Wednesday 14 November 2018

பொதுக்காலம் ஆண்டின் 33-ஆம் ஞாயிறு



பொதுக்காலம் ஆண்டின் 33-ஆம் ஞாயிறு


இன்றைய வாசகங்கள்

தானியேல் 12:1-3
எபிரேயர் 10:11 -14 
மாற்கு 13:24-32






இறுதித் தீர்ப்பு என்று சொன்னதும் நமக்கு மரண பயம்தான் ஏற்படும். இறுதித் தீர்ப்பு என்பது இயேசுவை நாம் முகமுகமாக தரிசிப்பதே ஆகும். மரண பயத்தை அகற்றிவிட்டால் இறுதித் தீர்ப்பைப் பற்றி நாம் கவலைப்படத் தேவையில்லை.

அறுவை சிகிச்சை அறைக்கு அடுத்த அறையில் 48 வயது மதிக்கத்தக்க நோயாளி ஒருவர் இருந்தார். அவரது கையில் இரத்தம் ஏறிக் கொண்டிருந்தது. மூக்கின் வழியாய் நன்றாய் சுவாசிக்க பிராணவாயு கொடுக்கப்பட்டது. உயிர் பிழைப்பார் என்ற நம்பிக்கை யாருக்குமே இல்லை. சிறிது நேரத்தில் கண் விழித்த அவர், உதவிக்கு பக்கத்தில் இருந்த நர்ஸைப் பார்த்து இதையெல்லாம் எடுத்துவிடுங்கள் என்றார். ஆனால் அந்த நர்ஸ் அவரிடம், இவற்றை எடுத்துவிட்டால் நீங்கள் இறந்துவிடுவீர்கள், நான் அந்த காரியத்தை செய்ய மாட்டேன் என்று மறுத்தார். அதற்கு அந்தப் பெரியவர், ஒரு மணி நேரத்துக்கு முன்னே நான் இயேசுவைக் காணச் செல்வது உங்களுக்குப் பிடிக்கவில்லையா? என்று கேட்டாராம்.

இந்த பெரியவர், தனது இறப்பை, இயேசுவை நேரடியாக காண்பதற்கு ஒரு வாய்ப்பாக எண்ணினார். அதனால்தான் அவரிடம் மரண பயமே இல்லை. இறுதி என்னும் சொல் நமது வாழ்வில் மிக முக்கிய இடத்தைப் பிடிக்கின்றது. திருவிழாவின் இறுதி நாளில்தான் மிக சிறப்பான நிகழ்ச்சிகள் அரங்கேறும். மாணவன் தனது இறுதித் தேர்வைத் தான் நன்றாக எழுத வேண்டும் என்ற திட்டத்தை ஏற்படுத்திக் கொள்கிறான். விளையாட்டு வீரன் தனது இறுதியாட்டத்தில்தான் தனது திறமைகள் அத்தனையும் பயன்படுத்துகிறான். ஏன்? மனிதனின் இறுதி ஊர்வலத்தில்தான் நீண்ட அமைதி நிலவுகிறது.

இன்றைய முதல் வாசகமும், நற்செய்தியும் இறுதித் தீர்ப்பு சீக்கிரமாக நம்மை வந்து சேரும் என்றும், நமது இறப்பிற்குப் பின் நாம் அனைவருமே தீர்ப்புக்கு உள்ளாக்கப்படுவோம் என்றும் கூறுகின்றன. மரணத்தை அடுத்தே இறுதித் தீர்ப்பு வரும். எனவே மரண பயத்தை அகற்றி நல்மரணமடைய நாம் இப்போதிருந்தே நற்காரியங்கள் பல செய்ய வேண்டும்.

மரணத்தை எப்படிப் புரிந்து கொள்வது! இந்த உலகிற்கு வழிப்போக்கர்களாக வந்த நாம் புறப்பட்ட இடத்திற்கே திரும்பிப் போக வேண்டும். கல்லறைத் தோட்டத்திலே இருந்த ஒரு கல்லறையில் நான் ஒரு வழிப்போக்கன் என்று எழுதியிருந்தது. இவர் தமது வாழ்வையும், மரணத்தையும் புரிந்து கொண்டவர். முதலில் நாம் நமது சிந்தனையைச் சீர்படுத்த வேண்டும். உலகத்தில் நான் ஒரு வழிப்போக்கன் என்ற சிந்தனை வேண்டும்.

நான் ஒரு பயணி . நாம் அனைவரும் பயணம் செய்து கொண்டே இருக்கிறோம். சிலர் சின்ன வயதிலேயே தங்களது வாழ்க்கையை முடித்துக் கொள்வதுண்டு. சிலருக்கு 55 வயதில் பயணம் முடியும். வேறு சிலருக்கு 90ம் 100மாக வாழ்நாள் அமையும். எத்தனை நாள் வாழ்கிறோம் என்பது இங்கு முக்கியமல்ல. எப்படி வாழ்கிறோம் என்பதுதான் முக்கியம்.

