Thursday 23 November 2017

கிறிஸ்து அரசர் பெருவிழா


கிறிஸ்து அரசர் பெருவிழா

எசேக்கியேல் 34:11-12, 15-17; 1 கொரிந்தியர் 15:20-26, 28; மத்தேயு 26:31-46

மறையுரை மொட்டுக்கள்-அருள்பணி இருதயராஜ்
ஓர் ஊரில் இரண்டு பைத்தியங்கள் இருந்தன. முதல் பைத்தியம் இரண்டாம் பைத்தியத்திடம், "நான் உலகத்தையே விலைக்கு வாங்கப் போகிறேன்" என்றது. அதற்கு இரண்டாவது பைத்தியம், "நான் உலகை விற்றால்தானே நீ அதை வாங்க முடியும்? இப்போதைக்கு உலகை விற்கும் எண்ணம் எனக்கு இல்லை" என்றதாம்!
இன்று ஒவ்வொரு நாடும் வல்லரசாக மாறவேண்டும் என்ற மமதைப் பிடித்துச் செயல்படுகிறது. அவ்வாறே அரசியல் கட்சிகளும் அரசியல்வாதிகளும் நாட்டை ஆளவேண்டும் என்ற நப்பாசையில் ஆதிக்க வெறிபிடித்து அலைகின்றனர். தனி மனிதர்களையும் இத்தகைய தலைக்கணம் விட்டுவைக்கவில்லை.
அலெக்சாண்டர் உலக நாடுகளையெல்லாம் தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்தார். அவர் இறந்து அடக்கம் செய்யப்பட்டபோது ஒரு தத்துவமேதை கூறினார். "நேற்றுவரை அலெக்சாண்டர் மண்ணை ஆண்டார். இன்று மண் அலெக்சாண்டரை ஆண்டுகொண்டிருக்கிறது." "மனிதனுக்கு மண்மேல் ஆசை மண்ணுக்கு மனிதன் மேல் ஆசை கடைசியில் மண்தானே ஜெயித்தது" என்று திரைப்படப் பாடல் கூறுகிறது.
இப்பின்னணியில் இன்று நாம் திருவழிபாட்டு ஆண்டின் சிகரமாகக் கிறிஸ்து அரசர் பெருவிழாவைக் கொண்டாடு கின்றோம். கிறிஸ்து அரசரா? ஆம், அவர் ஒருவர் மட்டுமே உண்மையான அரசர், படைப்பிலும் மீட்பிலும், இம்மையிலும் மறுமையிலும் அவர் அரசர், அவர் மூலமாகவே அனைத்தும் உண்டாயின (யோவா 1:37). "அவர் யாக்கோபின் குடும்பத்தின்மீது என்றென்றும் ஆட்சி செலுத்துவார். அவரது ஆட்சிக்கு முடிவே இராது" (லூக் 1:33), "யூதர்களின் அரசராகப் பிறந்திருக்கின்றவர் எங்கே?" (மத் 2:12) "ஆண்டவர் பெயரால் அரசராய் வருகிறவர் போற்றப்பெறுக" (லூக் 19:38). "நாசரேத்து இயேசு யூதர்களின் அரசர்" (யோவா 19:19), "இயேசுவே நீர் ஆட்சியுரிமை பெற்று வரும்போது என்னை நினைவிற் கொள்ளும்" (லூக்கா 23:42),
இயேசு கிறிஸ்து உண்மையான அரசர், ஆனால் அவரது அரசு வித்தியாசமான அரசு, இன்றைய திருப்பலியின் தொடக்கவுரை அவருடைய அரசின் தனிப்பண்புகளைப் பின்வருமாறு பட்டியலிட்டுக் காட்டுகிறது: "உண்மையின் அரசு நீதியின் அரசு அருளின் அரசு புனிதத்தின் அரசு; அன்பின் அரசு அமைதியின் அரசு வாழ்வின் அரசு, கிறிஸ்து ஆயுத பலத்தால் அல்ல. அன்பின் பலத்தால் ஆட்சி செய்கிறார். மாமன்னன் நெப்போலியன் கூறினார்: "நானும் அலெக்சாண்டரும் ஆயுத பலத்தால் அடக்கி ஆள முயன்றோம் எங்கள் அரசு நிலைக்கவில்லை. ஆனால் இயேசு கிறிஸ்து அன்பினால் ஆட்சி செய்கின்றார். அவரது அரசு என்றும் நிலைத்திருக்கும்."
