Friday 12 January 2018

பொதுக் கால 2 - ஆம் ஞாயிறு

பொதுக் கால 2 - ஆம் ஞாயிறு


1 சாமு 3:3ஆ-10, 19:
1கொரி 6:13இ-15அ. 17-20:
யோவா :35-42 


மகிழ்ச்சியூட்டும் மறையுரைகள்
குடந்தை ஆயர்-அந்தோணிசாமி

மெளனமே உன்னை நேசிக்கின்றேன்


போதி தர்மா என்பவர் ஒன்பது ஆண்டுகள் தம் சீடர்களுக்குப் போதித்தார். ஒருநாள் இவர் மரணப்படுக்கையிலிருந்த போது, அவரது கொள்கையைப் பரப்ப சரியான சீடரைத் தேர்ந்தெடுக்க எண்ணி, ஒரே கேள்வியை எல்லாச் சீடர்களிடமும் கேட்டார். இதுதான் கேள்வி : "நீங்கள் எவ்வாறு என் கொள்கைகளைப் பரப்புவீர்கள்?"


முதல் சீடர் : "ஐயா, உமது உரைகள் பிறர் காதுகளைத் துளைக்கும்படி போதிப்பேன்" என்றார். அதற்குக் குரு, "எனது சதைக்கு நீ உரியவன்" என்றார்.
இரண்டாவது சீடர் : "குருவே, நான் பாகுபாடின்றி, அனைவரையும் சமமாக நேசிப்பேன்" என்றார். அதற்குக் குரு, "என்னுடைய தோள் உனக்குரியது" என்றார்.


மூன்றாவது சீடர் : "போதகரே. நான் மக்கள் மத்தியில் புதிய சிந்தனைகளை உருவாக்குவேன்" என்றார். அதற்குக் குரு, "என் எலும்புகளுக்கு நீ சொந்தக்காரன்" என்றார்.


நான்காவதாக ஹிகோ என்ற சீடர் வந்து குருவை மிகுந்த வணக்கத்துடன் வணங்கி மெளனமாக ஒதுங்கி நின்றார். அவரைப் பார்த்து குரு, "மௌனமே அனைத்திலும் ஆற்றல் மிக்கது. என் ஆன்மா உனக்குரியது. நீதான் எனது வாரிசு. பொறுப்பு அனைத்தையும் உன்னிடம் ஒப்படைக்கின்றேன்" என்றார்.
பேச்சு வெள்ளி, மெளனமோ தங்கம்,


மெளனத்திற்கு மிகுந்த ஆற்றல் உண்டு குறிப்பாகக் கடவுள் நம்மோடு பேசும் சூழ்நிலையை உருவாக்கிக் கொடுக்கும் சக்தி மெளனத்திற்கு உண்டு.
இறைவாக்கினர் எலியாவோடு இறைவன் சுழற்காற்றில் பேசவில்லை, நிலநடுக்கத்தில் பேசவில்லை, தீயில் பேசவில்லை, மாறாக அடக்கமான மெல்லிய ஒலியில் பேசினார் (1 அர 19:1-13). இயேசு அவரது பரமதந்தையோடு பேச அடிக்கடி தனிமையான இடத்திற்குச் சென்றார் (மாற் 1:35).


இன்றைய முதல் வாசகத்திலே சாமுவேல் இறைவனைப் பார்த்து, ஆண்டவரே பேசும் உம் அடியான் கேட்கின்றேன் என்கின்றார் (1 சாமு 3-10)இவ்வாறு சொல்லிவிட்டு மெளனமாகின்றார். அவர் பேசாமலிருக்கத் தொடங்கியதும், கடவுள் அவரோடு தங்கத் தொடங்கினார் (சாமு 3-19). அவரோடு பேசத்தொடங்கினார். சாமுவேலின் மௌனம் அவரை பெரிய இறைவாக்கினராக உயர்த்தியது. 


இன்றைய நற்செய்தியில் திருமுழுக்கு யோவானின் இரண்டு சீடர்களும் வந்து பாருங்கள் என்று கூறிய இயேசுவோடு சென்று அவரோடு தங்கியதாகப் படிக்கின்றோம்.


இயேசுவோடு தங்கியிருந்தார்கள் ஆனால் அவரோடு எதுவும் பேசவில்லை! சீடர்கள் எதுவும் பேசியதாக நாம் நற்செய்தியில் படிப்பதில்லை! அந்தச் சீடர்கள் மெளனமாக இருந்தபோது இயேசு  மெசியா என்ற உண்மை அவர்களுக்கு உணர்த்தப்பட்டது : மெளனத்திலே அவர்கள் இயேசுவை அனுபவித்தார்கள்: கண்டு கொண்டார்கள். பேதுருவின் சகோதரர் அந்திரேயா, சீமோனிடம் சென்று, மெசியாவைக்  கண்டோம் என்றார். 


