Monday 20 August 2018

ஆண்டின் பொதுக்காலம் 21-ஆம் ஞாயிறு


ஆண்டின் பொதுக்காலம் 21-ஆம் ஞாயிறு


இன்றைய வாசகங்கள்


யோசுவா 24:1-2, 15-18
எபேசியர். 5:21-32
யோவான். 6:60-69



நற்கருணை

அன்பார்ந்த சகோதரனே! சகோதரியே! ஆண்டவர் இயேசு படிப்படியாகத் தம் சீடர்களைத் தயாரித்து ஒரு மாபெரும் உண்மையை, உண்மை மசோதாவாக அறிவிக்கப் போகிறார். மக்களவையில் ஆளும் கட்சியினர் ஒரு மசோதாவைக் கொண்டு வரும்போது அதை எதிர்கட்சியினர் எதிர்த்து வெளிநடப்பு செய்வதை நாம் அன்றாடம் வாசிக்கிறோம், T.V-யில் பார்க்கிறோம். அதேபோல் மசோதாவை அறிவித்து, அறிமுகம் செய்தபோது யூத மக்கள் எதிர்த்தார்கள். இது மித மிஞ்சிய பேச்சு என்று முணுமுணுத்து வெளி நடப்புச் செய்தார்கள். இயேசுவை விட்டுப் பிரிந்த சீடர்கள் அவரிடம் மீண்டும் வரவில்லை (யோவா. 6:66)

அருமையான சகோதரனே! சகோதரியே! தீர்மானம் எடுப்பது என்பது வாழ்க்கையில் இன்றியமையாதது. வாழ்க்கைக்கு வடிவம் கொடுக்கிறது. வாழ்க்கையையே அமைத்துக் கொடுக்கிறது. ஆனால் சமூகத்தில் பலர் தீர்மானம், அல்லது முடிவு எடுக்கத் தடுமாறுகிறார்கள். தெளிவின்றி வாழ்வை இழந்து வாடுகிறார்கள். ஆனால் தீர்மானம் எடுக்கும்போது நிறைவான, மகிழ்வான, உயரிய , உண்மைக்கு இட்டுச் செல்வதில் தீர்மானம் எடுக்க வேண்டும்.

இயேசுவைப் பாருங்கள்!
தன் சீடருள் பலர் தம்மை விட்டுப் பிரிந்து செல்வதைக் கண்டு இயேசு சிறிதும் தயங்கவில்லை . தன் முடிவையும் மாற்றிக் கொள்ளவில்லை. மாறாகத் தன் பன்னிரு சீடர்களைப் பார்த்து நீங்களும் போய்விட நினைக்கிறீர்களா? (யோவா. 6:67) என்று கேட்கிறார் இயேசு. ஏனெனில் உண்மை ஒருபோதும் மறையாது. உண்மை உறங்குவதில்லை. இயேசு இந்த நற்கருணை மசோதாவைக் கொண்டு வந்தபோது பெரும்பான்மையோரின் வாக்கெடுப்புக்கு விடவில்லை. எதிர்ப்புக்கு மத்தியிலும் நிறைவேற்றினார்.

சீடர்கள் தீர்மானம் எடுப்பதில் முதலில் தயக்கம் காட்டினாலும், பேதுரு சீடர்கள் சார்பாக முடிவு எடுக்கிறார். ஆண்டவரே நாங்கள் யாரிடம் போவோம். வாழ்வு தரும் வார்த்தைகள் உம்மிடம் தானே உள்ளன (யோவா. 6:68) என்று நம்பிக்கையின் தீர்மானத்தை வெளிப்படுத்துகிறார்.
ஆனால் கூடியிருந்த கூட்டம் எடுத்த தீர்மானம் வாழ்வை இழக்கும் தீர்மானமாக, உண்மையை மறுக்கும் தீர்மானமாக, தவறான பாதைக்கு இட்டுச் செல்லும் தீர்மானமாக அமைகிறது.

இன்றைய முதல் வாசகமும் மூன்றாம் வாசகமும் நமது வாழ்வில் சரியான தீர்மானங்கள் எடுக்க அழைப்பு விடுக்கின்றன.
கடந்த 2000 ஆண்டுகளாக எத்தனையோ பேர் நற்கருணை மறைபொருளை எதிர்த்து வந்தாலும், அதைத் திரித்துக் கூறினாலும், இன்றும் நற்கருணை மறைபொருளானது மங்காது, மறையாது, குன்றாது, குறையாது திருச்சபையின் வாழ்வு முழுவதற்கும் ஊற்றாக, சிகரமாக உள்ளது. யூதாசு இயேசுவைக் காட்டிக் கொடுத்தான். இறுதி உணவின் போது அவனுக்குள் அலகை நுழைந்தது. நற்கருணையில் பங்கேற்காமல் அவனை இருளில் அழைத்துச் சென்றது அலகை.

யூதாஸ் நமக்கெல்லாம் எச்சரிக்கை!
இன்று கத்தோலிக்க கிறிஸ்தவர்களில் சிலர் நற்கருணையை விட்டு விலகி பிரிவினை சபைக்கு ஓடுகிறார்கள். ஒரு பெண்ணைப் பார்த்து நீங்கள் எங்கள் சபைக்கு வாருங்கள். உங்கள் தீரா நோயை எடுத்துவிடுவோம் என்று பிரிந்த சபையினர் அழைத்தனர். நற்கருணை ஆண்டவர் என்னைக் குணப்படுத்துவார். வேறு எந்தச் சபைக்கும் நான் போகத் தயாராக இல்லை என்று உறுதிபடக் கூறினார் அந்தப் பெண். சுண்டல் கொடுக்கின்ற கோவில்களுக்கெல்லாம் ஓடும் சிறுபிள்ளைபோல, புற்றீசல் போல் பெருகி வரும் பிரிவினைச் சபைக்கு ஓடும் நிலையை நாம் கைவிட வேண்டும். ஓடியவர்களை நாம் கொண்டு வர முயற்சிப்போம். அப்போது நாம் வாழ்வு பெறுவோம்.

