Tuesday 22 May 2018

மூவொரு கடவுள் பெருவிழா

மூவொரு கடவுள் பெருவிழா 

இச 4:32-34, 39-40; உரோ 8:14-17; மத் 28:16-20


மகிழ்ச்சியூட்டும் மறையுரைகள்

குடந்தை ஆயர் அந்தோனிசாமி


தவமின்றி அழகில்லை ; வரமில்லை
மூவொரு இறைவன் யார்?


மோசே காலத்தில் மாபெரும் செயல்களைப் புரிந்தவரே தந்தை இறைவன் (முதல் வாசகம்).
எப்படிப்பட்ட கட்டளைகளைப் பின்பற்றி வாழவேண்டும் என்பதைக் கற்பித்தவர் மகன் இயேசு (நற்செய்தி).
நம்மைக் கடவுளின் பிள்ளைகளாக்கி, இன்று வழிநடத்தி வருபவர் தூய ஆவியார் (இரண்டாம் வாசகம்).
மூவொரு இறைவனால் நமக்குக் கிடைக்கும் வரங்கள் யாவை?
1. நமக்குள் அதிசயங்கள் நிகழும்.
2. நாம் எப்படி வாழவேண்டும் என்ற உண்மை நமக்கு விளங்கும்.
3. நாம் கடவுளின் மக்களாகும் பேற்றினைப் பெறுவோம்.
மூவொரு இறைவனைப் பற்றிய அறிவை எப்படிப் பெறுவது?
பட்டாம்பூச்சியும், தட்டாம்பூச்சியும் ஒருநாள் சந்தித்துக்கொண்டன. தட்டாம்பூச்சி பட்டாம்பூச்சியைப் பார்த்து : பூப்பூவா பறந்துபோகும் பட்டுப்பூச்சி அக்கா ... நீ பளபளன்னு போட்டிருப்பது யாருகொடுத்த சொக்கா? என்றது!
மேலும் ஒரு கேள்வி ! என் சிறகுகள் வெள்ளையாக இருக்கின்றன! ஆனால் உன்னுடைய சிறகுகள் மட்டும் எப்படி இப்படி கலர் கலரா இருக்கின்றன? என்றது தட்டாம்பூச்சி!
அதற்கு பட்டாம்பூச்சி: நீ உன் தாயின் வயிற்றிலிருந்து நேரடியாக வந்துவிடுகின்றாய்! நான் அப்படி அல்ல. பிறக்கும்போது புழுவாகப் பிறந்து, பிறகு கூட்டுப்புழுவாகி, கூட்டுக்குள் நாற்பது நாள்கள் கடும் தவம் செய்தேன். தவத்தின் முழுமையை அடைந்தபோது கூட்டை உடைத்துக் கொண்டு வெளியே வந்தேன். தவமின்றி அழகில்லை; வரமில்லை என்றது.

நமது அறிவு அழகுள்ளதாகி அழகே உருவான மூவொரு இறைவனின் பாதங்களை அடைய விரும்பினால் நாம் தவம் செய்யவேண்டும். அதாவது அமைதியான இடத்திலே அமர்ந்து தியானம் செய்யவேண்டும்.

தியானத்திற்குக் கீழ்க்கண்ட விவிலியப் பகுதிகளைப் பயன்படுத்தலாம் :
மத் 3:11, 12:32, 28:19, மாற் 13:11, 14:36, லூக் 4:1, 6:36, 10:21, 11:13, யோவா 1:33, 3:35, 6:44, 8:41, 10:30, 14:26, 20:22.
மேலும் அறிவோம் :
உற்றநோய் நோன்றல் உயிர்க்(கு)உறுகண் செய்யாமை
அற்றே தவத்திற்(கு) உரு (குறள் : 261).

பொருள் : தமக்கு நேரும் துன்ப துயரங்களைத் தாங்கிக் கொள்வதும், பிற உயிர்களுக்குத் தீங்கு செய்யாமல் இருப்பதுமே தவத்திற்குரிய வடிவமாகும்.






கல்லரைக்கு அப்பால்

அருள்பணி இ.லூர்துராஜ்


ஓதற்கு அரியவன் இறைவன்

திரினிடாட் (Trinidad) என்ற தீவு ஒன்று உண்டு. திரித்துவத்தின் (மூவொரு கடவுளின்) பெயரால் அழைக்கப்படுகிறது அத்தீவு. அத்தீவிற்கு அப்பெயரைச் சூட்டியவர் கிறிஸ்டோபர் கொலம்பஸ். எந்த ஒரு வேலையைத் தொடங்கு முன்னும், எந்த ஒரு கடிதத்தை எழுதுமுன்னும் தூய திரித்துவத்தின் பெயரால்' என்று தான் தொடங்குவார். புதிய உலகைக் கண்டுபிடிக்கும் தனது திட்டம் பற்றி அறிவியல் அறிஞர்கள், இறையியல் வல்லுனர்கள் கூடியுள்ள குழுவில் விளக்கும் போது "மூவொரு கடவுளின் பெயரால் உங்கள் முன்னே நிற்கிறேன்" என்றார். 1598 ஆம் ஆண்டில் தனது மூன்றாம் கடற்பயணத்தைத் தொடங்கினார். "தான் கண்டுபிடிக்கும் முதல் இடத்தைத் திரித்துவத்திற்கு அர்ப்பணிப்பேன்" என்று நேர்ந்தார். அவ்வாறு முதல்முதலில் அவர் கண்டுபிடித்த இடத்திற்கு அவர் இட்ட பெயர்தான் திரினிடாட்.

மூவொரு கடவுளின் வெளிப்பாடு கிறிஸ்தவ வாழ்வின், நம்பிக்கையின் மையம். நியூட்டன் போன்ற மேதைகள் மூவொரு கடவுளின் மீது வைத்திருந்த பற்று, பக்தி, நம்பிக்கை ஆழமானது. விவிலியத்திலும் வாழ்விலும் தம்மை வெளிப்படுத்திய மூவொரு இறைவனை அனுபவித்து உணர்ந்தவர்கள். அன்பு மயமான இறைவனின் அன்பிற்குள் மூழ்கித் திளைத்துத் தம் வாழ்வின் ஆழத்தைக் கண்டு பிடித்தவர்கள்.