மண்ணக அரசர்கள் மக்களைப் பயன்படுத்தி தங்களுடைய வாழ்வை மேம்படுத்திக் கொள்கின்றனர். அவர்கள் நல்ல மேய்ப்பர்கள் அல்ல. மாறாக, கிறிஸ்து நல்ல மேய்ப்பர் என்று இன்றைய முதல் வாசகம் கூறுகிறது. அவர் மந்தையை மேய்த்து இளைப்பாறச் செய்கிறார் காணாமற்போன ஆடுகளைத் தேடிச் செல்கிறார்; காயப்பட்டதற்குக் கட்டுப்போடுகிறார். நலிந்தவற்றைத் திடப்படுத்துகிறார். நீதியுடன் ஆடுகளை மேய்க்கின்றார் (எரே 34:11-17) ஆடுகள் வாழ்வு பெறவும் அதை நிறைவாகப் பெறவும் அவர் தமது உயிரையே கொடுக்கிறார் (யோவா 10:10).
இன்றைய பதிலுரைப் பாடல் நல்லாயன் திருப்பாடல் (திபா 23). கிறிஸ்து நல்லாயர் நமக்குக் குறை ஏதுமில்லை. நம்மைப் பசும்புல் தரைக்கும் அமைதியான நீர் நிலைக்கும் அழைத்துச் செல்கிறார் நமக்கு விருந்தளிக்கிறார். அருள்வாக்காலும் அடையாளங் களாலும் நமக்கு அவர் புத்துயிர் அளிக்கிறார். அவரால் வழிநடத்தப்படும் நாம் எதற்கும் பயப்படத் தேவையில்லை, ஓர் அப்பா தம் மகளிடம், "ஆங்கிலத் தேர்வில் எத்தனை கேள்விகள் கேட்டிருந்தார்கள்? நீ எத்தனை கேள்விகளுக்குப் பதில் எழுதினாய்?" என்ற கேட்டதற்கு அவன், "ஆறு கேள்விகள் இருந்தன. முதல் நான்கு கேள்விகளுக்கும் கடைசி இரண்டு கேள்விகளுக்கும் பதில் எழுதவில்லை" என்றான். இறுதித் தேர்வில் நம்மிடம் கிறிஸ்து கேட்கப்போகும் ஆறு கேள்விகளையும் வெளியிட்டுவிட்டார். அவை: 1.நான் பசியாய் இருந்தேன், உணவளித்தாயா? 2. நான் தாகமாய் இருந்தேன், தண்ணி கொடுத்தாயா? 3.நான் ஆடையின்றி இருந்தேன், என்னை உடுத்தினாயா? 4.நான் அன்னியனாய் இருந்தேன். எனக்கு உன் வீட்டில் இடம் கொடுத்தாயா? 5 நான் நோயுற்று இருந்தேன், என்னைக் காண வந்தாயா? 8.நான் சிறையில் இருந்தேன், என்னைப் பார்க்க வந்தாயா? இக்கேள்விகளுக்கு "ஆம்" என்று பதில் சொன்னால், விண்ணகமும் 'இல்லை" என்றால் நாகமும் கிடைக்கும். ஏழைகளுக்குச் செய்யும் உதவி இயேசுவுக்குச் செய்யும் உதவி, மக்கள் பணி மகேசன் பணி ஒருவன் தேர்வில் தோற்றுவிட்டான். ஏன்? என்று கேட்டதற்கு அவன் கூறியது "நான் கடினமான கேள்விகளைப் படித்தேன், ஆனால் தேர்வில் எளிதான கேள்விகளைக் கேட்டுவிட்டார்கள்." அவனுடைய கதியே நம்முடைய கதியாகிவிடும். ஏனெனில் விண்ணகம் செல்வதற்குக் கிறிஸ்து நமக்குக் காட்டிய எளிய வழிகளைப் பின்பற்றாமல், மிகவும் கடினமான வழிகளைப் பின்பற்றி இறுதித் தேர்வில் கோட்டைவிடப் போகிறோம் பிறரிடம் பெறுவது நல்லது என்றாலும் அது தவறு. ஆனால் விண்ணகமே இல்லையென்று வைத்துக்கொண்டாலும் பிறர்க்கு ஈதல் நன்று.
 "நல் ஆறுஎனினும் கொளல்த்து மேலுலகம்
இல்எனினும் சுதலே நன்று" (குறள் 222)
இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல் கூறுவது நிறைவேறும் "எல்லாப் பகைவரையும் அடிபணிய வைக்கும்வரை அவர் (கிறிஸ்து) ஆட்சி செய்ய வேண்டும்" (1 கொரி 15:25). "ஏனெனில் அரசும் வல்லமையும் மாட்சியும் என்றென்றும் உமதே.”