மலைகள் நிலை பெயரலாம். குன்றுகள் அசையலாம். என் அன்போ என்றுமே மாறாது. உன் மீது முடிவில்லா அன்பு கொண்டுள்ளேன் (எசா. 54:10). உன்னோடு முடிவில்லா உடன்படிக்கை செய்வேன் (எசா. 55:3-4).








இறைவார்த்தை வழியில்

 ஒரு பங்குப் பணியாளர் ஞாயிறு மறையுரையின் போது, ஒரு மருந்து பாட்டிலெ மக்களுக்குக் காட்டி, இது என்ன? என்று கேட்டார். அதற்கு பங்கு மக்கள், மருந்துப் பாட்டில் என்றார்கள். இதன் மீது என்ன எழுதப்பட்டிருக்கின்றது என்பது தெரிகின்றதா? என்றார். மக்களோ, தெரியவில்லை, நீங்களே படித்துச் சொல்லுங்கள் என்றனர். பங்கு பணியாளர் படித்தார். காலையில் ஒரு ஸ்பூன், மதியம் ஒரு ஸ்பூன், இரவு ஒரு ஸ்பூன் சாப்பிடும்படி சொல்லப்பட்டிருக்கின்றது என்றார்.

இவ்வாறு சொல்லிவிட்டு மக்களைப் பார்த்து, இந்த மருந்துப் பாட்டிலை உங்கள் கையில் கொடுத்து, இதில் எழுதியுள்ளபடி குடியுங்கள் என்று சொன்னால், நீங்கள் என்ன செய்வீர்கள்? என்று கேட்டார். அதற்கு மக்கள், அதில் எழுதியுள்ளபடி செய்வோம் என்றார்கள்.

அப்போது பங்குப்பணியாளர் மக்களைப் பார்த்து, ஒரு டாக்டர் சொல்வதை நம்புகின்றீர்கள் ? கடவுள் சொல்வதை, இறைவார்த்தையை நம்ப ஏன் தயங்குகின்றீர்கள்? என்றார். அன்றிலிருந்து அந்தப் பங்கில் பெரும் ஆன்மிக மாற்றங்கள் துளிர்விடத் துவங்கின.

நமக்கு வாழ்வளிக்கும் ஆற்றல் இறைவார்த்தைக்கு உண்டு (நற்செய்தி). கடவுளின் வார்த்தை நேர்மையானது (திபா 33:4). கடவுளின் வார்த்தைக்குக் குணமளிக்கும் ஆற்றல் உள்ளது (திபா 107:20). கடவுளின் வார்த்தை நமது காலடிக்கு விளக்கு (திபா 119:105). கடவுளின் வார்த்தை வல்லமை மிக்கது (எசா 55:10-11). கடவுளின் வார்த்தை என்றும் அழியாதது (மத் 24:35). கடவுளின் வார்த்தை நம்மை தூய்மைப்படுத்துகின்றது (இரண்டாம் வாசகம்).

நம் வாழ்க்கைக்குத் தேவையான அனைத்தையும் இறைவனிடமிருந்து பெற்றுத் தரும் சக்தி இறைவார்த்தைக்கு உண்டு! இதை மனத்தில் கொண்டு, நான் ஆண்டவரின் அடிமை ; உம் சொற்படியே எனக்கு நிகழட்டும் (லூக் 1:38) என்ற அன்னை மரியாவின் முன்மாதிரியைப்
பின்பற்றி, இறைவார்த்தையை நம்பி அதை நம் வாழ்வின் மையமாக்கி வளமுடன் வாழ்வோம்.

மேலும் அறிவோம் :


கேட்டார்ப் பிணிக்கும் தகை அவாய்க் கேளாரும்
வேட்ப மொழிவதாம் சொல் (குறள் : 643)

.
பொருள் : சொல்லாற்றல் என்று சான்றோரால் பாராட்டப்படுவது கேட்ட வரைக் கவரத்தக்கதாகவும் கேளாதவரைக் கேட்க விரும்பச் செய்வதாகவும் விளங்குவதாகும்!




மக்களவையில் ஆளும் கட்சியினர் ஒரு மசோதாவைக் கொண்டுவரும்போது அதை எதிர்த்து எதிர்க்கட்சியினர் வெளி நடப்புச் செய்கின்றனர். அவ்வாறே கிறிஸ்து நற்கருணை மசோதாவை, நம்பிக்கைக் கோட்பாட்டை யூதர்களுக்கு அறிமுகம் செய்தபோது, அதை எதிர்த்து மக்கள், "இதை ஏற்றுக் கொள்வது மிகக் கடினம்; இப்பேச்சை இன்னும் கேட்டுக் கொண்டிருக்க முடியுமா?" (யோவா 6:60) என்று கூறிவிட்டு வெளிநடப்புச் செய்தனர். அவ்வாறு இயேசுவை விட்டுப் பிரிந்த சீடர்கள் அவரிடம் மீண்டும் திரும்பி வரவில்லை (யோவா 6:66).
தம் சீடருள் பலர் தம்மை விட்டுப் பிரிந்து செல்வதைக் கண்ட இயேசு சிறிதும் கலங்கவில்லை . மாறாக, தம்முடன் இருந்த பன்னிருவரிடம், "நீங்களும் போய்விட நினைக்கிறார்களா?* (யோவா 6:67) என்றுதான் கேட்டார்,

உண்மை ஒருபோதும் பின்வாங்காது; சுடச்சுட ஒளிரும் பொன்னைப் போன்று எதிர்க்க எதிர்க்க மிளிரும் தன்மை உடையதுதான் உண்மை, "அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே: இச்செகத் துள்ளோரெல்லாம் எதிர்த்து நின்ற போதிலும், அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே” என்று எத்தகையச் சவாலையும் எதிர்த்து நிமிர்ந்து நிற்பதுதான் உண்மை.