தூய தாமஸ் அக்குவினாஸ் கடவுளைப் பற்றிய தன்னுடைய சிந்தனைகள், புரிதல்களை “Summa Theologica” என்ற தலைப்பில் மூன்று பகுதிகளாக எழுதியிருக்கிறார். முதலிரண்டு பகுதிகளை முடித்து விட்டு மூன்றாவது பகுதியை எழுதிக் கொண்டிருந்த நேரம், 1273 டிசம்பர் 6ஆம் நாள் நேப்பிள்ஸ் நகரில் திருப்பலி நிறைவேற்றிக் கொண்டிருக்கும் போது இறையனுபவத்துக்கு ஆட்பட்டு விடுகிறார். இந்த இறையனுபவத்துக்கு ஆட்பட்ட பின்பு, தனது நூலின் மூன்றாவது பகுதியைத் தொடர்ந்து எழுத ஆர்வம் காட்டவில்லை. மூன்றாவது பகுதியை விரைவில் முடித்து விடுவார் என்று எதிர்பார்த்திருந்த அவரது சபையினருக்கு இது ஏமாற்றமாக இருந்தது.

எனவே அவரைக் கட்டாயப்படுத்தி அவரது அறையில் அமர வைத்து எழுதச் சொல்லியும் அவர் எழுத ஆர்வம் காட்டவில்லை. கடைசியாக, சபைத் தலைவர் "கீழ்ப்படிதல் என்ற வார்த்தைப் பாட்டின் பெயரால் நீர் எழுதத் தொங்கிய அந்த நூலை முடிக்கும்படி உமக்கு நான் ஆணையிடுகிறேன் என்று சொன்னபோது தாமஸ் அக்குவினாஸ் இவ்வாறு பதிலளித்தாராம்: "தலைவர் தந்தை அவர்களே, என்னை ஆட்கொண்ட அந்தக் குறுகிய கால இறைஅனுபவத்தோடு ஒப்பிடும் போது, நான் கடவுளைப் பற்றி எழுதியவை அனைத்தும் ஒன்றுமில்லாமைக்குச் சமம் - எல்லாம் தூசும் வைக்கோலும் போல.

எப்படி மூன்று ஆட்கள் ஒரே கடவுளாக இருக்க முடியும் என்று புரிந்து கொள்ள முயற்சி செய்வதனாலோ, விவாதிப்பதனாலோ நாம் கடவுளைப் புரிந்து கொள்ளப் போவதில்லை, மாறாக, செபம் மற்றும் தியானம் வழியாக இறைவனால் ஆட்கொள்ளப்படும் போது, இறைவனை அனுபவப் பூர்வமாக உணரும் போது, நம்முடைய அறிவுப் பூர்வமான குழப்பங்கள் நம்மை விட்டு அகல ஆரம்பிக்கின்றன.

மூவொரு கடவுள் ஆய்வுக்குரியவரல்லர். அனுபவத்துக்குரியவர். தூய தாமஸ் அக்குவினாஸ் சொல்வார்: “கடவுளைப் பற்றிப் பேசாமல் நம்மால் இருக்க முடியாது. ஆனால் அவ்வாறு பேசும் போது, நம்மால் உளறத்தான் முடியுமேயொழிய தெளிவாகப் பேச முடியாது'.

வாய் வார்த்தைகளால் கடவுளை நிரூபிப்பது கடினம். ஏன் அப்படி? அது, நிழல் என்றால் என்ன என்று ஒரு பார்வையற்றவருக்கு விளக்க முயற்சி செய்வது போன்ற செயல். பார்வையற்றவர் வெளிச்சத் தையே பார்த்திராதவர் அல்லவா! எனவே அவருக்கு ஒளி என்றாலே என்னவென்று தெரியாது. அப்படியிருக்கும்போது ஒளி உருவாக்கும் நிழலைப் பற்றி அவருக்கு எப்படி விளக்குவது? கடவுளின் படைப்பையே வார்த்தைகளால் விளக்கி விவரிக்க முடியாதெனில், அதைப் படைத்த கடவுளை எப்படி விவாதத்தால் வார்த்தைகளால் புரிய வைக்க முடியும்? அதனால்தான் "உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன் இறைவன்" என்கிறது பெரிய புராணம்.

உச்சரிப்புக்கு அடங்காத உயிர் மூச்சு ஒன்று ஆன்மாவின் ஆழத்தில் ஊன்றப்பட்டுள்ளது. அதற்குப் பெயர்தான் அனுபவம் ஆராய்ச்சியைக் கடந்தது.

அன்பு என்றால் என்ன? பதில் சொல்லுங்கள்! அறிவுக்கோ விளக்கத்துக்கோ உரிய பொருள் அல்ல அது. அனுபவத்திற்குரிய பொருள். அழகும் அவ்வாறே. கற்பும் அவ்வாறே.

கடவுளும் அத்தகையவரே! ஆராய்ந்து அல்ல, அனுபவித்து உணரப்பட வேண்டியவர். “நான் உங்களிடம் சொல்ல வேண்டியவை இன்னும் பல உள்ளன. ஆனால் அவற்றை இப்போது உங்களால் தாங்க இயலாது" (யோவான் 16:12). கடவுள் ஒருமறைபொருள் என்பதே அதன் பொருள். எனவே இயேசு தொடர்ந்து சொல்வார்: “உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார் வரும்போது அவர் முழு உண்மையை நோக்கி வழிநடத்துவார்” (16:13).

"அம்மையப்பன்” ''சத்(உண்மை ) சித் (அறிவு) ஆனந்தன் (இன்பம்)” இவையெல்லாம் கடவுள் பற்றிய மனிதக் கண்ணோட்டங்கள். இறைவன் தாமே தன்னைப் பற்றி வெளிப்படுத்தியது: "தந்தை, மகன், தூய ஆவி' என்ற திரித்துவத் தத்துவம்.

ஜூனாய்டு என்ற ஞானியிடம் சீடன் ஒருவன் வந்து கேட்டான் "உங்களிடம் கடவுள் ஞானம் என்கிற முத்து இருப்பதை உணர்கிறேன். மற்றவர்களும் அதைப்பற்றிச் சொல்லியிருக்கிறார்கள். அந்த முத்து எனக்குக் கொஞ்சம் தேவை. அதை எனக்கு விலைக்கோ அல்லது இலவசமாகவோ கொடுங்கள்'' ஞானி என்ன பதில் சொன்னார் தெரியுமா?

