Sunday 17 June 2018

திருமுழுக்கு யோவான் பிறப்புப் பெருவிழா

திருமுழுக்கு யோவான் பிறப்புப் பெருவிழா


What’s in a name?... Plenty! பெயரில் என்ன பெரிதாக உள்ளது?
அருள்பணி  L.X. ஜெரோம். சே.ச

 திருஅவையின் பாரம்பரியத்தில் ஆயிரக்கணக்கான புனிதர்களின் திருநாட்களை நாம் கொண்டாடுகிறோம். இப்புனிதர்களின் திருநாட்களெல்லாம் அவர்கள் விண்ணுலகில்
பிறந்தநாளன்றே கொண்டாடப்படுகின்றன. திருஅவையில் மூவருக்கு மட்டும் மண்ணுலகில் அவர்கள் பிறந்தநாட்கள் கொண்டாடப்படுகின்றன. இயேசுவின் பிறந்தநாள்,
அன்னை மரியாவின் பிறந்தநாள், திருமுழுக்கு யோவானின் பிறந்தநாள்.
இன்று திருமுழுக்கு யோவானின் பிறந்தநாளைக் கொண்டாடுகிறோம். திருமுழுக்கு யோவான் ஒரு வைரம்... பாலை நிலத்தில் தவத்திலும், துன்பத்திலும் தன்னைத்தானே
பட்டைத் தீட்டிக்கொண்ட ஒரு வைரம். இயேசு என்ற ஒளியில் இந்த வைரம் பல கோணங்களில், பல வண்ணங்களில் மின்னியது. மனிதராய்ப் பிறந்தவர்களுள்
யோவானைவிடப் பெரியவர் ஒருவருமில்லை. (லூக்கா 7:28) என்று இயேசுவால் புகழப்பட்ட வைரம் இவர். இந்த வைரத்திலிருந்து சிதறும் பல வண்ண ஒளிக்கீற்றுகளில்
ஒன்றை மட்டும் இன்று சிந்திப்போம்.
திருமுழுக்கு யோவானின் பிறந்தநாளன்று நமக்குத் தரப்பட்டுள்ள முதல் வாசகத்திலும், நற்செய்தியிலும் பெயர் சூட்டுதல், பெயர் சொல்லி அழைத்தல் ஆகிய எண்ணங்கள்
மேலோங்கியுள்ளன. இவ்வெண்ணங்களை மையப்படுத்தி, நமது ஞாயிறு சிந்தனைகளைத் தொடர்வோம்.
“What’s in a name? that which we call a rose 
By any other name would smell as sweet;”
"பெயரில் என்ன பெரிதாக உள்ளது? ரோசா என்று நாம் அழைக்கும் அந்த மலருக்கு வேறு எந்தப் பெயர் இருந்தாலும், அந்த மலரின் மணம் மாறப்போவதில்லை."
'ரோமியோ அண்ட் ஜூலியட்' என்ற நாடகத்தில் ஷேக்ஸ்பியர் எழுதியுள்ள வார்த்தைகள் இவை. இந்த வார்த்தைகளை மேலோட்டமாக, ஒரு மேற்கோளாகப் பார்க்கும்போது,
ஒருவருக்கு வழங்கப்படும் பெயர் ஒன்றும் முக்கியமல்ல என்ற எண்ணம் உருவாகும். ஆனால், நாடகத்தில் இந்த வரிகள் சொல்லப்படும் சூழலைச் சிந்தித்தால், வேறுபட்ட
எண்ணங்கள் தோன்றும். இந்த எண்ணங்கள் இன்றும் நம் உலகை ஆட்டிப் படைக்கின்றன என்ற துயரமும் விளங்கும்.
நாடகத்தில் இந்த வரிகளை ஜூலியட் பேசுகிறார். ரோமியோவும் ஜூலியட்டும் ஒருவரை ஒருவர் மனதாரக் காதலிக்கிறார்கள். ஆனால் இவர்கள் இணைந்து வாழ்வதற்குத்
தடையாக உள்ளவை இவ்விருவரும் பிறந்த குடும்பங்கள். பகைமையில், வெறுப்பில் நீண்டகாலமாய் வாழ்ந்துவரும் குடும்பங்கள் இவை. தாங்கள் இணைந்து வாழ்வதற்கு
Capulet, Montague என்ற குடும்பப் பெயர்களே தடையாக உள்ளன என்று எண்ணும் ஜூலியட், "ரோமியோ, உன் குடும்பப் பெயர்தான் என்னுடைய எதிரி. நம் குடும்பப்
பெயர்களை நீக்கிவிட்டால், பகையும், வெறுப்பும் இல்லாமல் நாம் இணைந்து வாழ முடியும்... பெயரில் என்ன பெரிதாக உள்ளது?" என்ற பாணியில் பேசுகிறார். பகையுள்ள
இரு குடும்பப் பெயர்களைத் தாங்கியதால், ரோமியோவும் ஜூலியட்டும் இவ்வுலகில் இணையமுடியாமல் மரணத்தில் இணைந்தனர் என்று ஷேக்ஸ்பியரின் இந்த நாடகம்
துயரத்தில் முடிகிறது. பெயர்கள் வாழவும் வைக்கும், வன்முறைகளையும் தூண்டும் என்பதை நாம் வாழும் காலத்திலும் சந்தித்து வருகிறோம்.
இஸ்ரயேல் மக்கள் மத்தியில் பெயர்களுக்குத் தனி மதிப்பு இருந்தது. ஒருவருக்கு மற்றொருவர் பெயர் சூட்டினால், அந்தப் பெயரைத் தாங்கியவர்மீது பெயர் சூட்டியவருக்கு
அதிகாரம் உண்டு என்ற நம்பிக்கை அவர்கள் மத்தியில் இருந்தது. எனவேதான், இறைவனைப் பெயர் சொல்லி அழைக்க அவர்கள் தயங்கினார்கள். இறைவனுக்கு மக்கள்
பெயர் சூட்டினால், அவர் தங்கள் சக்திக்கு உட்பட்டவராகிவிடுவார் என்ற தயக்கம் அது.
அதேவேளையில், இறைவன் அவர்களுக்குப் பெயர் சூட்டியதைப் பெருமையாக அவர்கள் எண்ணிவந்தனர். விவிலியத்தில் கூறப்பட்டுள்ள அனைத்து முக்கியமான
பெயர்களும் இறைவன் தந்த பெயர்கள்தாம். ஆபிரகாமில் துவங்கி, ஈசாக்கு, யாக்கோபு, யோசேப்பு, மோசே என்று தொடர்ந்து, யோவான், இயேசு என்று அனைத்து
பெயர்களும் இறைவன் தந்த பெயர்கள். ஒவ்வொரு பெயருக்கும் ஓர் அர்த்தமும் உண்டு. வயதுமுதிர்ந்த காலத்தில், செக்கரியா, எலிசபெத்து இருவருக்கும் இறைவனின்
கருணையால் குழந்தை பிறந்ததால், இக்குழந்தைக்கு 'யோவான்' என்று பெயரிடும்படி தலைமைத் தூதர் கபிரியேல் பணித்திருந்தார். இறைவன் இக்குழந்தைக்கு தந்த
'யோவான்' என்ற பெயருக்கு 'யாவே அருள் வழங்கினார்' "Graced by Yahweh" என்று பொருள்.
குழந்தைக்குப் பெயர்சூட்டுவது இஸ்ரயேல் மக்கள் மத்தியில் முக்கியமான ஒரு நிகழ்வு. திருமுழுக்கு யோவான் வாழ்வில் நடந்த அந்த முக்கியமான நிகழ்வு இன்றைய
நற்செய்தியில் சொல்லப்பட்டுள்ளது. இந்த நிகழ்வும் நமக்குள் சிந்தனைகளை எழுப்புகின்றது. பெயர்சூட்டும் விழாவுக்கு வந்திருந்த அக்கம் பக்கத்தினர் குழந்தைக்குத்
செக்கரியா என்ற தந்தையின் பெயரையேச் சூட்டவேண்டும் என்று கூறினர். அதுவே அங்கு நிலவிய பாரம்பரியம். பாரம்பரியத்திற்கு மாறாக, கடவுள் தந்த 'யோவான்' என்ற
பெயர் குழந்தைக்குச் சூட்டப்பட்டது. யோவான் பிறந்ததே இயற்கையின் நியதிகளைத் தாண்டிய ஒரு செயல்... அவருக்குத் தரப்பட்ட பெயர் பாரம்பரியத்திற்குப் புறம்பான ஒரு
பெயர். 'இக்குழந்தை எப்படிப்பட்டதாக இருக்குமோ' என்று ஊர் மக்கள் அனைவரும் வியந்ததற்கு ஏற்ப, யோவான் வாழ்ந்த வாழ்க்கையும் வழக்கத்திற்கு மாறாக இருந்தது.
இப்படி பாரம்பரியங்களையும், பழக்க வழக்கங்களையும் தாண்டி, யோவானின் வாழ்க்கை இறைவனின் அருளால் முற்றிலும் வழிநடத்தப்பட்ட வாழ்க்கையாக அமைந்தது.
உலகில் பிறக்கும் நம் ஒவ்வொருவருக்கும் பிறப்பில் தரப்படும் ஒரு முக்கிய அடையாளம்... நமது பெயர். நாம் அனைவரும் வாழ்நாள் முழுவதும் தாங்கிச்செல்லும்
அடையாளம் இது. பெயர் சொல்லி அழைப்பதிலேயே, இரு விதங்கள்... இரு பக்கங்கள் உள்ளன. ஒருவருக்குரிய உண்மை மதிப்பளித்து, பெயர் சொல்லி அழைக்கும்
ஒளிமயமான பக்கம். ஒருவர் அவமானத்தால் குறுகிப்போகும் வண்ணம், பெயர் சொல்லி அழைக்கும் இருள்சூழ்ந்த பக்கம்.
பிறக்கும்போது, வளரும்போது, படிக்கும்போது, பலவிதமானப் பெயர்கள் நமது அடையாளங்களாகச் சூட்டப்படும். நம்மில் பலருக்கு நாம் செய்யும் தொழிலே நமது
அடையாளங்களாக மாறிவிடும். செய்யும் தொழில் உயர்வானதாகக் கருதப்பட்டால், அந்த அடையாளங்களை நாம் மகிழ்வோடு ஏற்றுகொள்வோம். உதாரணமாக, 
மருத்துவர், ஆசிரியர், பேராசிரியர், அருள்பணியாளர் ஆகியோரைப் பெயர் சொல்லி அழைப்பதைவிட, doctor, teacher, professor, father,  சாமி என்றெல்லாம்
அழைக்கும்போது, சொல்வதற்கும் பெருமையாக இருக்கும், கேட்பதற்கும் பெருமையாக இருக்கும். இன்று நாம் கொண்டாடும் யோவான் என்ற குழந்தை, இயேசுவுக்குத்
திருமுழுக்கு வழங்கியதால், திருமுழுக்கு யோவான் என்று திருஅவையால் தனிப்பட்ட மரியாதையுடன் அழைக்கப்படுகிறார்.
இதுவரை நாம் சிந்தித்தது, பெயர் சொல்லி அழைப்பதன் ஒளிமயமான பக்கம். இனி சிந்திக்க இருப்பது... இருளான பக்கம். நாம் வாழும் சமுதாயத்தில், தெருக்களைச் சுத்தம்
செய்வோர், காலணி தைப்பவர், வீட்டுவேலை செய்பவர்... இவர்களை நாம் எப்படி அழைக்கிறோம்? இவர்களை நாம் அழைக்கும் தொனியில் மரியாதை ஒலிக்காது. பல
ஆண்டுகள் இவர்களை நமக்குத் தெரிந்திருந்தாலும்,  இவர்களின் பெயர்களை நாம் கற்றுக்கொள்வதில்லை. அதற்குப் பதிலாக, "ஏய், டேய், அடியே, இவளே..." என்ற ஏக
வசனங்களே அவர்கள் பெயர்களாக மாறும் அவலம் நம்மிடையே உள்ளது. மனித சமுதாயத்தில் மட்டுமே காணக்கிடக்கும் மற்றொரு சாபம்... நமது இன வேறுபாடுகள்,
சாதி வேறுபாடுகள். இவற்றின் அடிப்படையில் ஒரு சிலர் அவர்கள் பிறந்த குலத்தின் பெயரிடப்பட்டு கேவலமாக அழைக்கப்படுகின்றனர். இவை இருள் சூழ்ந்த பக்கங்கள்...
நம்மைக் குருடாக்கும் பழக்கங்கள்.
நான் பணி செய்து வந்த ஒரு அலுவலகத்தில் எங்களுக்குக் காபி கொண்டுவரும் ஓர் இளைஞர் என் நினைவுக்கு வருகிறார். மற்ற எல்லாரும் அவரைக் கூப்பிட்ட ஒரே
பெயர் "டேய்". நான் அவரது பெயரைக் கற்றுக்கொண்டு, "சங்கர்" என்று அழைத்தேன். என்னைப் பார்க்கும்போதெல்லாம் அந்த இளைஞர் முகத்தில் புன்னகை ஒளிரும்.
என்னைத் தனிப்பட்ட விதத்தில் கவனித்துக்கொள்வார். அவரிடம் அந்த சலுகையைப் பெறுவதற்காக நான் அவரைப் பெயர் சொல்லி அழைக்கவில்லை. "சங்கர்" என்று
அவரை அழைக்கும்போது, அவர் தோள்களை உயர்த்தி சிரித்தது எனக்கு முக்கியமாகப் பட்டது. அதேபோல், நான் தங்கியிருந்த குருக்கள் இல்லங்களில் எளிய பணிசெய்யும்
எல்லாருடைய பெயரையும் கற்றுக்கொள்வதற்கு முயற்சி செய்வேன். அவர்களைப் பெயர் சொல்லி அழைப்பதனால், நான் எந்த வகையிலும் குறைந்துவிடவில்லை. மாறாக,
அவர்கள் நிமிர்ந்து நின்றதை, நிறைவாகச் சிரித்ததை இரசித்துப் பார்த்திருக்கிறேன்.
திருமுழுக்கு யோவானின் பிறந்தநாளன்று, அவருக்குப் பெயர் சூட்டும் நிகழ்வைச் சிந்திப்பதன் பயனாக, தனி மனிதர்களுக்கு தரப்படும் தனித்துவமான அடையாளமான
பெயர்களின் உண்மைப் பொருளைக் கற்றுக்கொள்ள முயல்வோம். நாம் மற்றவர்களை ஏகவசனத்தில், அல்லது தரம் குறைந்த அடைமொழிகளால் அழைப்பதை
நிறுத்திவிட்டு, அவர்களுக்கு உரிய மரியாதைத் தரும் பெயர்களால் அழைப்பதற்கு முயற்சிகள் எடுப்போம். ஒருவரது உண்மை அழகைப் பார்க்க வேண்டுமானால், அவர்மீது
நாம் வழக்கமாகச் சுமத்தும் ஏகவசனங்களையும், அடைமொழிகளையும் கிழித்துவிட்டு அவரது பெயர் சொல்லி அழைப்போம். அவர் உருமாறும் அழகை, புதுமையைக்
காண்போம்.
'யாவே அருள் வழங்கினார்' என்ற பொருள்படும் 'யோவான்', தன் பெயருக்கேற்ப வாழ்ந்தார். அவர் மட்டும் அருளால் நிறையவில்லை. அவர் பணிகளால், நாம் அனைவரும்
அருளுக்கு மேல் அருள் பெற்றுள்ளோம் (யோவான் 1:16). இறையருளை மக்களுக்கு அள்ளித்தந்த திருமுழுக்கு யோவான், நமக்கும் இறைவனிடமிருந்து அருள்வளங்களைப்
பெற்றுத்தர மன்றாடுவோம்.

