கிறிஸ்து அனைத்துலக அரசர் பெருவிழா
இன்றைய வாசகங்கள்
தானியேல் 7:13-14
திவெ 1:5-8
யோவா 18:33-37
கிறிஸ்து அரசர் பெருவிழா
நான் சிறுவனாக இருந்த காலத்தில் எனக்குப் பெரியோர்கள் சொன்ன கதையெல்லாம், ஒரு ஊரில் ஒரு ராஜா இருந்தார். அவருக்கு ஒரு ராணி இருந்தாள் என்றுதான் தொடங்கக் கேட்டிருக்கிறேன். நாடக மேடைகளில் நடிக்கப்பட்ட நாடகங்கள் எல்லாம் ராஜா, மந்திரி, அரண்மனை காட்சிகளாகத்தான் அமைந்தன. நமது நாட்டிலும் 50 ஆண்டுகளுக்கு முன்பாக ஆங்கிலேயர் காலத்தில் நடந்ததும் முடியாட்சிதானே! பேரரசு என்று கூறப்படும் இங்கிலாந்தில் முடியாட்சி என்பது பெருமைப்படும் ஒரு காரியமாக இருந்து வந்துள்ளது. பல்லாண்டு வாழ்க எம் பேரரசு, எம் பேரரசி என்றெல்லாம் பெருமை கொண்டார்கள் மக்கள். இங்கிலாந்து மட்டுமல்ல, உலகமேதான். ஏனெனில் முடியாட்சி என்பது ஜனநாயம் அற்ற ஒரு நிலை. இருந்தாலும் முடியாட்சிக்கு உரியவர்கள் நல்லவர்களாக வாழ, வழிநடத்த உருவாக்கப்பட்டு வந்ததாகத்தான் சரித்திரம் கூறுகிறது. ஆனால் இன்று முடியாட்சிக்கு உரியவர்கள் எத்தனையோ விதத்தில் தங்கள் மானம், மரியாதை, மதியை இழந்து வெறுப்பைச் சம்பாதிக்கும் நிலையைத் தோற்றுவித்துக் கொண்டிருக்கிறார்கள். இதனால் மக்கள் விழிப்புணர்வு பெற்ற இந்த காலகட்டத்தில் முடியாட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்துக் குடியாட்சிக்கு வித்திட்டு வருகிறார்கள்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை அகில உலக அரசராகப் போற்றி இன்று விழா எடுத்துக் கொண்டிருக்கிறோம்.
இயேசு வாழ்ந்த காலத்தில் தான் ஒரு அரசர் என்றே காட்டிக் கொள்ளாது எளிமையிலே வாழ்ந்து தன் அரசு உடைமை இன்றி, அரசத் தன்மையையே மறைத்தவராக வாழ்ந்துள்ளாரே. அப்படி என்றால் அவரது அரசின் பொருள் என்ன?
பிலாத்தின் முன்பாகக் கூறுகிறார் என் அரசு இவ்வுலகைச் சார்ந்ததன்று. இவ்வுலகைச் சார்ந்ததாக இருந்தால் நான் யூதரிடம் கையளிக்கப்படாதபடி என் காவலர்கள் எனக்காகப் போராடி இருப்பார்கள். உண்மைக்குச் சாட்சியம் கூறுவதே என் அரசு. அதற்காகவே வந்தேன். உண்மையைச் சார்ந்தவன் எவனும் என் குரலுக்குச் செவி கொடுக்கிறான் (யோவா. 18:36).
மனுமகன் பணிவிடை பெறுவதற்கன்று, பணிவிடை புரியவும் பலருடைய மீட்புக்கு விலையாகவும் தன் உயிரை அளிக்கவுமே வந்தேன் (மத். 20:28) என்றார்.
எபிரேயருக்குத் திருமடலை வரைந்தவர் கூறும் வார்த்தைகள்: இயேசு கிறிஸ்து நேற்றும், இன்றும் என்றும் மாறாதவராய் இருக்கிறார் (எபி. 13:8). மற்றவர்கள் எல்லாம் மாறி, மறையும் தன்மை உடையவர்கள். ஆனால் இயேசு கிறிஸ்துவோ என்றுமே மாறாதவர். எனவேதான் கபிரியேல் தூதர் அவர் யாக்கோபின் குலத்தின் மீது என்றும் அரசாள்வார். அவரது ஆட்சிக்கு என்றுமே முடிவு இராது (லூக். 1:33) என்றார்.
இந்த அரசராம் இயேசுவைப் பற்றிப் புனித பவுல் அடிகளார் மிக அழகாகச் சித்திரிக்கின்ற வார்த்தைகளைக் கோடிட்டுக் காட்ட விரும்புகிறேன்.
கடவுள் தன்மையில் விளங்கிய அவர் தம்மையே வெறுமையாக்கி அடிமையின் தன்மை பூண்டு மனிதருக்கு ஒப்பானார்.
சிலுவைச் சாவை ஏற்கும் அளவுக்குத் தன்னைத் தாழ்த்திக் கீழ்ப்படிந்தார்.
தந்தை அவரை உயர்த்தியதால் விண்ணவர், மண்ணவர், கீழுலகோர் அனைவரும் மண்டியிட இயேசு கிறிஸ்து ஆண்டவர் என்று எல்லா நாவுகளும் அறிக்கையிடும் (பிலி. 2:6-11) என்று விவரிக்கிறார்.