வழியும் வாழ்வும், உண்மையும் உயிருமான கிறிஸ்து நற்கருணை மசோதாவை பெரும்பான்மையோரின் வாக்கெடுப்பிற்கு விடவில்லை. மாறாக, பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் அதை நிறைவேற்றினார், கடந்த 2000 ஆண்டளவாக எத்தனையோ பேர் நற்கருணை மறைபொருளை எதிர்த்து வந்தாலும், அதைப்பற்றித் திரித்துக் கூறினாலும், இன்றும் நற்கருணை மறைபொருளானது மங்காது மறையாது. குன்றாது குறையாது, திருச்சபை வாழ்வு முழுவதற்கும் ஊற்றாகவும் சிகரமாகவும் உள்ளது.

நற்கருணை மறை உண்மையை ஏற்றுக்கொள்வதற்கு மனித அறிவு கை கொடுக்காது, அதற்குத் தேவையானது வானகத் தந்தையின் அருள், எனவேதான் இன்றைய நற்செய்தியில் இயேசு, "என் தந்தை அருன் கூர்ந்தால் அன்றி யாரும் என்னிடம் வர இயலாது"(யோவா 6:65) என்று கூறி, தமது நீண்ட உரைக்கு முத்திரை வைக்கிறார்.

இயேசு கிறிஸ்து 'ஆமென் என்ற பெயர் கொண்டவர்; நம்பிக்கைக்குரிய உண்மையான சாட்சியானவர் {திவெ 3:14}; ஒரே நேரத்தில் அவர் 'ஆம்' என்றும் 'இல்லை ' என்றும் பேசாமல், 'ஆம்' என்று உண்மையையே பேசுபவர் (2 கொரி 1:19). அவர் நேற்றும் இன்றும் என்றுமே மாறாதவர் (எபி 13:8). உண்மையும் நம்பிக்கையும் உடைய அவர் நம்மிடம் எதிர்பார்ப்பதும் உண்மையும் நம்பிக்கையும் பற்றுறுதியுமாகும்.

கடவுளிடம் நாம் எவ்வாறு பற்றுறுதியுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்பதற்கு இன்றைய முதல் வாசகத்தில் யோசுவாவும், நற்செய்தியில் பேதுருவும் சிறந்த எடுத்துக் காட்டுக்களாகத் திகழ்கின்றனர்.

இஸ்ரயேல் மக்கள் உண்மையான கடவுளுக்கு ஊழியம் புரிந்தாலும் பிற இனத்தெய்வங்களையும் வழிபட்டு, இருமனத்தோராய் திகழ்ந்தனர். இந்நிலையில் யோசுவா அம்மக்களிடம், "நானும் என் வீட்டாரும் ஆண்டவருக்கே ஊழியம் புரிவோம்" (யோசு 24:15) என்று திட்டவட்டமாகக் கூறினார். அவ்வாறே, எல்லாரும் இயேசுவை விட்டுச் சென்ற கட்டத்திலும் பேதுரு இயேசுவிடம், "ஆண்டவரே நாங்கள் யாரிடம் போவோம்? நிலை வாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம் தானே உள்ளன" (யோவா 6:67) என்று திண்ணமாக அறிக்கையிடுகிறார். ஒருவருக்குக் கேடுகாலம் வருவதும் ஒருவிதத்தில் நல்லது; ஏனெனில் அப்போதுதான் அவருடைய உண்மையான நண்பர்கள் யார் என்பதை இனம் காண முடியும் என்கிறார் வள்ளுவர்,
கேட்டினும் உண்டுஓர் உறுதி கிளைரை
நீட்டி அளப்பதோர் கோல் (குறள் 796)

குளத்தில் தண்ணீர் இருக்கும்போதுதான் அதில் கொக்கும் மீனும் இருக்கும். தண்ணீர் வற்றி வறண்டு விட்டால் பறவைகள் வேறிடத்திற்குப் பறந்து போய்விடும். மாறாக, அக்குளத்திலுள்ள செடிகொடிகன் அக்குளத்திலேயே இருந்து அதிலேயே மாண்டுவிடும். இன்பத்தில் நட்புரிமை கொண்டாடி துன்பத்தில் காலை வாரிவிடுபவர்கள் நண்பர்கள் அல்ல, நயவஞ்சகர்கன்.
ஓர் உண்மைக் காதலன் தன் காதலியிடம், 'நீ மாலையானால் நான் அதில் மலேராவேன். நீ பாலையானால் நான் அதில் மணலாவேன்" என்கிறான். இன்றைய இரண்டாம் வாசகத்தில், கணவனுக்கும் மனைவிக்கும் இடையேயுள்ள உறவு கிறிஸ்துவுக்கும் திருச்சபைக்கும் இடையேயுள்ள பிரிக்க முடியாத உறவு என்பதை விளக்குகிறார் புனித பவுல். இன்பத்திலும் துன்பத்திலும், உடல் நலத்திலும் நோயிலும் வெட்டிப் பிரித்தாலும் விட்டுப் பிரியாமல் இருப்பவர்களே உண்மையான தம்பதியர். அவ்வாறே இயேசுவுக்கும் அவருடைய அன்பின் அருள் அடையாளமாகிய நற்கருணைக்கும் நாம் என்றும் உண்மையுள்ளவர்களாக இருக்க வேண்டும்.

யூதாசு இயேசுவைக் காட்டிக் கொடுத்தான், அவனுக்கு இயேசுவின் மீதோ நற்கருணை மீதோ உண்மையான பற்றுறுதி இல்லை. நற்கருனை பற்றி இயேசு கொடுத்த விளக்கத்தின் இறுதியில் அவர் யூதாசை "அலகை" என்று அழைத்தார் (யோவா 6:70). இயேசுவின் இறுதி உணவின்போது அவனுக்குள் அலகை நுழைந்தது. நற்கருணையில் பங்கேற்காமல் அலகை அவனை இருளில் அழைத்துச் சென்றது (யோவா 13:27-30).

யூதாசு நமக்கெல்லாம் ஓர் எச்சரிக்கை இன்றும் கத்தோலிக்கக் கிறிஸ்துவர்களில் சிலர் நற்கருணையை விட்டு விலகிப் பிரிவினை சபைகளுக்குச் செல்கின்றனர், அவர்கள் மீண்டும் நற்கருணையிடம் திரும்பி வருவது அரிது.