அல்லது வாரநாளுக்குரிய வாசகம்

ஆண்டின் பொதுக் காலம் 12-ஆம் ஞாயிறு


இன்றைய வாசகங்கள்

யோபு 38:1,8-11
2 கொரிந்தியர் 5:14 - 17
மாற்கு 4:35 - 41




ஞாயிறு இறைவாக்கு- அருள்பணி முனைவர் ம.அருள்



விசுவாசம்.

இறையேசுவில் அன்புக்குரியவர்களே !
ஆண்டவர் இயேசு மாலைப் பொழுதிலே, கடலிலே பயணம் செய்வதாகப் பார்க்கிறோம். அதுவும் புயலும், காற்றும், சூறாவளியும் சூழ்ந்த கொந்தளிப்பில் தூங்கிக் கொண்டிருக்கிறார். நற்செய்தி ஏட்டிலே இந்த ஓர் இடத்தில் மட்டும்தான் இயேசு தூங்கியதாக வாசிக்கிறோம். அதேநேரத்தில் அமைதியிலே ஆண்டவர் இயேசு நித்திரை கொள்ள, சீடர்கள் படபடத்து, திக்குமுக்காடி, நாங்கள் மடியப் போகின்றோம், எங்களைக் காப்பாற்றும் என்று கதற இயேசு காற்றையும் கடலையும் கடிக்கிறார். அங்கே பேரமைதி உண்டாகிறது. சீடர்கள், இவர் யார்? என்னே இவரது வலிமை என்று வாயிலே கை வைத்து வியந்து நிற்கிறார்கள். இயேசுவோ ஏன் இந்தப் பயம். உங்கள் விசுவாசம் எங்கே? என்று கடிந்துகொண்டார்.

ஆண்டவர் இயேசு சொன்னார்: "இரையாதே சும்மா இரு ; காற்று நின்றது. பேரமைதி உண்டாயிற்று.''

அன்று இறந்த லாசரை நோக்கி வெளியே வா என்றார், வந்தான் அல்லவா!

உலகத்தின் ஆரம்பத்திலே இறைவன் ஒளி உண்டாகும் என்றார். ஒளி உண்டாயிற்று.

நான்கு நிலைகள் :

 
1. மாலைப் பொழுதில் அக்கரைக்குப் போவோம் என்றார்.
2. இருட்டு. அலைகள் எழுந்ததால் கண்டுகொள்ள முடியாத நிலை. பகல் நேரத்தில் போய் இருக்கலாமே! ஏன் இந்த இரவுப் பயணம்? இதேபோல் நாம் காலத்தைக் கணக்கிடுவ தில்லையா? ஒருவர் சொன்னார்: சுவாமி இந்த 20 - ஆம்  திருச்சபைக் கெட்டுவிட்டது என்று. நான் அவரைப் பார்த்து நீ 18, 19-ம் நூற்றாண்டில் வாழ்ந்தீரா என்று கேட்டேன். பதில் இல்லை.
3.கடலில் சென்ற படகு அங்கே அலைகளால் அலைமோத தண்ணீர் உள்ளே பாய, ஐயோ நாங்கள் மடியப் போகின்றோம் என்று அபயக் குரல் எழுப்புகிறார்கள் சீடர்கள்.

அதேபோல் இன்றைய உலகில் திருச்சபை கெட்டுவிட்டது. குருக்கள் சரியில்லை , கன்னியர் சரியில்லை , இவன் சரியில்லை . அவன் சரியில்லை . ஆம் உண்மைதான். ஆனால் நீ சரியாக இருக்கிறாயா? ஏதோ திருச்சபை கெட்டுவிட்டதாகவும், ஆவியானவர் ஏதோ ஓய்வு எடுத்துக் கொண்டிருப்பது போலவும், இயேசு தூங்குவது போலவும் நினைப்பவர் பலர் உண்டு.

உலகம் முடிவுவரை உங்களோடு எந்நாளும் இருக்கிறேன் (மத். 28:20) என்றாரே இயேசு. இந்தப் பாறையின் மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். நரகத்தின் வாயில்கள் மேற்கொள்ளா என்றாரே (மத். 16:18).

ஆலமரத்தின் அடியிலே துண்டு விரித்துப் படுத்திருந்த வியாபாரி, ஆலமரமோ பெரிது. அதன் விதையோ சிறிது. இது கூடவா இறைவனுக்குத் தெரியாது. இந்தப் பெரிய மரத்திற்கு ஏற்ற விதையாக உண்டாக்கி இருக்க வேண்டாமா? என்று சொன்னான். அதன்பின் அயர்ந்து தூங்கினான். பழம் அவன் கண்ணில் விழ, விழித்தான். ஆம் கடவுளின் ஞானம் அளவு கடந்தது. பெரிய பழமாக இருந்திருந்தால் என் நிலை என்னவாயிருக்கும்! என்றான்.

உங்கள் விசுவாசம் எங்கே? என்று கேட்கிறார் சீடர்களைப் பார்த்து. ஏனெனில் ஐந்து அப்பங்கள் கொண்ட புதுமையைக் கண்டவர்கள், கானாவூரில் தண்ணீரைத் திராட்சை இரசமாக மாற்றியதைக் கண்டவர்கள், 38 ஆண்டுகளாக ஆட்டுக் குளத்தில் நடக்காத மனிதனை நடக்க வைத்தது, விதவையின் மகனுக்கு உயிர்கொடுத்த நிகழ்ச்சி இவையெல்லாம் கண்ட சீடர்கள், இயேசு இந்தக் கடலில் மூழ்கி சாகமாட்டார் என்பதை உணர முடியவில்லையே!

நமது வாழ்வில் நம் விசுவாசம் எந்த நிலையில் உள்ளது? ஒரு சிறு துன்பம், நோய் வந்தால் எங்கேயோ ஓடுகிறோம்! நம் விசுவாசம் எங்கே? எப்படியெல்லாம் புலம்புகிறோம்!

உங்கள் கவலைகள் அனைத்தையும் அவர் மேல் சுமத்தி விடுங்கள். உங்கள் மீது அவருக்கு அக்கறை உண்டு. (1 பேதுரு 5:7).

4. ஏனெனில் நம் கண்களுக்கு நீ விலையேறப் பெற்றவன். மதிப்புக்குரியவன். உன்மேல் மிகுந்த அன்பு கொண்டோம் (எசாயா 43:4).

இவர் யார்? என்று வியந்து கேட்டார்கள். நீர் யார் என்று கேட்க துணிவில்லை. சமமானவரைத் தனக்குக் கீழ்ப்பட்டவனை பார்த்துதான் ஒருவன் நீ யார்? என்று கேட்பான். ஆனால் இங்கே துணிவற்ற நிலையில் இவர் யாராக இருக்கலாம் என்று வியந்த காட்சி. உங்களையும் என்னையும் பார்த்து, இவர் யாராக இருக்கலாம், என்னே இவரிடம் உள்ள வல்லமை என்று சொல்வார்களா?

