Wednesday 7 February 2018

பொதுக் கால 6-ஆம் ஞாயிறு

பொதுக் கால 6-ஆம் ஞாயிறு

லேவி 13:1-2, 44-46; 1 கொரி 10:31-11:1; மாற் 1:40-45


மகிழ்ச்சியூட்டும் மறையுரை - குடந்தை ஆயர் அந்தோணிசாமி

இயேசுவைப்போல வாழ முடியுமா? ஏழை எளியவரோடு தம்மையே ஐக்கியப்படுத்திக்கொண்டவர் இயேசு. ஏழ்மையிலே பிறந்து, ஏழ்மையிலே வாழ்ந்து, ஏழ்மையிலே இறந்தவர் இயேசு. அவர் பிறந்தபோது பிறப்பதற்கு இடமில்லை; வாழ்ந்தபோது தலைசாய்க்க இடமில்லை; அவர் இறந்தபோது அவருக்கென்று ஒரு சொந்தக் கல்லறை இல்லை! ஓர் ஏழைப்பங்காளனாகத் தம்மை அறிமுகப்படுத்திக் கொண்டவர் இயேசு (லூக் 4:16-22).

பணமில்லாதவர்கள் மட்டும் ஏழைகள் அல்ல! உடல் நலம் இல்லாதவர்களும் ஏழைகள்தான். இல்லை என்ற சொல்லுக்குச் சொந்தக்காரர்கள் அனைவரும் ஏழைகள்தான்! இதோ இன்றைய நற்செய்தியிலே உடல் அழகு இல்லாத ஒரே காரணத்திற்காக சமுதாயத்தைவிட்டுத் தள்ளிவைக்கப்பட்டிருந்த, அனைவராலும் புறக்கணிக்கப்பட்டிருந்த (முதல் வாசகம்) தொழுநோயாளிகளைத் தேடிச்சென்று அவர்களை இயேசு குணமாக்குவதைப் பார்க்கின்றோம்!

ஏழைகளின் மீதும், இல்லாதவர்கள் மீதும் இயேசுவுக்கு எப்பொழுதுமே தனிப் பிரியம்! இதை தெள்ளத்தெளிய அவர் மத்தேயு 25:30-41-இல் வெளிப்படுத்தியுள்ளார்.

இயேசுவிடமிருந்து வரம்பெற ஓர் அழகான, எளிய வழி அவர் வழியில் நடக்க முன்வருவதாகும்! கிறிஸ்துவைப் போல நம்மால் வாழமுடியுமா? இன்றைய இரண்டாம் வாசகத்தில் புனித பவுலடிகளார்: நான் கிறிஸ்துவைப்போல் நடப்பது போன்று நீங்களும் என்னைப்போல் நடங்கள் (1 கொரி 11:1) என்கின்றார். ஆக, கிறிஸ்துவைப்போல் வாழ்ந்தவர்கள் இந்த உலகத்திலே வாழ்ந்திருக்கின்றார்கள்!


அன்று மட்டும் அல்ல, இன்றும் கிறிஸ்துவின் மதிப்பீடுகளை தங்கள் வாழ்க்கையில் கடைப்பிடித்து, ஏழைகளோடு தங்களையே சங்கமமாக்கிக்கொள்ளும் உயர்ந்த மனிதர்கள் நம் நடுவே இல்லாமலில்லை!

இதோ ஓர் உண்மை நிகழ்வு!
பொள்ளாச்சியிலே இந்திய - சோவியத் நட்புறவு பற்றிய ஒரு பொதுக்கூட்டம் நடந்து கொண்டிருந்தது. அந்தக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்த தலைவர்களுக்குக் கூட்டத்தை நல்லமுறையில் நடத்தப் போதிய நிதி இல்லை. ஆகவே பி.எம்.சுப்ரமணியம் என்பவர் பேசியபோது, தோழர் மா.வேலாயுதம் துண்டு ஏந்தி வருவார். உங்களால் முடிந்த அளவு நிதி உதவி அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