ஒரு பெண்மணியிடம் பிரிவினை சபையினர், "நீங்கள் எங்கள் சபைக்கு வாருங்கள். உங்களின் தீராத நோயை எடுத்துவிடுகிறோம்" என்று அழைத்தனர். அப்பெண்மணியோ, "நற்கருணை ஆண்டவர் என்னைக் குணப்படுத்தாவிட்டால், வேறு எந்த சபைக்கும் போக நான் தயாராக இல்லை " என்று உறுதிபடக் கூறினார், சுண்டல் கொடுக்கிற கோவில்களுக்கெல்லாம் ஒடும் சிறு பிள்ளைகளைப்போல், இங்கும் அங்குமாகப் புற்றீசல்போல் பலுகிவரும் பிரிவினை சபைகளுக்கு ஓடும் இழிநிலையைக் கைவிட வேண்டும். அல்கையின் வஞ்சக வலையில் வீழ்ந்து நம் ஆன்மாவை இழக்கக் கூடாது.

எம்மாவுக்குச் சென்ற இரு சீடர்களுக்கு அப்பத்தைப் பிட்டுக் கொடுத்து, தம்மை அவர்களுக்கு அடையாளம் காட்டிய உயிர்த்த ஆண்டவர். அவர்கள் கண்கள் திறந்தவுடன் அவர்கள் பார்வையிலிருந்து மறைந்துவிட்டார், ஏன்? இனிமேல் இயேசுவின் இரண்டாம் வருகைவரை, அவரை நாம் அப்பம் பிடுவதில், அதாவது நற்கருணைக் கொண்டாட்டத்தில் காண வேண்டும் என்பதே இயேசுவின் விருப்பமாகும். இயேசுவின் விருப்பத்தை ஏற்காதவர்கள் இயேசுவின் சீடர்கள் அல்ல. அவர்கள் யாரோ? யான் அறியேன் பராபரமே!





இப்போது முடிவு செய்யுங்கள்!

காலையில் எழுந்து குளித்துவிட்டு துணி அலமாரியின் முன் நின்று கொண்டு, 'இன்று எந்த ஆடை அணிவது?' என்று நாம் தலையைச் சொறிகிறோம். எல்லா ஆடைகளையும் வேகமாக அலசிப் பார்த்துவிட்டு, நேற்று அணிந்து இரவு கழற்றி அழுக்குக்கூடையில் போட்ட சட்டையை நோக்கியும் கண்களும் போகும். 'ச்சே, நேற்று போட்ட டிரசை இன்று போட்டிருக்கலாமோ!' என்ற எண்ணமும் தோன்றி மறையும். ஒருவழியாக, ஏதாவது ஒன்றை எடுத்துப் போடலாம் என்றால், ஒன்றும் மேட்ச் ஆகாமல் இருக்கும். சில நேரங்களில் நம் சாக்ஸூம், கைக்குட்டையும்தான் மேட்ச் ஆகிற மாதிரி நிலையில் ஆடை அணிய வேண்டியதிருக்கும். ஆடை அணிவதற்குத் தெரிவு செய்யவே இவ்வளவு நேரம் ஆகிறது என்றால், புதிய ஆடையை வாங்க எவ்வளவு நேரம் ஆகும்? ஏன் நாம் இவ்வளவு நேரம் எடுக்கிறோம்? அல்லது ஏன் நாம் ஆடையைத் தெரிவு செய்கிறோம்? கைக்கு வருவதை எடுத்து அணிந்துகொண்டு போய்விடலாமே? 'இந்த ஆடைதான் இன்று' என்ற முடிவு அன்றைய நாளின் நம் தன்னம்பிக்கையையும், மகிழ்ச்சியையும், தன்மதிப்பையும் நிர்ணயிக்கிறது. ஆனால், என்னதான் அழகான ஆடை அணிந்து சென்றாலும், நாளின் இறுதியில், 'உவப்பன வெறுப்பாம், உடுத்தியது அழுக்காம்' என்று அந்த ஆடை அழுக்குக் கூடைக்குள்தான் போகும். ஒரு டிரஸ் அணிந்துவிட்டு, சாப்பிட்டுவிட்டு, பின் வீட்டை விட்டு வெளியே போகும்போது, 'இது நல்லா இல்ல. வேறு ஒன்று மாத்திக்குவோம்' என்று திரும்பவும் அலமாரியைத் திறந்த நாள்களும் நமக்கு இருந்திருக்கலாம். சில நேரங்களில், 'என்ன, இந்த டிரஸ்லயா வர்ற!' என்று யாராவது சொல்ல, அவர்களுக்காகவும் நாம் ஆடையை மாற்றியிருப்போம். இவ்வாறாக, 'நான் இன்று இந்த ஆடை அணியப் போகிறேன்' என்ற முடிவை எடுக்க, நான் நேரம் எடுக்கிறேன், மனம் குழம்புகிறேன், 'இதற்கு முன் இந்த ஆடை எப்போது அணிந்தேன், அன்று என்ன நடந்தது?' என ஆய்கிறேன், எடுக்கிறேன், அணிகிறேன், வெளியே வருகிறேன், சாப்பிடும்போதும் அது பற்றியே நினைக்கிறேன், மற்றவர்களின் கருத்தைக் கேட்கிறேன், மீண்டும் ஆடை மாற்றுகிறேன்.

நிற்க.

ஆடையைக் குறித்து நாம் எடுக்கும் முடிவு போல, நாம் அன்றாடம் முடிவுகளை எடுத்துக்கொண்டே இருக்கிறோம்: 'எந்த பேருந்தில் ஏறுவது?' 'அமர்வதா?' 'நிற்பதா?' 'எங்கு படிப்பது?' 'எந்த வேலை பார்ப்பது?' 'யாரை திருமணம் செய்வது?' 'குழந்தைகள் பெற்றுக்கொள்வதா, வேண்டாமா?' 'ஆம் என்றால், எத்தனை?' 'இல்லை என்றால், எப்போது?' 'அவர்களை எங்கே படிக்க வைப்பது?' 'எந்த மருத்துவரிடம் பல்லைக் காட்டுவது?' 'எந்த மெடிக்கலில் மருந்து வாங்குவது?' இப்படி நிறைய முடிவுகளை நாம் ஒருநாளில் எடுக்க வேண்டியிருக்கிறது. இந்த முடிவுகளை எடுக்க நம்மை உந்தித் தள்ளுவது நம் கட்டின்மை அல்லது சுதந்திரம். ஆனால், நாம் ஒரு முடிவை எடுக்கும்போது மற்ற முடிவுகளை நீக்கித்தான் ஆக வேண்டும். 'பேருந்தில் நிற்பதா? அமர்வதா?' என்று நான் எடுக்கும் முடிவில், 'அமர்வேன்' என்று முடிவு எடுத்தவுடன், 'நான் நிற்க முடியாது.' பாதி நிற்பதும், பாதி அமர்வதும் இயலாத நிலை. இவ்வாறாக, நான் எடுக்கும் ஒரு முடிவு மற்றதை என்னிடமிருந்து நீக்கிவிடுகிறது.

இம்மாதிரி சின்னச் சின்ன முடிவுகள் ஒருபக்கம். என் வாழ்வையே மாற்றிப்போடும் முடிவுகள் இன்னொரு பக்கம் இருக்கின்றன. 'திருமணம் செய்துகொள்வது,' 'வேலை பார்ப்பது,' 'சொத்து வாங்குவது' போன்ற முடிவுகள் நம் உறவு மற்றும் சமூக நிலையை மாற்றிப்போடவல்லவை. இவற்றை நாம் எடுத்தோம், கவிழ்த்தோம் என்று சொல்லிவிட முடியாது.

இப்படியாக, முடிவுகளின் விளைவு பெரிதாகப் பெரிதாக, அதை எடுப்பதற்கான வலியும், கலக்கமும் பெரிதாகிக்கொண்டே இருக்கின்றது. ஆகையால்தான் சில நேரங்களில் நாம் முடிவுகளைத் தள்ளிப் போடுகிறோம்.

இன்றைய இறைவாக்கு வழிபாடு நம்மை இருத்தியல் முடிவு எடுக்க அழைக்கிறது:

யோர்தான் நதிக்கரையில் நிற்கும் யோசுவா, அங்கே கூடியிருக்கும் மக்களைப் பார்த்து, 'நான் ஆண்டவர் பக்கம். நீங்கள் யார் பக்கம் என முடிவு செய்யுங்கள்' என அவர்களை அழைக்கிறார்.

திபேரியக் கடற்கரையில் நிற்கும் இயேசு, தன் சீடர்களில் பலர் தன்னைவிட்டுப் போய்விட, தன் திருத்தூதர்களிடம், 'நீங்களும் போய்விட நினைக்கிறீர்களா? முடிவு செய்யுங்கள்' என அவர்களை அழைக்கிறார்.
இஸ்ரயேல் மக்கள் எடுக்கும் முடிவு கடவுளின் இயல்பை மாற்றுவதில்லை. திருத்தூதர்களின் முடிவு இயேசுவின் இயல்பை மாற்றுவதில்லை. ஆனால், இவர்கள் எடுக்கும் முடிவைப் பொறுத்தே இவர்களின் - இஸ்ரயேல் மக்கள், திருத்தூதர் - வாழ்வு அல்லது இயல்பு இருக்கும். ஆக, இது ஒரு முக்கியமான தருணம். 'இப்போ சரினு சொல்லிட்டு, அப்புறம் மாத்திக்கலாம்' என்ற ஆடை முடிவு அல்ல இது. ஒருவரின் இருத்தலைப் புரட்டிப்போடுகின்ற முடிவு.

இந்த முடிவு வாசகர்களாகிய நம்மிடம் அப்படியே திரும்புகிறது?

எப்படி?

இன்றைய முதல் வாசகத்திலிருந்து (காண். யோசு 24:1-2,15-17,18) நம் சிந்தனையைத் தொடங்குவோம். யாவே இறைவன் இஸ்ரயேல் மக்களுக்கு வாக்களித்த பாலும், தேனும் பொழியும் கானான் நாடு கைக்கெட்டிய தூரத்திற்கு வந்துவிட்டது. இப்போது மக்கள் அதில் நுழைவதற்கு முன் அவர்களை செக்கேமில் ஒன்றுகூட்டும் யோசுவா, இறைவனுக்கும், அவர்களுக்கும் இடையேயான உடன்படிக்கையைப் புதுப்பிக்கின்றார். யாவே இறைவன் அவர்களுக்கு செய்த அரும் பெரும் செயல்களை நினைவூட்டுகின்றார். உடன்படிக்கை மக்களுக்கு முன்வைக்கும் ஒரே கட்டளை என்னவென்றால், அவர்கள் மற்ற தெய்வங்களை விடுத்து யாவே இறைவனை மட்டும் பற்றிக்கொள்ள வேண்டும். இந்த நேரத்தில் இவர்களின் பதில் 'ஆம்' என இருந்தாலும், இந்த வார்த்தையில் அவர்கள் நிலைத்திருக்க முடியாமல் இறைவனின் கோபத்திற்கு ஆளாகிறார்கள் என்பது பிந்தைய வரலாறு.

'நீங்கள் உங்களிடையே இருக்கும் வேற்று தெய்வ வழிபாட்டை விட்டுவிடத்தயாரா?' என்று கேட்கும் யோசுவா, 'நானும், என் வீட்டாரும் ஆண்டவருக்கே பணிபுரிவோம்!' என மக்கள்முன் அறிக்கையிடுகின்றார். இங்கே 'பணிபுரிதல்' அல்லது 'ஊழியம் புரிதல்' (நவாத்) என்ற வார்த்தைக்கு 'வழிபடுவோம்' என்ற பொருளும் உண்டு. 'வேலை' அல்லது 'பணி' என்ற வார்த்தை இங்கே பயன்படுத்தப்பட்டதன் முக்கியத்துவம் என்னவென்றால், எகிப்தில் பாரவோனுக்கு இஸ்ராயேல் மக்கள் 'பணி' புரிந்தனர். பாரவோனே அவர்களின் கடவுளாக இருந்;தான். இனி அப்படியிருக்கப் போவதில்லை. இனி இறைவன்தான் இவர்களின் தலைவன். ஆக, பணி என்ற வார்த்தையின் வழியாக இறைவன் தலைவராக முன்வைக்கப்படுகின்றார்.

