Saturday 4 November 2017

பொதுக்காலம் 31ஆம் ஞாயிறு



ஆண்டின் பொதுக்காலம் 31ஆம் ஞாயிறு

 மலாக்கி 1:14-2:1-2,8-10  | 1 தெசலோனிக்கர் 2:7-9,13  | மத்தேயு 23:1-12

அருள்பணி ஏசு கருணாநிதி -மதுரை


தாய்மடி தவழும் குழந்தை என


'கொடுமை கொடுமை என்று கோயிலுக்கு வந்தா
அங்கே ரெண்டு கொடுமை அரையும் குறையுமா ஆடுச்சாம்!' என்பது கிராமங்களில் வழங்கப்படும் சொலவடை. அதாவது, மனதிற்கு அமைதி தரும் இடமாக நாம் கோயிலை நினைத்து அங்கே வரும்போது நம் மன அமைதி இழக்கும் இடமாக அது மாறிவிட்டால் எப்படி இருக்கும்?
இன்றைய முதல் மற்றும் மூன்றாம் வாசகங்கள் எருசேலம் ஆலயத்திலும் மற்றும் யூத சமயத்திலும் திருப்பணி புரியும் குருக்கள், மறைநூல் அறிஞர்கள், பரிசேயர் ஆகியோரைச் சாடுவதாக இருக்கின்றது. ஆண்டவரின் ஆலயத்தைத் தேடி வரும் அன்பர்களுக்கு அமைதி தருவதற்காக ஏற்படுத்தப்பட்ட அல்லது தாங்களாகவே ஏற்படுத்திக்கொண்ட இவர்கள் செய்யும் அநியாயங்களைப் பட்டியலிடுகின்றன இந்த வாசகங்கள்:
அ. போதனையில் ஓரவஞ்சனை. அதாவது, இருப்பவர்களுக்கு ஒரு போதனை. இல்லாதவர்களுக்கு ஒரு போதனை. பணம் கொடுத்தால் ஒரு போதனை. பணம் கொடுக்காவிட்டால் ஒரு போதனை. இப்படியாக போதிப்பதிலும் ஏற்றத்தாழ்வு.
ஆ. இரட்டை வேடம். அல்லது வெளிவேடம். இரண்டு அளவுகோல்கள். இரண்டு வாழ்க்கை முறைகள். சொல்வது ஒன்று. செய்வது மற்றொன்று.
இ. வெளி அடையாளங்களுக்கு முக்கியத்துவம். நான் யார் என்பதை என்னைப் பார்த்தாலே தெரிய வேண்டும் என்று தோற்றத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பது.
ஈ. முந்தியடித்துக்கொண்டு தேடும் மரியாதை. அதாவது, அடுத்தவரின் ஈர்ப்பின் மையமாக இருக்க வேண்டும். எப்போதும் முதலில் அல்லது நடுவில் இருக்க வேண்டும்.
உ. தாங்களாகவே ஏற்படுத்திக்கொண்ட பட்டங்கள். சில பட்டங்களை மற்றவர்கள் தங்களுக்குக் கொடுத்தாலும், தாங்களாகவே சில பட்டங்களை ஏற்படுத்திக்கொண்டு அந்தப் பட்டங்கள்தாம் வாழ்வு என்று நினைப்பது.

இந்த 5 தவறுகளும் குருக்கள் மற்றும் அருள்நிலையில் உள்ளவர்களிடம் இருப்பதாக வாசகங்கள் சித்தரித்தாலும், இந்த ஐந்து குணங்களும் ஏதோ ஒரு வகையில் நம் அனைவரிடமும் இருக்கத்தான் செய்கின்றன. இந்த ஐந்து குணங்களும் நம்மில் உருவாகக் காரணம் நம் நெஞ்சத்தில் அமைதியற்ற நிலைதான்.