நாம் இந்த உலகத்தைச் சார்ந்தவர்களல்ல என்றே நமது வாழ்நாளைக் கழிக்க வேண்டும் (பிலி 3:20). இதைத்தான் இயேசு யோவா. 18:38-இல் அருமையாகக் கூறுகிறார்: என் அரசு இவ்வுலக அரசைப் போன்றதல்ல என்று. கிறிஸ்தவர்களாகிய நாம், நமதாண்டவர் இயேசுவை நேரடியாகச் சந்திக்க நம்மை நாமே தயாரிக்க வேண்டும். நாம் கிறிஸ்துவுக்கே சொந்தம். ஒரு நாள் அழிந்து போகும் இந்த உலகிற்குச் சொந்தமல்ல. வள்ளுவர் இதைத்தான் பற்றற்றது பற்றுக என்று இந்த உலகைப் பற்றிக் கூறுகிறார்.

சிலுவையில் தொங்கி, நம்மையெல்லாம் மீட்ட அதே இறைவன்தான் நற்கருணை வழியாக நம்முள்ளத்தில் எழுந்து வரவிருக்கிறார். மரணம் என்பது வானக வாழ்வுக்கு முகவுரை என்பதை உணர்ந்து மரண பயத்தை அகற்றி, இறுதித் தீர்ப்பை எதிர்கொள்ள அவரிடம் திடன் கேட்போம்.







வாழ ஆசை!

நமது எதிர்காலத்தைப் பற்றி அறிந்து கொள்ள நம் எல்லாருக்குமே ஆசை உண்டு! நமது எதிர்காலத்தைப் பற்றிய நற்செய்தி ஒன்று இன்று நமக்கு அறிவிக்கப்படுகின்றது : "இயேசு மீண்டும் வருவார். அவர் வரும்போது தேர்ந்துகொள்ளப்பட்டவர்கள் கூட்டிச் சேர்க்கப்படுவார்கள்."
நம்மை தேர்ந்துகொள்ளப்பட்டவர்களாக மாற்றப்போவது எது? இயேசுவின் விருப்பம். இயேசு அவருக்குப் பிரியமானவர்களைத் தேர்ந்தெடுப்பார்.
இயேசு யோவான் 15:16-இல் "நீங்கள் என்னைத் தேர்ந்துகொள்ளவில்லை; நான்தான் உங்களைத் தேர்ந்துகொண்டேன்" என்கின்றார். யாரைக் கடவுள் தமக்குச் சொந்தமாக்கிக் கொள்ள விரும்புகின்றாரோ அவர்களை இயேசு தேர்ந்தெடுத்து, அவர்களது பாவங்களையெல்லாம் மன்னித்து, அவர்களைப் புனிதராக்கி, அவர்களைக் கடவுளுக்கு ஏற்புடையராக்குவார் (எபே 1:3-10).

கடவுள் யாருமே அழிந்துபோகக்கூடாது என்று விரும்புகின்றவர் (யோவா 17:12). அனைவரையும் தமக்குச் சொந்தமாக்கிக்கொள்ள அவர் ஆசைப்படுபவர். அவரது ஆசையோடு ஒத்துழைப்பவர்கள் அத்தனைபேரும் அழியா வாழ்வைப் பெறுவர்.

ஒரு மனிதன் கடுமையான தவத்தில் ஈடுபட்டிருந்தான்!

இளகிய மனம் கொண்ட இறைவன் அவன் முன்னால் தோன்றி, பக்தா! உன் தவத்தை மெச்சினோம். உனக்கு என்ன வேண்டும்? என்றார். இறைவா இரண்டே இரண்டு வரங்கள் வேண்டும். இரண்டே இரண்டு வரங்கள்தானே! தந்தோம். என்ன வரங்கள்? ஒன்று, நான் தூங்கும்போது சாகும் வரம் வேண்டும். சரி, இன்னொன்று? நமட்டுச் சிரிப்புடன் சொன்னான் பக்தன் : நான் தூங்காமல் வாழும் வரம் வேண்டும்.

மனிதனுக்கு இந்த உலகத்திலே உயிரோடு வாழ எவ்வளவு ஆசை பாருங்கள்! இம்மையில் நாம் வாழ ஆசைப்படும் அளவுக்கு மறுமையிலும் நாம் வாழ ஆசைப்படுவது நல்லது! நாம் இயேசுவால் | தேர்ந்துகொள்ளப்பட்டால் நமக்கு முடிவில்லா காலத்திற்கும் ஒளி வீசும் வாழ்வு கிடைக்கும் (முதல் வாசகம்). | தேர்ந்துகொள்ளப்பட்டவர்களாக மாற நாம் செய்ய வேண்டியது என்ன? இயேசு நம்மைத் தேடிவரும்போது அவருடைய விருப்பத்தோடு, மரியாவைப் போன்று (லூக் 1:38), திருத்தூதர்களைப் போன்று (லூக் 5:11) ஒத்துழைக்கவேண்டும்.