யோசுவாவும், இஸ்ரயேல் மக்களும் - இரண்டு பேருமே - 'நாங்கள் ஆண்டவருக்குப் பணிபுரிவோம்!' என்று சொன்னாலும், இரண்டு பேரின் நம்பிக்கை அளவும் வேறுபடுகிறது. எந்தவொரு நிபந்தனையும் இல்லாமல் கடவுளைத் தன் தலைவராக ஏற்றுக்கொள்கிறார் யோசுவா. ஆனால், 'அவர் எங்களுக்கு விடுதலை தந்ததால், அவர் எங்கள் முன் அறிகுறிகள் நிகழ்த்தியதால், அவர் எங்களைப் பாதுகாத்ததால் நாங்கள் நம்புகிறோம்!' என்று நிபந்தனையோடு நம்புகின்றனர் மக்கள். ஆக, மக்களின் இந்த எதிர்பார்ப்பு பின் நாட்களில் நிகழாமல் போவதால் அவர்கள் எளிதாக வேறு அரசனையும், வேறு தெய்வங்களையும் பின்தொடரத் துணிகின்றனர்.

கொஞ்சம் கற்பனை செய்து பார்ப்போம். இஸ்ரயேல் மக்கள் இப்போது பாலைநிலத்தில் இருக்கின்றனர். கொஞ்ச சுமை வைத்துக்கொண்டால் மட்டும்தான் இனிதாக பயணம் செய்ய முடியும். அதில் ஆடை, அணிகலன்கள், தண்ணீர் என்றே சுமை இருக்கும். இந்தச் சுமையிலும் இந்த 'குட்டி தெய்வங்களுக்கு' அல்லது 'வேற்று கடவுளர்களுக்கு' எப்படி இவர்களின் பொதிகளில் இடம் இருந்தது? தொல்லியில் ஆராய்ச்சியில் 'ஃபிகுரின்' என்று சொல்லப்படும் விரல் அளவு தெய்வ உருவங்கள் நிறையக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவைகள்தாம் 'டிராவல் ஃபார்மட் கடவுளர்களாக' இருந்திருக்க வேண்டும். இவைகளைப் பார்க்கும்போதெல்லாம் இவர்களுக்கு கடவுளின் பிரசன்னம் தங்களோடு இருப்பதாக இவர்கள் உணர்ந்திருக்க வேண்டும். இன்று இவர்கள் இந்த எல்லா குட்டி தெய்வங்களையும் தூக்க எறிய வேண்டும். கடவுள் என்பது வெளிப்புற அடையாளம் அல்ல, அவர் நம் உள்புறம் இருந்து நம் அனுபவமாக இருக்கிறார் என்ற ஒரு மாற்று சிந்தனை பெற வேண்டும். தங்கள் கைகளுக்குள் இருக்கும் குட்டித் தெய்வங்களை அவர்கள் தூக்கி ஆற்றில் எறிய வேண்டும். இனி அவர்கள் தேடினாலும்  அவற்றைக் கண்டுகொள்ள முடியாது.

இஸ்ரயேல் மக்கள் இறுதியாக, 'நாங்களும் ஆண்டவருக்கு ஊழியம் புரிவோம். ஏனெனில் அவரே எங்கள் கடவுள்' என்று முடிவு எடுக்கின்றனர்.

தொடர்ந்து, இன்றைய நற்செய்தி வாசகத்தில், கடந்த ஐந்து வாரங்களாக நாம் கேட்டுக்கொண்டு வரும் இயேசுவின் 'வாழ்வுதரும் போதனை' இன்றோடு நிறைவுபெறுகிறது. இயேசுவின் போதனை அனைத்து மக்கள், கொஞ்சம் யூதர்கள் எனத் தொடர்ந்து இன்று மிகவும் சில சீடர்கள் எனச் சுருங்கிவிட்டது. இது ஒரு இலக்கிய உத்தி. பெரிய இடத்தில் தொடங்கி, சிறிய அளவில் முடிப்பது. இந்த இடத்தில் யோவான் நற்செய்தியாளரின் நோக்கம் என்னவென்றால், இதை வாசிக்கும் இயேசுவின் சீடர் ஒவ்வொருவரும் இந்த இடத்தில் தன்னைத் தானே ஒரு கேள்வி கேட்க வேண்டும்: 'இயேசுவை நான் வாழ்வுதரும் உணவாக ஏற்றுக்கொள்கின்றேனா?'

இயேசுவின் போதனை கடினமாக இருப்பதாக முணுமுணுக்கும் சில சீடர்கள் அவரை விட்டுப் பிரிகின்றனர். 'நீங்களும் போய்விட நினைக்கிறீர்களா?' என்று தம் பன்னிருவரிடம் கேட்கின்றார் இயேசு. அவர்கள் பிரதிநிதியாக பேதுரு, 'நாங்கள் யாரிடம் போவோம்?' என்று கேள்வியையே பதிலாக முன்வைக்கின்றார்.

இயேசுவின் போதனையைக் கேட்டு முடித்த சீடர்கள், 'இதை ஏற்றுக்கொள்வது மிகக் கடினம். இப்பேச்சை இன்னும் கேட்டுக்கொண்டிருக்க முடியுமா?' என்று கேட்கின்றனர்.'நீங்கள் நம்புவதற்கு இது தடையாக இருக்கிறதா?' என இயேசு கேள்வியைத் திருப்புகின்றார். எது தடையாக இருக்கிறதா? இயேசு சொன்னதா? அல்லது இயேசு சொன்ன விதமா? இயேசுவின் போதனையைக் கேட்ட சீடர்கள் முணுமுணுக்கக் காரணம் அது புதியதாக இருந்ததால்தான். 'எல்லாரும் மாதிரியே நீரும் சொல்லலாமே! ஏன் நீர் மட்டும் புதியதாகச் சொல்கிறீர்?' என்பதுதான் அவர்களின் மனதில் இருக்கும் கேள்வி. 'எல்லா தெய்வங்களையும் போல இவரும் இருக்கலாமே! ஏன் இவர் மட்டும் வேறு மாதிரி இருக்கிறார்' என்று முதல் வாசகத்தில் யாவே இறைவனை ஏற்றுக்கொள்ள மக்கள் தயங்குகின்றனர்.