இறைவனின் இல்லத்திற்குள் நுழைய பேறுபெற்றவர்கள் யார்?

குடந்தை ஆயர் அந்தோணிசாமி


நமது கிறிஸ்து அரசரின் ஆசி பெற நாம் என்ன செய்ய வேண்டுமென்பதை இன்றைய நற்செய்தி நமக்குத் தெளிவுப்படுத்துகின்றது.

ஆறுவகையான மக்களுக்குஆண்டவரின் ஆசிகிடைப்பது விண்ணகம் கிடைப்பது உறுதியார்அந்தஅறுபேர்? பசித்தவர்களுக்கு உணவு கொடுப்பவர்கள். தாகமாக இருப்பவர்களுக்குத் தண்ணீர் கொடுப்பவர்கள். அன்னியராக இருப்போரை ஏற்றுக் கொள்பவர்கள்.ஆடையின்றி இருப்பவர்களுக்கு ஆடைஅணிவிப்பவர்கள், நோயுற்றோரைக் கவனித்துக் கொள்கின்றவர்கள், சிறையிலிருப்பவர்களைத் தேடிச்செல்கின்றவர்கள் ஆகிய ஆறு பேரும் கடவுள் வாழும் இல்லத்திற்குள் நுழையும்பேறுபெறுவார்கள்.

கிறிஸ்தவ மறையைப் பொறுத்தவரையில் இறைவனின் ஆசிபெற நம்மிடமுள்ளதை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்வதைத் தவிர வேறு வழி கிடையாது.

நம்மிடமுள்ளதைப் பிறரோடு பகிர்ந்து கொள்ளவிடாமல் நம்மைத் தடுப்பது எது? நமது சுயநலம். சுயநலம் என்றால் என்ன? என்பதைச் சுட்டிக்காட்ட ஒரு கதை!

ஒரு பெரிய பணக்காரருக்கு மூன்று மகன்கள் அந்தப்பணக்காரரிடம் நிறைய சொத்து இருந்தது அவருக்கு வயதாகிவிட்டது அவர் மரணப் படுக்கையில் படுத்திருந்தார் அப்போது அவர் இறந்த பிறகு எப்படி அவரை கல்லறைக்குத் தூக்கிச்செல்வது என்பதைப் பற்றி மூன்று மகன்களும் தங்களுக்குள்ளேபேசிக்கொண்டனர்.

மூத்தவன் "கல்லறைக்கு தூக்கிச்செல்ல வாடகைக் கார் ஒன்றை வைத்துக்கொள்ளலாம்" என்றான்.

இரண்டாமவன் "காருக்கு அதிக செலவாகும் இறந்த பிறகு எதில் தூக்கிச்செல்கின்றோம் என்பது அவருக்குத் தெரியவாபோகின்றது ஒரு மாட்டு வண்டிபோதும்" என்றான்.

மூன்றாமவன் : "மாட்டுவண்டி எதற்கு நம்ம ஊர் சவ வண்டி இருக்கின்றது அது இனாமாகக் கிடைக்கும்" என்றான்.
இவற்றையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த கிழவர், "எங்கே என் செருப்பும், கைத்தடியும்?" என்றார்.

மகன்கள் "இப்போது அவை உங்களுக்கு எதற்கு?" என்றார்கள்.

தகப்பனோ, "நீங்கள் எனக்காக எந்தச் செலவையும் செய்ய வேண்டாம் நான் நடந்தே கல்லறைக்குச் சென்று விடுகின்றேன்" என்றார்.

இந்தக் கதையில் வந்த மூன்று மகன்களும் கொண்டிருந்த மனநிலைக்குப் பெயர்தான் சுயநலம்! சுயநலம் என்பது, தான் வாழவேண்டும், தான் மட்டுமே வாழவேண்டும் என்று எண்ணுவது.

இந்தச் சுயநலத்தை அழிக்க வழி ஏதாவது உண்டா? உண்டு என்கின்றது முதல்வாசகம்! நல்லாயனாம் கடவுள் காணாமல் போன நமது நல்ல வாழ்க்கையை நமக்குக் கண்டுபிடித்துத் தருவார் என்கின்றது. தீயவை அனைத்தையும் அழிக்கும் ஆற்றல் கடவுளுக்கு உண்டு.

நமது வாழ்க்கை இந்த உலகத்தோடு முடிந்து போகும் ஒன்று அன்று நாம் அனைவரும் ஒருநாள் உயிர்த்தெழுவோம் (இரண்டாம் வாசகம்). அப்படி உயிர்தெழும்போது கிறிஸ்து அரசரால் விண்ணகத்திற்குள் நாம் வரவேற்கப்பட தகுதியுள்ளவர்களாகத் திகழ்வோமா? திகழ்வோம். எப்போது? நம்மிடம் உள்ளதை இல்லாதவர்களுடன் பகிர்ந்து கொள்ளும்போது...

மேலும் அறிவோம்:
இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய
தாமே தமியர் உணல் (குறள் : 229).

பொருள் பெரிதும் தேடித்திரட்டிய பொருள் அனைத்தையும் பிறருக்குக் கொடுத்தால் குறையுமோ என்றுதாமே சுவைப்பது, பிறரிடம் கையேந்திக் கெஞ்சிக் கேட்பதைக் காட்டிலும் கொடிய செயலாகும்.


 கிறிஸ்து அரசர் பெருவிழா

அருள்பணி ஏசு கருணாநிதி - மதுரை

அரசர் -
சின்னஞ்சிறியவர்களின்,
சின்னஞ்சிறியவர்களோடு,
சின்னஞ்சிறியவர்களுக்காய்

கிறிஸ்து அரசர் பெருவிழா அன்று எதற்காக இறுதித் தீர்ப்பு பற்றிய நற்செய்தி பகுதி (மத் 25:31-46) கொடுக்கப்பட்டுள்ளது? என்ற கேள்வி நமக்கு எழலாம். உலக முடிவின் பின் இப்படித்தான் நடக்குமா? கடவுள் நம்மை இப்படித்தான் இருபுறமும் பிரித்து நிறுத்துவாரா? இந்த இரண்டு புறங்களையும் தாண்டி மூன்றாவது புறம் ஒன்று இருக்க வாய்ப்பிருக்கிறதா? நாம் வலப்பக்கம் அனுப்பப்படுவோமா? அல்லது இடப்பக்கம் அனுப்பப்படுவோமா? முடிவில்லாத வாழ்வா? முடிவில்லாத நெருப்பா?

இறப்புக்குப் பின் அல்லது எல்லாரும் இறந்தபின் நடக்கும் இறுதித் தீர்ப்பு உண்டு என விளக்க அல்லது மெய்ப்பிக்கப் பயன்படும் நற்செய்திப் பகுதியே மத் 25:31-46. இந்த நற்செய்திப் பகுதிக்கும் இன்று நாம் கொண்டாடும் கிறிஸ்து அரசர் பெருவிழாவுக்கும் என்ன தொடர்பு?

அரசர் அல்லது அரசர் தொடர்புடைய நேரடி சொல்லாடல்கள் மூன்றை இன்றைய நற்செய்தியில் பார்க்கிறோம்:

அ. 'அரியணை'
'வானதூதர் அனைவரும் புடைசூழ மானிட மகன் மாட்சியுடன் வரும்போது தம் மாட்சிமிகு அரியணையில் வீற்றிருப்பார்' (மத் 25:31) என்று தொடங்குகிறது நற்செய்திப் பகுதி. அரசர்களின் இருக்கைகளில் கைபிடிகளாக இரண்டு சிங்கங்கள் ('அரிமா') இருக்கும். மற்ற இருக்கைகளில் அவை இருக்காது. அல்லது சிங்க உருவங்கள் உள்ள இருக்கையில் அரசன் மட்டுமே அமர உடையும். சிங்க உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளதால், இவை 'அரிமா ஆசனங்கள்' அல்லது 'அரியாசனங்கள்' அல்லது 'அரியணைகள்' என அழைக்கப்படுகின்றன. 'சிங்கம்' என்பது அதிகாரம் மற்றும் ஆற்றலைக் குறிக்கும் ஒரு உருவகம்.
மேலும், 'அமர்வது' என்பதும் அதிகாரத்தைக் குறிக்கிறது. பட்டினத்தார் பாடல் ஒன்றில் பட்டினத்தார் அரசனைப் பார்த்து, 'நீ நிற்க நான் அமர' என்று இருக்கும். அதாவது யார் அமர்கிறாரோ அவர் அதிகாரம் கொண்டிருக்கின்றார். ஆகையால்தான், இன்றும் விசுவாச பிரகடனங்களை அதிகாரப்பூர்வமாக திருத்தந்தையர் அறிவிக்க வேண்டியிருந்தால் அவர்கள் உரோம் தூய லாத்தரன் பேரலாயத்தில் உள்ள அரியணையில் 'அமர்ந்து' அறிவிக்க வேண்டும். அதிகாரம் கொண்டிருக்கும் ஒருவர் எந்நேரமும் அமர்ந்துகொள்ள முடியும். அல்லது எந்நேரமும் அமர்ந்திருக்கும் ஒருவர் அதிகாரம் கொண்டிருக்கின்றார் - அரசராக இருக்கின்றார்.

ஆ. 'அரசன்'
'அரசன்' (பஸிலேயோஸ்) என்ற வார்த்தை இரண்டு வசனங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது (25:34, 40). இங்கே நன்றாகக் கவனிக்க வேண்டும். 'அரசர்' என்ற வார்த்தையை நற்செய்தியாளர் நேர்மையாளர்களோடு  (வலப்பக்கம் உள்ளவர்களோடு) உரையாடும் இடங்களில் மட்டுமே பதிவு செய்கின்றார். இடப்பக்கம் உள்ளவர்களோடு உள்ள உரையாடலில் அரசன் என்ற வார்த்தை இல்லை. மேலும், இருதரப்பினரும் அவரை 'ஆண்டவர்' என அழைக்க முடிந்தாலும், வலப்பக்கம் உள்ளவர்களுக்கு மட்டுமே அவர் அரசராக இருக்கின்றார்.

இ. 'அரசாட்சி' அல்லது 'அரசுரிமை'
'அரசாட்சியை' (பஸிலேயோ) உரிமையாக்கிக்கொள்ளுமாறு அரசர் வலப்பக்கம் இருப்பவர்களுக்கு அழைப்பு விடுக்கின்றார். 'அரசாட்சி' என்றால் என்ன என்பது இங்கே தெளிவாகக் குறிக்கப்படவில்லை என்றாலும், இந்த அரசாட்சி உலகின் தொடக்கமுதல் ஏற்பாடு செய்யப்பட்ட ஒன்று என்பது மட்டும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளது.

மேற்காணும் மூன்று சொல்லாடல்களை வைத்து இந்த நற்செய்தி வாசகத்திற்கும், இன்றைய பெருவிழாவுக்கும் தொடர்பு இருக்கிறது என முதற்கட்ட முடிவுக்கு நம்மால் வர முடிகிறது.

இரண்டாம் கட்டமாக, இயேசுவே தன் வாயிலிருந்து தன்னை 'அரசர்' என்று சொல்வது இந்த நிகழ்வில் மட்டுமே:

இயேசுவை இரண்டு பேர் அரசர் என்று நேரிடையாக மொழிந்திருக்கிறார்கள்:

ஒன்று, நத்தனியேல். 'பிலிப்பு உம்மைக் கூப்பிடுவதற்கு முன்பு நீர் அத்திமரத்தின்கீழ் இருந்தபோதே நான் உம்மைக் கண்டேன்' என்று இயேசு நத்தனியேலைப் பார்த்துச் சொன்னபோது, 'ரபி, நீர் இறைமகன். நீரே இஸ்ரயேல் மக்களின் அரசர்' என்கிறார் நத்தனியேல். (காண். யோவா 2:48-49)

இரண்டு, பிலாத்து. தன்முன் கைதியாக நிறுத்தப்பட்ட இயேசுவை விசாரித்து மரண தண்டனை அளித்த பிலாத்து, இறுதியாக, எல்லாரும் பார்க்குமாறு இயேசு அறையப்பட்ட சிலுவையின் உச்சியில், 'இவன் யூதரின் அரசனாகிய இயேசு' (மத் 27:37) என எழுதி வைக்கின்றார்.

நல்ல கள்வன்கூட 'நீர் ஆட்சியுரிமை பெற்று வரும்போது' (லூக் 23:42) என்று சொல்கிறானே தவிர, 'அரசராக' என்று சொல்லவில்லை.

இயேசு தன்னையே 'அரசர்' என்று வெளிப்படையாகச் சொல்லும் நிகழ்வு இன்றைய நற்செய்தி வாசகத்தில் மட்டுமே. அவரின் 'அரசர்' தன்மை எப்படிப்பட்டது என்பது இன்றைய நற்செய்தியிலிருந்து நாம் எடுத்துக்கொள்வோம்:

1. அதிகாரம் என்பது தன்னுள்ளே ஊற்றெடுப்பது.
'அதிகாரம்' என்றவுடன் நாம் அது வேறொருவரால் நமக்குத் தரப்பட வேண்டும் என நினைக்கிறோம். அது தவறு. ஏன்? நாம் ஓட்டுப்போட்டு அரசாட்சி செய்யத் தேர்ந்தெடுத்துள்ள நம் தலைவர்களை எடுத்துக்கொள்வோம். அவர்களின் அதிகாரம் எங்கிருந்து வருகிறது. மக்களாகிய நம்மிடமிருந்து. இந்த அதிகாரம் ஐந்து வருடங்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும். மேலும் இந்த அதிகாரத்தை எந்நேரமும் மக்கள் அவர்களிடமிருந்து பிடுங்கிவிட முடியும். மேலும் இந்த அதிகாரத்தில் ஒரு கட்டு இருக்கும். அதாவது, அவர்களால் சுதந்திரமாக எதையும் செய்ய முடியாது. இந்த அதிகாரம் இடத்திற்கும், நேரத்திற்கும் கட்டுப்பட்டது. மாண்புமிகு எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் அதிகாரம் தமிழகத்திற்குள் இருக்கும் வரைதான். அதிமுக ஆட்சியில் இருக்கும் வரைதான்.
ஆக, வெளியிலிருந்து வரும் அதிகாரம் ஒருவரை உண்மையான அரசராக ஆக்குவதில்லை.

எந்த அதிகாரம் ஒருவருக்கு உள்ளிருந்து ஊற்றெடுக்கிறதோ அதுவே ஒருவரை அரசர் ஆக்குகிறது. எடுத்துக்காட்டாக, நாசரேத்தூர் இயேசு, திருத்தூதர் பவுல், மகாத்மா காந்தி, ஆபிரகாம் லிங்கன், நெல்சன் மண்டேலா, அன்னை தெரசா, நீங்கள், நான் என எல்லாரும். அதாவது, தன்னை வெல்பவர் தனக்குள் அதிகாரத்தைக் கண்டுகொள்கிறார். அதிகாரம் என்பது மற்றவர்கள்மேல் செலுத்துவதல்ல. அது தன்னை வெல்வதில்தான் அடங்கியிருக்கிறது. நான் எந்த எதிர்மறை நிகழ்வுகள் அல்லது உணர்வுகளால் ஆட்கொள்ளப்படாத போது நான் அரசராக இருக்கிறேன்.

இதைத்தான் இன்றைய இரண்டாம் வாசகத்தில் (1 கொரி 15:20-26,28) பார்க்கின்றோம். கிறிஸ்துவின் இரண்டாம் வருகையின்போது என்ன நடக்கும் என்பதை விளக்குகின்ற பவுல், அங்கே அதிகாரம் மற்றும் ஆட்சி செலுத்துதல் மறைந்து, 'கடவுளே அனைத்திலும் அனைத்துமாய் இருப்பார்' என விளக்குகின்றார். ஆக, எல்லாரும் தங்களை வென்றவர்களாக, தங்களிடம் கடவுள் தன்மையைக் கண்டவர்களாக, அதே கடவுள் தன்மையை மற்றவரிடம் பார்ப்பவர்களாக மாறுவர். அப்படி இருப்பதுதான் உண்மையான அரச நிலை.
நாம் யாரும் யாரையும் ஆளப்பிறக்கவில்லை? எதற்காக நாம் மற்றவர்களை அரசாள வேண்டும்? மற்றவர்களை அரசாள நான் முயலும்போது நான் அவரை அடிமையாக்கி அவரின் இயல்பை நான் மறுதலிக்கிறேன். மாறாக, கடவுள் அனைத்திலும் அனைவரிலும் இருப்பதை நான் கண்டுகொள்ளும்போது எல்லாருடைய கட்டின்மையையும் நான் மதிக்கத் தொடங்குகிறேன். அதைத்தான் இயேசுவும் செய்தார்.

மனித உணர்வுகளில் எப்போதும் தலைதூக்கும் தலைவன் உணர்வைச் சரி செய்யத்தான் இயேசு இன்னொரு எக்ஸ்ட்ரீம் எல்லைக்குச் செல்கின்றார்: 'நீ மற்றவரின் பாதங்களைக் கழுவு'. நான் மற்றவரின் பாதங்களைக் கழுவும்போது நான் எவ்வளவு உயரமானவராக இருந்தாலு; என் தலை மற்றவரின் தலைக்குக் கீழ் வந்துவிடுகிறது. அதிகாரம் மறைந்துவிடுகிறது.

ஆக, எல்லாரிடமும் இருக்கும் கடவுள்தன்மையைக் கண்டுகொள்ளும்போது, எல்லாரையும் அரசர் என்று நினைக்கும்போது நாமும் அரசராகிறோம்.

2. சின்னஞ்சிறியவர்களின் சகோதரர்

இன்று அரசு அல்லது அதிகாரத்தில் இருப்பவர்கள் யாரோடு தங்களை ஒன்றிணைத்துக்கொள்கிறார்கள்? தங்கள் உறவினர்களோடு, தங்களைவிட அதிக பணம் அல்லது அதிகாரம் கொண்டிருப்பவர்களோடு. ஆனால் இயேசு இங்கே முற்றிலும் மாறுபடுகின்றார். தன் அதிகாரத்தை அல்லது அரசதன்மையை தன்னைவிட சின்னஞ்சிறியவர்களோடு ஒன்றிணைப்பதில் வரையறுக்கின்றார்.

ஆறு சொல்லாடல்கள் வழியாக சின்னஞ்சிறியவர்களைக் குறிப்பிடுகின்றார். ஆனால் இந்த ஆறு சொல்லாடல்களுமே அரசத்தன்மைக்கு எதிர்மறையானவை:
அ. 'பசி' - அரசன் பசியாய் இருந்ததாக அல்லது இருப்பதாக நாம் கேள்விப்பட்டதில்லை. அரசன் அதிகம் சாப்பிட்டதால் அவதிப்படுவானே தவிர அவன் என்றும் பசியோடு இருப்பதில்லை. அவனது உணவுமேசை எப்போதும் நிரம்பியே இருக்கும். ஊரில் கொடும் பஞ்சம் நிலவினாலும் அரசன் உண்பதற்குச் சோறு இருக்கும்.
ஆ. 'தாகம்' - ஊரெல்லாம் வறட்சி என்றாலும் மினிஸ்டர் வீட்டு தண்ணீர் பைப் ஓடிக்கொண்டுதான் இருக்கும். தனக்கென குளம், ஏரி, ஆறுகளைத் திருப்பிக்கொண்ட அரச வரலாறுகள் அதிகம்.
இ. 'ஆடையின்மை' - அரசன் பல்வேறு ஆடைகள் அணியக்கூடியவன். அரசவைக்கு ஒன்று, போருக்கு ஒன்று, அந்தப்புரத்திற்கு ஒன்று, பொழுதுபோக்கிற்கு ஒன்று என எண்ணற்ற ஆடைகளை வைத்திருப்பவன் அவன்.
ஈ. 'அந்நியம்' - அரசன் யாருக்கும் அந்நியம் இல்லை. அவனை எல்லாருக்கும் தெரியும். அவன் முன்பின் பாhத்திராதவர்கள் கூட அரசன் என்றவுடன் அவனைக் கண்டுகொண்டு வரவேற்று உபச்சாரம் செய்வர்.
உ. 'நோய்' - எடப்பாடியாருக்கும், ஓபிஎஸ்சுக்கும் டெங்கு காய்ச்சல் வருவதில்லை. ஊரெல்லாம் டெங்கு பரவினாலும் அது ஒன்றும் செய்யாது.
ஊ. 'சிறை' - சிறை என்பது கட்டு. ஆனால் அரசனை யாரும் சிறையிட முடியாது. அவன் தான் நினைத்த இடத்திற்கு, நினைத்த நேரத்திற்குச் செல்வான். அவன் மற்றவர்களைச் சிறையிடுவானே தவிர அவனை யாரும் சிறையிட முடியாது.