இந்த அன்பின் பிணைப்பால், ஆட்சி புரியும் இந்த ஒப்பற்ற அரசராம் இயேசுவின் பரமத் திருநாட்டின் குடிமக்களாக இருப்பதில் நாம் பெருமைப்படுகின்றோம். பெருமையால் நம் இல்லமும் இன்று விழாக்கோலம் பூண்டுள்ளது.
விழாக் கொண்டாடும் நாம் என்ன செய்ய வேண்டும்?
அவரது குரலைக் கேட்கும் ஆடுகளாக நாம் இருக்க வேண்டும். நீங்கள் என் கட்டளையைக் கடைப்பிடித்தால் என் அன்பில் நிலைத்திருப்பீர்கள். என் நண்பர்களாக இருப்பீர்கள் (யோவா. 15:10).
செய்தியிலே வாசிக்கின்றோம். ஜான் டேவிட் , இவன் ஒரு கிறிஸ்தவனா? இவனா இப்படிப்பட்ட இழிச் செயலைச் செய்தான்?
அன்றொரு நாள் கற்பழிப்பு கொலைக் குற்றத்திற்கு ஆளாகிய ஒருவன் நீதிபதி முன்பாக நிறுத்தப்பட்டான். கழுத்திலே சிலுவையை அணிந்திருந்த அந்தக் கைதியை நோக்கி நீ ஒரு கிறிஸ்தவனா? சிலுவை அணியும் நீயா இப்படிச் செய்தாய் என்று கேட்டார் நீதிபதி.
அவன் சொன்ன பதில் என்ன தெரியுமா?
நீதிபதியாரே என் கழுத்தில் இருக்கும் சிலுவைக் கல்வாரியின் நடுவில் தொங்கிய இயேசுவின் சிலுவை அல்ல. வலது புறத்தில் தொங்கினானே கள்ளன் அவனது சிலுவையும் அல்ல. ஆனால் இடது புறத்து கள்ளனின் சிலுவை என்றான். இது எப்படி இருக்கு!
புறமுதுகு காட்டி ஓடிய அலெக்சாண்டர் என்ற போர் வீரனை நோக்கிக் கூறினாரே பேரரசர் : 'நண்பா! நீ என்னோடு இருக்க வேண்டுமென்றால் உன் நடத்தையை மாற்றிக் கொள். இல்லையேல் உன் பெயரை மாற்றிவிடு' என்றாரே! அந்தச் சிந்தனையை மட்டும் உங்கள் முன் வைக்கிறேன்.
உண்மையே விடுதலை அளிக்கும்!
இன்றைய நற்செய்தியிலே இயேசு இவ்வுலகத்தில் எதற்காகப் பிறந்தார் என்பதைத் தெளிவுபடுத்துகின்றார். உண்மையை எடுத்துரைப்பதே என் பணி; இதற்காகவே பிறந்தேன், இதற்காகவே உலகிற்கு வந்தேன்: உண்மையைச் சார்ந்தவர் அனைவரும் என் குரலுக்குச் செவிசாய்க்கின்றனர் (யோவா 18:37) என்கின்றார் இயேசு.
ஒரு நாட்டைப் பேரரசன் ஒருவன் ஆண்டு வந்தான். அவன் வாரிசு இல்லா அரசன்! அவனுக்குப் பிறகு நாட்டை ஆள ஆண் வாரிசு ஒருவனைத் தேர்ந்தெடுக்க நாட்டிலிருந்த தலைசிறந்த பன்னிரெண்டு இளைஞர்களை அழைத்துவரச் சொன்னான். பன்னிரெண்டு பேரும் வந்து நின்றனர். அரசன் போட்டி ஒன்றை அறிவித்தான்.
விதைகள் நிரம்பிய கூடையைக் காட்டி :
"இளைஞர்களே, ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு விதையைப் பொறுக்கி எடுத்துக்கொள்ளுங்கள். நீங்கள் எடுக்கும் விதையைக் கொண்டு செழிப்பான செடியை யார் வளர்த்துக்காட்டுகின்றீர்களோ அவரே அடுத்த அரசர். மூன்று மாதங்கள் கழித்துச் சந்திப்போம்" என்றான்.
மூன்று மாதங்களுக்குப் பிறகு பதினோரு தொட்டிகளில் அழகான செடிகள் காணப்பட்டன. ஒரே ஒரு தொட்டி மட்டும் வெற்றுத் தொட்டியாக இருந்தது! அந்தத் தொட்டிக்குச் சொந்தமான இளைஞனைத் தனது வாரிசாகத் தேர்ந்தெடுத்தான் அரசன். மற்ற பதினோரு பேரும் திகைத்து நின்றார்கள்.
அவர்களைப் பார்த்து அரசன், "நான் தந்த விதைகள் அனைத்துமே வேகவைத்துக் காயவைத்த விதைகள். பின் எப்படி உங்கள் தொட்டிகளில் செடிகள் முளைத்தன? வாய்மையே வெல்லும். நீங்கள் வீட்டுக்குப்போகலாம்” என்றான்.
இந்தக் கதையில் வந்த அரசனைப் போன்றவர்தான் நமது கிறிஸ்து அரசர். இயேசு, வழியும், உண்மையும், வாழ்வும் நானே (யோவா 14:6) என்கின்றார். தந்தையே! உண்மையினால் அவர்களை (அவரிடம் ஒப்படைக்கப்பட்டவர்களை) உமக்கு அர்ப்பணமாக்கியருளும் (யோவா 17:17) என்று இயேசு மன்றாடுகின்றார்.
இயேசுவுக்கு உண்மையை மிகவும் பிடிக்கும்.