நாம்  பேசாமலிருக்கும்போது கடவுள் பேசுவார். நாம் பேசாமலிருக்கும், நமது வெளிப் புலன்களும், உள் புலன்களும்  அமைதியாக இருக்கும்போது, நமக்குள் வாழும் கடவுள் (இரண்டாம் வாசகம்)  அவரது தூய ஆவியாரின் வரங்களாலும் (கொரி 12:8-10), அவரது கனிகளாலும் (கலா 5:22-23) நம்மை நிரப்புவார்; நாம் புதுப்படைப்பாக மாறி (எபே 4:24) கிறிஸ்துவை அணிந்துகொள்வோம்(உரோ 1314) நமது புதுவாழ்வால் கடவுளுக்குப் பெருமை சேர்ப்போம் (1 கொரி 6:19)


மேலும் அறிவோம்
இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே
ஒழுக்கம் உடையார்வாய்ச் சொர் (குறள் : 415).


 பொருள் வழுக்கும் பாறையில் நடப்பவர்க்கு வலிய ஊன்றுகோல் உதவுவது போன்று, கற்றுத் தெளிந்த நல்லறிஞர் பெருமக்களின் மனம் தளரும்போது பெரிதும் துணைபுரியும்.






மறையுரை மொட்டுக்கள்

அருள்தந்தை Y.இருதயராஜ்


ஒரு பெரியவர் ஓர் இளைஞனிடம் மணி (நேரம்) கேட்டார் அவன், 'பத்து - பத்து என்றான். பெரியவர் கோபத்துடன், "எப்பா, நான் என்ன செவிடனா? பத்து என்று ஒருமுறை சொன்னால் போதாதா? ஏன் பத்து - பத்து என்று இருமுறை கூறினாய்?" என்று கேட்டார்.


சிறுவன் சாமுவேலை, சாமுவேல் - சாமுவேல்' என்று இருமுறை பெயர் சொல்லிக் கூப்பிட்டார் (1 சாமு 310) அவ்வாறே ஆபிரகாமை 'ஆபிரகாம், ஆபிரகாம்' என்றும் (தொநூ 22:11) யாக்கோபை, யாக்கோபு யாக்கோபு என்றும் (தொநூ 46:2). மோசேயை மோசே, மோசே என்றும் (விப 34) இரண்டுமுறை பெயர் சொல்லிக் கூப்பிட்டார்.


இறைவன் இவர்களை இருமுறைப் பெயர் சொல்லி அழைத்தது அவர்கள் செவிடர்கள் என்பதற்காக அல்ல, மாறாக, இறைவன் ஒருவரை ஒரு குறிப்பிட்ட பணிக்குப் பெயர் சொல்லி அழைக்கிறார் நிச்சயமாக அழைக்கிறார் அழைத்தல் என்பது இறைவனுடைய முன் செயல் என்பதைக் காட்டுவதற்கேயாகும்.


இறைவனால் பெயர் சொல்லி அழைக்கப்பட்ட சிறுவன் சாமுவேல், பேசும் உன் அடியான் கேட்கிறேன்" (1 சாமு 310) என்று பதில் கூறுகிறான். சாமுவேல் இறைவனுடைய அழைத்தலுக்குத் தாராள மனதுடனும் திறந்த உள்ளத்துடனும் கீழ்ப்படிய தயார் நிலையில் இருந்ததை இது காட்டுகிறது
இன்றைய நற்செய்தியிலும் இயேசுவால் அழைக்கப்பட்ட முதல் சீடர்கள் திறந்த மனதுடனும் தாராள உள்ளத்துடனும் இயேசுவைப் பின் தொடர்கின்றனர். இது வியப்பாக இருக்கிறதா?


ஓர் இளைஞன் ஒரு இளம்பெண்ணின் அழகில் மயங்கி, அவளிடம் இருபது வருஷம் என் பெற்றோர் வசமிருந்தேன், இருபது நிமிஷத்தில் உன் வசமாகி விட்டேன்" என்றான். மனித காதலுக்கு இவ்வளவு கவர்ச்சி இருந்தால் தெய்வீகக் காதலுக்கு எவ்வளவு கவர்ச்சி இருக்க வேண்டும்?" இறைவா என்னை நீர் மயக்கி விட்டீர் நானும் மயங்கிப்போனேன்" (எரே 20:7) என்று இறைவாக்கினர் எரேமியா கூறவில்லையா?