''சீடனே, உனக்கு நான் அதை விற்க முடியாது. ஏனென்றால் அதன் விலையை உன்னால் கொடுக்க முடியாது. இனாமாகக் கொடுக்கலாம் என்றால், அதை நீ மதிக்க மாட்டாய். அதனால் என்னைப் போலவே நீயும் கடவுள் என்ற அந்த ஆழ்கடலில் மூழ்கி எழுந்திரு. நீயும் ஒரு முத்து எடுத்து வரலாம் என்றார்.

14ஆம் நூற்றாண்டில் மெய்ஸ்டர் எக்ஹார்ட் என்ற துறவி சுவைத்துச் சொன்னார்:"கடவுள் சிரித்தார். திருமகன் பிறந்தார் தந்தையும் மகனும் சிரித்தார்கள். தூய ஆவி பிறந்தார்.
தந்தை மகன் தூய ஆவி மூவரும் சிரித்தார்கள். இந்த உலகம் பிறந்தது''.







மறையுரைமொட்டுக்கள்

அருள்பணி Y.இருதயராஜ்


வேதியர் ஒருவர் திருமண ஒலை எழுதுவதற்கு வந்த மாப்பிள்ளைக்குத் தேவையான மந்திரங்களைக் கற்றுக் கொடுத்து, அவரைப் பங்குத் தந்தையிடம் அழைத்துச் சென்றார். வேதியர் பங்குத் தந்தையின் பின்புறம் நிற்க, மாப்பிள்ளை பங்குத் தந்தையின் முன்புறம் நின்றார். பங்குத் தந்தை மாப்பிள்ளையிடம், "ஒரே கடவுள் எத்தனை ஆட்களாக இருக்கிறார்? என்று கேட்டார். மாப்பிள்ளை பதில் கூறமுடியாமல் மேலும் கீழும் விழித்தார். பங்குத் தந்தையின் பின்புறம் நின்று கொண்டிருந்த வேதியர் மூன்று விரலைக் காட்டினார். அதைப் பார்த்த மாப்பிள்ளை பங்குத் தந்தையிடம், "சாமி! வேதியர் ஏற்கெனவே என்னிடமிருந்து மூன்று ரூபாய் வாங்கிக் கொண்டார். இப்போது மறுபடியும் மூன்று ரூபாய் கேட்கிறார். இது சரியா?" என்றார்!


 கடவுள் ஒருவர் இருக்கிறார் என்பதைப் பகுத்தறிவுள்ள எவரும் எளிதாக அறிந்து கொள்ள முடியும். ஆனால், ஒரே கடவுள் மூன்று ஆள்களாக, அதாவது, தந்தை, மகன், தூய ஆவியராக இருப்பதைப் பகுத்தறிவால் மட்டும் அறிய இயலாது. அதற்கு இறை வெளிப்பாடு தேவை, "கடவுளை யாரும் என்றுமே கண்டதில்லை), தந்தையின் நெஞ்சத்திற்கு நெருக்கமானவரும் கடவுள் தன்மை கொண்டவருமால் ஒரே மகளே அவரை வெளிப்படுத்தினார்" (யோவா 1:18) "தந்தையைத் தவிர வேறு எவரும் மகனை அறியாம் , மகனும், அவர் யாருக்கு வெளிப்படுத்த வேண்டுமென்று விரும்புகிறாரோ அவருமின்றி, வேறு எவரும் தந்தையை அறியார்" (மத் 11:27).

கிறிஸ்துவே மூவொரு கடவுளை நமக்கு வெளிப்படுத்தியுள்ளார். தாம் தந்தையிடமிருந்து வந்ததாகவும், தந்தையிடம் திரும்பிப் போவதாகவும், விண்ணகம் சென்றபின் தூய ஆவியாரை அனுப்ப இருப்பதாகவும் சீடர்களுக்கு அவர் தெள்ளத் தெளிவாகக் கூறினார் (யோவா 14:13-16). இன்றைய நற்செய்தியில், உயிர்த்த ஆண்டவர் விண்ணகம் செல்லுமுன் தம் சீடர்களிடம், "நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் என் சீடராக்குங்கள். தந்தை மகள் தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள்" (மத் 28:19) என்று கூறுகிறார்.

எனவே, கிறிஸ்துவே அதை நமக்கு வெளிப்படுத்தியால், கடவுளைப் பொருத்தமட்டில் 'ஆள் வகையில் தனித் தன்மையையும், இறையியல்பில் ஒருமையையும், மகத்துவத்தில் சமத்துவத்தையும் ஏற்றுக் கொண்டு, இருந்தவரும், இருக்கிறவரும் வரவிருக்கிறவருமான (திவெ 1:18), தந்தை , மகன், தூய ஆவியாரை ஆராதித்து மகிமைப்படுத்துவோம்.

மூவொரு கடவுளுக்கும் நமக்கும் உள்ள உறவை திருத்தூதர் பவுல் தமது வாழ்த்துரையில் பின்வருமாறு வெளிப்படுத்தியுள்ளார்: "ஆண்டவர் இயேசுகிறிஸ்துவின் அருளும் கடவுளின் அன்பும் தூய ஆவியாரின் நட்புறவும் உங்கள் அனைவரோடும் இருப்பதாக" (2கொரி 13:13), இந்த வாழ்த்துரையைத் தான் திருச்சபையும் திருப்பலியின் ஆரம்பத்தில் நமக்கு வழங்குகிறது.

தந்தையின் தனிப்பண்பு அன்பு: மகனின் தனிப்பண்பு அருள்; தூய ஆவியாரின் தனிப்பண்பு நட்புறவு, தந்தை நம்மை அன்பு செய்து, நம்மைத் தொடர்ந்து பாதுகாக்கின்றார். கிறிஸ்து தமது அருளால் நம்மை மீட்டுக் கொண்டிருக்கிறார். தூய ஆவியார் தமது நட்புறவால் நம் உள்ளத்தில் குடியிருந்து நமக்குப் புத்துயிர் அளித்துக் கொண்டிருக்கிறார். இவ்வாறு மூவொரு கடவுளோடு நமது வாழ்வு என்றுமே பின்னிப் பிணைக்கப்பட்டுள்ளது.