காரணம் உண்மை அழிந்து போகாத அரசுக்கு நம்மை அழைத்துச் செல்லும் (தானி 7:14). உண்மை அகரமும், னகரமுமான (இரண்டாம் வாசகம்) இயேசுவுக்கு நம்மை செவிசாய்க்க வைக்கும் (யோவா 18:37). உண்மை நமக்கு விடுதலை அளிக்கும் (யோவா 8:32).
மாறாக பொய் கடவுளிடமிருந்து மனிதனைப் பிரிக்கும் (தொநூ 3:1-12). பொய் தூய ஆவியாருக்கு எதிராக நம்மைச் செயல்படத் தூண்டும் (திப 5:1-10).
இன்று இயேசு உண்மையையும், பொய்யையும் சுட்டிக்காட்டி நீங்கள் எதைத் தேர்ந்தெடுக்கப்போகின்றீர்கள்? என்று கேட்கின்றார். நாம் என்ன பதில் சொல்லப்போகின்றோம்? '
மேலும் அறிவோம்:
பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று (குறள் : 297).
பொருள் : ஒருவன் பொய் பேசாமையினை இடைவிடாது தொடர்ந்து மேற்கொண்டால், அதுவே அவனுக்குப் பேரறமாகும்! செய்யக்கூடாதவற்றைச் செய்யாதிருத்தல் மேலும் பெருமைதரும்.
இயேசு கிறிஸ்து அனைத்துலக அரசர் பெருவிழா
மாமன்னன் நெப்போலியன் மமதையில் இருந்த காலத்தில் பின்வருமாறு கூறினார்; "உலக வரலாற்றில் மகான்கள் என்று அழைக்கப்படத் தகுதியுடையவர்கள் மூவர் மட்டுமே; மாமன்னன் அலெக்சாண்டர், நெப்போலியனாகிய நான், நாசரேத் ஊர் இயேக கிறிஸ்து." ஆனால், அவர் 'வாட்டர்லூர்' என்ற இடத்தில் நடந்த போரில் படுதோல்வி அடைந்து, 'கெலேனா' என்ற தீவில் சிறையில் அடைக்கப்பட்டார்.
அவ்வேளையில் ஒருவர் அவருடைய பழைய மகிமையை நினைவூட்டியபோது, நெப்போலியன் கூறினார்: “அதிகாரம், மகிமை எல்லாம் வெறும் புகை. ஒரு காலத்தில் அலெக்சாண்டரை மகான் என்று அழைத்தேன். இப்போது அவருடைய எலும்புகளைக்கூட காண முடியவில்லை. என்னையே மகான் என்ற அழைத்துக் கொண்டேன், இப்போது அந்நிய நாட்டில் ஆரியணையோ, போர் வீரர்களோ இன்றி சிறைக் கைதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன், நாசரேத்தூர் இயேசு கிறிஸ்து இறந்து இரண்டாயிரம் ஆண்டுகள் ஆன பின்னும், அவரது அரசு மறையவில்லை, அலெக்சாண்டரும் நானும் ஆயுத பலத்தால் ஆட்சி செய்தோம். எங்கள் ஆட்சி நிலை பெறவில்லை. ஆனால் கிறிஸ்து அன்பினால் ஆட்சி செய்கிறார், அவரது அரசு என்றும் நீடிக்கும்,"
திருவழிபாட்டு ஆண்டிகள் சிகரமாக இன்று கிறிஸ்து அரசருடைய பெருவிழாவைக் கொண்டாடுகிறோம். கிறிஸ்து உண்மையிலேயே ஓர் அரசர். அரசர்களுக்கெல்லாம் அரசர், அவராலேயே அனைத்தும் படைக்கப்பட்டன. அவராலேயே அனைத்தும் மீட்கப்பட்டன, படைப்பாலும் மீட்பாலும் அனைத்தும் அவருக்கு உரியன. இன்றைய முதல் வாசகம், கிறிஸ்து அரசர் என்றும், அவரது ஆட்சிக்கு முடிவு இராது என்றும் கூறுகிறது (தானி 7:13-14). இரண்டாம் வாசகம், கிறிஸ்துவுக்கு மாட்சியும் ஆற்றலும் என்றென்றும் உரியன என்று அறிக்கையிடுகிறது (திவெ 1:6), நற்செய்தியில், கிறிஸ்து தாம் அரசர் என்றும், ஆனால் அவரது ஆட்சி இவ்வுலக ஆட்சி போன்றது அல்ல என்றும் தெளிவுபடுத்துகிறார்,
கிறிஸ்துவின் அரசு எல்லா நாடுகளையும் மக்களையும் அரவனைக்கும் அரசு, இன்றைய பெருவிழாவின் தொடக்கவுரை அறிக்கையிடுவதுபோல, கிறிஸ்துவின் அரசு, 'உண்மையின் அரசு, வாழ்வுதரும் அரசு, புனிதமும் அருளும் கொன்ட அரசு, நீதியும் அன்பும் அமைதியும் கொண்ட அரசு." கிறிஸ்துவின் அரசு இவ்வுலகைச் சார்ந்தது என்று யூத மக்கள் எண்ணினார்கள். அவரை அரசியல் மெசியாவாகக் கருதினர். ஆனால் கிறிஸ்து அவர்களது எண்ணம் தவறானது என்று தெளிவுபடுத்தினார் கிறிஸ்து. அரசியல் மற்றும் பொருளாதார விடுதலை அளிக்க வரவில்லை , மாறாக, மக்களைப் பாவத்திலிருந்து விடுவிக்க வந்தார். பாவம் செய்யும் எவரும் பாவத்திற்கு அடிமை; கிறிஸ்து ஒருவரே பாவத்திலிருந்து விடுவிக்க வல்லவர் (யோவா 8:34-36).