'அன்றே பலர் அவரை விட்டு விலகினர்' என்று சோகமாகப் பதிவு செய்கிறார் யோவான். உடனே இயேசு தன் பன்னிருவரிடம், 'நீங்களும் போய்விட நினைக்கிறீர்களா?' எனக் கேட்கிறார். இயேசு கேட்கும் இந்தக் கேள்வியில் நிறைய வலியும், வேதனையும் ஒளிந்திருக்கிறது. இது அவரின் மனித உரு தந்த வலியால் வரும் கேள்வி. மனிதருக்கு மனிதரின் உடனிருப்பு தேவைப்படுகிறது. 'என்கூட இவர்கள் எல்லாம் இருப்பார்கள்' என நினைத்த இயேசு தன் பன்னிருவரும் தன்னைவிட்டுப் போய்விடுவார்களா என்று கேட்கின்றார். ஆனால், இந்த இடத்தில் யூதாசைப் பற்றிக் குறிப்பிடுவதால், இயேசுவின் இந்தக் கேள்வியில், 'நீங்களும் போய்விடுவீர்கள்' என்ற பதில் ஒளிந்திருக்கின்றது. ஒத்தமைவு நற்செய்திகளில் 'நீர் கடவுளின் மெசியா' என அறிக்கையிடும் பேதுரு, யோவான் நற்செய்தியில் 'நீர் கடவுளின் தூயவர்' அல்லது 'அர்ப்பணமானவர்' என அறிக்கையிடுகின்றார். இங்கே பேதுரு இயேசுவை 'வார்த்தையாக' ஏற்றுக்கொள்கின்றார். ஆக, இயேசுவின் மனுவுரு நிகழ்விலிருந்து, அவரின் ஏறிச்செல்லுதல் வரை தான் ஏற்றுக்கொள்வதாகவும், இயேசுவின் முன் சராணகதியாவதாகவும் சொல்கின்றார் பேதுரு.

இப்படியாக, பன்னிருவர் சார்பாக, பேதுரு முடிவெடுக்கின்றார்.

'கடவுளை' மட்டும் தேர்ந்துகொண்டால் நல்லதுதானே? அப்புறம் ஏன் நம் மனித மூளை 'கடவுளை' ஏற்றுக்கொள்ள அல்லது 'கடவுளே போதும்' என முடிவெடுக்க மறுக்கின்றது?

இந்தக் கேள்விக்கு தூய அகுஸ்தினாரின் 'ஒப்புகைகள்' மற்றும் இன்றைய வாசகங்களின் பின்புலத்தில் விடை காண்போம்.

1. மூளையின் விதிமுறை

நம் மூளை ஒரே நேரத்தில் இரண்டு விதிமுறைகளால் இயங்க வல்லது: ஒன்று, 'நல்லதைத் தேர்ந்துகொள், தீயதை விட்டுவிடு.' இரண்டு, 'இன்பமானதைத் தேர்ந்துகொள், துன்பமானதை விட்டுவிடு.' உதாரணத்திற்கு, தேர்வில் நல்ல மதிப்பெண் எடுக்க வேண்டும் என மூளை நினைக்கும்போது அது நல்லதைத் தேர்ந்துகொள்கிறது. ஆனால், அதற்குப் படிக்க வேண்டுமே? என்ற கேள்வி வந்தவுடன், 'துன்பமமான படிப்பை விட்டுவிடு', 'இன்பமான காப்பி அடித்தல், அல்லது பணம் கொடுத்து பாஸ் ஆகுதல்' என்பதைப் பிடி! என்று சொல்லிவிடுகிறது. 'கடவுளைப் பின்பற்றுவது நல்லதுதான்'. ஆனால், அப்படிச் செய்யும் போது நமக்கு வலிக்குமே. கடவுள் விரும்பியதை நான் செய்ய வேண்டும் என்றால், எனக்கு விருப்பமானதை நான் செய்வதை விடுக்க வேண்டும். 'நல்லதைச் செய். நலமோடு வாழ்வாய்' என்பது கடவுளின் வார்த்தை. ஆனால், நல்லதைச் செய்வது கடினமாக இருக்கிறதே. என் மனத்தை நான் எப்படி அதற்கு ஆள்படுத்துவேன்? நான் நல்லதைச் செய்யாததால் துன்பம்தான் வருகிறது என எனக்குத் தெரிந்தும், என்னால் அதைச் செய்ய முடியவில்லையே? 'நட' என்று என் மூளை சொன்னவுடன் என் உடல் அதற்கு கீழ்ப்படிகிறது. ஆனால், 'செய்யாதே' என்று என் மனம் சொல்வதை என் மூளை கேட்க மறுக்கிறதே. ஏனெனில், மூளை இயல்பாகவே துன்பத்தை வெறுக்கிறது.