மூவொரு இறைவன் நாம் வணங்குவதற்குரிய மறைபொருள் மட்டுமல்ல, நமது அன்றாட வாழ்வில் பின்பற்ற வேண்டிய மறைபொருளுமாவார், தந்தை தமது மகனை முழுமையாக அன்பு செய்து, அவருக்குத் தம்மை முழுமையாக கையளிக்கிறார், அவ்வாறே மகனும் தந்தையை அன்பு செய்து, அவருக்குத் தம்மை முழுமையாகக் கையளிக்கிறார். இவர்களுடைய பரஸ்பர அன்பிலிருந்து பிறப்பவர்தான் தூய ஆவியார். மூவொரு இறைவனின் அன்பு வாழ்வைக் குடும்ப வாழ்வும் பிரதிபலிக்கிறது. கணவனும் மனைவியும் ஒருவர் மற்றொருவரை அன்பு செய்து தங்களை முழுமையாகக் கையளிக்கின்றனர். இவ்விருவரின் பரஸ்பர அன்பின் கனிதான் குழந்தை. எனவே ஒவ்வொரு குடும்பமும் மூவொரு இறைவனின் குடும்பத்தை அடித்தளமாகக் கொண்டுள்ளது என்றால் அது மிகையாகாது.

மேலும், மூவொரு கடவுள், தந்தை மகன் ஆவியார், ஒருவர் மற்றவருடைய தனித்தன்மையை மதிக்கின்றனர். ஒருவர் மற்றவரை மகிமைப்படுத்துவதிலேயே குறியாக இருக்கின்றனர். தத்தை மகனையும், மகன் தந்தையையும். தூய ஆவியார் மகனையும் மகிமைப்படுத்துகின்றனர்.
இம்மூவொரு கடவுளைப் பின்பற்றி நமது குடும்ப வாழ்விலும் சமூக வாழ்விலும் ஒருவர் மற்றவருடைய தனித்தன்மையை ஏற்று, மதித்து, நமது மகிமையைத் தேடாமல் மற்றவர்களின் மகிமையைத் தேடி, பிறர்க்கு நம்மை முழுமையாகக் கையளித்து ஒருவருக்கொருவர் 'அன்பின் அடிமைகளாக' (கலா 5:13) வாழக்கற்றுக் கொள்ளலாம்.

ஒரு வறண்ட ஆற்றில், ஒரு சிறிய குழியில் மட்டும் சிறிதளவு தண்ணீர் இருந்தது. அதில் ஒரு பெரிய மீன் ஆனந்தமாக நீந்திக் கொண்டிருந்தது. அதைப்பார்த்த ஒரு குரங்கு, மீன் தண்ணீரில் விழுந்து தத்தளித்துக் கொண்டிருக்கிறது என்று திளைத்து, அதற்கு முதல் உதவி செய்யும் எண்ணத்துடன், அதைத் தண்ணிரிலிருந்து வெளியே எடுத்துத் தரையில் போட்டது. சிறிது நேரத்தில் மீன் துடிதுடித்து செத்துவிட்டது. அதைக்கண்ட குரங்கு, “மீன் சாக வேண்டிய நேரம் வந்து விட்டதால், அது செத்துவிட்டது. ஆனால், அது மறையுரை மொட்டுக்கள்.

தண்ணீரில் மூச்சுத் திணறிச் சாகாமல், தரையில் நிம்மதியாகச் சாக, நான் உதவி செய்துள்ளேன்" என்று தன்னைத்தானே பாராட்டிக் கொண்டது.
குரங்கு மீனை அன்பு செய்தால், அம்மீனைத் தண்ணீரில் வைத்துத் தான் அன்பு செய்திருக்க வேண்டும். மாறாக, தானிருப்பது போலவே மீனும் தரையில் இருக்க வேண்டும் என்று விரும்பி, அதை அதன் இயல்பான சூழலிலிருந்து வெளியே கொண்டு வந்து சாகடித்திருக்கக்கூடாது.


நாமும் மற்றவர்களை அன்பு செய்யும் போது. அவர்களுடைய தனித்தன்மையை, விருப்பு வெறுப்புக்களை மதித்து அன்பு செய்ய வேண்டும், அதற்கு மாறாக, அவர்களை நம்மைப்போலாக்க முயற்சிப்பது அவர்களது ஆளுமையைக் கொலை செய்வதற்கு ஒப்பாகும். பிறருடைய தனித்தன்மையை மதித்தும், பிறருடன் இணைத்தும் செயல்படும்போது | மூவொரு கடவுளை நம் வாழ்வில் பிரதிபலிக்கிறோம்.


நான் உங்களோடு!

'லைக் தெ ஃப்ளோயிங் ரிவர்' என்ற தனது புத்தகத்தில் பவுலோ கொயலோ பின்வரும் நிகழ்வைப் பதிவு செய்கின்றார்: 'பைஜாமா அணிந்த மனிதர்.' 2005ஆம் ஆண்டு மே மாதம் 25ஆம் நாள் ஜப்பான் நாட்டின் டோக்கியோ நகரின் ஒரு செய்தித்தாளின் ஆன்லைன் பதிப்பில் 'பைஜாமா அணிந்த ஒருவர் இறந்து கிடந்தார்' என்ற செய்தி வந்தது. யாராவது ஒருவர் இறந்தால் அவர் இல்லத்தில் அல்லது மருத்துவமனையில் தம் நண்பர்கள், உறவினர்கள் சூழ இருந்திருப்பார். அவர் இறந்த இடம் இல்லமோ, மருத்துவமனையோ அல்ல. பாழாய்ப்போய்க் கிடந்த 25 மாடிக் கட்டிடத்தை உடைக்க தொழிலாளர்கள் சென்றபோது ஒரு அறையில் 'பைஜாமா அணிந்த ஒருவர் படுத்துக்கிடந்தார்.' பைஜாமா அணிந்த ஒரு எலும்புக்கூடு படுத்துக்கிடந்தது. அந்த எலும்புக்கூட்டின் அருகே 1985ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 20ஆம் நாள் வெளியான செய்தித்தாள் ஒன்று கிடந்தது. அங்கே விரித்து வைக்கப்பட்டு தூசி நிரம்பியிருந்த மேசை நாட்காட்டியும் அதே நாளைத்தான் காட்டியது.இவர் யார் என்று விசாரித்தபோது, இவர் ஒரு பெரிய பிஸினஸ்மேன் என்றும், இவருடைய தொழிலில் நஷ்டம் ஏற்பட்டபின் இவருடைய மனைவி இவரைவிட்டுப் பிரிந்துவிட்டார் என்றும், இவர்களுக்குக் குழந்தைகள் இல்லை என்றும் கண்டுபிடிக்கின்றனர்.