கிறிஸ்துவோடு சிலுவையில் அறையப்பட்ட இரு கள்வர்கள் அவரின் அரசைப்பற்றி மாறுபட்ட கருத்துக்களைக் கொண்டிருந்தனர், ஒரு கள்வன் கிறிஸ்துவிடமிருந்து உடனடியாக விடுதலையை எதிர்பார்த்து. "நீ மெசியாதானே! உன்னையும் எங்களையும் காப்பாற்று" (லூக் 23:39) என்றான். ஆனால், மற்றொரு கள்வன் கிறிஸ்துவின் அரசு நிறைவுகால அரசு என்பதை உணர்ந்து, " இயேசுவே, நீர் ஆட்சியுரிமை பெற்று வரும்போது என்னை நினைவுகூர்ந்தருளும் (லூக் 23:42) என்றான். கிறிஸ்துவில் அரசு இவ்வுலகைச் சார்ந்த அரசாக இருந்திருப்பின், அவர் சாவுக்கு உள்ளாகாதவாறு, அவருடைய காவலர்கள் போராடியிருப்பர் (யோவா 18:36).
தம்முடைய சீடர்களை எல்லாவிதத் துன்பங்களிலிருந்தும் உடனடியாக விடுவிக்கப் போவதாக கிறிஸ்து ஒருபோதும் வாக்குறுதி அளிக்கவில்லை, மாறாக, அவர்கள் துன்புற்று இன்புறுவார்கள் என்றுதான் வாக்களித்தார். 'நீங்கள் அழுவீர்கள். புலம்புவீர்கள்; அப்போது உலகம் மகிழும் நீங்கள் துயருறுவீர்கள், ஆனால் உங்கள் துயரம் மகிழ்ச்சியாக மாறும்" (யோவா 16:20).
கிறிஸ்துவின் அரசு வல்லரசு அல்ல, மாறாக வாய்மையின் அரசு. உண்மையை எடுத்துரைக்கவே கிறிஸ்து இவ்வுலகிற்கு வந்தார் (போவா 18:37). கிறிஸ்துவே உண்மை; அவர் வழியாகவே நாம் தந்தையை அடைய முடியும் (யோவா 14:6), உண்மையால் கிறிஸ்து தம் சீடர்களை அர்ப்பணமாக்குகின்றார் (யோவா 17:17),
உண்மையா? அது என்ன? (யோவா 18:23), உள்ளம் என்பது ஆமை, அதில் உண்மை என்பது ஊமை, சொல்லில் வருவது பாதி; நெஞ்சில் தங்கிக் கிடப்பது மீதி: முழு உண்மையைப் பேசுவோர் யாருமில்லை. "வாய்மையே வெல்லும்" என்பது நமது நாட்டின் விருதுவாக்கு, ஆனால் அரசியல் தலைவர்கள் எல்லாம் அண்டப் புளுகர்களும், ஆகாசப் புளுகர்களாகவும் இருந்து. பொய்யானத் தகவல்களைக் கூறி மக்களை ஏமாற்றுகின்றனர், இக்கட்டத்தில் முழு உண்மையை வெளிச்சத்திற்குக் கொண்டு வருவது நமது கடமையாகும். உண்மை பேசுவோர் வேறு எந்த அறத்தையும் செய்யத் தேவையில்லை என்கிறார் வள்ளுவர்,
பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று (குறள் 297)
ஓர் அரசியல்வாதி கூறுகிறார்; கொலை செய்தேன், என்னைக் கொலைக்காரன் என்றனர்: திருடினேன், என்னைக் கொள்ளைக்காரன் என்றனர்; இலஞ்சம் வாங்கினேன், என்னை ஊழல் பேர்வழி என்றனர், இம்மூன்றையும் செய்தபோது, என்னைத் தலைவன் என்கின்றனர். கொலை, கொள்ளை, இலஞ்ச ஊழல் பெருகிவரும் இக்காலத்தில் நம் நாட்டில் நல்லாட்சி மலர்ந்திட உழைப்போம்; மன்றாடுவோம்.
ஒரு மகன் தன் அப்பாவிடம், "அப்பா, என் எதிர்காலம் பற்றி என்ன கனவு காண்கிறீர்கள்?" என்று கேட்டதற்கு, அப்பா கூறிய பதில்: “நீ பிறந்ததிலிருந்து எனக்குத் தாக்கமே இல்லை. அப்படியிருக்க கனவு எப்படி வரும்?" கடவுள் மனிதரைப் படைத்ததற்காக வருந்தினாலும் (தொநூ 8:6), கடவுள் இவ்வுலகிற்காக ஒரு கனவு கண்டுள்ளார். அதுதான் இறை அரசின் கனவு. அக்களவு என்ன? வாள் எடுத்துப் போர் புரியாத உலகம் போர்க் கருவிகளை விவசாயக் கருவிகளாக மாற்றும் உலகம் (எசா 2:4), சிங்கமும் செம்மறி ஆடும் ஒன்றாகப் படுத்துறங்கும் உலகம் (எசா 11:6) ஆம், இறை அரசு அமைதியின் அரசு: கிறிஸ்து அமைதியின் அரசா (எசா 11 9:8),
வன்முறையும் பயங்கரவாதமும் முடிவுக்கு வந்து, மனித சமுதாயத்தில் அமைதி நிலவ அயராது உழைப்போம். அமைதிக்காக உழைப்பவர்களே கடவுளின் மக்கள்."