மேலும் அறிவோம் :

அவாவினை ஆற்ற அறுப்பின் தவாவினை
தான்வேண்டும் ஆற்றான் வரும் (குறள் : 367).

பொருள் : ஆசை உண்டாகாதபடி ஒருவன் அதனை முழுமையாக அகற்றிவிட்டால், எப்போதும் அழியாமல் நிலைத்திருக்கும் ஆற்றல் பெறுவான்!




கிறிஸ்துவின் இரண்டாம் வருகை உடனடியாக திகழப் போகிறது என்பதை வலியுறுத்தி, "இயேசு வருகிறார்" என்ற தலைப்பைத் தாங்கிய துண்டுப் பிரசுரங்களைப் பெந்தகோஸ்து சபையினர் ஒரு பேருந்து நடத்துனரிடம் கொடுத்தார். அவரோ, "யார் வந்தாலும் வரட்டும்; ஆனால் மரியாதையாய் பயணச் சீட்டு வாங்கிய பிறகே பேருந்தில் பயணம் செய்ய முடியும்" என்றார்.

பேருந்தில் பயணம் செய்யப் பயணச்சீட்டுத் தேவைப்படுவது போல, விண்ணகப் பேருந்தில் பயணம் செய்யவும் பயணச் சீட்டுத் தேவை. அப்பயணச் சீட்டு: நம்பிக்கையும் அன்புமாகும். ஆனால் காலம் செல்லச் செல்ல இந்த இரண்டு தற்பண்புகளும் மக்களிடம் இல்லாமற்போகும் அல்லது குறைந்து போகும் என்று கிறிஸ்துவே முன்னறிவித்துள்ளார், "மானிட மகன் வரும்போது மண்ணுலகில் நம்பிக்கையை காண்டாரோ?" (லூக் 18:8). "நெறிகேடு பெருகுவதால் பலருடைய அன்பு தணிந்துபோகும்" (மத் 24:12).

உலகம் எப்போது எப்படி முடியும் என்று பலர் இன்று கேட்கின்றனர், வாழ்க்கையின் உண்மைத் தன்மையை (நிலையாமையை) ஆராயாதவர்கள், கோடிக்கணக்கான எண்ணங்களை எண்ணுவா் என்கிறார் வள்ளுவர்.

ஒரு பொழுதும் வாழ்வது அறியார் கருதுப்
கோடியும் அல்ல பல (குறள் 337)

இருப்பினும் திருவழிபாட்டு ஆண்டின் இறுதிக் கட்டத்தில் இருக்கும் நமக்கு இன்றைய திருவழிபாடு உலக முடிவைப் பற்றியும் கிறிஸ்துவின் இரண்டாம் வருகையைப் பற்றியும் எடுத்துரைக்கிறது,

இன்றைய முதல் வாசகமாகிய தானியேல் நூலில் சொல்லப்பட்டுள்ள வைகளும், நற்செய்தியில் கிறிஸ்து கூறியுள்ளவைகளும் திருவெளிப்பாடு இலக்கிய வகையைச் சார்ந்தவை. அவற்றைச் சொல்லுக்குச் சொல் பொருள் கொள்ளாமல், அவற்றில் பொதிந்துள்ள உண்மைகளை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும், அவ்வுண்மைகளில் சில பின்வருமாறு: "இவ்வுலகு இப்போது இருப்பதுபோல் நெடுநாள் இராது" (1 கொரி 7:21), இவ்வுலகம் ஒரு முடிவுக்கு வரும். அதற்குமுன் கிறிஸ்துவின் சீடர்கள் துன்புறுத்தப்படுவர், போலி இறைவாக்கினர்கள் தோன்றி மக்களை ஏமாற்றுவர், இயற்கையில் அச்சத்துக்குரிய மாற்றங்கள் பல நிகழும். ஆனால் கிறிஸ்துவின் சீடர்கள் அச்சமடையக்கூடாது. ஏனெனில், எல்லாம் கடவுளின் கையில்தான் உள்ளது. கிறிஸ்துவே வரலாற்றின் நாயகன். உலகின் கதியையும் மனிதரின் கதியையும் நிர்மாணிப்பவர் அவரே. அவர் மீண்டும் வருவார்: நீதி வழங்குவார், புதிய வானகமும் புதிய வையகமும் மலரும் கிறிஸ்துவின் சீடர்கள் நம்பிக்கை இழுக்கலாகாது, "இறுதிவரை உறுதியாய் இருப்பவர் மீட்புப் பெறுவர்" (மத் 24:13).

கிறிஸ்து தமது இரண்டாம் வருகையைக் காலம் தாழ்த்துவதாக நாம் கருதலாம். ஆனால், பேதுரு கூறுகிறார்: ஆண்டவரின் பார்வையில் ஒருநாள் ஆயிரம் ஆண்டுகள் போலவும், ஆயிரம் ஆண்டுகள் ஒருநாள் போலவும் உள்ளது (2 பேது 3:8) கிறிஸ்து இன்னும் வராததால் அவர் வர மாட்டார் என்று நினைப்பது அபத்தமாகும். திருத்தூதர் பவுல் கூறுகிறார்: "விண்ணகமே நமது தாய்நாடு. அங்கிருந்து கிறிஸ்து வருவார் எனக் காத்திருக்கின்றோம்* (பிலி 3:20). கோடைகாலத்தில் மரங்களின் இலைகள் உதிர்ந்த பிறகு புதிய தளிர்கள் தோன்றுவது எவ்வளவு உறுதியோ, அவ்வளவு உறுதியானது கிறிஸ்துவின் இரண்டாம் வருகை. இதுதான் அத்திமரம் உவமை உணர்த்தும் உண்மை .
உலகம் எப்பொழுது முடியும் என்பது நமக்குத் தெரியாது என்று கிறிஸ்து கூறுவதன் நோக்கம்: உலக முடிவைப்பற்றித் தெரிவது நமக்கு நன்மை பயக்காது. நாம் எப்போதும் விழிப்புடன் இருந்து நமது கடமையைச் செய்ய வேண்டும்,

வாக்குரிமை இருந்தாலும் வாக்காளர் பட்டியலில் நமது பெயர் இல்லையென்றால், நாம் தேர்தலின்போது வாக்களிக்க முடியாது. அவ்வாறே "வாழ்வு நுலில்" நமது பெயர் இல்லையென்றால் நம் மீட்படைய முடியாது. "நூலில் யார்யார் பெயர் எழுதப்பட்டுள்ளதோ அவர்கள் அனைவரும் மீட்கப்படுவார்கள்” (தானி 12:1) என்று இன்றைய முதல் வாசகம் கூறுகிறது. கிறிஸ்து தம் சீடர்களிடம், "உங்கள் பெயர்கள் விண்ணகத்தில் எழுதப்பட்டிருக்கின்றன என்பது பற்றியே மகிழுங்கள்" (லூக் 10:20) என்கிறார். "வாழ்வின் நூலில் பெயர் எழுதப்படாதோர் தெருப்பு ஏரியில் எறியப்பட்டார்கள்" (திவெ 20:15) என்று திருவெளிப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது,
வாழ்வு நூலில் இடம்பெற வேண்டுமென்றால் , நம்மிடம் நம்பிக்கையும் அன்பும் செயல்வடிவம் பெற வேண்டும். கிறிஸ்தவ வாழ்வு என்பது “அன்பின் வழியாகச் செயலாற்றும் நம்பிக்கை ” (கலா 5:3). "அன்பு செய்பவர்கள் சாவிலிருந்து வாழ்வுக்குக் கடந்து வந்துள்ளனர்" (1 யோவா 3:10) நமது இறுதித் தீர்ப்பு அன்பின் அடிப்படையில் அமையும் (மத் 25:34-40),
ஒரு காலத்தில் அன்புக்கு அழுத்தம் கொடுத்து நீதியைப் பற்றி அலட்டிக் கொள்ளவில்லை. தற்போது நீதிக்கு அழுத்தம் கொடுத்து அன்பு ஓரம் கட்டப்பட்டுள்ளது, நீதி இருக்கும் இடத்தில் அன்பு இல்லாமற்போனாலும், அன்பு உள்ள இடத்தில் நீதி கட்டாயம் இருக்கும். ஏனெனில் நீதி என்பது குறைந்த அளவு அன்பு என்பதை உணர்க, அன்பைச் செயலில் காட்ட வேண்டும் (1 யோவா 3:18). அன்பில் அச்சத்திற்கு இடமில்லை; மாறாக, நிறை அன்பு அச்சத்தை அகற்றிவிடும் (1 யோவா 4:18)

அன்பில் நாம் வாழும்போது உலக முடிவைப்பற்றி நாம் அச்சம் அடையத் தேவையில்லை . உலக முடிவு என்பது படைப்பின் அழிவாக இருக்காது, மாறாக அதன் நிறைவாக இருக்கும். கிறிஸ்துவின் முதல் வருகையை ஏற்று, அவரது இரண்டாம் வருகையை எதிர்பார்த்துள்ள நாம், வாரும் ஆண்டவராகிய இயேசுவே வாரும்' (திவெ 22:20) என்ற மன்றாட்டுடன் இத்திருவழிபாட்டு ஆண்டை நிறைவு செய்வோம்.


உண்மையைக் கற்றுக் கொள்ளுங்கள்!

'பிறப்புக்கு ஒரு காலம், இறப்புக்கு ஒரு காலம்.
நடவுக்கு ஒரு காலம், அறுவடைக்கு ஒரு காலம்' (சஉ 3:2) என்று சொல்லும் எபிரேயக் கவிஞர் சபை உரையாளர் என்றாலும் சரி,

'பிறந்தன இறக்கும், இறந்தன பிறக்கும்
தோன்றின மறையும், மறைந்தன தோன்றும்
பெருத்தன சிறுக்கும், சிறுத்தன பெருக்கும்
உவப்பன வெறுப்பாம், வெறுப்பன உவப்பாம்' என்று சொல்லும் தமிழ் ஞானி பட்டினத்தார் என்றாலும் சரி,

வாழ்வின் இருதுருவ நிலைகளை மிக அழகாக உணர்ந்தவர்களாகவும், உணர்த்தியவர்களாகவும் இருக்கின்றனர்.

இந்த உண்மையைக் கற்றுக் கொள்ளுங்கள் என்று இன்றைய இறைவாக்கு வழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது.

நாம் இரண்டு மணி நேரங்கள் பார்க்கும் சினிமா, அல்லது இரண்டு நாள்கள் படிக்கும் நாவல் கூட, 'முடிவு எப்படி இருக்கும்?' என்ற ஆவலை நம்மில் எழுப்பிவிடும்போது, நாம் 70 ஆண்டுகள், 80 ஆண்டுகள் வாழும் வாழ்க்கை, 'என் முடிவு எப்படி இருக்கும்?' என்ற கேள்வியையும், பல லட்சக்கணக்கான ஆண்டுகளாக வளர்ந்துவரும் இப்பிரபஞ்சத்தின் முடிவு எப்படி இருக்கும்? என்ற கேள்வியையும் நம்மில் எழுப்பாமல் இருக்காதா?

உலகம் முடியுமா? முடியாதா? எப்போது முடியும்? எப்படி முடியும்? மனித இனம் தன்னைத் தானே அழித்துக் கொள்ளுமா? அல்லது அண்ட சராசரத்தின் ஆக்கம், அழிவு போல பூமி தானாகவே அழிந்து விடுமா? கடவுள் வருவாரா? எப்படி வருவார்? எல்லாருக்கும் தீர்ப்பு வழங்குவாரா? நம் இந்தியப் பின்புலத்தில் கேள்விகள் இன்னும் அதிகமாகின்றன: எந்தக் கடவுள் வருவார்? கிறிஸ்தவரல்லாதவருக்கு என்ன நடக்கும்? ஒருவேளை எல்லாக் கடவுளர்களும் சேர்ந்து வருவார்களா?

'சட்டென்று மாறுது வானிலை' என்பதுபோல, 'இதெல்லாம் பார்க்க நாம இருக்க மாட்டோம்' என்ற எண்ணமும் நம் மூளையில் மின்னி மறைகின்றது.

ஒத்தமைவு நற்செய்தியாளர்கள் என அழைக்கப்படுகின்ற மத்தேயு, மாற்கு, லூக்கா என்னும் மூவரும் உலகின் இறுதி பற்றியும், மானிடமகனின் இரண்டாம் வருகை பற்றியும் பதிவு செய்கின்றனர். யோவான் இறுதி நாட்கள் பற்றியும், செம்மறியின் இரண்டாம் வருகை பற்றியும் திருவெளிப்பாடு என்ற புதிய நூலையே படைக்கின்றார்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். மாற் 13:24-32) காணப்படும் பகுதி 'வெளிப்பாட்டு நடை' என்னும் இலக்கியக் கூற்றைப் பயன்படுத்தி எழுதப்பட்டடிருந்தாலும், இப்பகுதியில் வரும் நிகழ்வுகள் அனைத்தும் தனி மனித வாழ்வில் நடக்கின்றன என்றும் நாம் உருவகித்துக்கொள்ள முடியும்.