2. உடனடி ரிசல்ட்

எனக்குப் பணத் தேவை இருக்கிறது என வைத்துக்கொள்வோம். மூன்று வழிகள்: ஒன்று, அதற்காக உழைப்பது. இரண்டு, கடவுளிடம் வேண்டி ஏதாவது ஒரு வழி காட்ட வேண்டும் என்று சொல்வது. மூன்று, எனக்கு அடுத்திருப்பவரிடம் திருடுவது. நான் மூன்றாவது வழியைத் தெரிந்துகொண்டால், எனக்கு அடுத்த நொடி பணம் கிடைத்துவிடுகிறது. நான் எதிர்பார்த்த ரிசல்டை நான் பெற்றுவிடுகிறேன். ஆனால், நான் உழைத்தால் ஓரிரு நாளில் பணம் கைக்குவந்துவிடுகிறது. ஆனால், கடவுளைப் பற்றிக்கொண்டால் - எனக்கு ஒன்றும் நடப்பதில்லை. ஆக, உடனடி ரிசல்ட் தராத எதையும் மூளை ஏற்பதில்லை. அகுஸ்தினாரும் தன் மனமாற்றத்திற்கு முன் இப்படித்தான் புலம்புகின்றார்: 'நான் ஒரு பெண்ணை நுகர்ந்தால் அந்த இன்பம் உடனடியாக என் உடலில் தெரிந்து விடுகிறது. மூளையும் அந்த இன்பத்தைப் பதிவு செய்கிறது. ஆனால், நான் கற்பு கொண்டு உம்மில் வாழ நினைத்தால் என் உடலுக்கு என்ன இன்பம்? என் மூளைக்கு என்ன இன்பம்.' ஆக, உடனடி ரிசல்ட் தராத எதையும் மூளை ஏற்பதில்லை. ஆகையால்தான் இயேசுவின் சீடர்கள் அவரை ஏற்றுக்கொள்ளத் தயங்குகின்றனர். இயேசுவை ஏற்றுக்கொள்வதால் எந்த ஒரு உடனடி ரிசல்டும் கிடைப்பதில்லை. இஸ்ரயேல் மக்களுக்கு கண்களுக்குத் தெரியாத கடவுளைவிட, தங்களின் கையிடுக்கில் தெரிந்த குட்டிக்கடவுளர்கள் பாதுகாப்பைத் தந்தனர். அவர்களுக்கு கைகளில் ரிசல்ட் உடனே கிடைத்தது.

3. மறையுண்மை பெரிது

இன்றைய இரண்டாம் வாசகத்தில் (எபே 5:21-32) 'ஒளிபெற்றவர்களாய் வாழுங்கள்' என்று எபேசு நகரத் திருச்சபைக்கு அறிவுறுத்தும் தூய பவுல், தொடர்ந்து, கணவர்-மனைவியர் வாழ்க்கை நடத்தை பற்றி அறிவுறுத்துகின்றார். முதலில் மனைவியருக்கும் (5:22-24), பின் கணவருக்கும் (5:25-32) என இரண்டு படிகளாக அவரின் அறிவுரை இருக்கின்றது. கணவன்-மனைவி ஒன்றிப்பு பற்றிப் பேசும் பவுல், 'இருவரும் ஒரே உடலாயிருப்பர்' என்று முதல் ஏற்பாட்டு படைப்பு நிகழ்வை மேற்கோள் காட்டி, 'இந்த மறைபொருள் பெரிது!' என்கிறார். ஆக, இயேசுவும் திருச்சபையும் கணவன்-மனைவியாக இணைந்திருப்பது என்பது கண்களால் காண முடியாதது. காண்பது மட்டுமே உண்மை. காணாதவை பொய் அல்ல. கணவன் மனைவி உறவிலும் காணாத மறைபொருளே அவர்களை இணைக்கிறது. அதுபோல, ஒருவர் தான் எடுத்த முடிவினால் கடவுளைத் தேர்ந்துகொள்கிறார் என்றால் அது ஒரு மறைபொருள். அது கண்ணுக்குத் தெரியாது என்று சொல்வதால் அது பொய் என்று ஆகிவிடாது.

இவ்வாறாக, மேற்காணும் காரணிகள் நாம் கடவுளைத் தேர்ந்துகொள்ளும் முடிவிற்கு துணைநிற்கலாம், எதிர்க்கலாம், அல்லது முடிவிலிருந்து நம்மை வழிமாற்றலாம். ஆனால். முடிவைத் துணிந்து எடுக்க ஒருவர் ஊனியல்பிலிருந்து தூய ஆவிக்குக் கடந்து செல்ல வேண்டும்.

'வாழ்வு தருவது தூய ஆவியே. ஊனியல்பு ஒன்றுக்கும் உதவாது' என்கிறார். ஆக, நம்மில் உள்ள உடல், மூளை, இவற்றைக் கடந்து மனம் அல்லது ஆவி என்ற ஒன்று உண்டு. முன்னவை ஒன்றுக்கும் உதவாதவை. முன்னவை ஒன்றோடொன்று முரண்படுபவை. ஆனால், மனம் அல்லது ஆவி முரண்படாதது. உடல், மூளை, மனம் என ஒவ்வொரு நிலையாகக் கடந்துசெல்பவரே கடவுளைத் தெரிந்துகொள்ளும் முடிவை எடுக்க முடியும். இந்தக் கடந்துசெல்லதலுக்கும் கடவுளின் துணை தேவை. ஆகையால்தான், 'தந்தை அருள்கூர்ந்தால் அன்றி யாரும் என்னிடம் வர இயலாது' (யோவா 6:65) என்கிறார் இயேசு.


இறுதியாக,

நாம் காலையில் அணிந்து மாலையில் கழற்றி எறியும் ஆடை தொடங்கி, காலத்திற்கும் மாற்ற முடியாத கடவுளைப் பின்பற்றுதல்வரை நாம் முடிவுகள் எடுத்துக்கொண்டே இருக்கும் சுமையைத் தாங்கிக்கொண்டிருக்கிறோம். ஊனியல்பு மற்றும் அதன் இன்பத்தில் நாம் பிடிபட்டிருக்கும் வரை முடிவுகள் சுமையே. 'நான் இந்த முடிவை எடுத்து கஷ்டப்படுகிறேன். அவன் அந்த முடிவை எடுத்து நல்லா இருக்கிறானே' என்ற ஒப்பீடு நம் முடிவை மாற்றிவிட சோதனை தரும். முடிவிலிருந்து பின்வாங்க மூளை நிறையக் காரணங்களைத் தேடும். காரணங்கள் கிடைக்காதபோது நம் மனத்தோடு சண்டையிடும். அங்கே 'அவரின் அருள்கொடையை நாடுதல் நலம்.' ஏனெனில், அவராக அனுமதித்தாலன்றி நாம் எதையும் தெரிவுசெய்ய முடியுhது.

எனினும்,

இதில் அடங்கியுள்ள மறைபொருள் பெரிது!









No comments:

Post a Comment