கிறிஸ்து ஆட்சி செய்தாக வேண்டும் (1கொரி 15:25), ஏனெனில், அரசும் வல்லமையும் மாட்சியும் என்றென்றும் அவருடையது.
நீ அரசன்தானோ?
இன்று கிறிஸ்துவை அனைத்துலகிற்கும் அரசராகக் கொண்டாடுகிறோம். உலகின்
பல இடங்களில் அரசாட்சி இன்று மறைந்துவிட்டாலும், 'அரசன்' என்பது நமக்கு ஒரு
வார்த்தை-உருவகமாகவே இருக்கிறது. 'அரசன்' என்ற வார்த்தையைக் கேட்டவுடன்,
பகட்டான ஆடை, தலையில் மணிமுடி, கையில் செங்கோல்,
பெரிய அரியணை, காலில் பெரிய காலணி, சாமரம் வீசும் இரண்டு பெண்கள்,
கம்பீரமான பார்வை என எல்லாம் நம் உள்ளத்தில் தோன்றி மறைகின்றன. 'கிறிஸ்து
அரசர்' உருவப்படங்களைப் பார்த்துப் பழகிய நம் மனம், கிறிஸ்துவையும்
மேற்காணும் உருவத்திலேயே பார்க்கின்றது.
'அரசன்' என்ற சொல்லாடல் அல்லது 'அரசாட்சி' என்ற சொல்லாடல் இஸ்ரயேல்
மக்களுக்கு இறைவாக்கினர் சாமுவேலின் காலத்தில்தான் வருகின்றது. '...
அனைத்து வேற்றினங்களிடையே இருப்பதுபோல ஓர் அரசனை நியமித்தருளும்' (1 சாமு
8:5) என்று இஸ்ரயேல் மக்கள் சாமுவேலிடம் முறையிட்டபோது,
'... அவர்கள் உன்னைப் புறக்கணிக்கவில்லை. அவர்கள் நான் ஆளாதபடி
என்னைத்தான் புறக்கணித்துவிட்டனர்' (1 சாமு 8:7) என்கிறார் ஆண்டவராகிய
கடவுள். ஆண்டவராகிய கடவுளே அரசாண்ட நிலையில் அவருடைய அரசாட்சியைப்
புறக்கணிக்கின்றனர் இஸ்ரயேல் மக்கள். ஆண்டவர் சாமுவேல் வழியாக அவர்களை
எச்சரித்தது போலவே அரசர்கள் அவர்களுக்குத் தோல்வியாகவே முடிகின்றனர்.
இந்தப் பின்புலத்தில் எசேக்கியேல் இறைவாக்கினர் வழியாக இறைவாக்குரைக்கின்ற
கடவுள், 'நானே என் மந்தையைத் தேடிச் சென்று பேணிக் காப்பேன்' (எசே 34:11)
என்கிறார். அன்று முதல் மெசியா அரசராக வருவார் என்ற
நம்பிக்கை இஸ்ரயேல் மக்கள் நடுவில் வளரலாயிற்று. இயேசுவின் சமகாலத்தில்
விளங்கிய எஸ்ஸீனியர்கள் என்ற அமைப்பினரும் 'அரச மெசியாவை' எதிர்பார்த்துக்
காத்திருந்ததை அவர்களின் குழும வாழ்வு ஏடுகள் காட்டுகின்றன. இந்தப்
பின்புலத்தில்தான் இயேசு பிறக்கின்றார்.
மரியாளுக்கு மங்கள வார்த்தை சொல்லும் கபிரியேல், 'அவர் யாக்கோபின்
குடும்பத்தின் மீது என்றென்றும் ஆட்சி செலுத்துவார். அவருடைய ஆட்சிக்கு
முடிவே இராது' (லூக் 1:33) என்று உரைத்து, இந்த எதிர்பார்ப்பைக்
கூட்டுகின்றார். இயேசுவின் பணிவாழ்வு முழுவதும் அவருடன் இருந்தவர்களும்,
அவரால் பயன்பெற்றவர்களும் இந்த எதிர்பார்ப்பிலேயே வளர்கின்றனர். உண்டு
பசியாறியவர்கள் அவரை அரசராக்கிவிடத் துடிக்கின்றனர் (யோவா 6:15). அவரோடு
உடனிருந்தவர்கள் அவரின் அரியணையின் அருகில் அமர ஆசைப்படுகின்றனர் (மாற்
10:35-45). ஆனால், கழுவுற மீனில் நழுவுற மீனாக ஓடுகிறார்
இயேசு.
இருந்தாலும், இயேசு தன்னை அரசன் என்று சொன்னாரா? ஆம். எப்போது? ஐந்து முறை தன்னை அரசன் என்று சொல்லாமல் சொல்கின்றார்:
1. 'யூதர்களின் அரசராகப் பிறந்திருக்கிறவர் எங்கே?' (மத் 2:2) என்று
தேடி வரும் மூன்று ஞானியருக்கு இயேசு மறுப்பு சொல்லவில்லை. அவர் ரொம்ப
குட்டிக் குழந்தையாய் இருந்ததால் அவர் சொல்லியிருக்க வாய்ப்பில்லை.
2. 'ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர். ஏனெனில் விண்ணரசு அவர்களதே'
(மத் 5:3) என்று தொடங்கி, தன் போதனை, தன் உருவகம், தன் அறிகுறிகள்
அனைத்திலும் விண்ணரசை (அல்லது இறையரசு) மட்டுமே முன்னிறுத்துவதன் வழியாக,
தன்னை அரசன் என்று மறைமுகமாகச் சொல்கின்றார்.
3. 'ஆண்டவர் பெயரால் அரசராய் வருகிறவர் போற்றப் பெறுக!' (லூக் 19:38)
என்று எருசலேம் மக்கள் வெற்றி ஆரவாரம் செய்தபோது மறுப்பேதும் சொல்லவில்லை.
4. 'அப்படியானால் நீ அரசன்தானோ?' (யோவா 18:37) என்று பிலாத்து
விசாரித்தபோதும், 'யூதரின் அரசரே வாழ்க!' (யோவா 19:3) என்று பிலாத்தின்
அரண்மனை படைவீரர்கள் கன்னத்தில் அறைந்த போதும், 'இதோ, உங்கள் அரசன்!' (யோவா
19:14) என்று மக்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டபோதும்,
தன் மௌனத்தால் 'ஆம்' என மொழிகின்றார் இயேசு.
5. 'இயேசுவே, நீர் ஆட்சியுரிமை பெற்று வரும்போது என்னை
நினைவிற்கொள்ளும்' (லூக் 23:42) என்ற நல்ல கள்வனுக்கு உடனடியாக பேரின்ப
வீட்டில் இடம் தந்ததும் இயேசுவை அரசனாகத்தான் காட்டுகிறது.
மேற்காணும், ஐந்து நிகழ்வுகளில் நான்காம் நிகழ்வின் ஒரு பகுதியைத்தான் இன்றைய நற்செய்தி வாசகத்தில் வாசிக்கிறோம்.
பிலாத்து இயேசுவை விசாரிக்கும் நிகழ்வை நற்செய்தியாளர் யோவான் மிக
நீண்டதாகவும், ஆழமாகவும் பதிவு செய்கின்றார். பிலாத்துவின் முன் இயேசு
மட்டும் விசாரிக்கப்படுவதாக நினைக்க வேண்டாம். இயேசுவைக் காட்டிக்
கொடுத்ததால் இப்போது காட்டிக்கொடுத்தவர்களும் விசாரணை வளையத்திற்குள்
வருகின்றனர். இதைப் புரிந்துகொண்டால் நமக்கு இன்றைய திருநாளின் பொருள்
புரிந்துவிடும்.
பிலாத்து உரோமை ஆளுநன். யூதேயா, கலிலேயா, சமாரியா போன்ற பகுதிகளுக்கு
அரசன் இருந்தாலும், இவர்களை நிர்ணயிக்கும் பொறுப்பை பிலாத்து
பெற்றிருந்தார். அன்றைய அகில உலகப் பேரரசின் பதிலி பிலாத்து. ஆக, எங்கும்
சீசர்தான் அரசராக இருக்கிறார் என்பதை உறுதி செய்ய வேண்டியவர்
பிலாத்து. ஆனால், உரோமையின் ஆட்சி யூதர்களுக்குப் பிடிக்கவில்லை. எனவே,
அவ்வப்போது சிலர் எழும்பி உரோமைக்கு எதிராகக் கிளர்ச்சி செய்வர். அவர்களை
அடக்க வேண்டியதும், அழிக்க வேண்டியதும் ஆளுநரின் பொறுப்பு. பிலாத்துவிடம்
இயேசுவை ஒப்படைக்கும் அவர்கள் அவர்மேல் எந்தவொரு
குற்றச்சாட்டையும் வைக்கவில்லை. 'இவன் குற்றம் செய்யாதிருந்தால் இவனை
நாங்கள் உம்மிடம் ஒப்புவித்திருக்கமாட்டோம்' (யோவா 18:30) என்று
மொட்டையாகச் சொல்கின்றனர். ஆனால், மற்ற நற்செய்தியாளர்களின் கருத்துப்படி,
'இவன் தானே மெசியாவாகிய அரசன் என்று சொல்லிக்கொள்கிறான்'
(காண். லூக் 23:2) என்று இயேசுவைக் குற்றம் சாட்டுகின்றனர். இயேசுவிடம்
பிலாத்து கேட்கும் முதல் கேள்வியே, 'நீ யூதரின் அரசனா?' (யோவா 18:33)
என்பதுதான். இந்தக் கேள்வியின் ஊற்று என்ன? என்று பிலாத்தை விசாரிக்கிறார்
இயேசு: 'நீராக இதைக் கேட்கிறீரா? அல்லது மற்றவர்கள்
என்னைப் பற்றி சொன்னதை வைத்து கேட்கிறீரா?' பிலாத்து புத்திசாலி.
இயேசுவின் கேள்விக்கு மற்றொரு கேள்வியால் விடை தருகிறார்: 'நான் ஒரு யூதனா,
என்ன?' இப்படியே விசாரணை நகர, இயேசுவும், 'எனது ஆட்சி இவ்வுலக ஆட்சி
போன்றது அல்ல' என்கிறார். பிலாத்துவுக்கு பாதி சந்தேகம்
தீர்ந்துவிட்டது. இயேசுவால் சீசரின் ஆட்சிக்கு ஆபத்து இல்லை. ஏனெனில்,
'மறுவுலகில் யார் ஆட்சி செய்தால் என்ன? இந்த உலகில் சீசர் தான் ஆள
வேண்டும்' என நினைத்தார் பிலாத்து. மீதிச் சந்தேகத்தைத் தீர்க்க,
'அப்படியானால் நீ அரசன் தானோ?' என்று பிலாத்து கேட்க, 'அரசன் என்று
நீர் சொல்கிறீர். உண்மையை எடுத்துரைப்பதே என் பணி. இதற்காகவே நான்
பிறந்தேன். வளர்ந்தேன். பணி செய்தேன்' என்கிறார். ஆக, அரசன் என்ற டைட்டிலை
விடுத்து தன் அரச நிலையைப் பணியாக முன்வைக்கிறார் இயேசு. மீதி சந்தேகமும்
தீர்ந்தது. இயேசு யூதர்களின் அரசன் இல்லை.
இப்போது பிலாத்துவுக்கு சந்தேகம் மக்கள் மேல் திரும்புகிறது: 'நீ
யூதர்களுக்கு அரசன் இல்லை' என்பது தெளிவாகிறது என்று இயேசுவைப் பற்றி
முடிவெடுத்த பிலாத்து, 'இந்த மக்களுக்கு யார் அரசன்?' என்பதை உறுதி செய்ய,
இப்போது மக்களை விசாரிக்கிறான். நேருக்கு நேர் விசாரிக்காமல்
மற்றொரு யுக்தியைக் கையாளுகின்றார். இயேசுவை நன்றாக அடித்து, மேலுடை,
முள்முடி அணிவித்து அவரை வெளியே கொண்டு போய் மக்களிடம், 'இதோ, உங்கள்
அரசன்' (யோவா 19:15) என, அவர்கள், 'எங்களுக்கு சீசரைத் தவிர வேறு அரசர்
இல்லை' என்று சொல்கின்றனர். மறைமுகமாக மக்களையும் விசாரித்தாயிற்று.
சீசரின் அரச நிலையை உறுதி செய்தாயிற்று. உடனே நிகழ்வை முடிக்கின்றார்
யோவான்: 'அப்போது பிலாத்து அவரைச் சிலுவையில் அறையுமாறு அவர்களிடம்
ஒப்புவித்தான். அவர்கள் இயேசுவைத் தங்கள் பொறுப்பில் ஏற்றுக்கொண்டனர்'
(யோவா 19:16). 'ஆண்டவரே எங்கள் அரசர்' (திபா 47:7) என்று வாய்நிறையப்
பாடிய இஸ்ரயேல் மக்கள், 'சீசரைத் தவிர எங்களுக்கு வேறு அரசர் இல்லை' என்று
பொய்யுரைக்கின்றனர். இயேசு, 'உண்மை' என்ற வார்த்தையால் தன் அரச நிலையை
உறுதி செய்தார். ஆனால், மக்கள், 'பொய்' ஒன்றைச் சொல்லி ஆண்டவராகிய கடவுளின்
அரச நிலையை மறுதலிக்கின்றனர். இதுதான், யோவான்
நற்செய்தியாளரின் இலக்கியத்திறன்.
ஆக, 'இயேசு அரசரா? யூதர்களின் அரசரா?' என்பது இன்றைய கேள்வி அல்ல.
மாறாக, 'எனக்கு அவர் அரசரா?' என்பதுதான் இன்றைய திருநாள்
முன்வைக்கின்ற கேள்வி. நாம் ஏற்கனவே கண்ட ஐந்து நிலைகளில் மக்கள்
தங்களுக்கு இயேசுவை அரசராக ஏற்றுக்கொண்டனர். அந்த நேரங்களில் அவர் அந்த
டைட்டிலை மறுக்கவில்லை. மாறாக, அது தன்னை மையப்படுத்தியதாக இருந்தபோதுதான்
இயேசு அதை மறுக்கிறார்.
'எனக்கு அவர் அரசராக இருக்க வேண்டும்' என்றால் நான் சில பண்புகளைக்
கொண்டிருக்க வேண்டும் என்று பட்டியலிடுகின்றது இன்றைய இறைவாக்கு வழிபாடு.
1. உண்மையை எடுத்துரைத்தல்
'உண்மையா? அது என்ன?' என்ற பிலாத்துவின் கேள்வி இன்றுவரை நாம் விடை
காண இயலாத கேள்வி. ஏனெனில், உண்மை என்பது தனிநபர் சார்ந்தது. இடத்திற்கு
இடம், சூழலுக்குச் சூழல் மாறுபடுவது. தண்ணீரின் மூலக்கூறுகள் 2 ஹைட்ரஜன், 1
ஆக்ஸிஜன் என்னும் உண்மை எல்லா இடத்திற்கும், எல்லா
சூழலுக்கும் பொருந்தும். ஆனால், உறவுநிலை, அறநெறி, தனிநபர் வாழ்வு, சமூகம்
என்று வரும்போது உண்மை எப்போதும் இடம் சார்ந்தே இருக்கிறது. அதனால்தான்,
ஒரு நபர் கீழிருந்து பார்க்கப்படும்போது போராளியாகவும், மேலிருந்து
பார்க்கப்படும்போது தீவிரவாதியாகவும் தெரிகின்றார்.
இந்த சார்புநிலையைத்தான் பிலாத்து, 'உண்மையா? அது என்ன?' என்று
கேட்கிறார். 'உண்மை' என்பதை இயேசுவே மற்றொரு இடத்தில் வரையறை செய்கிறார்.
'உண்மையினால் அவர்களை உமக்கு அர்ப்பணமாக்கியருளும். உமது வார்த்தையே உண்மை'
(17:17) எனத் தமது சீடர்களுக்காகச் செபிக்கிறார் இயேசு.
