர் நிரம்பிய டம்ளரை அப்படியே பிடித்துக்கொண்டு நிற்கச் சொன்னார். டம்ளரை அப்படியே ஒருமணி நேரம் பிடித்த போது மாணவனுக்கு அந்த சிறிய டம்ளர் பெரிய பாரமாக, ஒருவகையான பாரங்கல் போன்ற கனத்தை உணர வைத்தது. நாம் பிறர் மீது வைத்திருக்கும் வெறுப்புக்கள் நீண்ட காலத்திற்கு நம் மனதில் சுமந்தால் அது பாரங்கல்லாகி கனக்கும். மாறாக மன்னிப்பு என்பதே நமக்கு விடுதலை தரும். விடுதலையின் காரணமாக நாம் அமைதியைக் காண்கிறோம்.

3. பகைவர்களை மன்னித்து அன்பு காட்டும் போது நாம் முதிர்ச்சி
அடைந்தவர்களாக மாற ஆரம்பிக்கிறோம். பழிவாங்கல் நீங்கும் போது மிருகத் தன்மை நம்மை நெருங்காது. ஆன்மீக முதிர்ச்சியில் வளர ஆரம்பிக்கிறோம். அதே நேரத்தில் நம் எதிரியில் இருக்கும் மிருகத் தன்மையை வலுவிழக்கச் செய்கிறோம். இதுதான் முதிர்ச்சி நிலை.

எத்தனை ஆண்டுகள் இந்த உலகில் வாழ்வோம் என்பது முக்கியம் அல்ல. எப்படியும் வாழலாம் என்பதும் மூடத்தன்மை . தாயையும் தந்தையையும் தேர்ந்தெடுக்க நமக்கு உரிமை இல்லை. முக அமைப்பையோ, உடல் நிறத்தையோ, மாற்றவோ, பிறப்பையோ, இறப்பையோ எடுக்க, நிறுத்த நமக்கு உரிமை இல்லை . ஆனால் நமது கையில் இருப்பது நமது வாழ்க்கை . மாறாக இப்படித்தான் வாழ வேண்டும் என்பதை இயேசு இன்று தெளிவுபடுத்துகிறார். இரக்கம், ஈகை, அன்பு, பிறருக்கு உதவுதல், மன்னித்தல் போன்ற மதிப்பீடுகளில் வாழ்ந்து காட்டி நமக்கு மாதிரி தருகிறார். வாழப் புறப்படுவோம். ஆமென்.



மன்னிப்போம்

இன்றைய நற்செய்தியைக் கூட்டி, பெருக்கி, வகுத்து, கழித்துப் பார்த்தால் மிஞ்சுவது மன்னிப்பு! உங்களிடம் அன்பு செலுத்துவோரிடமே நீங்கள் அன்பு செலுத்தினால் உங்களுக்கு வரும் நன்மை என்ன? (லூக் 6:32) என்று கேட்கின்றார் இயேசு.

நமது பகைவர்களையும் அன்பு செய்யும் அளவுக்கு நமது மன்னிப்பு உயர்ந்து நிற்க வேண்டும் என்பது இயேசுவின் ஆசை!

ஒரு மலையடிவாரத்தில் ஆடுகள் அவற்றின் குட்டிகளோடு மேய்ந்துகொண்டிருந்தன! தனது குட்டிக்கு இரைதேடிவந்த தாய்ப்புலி ஒன்று அந்த ஆடுகளைத் துரத்தத் துவங்கியது. ஆடுகள் தெரிந்தோடின. ஓடமுடியாத ஒரு சிறு ஆட்டுக்குட்டியை கவ்விப்பிடித்தது அந்தப்புலி! அந்தக் குட்டியின் தாய் ஆடு, புலியின் பின்னால் ஓடியது. புலியைப் பார்த்து, என் குட்டியை விட்டுவிடு! என்னை வேண்டுமானால் சாப்பிடு என்றது!

புலியோ குட்டியை விடவில்லை ! ஆடுகள் சிதறி ஓடியபோது ஆபத்தை உணர்ந்த ஆடுகளுக்குச் சொந்தக்காரர்கள் ஈட்டிகளோடும், தீப்பந்தங்களோடும் புலியைத் துரத்தத் தொடங்கினார்கள். புலி பயந்துபோய் ஆட்டுக்குட்டியைப் போட்டுவிட்டு எங்கோ ஓடி மறைந்தது.!
ஆட்டுக்குட்டியின் கழுத்தில் பயங்கரக் காயங்கள்! மருத்துவமனையில் சேர்த்தார்கள்! சரியான நேரத்தில் கொண்டு வந்ததால் குட்டியைக் காப்பாற்ற முடிந்தது என்றார் டாக்டர். தாய் ஆடு அன்று மாலை வீட்டிலே சமைக்கப்பட்ட சாப்பாட்டை தனது குட்டிக்கு வீட்டிலிருந்து எடுத்துக்கொண்டு மருத்துவமனைக்கு வந்துகொண்டிருந்தது! அப்போது ஒரு புலிக்குட்டியின் முனகல் சத்தம் கேட்டது! குகை! அதற்குள் ஆடு நுழைந்தது! அதன் குட்டியைக் கடித்துக் குதறிய புலியின் குட்டி அது என்பதை அந்த ஆடு அறிந்துகொண்டது.

நடந்ததையெல்லாம் மறந்துவிட்டு ஆடு தன் குட்டிக்குக் கொண்டுசென்ற உணவை புலிக்குட்டிக்கு ஊட்டிக்கொண்டிருந்தது.

அந்த சமயம் தாய்ப்புலி குகைக்குள் நுழைந்துவிட்டது. ஆடு பயத்தில் நடுங்கியது. அப்போது அந்தப் புலி, காலையில் நான் உனது குட்டியைத் தூக்கிச்சென்று அதைக் காயப்படுத்தினேன்! அதை மறந்து என் குட்டிக்கு உணவூட்டிக்கொண்டிருக்கின்றாய்! உன் அன்பு - அது பேரன்பு! மன்னிப்பே உருவான உன் முன்னால் மண்டியிடுகின்றேன். இனிமேல் உன் சந்ததியைத் தொடமாட்டேன் என்றது.

கதையில் வந்த ஆட்டைப்போன்று வாழ உலகின் பாவங்களைப் போக்கும் செம்மறியான இயேசு நம்மை அழைக்கின்றார்.

இயேசு காட்டும் வழியில் நம்மால் வாழமுடியுமா? தாவீதைக் கொல்ல, தேர்ந்தெடுக்கப்பட்ட மூவாயிரம் பேருடன் சவுல் அலைந்து திரிந்தார்! சவுலுக்கு தாவீதைக் கொல்ல சந்தர்ப்பம் கிடைக்கவில்லை! ஆனால் தாவீதுக்கு சவுலைக் கொல்ல சந்தர்ப்பம் கிடைத்தது ! ஆனாலும் சவுலை தாவீது கொலை செய்யவில்லை! அவரை மன்னித்துவிட்டார்.

தாவீதைப் போல நம்மால் வாழமுடியுமா?

மனித சாயலில் மட்டும் நாம் வாழ்ந்து கொண்டிருந்தால் நம்மால் நமக்கு எதிராகக் குற்றம் செய்வோரை மன்னிக்க முடியாது! மாறாக இன்றைய இரண்டாம் வாசகத்தில் புனித பவுலடிகளார் கூறுவது போல நாம் இயேசுவின் சாயலை நமது சாயலாக்கிக்கொண்டால், அவராக நாம் மாறிவிட்டால் நம்மால் நமது பகைவர்களை மன்னிக்க முடியும் !

உலகத்திலேயே மிகவும் மதிப்பு வாய்ந்தது மன்னிப்புதான். இது தன்னை வழங்குபவருக்கும், பெறுபவருக்கும் பன்மடங்கு இலாபத்தைத் தரும்!
மன்னிப்பவர்களுக்கு ஏழுவரங்கள் கிடைக்கும் என்று இயேசு கற்பித்த மன்றாட்டுகூறுகின்றது. மன்னிப்பைப் பெறுபவருக்கு மனமாற்றம் என்ற மாபெரும் பரிசு கிடைக்கும் (1 சாமு 26:21, 25, லூக் 23:47).

மேலும் அறிவோம் :
கறுத்து இன்னா செய்தவக் கண்ணும் மறுத்து இன்னா
செய்யாமை மாசற்றார் கோள் (குறள் : 312).

பொருள் : பெருஞ்சினம் கொண்டு ஒருவர் தம்மைத் துன்புறுத்தும் போதும் அதற்கு மாறாகத் துன்புறுத்தாது பொறுத்துக்கொள்வதே மாசற்ற சான்றோரின் செயலாகும்.






ஒருவர் தம் நண்பரிடம், "என் வீட்டில் ஒரே பிரச்சினை. என் அம்மா ரசம் வைத்தால் என் மனைவிக்குப் பிடிப்பதில்லை. என் மனைவி ரசம் வைத்தால் என் அம்மாவுக்குப் பிடிப்பதில்லை" என்றார். நண்பர் அவரிடம், “நீ என்ன செய்கிறாய்?” என்று கேட்டதற்கு அவர், “நான் இரண்டு பேருக்கும் இடையே சமரசம் செய்கிறேன்” என்றார்!

வாழ்க்கையில் நாம் செய்ய வேண்டிய இன்றியமையாத காரியம் மற்றவர்களுடன். குறிப்பாக நம்மை வெறுப்பவர்களுடன், சமரசம் செய்வதாகும். "உங்கள் எதிரிகளுடன் உடன்பாடு (சமரசம்) செய்து கொள்ளுங்கள்" (மத் 5:25) என்கிறார் கிறிஸ்து,

கிறிஸ்துவின் பணி மீட்புப் பணி. மீட்புப் பணி என்பது ஒப்புரவுப்பணி. அவர் யூத இனத்துக்கும் பிற இனத்துக்கும் இடையே நின்ற பகைமை என்னும் சுவரைத் தகர்த்து அவ்விரு இனத்தையும் ஓரினமாக ஒப்புரவாக்கினார் (எபே 2:14). கிறிஸ்து திருச்சபையிடம் ஒப்புரவுப் பணியை ஒப்படைத்துள்ளார் (2 கொரி 5:18-19).

இன்றைய அருள்வாக்கு வழிபாடு நாம் நம் பகைவர்களையும் மன்னித்து அவர்களோடு ஒப்புரவாகும்படி அழைக்கிறது.

முதல் வாசகம் மன்னர் தாவீதின் பெருந்தன்மையைக் காட்டுகிறது. தாவீது தமது சிறு வயதிலிருந்தே மன்னர் சவுலுக்கு நன்மைதான் செய்தார். ஆனால், தாவீதின் பேரும் புகழும் மக்கள் மத்தியில் வளர்வதைக் கண்டு சவுல் காழ்ப்பு உணர்வு கொண்டு தாவீதைக் கொலை செய்ய பலமுறை முயற்சி எடுத்தார். ஆனால் தாவீதோ சவுலைக் கொலை செய்யத் தமக்கு வாய்ப்புக் கிடைத்தும் அவரைக் கொல்லாமல் காப்பாற்றுகிறார்,

உலகில் சால்பு என்னும் பண்பு கொண்ட சான்றோர்கள் உள்ளனர். அவர்கள் தீமை செய்பவர்களுக்கும் நன்மை செய்வர். அவ்வாறு செய்யவில்லை என்றால், சால்பு என்ற பண்பு பொருளற்றுப் போய்விடும், தாவீது தாம் ஒரு தலைசிறந்த சான்றோர் என்பதை எண்பிக்கின்றார்.

இன்னா செய்தார்க்கும் இனியவே செய்யாக்கால்
என்ன பயத்ததோ சால்பு? (குறள் 987)

'கன்னத்தில் முத்தமிட்டால்' என்ற திரைப்படம் குடியரசுத் தலைவர் விருது பெற்ற படம். "குடியரசுத் தலைவரிடமிருந்து விருது பெற என்ன செய்ய வேண்டும்?" என்று ஒருவரைக் கேட்டதற்கு அவர், "கன்னத்தில் முத்தமிட வேண்டும்" என்றார்,

ஆனால், கிறிஸ்துவின் விருது பெறுவதற்குக் கன்னத்தில் முத்தமிடத் தேவையில்லை, மாறாக, நம்மை ஒரு கன்னத்தில் அறைபவருக்கு மறு கன்னத்தையும் காட்ட வேண்டும் (லூக் 6:29).

"விண்ணகத் தந்தை நிறைவுள்ளவராய் இருப்பதுபோல நீங்களும் நிறைவுள்ளவராய் இருங்கள்" (மத் 5:48) என்று மத்தேயு நற்செய்தியில் கிறிஸ்து மலைப்பொழிவுக்கு முத்தாய்ப்பு வைக்கிறார், ஆனால், லூக்கா நற்செய்தியில், “உங்கள் தந்தை இரக்கம் உள்ளவராய் இருப்பது போன்று நீங்களும் இரக்கம் உள்ளவர்களாய் இருங்கள்" (லூக் 6:36) எனக் கூறிக் கிறிஸ்து தமது சமவெளிப் பொழிவுக்கு முத்தாய்ப்பு வைக்கிறார். இரக்க குணம் நம்மை ஆட்சி செய்து, அதன் விளைவாக நாம் நமது பகைவர்களை அன்பு செய்து, நம்மை வெறுப்பவர்களுக்கு நன்மை செய்து, நம்மைச் சபிப்பவர்களுக்கு ஆசி கூறுவதன் மூலமாக நாமும் வானகத் தந்தையைப் போல நிறைவுள்ளவர்களாக முடியும் என்பதை வலியுறுத்துகிறது லூக்கா நற்செய்தி.