இப்படியாக, அரசனுக்கு முற்றிலும் தொடர்பு இல்லாத ஆறு சொல்லாடல்களைக் கையாண்டு தன் அரசத்தன்மையை வரையறுக்கின்றார் இயேசு. 'பசித்திருப்போர்,' 'தாகமுற்றோர்,' 'ஆடையின்றி இருப்போர்,' 'அந்நியர்,' 'நோயுற்றோர்,' 'சிறையிலிருப்போர்' என அனைவரையும் தன் சகோதர, சகோதரிகள் என்று சொல்வதன்வழியாக அவர்களும் அரசர்கள் என வரையறுக்கின்றார் இயேசு.
இயேசுவின் இந்த வரையறை அரசத்தன்மையை எல்லாருக்கும் பொதுவானதாக்குகின்றது.

3. சின்னஞ்சிறிய செயல்களைச் செய்பவர்கள் அரசர்கள்

இன்றைய முதல்வாசகத்தில் தன் கடவுள் அல்லது ஆண்டவர் தன்மையை மிக எளியை வார்த்தைகளில் விளக்குகின்றார் கடவுள். எப்படி? தன்னை ஓர் ஆயனாக உருவகம் செய்து, 'சிதறுண்ட ஆடுகளைத் தேடுவேன்,' 'மந்தாரமான நேரத்தில் மீட்டு வருவேன்,' 'மேய்ப்பேன்,' 'இளைப்பாறச் செய்வேன்,' 'காணாமல் போனதை தேடுவேன்,' 'அலைந்து திரிவதை திரும்ப கொண்டு வருவேன்,' 'காயத்திற்கு கட்டுப்போடுவேன்,' 'நலிந்தவற்றை திடப்படுத்துவேன்' என ஓர் ஆடுமேய்ப்பவர் செய்யும் சாதாரண செயல்களைச் செய்பவராகக் காட்டுகின்றார்.
ஆக, அரசர்நிலை அல்லது அரசத்தன்மை என்பது போருக்குச் செல்வதிலும், பிற உயிர்களை அழிப்பதிலும், அணுஆயுதங்கள் தயாரிப்பதிலும், அமைதி உடன்படிக்கைகளில் கையெழுத்து இடுவதிலும், நிறைய இயற்கை வளங்களை வளைத்துப் போடுவதிலும், கோடிக்கணக்காக சொத்து மட்டும் நிலங்களை உடைமையாக்குவதிலும் இல்லை. உண்மையில் இவைகள் எல்லாம் அடிமையின் தன்மைகள்.
பின் எதில் அடங்கியிருக்கின்றன?
நாம் செய்யும் எல்லா சின்னஞ்சிறு செயல்களிலும்: பிறரைப் பார்த்துப் புன்னகைப்பதில், வீணாக எரிந்து கொண்டிருக்கும் விளக்கு அல்லது மின்விசிறியை அணைப்பதில், வழிதெரியாத ஒருவருக்கு வழி சொல்வதில், சாப்பாட்டை வீணாக்காமல் சாப்பிடுவதில், மற்றவருக்கு உரிய மரியாதையைக் கொடுப்பதில், தேவையில் இருப்பவர்களோடு பகிர்ந்து கொள்வதில், அலைபேசியில் உள்ள மிஸ்டு கால்களை திரும்ப அழைப்பதில், நாம் வைக்கும் அலார்மிற்கு சரியாக எழுவதில் என சின்னஞ்சிறியவைகளைச் செய்வதில்தாம் அரசத்தன்மை நிரம்பி வழிகின்றது.

கிறிஸ்துவை அரசராகக் கொண்டாடும் நாம் இன்று அண்ணாந்து பார்க்க வேண்டும். சற்றே குனிந்து பார்ப்போம்.
நாம் அண்ணாந்து பார்த்து பிரமித்த அரசர்கள் எல்லாம் நம்மை அடிமையாக்கிவிட்டனர் அல்லது அடிமையாக்குகின்றனர். சற்றே குனிந்து நம்மையும், நமக்கு கீழ் இருப்பவர்களையும் பார்ப்போம். எல்லாரும் எழுந்துவிட்டால், யாரும் யாரையும் அண்ணாந்து பார்க்கத் தேவையில்லை.
நீங்களும், நானும் அரசர்களே!
'ஆளுநன் இயேசுவை நோக்கி, 'நீ யூதரின் அரசனா?' என்று கேட்டான்.
அதற்கு இயேசு, 'அவ்வாறு நீர் சொல்கிறீர்' என்று கூறினார்.' (மத் 27:11) 



No comments:

Post a Comment