இறைவன் ஒவ்வொருவரையும் அழைக்கிறார். இறைவனுடைய அண்டித்தல் என்பது துறவற அழைத்தலாகவோ இல்லற அழைத்தலாகவோ இருக்கலாம் துறவறம் எவ்வாறு இறைவனது கொடையோ அவ்வாறே இல்லறமும் இறைவனது கொடையாகும். "ஒவ்வொருவருக்கும் கடவுள் தரும் தனிப்பட்ட அருள்கொடை உண்டு. இது ஒருவருக்கு ஒருவகையாகவும் வேறொருவருக்கு வேறுவகையாகவும் இருக்கிறது" (1கொரி 7:7).


 இறைவன் நம்மை எத்தகைய வாழ்க்கை நிலைக்கு அழைத்தாலும் அவருடைய அழைத்தலைத் தாராள உள்ளத்துடனும் திறந்த மனதுடனும் ஏற்பது நமது கடமையாகும் "ஆண்டவரே உமது திருவுளத்தை நிறைவேற்ற இதோ வருகிறேன்" (பதிலுரைப்பாடல்). இதுவே நமது மனநிலையாக இருக்க வேண்டும் ஒரு பேருந்தில் கண்டெக்டர் பயணிகளிடம் கை நீட்டிக் காக வாங்கி'டிக்கெட் கொடுத்துக் கொண்டிருந்தார். அதே பேருந்தில் ஒரு பிச்சைக்காரனும் பயணிகளிடம் கை நீட்டிக் காசு வாங்கிக் கொண்டிருந்தான் கண்டெக்டர் கோபத்துடன் பிச்சைக்காரனிடம், வண்டியை விட்டுக் கீழே இறங்குடா. இரண்டுபேரும் பயணிகளிடம் கைநீட்டிக்காக வாங்குறோம் யார் கண்டெக்டர்? யார் பிச்சைக்காரன்? என்ற விவஸ்தை இல்லாமல் போயிடுச்சு" என்றார்

அவ்வாறே இன்று திருச்சபையிலும் யார் திருப்பணியாளர்கள்? யார் பொதுநிலையினர்? என்ற வேறுபாடு தெரியாமல் போய்விட்டது. பொதுநிலையினர் திருப்பணியாளர் களாகவும் திருப்பணியாளர்கள் பொதுநிலையினராகவும் மாறிக்கொண்டு வருகின்றனர். எனவேதான், சாமியர்களின் சம்சாரித்தனமும் சம்சாரிகளின் சாமியார்த்தனமும் கண்டிக்கப்பட வேண்டும்" என்றார் திருத்தந்தை இரண்டாம் ஜான் பால்
குருப்பட்டம் என்ற அருளடையாளத்தால் குருக்கள் கிறிஸ்துவின் சாயலுக்கு ஒத்தவர்களாகின்றனர். எனவே அவர்கள் கிறிஸ்துவின் இடத்தில், கிறிஸ்துவின் பெயரால், கிறிஸ்துவின் ஆளுமையில் (in the person of Christ) இறைமக்களுக்குப் போதிக்கின்றனர்; அவர்களைப் புனிதப்படுத்துகின்றனர். அவர்களுக்கு நல்ல ஆயனாக இருந்து வழிநடத்துகின்றனர். அவர்கள் உலகில் இருந்தாலும் அவர்கள் உலகைச் சார்ந்தவர்கள் அல்ல (யோவா 17:16)


ஆனால், பொதுநிலையினரோ உலகத்தில் இருக்கின்றனர். உலகைச் சார்ந்தும் இருக்கின்றனர்; உலகக் காரியங்களில் ஈடுபடுகின்றனர் உலகைச் சார்ந்திருக்கும் பண்பு பொது நிலையினரின் தனிப்பட்ட அழைத்தலாகும் என்று இரண்டாவது வத்திக்கான் சங்கம் உறுதிபடக் கூறியுள்ளது. உலகின் நடுவே வாழ்ந்து குடும்பம், அரசியல், பொருளாதாரம், கலை, கல்வி ஆகிய உலகியல் காரியங்களில் ஈடுபட்டு, உலகியல் காரியங்களை நற்செய்தி மதிப்பீடுகளால் ஊடுருவி, புளிப்பு மாவு போல் (மத் 13:33) பொதுநிலையினர் உலகில் இறையரசைக் கட்டி எழுப்புகின்றனர். இதுவே பொதுநிலையினரின் தனிப்பட்ட அழைத்தலாகும்


பரமசிவன் கழுத்திலிருந்த பாம்பு கேட்டது. கருட செளக்கியமா? இருக்கும் இடத்தில் இருந்து விட்டால் எல்லாரும் செளக்கியமே கருடன் சொன்னது ஆம் இல்லறத்தாரும் துறவறத்தரும் தத்தம் அழைத்தலுக்குப் பிரமாணிக்கமாய் இருந்துகொண்டு. தங்களின் கிறிஸ்துவ, சமுதாயக்கடமைகளை நிறைவேற்றினால் எல்லாம் நலமுடன் இருக்கும். "ஒவ்வொருவரும் எந்நிலையில் அழைக்கப்பட்டிருக் கிறார்களோ அந்நிலையிலே நிலைத்திருக்கட்டும்" (1கொரி 7:20).


இல்லறத்தாரும் துறவறத்தாரும் தத்தம் கடமைகளைச் செம்மையாகச் செய்து முடிக்க இறைஅனுபவம் தேவை. "வந்துபாருங்கள்" (யோவா 1:39) என்ற இயேசுவின் அழைப்பை ஏற்ற முதல் சீடர்கள் இயேசுவுடன் ஒருநாள் தங்கி, இறைஅனுபவம் பெற்று, மற்றவர்களையும் அவரிடம் அழைத்து வந்தனர். அவ்வாறே நாமும் இயேசுவைக் குறிப்பாக அருள்வாக்கு அருளடையாளங்கள் வழியாகச் சந்தித்து, இறை அனுபவம் பெற்று, எல்லாரையும் இயேசுவிடம் கொண்டுவருவது நமது அழைத்தலாகும்.





இறைவனைத் தேடு

அருள்தந்தை ம.அருள்  – ஞாயிறு இறைவாக்கு


மனித வாழ்வு என்பது ஒரு தேடல், மனிதன் மகிழ்ச்சியை அடைய ஒடித் திரிகின்றான். நண்பர்களைச் சம்பாதிக்க ஒடித் திரிகின்றான். பணத்தைத் திரட்ட ஒடித் திரிகின்றான். பட்டம் பதவிக்காக ஒடித் திரிகின்றான். பிரச்சனையைத் தீர்த்து வைக்க ஒடித் திரிகின்றான். உடலால் உள்ளத்தால் ஏற்படும் நோயிலிருந்து விடுதலைப் பெற ஒடித் திரிகின்றான். ஆனால் இவை அனைத்தும் இறைவனைத் தேடுவதில் முடிவு பெற வேண்டும்.


வாழ்வு என்பது மனிதனுக்கு இறைவன் தந்த அழைப்பு. எதற்காக? மகிழ்ச்சியைப் பெறுவதற்காக, சாதனைகளைச் செய்து முடிக்க, கடமையை நிறைவேற்ற சேவை செய்ய. ஏன், தன்னையே பலியாக்க - இந்த அழைப்பு நண்பர்களினாலோ, உறவினர் களினாலோ, அதிகாரிகளினாலோ பலவித சூழ்நிலைகளில் வாழும் மக்களாலோ வரலாம். ஆனால் இவையனைத்தும் இறுதியில் கடவுளின் இறுதி அழைப்பில் நிறைவு பெற வேண்டும். வாருங்கள் தந்தையில் ஆசி பெற்றவர்களே. உங்களுக்காக ஏற்பாடு செய்துள்ள அரசு உங்களுக்கு உரிமையாகுக (மத். 25:34).


இன்றைய வார்த்தை வழிபாட்டிலே தரப்பட்டிருக்கின்ற வாசகங்களுக்கு வருவோம். இன்று தெளிவாக உண்மையான சீடனாக இருக்கின்றவர்களுக்கு உரிய தேடுதலும், அழைப்பும் தெளிவாக்கப்பட்டிருப்பதை நாம் காண வேண்டும்.

திருமுழுக்கு யோவானின் சீடர்களில் இருவர் இயேசுவைத் தேடி வருகின்றார்கள். ஆனால் தேடியவர்கள் நீர் யார் என்று கேட்கத் துணிவில்லை. ஆனால் இயேசுவோ திரும்பிப் பார்த்து எதைத் தேடுகிறீர்கள் என்று கேட்கின்றார்? இதிலிருந்து எல்லா அழைப்பும் இறைவனிடமிருந்தே வருகின்றன என்பதை அறிய வேண்டும். சீடர்கள் கேட்ட கேள்வி? போதகரே நீ எங்கே இருக்கிறீர்? இங்கே இருக்கிறேன் என்று விளக்கம் தந்தாரா? இல்லை. "வந்து பாருங்கள்” (யோவா. 1:39) என்றார் இயேசு. இவர்கள் சென்றார்கள். இயேசுவோடு தங்கினார்கள். அவரை அறிந்தார்கள். அனுபவித்தார்கள் (திபா. 34:8). அவரது சீடராக மாறினார்கள்.


சென்னையில் நடந்த அகில இந்திய அருங்கொடை மாநாட்டிலிருந்து திரும்பிய பின் என்னைச் சந்தித்த பலர் என்னைப் பார்த்துக் கேட்டார்கள், மாநாடு எப்படி இருந்தது என்று? நான் அவர்களுக்குச் சொன்ன பதில் என்ன தெரியுமா? நீங்கள் அங்கு வந்து பார்த்திருக்க வேண்டும். ஏனெனில் நான் பெற்ற இறை அனுபவத்தை வார்த்தைகளால் விளக்க முடியாது, அனுபவித்தால் மட்டுமே முடியும் என்றேன். இதைத்தான் இயேசு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சொன்னார்: வந்து பாருங்கள் என்னிடம் வருபவனுக்கு பசியே இராது. என்னிடம் விசுவாசம் கொள்பவனுக்கு என்றுமே தாகம் இராது (யோவா. 6:35) என்றார்.


நம்முடைய வாழ்க்கையைச் சிறிது சிந்திப்பது நல்லது. அந்த இரண்டு சீடர்கள் வழியே கண்டு, கேட்டு, அறிந்து, விலகிச் செல்லவில்லை. அவரோடு சென்று தங்கி, அனுபவித்து உறவு கொண்டு வாழ்வு பெற்றார்கள்.


நான் இருக்கும் இடத்தில் நீங்களும் இருப்பீர்கள் (யோவா. 14:3) என்கிறார் ஆண்டவர்.


புனித திருமுழுக்கு யோவான் இயேசுவின் முன்னோடியாக வந்தவர். இயேசுவை முன்னறிவிக்கின்றார். உலகின் பாவங்களைப் போக்க வந்த செம்மறி (யோவா. 1:29) என்று அறிமுகப்படுத்து கின்றார்.


இப்படி இயேசு கடவுளின் செம்மறி என்று அறிவிக்கிறார். நாம் இயேசுவின் சீடர்களாக இருக்க வேண்டுமானால் நாம் அவரோடு இருக்க வேண்டும். அவரின் வாழ்வையும், பணியையும் நாம் பகிர்ந்து கொள்ள வேண்டும். அதோடு மட்டுமல்ல நாமும் இறைவனின் செம்மறிகளாக, பிறரைப் பாவங்களிலிருந்து விடுவிக்கும் செம்மறிகளாக மாற வேண்டும். தவறான எண்ணங்கள், தவறான மதிப்புகள், நிலையற்ற பற்றுகள் ஆகியவற்றிலிருந்து விடுவிக்கும் செம்மறிகளாக மாற வேண்டும்.


1. கிறிஸ்து இயேசுவில் அன்புக்குரியவர்களே நாம் இயேசுவைத் தேடி வந்திருக்கின்றோம். ஆனால் அவரைப் பார்த்துச் செல்லும் மக்களாகத்தான் நாம் காலம் கடத்திக் கொண்டிருக்கிறோம். ஒவ்வொரு வாரமும் நாம் ஏதோ வழிப்போக்கர்களைச் சந்தித்தது போல் நாமும் சந்தித்தவர்களாக இன்னும் அவரை அனுபவிக்காதவர்களாகத்தான் இருக்கின்றோம். கடவுளின் அழைப்பை உணராது, உலக அழைப்புகளுக்கு உலகத்தின் ஆசைகளுக்கு இடம் கொடுக்கும்போது நாம் அவரோடு வாழ முடியாது.


2. அதே நேரத்தில் ஓர் எச்சரிக்கை. இயேசுவைக் காட்டிக் கொடுத்தவன் யார்? இயேசுவின் சீடரில் ஒருவன்தான். சீடன் என்று உலகத்திற்கு முன்பாகப் பெயர் பெற்றான். ஆனால் அவரை அனுபவிக்க முடியவில்லை. பணத்தையும், புகழையும் பெற்றான். ஆனால் வாழ்வை இழந்தான். அவனுக்குச் சீரழிவுதான். இந்த நிலை நமக்கு நேரக் கூடாது.





No comments:

Post a Comment