ஒரு சந்நியாசி ஓர் ஆற்றிலிருந்து மேலே வர முடியாமல் தத்தளித்துக் கொண்டிருந்த ஒரு தேளை ஒரு குச்சி மூலம் வெளியே கொண்டு வந்தார், தேள் குச்சியின் மேல் வந்ததும் சந்நியாசியின் கையில் கொட்டிவிட்டது. ஆயினும் அவர் மீண்டும் குச்சி மூலம் தேளை மேலே கொண்டு வந்தார். மறுபடியும் அத்தேள் அவரைக் கொட்டிவிட்டது. இதைக் கவனித்த அருகில் இருந்தவர்கள் சந்நியாசியிடம், “தேள் திரும்பத் திரும்பக் கொட்டியும் எதற்கு நீங்கள் அத்தேளுக்கு உதவி செய்கிறீர்கள்?" என்று கேட்டனர். அதற்கு சந்நியாசி அவர்களிடம், “தீமை செய்வது தேளுடைய இயல்பு; துன்பப்படுகிறவர்களுக்கு உதவி செய்வது எனது இயல்பு. தேளுடைய இயல்பு தீயது என்பதற்காக எனது நல்ல இயல்பை நான் மாற்றிக் கொள்ளமாட்டேன்" என்றார்.

தீமை செய்பவர்களுக்கும் நன்மை செய்ய வேண்டும். “தீமை உங்களை வெல்ல விடாதீர்கள். நன்மையால் தீமையை வெல்லுங்கள்" (உரோ 12:21)

ஆபிரகாம் லிங்கன் தம்மை அவதூறாகப் பேசிய ஓர் அரசியல் வாதியைத் தமது அமைச்சரவையில் ஓர் அமைச்சராக்கினார். அதைக் கண்ட மற்ற அமைச்சர்கள், "உங்கள் பகைவனைப் பழிவாங்காமல் அவரை ஏன் அமைச்சராக்கினீர்கள்?" என்ற கேட்டதற்கு லிங்கன், "அவரை அமைச்சராக்கிப் பழி வாங்கிவிட்டேன்" என்றார். பகைவர்களைத் தண்டிக்கும் சிறந்த வழி அவர்களுக்கு நன்மை செய்வதாகும்.

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்துவிடல் (குறள் 314)

வாழ்நாளெல்லாம் நாம் மகிழ்ச்சியாய் இருக்க நாம் கடைப்பிடிக்க வேண்டிய தங்கமான விதிமுறை: “உன்னைக் காயப்படுத்தியவரை நேசி; உன்னை நேசிப்பவரைக் காயப்படுத்தாதே".

சல்லடத்தில் எல்லாமே பொத்தல். அது ஊசியைப் பார்த்து, "உன் காதில் ஒரு பொத்தல் இருக்கின்றது" என்ற தாம். பிறருடைய குற்றங்களை விமர்சிக்கும் நாம் நம்முடைய குற்றங்களைப் பார்ப்பதில்லை. பிறருடைய குற்றங்கள் உடைத்து எறியப்பட வேண்டிய கண்ணாடி அல்ல, மாறாக நமது குற்றங்களைப் பிரதிபலிக்கும் கண்ணாடியாகும், பிறரைத் தீர்ப்பிடுவதையும் கண்டனம் செய்வதையும் இன்றைய நற்செய்தியில் கிறிஸ்து தடை செய்கிறார்,

ஆதாம் மண்ணைச் சார்ந்தவர்; கிறிஸ்துவோ விண்ணைச் சார்ந்தவர்; எனவே நாம் ஆதாமின் சாயலை மட்டுமல்ல, கிறிஸ்துவின் சாயலையும் தாங்கியவர்கள் (இரண்டாம் வாசகம்). ஆதாமின் மனித இயல்பு பழிவாங்கும் இயல்பு: கிறிஸ்துவின் தெய்வீக இயல்பு மன்னிக்கும் இயல்பு. "தந்தையே இவர்களை மன்னியும். ஏனெனில் தாங்கள் செய்வது என்னவென்று இவர்களுக்குத் தெரியவில்லை" (லூக் 23:34). எனவே மன்னிப்போம், மறப்போம்.

ஒவ்வொரு திருப்பலியிலும் நாம் பிறருடன் ஒப்புரவாகி, அதன் அடையாளமாக ஒருவருக்கொருவர் சமாதானத்தை அறிவிக்கின்றோம். பிறருடன் ஒப்புரவாகவில்லையெனில், நாம் பலி ஒப்புக் கொடுக்கத் தகுதியற்றவர்கள் (காண். மத் 5:23-24).



உன்னதக் கடவுளின் மக்கள் யார்?

மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.


நிகழ்வு

  முன்பொரு காலத்தில் ப்ரோகுளுஸ் என்றொரு செல்வந்தர் இருந்தார். அவரிடத்தில் ஏராளமான அடிமைகள் இருந்தார்கள். அந்த அடிமைகளில் பாலுஸ் என்ற அடிமையை அவருக்கு மிகவும் பிடிக்கும். பாலுஸ் தன்னுடைய கடமைகளில் மிகவும் பொறுப்புள்ளவனாகவும் நம்பிக்கைக்குரியவனாகவும் இருந்தான். அதனாலேயே அவனை ப்ரோகுளுஸிக்கு மிகவும் பிடித்துப் போனது.
 
ஒருநாள்  ப்ரோகுளுஸ் தன்னோடு பாலூசையும் கூட்டிக்கொண்டு, புதிதாக அடிமைகளை விலைக்கு வாங்க அடிமைச்சந்தைக்குச் சென்றார். அடிமைகளை ஏலத்திற்கு விடுவதற்கு முன்பு இருவரும் எந்தெந்த அடிமைகளையெல்லாம் விலைக்கு வாங்கலாம் என்று ஒரு பார்வை பார்க்க அடிமைச் சந்தைக்குள்ளே சென்றனர். அப்படிச் செல்லும்போது மெலிந்த தேகத்துடன் வயதான ஒருவர் காணப்பட்டார். அவரைப் பார்த்ததும் பாலுஸ் தன் எஜமானரிடம், “ஐயா! இந்த அடிமையை நாம் விலைக்கு வாங்குவோம்... இவர் இரண்டாள் வேலையைச் செய்வார்” என்றார். “பாலுஸ்! நீ சுயநினைவோடுதான் பேசுகிறாயா... இந்த ஆளைப் பார்ப்பதற்கே மிகவும் பரிதாபமாக இருக்கின்றது... அப்படியிருக்கும்போது இவர் இரண்டாள் வேலையைச் செய்திடுவார் என்று சொல்கிறாயே... எது எப்படி” என்று இழுத்தார் ப்ரோகுளுஸ்.

  “ஐயா! இவரைப் பார்ப்பதற்குத்தான் அப்படியிருக்கின்றது. ஆனால், இவர் இரண்டாள் வேலையைச் செய்யக்கூடியவர் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது” என்று உறுதியாகச் சொன்னான் பாலுஸ். “சரி, நீ சொல்லிவிட்டாய் என்பதற்காக வாங்குகிறேன்” என்று அடிமைகள் ஏலம் விடப்பட்ட நேரத்த்தில் ப்ரோகுளுஸ், மெலிந்த தேகத்தோடு இருந்த அந்த வயதான அடிமையை விலைக்கு வாங்கிக்கொண்டு போனார்.
 

 நாட்கள் மெல்ல நகர்ந்தன. பாலுஸ் தன் எஜமானர் ப்ரோகுளுஸிடம் சொன்னதுபோன்றே அந்த அடிமை வந்தபிறகு இருமடங்கு வேலைகள் நடந்தன. இது ப்ரோகுளுஸிற்கு ஆச்சரியமாக இருந்தன. ‘வயதான, அதுவும்  மெலிந்த தேகத்தோடு இருக்கும் அந்த மனிதரால் எப்படி இருமடங்கு வேலைகள் நடைபெறுகின்றன?... அது எப்படி என்று பார்த்துவிடுவோம்’ என்று ப்ரோகுளுஸ் அந்த மனிதரைக் கூர்ந்து கவனிக்கத் தொடங்கினார். அப்போதுதான் தெரிந்தது, நடந்த வேலைகள் அனைத்தும் அந்தப் பெரியவர் செய்யவில்லை.... பாலுஸ்தான் செய்கிறான் என்று. அது மட்டுமல்லாமல், பாலுஸ் மற்ற எல்லா அடிமைகளை விடவும் வயதான அந்த அடிமையை அதிக அக்கறையோடு கவனிப்பதும் தெரியவந்தது.
 

உடனே ப்ரோகுளுஸ் பாலுசை அழைத்து, “இந்தப் பெரியவர்மீது இவ்வளவு அக்கறை காட்டுகிறாயே! இவரென்ன உன்னுடைய தந்தையா?... உறவுக்காரரா?... இல்லை தெரிந்தவரா?” என்றார். அதற்கு பாலுஸ், “இவர் என்னுடைய தந்தையோ, உறவுக்காரோ, தெரிந்தவரோ இல்லை. இவர் எனக்கு எதிரி!... சிறுவயதில் நானும் என்னோடு பிறந்தவர்களும் என் தந்தையோடு மகிழ்ச்சியாக வாழ்ந்துகொண்டிருந்தபோது, இவர் எங்களுடைய தந்தையைக் கொன்றுவிட்டு, எங்கள் அனைவரையும் அடிமைகளாக விற்றுவிட்டார்... ஆனாலும் கிறிஸ்தவராகிய எனக்கு இவரை அடிமைச் சந்தையில் பார்த்தபோது பழிவாங்கத் தோன்றவில்லை. மாறாக, இவருக்கு நல்லது செய்யத் தோன்றியது. அதனால்தான் இவரை இங்கு அழைத்துக்கொண்டு வந்து, இவர்மீது தனிப்பட்ட அன்பு கட்டி வருகிறேன்” என்றான்.
 
பாலுஸ் இவ்வாறு பேசுவதைக் கேட்ட அவனுடைய எஜமானன் ப்ரோகுளுஸ், ‘இப்படியெல்லாம் பகைவர்களை மன்னித்து அன்புசெய்யும் மனிதர்கள் இருப்பார்களா?’ என்று பாலுசைப் பார்த்து வியந்து நின்றார்.

பொதுக்காலத்தின் ஏழாம் ஞாயிற்றுகிழமையில் இருக்கும் நமக்கு, இன்றைய நாளில் நாம் படிக்கக்கேட்ட நற்செய்தி வாசகம், நம்மை உன்னதக் கடவுளின் மக்களாக வாழவதற்கு அழைப்புத் தருகின்றது. அதற்கு நாம் என்ன செய்வது என்று இப்போது சிந்தித்துப் பார்ப்போம்.
 

  1. வன்முறைசெய்வோர் கடவுளின் மக்களாக முடியாது

இந்த உலகத்தில் மூன்று விதமான மனிதர்கள் இருக்கிறார்கள். அதில் முதலாவது வகையினர், வன்முறையாளர்கள். இப்படிப்பட்டவர்கள் ‘அடித்தால் திரும்பி அடிக்கவேண்டும்’, ‘ஒரு கண்ணை எடுத்தால் பதிலுக்கு ஒரு கண்ணை எடுக்கவேண்டும்’ என்ற மனநிலையோடு செயல்படக்கூடியவர்கள். இவர்களுடைய எண்ணமெல்லாம் வன்முறையால்தான் விடிவு வரும் என்பதாகும். இயேசுவின் காலத்தில் வாழ்ந்த தீவிரவாதக் குப்பலை இதற்கு எடுத்துக்காட்டாகச் சொல்லலாம்.

இவர்களுடைய எண்ணத்தின்படி, வன்முறைக்கு வன்முறைதான் தீர்வு என்றால், இந்த உலகத்தில் யாரும் இருக்க முடியாது அல்லது முள்ளை முள்ளால்தான் எடுக்கவேண்டும் என்றால், கண்ணில் விழுந்த முள்ளை முள்ளால் எடுக்குமா?. சாத்தியமில்லைதானே, அதுபோலத்தான் இந்த உலகத்தில் அமைதி பிறக்க வன்முறை ஒருபோதும் தீர்வாக இருக்காது; வன்முறையாளர்கள் உன்னதக் கடவுளின் மக்களாகவும் முடியாது.

  1. எதையும் எதிர்பார்த்து அன்பு செய்பவர்கள் கடவுளின் மக்களாக முடியாது

 வன்முறையாளர்கள் ஒருவகையினர் என்றால், எதையும் எதிர்பார்த்து அன்பு செய்யக்கூடியவர்கள் இந்த உலகத்தில் இருக்கின்ற மற்றொரு வகையினராக இருக்கிறார்கள்.


ஒரு பொருளைக் கொடுப்பதிலிருந்து ஒருவரை அன்பு செய்வதுவரைக்கும் இங்கு எல்லாமே எதிர்பார்ப்போடுதான் நடைபெறுகின்றன. நான் உனக்கு ஒரு நல்லது செய்தால் பதிலுக்கு நீ எனக்கு நல்லது செய்யவேண்டும் என்றும் நான் உன்னை அன்பு செய்கிறேன் என்றால் பதிலுக்கு நீ என்னை அன்பு செய்யவேண்டும் என்ற எதிர்பார்ப்பில் இந்த உலகமே இயங்கிக்கொண்டிருக்கின்றது போலும் என்று எண்ணத் தோன்றுகின்றது. இப்படி எதையும் எதிர்பார்த்து அன்பு செய்யக்கூடியவர்கள் அல்லது அன்பு செய்பவர்களை மட்டும் அன்பு செய்பவர்கள் கடவுளின் மக்களாக இருக்கமுடியாது. இவர்கள் நற்செய்தியில் இயேசு சொல்வதுபோல பாவிகள்தான் (6: 32). பாவிகள்தான் அன்பு செய்பவர்களை அன்பு செய்வார்கள்.
 

  1. பகைவர்களை அன்புசெய்பவர்களே கடவுளின் மக்கள்  


வன்முறையாளர்கள், எதையும் எதிர்பார்த்து அன்பு செய்யக்கூடியவர்கள் வரிசையில் மூன்றாவது வரக்கூடியவர்கள் பகைவர்களையும் அன்பு செய்யக்கூடியவர்கள்; தீமைக்கு நன்மை செய்யக்கூடியவர்கள்.


பகைவர்களை அன்புசெய்வது என்பது இந்த உலகத்தின் போக்குக்கு எதிராகச் செல்லக்கூடியது. இது எல்லாராலும் முடியாது. தூய ஆவியின் அருட்பொழிவைப் பெற்றிருக்கின்ற ஒருவரால்தான் முடியும் (உரோ 5:5). அப்படித் தூய ஆவியின் அருட்பொழிவைப் பெற்று, பகைவர்களை அன்புசெய்கின்றபோது அல்லது தீமை செய்பவர்களுக்கு நன்மை செய்கின்றபோது, நாம் உன்னதக் கடவுளின் மக்களாகின்றோம் என்பதில் எந்தவொரு மாற்றுக்கருத்தும் கிடையாது. ஏனெனில் கடவுள்தான் தன்னை வெறுப்போரையும் சபிப்போரையும் அன்பு செய்கின்றவராக இருகின்றார்.


ஆகையால், நம்மை வெறுப்போரையும் நமக்கு எதிராகத் தீமை செய்வோரையும் அன்பு செய்வோம். அதன்வழியாக உன்னதக் கடவுளின் அன்பு மக்களாவோம்.

 
சிந்தனை
 

         “அன்பு ஒன்றும்தான் எதிரியையும் நண்பராக்கும்” என்பார் ஜூனியர் மார்டின் லூதர் கிங். ஆம், தன்னலமற்ற, பிரதிபலன் பாராத அன்பு பகைவரையும் நண்பராக்கும் அதே நேரத்தில் நம்மை உன்னதக் கடவுளின் மக்களாகவும் மாற்றும்

  ஆகவே, எல்லாரையும் எந்தவொரு எதிர்பார்ப்பில்லாமல் அன்புசெய்வோம்; தீமை செய்வோருக்கு நன்மை செய்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

 


 
 
கொஞ்சம் எக்ஸ்ட்ரா

கடந்த மாதத்தில், 'எக்ஸ்டரா ஐ, எக்ஸ்ட்ரா இயர், எக்ஸ்ட்ரா ஹார்ட்' என்ற தலைப்பிட்ட டெட் காணொளி உரையைக் கேட்டேன். 'டெக்னாலஜி, என்டர்டயின்மெண்ட், டிசைன்' என்று மூன்று ஆங்கிலச் சொற்களின் முதல் எழுத்துகள் இணைவுதான் 'டெட்'. இந்தியப் பேச்சாளர்கள் வரிசையில் ஜோசப் அன்னம்குட்டி ஜோஸ் என்ற பாலக்காட்டு இளைஞர் ஒருவர் மேற்காணும் தலைப்பில் பேசினார். இவர் பண்பலை ஒன்றின் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருக்கிறார். மூன்று கதைகள் சொல்லி தன் உரையை நிகழ்த்தினார். அதில் முதல் கதை அவருடைய கல்லூரிப் பருவம் பற்றியது. எம்.பி.ஏ. படித்துக்கொண்டிருந்த அவர் முதல் பருவத்தில் ஒரு பாடத்தில் தவறி விடுகிறார். அவரால் அத்தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆசிரியர்கள் கடிந்துகொள்கிறார்கள். நண்பர்கள் அவரை ஒதுக்குகிறார்கள். மாலையில் வீட்டிற்கு வந்த அவர் தன் பெற்றோரை அழைத்து தான் தேர்வில் தவறியதைச் சொல்கிறார். அப்பாவும், அம்மாவும் அவரை ஒன்றும் சொல்லவில்லை. அப்பா அவரை அழைத்து, 'வா வெளியே போய்விட்டு வருவோம்' என்று தோளில் கைபோட்டு இவரை அழைத்துச் செல்கிறார். ஊருக்கு வெளியே இருக்கின்ற ஒரு சிறிய சாலையோர ஓட்டலுக்குச் செல்கிறார்கள். அப்பா, 'இரண்டு டீ, ஒரு மசால் தோசை' என்று ஆர்டர் செய்துவிட்டு அமர்கிறார். இவருக்கு ஒன்றுமே புரியவில்லை. தன்னை அப்பா தவறாகப் புரிந்துகொண்டாரோ என்றுகூட நினைக்கிறார். அவர்கள் ஆர்டர் செய்தவை வருகின்றன. மசால் தோசையை இவர் பக்கம் நகர்த்தி வைக்கும் அப்பா, 'ஜோஸ், சாப்பிடு! தோல்வி எப்போதும் முடிவல்ல' என்று டீயைக் குடிக்க ஆரம்பிக்கிறார். இவருக்கு கண்ணீர் பொங்கி வழிகிறது. இதுவரைத் தன் தோல்விக்காக அழாதவர் இப்போது தன் தந்தையின் பரிவின்முன் அழுகிறார். நாட்கள் நகர்கின்றன. இவர் அத்தேர்வை எழுதி வெற்றி பெறுகின்றார். அத்தேர்வின்போது இவருடைய அடுத்த பேட்ச் மாணவர்களின் நட்பும் கிடைக்கிறது. ஆக, கல்லூரி செயலராகவும் தெரிவுசெய்யப்படுகின்றார். 'என் அப்பா அன்று என்னை ஒரு எக்ஸ்ட்ரா கண் கொண்டு பார்த்ததால், எக்ஸ்டரா காது கொடுத்து நான் பேசியதைக் கேட்டதால், எக்ஸ்ட்ரா இதயம் கொண்டு என் தோல்வியை ஏற்றுக்கொண்டதால் என்னால் சாதிக்க முடிந்தது' என உரையின் முதல் பகுதியை நிறைவு செய்கிறார் ஜோஸ்.

கொஞ்சம் எக்ஸ்ட்ரா, அல்லது இன்னும் கொஞ்சம் - இதுதான் இன்றைய இறைவாக்கு வழிபாடு நமக்கு வழங்கும் செய்தியாக இருக்கிறது. நாம் காலையில் கண் விழித்தவுடன் தேடும் பற்பசை தொடங்கி, நாள் முழுவதும் பயன்படுத்தும் அலைபேசி, இணையதள சேவை எனத் தொடர்ந்து, இரவில் தூங்குவதற்கு முன் ஏற்றும் குட்நைட் லிக்விட் வரை, எல்லாவற்றிலும், 'கொஞ்சம் எக்ஸ்ட்ரா' என்று இன்றைய வியாபார உலகம் நம்மை ஈர்த்துக்கொண்டே இருக்கிறது. ஆனால், இந்த 'எக்ஸ்ட்ராக்கள்' எல்லாம் நம் மேல் சுமத்தப்பட்டவை. இவைகள் நமக்கு வழங்கப்படும் இலவசங்கள் அல்ல. இவற்றிற்கான பணமும் நம்மிடமிருந்து வசூலிக்கப்பட்டுவிடுகிறது. மேலும், இவைகள் ஒவ்வொன்றும் நிபந்தனைக்கு உட்பட்டவை. இன்றைய இறைவாக்கு வழிபாடு நம்மை அழைப்பது வியாபார நோக்கம் அற்ற, நிபந்தனைகள் அற்ற 'கொஞ்சம் எக்ஸ்டராவிற்கு.'

எப்படி?

இன்றைய முதல் வாசகம் (காண். 1 சாமு 26:2,7-9,12-13,22-23) தன் கைக்குக் கிடைத்த சவுலைக் கொல்லாமல் விடும் தாவீதின் பெருந்தன்மையையும், அவர் அருள்பொழிவு செய்யப்பட்ட சவுலின்மேல் வைத்திருந்த மதிப்பையும் எடுத்துரைக்கிறது. சவுல் இஸ்ரயேலின் முதல் அரசன். சிதறுண்டு கிடந்த இஸ்ரயேலின் பன்னிரு குலங்களை ஒன்றாகச் சேர்த்து, அன்றைய புதிய மற்றும் ஆற்றல்மிக்க எதிரியான பிலிஸ்தியரை வெல்வது சவுலின் முதன்மையான பணியாக இருந்தது. சவுல் இயல்பாகவே நல்லவர். மேலும், தொலைந்து போன கழுதையைத் தேடி வந்த அவரை ஆண்டவர் அரசராக்குகிறார். ஆக, ஆண்டவரால் தான் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையை அவர் நன்றாகவே அறிந்திருந்தார். பிலிஸ்தியருக்கு எதிரான போரில் தொடக்கத்தில் இவர் வெற்றி பெற்றாலும், காலப்போக்கில் இறைவாக்கினர் சாமுவேலோடு நடந்த உரசல்களாலும், தனக்கென்றும் தன் மாட்சிக்கென்றும் அரசாட்சியைப் பயன்படுத்தியதாலும் கடவுளின் அதிருப்திக்கு ஆளாகின்றார் சவுல். சவுல் அரசாட்சியில் இருக்கும்போதே தாவீது அரசராக அருள்பொழிவு பெறுகின்றார். பெலிஸ்தியன் கோலியாத்தை வென்றதில் தொடங்கி தாவீதின் ஆற்றல் மற்றும் போரிடும் திறன் மற்றவர்களால் அதிகம் பேசப்படுகிறது. இது சவுலின் பொறாமையைத் தூண்டி எழுப்புகிறது. தன் அரச இருக்கை தன்னிடமிருந்து பறிபோhய்விடுமோ என்ற பயத்தில் தாவீதை பல நேரங்களில் பல இடங்களில் கொல்ல முயல்கிறார் சவுல். ஒரு கட்டத்தில் சவுலிடமிருந்து தப்பி பாலைநிலத்தில் தஞ்சம் புகுகிறார் தாவீது. தாவீதை இவ்வாறு விரட்டிக்கொண்டே செல்லும் சவுல் ஒரு கட்டத்தில் தாவீதின் கைகளில் விழுகின்றார். இந்த நிகழ்வைத்தான் இன்றையை முதல் வாசகம் வர்ணிக்கிறது. சவுல் கூடாரத்திற்குள் தூங்கிக்கொண்டிருக்கின்றார். அவரோடு இருந்த படைவீரர்களும் தூங்குகின்றனர். பயணக் களைப்பு மற்றும் மலைப்பாங்கான இடம் என்பதால் மிகவும் அயர்ந்து தூங்குகிறார்கள். சவுலின் தலைமாட்டில் ஈட்டி இருக்கிறது. மேலும், தாவீதோடு உடன் வந்த அபிசாய் தானே சவுலைக் கொன்று தாவீதிடம் 'வெரி குட்' வாங்க முன் வருகின்றார். ஆக, தனக்கு முன் தூங்கிக் கொண்டிருக்கும் எதிரி, கையின் அருகில் ஈட்டி, தனக்குப் பதிலாகக் குத்தக் காத்திருக்கும் அபிசாய் என மூன்று வாய்ப்புக்கள் இருந்தும், 'அவரைக் கொல்லாதே! ஆண்டவரால் திருப்பொழிவு செய்யப்பட்டவர்மேல் கைவைத்துவிட்டுக் குற்றமற்று இருப்பவன் யார்?' என்று சொல்லிச் சவுலைக் கொல்லாமல் விடுகின்றார். மேலும், தான் அந்த இடத்திற்கு வந்து, சவுலுக்குத் தீங்கிழைக்க வாய்ப்பு கிடைத்தும், தான் தீங்கு செய்யாமல் விட்டதன் அடையாளமாக, 'தலைமாட்டில் இருந்த ஈட்டியையும், தண்ணீர்க் குவளையையும்' எடுத்துக்கொண்டு போகிறார் தாவீது. காலையில் துயில் எழும்பியதும் சவுல் தேடியவையும் இவைகளாகத்தான் இருந்திருக்கும். மேலும், மறுநாள், 'அவனவன் நீதிக்கும் உண்மைக்கும் ஏற்ப ஆண்டவர் என்னை உம்மிடம் ஒப்புவித்தும் ஆண்டவரால் திருப்பொழிவு செய்யப்பட்டவர்மேல் நான் கைவைக்கவில்லை' என்று உரக்கக் கூறுகிறார் தாவீது.

ஆக, தனக்கு இன்னா செய்த சவுலை ஒறுக்காமல், அவரின் உயிரை விட்டுவைக்கின்றார் தாவீது. தன் கையில் சவுலின் உயிர் கிடைத்தும், தனக்கு வாய்ப்புகள் கிடைத்தும், அதைக் கடவுளே அனுமதித்தும், சவுலுக்குத் தீங்கு செய்ய மறுப்பதன் வழியாக, 'கொஞ்சம் எக்ஸ்ட்ரா' இதயம் கொண்டவராக நமக்கு முன்வைக்கப்படுகிறார் தாவீது.

இன்றைய இரண்டாம் வாசகம் (காண். 1 கொரி 15:45-49) இறந்தவர் உயிர்பெற்றெழுதல் பற்றிய போதனையின் தொடர்ச்சியாக இருக்கிறது. இறந்தவர் உயிர்ப்பு பற்றி கொரிந்து நகரத் திருச்சபைக்கு விளக்குகின்ற பவுல், 'ஆதாம்' 'கிறிஸ்து' என்ற இரண்டு உருவகங்களைப் பயன்படுத்தி, 'மனித' மற்றும் 'ஆவிக்குரிய' இயல்புகளின் குணநலன்களை முன்வைக்கின்றார். இங்கே, ஆதாம் உயிர் பெற்றவர் என்றும், கிறிஸ்து உயிர் தருபவர் என்றும் பவுல் முன்வைக்கின்றார். ஆதாம் உயிர் பெற்றார். ஆனால், அவருடைய மனித இயல்பில் அவர் இருந்ததால் அவரால் மீண்டும் உயிர் தர முடியவில்லை. ஏனெனில், மனித இயல்பு அழிவுக்குரியது. அது வரையறைக்குட்பட்டது. ஆனால், கிறிஸ்து அப்படி அன்று. அவர் தான் மனுவுரு ஏற்றபோது உயிர் பெற்றவராக இருந்தாலும், தன் உயிர்ப்பின் வழியாக அவர் உயிர்தருபவராக மாறுகின்றார். ஏனெனில், அவருடைய இயல்பு ஆவிக்குரியது. அது வரையறைகள் அற்றது. 

ஆக, ஆதாமால் கொஞ்சம் எக்ஸ்ட்ரா நடக்க முடியவில்லை என்றும், கிறிஸ்து தன் உயிர்ப்பால் 'உயிர்தரும்' எக்ஸ்ட்ரா நிலைக்கு உயர்ந்தார் எனவும் சுட்டிக்காட்டுகின்றார் பவுல். மேலும், ஒருவர் தன் ஆதாம் இயல்போடு இணைத்துக்கொண்டால் அவரால் வேறு ஒன்றும் செய்ய முடியாமல், மண்ணைச் சார்ந்த இயல்பைக் கொண்டவராக இறந்துவிடுவார் என்றும், ஒருவர் கிறிஸ்து இயல்போடு இணைத்துக்கொண்டால் அவரால் உயிர்தரும் இயல்பையும் பெற்று கிறிஸ்துவோடு உயிர்க்க முடியும் என்றும் அறிவுறுத்துகிறார் பவுல்.

இன்றைய நற்செய்தி வாசகம் (காண். லூக் 6:27-38) கடந்த வார சமவெளிப்பொழிவின் தொடர்ச்சியாக இருக்கிறது. சாதாரண மனித மூளைக்கு மிக அசாதாரணமாகவும், கடினமாகவும் தோன்றும் சிலவற்றைப் பின்பற்றுமாறு தன் சீடர்களுக்கு அறிவுறுத்துகின்றார் இயேசு. இயேசுவின் கட்டளை இரண்டு நிலைகளில் இருக்கிறது: (அ) 'பகைவரிடம் அன்பு, சபிப்பவருக்கு ஆசி, இகழ்ந்து பேசுபவருக்கு இறைவேண்டல், கன்னத்தில் அறைபவருக்கு மறுகன்னம், மேலுடையை எடுத்துக்கொள்பவருக்கு அங்கி, கேட்பவருக்குக் கொடுத்தல், பொருள்களை எடுத்துக்கொள்வோரிடமிருந்து திருப்பிக் கேட்காமல் இருத்தல்,' (ஆ) 'பிறருக்கு தீர்ப்பளிக்க வேண்டாம். மன்னியுங்கள். கொடுங்கள்.' ஒருவர் இந்த இரண்டு கட்டளைகளையும் பின்பற்ற வேண்டுமானால், அவர் தன்னுடைய தனிப்பட்ட அறநெறிக்கொள்கையையும், தான் மனித உறவுகளைப் பற்றி வைத்திருக்கின்ற எண்ணங்களையும் மறுஆய்வு செய்ய வேண்டும். இயேசுவின் புதிய கொள்கைத்திரட்டைப் பின்பற்ற அவரே மூன்று உந்துப்புள்ளிகளையும் தருகின்றார்: (அ) 'பிறர் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என விரும்புகிறீர்களோ, அதையே நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்' - ஆண்டான், அடிமை, இருப்பவன், இல்லாதவன், மேலிருப்பவன், கீழிருப்பவன், முதலாளி, வேலைக்காரன் என எல்லாருக்கும் பொருந்தும் இவ்விதி ஒருவரின் தனிமனித மாண்பை மையப்படுத்துவதாக இருக்கிறது. (ஆ) 'உங்கள் தந்தை இரக்கமுள்ளவராய் இருப்பது போல நீங்களும் இரக்கமுள்ளவராய் இருங்கள்' - கடவுளைப் போல இருத்தலை ஒரு ஐடியலாக முன்வைக்கிறார் இயேசு. ஆக, ஒருவரின் மனித இயல்பைச் சற்றே உயர்த்துகின்றார். (இ) 'நீங்கள் எந்த அளவையால் அளக்கிறீர்களோ அதே அளவையால் உங்களுக்கும் அளக்கப்படும்' - ஆக, நான் செய்வது எனக்கே திரும்பக் கிடைக்கும் என்ற ஆர்வம் அல்லது அச்சத்தினால் செய்ய அழைக்கிறார் இயேசு.

ஆக, மேற்காணும் இரண்டு கட்டளைகள் மற்றும் மூன்று உந்துபுள்ளிகளின் நோக்கம் ஒன்றுதான்: 'கொஞ்சம் எக்ஸ்ட்ரா வாழ்வது.' இப்படி வாழ்பவர்கள் 'உன்னத கடவுளின் மக்கள் எனப்படுவார்கள்' என்ற புதிய பெயரையும் இயேசு தருகின்றார். ஆக, எல்லாரும் செய்வதைப் போலச் செய்யாமல், கொஞ்சம் அதிகமாக செய்யச் சொல்கிறார் இயேசு.

நம் வாழ்வில் 'கொஞ்சம் எக்ஸ்ட்ரா கண், காது, இதயம்' கொண்டு எப்படி வாழ்வது?

1. பிறரின் நல்வாழ்வு என் இலக்காக வேண்டும்

கொஞ்சம் எக்ஸ்ட்ரா கண், காது, இதயம் கொண்டு வாழ்வதன் இலக்கு தன்னுடைய நல்வாழ்வு அன்று. மாறாக, எனக்கு அடுத்திருப்பவரின் நல்வாழ்வு. அல்லது அடுத்தவரின் நல்வாழ்வை இலக்காக வைக்கும் ஒருவரால்தான் கொஞ்சம் எக்ஸ்ட்ரா செயல்பட முடியும். அடுத்தவரின் நல்வாழ்வை இலக்காக வைப்பது என்பது ஒருவருடைய தனிப்பட்ட வாழ்வை இழக்கத் துணிவது. தூங்கி எழும் சவுல் தன்னை மீண்டும் துரத்துவார், தன் உயிரைப் பறிக்கத் தேடுவார் எனத் தெரிந்தும், தன் பாதுகாப்பின்மையிலும் சவுலின் பாதுகாப்பை முதன்மைப்படுத்துகின்றார். சவுலின் உயிரைக் கொல்லாது விடுகின்றார். தன் இறப்பின் வழியாகத்தான் மானுடம் மீட்புப் பெற முடியும் என்று இயேசு மானுட நல்வாழ்வை இலக்காகக் கொண்டிருந்ததால்தான் அவரால் தன்னுடைய இன்னுயிரை இழக்க முடிகிறது. இன்னும் கொஞ்சம் எக்ஸ்ட்ரா என எல்லாவற்றையும் செய்ய முடிகிறது. இயேசுவின் சீடர்களும், அவருடைய இரண்டு கட்டளைகளைக் கடைப்பிடிப்பதன் நோக்கம் தங்கள் நல்வாழ்வு அல்ல. மாறாக, பிறரின் நல்வாழ்வே. ஏனெனில், இயேசுவின் கட்டளைகளைக் கடைப்பிடிக்கும் அவர்கள் நிறைய துன்பத்தைத் தாங்க வேண்டியிருக்கும். மற்றவர்கள் தங்களைக் காயப்படுத்துவதை அவர்கள் பொறுத்துக்கொள்ள வேண்டும். இது அவர்களின் மனச்சுமையை அதிகரிக்கும். கன்னத்தில் வலி அதிகமாகும். அலமாரியில் ஆடைகள் எண்ணிக்கை குறையும். வங்கிக் கணக்கில் பணம் குறையும். மற்றவர்களால் 'முட்டாள்' என்று கருதப்படும் நிலை உருவாகும். மற்றவர்களால் ஏமாற்றப்படும்போது கோபம் வரும். இருந்தாலும், இவை எல்லாவற்றிலும் பிறரின் நல்வாழ்வு முதன்மையாக நிற்பதால் இவர்கள் இவை அனைத்தையும் பொறுத்துக்கொள்ள வேண்டும்.

2. வலியை வலிந்து ஏற்றல் வேண்டல்

'தெ ஸெல்ஃபிஷ் ஜீன்' என்ற நூலின் ஆசிரியர் ரிச்சர்ட் டாக்கின்ஸ், மனித உடலின் ஜீன்கள் இயல்பாகவே தன்னலம் நோக்கம் கொண்டவை என்கிறார். இவைகளால் எந்த நேரத்திலும் தங்களைப் பற்றி மட்டுமே சிந்திக்க முடியும். மேலும், எந்த ஆபத்து நேரத்திலும் இவைகள் தங்களைத் தற்காத்துக்கொள்வதிலேயே கவனமாக இருக்கும் என்கிறார். ஏனெனில், ஜீன்கள் இயல்பாகவே வலியை ஏற்கத் தயங்குபவை. இன்றைய இறைவாக்கு வழிபாட்டில் நாம் காணும் தாவீது, இயேசு, இயேசுவின் சீடர்கள் இந்த இயல்புக்கு எதிராகச் செல்கிறார்கள். வலியைத் தாங்களாகவே ஏற்கிறார்கள். இன்றைய நம் உலகம் வலிகள் இல்லாமல் வழிகளைக் கற்றுக்கொடுக்க நினைக்கிறது. ஆனால், வலிகளை வலிந்து ஏற்பதில் வழிகள் தென்படுவதோடல்லாமல், வலிகளும் மறைந்துவிடும் எனக் கற்பிக்கிறது இன்றைய இறைவாக்கு வழிபாடு.

3. என் அளவை எது? என்ற தெளிவும் உறுதியும் வேண்டும்

வாழ்க்கை ஒரே அளவையால் எல்லாருக்கும் அளப்பதில்லை. மேலும், நான் பிறருக்கு அளக்கும் அளவையைப் போல அவரும் எனக்கு அளப்பதில்லை. நான் நன்றாகக் கூலி கொடுக்கும் வீட்டுத் தலைவியாக இருக்க, என் வீட்டில் வேலை செய்பவர் அதற்கேற்ற வேலை செய்வதில்லை. ஆசிரியரின் உழைப்பு என்ற அளவைக்கு ஏற்ப மாணவர்கள் உழைப்பதில்லை. நான் நல்லது செய்ய அதுவே எனக்குத் தீங்காகவும் முடியலாம். இம்மாதிரி நேரங்களில் எல்லாம், அளவைகளை மாற்றிக்கொள்ளும் சோதனை வரும். அச்சோதனையிலிருந்து விடுபட வேண்டும். தாவீதுக்கு சோதனை அபிசாய் வடிவிலும், மேலும் தன்னுடைய சிந்தனையாலும் வருகிறது. 'கடவுளே இதை அனுமதித்தார்' என்று தனக்குத் தானே நியாயம் சொல்லி சவுலை அவர் கொன்றிருக்கலாம். ஆனால், எந்த நிலையிலும் தன் தகைமை, தாராள உள்ளம் என்னும் அளவையை அவர் மாற்றிக்கொள்ளவே இல்லை. இதுதான் கன்சிஸ்டன்ஸி - மாறாத்தன்மை. ஆகையால்தான், இயேசுவும் 'தந்தை போல இரக்கம் கொள்ளுங்கள்' என்கிறார். கடவுள் தன் அளவையை ஆள்பார்த்து மாற்றுவதில்லை. எல்லார்க்கும் பெய்யும் மழையாக அவர் இருக்கிறார். 'என் அளவையை மாற்றிக்கொள்ள' என் ஆதாம் இயல்பு என்னைத் தூண்டும்போது, உடனடியாக மாறாத கிறிஸ்து இயல்பை அணிந்துகொள்ள வேண்டும்.

இறுதியாக, இன்று சரிக்குச் சரி, தவறுக்குத் தவறு, அல்லது சரிக்கும் தவறு, என்ற குறுகிய மனநலப் போக்கே நம் தனிப்பட்ட மற்றும் சமூக வாழ்வின் மகிழ்வைக் குலைக்கிறது. யாரும் தங்களுக்குக் குறிக்கப்பட்ட ஒன்றையே செய்யத் தயங்கும் இன்று, 'கொஞ்சம் எக்ஸ்ட்ரா' சாத்தியமா? என்ற கேள்வி எழுகிறது. ஆனால், இயேசுவின் மாற்றுக்கலாச்சாரம் எப்போதும் சாத்தியமே. இன்றைய பதிலுரைப் பாடலில் நாம் வாசிப்பது போல (திபா 103), ஆண்டவர் 'எனக்கு பேரன்பையும் இரக்கத்தையும் மணிமுடியாகச் சூட்டியிருக்கிறார்' என்றால், நானும் அவருடைய மகனாக, மகளாக, கொஞ்சம் எக்ஸ்ட்ரா அன்பு, இரக்கம் என வாழ்ந்தால் எத்துணை நலம்! 

கொஞ்சம் எக்ஸ்ட்ரா - என் வாழ்விலும், பணியிலும் - தாவீது போல, இயேசு போல!
 



Wednesday, 13 February 2019

ஆண்டின் பொதுக்காலம் 6-ஆம் ஞாயிறு


ஆண்டின் பொதுக்காலம் 6-ஆம் ஞாயிறு


இன்றைய வாசகங்கள்

எரேமியாஸ் 17:5-8
1கொரிந்தியர் 15:12, 16-28
லூக்கா 6:20-26
 



ஏழ்மை - வாழ்வு!

ஒரு நாள் வீதியிலே பிச்சை கேட்டுக் கொண்டிருந்த பிச்சைக்காரனை நோக்கி, அரசன் அரண்மனைக்கு வரச் சொன்னான். அரசன் பொன்னும், பொருளும் நிறையத் தருவான் என்ற எதிர்பார்ப்போடு அவன் உள்ளே சென்றான். வாயிற்காவலனும் உள்ளே போக அனுமதித்தான். அரசன் உள்ளே செபித்துக் கொண்டிருந்ததால் பிச்சைக்காரனைச் சிறிது நேரம் காத்திருக்கச் சொன்னார்கள். ஆனால் பிச்சைக்காரன் சிறிது நேரத்தில் வெளியே புறப்பட்டுச் சென்றான். அரசன் என்ன கொடுத்தார் என்று வாயிற்காவலன் ஆவலோடு கேட்டான். அரசனே ஒரு பிச்சைக்காரனாக ஆண்டவரிடம் கையேந்தி நிற்கிறார். அவரிடம் பிச்சை கேட்க முடியாது என்று திரும்பிவிட்டேன் என்றான் பிச்சைக்காரன்.

இந்தக் கதையைக் கேட்கின்ற நீங்கள், இன்றைய இறைவார்த்தையைக் கேட்ட நீங்கள் இயேசுவின் பார்வையில் யார் பேறு பெற்றவர்கள், யார் சபிக்கப்பட்டவர்கள் என்பதைச் சிந்திக்க அழைக்கிறேன்.

இறைவன் சமதளமான இடத்திலே வந்து போதித்தார் என வாசிக்கக் கேட்டோம். ஏனெனில் புனித லூக்கா குறிப்பிடுவது போல இறைவனே இறங்கி வந்து மனிதனோடு மனிதனாகப் பேசினார் என்பதைத்தான் இந்தச் சமதளமான இடம் குறிப்பிடுகிறது.

இன்றைய நற்செய்தியிலே லூக்கா நான்கு வகையான பேறுகளைத் தருகின்றார். ஏழைகளே! பேறு பெற்றவர்கள் என்கிறார். இயேசுவின் பார்வையில் பொருள் இல்லாமல் இருக்கிற ஏழைகள் மட்டுமல்ல, அருளில்லாமல் இருந்து அருளைத் தேடுபவர்களும் பேறு பெற்றவர்கள். எனவேதான் உண்மைச் செல்வமாகிய, நிலையான செல்வமாகிய விண்ணகத்தைத் தேட அழைக்கிறார் (மத். 6:3 லூக் 6:20).

(1) உடல் பட்டினியால் வாடுபவர்களைவிட ஆன்ம பசியால் வாடுபவர்களே பேறு பெற்றவர்கள் என்கிறார்.
(2) பெரும் கண்ணீரோடு புலம்புவதைவிட தங்கள் பாவத்திற்காக மனம் உடைந்து அழுபவர்களே பேறுபெற்றவர் என்கிறார்.
(3) உலகத்தால் வெறுக்கப்பட்டவர்கள் கடவுளால் ஏற்றுக் கொள்ளப்பட்டவர்கள் என்றும் தெரிவிக்கிறார்.

ஆனால் கடவுளை விட்டு உலகையும், உலகச் செல்வத்தையும் நம்பி வாழும் அத்தனை பேரும் சபிக்கப் பட்டவர்கள். இவர்கள் முத்து இல்லாத சிப்பி குப்பையிலே எறியப்படுவதுபோல ஒன்றுக்கும் உதவாதவர்கள்.

இயேசு வாழ்ந்த காலத்திலே பாலஸ்தீனத்திலே ஏழைகளுக்கும் செல்வந்தர்களுக்கும் இடையே பெரும் வித்தியாசம் இருந்தது. எடுபிடி வேலை செய்யவும், கூலி வேலை செய்யவும் ஏழை மக்கள் பயன்படுத்தப்பட்டார்கள். ஏழை மக்கள் பொருளாதாரத்தில் வளர்ந்துவிட்டால் இது போன்ற எடுபிடி வேலைக்கு வரமாட்டார்கள் என்று செல்வந்த வர்க்கம் ஏழைகளை அமுக்கிப் போட்டது. அதிக வட்டிக்கு முன் கூட்டியே பணம் கொடுத்து அதைத் திருப்பித் தரமுடியாத நிலையில் அவர்களைக் கொத்தடிமைகளாக ஆக்கிய காலம் இயேசுவின் காலம். அந்த அவல நிலைதான் இன்றும் நம் நாட்டில் காட்சி தருகிறது. ஏழை மக்கள் பல்வேறு துன்பங்களுக்கும், இன்னல்களுக்கும் உட்படுத்தப்படுகிறார்கள். தலைநிமிர முடியாத நிலையில் தவிக்கிறார்கள். இயேசுவின் பேச்சைக் கேட்க வந்தவர்களும் இத்தகைய ஏழை மக்கள் தான். எனவேதான் அவர்களுக்கு உயிரூட்டம் கொடுக்க, ஏழைகளே நீங்கள் பேறுபெற்றவர்கள்! இறையாட்சி உங்களுக்கு உரியதே (லூக். 6:20) என்கிறார்.

ஏழை என்பதாலோ, செல்வந்தன் என்பதாலோ கேடுற்றவன் என்பதும் சரியில்லை . மாறாக சமத்துவம், பிறர் அன்பு போன்ற உணர்வுகள் இல்லாமல், சுயநலம், அகங்காரம், ஆணவம் கொண்ட அத்தனை பேருமே ஆண்டவருக்கு முன் கேடுற்றவர்கள் தான். செல்வந்தர்கள் பேறுபெற்றவர்களாக மாற வேண்டுமானால், செல்வமாகிய, நிலையான செல்வமாகிய விண்ணகத்தைத் தேட அழைக்கிறார் (மத். 6:3 லூக் 6:20) திகழ வேண்டும்.

இரண்டாவது, நம்பிக்கையே வாழ்வு. ஆண்டவரில் நம்பிக்கை வைப்பவர் பேறு பெற்றவர். எரேமியாஸ் கூறுவது போல ஆண்டவரில் நம்பிக்கை வைப்பவர், நீர் அருகில் நடப்பட்ட மரத்திற்கு ஒப்பாவார். அது எப்போதும் பசுமையாய் இருந்து காலத்தில் கனி கொடுக்கும் (எரே. 17:7-8).

இறுதியாக இரு காரியங்கள் சொல்ல விரும்புகிறேன்.
1. ஏழைக்கு இரங்குபவன் இறைவனுக்கு வட்டிக்குக் கொடுக்கிறான். அதை அவர் திருப்பித் தருவார் என்று சொல்லப்பட்டது (நீதிமொழி 19:17). எனவே ஏழையாக உள்ள நாம் ஏழைக்கு இரங்குவோம். கொடுங்கள், உங்களுக்குகொடுக்கப்படும் (லூக். 6:38).

2. இரண்டாவது, மனிதர்களை நம்பாதீர்கள். மனிதர்களை
மதியுங்கள். மிதிக்காதீர்கள். மாறாக, இறைவனை மட்டும் நம்புங்கள். நல்லது நடக்கும்.

கடவுள் யார்?

கடவுள் எப்படிப்பட்டவர்? என்பதற்கு இன்றைய நற்செய்தியில் இயேசு விளக்கம் ஒன்றைத் தருகின்றார். கடவுள் யார்? என்ற கேள்விக்கு இன்றைய நற்செய்தி பதில் கொடுக்கின்றது.

கடவுள் ஏழைகளை செல்வந்தர்களாக்குபவர்; பட்டினியாய் கிடப்பவர்களுக்கு உணவு கொடுப்பவர் : அழுகின்றவர்களைச் சிரிக்கவைப்பவர். ஆம். கடவுள் என்பவர் எளியோரை உயர்த்துகின்றவர்.

ஒரு பெரிய நாட்டை பேரரசர் ஒருவர் ஆண்டு வந்தார். அவருக்குத் திடீரென ஒரு சந்தேகம்! ஓர் அரசர் நாட்டை ஆள்கின்றார். ஒரு போர் வீரன் போர்புரிகின்றான். ஓர் ஆசிரியர் கற்பிக்கின்றார். இப்படி இந்த உலகில் பிறந்த எல்லாரும் ஏதாவது ஒரு வேலையைச் செய்து கொண்டிருக்கின்றார்கள்! அது போல கடவுள் என்ன வேலை செய்துகொண்டிருக்கின்றார்? என்று அறிந்துகொள்ள அந்தப் பேரரசருக்கு ஆசை !

தலைமை அமைச்சனுக்குக் கூட பதில் தெரியவில்லை! அந்த அமைச்சனின் வழியாக பேரரசரின் சந்தேகத்தைப் பற்றியும், சந்தேகத்தைத் தீர்த்துவைக்க முடியாமல் தவிக்கின்றவர்களைப் பற்றியும் ஆடுமேய்க்கும் ஏழைச் சிறுவன் ஒருவன் அறிந்துகொண்டான்.

அவன் பேரரசர் முன்னால் நின்றான். இவனால் எப்படி இவ்வளவு பெரிய சந்தேகத்தைத் தீர்த்து வைக்க முடியும்? என்ற கேள்வி எல்லாருடைய மனத்திலும் எழுந்தது!

பேரரசர் முன்னால் நின்ற சிறுவன் அவரைப் பார்த்து, பேரரசே! கேள்வி கேட்பவன் மாணவன் ; பதில் சொல்பவர் ஆசிரியர். இதை ஏற்றுக்கொள்கின்றாயா? என்றான். அவர், ஆம் என்றார்.

சாதரணமாக ஆசிரியர்தான் உயர்ந்த இடத்தில் அமர்ந்திருப்பார், மாணவன் அவர் முன்னால் நின்று கொண்டிருப்பான். இதை ஏற்றுக்கொள்கின்றாயா? என்றான் சிறுவன்.

பேரரசர் , ஆம் என்றார்!

சிறுவனோ, அப்படியானால் இங்கே நான் ஆசிரியர், நீ மாணவன், கீழே இறங்கி வா! என்றான்.

சிறுவன் சிம்மாசனத்தில் அமர்ந்தான். பேரரசர் அவன் முன்னால் நின்றுகொண்டிருந்தார்.

அப்போது சிறுவன், இதைத்தான் கடவுள் செய்துகொண்டிருக்கின்றார்; உயர்ந்தோரைத் தாழ்த்தி, தாழ்ந்தோரை உயர்த்திக்கொண்டிருக்கின்றார் என்றான்.

ஆம். கடவுள் தாழ்ந்தோரை உயர்த்துகின்றவர். இன்றைய முதல் வாசகம் கூறுவதுபோல, கடவுள்
முள்ளை மலராக்குவார்!
கல்லைக் கனியாக்குவார்!

இன்றைய இரண்டாம் வாசகம் கூறுவது போல அனைவர்க்கும் கடவுள் இம்மையையும் தருவார், மறுமையையும் தருவார்.

கடவுளுடைய அரசாட்சியில், இறையாட்சியில், ஏழைகள், எளியவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள், ஒதுக்கப்பட்டவர்கள், ஓரங்கட்டப்பட்டவர்கள், இல்லாதவர்கள் ஆகியோருக்குத்தான் முதலிடம். இந்த உண்மையை நமது உள்ளத்தில் முள்ளெனத் தைத்துக்கொண்டு நமது முழு நம்பிக்கையையும் கடவுள் மீது வைப்போம் (முதல் வாசகம்).

மேலும் அறிவோம் :
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல (குறள் : 4).

பொருள்: இறைவன் விருப்பு வெறுப்பு இல்லாதவன். அவனுடைய திருவடியைச் சென்று அடைபவருக்குத் துன்பங்கள் எதுவும் தோன்றாது.




ஒருமுறை நான் ஒரு வீட்டுக்குச் சென்றபோது, அவ்வீட்டின் தலைவர் தமது மனைவியை எனக்கு அறிமுகப்படுத்திக் கூறியது: "சுவாமி! என் மனைவி தங்கமானவள், மாதத் தொடக்கத்தில் சம்பளம் வாங்கி அதை அப்படியே அவள் கையில் கொடுக்கும்போது, 'அத்தான்அத்தான்' என்று தேன் ஒழுகப் பேசுவாள். ஆனால் 15 ஆம் தேதி ஆனபிறகு 'போடா வாடா' என்று கத்துவாள்". காசு இருந்தால் அவன் அத்தான்; அது இல்லையென்றால் அவன் செத்தான்.

இன்றைய உலகம், ஒருவர் எத்தகையவர்? அவர் என்ன செய்தார் என்பதற்காக அல்ல, மாறாக அவரிடம் எவ்வளவு பணம் இருக்கிறது என்பதற்காகவே அவரை மதிக்கின்றது, இக்கசப்பான உண்மையை 'நல்வழி' நூல் பின்வருமாறு எடுத்துரைக்கின்றது.

கல்லானே ஆனாலும் கைப்பொருள் ஒன்று உண்டாயின்
எல்லாரும் சென்று அங்கு எதிர்கொள்வர் - இல்லானை
இல்லாளும் வேண்டாள் மற்றும் ஈன்றெடுத்ததாய் வேண்டாள்
செல்லாது அவன் வாயிற்சொல். (நல்வழி 34).

ஒருவர் படிக்காத முட்டாளாக இருந்தாலும், அவர் பணக்காரராய் இருந்தால், எல்லாரும் அவரை வரவேற்பர். மாறாக, அவரிடம் பணம் இல்லையென்றால், பெற்ற அம்மாவோ கட்டிய மனைவியோ அவரை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அவன் சொல்லை எவருமே மதிக்கமாட்டார்.

ஆனால், இன்றைய நற்செய்தியிலே இயேசு கிறிஸ்து, ஏழைகள் பேறு பெற்றவர்களென்றும், பணக்காரர்கள் சபிக்கப்பட்டவர்கள் என்றும் கூறுவது இவ்வுலகின் போக்குக்கு ஒத்துவராது. இதைக் கேட்பவர்கள் ஏளனம் செய்வார்கள். எனவேதான் இயேசு கிறிஸ்து, "நீங்கள் கடவுளுக்கும் செல்வத்துக்கும் பணிவிடை செய்ய முடியாது" (லூக் 16:13) என்று கூறியதைக் கேட்ட "பண ஆசைமிக்க பரிசேயர் இயேசுவை ஏளனம் செய்தனர்” (லூக் 16:14).

கடவுளின் எண்ணங்களும் வழிகளும் மனிதர்களின் எண்ணங்களையும் வழிகளையும் விட உயர்ந்தவை (எசா 55:8-9). இவ்வுலகின் தாரகமந்திரம்: உலகயமாக்குதல், தாராள மயமாக்குதல். நவீனமயமாக்குதல், ஆனால் கடவுளின் தாரக மந்திரம்: விசுவாசம், நம்பிக்கை, அன்பு.

இவ்வுலகு காட்டும் வழியைப் பின்பற்றினால் நிலையற்ற செல்வம் கிடைக்கலாம், ஆனால் கடவுள் காட்டும் வழியைப் பின்பற்றினால் நிலையான செல்வம் கிடைக்கும். மனிதருக்குப் பொருளும் வேண்டும்; அருளும் வேண்டும். பொருளில்லாதவர்கள் இவ்வுலக இன்பங்களைத் துய்க்கமுடியாது. அருளில்லாதவர்கள் மறுமைப் பேரின்பத்தைப் பெற முடியாது..

அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை; பொருளில்லார்க்கு
இவ்வுலகம் இல்லாகி யாங்கு (குறள் 247)

பொருளைத் தேடி அலையும் மக்கள் அருளுக்கு முதலிடம் கொடுத்தால், மற்றனைத்தையும் சேர்த்துப் பெறுவர் (மத் 6:33).

வறுமையோ, துன்பமோ, அழுகையோ தன்னிலே பேறுபெற்றவை என்றோ, அவற்றைக் கடவுள் விரும்புகிறார் என்றோ அல்லது அவற்றிலிருந்து நாம் விடுதலையைத் தேடக் கூடாது என்றோ இயேசு கிறிஸ்து கூறவில்லை. மாறாக, பண ஆசை கூடாது, பணத்தை நம்பி வாழ்பவர்கள் கடவுளை நம்புவது கடினம் என்பதையே அவர் இன்றைய நற்செய்தியில் சுட்டிக்காட்டுகிறார். இன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்கினர் எரேமியாவும், "மனிதரில் நம்பிக்கை வைப்போர் சபிக்கப்பட்டவர்; ஆண்டவரில் நம்பிக்கை வைப்போர் பேறுபெற்றோர்” எனக் கூறுகிறார். பதிலுரைப் பாடலும், 'ஆண்டவரில் நம்பிக்கை வைப்போர் என்றும் கனிதரும் மரம்போலப் பசுமையாக இருப்பர். ஆனால் ஆண்டவரில் நம்பிக்கை கொள்ளாத தீயோர் காற்று அடித்துச் செல்லும் பதரைப் போல் ஆவர்' எனக் கூறுகிறது.

ஒரு பணக்காரர் வீட்டில் ஒரு சிறுவன் வேலைக்காரனாக இருந்தான். ஒரு நாள் அவன் பணக்காரருடைய படுக்கை அறையைச் சுத்தம் செய்யச் சென்றபோது அந்த அறையிலிருந்த பஞ்சு மெத்தைப் படுக்கையில் படுத்துத் தூங்கிவிட்டான். பணக்காரர் அதைப் பார்த்துப் பயங்கர கோபத்துடன் தன் "பெல்ட்டால்" வேலைக்காரச் சிறுவனை பலமுறை அடித்தார், ஆனால் அச்சிறுவனோ பயங்கரமாகச் சிரித்தான். ஏன் அவன் அவ்வாறு சிரிக்கிறான் என்று பணக்காரர் அச்சிறுவனைக் கேட்டதற்கு அவன், "இப்படுக்கையில் அரைமணி நேரம் படுத்திருந்த எனக்கு இத்தண்டனை என்றால், இப்படுக்கையில் ஆயுள் முழுவதும் படுத்துறங்கும் உமக்குக் கடவுள் என்ன தண்டனை கொடுக்கக் காத்திருக்கிறாரோ ?" என்று சொல்லி மீண்டும் சிரித்தான்.

இன்றைய நற்செய்தியில் கிறிஸ்து. "செல்வர்களே ஐயோ! உங்களுக்குக் கேடு. ஏனெனில் நீங்கள் எல்லாம் அனுபவித்து விட்டீர்கள்" (லூக் 6:24) எனக் கூறுகிறார். யாக்கோபு என்பவர் தமது மடலில் செல்வர்களைப் பின்வருமாறு எச்சரிக்கின்றார்: "இவ்வுலகில் ஆடம்பரமாகவும் இன்பமாகவும் வாழ்ந்தீர்கள். கொல்லப்படும் நாளுக்காக உங்களைக் கொழுக்க வைத்தீர்கள்"  (யாக் 5:5).

இவ்வுலகில் துன்புறுகிறவர்கள் மறுமை வாழ்வை எண்ணி மகிழவேண்டும். நமக்கு மறுமை வாழ்வு இல்லையென்றால் மற்ற மக்களை விட நாம் பரிதாபத்துக்குரியவர்கள் என்று இன்றைய இரண்டாம் வாசகத்தில் பவுல் கூறுகிறார் (1 கொரி 15:16). கிறிஸ்து, "தாம் அடையவிருந்த மகிழ்ச்சியின் பொருட்டு, இழிவையும் பொருள் படுத்தாமல் சிலுவையை ஏற்றுக் கொண்டார். இப்போது கடவுளது அரியணையின் வலப்பக்கத்தில் வீற்றிருக்கிறார்" (எபி 12:2).

பணக்காரர்களும் ஆயக்காரச் சக்கேயுவைப் போன்று மனம்மாறித் தங்கள் செல்வத்தை ஏழைகளுடன் பகிர்ந்து கொண்டால் அவர்களுக்கும் மீட்பு உண்டு. "செல்வத்தின் பயன் ஈதல்".

ஓர் அரசியல்வாதி தான் ஆட்சிக்கு வந்தால் நிலம் கொடுப்பதாகவும், வீடு கட்டித் தருபவதாகவும் மற்றும் எல்லாச் சலுகைகளையும் ஏழைகளுக்குத் தருவதாகவும் வாக்குறுதிகளை அள்ளி வீசினார். அவரிடம் ஓர் ஏழை, "பத்து ரூபாய் கொடுங்கள்” என்று கேட்டதற்கு, "இல்லை" என்று கையை விரித்தார். சொல்லிலும் பேச்சிலும் அல்ல, செயலில் உண்மையான அன்பை விளங்கச் செய்வோம் (1 யோவா 3:18).

இப்போது செல்வம் இல்லாதவர்கள் கூட ஒரு காலத்தில் செல்வந்தவர்களாக வாய்ப்பு உண்டு. ஆனால், அருள் (இரக்கம்) இல்லாதவர்கள் ஒருக்காலும் சிறப்புறமாட்டார்கள்,

பொருள் அற்றார் பூப்பர் ஒருகால்; அருள் அற்றார்
அற்றார் மற்று ஆதல் அரிது (குறள் 248).


 மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளை- www.arulvakku.com

யார் பேறுபெற்றோர்!



 நிகழ்வு
          1835 ஆம் ஆண்டு, நியூயார்க் நகரில் இருந்த நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று விசாரணைக்கு வந்தது. மூதாட்டி ஒருத்தி ஒரு கடையிலிருந்து ரொட்டியைத் திருடிவிட்டாள் என்பதுதான் அந்த வழக்கு.

வழக்கை விசாரித்த நீதிபதி, மூதாட்டி ரொட்டியைத் திருடியது உண்மைதான் என்பதை உறுதி செய்தார். பின்னர் அவர் அந்த மூதாட்டியிடம், “நீங்கள் எதற்காக கடையிலிருந்து ரொட்டியைத் திருடினீர்கள் என்பதைத்  தெரிந்துகொள்ளலாமா?” என்று கேட்டார். முதாட்டியோ மிகவும் உடைந்த குரலில், “ஐயா! நான் ஓர் ஏழை, கணவனை இழந்தவள். எனக்கொரு மகள் இருக்கிறாள், அவளும் படுத்த படுக்கையாய் கிடக்கிறாள். அவளுக்கு இரண்டு பிள்ளைகள். அவளுடைய கணவன்கூட இப்போது அவளோடு இல்லை. இப்படிப்பட்ட சூழலில், என்னுடைய பிள்ளைக்கும் அவளுடைய பிள்ளைகளுக்கும் உணவு கொடுக்க என்ன செய்வது என்று யோசித்துக்கொண்டிருந்தேன். அப்போதுதான் வேறு வழியில்லாமல் கடையிலிருந்து ரொட்டி திருடலாம் என முடிவுசெய்து, இப்படியோர் செயலில் ஈடுபட்டேன்” என்றார்.

  அந்த மூதாட்டி சொன்னதைக் கொண்டிருந்த நீதிபதி உட்பட, நீதிமன்றத்தில் இருந்த  எல்லாரும் கணத்த இதயத்தோடு அமைதியாயினர். அப்போது நீதிபதி அந்த மூதாட்டியைப் பார்த்துச் சொன்னார், “அம்மா! சட்டத்திற்கு முன்பு எல்லாரும் சமம்... ஆதலால், நீங்கள் செய்த திருட்டுக் குற்றத்திற்குத் தண்டனையாக பத்து டாலர் அபராதம் கட்டவேண்டும், இல்லையென்றால், பத்து நாள் சிறைத்தண்டனையை அனுபவிக்கவேண்டும்” என்று உத்தரவிட்டார். “ஐயா! பத்து டாலர் என்னிடத்தில் இருந்தால், நான் ஏன் திருடப்போறேன்... மேலும் ரொட்டி திருடிய குற்றத்திற்காக நான் சிறைக்குச் சென்றால், என்னை நம்பி இருக்கக்கூடிய என் மகள் மற்றும் அவளுடைய பிள்ளைகள் சாப்பாட்டிற்கு எங்கு செல்வார்கள்... அதை நினைத்தால் நெஞ்சம் பதறுகிறது” என்று கண்ணீர் மல்கச் சொல்லிமுடித்தார்  அந்த மூதாட்டி.
 
ஒருசில நிமிடங்களுக்கு நீதிமன்றத்தில் பேரமைதி நிலவியது. பின்னர் நீதிபதி அந்த மூதாட்டியைப் பார்த்து, “அம்மா! நீங்கள் கட்டவேண்டிய பத்து டாலர் அபராதத் தொகையை நான் கட்டிவிடுகிறேன்” என்றார். பிறகு அங்கிருந்த மக்களைப் பார்த்து அவர், “இந்த மூதாட்டி ரொட்டி திருடுகின்ற நிலைமைக்கு வந்துவிட்டாரே... இதற்கு நாம்தான் காரணம். ஆகவே, இதற்குத் தண்டனையாக ஆளுக்கொரு டாலர் இவருக்குக் கொடுத்துவிட்டுப் போங்கள்” என்று சொல்லி தீர்ப்பை முடித்தார்.
 
இந்த உலகத்தில் பிறந்த யாரும் தனித்து வாழமுடியாது, ஒருவர் மற்றவரைச்  சார்ந்துதான் வாழவேண்டும். அப்படியிருக்கின்றபோது, பலர் பட்டினியாகக் கிடைக்கின்றபோது, ஒருசிலர் மட்டும் உண்டு கொழுத்து வாழ்வதை சுயல்நலம், அநீதி என்று சொல்லாமல், வேறு என்ன சொல்ல முடியும்?.
 
பொதுக்காலத்தின் ஆறாம் ஞாயிற்றுக்கிழமையில் இருக்கும் நமக்கு, இன்றைய நாளில் நாம் படிக்கக்கேட்ட நற்செய்தி வாசகம், சுயநலவாதிகளாக இல்லாமல், பிறர்நலவாதிகளாக இருக்கவும் இவ்வுலகு சார்ந்த காரியங்களில் மட்டும் பற்றுக் கொள்ளாமல், மறுவுலகு சார்ந்த காரியங்களில் பற்றுகொள்ளவும் அதன்மூலம் பேறுபெற்றவர்களாக வாழ அழைப்புத் தருகின்றது. நாம் அதைக் குறித்து இப்போது சிந்தித்துப் பார்ப்போம்.

  1. மலைப்பொழிவும் சமவெளிப்பொழிவும் வேறு வேறா? அல்லது ஒன்றுதானா?
ஒருசில விவிலிய அறிஞர்கள் லூக்கா நற்செய்தியில் இடம்பெறும் சமவெளிப்பொழிவும் (லூக் 6:17) மத்தேயு நற்செய்தியில் இடம்பெறுகின்ற மலைப்பொழிவும் (மத் 5 – 7) வேறு வேறு என்று சொல்வார்கள். இதற்கு அவர்கள் சொல்கின்ற மிக முக்கியமான காரணம், இரண்டும் இருவேறு இடங்களில் வருகிறது என்பதால். இன்னும் ஒருசில விவிலிய அறிஞர்கள் மலைப்பொழிவின் சுருக்கமே (Shorter Version) சமவெளிப்பொழிவு என்பார்கள். இது ஒருபுறமிருக்க Exegetical Fallacies என்ற புத்தகத்தில் டி.ஏ.கார்சன் என்ற விவிலிய அறிஞரோ, சமவெளி என்பது வேறொன்றுமில்லை, அது மலையில் இருக்கின்ற ஒரு சமதளமான பகுதி என்று குறிப்பிடுவார். இக்கூற்று உண்மையெனில் மலைப்மொழிவும் சமவெளிப்பொழிவும் வேறுவேறு அல்ல, அவை இரண்டும் ஒன்றுதான் என்று நாம் உறுதி செய்து கொள்ளலாம்.
  1. ஏழ்மை, பட்டினி, அழுகை, துன்பம் இவையெல்லாம் பேறுகளா? சாபங்களா?
யூதர்களைப் பொறுத்தளவில், நீடிய ஆயுளும் நலமான வாழ்வும் குறையாத செல்வமும் களஞ்சியம் நிறையத் தானியமும் பழுகிப்பெருகிய மந்தையும்தான் உண்மையான பேறுகளாகும். (இச 28; யோபு 1:1-12 நீமொ 3:1-10). அப்படி இருக்கும்போது, இயேசு ஏழைகளையும் (ஏழ்மை) பட்டினியாய் கிடப்போரையும் (பட்டினி) அழுவோரையும் (அழுகை) மானிடமகன் பொருட்டு துன்பப்படுவோரையும் (துன்பம்) பேறுபெற்றோர் எனச் சொல்கிறாரே, இதை எப்படிப் புரிந்துகொள்வது என்ற கேள்வி எழலாம்.

 இயேசு, நாம் ஏழ்மையில் இருக்கவேண்டும், பட்டினி கிடக்கவேண்டும், அழுதுகொண்டிருக்கவேண்டும் அல்லது துன்பப்பட்டுக் கொண்டிருக்கவேண்டும் என்று நினைப்பவரல்ல, அப்படி விரும்புகிறவரும் அல்ல. மாறாக இந்த ஏழ்மை, பட்டினி, அழுகை, துன்பம் போன்றவை எல்லாம் நம்மை இறைவன்மீது நம்பிக்கை வைத்து வாழவும் சக மனிதன்மீதும் கரிசனை கொண்டு வாழத் தூண்டுகிறதே, அதனால்தான் இத்தகைய நிலையில் இருப்போரைப் பேறுபெற்றோர் என இயேசு அழைக்கின்றார். இதனை உறுதிசெய்யும் வகையில்தான் இயேசுவின் காலத்தில் இருந்த ஏழைகளும் பாவிகளும் வறியவர்களும் அவரைத் தேடிச் சென்றார்கள் (லூக் 15:1) பணக்காரர்களோ இதற்கு மாறாக இருந்தார்கள்.
 

  1. செல்வந்தர்கள் பேறுபெற்றோர் ஆகமுடியாதா?

ஏழைகளையும் பட்டினியில் கிடப்போரையும் அழுதுகொண்டிருப்போரையும் மானிடமகன் பொருட்டு துன்புறுத்தப்படுவோரையும் பேறுபெற்றோர் எனச் சொல்லும் இயேசு, இதற்கு மாறாக இருக்கின்ற செல்வந்தரையும் உண்டு கொழுத்திருப்போரையும் பார்த்து ஐயோ கேடு என்று சொல்கிறாரே அது ஏன்?, அவர்களால் பேறுபெற்றோராக மாறமுடியாதா? எனக் கேள்வி எழலாம்.

  செல்வந்தர்கள் இயேசுவின் இத்தகைய கடுஞ்சொல்லுக்கு ஆளாகக் காரணம், அவர்கள் கடவுளை மறந்து, தங்களோடு வாழக்கூடிய சகமனிதர்களை மறந்து வாழ்வதனால்தான். எடுத்துக்காட்டாக, இயேசு சொல்லக்கூடிய உவமைகளில் வரும் அறிவற்ற செல்வந்தனும் (லூக் 12) லாசர் உவமையில் வரும் செல்வந்தனும் (லூக் 16) கடவுளை மறந்ததோடு மட்டுமல்லாமல், தங்களோடு வாழ்ந்த சக மனிதர்களையும் மறந்தார்கள். அதனால்தான் அவர்களுக்கு அப்படியொரு அழிவு நேர்ந்தது. ஒருவேளை அவர்கள் கடவுள்மீது நம்பிக்கை வைத்து, தங்களோடு வாழ்ந்த சகமனிதர்களை அன்பு செய்திருந்தார்கள் செய்தார்கள் எனில், அவர்களால் பேறுபெற்றவர்களாக மாறமுடிந்திருக்கும்.

 எனவே, ஒருவர் செல்வராக அல்லது ஏழையாக இருப்பது முக்கியவில்லை. அவர் இறைவன்மீது நம்பிக்கை வைத்து வாழ்வதும் சக மனிதர்களை அன்பு செய்வதுமே முக்கியம். இப்படிப்பட்டோர் மட்டுமே பேறுபெற்றோராக மாற முடியும்.
 

சிந்தனை

  ஆண்டவரை அடையவேண்டுமா, அடுத்தவரை அன்பு செய்’ என்பார் விவேகானந்தர். ஆம், அடுத்தவர்மீது நாம் கொள்ளும் அன்பும் ஆண்டவர்மீது நாம் கொள்ளும் அன்புமே நம்மை பேறுபெற்றவர்கள் ஆக்கும்.
 
ஆகவே, நாம் அயலாரையும் ஆண்டவரையும் அன்பு செய்வோம். அதன்வழியாக பேறுபெற்றவர்களாகி, இறையருள் நிறைவாய் பெறுவோம்.



நங்கூரப் புள்ளிகள்

என்.எல்.பி என்று சொல்லப்படும் நியூரோ லிங்விஸ்டிக் புரோகிராமிங் என்னும் உளவியல் பகுப்பாய்வில் பேசப்படும் சில கருத்துருக்களில் ஒன்று, 'நங்கூரமிடுவது' ('ஆங்க்கரிங்'). அதாவது, எதிர்மறையான நிகழ்வு ஒன்றை நான் எதிர்கொள்ள வேண்டும் என வைத்துக்கொள்வோம். பத்தாயிரம் பேர் அமர்ந்திருக்கும் ஒரு கூட்டத்தில் நான் பேச வேண்டும். எனக்குக் கூட்டத்தைப் பார்க்க பயமாக இருக்கிறது. என் பயத்தைப் போக்க நான் என்ன செய்ய வேண்டும்? நான் இதற்கு முன் பயமில்லாமல் பேசிய ஒரு நிகழ்வை என் மனத்தில் ஓடவிட்டு, அந்த எண்ண ஓட்டங்களை ஒரு மோதிரம், பேனா, சட்டை என ஏதாவது ஒன்றோடு இணைத்துவிட வேண்டும். இப்போது இக்கூட்டத்தின் முன் பேசுவதற்குமுன் நான் அந்த மோதிரத்தை அணிந்தாலோ, அந்தப் பேனாவைச் சட்டையில் வைத்திருந்தாலோ, அல்லது அந்தச் சட்டையை அணிந்தாலோ என் மனம் நேர்முகமான உணர்வுகளில் இருந்து ஆற்றல் பெற்று பயம் என்னும் எதிர்மறை உணர்வை அழித்துவிடும். இப்படியாக நேர்முகமான உணர்வின்மேல் உள்ளத்தைப் பதிய வைப்பதுததான் நங்கூரமிடுவது.

'நங்கூரம்' - இது ஒரு கப்பல் அல்லது கடல்தொழில் சொல்லாடல். நகர்கின்ற கப்பலை அல்லது பெரிய படகை நிலைநிறுத்தப் பயன்படுவது நங்கூரம். நங்கூரமிட்ட கப்பலை பெரும் புயலும் நகர்த்த முடியாது. எல்லா இடத்திலும் நங்கூரம் இறக்கிவிட முடியாது. சகதி அல்லது சேறு, பாறை அல்லது கடல் மலைப்பாங்கான பகுதிகளில் நங்கூரம் பதியாது. ஆக, சரியான நங்கூரப் புள்ளிகளைக் கண்டுபிடித்தால்தான் நம் கப்பலை நிலைநிறுத்த முடியும்.

இன்றைய இறைவாக்கு வழிபாடு நம்முடைய நங்கூரப் புள்ளிகள் எவை என ஆராய்ந்து பார்க்க அழைக்கின்றன.

நங்கூரப் புள்ளிகள்தாம் நம் வாழ்வின் நிகழ்வுகளை நகர்த்துகின்றன. எடுத்துக்காட்டாக, பழம் வாங்குவதற்கு சூப்பர் மார்க்கெட் செல்கிறோம். அங்கே நாம் வாங்க வேண்டிய பழங்களை கடைக்கு வெளியே வைத்திராமல் கடைக்கு உள்ளே தூரத்தில் வைக்கிறார்கள். ஏன்? பழங்களை வாங்கச் செல்லும் நம்முடைய கண்கள் வழியில் இருக்கும் அனைத்துப் பொருள்களின் மேல் படவும், அப்படிப் படுவதால் நாம் அவற்றால் ஈர்க்கப்பெறவும்தான். ஒருவேளை நான் ஒவ்வொரு பொருளாகப் பார்த்துக்கொண்டே சென்றால், அல்லது இவற்றை வாங்க முற்பட்டால், இவையும் தேவை என உணர்ந்தால் இறுதியில் பழங்கள் என்னும் அவசியத்தை விட்டுவிட வாய்ப்பிருக்கிறது. ஆக, கடைக்காரர் எனக்கு வைத்திருக்கும் நங்கூரப் புள்ளிகளிலிருந்து தப்பி, என்  வாங்குதலின் இலக்கு என்னும் பழங்கள் என்னும் நங்கூரப் புள்ளிகள் நோக்கி நான் நகர்ந்தால்தான் நான் பழங்களை வாங்க முடியும்.

ஆக, என் நம்பிக்கையை, என் நங்கூரத்தை இன்று நான் எதன்மேல் வைக்கிறேனோ அப்போதுதான் நான் வளர முடியும்.

மைக்கேல் ஜாக்சன் அவர்கள் மிகப்பெரிய பாடகரும் டான்சரும்தான். அதற்காக அவர் தினமும் தன் காட்சிக்கான டிக்கெட்டுகளை விற்றுக்கொண்டிருக்க வேண்டுமா? அண்மையில் 'இளையராஜா 75' கொண்டாடினோம். இந்த நிகழ்ச்சிக்காக இளையராஜான டிக்கெட்டுகளை விற்றுக்கொண்டிருந்தாரா? இல்லை! அதை மற்றவர்கள் பார்த்துக்கொள்வார்கள். மைக்கேல் ஜாக்சன், இளையராஜா இவர்களின் நங்கூரப் புள்ளிகள் இசையும் அதற்கேற்ற பயிற்சியும். அவர்கள் அதில் மனத்தைப் பதிய வைக்க வேண்டுமே தவிர, மேடை அமைப்பது, பந்தல் போடுவது, நாற்காலி அடுக்குவது போன்றவற்றில் தங்கள் மனத்தைப் பதிய வைக்கக்கூடாது. ஆக, சாதாரண வாழ்க்கை நிகழ்வுகள் தொடங்கி நம் உளப்பாங்கு புதுப்பித்தல் வரை நங்கூரப்புள்ளிகள் மிக முக்கியப் பங்காற்றுகின்றன.

இன்றைய முதல் வாசகத்தில் (காண். எரே 17:5-8) எரேமியா, 'மனிதர்மேல் நம்பிக்கை,' 'ஆண்டவர்மேல் நம்பிக்கை' என நம்பிக்கையை இரண்டாகப் பிரித்து, மனிதர்மேல் நம்பிக்கை வைப்போர் அடையும் துன்பத்தையும் அழிவையும், ஆண்டவரின்மேல் நம்பிக்கை வைப்போர் பெறுகின்ற மகிழ்ச்சியையும் வாழ்வையும் உருவகமாகப் பதிவு செய்கின்றார். எரேமியாவின் இந்த இறைவாக்கு நிகழ்வு யூதா அரசன் யோயாக்கினின் காலத்தில் (காண். 2 அர 23:36-37) நடக்கிறது. பாபிலோனியர்கள் யூதா நாட்டின்மேல் படையெடுத்து வந்தபோது, யோயாக்கின் பாபிலோனியாவுக்கு உடனடியாக சரணடைந்து தன் நாட்டை அழிவிலிருந்து தற்காலிகமாகக் காப்பாற்றுகிறார். ஆனால், சில ஆண்டுகள் கழித்து, தனக்கு அருகில் இருந்த எகிப்து நாட்டோடு கரம் கோர்க்கின்ற யோயாக்கின் பாபிலோனியாவுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்கிறார். ஆனால், பாபிலோனிய அரசன் நெபுகத்னேசர் மிக வேகமாக எழுந்து இக்கிளர்ச்சியை அடக்கி, கிமு 597ஆம் ஆண்டு யூதாவை முற்றுகைக்கு உட்படுத்துகிறார். உடனடியாக எகிப்தியர்கள் தாங்கள் கொடுத்த இராணுவ பலத்தை விலக்கிக்கொண்டு பின்வாங்குகிறார்கள். யோயாக்கின் கொல்லப்படுகிறார். எருசலேம் கைப்பற்றப்படுகிறது. இந்த நிகழ்வைத்தான் எரேமியா இன்றைய இறைவாக்கில் குறிப்பிடுகின்றார்: 'மனிதரில் (எகிப்தியரில்) நம்பிக்கை வைப்போர் (யோயாக்கினும் அவருடைய அரச அலுவலர்களும்), வலுவற்ற மனிதரில் (எகிப்தியர்) தம் வலிமையைக் காண்போர் (யோயாக்கினும் அவருடைய அரச அலுவலர்களும்) சபிக்கப்படுவர்.' யோயாக்கின் எருசலேமை அழிவிலிருந்து காப்பாற்ற தன் நங்கூரத்தை மனிதர்கள்மேல் பதித்தார். 'ஆண்டவரின் மேல் பதிக்கத் தவறிவிட்டார்.' மனிதர்கள்மேல் வைக்கின்ற நம்பிக்கை உடனடித் தீர்வைத் தரலாம். ஆனால், நிரந்தர தீர்வு ஆண்டவரிடமே உள்ளது. இப்படியாக, அரசர்களுக்கும், அரச அலுவலர்களுக்கும் இறைவாக்குரைக்கின்ற எரேமியா, தொடர்ந்து, அவர்கள் தங்கள் சக மனிதர்கள்மேலும், தங்கள் சிலைவழிபாட்டின்மேலும் நம்பிக்கை வைக்கின்ற நிலையைச் சாடுகின்றார். ஆண்டவரின்மேல் வைக்கும் நம்பிக்கை உடனடியாக பலன் தராததுபோலத் தோன்றினாலும் அது நீண்ட காலப் பலனை நிச்சயம் தரும். ஏனெனில், மனிதர்மேல் வைக்கும் நம்பிக்கை 'பாலைவனப் புதர்ச்செடி போன்றது.' பாலைவனத்தில் செடிகள் வேகமாக முளைக்கும். ஆனால், நிலத்தில் நீர் இல்லாததாலும், வெயிலின் கொடுமையாலும் மிக வேகமாகக் காய்ந்துபோய்விடும். புதர்கள் பார்ப்பதற்கு நிறைய இருப்பதுபோலத் தெரிந்தாலும் அவை தன்னிலே வலுவற்றது. அதுபோலவே, மனிதர்களும். எண்ணிக்கையில் நிறைய என்றிருந்தாலும் அவர்கள் தங்களிலேயே வலுவற்றவர்கள். ஆனால், நீர் அருகில் நடப்பட்ட மரம் முளைக்க நாள்கள் ஆகலாம். ஏன் மாதங்கள் ஆகலாம். ஆனால், அந்த மறைவான நாட்களில் அவ்விதையானது நீரோடை நோக்கி கீழாக வளர்கிறது. பின் வேகமாக மேலே வளர ஆரம்பிக்கும். அதன் நங்கூரம் தண்ணீரில் பதிந்திருப்பதால் வெப்பமிகு காலத்திலும் அதற்கு அச்சமில்லை. அது எப்போதும் கனி கொடுக்கும்.

ஆக, எகிப்தியர் என்னும் வலுவற்ற மனிதர்கள்மேல் நங்கூரத்தைப் பதிய வைக்காமல், ஆண்டவர்மேல் நம்பிக்கை வைத்து அவரையே நங்கூரப் புள்ளியாக்க வேண்டுமென்று இறைவாக்குரைக்கின்றார் எரேமியா.

இன்றைய இரண்டாம் வாசகம் (காண். 1 கொரி 15:12,16-20) இறந்தோர் உயிர்ப்பு பற்றிய பவுலின் விளக்கவுரையாகத் தொடர்கிறது. கொரிந்த நகர நம்பிக்கையாளர்கள் இறந்தோர் உயிர்ப்பை மறுத்தனர். ஏனெனில், அவர்கள் நடுவில் நிலவிய கிரேக்க தத்துவச் சிந்தனை அதற்கு இடையூறாக இருந்தது. தத்துவச் சிந்தனையைப் பொறுத்தவரையில் மனித ஆன்மா என்பது மனித உடலில் சிறைப்பட்டிருக்கிறது. உடல் தனக்கென்று ஆசைகளையும், உணர்வுகளையும் வைத்திருப்பதால் அது அழிவுக்குரியதாகவும், தாழ்வானதாகவும், வலுவற்றதாகவும் கருதப்பட்டது. ஆக, ஆன்மா உடலிலிருந்து பெரும் விடுதலைக்காகவே காத்திருக்கிறது. இப்படி இருக்க, இறந்தோர் உயிர்ப்பில் மீண்டும் ஆன்மா உடலுக்குள் வரும் என்பதை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. 'உடல் இல்லாத வாழ்வையே' அவர்கள் விரும்பினர். இந்தப் பின்புலத்தில் பவுல் மிகவும் பொறுமையோடும், சிந்தனைத் தெளிவோடும் அவர்களுக்குப் புரிய வைக்கிறார். உயிர்க்கும்போது இருக்கும் உடல் அழியாமையை அணிந்துகொள்கிறது என்றும், இந்த அழியா உடலையே இயேசு பெற்றார் என்றும், அவரின் இறப்பில் பங்கேற்கும் நாம் அவரைப் போல அழியா உடல் பெற்று உயிர்ப்போம் என்றும் விள்குகின்றார். ஆக, அழிந்துபோகும் இவ்வுலக உடலில் தங்கள் நம்பிக்கையைப் பதிய வைக்காமல், அழியாமல் உயிர்க்கும் அந்த உடலின்மேல் நம்பிக்கையைப் பதிய வைக்க அவர்களை அழைக்கின்றார் புனித பவுல்.

ஆக, அழிவுக்குரிய உடலின்மேல் நம்பிக்கை வைக்காமல் கிறிஸ்துவின் உயிர்ப்பு அவருக்குத் தந்த அழியாத உடலின்மேல் - நாம் பெறப்போகும் அந்த உடலின் மேல் - நம்பிக்கையைப் பதிய வைக்க அழைக்கின்றார் பவுல்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். லூக் 6:17,20-26) இயேசுவின் சமவெளிப்பொழிவை வாசிக்கின்றோம். இயேசுவின் மலைப்பொழிவில் (காண். மத் 5:3-10) 'எட்டுப் பேறுகளை' பதிவு செய்கின்றார் மத்தேயு. ஆனால், இயேசுவைச் சமவெளியில் நிற்கச் செய்யும் லூக்கா, அவரின் போதனைகளை, 'நான்கு பேறுகள்,' 'நான்கு சாபங்கள்' என வடிவமைக்கின்றார். இரக்கமே உருவான இயேசு, பகைவரையும் அன்பு செய்யச் சொல்லும் இயேசு மற்றவர்களைச் சபிக்கலாமா? செல்வமும், உணவும், சிரிப்பும், புகழ்ச்சியும் கொண்டிருப்பது தவறா? இவற்றை அல்லது இவற்றைப் பெற்றிருப்பவர்களை இயேசு ஏன் கடிந்து கொள்ள வேண்டும்? என்னும் கேள்விகள் நம்மில் எழலாம். இயேசு. 'செல்வம், உணவு, சிரிப்பு, புகழ்ச்சி' ஆகியவற்றைச் சபித்து, 'ஏழ்மை, பசி, அழுகை, புறக்கணிப்பு' ஆகியவற்றை மட்டுமே நாம் கொண்டிருக்க வேண்டும் என்று நமக்கு அறிவுறுத்தவில்லை. மாறாக, 'செல்வம், உணவு, சிரிப்பு, புகழ்ச்சி' போன்ற நான்கு வாழ்வியல் எதார்த்தங்களில் நம் மனம் நம்மேலும், நம் சக மனிதர்கள்மேலும், அவர்களின் அங்கீகாரத்தின் மேலும் தங்கி, நம் நம்பிக்கையைப் பதித்துவிடும் என்றும், 'ஏழ்மை, பசி, அழுகை, புறக்கணிப்பு' போன்ற வாழ்வியல் எதார்த்தங்களில்தாம் நம் மனம் இயல்பாக ஆண்டவரை நோக்கி எழும்பும் எனவும் சொல்லி, முன்னதை விடுத்துப், பின்னதைப் பெற்றுக்கொள்ள அழைக்கின்றார்.

ஆக, மனிதர்மேல் நம்பிக்கை வைப்பதை விடுத்து ஆண்டவர்மேல் நம்பிக்கை வைப்பதற்கான அழைப்பாகவே இருக்கிறது இயேசுவின் சமவெளிப்பொழிவு.

இவ்வாறாக, மனிதர்மேல் வைக்கும் நம்பிக்கை சிறிது காலமே பலன்தர, ஆண்டவர்மேல் வைக்கும் நம்பிக்கை நீண்ட நாள்கள் கனிதர நமக்கு வலுவூட்டும் என்று எரேமியாவும், அழியும் உடல்மேல் வைக்கும் நம்பிக்கையை விட கிறிஸ்துவின் அழியாத உடலின்மேல் வைக்கும் நம்பிக்கையை நமக்கு உயிர்ப்பைத் தரும் என்று பவுலும், 'செல்வம், உணவு, சிரிப்பு, புகழ்ச்சி' என்பவை மனிதர்மேல் நம்பிக்கை வைப்பதன் கனிகளாக இருந்தாலும் அவற்றால் நீடிய பயன் இல்லை என்றும், 'ஏழ்மை, பசி, அழுகை, புறக்கணிப்பு' போன்றவை ஆண்டவர்மேல் நம்பிக்கை வைப்பவருக்கு இறைவன் செயலாற்றும் தளங்களாக மாறும் என்று இயேசுவும் நமக்குச் சொல்கின்றனர். இவர்கள் மூவரின் வார்த்தைகளும் ஒன்றுதான்: 'மனிதர் என்னும் நங்கூரப் புள்ளி வலுவற்றது.கடவுள் என்னும் நங்கூரப் புள்ளி வலுவானது. வலுவற்றதை விடுத்து வலுவானதை நாம் பற்றிக்கொள்ள வேண்டும்.'

மனிதர் என்னும் நங்கூரப் புள்ளியை விட்டு, கடவுள் என்னும் நங்கூரப் புள்ளியை எப்படிப் பற்றிக்கொள்வது? மூன்று நிலைகளில் இது சாத்தியமாகும்.

1. வாழ்க்கையைப் பற்றிய பார்வையை அகலமாக விரிப்பது

தன் கப்பலையும் தன் இருப்பையும் மட்டும் பார்க்கின்ற மாலுமி நங்கூரத்தைத் தனக்குக் கீழ் இருக்கும் சேறு அல்லது பாறையின் மேல் இடுவார். ஆனால், கடல் மொத்தத்தையும் பார்க்கின்ற மாலுமி தன் கப்பலை நகர்த்திச் சென்று சேறு அல்லது பாறை இல்லாத இடத்தில் போடுவார். குறுகிய பார்வை கொண்டிருப்பதால் நம் வேலை எளிதாக முடிவதாக நினைக்கலாம். ஆனால், எளிதாக வருவது எல்லாம் இனிமையாக நீடித்து இருப்பதில்லை. யோயாக்கின் அரசன் தன் நாட்டின் உடனடி பாதுகாப்பைத்தான் பார்த்தாரே தவிர, ஒட்டுமொத்த அரசியல் சூழ்ச்சியை அல்லது ஆண்டவரின் உடனிருப்பை விரித்துப் பார்க்கவில்லை. கொரிந்தியர்கள் தாங்கள் பெற்றிருக்கும் இந்த உடலைப் பார்த்தார்களே தவிர, இதற்கு மேலும் அல்லது இதைவிடவும் அழியாத உடல் இருக்கிறது என்பதைப் பார்க்கவில்லை. செல்வம், உணவு, சிரிப்பு, புகழ்ச்சி கொண்டிருப்போரும் தங்களின் இப்போதைய இருப்பில் மகிழ்ந்தார்களே அன்றி, வாழ்வின் மறுபக்கத்தை அவர்கள் நீட்டிப்பார்க்கத் தவறிவிட்டனர். ஆக, யார் ஒருவர் இருப்பதிலிருந்து இல்லாதது வரை அகலமாகத் தன் கண்களை விரிக்கிறாரோ அவர்தான் தன் நங்கூரப் புள்ளியைச் சரியான இடத்தில் போட முடியும். எடுத்துக்காட்டாக, வால்ட் டிஸ்னி. தன் அறைக்குள் நுழைந்த எலிகளைக் கேலிச்சித்திரமாக வரைவதோடு நின்றிருந்தால் அவர் ஒரு கார்ட்டூன் வரைபவராகவே இருந்திருப்பார். ஆனால், 'மிக்கி மவுஸ்' என்ற ஒன்றை எடுத்து குழந்தைகள் பொழுதுபோக்கு என்று மாற்றியதால்தான் அவரால் டிஸ்னி உலகம் பற்றி யோசிக்க முடிந்தது. இயேசு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு. மீன் பிடித்துக்கொண்டிருந்தவர்கள் உருவில் பெரிய திருச்சபைத் தலைவர்களைப் பார்த்தார். ஆக, வாழ்வைப் பெரிதாக, முழுமையாக விரித்துப்பார்க்கும்போது நம் நங்கூரப் புள்ளியை நிலையானவற்றில் நாம் பதிக்க முடியும்.

2. உடனடி இன்பங்கள் தவிர்ப்பது

யோயாக்கின், கொரிந்து நகர மக்கள், மற்றும் செல்வர், உணவருந்தி இன்புற்றிருப்போர், சிரிப்போர், புகழ்ச்சியை இரசிப்போர் ஆகிய அனைவரும் உடனடியாகக் கிடைக்கும் முடிவுகள் பற்றியே கருத்தாய் இருந்தனர். இன்றைய உலகம் நமக்கு நிறைய உடனடி நங்கூரப் புள்ளிகளைத் தருகிறது. சமூக தொடர்பு செயலிகளும், விளம்பரங்களும் நம்மை அவை நோக்கி இழுக்கின்றன: களிப்பு, பொழுதுபோக்கு, அழகு, பணம், அறிமுகம், வெற்றி, வேலை என நிறைய நங்கூரப் புள்ளிகள் நம்மை அழைக்கின்றன. இவை எல்லாம் இன்பம் தருபவையே. ஆனால், எவ்வளவு வேகமாக இவை இன்பத்தைத் தருகின்றனவோ, அவ்வளவிற்கு வேகமாக இன்பத்தை இழக்கவும் செய்கின்றன. மேலும், இவை ஒருவரைத் தன்மையம் கொண்டவராக மாற்றிவிடுகின்றன.

3. கவனச் சிதறல்கள் குறைப்பது

'இரு மானைத் துரத்துபவர் ஒரு மானையும் பிடியார்' என்பதுபோல, ஒரே நேரத்தில் இரண்டு இடங்களில் நங்கூரம் போட நினைப்பவர் ஓரிடத்திலும் போட மாட்டார். ஆக, எது சரியானது என்பதைத் தேர்ந்து தெளிந்து, தெரிவு செய்ததில் முழுமையாக ஆற்றலைச் செலுத்தும் மனப்பக்குவமும், மனவுறுதியும் பெற வேண்டும். 'அது நன்றாக இருக்குமே, இது நன்றாக இருக்குமே' என்று வண்ணத்துப் பூச்சி போல பறந்துகொண்டிருந்தாலும், 'அவரைப் போல நான் இருப்பேன். இவரைப் போல நான் செய்வேன்' என்று ஒப்பீடுகள் செய்துகொண்டிருந்தாலும் நம்மால் நிலையானதில் நங்கூரம் பதிக்க முடியாது. யோயாக்கினுக்கு எகிப்து ஒரு கவனச் சிதறலாகவும், கொரிந்தியருக்கு தங்களின் கிரேக்க தத்துவ சிந்தனை ஒரு கவனச் சிதறலாகவும், இயேசுவின் சமகாலத்து எதிராளிகளுக்கு தங்களின் செல்வம், உணவு, சிரிப்பு, புகழ்ச்சி ஆகியவை கவனச் சிதறல்களாகவும் இருந்தன. இன்று என்னுடைய கவனச் சிதறல் எது?

இறுதியாக, கொஞ்சம் நிமிர்ந்து, கண்களையும் இதயத்தையும் திறந்து வைத்து அகலமாகப் பார்த்தால், பார்வை தெளிவாகும். என் நங்கூரப் புள்ளியை - அதாவது, நம்பிக்கை மையத்தை - சரியாகத் தெரிவு செய்து, அதற்கேற்ற உழைப்பைக் கொடுத்து, பொறுமையாகக் காத்திருந்தால் நானும் நிலைத்துக் கனிகொடுப்பேன்.

இதுவே, இன்றைய பதிலுரைப்பாடலில் (திபா 1) திருப்பாடல் ஆசிரியரின் இறைவேண்டலாக, ஏக்கமாக, எதிர்நோக்காக இருக்கிறது: 'ஆண்டவரின் திருச்சட்டத்தில் நங்கூரம் பதிப்பவர் நீரோடையோரம் நடப்பட்ட மரம் போல இருப்பார். பருவகாலத்தில் கனிதருவார். தாம் செய்வதனைத்திலும் வெற்றி பெறுவார்!'