ஏறக்குறைய 20 ஆண்டுகள் ஒருவர் இந்தப் பூமிப்பந்திலிருந்து மறைந்து போயிருக்கிறார். அவரைத் தேடியவர் யாருமில்லை. டோக்கியோ நகரம் மின்னணு இணைப்பில் மேலோங்கி நிற்கின்ற நகரம். இப்படிப்பட்ட நகரத்திலும் தொலைந்துபோன இவரைத் தேடியவர் யாரும் இல்லை.

பைஜாமா அணிந்து கிடந்த இந்த மனிதர் அனுபவித்த ஒரே உணர்வு தனிமை. தனிமை என்பது ஒரு உணர்வு மட்டுமல்ல. அது ஒரு செயல்பாடு. ஏனெனில் அந்த உணர்வு ஒருவருக்கு வந்தவுடன் அவர் மற்றவர்களைவிட்டு தனியே சென்றுவிடுகின்றார். அல்லது தனித்துவிடப்படுகின்றார்.

இன்று மூவொரு இறைவன் பெருவிழாவைக் கொண்டாடுகிறோம். தனிமை இனிமை அல்ல என்று நமக்கச் சொல்கிறது இன்றைய பெருவிழா.

'இவ்வாறு, முதலும் முடிவுமற்ற உண்மையான இறைத்தன்மையை அறிக்கையிடும்போது,
ஆள்வகையில் தனித்தன்மையையும்,
இறையியல்பில் ஒருமையையும்,
மகத்துவத்தில் சமத்துவத்தையும் ஆராதிக்கின்றோம்!'
என்று இன்றைய நாளின் மறைபொருளைப் பதிவு செய்கிறது இன்றைய திருப்பலியின் தொடக்கவுரை (பழைய மொழிபெயர்ப்பு).

மூவொரு இறைவனில் காணப்படும் தனித்தன்மையும், ஒருமையும் தனிமை அன்று. மாறாக, 'இதோ நான் உங்களோடு இருக்கிறேன்' என்று அவர்கள் ஒருவர் மற்றவருக்குத் தரும் வாக்குறுதி.

'மனிதன்-மனிதை ஒரு சமூகப் பிராணி - ஆகையால்தான் இவர்கள் தனிமையை உணர்கிறார்கள்' என்கிறது சமூக அறிவியல்.

'குறைவு மனப்பான்மை (sense of lack), இழப்பு (sense of loss), அன்பு (sense of love)' - இந்த மூன்றும்தான் மனித தனிமை உணர்வுக்கான அடிப்படையான காரணிகள் என்கிறது உளவியல். குறைவு மனப்பான்மை என்பது நமக்கு எல்லாம் இருந்தும் நாம் மற்றவர்களோடு நம்மை ஒப்பிட்டு, 'நான் அடுத்தவரைப் போல இல்லையே' என்று சொல்லும் மனநிலை. இந்த மனநிலையில் அடுத்தவர் எதிரிபோல நமக்குத் தோன்றுவதால் நாம் அவரிடமிருந்து மெதுவாக விலகிவிடுகிறோம். இழப்பு நமக்கு உரிமையான ஒன்றை அல்லது ஒருவரை இழக்கும்போது வருகிறது. நம்மிடமிருந்த வீடு அல்லது பணம் பறிபோய்விட்டால், அல்லது நமக்குரியவர் ஒருவர் இறந்துவிட்டால் மற்றவர்மேல் - அது கடவுளாக இருந்தாலும் - நாம் நம்பிக்கையை இழந்துவிடுகிறோம். அடுத்தவர் நம்மை ஏமாற்றிவிட்டார் என்ற உணர்வு நம்மைத் தனிமையில் தள்ளிவிடுகிறது. 'குறைவு மனப்பான்மையும்,' 'இழப்பும்' நமக்குத் தனிமையைத் தருகின்றன என்பது சரி. ஆனால், 'அன்பு' எப்படி தனிமையைக் கொண்டுவரமுடியும்? நாம் நமக்கு உரியவரை, விருப்பமானவரை அன்பு செய்தாலும் நம்மிடமிருக்கின்ற அன்பு என்ற அந்த உணர்வு அடங்கிவிடுவதில்லை. 'இன்னும் நான் நிறைய பேரை அன்பு செய்ய வேண்டும்?' 'என் வாழ்வு நிறைய பேரைத் தொட வேண்டும்?' என்ற ஏக்கத்தை அது நம்மில் உருவாக்கிவிடுகிறது. இந்த நிலையில்தான் நாம் புதிய வேலை, புதிய நண்பர்கள், புதிய சுற்றத்தார் என புதியவற்றைத் தேட ஆரம்பிக்கிறோம். இந்தத் தேடலே நம்மைத் தனிமையில் விட்டுவிடுகிறது. ஏனெனில் இந்தப் புதிய தேடலில் நாம் புதியவற்றோடும் இல்லாமல், பழைய நண்பர்களோடும் இல்லாமல் போய்விடுகிறோம். முதல் இரண்டு தனிமை காரணிகளும் சீக்கிரம் மறைந்துவிடும். ஆனால், இந்த மூன்றாம் காரணி நம் வாழ்வு முழுவதும் நம்மைத் தொற்றிக்கொண்டே வருகிறது.

மூவொரு இறைவனின் மறைபொருளை நாம் புரிந்துகொள்ள முடியுமா? விவிலியமும் பாரம்பரியமும் இதற்கு மூன்று முயற்சிகள் எடுத்துள்ளன:

1. விவிலியம் காட்டும் மூவொரு இறைவன். தொநூ 1:1ல் (மற்றும் 1:26, 3:22, 11:7, எசாயா 6:8, 48:16, 61:1) கடவுளின் பெயர் 'எலோஹிம்' (கடவுள்கள்!) எனக் கொடுக்கப்பட்டுள்ளது. இதுதான் மூவொரு இறைவனுக்கு முதல் அடிக்கல். கடவுள் தன்னை ஒருமையில் அல்ல, பன்மையில் அழைக்கிறார். இப்படிப் பலராக இருக்கும் கடவுள் பலர் அல்லர், ஒருவரே என்றும் உறுதியாகச் சொல்கிறது விவிலியம் (இச 6:4, 1 கொரி 8:4, கலா 3:20, 1 திமொ 2:5). சில இடங்களில் தந்தை என்னும் கடவுள் தன் மகனிடம் உரையாடுவதாகவும் நாம் வாசிக்கின்றோம் (எசா 48:16, 61:1, லூக் 4:14-19). இயேசுவின் திருமுழுக்கின் போது தந்தையாகிய இறைவன் பேசுவதாகவும், தூய ஆவியானவர் புறா வடிவில் இறங்குவது போலவும், மகனாகிய இயேசு யோர்தான் நதிக்கரையில் நின்று கொண்டிருப்பதாகவும் எழுதுகிறார் மத்தேயு (3:16-17). 'தந்தை-மகன்-தூய ஆவி' என்று திருமுழுக்கு ஃபார்முலா ஒன்றைச் சொல்லிக்கொடுக்கின்றார் இயேசு (மத் 28:19). 'ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அருளும், கடவுளின் அன்பும், தூய ஆவியாரின் நட்புறவும் உங்கள் அனைவரோடும் இருப்பதாக!' என்று கொரிந்து நகரத் திருச்சபையை வாழ்த்தி தன் மடலை நிறைவு செய்கின்றார் பவுலடியார். (இந்தப் பவுலடியாரின் வார்த்தைகளைக் கொண்டே நாம் திருப்பலியின் தொடக்கத்தில் இறைமக்களையும் வாழ்த்துகின்றோம்!). மூவொரு இறைவன் தங்களுக்குள் தனித்தன்மை கொண்டிக்கிறார்கள் (தொநூ 19:24, ஓசே 1:4, திபா 2:7, நீமொ 30:2-4, எண் 27:18) என்றும், தமதிருத்துவத்தின் ஒவ்வொரு நபரும் கடவுள் (யோவா 6:27, உரோ 1:7. 1பேதுரு 1:2, யோவா 1:1, திப 5:3-4, 1 கொரி 3:16) என்றும் நாம் வாசிக்கின்றோம். மேலும் தமதிருத்துவத்தின் ஒவ்வொரு ஆளுக்கும் ஒவ்வொரு பணி இருக்கின்றது (1 கொரி 8:6, திவெ 4:11, யோவா 3:16-17, 14:10). மேலும் ஆபிரகாமை மம்ரே என்ற இடத்தில் கடவுள் சந்தித்த போதும் (தொநூ 18:2), இயேசு தாபோர் மலையில் உருமாறிய போதும் (மத் 17:1-13), அன்னை மரியாளுக்கு மங்கள வார்த்தை அறிவித்த போதும் (லூக் 1:5), இயேசுவின் அருள்மொழிகளிலும் (மத் 11:27, யோவா 1:18) மூவொரு இறைவனின் வெளிப்படுதலை விவிலியத்தில் பார்க்கின்றோம்.

2. தமதிருத்துவத்தை இரண்டு நிலைகளில் புரிந்து கொள்ள முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன: (அ) இயல்புசார்ந்த தமதிருத்துவம், (ஆ) பணிசார்ந்த தமதிருத்துவம். இயல்புசார்ந்த புரிதலில், தந்தை, மகன், தூய ஆவியார் மூன்றுபேரும் கடவுள் என்பதும், ஒருவரின் பிரசன்னம் மற்றவரோடு தொடர்புடையதல்ல என்றும் சொல்லப்படுகி;றது. பணிசார்ந்த புரிதலில், தமதிருத்துவத்தின் ஒவ்வொரு நபரும் ஒவ்வொரு வேலையைச் செய்கின்றனர் (தந்தை - படைப்பது, மகன் - மீட்பது, தூய ஆவி - பராமரிப்பது) என்று சொல்லப்படுகிறது. முதல் ஏற்பாட்டு காலத்தை 'தந்தையின்' காலம் என்றும், நற்செய்தி நூல்களை 'மகனின்' காலம் என்றும், திருத்தூதர் பணிகள் மற்றும் மடல்களை 'ஆவியின்' காலம் என்றும்கூட சிலர் பிரிக்கின்றனர். பணிசார்ந்த புரிதல் இந்து மதத்திலும் இருக்கின்றது. பிரம்மா-விஷ்ணு-சிவா என்னும் மும்மூர்த்திகள் முறையே படைத்தல்-காத்தல்-அழித்தல் வேலைகளைச் செய்கின்றனர். ஆனால், இவர்கள் மூன்று-ஆள்-ஒரு-கடவுள் அல்லர். மாறாக, மூன்று-ஆள்-மூன்று-கடவுள்கள்.

3. தமதிருத்துவமும் உருவகங்களும். ஒன்றின் பொருளை மற்றொன்றோடு தொடர்பு படுத்தி அறியச் செய்பவை உருவகங்கள். தந்தை-மகன்-தூய ஆவி என்பதை கணவன்-மனைவி-பிள்ளை (தந்தை-தாய்-பிள்ளை) என குடும்ப உறவு உருவகம், திடம்-திரவம்-ஆவி என தண்ணீர் உருவகம், ஓடு-வெள்ளை-மஞ்சள்கரு என முட்டை உருவகம், கிளாவர் எனப்படும் இலை உருவகம், முக்கோணம் உருவகம் என நாம் உருவகங்களைக் கையாளுகின்றோம்;. ஆனால் உருவகங்கள் வெறும் நிலவைச் சுட்டிக்காட்டும் விரல்கள்தானே தவிர அவைகள் நிலவு அல்ல என்பதை நாம் மனதில் வைக்க வேண்டும். உருவகங்கள் எந்த அளவுக்கு எதார்த்தத்தை வெளிப்படுத்துகின்றனவோ, அந்த அளவுக்கு எதார்த்தை மறைக்கவும் செய்கின்றன. சில நேரங்களில் உருவகங்கள் ஆபத்தானவைகளாகவும் இருக்கின்றன. உதாரணத்திற்கு, என் அப்பா எந்நேரமும் வீட்டில் சண்டையிடுபவராக, என் அம்மாவை அடிப்பவராக, பிள்ளைகளிடம் கோபப்படுபவராக இருந்தால், நான் எப்படி தந்தை அன்பானவர் என்றும் அந்த அன்பே தூய ஆவியானவர் என்றும் உணர முடியும். மேலும், தந்தை-தாய்-பிள்ளை என தமதிருத்தவத்தை உருவகிக்கும்போது மற்றொரு பிரச்சனையும் வருகிறது. தமதிருத்துவத்தில் வரும் மூன்று பேரும் 'ஆண்கள்'. அவர்களுக்கு 'மனைவி' அல்லது 'தாய்' என்ற உருவகம் எப்படிப் பொருந்தும்?