'அந்நாள்களில்' - 'நம் வாழ்வின் இறுதி நாள்களில்'

'வேதனைகளுக்குப் பிறகு' - 'நாம் வாழ்ந்த வாழ்க்கைக்குப் பிறகு'

'கதிரவன் இருண்டுவிடும்' - 'நம் கண்கள் மூடிவிடும் அல்லது மங்கிவிடும்'

'நிலா ஒளிகொடாது' - 'நம் உடலில் வெப்பம் இருக்காது'

'விண்மீன்கள் வானத்திலிருந்து விழும்' - 'நாம் பெற்ற அனைத்து உறவுகளும் நம்மைவிட்டு அகலும்'

'வான்வெளிக் கோள்கள் அதிரும்' - 'நாம் வாழும் குடும்பத்தில், சமூகத்தில் ஒரு வெற்றிடம் ஏற்படும்'

'மானிடமகன் மாட்சியோடு மேகங்கள் மீது வருவார்' - 'நம் உயிர் தன்னைப் படைத்த இறைவனிடம் திரும்பிச் செல்லும்'

இந்த உருவகம் சாத்தியமா என்று நாம் கேட்கலாம்?

சாத்தியம். ஏனெனில், இத்தகைய உருவகத்தைத்தான் நாம் சஉ 12:1-6ல் வாசிக்கின்றோம்.

ஆக, இயேசு குறிப்பிடும் நிகழ்வுகள் எல்லாம் என் வாழ்விலும், உங்கள் வாழ்விலும் நடந்தேறும் நிதர்சனமான நிகழ்வுகள்.

இவ்வறிகுறிகளைச் சொல்லிவிட்டு, 'அத்திமரத்திலிருந்திலிருந்து உண்மையைக் கற்றுக் கொள்ளுங்கள்' என்கிறார். அந்த உண்மை என்ன?

இலையுதிர்காலத்தில் தன் இலைகளை எல்லாம் இழந்து, பனிக்காலத்தில் வெறும் குச்சிகளாக நின்று பனியைத் தாங்கி, வசந்தகாலத்தில் மெதுவாக தளிர்விட்டு, கோடைகாலத்தில் பச்சைப் பசேலென இருக்கிறது அத்திமரம். ஆனால், இப்பச்சை இலைகள் நிரந்தரமல்ல. மீண்டும் சக்கரம் சுற்றும். இலைகள் உதிரும், மலரும், மலரும், உதிரும். வாழ்க்கையின் ஓட்டத்தை 'ஃப்ரீஸ்' செய்ய முடியாது. அப்படிச் செய்தால் அது இறந்துவிடும். (இறந்ததை மட்டும்தான் நாம் ஃப்ரீஸ் செய்கிறோம். இல்லையா?)

ஆக, அத்திரமரம் நமக்கு உணர்த்தும் உண்மை என்ன?

'மாற்றம் ஒன்றே நிலையானது'

மாற்றத்திற்கு ஒத்துழைக்கும் உயிர்தான் வாழ முடியும். மறுவாழ்விற்குப் பிறக்க முடியும்.

மேலும், என் உடலின், மனதின் மாற்றம் என்னைத் தவிர வேறு எவருக்கும் தெரியாது. ஆக, மாற்றம் என்பது ஒரு தனிநபர் அனுபவம்.

இறந்தன உயிர்க்கும், இருப்பன இறக்கும் என்ற இதே செய்தியைத்தான், இதே மாற்றத்தைத்தான் இன்றைய முதல் வாசகத்திலும் (காண். தானி 12:1-3) நாம் வாசிக்கிறோம். பல்த்தசார் என்று அழைக்கப்பட்ட தானியேல், பாரசீக மன்னன் சைரசின் காலத்தில் காட்சி ஒன்று காண்கின்றார். அந்தக் காட்சியில் முடிவின் காலம் அவருக்கு அறிவிக்கப்படுகிறது. அந்த முடிவின் காலம் எப்படி இருக்கும் என்று தென்திசை மன்னனுக்கு (பெயரில்லாத மன்னன்!) தானியேல் அறிவிப்பதே இன்றைய முதல் வாசகம். இன்றைய முதல் வாசகம் இறுதிநாளைப் பற்றிச் சொல்லும்போது ஐந்து கூறுகளைக் குறிப்பிடுகிறது: (அ) தலைமைக் காவலர் மிக்கேல் எழும்புவார், (ஆ) துன்ப காலம் வரும், (இ) வாழ்வின் நூலில் பெயர் எழுதப்பட்டவர்கள், (ஈ) நல்லவர்கள் பரிசு பெறுவர், மற்றும் (உ) கெட்டவர்கள் தண்டனை பெறுவர். இன்ப காலம் மறைந்து துன்ப காலமும், அது முடிந்து மீண்டும் இன்ப காலமும் வருவதைச் சொல்கிறது தானியேலின் காட்சி.

'பிறப்பு இறப்பு' 'வளர்ச்சி தளர்ச்சி' 'இன்பம் துன்பம்' எனச் சுற்றிவரும் வாழ்க்கைச் சக்கரத்தை நாம் எப்படி நகர்த்துவது?

இன்றைய இரண்டாம் வாசகமும் (காண். எபி 10:11-14,18), பதிலுரைப் பாடலும் (திபா 16:5) நமக்கு மூன்று பாடங்களைக் கற்பிக்கின்றன:

1. 'ஒரே பலியைச் செலுத்துவது'

கடந்த 6 வாரங்களாக நாம் வாசித்துக்கொண்டுவரும் எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமடல் பகுதி இன்று நிறைவு பெறுகிறது. இயேசுவைத் தனிப்பெரும் தலைமைக்குருவாக முன்வைக்கும் ஆசிரியர், பழைய ஏற்பாட்டுக் குரு நாள்தோறும் செலுத்தும் பலியையும், இயேசுவின் ஒரே பலியையும் ஒப்பிடுகின்றார். இந்த ஆன்மீகச் செய்தியை நம் வாழ்வுப் பாடமாக எப்படி மாற்றுவது? நம் வாழ்க்கையை இரண்டு நிலைகளில் வாழ நம்மால் முடியும்: (அ) நாள்தோறும் ஒரே மாதிரி வாழ்வது - இவ்வகை வாழ்வில் புதுமை இருக்காது. எல்லாரையும் போல மற்றவர்கள் எதிர்பார்ப்பதை மட்டும் நாம் செய்துவிட்டு ஓய்ந்திருப்போம். (ஆ) ஒரே முறை வாழ்வது - இனிமையாக, முழுமையாக வாழ்வது. இவ்வகை வாழ்வில் புதுமையும், புத்துணர்ச்சியும் இருக்கும். இந்த வாழ்க்கை நம் கையெழுத்தைப் போல நமக்கே உரிய தனிப்பட்ட ஒன்றாக இருக்கும்.

நாள்தோறும் ஒரே மாதிரி வாழ்வது எளிது. ஏனெனில் இத்தகைய வாழ்வு சாவி கொடுத்த பொம்மை போல ஒரே இடத்தில் ஆடிக்கொண்டிருப்பது போல, அல்லது ஒரே இடத்தில் ஆடிக்கொண்டிருக்கும் ஓய்வுநாற்காலி போல இருக்கும். ஓய்வுநாற்காலி விடிய விடிய ஆடினாலும் ஒரு இன்ச் கூட நகர்வதில்லை. ஆனால், ஒரே முறையில் தள்ளப்படும் நடைவண்டி புதிய இடத்திற்குப் போவது மட்டுமல்லாமல், அது குழந்தை நடை பழகுவதற்கும் காரணமாக அமைந்துவிடுகிறது. மேலும், நாம் ஒரே முறை செய்யும் செயலில் நம் முழு மனம், சிந்தனை, மற்றும் ஆற்றலைப் பயன்படுத்துகிறோம்.

ஆக, நாம் கேட்க வேண்டிய முதல் கேள்வி: 'நாள்தோறும் போல வாழ்கிறேனா?' அல்லது 'ஒரே முறை போல வாழ்கிறேனா?'

2. 'நிறைவுள்ளவரா(க்கு)தல்'

செடியில் மலரும் ஒரு பூ அப்படியே வாடிவிட்டால் அது வாடிவிட்டது என்கிறோம். ஆனால், அது பிஞ்சாகி பழுத்துவிட்டால் வெம்பிவிட்டது என்கிறோம். ஆனால், முழுவதும் கனியானால் அதை இரசிக்கிறோம். ஆக, கனி என்பது வேரின் நிறைவு. அதுபோலவே, இறப்பு என்பது பிறப்பின் நிறைவு. இந்த நிறைவு உண்மையிலேயே நிறைவாக இருத்தல் வேண்டும். 'இறப்பு உன்னிடம் வரும்போது உயிரோடு இரு' என்பது ஆப்பிரிக்க பழமொழி. அதாவது, வாழும்போதே இறந்துவிடாதே! அல்லது உன்னை நீயே அழித்துவிடாதே! அல்லது வெறும் நடைபிணம் போல வாழாதே!

நேற்றைய என் நாளை விட நான் இன்று நிறைவுள்ளவனாக இருக்க வேண்டும். அதுதான் வளர்ச்சி. நேற்று நான் எடுத்த முடிவுகள் இன்று நான் எப்படி இருக்கிறேன் என்பதை உறுதி செய்கின்றன. அதுபோல, இன்று நான் எடுக்கும் முடிவுகள் நாளை நான் எப்படி இருப்பேன் என்பதை உறுதி செய்கின்றன. அப்படி என்றால், என் முடிவுகளும், தெரிவுகளும் சரியானதாக இருக்க வேண்டும். நேற்றைய காரணத்தால் இன்றைய காரியம் நடக்கிறது. காரியத்தை நான் கட்டுப்படுத்த காரணத்தைக் கட்டுப்படுத்த வேண்டும. இறப்பு என்னும் காரியத்தை நான் கட்டுப்படுத்த வாழ்க்கை என்ற காரணத்தை நான் கட்டுப்படுத்த வேண்டும். ஆக, ஒவ்வொரு பொழுதும் நான் நிறைவு பெறுகிறேனா? என்று கேட்க வேண்டும். அதே நேரத்தில், நம் குறைவுத்தன்மையை அறிந்து உணர்ந்து, அதை நிறைவின் காரணியாகப் பார்த்தல் நலம்.

3. 'ஆண்டவர்தாமே என் உரிமைச் சொத்து. அவரே என் கிண்ணம். எனக்குரிய பங்கைக் காப்பவர் அவரே.'

நம் வாழ்க்கை இனிமையான அனுபவமாக இருக்க கடவுள், விதி, மறுபிறப்பு என எதையாவது ஒன்றை நம்பியே ஆக வேண்டும். இந்த நம்பிக்கையில் நாம் திரும்பிப் பார்க்கும்போதுதான் வாழ்வின் ஒவ்வொரு புள்ளிகளும் மிக அழகாக இணையும். என் வாழ்வில் நடக்கும் நிகழ்வுகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு புள்ளியாக வளர்ந்துகொண்டே வரும். அது கடவுள், விதி, மறுபிறப்பு என்னும் ஒற்றைப் புள்ளியில் இணையும். வெறும் கோலமாவை அள்ளித் தெளிப்பதால் கோலம் வந்துவிடுமா? இல்லை. நிதானமாக, அளந்து, பொருத்தி வைக்கப்படும் புள்ளிகளே கோலத்தை உருவாக்கும்.

என் வாழ்வின் சொத்து என நான் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் ஒவ்வொன்றை நினைக்கிறேன். சிறு குழந்தையாக இருந்தபோது நிறைய சிகரெட் அட்டைகள் வைத்திருக்கும் சிறுவன் விளையாட்டில் பணக்காரன் எனக் கருதப்படுவான். ஆனால், வயது வந்து நான் வளர்ந்தவடன் சிகரெட் அட்டைகள் சேகரித்தால் அது விளையாட்டுத்தனமாகத் தெரியும். வளர்ந்த நான் நிறைய ரூபாய் நோட்டுக்களைச் சேகரிக்க ஆரம்பிக்கிறேன். மற்றவர்கள் என்னைப் பணக்காரன் என்று சொல்வார்கள். ஒரு காலத்தில் நானே எண்ணிச் சேகரித்த சிகரெட் அட்டைகளை இன்று நான் ஏன் குப்பையில் போடுகிறேன்? வாழ்வில் சேகரிக்கும் சொத்துக்கள் அனைத்தும் மாறக்கூடியவை. என் உடல் நலம், அழகு, படிப்பு, வேலை, பதவி, சமூக நிலை, உறவு என நான் சேகரிக்கும் அனைத்தும் ஒருநாள் காலாவதியாய்ப் போகும். நான் ஓடி ஓடி நிறைக்கும் கிண்ணம் கடைசியில் வெறுமையாய் இருக்கும். நான் இவ்வளவு நாள் போட்டது இந்த ஓட்டைக் கிண்ணத்திலா? என்று மனம் குற்றவுணர்வு கொள்ளும். ஆனால், ஆண்டவரை உரிமைச் சொத்தாகவும், அவரைத் தன் கிண்ணமாகவும் கொண்டிருப்பவர் பேறுபெற்றோர். அவர் ஏமாற்றமடையார். ஏனெனில் அவரின் பங்கைக் காப்பவர் கடவுள்.

உலகம் முடியுமா? முடியாதா? மானிட மகன் வருவாரா? வரமாட்டாரா? என்ற கவலையும், ஏக்கமும் வேண்டாம். 'இதோ சீக்கிரம் வருகிறார்' என யாராவது தெருவில் முழக்கமிட்டுப் போனால், நீங்கள் பதற வேண்டாம். 'மனம் மாறு. அவரிடம் திரும்பி வா' என எவராவது கத்தினால் பயப்பட வேண்டாம். நிதானமாகவும், பொறுமையாகவும் நம் வாழ்வு முடிவு பெறுவதை எண்ணிப் பார்ப்போம்.

'நன்றாக நல்ல வேலை செய்த நாள் நல்ல தூக்கத்தைத் தருவதுபோல, நன்றாக நல்ல நிலையில் வாழ்ந்த வாழ்க்கை நல்ல இறப்பைத் தரும்' என்பார் டாவின்சி.

வரட்டும் அவர் எப்போது வேண்டுமானாலும்! அவருக்கே தெரியாது அவரின் வருகை!
பின் ஏன் நாம் கவலைப்பட வேண்டும்?

அத்திமரத்திலிருந்து நாம் கற்கும் உண்மை இதுதான்: தளர்வன வளரும், வளர்வன தளரும்!



No comments:

Post a Comment