அதாவது, நெஞ்சம் அங்கலாயத்துக்கொண்டும், ஆரவாரம் செய்துகொண்டும் இருக்கும்போதுதான் இப்படிப்பட்ட குணங்கள் நம்மில் இருக்கும். அமைதிநிறை நெஞ்சம் எப்படி இருக்கும் என்பதை இன்றைய பதிலுரைப்பாடலும் (திபா 131), இரண்டாம் வாசகமும் அழகாகப் பதிவு செய்கின்றன:

திருப்பாடல் ஆசிரியரின் உள்ளத்து அமைதி மூன்று நிலைகளில் இருக்கிறது:

அ. 'உள்ளத்தில் இறுமாப்பு இல்லை'
ஆ. 'பார்வையில் செருக்கு இல்லை'
இ. 'மிஞ்சின, அரிய, பெரிய, காரியங்களில் ஈடுபடுவது இல்லை'

இறுமாப்பும், செருக்கும் ஒன்றோடொன்று தொடர்புடையவை. 'இறுமாப்பு' என்பது நாம் சாப்பிடும் லேய்ஸ் சிப்ஸ் பாக்கெட் போன்றது. சிப்ஸ் பாக்கெட் பார்ப்பதற்கு பெரியதாக இருக்கும். உடைத்துப் பார்த்தால் சிப்ஸ் மிகக் குறைவான அளவுதான் இருக்கும். நாம் 10 ரூபாய் கொடுத்து வாங்கும் பாக்கெட்டில் 8 ரூபாய் வெறும் காற்றுக்குத்தான் கொடுக்கிறோம். இல்லாததை இருப்பது போல காட்டிக்கொள்வதுதான் இறுமாப்பு. செருக்கு என்பது இறுமாப்பு காட்டுவதுதான் உண்மை என உள்மனது கொள்ளும் பொய்யான நம்பிக்கை. இந்த இரண்டும் வரும்போது அடுத்தவரை நாம் சிறுமைப்படுத்தத் தொடங்குகிறோம்.

100 கிராம் லேய்ஸ் பாக்கெட்டையும், ஒரு 50 கிராம் உருளைக் கிழங்கையும் பக்கத்தில் வைத்தால், லேய்ஸ் பாக்கெட்தான் பெரியதாகத் தெரியும். உருளைக் கிழங்கு சிறுமைப்படுத்தப்படும். ஆனால் பாக்கெட் உடைந்தால் உண்மை வெளிப்படும். ஆக, இறுமாப்பும் செருக்கும் இடத்தில் இரட்டையான வாழ்வும், வெளி அடையாளங்களுக்கான முக்கியத்துவமும் தானாய் வந்துவிடும். இந்த இரண்டும் வந்துவிட்டால் 'என்னால் முடியும்' என முடியாத காரியங்களையும் நாம் செய்ய முயற்சி செய்வோம். அது இன்னும் தோல்வியில் போய் முடியும்.

இதற்கு எதிர்மறையாக நாம் கொள்ள வேண்டியது எவை?

திருப்பாடல் ஆசிரியர் தொடர்ந்து சொல்கிறார்: 'நிறைவும்,' 'அமைதியும்' கொண்ட நெஞ்சம். 'நிறைவு' என்பது எப்போதும் ஒரு ரெலடிவ் டேர்ம். அதாவது, ஒன்றும் இல்லாதவருக்கு 10 ரூபாய் என்பது நிறைவே. எல்லாம் இருப்பவருக்கு 10000 கோடி என்றாலும் நிறைவல்லவே. எங்க அய்யாமையிடம் நான் கற்றது இதுதான்:. பகல் முழுவதும் வெயில் வேலை செய்துவிட்டு வெறும் 6 ரூபாய் கூலியுடன் (1990களில்) வீட்டிற்கு வருவார். இதைக் கொடுக்கின்ற பண்ணைக்காரர், 'போதுமா லட்சுமமி!' என்பார். 'போதும் என்றால் இதுவே போதும். போதாது என்றால் எதுவுமே போதாது' என்பார் அய்யாமை. ஆனால் அவருக்கு அதுவே போதுமானதாக இருந்தது. ஆக, நிறைவு என்பது உள்ளிருந்து வரும் உணர்வு. வெளியிலிருந்து இயக்கப்படும் அல்லது புகுத்தப்படும் உணர்வு அல்ல அது. நிறைவு வந்துவிட்டால் அமைதியும் தொடர்ந்து வந்துவிடும். அமைதி என்பதும் வெளியிலிருந்து நமக்கு வரும் உணர்வு அல்ல. மாறாக, நம் உள்ளத்தின் நிறைவில் தானாக எழும் ஓர் உணர்வு.

இந்த 'நிறைவு' மற்றும் 'அமைதி' ஆகிய உணர்வுகளுக்கு திருப்பாடல் ஆசிரியர் மிக அழகான உருவகத்தைத் தருகின்றார்: 'தாய்மடி தவழும் குழந்தை.'

பால்குடி மறந்து திட உணவை உண்ணத் தொடங்கும் குழந்தை ஒரு போராட்டத்திற்குப் பின் தன் தாய் மடியில் படுத்துறங்கும். அது அப்படி படுப்பது தன் தாயிடம் கிடைக்கும் பால்குடிக்காக அல்ல. மாறாக, தன் தாய்தான் எல்லாம். அவருக்கு எல்லாம் தெரியும். அவர் என்னைப் பார்த்துக்கொள்வார் என்ற நம்பிக்கையே.

இதையே தொடர்ந்து ஆசிரியர், 'இஸ்ரயேலே! இப்போதும் எப்போதும் ஆண்டவரையே நம்பியிரு!' என நிறைவு செய்கின்றார் பாடலை.

இதே பண்புகளை இன்றைய இரண்டாம் வாசகத்தில் தூய பவுலடியாரின் திருமுகத்திலும் வாசிக்கின்றோம். தன் நற்செய்திப் பணியின் சிறப்பு மற்றும் தனித்துவம் பற்றி தெசலோனிக்க திருச்சபைக்கு எழுதும் பவுல் தன் நடத்தை பற்றி இப்படி எழுதுகின்றார்:

அ. தாய் தன் குழந்தைகளைப் பேணி வளர்ப்பது போன்ற கனிவு.
ஆ.எங்களையே உங்களுக்குக் கொடுத்துவிட வேண்டும் என்ற ஆவல்.
இ. உங்களுக்குச் சுமையாக இருக்கக் கூடாது என்ற வைராக்கியமும், அதற்கான உழைப்பும்.

இன்று ஒரே உருவகத்தை நம் மனத்தில் பதிய வைப்போம்: 'தாய் மடி தவழும் குழந்தை'

அ. இந்தக் குழந்தை தன்னை ஒருபோதும் தன் தாயிடம் நிருபிக்க மெனக்கெடுவதில்லை. 'இதுதான் என் நிறம். இதுதான் என் படிப்பு. இதுதான் என் திறன். இதுதான் நான்' என்று எதையும் மெய்ப்பிக்க விரும்புவதில்லை. தன் இருப்பை அப்படியே ஏற்றுக்கொள்கிறது இந்தக் குழந்தை. இதுதான் எளிமை. இருப்பை இருப்பதாக எடுத்துக்கொள்வது எளிமை. இல்லாததை இருப்பாக ஏற்றுக்கொள்வது இறுமாப்பு. இன்றைய முதல் மற்றும் மூன்றாம் வாசகங்கள் குற்றம் சுமத்தப்படும் குருக்கள் செய்த தவறு இதுதான். தங்கள் இருப்பை அவர்கள் மறந்துவிட்டார்கள். தாங்கள் பிறந்த பிறப்பை, தங்களின் எளிமையான, கசப்பான வேர்களை மறந்துவிட்டார்கள். ஆக, துணிந்து மற்றவர்களைப் பார்த்து விரல் நீட்டுகிறார்கள்.

ஆ. இந்தக் குழந்தையின் படுக்கை ஆழமாக இருக்கும். அதாவது, தன் தாயின் மடியில் அப்படியே அது தன்னைப் புதைத்துக்கொள்ளும். ஆக, அது கீழே விழுவதற்கான வாய்ப்பே இல்லை. பல நேரங்களில் நாம் கீழே விழுந்துவிடுவோம் என்ற பயத்தில்தான் நமக்கென அடையாளங்களையும், மதிப்புகளையம், லேபிள்களையும், மரியாதைகளையும் பிடித்துக்கொள்கின்றோம். மரியாதை அல்லது மதிப்பு என்பது வெளியிலிருந்து வரும் உணர்வு அல்ல. மாறாக, என் உள்ளத்து உணர்வு. நான் என் அறைக்குள் வரும்போது அறையில் அமர்ந்திருப்பவர் எழுந்து நிற்பதுதான் மரியாதை என என் மனம் நினைத்துக்கொள்வதால், அவர் எழுந்தால் அது மரியாதை என்றும், எழாவிட்டால் மரியாதைக் குறைவு என்றும் கருதுகிறேன். நான் இந்த நினைப்பையே என் உள்ளத்திலிருந்து எடுத்துவிட்டால் நான் மரியாதை அல்லது குறைவு பற்றி கவலைப்பட தேவையே இல்லை.

இறுதியாக,

இன்று நாம் நிறைய கதைகளை உண்மை என நம்பிக்கொண்டிருக்கின்றோம். அதிகம் படிக்க வேண்டும், அதிகம் ஓட வேண்டும், அதிகம் உழைக்க வேண்டும், அதிகம் ஜெயிக்க வேண்டும், அதிகம் பணம் வேண்டும், அதிகம் இடம் வேண்டும் என்று 'அதிகம்' என்ற வார்த்தையை நோக்கியே நம் வாழ்க்கை ஓட்டம் இருக்கிறது.

ஆனால், அதிகத்தில் இல்லை நிறைவும், அமைதியும். இதையே சபை உரையாளரும், 'காற்றைப் பிடிக்க முயல்வது போன்ற பயனற்ற உழைப்பு இரு கை நிறைய இருப்பதை விட மன அமைதி ஒரு கையளவு இருப்பதே மேல்' (4:6) என்கிறார்.

நாம் அருள்நிலையில் இருந்தாலும், பொது நிலையில் இருந்தாலும் அவரின் மடியில் தவழும் குழந்தையாய் வாழ முயற்சி செய்தால், நாம் குறைவிலும், குறைவு கேட்போம். அந்தக் குறைவிலும் நிறைவும், அமைதியும் காண்போம்.



செய்யக்கூடாததும் செய்யவேண்டியதும்..

அருட்பணி மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை


 சில ஆண்டுகளுக்கு முன்பாக நியூயார்க் நகரில் உள்ள ஒரு பிரபல ஆலயத்தில் போதிப்பதற்காக மறைபோதகர் ஒருவர் அழைப்புப் பெற்றிருந்தார். அவர் ‘பிறருடைய உடமையை, பொருளைத் திருடக்கூடாது’ என்ற தலைப்பில் அற்புதமாக மறைபோதனை செய்தார். மக்கள் அவருடைய போதனையைக் கேட்டு வியப்பில் ஆழ்ந்தார்கள்.
அந்த மறைபோதகர் தன்னுடைய போதனையை முடித்துக்கொண்டு, தன்னுடைய இருப்பிடம் செல்வதற்காக பேருந்து ஒன்றில் பயணமானார். அந்த பேருந்தில் சரியான கூட்டம், நிற்பதற்குக்கூட இடமில்லை. மறைபோதகர் எப்படியோ பேருந்துக்குள் நுழைந்து, ஓர் மூலையில்போய் நின்றுகொண்டார். பின்னர் ஒரு டாலர் பணத்தை எடுத்து, பயணச்சீட்டு வாங்கிக்கொண்டார். பயணச்சீட்டு போக மீத பணத்தை பேருந்து நடத்துனர் மறைபோதகரிடம் கொடுத்துவிட்டு, தன்னுடைய இருக்கையில் போய் அமர்ந்துகொண்டார். மறைபோதகர் நடத்துனர் கொடுத்த பணத்தை எண்ணிப் பார்த்தபோது, அது சிறிது அதிகமாகவே பணம் இருந்தது.
உடனே அவர் நடத்துனரிடம் சென்று அதிகமாகக் கொடுக்கப்பட்ட பணத்தை அவரிடம கொடுத்து, “இந்தப் பணம் அதிகமாகக் கொடுக்கப்பட்ட பணம். இதை வைத்துக்கொள்ளுங்கள்” என்று சொல்லிவிட்டுத் திரும்பினார். அப்போது அந்த பேருந்து நடந்துனர் மறைபோதகரிடம், “நான் தெரிந்தேதான் சிறுது அதிகமான பணத்தை உங்களிடம் கொடுத்தேன். ஏனென்றால் நேற்று ஆலயத்திற்கு வந்திருந்திருந்தேன். அப்போது நீங்கள்தான் மறைபோதனை செய்தீர்கள். அந்தப் போதனையில் ‘பிறருடைய பொருளை, உடைமையைத் திருடக்கூடாது’ என்று போதித்தீர்கள். நீங்கள் போதித்ததற்கு ஏற்ப வாழ்கிறீர்களா என்று சோதித்துப் பார்ப்பதற்காகத்தான் நான் சிறுது அதிகமான பணத்தை உங்களிடம் கொடுத்தேன். ஆனால் நீங்கள் அதிகமான பணத்தை என்னிடம் கொடுத்து, நான் வைத்த சோதனையில் நீங்கள் வெற்றிக்கொண்டுவிட்டீர்கள். ஒருவேளை நீங்கள் மட்டும் நான் அதிகமாகக் பணத்தை என்னிடம் திருப்பித் தந்திராவிட்டால் ‘இவர்கள் போதிப்பார்கள், ஆனால் செயலில் காட்டமாட்டார்கள் என்ற முடிவுக்கு வந்திருப்பேன்’ என்றார்.
எல்லாவற்றையும் கேட்டபிறகு மறைபோதகர் நடத்துனரிடம், “நான் கடைப்பிடிக்காத எதையும், மக்களுக்குப் போதிக்கமட்டேன்” என்றார். போதித்ததை வாழ்வாக்க வேண்டும் அதுதான் உண்மையான போதனை என்பதை இந்த நிகழ்வு நமக்கு எடுத்துக்கூறுகின்றது. பொதுக்காலத்தின் முப்பத்தி ஒன்றாம் ஞாயிற்றுக்கிழமையான இன்று நாம் படிக்ககேட்ட வாசகங்கள் ‘செய்யக்கூடாததும் செய்யவேண்டியதும்’ என்ற சிந்தனையை வழங்குகின்றது. நாம் எதைச் செய்யவேண்டும், எதைச் செய்யக்கூடாது என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.
நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு மறைநூல் அறிஞர்கள் மற்றும் பரிசேயர்களுக்கு எதிரான தனது கண்டக்குரலைப் பதிவு செய்கின்றார். இந்தப் பகுதியிலிருந்து நாம் என்னென்ன செய்யக்கூடாது, என்னென்ன செய்யவேண்டும் என்பதைக் குறித்த தெளிவினைப் பெறுகின்றோம்.
நற்செய்தியில் இயேசு மக்களையும் சீடர்களையும் பார்த்துக் கூறுகின்றார், “பரிசேயர்களும் மறைநூல் அறிஞர்களும் என்னென்ன செய்யும்படி உங்களிடம் கூறுகிறார்களோ, அவற்றையெல்லாம் கடைப்பிடித்து நடந்து வாருங்கள். ஆனால், அவர்கள் செய்வதுபோல நீங்கள் செய்யாதீர்கள். ஏனெனில், அவர்கள் சொல்வார்கள்; செயலில் காட்டமாட்டார்கள்” என்று. ஆம், பரிசேயர்களும் மறைநூல் அறிஞர்களும் போதித்தார்கள். ஆனால், அவர்கள் அதை தங்களுடைய வாழ்வில் வாழ்ந்து காட்டவில்லை. இது மிகப்பெரிய போலித்தனம். இப்படிப்பட்ட ஒரு போலித்தனத்தை நம்முடைய வாழ்வில் செய்யக்கூடாது என்பதுதான் இயேசுவின் போதனையாக இருக்கின்றது.
நிறைய நேரங்களில் நாம் போதிக்கின்றாம் அல்லது இறைவார்த்தையை நாம் வாசிக்கின்றோம். ஆனால் அந்த போதனைக் கேற்ப, இறைவார்த்தை வாசிப்பிற்கேற்ப நம்முடைய வாழ்வு இராததுதன் மிகப்பெரிய அபத்தமாக இருக்கின்றது. ‘போதனையும் வாழ்வும் அல்லது இறைவார்த்தை வாசிப்பும், வாழ்வும் ஒத்துப்போகாதது இயேசுவைப் பொறுத்தளவில் மிகப்பெரிய குற்றம்தான். மத்தேயு இயேசுகூறுவார், “என்னை நோக்கி ஆண்டவரே, ஆண்டவரே எனச் சொல்பவரெல்லாம் விண்ணரசுக்குள் செல்வதில்லை. மாறாக, விண்ணுலகிள்ள என் தந்தையின் திருவுளத்தின்படி செயல்படுபவரே செல்வர்” என்று (மத் 7: 21). எனவே நாம் போதிப்பது ஒன்றாகவும், வாழ்வது ஒன்றாகவும் இல்லாமல், போதனையும், வாழ்வும் ஒத்துப்போகும்படி வாழ்வோம்.
அடுத்ததாக இயேசு பரிசேயர்கள் மற்றும் மறைநூல் அறிஞர்களைக் கடிந்துகொள்வதற்குக் காரணம் அவர்களின் வெளிவேடத்தனமான வாழ்வாகும். குறிப்பாக அவர்கள் எதைச் செய்ததாலும் மக்கள் பார்க்கவேண்டுமென்ற செய்தார்கள். அது தான தர்மமாக இருக்கட்டும், இறைவேண்டுதலாக இருக்கட்டும் எல்லாவற்றையும் அவர்கள் மக்கள் பார்க்கவேண்டும், தங்களைப் புகழவேண்டும் என்று செய்தார்கள். ஆனால் ஆண்டவர் இயேசுவின் போதனையோ இதற்கு முற்றிலும் மாறானதாக இருக்கின்றது. இயேசு கூறுகின்றார், “நீங்கள் இறைவனிடம் வேண்டும்போது, உங்கள் உள்ளறைக்குச் சென்று வேண்டுங்கள்” (மத் 6:6), நீங்கள் தர்மம் செய்யும்போது ‘உங்கள் வலக்கை செய்வது இடக்கைக்குத் தெரியாத அளவில் செய்யுங்கள்” ( மத் 6:3)என்று. ஆகவே, நாம் எதைச் செய்தாலும் பரிசேயர்கள் மறைநூல் அறிஞர்களைப் போன்று மக்கள் பார்க்கவேண்டுமென்றோ அல்லது விளம்பரத்திற்காகச் செய்யாமல், உள்ளார்ந்த அன்போடு செய்வோம்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக (2015 ஆண்டு, ஆகஸ்டு 09 ம் நாள்) பத்திரிகையில் வந்த செய்தி: திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு மாணவி தன் தாயுடன் சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் நின்றுகொண்டு அண்ணா அரங்கம் எங்கு உள்ளது என தேடிக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக நடைப்பயிற்சி மேற்கொண்ட ஒருவர் விசாரித்த போது, அவர்கள் கோவையில் உள்ள அண்ணா அரங்கத்திற்கு செல்வதற்கு பதிலாக சென்னைக்கு வந்தது தெரியவந்தது.
இதனைக் கேட்டறிந்த மாணவியும் அவரின் தாயும் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அந்தத் தாயானவள், தனது மகள் பன்னிரெண்டாம் வகுப்பில் 1,017 மதிப்பெண்கள் பெற்றுள்ளதாகவும், இளங்கலை வேளாண்மை பிரிவிற்கு கலந்தாய்வுக்கு வந்துள்ளதாக அவரிடம் தெரிவித்தார். இதனையடுத்து, அந்த நபர் தாய் மற்றும் மகளை விமான நிலையத்திற்கு அழைத்துச் சென்று தனது சொந்த செலவில் விமான பயணச்சீட்டு எடுத்து இருவரையும் கோவைக்கு அனுப்பி வைத்தார். பின்னர் கோவை சென்றவர்கள் மதியம் 12 மணிக்கு கலந்தாய்வில் கலந்து கொண்டு இளங்கலை பயோ டெக்னாலஜி பிரிவை தேர்வு செய்தனர். மாணவி மற்றும் அவரின் தாயார், தனக்கு உதவிசெய்த நபர் யார் என்று தெரியாமல் அவருக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.
இப்படியும் யாருக்குமே தெரியாமல், எந்தவொரு விளம்பரமும் இல்லாமல் உதவிசெய்யும் நல்ல உள்ளங்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். இவர்கள்தான் இயேசுவின் போதனைப்படி வாழக்கூடியவர்கள். நாம் இவர்களைப் போன்று வாழவேண்டும், பரிசேயர்கள் மற்றும் மறைநூல் அறிஞர்களைப் போன்று அல்ல.
மூன்றாவதாக இயேசு பரிசேயர்கள் மற்றும் மறைநூல் அறிஞர்களைச் சாடுவதற்குக் காரணம் அவர்களது ஆணவம்தான். “விருந்துகளில் முதன்மையான இடங்களையும் தொழுகைக்கூடங்களில் முதன்மையான இருக்கைகளையும் விரும்புகிறார்கள்” என்று இயேசு அவர்களைக் கடிந்துகொள்கிறார். பல நேரங்களில் நாமும் அவர்களைப் போன்று முதன்மையான இடங்களைப் பெறவேண்டும், முதன்மையான இடங்களை வகிக்கவேண்டும் என்ற ஆணவத்தோடு செயல்படுகின்றோம். ஆனால் ஆண்டவர் ஆணவத்தை அல்ல தாழ்ச்சியோடு வாழவேண்டும் என்று விரும்புகிறார். அதனால்தான் அவர், “உங்களுள் பெரியவர் உங்களுக்குத் தொண்டராக இருக்கட்டும், அப்படித் தம்மைத்தாமே தாழ்த்துகிறவர் உயர்த்தப்படுவார்” என்கிறார்.
கிறிஸ்தவர்களாகிய நாம் ஆணவத்தையும் அகங்காரத்தையும் அல்ல, தாழ்ச்சியையும் பணிவையும் நமது வாழ்வில் கடைப்பிடித்து வாழவேண்டும். ஏனென்றால் தாழ்ச்சி என்ற விதையிலிருந்துதான் எல்லா மரமும் பிறக்கின்றது (தமிழருவி மணியன்). நாம் தாழ்ச்சியோடு வாழும்போது இறைவனின் எல்லா ஆசிரையும் பெற்றுக்கொள்ள முடியும்.
நம்முடைய இந்தியத் திருநாட்டில் விடுதலைப் போராட்டம் விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டிருந்த நேரம். அப்பொழுது காந்தியடிகள் இரயிலில் ஓர் ஊருக்குப் போய்க்கொண்டிருந்தார். அவர் பயணம் செய்த இருக்கைக்குப் பக்கத்தில் இருந்த ஒரு பெரியவர் வெற்றிலையை போட்டு, எச்சிலை வெளியே துப்பாமல், இரயில் பெட்டிக்குள்ளே துப்பினார். இதைப் பார்த்த காந்தியடிகள் எதுவும் பேசாமல் ஒரு துணியால் துடைத்தார். அவர் மீண்டுமாக எச்சிலை வெளியே துப்பாமல் இரயில் பெட்டுக்குள்ளே துப்பியபோதும் காந்தியடிகள் மிகுந்த பொறுமையோடும் தாழ்சியோடும் அதைத் துடைத்தெடுத்தார்.
அப்போது பக்கத்துக்கு இருக்கையில் அமர்ந்திருந்தவர்கள் அந்த மனிதரிடம், “எதற்காக எச்சிலை வெளியே துப்பாமல், இரயில் பெட்டுக்குள்ளே துப்புகிறாய்?” என்று கேட்டார்கள். அதற்கு அம்மனிதர், “இது என்னுடைய நாடு, இந்த இரயில் என்னவேண்டுமானாலும் செய்ய எனக்கு உரிமை இருக்கிறது” என்றார். உடனே அக்கம் பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்தவர்கள், ‘இது உன்னுடைய நாடுதான், இந்த இரயிலில் உனக்கு என்னவேண்டுமானாலும் செய்ய உரிமை இருக்கிறதுதான். ஆனால் நீ துப்புகிற எச்சிலை எல்லாம் துடைக்கின்ற மனிதர் யாரென்று தெரியுமா?, அவர் நம்முடைய தேசத் தந்தை காந்தியடிகள்” என்றார்கள்.
இதைக் கேட்ட அவர் பேச்சற்றுப் போனார். உடனே அவர் காந்தியடிகளின் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டார். காந்தியடிகள் பெருந்தன்மையோடு அவரை மன்னித்து ஏற்றுக்கொண்டார். இங்கே காந்தியடிகளின் பொறுமையும், தாழ்ச்சியும் தீச்செயலில் ஈடுபட்ட மனிதரை மனமாறச் செய்தது என்று சொன்னால் அது மிகையாகாது. பொறுப்புகளில் இருப்பவர்கள் ஏன், எல்லாருமே ஆணவத்தை அல்ல, தாழ்ச்சியைக் கொண்டு வாழவேண்டும். அதுதான் ஒரு மனிதருக்கு அழகு சேர்க்கும்.
ஆகவே, இயேசுவின் சீடர்களாகிய நாம் போதிப்பது ஒன்றாகவும் வாழ்வது ஒன்றாகவும் அல்லாமல், போதித்ததை வாழ்வாக்குவோம், எதையும் விளம்பரத்திற்காக செய்யாமல், உள்ளார்ந்த அன்போடு செய்வோம். அதேபோன்று ஆணவத்தோடு அல்லாமல், தாழ்ச்சியோடு வாழப் பழகுவோம். அதன்வழியாக இறைவன் அளிக்கும் முடிவில்லா வாழ்வைக் கொடையாகப் பெறுவோம்.


No comments:

Post a Comment