திரு.மா.வேலாயுதம் அவர்களுக்கு நிதி வசூலிக்க ஒரு துண்டு தேவைப்பட்டது. மேடையில் இருந்தவர்களில் திரு .பி.எம். சுப்ரமணியத்திடம் மட்டும்தான் ஒரு துண்டு இருந்தது. ஆகவே மா.வேலாயுதம் அவர்கள் அவரிடம் சென்று துண்டைக் கொடுங்கள். நிதி வசூலித்துவிட்டு திருப்பித் தருகின்றேன் என்றார். பி.எம்.சுப்பிரமணியம் துண்டைக் கொடுக்க மறுத்துவிட்டார். பிறகு எப்படியோ ஒரு மஞ்சள் பையைக் கொண்டு நிதி வசூலைச் செய்தார் திரு.மா.வேலாயுதம்.
பொதுக்கூட்டம் முடிந்தது. திரு. பி.எம்.சுப்ரமணியம் திரு. மா.வேலாயுதத்தைப்  பக்கத்தில் அழைத்து, தோளில் போட்டிருந்த துண்டை எடுத்து, விரித்து உதறிக் காட்டினார். துண்டில் ஆயிரம் கண்கள். ஆம், அத்தனைக் கிழிசல்கள். அதைப் பார்த்தவரின் கண்கள் குளமாயின.
இன்று உலகில் பலகோடி மக்கள் வறுமைக்கோட்டிற்குக் கீழே வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள். தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் பட்டினியால் செத்துக்கொண்டிருக்கின்றார்கள்.

இன்று எய்ட்ஸால் பாதிக்கபட்டவர்களின் கண்களில் ஒன்று கங்கை, மற்றொன்று காவிரி! அவர்களை ஆற்றுவாருமில்லை, தேற்றுவாருமில்லை!
இயேசுவைப் போல வாழ நமது மனத்தை பதப்படுத்திக்கொள்வோம். பழுத்த தென்னங்கீற்றை தண்ணீர் பதப்படுத்துகின்றது. தூண்டில் கம்பை நெருப்பு பதப்படுத்துகின்றது.
ஆன்மிக வாழ்வைப் பொறுத்தவரையில் நமது மனத்தை பதப்படுத்தும் தெய்வீகத் தண்ணீர், தெய்வீக நெருப்பு, தெய்வீகக் காற்று தூய ஆவியார்.
தூய ஆவியாரே உண்மையான அன்பால் என்னை அருள்பொழிவு செய்தருளும்.

மேலும் அறிவோம் :
மனத்தான்ஆம் மாந்தர்க்(கு) உணர்ச்சி இனத்தான்ஆம்
இன்னான் எனப்படும் சொல் ( குறள் : 453).

பொருள் : மனிதர் ஒவ்வொருவருக்கும் தோன்றும் உணர்வு அவரவர் உள்ளத்தைச் சார்ந்து அமையும் ! ஆனால், அவர் தம் பண்பு அவர் பழகும் கூட்டத்தாரைச் சார்ந்ததாகவே விளங்கும்!





மறைமொட்டுகள் -அருள்தந்தை இருதயராஜ்


இளவரசி ஆலிசின் மகள் 'டிப்தீரியா" என்னும் தொண்டை அழற்சி நோயால் புழுவாகத் துடித்தாள், இந்நோய் ஒரு பயங்கரத் தொற்று நோய், எக்காரனாத்தை முன்னிட்டும் தன் மகளைக் கட்டிப் பிடிக்கவோ முத்தமிடவோ கூடாது என்று மருத்துவர் ஆலிசை எச்சரித்திருந்தார், ஆனால், ஆலிசின் மகள: மூச்சு விடமுடியாமல் திணறிக் கொண்டு, 'அம்மா, என்னைக் கட்டிப்பிடித்து முத்தம் கொடும்மா' என்று கதறி அழுதபோது, ஆலிசு மருத்துவரின் எச்சரிக்கையையும் மறந்து, தன் மகளைக் கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்தான், அத்நோய் அந்நேரமே அவரைத் தொற்றிக் கொள்ள ஒரு சில நாள்களில் ஆவிசு இறந்தார். அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்!

தொழுநோயாளிகளைத் தொடக்கூடாது என்ற சட்டத்தை மீறி இன்றைய நற்செய்தியில் கிறிஸ்து ஒரு தொழுநோயாளியைத் தொட்டுக் குணமளிக்கிறார். அவ்வாறே இரத்தப் போக்கினால் துன்புற்ற ஒருவர் தன்னைத் தொட்டுக் குணமடைய அவர் அனுமதித்தார் (மாற் 5:24- 20), கிறிஸ்து பாவிகளையும் பிணியாளர்களையும் தொட்டார், பாவிகளும் பிணியார்களும் அவரைத் தொட அனுமதித்தார், அவர் எவரையும் தீண்டத்தகாதவராகக் கருதவில்லை. அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்!

இக்காலத்தில் தொழுநோய் ஏறக்குறைய ஒழிக்கப்பட்டு விட்டது, தொழுநோயாளிகளுக்கு, மருத்துவ மனைகளும் புனர்வாழ்வு மையங்களும் உள்ளான, ஆனால் கிறிஸ்துவின் காலத்தில் தொழுநோய் ஒரு வியாதியாக மட்டுமல்ல, தீட்டாகக் கருதப்பட்டது, தொழு நோயாளிகள் ஊரிலிருந்து விலக்கி வைக்கப்பட்டார்; தீண்டத் தகாதவம்யாகக் கருதப்பட்டனர். ஆனால் கிறிஸ்து அவர்களை மனித நேயத்துடன் பார்க்கிறார். அவர்களும் இறைவனுடைய சாயலாகப் படைக்கப்பட்டவர்கள், மனித மாண்புக்குரியவர்கள் என்பதை வெளிப்படுத்தும் வண்ணம் அவர்களைத் தொட்டுக் குணமாக்கி, மீண்டும் மனித சமுதாயத்துடன் இணைக்கிறார்.

ஒருமுறை பள்ளி மாணவிகள் என்னிடம், 'காலாண்டுத் தேர்வு பாவம், அரையாண்டுத் தேர்வு குற்றம்: முழு ஆண்டுத் தேர்வு மனித நேயமற்ற செயல் என்றனர். ஆனால் உண்மையில், 'தீண்டாமை ஒரு பாவம்; தீண்டாமை ஒரு குற்றம்; தீண்டாமை மனித நேயமற்றச் செயல்,' இதை நாம் கொள்கை அளவில் ஏற்றுக் கொண்டாலும், நடைமுறையில் தீண்டாமை முற்றிலும் வேரறுக்கப்படவில்லை என்பது வேதனைக்குரியது,

ஓர் உணவகத்தில் தாழ்த்தப்பட்ட இனத்தவருக்காகத் தனிப்பட்ட "டம்ளர்கள்' இருந்தன, அங்கு வந்த தாழ்த்தப்பட்ட ஒருவர், "இவ்வுணவகத்திற்கு வரும் ஈக்கள் எல்லா டம்ளர்களிலும்' உரிமையுடன் உட்காருகின்றன. இந்த மக்களுக்கு இருக்கின்ற உரிமை கூட தாழ்த்தப் பட்டவர்களுக்கு இல்லையே'' என்று ஆதங்கப்பட்டார், பசுக்களைத் தெய்வமாகக் கருதும் இப்பாரதநாட்டில், தாழ்த்தப்பட்ட மக்கள் உயிருடன் தோலுரிக்கப் படுகின்றனர், மனிதக் கழிவைச் சாப்பிடும் இழிநிலைக்குத் தள்ளப்படுகின்றனர், நெஞ்சுப் பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட மானிடரை நிணைந்துவிட்டால்! -

தன் சிறிய மகனுடன் ஆலயத்திற்குச் சென்ற ஒரு தாய், அவனிடம் அங்கிருந்த சிலையைத் தொட்டுக் கும்பிடும்படி கேட்டபோது, அச் சிறுவன், 'அது சாமியில்லை களிமண் பொம்மை" என்றான். அம்மா கோபத்துடன் அவனைக் கன்னத்தில் அறைந்து, 'உன் வயசுக்கு மேலே பேசுற: அதுதான் நம்ப குலதெய்வம், தொட்டுக் கும்பிடு' என்றார். வேறுவழியின்றி அச்சிறுவன் அச்சிலையைத் தொட்டு வணங்கினான். ஆலயத்திலிருந்து வெளியே வந்தபோது அவனுடன் ஒரே வகுப்பில் படித்துக் கொண்டிருந்த 'நவீன்' என்ற பையனைப் பார்த்தவுடன் அவனுடன் விளையாடச் சென்றான். அம்மா அவனைப் பார்த்து, 'டேய் அவனுடன் விளையாடாதே; அவன் கீழ் சாதிப். பையன்; தீட்டு ஒட்டிக்கும்' என்றார், அதற்கு அவன், 'என்னம்மா களிமண் பொம்மையிலே சாமி இருக்குதுன்னு சொல்றே, மனிதனைத் தொடாதே என்று சொல்றே' என்று கேட்டான், நமது வழிபாட்டிற்கும் வாழ்க்கைக்கும் இடையேயுள்ள முரண்பாடுதான் இன்று பலர் கடவுளை மறுப்பதற்குக் காரணமாக உள்ளது.
ஏழைகளின் உடலிலும் இரத்தத்திலும் உள்ள கிறிஸ்துவை மதிக்காதவர் நற்கருணையிலுள்ள கிறிஸ்துவின் உடலையும் இரத்தத்தையும் மதிக்கமுடியாது.
கிறிஸ்துவே ஏழையிலே ஏழையாக, தொழுநோயாளியிலே தொழுநோயாளியாக இருக்கிறார், புனித பிரான்சிஸ் அசிசியார் ஒரு தொழுநோயாளியை ஆரத்தழுவி முத்தம் கொடுத்தபோது, அத்தொழுநோயாளியின் முகம் கிறிஸ்துவின் முகமாக மாறியதைக் கண்டார், தொழுநோயால் பீடிக்கப்பட்ட ஓர் இந்து பூசாரியை, அன்னை தெரசா தன் மடியில் வைத்து முத்தம் கொடுத்தபோது, அந்த அன்னையின் முகத்தில் காளி தேவதையைப் பார்த்தார் அத்தொழுநோயாளி!

மற்றவர்களை நாம் தொடவேண்டும்; மற்றவர்களும் தம்மைத் தொடவிட வேண்டும், நமது தொடுதலானது குண மளிக்கும் தொடுதலாக இருக்கவேண்டும். தீண்டத்தகாதவர்கள் என்று யாரும். நமது அகராதியில் இருக்கக்கூடாது. கிறிஸ்துவர்களுக்குத் தீண்டாமை ஒருபாவம் மட்டுமல்ல; அது ஒரு தெய்வ நிந்தனையுமாகும்.

உடலை அழுகச் செய்யும் தொழுநோயைவிட ஆன்மாவை அழுகச் செய்யும் பாவத் தொழுநோய் மிகவும் பயங்கரமானது. அதற்கு மருந்து என்ன? தொழுநோயாளியிடம், 'உம்மைக் குருவிடம் காட்டு' என்கிறார் கிறிஸ்து. ஆம், பாவத்தொழுநோயினின்று விடுதலைபெற குருவிடம் செல்ல வேண்டும், அதாவது ஒப்புரவு அருள் அடையாளத்தை அணுக வேண்டும். இக்காலத்தில் மக்கள் இந்த அருள் அடையாளத்தைத் தவிர்க்கின்றனர், உடலில் தொழுநோய் கண்ட இடத்தில் உணர்வு மழுங்கிவிடும், அவ்வாறே ஒப்புரவு அருள் அடையாளத்தை அணுகாதவர்களிடம் காலப்போக்கில் பாவ உணர்வு மழுங்கிவிடும்.

பல்வேறு வகையில் பாவமன்னிப்பு அடைய முடியும் என்றாலும், பாவ மன்னிப்பிற்காக இயேசு வழங்கியுள்ள சாதாரண வழி ஒப்புரவு அருள் அடையாளமாகும். 'எவருடைய பாவங்களை நீங்கள் மன்னிப்பீர்களோ அவை மன்னிக்கப்படும்' (யோவா 20:23). 'திருச்சபையில் தண்ணீரும் உண்டு; கண்ணீரும் உண்டு' (புனித அம்புரோஸ்), தண்ணீர் திருமுழுக்கையும், கண்ணீர் ஒப்புரவு அருள் அடையாளத்தையும் குறிக்கிறது,

போலியான காரணங்களைக் காட்டி ஒப்புரவு அருள் அடையாளத்தைத் தவிர்க்காமல், அதை அடிக்கடி அணுகுவோம். இந்த அருள் அடையாளத்தில் கிறிஸ்து நம்மைத் தொடுகிறார்; அன்புடன் அரவணைத்து முத்தமிடுகிறார், 'உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன' (லூக்கா 7:48) என்றும், 'அமைதியுடன் செல்க' (லூக் 7:50) என்றும் உறுதியளிக்கின்றார், உலகம் தர முடியாத அமைதியை அவர் நமக்கு வழங்குகிறார்.




தொழுநோயாளர் இருவர்
அருள்பணி ஏசு கருணாநிதி -மதுரை

'தொழுநோயாளர் ஒருவர்' என்று இன்றைய நற்செய்தி வாசகம் (காண். மாற்கு 1:40-45) தொடங்குகிறது. ஆனால், நற்செய்தி வாசகத்தில் இறுதிக்கு வரும்போது 'தொழுநோயாளர் இருவர்' என்று இன்றைய நற்செய்தி வாசகம் தொடங்கியிருக்க வேண்டும் எனத் தோன்றுகிறது.

யார் அந்த இரண்டாவது தொழுநோயாளர்?

நிற்க.

புத்தமதத்தில் 'போதி சத்துவா' என்ற கருதுகோள் உண்டு. 'போதி சத்துவா' என்பவர் ஏற்கனவே மீட்படைந்தவர். இவரின் பணி என்னவென்றால் மீட்படைய கஷ்டப்படுகின்ற ஆன்மாக்களுக்காக இவர் முயற்சி செய்து மீட்பைப் பெற்றுக்கொடுப்பார்.

மதுரை தமுக்கம் மைதானத்தில் சர்க்கஸ் போடுகிறார்கள் என வைத்துக்கொள்வோம். சர்க்கஸ் பார்க்க 500 ரூபாய் தேவை. என்னிடம் 500 ரூபாய் இல்லை. ஆனால் சர்க்கஸ் பார்க்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. ஆக, நான் கேட்டிற்கு முன் நின்று எட்டி எட்டி பார்க்கிறேன். என்னைப் பார்த்துக்கொண்டிருக்கின்ற 'போதி சத்துவா' என்ன செய்வார் தெரியுமா? தன்னிடம் இருக்கும் நிறைய 500 ரூபாய் நோட்டுக்களில் ஒன்றை எடுத்து என்னிடம் கொடுத்து டிக்கெட் எடுக்கச் சொல்லி உள்ளே அனுப்பிவிடுவார். என்னிடம் அல்லது எனக்காக கொடுப்பதால் 500 ரூபாய் அவரிடம் குறைவுபட்டாலும் அதை என் மீட்புக்காக செலவிடுவதால் அந்த செலவை பெரியதாக எடுத்துக்கொள்ளமாட்டார். இப்படி நிறைய பேருக்கு உதவி செய்தவுடன் தன் கடைசி 500 ரூபாயை வைத்து இவரும் சர்க்கஸ்க்குள் வந்துவிடுவார்.

இவ்வாறாக, அடுத்தவரின் நலனுக்காக தன் நலனை விட்டுக்கொடுக்கும் அல்லது தியாகம் செய்யும் நிலையின் பொருளை போதி சத்துவா நமக்கு உணர்த்துகிறார். புத்த மதத்தின் போதி சத்துவா தான் இறந்தபின்தான் மற்றவர்களுக்கு உதவி செய்ய முடியும். ஆனால், தான் வாழும்போதே அத்தகைய உதவியைச் செய்கிறார் என்பதை இன்றைய நற்செய்தி வாசகம் நமக்குச் சொல்கிறது.

'தொழுநோய்' என்ற வார்த்தையை மையமாக வைத்து இன்றைய முதல் மற்றும் மூன்றாம் வாசகங்கள் சுழல்கின்றன. 'தொழுநோய்' இன்று பூமித்தாயின் முகத்திலிருந்து முற்றிலம் துடைத்தெடுக்கப்பட்ட நோய் என்றாலும் இங்கொன்றும், அங்கொன்றும் சிலர் இந்த நோயினால் அவதிப்படுவதை நாம் பார்க்கிறோம். மருத்துவ வார்த்தைகளால் சொல்லப்போனால் இது ஒரு தோல் நோய். இந்தத் நோய் தோலின் அடுத்தடுத்த அடுக்குகளுக்குள் பரவி தொடு உணர்வு இல்லாமல்போகச் செய்கிறது. ஒருவர் மற்றவர்மேல் உள்ள தொடுதலால், அவர்கள் பயன்படுத்திய பொருள்களைப் பயன்படுத்துவதால் பரவக்கூடியது. இது பார்வை, கேட்கும்திறன் என அனைத்தின்மேலும் பாதிப்பை ஏற்படுத்தவல்லது. இதன் கனாகனத்தை நாம் 'ரத்தக்கண்ணீர்' திரைப்படத்தில் பார்க்கலாம்.

இன்றைய முதல் வாசகத்தில் (காண். லேவி 13:1-2,44-46) தொழுநோய் பிடித்தவர் செய்ய வேண்டியதும், தொழுநோய் பிடித்தவருக்கும் செய்ய வேண்டியது என்ன என்பதை மோசே ஆரோனுக்கு அறிவுறுத்துகின்றார். எதற்காக மோசே ஆரோனிடம் சொல்ல வேண்டும்? ஆரோன்தான் தலைமைக்குரு. இஸ்ரயேல் சமூக அமைப்பில் குரு தான் எல்லாம். மேலும், தூய்மை - தீட்டு என்றால் என்ன என்பதை தீர்மானித்து முன்வைப்பவரும் குருவே. தொழுநோய் வரக் காரணம் பாவம் என்ற சிந்தனை விவிலிய மரபில் இருந்தது.

தொழுநோய் பிடித்தவர் மூன்றுவகை அந்நியப்படுத்துதலை அனுபவிக்கின்றார்:

அ. தன்னிலிருந்து அந்நியப்படுதல்

தொழுநோய் பிடித்தவர் 'கிழிந்த ஆடை அணிந்து தலை வாராமல் மேலுதட்டை மறைத்துக்கொண்டு 'தீட்டு, தீட்டு' என்று கத்த வேண்டும். இவற்றில் ஏதாவது ஒன்றையாவது நம்மால் செய்ய முடியுமா? சட்டையில் சிறு பகுதி கிழிந்திருந்தாலே அதை உடனடியாக மாற்றவிட நினைக்கின்றோம். தலை வாராமல் நம்மால் இருக்க முடியுமா? தூங்கும்போது கூட நம் சிகை சரியாக இருக்கிறதா என்று கண்ணாடி முன் நின்று சரி செய்துகொள்கிறோம். 'நான் தீட்டு, நான் தீட்டு' என்று என்னால் கத்த முடியுமா? கண்டிப்பாக இல்லை. ஆக, இந்த மூன்று காரியங்களையும் செய்யும் தொழுநோய் பிடித்தவர் எந்த அளவிற்கு தன்னிலிருந்தே அந்நியப்படுத்தப்படுகின்றார்.

ஆ. குடும்பம், உறவினர்கள், நண்பர்களிடமிருந்து அந்நியப்படுதல்

'தீட்டுள்ள அவர் பாளையத்திற்கு வெளியே தனியாகக் குடியிருப்பார்' என்கிறார் மோசே. மோசேயின் இந்த அறிவுரையில் பிறர்மேல் கொண்டிருக்கின்ற அக்கறை இருந்தாலும், பாளையத்தில் குடியிருக்கும் அடுத்தவர்கள்மேல் உள்ள நலனின் அக்கறை இருந்தாலும், அவர் இவரை மற்றவர்களிடமிருந்து அந்நியப்படுத்துகிறார் என்பதை நாம் மறுக்க முடியாது. பாளையத்திற்கு வெளியே தனியாகவோ அல்லது தன்னைப்போல நோய்பிடித்தவர்களோடோதான் இவர் தன் வாழ்வைக் கழிக்க வேண்டும்.

இ. இறைவனிடமிருந்து அந்நியப்படுதல்

'அவர் நோய் அவர் தலையில் உள்ளது' என்கிறார் மோசே. தலை என்றால் என்னைப் பெற்றவர். வாழையடி வாழையாக அல்லது என் முன்னோர் மற்றும் பெற்றவர் செய்த பாவம் தொழுநோயாக மாறுகிறது. நாம் பேச்சுவழக்கில் ஒருவர் பாவம் செய்யும்போது, 'இப்படிச் செய்யாதே! ஒருநாள் இது உன் தலையில் விழும்!' என்று சாடுகின்றோம். தொழுநோய் பாவத்தின் விளைவு என்பதால் இறைவனிடமிருந்தும் அந்நியப்பட்டவராகின்றார் தொழுநோயாளர்.

இந்த மூன்றுவகை அந்நியப்படுத்துதல் அவசியம் என்பது இன்றைய முதல் வாசகம் அறிவுறுத்துகின்றது.

லேவியர் நூலில் உள்ள சட்டங்களும், விதிமுறைகளும், ஒழுங்குகளும் சரியாகப் பின்பற்றப்படுகின்றனவா என்று கண்களில் விளக்கெண்ணெய் ஊற்றிச் சுற்றிக்கொண்டிருந்த குருக்கள், மறைநூல் அறிஞர்கள், பரிசேயர்கள் வாழ்ந்த வந்த காலத்தில்தான் இன்றைய நற்செய்தி வாசகத்தின் நிகழ்வு நடந்தேறுகிறது:

தொழுநோயாளர் ஒருவர் இயேசுவிடம் வருகின்றார். 'தொழுநோயாளர் தன் உதடுகளை மறைத்துக்கொண்டு 'தீட்டு,' 'தீட்டு' எனக் கத்தவில்லை.' மாறாக, 'நீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும்' என்று கனிந்த குரலில் மொழிகின்றார். இந்த உரையாடலை வைத்துப் பார்க்கும்போது ஒருவேளை இயேசு தொழுநோயாளர்கள் தங்கியிருக்கும் பகுதியில் உலா வந்தாரோ என்று கேட்கத் தோன்றுகிறது. தொழுநோயாளர் உறைவிடப்பகுதிக்குதான் அவர் வந்திருக்க வேண்டும். ஏனெனில், குணமாக்குதலின் இறுதியில், 'நீர் போய் உம்மைக் குருவிடம் காட்டும்' என்று ஊருக்கு வெளியே இருந்த அவரை ஊருக்கு உள்ளே அனுப்புகின்றார்.

இயேசுவின் குணமாக்குதல் இரண்டு நிலைகளில் நடந்தேறுகிறது:

அ. அவரின் அந்நியப்படுதலிலிருந்து விடுதலை

'இயேசு அவர் மீது பரிவு கொண்டு தமது கையை நீட்டி அவரைத் தொட்டு' என பதிவு செய்கிறார் மாற்கு நற்செய்தியாளர். அவர்மீது கொண்ட பரிவால் இறைவனுக்கும் அவருக்கும் இடையே இருந்த அந்நியப்படுத்துதலிலிருந்தும், அவரை நோக்கி கையை நீட்டியதால் பிறருக்கும் அவருக்கும் இடையே இருந்த அந்நியப்படுத்துதலிலிருந்தும், அவரைத் தொட்டதால் அவர் தன்னிடமிருந்து அந்நியப்பட்டதிலிருந்தும் விடுவிக்கின்றார் இயேசு.

ஆ. தொழுநோயிலிருந்து விடுதலை

தொடர்ந்து, 'நான் விரும்புகிறேன். உமது நோய் நீங்குக!' என்று அவரது நோயிலிருந்து அவரை விடுவிக்கின்றார் இயேசு.

இயேசுவின் இந்தக் குணமாக்குதல் அவரின் உடல்நலத்தை மட்டுமல்லாமல், சமூகம் மற்றும் சமயம் அவர்கள்மேல் சுமத்தியிருந்த தேவையற்ற சுமைகளையும் இறக்கி வைப்பதாக இருக்கிறது.

விளைவு என்ன?

இயேசு தொழுநோயாளர் ஆக்கப்படுகின்றார். எப்படி?

தொழுநோய் குணமானவர் ஊருக்குள் சென்று எல்லாருக்கும் செய்தியை அறிவிக்க அந்த ஊர் மக்கள் இயேசுவைப் பாராட்டுவதற்குப் பதிலாக, 'ஓ நீ அவனைத் தொட்டு குணமாக்கினாயா?' என்று சொல்லி, இயேசுவை அந்நியப்படுத்துகின்றனர்.

முதல் தொழுநோயாளர் குணமடைந்தார்.

இரண்டாமவர் தொழுநோய் ஏற்றார்.

இந்த நிலையை இயேசுவால் எப்படி ஏற்றுக்கொள்ள முடிந்தது?

அதற்கான விடை இன்றைய இரண்டாம் வாசகத்தில் (1 கொரி 10:31-11:1) இருக்கிறது: 'நான் எனக்குப் பயன் தருவதை நாடாமல், பலரும் மீட்படையும்படி அவர்களுக்குப் பயன் தருவதையே நாடுகிறேன்.'

இயேசு தனக்குப் பயன்படுவதை நாடியிருந்தால் தொழுநோயாளர் உறைவிடத்திலிருந்தும், அவரின் பிரசன்னத்திலிருந்தும் விலகிச் சென்றிருப்பார். ஆனால், அவர் தன் பயன் நாடாது பிறர்பயன் நாடுகின்றார். அது தன் பயனுக்கு குறைவு ஏற்படுத்தினாலும்கூட.

இந்த மனநிலை நம்மில் வளர நாம் என்ன செய்ய வேண்டும்?

இயேசுவிடமிருந்த மூன்று பண்புகள் நமதாக வேண்டும்: 'பரிவு,' 'அருகில் செல்லுதல்,' 'தொடுதல்.'

இறுதியாக, இன்று தொழுநோய் நம்மிடமிருந்து துடைத்தெடுக்கப்பட்டாலும், நம்மை அறியாமலேயே தொழுநோயின் மறுஉருவங்கள் வலம் வருகின்றன: பாலியல் நோய், சாதியம், நிறப் பாகுபாடு, மொழிப் பாகுபாடு, மாற்றுக் கலாச்சாரம். இதில் என்னவொரு கொடுமை என்றால், இவர்களோடு நாம் வாழ்ந்து, பழகி, உணவு உண்டாலும்கூட ஏதோ ஒரு நிலையில் நான் இவர்களைவிட பெரியவராக, நல்லவராக, தூய்மையானவராக நினைத்துக்கொள்கிறேன். அனைத்திலும், அனைவருக்கும் உகந்தவனாய் நான் வாழ என்னில் தடையாக இருப்பது எது? அந்த நிலைக்கு நான் கடந்து செல்ல, இரண்டாம் தொழுநோயாளராய் நான் ஆக்கப்பட்டாலும், என்னிடம் துணிச்சல் குறைவுபடுவது ஏன்?







No comments:

Post a Comment