இப்புரிதல் ஓரளவுக்கு தெளிவாக இருந்தாலும், தொடக்கத் திருஅவையிலும் இன்றும் தமதிருத்துவம் பற்றி ஏகப்பட்ட கேள்விகள் எழுகின்றன:

அ. இயேசு மனிதராகப் பிறந்தபோது தமதிருத்துவத்தில் குறை ஏற்பட்டதா?
ஆ. இயேசு பிறப்பிலேயே கடவுளின் மகனா, அல்லது 'நீ என் அன்பார்ந்த மகன்' என்று திருமுழுக்கின்போது தத்தெடுக்கப்பட்டாரா? (அடாப்ஷன்)
இ. இயேசு சிலுவையில் இறந்தபோது, அவர் மட்டும் இறந்தாரா? அல்லது அவரோடு சேர்ந்து மூவொரு இறைவனும் இறந்தாரா? அவர் மட்டும் இறந்தாhர் என்றால் அவர் எப்படி இறைவனாக இருக்க முடியும்? மூவொரு இறைவனும் இறந்தார் என்றால், அந்த இரண்டு நாட்கள் நாம் கடவுள் இல்லாமல் இருந்தோமா?
ஈ. இவர்கள் மூவரும் மூன்று கடவுளர்களா?
உ. தந்தை-மகன் என்று நாம் அழைக்கும்போதே, ஒருவர் மற்றவரைவிட மேலாக அல்லது முதன்மையாக இருக்கிறார் என்று ஆகிவிடுகிறது இல்லையா? (சப்ஆர்டினேஷனிசம்)
ஊ. கடவுள் ஒருவர்தான். ஆனால் அவர் மூன்று பேராக தன்னை வெளிப்படுத்தியிருக்கின்றார். முதல் ஏற்பாட்டில் யாவே என்றும், இரண்டாம் ஏற்பாட்டில் இயேசு என்றும், தொடர்ந்து திருச்சபை வரலாற்றில் தூய ஆவி என்றும் தன்னை வெளிப்படுத்துகின்றார். (மோடலிசம்). ஆக, தமதிருத்துவம் என்பது ஒரு வெளிப்பாடே அன்றி அது இறைஇயல்பு அல்லவே?
எ. எல்லாவற்றிற்கும் மேலாக, கடவுளை மனிதர் என்று சொல்வது மனித இனம் மற்ற உயிர்களிடமிருந்து தன்னைத்தானே உயர்த்திக்கொள்ளும் ஆணவத்தின் வெளிப்பாடு இல்லையா?

இந்தக் கேள்விகளையும் தாண்டி நாம் மூவொரு இறைவன் என்னும் மறைபொருளை நம்பவும், புரிந்துகொள்ளவும் வேண்டுமெனில், நாம், 'தமதிருத்துவம் எப்படி?' என்ற கேட்பதை விடுத்து, 'தமதிருத்துவம் ஏன்?' என்று கேட்க வேண்டும்.

இன்றைய முதல் வாசகத்தில் மோசே இஸ்ரயேல் மக்களிடம் ஆண்டவராகிய இறைவனின் அரும்பெரும் செயல்களைத் 'தெரிந்துகொள்ளவும்,' 'நினைவுகூறவும்,' 'பின்பற்றவும்' அழைப்பு விடுக்கின்றார். கடவுளின் இந்தச் செயல்கள் தொடக்கத்தில் அவர், 'நான் உங்களோடு' என்ற வாக்குறுதியை நமக்குத் தருகின்றது.

இன்றைய இரண்டாம் வாசகத்தில் 'தூய ஆவி அருளும் வாழ்வு' என்றால் என்ன என்பதைப் பற்றி உரோமைத் திருஅவை இறைமக்களோடு தன் கடிதம் வழியாக உரையாடும் பவுலடியார் 'தூய ஆவி என்பது நம்மில் இருக்கும் ஒரு மனப்பான்மை' என்ற புதிய அடையாளத்தை தூய ஆவியானவருக்குக் கொடுக்கின்றார். இந்தத் தூய ஆவியானவர் இறைமக்களின் உள்ளத்தில் இருப்பதால் இறைமக்களுக்குக் கிடைப்பது என்ன? அ. 'கடவுளின் மக்கள்' என்ற அடையாளத்தை இவர் தருகின்றார். ஆ. கடவுளை 'அப்பா, தந்தையே' என அழைக்கும் உரிமையைத் தருகின்றார். இ. நாம் கடவுளின் பிள்ளைகள் என்று மற்றவர்களிடம் சான்று பகர்கின்றார்.

முதலில் 'தந்தை-மகன்' உறவு என்றால் என்ன என்பதைப் புரிந்து கொள்வோம். நம் தமிழில் மற்றவர்ளை அழைக்கும்போது, 'அம்மா' என்று பெண்களிடம் எளிதாக நாம் பயன்படுத்துவதுபோல, 'அப்பா' என்பதை ஆண்களிடம் எளிதாகப் பயன்படுத்துவதில்லை. அல்லது பயன்படுத்த இயலவில்லை. அப்படிப் பயன்படுத்தினாலும், அதில் ஒரு சொல்லமுடியாத தூரம் இருக்கின்றது. நான் என் அப்பாவை, 'அப்பா' என்று அழைப்பதும், என் நண்பனின் அப்பாவை 'அப்பா' என்று அழைப்பதும் ஒன்றா? என் அப்பாவை நான் 'அப்பா' என அழைக்கக் காரணம், அவருக்கும் எனக்கும் உள்ள 'உடல்முறை உறவு' - அதாவது என் அப்பாவின் உயிரணுவின் ஒரு மாற்று வடிவமே நான். என் நண்பனின் அப்பாவை நான் 'அப்பா' என அழைக்கக் காரணம், அவருக்கும் எனக்கும் உள்ள 'உடல்முறை உறவு' அல்ல. மாறாக, எனக்கும் என் நண்பனுக்கும் இடையே உள்ள நட்பு. ஆக, எனக்கருகில் இருக்கும் என் நண்பனோடு இருக்கும் நட்ப, எனக்குத் தூரத்தில் இருக்கும் அவனது அப்பாவையும், 'அப்பா' என்று அழைக்க எனக்கு உரிமை அளிக்கிறது.

