Monday 24 December 2018

கிறிஸ்து பிறப்பு பெருவிழா

கிறிஸ்து பிறப்பு பெருவிழா (நள்ளிரவுத் திருப்பலி)

இன்றைய வாசகங்கள்
I. எசாயா 9:2-7  II. தீத்து 2:11-14  III. லூக்கா 2:1-14



ஒரு பள்ளியின் மாடிப்படியின் மேல்படியில் நான் நின்று கொண்டிருந்தேன், கீழ்ப்படியில் இருந்த கவிதா என்ற சிறுமியைப் பார்த்து, "கவிதா மேலே ஏறிவா” என்று அழைத்தேன். அவளால் ஏறி வர முடியவில்லை. அவள் என்னைப் பார்த்து, "நீங்க கீழே இறங்கி வாங்க" என்றாள். நானும் கீழே இறங்கி வந்து அவளை மேலே தூக்கிச் சென்றேன்.

மனிதன் கடவுளுடைய நிலையை எட்டிப் பிடிக்க முயன்றான். அந்நிலையில் கடவுளே மனிதனுடைய நிலைக்குத் தாழ்ந்து வந்து அவனைக் கடவுளுடைய நிலைக்கு உயர்த்தினார். மனிதனைத் தெய்வமாக்க தெய்வம் மனிதரானது. மனிதர் இறைத்தன்மையில் பங்குபெற்றுள்ளனர் (1 பேது. 1:4).

கிறிஸ்து பிறப்பு விழா உணர்த்தும் உண்மைகள்: கடவுள் மனிதரானார்; கடவுள் குழந்தையானார்; கடவுள் ஏழையானார்,
முதலாவதாக "வாக்கு மனிதரானார்; நம்மிடையே குடிகொண்டார்" (1 யோவா 1:14). நாம் கடவுளைக் கண்ணால் கண்டோம்; அவரைக் கைாயல் தொட்டோம்; அவரது வாக்கைக் காதால் கேட்டோம் (1 யோவா 1:1). இனி கடவுள் நமக்கு அந்நியர் அல்ல; மாறாக, நம்மிலே ஒருவர்; நமது இரத்தத்தின் இரத்தம்; நமது தசையின் தசை.

கடவுள் மனிதரானது நமக்காகவும் நமது மீட்புக்காகவும். "இன்று மீட்பர் உங்களுக்காகப் பிறந்திருக்கிறார் ” (லூக் 2:10). “குழந்தை நமக்காகப் பிறந்துள்ளார்; ஓர் ஆண் மகவு நமக்குத் தரப்பட்டுள்ளார் " (எசா 9:6). மானிடராகிய நமக்காகவும் நமது மீட்புக்காகவும் வானகமிருந்து வையகம் வந்தார். தமது ஒரே மகனை கையளிக்கும் அளவுக்கு கடவுள் நம்மீது அன்பு கூர்ந்துள்ளார் (யோவா 3:16). இன்று ஆண்டவர் பிறந்த நன்னாள், எனவே அகமகிழ்வோம்: அக்களிப்போம்.

கடவுள் மனிதராகப் பிறந்தார் என்னும் இறையியல் உண்மையைத் திருத்தூதர் பவுல், "நம் மீட்பராம் கடவுளின் நன்மையும் மனித நேயமும் வெளிப்பட்டது” (தீத் 3:4) என்று கூறுகிறார். கிறிஸ்துவில் கடவுளுடைய இரக்கமும் மனித நேயமும் ஊன் உடல் எடுத்தன. ஊன் உடல் எடுத்த கிறிஸ்து நம் பிணிகளைத் தாங்கிக் கொண்டார்; நம் துன்பங்களைச் சுமந்து கொண்டார் (எசா 53:4). கிறிஸ்து எங்கும் நன்மை செய்துகொண்டே சென்றார் (திப 10:38).

நம்மிடத்தில் மனித நேயம் மலர்ந்துள்ளதா? மாட்டுக்கும் மனிதனுக்கும் உள்ள வேறுபாடு என்ன? “மாட்டுக் கழுத்தில் தொங்குவது "பெல்" மனிதர் கழுத்தில் தொங்குவது "செல்”; என்று சொல்லப்படுகிறது. "ஒரு மாடு அடுத்த மாட்டைப் பற்றி அக்கறை
கொள்ளாது. ஒரு மனிதர் அடுத்த மனிதரைப் பற்றி அக்கறை கொள்வார். அடுத்தவனைப் பற்றி அக்கறை கொள்ளாதவன் நன்றாகத் தின்று கொழுத்த பன்றி" (சாக்ரட்டீஸ்). இன்றைய அறிவியல் பலவற்றைப் புதிதாகக் கண்டுபிடித்துள்ளது. ஆனால் மனித நேயத்தைத் தொலைத்து விட்டது. இந்நிலையில் கிறிஸ்துவின் மனித நேயம் நம்மை ஆட்கொள்வதாக. அதன் விளைவாக அழுவாரோடு அழுது. மகிழ்வாரோடு மகிழ்வோம் (உரோ 12:15).

இரண்டாவதாக, கடவுள் குழந்தையானார். கிறிஸ்துவின் பிறப்பை அறிவித்த வானதூதர், "குழந்தையைத் துணிகளில் சுற்றித் தீவனத் தொட்டியில் கிடத்தியிருப்பதைக் காண்பீர்கள், இதுவே லடங்களுக்கு அடையாளம் என்றார்" (லூக் 2:12)

குழந்தை வலுவற்றது. தனக்குத்தானே எந்த உதவியையும் அதனால் செய்துகொள்ள முடியாது: தனது தேவைகள் அனைத்துக்கும் மற்றவர்களையே சார்ந்துள்ளது. உலகை மீட்க வந்தவர் ஒரு குழந்தையாக அதாவது, வலுவற்றவராகப் பிறந்தார். "மனித வலிமையைவிட கடவுளுடைய வலுவின்மை வலிமை மிக்கது" (1 கொரி 1:25) என்பதை உணர்ந்த வலிமை மிக்க கடவுள் வலுவற்றவராகப் பிறந்தார், மடமை எனக் கருதப்பட்ட சிலுவையால் உலகை மீட்டார்.

மதம் பிடித்த யானை வீதியின் நடுவே அமர்ந்திருந்த ஒரு குழந்தையைத் தன் தும்பிக்கையால் தொட்டு, அக்குழந்தை அருகே படுத்துக் கொண்டது. ஒரு குழந்தையின் முன்பு யானையின் வெறிகூட மாயமாக மறைந்துவிட்டது, குழந்தையைப் பற்றிப் பாரதி. "முல்லைச் சிரிப்பால் என் மூர்க்கம் தவிர்த்திடுவாய்” என்று பாடியுள்ளார். குழந்தையின் சிரிப்பு நமது மூர்க்கக் குணத்தை நிர்மூலமாக்கி விடுகிறது.
ஆணவத்தினால் பிரிந்து வாழும் குடும்பங்களும் தனி நபர்களும் குழந்தை இயேசுவின் முன்னால் மீண்டும் ஒன்று சேர வேண்டும். பெத்லகேமில் இயேசு பிறந்த இடத்திற்குச் செல்லத் தலை குனிய வேண்டும், தம்மைத் தாழ்த்தாத எவரும் கடவுளை அணுக முடியாது. குழந்தை இயேசுவிடமிருந்து "கனிவையும், மனத்தாழ்மையையும்" (மத் 11:29) கற்றுக்கொள்வோம். நாம் குழந்தைகளாக மாறாவிட்டால் விண்ண ரசில் நுழைய முடியாது (மத் 18:3).

| மூன்றாவதாக, கடவுள் ஏழையானார். விண்ணுக்கும் மண்ணுக்கும் சொந்தக்காரர் மாட்டுத் தொழுவத்தில் பிறந்தார் (லூக் 2:7). செல்வந்தராக இருந்தும் நமக்காக ஏழையானார் (2 கொரி 8:3). மண்ணிலே அவருக்குத் தலைசாய்க்கக்கூட இடமில்லை (லூக் 9:8). ஏழைகளுக்கு அவர் நற்செய்தி அறிவித்தார் (லூக் 4:18). ஏழைகள் பேறுபெற்றவர்கள் என்று அறிக்கையிட்டார் (லுக்: 6:20).

ஏழையாகப் பிறந்த கடவுள் ஏழைகளின் கடவுள். திக்கற்ற ஏழையின் குரலுக்குச் செவிமடுக்கும் கடவுள் (திப 34:6),
நுகர்வுக் கலாச்சாரத்தில் சிக்கி, அங்காடியின் சிலைவழிபாட்டில் ஈடுபட்டுள்ளது இன்றைய உலகம். திருச்சபை இதற்கு விதிவிலக்கல்ல. நோவாவின் பேழையைக் கட்ட வேண்டிய திருச்சபை 'டைட்டானிக்' கப்பலைக் கட்டிக்கொண்டிருக்கிறது. டைட்டானிக் கப்பலைத் திருச்சபை கட்டினால் நுகர்வுக் கலாச்சாரம் என்னும் பனிப்பாறையில் மோதி மூழ்கிவிடும். மாறாக, நோவாவின் பேழையைக் கட்டினால் தன்னையும் உலகையும் காப்பாற்றும். இன்றைய உலகை அச்சுறுத்தும் நுகர்வுக் கலாச்சாரமாகிய கோலியாத் என்னும் அரக்கனைத் தாவீதின் எளிமை என்னும் கவணால் மட்டுமே வீழ்த்த முடியும். குழந்தை இயேசு நமக்கு விடுக்கும் செய்தி, "நீங்கள் கடவுளுக்கும் செல்வத்துக்கும் பணிவிடை செய்ய முடியாது” (மத் 6:24).

கிறிஸ்து பிறப்பு விழாவில் ஏழை எளியவர்களைத் தேடிச் செல்வோம். குறிப்பாக, ஏழை மற்றும் அனாதைக் குழந்தைகளுக்கு உணவும் உடையும் கொடுத்து அவர்களை மகிழ்விப்போம், ஏழைகளுக்கு நாம் செய்யும் உதவி இயேசுவுக்கே செய்யும் உதவி என்பதை நினைவுகூர்வோம் (மத் 25:40).

முடிவாக, கடவுள் மனிதரானார்; நாம் மனிதராவது எப்போது? கடவுள் குழந்தையானார்; நாம் குழந்தையாவது எப்போது? கடவுள் ஏழையானார்; நாம் ஏழையாவது எப்போது?
விண்ணகத்தில் கடவுளுக்கு மகிமையும் மண்ணகத்தில் மாந்தர்க்கு அமைதியும் உரித்தாகுக! கிறிஸ்து பிறப்பு இனிய நல்வாழ்த்துக்கள்!









இதுவே உங்களுக்கு அடையாளம்
அருள்பணி :- ஏசு கருணாநிதி

இன்றைய ஜிபிஎஸ் கட்டுப்படுத்தும் உலகில் நாம் ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குச் செல்ல ஒரு ஓலா அல்லது ஊபர் டாக்ஸி பதிவு செய்தாலோ, அல்லது ஸ்விக்கி, ஸ்ஸேமாட்டோ போன்ற உணவு கொணரும் செயலிகளில் உணவு பதிவு செய்தாலோ, அவர்கள் கேட்கும் சில கேள்விகளுள் ஒன்று: 'உங்கள் இருப்பிடத்திற்கான அடையாளம் (லேன்ட்மார்க்) என்ன?' அடையாளங்கள் அல்லது லேன்ட்மார்க்குகள் பெரும்பாலும் பெரியனவையாகவே இருக்கின்றன - பலரும் வந்து போகும் வங்கி, குழந்தைகள் படிக்கும் பள்ளி, ரவுண்டானா வலது புறம், ஆஞ்சநேயர் கோவில், மருத்துவனை பின்புறம் என நாம் நம் அடையாளங்களை வரையறுத்துக்கொள்கின்றோம். அல்லது இந்த அடையாளங்களே நம்மை வரையறை செய்ய நாம் அனுமதித்துவிடுகின்றோம். அடையாளங்கள் இல்லாமல் நம்மால் வாழ முடிவதில்லை. ஃபோனில் 'லோ பேட்டரி' என்ற எச்சரிக்கை வந்தால், அது ஃபோன் அணைந்து போவதற்கான அடையாளம். வாட்ஸ்ஆப்பில் 'ஆன்லைன்' என வந்தால், அடுத்த நபர் இணைப்பில் இருக்கிறார் என்று அடையாளம். நம் தகவலுக்கு மேலே 'டைபிங்' என்று வந்தால், அவர் உரையாடலைத் தயாரித்துக் கொண்டிருக்கின்றார் என்று அடையாளம். கதவில் பூட்டு தொங்கினால் 'வீட்டில் யாரும் இல்லை' என்று அடையாளம். 'கறுப்பு' சோகத்திற்கான அடையாளம். 'வெள்ளை' அமைதிக்கான அடையாளம். 'பச்சை' பசுமைக்கான அடையாளம். இப்படி அடையாளங்களை நாம் அடுக்கிக்கொண்N;ட போகலாம்.

ஆனால், இந்த அடையாளங்கள் அடையாளங்களே தவிர அவை தாங்கள் குறித்துக்காட்டுவதைச் செய்ய முடிவதில்லை. எடுத்துக்காட்டாக, சாலையில் சிகப்பு விளக்கு என்பது 'நில்' என்பதற்கான அடையாளம். 'நில்' என்பதற்கான அடையாளமாக அது இருக்கிறதே தவிர, அது ஒருபோதும் நம் வாகனத்தின் முன்னால் வந்து நின்று, 'போகாதே' என்று சொல்வதில்லை. 'தண்ணீர்' தூய்மையின் அடையாளம். ஆனால், அத்தண்ணீரை நாம் பயன்படுத்தினால்தான் தூய்மை ஆவோமே தவிர, வெறும் தண்ணீரை வைத்திருப்பதால் நமக்குத் தூய்மை வந்துவிடாது. 'பேட்டரி லோ' என்று நம் மொபைல் காட்டுமே தவிர, அதுவே சார்ஜரில் ஏறி உட்கார்ந்து தன்னைச் சார்ஜ் செய்து கொள்ளாது. நாம்தான் சார்ஜரில் போட வேண்டும். இவ்வாறாக, அடையாளங்கள் தங்களிலேயே வலுவற்றவை.

கிறிஸ்து பிறப்பு செய்தியை இடையர்களுக்கு அறிவிக்கும் வானதூதர், 'இன்று ஆண்டவராகிய மெசியா என்னும் மீட்பர் உங்களுக்காகத் தாவீதின் ஊரில் பிறந்திருக்கிறார். குழந்தையைத் துணிகளில் சுற்றித் தீவனத் தொட்டியில் கிடத்தியிருப்பதைக் காண்பீர்கள். இதுவே உங்களுக்கு அடையாளம்' (லூக் 1:11-12) என்கிறார். இதற்கு மேலும் ஒரு வார்த்தைகூட பேசவில்லை வானதூதர்.

பிறந்திருப்பவர் யார்? ஆண்டவராகிய மெசியா என்னும் மீட்பர்.

எங்கே? தாவீதின் ஊரில் (பெத்லகேம்)

என்ன அடையாளம்? 'குழந்தை' 'துணிகளில் சுற்றி' 'தீவனத் தொட்டியில் கிடத்தப்பட்டிருக்கும்'

ஒரு நட்சத்திரத்தைப் பார்த்துக்கொண்டே எருசலேம் வந்து சேர்ந்த ஞானியர்களின் அறிவு ஆடுகள் மேய்த்துக்கொண்டிருந்த இடையர்களுக்கு இருந்திருக்குமா? 'மெசியா' பற்றி புரிதல் இருந்திருக்குமா? 'தாவீதின் ஊர்' என்றால் 'பெத்லகேம்' என்று தெரிந்திருக்குமா? அந்த இரவில் எத்தனை குழந்தைகளை அவர்கள் தேட முடியும்? பெரியவர்கள் சிறியவர்கள் வீட்டின் கதவுகளை எளிதாகத் தட்ட முடியும். இவர்களோ சமூகத்தில் சிறியவர்கள். இவர்களால் எத்தனை பேர் வீட்டுக் கதவுகளைத் தட்ட முடியும்?

மரியாவுக்கு வானதூதர் கபிரியேல் இயேசுவின் பிறப்பை முன்னறிவித்தபோது, 'அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர். அவர் பெரியவராயிருப்பார். அவர் உன்னத கடவுளின் மகன் எனப்படுவார். அவருடைய தந்தை தாவீதின் அரியணையை ஆண்டவராகிய கடவுள் அவருக்கு அளிப்பார். அவருடைய ஆட்சிக்கு முடிவே இராது' (லூக் 1:31-32) என்று சொல்கிறார். ஆனால், அங்கே சொன்ன ஒரு வார்த்தைகூட இடையர்களுக்குச் சொல்லப்படவில்லை. வானதூதர்களுக்குள் கம்யூனிகேஷன் இடைவெளி இருந்ததா? ஒருவேளை இவ்வார்த்தைகள் எல்லாம் இடையர்களுக்குச் சொல்லப்பட்டால் அவர்கள் அலறி அடித்துக்கொண்டு ஓடியிருப்பார்கள்.

- 'இயேசு' என்று அங்கே பெயர் 'ஆண்டவர், மெசியா, மீட்பர்' என இங்கே தரப்படுகிறது.
- 'பெரியவராயிருப்பார்' என்று அங்கே சொல்லப்பட்டது, 'குழந்தை' என்று இங்கே சொல்லப்பட்டுள்ளது.
- 'தாவீதின் அரியணை' என்று அங்கே இருப்பது, 'தாவீதின் ஊர்' என்று இங்கே இருக்கிறது.
- 'கடவுளின் மகன்' என்று அங்கே சொல்லப்பட்டது, பாவத்தின் விளைவால் வந்த 'துணிகளால் சுற்றப்பட்டு' என்று இங்கே உள்ளது.
- 'அவர் ஆட்சி செய்வார்' என்று அங்கே இருப்பது, 'தீவனத் தொட்டியில் கிடத்தியிருப்பார்கள்' என்று இருக்கிறது.

வானதூதர் அங்கே மரியாவுக்கு முன்மொழிந்ததற்கும், இங்கே இடையர்களுக்கு முன்மொழிந்ததற்கும் ஏன் முரண்பாடு?

மேலோட்டாகப் பார்த்தால்தான் இவை முரண்பாடுகள். ஆனால், கொஞ்சம் ஆழமாகப் பார்த்தால் இங்கே அடையாளங்களாகச் சொல்லப்படுபவை அங்கே நேருக்கு நேராகச் சொல்லப்படுகின்றன. ஆக, மற்ற அடையாளங்களுக்கும் இயேசு என்ற அடையாளத்திற்கும் உள்ள வித்தியாசம் இதுதான். இந்த அடையாளம் தான் சுட்டிக்காட்டுவதை அப்படியே வாழும்.

எப்படி?

- 'இயேசு' என்றால் 'மீட்பர்' - 'பாவங்களிலிருந்து இவர் மீட்பார்;'
- 'குழந்தை' தன் வலுவின்மையில் 'பெரியவராகும்'
- 'தாவீதின் ஊரில்' இவர் சிலுவை என்னும் 'அரியணை ஏறுவார்'
- 'துணிகளால் சுற்றப்பட்ட' மனுக்குலத்தை தன் நிர்வாணத்தினால் மீட்டு 'கடவுளின் மகன்' என்ற நிலைக்கு உயர்த்துவார்.
- 'தீவனத் தொட்டியில்' பிறந்ததால் என்னவோ, தன் உணவு நிகழ்வுகள் வழியாக (உணவுப் பகிர்வு, உணவுப் பலுகச் செய்தல், விருந்துக் கொண்டாட்டங்கள், நற்கருணை) என உறவாடி, தன்னையே பிறருக்கான உணவாக வழங்குவார்.

இவைகள் இடையர்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. முதல் கிறிஸ்து பிறப்பு கொண்டாடப்பட்ட அன்றைய நாளில் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனாலும், வானதூதர்களின் வார்த்தைகளுக்குள் முரண்கள் இல்லை.

இன்றைய முதல் வாசகத்தை (எசாயா 9:2-7) எடுத்துக்கொள்வோம். எபிரேய இலக்கியத்தில், குறிப்பாக செய்யுளில், அதிகமாக பயன்படுத்தப்படும் ஒரு இலக்கியப் பண்பின் பெயர் 'இருசொல் இயைபணி' அல்லது 'இணைவாக்கியம்.' அதாவது, முதல் வாக்கியத்தில் சொல்லப்படும் கருத்தே இரண்டாம் வாக்கியத்திலும் வேறு வார்த்தைகளில் சொல்லப்படுவது. இன்றைய முதல் வாசகத்தில் நான்கு இடங்களில் இது பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.

- காரிருளில் நடந்து வந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள். சாவின் நிழல்சூழ் நாட்டில் குடியிருப்போர்மேல் சுடர் ஒளி உதித்துள்ளது. (இந்த இரண்டு வாக்கியங்களின் பொருள் ஒன்றே)
- அவர்கள் பலுகிப் பெருகச் செய்தீர். அவர்கள் மகிழ்ச்சியை பெருகச் செய்தீர்.
- நுகத்தை நீர் உடைத்தெறிந்தீர். தடியைத் தகர்த்துப் போட்டீர். கொடுங்கோலை ஒடித்தெறிந்தீர்.
- ஒரு குழந்தை நமக்குப் பிறந்துள்ளது. ஓர் ஆண்மகவு நமக்கு தரப்பட்டுள்ளது.

மெசியாவின் வருகை தரும் மகிழ்ச்சிக்கு இங்கே இரண்டு அடையாளங்கள் தரப்படுகின்றன: (அ) அறுவடை நாள், (ஆ) கொள்ளைப் பொருளைப் பங்கிடும் நாள். (அ) அறுவடை நாளில் எதற்கு நிறைவு கிடைக்கிறது? அன்ற, உண்பதற்கான உணவு கிடைத்துவிடுகிறது. (ஆ) போரின் வெற்றி நாளில் கிடைப்பது என்ன? பாதுகாப்பு. அன்று, எதிரிகள் அழிகிறார்கள். 'அறுவடை நாளில் மகிழ்வது போல' 'கொள்ளைப் பொருளைப் பங்கிடுவது போல' என மகிழ்ச்சிக்கு இரண்டு உருவகங்களைத் தருகின்றார் எசாயா. 'கொள்ளைப் பொருள்' என்பது இங்கே திருடிய பொருள் அல்ல. மாறாக, எதிரி நாட்டை வெற்றி கொண்டு, அந்நாட்டில் உள்ளவர்களின் உரிமைப் பொருள்களை நம் உரிமைப்பொருள்கள் ஆக்குதல். நம் உழைப்பு இல்லாத பொருளைக் குறிப்பிடவில்லை எசாயா. மேலும், சார்புநிலையும், அடிமைத்தனமும் ஒழிகிறது. பழையன அனைத்தும் நெருப்பில் இடப்படுகின்றன.

அதே வேளையில், 'குழந்தை பிறந்துள்ளது' என்று சொல்லப்படுகிறது. இந்தக் குழந்தைக்கு நான்கு பெயர்கள் தரப்பட்டிருக்கின்றன. அதாவது, அரசர்கள் தலைப்புகள் இட்டு அழைக்கப்படுவது மரபு - இராஜாதி ராஜ, இராஜ குலோத்துங்க, இராஜ குலதிலக என்பதுபோல. மேலும், 'எதிரிகளை நீ புறமுதுகிட்டு ஓடச் செய்ததால் இன்றுமுதல் நீ ...' என்று அரசனுக்கு பட்டங்கள் கொடுப்பதும் வழக்கம். இங்கே குழந்தைக்கு நான்கு பட்டங்கள் சூட்டி மகிழ்கின்றார் எசாயா:

- வியத்தகு ஆலோசகர். அதாவது, எங்கே போக வேண்டும் என்ற வழியைக் காட்டுபவர்.
- வலிமைமிகு இறைவன். இங்கே இறைவன் என்பதற்கு 'எலோகிம்' அல்லது 'யாவே' பயன்படுத்தப்படவில்லை. 'ஏல்' என்று பயன்படுத்தப்பட்டுள்ளது. 'ஏல்' என்றால் 'பெருமான்' அல்லது 'பெருமகனார்' என மொழிபெயர்க்கலாம். இங்கே இந்த குழந்தையை எசாயா கடவுளாக்கவில்லை. மிக நேர்த்தியாக வார்த்தையை கையாளுகின்றார்.
- என்றுமுள தந்தை. ஒரு குழந்தை எப்படி தந்தையாகும்? இது ஒரு வித்தியாசமான தலைப்பு. ஒரு குடும்பத்தின் தந்தை தன் குடும்பத்திற்கு தரும் உணவையும், பாதுகாப்பையும் இது குறிக்கிறது.
- அமைதியின் அரசர். அடிமைத்தனம் மற்றும் போர் நீக்கி அமைதி தருகிறார்.

இந்த இறைவாக்கு மெசியா இறைவாக்காக இயேசுவின் பிறப்பை முன்னறிவிக்கிறது.

ஆக, மெசியா என்பதற்கு குழந்தை ஒரு அடையாளமாகத் தரப்படுகிறது. அந்தக் குழந்தையின் பிறப்பின் பின்புலத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கிறது. இதையே இன்றைய நற்செய்தி வாசகத்தில், 'எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தி' என்றும் 'உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி' என்றும் வானதூதர்கள் அக்களிக்கிறார்கள்.

மெசியா, தான் எதை அடையாளப்படுத்துகிறாரோ, அதை அப்படியே தரவும் செய்கின்றார்.

இன்றைய இரண்டாம் வாசகம் (தீத்து 2:11-14), 'வெளிப்படுத்துதல்' என்ற முக்கியமான வார்த்தையைக் கொண்டிருக்கிறது. இவ்வுலகம் சார்ந்தவற்றை - புவிஈர்ப்பு விசை, அமெரிக்கா, செல்ஃபோன், எலெக்ட்ரிசிட்டி - இவ்வுலகில் இருப்பவர்களே கண்டுபிடிக்க முடியும். ஆனால், இவ்வுலகம் சாராதவை வெளிப்படுத்தப்பட்டால் ஒழிய அவைகள் பற்றி நமக்குத் தெரியாது. ஆக, கிறிஸ்து இவ்வுலகிற்கு வந்தது, இவ்வுலகம் சாராத 'கடவுளின் அருளையும், மாட்சியையும்' வெளிப்படுத்தவே என்கிறார் புனித பவுல். இதையே நாம் கிறிஸ்து பிறப்பு திருப்பலியின் தொடக்கவுரையில், 'வாக்கு மனிதர் ஆனார் என்னும் மறைநிகழ்வின் வாயிலாக உமது மாட்சியின் ஒளி எங்கள் மனக் கண்களுக்குப் புதிதாய் ஒளி வீசியது. இதனால் கண் காணாத கடவுளை நாங்கள் காண்கின்றோம். கண் காணாதவை மீதுள்ள பற்று எங்களை ஆட்கொள்கிறது' எனப் பாடுகிறோம். கடவுளின் வெளிப்படுத்துதல் இயேசுவில் இரண்டுமுறை நிகழ்கிறது: (அ) அவரது பிறப்பில். (ஆ) அவரது உயிர்ப்பில். (அ) பிறப்பு என்னும் வெளிப்படுத்துதல் நம் இம்மை வாழ்வுக்கு பயன்தருகிறது. அதாவது, கட்டுப்பாட்டுடனும், நேர்மையுடனும், இறைப்பற்றுடனும் வாழ இவ்வருள் பயிற்சி அளிக்கிறது. (ஆ) உயிர்ப்பு என்னும் வெளிப்படுத்துதல் நம் மறுமை வாழ்வுக்கு பயன்தருகிறது. அதாவது, மகிழ்ச்சியோடு எதிர்நோக்கியிருக்க அது கற்றுத்தருகிறது. இவ்வாறாக, தான் எதை அடையாளப்படுத்தினாரோ அதையே வாழ்ந்து காட்டுகிறார் இயேசு.

'இதுவே உங்களுக்கு அடையாளம்' என்று வானதூதர் இடையர்களுக்கு மூன்று அடையாளங்களைக் கொடுக்கின்றனர். (அ) குழந்தை - வலுவின்மையின், சார்புநிலையின், பாதுகாப்பின்மையின் அடையாளம். (ஆ) துணிகள் - மனித வரலாற்றுக்குள் பாவம் நுழைந்ததன் அடையாளம் (காண். தொநூ 2:25, 3:21). (இ) தீவனத் தொட்டி - வெறுமையான தீவனத்தொட்டி வறுமையின் அடையாளம். நிறைவான தீவனத்தொட்டி மகிழ்வின் அடையாளம். இங்கே குழந்தை தீவனத்தொட்டியின் வெறுமையை நிறைக்கிறது. இவை குழந்தையை அடையாளம் காண காட்டப்பட்ட அடையாளங்கள் மட்டுமல்ல. இந்த அடையாளங்களே இயேசுவின் வாழ்க்கையாக மாறுகின்றன. தானே வலுவின்மையில், சார்புநிலையில், பாதுகாப்பின்மையை உணர்ந்ததால் அந்த உணர்வோடு இருக்கிறவர்களோடு நெருக்கமாகிறார். பாவத்தால் வந்த ஆடையை சிலுவையில் தன் நிர்வாணத்தால் களைகிறார். தன் வாழ்வு முழுவதும் தன்னிடம் வந்தவருக்கு நிறைவு தந்து, இன்றும் நற்கருணையில் நமக்க ஆன்மீக விருந்தளிக்கிறார். அவரின் அடையாளங்கள் அவரின் வாழ்க்கை நிலைகள்.

இன்று, நாம் குடில், நட்சத்திரம், கேரல், கேக், கிஃப்ட், புத்தாடை என கிறிஸ்து பிறப்பு விழா அடையாளங்களைப் பார்க்கிறோம். ஆனால், இந்த அடையாளங்கள் தாங்கள் சுட்டிக்காட்டுவதை ஒருபோதும் நமக்குத் தருவதில்லை. கிறிஸ்துவைப் பற்றிய அடையாளத்தை நாம் கிறிஸ்து பிறப்பில் கண்டுகொண்டால் மட்டுமே நாம் மகிழ்ச்சியும், நிறைவும் பெறுவோம். இரண்டாவதாக, கிறிஸ்து பிறப்பின் அடையாளம் நாம் பெறுவதற்கு நாம் அரிய பெரிய காரியங்களைச் செய்ய வேண்டியதில்லை. ஒரு சிறிய இடையராய், நம் ஆடுகளுக்குக் காவல் காத்துக்கொண்டு, நம் அன்றாட வேலைகளைப் பொறுப்புணர்வோடு செய்துகொண்டு, விழித்துக்கொண்டிருந்தாலே போதும். மூன்றாவதாக, இன்று நான் எதன் அடையாளமாக இருக்கிறேன்? என்னைப் பற்றி ஒருவர் மற்றவரிடம் சொன்னால் என்ன அடையாளத்தைக் கொண்டு என்னைச் சொல்வார்?

'இதுவே உங்களுக்கு அடையாளம்' - கிறிஸ்து பிறப்பு பெருவிழா வாழ்த்துக்களும், செபங்களும்.


கிறிஸ்து பிறப்பு பெருவிழா 

அருள்பணி :- மரிய அந்தோனிராஜ்

இந்த மண்ணில் எத்தனையோ மனிதர்கள் பிறக்கிறார்கள், இறக்கிறார்கள். ஆனால் எல்லாரையும் நாம் நினைவுகூர்ந்து பார்ப்பதில்லை. அவர்களுடைய பிறப்பை நாம் விழாவாகக் கொண்டாடுவதில்லை. ஆனால் இயேசுவின் பிறப்பைப்பைத்தான் ஆண்டுதோறும் கொண்டாடுகிறோம். காரணம் அவருடைய பிறப்பு அன்று மட்டுமல்ல இன்றும் கூட மகிழச்சியான ஒரு செய்தியாக இருக்கிறது (லூக் 2:10).
ரோம் நகரிலே ஒரு பெரிய அரண்மனை இருக்கிறது. அந்த அரண்மணையிலே பெரிய கோபுரமும் ஒன்று இருக்கிறது. அந்த கோபுரத்தில் குய்டோ ரெனி அவர்கள் தீட்டிய ஓர் ஒவியம் இருக்கிறது. பார்ப்பதற்கு அவ்வளவு அற்புதமாக இருக்கும். ஆனால் அது உயரத்திலே இருப்பதால் சரியாகப் பார்க்கமுடியாது. எனவே அதனை எளிதாகப் பார்ப்பதற்கு அந்த கோபுரத்திற்குக் கீழே ஒரு மேசை. அதிலே ஒரு கண்ணாடி வைக்கப்பட்டிருக்கிறது. யாராரெல்லாம் அந்த கண்ணாடியைப் பார்க்கிறார்களோ அவர்களால் மேலே உள்ள அந்த ஒவியத்தின் அழகைப் பார்த்து ரசிக்க முடியும். இந்த கண்ணாடியைப் போலத்தான். இயேசுவும் கண்ணாடியைப் பார்ப்பவர்கள் மேல உள்ள ஓவியத்தை காண்பதுபோல இயேசுவைப் பார்ப்பவர்கள் கடவுளைக் கண்டுகொள்கிறார்கள். இயேசுவைக் காண்பவர்கள் கடவுளே காண்கிறார்கள் (யோவா 14:7-9)
கிறத்து பிறப்பு விழாவிலே பரம்பொருள் பருப்பொருளாய் காட்சியளிக்கிறார். இந்த நாளிலே இவ்விழா நமக்குச் சொல்லும் செய்திகளை சிந்தித்துப் பார்ப்போம்.
1. ஏன் பெத்லேகம்?
எல்லா வல்ல இறைவன் இந்த மண்ணுலகில் பிறக்கும்போது பெரிய ஒர் ஊரிலே பிறந்திருக்கலாமே? ஏன் பெத்லகேமை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கேள்வி எழுகிறது. விவிலியத்தில் குறிப்பாக பழைய ஏற்பாட்டில் கூட பெத்லகேமைக் குறித்து அதிகமான குறிப்புகள் இல்லை. இரண்டு இடங்களைத் தவிர. ஆனால் இந்த இரண்டு இடங்களில் வரும் குறிப்புகள் இயேசுகிறித்து எப்படிப்பட்டவர் என்பதை நமக்குச் சுட்டிக்காட்டுகிறது. முதலாவதாக பெத்லகேமைக் குறித்து தொநூ 35:17 ல் வாசிக்கிறோம். அங்கே ராகேல் பெஞ்சமினைப் பெற்றெடுத்துவிட்டு இறந்துபோய்விடுகிறார். அவள் இறந்த இடம் பெத்லகேம். தன்னுடைய தன் தாயின் உயிரையே வாங்கிப் பிறந்தக் குழந்தை துன்பத்தின் மகன் என்று அழைக்கப்படுகிறார்.
அதே வேளையில் இந்த பெஞ்சமின் யாக்கோபிற்கு வலதுகரமாக இருக்கிறார். இதனை இயேசுவோடு ஒப்பிட்டுப் பார்க்கிறதுபோது ஒருசில ஒற்றுமைகள் விளங்கும். குழந்தை இயேசுவை மரியாவும் யோசேப்பும் கோவிலில் காணிக்கையாக ஒப்புக்கொடுக்கும்போது இறைவாக்கினர் சிமியோன் மரியாவைப் பார்த்துக் கூறுவார், “உம் உள்ளத்தை ஒரு வாள் ஊடுருவும்”. இது இயேசுவின் பொருட்டு மரியா அனுபவிக்கக்கூடிய இன்னல்களைச் சுட்டிக் காட்டுகிறது. அதே வேளையில் இயேசு கடவுளின் வலது கரமாகவும் இருப்பார் என்று உண்மையாகிறது.
அடுத்ததாக பெத்லகேமைப் பற்றி வரக்கூடிய குறிப்பு ரூத் புத்தகத்திலே வருகிறது. ரூத் போவாசை பெத்லகேமில் மணக்கிறார். ஆனால் போவாசு இறந்தபிறகு ரூத் தன்னுடைய மாமியாரான நாகோமியின் வீட்டிற்கு வருகிறார். இந்த ரூத் ஒபேது என்பவரைப் பெற்றெடுக்கிறார். ஒபேதுவுக்கு ஈசா பிறக்கிறார். ஈசாவுக்குத்தான் தாவீது அரசர் பிறக்கிறார். எனவே ரூத் தாவீது அரசனுக்கு பாட்டியாக வருகிறார். இயேசு என்னும் மெசியா தாவீதின் வழிமரபில் பிறக்கிறார் என்பதை புரிந்துகொள்ளலாம்.
எனவே இயேசுவின் பிறப்பு என்பது கடவுள் எளியோரை, தாழ்நிலையில் உள்ளோரை உயர்த்துவார் என்பதற்குச் சான்றாக அமைகிறது.

2. எங்கே பெத்லகேம்?
பெத்லகேம் எங்கே இருக்கிறது என்பது நிலவியல் அடிப்படையில் அன்று ஆன்மீக அளவிலே அது எங்கே இருக்கிறது என்று பொருள்படுவதாக இருக்கிறது. மீக் 5:2 ல் படிக்கிறோம். யூத நாட்டுப் பெத்லகேமே நீ யூதாவின் ஆட்சி மையங்களில் நீ சிறியது எனினும் உன்னிடமிருந்தே மெசியா தோன்றுவார்” என்று. கடவுள் எளியவர்கள் தாழ்ச்சியுள்ளவர்கள், நல்லவர்கள் மத்தியில்தான் இருக்கிறார் என்பதற்கு இது சான்றாக இருக்கிறது. எசா57:6 ல் நொறுங்கிய, நைந்த உள்ளத்தினர் நடுவிலே வாழ்கிறேன் நான் என்கிறார் கடவுள். நாம் எளிய உள்ளத்தினராக இருக்கிறோமா? தாழ்ச்சி நிறைந்தவர்களாக இருக்கிறோமா என்று சிந்தித்துப் பார்ப்போம். பெரும்பாலும் நம்மிடைய தோன்றக்கூடிய பெரும்பாலான சண்டைகளுக்குக் காரணம் நான் என்ற அகந்தைதான். அதுவே நமது அழிவுக்கு இட்டுச்செல்கிறது.
காட்டிலே ஒரு முறை சிங்கம், “இந்த காட்டிற்கு யார் ராஜா” என்று எல்லா மிருகங்களையும் அழைத்துக் கேட்டதாம். எல்லா விலங்குகளுமே சிங்கம் தான் இந்த காட்டிற்கு ராஜா என்று சொன்னாதாம். அந்த கூட்டத்தில் யானை மட்டும் இல்லை. எனவே அதனை அழைத்துக் கொண்டுவர சிங்கம் முயலுக்குக் கட்டளையிட அதுவும் யானையை அழைத்துக் கொண்டுவந்ததாம். வுந்த யானையிடம் சிங்கம் மீண்டுமாக அதே கேள்வியைக் கேட்டதாம். யானைக்கு கோபம். தன்னுடைய தும்பிக்கை வைத்து ஓங்கி சிங்கத்தை ஒரு போடு போட்டதாம். யானை அடித்த அடியில் சிங்கம் ஒரு மரத்தில் மோதி விழுந்ததாம்.
அப்போது சிங்கம் யானையைப் பார்த்துச் சொன்னதாம், “தெரியலனா சொல்லவேண்டியதுதானேஅதுக்காக இப்படியா அடிக்கிறது’ என்று. பல நேரங்கில் இந்த சிங்கத்தின் நிலைதான் நமக்கும். நான்தான் பெரியவன் என்று நினைக்கிறோம். ஆனால் அதுவே நமது அழிவுக்குக் காரணமாக அமைந்துவிடுகிறது. ஆனால் இயேசு ஆவணத்தை அல்ல அன்பை விரும்புகிறார். தாழ்ச்சியை எளிய உள்ளத்தை விரும்புகிறார். நாம் எளிய உள்ளத்தினராக வாழும்போது இறைவன் நம் மத்தியில் குடிகொள்வார்.
3. பெத்லகேமில் என்ன செய்தார்?
கவிஞர் கண்ணதாசனின் கவிதை
இயேசுவின் பிறப்பில் நடந்த விந்தைகளைச் சுட்டிக்காட்டும்

“தத்துவ ஞானம் புத்துயிர் பெற்றது
யூத நிலத்தினிலே
சத்திய வேதம் நின்று நிலைத்தது
தரணி மீதினிலே
எத்துணை உண்மைகள் வந்து பிறந்தது
இயேசுவின் பிறப்பினிலே
இத்தனை நாளும் மானிடர் வாழ்ந்தது
இயேசுவின் வார்த்தையினிலே’
இயேசுவின் பிறப்பினிலே எல்லாம் மலர்ந்தது. ஞானம் பிறந்தது.

யோவா 1:14 ல் படிக்கிறோம் “வார்த்தை மனுவுருவானார் நம்மிடையே குடிகொண்டார்”.
இயேசுவின் பிறப்பு எளிய மனிதருக்கு மகிழ்ச்சியைக் கொண்டுவந்தது. மூன்று ஞானியர்கள், இடையர்கள் இவர்கள் எல்லாம் நல்மனதோடு இயேசுவைத் தேடிச் சென்றார்கள் மகிழ்ச்சி பெற்றார்கள். ஆனால் ஏரோது பரிசேயர்கள் மறைநூல்கள் இவர்களுடைய கண்களுக்கு இயேசு புலப்படவில்லை. காரணம் அவர்கள் இயேசுவைக் கொள்ளவேண்டும் என்று அலைந்தார்கள். நாமும் நல் மனத்தோடு ஆண்டவரைத் தேடினால் அவர் நமக்கு அருள்தருவார்.
சர் ஜேம்ஸ் சிம்சோன் என்பவர் மிகப்பெரிய விஞ்ஞானி. குளோரோபார்ம் என்ற கண்டுபிடிப்பிற்காக 1847ல் விருது பெற்றவர். ஒருமுறை அவரிடம் மாணவர் ஒரு கேள்வியைக் கேட்டார், “நீங்கள் கண்டுபிடித்ததிலேயே சிறந்த கண்டுபிடிப்பு எது” என்று. அதற்கு அவர் சொன்னார் “நான் பெரும் பாவி, இயேசுகிறித்துவே இவ்வுலகின் மீட்பர்” என்று. இயேசுதான் இவ்வுலகின் மீட்பர். இதனை அறிவதுதான் பெரிய ஞானம்.
எனவே நாம் இயேசுவின் பிறப்பு அர்த்தமுள்ளதாக்க வேண்டுமென்றால் எளிய, தாழ்ச்சியுள்ளவர்களாக, நல்ல மனத்தினராக வாழ்வோம். இயேசு நம் உள்ளத்திலும் இல்லத்திலும் பிறப்பார்.


No comments:

Post a Comment