கதை:


ஒரு தோட்டத் தொழிலாளி தான் பயிரிட்ட தோட்டத்தில் ஒரு செடியின் பூவை விரும்புகிறான். தினமும் அதைப் பார்த்து ரசித்தான். ஆனால் ஒரு நாள் அந்தப் பூவைக் காணோம். வந்தது எரிச்சல், கோபம் தோட்டக்காரனுக்கு. ஆனால் தோட்டத்தின் உரிமையாளர் நான்தான் அந்தப் பூவைக் கொய்து கொண்டேன் என்றார். ஆம் இயேசு கிறிஸ்து உலகத்திற்குச் சொந்தமானவர். சில நேரங்களில் நம்மிடத்தில் சிலவற்றைக் கேட்கலாம், எதிர்பார்க்கலாம். துன்பத்தைத் தரலாம். நாம் கொடுக்கத் தயாராக இருக்கிறோமா?


 



மகிழ்ச்சியூட்டும் மறையுரைகள் -குடந்தை ஆயர் F. அந்தோனிசாமி


நம்புவோம் நலம் பெறுவோம் புயலோடு துவங்கி புயலோடு முடிகின்ற வாழ்க்கை நமது வாழ்க்கை ! புயல் என்றால் துன்பம், துயரம், சோதனை, வேதனை, விபத்து, ஆபத்து!

குழந்தை பிறக்கின்றது! மூச்சுத் திணறலால் அழுகின்றது! கடைசி நேரம்! அங்கேயும் மூச்சுவிட முடியாமல் மனிதன் அழுகின்றான்!

வளர்ந்த குழந்தை பள்ளிக்கூடம் செல்லும் முதல் நாள் ! அங்கே ஒரு புயல்! மீண்டும் அழுகைப் புயல்!

வளர்ச்சி அடைந்த இளைஞன் : வெட்டவெயில்! பட்டப்பகல்! என் வாழ்க்கையோ இருட்டறையில்! என்கின்றான்! இளம்பெண்ணோ : பல்லவி இல்லாமல் பாடுகின்றேன்! பாதை இல்லாமல் ஓடுகின்றேன்! ஊமைக் காற்றாய் வீசுகின்றேன்! உறங்கும்போது பேசுகின்றேன் என்கின்றாள்!

இளமை இல்லறத்தையோ, துறவறத்தையோ, தனியறத்தையோ, தேடுகின்றது! பெரும்பாலானோர் திருமணம் செய்துகொள்கின்றார்கள்!

திருமண வீட்டில் அழுத மணமகளைச் சுட்டிக்காட்டி சிறுவன் ஒருவன் அவனுடைய தாயிடம், ஏம்மா பொண்ணு அழுவுது? என்றான். அதற்குத் தாய், அது ஆனந்தக் கண்ணீர் கண்ணா என்றாள். அதற்குச் சிறுவன், ஏம்மா மாப்பிள்ளை அழலே? என்று கேட்டான். அதற்குத் தாய், அவரு இனிமேதாண்டா அழுவாரு என்றாள்.

கணவன் மனைவியைப் பார்த்து, சொர்க்கத்திலே கணவன், மனைவி சொந்தம் இருக்காதாமே! என்றான். அதற்கு மனைவி, அதனாலேதான் அதை சொர்க்கம்னு அழைக்கிறாங்க என்றாள்.

வீட்டுக்குள் வீசும் புயல் நாட்டுக்குள்ளும் எதிரொலிக்கின்றது.

இல்லாமை, கல்லாமை, அறியாமை போன்ற எல்லாவிதமான புயல்களிலிருந்தும் விடுபட்டு நாம் அமைதியான வாழ்க்கை வாழ வழியே இல்லையா?
ஏன் இல்லை? இருக்கின்றது வழி! உங்கள் நம்பிக்கை நிறைந்த கண்களை காற்றையும், கடலையும் அடக்கிய இயேசுவின் பக்கம் திருப்புங்கள் என்கின்றது இன்றைய நற்செய்தி.

இந்த உலகம் முழுவதும் இறைவன் கையில் (முதல் வாசகம்) (திபா 107:28-29) உள்ளது. அவரின்றி எதுவும் இந்த உலகத்தில் நடக்காது. இப்படிப்பட்ட இறைவன் தன் மகன் இயேசு வழியாக இந்த உலகத்தின் மீது அவரது பேரன்பைப் பொழிந்துகொண்டிருக்கின்றார். (இரண்டாம் வாசகம்). நாம் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே!
இயேசுவின் ஆற்றல் மீது. வல்லமை மீது, சக்தி மீது நாம் முழு நம்பிக்கை வைக்க வேண்டும்.

பிறவியிலிருந்து பார்வையற்றவர்களின் வாழ்க்கையில் வீசிய நோய் என்னும் புயல் (மத் 9:27-31) இயேசுவின் மீது நம்பிக்கை வைத்ததால் ஓய்ந்தது.
இயேசுவின் மீது நம்பிக்கை வைத்த பாவியொருத்தியின் வாழ்க்கையில் வீசிய பாவம் என்னும் புயல் ஓய்ந்தது (லூக் 7:36-50).
இயேசுவின் மீது நம்பிக்கை வைத்த மார்த்தா, மரியா வாழ்க்கையில் வீசிய மரணம் என்னும் புயல் ஓய்ந்தது (யோவா 11:1-44).
எந்தப் புயலாலும் இயேசுவை எதிர்த்து நிற்க முடியவில்லை!
ஆகவே நாமும் அவரை நம்புவோம் ; நாளும் நலம் பெறுவோம்!

மேலும் அறிவோம் :
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார் (குறள் : 3).
பொருள் :
அன்பால் இறைவனை நினைந்து போற்றுபவர் உள்ளமாகிய தாமரையில் வீற்றிருப்பவன் இறைவன். அந்த இறைவன் திருவடிகளைப் பின்பற்றி, நல்ல நெறியில் செல்வோர் பூவுலகில் நெடுங்காலம் புகழுடன் வாழ்வர்.

மறையுரை மொட்டுக்கள் -அருள்பணி Y. இருதயராஜ்


கணக்குப் பாடத்திற்கும் வரலாற்றுப் பாடத்திற்கும் இடையே உள்ள வேறுபாடு என்ன? என்று ஒரு மாணவனை ஆசிரியர் கேட்டதற்கு அவன் கூறிய பதில்; "கணக்குப் பாட வகுப்பில் விட்டுவிட்டுத் தூங்குவேன், வரலாற்றுப் பாட வகுப்பில் விடாமல் தாங்குவேன்," ஆம், வாழ்க்கையில் சிலர் விட்டுவிட்டுத் தாங்குகிறார்கள்; வேறு சிலர் விடாமல் தூங்குகின்றனர், மனிதருடைய வாழ்வு தாக்கத்தில் பாதி, ஏக்கத்தில் பாதியாகக் கழிகிறது.
மனிதர் தூங்கினால் பரவாயில்லை ; ஆனால் கடவுள் தூங்கலாமா? இன்றைய நற்செய்தியில் இயேசுவும் அவர் சீடர்களும் சென்ற படகு கடல் கொந்தளிப்பால் அலைக்கழிக்கப்பட்டு, சீடர்கள் சாவின் பயத்தில் இருக்கும் வேளையிலும் கிறிஸ்து படகில் நிம்மதியாகத் தூங்கிக் கொண்டிருக்கிறார். சீடர்கள் அவரை எழுப்பி விடுகின்றனர்.
கடவுள் தூங்குவாரா ? பேருந்தில் நடத்துனர் தூங்கினால் பயணிகள் எவரும் பயணச் சீட்டு வாங்கமாட்டார்கள்; ஆனால் ஓட்டுனர் தாங்கினால் அனைவரும் பயணச்சீட்டு வாங்கிவிடுவார்கள்; எமலோகம் சென்றுவிடுவார்கள், அப்படியானால் கடவுள் தூங்கினால் இவ்வுலகின் கதி என்ன ஆகும், இக்கேள்விககுத் திருப்பா 121 கூறும் பதில் "இஸ்ரயே லைக் காக்கின்றவர் கண்ணயர்வதுமில்லை; உறங்குவதுமில்லை ." (திம 121:4). கடவுள் தூங்கினால் இவ்வுலகமே இயங்காது.

அடுத்து, கடவுளுக்கு மனிதர்மேல் கவலை உண்டா ? சீடர்கள் இயேசுவிடம், "போதகரே, சாகப்போகிறோமே! உமக்குக் கவலையில்லையா?" என்று கேட்கின்றனர், இதே கேள்வியை பலரும் கேட்கின்றனர். இக்கேள்விக்கு, பேதுரு கூறும் பதில்: "உங்கள் கவலைகளையெல்லாம் அவரிடம் விட்டுவிடுங்கள். ஏனெனில் அவர் உங்கள்மேல் கவலை கொண்டுள்ளார்” (1 பேது 5:7).

எங்கள்மேல் கவலையில்லையா? என்ற தம்மைக் கேட்ட சீடர்களிடம் இயேசு கேட்ட கேள்வி: "ஏன் அஞ்சுகிறீர்கள்? உங்களுக்கு இன்னும் நம்பிக்கை இல்லையா? (மாற் 4:40) என்று கேட்கிறார். கடவுளுக்கு நம்மேல் அக்கறை உண்டு. ஆனால் நமக்குத்தான் கடவுள் மேல் நம்பிக்கையில்லை. கடவுளிடம் நமக்கு முழு நம்பிக்கை இருக்க வேண்டும், பிள்ளைக்குரிய நம்பிக்கை இருக்க வேண்டும்.

'காசாபியான்கா' என்ற சிறுவனைப் பற்றிய ஓர் ஆங்கிலக் கவிதையுண்டு. அதன் சுருக்கம் வருமாறு: பிரஞ்சு கப்பல் ஒன்று கடலில் பயணம் செய்து கொண்டிருந்தபோது, அக்கப்பல் திடீரென்று தீப்பிடித்துக் கொள்ள, பயணிகள் உயிர்காக்கும் கருவியாகிய "லைப் போட்" மூலம் கரைக்குச் செல்ல, 'காசாபியான்கா' கப்பலின் மேல் தட்டில் கவலையின்றி விளையாடிக் கொண்டிருக்கிறான், அவன் கூறியது "என் அப்பா இக்கப்பலின் மாலுமி; எனக்கு எந்த ஆபத்தும் வராது." இதுதான் பிள்ளைக்குரிய நம்பிக்கை.
அஞ்சி அஞ்சிச் சாகும் நமக்குக் கடவுள் கொடுக்கும் துணிவு: *அஞ்சாதே! நான் உன்னோடு இருக்கிறேன், கடலில் நடந்தாலும் நீ மூழ்கிப் போகமாட்டாய்; தீயும் உன்னைச் சுட்டெரிக்காது" (எசா 43:1-2). எனவே, நமக்கு இருக்க வேண்டிய மனநிலை; "ஆண்டவரே என் ஒளி; அவரே என் மீட்பு: யாருக்கு நான் அஞ்ச வேண்டும்? ஆண்டவரே என் உயிருக்கு அடைக்கலம், யாருக்கு நான் அஞ்சி நடுங்க வேண்டும் ?" (திபா 27:1).

அதே நேரம், கடவுள் மனிதர்கள் வழியாகத்தான் நமக்கு உதவி செய்கிறார், அவைகளைப் பெறாமல் நாம் துன்புற்றால், அது கடவுளைச் சோதிப்பதாகும், ஓர் ஊரிலே பேய்மழை பெய்து ஒரு கைம்பெண் வீட்டைச் சூழ்ந்து கொண்டது. அவரை மீட்பதற்காக படகோட்டி இருமுறை முன்வந்தும் அப்பெண், "கடவுள் என்னைக் காப்பாற்றுவார்" என்று கூறி படகில் ஏற மறுத்துவிட்டார், வெள்ளம் உயர உயர, அவர் வீட்டு மாடியில் நின்றார். சிறிய வானவூர்தி ஒன்று அவரைக் காப்பாற்ற முன்வந்தும் அப்பெண், "கடவுள் என்னைக் காப்பாற்றுவார்" என்று கூறி அதில் ஏற மறுத்துவிட்டார், வெள்ளம் அவர் தலைக்கு மேல் செல்ல, அவர் இறந்து விண்ணாகம் சென்று பேதுருவிடம், "கடவுள் ஏன் என்னைக் காப்பாற்றவில்லை?" என்று கேட்டார், பேதுரு அவரிடம், "கடவுள் உன்களைக் காப்பாற்ற இரு முறை தொகையும், ஒருமுறை வானவூர்தியையும் அனுப்பினார், நீதான் அவற்றைப் பயன்படுத்தவில்லை" என்று கூறி அவரைக் கடிந்து கொண்டார். அக்கைம்பெண்ணின் நம்பிக்கை மூட நம்பிக்கை, அது உண்மையான நம்பிக்கை இல்லை.

கடவுளே, எங்கள்மேல் அக்கறை இல்லையா? இது போன்று கடவுளைக் கேள்வி கேட்க நமக்கு உரிமை உண்டா? இக்கேள்விக்கு முதல் வாசகம் பதில் தருகிறது. யோபு மகான் தனது உடைமை அனைத்தும் இழந்து, சுகத்தை இழந்த நிலையில், தன்னை நிரபராதி என்று வாதிட்டு கடவுளிடம் பல கேள்விகளைக் கேட்கிறார். ஆனால் கடவுள் அவரிடம் திருப்பிக் கேட்கிறார்; நான் கடலைப் படைத்து அதன் எல்லையை வரையறுத்தபோது நீ எங்கிருந்தாய்? தான் இயற்கைக்கு ஒழுங்குமுறைகளைப் படைத்தபோது நீ எங்கிருந்தாய்? என்று கேட்கிறார், யோபு தன் தவற்றை உணர்ந்து கடவுளிடம், "என் வாயைக் கையால் பொத்திக் கொள்வேன். இனிப் பேசவே மாட்டேன்" (யோபு 40:4-5) என்று கூறிக் கடவுளிடம் சரனடைகிறார்.

திருத்தூதர் பவுல் கூறுகிறார்: களிமண்பாண்டம் தன்னை உருவாக்கிய குயவனை எப்படி கேள்வி கேட்க முடியாதோ, அதுபோல, மனிதரும் கடவுளை கேள்விகேட்க முடியாது (உரோ 8:20); ஏனெனில் கடவுளுடைய செயல் முறைகள் ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டவை (உரோ 11:32), இருப்பினும், கடவுளிடம் ஒரு சில விளக்கம் தேடுவது குற்றமில்லை, மரியா கன்னியாக இருந்துபொடே மீட்பரின் தாயாக வேண்டும் என்று வானதுதம் கபிரியேல் கூறியபோது: "இது எப்படி நிகழும்? நான் கன்னி ஆயிற்றே" (லூக் 1:34) என்று விளக்கம் கேட்டார். வானததம் கொடுத்த விளக்கத்தை ஏற்று, கடவுளுடைய திட்டத்திற்குத் தன்னைக் கையளித்தார் மரியா.

புனித அகுஸ்தினார் மிகவும் அழகாகவும் ஆழமாகவும் கூறுகிறார்; “விளக்கம் பெறவேண்டும் என்பதற்காக நம்புகிறேன்; நம்பிக்கை பெறவேண்டும் என்பதற்காக விளக்கம் தேடுகிறேன், " முதலில் நம்புகிறோம்; அதன் பிறகு விளக்கம் தேடுகிறோம், தமது நம்பிக்கைக்கு விளக்கம் தருவதே இறையியல், "உங்கள் நம்பிக்கை குறித்து யாராவது விளக்கம் கேட்டால் விடையளிக்க நீங்கள் எப்பொழுதும் ஆயத்தமாய் இருங்கள்" (1 பேது 3:15). இக்கால அறிவியல் விடும் சவால்களைச் சமாளிக்கத் தேவையா என விவிலிய மறைக்கல்வி காலத்தின் கட்டாயமாகும். -

இன்றையப் பதிலுரைப் பாடல் கூறுகிறது: "புயல் காற்றையும் பூந்தென்றலாக்கினார், கடல் அலைகளும் ஓய்ந்துவிட்டன (திபா 107:29). கிறிஸ்து கடலைப் பார்த்துக் கூறினார்: "இரையாதே, அமைதியாயிரு" (மாற் 4:39). கடவுள் புயல் காற்றையும் பூந்தென்றலாக்க வல்லவர் என்று நம்புவோம். நமது வாழ்வில் அலைகள் ஓய்ந்து அமைதி குடிகொள்ளும்!


இக்குழந்தையின் பெயர் யோவான்! -அருள்பணி ஏசு கருணாநிதி


இயேசு, அன்னை கன்னி மரியாள் ஆகியோரைத் தொடர்ந்து திருஅவை வழிபாட்டு ஆண்டில் பிறந்தநாள் கொண்டாடப்படுவது திருமுழுக்கு யோவானுக்கு. 'மனிதராய்ப் பிறந்தவர்களுள் யோவானைவிடப் பெரியவர் ஒருவருமில்லை' (லூக் 7:28) என்று இயேசுவால் புகழாரம் சூட்டப்பட்ட இவரின் பிறப்பு இன்று நமக்குச் சொல்வது என்ன என்பதை நாம் இன்றைய நற்செய்தி வாசகத்தின் ஒரு வரியாக வருவதை எடுத்து அதையே மையக்கருத்தாக்கிக் கொள்வோம்: 'இக்குழந்தையின் பெயர் யோவான்!' வாய்பேச முடியாத தந்தை சக்கரியா சிலேட்டில் எழுதுகுச்சி கொண்டு எழுதிய முதல் மற்றும் இறுதிச் சொற்றொடர் இதுவே.

லூக்கா நற்செய்தியாளரின் நிகழ்வுகள் பதிவின்படி மனித வரலாற்றில் கடவுள் எழுதிய முதல் மூன்றுவார்த்தைகள்தாம் இவை: 'இக்குழந்தையின் பெயர் யோவான்!' கடவுள் இம்மூன்று வார்த்தைகளை எழுதுவதற்கு முன் சமூகமும் மூன்று வார்த்தைகளை எழுதி வைத்திருந்தது: 'இவர்களுக்குக் குழந்தை இல்லை!' 'இவர்களுக்குக் குழந்தை இல்லை' என்னும் மூன்று வார்த்தைகளை, 'இக்குழந்தையின் பெயர் யோவான்' என அழித்து எழுதுகின்றார் கடவுள். 'இல்லை' என்ற இடத்தில் 'கடவுளின் அருள்' பொங்கி வருகிறது.

நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் இந்தக் காலம் 'செயற்கை கருத்தரித்தல் காலம்' என்று சொல்லலாம். சில ஆண்டுகளுக்கு முன் வெறும் ஆராய்ச்சி வடிவத்திலும், இலைமறை காயாகவும் ஒளிந்திருந்த செயற்கை கருத்தரித்தல் இன்று மூலைக்கு மூலை மருத்துவமனைகளாக, விளம்பரப் பதாகைகளாக மண்டிக்கிடக்கின்றன. தமிழகத்தில் 10க்கு 4 குழந்தைகள் 'செயற்கை கருத்தரித்தல் வழியாக' பிறந்தவை என்று சொல்லப்படுகின்றன. குழந்தை இல்லாதவர்களுக்கு அல்லது இயலாதவர்களுக்கு இது அறிவியலின் கொடை என்றாலும், இவ்வகை கருத்தரித்தலில் இருக்கின்ற செயற்கைத்தனமும், தாய்-சேய், தந்தை-செய் அந்நியமயமாதலும் ஏற்றுக்கொள்ளத்தக்கவை அல்ல. 'பிள்ளைகள், ஆண்டவர் அருளும் செல்வம். மக்கட்பேறு, அவர் அளிக்கும் பரிசில்' (திபா 127:3) என்பதுதான் விவிலிய மரபின் புரிதலாக இருக்கிறது. குழந்தைப்பேறு இல்லாத சக்கரியாவும், எலிசபெத்தும் குழந்தைப் பேறு அடைகின்றனர்.

திருமுழுக்கு யோவானின் பிறப்பு நிகழ்வு என்பது முதல் ஏற்பாட்டின் 'மலடி பிள்ளைப்பேறு அடைதல்' என்னும் இலக்கிய யுக்தியைப் பின்பற்றியே அமைந்திருக்கிறது. நீதித்தலைவர் சிம்சோனின் பிறப்பு, இறைவாக்கினர் சாமுவேலின் பிறப்பு போன்ற பிறப்பு நிகழ்வுகளின் பின்புலத்தில் உருவானதே 'திருமுழுக்கு யோவான் கதையாடல்' என்பது விவிலிய ஆசிரியர்களின் கருத்து. இந்த யுக்தியின்படி, 'ஒருவர் பிள்ளைப்பேறு இல்லாமல் இருப்பார். சுற்றத்தார் அவரைக் கேலி பேசுவர். அவர் கடவுளிடம் முறையிடுவார். கடவுள் அவரின் விண்ணப்பத்தைக் கேட்பார். கருவுற இயலாதவர் கருத்தாங்கி குழந்தை பெறுவார். அந்தக் குழந்தை மீண்டும் கடவுளுக்கே அர்ப்பணம் செய்யப்படும்' - இந்த ஃபார்முலாவை நாம் சிம்சோன், சாமுவேல், திருமுழுக்கு யோவான் கதையாடல்களில் பார்க்கிறோம். இந்தப் பின்புலத்தில் பார்த்தால் திருமுழுக்கு யோவானின் பிறப்பு என்பது விவிலிய ஆசிரியரின் கற்பனைப் படைப்பு என்று நாம் சுருக்கிவிட வாய்ப்பு இருக்கிறது. இங்கே ஆசிரியர் தன் கதையாடல் வழியாக எதைச் சொல்ல விரும்புகிறார் என்பதை நாம் கவனித்தல் அவசியம்.

குழந்தையற்று இருந்த சக்கரியாவும், எலிசபெத்தும் குழந்தை பெற்றெடுக்கின்றனர்.
'இல்லை' என்ற நிலை மாறி, 'இருக்கு' என்ற நிலை உருவாகிறது.
ஊராரின் கேலிப்பேச்சு அடங்குகிறது.
சுற்றத்தாரின் பார்வையில் எலிசபெத்து உயர்த்தப்படுகிறார்.
அழுகை மறைந்து மகிழ்ச்சி பிறக்கிறது.
மூடியிருந்த வாய் கட்டவிழ்க்கப்படுகிறது.

திருமுழுக்கு யோவானின் பிறப்பை நாம் மனித பார்வையில் பார்த்தோமென்றால் மேற்காணும் சிந்தனைகள் நம்மில் எழுகின்றன. ஆனால், கடவுளின் பார்வையில் திருமுழுக்கு யோவானி; பிறப்பு இவற்றையெல்லாம் கடந்த செய்தியைக் கொண்டுவருகிறது. அது என்ன? 'இக்குழந்தையின் பெயர் யோவான்'

இதை நாம் எப்படி புரிந்துகொள்வது?

எலிசபெத்தின் சுற்றத்தார் தந்தையின் பெயரான 'செக்கரியா' என்ற பெயரைக் குழந்தைக்குச் சூட்ட நினைக்கின்றனர். (எலிசபெத்தும் இதற்கு மறுப்பு தெரிவிப்பது ஆச்சர்யமாக இருக்கிறது. 'யோவான்' என்ற பெயரை சக்கரியா எலிசபெத்துக்கு எப்படிச் சொல்லியிருப்பார்?) 'செக்கரியா' என்றால் 'ஆண்டவர் நினைகூறுகின்றார்' அல்லது 'ஆண்டவர் நினைவுகூர்ந்தார்' என்பது பொருள். இந்தப் பெயரை எலிசபெத்து மறுக்கக் காரணம் 'ஆண்டவர் நினைவுகூர்வதோடு' நில்லாமல் 'ஆண்டவர் செயலாற்றினார்' என்று அவர் உணர்ந்ததே. 'இன்று மாலை நான் மாத்திரை எடுக்க வேண்டும்' என்பது 'நினைவுகூர்தல்' என்றால், 'இன்று மாலை நான் மாத்திரை எடுப்பது' செயல். ஆக, கடவுள் நினைவுகூர்பவர் மட்டுமல்ல. மாறாக, அவர் செயலாற்றுபவர். அவரின் செயல் எப்படி இருக்கிறது? 'யோவான்' என்ற பெயரில் இக்கேள்விக்கான பதில் இருக்கிறது.

'யோவான்' என்றால் 'ஆண்டவர் இரக்கம் காட்டினர்' அல்லது 'ஆண்டவர் இரக்கமுடையவர்' அல்லது 'ஆண்டவர் இரங்கினார்' என்பது பொருள். 'ஹனான்' என்றால் வயிறு. இரக்கம், கனிவு, பரிவு போன்ற உணர்வுகள் வயிற்றில் பிறப்பதாக எண்ணியது எபிரேய இலக்கியம். நம் உடலில் நாம் குனிந்து பார்க்கும்போது நம் கண்களில் தெரிவது வயிறு. ஆக, 'கடவுள் மனுக்குலத்தின்மேல் குனிந்து பார்க்கும்போது அந்த வயிற்றில் பிறப்பது இரக்கம்.' விவிலிய எடுத்துக்காட்டுக்களிலும் இதைப் பார்க்கலாம். நல்ல சமாரியன் அடிபட்டுக் கிடந்தவனைக் 'குனிந்து பார்க்கிறான்' - 'இரக்கம் பிறக்கிறது.' ஊதாரி மகன் எடுத்துக்காட்டில் தந்தை தன் இளைய மகனைக் 'குனிந்து பார்க்கிறார்' - 'இரக்கம் பிறக்கிறது.'

கடவுள் குனிந்து பார்த்தல் கடவுளுக்குக் தாழ்ச்சி. ஆகையால்தான், தாழ்ச்சி என்ற மதிப்பீட்டை தன் மேலாடையாக அணிந்துகொள்கிறார் யோவான். இதைத்தான் இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். திப 13:22-26) தூய பவுலின் போதனையின் ஒரு பகுதியாக நாம் பார்க்கிறோம்: 'நான் யார் என நீங்கள் நினைக்கிறீர்களோ அவரல்ல நான். இதோ எனக்குப்பின் ஒருவர் வருகிறார். அவருடைய மிதியடிகளை அவிழ்க்கவும் எனக்குத் தகுதியில்லை.'

இரண்டாவதாக, சக்கரியாவின் வாய் கட்டவிழ்வதிலும் ஒரு உருவகம் இருப்பதை நாம் பார்க்கிறோம். 'இக்குழந்தையின் பெயர் யோவான்' என்று சக்கரியா எழுதியவுடன், அவரின் நா கட்டவிழ்கிறது. இங்கே கட்டவிழ்வது சக்கரியாவின் நா மட்டுமல்ல. யோவானின் நாவும்தான். ஏனெனில் ஆண்டவரின் வருகைக்காக பாலைநிலத்தில் ஒலிக்கப்போகும் 'குரல்'தான் யோவான். தான் யோவான் என்ற பெயர் ஏற்கும்போதே தன் பணியும், வாழ்வும் என்ன என்பதை உணர்ந்துகொள்கிறார் யோவான். ஆக, 'இக்குழந்தையின் பெயர் யோவான்' என்பது சக்கரியா மற்றவர்களுக்குச் சொன்ன வார்த்தைகள் அல்ல. மாறாக, அவை குழந்தைக்குச் சொன்ன வார்த்தைகள். இவ்வாறாக, தன் பணியின் அழைப்பு பெயர்சூட்டும் விழாவில் பெறுகிறார் யோவான். வரவிருக்கும் மெசியா இன்றைய முதல்வாசகத்தில் (காண். எசா 49:1-6) முன்னுரைக்கும் இறைவாக்கினர் எசாயா, 'கருப்பையில் இருக்கும்போதே ஆண்டவர் என்னை அழைத்தார். என் தாய் வயிற்றில் இருக்கும்போதே என் பெயர் சொல்லிக் கூப்பிட்டார்' என்று சொல்வது இத்தகைய அழைப்பைத்தான். ஆண்டவரால் தெரிந்துகொள்ளப்பட்டவரின் மேலான நிலையை தொடர்ந்து இறைவாக்கினர் இப்படி எழுதுகிறார்:

'தம் கையின் நிழலால் என்னைப் பாதுகாத்தார்' - பேருந்துக்காக காத்திருக்கும் நிறுத்தத்தின் மேற்கூரை ஓட்டை வழியும் வரும் சூரியக் கதிர் தன் குழந்தையின் முகத்திற்கு நேரே விழும்போது அதைத் தடுக்க தன் உள்ளங்கையைக் குடையாக விரித்துக் குழந்தைக்கு நிழல்தரும் அன்னை போல. கொஞ்ச வெயில்கூட நம்மைச் சுட்டுவிடக்கூடாது என்பது கடவுளின் ஆதங்கமாக இருக்கிறது.

'என்னைப் பளபளபாக்கும் அம்பாக்கினார்' - பளபளப்பான அம்பு கூர்மையாக இருக்கும். தான் எதற்காக செய்யப்பட்டதோ அந்த வேலையைச் செய்து முடிக்கும். அந்த அம்பை அவர் 'அம்பறாத் தூணியில் மறைத்துக்கொண்டார்'. 'அம்பறாத் தூணி' என்பது அம்புகள் ஒன்றாக வைக்கப்பட்டு தோளில் தொங்கவிடப்படும் ஒரு நீள்குடுவை. எதிரியை இறுதியாகவும், ஒரேயடியாகவும் அழிக்கப் பயன்படும் அம்பு இங்கேதான் மறைத்துவைக்கப்படும். இவ்வாறாக, 'தேர்ந்தெடுக்கப்பட்டவரின் மதிப்பு' (காண். 49:3) இங்கே சொல்லப்படுகிறது.

இவ்வாறாக, கடவுளின் பார்வையில் திருமுழுக்கு யோவானின் பிறப்பு ஓர் அழைத்தல் நிகழ்வாகவும், தன் ஒரே மகனின் வருகைக்கான தயாரிப்பு நிகழ்வாகவும் இருக்கிறது.

இன்றைய பிறந்தநாள் நமக்குச் சொல்லும் வாழ்க்கைப் பாடங்கள் எவை?