இயேசு கடவுளை, 'அப்பா' என அழைப்பதற்கும், நான் கடவுளை, 'அப்பா' என அழைப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. இயேசு 'அப்பா' என அழைக்கக் காரணம், கடவுளுக்கும், அவருக்கும் இடையே இருக்கும் 'உடல்முறை உறவு'. நான் 'அப்பா' என அழைக்கக் காரணம் இயேசுவுக்கும், எனக்கும் இடையே இருக்கும் 'உடன்பிறப்பு முறை' உறவு அல்லது நட்பு.

இந்தப் பின்புலத்தில் பார்க்கும்போது, தூய ஆவியானவருக்கு 'உறவு' என்ற புதிய அடையாளம் பிறக்கின்றது. எனக்கும், என் நண்பனுக்கும் இடையே உள்ள உறவை நான் 'நட்பு' என பெயரிடுகிறேன். அதேபோல தந்தைக்கும், மகனுக்கும் அல்லது இயேசுவுக்கும் நமக்கும் இடையே இருக்கும் உறவை 'தூய ஆவி' எனப் பெயரிடுகின்றோம். ஆக, தூய ஆவி மேல்நோக்கியும் செயலாற்றுகின்றார். சமநிலையிலும் செயலாற்றுகின்றார். இந்த இரண்டு நிலைகளிலும் அவர் உறவாக இருக்கின்றார்.

அவர் உறவாக இருக்கின்றார் என்று சொல்வது நம்மை அடுத்த கட்ட சிந்தனைக்கு அழைக்கிறது. உறவு என்றால் அங்கே இரண்டு பரிமாணங்கள் உண்டு: ஒன்று, அகப் பரிமாணம். இரண்டு, புறப் பரிமாணம். அகப் பரிமாணத்தில், நான் என் நண்பனோடு கொண்டுள்ள உறவை நட்பாக என் மூளையில் பதிவு செய்கிறேன். புறப் பரிமாணத்தில், நான் அவனோடு பேசுகிறேன், அன்பளிப்பு கொடுக்கிறேன், வெளியே சாப்பிடச் செல்கிறேன் அல்லது சேர்ந்து இருக்கிறேன். இரண்டு பரிமாணமும் இணைந்திருந்தால் தான் உறவு முழுமையடைகிறது.

தூய ஆவியானவரின் பிரசன்னமும் இந்த இரண்டு பரிமாணங்களை என்னில் கொண்டிருக்கின்றது. அகப் பரிமாணத்தில், 'நான் கடவுளின் மகன் அல்லது மகள்' என்ற புத்துணர்வை இது தருகின்றது. புறப் பரிமாணத்தில், கடவுளை 'என் அப்பா' என அழைக்கும் உரிமைப்பேறு தருகின்றது. இந்தப் புறப் பரிமாணம் மற்றவர் முன் ஒரு சான்றாகவும் அமைகின்றது. என்னைப் பார்க்கும் எனக்கு அடுத்திருப்பவர், 'இதோ! இவர் கடவுளின் மகன்! அல்லது மகள்!' என்று சொல்லத் தொடங்குகின்றார்.

இவ்வாறாக, தூய ஆவியானவர் எனக்கு கடவுள் பிள்ளை என்ற உரிமையையும், கடவுளை அப்பா என்று அழைக்கும் பேற்றையும், மற்றவர்கள் என்னைப் பார்த்து 'இவர் கடவுளின் மகன்' என்று சொல்லும் சான்றையும் தருகின்றார்.

மூவொரு இறைவனைக் குறித்த புரிதலில், இன்றைய இரண்டாம் வாசகம் சொல்வது என்னவென்றால், தந்தைக்கும், மகனுக்கும் இடையே இருக்கும் உறவு தூய ஆவி. கடவுளி;ன் மகன் இயேசுவுக்கும், நமக்கும் உள்ள உறவிற்குப் பெயரும் தூய ஆவியே. ஆக, தூய ஆவியானவர் கடவுளைச் சார்ந்தவர் மட்டுமல்லர். உங்களையும், என்னையும் சார்ந்தவர் அவர்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு விண்ணேற்றம் அடையுமுன் தன் சீடர்களுக்கு மறைத்தூது கட்டளை கொடுத்ததோடு, இறுதிவரை தன் உடனிருப்பையும் வாக்களிக்கின்றார்.

மூவொரு இறைவன் நமக்கு விடுக்கும் செய்தியும் இதுதான்: 'நான் உங்களோடு'

'கடவுள் - நான் - அடுத்தவர்' - இந்த மூன்றும்தான் இன்றைய மூவொரு இறைவனின் உருவகம். அவர் என்னிடம்,  'நான் உங்களோடு' என்று வாக்களிக்கின்றார் என்றால், நான் ஒருவர் மற்றவரிடம் 'நான் உங்களோடு' என்று சொல்லும்போது மூவொரு இறைவன் என்னில் உயிர்பெறுகிறார். 'இம்மானுவேல்' ('கடவுள் நம்மோடு') என்ற கடவுளின் முதல் வாக்குறுதியே இயேசுவின் இறுதி வாக்குறுதியாகவும் இருக்கிறது.

மூவொரு இறைவனைப் பற்றி அறிந்து கொள்வது என்பது, என்னைத் துரத்திக்கொண்டே ஒரு மரத்தைச் சுற்றிக்கொண்டு நான் ஓடுவது போன்றது. நான் எத்துணை வேகமாக ஓடினாலும், என்னை நான் பிடிக்க முடியாது. ஏனெனில் 'நான்' என்பதும், 'எனது' என்பதும் ஒன்றே.

இவ்வாறே, மூவொரு இறைவனைப் பற்றிப் புரிந்து கொள்ள முயலும் ஒவ்வொரு நொடியும் நான் என்னையே புரிந்துகொள்கிறேன். என்னையும், என்னைச் சுற்றி இருக்கும் சமூகத்தையும் புரிந்து கொள்ளும் ஒவ்வொரு நொடியும் நான் என் மூவொரு இறைவனையே புரிந்து கொள்கிறேன்.

'நான் உங்களோடு' - இதுவே அவரின் மையம். இந்த மையம் நம் 

 மையமாகட்டும்.

 

1 comment: