Sunday 21 January 2018

பொதுக் கால 4-ஆம் ஞாயிறு

பொதுக் கால 4-ஆம் ஞாயிறு

இச18:15-20: 1கொரி 7 - 32 -35; மாற்கு 1:21-28


சோதனைகளை வெல்லுவது எப்படி?

மகிழ்ச்சியூட்டும் மறையுரை - குடந்தை ஆயர் அந்தோணிசாமி


இன்றைய நற்செய்தி தீய ஆவியைப் பற்றி பேசுகின்றது.

ஒருமுறை கர்தினால் சுவெனென்ஸ் தலைமை தாங்கிய கூட்டமொன்றில் நான் கலந்துகொண்டேன். அந்தக் கூட்டத்திலே ஒருவர் எழுந்து, கர்தினால் அவர்களே, தீய ஆவிகள், பேய்கள் இருக்கின்றனவா? என்று கேட்டார். அதற்கு கர்தினால் அவர்கள். நான் தீய ஆவியைப் பார்த்ததில்லை; ஆனால் பாவத்தை எல்லா இடங்களிலும் பார்க்கின்றேன் என்றார். இதற்கு என்ன அர்த்தம்? எங்கே பாவமிருக்கின்றதோ, அங்கே பேயிருக்கின்றது: எங்கே பேயிருக்கின்றதோ அங்கே பாவமிருக்கின்றது.
தீய ஆவி இரண்டு பாவங்களைச் செய்ய நம்மைத் தூண்டும்: 1. நம்மை நமது அழைத்தலுக்கு எதிராகச் செயல்படத் தூண்டும். 2. உண்மையே உருவான தூய ஆவியாருக்கு எதிராகப் பொய் சொல்லத் தூண்டும்.
யூதாஸ் அப்பத்துண்டைப் பெற்றதும் சாத்தான் அவனுக்குள் நுழைந்தான். இயேசு அவனிடம், நீ செய்யவிருப்பதை விரைவில் செய் என்றார் (யோவா 13:27) என்றும், புனித பேதுரு, அனனியா, நீநிலத்தை விற்ற தொகையின் ஒரு பகுதியை உனக்கென்று வைத்துக்கொண்டு தூய ஆவியாரிடம் பொய் சொல்லும்படி சாத்தான் உன் உள்ளத்தை ஆட்கொண்டதேன்? என்று கேட்டார் (திப 5:3) என்றும் நற்செய்தியிலும், திருத்தூதர் பணிகளிலும் பழக்கின்றோம்.
இன்றைய இரண்டாம் வாசகத்தில் புனித பவுலடிகளார் கூறுவது போல சாத்தான் நமது மனத்தைப் பிளவுப்படுத்துவான். இன்றைய முதல் வாசகம் கூறுவதுபோல கடவுள் கட்டளையிடுவதைக் கேட்கவிடாமல் நம்மைத் தடுப்பான். தீய ஆவியின் சோதனைகளிலிருந்து நாம் விடுபட்டு வாழ வழி உண்டா?

நான் அமைதி தேடி ஒருமுறை ரிஷிகேஷ் சென்றிருந்தேன். அங்கே மூன்று வாரங்கள் தங்கியிருந்தேன். நான் தமிழகம் திரும்புவதற்கு முன்னால் ஒரு யோகியைச் சந்தித்தேன். அவரிடம் சோதனைகளை வெல்வது எப்படி? என்றேன். அதற்கு அவர், சோதனைகள் எல்லாருக்கும் வரும்
அந்தச் சோதனைகளை வெல்ல இரண்டு வழிகள் உள்ளன: 1. எல்லாம் வல்ல இறைவனின் அருளை வேண்டலாம். 2. உங்களது மறைநூல் - திருவிவிலியம் சொல்கின்றபடி வாழலாம்
என்றார்.
இன்றைய நற்செய்தியிலே இறைமகன் இயேசுவுக்குத் தீய ஆவி அடிபணிவதைப் பார்க்கின்றோம். ஆகவே நாம் தீய ஆவியால் சோதிக்கப்படும்போது இயேசுவின் அருளுதவியை நாடலாம்.
புனித பவுலடிகளார், மீட்பை தலைச்சீராகவும், கடவுளின் வார்த்தையைத்தூய ஆவிஅருளும்போர்வாளாகவும் எடுத்துக்கொள்ளுங்கள் என்கின்றார் (எபே 6:17). ஆக, இறைவார்த்தையைக் கையிலேந்தி சாத்தானோடு போர்தொடுத்து, சோதனைகளை வெல்லலாம்.

மேலும் அறிவோம் :

மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்த(து) ஒழித்து விடின் (குறள் : 280.)

பொருள் : உயர்ந்தோர் தவத்திற்குப் பொருந்தாதவை என்று விலக்கியவற்றை விட்டுவிட்டால், மொட்டையடித்தல், சடை வளர்த்தல் போன்ற புற வேடங்கள் தேவையற்றவை ஆகும்.

மறையுரைமெட்டுக்கள்

அருள்பணி .இருதயராஜ்

ஒரு மனைவி தன் கணவரிடமிருந்து மணமுறிவு கேட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார் அதற்கு அவர் கூறியிருந்த காரணம் அவருடைய கணவர் கடந்த மூன்று ஆண்டுகளாக அவருடன் பேசுவதில்லை. வழக்கை விசாரித்த நீதி அரசர் கணவரிடம், "உங்கள் மனைவியுடன் நீங்கள் ஏன் பேசுவதில்லை?" என்று கேட்டதற்கு அவர் "அவள் என்னைப் பேசவிட்டால்தானே காலை முதல் இரவு வரை அவளே பேசிக்கொண்டிருக்கிறாள்" என்றார்.

"உன் நாவு உன்னைச் செவிடமாக்கிவிடும்" என்று எச்சரிக்கின்றார் ஓர் அறிஞர் ஆம், பிறரைப் பேசவிடாமல் நாமே பேசிக்கொண்டிருந்தால், மற்றவர்கள் பேசுவது நம் காதில் விழாது. நாம் செவிடர்களாகிவிடுவோம். இன்றைய அருள்வாக்கு வழிபாடு கடவுளுடைய வார்த்தைக்குச் செவிமடுக்க நம்மை அழைக்கின்றது. இன்றைய முதல் வாசகத்தில் கடவுள் மோசேவுக்குக் கூறுகிறார்: "உன்னைப்போல் ஓர் இறைவாக்கினரை அவர்களுடைய சகோதரர்களினின்று நான் அவர்களுக்காக ஏற்படுத்துவேன் என் வார்த்தைகளை அவனுடைய வாயில் வைப்பேன். என் பெயரால் அவன் சொல்லும் வார்த்தைகளுக்குச் செவிகொடாதவனை நான் வேறுப்பேன்" (இச 13:18-19)

கிறிஸ்து தோற்ற மாற்றம் அடைந்தபோது தந்தையாகிய கடவுள் உலக மக்களுக்குக் கூறியது: "என் அன்பார்ந்த மைந்தர் இவரே. இவர் பொருட்டு நான் பூரிப்படைகிறேன். இவருக்குச் செவிசாயுங்கள்" (மத் 17:5). கிறிஸ்துவினுடைய வார்த்தைகளுக்கு நாம் செவிசாய்க்க வேண்டும். ஏனெனில் முற்காலத்தில் இறைவாக்கினர் வழியாகப் பேசிய கடவுள் இவ்விறுதி நாள்களில் தம் மகன் வாயிலாக நம்மிடம் பேசியுள்ளார் (எபி 1:1-2). இன்றைய நற்செய்தியில், மக்கள் கிறிஸ்துவின் போதனையைக் கேட்டு வியப்படைந்தனர். ஏனெனில் அவர் மறைநூல் அறிஞரைப் போலன்றி, அதிகாரத்தோடு அவர்களுக்குக் கற்பித்து வந்தார் (மாற் 1:22). அவருடைய போதனை அவருடைய போதனை அன்று அது அவருடைய தந்தையின் போதனை (யோவா 7:16).
ஞானம் பெறவேண்டுமென்றால், சீடர் குருவைக் கண்டு, அவருடைய வார்த்தையைக் கேட்டு, திரும்பத் திரும்ப அவருடைய பெயரை உச்சரித்து, அவருடைய உருவத்தையே என்றும் சிந்திக்க வேண்டும் என்கிறார் திருமூலர்

"தெளிவு குருவின் திருமேனி காண்டல் தெளிவு குருவின் திருநாமம் செப்பல்; தெளிவு குருவின் திருவார்ததைக் கேட்டல்: தெளிவு குருஉருவின் சிந்தித்தல்தானே"

பெத்தானியா மரியா, கிறிஸ்துவில் மிகச்சிறந்த சீடர், ஏனெனில், அவர் ஆண்டவருடைய காலடியில் அமர்ந்து அவர் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தார் (லூக் 10:39)

ஆன்றோர்களின், சான்றோர்களின் வார்த்தைகளைக் கேட்காதவர்களின் காதுகள் கேட்டாலும் அது செவிட்டுத் தன்மையுடையது என்கிறார் வள்ளுவர்.

"கேட்பினும் கேளாத்தகைலவே கேள்வியால்
தோட்கப்படாத செவி' (குறள் 418)

இஸ்ரயேல் மக்கள் தங்கள் பாலுறுப்புகளை விருத்தசேதனம் செய்வதில் குறியாக இருந்தனர். ஆனால், அவர்கள் கடவுளுடைய வார்த்தையைக் கேட்க காதையோ, கேட்ட வார்த்தையை கடைப்பிடிக்கத் தேவையான இதயத்தையோ விருத்தசேதனம் செய்யவில்லை. எனவேதான் ஸ்தேவான் அவர்களைப் பார்த்து, "திமிர்வாதம் பிடித்தவர்களே, இறைவார்த்தையைக் கேட்க மறுக்கும் செவியும் ஏற்க மறுக்கும் உள்ளமும் கொண்டவர்களே" (திப 7:51) என்று கூறி அவர்களை வன்மையாகக் கண்டனம் செய்தார்.

ஒரு தாய்க்கோழியிடம் கடவுள் கேட்டார். "நீ எங்கே போனாலும் உன் குஞ்சுகள் உன்னைப் பின்பற்றி வருகின்றன. ஆனால் மனிதர்கள் ஏன் என்னை அவ்வாறு பின்தொடர்வதில்லை. கடவுளிடம் தாய்க்கோழி கூறியது: "நீ உன் பிள்ளைகளை வளர்த்த இலட்சணம் அப்படி?" இது கசப்பான உண்மை. இந்த உண்மையைக் கிறிஸ்து பின்வருமாறு தெரிவித்துள்ளார்: "எருசலேமே, எருசலேமே. கோழி தன் குஞ்சுகளை தன் இறைக்கைக்குள் கூட்டிச் சேர்ப்பதுபோல நானும் உன் மக்களை அரவணைத்துக் கொள்ள எத்தனையோ முறை விரும்பினேன். உனக்கு விருப்பமில்லையே" (மத் 23:37),

இன்றைய பதிலுரைப்பாடல் கூறுகிறது: "உங்கள் இதயத்தைக் கடினப்படுத்தாதீர். ஆண்டவர் குரலுக்குச் செவிசாய்ப்பீர்" (திபா 957-8). கடவுளுடைய வார்த்தை தம்மை என்றும் மனமாற்றத்திற்கு அழைக்கிறது. மனமாற்றத்திற்கு நம்முன் வைக்கப்படும் சவால் கடவுளா? செல்வமா? "நீங்கள் கடவுளுக்கும் செல்வத்துக்கும் பணிவிடை செய்ய முடியாது" (மத் 6:24).

இன்றைய சமூக ஊடகங்களின் தாக்கத்தாலும், போலியான சபைகளாலும் மக்கள் ஏமாந்து போகிறார்கள். திருத்தூதர் பவுல் தமது சீடர் திமொத்தேயுவுக்கு வழங்கிய அறிவுரையும் எச்சரிக்கையும் இக்கால மக்களுக்கும் திருப்பணியாளர்களுக்கும் மிகவும் பொருத்தமானது; இன்றியமையாதது: "ஒரு காலம் வரும். அப்போது மக்கள் நலம் தரும் போதனையைக் கேட்காமல், உண்மைக்குச் செவிகொடுக்காமல் புனைக்கதைகளை நாடிச் செல்வார்கள். ஆனால் நீ இறைவார்த்தையை, வாய்ப்புக் கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் அறிவி" (2 திமொ 4:2-4).

அசல் தங்க நகைகளும் உண்டு போலியான "கவரிங்" நகைகளும் உண்டு. இன்று மக்கள் போலியான சபைகளைத் தேடிச்சென்று தங்கள் நம்பிக்கையை இழக்கின்றனர். இந்நிலையில் "உண்மைக்குத் தூணும் அடித்தனமுமான" (1 jpnkh 4:15) திருச்சபையின் போதனைக்கு செவிசாய்க்க வேண்டும்.

இன்றைய நற்செய்தியில் தீய ஆவிகூடக் கிறிஸ்துவை அடையாளம் கண்டுகொண்டு அவரிடம்: "நீர் கடவுளுக்கு அர்ப்பணமானவர்" என்று கூறி கத்தியது. ஆனால், "தந்தையால் mர்ப்பணிக்கப்பட்டு அவரால் இவ்வுலகிற்கு அனுப்பப்பட்ட கிறிஸ்துவை" (யோவா 10:36) மறைநூல் அறிஞர்களும் பரிசேயர்களும் எற்றுக்கொள்ளவில்லை. காரணம், அவர்களுடைய இதயக் கடினம். இதயக் கடினம் பாவங்களிலெல்லாம் டிய பாவம்; தூய ஆவியைப் புறக்கணிக்கும் செயல். எனவே, கடவுள் நமக்கு இன்று கூறும் அறிவுரை வேண்டுகோள். எச்சரிக்கை "உங்கள் இதயங்களைக் கடினப்படுத்தாதீர்; ஆண்டவர் குரலுக்குச் செவிசாய்ப்பீர்"(திபா 95:7-8).

கோணலானவை நேராக. 

அருள்பணி முனைவர் அருள்


எங்கெல்லாம் பாவச் சூழல் நிறைந்திருக்கிறதோ அங்கெல்லாம் அசுத்த ஆவி செயல்படுகிறது என்பது தெளிவு. வன்முறை, வரதட்சணை, ஊழல், அடிமைத்தனம், சுயநலம், மதவெறி, காம வெறி, ஏற்றத் தாழ்வுகள் போன்றவைகள் நிறைந்த இடங்களிலும் அசுத்த ஆவி குடிகொண்டிருக்கிறது.

"பேசாதே! இவனை விட்டுப் போ" (மாற்கு 1:25) என்று இயேசு அதிகாரத்தோடு சொல்லும் வார்த்தைகளை இன்றைய நற்செய்தி நமக்குத் தருகிறது. இயேசுவின் போதனை அதிகாரம் நிறைந்தது. அவரது வார்த்தைகள் உயிருள்ள ஆற்றல் மிக்க வார்த்தைகள் (எபி. 4:12). ஏன் அதிகாரத்தோடு போதித்தார் என்றால், தன் தந்தையோடு கொண்டுள்ள நிரந்தரமான உறவாலும் சமுதாயத்தின் மீது கொண்டுள்ள அக்கறையின் பிடிப்பாலும் துணிவோடு போதித்தார். பாவ நிலைகளை எதிர்த்தார். மனித மாண்புகளைச் சிதைக்கும் சக்திகளைக் களைந்தார். ஓய்வு நாள் சட்டத்தை மீறினார். இறையாட்சியின் மதிப்பீடுகளை மலைப்பொழிவில் தொடங்கித் தன் வாழ்வின் இறுதிவரை துணிவுடன் போதித்தார். இத்தகைய துணிவோடு போதித்த இயேசுவைத்தான், பாவக்கறை போக்கும் செம்மறி இவரே (யோவா. 1:29) என்று சுட்டிக்காட்டினார் திருமுழுக்கு யோவான். இத்தகைய இயேசுவின் அதிகாரப் போதனையை இனங்கண்டு கொண்ட அசுத்த ஆவி, இயேசுவே எங்கள் காரியத்தில் ஏன் தலையிடுகிறீர்? எங்களைத் தொலைக்க வந்தீரோ? நீர் யாரென்று எனக்குத் தெரியும். நீர் கடவுளின் பரிசுத்தர் (மாற். 1:24) என்றும் கூறியது. ஆம்! அசுத்த ஆவிக்கே தெரிகிறது தனது ஆட்சிக்கு முடிவு வந்து விட்டதென்று. ஏனெனில் மக்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த மீட்பர் இவர்தான். அசுத்த ஆவியின் ஆட்சிக்கு முடிவு கட்டிவிட்டு, இறையாட்சியைக் கட்டி எழுப்ப வந்தவர். மக்களை பாவ வாழ்விலிருந்து விடுவித்து அருள் ஒளி தரும் தூய வாழ்வுக்கு அழைத்துச் செல்ல வந்தவர் தான் என்பதை நிலைநாட்டுகிறார் இயேசு.

இன்றையச் சூழ்நிலையில் எதுவெல்லாம் மனிதனின் மாண்புகளைக் குறைத்து, உறவுகளைச் சிதைத்து அடிமைப்படுத்தி, விடுதலை பெற்ற மனிதனாக வாழத் தடையாக இருக்கிறதோ அவைகள் எல்லாம் அசுத்த ஆவியின் செயல்பாடுகள்தான். அதை முறியடிக்க முடியுமா?

ஆம்! முடியும். தந்தையோடு இயேசு இணைந்திருந்தார். அவரது ஆற்றலால் அசுத்த ஆவியின் செயல்பாடுகளைத் தகர்த்தெறிந்தார். அதே ஆற்றலை தன் சீடர்களுக்கும் கொடுத்தார். அவர்களும் அவரது பணியைத் தொடர்ந்தார்கள் (லூக். 10:22). நாமும் திருமுழுக்கு வழியாக இவ்வாற்றலைப் பெறுகிறோம். இறைவனின் உறவில் நாம் நிலைத்திருந்தால் அசுத்த ஆவியின் செயல்பாடுகளை அகற்றி, அருள் ஒளி நிறைந்த சமுதாயத்தை உருவாக்க முடியும். கிறிஸ்தவ வாழ்வு குறுக்கு வழிகளைக் கொண்டதல்ல. சரிக்கட்டி வாழும் சமுதாயமும் அல்ல. மாறாகக் கோணலான வழிகளைக் கூட செப்பனிட்டுப் புதிய பாதையை உருவாக்குவதே. இயேசு தொடங்கிய இறையாட்சியை நிறைவாக்குவதே திருமுழுக்குப் பெற்ற ஒவ்வொரு கிறிஸ்தவனின் கடமையாகும். இயேசுவைப்போல நாமும் அதிகாரத்தோடு இறையாட்சியை உருவாக்க முயற்சி செய்தால் பாவ இருள் மறைந்து அருள் ஒளி உதயமாகும்.

பாவச் சோதனையால் கடவுளுக்குக் கீழ்ப்படிய மறுத்த ஆதாமைப்போல அல்லாது, பணத்திற்காக இயேசுவை விலை பேசிய யூதாசைப்போல் அல்லாது, இயேசுவின் சந்திப்பால் புதுவாழ்வு பெற்ற சக்கேயுவைப்போல இந்தச் சமுதாயத்தை மாற்றப் புறப்படுவோம். நாமும் மனம் மாறுவோம்.

அதிகாரம் - யாருக்கு? யார்மேல்?

அருள்பணி ஏசு கருணாநிதி -மதுரை

மனித உள்ளுணர்வுகளைப் பற்றிப் பேசுகின்ற ஆஸ்திரிய நாட்டு உளவியல் அறிஞர் சிக்மண்ட் ஃப்ராய்டு அவர்கள், 'மனித மனத்தில் மேலோங்கி இருக்கும் உள்ளுணர்வுகள் இரண்டு எனவும், அவை வன்முறை மற்றும் பாலுணர்வு' என்றும் குறிப்பிடுகின்றார். ஆனால் இவை இரண்டையும்விட ஓர் உள்ளுணர்வு நமக்கு அடிப்படையாக இருக்கிறது. அதுதான் 'அதிகாரம்.' இந்த 'அதிகாரம்' அல்லது 'ஆற்றல்' உணர்வு நமக்கு பிறப்பிலேயே இயல்பாக வருகிறது. மேலும், பரிணாம வளர்ச்சியில் மனிதர்கள் 'ஹோமோ ஸேபியன்ஸ் ஸேபியன்ஸ்' என தனித்;து, உயர்ந்து நிற்பதற்குக் காரணமும் இந்த 'அதிகாரமே.'

இன்றைய இறைவாக்கு வழிபாடு 'அதிகாரம்' என்ற இந்த ஒற்றைச் சொல்லின் மூன்று பரிமாணங்களை - யாருக்கு? யார்மேல்? யாரால்? - நமக்கு எடுத்தியம்புகிறது.

இன்றைய இரண்டாம் வாசகத்திலிருந்து (காண். 1 கொரி 7:32-35) தொடங்குவோம்.

'மணமாகாதவர்களும், கைம்பெண்களும்' என்ற கருத்துருவோடு கொரிந்து நகரத் திருச்சபைக்கு அறிவுரை வழங்கும் பவுலடியார் 'அக்கறை கொள்வதிலும், அடுத்தவருக்கு உகந்தவற்றைச் செய்வதிலும் அதிகாரம் இருக்கிறது' என பதிவு செய்கின்றார். மணமானவர் உலகிற்கு உரியவற்றில் அக்கறை கொள்கிறார். தன் மனைவிக்கு உகந்தவற்றைச் செய்கின்றார். மணமாகாதவர் ஆண்டவருக்கு உரியவற்றில் அக்கறை கொள்கிறார். தன் ஆண்டவருக்கு உகந்தவற்றைச் செய்கின்றார். பவுலின் விருப்பத்தேர்வு ரொம்ப சிம்பிள்: 'நீ இந்த இரண்டில் ஏதாவது ஒன்றைத்தான் தேர்வு செய்ய முடியும். இதுவும் வேண்டும், அதுவும் வேண்டும் என்ற நிலை கூடாது!' ஏனெனில், மணமானவர் தன் மனைவியின்மேல் கொள்ளும் அக்கறையும், அவருக்கு உகந்தவற்றைச் செய்வதும் தன் மனைவியின்மேல் அவருக்கு அதிகாரம் அளிக்கிறது. அதே போல மணமாகாதவர் ஆண்டவர்மேல் கொள்ளும் அக்கறையும், அவருக்கு உகந்தவற்றைச் செய்வதும் ஆண்டவரின்மேல் அவருக்கு அதிகாரம் அளிக்கிறது. ஆக, அதிகாரத்தின் ஊற்று அக்கறை கொள்வதிலும், அடுத்தவருக்கு உகந்தவற்றைச் செய்வதிலும் அடங்கியிருக்கிறது. ஏன் இரண்டு பேர்மேல் - மனைவிமேல், ஆண்டவர்மேல் - ஒரே நேரத்தில் அதிகாரம் கொள்ள முடியாது என்றால், யார் ஒருவர் பிளவுபடா உள்ளம் கொண்டிருக்கிறாரோ அவர்தான் அதிகாரம் காட்ட முடியும். மனைவிக்கும், ஆண்டவருக்கும் இடையே உள்ளம் பிளவுபட்டிருக்கக் கூடாது.

இதை எப்படி புரிந்துகொள்வது?

இன்றைய நற்செய்தி வாசகத்தின் (காண். மாற் 1:21-28) ஒரு பகுதி நமக்கு இதற்கு உதவி செய்கிறது.

இயேசுவின் போதனையைப் பற்றிய மக்களின் வியப்பை பதிவு செய்கின்ற நற்செய்தியாளர் மாற்கு, 'அவர் மறைநூல் அறிஞர் போலன்றி, அதிகாரத்தோடு அவர்களுக்கு கற்பித்து வந்தார்' என்று பதிவு செய்கின்றார். ஆக, இயேசுவின் போதனையில் அதிகாரம் இருந்தது. ஆனால் மறைநூல் அறிஞரின் போதனையில் அதிகாரம் இல்லை.

தொழுகைக்கூடத்தில் பேய்பிடித்த ஒருவர் இருக்கிறார். மறைநூல் அறிஞர் இவரை ஒருவேளை தொழுகைக்கூடத்தைவிட்டு வெளியேற்றி இருப்பார். ஆனால், இயேசுவோ தீய ஆவியை விரட்டுகின்றாரே தவிர, தீய ஆவி பிடித்திருந்த நபரை வெளியேற்றவில்லை. மறைநூல் அறிஞர் தன்மையம், இறைமையம் என இரண்டு மையங்களைக் கொண்டிருந்தார். ஒவ்வொரு செயலைச் செய்யும்போதும் தனக்கு எது ஏதாயம் அல்லது உகந்தது என்ற எண்ணத்தோடு இருந்தார். அதே வேளையில் மறைநூலைக் கற்றறிந்ததால் இறைமையமும் கொண்டிருந்தார். ஆனால், இயேசுவிடம் மையங்கள் பிளவுபடவில்லை. அவர் ஒரே மையத்தைக் கொண்டிருந்தார். அதுதான் இறைமையம். இவர் இத்தகைய இறைமையம் கொண்டிருந்தார் என்பதை தீய ஆவியும்கூட அறிக்கையிடுகின்றது: 'நீர் யார் என எனக்குத் தெரியும். நீர் கடவுளுக்கு அர்ப்பணமானவர்.' இவ்வாறாக, பிளவுபடா உள்ளம் கொண்டிருப்பவரே அதிகாரம் கொண்டிருக்க முடியும் என்பது தெளிவாகிறது.

இன்றைய முதல் வாசகத்தில் (காண். இச 18:15-20), 'உன்னைப்போல் ஓர் இறைவாக்கினனை அவர்களுடைய சகோதரர்களினின்று நான் அவர்களுக்காக ஏற்படுத்துவேன்' என்று மோசேயிடம் முன்னுரைக்கின்ற கடவுள், உடனடி இலக்கிய சூழலில் இறைவாக்கினர் எரேமியாவைக் குறித்தாலும், தொலைதூர சூழலில் மெசியாவாகிய இயேசுவைக் குறிக்கின்றது. இந்த இறைவாக்கினன் தன் அதிகாரத்தை கடவுளிடமிருந்து பெறுகிறான். அவரது பெயராலேயே அவன் இறைவாக்குரைக்க முடியும்.

ஆக, இன்றைய இறைவாக்கு வழிபாட்டின் பின்புலத்தில் அதிகாரம் 'யாருக்கு' இருக்கிறது?

அ. கடவுளின் கட்டளைப்படி பேசும் இறைவாக்கினன் (முதல் வாசகம்).

கடவுள் கட்டளையிட்டதை மட்டும் சொல்லும் இறைவாக்கினன். கடவுள் கட்டளையிடுவது நன்மைக்காகவோ அல்லது தீமைக்காகவோ, அந்தக் கட்டளையைக் கூட்டாமல் குறைக்காமல் அப்படியே சொல்லும் இறைவாக்கினன். இத்தகையை பணியை மோசே செய்தார். இப்போது இதே பணி புதிய இறைவாக்கினன்மேல் சுமத்தப்படுகிறது.

ஆ. பிளவுபடா உள்ளம் கொண்டிருப்பவர் (இரண்டாம் வாசகம்)

உலகமா? அல்லது கடவுளா? ஆண்டவரா? அல்லது மனைவியா? என்ற கேள்வியும், அந்தக் கேள்விக்கு 'ஆம்' என்று விடை வந்தால் ஏற்படும் பிளவும் இல்லாமல் இருப்பவர். இப்படிப்பட்ட பிளவற்ற நிலைக்கு மிகவும் அடிப்படையானது 'தேர்வு.' அதாவது, நல்லது எது, அல்லாதது எது என தேர்ந்து தெளிந்து, அந்தத் தேர்வில் நிலையாய் இருப்பதுதான் பிளவுபடா உள்ளம். முன்னுக்குப் பின் பயணம் செய்யும் மனம், தெளிவான முடிவை எடுக்கத் தயக்கம் காட்டும் மனம், தெரிந்தபின் வருந்தும் மனம் ஆகியவை பிளவுபடாமல் இருக்க முடியாது.

இ. கடவுளுக்கு அர்ப்பணமானவர் (நற்செய்தி வாசகம்)

'கடவுளுக்கு அர்ப்பணமானவர்' என்ற மொழிபெயர்ப்பு கிரேக்கத்தில் 'ஹோ ஹாகியோஸ் தூ தெயூ' என்று உள்ளது. அதாவது, 'கடவுளின் தூயவர்' அல்லது 'கடவுளின் புனிதமானவர்.' புனிதம் அல்லது தூய்மை நிலை என்பது எந்தவொரு கலப்பும், பாரபட்சமும், தன்னலமும், கலக்கமும், பயமும் இல்லாதது.

இன்று நான் என் தனிப்பட்ட வாழ்விலும், என் நட்பு வட்டத்திலும், என் குடும்பத்திலும், என் பங்கு, பணியிடம், என் அருள்பணி வாழ்க்கை நிலையிலும் கையாளும் அதிகாரம் மேற்காணும் மூன்று நிலைகளில் ஊற்றெடுக்கிறதா? அல்லது 'என் கட்டளைப்படி,' 'பிளவுண்டு,' 'தூய்மையற்ற' நிலையில் ஊற்றெடுக்கிறதா?

அதிகாரம் 'யார்மேல்' இருக்கிறது?

அ. வார்த்தைகளின்மேல் (முதல் வாசகம்)

வார்த்தைகளின்மேல் அதிகாரம் கொண்டிருப்பது என்பது வார்த்தைக்கும், செயலுக்கும் இருக்கின்ற இடைவெளியைக் குறைப்பது. 'நான் காலையில் 5 மணிக்கு எழுந்திருப்பேன்' என்று நான் சொல்கிறேன் என வைத்துக்கொள்வோம். என் இந்தச் சொற்களும், காலையில் 5 மணிக்கு எழும் என் செயலும் இணைந்து சென்றால்தான் என் வார்த்தைகளின்மேல் எனக்கு அதிகாரம் இருக்கிறது என்று அர்த்தம். '5 மணிக்கு எழுந்திருப்பேன்' என்று சொல்லிக்கொண்டு 7 மணிக்கு எழுந்தால் என் வார்த்தைகளின்மேல் எனக்கு அதிகாரம் இல்லை என்றும், என் வார்த்தைகள் வெறும் சப்தமே என்றும் பொருள்.

ஆ. மனைவி அல்லது ஆண்டவர்மேல்

இங்கே 'அக்கறை,' மற்றும் 'உகந்ததைச் செய்வது' மேலோங்கி நிற்கிறது. மனைவி அல்லது ஆண்டவர்மேல் அதிகாரம் கொண்டிருப்பது என்பது, தான் அவர் மேல் காட்டிய அக்கறையால் அல்லது அவருக்கு உகந்ததைச் செய்ததால் அவரிடமிருந்து தேவையானதைப் பெற்றுக்கொள்வது. தன் தந்தை விரும்பியவாறு வகுப்பில் முதல் மதிப்பெண் எடுக்கும் குழந்தை தன் தந்தையிடம் பரிசாக சைக்கிள் ஒன்றைக் கேட்டுப்பெறுதல்கூட இவ்வகையில் அதிகாரம் ஆகிறது.

இ. தீயஆவியின் மேல்

இயேசுவின் அதிகாரம் தீய ஆவியின் மேல் இருக்கிறது. 'நீர் யார் என எனக்குத் தெரியும். நீர் கடவுளுக்கு அர்ப்பணமானவர்' என்ற தீய ஆவியின் நம்பிக்கை அறிக்கையில் அல்லது முகஸ்துதியில் இயேசு மயங்கிவிடவில்லை. 'பரவாயில்லை. நீ இங்கேயே இரு!' என்று தீய ஆவியைத் தங்கவிடவில்லை. மாறாக, எந்தவித சமரசமும் இல்லாமல் அதை வெளியே துரத்துகின்றார். சில நேரங்களில் தீமையின் மாயக் கவர்ச்சி அதன்மேல் நாம் அதிகாரம் செலுத்துவதைத் தடுக்கின்றது. ஆட்சி, அதிகாரத்தில் இருக்கும் எல்லாருக்குமே இலஞ்சம், ஊழல் ஆகியவை தீமை என்றும், அவற்றை அழிக்கத் தங்களுக்கு அதிகாரம் உண்டு என்பதும் தெரியும். இருந்தாலும் அவர்கள் தீமை மேலோங்குவதையும், வளர்வதையும் கண்டுகொள்வதில்லை. ஏனெனில், தொழுகைக்கூடத்தின் தீய ஆவி போலவே இவ்வகைத் தீமைகளும் மாயக் கவர்ச்சி வலையை விரிக்கின்றன.

இன்று நம் வாழ்வில் எழும் வாழ்வியல் மற்றும் உறவு பிரச்சினைகளுக்கு மேற்காணும் இரண்டு கேள்விகளே காரணமாக அமைகின்றன: 'யாரால் அதிகாரம்?' 'யார்மேல் அதிகாரம்?'

ஆனால், இன்று என் அதிகாரம் யாரால் வருகிறது? என் அதிகாரம் யார்மேல் வருகிறது?

பேருந்தில் காலியாக இருக்கும் ஓர் இருக்கையில் அமர வேகமாக நகர்வதிலிருந்து,

திருமண நிகழ்ச்சியில் முன்னால் இருக்கையில் அமர்வது தொடர்ந்து,

ஒவ்வொரு நாளும் நம் மனதிற்குள்ளேயே அதிகாரத்திற்கான போராட்டம் நடந்துகொண்டே இருக்கிறது. இன்று என் அதிகாரம் அடுத்தவர்களுக்கு வாழ்வு கொடுக்கிறது என்றால், அடுத்தவர்களை மையமாக வைத்திருக்கிறது என்றால் எத்துணை நலம்!

இறுதியாக,

இன்றைய இறைவாக்கு வழிபாட்டில் உள்ள சின்னஞ்சிறு வார்த்தைகளை இறுதிப்பாடமாக எடுத்துக்கொள்வோம்:

அ. 'அவர் விரும்பும் இறைவாக்கினன்'

ஆண்டவரின் இதயத்திற்கு உகந்த இறைவாக்கினன், மோசே போன்ற இறைவாக்கினன் யார்? என்ற கேள்வி இன்றும் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. யோசுவா, எரேமியா, இயேசு கிறிஸ்து என பல விடைகள் இதற்குச் சொல்லப்பட்டாலும், உறுதியான விடை நம்மிடம் இல்லை. அந்த இறைவாக்கினர் நீங்கள் மற்றும் நானாகக் கூட இருக்கலாம். இந்த இறைவாக்கினருக்குத் தேவையான தகுதி ஒன்றே: 'அவரின் கட்டளைகளைக் கேட்டு அடுத்தவருக்குச் சொல்வது.' இன்று அவரின் வார்த்தைகளைக் கேட்க பலர் ஆர்வமாக இருக்கின்றனர். ஆனால், அவருக்கும் இவர்களுக்கும் இடையே உள்ள இந்த இடைவெளியைக் குறைக்க ஆள்கள் தேவை. இதற்கான அழைப்பை நாம் நம் அன்றாட வாழ்வில் ஏற்றுக்கொள்தல் முதல் பாடம்.

ஆ. 'மணமானவர், மணமாகாதவர்'

'நீங்கள் கவலைகளின்றி வாழ நான் இதை எழுதுகிறேன்' என தொடங்குகின்ற பவுலடியார் மணமானவர்கள் மற்றும் மணமாகாதவர்கள் பற்றிப் பதிவு செய்கின்றார். பவுல் எழுதுவதுபோல பல நேரங்களில் எதார்த்தம் இல்லை. மணமானவர் தன் மனைவி மேல் அக்கறை கொண்டிருப்பதும், அவருக்கு உகந்ததைச் செய்வதும் பல நேரங்களில் நம் குடும்பங்களில் நடப்பதில்லை. அதுபோல, மணமாகாதவர் ஆண்டவர்மேல் அக்கறை கொண்டிருப்பதும், அவருக்கு உகந்ததைச் செய்வதும் அருள்பணி வாழ்வில் நடப்பதில்லை. சில நேரங்களில் மணமானவர் ஆண்டவர்மேல் அதிக அக்கறை கொண்டிருப்பதையும், அவருக்கு உகந்ததை இன்னும் அதிகமாகச் செய்வதையும் காண்கிறோம். ஆக, இன்று நாம் எந்த நிலையில் இருக்கிறோமோ, அந்த நிலைக்குரிய வாழ்வை முழுமையாக வாழ்தல் அவசியம் என்பது இயேசு தரும் இரண்டாம் பாடம்.

இ. 'வாயை மூடு!'

தொழுகைக்கூடத்தில் இருக்கின்ற தீய ஆவியை 'வாயை மூடு!' என அதட்டுகின்றார். அதட்டுவது என்பது அதிகாரத்தைக் குறிக்கிறது. 'வாயை மூடுவதும்' அதிகாரத்தின் வெளிப்பாடுதான். அதிகாரம் கொண்டிருப்பவர்கள் அதிகம் பேசுவதில்லை. வாழ்க்கையின் இரகசியம் இரண்டு 'எஸ்'களில் உள்ளது: 'ஸைலென்ஸ்,' 'ஸ்மைல்.' வாயை மூடிவிட்டாலே வாழ்வின் பாதி பிரச்சினைகள் முடிந்துவிடுகின்றன. பல அதிகார பிரச்சனைகள் வருவதை தவிர்க்க நல்ல வழியும் 'வாயை மூடுவதே!'

நிற்க.

அதிகாரம் அது கடவுளால் தரப்பட்டது என்றாலும் அதற்கும் வரையறை உண்டு.

'வாயை மூடு!' என்று தொழுகைக்கூடத்தில் தீய ஆவிக்கு கட்டளையிட்ட இயேசு, தான் தலைமைச்சங்கத்தின்முன்னும், பிலாத்தின்முன்னும் நிறுத்தப்பட்டபோது, அங்கே நிலவிய கூச்சலைப் பார்த்து, 'வாயை முடு!' என ஏன் சொல்ல முடியவில்லை?

 


இயேசு என்னும் இறைவாக்கினர்களுக்கு எல்லாம் பெரிய இறைவாக்கினர்!

அருள்பணி மரிய அந்தோன்ராஜ் பாளையங்கோட்டை

Tales to Hoffman என்னும் நூலில் இடம்பெறுகின்ற ஒரு நிகழ்வு.

ஒரு சமயம் கடலில் ஓர் அமெரிக்கக் கப்பல் போய்க்கொண்டிருந்தது. அந்தக் கப்பலின் மேல் தளத்தில் இருந்த குருவானவர் அங்கிருந்த மக்களுக்குப் போதிக்கத் தொடங்கினார். மக்களும் அவருடைய போதனையை வியந்து கேட்டனர்

அவருடைய போதனை முடிந்ததும் அவருடைய போதனையைக் கேட்டுக்கொண்டிருந்த கப்பல் பயணி ஒருவர் அவரிடம் வந்து, “தந்தையே! உங்களுடைய போதனை மிக அருமையாக இருந்தது” என்றார். “எதை வைத்து அவ்வாறு சொல்கின்றீர்?” என்று குருவானவர் அவரிடம் கேள்வி கேட்க அவர், “உங்களுடைய போதனை உங்கள் உள்ளத்தின் ஆழத்திலிருந்து வந்தாக இருந்தது. மேலும் அது என்னுடைய உள்ளத்தைத் தொடுவதாக இருந்தது” என்றார்.

உள்ளத்திலிருந்து போதிக்கப்படும் எந்தவொரு போதனையும் / மறையுரையும் எப்போதும் பிறருடைய உள்ளத்தைத் தொடுவதாகவே இருக்கும்.

இப்படி சாதாரண இறையடியார்களின் போதனையே உள்ளத்தைத் தொடுவதாக, வியந்து பார்க்கக்கூடியதாக இருக்கும்போது இறைவாக்கினர்களுக்கு எல்லாம் பெரிய இறைவாக்கினராகிய இயேசுவின் போதனை எந்தளவுக்கு வல்லமையுள்ளதாக இருக்கும் என்பதை நாம் கற்பனை செய்து பார்த்துக்கொள்ளலாம்.

பொதுக்காலத்தின் நான்காம் ஞாயிற்றுக்கிழமையான இன்று நாம் படிக்கக்கேட்ட வாசகங்கள் ‘இயேசு என்னும் இறைவாக்கினருக்கு எல்லாம் பெரிய இறைவாக்கினர்’ என்னும் சிந்தனையைத் தருகின்றன. நாம் அதனைக் குறித்து சில மணித்துளிகள் சிந்தித்துப் பார்ப்போம்.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு தொழுகைக்கூடத்திற்குச் சென்று போதிக்கத் தொடங்குகின்றார். அவருடைய போதனையைக் கேட்ட மக்கள் வியந்துபோய் நிற்கின்றார்கள். மக்கள் வியந்து பார்க்கின்ற அளவுக்கு இயேசுவின் போதனை இருந்ததற்குக் காரணம் என்ன என்று நாம் சிந்தித்துப் பார்க்கவேண்டும். இயேசுவின் போதனை மக்களால் வியந்து பார்க்கக்கூடிய அளவுக்கு இருந்ததற்கு மூன்று முக்கியமான காரணங்களை நாம் சொல்லலாம். ஒன்று அவருடைய போதனை அதிகாரம் கொண்டதாக இருந்தது. பரிசேயர்களும் மறைநூல் அறிஞர்களும் போதித்தபோது ‘அவர் சொன்னார்’, ‘இதில் இப்படி இருக்கின்றது’ என்றுதான் போதித்தார்கள். ஆனால் ஆண்டவர் இயேசுவோ ‘நான் உங்களுக்குச் சொல்கிறேன் என்று போதிக்கின்றார். அதனாலே அவருடைய போதனை அதிகாரம் கொண்ட போதனையாகவும், மக்களால் வியந்து பார்க்கின்ற போதனையாக இருந்தது.

இரண்டாவது காரணம் ஆண்டவர் இயேசுவுக்கு அலகையும் கட்டுப்பட்டது. யூத போதகர்கள், சமயத் தலைவர்கள் மாய வித்தைகளை வைத்துக்கொண்டு அலகையை ஒட்டிவந்தார்கள். ஆனால் ஆண்டவர் இயேசுவோ அப்படி இல்லை. அவர் தூய ஆவியின் துணையைகொண்டு அலகையை ஒட்டி வந்தார். திருத்தூதர் பணிகள் நூல் 10 ஆவது அதிகாரம் 38 ஆவது இறைவார்த்தை இதை மிக அழகாக எடுத்துரைக்கின்றது, “கடவுள் நாசரேத்து இயேசுவின் மேல் தூய ஆவியின் வல்லமையைப் பொழிந்தருளினார். கடவுள் அவரோடு இருந்ததால், அலகையின் கொடுமைக்கு உட்பட்டிருந்த அனைவரையும் அவர் விடுவித்து எங்கும் நன்மை செய்துகொண்டே சென்றார்”. ஆகையால், இயேசுவின் போதனைக் கேட்டு வியப்பதற்கு காரணமாக அவர் அலகையின் மீது அதிகாரம் கொண்டிருந்ததையும் சொல்லலாம்.

மூன்றாவது காரணம் அவர் ஆண்டவர் சொன்னதையே போதித்தார் என்பதாகும். இஸ்ரயேலில் ஒரு சில (போலி) இறைவாக்கினர்கள் இருந்தார்கள். அவர்கள் கடவுள் சொல்லாதையும் கடவுள் சொன்னதாகப் போதித்தார்கள். இதனால் மக்கள் அந்த போலி இறைவாக்கினர்களின் போதனையால் தவறாக வழிநடத்தப்பட்டார்கள். ஆனால், ஆண்டவர் இயேசுவோ தந்தையாம் கடவுள் எதைப் போதிக்கச் சொன்னாரோ அதையே போதித்தார். அதைவிடவும் இயேசு தான் போதித்ததை வாழ்வாக்கினர், வாழ்ந்ததைப் போதித்தார். அதனாலேயே மக்கள் அவருடைய போதனையை வியந்து பார்த்தார்கள். ஆகையால், இயேசுவின் போதனை மக்களால் வியந்து பார்க்கக்கூடிய அளவுக்கு இருந்தது என்று சொன்னால் அவருடைய பேச்சில் அதிகாரம் இருந்தது, அவருடைய போதனைக்கு அலகையும் கட்டுப்பட்டது; அவர் வாழ்ந்ததையோ போதித்தார், போதித்ததையே வாழ்ந்தார் என மிக உறுதியாகச் சொல்லலாம். ஓர் உண்மையான இறைவாக்கினர் என்பவர் இறைவாக்கினருக்கு எல்லாம் பெரிய இறைவாக்கினராகிய இயேசுவைப் போன்று இருக்கவேண்டும் என்பதுதான் நாம் நம்முடைய மனதில் பதிய வைக்கவேண்டிய செய்தியாக இருக்கின்றது.

இணைச்சட்ட நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகம், ஓர் இறைவாக்கினர் என்பவர் யார்? அவருடைய பணிகள் என்ன? என்பதைக் குறித்து மிகத் தெளிவாக எடுத்துரைக்கின்றது. நாம் அதனைக் குறித்து சிந்தித்துப் பார்த்துவிட்டு பெரிய இறைவாகினராகிய இயேசுவின் வழியில் எப்படி நடக்கலாம் என்ற முயற்சிப்போம்.

“ஓர் இறைவாக்கினனை உங்களுடைய (அவர்களுடைய) சகோதரர்களினின்று நான் உங்களுக்கு ஏற்படுத்துவேன். என் வார்த்தைகளை அவனுடைய வாயில் வைப்பேன். நான் கட்டளையிடுவது அனைத்தையும் அவன் அவர்களுக்குச் சொல்வான். என் பெயரால் அவன் சொல்லும் என் வார்த்தைகளுக்கு செவிகொடுக்காதவனை நான் வேரருப்பேன்” என்று இன்றைய முதல் வாசகத்தில் நாம் படிக்கின்றோம்.

ஆம், ஓர் இறைவாக்கினன் என்பவர் மனிதரால் தேர்தெடுக்கப்படுகின்றவர் அல்ல, அவர் கடவுளால் தேர்ந்தெடுக்கப்படுகின்றவர்; கடவுளின் வார்த்தைகளை மக்களுக்கு எடுத்துச் சொல்கின்றவர். எனவே, அவரை ஏற்றுக்கொள்வது கடவுளை ஏற்றுக்கொள்வதற்கும், அவரைப் புறக்கணிப்பது கடவுளைப் புறக்கணிப்பதற்குச் சமமாக இருக்கின்றது. மத்தேயு நற்செய்தியில் இதைத்தான் ஆண்டவர் இயேசு, “உங்களை ஏற்றுக்கொள்பவர் என்னை ஏற்றுக்கொள்கின்றார். என்னை ஏற்றுக்கொள்பவரோ என்னை அனுப்பினவரையே ஏற்றுக்கொள்கின்றார்” (மத் 10: 40) என்கிறார்.

பல நேரங்களில் கடவுளின் வார்த்தையை மக்களுக்கு எடுத்துச் சொல்கின்ற இறைவாக்கினர்கள்/ இறையடியார்கள் மக்களால் புறக்கணிக்கப்படுவது மிகவும் வேதனை தரக்கூடியதாக இருக்கின்றது.

1960 - களின் தொடக்கத்தில் ஆப்ரிக்கா கண்டத்தில் உள்ள சூடானில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக மிகப்பெரிய மதக்கலவரம் வெடித்தது. அப்போது அங்கிருந்த கிறிஸ்தவர்கள் எல்லாரும் தங்களுடைய உயிரை காத்துக்கொள்ள அண்டை நாடான உகாண்டாவிற்குத் தப்பி ஓடினார்கள். அப்படித் தப்பி ஓடிய கிறிஸ்தவர்களில் பாரிட் தபான் (Paride Thapan) என்ற சிறுவனும் அடங்கும். அவர் உகாண்டாவிற்கு சென்று, அங்கிருந்த குருமடத்தில் குருத்துவக் கல்வி பயின்று குருவாக மாறினார். ஒருசில ஆண்டுகளுக்குப் பிறகு சூடானில் அமைதி திரும்பியபோது அருட்தந்தை தபான் தன்னுடைய சொந்த நாட்டிற்குத் திரும்பினார்.

சூடானுக்குத் திரும்பிய பிறகு அருட்தந்தை தபானை பலோடகோ என்னும் பங்கில் பங்குத்தந்தையாக நியமித்தார்கள். அவரும் அந்தப் பங்கில் சிறப்பான பணிகளைச் செய்ய வேண்டும் என்று மிக ஆர்வமாகச் சென்றார். ஆனால், அவருக்கு அங்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. அது என்ன அதிர்ச்சி என்றால், பலோடகா பங்கில் இருந்தவர்கள் அனைவரும் ஆங்கிலேயர்கள், இவரோ கருப்பினத்தைச் சார்ந்தவர். ஒரு கறுப்பினத்தைச் சார்ந்தவரை எப்படி பங்குக் குருவாக ஏற்றுக்கொள்வது என்று மக்கள் அவரைப் புறக்கணித்தார்கள். இதற்கிடையில் இரண்டாம் வத்திக்கான் சங்கம் திருச்சபையில் மிகப்பெரிய மறுமலர்ச்சியையும், மாற்றத்தையும் கொண்டு வந்தது. அவற்றையெல்லாம் அருட்தந்தை தபான் அமல்படுத்த முயன்றபோது, மக்களிடமிருந்து அவருக்கு அளவுக்கு அதிகமாக எதிர்ப்புகள் வந்தன. அவற்றையெல்லாம் தாங்கிகொண்டு இறைப்பணியை அவர் செவ்வனே செய்தார்.

ஒருகட்டத்தில் பங்கு மக்கள் அவர் செய்து வந்த நற்பணிகளைப் பார்த்து, அவரை மெல்ல ஏற்றுக்கொள்ளத் தொடங்கினார்கள்.

இறைப்பணியாளர்களும் இறையடியார்களும் எப்படி இன ரீதியாக, சாதிய ரீதியா மொழி ரீதியாக ஒதுக்கப்படுகின்றார்கள், புறக்கணிக்கப்படுகின்றார்கள் என்பதற்கு அருட்தந்தை தபான் ஒரு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு. இன்றைக்கும் ஏராளமான இறையடியார்கள், குருக்கள் மக்களால் புறக்கணிக்கப்படுவதும் ஏற்றுக்கொள்ளப்படாமல் இருப்பதைப் பார்க்கின்றபோது நெஞ்சம் கனக்கின்றது.

இந்த இடத்தில் நாம் ஒரு முக்கியமான உண்மையைப் புரிந்துகொள்ளவேண்டும். அது என்னவென்றால் இறைப்பணியாளர்களை வெறுப்பவர்களுக்கு, ஒதுக்கின்றவர்களுக்கு இறைவன் கொடுக்கின்ற தண்டனை. இன்றைய முதல் வாசகம் ஓர் இறைவாக்கினர் என்பவர் யார் என்பதை எடுத்துக்கூறுகின்ற அதே வேளையில் இறைவாக்கினரைப் புறக்கணிக்கின்றவர்களுக்கு என்ன தண்டனை கிடைக்கும் என்பதை மிகத் தெளிவாக எடுத்துக்கூறுகின்றது. “என் பெயரால் இறைவாக்கினர் சொல்லும் வார்த்தைகளுக்குச் செவிகொடுக்காதவனை நான் வேரருப்பேன்” (இச 18:19) என்று ஆண்டவர் மிகக் கண்டிப்பாய் கூறுகின்றார். நற்செய்தியில் ஆண்டவர் இயேசு கூட இதை ஒத்த கருத்தினைத் தான் சொல்கின்றார், “உங்களை எவராவது ஏற்றுக்கொள்ளாமலோ, நீங்கள் அறிவித்தவற்றிற்கு செவி சாய்க்காமலோ இருந்தால் அவரது வீட்டை அல்லது நகரைவிட்டு வெளியேறும்போது உங்கள் கால்களில் படிந்துள்ள தூசியை உதவி விடுங்கள். தீர்ப்பு நாளில் சோதோம் கொமோராப் பகுதிகளுக்குக் கிடைக்கும் தண்டனையைவைத் அந்த நகருக்குக் கிடைக்கும் தண்டனை கடினமாகவே இருக்கும்” (மத் 10: 14 -15).

ஆகையால், இறைப்பணியைச் செய்யும் இறைவாக்கினர்கள் இறைவனின் அடியார்கள் என்பதை உணர்வது காலத்தின் கட்டாயமாக இருக்கின்றது. அது நேரத்தில் இறைவாக்கினர்களுக்கு எல்லாம் பெரிய இறைவாக்கினராகிய இயேசுவை ஏற்றுக்கொள்வதைக் கொண்டே நம்முடைய வாழ்வும் மீட்பும் அடங்கி இருக்கின்றது.

ஆகவே, நம் மத்தியில் இறைப்பணி செய்யும் இறையடியார்களுக்கு உரிய முக்கியத்துவம் தருவோம், இயேசுவே உண்மையான இறைவன், இறைவாக்கினருக்கு எல்லாம் பெரிய இறைவாக்கினர் என்பதை உணர்வோம். அவருக்கு உகந்த வழியில் நடப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம். 

.

 

No comments:

Post a Comment