இங்கே, உண்மை என்பது இறைவனுக்கு ஒருவரை அர்ப்பணமாக்குகிறது என்றும்,
இறைவனின் பார்வையில் ஒன்றைப் பார்ப்பதே உண்மை என்பதும் பொருளாகிறது. ஆக,
ஒரு நிகழ்வை அல்லது நபரை இறைவன் பார்ப்பதுபோல நான் பார்க்கும்போது நான்
உண்மை உடையவன் ஆகிறேன். இறைவன் என்றும் மாறாதவர். ஆக,
இந்த உண்மையும் சார்புநிலை அற்றது. இறைவன் எப்படிப் பார்க்கிறார்? 'மனிதர்
பார்ப்பதுபோல இறைவன் பார்ப்பதில்லை. மனிதர் புறத்தைப் பார்க்கின்றனர்.
இறைவனோ அகத்தைப் பார்க்கின்றார்' (1 சாமு 16:7). புறத்தையும் தாண்டி
அகத்தைப் பார்த்து, அகத்தை நிறைவாகப் பார்த்து, அதில்
நிறைவைக் காண்பதே உண்மை. ஆக, நான் என் புறம்சார்ந்த நிறம், உடை, அழகு,
ஆபரணம், செயல் ஆகியவற்றை விடுத்து, என் அகத்தில் இருக்கும் இறைவனைக் கண்டு,
அதே மனநிலையில் எனக்கு அடுத்திருப்பவரின் இதயத்தின் இறைவனையும் நான்
கண்டால் நான் உண்மை உள்ளவன் ஆகிறேன்.
2. பணி செய்தல்
இயேசுவைப் பொறுத்தவரையில் அரசர் என்பவர் பணியாளர். பணியாளருக்கு என்று
எந்தவொரு விருப்பு வெறுப்பும் இருக்க முடியாது. அவர் முழுக்க முழுக்க தன்
தலைவருக்கு உரியவராக இருக்கிறார். இந்த நிலையை அடைய நிறைய சரணாகதி
வேண்டும். ஏனெனில், இயல்பாகவே நம் உடலில் உள்ள ஜீன்கள்
ஆளப்பிறந்தவை. அவை எவ்வழியிலும் தங்களைக் காத்துக்கொள்ளும் துணிவு
பெற்றவை. அவை தன்னலம் ஆனவை. எந்நேரமும் அவை தங்களை மட்டுமே
முன்நிறுத்துபவை. ஆக, நம் உடலின் ஜீன்களுக்கும், உள்ளத்தின்
பேரார்வத்திற்கும் எதிர்திசையில் செல்வதுதான் பணியாளர் நிலை. ஏனெனில்,
பணியாளர்
நிலை என்பது ஒரு நொறுங்குநிலை உணர்வு. இங்கே, ஒருவரின் விருப்பு,
வெறுப்பு, நல்லது, கெட்டது எதுவும் மதிக்கப்படாது. ஒருவர் எந்நேரமும்
கடிந்துகொள்ளப்படலாம், சந்தேகப்படப்படலாம், குற்றம் சுமத்தப்படலாம்,
பணிநீக்கம் செய்யப்படலாம், தண்டிக்கப்படலாம். அரசநிலைக்கு எதிர்நிலை
இது. ஏனெனில், அரசரை யாரும் கடிந்துகொள்ளவோ, சந்தேகப்படவோ, குற்றம்
சுமத்தவோ, தண்டிக்கவோ, பணிநீக்கம் செய்யவோ முடியாது. இப்படியாக, பணியாளர்
நிலையோடு தன் அரசநிலையைப் பொருத்திப்பார்க்கிறார் இயேசு. என்னை அரசனாக்கும்
இரண்டாவது பண்பும் இதுவே.
3. அவரின் குரலுக்குச் செவிமடுத்தல்
'உண்மையைச் சார்ந்தவர் அனைவரும் என் குரலுக்குச் செவிசாய்க்கின்றனர்'
(யோவா 18:38). மெல் கிப்ஸன் அவர்கள் இயக்கிய தெ பேஸ்ஷன் ஆஃப் தெ க்ரைஸ்ட்
என்ற திரைப்படத்தில் பிலாத்துவுக்கும், அவருடைய மனைவி கிளவுதியாவுக்கும்
இடையே ஓர் உரையாடல் நடக்கும்: பிலாத்து: 'உண்மையா
அது என்ன கிளவுதியா? எனக்கு நீ அதைச் சொல்வாயா?' கிளவுதியா: 'அதை
நீங்களாகக் கேட்கும் வரை உங்களுக்கு யாரும் சொல்ல முடியாது.' ஆக, நானாகக்
கேட்காமல் உண்மையை நான் அறிந்துகொள்ள முடியாது. அவரின் குரலே என் மனத்தில்
உண்மையாக ஒலித்துக் கொண்டிருந்தால்தான் வெளியில் இருக்கும்
உண்மை எனக்குத் தெரியும். இன்று நான் விரும்பிக் கேட்கும் அலைபேசி அல்லது
நேரடி உரையாடல்கள், விரும்பாமல் கேட்கும் காணொளி, இசை என குரல்கள் என்
காதுகளில் விழுந்துகொண்டே இருக்கின்றன. இந்தக் குரல்களும் என் உள்ளத்தில்
கேட்கும் அவரின் குரல்களும் எதிரெதிரே இருக்கின்றன.
நான் எக்குரலுக்குச் செவிமடுக்கிறேனோ, அக்குரலைப் பொறுத்தே என் உண்மையை
நிர்ணயம் செய்கிறேன். அவரின் குரலை நான் கேட்பதும் அரச நிலைக்கு என்னை
உயர்த்தும்.
இறுதியாக,
No comments:
Post a Comment