'இவ்வுலகில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும், கடவுள் இந்த உலகை இன்னும் வெறுத்துவிடவில்லை' என்று காட்டுகிறது என்கிறார் தாகூர். திருமுழுக்கு யோவான் பிறந்தபோது, 'இக்குழந்தையின் பெயர் யோவான்' என்று சொல்லப்பட்டது. நீங்களும், நானும் பிறக்கும்போதும் 'இக்குழந்தையின் பெயர் ....' என்று சொல்லப்பட்டது. 'யோவான்' என்ற பெயர் உருவகமாக உங்களுக்கும், எனக்கும் பொருந்துகிறது. ஏனெனில் நீங்களும், நானும் இருக்கக் காரணம் 'கடவுளின் இரக்கமே.' நாம் நம் வாழ்வில் நகர்த்தும் ஒவ்வொரு தருணமும் அவரின் இரக்கத்தின் கொடையே.

1. ஆண்டவரின் கைவன்மை
'அக்குழந்தை ஆண்டவருடைய கைவன்மையைப் பெற்றிருந்தது' என்கிறார் லூக்கா. ஒரு அழகிய ஓவியத்தை அல்லது புத்தகத்தை அல்லது தோட்டத்தைப் பார்க்கும்போது, 'இது யாருடைய கைவண்ணம்?' என நாம் கேட்கின்றோம். உருவாக்குபவரின் கைவண்ணம் உருவாக்கப்பட்ட பொருளில் பதிகிறது. குறைகளுள்ள கைகளே நிறைவான பொருள்களைப் படைக்க முடிகிறது என்றால், குறைகளற்ற கடவுளின் கைகள் எவ்வளவு அழகான பொருளை உருவாக்கும்? 'ஆண்டவரின் கைவன்மை' யோவானோடு இருந்ததுபோல நம்மிடமும் இருக்கிறது. இதை நாம் இரண்டு வார்த்தைகளில் புரிந்துகொள்வோம்: முதலில், 'இலக்கு' ('goal'). 'இலக்கு' என்பது நாம் ஒவ்வொருவரும் நம் வாழ்வில் நாமே தேர்ந்துகொள்வது. நாம் செய்யும் பணிகள் பெரும்பாலும் நம்முடைய இலக்குகள் ஆகின்றன. 'நல்ல ஆசிரியராக இருப்பது,' 'நல்ல அருள்பணியாளராக துறவியாக இருப்பது,' 'நல்ல மருத்துவராக இருப்பது,' 'நல்ல மனையாளாக இருப்பது' என நாம் இலக்குகள் நிர்ணயம் செய்கிறோம். இந்த இலக்குகளை நோக்கி நாம் பயணம் செய்கிறோம். ஆனால், இலக்கையும் தாண்டிய ஒன்று இருக்கிறது. அதுதான் இரண்டாவது வார்த்தை: 'நோக்கம்' ('purpose'). இது கடவுளின் பார்வையில் நம் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பதைக் குறிக்கிறது. இந்த நோக்கத்தை நாம் 'அழைத்தல்' ('vocation') என்றும் சொல்லலாம். யோவான் தன் பிறப்பின் இலக்கையும், நோக்கத்தையும் அறிந்திருந்தார். பல நேரங்களில் நம் வாழ்க்கையில் நமக்கு இலக்கு தெளிவாக இருக்கும் அளவிற்கு நோக்கம் தெளிவாக இருப்பதில்லை. நோக்கம் தெளிவாக இருக்க வேண்டுமெனில் ஆண்டவரின் கைவன்மையை நான் உணர வேண்டும். ஆக, என்னோடு இருக்கும் ஆண்டரின் கைவன்மைக்கு நன்றி கூறவும், அவரின் கைவன்மையில் நான் தொடர்ந்து வழிநடத்தப்படவும் என்னை அழைக்கிறது யோவானின் பிறப்பு பெருவிழா.

2. மனவலிமை

நாம் குழந்தையாக இருக்கும்போது நம் உடல் வலுவற்று இருப்பதுபோல நம் மனமும் வலுவற்று இருக்கிறது. வளர வளர நாம் உண்ணும் உணவும், நாம் செய்யும் உடற்பயிற்சிகளும், மேற்கொள்ளும் உழைப்பும் நம் உடலுக்கு வலுசேர்க்கின்றன. அதுபோல நம் மனதை வலிமையாக்கவது நம் வாழ்வியல் அனுபவங்கள். மனம் வலிமையாவது என்பது நேர்முகமானது. ஆனால் மனம் கடினமாவது என்பது எதிர்மறையானது. விடுதலைப்பயண நூலில் எகிப்தில் பாரவோனின் மனம் கடினமாகிறது. கடினமாகும் மனம் கண்டிக்கப்பட வேண்டியது. மனவலிமை என்பதை நாம் உளத்திடம் என்று சொல்லலாம். அதாவது, 'ஆம் என்றால் ஆம் என்று சொல்லவும், இல்லை இல்லை என்றால் இல்லை' என்று சொல்லவும் தயங்காத பக்குவம்தான் மனவலிமை. காலையில் வைக்கும் 5 மணி அலார்முக்குக்கூட சரியா எழ முடியாத மனவலிமை கொண்டவன் நான் என்று சில நேரங்களில் என்னையே நினைத்ததுண்டு. யோவானின் இந்த மனவலிமையே அவரை ஏரோதிடம் நேருக்கு நேர் நின்று பேச துணிவைத் தருகிறது. இன்று நான் எந்த நேரங்களில் எல்லாம் மனவலிமை குன்றியுள்ளேன்?

3. பாலைநிலத்தில் வாழ்தல்

'ஒவ்வொன்றுக்கும் ஒரு காலம் உண்டு' என்பதை உணர்ந்தவர் திருமுழுக்கு யோவான். திடீர்னு வந்து திடீர்னு மறைய அவர் மின்மினிப்பூச்சி அல்ல. மாறாக, நின்று ஒளிரும் விண்மீன். ஆகையால்தான் தன்னையே பாலைநிலத்தில் மறைத்துக்கொள்கின்றார். இன்று சின்ன சின்ன விடயங்களுக்கெல்லாம் நாம் பதாகையைத் தூக்கிக்கொண்டு, 'இதுதான் நான்' என முன் நிற்கின்றோம். ஆனால், 'இது நானல்ல' என்று தெரிந்து வாழ்வதுதான் ஞானம். 'இது நானல்ல. எது நானோ அதுவரை நான் காத்திருக்கிறேன்' என்கிறார் யோவான். இன்று நம்மில் வேகமாக மறைந்துவருவது பொறுமை. ஒன்றைப் பார்த்தவுடன், 'இதுதான் அது' என்று சொல்லி முத்திரையிட்டு அதை மூடிவிடுகிறோம். நம் உள்ளத்தின் பாலைநிலம், வெறுமை, தனிமை, விரக்தி நம்மைத் தீண்டும்போது நாம் சினிமா, போதை, நண்பர்கள் என ஓடிப்போகின்றோம். ஆனால், பாலைநிலத்தின் வெறுமை, தனிமை, விரக்திதான் நாம் 'இதுவல்ல' என்பதை நமக்குக் காட்டுகிறது.

'இக்குழந்தையின் பெயர் யோவான்'

ஆம். அவர், நீங்கள், நான் என எல்லாரின் பெயரும் 'யோவான்'தான். 'ஆண்டவர் நமக்கு இரக்கம் காட்டியதால்' நாம் இன்று இருக்கிறோம். இந்த இருப்பிற்காக நன்றி கூறுகின்ற வேளையில் இந்த இருப்பில் இறைவனின் பெயரைப் பதிய வைப்போம்.

ஆண்டவரின் இரக்கம்தான் நான் என எண்ணும் நான், ஒருவர் மற்றவரை கொஞ்சம் குனிந்து இரக்கத்தோடு பார்த்தால் எத்துணை நலம்!





No comments:

Post a Comment